﻿<?xml version="1.0" encoding="UTF-8"?>
<surah>

<div>
<span>அல்ஃபாத்திஹா</span>
<span>1:1 அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)</span>
<span>1:2 எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும். </span>
<span>1:3 அவன் மாபெருங் கருணையாளனாகவும், தனிப்பெருங்கிருபையாளனாகவும், இருக்கின்றான். </span>
<span>1:4 இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான். </span>
<span>1:5 உனக்கே நாங்கள் அடிபணிகிறோம். (இபாதத் செய்கிறோம்.) மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம். </span>
<span>1:6 எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக!</span>
<span>1:7 (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழி;  உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறிதவறிப் போகாதவர்களின் வழி. </span>
</div><div>
<span>அல்பகறா</span>
<span>2:1 அலிஃப். லாம். மீம். </span>
<span>2:2 இது அல்லாஹ்வின் வேதமாகும்; இதில் யாதொரு சந்தேகமும் இல்லை, இறையச்சமுடையோர்க்கு (இது) சீரிய வழிகாட்டியாகும். </span>
<span>2:3 அவர்கள் எத்தகையோர் என்றால் ‘கைப் மறைவானவற்றை நம்புகிறார்கள். மேலும் தொழுகையை நிலைபெறச் செய்கிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்கிறார்கள். </span>
<span>2:4 மேலும், உமக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தின் (குர்ஆன்) மீதும், உமக்கு முன்னர் இறக்கியருளப்பட்ட வேதங்கள் மீதும் நம்பிக்கை கொள்கின்றார்கள். இறுதித் தீர்ப்புநாளின் (மறுமையின்) மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்கின்றார்கள்.  </span>
<span>2:5 இத்தகையோரே தம் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருப்பவர்கள். மேலும், இவர்களே வெற்றி பெறுபவர்கள். </span>
<span>2:6 (இவ்விஷயங்களை) யார் நிராகரித்தார்களோ, அவர்களை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காதிருப்பதும் அவர்களைப் பொறுத்தவரை ஒன்றுதான். எவ்வகையிலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் அல்லர். </span>
<span>2:7 அல்லாஹ் அவர்களின் இதயங்கள் மீதும், அவர்களின் செவிப்புலன்கள் மீதும் முத்திரை வைத்து விட்டிருக்கிறான். மேலும் அவர்களுடைய பார்வைகள் மீது திரை விழுந்திருக்கிறது. தவிர அவர்கள் கடும் தண்டனைக்கு உரியவர்களாவர். </span>
<span>2:8 இன்னும் “அல்லாஹ்வையும் இறுதி(த் தீர்ப்பு) நாளையும் நம்பியிருக்கிறோம்” எனக் கூறுவோர் சிலரும் மனிதர்களில் உளர். ஆயினும், அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். </span>
<span>2:9 (இப்படிக் கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்றுகின்றனர். ஆனால் (உண்மையில்) அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனரேயன்றி வேறில்லை! எனினும் (இதனை) அவர்கள் உணர்வதில்லை. </span>
<span>2:10 அவர்களுடைய நெஞ்சங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ் (இந்)நோயை அவர்களுக்கு இன்னும் அதிகப்படுத்திவிட்டான். மேலும் அவர்கள் பொய்யுரைத்துக் கொண்டிருந்த காரணத்தால் கொடிய தண்டனையும் அவர்களுக்குண்டு. </span>
<span>2:11 இன்னும் “பூமியில் குழப்பம் விளைவிக்காதீர்!” என அவர்களிடம் சொல்லப்பட்டால், “நிச்சயமாக நாங்கள் சீர்திருத்தம் செய்பவர்களே!” என அவர்கள் கூறுகிறார்கள். </span>
<span>2:12 எச்சரிக்கை! நிச்சயமாக அவர்கள்தாம் குழப்பவாதிகளாவர். ஆயினும் (இதனை) அவர்கள் உணர்வதில்லை. </span>
<span>2:13 இன்னும் “மற்ற மனிதர்கள் ஈமான் நம்பிக்கை கொண்டது போல் நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள்!” என அவர்களிடம் சொல்லப்பட்டால் “மூடர்கள் நம்பிக்கை கொண்டது போல் நாங்களும் நம்பிக்கை கொள்வதா?” என்றே அவர்கள் பதில் சொல்கிறார்கள் எச்சரிக்கை! நிச்சயமாக இவர்கள்தாம் மூடர்களாவர். ஆயினும் (இதனை) அவர்கள் அறிவதில்லை! </span>
<span>2:14 இன்னும் இறைநம்பிக்கை கொண்டிருப்போரை அவர்கள் சந்தித்தால், ‘நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்எனக் கூறுகின்றனர். மேலும் தங்கள் ஷைத்தான்களுடன் அவர்கள் தனிமையில் இருக்கும்போது, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்! உண்மையில் நாங்கள் அவர்களைப் பரிகாசம்தான் செய்து கொண்டிருக்கிறோம்” எனச் சொல்கின்றனர். </span>
<span>2:15 அல்லாஹ் அவர்களைப் பரிகாசம் செய்து கொண்டிருக்கிறான். (அவன்) அவர்களுக்கு அவகாசம் அளித்துக் கொண்டு இருக்கின்றான்; (அவர்களோ) தமது வரம்பு மீறிய நடத்தையில் கண்மூடித்தனமாக உழன்று கொண்டேயிருக்கிறார்கள். </span>
<span>2:16 இத்தகையோரே நேர்வழிக்குப் பகரமாக வழிகேட்டைக் கொள்முதல் செய்தோர்! ஆனால் இவர்களின் இவ்வாணிபம் இலாபம் தரக்கூடியதாக இல்லை. இன்னும் (அறவே) நேர்வழி பெற்றவர்களாகவும் இவர்கள் இருக்கவில்லை. </span>
<span>2:17 இத்தகையோரின் உவமானம் (பின்வரும்) உதாரணத்தைப்போல் இருக்கிறது: ஒருவர் தீயை மூட்டினார்; அது அவரைச் சுற்றிலும் ஒளி வீசியபோது அல்லாஹ் அவர்களின் ஒளியைப் பறித்து விட்டான். மேலும் எதையுமே அவர்கள் காணமுடியாத நிலையில் அவர்களை இருள்களில் விட்டு விட்டான். </span>
<span>2:18 அவர்கள் செவிடர்களாய், ஊமையர்களாய், குருடர்களாய் இருக்கின்றனர். எனவே, இப்பொழுது அவர்கள் மீள மாட்டார்கள்; </span>
<span>2:19 அல்லது இவர்களுடைய உவமானம், இவ்வாறு இருக்கிறது: வானத்திலிருந்து கடும் மழை பொழிந்து கொண்டிருக்கிறது; அத்துடன் காரிருளும் இடியும் மின்னலும் உள்ளன. (அதில் மாட்டிக் கொண்டவர்கள்) இடி முழக்கங்களைக் கேட்டு மரணத்திற்கு அஞ்சி தம் காதுகளில் விரல்களைத் திணித்துக் கொள்கின்றார்கள். மேலும் (சத்தியத்தை) நிராகரிக்கும் இத்தகையோரை அல்லாஹ் எல்லாப் பக்கங்களிலிருந்தும் சூழ்ந்து கொண்டிருக்கின்றான். </span>
<span>2:20 அவர்களுடைய பார்வைகளைப் பறிப்பது போல் (பயங்கரமாக) மின்னல் வெட்டுகிறது. அவர்களுக்கு அது (கொஞ்சம்) ஒளிதரும் போதெல்லாம் அதில் (சிறிது தூரம்) அவர்கள் நடந்து செல்கின்றார்கள். மேலும், இருள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்போது நின்று விடுகிறார்கள். இன்னும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப் புலன்களையும், பார்வைப் புலன்களையும் முழுமையாகப் பறித்திருப்பான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவனாய் இருக்கின்றான். </span>
<span>2:21 மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந் தோரையும் படைத்த உங்கள் இறைவனுக்கே அடிபணியுங்கள்! (அவ்வாறு செய்வதனால் மட்டுமே) நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். </span>
<span>2:22 அவனே உங்களுக்காகப் பூமியை விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் ஆக்கினான். அவனே மேலிருந்து மழையைப் பொழியச் செய்து அதைக் கொண்டு உங்கள் உணவுக்காக விளைபொருள்கள் அனைத்தையும் வெளிப்படுத்துகிறான். எனவே, (இவற்றை எல்லாம்) நீங்கள் அறிந்திருந்தும் அல்லாஹ்விற்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். </span>
<span>2:23 நாம் நம் அடியார் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தைப் பற்றி (இது நம்மால் அருளப்பட்டதா, இல்லையா எனும்) சந்தேகத்தில் நீங்கள் இருப்பீர்களானால், இதைப் போன்ற ஒரே ஓர் அத்தியாயத்தையேனும் (உருவாக்கிக்) கொண்டு வாருங்கள்! (இதற்காக) அல்லாஹ்வைத் தவிர உங்களுக்குத் துணை புரிபவர்கள் அனைவரையும் அழைத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் உண்மையானவர்களாய் இருப்பின் (இதனைச் செய்து காட்டுங்கள்)! </span>
<span>2:24 நீங்கள் அப்படிச் செய்யாவிட்டால், நிச்சயமாக உங்களால் ஒருபோதும் அவ்வாறு செய்ய முடியாது; மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்டதும், (சத்தியத்தை) நிராகரிப்பவர்களுக்காகத் தயார் செய்யப்பட்டதுமான நரக நெருப்புக்கு அஞ்சுங்கள்!</span>
<span>2:25 மேலும், (நபியே! இவ்வேதத்தில்) நம்பிக்கை கொண்டு (அதன் அறிவுரைகளுக்கேற்ப) நற்செயல்கள் புரிவோர்க்கு, கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்கள் நிச்சயமாக உண்டு எனும் நற்செய்தியைக் கூறுவீராக! அந்தச் சுவனங்களில் ஏதேனும் ஒரு கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும் போதெல்லாம் அக்கனிகள் பூமியிலுள்ள கனிகளைப் போல் தோற்றத்தில் ஒத்திருப்பதால், “இத்தகைய கனிதான் முன்பு (உலகில்) நமக்கு உணவாக வழங்கப்பட்டது” என அவர்கள் கூறுவார்கள். இன்னும் அங்கு அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உண்டு. மேலும், அங்கு அவர்கள் நிரந்தரமாக வாழ்வார்கள். </span>
<span>2:26 நிச்சயமாக, அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ உவமானமாகக் காட்டுவதற்கு வெட்கப்படுவதில்லை. நம்பிக்கை கொண்டவர்களோ நிச்சயமாகத் தம் இறைவனிடமிருந்து வந்த சத்தியமே இது என்று புரிந்து கொள்வார்கள். ஆனால், நிராகரிப்போரோ “இத்தகைய (அற்ப) உதாரணங்களைக் கொண்டு அல்லாஹ் எதை நாடுகின்றான்?” எனக் கூறுவார்கள். (இவ்வாறாக) ஒரே விஷயத்தைக் கொண்டு அல்லாஹ் பலரை வழிகேட்டில் ஆழ்த்துகின்றான்; மேலும் அதனைக் கொண்டு பலருக்கு நேர்வழியும் காட்டுகின்றான். ஆனால் கீழ்ப்படியாதவர்களைத் தவிர வேறு எவரையும் இதனைக் கொண்டு அவன் வழிகேட்டில் ஆழ்த்துவதில்லை. </span>
<span>2:27 அவர்கள் எத்தகையவர்கள் எனில், அல்லாஹ்வுடன் உறுதியான உடன்பாடு செய்துகொண்ட பின்னர் அதை முறித்து விடுவார்கள். மேலும், எந்த உறவு முறைகள் இணைத்து வைக்கப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளானோ அவற்றைத் துண்டிப்பார்கள். மேலும், பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிவார்கள். (உண்மையில்) இத்தகையோரே இழப்புக்குரியவர்களாவர். </span>
<span>2:28 அல்லாஹ்வை நிராகரிக்கும் போக்கினை எவ்வாறு நீங்கள் மேற்கொள்கின்றீர்கள்? (உண்மை யாதெனில்) நீங்கள் உயிரற்றவர்களாய் இருந்தீர்கள். அவனே உங்களுக்கு உயிரூட்டினான். பின்னர் அவனே உங்களை மரிக்கச் செய்வான். பின்னர் (மீண்டும்) அவனே உங்களுக்கு உயிர் கொடுப்பான். பின்னர் அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். </span>
<span>2:29 அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானங்களைப் படைக்கக் கருதி அவற்றை ஏழு வானங்களாக அமைத்தான். மேலும் அவன், ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். </span>
<span>2:30 அந்த நேரத்தை நினைவுகூரும். உம் இறைவன், மலக்கு (வானவர்)களை நோக்கி, “நான் ஒரு பிரதிநிதியை (கலீஃபாவை) பூமியில் ஏற்படுத்தப் போகின்றேன்” என்று கூறினான். (அப்போது) அவர்கள், “பூமியில், அதன் ஒழுங்கமைப்பைச் சீர்குலைத்து, மேலும் இரத்தஞ் சிந்தக் கூடியவரையா அதில் (பிரதிநிதியாக) நீ ஏற்படுத்தப் போகின்றாய்? நாங்கள்தாம் உன்னைப் புகழ்ந்து துதிபாடி, உன் தூய்மையைப் போற்றிக் கொண்டு இருக்கின்றோமே!” என வினவினார்கள். அதற்கு இறைவன் கூறினான்: “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்.”  </span>
<span>2:31 பின்னர் அல்லாஹ் எல்லாப் பொருள்களின் பெயர்களையும் ஆதத்துக்குக் கற்றுக் கொடுத்தான். பிறகு அவற்றை வானவர்களின் முன் வைத்து “(ஒரு பிரதிநிதியை நியமித்தால் பூமியில் ஒழுங்கமைப்பு சீர்குலையும் எனும்) உங்கள் கருத்து சரியானால், இவற்றின் பெயர்களைச் சற்று சொல்லுங்கள்” எனக் கூறினான். </span>
<span>2:32 “குறை ஏதுமில்லாத தூயவன் நீயே! நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததைத் தவிர வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது. உண்மையில் நீ மட்டுமே பேரறிவும் மிக்க ஞானமும் உடையவன்!” என்று அவர்கள் கூறினார்கள். </span>
<span>2:33 (பின்னர்) இறைவன் கூறினான்: “ஆதமே! இவற்றின் பெயர்களை நீர் அவர்களுக்கு அறிவியும்!” அவர் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவித்ததும், “வானங்களிலும், பூமியிலும் (உங்களுக்கு) மறைந்திருக்கக்கூடிய (உண்மைகள்) அனைத்தையும் நிச்சயமாக நான் நன்கறிவேன். மேலும் நீங்கள் வெளிப்படுத்தக்கூடியவற்றையும், மறைத்துக் கொண்டிருப்பவற்றையும் நான் நன்கறிவேன் என்று உங்களிடம் நான் கூறவில்லையா?” எனக் கேட்டான். </span>
<span>2:34 பின்னர், “நீங்கள் ஆதத்துக்குப் பணியுங்கள்!” என்று வானவர்களுக்கு நாம் கட்டளையிட்டபோது அவர்கள் எல்லாரும் பணிந்தார்கள், இப்லீஸைத் தவிர! அவன் கட்டளையை மறுத்தான். மேலும் ஆணவம் கொண்டுவிட்டான்; நிராகரிப்பவர்களில் ஒருவனாகவும் ஆகிவிட்டான். </span>
<span>2:35 பிறகு “ஆதமே! நீரும் உம் மனைவியும் சொர்க்கத்தில் வசியுங்கள். அங்கே நீங்கள் விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள். ஆனால் இந்த மரத்தின் அருகே நீங்கள் நெருங்காதீர்கள்; நெருங்கினால் அக்கிரமம் செய்தவர்களாவீர்கள்!” என்று கட்டளையிட்டோம். </span>
<span>2:36 ஷைத்தான் அவ்விருவருக்கும் அம்மரத்தின் மீது ஆசை காட்டி, அவர்களை நம் கட்டளையிலிருந்து பிறழச் செய்து விட்டான். மேலும் அவ்விருவரும் எந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார்களோ அந்த நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றி விட்டான். மேலும் நாம் கட்டளையிட்டோம்: “நீங்கள் எல்லாரும் (இங்கிருந்து) இறங்கி விடுங்கள்; நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாவீர்கள். இன்னும், உங்களுக்காகக் குறிப்பிட்ட ஒரு காலம் வரை பூமியில் தங்குமிடமும் இருக்கிறது; வாழ்க்கை வசதிகளும் இருக்கின்றன.” </span>
<span>2:37 அப்போது, ஆதம் தம் இறைவனிடமிருந்து கற்ற சில சொற்களைக் கொண்டு அவனிடம் பாவமன்னிப்புக் கோரினார். அதனை அவருடைய இறைவன் ஏற்றுக் கொண்டான். நிச்சயமாக அவன் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்பவனாகவும் கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>2:38 நாம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கி விடுங்கள். பிறகு உங்களுக்கு என்னிடமிருந்து நேர்வழி கிடைக்கும்போது யார் எனது நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். </span>
<span>2:39 அன்றி யார் (அதை) ஏற்றுக்கொள்ள மறுத்து, எம்முடைய வசனங்களைப் பொய்யென்று கூறுகின்றார்களோ அவர்கள்தாம் நரகவாசிகளாவர்; அவர்கள் அதிலேயே என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்!”</span>
<span>2:40 இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! நான் உங்களுக்கு வழங்கியிருந்த என் அருட்கொடைகளை நீங்கள் நினைவுகூருங்கள்; மேலும், எனக்கு நீங்கள் தந்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்! (அவ்விதமாயின்) உங்களுக்குத் தந்த வாக்குறுதியை நானும் நிறைவேற்றுவேன். மேலும், எனக்கு மட்டுமே நீங்கள் அஞ்சுங்கள்! </span>
<span>2:41 மேலும் நான் இறக்கியுள்ள இந்த வேதத்தின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். இது (முன்பு) உங்களிடமிருந்த வேதத்தை மெய்ப்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. ஆகையால் நீங்களே அனைவருக்கும் முதலில் (இதனை) நிராகரிப்பவர்களாகி விடாதீர்கள். என்னுடைய திருவசனங்களைச் சொற்ப விலைக்கு விற்காதீர்கள். மேலும் எனக்கே அஞ்சுங்கள்! </span>
<span>2:42 அசத்தியத்தைக் கொண்டு சத்தியத்தைக் குழப்பி விடாதீர்கள். அறிந்துகொண்டே சத்தியத்தை நீங்கள் மூடி மறைக்காதீர்கள். </span>
<span>2:43 தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; இன்னும் என் முன்னிலையில் தலைசாய்ப்பவர்களுடன் சேர்ந்து நீங்களும் தலை சாயுங்கள். </span>
<span>2:44 பிற மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவிவிட்டு, உங்களை நீங்கள் மறந்து விடுகின்றீர்களா? நீங்களோ வேதத்தை ஓதிக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் சிறிதளவும் (இதைப் பற்றி) சிந்திப்பதில்லையா? </span>
<span>2:45 பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள். திண்ணமாக, தொழுகை ஒரு பாரமான செயல்தான்; ஆனால் இறைவனுக்கு அஞ்சி வாழ்கின்ற அடியார்களுக்கு அது பாரமான செயலே அல்ல! </span>
<span>2:46 அவர்கள் எத்தகையோர் எனில் இறுதியில் தங்கள் இறைவனைச் சந்திப்பவர்களாய் இருக்கின்றோம் என்றும், அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது என்றும் உறுதியாக நம்புகிறார்கள். </span>
<span>2:47 இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! நான் உங்களுக்கு வழங்கியிருந்த என் அருட்கொடையையும் உங்களை நான் உலகத்தோர் அனைவரிலும் மேன்மையாக்கி வைத்திருந்ததையும் நினைவுகூருங்கள். </span>
<span>2:48 மேலும் ஒரு நாளை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்நாளில்) எவரும் மற்றவர்க்கு எதையும் கொடுத்து உதவ முடியாது. எவரிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படவும் மாட்டாது. எவரிடமிருந்தும் மீட்புப் பணம் பெறப்பட்டு, எவரும் விடுதலை செய்யப்படவும் மாட்டார்கள். (குற்றவாளிகளான) அவர்களுக்கு எந்த உதவியும் செய்யப்பட மாட்டாது. </span>
<span>2:49 ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரி(ன் அடிமைத் தளையி)லிருந்து நாம் உங்களுக்கு விடுதலை அளித்த சந்தர்ப்பத்தையும் நினைவு கூருங்கள்! அவர்கள் கொடிய வேதனையில் உங்களை ஆழ்த்தி வைத்திருந்தார்கள். உங்களுடைய ஆண் மக்களைக் கொன்றொழித்துக் கொண்டும், உங்களுடைய பெண் மக்களை உயிருடன் விட்டு வைத்துக் கொண்டும் இருந்தார்கள். இதன் மூலம் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மாபெரும் சோதனை ஏற்பட்டிருந்தது. </span>
<span>2:50 மேலும், நாம் உங்களுக்காகக் கடலைப் பிளந்(து வழி ஏற்படுத்தித்தந்)து, பின்னர் உங்களைக் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை நாம் மூழ்கடித்ததையும் எண்ணிப் பாருங்கள்!</span>
<span>2:51 மேலும், இதையும் நினைவுகூருங்கள்: நாம் மூஸாவுக்கு நாற்பது இரவுபகல்களை வாக்களித்திருந்தோம்; ஆனால், அவர் சென்ற பிறகு நீங்கள் காளைக்கன்றை கடவுளாக ஆக்கிக் கொண்டீர்கள்! அப்போது நீங்கள் பெரும் அக்கிரமம் புரிந்தவர்களாக இருந்தீர்கள். </span>
<span>2:52 அதன் பின்னரும் நீங்கள் நன்றியுடையோராய் இருக்கக்கூடும் என்பதற்காக நாம் உங்களை மன்னித்தோம். </span>
<span>2:53 (நீங்கள் இவ்வாறு அக்கிரமம் செய்து கொண்டிருந்த அதே நேரத்தில்) நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும், ‘ஃபுர்கானை’*யும் அருளியதை நினைவுகூருங்கள். </span>
<span>2:54 மேலும், இதையும் நினைவுகூருங்கள்: மூஸா, (இந்த அருட்கொடைகளைப் பெற்றுத் திரும்பி வந்து) தம் சமுதாயத்தார்களை நோக்கி, “என்னுடைய சமுதாயத்தாரே! காளைக்கன்றை நீங்கள் தெய்வமாக்கிக் கொண்டதனால் திண்ணமாக உங்களுக்கு நீங்களே (பெரும்) அநீதி இழைத்துக் கொண்டீர்கள். ஆகவே, நீங்கள் உங்களைப் படைத்த இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். மேலும் உங்கள் உயிர்களை மாய்த்துக்கொள்ளுங்கள். இதுவே உங்களைப் படைத்த இறைவனிடம் உங்களுக்கு நன்மை பயக்கும்” என்று கூறினார். (அந்நேரத்தில்) உங்கள் இறைவன், உங்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்போனும் கருணை பொழிபவனுமாய் இருக்கின்றான். </span>
<span>2:55 “மூஸாவே! நாங்கள், அல்லாஹ்வை (உம்முடன் உரையாடும் நிலையில் எங்கள் கண்களால்) வெளிப்படையாகக் காணாத வரை உம் கூற்றை நாங்கள் ஒருபோதும் நம்பமாட்டோம்” என்று நீங்கள் கூறியதை நினைவுகூருங்கள். அப்பொழுது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே உங்களை ஒரு பேரிடி தாக்கிற்று! உடனே நீங்கள் மாண்டு வீழ்ந்துவிட்டீர்கள். </span>
<span>2:56 அதன்பிறகும் நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு நாம் மீண்டும் உங்களை உயிர்ப்பித்து எழுப்பினோம். </span>
<span>2:57 மேலும் நாம் உங்கள் மீது மேகத்தை நிழலிடும்படிச் செய்தோம். உங்களுக்கு மன்னுஸல்வா (எனும் உணவுகளை) இறக்கி வைத்தோம். நாம் உங்களுக்கு உணவாக அருளியுள்ள நல்ல பொருள்களைப் புசியுங்கள்(என்றும் உங்களிடம் கூறினோம்). எனினும் (உங்கள் மூதாதையர் வரம்பு மீறினார்கள்; அதன் மூலம்) அவர்கள் எமக்கு அநீதி இழைக்கவில்லை; மாறாக அவர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டனர். </span>
<span>2:58 மேலும் “(அருகிலிருக்கும்) இந்த ஊருக்குள் நுழையுங்கள். பிறகு அங்கு (கிடைப்பனவற்றை) நீங்கள் விரும்பியவாறு தாராளமாகப் புசியுங்கள். ஊருக்குள் நுழையும்போது அதன் தலைவாசலில், சிரம் தாழ்த்திய வண்ணமும் “ஹித்தத்துன்” என்று சொல்லியவாறும் நுழையுங்கள்! உங்கள் குற்றங்களை நாம் மன்னிப்போம். மேலும் சிறந்த முறையில் நற்செயல்கள் புரிவோருக்கு விரைவில் அதிக நற்கூலி வழங்குவோம்” என நாம் கூறியதையும் நினைவுகூருங்கள். </span>
<span>2:59 ஆனால் அந்த அக்கிரமக்காரர்கள் தமக்குக் கூறப்பட்ட சொல்லை வேறொன்றாக மாற்றிவிட்டார்கள். இறுதியில் அந்த அக்கிரமக்காரர்கள் மீது, விண்ணிலிருந்து வேதனையை நாம் இறக்கினோம். இறைக் கட்டளைக்கு அவர்கள் மாறு செய்ததினால் கிடைத்த தண்டனையாகும் இது. </span>
<span>2:60 இன்னும், மூஸா தம் சமுதாயத்தினருக்காக தண்ணீர் கோரிப் பிரார்த்தித்ததையும் நினைவுகூருங்கள். அப்போது “உம்முடைய கைத்தடியைக் கொண்டு இந்தக் கல்லின் மீது அடிப்பீராக!” என்று நாம் கூறினோம். (அவர் அவ்வாறு அடித்ததும்) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுகள் பொங்கி எழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தாரும் (அவ்வூற்றுகளிலிருந்து) தாம் தண்ணீர் அருந்த வேண்டிய பகுதியை அறிந்து கொண்டனர். (அப்பொழுது நாம் அறிவுறுத்தினோம்:) “அல்லாஹ் அருளிய உணவை உண்ணுங்கள்; பருகுங்கள். ஆனால் பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரியாதீர்கள்!”</span>
<span>2:61 மேலும், நீங்கள் (மூஸாவை நோக்கி) இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “மூஸாவே! நாங்கள் ஒரே வகையான உணவைக் கொண்டு பொறுமையாய் இருக்க முடியாது; எனவே, பூமி விளைவிக்கின்ற கீரை, வெள்ளரிக்காய், கோதுமை, பூண்டு, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை எங்களுக்காக உற்பத்தி செய்து தரும்படி உமது இறைவனை நீர் பிரார்த்திப்பீராக!” அதற்கு மூஸா கூறினார்: “சிறந்த பொருள்களுக்குப் பதிலாக மட்டமான பொருள்களை நீங்கள் விரும்புகிறீர்களா? (அப்படியானால்) நீங்கள் ஏதாவது ஒரு பட்டணத்திற்குச் சென்று (தங்கி) விடுங்கள். நீங்கள் கேட்பவை எல்லாம் உங்களுக்கு அங்கே கிடைக்கும்.” (இறுதியில் அவர்களின் நிலை என்னவாயிற்று என்றால்) இழிவும், தாழ்வும், (வீழ்ச்சியும்) அவர்கள் மீது விதிக்கப்பட்டுவிட்டன. மேலும், அவர்கள் அல்லாஹ்வின் சினத்திற்கும் ஆளாகிவிட்டார்கள். இந்த விளைவு ஏன் ஏற்பட்டதென்றால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர்கள் நிராகரித்துக் கொண்டும், நபிமார்களை நியாயமின்றி கொலை செய்து கொண்டும் இருந்தார்கள். இந்த விளைவு ஏற்பட்டதற்குக் காரணம் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்து கொண்டும், (ஷரீஅத்தின்) வரம்பை மீறிக்கொண்டும் இருந்ததுதான்!</span>
<span>2:62 (முஹம்மத் அவர்கள் மீது) நம்பிக்கை கொண்டவர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஸாபீகள் ஆகியோரில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதித் தீர்ப்பு நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகிறார்களோ அவர்களுக்கு, அவர்களுடைய கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு. மேலும் அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். </span>
<span>2:63 இந்தச் சந்தர்ப்பத்தையும் நினைவுகூருங்கள்: தூர் மலையை நாம் உங்களுக்கு மேலே உயர்த்தி உங்களிடமிருந்து உறுதியான வாக்குமூலம் வாங்கினோம். “நாம் உங்களுக்கு வழங்கியுள்ள (வேதத்)தை உறுதியுடன் (கடைப்)பிடியுங்கள். அதிலுள்ள (அறிவுரைகள், கட்டளைகள் ஆகிய)வற்றை நினைவில் வையுங்கள். (அப்போதுதான்) நீங்கள் இறையச்சமுடையோராய்த் திகழலாம்” எனவும் நாம் கூறினோம். </span>
<span>2:64 (எனினும்) அதன் பின்னர் நீங்கள் (உங்கள் வாக்குறுதியிலிருந்து) மாறிவிட்டீர்கள். (அப்படி இருந்தும்) அல்லாஹ்வின் அருளும் அவனது கருணையும் உங்களைக் கைவிடவில்லை; அவ்வாறு கைவிட்டிருந்தால், நீங்கள் நிச்சயம் எப்பொழுதோ பேரிழப்பிற்கு ஆளாகியிருப்பீர்கள். </span>
<span>2:65 மேலும், உங்களில் எவர்கள் சனிக்கிழமை வரையறையை மீறினார்களோ அவர்களைப் பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்தே இருக்கிறீர்கள்; அவர்களை நோக்கி, “நீங்கள் குரங்குகளாகி (அனைவராலும் வெறுக்கப்பட்டு) இழிவடைந்தவர்களாகி விடுங்கள்” என்று நாம் கூறினோம். </span>
<span>2:66 (இவ்வாறு) அவர்களின் இறுதி முடிவை அன்று வாழ்ந்த மக்களுக்கும் அதற்குப் பின்னர் வரக்கூடிய வழித்தோன்றல்களுக்கும் ஒரு படிப்பினையாகவும் இறையச்சம் உடையோர்க்கு நல்லுரையாகவும் ஆக்கினோம். </span>
<span>2:67 மேலும், இந்தச் சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள்: மூஸா, தமது சமூகத்தாரிடம் “ஒரு பசுவை நீங்கள் அறுக்க வேண்டும் என்று அல்லாஹ் நிச்சயமாக உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்” எனக் கூறினார். (அப்போது அவர்கள் “மூஸாவே!) நீர் எங்களை கேலி செய்கிறீரா?” என்றார்கள். அதற்கு அவர், “நான் (அவ்வாறு பேசி) அறிவீனர்களில் ஒருவனாகி விடுவதிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் தேடுகின்றேன்” என்றார். </span>
<span>2:68 அவர்கள் கூறினார்கள்: “அது (பசு) எத்தன்மையுடையது என எங்களுக்கு விவரிக்கும்படி உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக!” அதற்கு அவர், “நிச்சயமாக அது கிழடாகவோ, கன்றாகவோ இல்லாமல் நடு வயதுள்ளதாய் இருக்க வேண்டும் என இறைவன் கூறுகின்றான்; எனவே, உங்களுக்கு இடப்படுகின்ற கட்டளையைச் செயல்படுத்துங்கள்!” என்றார். </span>
<span>2:69 மீண்டும் அவர்கள் கூறினார்கள்: (“மூஸாவே!) அதன் நிறம் என்ன என்று எங்களுக்கு விவரிக்குமாறு உமது இறைவனிடம் நீர் வேண்டுவீராக!” அதற்கு அவர், “நிச்சயமாக அது மஞ்சள் நிறமான பசுவாக இருக்க வேண்டும்; அதன் நிறம் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும் வண்ணம் (அடர்த்தியாக) இருக்க வேண்டும்!” என்றார். </span>
<span>2:70 அதற்கு அவர்கள் கூறினார்கள்: “(மூஸாவே!) அது எத்தன்மை உடையது என (மிக மிகத்)தெளிவாக எங்களுக்கு விவரிக்கும்படி உம் இறைவனை வேண்டுவீராக! ஏனெனில், நிச்சயமாக அந்தப் பசு (எதுவென்பது) பற்றி எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. மேலும், அல்லாஹ் நாடினால் (உரிய பசுவின் பக்கம்) நாங்கள் வழிகாட்டப் பெறுவோம்.” </span>
<span>2:71 மூஸா பதிலளித்தார்:“பூமியை உழுவதற்கோ, வேளாண்மைக்கு நீரிறைப்பதற்கோ பயன்படுத்தப்படாத, ஊனமேதுமற்ற, எவ்வித வடுவுமற்ற பசுவாக அது இருக்க வேண்டும் என அவன் கூறுகின்றான்.” பிறகு அவர்கள் (ஆரவாரத்துடன்) கூறினார்கள்: “இப்போதுதான் நீர் சரியான (விளக்கத்)தைத் தந்துள்ளீர்.” பின்னர் அவர்கள் அந்தப் பசுவை அறுத்தார்கள். ஆயினும் அவர்கள் அதனை முழு மனத்தோடு செய்பவர்களாய் இருக்கவில்லை. </span>
<span>2:72 மேலும், இந்நிகழ்ச்சியை நினைவுகூருங்கள்: நீங்கள் ஒருவனைக் கொலை செய்துவிட்டு அதுபற்றி தர்க்கித்து, ஒருவர் மற்றொருவர் மீது குற்றம் சாட்டிக்கொண்டிருந்தீர்கள். ஆனால் நீங்கள் மறைத்துக் கொண்டிருந்தவற்றை அல்லாஹ் வெளிப்படுத்த முடிவு செய்தான். </span>
<span>2:73 “(அறுக்கப்பட்ட) அப்பசுவின் ஒரு பாகத்தைக் கொண்டு கொலையுண்டவனை அடியுங்கள்” என அப்பொழுது நாம் கட்டளையிட்டோம். (பாருங்கள்) இவ்வாறே அல்லாஹ் மரித்தவர்களை உயிர்ப்பிக்கின்றான்; மேலும் நீங்கள் நல்லறிவு பெறும் பொருட்டு தன் சான்றுகளையும் உங்களுக்குக் காண்பிக்கின்றான். </span>
<span>2:74 ஆனால் இத்தகைய சான்றுகளை நீங்கள் பார்த்த பின்னருங்கூட உங்கள் இதயங்கள் இறுகிவிட்டன. அவை கற்களைப் போல் ஆகிவிட்டன. ஏன் அவற்றை விடவும் மிகக் கடினமாகி விட்டன. ஏனெனில் சில கற்களில் இருந்துகூட நீரூற்றுகள் பொங்கி எழுகின்றன; இன்னும் சில கற்கள் பிளந்து அவற்றிலிருந்து தண்ணீர் வெளிப்படுகின்றது. இன்னும் சில அல்லாஹ்வின் அச்சத்தால் நடுங்கி கீழே விழுந்து விடுகின்றன. நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற இழிசெயல்கள் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாய் இல்லை. </span>
<span>2:75 (முஸ்லிம்களே!) இவர்கள் உங்கள் அழைப்பை ஏற்றுக் கொள்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா? உண்மை யாதெனில், அல்லாஹ்வின் அருள்மொழிகளைக் கேட்டு, நன்குணர்ந்த பின்னரும் வேண்டுமென்றே அதனை மாற்றக்கூடிய ஒரு பிரிவினரும் இவர்களில் இருக்கிறார்கள். </span>
<span>2:76 (இறைத்தூதர் முஹம்மத் மீது) நம்பிக்கை கொண்டவர்களை இவர்கள் சந்திக்கும்போது “நாங்களும் (அவர் மீது) நம்பிக்கை கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் தங்களுக்குள் தனிமையில் பேசிக் கொள்ளும்போது, “என்ன, நீங்கள் மதியிழந்து விட்டீர்களா? உங்களுக்கு அல்லாஹ் அறிவித்துத் தந்திருப்பதை நீங்கள் அவர்களிடம் சொல்லி விடுகின்றீர்களே! அதை வைத்துக் கொண்டு உங்கள் இறைவனிடத்தில் அவர்கள் உங்களுக்கு எதிராக வாதிடுவதற்காகவா (இவ்வாறு செய்கின்றீர்கள்)?” என்று கூறுகின்றார்கள். </span>
<span>2:77 அவர்கள் மறைத்துக் கொள்கின்றவற்றையும், அவர்கள் வெளிப்படுத்துகின்றவற்றையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான் என்பதை அவர்கள் அறியவில்லையா? </span>
<span>2:78 மேலும், அவர்களில் மற்றொரு பிரிவினர், எழுதப் படிக்கத் தெரியாதவர்களாய் இருக்கின்றார்கள். அவர்களுக்கு வேதத்தைப் பற்றிய எந்த அறிவும் கிடையாது. அவர்களிடம் இருப்பதெல்லாம் வெறும் அடிப்படையற்ற நம்பிக்கைகளும் ஆசைகளும்தான்! மேலும் வெறும் ஊகங்களிலேயே அவர்கள் உழன்று கொண்டிருக்கிறார்கள். </span>
<span>2:79 சொற்ப விலைக்கு விற்று, சிறிது இலாபம் பெறுவதற்காக தம் கைகளாலேயே ஒரு (சட்ட) நூலை எழுதிப் பின்னர், “இது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது” என்று (மக்களை நோக்கிக்) கூறுவோர்க்குக் கேடுதான்! எனவே, அவர்களுடைய கைகள் எழுதியதும் அவர்களுக்குக் கேடுதான். மேலும் (அதனைக் கொண்டு) அவர்கள் சம்பாதித்ததும் அவர்களுக்குக் கேடுதான்! </span>
<span>2:80 மேலும் “குறிப்பிட்ட சில நாட்களைத் தவிர நெருப்பு எங்களை ஒருபோதும் தீண்டாது” என அவர்கள் கூறுகிறார்கள். (நபியே! அவர்களிடம்) நீர் கேளும்: “அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதாவது உறுதிமொழி நீங்கள் பெற்றிருக்கின்றீர்களா? அப்படியானால் அல்லாஹ் ஒருபோதும் தன் வாக்குறுதிக்கு மாறு செய்யமாட்டான்! அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிச் சொல்கின்றீர்களா?” (உங்களை நரக நெருப்பு ஏன் தீண்டாது?) </span>
<span>2:81 அப்படியல்ல, எவர்கள் தீமையைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்களோ, மேலும் தம்முடைய பாவங்களிலேயே உழன்று கொண்டிருக்கிறார்களோ அவர்கள் நரகவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள். </span>
<span>2:82 இன்னும் எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்கள் சுவனவாசிகள்; அதில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். </span>
<span>2:83 இன்னும் நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் இவ்வாறு உறுதியான வாக்குமூலம் வாங்கியதை நினைத்துப் பாருங்கள்; “அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் வழிபடாதீர்கள்; (உங்களுடைய) பெற்றோர்கள், உறவினர்கள், அநாதைகள், மிஸ்கீன் (வறியவர்)கள் ஆகியோருடன் நற்பண்போடு நடந்து கொள்ளுங்கள்; மனிதர்களிடம் நல்லனவற்றைப் பேசுங்கள். மேலும் தொழுகையை நிலை நாட்டுங்கள். ஜகாத் கொடுத்து வாருங்கள்.” ஆனால் உங்களில் சிலரைத் தவிர நீங்கள் அனைவரும் (அந்த வாக்குறுதியைப்) புறக்கணித்து விட்டீர்கள். இப்பொழுதும்கூட (அதனைப்) புறக்கணித்துக் கொண்டிருக்கின்றீர்கள். </span>
<span>2:84 மேலும் ஒரு சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள்: ‘நீங்கள் இரத்தம் சிந்தாதீர்கள்; உங்களுடைய ஊர்களிலிருந்து ஒருவரை ஒருவர் வெளியேற்றாதீர்கள்’ என்று உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம். நீங்களும் அதனை ஏற்றுக் கொண்டீர்கள்; இன்னும் நீங்கள் அதற்குச் சாட்சியாக இருந்தீர்கள். </span>
<span>2:85 (ஆனால் அதற்குப்) பின்னரும் கூட நீங்கள் ஒருவரையொருவர் கொலை செய்கிறீர்கள். உங்களில் ஒரு பிரிவினரை அவர்களின் ஊர்களிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்களுக்கு அநீதியும் அக்கிரமமும் செய்து அவர்களுக்கு எதிராக ஆள் சேர்க்கிறீர்கள். ஆனால் அவர்கள் (போரில்) பிடிபட்டு கைதிகளாய் உங்களிடம் வரும்போது மீட்புப் பணம் கொடுத்து அவர்களை விடுவிக்கிறீர்கள். ஆனால், அவர்களை (அவர்களின் ஊர்களிலிருந்து) வெளியேற்றுவதே உங்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்ததே! அப்படியென்றால், நீங்கள் வேதத்தின் ஒரு பகுதியை நம்பி, மறு பகுதியை நிராகரிக்கின்றீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறெந்தக் கூலியும் இல்லை. மறுமைநாளிலோ மிகக் கடுமையான வேதனையின் பக்கம் அவர்கள் திருப்பப்படுவார்கள். மேலும், நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற (இழி) செயல்கள் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாய் இல்லை </span>
<span>2:86 மறுமை வாழ்வை விற்று, இம்மை வாழ்வைக் கொள்வினை செய்து கொண்டவர்கள் இவர்கள்தாம்! ஆகவே, இவர்களுக்குச் சிறிதளவும் தண்டனை குறைக்கப்பட மாட்டாது. மேலும் இவர்களுக்கு எந்த உதவியும் செய்யப்பட மாட்டாது. </span>
<span>2:87 மேலும், நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தை அருளினோம். மேலும், அவருக்குப் பின்னர் தொடர்ந்து தூதர்களை நாம் அனுப்பினோம். இறுதியில் மர்யமுடைய மகன் ஈஸாவுக்கும் தெளிவான சான்றுகளைக் கொடுத்தனுப்பினோம். மேலும் தூய ஆன்மாவைக் கொண்டு அவருக்கு வலுவூட்டினோம். யாரேனும் ஒரு தூதர் உங்களுடைய மன இச்சைகளுக்கு இசைவில்லாத ஏதேனும் ஒன்றை உங்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் நீங்கள் ஆணவம் கொண்டு புறக்கணித்தீர்கள்; சிலரைப் பொய்யரெனக் கூறினீர்கள்; மற்றும் சிலரை நீங்கள் கொலை செய்தீர்கள். இது என்ன போக்கு? </span>
<span>2:88 “எங்களுடைய இதயங்கள் உறையிடப்பட்டிருக்கின்றன” என்று அவர்கள் கூறுகின்றனர். இல்லை, அவர்களுடைய அவநம்பிக்கையின் காரணமாக, அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான் (என்பதுதான் உண்மை). ஆகவே, மிகச் சொற்பமாகவே அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள். </span>
<span>2:89 மேலும், அல்லாஹ்விடமிருந்து வேதம் அவர்களிடம் வந்தபோது (அதனுடன் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள்?) அதுவோ, அவர்களிடம் இருந்த வேதத்தை உறுதிப்படுத்துகின்றது. மேலும் (அது வருவதற்கு) முன்பு அவர்களே, நிராகரிப்பாளர்களுக்கு எதிராகத் தங்களுக்கு வெற்றியும் உதவியும் அளிக்கும்படி பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் அறிந்துகொண்ட ஒன்று அவர்களிடம் வந்தபோது அதனை அவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். அத்தகைய நிராகரிப்பாளர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! </span>
<span>2:90 எதனைக்கொண்டு அவர்கள் மன ஆறுதல் பெறுகின்றார்களோ அது எத்துணைக் கெட்டது! (அதாவது) அல்லாஹ் இறக்கியருளிய வழிகாட்டலை அவர்கள் நிராகரிப்பது தன் அடியார்களில் தான் நாடுகின்ற ஒருவர் மீது தனது கருணையை (வஹி மற்றும் தூதுத்துவத்தை) அல்லாஹ் இறக்கியருளுவது குறித்துக் காழ்ப்புணர்ச்சி கொண்டு அதனை அவர்கள் நிராகரிப்பது எவ்வளவு கெட்டது! ஆகவே (இப்போது) அவர்கள் கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள். மேலும் இத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு இழிவுமிக்க தண்டனை உண்டு. </span>
<span>2:91 “அல்லாஹ் இறக்கியருளியதன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் “எங்களுக்கு (இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு) எது இறக்கி அருளப்பட்டிருக்கிறதோ அதன் மீது மட்டும்தான் நாங்கள் நம்பிக்கை கொள்வோம்” என்று அவர்கள் கூறுகின்றனர். அதைத் தவிர மற்றதை அவர்கள் நிராகரிக்கின்றார்கள். உண்மையில், அது சத்தியமானதாகவும் (முன்னரே) அவர்களிடம் இருந்த அறிவுரைகளை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது! அவர்களைக் கேளும்: “உங்களுக்கு அருளப்பட்டவற்றின் மீது நீங்கள் உண்மையிலேயே நம்பிக்கை கொண்டவர்களாய் இருந்தால், இதற்கு முன் (இஸ்ராயீல் வம்சத்திலிருந்தே தோன்றிய) அல்லாஹ்வின் தூதர்களை நீங்கள் ஏன் கொலை செய்து கொண்டிருந்தீர்கள்?” </span>
<span>2:92 மேலும், மூஸா உங்களிடம் (எத்துணைத்) தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருந்தும், அவர் (உங்களை விட்டுத் திரும்பிச்) சென்ற உடனேயே நீங்கள் காளைக் கன்றை தெய்வமாக்கிக் கொண்டீர்கள். அந்த அளவுக்கு அக்கிரமக்காரர்களாய் நீங்கள் இருந்தீர்கள். </span>
<span>2:93 பிறகு உங்கள் மீது தூர் மலையை நாம் உயர்த்தி, நாம் உங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட உறுதியான ஒப்பந்தத்தை (சற்று) நினைத்துப் பாருங்கள். “உங்களுக்கு நாம் அருளுகின்ற அறிவுரைகளை வலுவாகக் கடைப்பிடியுங்கள். மேலும் (நம்முடைய கட்டளைக்குச்) செவிசாயுங்கள்” என்று நாம் கூறினோம். அதற்கு உங்கள் முன்னோர்கள் “நாங்கள் செவியேற்றோம்; ஆனால் மாறு செய்வோம்” என்று கூறினார்கள். அவர்களின் அசத்தியப்போக்கு எந்த அளவு முற்றியிருந்ததெனில், அவர்களுடைய நிராகரிப்பின் காரணத்தால் காளைக் கன்று வழிபாட்டின் மீது அவர்களின் உள்ளங்கள் மோகம் கொண்டிருந்தன. “நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாய் இருந்தால், இழிவான இச்செயல்களைச் செய்யுமாறு உங்களைத் தூண்டுகின்ற உங்கள் நம்பிக்கை எத்துணை விசித்திரமானது!” என்று நீர் கூறும். </span>
<span>2:94 அவர்களிடம் நீர் சொல்வீராக: “அல்லாஹ்விடம் இருக்கும் மறுமை வீடு மற்ற மனிதர்களுக்கன்றி உங்களுக்கு மட்டுமே சொந்தமானதாய் இருக்குமானால், (உங்களின் இந்த நம்பிக்கையில்) நீங்கள் உண்மையானவர்களாய் இருந்தால், நீங்கள் மரணத்தை விரும்புங்கள் (பார்ப்போம்!)” </span>
<span>2:95 தம் கைகளினால் சம்பாதித்துள்ள தீவினைகளின் காரணத்தால், அவர்கள் அதனை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள் (என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்). மேலும், இந்த அக்கிரமக்காரர்களை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான். </span>
<span>2:96 எல்லா மனிதர்களை விடவும் ஏன், இணைவைத்து வணங்குபவர்களை விடவும் இவர்களே வாழ்வின் மீது அதிகப் பேராசை கொண்டவர்களாய் இருப்பதை நீர் காண்பீர். அவர்களில் ஒவ்வொருவனும் (எப்படியாவது) ஓராயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். ஆயினும், அவனுடைய நீண்ட ஆயுள், வேதனையிலிருந்து அவனை விலக்கிவிடாதே! அவர்கள் எத்தகைய செயல்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அல்லாஹ் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான். </span>
<span>2:97 (நபியே!) நீர் கூறும்: யாரேனும் ஜிப்ரீலுக்குப் பகைவராக இருந்தால் அவர் அறிந்து கொள்ளட்டும் அல்லாஹ்வின் ஆணைப்படியே ஜிப்ரீல் இதனை உம்முடைய உள்ளத்தில் இறக்கி வைத்தார். இது (எத்தகைய வேதமெனில்) தனக்கு முன்னுள்ள வேதங்களை மெய்ப்படுத்துவதாகவும், இறைநம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழி காட்டக்கூடியதாகவும், வெற்றிக்கான நற்செய்தி அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. (ஜிப்ரீல் மீது அவர்கள் பகைமை கொள்வதற்கு இதுவே காரணமெனில், நபியே! நீர் கூறும்:) </span>
<span>2:98 “எவரேனும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய வானவர்களுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் பகைவராக இருந்தால், நிச்சயமாக அத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு அல்லாஹ்வும் பகைவனாகவே இருப்பான்.”</span>
<span>2:99 இன்னும் (நபியே! சத்தியத்தை) தெளிவாக எடுத்துரைக்கும் வசனங்களை நிச்சயமாக உமக்கு நாம் இறக்கி அருளியிருக்கிறோம். ஃபாஸிக்களை (கீழ்ப்படியாதவர்களை)த் தவிர வேறு எவரும் அவற்றை(ப் பின்பற்றுவதை) நிராகரிக்க மாட்டார்கள். </span>
<span>2:100 அவர்கள் ஓர் ஒப்பந்தத்தைச் செய்வதும், (பிறகு) அவர்களில் யாராவது ஒரு சாரார் அதனை முறித்து விடுவதும் எப்பொழுதுமே (அவர்களுடைய) வழக்கமாக இருந்து வந்ததில்லையா? தவிரவும் அவர்களில் பெரும்பாலோர் உளமார்ந்த நம்பிக்கை கொள்வதில்லை. </span>
<span>2:101 மேலும், அல்லாஹ்விடமிருந்து யாரேனும் ஓர் இறைத்தூதர் அவர்களிடமிருந்த வேதத்தை உண்மைப்படுத்தக்கூடியவராக அவர்களிடம் வந்தபோது, வேதம் அருளப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் தாம் எதுவும் அறியாதவர்கள் போன்று அல்லாஹ்வின் வேதத்தைத் தம் முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்துவிட்டார்கள். </span>
<span>2:102 (இதற்குப் பதிலாக) ஸுலைமானுடைய ஆட்சியின்போது ஷைத்தான்கள் எடுத்தோதி வந்த (சூனியத்)தை அவர்கள் பின்பற்றலானார்கள். ஆனால் ஸுலைமான் (ஒருபோதும்) நிராகரிக்கவில்லை. ஆயினும் மக்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த ஷைத்தான்கள்தாம் நிராகரித்தார்கள். மேலும், பாபிலோனில் ஹாரூத், மாரூத் என்ற இரு வானவர்களுக்கும் இறக்கி வைக்கப்பட்டதையும் அவர்கள் பின்பற்றினார்கள். (ஆனால்) எவருக்கேனும் சூனியக்கலையைக் கற்றுக் கொடுக்க நேரும்போது அந்த வானவர்கள், “நாங்கள் உங்களுக்கு ஒரு சோதனையாகவே இருக்கிறோம்; ஆகவே, நீங்கள் (இதனைக் கொண்டு) இறை நிராகரிப்பை மேற்கொள்ள வேண்டாம்” என எச்சரித்து விடுவார்கள். ஆனால், இதற்குப் பிறகும், கணவனுக்கும் மனைவிக்குமிடையே பிளவை உருவாக்குகின்ற சூனியத்தை அவ்விருவரிடம் இருந்து அவர்கள் கற்று வந்தனர். அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் இந்த சூனியத்தைக் கொண்டு எவருக்கும் (எந்த வகையிலும்) அவர்களால் தீங்கிழைக்க முடியாது. உண்மையில் தங்களுக்குப் பலனளிக்காததும், தீங்கிழைக்கக் கூடியதுமானதையே அவர்கள் கற்றனர். மேலும் (சூனியத்தைக் கற்று) அதனை விலைக்கு வாங்கிக் கொண்டவனுக்கு மறுமையில் யாதொரு பங்கும் கிடையாது என்பதை அவர்கள் நன்கு அறிந்தேயிருந்தனர். தங்கள் உயிர்களை விற்று அவர்கள் வாங்கிக் கொண்ட பொருள் எத்துணைக் கெட்டது! இதனை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா?</span>
<span>2:103 உண்மையில் அல்லாஹ்வின் மீது அவர்கள் நம்பிக்கைகொண்டு, இறையச்சமுள்ள வாழ்வை மேற்கொண்டிருந்தால் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் நற்கூலி மேலானதாக இருந்திருக்கும். அந்தோ! இதனை அவர்கள் அறிந்திருக்கவில்லையே!</span>
<span>2:104 இறைநம்பிக்கை கொண்டவர்களே! ‘ராஇனா’ என்று சொல்லாதீர்கள். மாறாக ‘உன்ளுர்னா’ என்று சொல்லுங்கள்; மேலும் (கவனத்துடன்) செவியுறுங்கள். இந்த நிராகரிப்பாளர்களுக்கோ துன்புறுத்தும் வேதனை உண்டு. </span>
<span>2:105 சத்தியத்தை மேற்கொள்ள மறுப்பவர்கள் அவர்கள் வேதம் அருளப் பெற்றவர்களாய் இருந்தாலும் சரி, இறைவனுக்கு இணை கற்பிப்பவர்களாய் இருந்தாலும் (சரியே) உம் இறைவனிடமிருந்து (ஏதேனும்) ஒரு நன்மை உம்மீது இறக்கியருளப்படுவதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். ஆனால், தன் கருணையை வழங்க, தான் நாடியவர்களையே அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். மேலும், அல்லாஹ் மகத்தான கருணை பொழிபவனாய் இருக்கின்றான். </span>
<span>2:106 எந்த ஒரு வசனத்தையாவது நாம் அகற்றிவிட்டால் அல்லது மறக்கச் செய்துவிட்டால் (அதற்குப் பதிலாக) அதனினும் சிறந்த அல்லது அதே போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன் என்பதை நீங்கள் அறியவில்லையா? </span>
<span>2:107 வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும் அவனைத் தவிர வேறு எந்தப் பாதுகாவலனும் உதவியாளனும் உங்களுக்கு இல்லை என்பதையும் நீங்கள் அறியவில்லையா?</span>
<span>2:108 இதற்கு முன்னால் மூஸாவிடம் வினவப்பட்டது போல (இப்பொழுது) நீங்கள், உங்கள் இறைத்தூதரிடம் வினவ விரும்புகிறீர்களா? உண்மை யாதெனில், எவர் இறைநம்பிக்கையுடைய நடத்தையை விட்டுவிட்டு நிராகரிப்புப் போக்கை மேற்கொள்கின்றாரோ அவர் நிச்சயமாக நேரான வழியை விட்டுப் பிறழ்ந்து விட்டார். </span>
<span>2:109 வேதம் அருளப்பட்டவர்களில் பலர் நீங்கள் இறைநம்பிக்கை கொண்டு விட்டதற்குப் பின்னர் உங்களை (எவ்விதத்திலாவது) நிராகரிப்பவர்களாய் திருப்பி விட வேண்டும் என விரும்புகின்றார்கள். சத்தியம் தமக்குத் தெளிவாகிவிட்ட பின்னரும் தங்களிடமுள்ள பொறாமையின் காரணமாக (இவ்வாறு செய்ய முனைகின்றார்கள்;) அல்லாஹ் தன் தீர்ப்பைச் செயல்படுத்தும் வரை நீங்கள் அவர்களுடைய செயல்களை மன்னித்து விடுங்கள். மேலும் பொறுத்துக் கொள்ளுங்கள்! திண்ணமாக, அல்லாஹ் ஒவ்வொரு பொருள் மீதும் பேராற்றலுடையவன் (என்பதை நம்பி நிம்மதியாய் இருங்கள்). </span>
<span>2:110 மேலும், தொழுகையை நிலைநாட்டுங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள்; உங்(கள் மறுமை நலன்)களுக்காக நற்செயல் எதையேனும் நீங்கள் சம்பாதித்து முன்னரே அனுப்பி இருந்தால் அதனை அல்லாஹ்விடம் நீங்கள் காண்பீர்கள். நீங்கள் செய்கின்ற அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் உற்று நோக்கியவனாய் இருக்கின்றான். </span>
<span>2:111 “ஒரு யூதராகவோ (கிறிஸ்தவர்கள் வாதிக்கின்றபடி) ஒரு கிறிஸ்தவராகவோ இல்லாத எவரும் சுவனம் புகமாட்டார்” என்று அவர்கள் கூறுகின்றார்கள். இவை அவர்களின் நப்பாசைகளே ஆகும். அவர்களிடம் கூறுவீராக: “(உங்கள் வாதத்தில்) நீங்கள் உண்மையாளர்களாயிருந்தால், அதற்குரிய உங்களுடைய ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்.” (உண்மையில் தனிப்பட்ட உரிமை உங்களுக்கும் இல்லை. வேறு எவருக்கும் இல்லை.)</span>
<span>2:112 ஆம்! எவர் தம்மை இறைவனிடம் முழுமையாக ஒப்படைத்து, செயல் அளவிலும் நன்னடத்தையை மேற்கொள்பவராய் இருக்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அவருடைய இறைவனிடம் அவருக்கு உண்டு. மேலும் அத்தகையவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். </span>
<span>2:113 யூதர்கள் கூறுகிறார்கள்: “கிறிஸ்தவர்கள் (சத்தியத்தின்) எந்த அடிப்படையிலும் இல்லை.” கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்: “யூதர்கள் (சத்தியத்தின்) எந்த அடிப்படையிலும் இல்லை” ஆயினும் இந்த இரு சாராரும் வேதம் ஓதிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இவர்கள் சொல்வது போன்றுதான் வேதத்தை அறியாதவர்களும் கூறுகிறார்கள். ஆனால், இவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருக்கும் விஷயங்கள் பற்றி இறுதிநாளில் இவர்களுக்கிடையே அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான். </span>
<span>2:114 மேலும் மஸ்ஜித்களில் இறையில்லங்களில் அல்லாஹ்வின் பெயர் நினைவுகூரப்படுவதை எவன் தடுக்கின்றானோ, மேலும் அவற்றைப் பாழாக்க முயற்சி செய்கின்றானோ அவனை விடக் கொடிய அக்கிரமக்காரன் யார்? அத்தகையவர்கள் அந்த இறையில்லங்களில் நுழைவதற்கே அருகதையற்றவர்களாவர்; ஒருவேளை அங்கே அவர்கள் செல்ல வேண்டியதாய் இருந்தாலும் அச்சம் கொண்டவர்களாகவே (செல்லும் சூழ்நிலை) இருக்க வேண்டும். அவர்களுக்கு இம்மையிலும் இழிவுண்டு. மறுமையிலும் பெரும் வேதனை உண்டு. </span>
<span>2:115 கிழக்கு, மேற்கு யாவும் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே, நீங்கள் எங்கு திரும்பினாலும், அங்கு அல்லாஹ்வின் திசை இருக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ் மிக விசாலமானவன்; மிக அறிந்தவன். </span>
<span>2:116 “அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான்” என்று அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் (இக்கூற்றிலிருந்து) தூய்மையானவன். உண்மை யாதெனில், வானங்களிலும் பூமியிலும் உள்ள யாவும் அவனுக்கே உரியனவாகும். அனைத்தும் அவனது கட்டளைக்கே கீழ்ப்படிபவைகளாய் இருக்கின்றன. </span>
<span>2:117 ஆதியில் வானங்களையும், பூமியையும் படைத்து உருவாக்கியவன் அவனே! அவன் எதனையும் படைப்பதற்குத் தீர்மானித்தால், ‘ஆகுக’ என்றுதான் அதற்கு ஆணையிடுவான். அது உடனே ஆகிவிடுகின்றது. </span>
<span>2:118 “எங்களுடன் நேரடியாகவே அல்லாஹ் ஏன் பேசக்கூடாது? அல்லது எங்களிடம் ஏதேனும் ஒரு சான்று ஏன் வரக்கூடாது?” என்று அறியாதவர்கள் கேட்கிறார்கள். இவ்வாறே இவர்களுக்கு முன்பு சென்றவர்களும் கூறிக்கொண்டிருந்தார்கள். (நேர்வழி தவறிய) இந்த மக்கள் அனைவரின் மனப்பாங்கும் எப்பொழுதும் ஒரே மாதிரியாய் இருக்கின்றது. உறுதியாக நம்புவோர்க்கு சான்றுகளை மிகத் தெளிவாக நாம் விளக்கிக் காட்டி விட்டோம். </span>
<span>2:119 சத்திய(ஞான)த்துடன், நற்செய்தியை அறிவிப்பவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் உம்மை திண்ணமாக நாம் அனுப்பியிருக்கின்றோம். (இதனைவிடத் தெளிவான சான்று வேறு என்ன இருக்க முடியும்?) நரகத்துடனேயே தங்களை இணைத்துக் கொண்டவர்களைப் பற்றி நீர் வினவப்படமாட்டீர். </span>
<span>2:120 (நபியே!) யூதர்களும் கிறிஸ்தவர்களும், அவர்களுடைய வழி முறையை நீர் பின்பற்றாத வரை உம்மைப் பற்றி மன நிறைவடையவே மாட்டார்கள். “அல்லாஹ் காட்டிய வழியே நேர்வழியாகும்” என்று அவர்களிடம் நீர் தெளிவாகச் சொல்லி விடும். மேலும் இந்த ஞானம் உம்மிடம் வந்த பிறகும், அவர்களுடைய விருப்பங்களை நீர் பின்பற்றுவீராயின் அல்லாஹ்வின் பிடியிலிருந்து காப்பாற்றும் நண்பரோ உதவியாளரோ எவரும் உமக்கு இருக்கமாட்டார். </span>
<span>2:121 எவர்களுக்கு நாம் வேதத்தை அருளியிருக்கின்றோமோ, அவர்கள் இவ்வேதத்தை ஓத வேண்டிய முறைப்படி ஓதுகின்றார்கள். அவர்கள் இதன் மீது (இந்தக் குர்ஆன் மீது உண்மையான உள்ளத்துடன்) நம்பிக்கை கொள்கின்றார்கள். இன்னும் எவர்கள் இதனைக் குறித்து நிராகரிக்கும் போக்கினை மேற்கொள்கிறார்களோ அவர்களே உண்மையில் நஷ்டமடைந்தவர்களாவர். </span>
<span>2:122 இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! நான் உங்களுக்கு வழங்கியிருந்த என் அருட்கொடையையும் உங்களை நான் உலக மக்கள் அனைவரிலும் மேன்மையாக்கி வைத்திருந்ததையும் நினைவுகூருங்கள். </span>
<span>2:123 மேலும் ஒரு நாளை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்நாளில்) எவரும் மற்றவர்க்கு எதையும் கொடுத்துதவ முடியாது. எவரிடமிருந்தும் எந்தவிதமான ஃபித்யாவும் (மீட்புப் பணமும்) ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எந்தப் பரிந்துரையும் எவர்க்கும் பயன் தராது; மேலும் (குற்றவாளிகளாகிய) அவர்களுக்கு எங்கிருந்தும் உதவி கிடைக்காது. </span>
<span>2:124 மேலும், இப்ராஹீமை அவருடைய அதிபதி சில விஷயங்கள் மூலம் சோதித்ததை நினைவுகூருங்கள். இன்னும் அவர், அவற்றில் எல்லாம் முழுமையாகத் தேர்ந்துவிட்டார். (அப்பொழுது) அவன் கூறினான்: “நான் நிச்சயமாக உம்மை மனித குலத்திற்குத் தலைவராக்கப் போகின்றேன்.” இப்ராஹீம் வினவினார்: “என்னுடைய வழித்தோன்றல்களையும் (இந்த வாக்குறுதி) சாருமா?” அதற்கு அவன் கூறினான்: “அநீதியாளர்களை என்னுடைய இந்த வாக்குறுதி சாராது!”</span>
<span>2:125 மேலும் நினைவுகூருங்கள்: நாம் (கஅபத்துல்லாஹ் எனும்) இந்த ஆலயத்தை மக்களுக்கு ஒரு மையமாகவும், அமைதி அளிக்கும் இடமாகவும் ஆக்கினோம். மேலும், “இப்ராஹீம் (வணக்கத்திற்காக நின்ற) இடத்தை நீங்கள் தொழும் இடமாக வைத்துக் கொள்ளுங்கள்” என்றும் மக்களுக்கு நாம் கட்டளையிட்டோம். மேலும், “தவாஃப், இஃதிகாஃப், ருகூவு, ஸுஜூது* ஆகியவற்றைச் செய்பவர்களுக்காக எனது இவ்வீட்டை நீங்கள் இருவரும் தூய்மையாக்கி வையுங்கள்” என்று இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும் நாம் கட்டளை பிறப்பித்தோம். </span>
<span>2:126 மேலும் இந்தச் சந்தர்ப்பத்தையும் நினைவுகூருவீராக! இப்ராஹீம் பிரார்த்தனை செய்தார்: “என் அதிபதியே! நீ இந்நகரத்தை அமைதி அளிக்கும் நகரமாக்கி வைப்பாயாக! இங்கு வசிப்பவர்களில் எவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புகிறார்களோ, அவர்களுக்கு, (அனைத்து விதமான) பழங்களையும் (உணவு வகைகளையும்) வழங்குவாயாக!” அதற்கு அவருடைய அதிபதி பதிலளித்தான்; “நம்பிக்கை கொள்ளாதவனுக்கும் இவ்வுலகின் சொற்ப வாழ்வுக்குரிய வசதிகளை நான் வழங்குவேன். ஆயினும், இறுதியில் அவனை நரக வேதனையின் பக்கம் இழுத்துச் செல்வேன். (அவ்வாறு) அவன் சேருமிடம் மிகவும் கெட்டது!”</span>
<span>2:127 மேலும் நினைவுகூருங்கள்: இப்ராஹீமும் இஸ்மாயீலும் அவ் வீட்டின் சுவர்களை உயர்த்திக் கொண்டிருந்த பொழுது இவ்வாறு பிரார்த்தித்தார்கள்: “எங்கள் இறைவனே! எங்களுடைய இப்பணியை ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீதான் எல்லாவற்றையும் செவியேற்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய். </span>
<span>2:128 எங்கள் இறைவனே! மேலும், எங்கள் இருவரையும் உனக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாய் முஸ்லிம்களாய் ஆக்கி வைப்பாயாக! மேலும் எங்கள் வழித்தோன்றலிலிருந்து முற்றிலும் உனக்குக் கீழ்ப்படிந்து வாழும் ஒரு சமூகத்தைத் தோற்றுவிப்பாயாக! நாங்கள் நிறைவேற்ற வேண்டிய வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காண்பிப்பாயாக! மேலும் எங்களுடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீதான் பெரிதும் மன்னிப்பவனும் மிக்க கருணையுடையோனுமாய் இருக்கிறாய். </span>
<span>2:129 எங்கள் இறைவனே! மேலும், இம்மக்களுக்காக அவர்களிலிருந்தே ஒரு தூதரை எழுப்புவாயாக! அவர் உன்னுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுபவராகவும், வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பவராகவும், மேலும் அவர்களை (அவர்களுடைய வாழ்க்கையைத்) தூய்மைப்படுத்துபவராகவும் திகழ வேண்டும். திண்ணமாக நீயே பேராற்றலுள்ளவனும், பேரறிவாளனுமாய் இருக்கின்றாய்.”</span>
<span>2:130 இப்பொழுது இப்ராஹீமின் வழிமுறையை யார் புறக்கணிப்பார்? தன்னைத்தானே எவன் மூடனாக்கிக் கொண்டானோ அவனைத் தவிர! இப்ராஹீமையோ நாம் திண்ணமாக இவ்வுலகில் (எமது பணிக்காகத்) தேர்ந்தெடுத்தோம். இன்னும் நிச்சயமாக மறு உலகிலும் அவர் நல்லடியார்களில் ஒருவராக இருப்பார். </span>
<span>2:131 (அவருடைய நிலை எத்தகையதாயிருந்ததென்றால்) அவருடைய இறைவன், “நீர் ‘முஸ்லிமாகி விடுவீராக’ என அவரிடம் கூறினான். அதற்கு அவர் (உடனே) பதில் கூறினார்: “அகிலமனைத்தின் அதிபதிக்கு நான் (கீழ்ப் படிந்த) முஸ்லிமாகிவிட்டேன்.” </span>
<span>2:132 இதே வழிமுறையில் செல்லும்படித் தம் மக்களுக்கும் இப்ராஹீம் அறிவுறுத்தியிருந்தார். மேலும், இதனையே பின்பற்றி வாழும்படி யஃகூபும் தம் மக்களுக்கு அறிவுறுத்திச் சென்றார். அவர் கூறினார்: “என்னுடைய மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இந்த தீனையே (நெறியையே) தேர்ந்தெடுத்துள்ளான். எனவே, நீங்கள் முஸ்லிம்களாக அன்றி இறந்து விடாதீர்கள்!” </span>
<span>2:133 யஃகூபை மரணம் நெருங்கியபொழுது நீங்கள் அங்கிருந்தீர்களா என்ன? (அவர் மரணிக்கும் தருவாயில்) தம் மக்களிடம் வினவினார்: “மக்களே, எனக்குப் பின்னர் நீங்கள் எதை வணங்குவீர்கள்?” அதற்கு அவர்கள் அனைவரும் பதிலளித்தனர்: “உங்கள் இறைவனும் உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமான ஒரே இறைவனையே நாங்கள் வணங்குவோம். அத்துடன் நாங்கள் அவனுக்கே (கீழ்ப்படிந்த) முஸ்லிம்களாகத் திகழ்வோம்!”</span>
<span>2:134 அந்தச் சமூகத்தினர் சென்று விட்டனர். அவர்கள் சம்பாதித்தவை அனைத்தும் அவர்களுக்கே; நீங்கள் சம்பாதிப்பவை உங்களுக்கே! மேலும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள். </span>
<span>2:135 (யூதர்கள் கூறுகிறார்கள்:) “நீங்கள் யூதர்களாக இருங்கள்; நேர்வழி பெறுவீர்கள்!” (கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்:) “நீங்கள் கிறிஸ்தவர்களாக இருங்கள்; நேர்வழி பெறுவீர்கள்!” (அவர்களிடம்) சொல்வீராக: “இல்லை, நான் அனைத்திலிருந்தும் முகம் திருப்பி இப்ராஹீமின் வழிமுறையை ஏற்றுக் கொண்டுள்ளேன். மேலும், அவர் இணைவைப்பவர்களில் ஒருவராய் இருக்கவில்லை.” </span>
<span>2:136 (முஸ்லிம்களே!) நீங்கள் கூறுங்கள்: “அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கி அருளப்பட்டதையும், மேலும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூபு ஆகியோருக்கும், யஃகூபின் வழித்தோன்றல்களுக்கும் அருளப்பட்டதையும், மற்றும் மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் வழங்கப்பட்டதையும், மற்றும் நபிமார்கள் அனைவர்க்கும், அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பட்டவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவர்களில் யாருக்கிடையேயும் எந்த வேற்றுமையும் பாராட்டுவதில்லை; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்த முஸ்லிம்களாக இருக்கின்றோம்.”</span>
<span>2:137 நீங்கள் நம்பிக்கை கொண்டதுபோல் அவர்களும் நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழி பெற்றவர்களாவார்கள். ஆனால், அவர்கள் புறக்கணிப்பார்களேயானால் அவர்கள் பகைமையில் பிடிவாதமாய் இருக்கிறார்கள் (என்பது வெளிப்படையானதாகும்). ஆகையால் அவர்களுக்கு எதிராக அல்லாஹ் உமக்கு(த் துணை செய்ய)ப் போதுமானவன் (என்று உறுதி கொண்டு நிம்மதியாய் இருங்கள்). அவன் யாவற்றையும் செவியுறுபவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>2:138 கூறுவீராக: “அல்லாஹ்வின் வர்ணத்தை மேற்கொள்வீர்களாக! அல்லாஹ்வின் வர்ணத்தைக் காட்டிலும், யாருடைய வர்ணம் சிறந்தது? மேலும் நாங்கள் அவனுக்கே பணிந்து வாழ்பவராய் இருக்கின்றோம்.”</span>
<span>2:139 (நபியே! அவர்களிடம்) கேட்பீராக: “அல்லாஹ்வின் விஷயத்தில் எங்களுடன் நீங்கள் தர்க்கம் புரிகின்றீர்களா? அவனோ எங்களின் அதிபதியும் உங்களின் அதிபதியும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கே; உங்கள் செயல்கள் உங்களுக்கே! மேலும் நாங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே எங்கள் அடிபணிதலை முற்றிலும் உரித்தானதாக்கி விட்டோம். </span>
<span>2:140 அல்லது இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூபு ஆகியோரும் மற்றும் யஃகூபின் வழித்தோன்றல்கள் அனைவரும் யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ இருந்தார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்களா?” அவர்களிடம் கேளுங்கள்: “நீங்கள் நன்கறிந்தவர்களா? அல்லாஹ் நன்கறிந்தவனா?” அல்லாஹ்விடமிருந்து வந்த ஒரு சான்றைத் தன்னிடம் வைத்துக் கொண்டு அதனை மறைப்பவனை விடப் பெரிய அக்கிரமக்காரன் யார்? மேலும் நீங்கள் செய்து கொண்டிருப்பவை பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை </span>
<span>2:141 அந்தச் சமூகத்தினர் சென்றுவிட்டனர். அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே; நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! மேலும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள். </span>
<span>2:142 மக்களில் அறிவீனர்கள், “(இவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது?) இவர்கள் எந்தக் கிப்லாவை* முன்னோக்கிக் கொண்டிருந்தார்களோ அதிலிருந்து (திடீரென) இவர்களைத் திருப்பியது எது?” என நிச்சயம் கேட்பார்கள். (நபியே! அவர்களிடம்) சொல்வீராக: “கிழக்கு, மேற்கு அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். தான் நாடுகின்றவர்களை அவன் நேரான வழியில் செலுத்துகின்றான்.” </span>
<span>2:143 மேலும் இவ்வாறே (முஸ்லிம்களான) உங்களை நாம் ‘உம்மத்தன் வஸத்தன்’ சமநிலையுடைய சமுதாயமாக ஆக்கினோம் நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாயும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராயும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக! (இதற்கு முன்பு) எந்தத் திசையை நோக்கி நீர் தொழுது வந்தீரோ, அதனை கிப்லாவாக நாம் ஆக்கி வைத்திருந்ததெல்லாம் யார் இறைத்தூதரைப் பின்பற்றுகிறார்கள்; யார் மாறிச் சென்று விடுகிறார்கள் என்பதை நாம் அறிவதற்காகத்தான்! இது (கிப்லா மாற்றம்) மிகக் கடினமாகவே இருந்தது. ஆனால் அல்லாஹ் காட்டிய நேர்வழியைப் பெற்றிருந்தவர்களுக்கு அது சிறிதும் கடினமாக இருக்கவில்லை. அல்லாஹ் உங்களுடைய ஈமானை நம்பிக்கையை ஒருபோதும் வீணாக்கி விடமாட்டான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களிடத்தில் அளப்பரிய கருணையும், மிகுந்த பரிவும் உடையவன் (என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்). </span> 
<span>2:144 (நபியே!) உம்முடைய முகம் (அடிக்கடி) வானத்தை நோக்குவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதோ நீர் எந்தக் கிப்லாவை விரும்புகின்றீரோ அதன் பக்கமே நாம் உம்மைத் திருப்பிவிடுகின்றோம். மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா ஆலயம்) பக்கமாக உம்முடைய முகத்தைத் திருப்புவீராக! இனி நீங்கள் எங்கிருப்பினும் (தொழுகைக்காக) அதன் பக்கமாகவே உங்கள் முகங்களைத் திருப்புவீர்களாக! வேதம் அருளப்பட்டவர்கள் (கிப்லா மாற்றம் பற்றிய) இக்கட்டளை உண்மையானதுதான்; தம் இறைவனிடமிருந்து வந்ததுதான் என்பதைத் திண்ணமாக அறிவார்கள். ஆனால், (இவ்வாறு உண்மையை அறிந்திருந்தும்) இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பது பற்றி அல்லாஹ் கவனமற்றவனாய் இல்லை!</span>
<span>2:145 வேதம் அருளப்பட்டவர்களிடம் நீர் எந்த ஒரு சான்றினைக் கொண்டு வந்தாலும் உமது கிப்லாவை அவர்கள் பின்பற்றப் போவதில்லை. நீரும் அவர்களின் கிப்லாவைப் பின்பற்றப் போவதில்லை. மேலும் (தமக்கிடையேயும்) அவர்களில் சிலர் மற்றவரின் கிப்லாவைப் பின்பற்றுவோராய் இல்லை. எனவே, உமக்கு மெய்யறிவு வந்த பின்னர் அவர்களின் விருப்பங்களை நீர் பின்பற்றுவீராயின், திண்ணமாக நீர் அக்கிரமக்காரர்களுள் ஒருவரா(ய்க் கருதப்படு)வீர். </span>
<span>2:146 எவர்களுக்கு நாம் வேதம் அருளியிருக்கின்றோமோ அவர்கள், தங்களுடைய மைந்தர்களை (இனம் கண்டு) அறிந்து கொள்வதைப் போல் (கிப்லாவாக்கப்பட்ட) இந்த இடத்தையும் நன்கு அறிவார்கள். எனினும் அவர்களில் ஒரு பிரிவினர் நன்கு அறிந்திருந்தும் உண்மையை மறைக்கிறார்கள். </span>
<span>2:147 (உறுதியாக) இது உம் அதிபதியிடமிருந்து வந்த சத்தியமா(ன கட்டளையா)கும். எனவே, (இது பற்றி) ஐயம் கொள்வோரில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம்!</span>
<span>2:148 மேலும் ஒவ்வொருவருக்கும் அவரவர் திரும்பக்கூடிய ஒரு திசையிருக்கிறது. எனவே, நீங்கள் நன்மைகள் புரிவதில் முந்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும், உங்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று திரட்டிக்கொண்டு வருவான். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் கொண்டவனாய் இருக்கின்றான். </span>
<span>2:149 மேலும் நீர் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் (தொழும் வேளையில்) உம்முடைய முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் நோக்கித் திருப்புவீராக. ஏனென்றால், இது உம்முடைய இறைவனிடமிருந்து வந்த (முற்றிலும்) உண்மை(யான கட்டளை)யாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றைப் பற்றிக் கவனமற்றவனாக இல்லை. </span>
<span>2:150 மேலும் நீர் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் பக்கமாகத் திருப்புவீராக. உங்களுக்கு எதிராக மக்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கக்கூடாது என்பதற்காக நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் முகங்களை (தொழுகையின் போது) அதன் பக்கமாகத் திருப்புங்கள். ஆனால் அவர்களைச் சேர்ந்த அக்கிரமக்காரர்கள் தர்க்கித்துக் கொண்டுதான் இருப்பார்கள். எனவே, அவர்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம். எனக்கே அஞ்சுவீர்களாக! (இன்னும் இந்தக் கட்டளையைப் பேணி வாழ்வீர்களாக!) எதற்காகவெனில், நான் என் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்க வேண்டும் என்பதற்காகவும், மேலும் நீங்கள் நேரிய பாதையை அடையக்கூடும் என்பதற்காகவும்தான்! </span>
<span>2:151 (அது எத்தகைய அருட்கொடை என்றால்) நம் வேத வசனங்களை உங்களுக்கு ஓதி உணர்த்துபவரும் உங்க(ள் வாழ்க்கை நடைமுறைக)ளைத் தூய்மைப்படுத்துபவரும், உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிப்பவரும், நீங்கள் அறியாதிருந்தவற்றை உங்களுக்குக் கற்றுக் கொடுப்பவருமான ஒரு தூதரை உங்களிலிருந்தே உங்களிடம் அனுப்பி வைத்தபோது நீங்கள் பெற்ற அருட்கொடையைப் போன்றதாகும் இந்தக் கொடை </span>
<span>2:152 எனவே என்னை நீங்கள் நினைவுகூருங்கள்; நானும் உங்களை நினைவுகூருகின்றேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்; (என்னுடைய அருட்கொடைகளை மறுத்து) நன்றி கொல்லாதீர்கள்!</span>
<span>2:153 இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுள்ளவர்களுடன் இருக்கின்றான். </span>
<span>2:154 மேலும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுகிறவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள். மாறாக, அவர்கள் (உண்மையில்) உயிருடன் இருக்கின்றார்கள். ஆனால், அவர்களின் நிலையை நீங்கள் அறியமாட்டீர்கள். </span>
<span>2:155 மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள் மற்றும் விளைபொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்த நிலைகளில்) பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக! </span>
<span>2:156 அவர்கள், (எத்தகையோர் எனில்) தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும்பொழுது “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நிச்சயமாக அவனிடமே நாம் திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்” என்று சொல்வார்கள். </span>
<span>2:157 அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடமிருந்து நல்வாழ்த்துக்களும், நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்தகையோர்தாம் நேர்வழி பெற்றவர்கள்!</span>
<span>2:158 நிச்சயமாக ‘ஸஃபா’ ‘மர்வா’(எனும் இரு குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். ஆகையால், யார் இறையில்லத்தை ஹஜ் அல்லது உம்ரா* செய்கிறாரோ அவர் மீது அந்த இரண்டுக்குமிடையே ‘ஸயீ’• செய்வதில் குற்றமில்லை. மேலும் எவரேனும் தாமாக விரும்பி ஏதேனும் நன்மையைச் செய்தால், அல்லாஹ் அதை மதிப்பவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>2:159 நாம் இறக்கியருளிய தெளிவான அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் அவற்றை மக்கள் அனைவர்க்காகவும் நம் வேதத்தில் எடுத்துரைத்த பின்னரும் எவர்கள் அவற்றை மறைக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சபிக்கின்றான். மேலும் சபிப்போர் அனைவரும் அவர்களைச் சபிக்கின்றார்கள். </span>
<span>2:160 ஆனால் யார் (இத்தவறிலிருந்து) திருந்தி தம் செயல்முறையை ஒழுங்குபடுத்திக் கொண்டு, (தாம் மறைத்திருந்தவற்றை) எடுத்துரைக்கிறார்களோ அவர்களை நான் மன்னிப்பேன். நான் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றேன். </span>
<span>2:161 எவர்கள் இறைநிராகரிப்புப் போக்கை மேற்கொண்டு, அதே நிலையில் இறந்து விடுகின்றார்களோ அத்தகையோர் மீது அல்லாஹ் மற்றும் வானவர்கள், மனிதர்கள் ஆகிய அனைவரின் சாபம் நிச்சயமாக உண்டாகும். </span>
<span>2:162 அவர்கள் அந்தச் சாபத்திலேயே என்றென்றும் மூழ்கிக் கிடப்பார்கள். தண்டனை அவர்களுக்கு இலகுவாக்கப்பட மாட்டாது; அவகாசமும் அவர்களுக்கு அளிக்கப்படமாட்டாது!</span>
<span>2:163 உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்; அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடையோனாகிய அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; </span>
<span>2:164 (இந்த உண்மையை அறிந்துகொள்ள சான்று வேண்டுமாயின்) வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒழுங்கமைப்பிலும், இரவும் பகலும் ஒன்றன்பின் ஒன்றாக மாறி வருவதிலும், மக்களுக்குப் பயன் தருபவற்றைச் சுமந்து கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், மேலிருந்து அல்லாஹ் இறக்கி வைக்கும் மழை நீரிலும், பின்னர் அதைக்கொண்டு பூமியை அது இறந்து போன பின்னர்கூட உயிர்ப்பித்து மேலும் (தனது இந்த ஏற்பாட்டின் மூலம்) அதில் எல்லாவிதமான உயிரினங்களையும் பரவச் செய்திருப்பதிலும், காற்றுகளைச் சுழலச் செய்வதிலும், வானங்களுக்கும் பூமிக்கும் இடையே கட்டுப்படுத்தப்பட்ட மேகங்களிலும், சிந்திக்கும் மக்களுக்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. </span>
<span>2:165 (ஆனால் இறைவன் ஒருவனே என்பதைத் தெளிவுபடுத்தும் இத்தகைய தெளிவான சான்றுகள் இருந்தும்) மனிதர்களில் சிலர், அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களையும் (அவனுக்கு) நிகரானவர்களாய் ஆக்கிக் கொள்கிறார்கள். மேலும், அல்லாஹ்வை எவ்வாறு நேசிக்க வேண்டுமோ அது போல அவர்களை நேசிக்கின்றார்கள். ஆனால் இறைநம்பிக்கை கொண்டவர்களோ அல்லாஹ்வை அனைவரையும்விட அதிகமாக நேசிக்கிறார்கள். ஆற்றல் முழுவதும் அல்லாஹ்வின் பிடியிலேதான் இருக்கிறது; மேலும், அல்லாஹ் கடுமையாக தண்டனை கொடுப்பவன் என்பதை இந்த அக்கிரமக்காரர்கள் வேதனையை (நேரில்) காணும்போது அறியத்தான் போகின்றார்கள்! அந்தோ! அதனை (இன்றே) அவர்கள் உணர்ந்து கொண்டால் எத்துணை நன்றாயிருக்கும்! </span>
<span>2:166 (தண்டனை வழங்கப்படும்) அந்த நேரத்தில், (இவ்வுலகில்) பின்பற்றப்பட்டு வந்த (வழிகாட்டிகள் மற்றும் தலை)வர்கள் தம்மைப் பின்பற்றி வந்தோரை விட்டு (அவர்களுக்கும் தமக்குமிடையில் எந்தத் தொடர்புமில்லை என்று கூறி) விலகி விடுவார்கள். ஆயினும் அவர்கள் தண்டனை பெற்றே தீருவார்கள்! மேலும் அவர்களுக்கிடையே இருந்த எல்லா உறவுகளும் முற்றிலும் அறுந்துவிடும்! </span>
<span>2:167 அப்பொழுது அத்தலைவர்களைப் பின்பற்றியவர்கள் கூறுவார்கள்: “நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமானால், இன்று நம்மைவிட்டு அவர்கள் விலகிக் கொண்டது போல நாமும் அவர்களை விட்டு விலகிக் கொள்வோமே!” இவ்வாறு வேதனையாலும், துக்கத்தாலும் கைகளைப் பிசைந்துகொண்டு நிற்கும் வகையில் அவர்கள் (இவ்வுலகில்) செய்த தீய செயல்களை அல்லாஹ் அவர்களுக்குக் காண்பித்துக் கொடுப்பான். மேலும், நெருப்பிலிருந்து (எவ்வகையிலும்) அவர்கள் வெளியேறிவிட முடியாது. </span>
<span>2:168 மனிதர்களே! பூமியிலுள்ளவற்றில் தூய்மையான அனுமதிக்கப்பட்ட பொருள்களைப் புசியுங்கள். மேலும், ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு வெளிப்படையான பகைவன் ஆவான்! </span>
<span>2:169 அவன் பாவத்தையும், மானக்கேடான செயல்களையும் செய்யுமாறுதான் உங்களை ஏவுகிறான்; இன்னும் நீங்கள் அறியாத விஷயங்களையெல்லாம் அல்லாஹ்வின் மீது ஏற்றிச் சொல்லுமாறு உங்களை அவன் ஏவுகின்றான். </span>
<span>2:170 “அல்லாஹ் இறக்கியருளிய (வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால் “இல்லை! எங்கள் தந்தையார், பாட்டனார் எந்த வழியைப் பின்பற்றியதாகக் கண்டோமோ அதனையே நாங்கள் பின்பற்றுவோம்” என்று மறுமொழி கூறுகின்றார்கள். அப்படியானால் அவர்களின் தந்தையார், பாட்டனார் எதையும் சிந்தித்து உணராதவர்களாயும் நேர்வழி பெறாதவர்களாயும் இருந்தாலுமா இவர்கள் அவர்களைப் பின்பற்றுவார்கள்? </span>
<span>2:171 இறைநெறியைப் பின்பற்ற மறுப்பவர்களின் உவமையானது கால்நடைகளைப் போன்றதாகும். சப்தமிடும் இடையனின் கூப்பாட்டையும், அழைப்பொலியையும் தவிர அவை வேறு எதையும் கேட்பதில்லை. அவர்கள் செவிடர்களாய், ஊமையராய், குருடர்களாய் இருக்கின்றனர்; எனவே எதனையும் அவர்கள் அறியமாட்டார்கள். </span>
<span>2:172 இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வுக்கு மட்டுமே பணிந்து வாழ்பவர்களாய் இருப்பின் நாம் உங்களுக்கு அளித்திருக்கும் தூய்மையானவற்றைத் தாராளமாகப் புசியுங்கள்; மேலும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள். </span>
<span>2:173 செத்த பிராணியும், இரத்தமும், பன்றி இறைச்சியும், அல்லாஹ்வைத் தவிர மற்றவரின் பெயர் கூறி அறுக்கப்பட்டவையுமே உங்களுக்குத் தடுக்கப்பட்டவையாகும். எனினும், எவரேனும் ஒருவர் (இப்பொருள்களில் ஏதாவதொன்றைப் புசிக்க வேண்டிய) கட்டாயத்திற்குள்ளானால், இறைச்சட்டத்தைத் தகர்க்கும் நோக்கமில்லாமலும், வரம்பு மீறாமலும் (தேவைக்கு மிகாமலும்) அதனைப் புசிப்பதில் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும், கருணை புரிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>2:174 அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் இறக்கியருளிய சட்டங்களை எவர்கள் மறைக்கின்றார்களோ மேலும் (இம்மையின்) அற்ப இலாபத்திற்காக அவற்றை விற்கின்றார்களோ அவர்கள், உண்மையில் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் நிரப்பிக் கொள்வதில்லை. இன்னும் இறுதித் தீர்ப்புநாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான்! மேலும் அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனையும் உண்டு. </span>
<span>2:175 இவர்கள்தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்புக்குப் பதிலாக தண்டனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள்! நரக வேதனையைச் சகித்துக் கொள்வதற்கு(த் தயாராய் உள்ள) இவர்களின் துணிவு எத்துணை வியப்புக்குரியது! </span>
<span>2:176 இதற்குக் காரணம், நிச்சயமாக அல்லாஹ் முழுக்க முழுக்க சத்தியத்துடனேயே வேதத்தை இறக்கியிருந்தும், வேதத்தில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் தம் பிணக்குகளில் மூழ்கி (சத்தியத்தை விட்டு) வெகு தூரம் சென்று விட்டதுதான்! </span>
<span>2:177 நற்செயல் என்பது உங்களுடைய முகங்களைக் கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல! மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் ஒருவன் முழுமையாக நம்புவதும் மேலும் (அல்லாஹ்வின் மீதுள்ள நேசத்தின் காரணமாகத்) தமக்கு விருப்பமான பொருளை உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை மீட்பதற்கும் வழங்குவதும், மேலும் தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தைக் கொடுத்து வருவதுமே நற்செயல்களாகும். மேலும், வாக்குறுதி அளித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களும், வறுமை மற்றும் துன்பங்களின் போதும் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும் பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்களுமே புண்ணியவான்கள் ஆவர்! இவர்களே உண்மையாளர்கள்; மேலும் இவர்களே இறையச்ச முடையவர்கள். </span>
<span>2:178 இறைநம்பிக்கை கொண்டவர்களே! கொலை வழக்குகளில் பழிவாங்கல் உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. கொலை செய்தவன் சுதந்திர மனிதன் என்றால் அந்தச் சுதந்திரமான மனிதனிடமும், கொலை செய்தவன் அடிமை என்றால் அந்த அடிமையிடமும், கொலை செய்தவள் ஒரு பெண் என்றால் அந்தப் பெண்ணிடமுமே பழிவாங்கப்பட வேண்டும். கொலை செய்தவனுக்கு அவனுடைய சகோதரனால் (அதாவது கொல்லப்பட்டவரின் உறவினரால்) சலுகை அளிக்கப்பட்டால், பிறகு நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும் உயிரீட்டுத் தொகையை நேர்மையான முறையில் அவன் வழங்கிட வேண்டும். இது, உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையுமாகும். இதன் பின்னரும் எவராவது வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் தண்டனை உண்டு. </span>
<span>2:179 நல்லறிவுடையோரே! (கொலைக்குப்) பழிவாங்குதல் எனும் இவ்விதிமுறையில் உங்களுக்கு வாழ்வு இருக்கிறது. (இதனை உணர்ந்தால்) இறைச்சட்டங்களை மீறுவதிலிருந்து நீங்கள் விலகியிருக்கக் கூடும். </span>
<span>2:180 உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது: உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கும்போது, அவர் ஏதேனும் செல்வத்தை விட்டுச் செல்வாரானால் தம் பெற்றோருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் முறைப்படி அவர் வஸிய்யத் (மரண சாஸனம்) செய்தல் வேண்டும். இறையச்சமுடையோர் மீது இது கடமையாகும். யாரேனும் அ(ந்த வஸிய்யத்)தைக் கேட்டு, </span>
<span>2:181 பின்னர் அதனை மாற்றிவிட்டால் அதன் பாவம் அவ்வாறு மாற்றியவர்களைத்தான் சாரும். திண்ணமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், அறிவோனாகவும் இருக்கின்றான். </span>
<span>2:182 ஆயினும், வஸிய்யத் செய்தவர் தெரிந்தோ தெரியாமலோ அநீதி இழைத்துவிட்டார் என்று எவரேனும் அஞ்சி, சம்பந்தப்பட்டவர் மத்தியில் இந்த விவகாரத்தை ஒழுங்குபடுத்திவிட்டால் அது அவர் மீது குற்ற மாகாது. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் கருணைபுரிபவனுமாக இருக்கின்றான். </span>
<span>2:183 இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும். </span>
<span>2:184 (நோன்பு நோற்பது) குறிப்பிட்ட சில நாட்களிலேயாகும். ஆனால் (அந்நாட்களில்) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால், அவர் (அந்நாட்களில் நோன்பு நோற்காமல்) மற்ற நாட்களில் கணக்கிட்டு நோற்றுக் கொள்ள வேண்டும். நோன்பு நோற்க சக்தி பெற்றிருப்பவர்கள் (நோற்காமல் விட்டுவிட்டால் அவர்கள்) மீது ஃபித்யா (பரிகாரம்) கடமையாகின்றது. அது (ஒரு நோன்புக்குரிய பரிகாரம்) ஓர் ஏழைக்கு உணவளிப்பதாகும். ஆனால் எவரேனும் விரும்பி அதிக நன்மை செய்தால், அது அவருக்கே சிறந்ததாகும். ஆனால் நீங்கள் அறிவுடையோராயிருப்பின் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மை ஈட்டித் தரும். </span>
<span>2:185 ரமளான் மாதம் எத்தகையதென்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது. எனவே இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். ஆனால் எவரேனும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால், அவர் மற்ற நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்றிட வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை விரும்புகின்றான். அவன் உங்களுக்குக் கஷ்டத்தைத் தர விரும்பவில்லை. (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் நிறைவு செய்வதற்காகவும், அல்லாஹ் உங்களை நேரிய வழியில் செலுத்தியதற்காக நீங்கள் அவனுடைய மேன்மையைப் போற்றி அவனுக்கு நன்றி பாராட்டுவதற்காகவுமே (இவ்வழி உங்களுக்குக் காண்பிக்கப்படுகிறது!)</span>
<span>2:186 மேலும் (நபியே!) என்னுடைய அடிமைகள் என்னைக் குறித்து உம்மிடம் கேட்பார்களானால், “நிச்சயமாக நான் (அவர்களுக்கு) அருகிலேயே இருக்கின்றேன்; என்னை எவரேனும் அழைத்தால் அவ்வாறு அழைப்பவனுடைய அழைப்புக்கு மறுமொழி சொல்கின்றேன் (என்பதைத் தெரிவித்து விடுங்கள்). எனவே அவர்கள் என்னுடைய அழைப்பை விரைந்து ஏற்றுக் கொள்ளட்டும். என்மீது நம்பிக்கை கொள்ளட்டும். அதனால் அவர்கள் நேர்வழி அடைந்திட முடியும்.”</span>
<span>2:187 நோன்புக்கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டு விட்டது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். நீங்கள் உங்களுக்கே வஞ்சனை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்து கொண்டான். எனினும், உங்கள் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றான்; மேலும் உங்கள் குற்றங்களைப் பொறுத்தருளினான். இனி (இரவில்) அவர்களுடன் நீங்கள் கூடுங்கள். அல்லாஹ் அனுமதித்துள்ள இன்பங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். இன்னும் விடியற்காலையில் வெள்ளை நூலையும், கறுப்பு நூலையும் பிரித்தறிய முடியும் வரை, நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள். பின்னர் (இவற்றையெல்லாம் தவிர்த்து) இரவு (தொடங்கும்) வரை நோன்பை நிறைவு செய்யுங்கள். ஆனால் மஸ்ஜித்களில் நீங்கள் இஃதிகாஃப்* இருக்கும் நிலையில் மனைவியரோடு கூடாதீர்கள். இவை அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட வரம்புகளாகும். எனவே அவற்றை நீங்கள் மீறாதீர்கள். மக்கள் (தவறான வழிகளிலிருந்து) தங்களைக் காத்துக் கொள்ளும் பொருட்டு, தன்னுடைய கட்டளைகளை(யும் விதிகளையும்) அல்லாஹ் இவ்வாறு தெளிவாக்குகின்றான். </span>
<span>2:188 மேலும் நீங்கள் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்; மேலும் பிற மனிதர்களுடைய பொருள்களில் ஏதேனும் ஒரு பகுதியை அநீதியான முறையில் தின்பதற்காக அது தவறு என நீங்கள் அறிந்திருந்தும் அதற்குரிய வாய்ப்பைப் பெற அதிகாரிகளை அணுகாதீர்கள். </span>
<span>2:189 (நபியே! தேய்ந்து வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; கூறுவீராக: “அவை மக்களுக்குக் காலங்காட்டியாகவும், ஹஜ்ஜுடைய நாட்களை அறிவிப்பவையாகவும் இருக்கின்றன.” மேலும், (அவர்களிடம் கூறும்:) “நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்குள் அவற்றின் பின்புறமாக வருவது புண்ணியமானதல்ல. மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவனே (உண்மையில்) புண்ணியவான் ஆவான். எனவே வீடுகளுக்குள் அவற்றின் வாயில்கள் வழியாகவே வாருங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் வெற்றி பெறக்கூடும்.”</span>
<span>2:190 மேலும், உங்களோடு போர்புரிபவர்களுடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போர்புரியுங்கள். ஆனால், நீங்கள் வரம்பு மீறாதீர்கள். ஏனெனில், வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. </span>
<span>2:191 (போரின் போது) அவர்களை நீங்கள் எங்கு கண்டாலும் வெட்டி வீழ்த்துங்கள்! மேலும் எங்கிருந்து உங்களை அவர்கள் வெளியேற்றினார்களோ அங்கிருந்து அவர்களை நீங்களும் வெளியேற்றுங்கள். (கொலை கொடியதுதான் என்றாலும்) ‘ஃபித்னா’(அராஜகத்தைத்) தோற்றுவிப்பது கொலையைக் காட்டிலும் மிகக் கொடியதாகும். மஸ்ஜிதுல் ஹராமுக்கு அருகே அவர்கள் உங்களுடன் போர் தொடுக்காதவரை நீங்களும் அதன் அருகே அவர்களுடன் போர் புரிய வேண்டாம். ஆயினும் (அங்கே) அவர்கள் உங்களோடு போர் செய்தால் நீங்களும் (தயக்கமின்றி) அவர்களோடு போர் புரியுங்கள். இத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு இதுவே தண்டனையாகும். </span>
<span>2:192 ஆயினும் அவர்கள் (போரிலிருந்து) விலகிக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ், மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான் (என்பதை அறிந்து கொள்ளுங்கள்). </span>
<span>2:193 ‘ஃபித்னா’ இல்லாதொழிந்து, தீன் (வாழ்க்கை நெறி) அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும் வரை நீங்கள் அவர்களோடு தொடர்ந்து போர்புரியுங்கள். ஆனால், அவர்கள் (இத்தகைய ஃபித்னாவிலிருந்து) விலகிக் கொண்டால் அக்கிரமக்காரர்களைத் தவிர வேறு எவரையும் துன்புறுத்துவது அனுமதிக்கப்பட்டதல்ல. </span>
<span>2:194 போர் தடை செய்யப்பட்ட சங்கைக்குரிய மாதத்திற்கு சங்கைக்குரிய மாதமே ஈடாகும். மேலும் சங்கைக்குரிய அனைத்திற்கும் (அவற்றின் கண்ணியம் மீறப்பட்டால்) சமமான அளவில் ஈடு செய்யப்படும். எனவே உங்களிடம் எவரேனும் வரம்பு மீறினால், அவர் எந்த அளவிற்கு உங்களிடம் வரம்பு மீறினாரோ அந்த அளவிற்கே நீங்களும் அவருக்குப் பதிலடி கொடுங்கள். ஆயினும் அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழுங்கள். வரம்புகளை முறிப்பதிலிருந்து விலகி இருப்பவர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். </span>
<span>2:195 அல்லாஹ்வுடைய வழியில் செலவு செய்யுங்கள். மேலும், உங்களுடைய கைகளால் உங்களுக்கு அழிவைத் தேடிக்கொள்ளாதீர்கள். ‘இஹ்ஸான்’ எனும் வழிமுறையைக் கடைப்பிடியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை* நேசிக்கின்றான். </span>
<span>2:196 அல்லாஹ்வின் உவப்பைப் பெற ஹஜ்ஜையும் உம்ராவையும் (நிறைவேற்றிட நீங்கள் நாடினால் அவற்றை) நிறைவேற்றுங்கள். ஆனால் (வழியில் எங்காவது) நீங்கள் முற்றுகையிடப்பட்டால், (அதற்குப் பரிகாரமாக) பலி (குர்பானி) பிராணிகளில் உங்களுக்குச் சாத்தியமானதை (அல்லாஹ்வின் திருமுன் சமர்ப்பியுங்கள்) பலிப் பிராணி தனக்குரிய இடத்தை அடையும் வரை உங்கள் தலைமுடியை மழிக்காதீர்கள்! ஆனால் உங்களில் யாரேனும் நோயாளியாக அல்லது தன் தலையில் ஏதேனும் பிணி உள்ளவராக இருந்தால், (அதன் காரணமாக தலைமுடியை மழிக்கும் கட்டாயம் ஏற்பட்டிருந்தால்) அதற்குப் பரிகாரமாக அவர் நோன்புகள் நோற்கவோ, தர்மம் செய்யவோ, குர்பானி கொடுக்கவோ வேண்டும். மேலும், உங்களுக்கு அமைதி கிட்டிவிட்டால், (இன்னும் ஹஜ் உடைய காலம் வருமுன், நீங்கள் மக்காவை அடைந்துவிட்டால், அவ்வாறு அடைந்தவர்களில்) எவரேனும் ஹஜ் காலம் வருமுன் உம்ரா செய்ய நாடினால் அவர், பலிப்பிராணிகளில் தனக்கு சாத்தியமானதை குர்பானி கொடுக்க வேண்டும். பலிப்பிராணி கிடைக்கப் பெறாதவர் ஹஜ் காலத்தில் மூன்று நாட்களும் (வீடு) திரும்பி விட்டபின் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும். இப்படி முழுமையாகப் பத்து நாட்கள் நோன்பிருத்தல் வேண்டும். இ(ந்தச் சலுகையான)து, எவர் மஸ்ஜிதுல் ஹராமுக்கு அருகில் குடியிருக்கவில்லையோ அவர்களுக்கேயாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சி அவனது கட்டளைகளுக்கு மாறு செய்யாமல் வாழுங்கள். திண்ணமாக, அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள். </span>
<span>2:197 ஹஜ்(ஜுடைய காலம் அனைவராலும்) அறியப்பட்ட சில மாதங்களாகும். எனவே இம்மாதங்களில் எவரேனும் ஹஜ் கடமையை நிறைவேற்ற நாடினால், ஹஜ்ஜின்போது இச்சைகளைத் தூண்டக் கூடிய சொல், செயல் மற்றும் தீவினை, சண்டை சச்சரவு ஆகியவற்றில் ஈடுபடக் கூடாது. மேலும், நீங்கள் ஏதேனும் நன்மை செய்தால் அதனை அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கின்றான். மேலும், நீங்கள் (ஹஜ்ஜுக்காக) வழித் துணைச் சாதனங்களைக் கொண்டு செல்லுங்கள். உண்மை யாதெனில், வழித்துணைச் சாதனங்களில் எல்லாம் மிக மேலானது இறையச்சம்தான். எனவே நல்லறிவுடையோரே! எனக்கு மாறு செய்யும் போக்கிலிருந்து விலகி வாழுங்கள்! </span>
<span>2:198 (ஹஜ் பயணத்தில்) உங்கள் இறைவனின் அருளைத் தேடிக் கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. இன்னும் அரஃபாத்திலிருந்து நீங்கள் திரும்பி வரும்போது, மஷ்அருல் ஹராமில் (முஸ்தலிஃபாவில்) தங்கி அல்லாஹ்வை நினைவுகூருங்கள். மேலும் அவன் எவ்வாறு (தன்னை நினைவுகூர வேண்டுமென்று) உங்களுக்கு அறிவுறுத்தியிருக்கின்றானோ அவ்வாறு அவனை நினைவுகூருங்கள். இதற்கு முன்னரோ நீங்கள் வழிதவறியவர்களாய் இருந்தீர்கள். </span>
<span>2:199 பின்னர் மற்ற மனிதர்கள் எல்லாரும் திரும்புகின்ற இடத்திலிருந்து நீங்களும் திரும்பி வந்து அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>2:200 பின்னர் நீங்கள் உங்களுடைய ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றி விட்டீர்களானால், நீங்கள் (முன்னர்) உங்கள் மூதாதையரை நினைவுகூர்ந்தது போல ஏன், அதனைவிட அதிகமாக அல்லாஹ்வை நினைவுகூருங்கள். மக்களில் (அல்லாஹ்வைப் பல வழிகளில் நினைவுகூருவோர் உளர்) சிலர் “எங்கள் இறைவனே! உலகத்திலேயே எங்களுக்கு எல்லாவற்றையும் தந்து விடு!” என்று பிரார்த்திக்கின்றனர். அத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பேறும் இல்லை. </span>
<span>2:201 இன்னும் சிலர் “எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக; மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும் நரக வேதனை யிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக!” எனப் பிரார்த்திக்கின்றனர். </span>
<span>2:202 இத்தகையவர்களுக்கு அவர்கள் எதனைச் சம்பாதித்தார்களோ அதற்கேற்ப (ஈருலகிலும்) நற்பேறு உண்டு. மேலும் கணக்கு வாங்குவதில் அல்லாஹ் மிக விரைவானவன். </span>
<span>2:203 இன்னும், குறிப்பிடப்பட்ட சில நாட்களில் நீங்கள் அல்லாஹ்வை நினைவுகூரல் வேண்டும். பின்னர் எவரேனும் இரண்டே நாட்களில் அவசரமாகத் திரும்பி விட்டால் அவர் மீது குற்றமேதுமில்லை. எவரேனும் சிறிது தாமதித்துப் புறப்பட்டால் அவர் மீதும் குற்றமில்லை. ஆனால் (ஒரு நிபந்தனை:) அவர் இந்த நாளை இறையச்சத்துடன் கழித்திருக்க வேண்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் போக்கிலிருந்து விலகி வாழுங்கள்! மேலும் (ஒரு நாள்) நீங்கள் அவனுடைய திருமுன்னர்தான் ஒன்று திரட்டப்பட விருக்கின்றீர்கள் என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள்!</span>
<span>2:204 மனிதர்களில் இப்படி ஒருவன் இருக்கின்றான்: அவனுடைய பேச்சு இவ்வுலக வாழ்க்கையில் உமக்கு கவர்ச்சியாகத் தென்படுகிறது. மேலும், அவன் தன் மனத்தில் உள்ளவை தூய்மையானவை என (நிரூபிக்க அடிக்கடி) அல்லாஹ்வைச் சாட்சியாக்குகின்றான். ஆனால் உண்மையில் அவனே (சத்தியத்தின்) கொடிய பகைவன் ஆவான். </span>
<span>2:205 அவனுக்கு அதிகாரம் கிடைத்து விட்டால், அவனுடைய முயற்சிகள் எல்லாம் பூமியில் குழப்பத்தைப் பரப்புவதற்காகவும் வேளாண்மையையும், மனித இனத்தையும் அழிப்பதற்காகவுமே இருக்கும்! ஆனால் (அவன் சாட்சியாக்குகின்ற) அல்லாஹ் குழப்பத்தை விரும்புவதில்லை. </span>
<span>2: 206 மேலும் “நீ அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்திடு!” என்று அவனிடம் கூறப்பட்டால், அவனது வறட்டு கௌரவம் அவனைப் பாவத்திலாழ்த்தி விடுகின்றது. இத்தகைய மனிதனுக்கு நரகமே போதுமானதாகும். மேலும் அது மிக மோசமான தங்குமிடமாகும். </span>
<span>2:207 மனிதர்களில் இப்படியும் ஒருவர் இருக்கின்றார்: அவர் அல்லாஹ்வின் உவப்பைத் தேடி தன் வாழ்வையே அர்ப்பணித்துவிடுகின்றார். இத்தகைய அடியார்களிடத்தில் அல்லாஹ் மிகுந்த பரிவுடையவனாய் இருக்கின்றான். </span>
<span>2:208 இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் முழுக்க முழுக்க இஸ்லாத்தில் நுழைந்து விடுங்கள்! மேலும் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! நிச்சயமாக அவன் உங்களுக்கு வெளிப்படையான பகைவனாவான்; </span>
<span>2:209 (முழுக்க முழுக்கத்) தெளிவான அறிவுரைகள் உங்களுக்கு வந்த பின்னரும் நீங்கள் வழி பிறழ்ந்து போவீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் வல்லமையுடையோன்; நுண்ணறிவுள்ளோன் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள். </span>
<span>2:210 (இவ்வளவு அறிவுரைகளும், ஏவுரைகளும் பெற்ற பின்னரும் கூட மக்கள் நேர்வழியில் செல்லவில்லையென்றால்) மேகக் குடைகளினூடே இறைவனும் வானவர்களும் தங்களிடம் வரவேண்டும்; மேலும் விவகாரம் தீர்க்கப்பட வேண்டும் என்பதைத்தான் இவர்கள் எதிர்பார்க்கின்றார்களா? இறுதியில் அனைத்து விஷயங்களும் அல்லாஹ்விடமே கொண்டுவரப்பட விருக்கின்றன. </span>
<span>2:211 இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு எத்துணைத் தெளிவான சான்றுகளை நாம் வழங்கியிருக்கின்றோம் என்பதை அவர்களிடமே கேளுங்கள். மேலும், அல்லாஹ்விடமிருந்து நற்பேறு வந்த பின்னர் யார் அதனை (துர்பாக்கியத்திற்கு) பரிமாற்றம் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் எத்துணைக் கடுமையாகத் தண்டிக்கின்றான் என்பதையும் அவர்களிடம் கேளுங்கள். </span>
<span>2:212 யார் இறைநிராகரிப்பை மேற்கொண்டார்களோ அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது. இவர்கள் நம்பிக்கை கொண்டவர்களை ஏளனம் செய்கின்றார்கள். ஆனால் இறையச்சத்துடன் வாழ்பவர்கள்தாம் மறுமைநாளில் இவர்களை விட உயர்ந்த நிலையில் இருப்பார்கள். இவ்வுலக வசதிகளையோ அல்லாஹ் தான் நாடுகின்றவர்களுக்குக் கணக்கின்றி வழங்குகின்றான். </span>
<span>2:213 (தொடக்கத்தில்) மக்கள் அனைவரும் ஒரே கொள்கைவழி நடக்கும் சமுதாயத்தவராகவே இருந்தனர். பின்னர் (இந்நிலை நீடிக்கவில்லை. அவர்களிடையே கருத்து வேறுபாடுகளும், பிணக்குகளும் தோன்றவே, நேர்வழியில் செல்வோருக்கு) நற்செய்தி அறிவிப்போராகவும், (தீய வழியில் செல்வோருக்கு) எச்சரிக்கை செய்வோராகவும் அல்லாஹ் நபிமார்களை அனுப்பி வைத்தான். மேலும் மக்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயங்களில் அவர்களிடையே தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, சத்திய வேதங்களையும் அந்நபிமார்களுடன் அல்லாஹ் அருளினான். ஆனால் (இவ்வேற்றுமைகள் தோன்றியது தொடக்கத்தில் மக்களுக்கு சத்தியம் இன்னதென்று தெளிவு படுத்தப்படாததினால் அல்ல; மாறாக) எவர்களுக்கு சத்தியத்தைப் பற்றிய அறிவு வழங்கப்பட்டதோ அவர்கள்தாம் வேற்றுமையைத் தோற்றுவித்தனர். தம்மிடம் தெளிவான வழிகாட்டுதல்கள் வந்துவிட்ட பின்னரும் ஒருவர் மீதொருவர் கொடுமை புரியும் பொருட்டு (சத்தியத்தைக் கைவிட்டு) வேற்றுமைகளைத் தோற்றுவித்தனர் எனவே சத்தியத்தைக் குறித்து அவர்கள் பிணங்கிக் கொண்டிருந்த விஷயங்களில், (நபிமார்களின் மீது) நம்பிக்கை கொண்டோருக்கு தன் உத்தரவினால் அல்லாஹ் நேர்வழியைக் காட்டினான். மேலும், தான் நாடியோரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான். </span>
<span>2:214 உங்களுக்கு முன் சென்றுவிட்ட (நம்பிக்கையுடைய)வர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற நிலை உங்களுக்கு வராமலேயே நீங்கள் சுவனத்தில் நுழைந்து விடலாமென்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? இன்னல்களும் இடுக்கண்களும் அவர்களை அலைக்கழித்தன. (அன்றைய) இறைத்தூதரும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் “அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது வரும்?” என்று (புலம்பிக்) கேட்கும் வரை அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். (அப்பொழுது அவர்களுக்கு இவ்வாறு ஆறுதல் கூறப்பட்டது:) “இதோ! அல்லாஹ்வுடைய உதவி அண்மையில் இருக்கிறது.”</span>
<span>2:215 தாம் என்ன செலவு செய்ய வேண்டும் என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். சொல்வீராக: “நீங்கள் எந்த ஒரு நல்ல பொருளையும் செலவு செய்யுங்கள்; (அதனை உங்கள்) பெற்றோருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் செலவழியுங்கள்! மேலும் நீங்கள் எந்த நன்மை செய்தாலும் அதனைத் திண்ணமாக அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான்.”</span>
<span>2:216 போர் செய்யுமாறு உங்களுக்குக் கட்டளையிடப்பட்டிருக்கிறது; ஆனால் அதுவோ உங்களுக்கு வெறுப்பாயிருக்கிறது. ஒரு பொருள் உங்களுக்கு நன்மையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் வெறுக்கக் கூடும். மேலும் ஒரு பொருள் உங்களுக்குத் தீமையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் விரும்பக் கூடும். (இவற்றை) அல்லாஹ் நன்கு அறிகின்றான். ஆனால் நீங்கள் அறிவதில்லை. </span>
<span>2:217 தடை செய்யப்பட்ட மாதத்தில் போர் செய்வது பற்றி உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறுவீராக: “அதில் போர் செய்வது மிகக் கொடியதுதான்! ஆனால் அல்லாஹ்வின் வழியில் செல்லவிடாமல் மக்களைத் தடுப்பது, இன்னும் அவனுக்கு மாறு செய்வது, மேலும் மஸ்ஜிதுல் ஹராமுக்கு வர விடாமல் (இறையடியாரைத்) தடுப்பது மற்றும் அங்கு வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது ஆகியவை அல்லாஹ்வினிடத்தில் அதைவிடக் கொடியனவாகும்.” மேலும், ஃபித்னா (குழப்பம்) செய்வது கொலையைவிடக் கொடியதாகும். அவர்களுக்குச் சாத்தியமானால் உங்கள் தீனை (நெறியை) விட்டு உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் அவர்கள் போர் செய்து கொண்டே இருப்பார்கள். (ஆனால் நீங்கள் நன்கு புரிந்து கொள்ளுங்கள்.) உங்களில் யாரேனும் தமது தீனை விட்டு மாறி, குஃப்ரின் இறைநிராகரிப்பின் நிலையிலேயே மரணித்துவிட்டால், இம்மையிலும் மறுமையிலும் அவனுடைய நற்செயல்கள் அனைத்தும் வீணாகிவிடும். மேலும் அத்தகையோர் அனைவரும் நரகவாசிகளேயாவர்! அதில் அவர்கள் என்றென்றும் விழுந்துகிடப்பார்கள். </span>
<span>2:218 மாறாக எவர்கள் இறைநம்பிக்கை (ஈமான்) கொண்டார்களோ மேலும் இறைவனுக்காக தம் வீடு வாசல்களைத் துறந்தார்களோ, மேலும் இறைவழியில் ஜிஹாத் செய்தார்களோ அவர்களே அல்லாஹ்வின் நல்லருளை (நியாயமாக) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அல்லாஹ், அவர்களின் பிழைகளைப் பெரிதும் மன்னிப்பவனா கவும், இன்னும் அவர்கள் மீது பேரருள் புரிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>2:219 மது மற்றும் சூதாட்டம் (இவற்றுக்குரிய கட்டளைகள்) பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: அவ்விரண்டிலும் பெருங்கேடு இருக்கிறது. அவற்றில் மக்களுக்கு சிறிது பயன்கள் இருப்பினும், அவற்றினால் ஏற்படும் பாவம் அவற்றின் பயனைவிட அதிகமாக இருக்கின்றது. (இறைவழியில்) என்ன செலவு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “உங்களுடைய தேவைக்குப் போக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள்” என அவர்களிடம் கூறுவீராக! இவ்வாறு அல்லாஹ் தன் கட்டளைகளை உங்களுக்குத் தெளிவாக விவரிக்கின்றான்; </span>
<span>2:220 நீங்கள் இம்மை மறுமை பற்றி கருத்தூன்றி சிந்திக்க வேண்டும் என்பதற்காக! அநாதைகளைப் பற்றியும் உம்மிடம் வினவுகின்றனர். நீர் கூறுவீராக: “அவர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய செயல் முறையை மேற்கொள்வதே உத்தமமாகும். நீங்களும், அவர்களும் சேர்ந்து வாழ்வதில் (உணவு, உறைவிடம் போன்றவைகளுக்குக் கூட்டாகச் செலவு செய்வதில்) குற்றமேதும் இல்லை. ஏனென்றால், அவர்கள் உங்கள் சகோதரர்களேயாவர். தீமை செய்பவர்களையும் நன்மை செய்பவர்களையும் அல்லாஹ் நன்கு அறிந்திருக்கின்றான். அல்லாஹ் நாடியிருந்தால் (இவ்விஷயத்தை) உங்களுக்குக் கடினமாக்கியிருப்பான். ஆனால் அல்லாஹ் பேராற்றலுள்ளவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.” </span>
<span>2:221 இறைவனுக்கு இணைவைக்கும் பெண்களை அவர்கள் ஈமான் கொள்ளும் வரை நீங்கள் ஒருபோதும் திருமணம் செய்யாதீர்கள். இணைவைக்கும் ஒரு பெண் உங்களுக்குப் பிடித்தமானவளாய் இருந்தபோதிலும், இறைநம்பிக்கையுள்ள பெண்ணே சிறந்தவள். அவள் அடிமையாக இருந்தாலும் சரியே! மேலும் (உங்கள் பெண்களை) இறைவனுக்கு இணைவைப்போருக்கு அவர்கள் ஈமான் கொள்ளும் வரை ஒருபோதும் மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணைவைக்கும் ஓர் ஆண் உங்களுக்குப் பிடித்தமானவராய் இருந்தபோதிலும் இறை நம்பிக்கையுள்ள ஓர் அடிமையே, அவரைவிடச் சிறந்தவராவார். இத்தகையோர் நரகத்தை நோக்கியே உங்களை அழைக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வோ, தன் உத்தரவின் மூலம் சுவனம் மற்றும் மன்னிப்பின் பக்கம் (உங்களை) அழைக்கின்றான். மேலும் தன் கட்டளைகளை மக்களுக்குத் தெளிவாக விளக்கிக் காண்பிக்கின்றான் அவர்கள் அறிவுரையை ஏற்று படிப்பினை பெறக்கூடும் என்பதற்காக!</span>
<span>2:222 இன்னும் மாதவிடாய் (குறித்த சட்டம்) பற்றியும் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும்: “அது ஒரு தூய்மையற்ற நிலை; ஆகவே மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விட்டு விலகி இருங்கள்; மேலும் அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்! பிறகு அவர்கள் தூய்மையடைந்துவிட்டால், அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள்! திண்ணமாக, அல்லாஹ் தீமையிலிருந்து விலகி இருப்பவர்களையும் தூய்மையை மேற்கொள்பவர்களையும் நேசிக்கின்றான். </span>
<span>2:223 உங்கள் மனைவியர் உங்களுக்குரிய விளை நிலங்களாவர். எனவே, நீங்கள் விரும்பும் முறையில் உங்களுக்குரிய விளைநிலங்களுக்குச் செல்லுங்கள்! மேலும் உங்களுடைய வருங்காலத்துக்காக முன்கூட்டியே ஏதாவது செய்துகொள்வதில் அக்கறை காட்டுங்கள்; அல்லாஹ்வின் சினத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்!” மேலும் நிச்சயமாக நீங்கள் (ஒரு நாள்) அவனைச் சந்திக்கவிருக்கிறீர்கள் என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள்! இன்னும் (நபியே!) உம்முடைய அறிவுரைகளை ஏற்றுக் கொண்டிருப்போருக்கு, (வெற்றியையும், பேறுகளையும் குறித்து) நற்செய்தி கூறுவீராக!</span>
<span>2:224 நன்மை செய்தல், இறையச்சத்துடன் வாழ்தல், மக்களிடையே இணக்கத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கு எதிராக நீங்கள் செய்யும் சத்தியங்களுக்கு அல்லாஹ்வின் பெயரைக் கருவியாக்காதீர்கள்! அல்லாஹ் உங்கள் பேச்சுகள் அனைத்தையும் கேட்பவனாகவும் (எல்லாவற்றையும்) அறிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>2:225 (உள்நோக்கம் எதுவுமின்றி) தற்செயலாக நீங்கள் செய்யும் அபத்தமான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான். ஆனால், நீங்கள் உளப்பூர்வமாகச் செய்த சத்தியங்களுக்காக நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிப்பான்! மேலும், அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், அதிகம் சகிப்புத்தன்மையுடையோனாகவும் இருக்கின்றான். </span>
<span>2:226 தங்கள் மனைவியரை நெருங்குவதில்லையென்று சபதம் செய்து விலகி இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுண்டு. எனவே அதற்குள் (தங்கள் மனைவியரிடம்) அவர்கள் திரும்பிவிட்டால், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாய் இருக்கின்றான். </span>
<span>2:227 ஆனால் அவர்கள் ‘தலாக்’ சொல்வதென்று தீர்மானித்துவிட்டால் அல்லாஹ் எல்லாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான் என்பதை அவர்கள் நினைவில் கொள்ளட்டும்!</span>
<span>2:228 தலாக் சொல்லப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை தாமாகவே பொறுத்திருக்க வேண்டும். தங்களுடைய கருவறைகளில் அல்லாஹ் எதையேனும் படைத்திருப்பானேயானால் அதை மறைப்பது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல! அல்லாஹ்வின் மீதும், இறுதித் தீர்ப்பு நாளின் மீதும் அவர்கள் நம்பிக்கை கொண்டவராக இருந்தால் ஒருபோதும் அவர்கள் இவ்வாறு செய்யக்கூடாது! அவர்களின் கணவர்கள் (முன்னிருந்த) உறவைச் சரிப்படுத்திக்கொள்ள விரும்பினால், இத்தவணைக்குள் அவர்களை மீண்டும் மனைவியாக்கிக் கொள்ள அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. பொதுவான நியதிப்படி ஆண்கள் மீது பெண்களுக்குச் சில உரிமைகள் உள்ளன; பெண்கள் மீது ஆண்களுக்கு உள்ள சில உரிமைகளைப் போல! ஆயினும் ஆண்களுக்குப் பெண்களைவிட ஒரு படி உயர்வு உண்டு. இன்னும் அல்லாஹ் (அனைவர்மீதும்) பேராற்றலுடையோனும், நுண்ணறிவுடையோனுமாய் இருக்கின்றான். </span>
<span>2:229 தலாக் இரு தடவைகள்தாம்! பின்னர் நேரிய விதத்தில் அவர்களை (மனைவியராகவே) வைத்துக் கொள்ள வேண்டும்; அல்லது அழகிய முறையில் அவர்களை விடுவித்துவிட வேண்டும். அவ்வாறு விடுவித்த பிறகு அவர்களுக்கு நீங்கள் கொடுத்திருந்த பொருள்களிலிருந்து எதனையும் நீங்கள் திருப்பி வாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. மேலும், அல்லாஹ்வின் வரம்புகளுக்குள் நிலைத்திருக்க முடியாது என (கணவன் மனைவியாகிய இருவரும்) அஞ்சினால், மேலும், அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளுக்குள் நிலைத்திருக்கமாட்டார்கள் என்று (நடுவர்களாகிய) நீங்களும் அஞ்சினால், மனைவி, கணவனுக்கு ஏதேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்துவிடுவதில் அவர்கள் மீது தவறில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரம்புகளாகும். எனவே, நீங்கள் அவற்றை மீறிச் செல்லாதீர்கள்; மேலும் யார் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறார்களோ அவர்களே அக்கிரமக்காரர்கள் ஆவர்! </span>
<span>2:230 (இரண்டு தடவை தலாக் சொன்ன) பின்னர் (மூன்றாம் தடவை மீண்டும்) அவளை அவன் ‘தலாக்’ சொல்லிவிட்டால், பிறகு அவள் அவனுக்கு அனுமதிக்கப்பட்டவள் (ஹலால்) அல்ல வேறு ஓர் ஆணை அவள் மணந்து, அவனும் தலாக் சொல்லும் வரை! ஆனால் அவன் (இரண்டாம் கணவன்) அவளைத் தலாக் சொல்லிவிட்டால் அப்போது முதற் கணவனும் அவளும் அல்லாஹ்வின் வரம்புகளுக்குள் நிலைத்திருப்போம் என்று எண்ணினால், அவ்விருவரும் (மீண்டும் மணவாழ்வுக்குத்) திரும்புவதில் அவர்கள் மீது குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளாகும். (இறை வரம்புகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகளை) அறிந்திருக்கும் மக்களுக்கு அவன் இவற்றை விளக்குகிறான். </span>
<span>2:231 நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து அவர்களின் (இத்தா) தவணை முடியும் தருவாயை அடைந்து விட்டால், நல்ல முறையில் அவர்களை உங்களுடன் வாழச் செய்யுங்கள்; அல்லது நல்ல முறையில் அவர்களை அனுப்பிவிடுங்கள்! ஆனால் வரம்பு மீறும் எண்ணத்துடனும், தொல்லை கொடுக்கும் எண்ணத்துடனும் அவர்களை நீங்கள் தடுத்து நிறுத்தாதீர்கள்! அப்படி எவரேனும் செய்தால், உண்மையில் அவர் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவராவார். அல்லாஹ்வுடைய வசனங்களைப் பரிகாசமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! மேலும் அல்லாஹ், உங்கள் மீது பொழிந்திருக்கும் அருட்கொடையை நினைவில் வையுங்கள்! மேலும் அவன் உங்கள் மீது இறக்கியிருக்கும் வேதத்தையும், ஞானத்தையும் கண்ணியப்படுத்துங்கள் என உங்களுக்கு அவன் அறிவுரை கூறுகின்றான். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். மேலும், நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். </span>
<span>2:232 நீங்கள் பெண்களை விவாகரத்துச் செய்து, அவர்கள் தங்களின் (இத்தா) தவணையை நிறைவு செய்தால் பிறகு அவர்கள், தங்களுக்குரிய துணைவர்களை நேர்மையான முறையிலும் பரஸ்பர பொருத்தத்தின் அடிப்படையிலும் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் அவர்களை நீங்கள் தடுக்காதீர்கள். இவ்வாறு (ஒருபோதும் செயல்படக் கூடாது என்று) உங்களில் அல்லாஹ்வின் மீதும், இறுதித் தீர்ப்புநாளின் மீதும் நம்பிக்கை கொண்டோருக்கு அறிவுரை கூறப்படுகின்றது. இதுவே உங்களுக்கு மிகத் தூய்மையானதும், பண்புமிக்கதுமான வழிமுறையாகும். மேலும், அல்லாஹ் நன்கு அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்!</span>
<span>2:233 (தம் குழந்தைகளுக்குப்) பால்குடியை நிறைவு செய்ய வேண்டும் என்று தந்தையர்களில் யாராவது விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு இரண்டாண்டு காலம் முழுமையாகப் பாலூட்ட வேண்டும். (இந்நிலையில்) அத்தாய் மார்களுக்கு நல்ல முறையில் உணவளிப்பதும், உடை கொடுப்பதும் குழந்தைகளின் தந்தையர்க்குரிய பொறுப்பாகும். (ஆனால்) எவர் மீதும் அவரது சக்திக்கேற்பவே தவிர பொறுப்பு சுமத்தப்பட மாட்டாது. தாயும் தனது குழந்தையின் காரணத்தால் சிரமத்திற்குள்ளாக்கப்பட மாட்டாள். தந்தையும் தனது குழந்தையினால் சிரமத்திற்குள்ளாக்கப்படமாட்டான். பாலூட்டும் தாய்க்கு உணவும், உடையும் அளிப்பது தந்தை மீது எப்படி பொறுப்பாகுமோ அது போன்றே அவனுடைய வாரிசு மீதும் பொறுப்பாகும். ஆயினும், அவர்களிருவரும் (தாயும், தந்தையும்) ஒருவருக்கொருவர் பரஸ்பர மனநிறைவு மற்றும் ஆலோசனையின் அடிப்படையில் பால்குடிப் பழக்கத்தை நிறுத்திவிடக் கருதினால் (அவ்வாறு செய்வதில்) அவ்விருவர் மீதும் குற்றமெதுவுமில்லை. மேலும் நீங்கள் உங்களுடைய குழந்தைகளுக்குச் செவிலித்தாய்கள் மூலம் பாலூட்ட விரும்பினால், இதிலும் உங்கள் மீது எவ்விதக் குற்றமுமில்லை. ஆனால் ஒரு நிபந்தனை: அவர்களுக்குப் பிரதிபலனாக கொடுக்க வேண்டியதை நீங்கள் முறைப்படிக் கொடுத்துவிட வேண்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்! மேலும், நீங்கள் செய்வது அனைத்தையும் அல்லாஹ் பார்ப்பவனாக இருக்கின்றான் என்பதை (நன்கு) அறிந்து கொள்ளுங்கள்!</span>
<span>2:234 உங்களில் எவரேனும் மனைவியரைவிட்டு மரணமடைந்து விட்டால், அவருடைய அந்த மனைவியர் நான்கு மாதம் பத்து நாட்கள் தாமாகக் காத்திருக்க வேண்டும். அப்படித் தங்களின் தவணையை நிறைவு செய்துவிட்டு தங்கள் தனிப்பட்ட விஷயத்தில் (தம் விருப்பத்துக்கொப்ப) ஒழுங்கான முறையில் செயல்பட அவர்களுக்கு உரிமையுண்டு. அதில் உங்கள்மீது எந்தத் தவறும் இல்லை. நீங்கள் செய்வதனைத்தையும் அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான். </span>
<span>2:235 (விதவையான) பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தை (அவர்களின்) இத்தா காலத்தில் நீங்கள் சாடையாகத் தெரிவிப்பதிலோ, உங்கள் உள்ளங்களில் மறைத்து வைப்பதிலோ உங்கள் மீது எந்தத் தவறுமில்லை. அவர்களைப் பற்றி நீங்கள் எண்ணிப் பார்ப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். ஆனால் (இதோ பாருங்கள்:) அவர்களிடம் இரகசிய உடன்படிக்கை எதுவும் செய்யாதீர்கள்! அவர்களிடம் பேச வேண்டியிருந்தால், வெளிப்படையாக நேர்த்தியாகப் பேசுங்கள்! நிர்ணயிக்கப்பட்ட (இத்தா) தவணை நிறைவடையும் வரை நீங்கள் திருமண ஒப்பந்தம் செய்யத் தீர்மானிக்காதீர்கள்; மேலும், உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான் என்பதை நீங்கள் திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்; எனவே, அவனுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும், சகிப்புத் தன்மையுடையோனுமாய் இருக்கின்றான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்!</span>
<span>2:236 நீங்கள் உங்கள் மனைவியரைத் தீண்டாமலும் அவர்களுக்கு மஹரை நிர்ணயிக்காமலும் இருக்கின்ற நிலையில், அவர்களைத் தலாக் சொல்வீர்களேயானால் உங்கள்மீது குற்றமேதுமில்லை. ஆனால் (இந்நிலையில்) அவர்களுக்கு வாழ்க்கைக்குப் பயனுள்ள ஏதேனும் பொருள்களை அவசியம் கொடுத்து விடுங்கள்! வசதியுள்ளவன் தன்னுடைய சக்திக்கேற்பவும், வசதியற்றவன் தன்னுடைய சக்திக்கேற்பவும் நல்ல முறையில் கொடுத்துவிட வேண்டும். இது நல்லோர் மீதுள்ள கடமையாகும். </span>
<span>2:237 மேலும், மஹரை நிர்ணயித்து விட்டு அவர்களை நீங்கள் தீண்டுவதற்கு முன்னர் தலாக் சொல்லி விட்டால், நீங்கள் நிர்ணயித்த மஹரில் பாதியை அவர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். ஆனால் அப்பெண்கள் (மஹரை வாங்காமல்) விட்டுக் கொடுத்தாலே தவிர, அல்லது திருமண ஒப்பந்தம் யாருடைய பொறுப்பில் உள்ளதோ அவர் (முழு மஹரையும்) விட்டுக் கொடுத்தாலே தவிர! மேலும் நீங்கள் (கணவர்கள்) விட்டுக் கொடுப்பதுதான் இறையச்சத்திற்கு மிக இணக்கமானதாகும். நீங்கள் உங்களுக்கிடையில் தயாள குணத்துடன் நடந்துகொள்ள மறந்துவிட வேண்டாம்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதனைத்தையும் உற்று நோக்கியவனாக இருக்கின்றான். </span>
<span>2:238 எல்லாத் தொழுகைகளையும், (குறிப்பாக, தொழுகையின் சிறப்பனைத்தையும் ஒருங்கே பெற்றுள்ள) ஸலாத்துல் உஸ்தாவையும் நீங்கள் பேணித் தொழுது வாருங்கள்; அல்லாஹ்வின் திருமுன் முற்றிலும் அடிபணிந்தவர்களாய் நில்லுங்கள். </span>
<span>2:239 அச்சம் தரும் சூழ்நிலை உருவானால் நீங்கள் நடந்து கொண்டோ, சவாரிசெய்து கொண்டோ (முடிந்த அளவு) தொழுங்கள். பின்னர் உங்களுக்கு அமைதி ஏற்பட்டதும் அல்லாஹ்வை நீங்கள் நினைவுகூருங்கள்; (எப்படியெனில்) நீங்கள் அறியாதிருந்ததை எவ்வாறு அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தானோ அவ்வாறே அவனை நினைவுகூருங்கள்!</span>
<span>2:240 உங்களில் மனைவியரை விட்டு மரணமடைவோர், தம் மனைவியரின் நலன் கருதி, (வீட்டை விட்டு) அவர்கள் வெளியேற்றப்படாமல் ஓராண்டு வரை அவர்களுக்கு வேண்டிய வாழ்க்கை வசதி அளிக்கப்பட வேண்டுமென மரண சாஸனம் செய்ய வேண்டும். ஆனால், அவர்களாகவே வெளியேறிய பிறகு அவர்கள் தங்களின் தனிப்பட்ட விஷயத்தில் ஒழுங்கான முறையில் செயல்பட்டால் உங்கள் மீது எந்தப் பொறுப்புமில்லை. மேலும், அல்லாஹ் யாவற்றின் மீதும் வல்லமை மிக்கோனும், பேரறிவாளனுமாய் இருக்கின்றான். </span>
<span>2:241 இவ்வாறே ‘தலாக்’ சொல்லப்பட்ட பெண்களுக்குப் பொருத்தமாக ஏதேனும் வழங்கி அவர்களை அனுப்பிவிட வேண்டும். இது இறையச்சமுடையோரின் மீது கடமையாகும். </span>
<span>2:242 இப்படி அல்லாஹ் தன்னுடைய கட்டளைகளை நீங்கள் சிந்தித்துச் செயல்படும் பொருட்டு உங்களுக்கு விளக்கிக் கூறுகின்றான். </span>
<span>2:243 மரணத்துக்கு அஞ்சித் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களோ, ஆயிரக் கணக்கில் இருந்தனர். ‘நீங்கள் மரணமடைந்து விடுங்கள்!” என்று அல்லாஹ் அவர்களிடம் கூறினான். பின்னர் அவர்களை மீண்டும் அவன் உயிர்ப்பித்தான். (உண்மையில்) அல்லாஹ் மனிதர்கள் மீது பேரருள் பாலிப்பவனாக இருக்கின்றான். ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. </span>
<span>2:244 (முஸ்லிம்களே!) அல்லாஹ்வின் வழியில் போர் புரியுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும் பேரறிவாளனாகவும் இருக்கின்றான் என்பதை நன்கறிந்து கொள்ளுங்கள்! </span>
<span>2:245 அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுப்போர் (உங்களில்) யார் உளர்? (அப்படிக் கடன் கொடுத்தால்) அல்லாஹ் அதனைப் பல மடங்குகளாக்கி அவர்களுக்குத் திருப்பிக் கொடுப்பான். அல்லாஹ்தான் (செல்வத்தைக்) குறைக்கவும் பெருக்கவும் செய்கின்றான். நீங்கள் அவன் பக்கமே திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். </span>
<span>2:246 மூஸாவுக்குப் பின்னர் இஸ்ரவேலர்களின் தலைவர்களுக்கு ஏற்பட்ட நிலைமைகளைப் பற்றி நீர் சிந்தித்துப் பார்க்கவில்லையா? “அல்லாஹ்வின் வழியில் நாங்கள் போர் புரிவதற்காக எங்களுக்கு ஓர் அரசனை நியமனம் செய்யுங்கள்!” என்று அவர்கள் தம் நபியிடம் கூறியபோது அவர், “போர் உங்கள் மீது விதியாக்கப்படும்போது, நீங்கள் போர் புரியாமல் இருந்து விட்டால்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “எங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டும், எங்கள் பிள்ளைகளைவிட்டு பிரிக்கப்பட்டும் இருக்கும்போது அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போர் புரியாமலிருக்க, எங்களுக்கு என்ன கேடு?” என்று கூறினார்கள். ஆனால் போர் புரியுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பின்வாங்கிவிட்டனர்! மேலும், அல்லாஹ் இத்தகைய அக்கிரமக்காரர்கள் ஒவ்வொருவரையும் நன்கறிவான். </span>
<span>2:247 அவர்களுடைய நபி, “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை, உங்களுக்கு அரசராக நியமித்திருக்கின்றான்” என்று அவர்களிடம் கூறினார். (இதைக் கேட்டதும்) அவர்கள், “எங்கள் மீது ஆட்சி செலுத்த அவர் எவ்வாறு உரிமையுடையவராவார்? நாங்களோ ஆட்சியதிகாரத்திற்கு அவரைவிட அதிகத் தகுதியுடையோராய் இருக்கின்றோம்; மேலும் அவர் செல்வ வளம் அளிக்கப்பட்டவரும் அல்லவே!” என்று கூறினார்கள். அதற்கு அந்த நபி கூறினார்: “உங்களுக்கு மேலாக அல்லாஹ் அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான். மேலும் அறிவாற்றலையும், உடல் வலிமையையும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான். தான் நாடுபவர்க்கு தன்னுடைய (பூமியில்) ஆட்சியதிகாரத்தை வழங்கும் அதிகாரம் அல்லாஹ்விடமே இருக்கிறது. மேலும் அல்லாஹ் மிக விசாலமானவனும் பேரறிவுடையோனாகவும் இருக்கின்றான்.” </span>
<span>2:248 மேலும், அவர்களுடைய நபி அவர்களுக்குக் கூறினார்: “அவருடைய ஆட்சி அதிகாரத்திற்கான சான்று (என்ன வென்றால், அவருடைய ஆட்சிக் காலத்தில்) உங்களுக்கு ஒரு பேழை திரும்பக் கிடைத்து விடுவதாகும். அதில் உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட மன அமைதிக்கான பொருள்களும் மூஸாவுடைய குடும்பத்தினர் மற்றும் ஹாரூனுடைய குடும்பத்தினர் விட்டுச் சென்ற சிறப்புப் பொருள்களும் இருக்கும். அதை வானவர்கள் சுமந்து நிற்கின்றனர். நீங்கள் இறைநம்பிக்கையுடையோராக இருந்தால், திண்ணமாக உங்களுக்கு இதில் (மகத்தான) சான்று இருக்கின்றது.”</span>
<span>2:249 பின்னர் தாலூத் படைகளுடன் புறப்பட்டபொழுது கூறினார்: “திண்ணமாக அல்லாஹ் ஓர் ஆற்றின் மூலம் உங்களைச் சோதிப்பான். எவரேனும் அதிலிருந்து நீர் அருந்தினால் அவர் என்னைச் சார்ந்தவரல்லர்; யார் அதிலிருந்து தாகம் தணிக்கவில்லையோ அவர் என்னைச் சார்ந்தவராவார். ஆயினும் எவரேனும் சிறங்கைத் தண்ணீரை அள்ளிக் குடிப்பதாக இருந்தால் குடித்துக் கொள்ளலாம்.” ஆனால் அவர்களில் சிலரைத் தவிர மற்ற அனைவரும் அதிலிருந்து தாராளமாக அருந்தினார்கள். பின்னர் தாலூத்தும், அவருடன் நம்பிக்கை கொண்டிருந்தோரும் ஆற்றைக் கடந்து சென்றபோது, “ஜாலூத்தையும் அவனுடைய படையையும் எதிர்த்துப் போரிட இன்று எங்களிடம் வலுவில்லை!” என்று அவர்கள் கூறினார்கள். ஆனால் (ஒரு நாள்) அல்லாஹ்வைத் திண்ணமாகச் சந்திப்போம் என உறுதியாக நம்பிக்கை கொண்டவர்கள் கூறினர்: “எத்தனையோ சின்னஞ்சிறு கூட்டம், அல்லாஹ்வின் அனுமதி கொண்டு பெரும் பெரும் கூட்டங்களை வெற்றி கொண்டிருக்கிறது; மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடனேயே இருக்கின்றான்.” </span>
<span>2:250 மேலும் ஜாலூத்தையும் அவனுடைய படைகளையும் எதிர்த்துப் போரிட அவர்கள் புறப்பட்டபொழுது (இப்படிப்) பிரார்த்தித்தார்கள்: “எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது பொறுமையைப் பொழிவாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! மேலும், இறை நிராகரிப்பாளர்களான இந்தக் கூட்டத்தினரை வென்றிட எங்களுக்கு உதவி செய்வாயாக!” </span>
<span>2:251 (இறுதியில்) அல்லாஹ்வின் அனுமதி கொண்டு இறைநிராகரிப்பாளர்களை அவர்கள் முறியடித்து விட்டார்கள். தாவூத், ஜாலூத்தைக் கொன்றார்; மேலும் அல்லாஹ் தாவூதுக்கு ஆட்சியதிகாரத்தையும் ஞானத்தையும் அருளினான். மேலும் தான் நாடியவற்றையெல்லாம் அவருக்குக் கற்றுக் கொடுத்தான். இவ்வாறு மனிதர்களில் ஒரு கூட்டத்தைப் பிறிதொரு கூட்டத்தைக் கொண்டு அல்லாஹ் தடுக்காவிட்டால் இந்த பூமியே குழப்பத்தால் சீர்குலைந்து போயிருக்கும். எனினும் அல்லாஹ் உலகோர் மீது பேரருள் புரிபவனாகவே இருக்கின்றான். (அவனே இவ்வாறு சீர்கேடுகளை அகற்றுகின்ற ஏற்பாடுகளைச் செய்து கொண்டேயிருக்கின்றான்). </span>
<span>2:252 இவை அல்லாஹ்வின் திருவசனங்களாகும். இவற்றை மிகச் சரியாகவே நாம் உமக்கு ஓதிக் காண்பிக்கிறோம். மேலும் (முஹம்மதே!) நிச்சயமாக நீரும் தூதர்களில் ஒருவராவீர். </span>
<span>2:253 (மனித குலத்தை நேர்வழிப்படுத்துவதற்காக) நாம் அனுப்பிய அந்தத் தூதர்களில் சிலரை, சிலரைவிடச் சிறப்புடையோராக்கினோம். அல்லாஹ், நேரடியாகப் பேசிய சிலரும் இவர்களில் உண்டு. மேலும் சிலருக்கு வேறு பல உயர்ந்த அந்தஸ்துகளை வழங்கினோம். மேலும் மர்யமின் மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான சான்றுகளைக் கொடுத்தோம். இன்னும் ரூஹுல் குத்ஸைக்* கொண்டு அவரை வலுப்படுத்தவும் செய்தோம். அல்லாஹ் நாடியிருந்தால், (அந்தத் தூதர்களுக்குப்) பின்னர் வந்தவர்கள், தெளிவான சான்றுகள் தம்மிடம் வந்த பின்னரும் தங்களுக்குள்ளேயே போரிட்டுக் கொண்டிருந்திருக்க மாட்டார்கள். ஆனால் (அம் மக்களை வேற்றுமைகளிலிருந்து கட்டாயமாகத் தடுத்து நிறுத்துவது அல்லாஹ்வின் நாட்டமல்ல; ஆதலால்) அவர்கள் (தமக்குள்ளேயே) வேறுபட்டுக் கொண்டனர். அவர்களில் சிலர் இறைநம்பிக்கை கொண்டனர்; வேறு சிலர் நிராகரிப்புப் போக்கை மேற்கொண்டனர். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் ஒருவருக்கொருவர் போரிட்டிருக்க மாட்டார்கள். ஆயினும் தான் நாடுகின்றவற்றை அல்லாஹ் செய்கின்றான். </span>
<span>2:254 நம்பிக்கை கொண்டவர்களே! எந்த விதமான பேரமும், நட்பும், பரிந்துரையும் பயன்தர முடியாத அந்த (இறுதித் தீர்ப்பு) நாள் வருமுன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நீங்கள் செலவு செய்யுங்கள். இன்னும் நிராகரிக்கும் போக்கை மேற்கொள்பவர்கள்தாம் உண்மையில் அக்கிரமம் புரிபவர் ஆவர். </span>
<span>2:255 அல்லாஹ் நித்திய ஜீவன், (பேரண்டம் அனைத்தையும்) நன்கு நிர்வகிப்பவன்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தூங்குவதுமில்லை; மேலும் சிற்றுறக்கமும் அவனைப் பிடிப்பதில்லை; வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அவனுடையவையே! அவனுடைய அனுமதியின்றி அவனுடைய திருமுன் எவர்தான் பரிந்து பேச முடியும்! அவர்களுக்கு முன்னாலிருப்பவற்றையும், அவர்களுக்குப் பின்னால் (மறைவாக) இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவன் (அறிவித்துக் கொடுக்க) நாடுவதைத் தவிர, அவன் ஞானத்திலிருந்து வேறெதையும் எவரும் புரிந்து கொள்ள முடியாது. அவனுடைய அரசாட்சி வானங்கள், பூமி அனைத்திலும் பரந்து நிற்கின்றது. அவற்றைப் பாதுகாப்பது அவனைச் சோர்வுறச் செய்வதில்லை. மேலும் அவன் மிக உயர்ந்தவனும், மகத்துவம் மிக்கவனுமாய் இருக்கின்றான். </span>
<span>2:256 தீனில் (இறைநெறியை மேற்கொள்வதில்) யாதொரு கட்டாயமோ நிர்ப்பந்தமோ இல்லை. தவறான வழியிலிருந்து நேரான வழி தெளிவாகப் பிரிக்கப்பட்டுவிட்டது. இனி எவர் தாஃகூத்தை* நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் திட்டமாக, மிகப் பலமான பிடிமானத்தைப் பற்றிக் கொண்டவராவார். அது என்றுமே அறுந்துவிடாது. (அவர் தன்னுடைய ஆதரவாளனாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட) அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனும் நன்கறிவோனுமாய் இருக்கின்றான். </span>
<span>2:257 இறைநம்பிக்கை கொண்டோருக்குப் பாதுகாப்பளித்து உதவுபவன் அல்லாஹ்தான்! அவன், அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வருகிறான். மேலும் இறைநிராகரிப்பை மேற்கொண்டவர்களுக்கு உதவுவோர், தாஃகூத்களேயாவர். அவர்கள் இவர்களை ஒளியிலிருந்து வெளியேற்றி இருள்களின் பக்கம் கொண்டு செல்கின்றனர். அத்தகையவர்கள் நரகவாசி களேயாவர்; அவர்கள் என்றென்றும் நரக நெருப்பில் வீழ்ந்து கிடப்பார்கள்!</span>
<span>2:258 இப்ராஹீமுடைய அதிபதி யார் என்பது குறித்து அவருடன் தர்க்கம் புரிந்தவனை நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ் அவனுக்கு ஆட்சியதிகாரம் வழங்கியிருந்த காரணத்தாலேயே அவன் தர்க்கம் புரிந்தான். “எவன் வாழ்வையும் மரணத்தையும் அளிக்கின்றானோ அவனே என்னுடைய அதிபதி!” என இப்ராஹீம் கூறியதற்கு, “நானும் வாழ்வையும் மரணத்தையும் அளிக்கின்றேனே!” என்று அவன் கூறினான். அதற்கு இப்ராஹீம் “அப்படியானால் அல்லாஹ் சூரியனைக் கிழக்கிலிருந்து உதிக்கச் செய்கின்றான். நீ அதைச் சற்று மேற்கிலிருந்து உதிக்கச் செய்!” என்று கூறினார். (இதைக் கேட்ட மாத்திரத்தில்) சத்தியத்தை மறுத்த அவன் திகைத்துப் போனான். அல்லாஹ் அக்கிரமம் புரிபவர்களை நேர்வழிப்படுத்துவதில்லை. </span>
<span>2:259 அல்லது முகடுகள் இடிந்து வீழ்ந்து கிடந்த ஓர் ஊரினைக் கடந்து சென்ற ஒரு மனிதரின் உதாரணத்தை நீர் கவனிக்க வில்லையா? அவர் “(முற்றிலும்) அழிந்து போய்விட்ட இந்த ஊர் மக்களை அல்லாஹ் எப்படி மீண்டும் உயிர்ப்பிக்கப் போகிறான்?” என வினவினார். அதற்கு அல்லாஹ் அவருடைய உயிரைக் கைப்பற்றி நூறாண்டுகள் அவரை உயிரற்றவராய்க் கிடக்கச் செய்தான்! பின்னர் அவரை உயிர்த்தெழச் செய்து வினவினான்: “நீர் எவ்வளவு காலம் இவ்வாறு கிடந்தீர்?அதற்கு அவர் “ஒரு நாள் அல்லது சில மணி நேரங்கள் நான் இப்படிக் கிடந்திருப்பேன்” என்று கூறினார். அல்லாஹ் கூறினான்: “இல்லை; (இந்நிலையிலேயே) நீர் நூறாண்டுகள் கிடந்தீர்! உம்முடைய உணவையும் பானத்தையும் சற்றுப் பாரும்! அவை சிறிதும் கெட்டுப் போகவில்லை. மேலும் உம்முடைய கழுதையைப் பாரும்! (அதன் எலும்புகள்கூட மக்கிப் போய்விட்டன). உம்மை மக்களுக்கோர் சான்றாக விளங்கச் செய்வதற்காகவே நாம் இவ்வாறு செய்தோம். அந்த எலும்புகளை நாம் எவ்வாறு ஒன்று சேர்த்துப் பின்னர் சதையால் அவற்றைப் போர்த்துகிறோம் என்பதைப் பாரும்! இப்படி, உண்மை அவருக்குத் தெளிவானபோது, “திண்ணமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன் என்பதை நான் அறிகிறேன்” என்று கூறினார். </span>
<span>2:260 “என் அதிபதியே! மரித்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கின்றாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!” என்று இப்ராஹீம் கூறிய சந்தர்ப்பத்தையும் நினைவுகூரும். அப்பொழுது இறைவன், “நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?” என்று கேட்டான்: “ஆம்! (நம்பிக்கை கொண்டுள்ளேன்.) எனினும் என்னுடைய மனம் அமைதியடையும் பொருட்டே இவ்வாறு கேட்கிறேன்!” என்று அவர் கூறினார். அதற்கு அல்லாஹ், “அப்படியானால் நீர் நான்கு பறவைகளைப் பிடித்து அவற்றை (நன்கு பழக்கி) உம்முடன் இணங்கி இருக்கச் செய்யும். பின்னர் (அவற்றைத் துண்டுகளாக்கி) அவற்றின் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு மலையில் வைத்துவிடும்; பிறகு அவற்றை நீர் கூப்பிடும்! அவை உம்மிடம் விரைந்து வந்துவிடும். மேலும் அல்லாஹ், நிச்சயமாக வல்லமை மிக்கோனும் நுண்ணறிவுடையோனுமாயிருக்கின்றான் என்பதை நீர் நன்கு அறிந்து கொள்ளும்” என்று கூறினான். </span>
<span>2:261 அல்லாஹ்வுடைய வழியில் தங்கள் பொருள்களைச் செலவழிப்போர்களின் செலவுக்கு உவமானம், ஒரு தானிய விதையைப் பயிரிடுவது போன்றதாகும். அதிலிருந்து ஏழு கதிர்கள் முளைக்கின்றன! ஒவ்வொரு கதிரும் நூறு தானிய மணிகளைக் கொண்டுள்ளது. (இவ்வாறு) அல்லாஹ் தான் நாடுவோருக்கு (அவர்களுடைய நற்செயல்களின் பயன்களை) பன் மடங்காக்குகின்றான். மேலும் அல்லாஹ் அதிகமதிகம் வழங்குபவனும், யாவற்றையும் நன்கு அறிபவனுமாய் இருக்கின்றான். </span>
<span>2:262 எவர்கள் அல்லாஹ்வுடைய வழியில் தங்கள் பொருள்களைச் செலவு செய்த பின்னர் அதைத் தொடர்ந்து தாங்கள் செலவு செய்ததைச் சுட்டிக்காட்டிப் பேசாமலும், (மனம்) புண்படச் செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு உரிய நற்கூலி அவர்களின் அதிபதியிடம் இருக்கின்றது. மேலும் அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்! </span>
<span>2:263 கனிவான சொல்லும் (விரும்பாத விஷயங்களை) மன்னித்து விடுவதும், மனம் புண்படச் செய்யும் தானத்தைவிடச் சிறப்புடையனவாகும். மேலும் அல்லாஹ் தன்னிறைவுள்ளவனாகவும், சகிப்புத்தன்மை உடையவனாகவும் இருக்கின்றான். </span>
<span>2:264 இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வின் மீதும், மறுமைநாளின் மீதும் ஈமான் கொள்ளாமல் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே தனது பொருளை செலவு செய்பவனைப் போல நீங்களும் கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், (மனம்) புண்படச் செய்தும் உங்களுடைய தான தர்மங்களைப் பாழாக்கி விடாதீர்கள்! அவன் (செய்யும் செலவுக்கு) உவமை, மண் மூடிய ஒரு வழுக்குப் பாறையைப் போன்றதாகும். அதன் மீது பெருமழை பெய்து, (அதை மூடியிருந்த மண்ணை அடித்துக் கொண்டுபோய்) அதை வெறும் பாறையாக்கி விட்டது. இத்தகையவர்கள் செய்யும் தான தர்மங்களால் எதையும் (எந்த நன்மையையும்) ஈட்ட முடியாது. மேலும் நன்றி கொல்லும் மக்களுக்கு நேர்வழி காண்பிப்பது அல்லாஹ்வின் நியதி அல்ல! </span>
<span>2:265 (இதற்கு மாறாக) யார் அல்லாஹ்வுடைய உவப்பை நாடி உளப்பூர்வமாக தங்கள் பொருள்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களு(டைய தர்மத்து)க்கு உவமை, உயரமான பூமியிலுள்ள ஒரு தோட்டம் போன்றதாகும். அதில் பெருமழை பெய்யும் பொழுது தன்னுடைய கனிகளை அது இருமடங்காகத் தருகிறது. அப்படிப் பெரு மழை அதில் பெய்யவில்லை என்றாலும், இலேசான தூறல்கூட அதற்குப் போதுமானதாகும். நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு பார்ப்பவனாக இருக்கின்றான். </span>
<span>2:266 உங்களில் யாரேனும் ஒருவர் இதை விரும்புவாரா? (அதாவது) அவருக்குப் பேரீச்சைகளும், திராட்சைகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதனூடே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. கனிவகைகள் அனைத்தும் அ(த் தோட்டத்)தில் கிடைக்கின்றன. (எதுவும் செய்ய) இயலாத சிறு குழந்தைகளே அவருக்கு இருக்கின்ற நிலையில் அவரை முதுமை வந்தடைகிறது. அப்போது தீயுடன் கூடிய புயற்காற்று அ(த்தோட்டத்)தை தாக்கிப் பொசுக்கிவிடுகிறது. இவ்வாறு அல்லாஹ், உங்களுக்குத் தன் சான்றுகளை, நீங்கள் சிந்தித்துணரும் பொருட்டு விவரிக்கின்றான். </span>
<span>2:267 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் சம்பாதித்த பொருள்களிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்தவற்றிலிருந்தும் சிறந்தவற்றை (இறை வழியில்) செலவு செய்யுங்கள். அவற்றில் மோசமான பொருள்களைத் (தேர்ந்தெடுத்து) அவனுடைய வழியில் நீங்கள் செலவு செய்ய முற்படாதீர்கள். உண்மையில் அது போன்ற மோசமான பொருள்களை உங்களுக்கு எவரேனும் கொடுத்தால், நீங்கள் அதனை விரும்பமாட்டீர்களே! அல்லது கண்டும் காணாமல்தானே அதனை ஏற்றுக் கொள்வீர்கள்? நிச்சயமாக அல்லாஹ் தன்னிறைவு உள்ளவனும் மாபெரும் புகழுடையோனுமாய் இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். </span>
<span>2:268 ஷைத்தான் வறுமையைக் கொண்டு உங்களை அச்சுறுத்துகின்றான்; மானக்கேடானவற்றைச் செய்யும்படியும் உங்களை ஏவுகிறான். ஆனால் அல்லாஹ் தன்னிடமிருந்து மன்னிப்பையும் அருட் செல்வத்தையும் உங்களுக்கு வாக்களிக்கின்றான். அல்லாஹ் விசாலமான கொடையாளனும் எல்லாம் அறிந்தவனுமாவான். </span>
<span>2:269 தான் நாடுகின்றவர்களுக்கு அல்லாஹ் ஞானத்தை வழங்குகிறான். எவருக்கு ஞானம் வழங்கப்படுகிறதோ அவர் (மெய்யாகவே) ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டவராவார். (இவற்றிலிருந்து) நல்லறிவுடையோர் தவிர வேறெவரும் சிந்தித்துப் படிப்பினை பெறமாட்டார்கள். </span>
<span>2:270 நீங்கள் ஏதேனும் செலவு செய்திருந்தால் அல்லது நீங்கள் ஏதேனும் நேர்ச்சை நேர்ந்திருந்தால் அதனை நிச்சயமாக அல்லாஹ் அறிகிறான். மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர். </span>
<span>2:271 நீங்கள் தர்மங்களை வெளிப்படை யாகச் செய்யின் அதுவும் நல்லதுதான்; நீங்கள் அவற்றை யாருக்கும் தெரியாமல் தேவையுடையோர்க்கு கொடுப்பீர்களாயின் அது இன்னும் உங்களுக்குச் சிறந்ததாகும். மேலும் இத்தகைய செயல்கள் காரணமாக உங்கள் தீமைகளை அல்லாஹ் அழித்து விடுகின்றான். மேலும் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாய் இருக்கின்றான். </span>
<span>2:272 (நபியே!) அவர்களை நேர்வழியில் செலுத்தும் பொறுப்பு உம்முடையதல்ல. எனினும், தான் நாடுபவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறான். மேலும் நீங்கள் எந்த நல்ல பொருளை (இறைவழியில்) செலவு செய்தாலும் அது உங்களுக்கே நன்மையாய் இருக்கும். அல்லாஹ்வின் உவப்பைப் பெறுவதைத் தவிர வேறு எதற்காகவும் நீங்கள் செலவு செய்வதில்லையே...! எனவே எந்த நல்ல பொருளை (இறைவழியில்) நீங்கள் செலவு செய்தாலும் அதற்குரிய நிறைவான கூலி உங்களுக்குக் கொடுக்கப்படும்; மேலும் நீங்கள் (ஒருபோதும்) அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். </span>
<span>2:273 பூமியில் (தம் தேவைகளுக்காக) ஓடியாடி உழைக்க முடியாத வண்ணம் அல்லாஹ்வின் பாதையில் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டவர்களான வசதியற்றவர்கள்தாம் உங்கள் தர்மங்களுக்கு மிகவும் உரித்தானவர்கள் ஆவர்! (அவர்களைப் பற்றி) அறியாதவர், அவர்களிடமுள்ள தன்னடக்கத்தைக் கண்டு அவர்களை தன்னிறைவு பெற்றவர்கள் என எண்ணுகிறார்கள். அவர்களின் முகங்களைப் பார்த்தே அவர்களின் உண்மை நிலையை நீர் அறிந்து கொள்ளலாம். ஆனால் அவர்களோ மக்களிடம் வற்புறுத்திக் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். (அவர்களுக்காக) நீங்கள் எந்தப் பொருளை செலவு செய்தாலும் நிச்சயமாக அதனை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான். </span>
<span>2:274 எவர்கள் தங்களுடைய பொருள்களை இரவிலும், பகலிலும் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களின் அதிபதியிடம் உரிய கூலி இருக்கின்றது. மேலும் அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். </span>
<span>2:275 (ஆனால்) வட்டி உண்பவர்கள் ஷைத்தானால் தீண்டப்பட்டு பைத்தியங் கொண்டவன் எழுவது போலல்லாது எழமாட்டார்கள். அவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டதற்குக் காரணம் வியாபாரமும் வட்டியைப் போன்றதுதான் என்று அவர்கள் கூறியதேயாகும். உண்மையில் அல்லாஹ் வியாபாரத்தை (ஹலால்) அனுமதிக்கப்பட்டதாகவும்; வட்டியை (ஹராம்) தடுக்கப்பட்டதாகவும் ஆக்கியுள்ளான். ஆகவே, எவர் தம் இறைவனிடமிருந்து இந்த அறிவுரை வந்த பிறகு (இனி வட்டி வாங்குவதை விட்டு) விலகிக் கொள்கின்றாரோ அவர் முன்னர் வாங்கியது வாங்கியதுதான் என்றாலும் அவருடைய விவகாரம் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது. ஆனால் (இந்தக் கட்டளை வந்த பிறகும்) யாரேனும் (இந்தக் குற்றத்தை) மீண்டும் செய்தால், அவர்கள் நரகவாசிகளே ஆவர்; அதில் அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள். </span>
<span>2:276 அல்லாஹ் வட்டியை அழித்து விடுகின்றான்; இன்னும் தானதர்மங்களை வளரச் செய்கின்றான். மேலும் நன்றி கொன்று, தீய செயல் புரிவோர் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. </span>
<span>2:277 எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்பணிகள் ஆற்றி, தொழுகையையும் நிலைநாட்டி, ஜகாத்தும் கொடுத்து வருகின்றார்களோ அவர்களுக்கு உரிய கூலி நிச்சயமாக அவர்களுடைய அதிபதியிடம் உண்டு. அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். </span>
<span>2:278 இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உண்மையில் நம்பிக்கையாளராக இருப்பின் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (உங்களுக்கு வரவேண்டிய) வட்டிப் பாக்கிகளை விட்டு விடுங்கள். </span>
<span>2:279 ஆனால், அவ்வாறு நீங்கள் செய்யாவிடின், அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் (உங்களுக்கு எதிராக) போர் அறிவிக்கப்பட்டு விட்டதென்பதை அறிந்து கொள்ளுங்கள். (இப்பொழுதும்கூட) நீங்கள் பாவமன்னிப்புக்கோரி (வட்டியைக் கைவிட்டு) விட்டால் உங்களுடைய மூலதனம் உங்களுக்கே உரியது. நீங்கள் அநீதி இழைக்கக்கூடாது. உங்கள் மீதும் அநீதி இழைக்கப்படக் கூடாது. </span>
<span>2:280 உங்களிடம் கடன் பட்டவர் வசதியற்றவராக இருந்தால் (அவருக்கு) வசதி ஏற்படும்வரை, நீங்கள் காத்திருங்கள். நீங்கள் உண்மையை அறிந்திருப்பின் (அசலையே அவர்களுக்கு) நீங்கள் தர்மம் செய்து விடுவது உங்களுக்கு இன்னும் சிறந்ததாகும். </span>
<span>2:281 வரவிருக்கும் அந்நாளில் (ஏற்படக்கூடிய அவமானத்திலிருந்தும் துன்பங்களிலிருந்தும்) நீங்கள் உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்! அன்று அல்லாஹ்வின் பக்கம் நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். பிறகு ஒவ்வொருவருக்கும் அவரவர் சம்பாதித்தவற்றிற்கான (நன்மை அல்லது தீமைக்கான) கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். இன்னும் எவர் மீதும் அநீதி இழைக்கப்பட மாட்டாது. </span>
<span>2:282 இறைநம்பிக்கையாளர்களே! ஒரு குறிப்பிட்ட தவணையை நிர்ணயித்து நீங்கள் உங்களுக்குள் கடன் கொடுக்கல், வாங்கல் மேற்கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். (அதாவது) உங்களுக்கிடையில் ஓர் எழுத்தர் நீதியோடு எழுத வேண்டும்; எழுதவும், படிக்கவும் உள்ள ஆற்றலை அல்லாஹ் யாருக்கு வழங்கியுள்ளானோ அவர் அதனை எழுத மறுக்கக் கூடாது. அவர் எழுத வேண்டும்; எவர் மீது கடனைச் செலுத்தும் பொறுப்பு இருக்கிறதோ அவர், (எழுதுவதற்கு) வாசகம் சொல்லிக் கொடுக்க வேண்டும். (அப்போது) அவருடைய அதிபதியாகிய அல்லாஹ்வுக்கு அவர் அஞ்சிக் கொள்ள வேண்டும். மேலும் கடன் சம்பந்தமாக தீர்மானிக்கப்பட்டதிலிருந்து எதையும் அவர் கூட்டவோ குறைக்கவோ வேண்டாம். ஆனால் எவர் மீது (கடனைச் செலுத்தும்) பொறுப்பு இருக்கிறதோ அவர் (போதிய) அறிவு இல்லாதவராகவோ, இயலாதவராகவோ, தானே வாசகம் சொல்ல ஆற்றல் இல்லாதவராகவோ இருந்தால் அப்போது அவரின் பொறுப்பாளர் நீதியான முறையில் வாசகம் சொல்ல வேண்டும். மற்றும் உங்களில் இரு ஆண்களை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். இரு ஆண்கள் இல்லையென்றால், ஓர் ஆணையும் இரு பெண்களையும் சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். (ஏனெனில்) அவ்விருவரில் ஒருத்தி மறந்துவிட்டால், மற்றொருத்தி அவளுக்கு அதை நினைவூட்டுவாள் என்பதற்காக! இந்த சாட்சிகள் உங்களால் ஏற்றுக்கொள்ளத்தக்கவர்களாய் இருக்க வேண்டும். சாட்சி சொல்ல வேண்டியவர்கள் (சாட்சியத்துக்காக) அழைக்கப்படும்போது மறுக்கக் கூடாது. (தவிர கடன் ஒப்பந்தம்) சிறிதாயினும் சரி, பெரிதாயினும் சரி தவணை குறிப்பிட்டு அதை எழுதி வைப்பதில் அலட்சியமாய் இருந்து விடாதீர்கள்! இதுவே அல்லாஹ்விடத்தில் உங்களுக்கு மிக நீதியான முறையாகும்; மேலும் சாட்சியத்தை மிக (இலகுவாக) உறுதிப்படுத்தக் கூடியதும் உங்கள் சந்தேகங்களைக் குறைக்கக்கூடியதுமாகும். ஆனால், அந்த ஒப்பந்தம் உங்களுக்கிடையே நீங்கள் நிறைவேற்றிக் கொள்கின்ற உடனடி ரொக்கக் கொள்முதலாக இருந்தால், அதை நீங்கள் எழுதி வைக்காமலிருப்பதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. ஆயினும் வியாபார ஒப்பந்தங்களைத் தீர்மானித்து விட்டீர்களாயின் அவற்றிற்குச் சாட்சியம் வைத்துக் கொள்ளுங்கள். எழுத்தரும், சாட்சிகளும் துன்புறுத்தப் படக் கூடாது. அவ்வாறு நீங்கள் துன்புறுத்தினால், அது நிச்சயமாக உங்களுக்குப் பெரும் பாவமாகும். அல்லாஹ்வின் சினத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்; மேலும் அவன் உங்களுக்கு (நேரான வழிமுறையைக்) கற்றுக் கொடுக்கின்றான்; மேலும் அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் நன்கறிபவனாய் இருக்கின்றான். </span>
<span>2:283 நீங்கள் பயணத்திலிருந்தால்மேலும் (ஒப்பந்தப் பத்திரம் எழுதுவதற்கு) எந்த ஓர் எழுத்தரும் உங்களுக்குக் கிடைக்கவில்லையாயின் அடகுப் பொருளைப் பெற்றுக்கொண்டு நீங்கள் கொடுக்கல்வாங்கல் செய்து கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றொருவரை நம்பி ஏதேனும் பொருளை ஒப்படைத்தால் நம்பப்பட்டவர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட (அமானிதப்) பொருளைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். இன்னும் தன் அதிபதியான அல்லாஹ்வுக்கு அவர் அஞ்சிக் கொள்ளட்டும்! மேலும் சாட்சியத்தை நீங்கள் மறைத்து விடாதீர்கள். யாரேனும் சாட்சியத்தை மறைத்தால் அவருடைய இதயம் நிச்சயமாக பாவத்திற்குள்ளாகி விடுகின்றது. இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்கின்ற அனைத்தையும் நன்கறிபவனாயிருக்கின்றான். </span>
<span>2:284 வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது மறைத்து வைத்தாலும் எந்நிலையிலும் அல்லாஹ் உங்களிடம் அவை பற்றிக் கணக்குக் கேட்பான். பின்னர் தான் நாடுபவர்களை அவன் மன்னிப்பான்; தான் நாடுபவர்களைத் தண்டிப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவனாய் இருக்கின்றான். </span>
<span>2:285 இந்தத் தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதின் மீது நம்பிக்கை கொண்டுள்ளார். அவரை ஏற்றுக் கொண்டவர்களும் அந்த வழிகாட்டுதலின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் மற்றும் அவனுடைய தூதர்களையும் நம்புகின்றனர். மேலும் “அல்லாஹ்வுடைய தூதர்கள் எவருக்கிடையிலும் நாங்கள் வேற்றுமை பாராட்டுவதில்லை” என்றும், “எங்கள் இறைவனே! நாங்கள் செவியேற்றோம்; அடிபணிந்தோம். எங்கள் இறைவனே! நாங்கள் உன்னுடைய மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடமே (நாங்கள்) திரும்பி வர வேண்டியிருக்கிறது” என்றும் கூறுகின்றனர். </span>
<span>2:286 அல்லாஹ் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக (பொறுப்புகளைச் சுமத்தி) சிரமப்படுத்துவதில்லை. அவர் சம்பாதித்த நன்மையின் பலனும் அவருக்கே; அவர் சம்பாதித்த தீமையின் விளைவும் அவருக்கே! (நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இவ்வாறு இறைஞ்சுங்கள்:) “எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து போயிருப்பினும், பிழை செய்திருப்பினும் நீ எங்களை (குற்றம்) பிடிக்காதே! எங்கள் இறைவனே! மேலும், எங்களுக்கு முன் சென்றோர் மீது நீ பாரத்தை சுமத்தியது போல் எங்கள் மீதும் பாரத்தைச் சுமத்தி விடாதே! எங்கள் இறைவனே! மேலும் நாங்கள் தாங்க இயலாத பாரத்தை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்களைப் பொறுத்தருள்வாயாக! எங்களுக்கு மன்னிப்பு வழங்குவாயாக! எங்கள் மீது கருணை பொழிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலனாவாய்! (சத்தியத்தை) நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக வெற்றி கொள்ள எங்களுக்கு உதவி செய்வாயாக!”</span>
</div><div>
<span>ஆலு இம்ரான்</span>
<span>3:1 அலிஃப், லாம், மீம். </span>
<span>3:2 அல்லாஹ் நித்திய ஜீவன் (பேரண்டம் அனைத்தையும்) நன்கு நிர்வகிப்பவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. </span>
<span>3:3 (நபியே!) அவனே உம்மீது இந்த வேதத்தை இறக்கியுள்ளான். அதுவோ சத்தியத்தைக் கொண்டு வந்திருக்கின்றது. மேலும் </span>
<span>3:4 இது தனக்கு முன்னர் அருளப்பட்ட வேத நூல்களை உண்மைப்படுத்துகிறது. மேலும் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இதற்கு முன் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவன் இறக்கியிருக்கின்றான். மெய்யையும், பொய்யையும் வேறுபடுத்திக் காட்டும் (உரைகல்லான) இந்த ஃபுர்கானையும் இறக்கியுள்ளான். (இனி) எவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்க மறுக்கின்றார்களோ அவர்களுக்குத் திண்ணமாய்க் கடுமையான தண்டனை உண்டு. மேலும், அல்லாஹ் வல்லமை மிக்கவனும் தீய செயல்களுக்கு பழிவாங்குபவனும் ஆவான். </span>
<span>3:5 திண்ணமாக வானத்திலும் பூமியிலும் உள்ள எப்பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததன்று! </span>
<span>3:6 அவனே (உங்கள் அன்னை யரின்) கருவறைகளில் தான் நாடுகின்றவாறு உங்கள் உருவங்களை அமைக்கின்றான். மிக்க வல்லமையும் நுண்ணறிவும் கொண்ட அவனேயன்றி வேறு இறைவன் இல்லை. </span>
<span>3:7 (நபியே!) அ(ந்த இறை)வனே இவ்வேத நூலை உம்மீது இறக்கியருளினான். இதில் இருவிதமான வசனங்கள் உள்ளன. ஒன்று: “முஹ்கமாத்”* எனும் வசனங்களாகும். அவைதாம் வேதத்தின் அடிப்படை. இரண்டாவது: “முதஷாபிஹாத்”• எனும் வசனங்களாகும். எவர்களுடைய இதயங்களில் கோளாறு உள்ளதோ அவர்கள் குழப்பம் செய்யும் நோக்கில் முதஷாபிஹான வசனங்களைத் தேடித்திரிந்து கொண்டும், அவற்றின் கருத்தைத் திரித்துக் கூற முயற்சி செய்து கொண்டுமிருப்பார்கள். எனினும், அவற்றின் உண்மைப் பொருளை அல்லாஹ்வை அன்றி எவரும் அறியார்! இதற்கு மாறாக, அறிவுத் திறன் மிக்கவர்கள், “இவற்றை நாங்கள் நம்புகின்றோம்; இவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து அருளப்பட்டவைதாம்” என்று கூறுகிறார்கள். மேலும் உண்மை யாதெனில், அறிவாளிகள் தாம் (எதிலும்) சரியான படிப்பினை பெறுகின்றார்கள். </span>
<span>3:8 அவர்கள் இவ்வாறு அல்லாஹ்விடம் இறைஞ்சிய வண்ணம் இருக்கிறார்கள்: “எங்கள் இறைவனே! எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பின்பு எங்கள் இதயங்களை நேர்வழியிலிருந்து பிறழச் செய்திடாதே! மேலும், எங்களுக்கு உன் அருளிலிருந்து கொடை வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையில் தாராளமாக வழங்குபவனாய் இருக்கின்றாய். </span>
<span>3:9 எங்கள் இறைவனே! திண்ணமாக நீ எல்லா மனிதர்களையும் ஒருநாளில் ஒன்று திரட்டக்கூடியவனாய் இருக்கின்றாய்; அந்நாள் வருவதில் எத்தகைய ஐயமும் இல்லை. நிச்சயமாக நீ வாக்குறுதி மீறுபவன் அல்லன்.”</span>
<span>3:10 நிச்சயமாக, இறைநிராகரிப்புப் போக்கை மேற்கொண்டவர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், பிள்ளைகளும் அல்லாஹ்விடத்தில் சிறிதும் பலன் அளித்திட மாட்டா. அவர்கள் நரகின் எரிபொருளாய்த்தான் இருப்பார்கள். </span>
<span>3:11 ஃபிர்அவ்னைச் சார்ந்தவர்களுக்கும், அவர்களுக்கு முன் (இறைவனுக்கு அடிபணியாமல்) வாழ்ந்தவர்களுக்கும் நேர்ந்த கதியைப் போல்தான் (இவர்களுக்கும்) நேரும்! அவர்கள் நம் வசனங்களைப் பொய்யென்று கூறினார்கள். எனவே அவர்களுடைய பாவங்களின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான். (உண்மையில்) அல்லாஹ் கடுமையாகத் தண்டிக்கக் கூடியவனாக இருக்கின்றான். </span>
<span>3:12 எனவே (நபியே!) உமது அழைப்பை ஏற்க மறுத்தவர்களிடம் நீர் கூறும்: “நீங்கள் வெகு விரைவில் கீழடக்கப்படுவீர்கள். மேலும், நீங்கள் நரகத்தை நோக்கி கூட்டமாக விரட்டிச் செல்லப்படுவீர்கள்; அதுவோ மிகக் கெட்ட தங்குமிடமாகும்!” </span>
<span>3:13 (பத்ரில்) மோதிக் கொண்ட இரு பிரிவினரிடம் திண்ணமாக உங்களுக்குப் படிப்பினை தரும் சான்று இருக்கிறது. ஒரு பிரிவினர் அல்லாஹ்வுடைய வழியில் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். மற்றொரு பிரிவினர் (அவனை) நிராகரிப்பவர்களாக இருந்தார்கள். நம்பிக்கையாளர்களைவிட நிராகரிப்பாளர்கள் இரு மடங்கு அதிகமாய் இருந்ததை பார்ப்பவர்கள் தம் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆயினும், அல்லாஹ், தான் நாடுகின்றவர்களுக்கு உதவி செய்து வலுவூட்டுகின்றான் (என்பதைப் போரின் முடிவு நிரூபித்து விட்டது). திண்ணமாக அகப்பார்வை உடையோருக்கு இதில் மாபெரும் படிப்பினை (பொதிந்து) இருக்கிறது. </span>
<span>3:14 பெண்கள், பிள்ளைகள், தங்கம் மற்றும் வெள்ளியினாலான பெருங் குவியல்கள், உயர்ரகக் குதிரைகள், கால்நடைகள் மற்றும் வேளாண்மை நிலங்கள் ஆகியவற்றின் மீது மோகம் கொள்வது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் இவ்வுலகின் சில நாள் வாழ்க்கைக்குரிய சாதனங்களே ஆகும். திண்ணமாக அழகிய உறைவிடம் அல்லாஹ்விடம்தான் இருக்கின்றது. </span>
<span>3:15 (நபியே!) நீர் கூறும்: “இவற்றைவிடச் சிறந்தது எது என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? யார் இறையச்சத்துடன் வாழ்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களின் இறைவனிடத்தில் சுவனங்கள் உண்டு; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவர்கள் அங்கேயே நிலையாகத் தங்கி வாழ்வார்கள். தூய்மையான மனைவியரும் உடனிருப்பர். அல்லாஹ்வின் உவப்பையும் பெறுவார்கள்.” அல்லாஹ் தன்னுடைய அடிமைகளின் நடத்தையை ஆழ்ந்து கவனிப்பவனாக இருக்கின்றான். </span>
<span>3:16 இவர்கள் பிரார்த்தனை புரிந்தவண்ணம் இருப்பார்கள்: “எங்களுடைய இறைவனே! திண்ணமாக நாங்கள் நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களுடைய பாவங்களை நீ மன்னித்தருள்; இன்னும் நரக வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்!” </span>
<span>3:17 இவர்கள் பொறுமையாளர்களாகவும், உண்மையாளர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும் மற்றும் (இறைவழியில் தாராளமாகச்) செலவழிப்பவர்களாகவும் இருப்பதுடன் பின்னிரவு நேரங்களில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பிற்காக இறைஞ்சுபவர்களாகவும் இருக்கிறார்கள். </span>
<span>3:18 வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதற்கு அல்லாஹ்வே சான்று பகர்கின்றான். மேலும், அந்த வல்லமைமிக்க நுண்ணறிவாளனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதற்கு வானவர்களும், அறிவுடையோரும் நேர்மையிலும் நீதியிலும் நிலைத்தவண்ணம் சான்று பகர்கின்றனர். </span>
<span>3:19 திண்ணமாக, இஸ்லாம் மட்டுமே அல்லாஹ்விடம் (ஒப்புக் கொள்ளப்பட்ட) வாழ்க்கை நெறி (தீன்) ஆகும். வேதம் அருளப்பட்டவர்கள் இந்த இஸ்லாமிய வாழ்க்கை நெறியிலிருந்து பிறழ்ந்து பல்வேறு வழிகளை மேற்கொண்டது, அவர்களுக்கு சத்தியம் இன்னதென்று தெளிவுபடுத்தப்படாததனால் அல்ல. மாறாக, தம்மிடம் மெய்யறிவு வந்த பிறகுதான் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டார்கள்; தங்களுக்கிடையே அநீதி இழைப்பதற்காக! மேலும் யாரேனும் அல்லாஹ்வின் சட்டதிட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்குக் கீழ்ப்படிய மறுத்தால் அவர்களிடம் கணக்கு வாங்குவதில் திண்ணமாக அல்லாஹ் விரைவானவனாய் இருக்கின்றான். </span>
<span>3:20 (நபியே! இனி) அவர்கள் உம்மோடு தர்க்கம் புரிந்தால் அவர்களிடம், “நானும் என்னைப் பின்பற்றியவர்களும் அல்லாஹ்வின் முன் அடிபணிந்து விட்டோம்” என்று கூறுவீராக! இன்னும் வேதம் அருளப்பட்டவர்களையும் வேதம் அருளப்படாதவர்களையும் நோக்கி, “நீங்களும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வாழ்வதை ஏற்றுக்கொண்டீர்களா?” என்று கேளுங்கள். அவர்கள் ஏற்றுக்கொண்டால் திண்ணமாக நேர்வழி அடைந்தவர்களாவர். அவர்கள் புறக்கணித்தாலோ (இறைத்தூதை அவர்களிடம்) எடுத் துரைப்பது மட்டுமே உம்மீது கடமையாகும். அல்லாஹ் தன் அடிமைகளின் செயற்பாடுகளை நன்கு பார்த்துக் கொண்டிருக்கின்றான். </span>
<span>3:21 நிச்சயமாக யார் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களையும் நல்லொழுக்க அறிவுரைகளையும் ஏற்க மறுத்து, இறைத்தூதர்களை அநியாயமாகக் கொலை புரிகிறார்களோ, இன்னும் மனிதர்களில் நீதியைக் கைக்கொள்ளுமாறு ஏவியவர்களை கொலை செய்கின்றார்களோ, அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு எனும் “நற்செய்தி” சொல்வீராக! </span>
<span>3:22 இவர்களின் செயல்கள் இம்மை, மறுமை இரண்டிலும் வீணாகி விட்டன. மேலும் இவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர். </span>
<span>3:23 வேதத்திலிருந்து சிறிதளவு அறிவு கொடுக்கப்பட்டோரின் நிலை என்னவென்று நீர் கவனிக்கவில்லையா? அவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்வின் வேதத்தின் பக்கம் (வாருங்கள் என) அவர்கள் அழைக்கப்படும் போது, அவர்களில் ஒரு பிரிவினர் அதனைப் புறக்கணித்துத் திரும்பிச் செல்கிறார்கள். </span>
<span>3:24 அவர்களின் இந்நடத்தைக்குக் காரணம், “சில குறிப்பிட்ட நாட்களைத் தவிர நரக நெருப்பு எங்களைத் திண்ணமாகத் தீண்டாது” என்று அவர்கள் கூறி வந்ததேயாகும். தாமே இயற்றிக் கொண்ட கோட்பாடுகள்தாம் அவர்களின் சமய விவகாரங்களில் அவர்களைப் பல தவறான கருத்துகளில் உழல வைத்திருக்கின்றன. </span>
<span>3:25 ஆனால் ஐயமின்றி வரவிருக்கின்ற ஒருநாளில் நாம் அவர்களை ஒன்று திரட்டும்போது அவர்களின் நிலை என்னவாகும்? அந்நாளில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் சம்பாதித்ததற்குரிய கூலி முழுமையாய் வழங்கப்படும். மேலும் யார் மீதும் அநீதி இழைக்கப்படமாட்டாது. </span>
<span>3:26 (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சியதிகாரம் அனைத்திற்கும் அதிபதியே! நீ நாடுகின்றவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களிடமிருந்து ஆட்சியைப் பறிக்கின்றாய். நீ நாடுகின்றவர்களுக்குக் கண்ணியத்தை வழங்குகின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கைவசமே உள்ளன. திண்ணமாக, நீ ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் கொண்டவன். </span>
<span>3:27 நீயே இரவைப் பகலில் கோக்கச் செய்கின்றாய்; மேலும் பகலை இரவிலும் கோக்கச் செய்கின்றாய்; இன்னும் உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளியாக்குகின்றாய். மேலும் நீ நாடுபவர்களுக்குக் கணக்கின்றி வழங்குகின்றாய்.”</span>
<span>3:28 இறைநம்பிக்கையாளர்கள், (தங்களைப் போன்ற) நம்பிக்கையாளர்களை விடுத்து நிராகரிப்போரை (ஒருபோதும் தம்) நேசர்களாய், ஆதரவாளர்களாய் ஆக்கிக்கொள்ள வேண்டாம். அவர்களுடைய கொடுமைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி! உங்களில் எவரேனும் அவ்வாறு நட்புகொண்டால், அவர்களுக்கு அல்லாஹ்வுடன் எத்தகைய தொடர்பும் இல்லை. மேலும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான். இன்னும் அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. </span>
<span>3:29 நபியே! (மக்களை) எச்சரிப்பீராக: “உங்களின் நெஞ்சங்களில் இருப்பவற்றை நீங்கள் மறைத்தாலும் அல்லது அவற்றை வெளிப்படுத்தினாலும் அல்லாஹ் அவற்றை நன்கறிகின்றான்.” மேலும், வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவற்றை அவன் அறிகின்றான். அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கின்றான். </span>
<span>3:30 ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த நன்மைகளும், தான் செய்த தீமைகளும் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதைக் காணும் நாள் வந்தே தீரும். அப்போது, “அந்தோ! தனக்கும் அந்நாளுக்குமிடையே மிக தூரமான இடைவெளி இருந்திருக்கக் கூடாதா!” என மனிதன் ஆவலுறுவான். அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான். மேலும் அல்லாஹ் தன் அடிமைகள் மீது மிகவும் இரக்கமுள்ளவனாய் இருக்கின்றான். </span>
<span>3:31 (நபியே! மக்களிடம்) நீர் கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருந்தால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுடைய பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் பெருங்கருணையுடையவனுமாவான்.” </span>
<span>3:32 (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்.” பிறகு அவர்கள் (உம்முடைய இந்த அழைப்பை) புறக்கணிப்பார்களாயின் திண்ணமாக அல்லாஹ் (தனக்கும் தன் தூதருக்கும் கீழ்ப்படிய) மறுப்பவர்களை நேசிக்க மாட்டான். </span>
<span>3:33 திண்ணமாக அல்லாஹ், அகிலத்தார்களைக் காட்டிலும் (முன்னுரிமை வழங்கி தனது தூதுப் பணிக்காக) ஆதத்தையும், நூஹையும், இப்ராஹீமின் வழித்தோன்றல்களையும், இம்ரானின் வழித்தோன்றல்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டான். </span>
<span>3:34 இவர்கள் ஒருவர் மற்றவரிலிருந்து தோன்றிய வழித்தோன்றல்களாவர். அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனும், நன்கறிபவனுமாய் இருக்கின்றான். </span>
<span>3:35 இம்ரானைச் சார்ந்த பெண் “என் இறைவனே! நான் எனது வயிற்றில் இருக்கும் குழந்தையை உனது திருப்பணிக்காக அர்ப்பணிக்க நேர்ச்சை செய்துள்ளேன். எனவே இதனை (காணிக்கையை) என்னிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக! திண்ணமாக நீ நன்கு செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றாய்” என்று இறைஞ்சிக் கொண்டிருந்ததையும் அல்லாஹ் செவியுற்றவனாகவே இருந்தான். </span>
<span>3:36 பிறகு அவள் அதைப் (பெண் குழந்தையாகப்) பெற்றெடுத்தபோது கூறினாள்: “என் இறைவா! நான் அதைப் பெண் குழந்தையாய்ப் பெற்றுவிட்டேனே!” ஆயினும் அவள் எதைப் பெற்றெடுத்தாளோ அதைப் பற்றி அல்லாஹ் மிகவும் அறிந்தவன் “மேலும் ஆண் குழந்தை, பெண் குழந்தையைப் போலன்று; நான் அக்குழந்தைக்கு ‘மர்யம்’ எனப் பெயர் சூட்டியுள்ளேன். மேலும் நான் அக்குழந்தைக்காகவும் அதன் வருங்கால வழித்தோன்றலுக்காகவும் சபிக்கப்பட்ட ஷைத்தா(னின் தீங்கி)னை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.” </span>
<span>3:37 ஆகவே அவளுடைய இறைவன் அ(ந்தப் பெண் குழந்தை)தனை அன்போடு ஏற்றுக்கொண்டான். மேலும் அதைச் சிறப்புடன் வளர்த்தான். ஜகரிய்யாவை அக்குழந்தைக்குப் பாதுகாவலராகவும் ஆக்கினான். மர்யம் இருந்த மாடத்தினுள் ஜகரிய்யா செல்லும் போதெல்லாம், ஏதேனும் உணவுப் பொருள் அவளிடத்தில் இருப்பதைக் காண்பார். “மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?” எனக் கேட்பார். “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. தான் நாடியவர்களுக்குத் திண்ணமாக அல்லாஹ் கணக்கின்றி வழங்குகின்றான்” என்று மர்யம் பதிலுரைப்பார். </span>
<span>3:38 அங்கு இந்நிலையைக் கண்ட ஜகரிய்யா தம் இறைவனிடம் இறைஞ்சினார்: “என் இறைவனே! எனக்குத் தூய ஒரு வழித் தோன்றலை உனது ஆற்றலால் வழங்குவாயாக! நிச்சயமாக நீயே பிரார்த்தனையைச் செவியேற்பவன்!” </span>
<span>3:39 அதற்கு மறுமொழியாக அவர், மிஹ்ராபில் மாடத்தினுள் நின்று தொழுது கொண்டிருக்கும்போது, வானவர்கள் குரல் கொடுத்தார்கள்: “அல்லாஹ் உமக்கு யஹ்யா (என்ற மக)வைக் கொண்டு நிச்சயமாக நற்செய்தி சொல்கின்றான். அவர் அல்லாஹ்விடமிருந்து வரப்போகும் ஒரு வாக்கினை, மெய்ப்படுத்தக் கூடியவராய் விளங்குவார். மேலும், அவரிடம் தலைமைத்துவம் மற்றும் மகத்துவத்தின் பண்புகள் காணப்படும். மனக்கட்டுப்பாடு கொண்டவராகவும் இருப்பார்; நபித்துவம் அருளப்பட்டவராகவும் இருப்பார். மேலும் ஒழுக்க சீலர்களில் ஒருவராகவும் திகழ்வார்.”</span>
<span>3:40 ஜகரிய்யா வினவினார்: “என் இறைவா! எனக்கு எப்படிக் குழந்தை பிறக்கும்? நானோ முதுமையடைந்து விட்டேன்; என் மனைவியோ மலடியாய் இருக்கின்றாள்.” அதற்கு இறைவன் “இவ்வாறே நடைபெறும்! அல்லாஹ் தான் நாடுகின்றவற்றைச் செய்(தே தீரு)வான்” என்று பதிலளித்தான். </span>
<span>3:41 அதற்கு அவர், “என் இறைவனே! எனக்கு ஓர் அடையாளத்தை நிர்ணயம் செய்!” என்று (பணிந்து) கேட்டார். அதற்கு, “நீர் மூன்று நாட்கள் வரை சைகையினாலே அன்றி மக்களிடம் பேச மாட்டீர் (பேச இயலாது) என்பதே அடையாளமாகும். இக்கால கட்டத்தில் உம் இறைவனை அதிகமாய் நினைவுகூருவீராக! மேலும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதித்துக் கொண்டிருப்பீராக!” எனக் கூறினான். </span>
<span>3:42 மேலும், அந்நேரம் வந்தபோது வானவர்கள் கூறினார்கள்: “மர்யமே! திண்ணமாக அல்லாஹ் உன்னைத் தேர்ந்தெடுத்துத் தூய்மையாக்கினான். மேலும் அகிலத்துப் பெண்கள் அனைவரினும் (உனக்கு முதலிடம் அளித்து, தனது திருப்பணிக்காக) உன்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். </span> 
<span>3:43 மர்யமே! உன் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டு நடப்பாயாக! மேலும் ஸஜ்தா செய்வாயாக! (அவனது திருமுன்) பணிபவர்களுடன் சேர்ந்து நீயும் பணிவாயாக!”</span>
<span>3:44 (நபியே!) இவை யாவும் மறைவான செய்திகள். இவற்றை உமக்கு, வஹி மூலம் நாம் அறிவிக்கின்றோம். (வழிபாட்டில்லத்தின் பணியாளர்களான அவர்கள்) தங்களில் யார் மர்யத்திற்குப் பொறுப்பு ஏற்பவர் என்று முடிவு செய்ய, தத்தமது எழுதுகோல்களை எறிந்து கொண்டிருந்தபோது அவர்களிடையே நீர் இருக்கவில்லை. மேலும் அவர்கள் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரத்திலும் அவர்களிடையே நீர் இருக்கவில்லை. </span>
<span>3:45 வானவர்கள் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “மர்யமே! திண்ணமாக அல்லாஹ் உனக்கு தனது கட்டளை பற்றி நற்செய்தி சொல்கின்றான். அதன் பெயர் மர்யத்தின் குமாரர் ஈஸா ‘அல் மஸீஹ்’ என்பதாகும். அவர் இம்மையிலும், மறுமையிலும் கண்ணியமிக்கவராகவும், அல்லாஹ்விடம் நெருங்கிய நல்லடியார்களில் ஒருவராகவும் திகழ்வார். </span>
<span>3:46 மேலும் அவர் தொட்டில் பருவத்திலும் பக்குவமான வயதை அடைந்த பின்பும் மக்களிடம் பேசுவார். மேலும் நல்லொழுக்கமுடையவர்களில் ஒருவராயும் திகழ்வார்.” </span>
<span>3:47 (இதனைக் கேட்ட) மர்யம், “என் இறைவனே! என்னை எந்த மனிதனும் தீண்டாமலிருக்க, எனக்கு எப்படிக் குழந்தை பிறக்கும்?” என்று வினவினார். அல்லாஹ் கூறினான்: “அவ்வாறுதான் நடக்கும்! அல்லாஹ் தான் நாடுகின்றவற்றைப் படைக்கின்றான். அவன் எதையேனும் (செய்யத்) தீர்மானித்தால் ‘ஆகுக’ என்றுதான் அதற்குக் கட்டளை இடுவான். உடனே அது ஆகிவிடுகின்றது.” (பிறகு வானவர்கள் தமது பேச்சைத் தொடர்ந்தார்கள்:) </span>
<span>3:48 “இன்னும் அல்லாஹ் அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிப்பான். தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுத்தருவான். </span>
<span>3:49 மேலும் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு அவரைத் தன் தூதராகவும் நியமிப்பான்.” (இறைத்தூதர் எனும் அந்தஸ்தில் அவர் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் வந்தபோது கூறினார்:) “திண்ணமாக நான் உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குச் சான்று கொண்டு வந்துள்ளேன். நான் உங்கள் முன் களிமண்ணிலிருந்து பறவையின் உருவத்தைப் போல் ஒன்றைச் செய்து அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் கட்டளையினால் பறவையாகி விடும். மேலும் நான் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டமுடையவனையும் குணமாக்குவேன். இன்னும் இறந்தவர்களை அவனது அனுமதி கொண்டு உயிர்பெற்றெழச் செய்வேன். அதுமட்டுமன்று! நீங்கள் உண்பவற்றையும் உங்கள் இல்லங்களில் சேமித்து வைப்பவற்றையும் உங்களுக்கு அறிவிப்பேன். நீங்கள் இறைநம்பிக்கையுடையோராயின் இவற்றிலெல்லாம் உங்களுக்குப் போதிய சான்று உண்டு. </span>
<span>3:50 மேலும் தற்பொழுது தவ்ராத்தின் அறிவுரைகளிலிருந்து எவை என் முன் உள்ளனவோ அவற்றை மெய்ப்படுத்திடவும், உங்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கும் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாக்கி வைத்திடவும் நான் வந்துள்ளேன். நான் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்குச் சான்றினைக் கொண்டு வந்துள்ளேன். ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் எனக்குக் கீழ்ப்படியுங்கள். </span>
<span>3:51 உறுதியாக அல்லாஹ்தான் என்னுடைய அதிபதியும் உங்களுடைய அதிபதியுமாவான்! எனவே நீங்கள் அவனுக்கே பணிந்து வாழுங்கள்! இதுதான் நேரான வழியாகும்.”</span>
<span>3:52 இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் நிராகரிக்க முனைந்து விட்டதை ஈஸா உணர்ந்து கொண்டபோது, “அல்லாஹ்வின் வழியில் எனக்கு உதவி புரிவோர் யார்?” என வினவினார். ‘ஹவாரிகள்’* பதிலளித்தார்கள்: “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாய் இருக்கின்றோம். நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். திண்ணமாக நாங்கள் இறை ஆணைக்கு முற்றிலும் அடிபணிந்து நடக்கும் முஸ்லிம்களாக இருக்கின்றோம் என்பதற்கு நீரே சாட்சியாக இரும். </span>
<span>3:53 எங்கள் இறைவனே! நீ இறக்கியருளிய கட்டளைகளை நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்; தூதரையும் பின்பற்றுகின்றோம். எனவே நீ எங்கள் பெயர்களை சத்தியத்திற்குச் சான்று வழங்குவோருடன் சேர்த்து எழுதுவாயாக!”</span>
<span>3:54 பிறகு இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் (ஈஸாவிற்கெதிராக) சதித் திட்டங்கள் தீட்டினார்கள். (அதற்குப் பதிலாக) அல்லாஹ்வும் தகுந்த திட்டங்களைத் தீட்டினான். மேலும் இத்தகைய திட்டங்களைத் தீட்டுவதில் அல்லாஹ் யாவரினும் வல்லவன். </span>
<span>3:55 (அத்தகையதோர் திட்டத்தை நிறைவேற்றவே) அவன் கூறினான்: “ஈஸாவே! நிச்சயமாக நான் இப்போது உம்மைத் திரும்ப அழைத்துக் கொள்வேன். மேலும் உம்மை என்னிடம் உயர்த்திக் கொள்வேன்; உம்மை நிராகரித்தவர்களிடமிருந்து (அதாவது அவர்களுடைய தொடர்பிலிருந்தும், அவர்களுடைய தூய்மையற்ற சூழ்நிலையில் நீர் வாழ்வதிலிருந்தும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; இறுதித் தீர்ப்புநாள்வரை உம்மைப் பின்பற்றுவோரை நிராகரிப்பவர்களைவிட உயர்த்தியே வைப்பேன். இறுதியில் என்னிடம் நீங்கள் அனைவரும் வந்தேயாக வேண்டும். அப்போது நீங்கள் கருத்து வேற்றுமை கொண்டிருந்தவற்றில் நான் உங்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவேன்; </span>
<span>3:56 ஆகவே அவர்களில் எவர் நிராகரிக்கும் போக்கினை மேற்கொண்டார்களோ அவர்களுக்கு இம்மை, மறுமை இரண்டிலும் கடுமையான தண்டனை அளிப்பேன். மேலும், அவர்களுக்கு உதவி புரிவோர் எவரும் இரார். </span>
<span>3:57 ஆனால், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களுக்கு அவர்களுக்குரிய கூலி முழுமையாக வழங்கப்படும். மேலும் (நன்கு அறிந்து கொள்ளுங்கள்:) அநீதி இழைப்போரை அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லை. </span>
<span>3:58 (நபியே!) நாம் எடுத்துரைக்கும் இவை, சான்றுகளும் ஞானமும் நிறைந்த அறிவுரைகளாகும். </span>
<span>3:59 திண்ணமாக, அல்லாஹ்விடத்தில் ஈஸாவின் உவமை ஆதத்தைப் போன்றதாகும். அல்லாஹ் அவரை மண்ணினால் படைத்தான். பிறகு ‘ஆகுக’ என்று கட்டளையிட்டான். உடனே அவர் ஆகிவிட்டார். </span>
<span>3:60 இந்த உண்மைகள் உம்முடைய இறைவனிடமிருந்து எடுத்துரைக்கப்படுகின்றன. எனவே ஐயம் கொள்வோரில் நீரும் ஒருவராகிவிடாதீர். </span>
<span>3:61 இந்த அறிவு உம்மிடம் வந்த பின்பு யாரேனும் உம்மிடம் இவ்விவகாரத்தில் தர்க்கம் செய்தால் (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “வாருங்கள்! உங்கள் மக்களையும் எங்கள் மக்களையும், உங்கள் பெண்களையும், எங்கள் பெண்களையும், நாங்களும் நீங்களும் அழைத்துக் கொண்டு ‘பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’ என்று பணிந்து இறைஞ்சுவோம்.” </span>
<span>3:62 இவை யாவும் முற்றிலும் சரியான நிகழ்ச்சிகளாகும். மேலும் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. உண்மை யாதெனில், திண்ணமாக அல்லாஹ்வுடைய வலிமையே அனைத்தையும்விட மேலோங்கியிருக்கிறது. மேலும், அவனுடைய நுண்ணறிவே இப்பேரண்டத்தின் அமைப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறது. </span>
<span>3:63 எனவே அவர்கள் (மேற்கூறப்பட்ட நிபந்தனையின்படி தர்க்கம் புரிய) முன் வராமல் புறக்கணித்து விட்டால் (அவர்கள் குழப்ப வாதிகள் என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும்.) குழப்ப வாதிகளை அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். </span>
<span>3:64 (நபியே!) நீர் கூறும்: “வேதம் அருளப்பட்டவர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான ஒரு விஷயத்தின் பக்கம் வாருங்கள்: ‘அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் நாம் அடிபணிய மாட்டோம். அவனோடு எதனையும் எவரையும் நாம் இணைவைக்க மாட்டோம். மேலும் நம்மில் எவரும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் இறைவனாய் ஆக்கிக் கொள்ளக்கூடாது.’ அவர்கள் (இந்த அழைப்பினை) ஏற்க மறுப்பார்களேயானால், திண்ணமாக நாங்கள் முஸ்லிம்கள் (அதாவது அல்லாஹ்வுக்கு மட்டுமே கீழ்ப்படிகின்றவர்கள்) என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்று (தெளிவாகக்) கூறி விடுங்கள். </span>
<span>3:65 வேதம் அருளப்பட்டவர்களே! இப்ராஹீம் (உடைய தீனைப்) பற்றி ஏன் தர்க்கம் புரிகின்றீர்கள்? அவருக்குப் பின்னர் தாம் தவ்ராத்தும் இன்ஜீலும் இறக்கியருளப்பட்டன. (இதனைக் கூட) நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்களா? </span>
<span>3:66 நீங்கள் எவற்றை அறிந்து வைத்திருக்கின்றீர்களோ, அவற்றில் நன்கு தர்க்கம் புரிந்துவிட்டீர்கள். (இப்போது) நீங்கள் முற்றிலும் அறியாதவற்றில் தர்க்கம் புரிய ஏன் முற்படுகின்றீர்கள்? அல்லாஹ் நன்கறிகின்றான்; நீங்கள் அறிய மாட்டீர்கள். </span>
<span>3:67 இப்ராஹீம் யூதராகவோ கிறிஸ்தவராகவோ இருந்ததில்லை. மாறாக அவர் ஒருமனப்பட்ட முஸ்லிமாக இருந்தார். மேலும் அவர் இறைவனுக்கு இணைவைப்போரில் ஒருவராய் எப்போதும் இருந்ததில்லை. </span>
<span>3:68 இப்ராஹீமுடன் தமக்குத் தொடர்பு இருப்பதாக உரிமை கொண்டாடுவதற்கு மனிதர்களிலே மிகவும் அருகதையானவர்கள் (யாரெனில்) அவரைப் பின்பற்றி வாழ்ந்தவர்களும், (இப்போது) இந்த நபியும், இவரது தூதுத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுமே ஆவர். அல்லாஹ், நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே உதவியாளனாகவும், ஆதரவாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>3:69 (இறைநம்பிக்கை கொண்டோரே!) வேதம் அருளப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் உங்களை நேரிய வழியிலிருந்து பிறழச் செய்திட வேண்டும் என விரும்புகிறார்கள். ஆயினும், அவர்கள் தங்களைத் தாங்களே வழிகேட்டிலாழ்த்திக் கொள்கின்றார்கள். ஆனால் இதனை அவர்கள் உணர்வதில்லை! </span>
<span>3:70 வேதம் அருளப்பட்டவர்களே! நீங்கள் கண்கூடாகப் பார்த்துக்கொண்டே அல்லாஹ்வின் சான்றுகளை ஏன் நிராகரிக்கின்றீர்கள்? </span>
<span>3:71 வேதம் அருளப்பட்டவர்களே! சத்தியத்தை அசத்தியத்தோடு கலந்து ஏன் அதனைச் சந்தேகத்துக்குரியதாய் ஆக்குகின்றீர்கள்? நீங்கள் நன்கு அறிந்துகொண்டே சத்தியத்தை ஏன் மறைக்கின்றீர்கள்?</span>
<span>3:72 வேதம் அருளப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் (தங்களுக்கிடையே) கூறிக் கொள்கிறார்கள்: “(இந்த நபியை) நம்பியவர்கள் மீது இறக்கியருளப்பட்டவற்றை முற்பகலில் நம்பி, பிற்பகலில் நிராகரித்து விடுங்கள்! (இப்படிச் செய்வதால்) நம்பிக்கையாளர்கள் (தம் நம்பிக்கையை விட்டு) திரும்பிவிடக்கூடும். </span>
<span>3:73 மேலும் உங்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றியவர்களைத் தவிர வேறு யாரையும் நம்பாதீர்கள்!” (நபியே!) நீர் கூறும்: “திண்ணமாக, அல்லாஹ்வுடைய வழிகாட்டுதல்தான் உண்மையான வழிகாட்டுதலாகும். மேலும் உங்களுக்குக் கிடைத்திருப்பது போலவே மற்றவர்களுக்கும் கிடைத்திருக்கிறது என்றால் அல்லது உங்கள் இறைவன் முன் உங்களுக்கு எதிராக சமர்ப்பிப்பதற்காக வலுவான வாதங்கள் மற்றவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன என்றால், அது இறைவன் வழங்கியதேயாகும்.” (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “திண்ணமாக, சிறப்பனைத்தும் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளன. தான் நாடுபவர்களுக்கே அதனை அவன் வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் பரந்த நோக்குடையவனும் யாவற்றையும் நன்கு அறிபவனுமாவான். </span>
<span>3:74 தான் நாடுபவர்களைத் தன் அருட்கொடைக்கு உரியவர்களாக்குகின்றான். மேலும் அல்லாஹ்வின் அருள் மகத்தானதாகும்.”</span>
<span>3:75 வேதம் அருளப்பட்டவர்களில் சிலர் உள்ளனர்; அவர்களை நம்பி நீர் ஒரு செல்வக் குவியலை அவர்களிடம் ஒப்படைத்தாலும், உம்மிடம் அதனைத் திருப்பித் தந்துவிடுவார்கள். அவர்களில் இன்னும் சிலர் உள்ளனர்; அவர்களை நம்பி ஒரு காசைக் கொடுத்தாலும்கூட நீர் அதற்காக விடாப்பிடியாய் நின்றாலேயொழிய அதனை உம்மிடம் திருப்பித் தரமாட்டார்கள். இதற்கு (அவர்களின் இந்த நாணயமின்மைக்குக்) காரணம் அவர்கள் இவ்வாறு கூறிக் கொண்டிருந்ததுதான்: “உம்மிகள் (யூதர் அல்லாதவர்) விஷயத்தில் நாங்கள் அல்லாஹ்வினால் விசாரிக்கப்பட மாட்டோம்!” இவ்வாறு அல்லாஹ்வின் மீது அவர்கள் அப்பட்டமான பொய்யைப் புனைந்துரைக்கின்றார்கள். ஆனால் (உண்மையில் அல்லாஹ் இதுபோன்ற எதையும் சொல்லவில்லை என்பதை) அவர்கள் நன்கு அறிந்தே இருக்கின்றார்கள். </span>
<span>3:76 அவ்வாறல்ல, (அவர்கள் ஏன் விசாரிக்கப்படக் கூடாது?) எவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றி, தீவினையிலிருந்து விலகிக்கொள்கின்றாரோ அவரே, அல்லாஹ்வின் நேசத்திற்குரியவராவார். ஏனெனில், தீவினையிலிருந்து விலகிக் கொள்பவர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான். </span>
<span>3:77 எவர்கள் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட உடன்படிக்கையையும், தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ, அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது. </span>
<span>3:78 அவர்களில் சிலர் இப்படியும் இருக்கிறார்கள்; வேதத்தைப் படிக்கும்போது தம் நாவுகளை அவர்கள் சுழற்றுகின்றார்கள்; அவர்கள் படிக்கின்ற யாவும் வேதத்தில் உள்ளவையே என்று நீங்கள் எண்ணிக் கொள்ள வேண்டும் என்பதற்காக! உண்மை யாதெனில், அவர்கள் படிப்பவை வேதத்திலுள்ளவையல்ல. (நாங்கள் படிக்கின்ற) “இவை யாவும் இறைவனிட மிருந்து வந்தவை” என்று அவர்கள் கூறுகின்றார்கள்; ஆனால் அவை உண்மையில் இறைவனிடமிருந்து வந்தவையல்ல! அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைக்கின்றார்கள். </span>
<span>3:79 ஒருவருக்கு அல்லாஹ் வேதத்தையும், இறைத்தூதுத் துவத்தையும், ஞானத்தையும் வழங்கியிருக்க அதனைப் பெற்ற பின்னர், “நீங்கள் அல்லாஹ்வை விடுத்து எனக்கு அடிமைகளாகி விடுங்கள்!” என்று மக்களிடம் கூறுவது அவருக்கு அனுமதிக்கப்பட்டதன்று. மாறாக, “நீங்கள் ஓதிக்கொண்டும் கற்றுக் கொடுத்துக் கொண்டும் இருக்கும் வேத அறிவுரைகளின் தேட்டப்படி ரப்பானீகளாய்த் திகழுங்கள்!” என்றே அவர் கூறுவார். </span>
<span>3:80 வானவர்களையோ இறைத்தூதர்களையோ உங்கள் கடவுளர்களாய் ஆக்கிக்கொள்ளும்படி உங்களுக்கு ஒருபோதும் அவர் கட்டளையிடமாட்டார். நீங்கள் முற்றிலும் இறைவனுக்குப் பணிந்துவிட்ட பிறகு (முஸ்லிம்களாய்த் திகழும்போது) நிராகரிக்கும் போக்கை மேற்கொள்ளும்படி ஒரு நபி உங்களுக்குக் கட்டளையிடுவாரா, என்ன?</span>
<span>3:81 அல்லாஹ் நபிமார்களிடம் இவ்வாறு உறுதிமொழி வாங்கிய நேரத்தை நினைவுகூருங்கள்: “நான் (இப்போது) உங்களுக்கு வேதத்தையும் நுண்ணறிவையும் வழங்கியிருக்கின்றேன். இனி ஏற்கனவே உங்களிடமுள்ள அறிவுரைகளை மெய்ப்படுத்தக்கூடிய வேறோர் இறைத்தூதர் உங்களிடம் வந்தால் கண்டிப்பாக அவர் மீது நம்பிக்கை கொண்டு நீங்கள் அவருக்கு உதவி புரிந்திடவும் வேண்டும்” (இவ்வாறு கூறிவிட்டு) அல்லாஹ் வினவினான்: “இதனை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா? மேலும், இதற்காக என்னுடன் நீங்கள் செய்துகொண்ட பெரும் ஒப்பந்தத்தை (அதனால் ஏற்படும் மாபெரும் பொறுப்புகளை) ஏற்றுக் கொள்கிறீர்களா?” அவர்கள், “(ஆம்!) நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்” என்றார்கள். அல்லாஹ் கூறினான்: “அப்படியானால் நீங்கள் (இதற்கு) சாட்சியாக இருங்கள். நானும் உங்களோடு சாட்சியாக இருக்கின்றேன். </span>
<span>3:82 இதன் பிறகு (அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையிலிருந்து) யார் பின்வாங்கிச் செல்கின்றார்களோ அவர்களே பாவிகளாவர்.”</span>
<span>3:83 இனி அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் தீனை (வாழ்க்கை நெறியை) விட்டு வேறொரு வாழ்க்கை நெறியையா இவர்கள் விரும்புகின்றார்கள்? உண்மை என்னவெனில், வானங்கள், பூமி ஆகியவற்றில் உள்ள அனைத்தும் விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே கீழ்ப்படிந்து (முஸ்லிமாக) இருக்கின்றன; மேலும் அவனிடமே அவர்கள் அனைவரும் திரும்ப வேண்டியவராய் இருக்கின்றனர். </span>
<span>3:84 நீர் கூறுவீராக: “நாங்கள் அல்லாஹ்வையும் எங்கள் மீது இறக்கியருளப்பட்டிருக்கும் அறிவுரைகளையும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். மேலும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் யஃகூபின் வழித்தோன்றல்கள் ஆகியோர் மீது இறக்கியருளப்பட்டவற்றையும் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். இன்னும் மூஸா, ஈஸா மற்றுமுள்ள நபிமார்களுக்கு அவர்களுடைய அதிபதியிடமிருந்து இறக்கியருளப்பட்டவற்றையும் ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். இவர்களுக்கிடையே நாங்கள் எவ்வித வேற்றுமையும் காட்டுவதில்லை. மேலும் நாங்கள் அல்லாஹ்வுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்து நடக்கும் முஸ்லிம்களாக இருக்கின்றோம். </span>
<span>3:85 இவ்வாறு அவனுக்குப் பணிந்து வாழும் நடத்தையை (இஸ்லாத்தை) விடுத்து வேறொரு வாழ்க்கை நெறியை யாரேனும் மேற்கொள்ள விரும்பினால், அவனிடமிருந்து ஒருபோதும் அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் மறுமையில் அவன் நஷ்டமடைந்தவரில் ஒருவனாக இருப்பான். </span>
<span>3:86 இறைநம்பிக்கை கொண்ட பிறகு நிராகரிப்புப் போக்கினை மேற்கொண்ட மக்களுக்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்? அவர்களோ இவர் உண்மையான தூதர்தான் என்று சாட்சியம் அளித்திருந்தார்கள். மேலும் தெளிவான சான்றுகளும் அவர்களிடம் வந்திருந்தன. இவ்வாறு கொடுமை புரியும் சமுதாயத்தவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை. </span>
<span>3:87 (அவர்கள் புரிந்த கொடுமைக்காக) அல்லாஹ்வும் வானவர்களும், மக்கள் அனைவரும் அவர்கள் மீது இடுகின்ற சாபம்தான் அவர்களுக்குரிய சரியான கூலியாகும்! </span>
<span>3:88 சாபக்கேடான நிலையிலேயே அவர்கள் என்றென்றும் மூழ்கிக் கிடப்பார்கள்; தண்டனை அவர்களுக்குக் குறைக்கப்படவும் மாட்டாது. மேலும் அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படமாட்டாது. </span>
<span>3:89 ஆயினும் அதற்குப் பின்னர் பாவமன்னிப்புக் கோரி, தமது நடத்தையைத் திருத்திக் கொண்டவர்களைத் தவிர! (அவர்கள் தப்பித்துக் கொள்வார்கள்.) ஏனெனில் திண்ணமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும், கருணை பொழிபவனும் ஆவான். </span>
<span>3:90 ஆனால் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டபின் நிராகரிப்பை மேற்கொண்டனரோ, மேலும் நிராகரிப்பிலேயே மூழ்கிக் கொண்டு போகின்றனரோ அவர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அவர்கள்தான் (முதிர்ந்த) வழிகேடர்கள். </span>
<span>3:91 திண்ணமாக, எவர்கள் நிராகரிப்பை மேற்கொண்டு அதே நிலையில் மரணமடைந்து விடுகின்றார்களோ அவர்கள் தம்மைத் தண்டனையிலிருந்து காப்பாற்றிக்கொள்ள பூமி நிரம்பப் பொன்னை ஈட்டுத் தொகையாகத் தந்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இத்தகையோருக்குத் துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது. மேலும் அவர்களுக்கு உதவி புரிவோர் எவரும் இரார். </span>
<span>3:92 உங்களுக்கு விருப்பமானவற்றை (இறைவழியில்) செலவழிக்காதவரை நீங்கள் நன்மையினை அடைந்திட முடியாது. மேலும் எதனை நீங்கள் செலவழித்தாலும் திண்ணமாக, அல்லாஹ் அதனை நன்கு அறிபவனாக இருக்கின்றான். </span>
<span>3:93 (முஹம்மத் நபியுடைய ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும்) உண்பொருள்கள் அனைத்தும் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தன. ஆனால் தவ்ராத் அருளப்படுவதற்கு முன் சில பொருட்களை இஸ்ராயீல் (அதாவது யஃகூப்) தாமாகவே தமக்கு தடுக்கப்பட்டனவாய் (ஹராமாய்) ஆக்கிக் கொண்டிருந்தார். எனவே நபியே! அவர்களிடம் நீர் கூறும்: (“உங்கள் ஆட்சேபணையில்) நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால், தவ்ராத்தைக் கொண்டுவந்து அதிலிருந்து ஒரு வாசகத்தையேனும் படித்துக் காட்டுங்கள்!”</span>
<span>3:94 எனவே அதற்குப் பின்னரும் யார் அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்துரைத்தவாறு இருக்கின்றார்களோ, அவர்கள்தாம் உண்மையில் கொடுமையாளர்கள் ஆவர். </span>
<span>3:95 (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ் உண்மையே உரைக்கின்றான். நீங்கள் ஒருமனப்பட்ட இப்ராஹீமின் வழிமுறையைப் பின்பற்றுங்கள்! மேலும் இப்ராஹீம் இறைவனுக்கு இணைவைப்போரில் ஒருவராய் இருந்ததில்லை.”</span>
<span>3:96 திண்ணமாக, மனிதர்களுக்காகக் கட்டப்பட்ட முதல் வணக்கத்தலம் மக்காவிலுள்ளதேயாகும். அருள்நலம் வழங்கப்பட்ட இடமாகவும், அகிலத்தார் அனைவருக்கும் வழிகாட்டும் மையமாகவும் அது உள்ளது. </span>
<span>3:97 அங்குத் தெளிவான சான்றுகளும் இப்ராஹீம் நின்று தொழுத இடமும் உள்ளன. மேலும் (அது எத்தகைய ஆலயமெனில்) அங்கு எவர் நுழைந்தாலும் அவர் அச்சமற்றவராகி விடுகின்றார். மேலும், அந்த ஆலயத்திற்குச் சென்றுவர மக்களில் எவர்கள் சக்தி பெற்றவர்களோ அவர்கள் ஹஜ் செய்வதானது அல்லாஹ்வுக்காக ஆற்றவேண்டிய கடமையாகும். ஆனால் யாரேனும் இக்கட்டளையைச் செயல்படுத்த மறுத்தால் (அவர் தெரிந்து கொள்ளட்டும்) உலகத்தார் அனைவரை விட்டும், நிச்சயம் அல்லாஹ் தேவையற்றவனாய் இருக்கின்றான். </span>
<span>3:98 (நபியே!) நீர் கூறுவீராக: “வேதம் அருளப்பட்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? நீங்கள் செய்பவை அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றான்” </span>
<span>3:99 (நபியே!) நீர் கூறும்: “வேதம் அருளப்பட்டவர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்றுக்கொண்டவரை அல்லாஹ்வுடைய வழியில் செல்லவிடாமல் ஏன் தடுக்கின்றீர்கள்? (அவர்கள் நேரான வழியில்தான் செல்கின்றார்கள் என்பதற்கு) நீங்களே சான்று வழங்குவோராயிருந்தும், அவர்கள் கோணலான வழியில் செல்ல வேண்டுமென ஏன் விரும்புகின்றீர்கள்? உங்கள் செயல்களைக் குறித்து அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.”</span>
<span>3:100 இறைநம்பிக்கை கொண்டவர்களே! வேதம் அருளப்பட்டவர்களில் ஒரு பிரிவினரின் கருத்துகளை நீங்கள் ஏற்றுக் கொண்டால், அவர்கள் உங்களுடைய நம்பிக்கையிலிருந்து உங்களைப் பிறழச் செய்து இறைமறுப்பின்பால் உங்களைக் கொண்டுபோய் விடுவார்கள். </span>
<span>3:101 உங்களுக்கு அல்லாஹ்வின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன. மேலும் அவனுடைய தூதரும் உங்களிடையே இருக்கின்றார். அவ்வாறிருக்க, இறைமறுப்பின்பால் செல்ல உங்களுக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது? யார் அல்லாஹ்வை இறுகப் பற்றிக் கொள்கின்றாரோ, அவர் நேரான வழியினை நிச்சயம் பெற்றுக் கொள்வார். </span>
<span>3:102 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணமடைய வேண்டாம். </span>
<span>3:103 நீங்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்; பிரிந்து விடாதீர்கள். மேலும், அல்லாஹ் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாய் இருந்த நேரத்தில் அவன் உங்களுக்கிடையே உளப்பூர்வமான இணக்கத்தை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாகிவிட்டீர்கள். மேலும், நெருப்புப் படுகுழியின் விளிம்பில் நீங்கள் நின்று கொண்டிருந்தீர்கள். அல்லாஹ் உங்களை அதிலிருந்து காப்பாற்றி விட்டான். இவ்விதம் அல்லாஹ் தன் சான்றுகளை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்; இதன் மூலம் நீங்கள் வெற்றிக்கான பாதையை அடைந்து கொள்ளக்கூடும் என்பதற்காக!</span>
<span>3:104 நன்மையின் பக்கம் அழைக்கக்கூடிய ஒரு குழுவினர் உங்களிடையே கண்டிப்பாக இருந்திட வேண்டும். அவர்களோ நல்லவை புரியும்படி ஏவவேண்டும்; தீயவற்றிலிருந்து தடுத்தவண்ணம் இருக்கவேண்டும். எவர்கள் இப்பணியை புரிகிறார்களோ உண்மையில் அவர்களே வெற்றியாளர் ஆவர். </span>
<span>3:105 எவர்கள் தம்மிடம் தெளிவான அறிவுரைகள் வந்த பின்னர் தங்களுக்குள் கருத்து வேறுபாடு கொண்டு பற்பல பிரிவினராய்ச் சிதறுண்டு விட்டார்களோ அவர்களைப் போல் நீங்களும் ஆகி விடாதீர்கள். (யார் இத்தகைய நடத்தையை மேற்கொள்கிறார்களோ) அவர்களுக்கு மறுமைநாளில் மாபெரும் தண்டனை உண்டு. </span>
<span>3:106 அந்நாளில் சிலரின் முகங்கள் மகிழ்ச்சியால் மின்னிக் கொண்டிருக்கும். மற்றும் சிலரின் முகங்களோ துயரத்தால் கறுத்துப் போயிருக்கும். எவர்களுடைய முகங்கள் கறுத்திருக்குமோ அவர்களை நோக்கி, “நீங்கள் நம்பிக்கை எனும் அருட்கொடையைப் பெற்றுக் கொண்ட பின்னர், நன்றி கொல்லும் போக்கினை மேற்கொண்டீர்களல்லவா? இவ்வாறு நீங்கள் நன்றி மறந்து வாழும் போக்கினை மேற்கொண்டதால் இப்போது நரக வேதனையைச் சுவையுங்கள்!” என்று சொல்லப்படும். </span>
<span>3:107 எவருடைய முகங்கள் மின்னிக் கொண்டிருக்குமோ, அவர்கள் அல்லாஹ்வுடைய அருளில் இருப்பார்கள். மேலும் அதிலே அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். </span>
<span>3:108 இவை அல்லாஹ்வின் அருளுரைகள்! இவற்றை மிகச் சரியாக உமக்கு நாம் எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றோம். ஏனெனில், அல்லாஹ் அகிலத்தாருக்குக் கொடுமைபுரிய நாடுவதில்லை. </span>
<span>3:109 வானங்கள், பூமி இவற்றிலுள்ள அனைத்துப் பொருள்களின் உரிமையாளன் அல்லாஹ்வே ஆவான். மேலும் எல்லா விவகாரங்களும் அல்லாஹ்விடமே திரும்பக் கொண்டுவரப்படுகின்றன. </span>
<span>3:110 இனி மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள்; தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள். வேதம் அருளப்பட்ட இவர்களும் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குத்தான் நன்மை யாக இருந்திருக்கும். ஆனால் அவர்களில் சிலரே நம்பிக்கை யாளராய் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் வரம்பு மீறுபவர்களாய் இருக்கின்றனர். </span>
<span>3:111 அவர்களால் உங்களுக்குத் தீங்கு எதையும் இழைத்துவிட முடியாது; சிறுசிறு தொல்லைகள் தருவதைத் தவிர! ஆயினும் உங்களோடு போரிட்டால் அவர்கள் புறங்காட்டி ஓடுவார்கள். பிறகு எங்கிருந்தும் அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது. </span>
<span>3:112 அவர்கள் எங்கு காணப்படினும், அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டிருக்கும். அல்லாஹ்வின் பொறுப்பில் அல்லது மனிதர்களின் பொறுப்பில் எங்கேனும் அவர்களுக்கு பாதுகாப்புக் கிட்டினாலே தவிர! மேலும் அவர்கள் அல்லாஹ்வின் சினத்திற்கும் ஆளாகிவிட்டனர். இழிவும் வீழ்ச்சியும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுவிட்டன. இவற்றிற்கெல்லாம் காரணம், அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்து வந்ததும் அவனுடைய தூதர்களை நியாயமின்றிக் கொலை செய்ததும்தான்; அவர்கள் (இறைவனுக்கு) மாறு செய்ததாலும் வரம்பு மீறிச் செயல்பட்டதாலும் ஏற்பட்ட விளைவுகளாகும் இவை!</span>
<span>3:113 ஆனால், வேதம் அருளப்பட்டோர் அனைவரும் ஒரே மாதிரியானவர்களாய் இல்லை. அவர்களில் நேரிய வழியில் நிலைத்து நிற்கும் ஒரு குழுவினரும் இருக்கின்றனர்; அவர்கள் இராக்காலங்களில் இறைவசனங்களை ஓதுகின்றனர். (அல்லாஹ்வின் முன்னிலையில்) ஸுஜூது சிரம்தாழ்த்திப் பணிகின்றனர். </span>
<span>3:114 இன்னும் அல்லாஹ்வையும், மறுமைநாளையும் நம்புகின்றனர். நல்லவை புரியுமாறு ஏவி, தீயவற்றிலிருந்து தடுக்கின்றனர். மேலும், நற்பணிகளில் முனைப்புடன் ஈடுபடுகின்றனர். இவர்கள்தாம் நன் மக்களில் உள்ளவர்களாவர். </span>
<span>3:115 மேலும், இவர்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அது புறக்கணிக்கப்படமாட்டாது. இறையச்சமுள்ளவர்களை அல்லாஹ் நன்கு அறிபவனாக இருக்கின்றான். </span>
<span>3:116 எவர்கள் நிராகரிப்புப் போக்கினை மேற்கொண்டார்களோ அவர்களுக்கு அவர்களுடைய பொருள்களும் சரி, பிள்ளைகளும் சரி அல்லாஹ்விடத்தில் சிறிதும் பலனளிக்கமாட்டா! அவர்கள்தாம் நரகவாசிகள்! மேலும் அதிலேயே அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள். </span>
<span>3:117 இவ்வுலக வாழ்வில் அவர்கள் செலவழிப்பதற்கான உவமை கடும் பனிப்புயல் போன்றதாகும். அதுவோ தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டோரின் வேளாண்மை நிலத்தைத் தாக்கி நாசப்படுத்துகிறது. அல்லாஹ் அவர்களுக்குக் கொடுமை இழைக்கவில்லை; உண்மையில் அவர்கள் தமக்குத்தாமே கொடுமை இழைத்துக் கொள்கிறார்கள். </span>
<span>3:118 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களைச் சார்ந்தவர்களைத் தவிர, மற்றவர்களை உங்கள் அந்தரங்க நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். உங்களுடைய பலவீனங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் எந்த ஒரு வாய்ப்பையும் அவர்கள் நழுவவிடுவதில்லை. உங்களைத் துன்புறுத்தக்கூடியது அவர்களுக்கு விருப்பமானதாய் இருக்கிறது. அவர்களுடைய வாய் மூலமாகவே அவர்களுடைய காழ்ப்புணர்வு வெளிப்படுகிறது. இன்னும் அவர்கள் தங்கள் நெஞ்சங்களில் மறைத்து வைத்திருப்பவை (இவற்றைவிட) அதிகக் கொடியனவாக இருக்கின்றன. நிச்சயமாக நாம் தெளிவான அறிவுரைகளை உங்களுக்கு அளித்திருக்கின்றோம். நீங்கள் அறிவுடையோராயின் (அவர்களோடு தொடர்பு கொள்வதில் விழிப்புடன் இருங்கள்!) </span>
<span>3:119 அவர்களை நீங்கள் நேசிக்கின்றீர்கள்; ஆனால் அவர்கள் உங்களை நேசிப்பதில்லை. நீங்களோ எல்லா இறைவேதங்களின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்கள்! அவர்கள் உங்களைச் சந்திக்கும்போது, “நாங்களும் (உங்களுடைய தூதரையும், வேதத்தையும்) நம்புகின்றோம்” எனக் கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள் உங்களை விட்டுப் பிரிந்து சென்றதுமே, உங்கள் மீது மன எரிச்சல் கொண்டு தம் விரல் நுனிகளைக் கடிக்கின்றார்கள். அவர்களிடம் நீர் கூறுவீராக: “நீங்கள் உங்கள் எரிச்சலிலேயே மூழ்கிச் சாகுங்கள். திண்ணமாக, அல்லாஹ் உங்கள் நெஞ்சங்களில் மறைந்திருப்பவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.” </span>
<span>3:120 உங்களுக்கு நன்மை ஏதும் கிட்டிவிட்டால் அது அவர்களை வருந்தச் செய்கின்றது. மேலும், உங்களுக்குத் துன்பம் நேர்ந்து விட்டாலோ அது அவர்களை மகிழ்வுறச் செய்கிறது. ஆனால் நீங்கள் நிலைகுலையாமலும், அல்லாஹ்வுக்கு அஞ்சியும் வாழ்ந்தால் (உங்களுக்கெதிராக) அவர்கள் கையாளுகின்ற சூழ்ச்சி எந்தப் பலனையும் தரப்போவதில்லை. திண்ணமாக, அவர்கள் செய்து கொண்டிருக்கின்ற அனைத்தையும் அல்லாஹ் சூழ்ந்து கொண்டிருக்கின்றான். </span>
<span>3:121 (நபியே!) நீர் அதிகாலையில் உமது வீட்டை விட்டுப் புறப்பட்டு முஸ்லிம்களை (உஹதுப் போர்க்களத்தில் அவரவருக்குரிய அணிவகுப்பு) இடங்களில் போருக்காக நிறுத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தை (முஸ்லிம்களுக்கு) நினைவூட்டுவீராக! அல்லாஹ் எல்லாவற்றையும் கேட்பவனாகவும் நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>3:122 உங்களில் இரு பிரிவினர் கோழைத்தனம் காட்ட முனைந்த நேரத்தை நினைவுகூரும். அல்லாஹ்வோ அவர்களுக்கு உதவி செய்ய இருந்தான். எனவே இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பவர்களாய்த் திகழ வேண்டும். </span>
<span>3:123 (இதற்கு முன்) பத்ரு போரிலே அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருந்தான். அப்போது நீங்கள் மிகவும் வலுவற்றவர்களாய் இருந்தீர்கள். எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி கொல்வதிலிருந்து விலகி வாழுங்கள். (இதன் மூலம்) நீங்கள் நன்றி செலுத்துவோராய்த் திகழக்கூடும். </span>
<span>3:124 “உங்களுடைய இறைவன் மூவாயிரம் வானவர்களை இறக்கி உங்களுக்கு உதவி செய்திருந்தது போதுமானதில்லையா?” என்று நீர் இறைநம்பிக்கையாளர்களிடம் கேட்டதை நினைவுகூரும். </span>
<span>3:125 ஆம். நீங்கள் நிலைகுலையாமலிருந்து இறைவனுக்கு அஞ்சிப் பணியாற்றினால் எந்தக் கணத்தில் பகைவர்கள் உங்கள் மீது படையெடுத்து வருகின்றார்களோ, அந்தக் கணத்தில் உங்கள் இறைவன் (மூவாயிரம் என்ன) போர் அடையாளமுடைய ஐயாயிரம் வானவர்களின் மூலம் உங்களுக்கு உதவி செய்வான். </span>
<span>3:126 அல்லாஹ் இந்தச் செய்தியை உங்களுக்கு அறிவித்தது, நீங்கள் மகிழ்ச்சி அடைவதற்காகவும், உங்கள் இதயங்கள் அமைதி பெறவேண்டும் என்பதற்காகவுமே! வெற்றி என்பது மிக்க வலிமையுடையவனும், நுண்ணறிவாளனுமான அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கின்றது. </span>
<span>3:127 அல்லாஹ் இத்தகைய உதவியை உங்களுக்குச் செய்வதெல்லாம், நிராகரித்தவர்களில் ஒரு பகுதியினரை அழிப்பதற்காக அல்லது அவர்களைப் படுதோல்வியில் ஆழ்த்தி அவர்கள் ஏமாற்றமடைந்தவர்களாய் திரும்பிச் செல்வதற்காகத்தான்!</span>
<span>3:128 (நபியே! தீர்ப்பு வழங்குவதற்கான) அதிகாரத்தில் உமக்கு யாதொரு பங்குமில்லை; அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதோ அல்லது அக்கிரமக்காரர்களாய் இருப்பதால் அவர்களுக்கு தண்டனை அளிப்பதோ அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு உட்பட்டவையாகும். </span>
<span>3:129 வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். தான் நாடுகின்றவர்களுக்கு அவன் மன்னிப்பை அருள்வான்; மேலும் தான் நாடுகின்றவர்களுக்கு வேதனையை அளிப்பான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் கருணை பொழிபவனுமாய் இருக்கின்றான். </span>
<span>3:130 இறைநம்பிக்கை கொண்டவர்களே! பன்மடங்காகப் பெருகி வளரும் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நீங்கள் வெற்றி பெறக்கூடும். </span>
<span>3:131 இன்னும் இறை மறுப்பாளர்களுக்குத் தயார் செய்து வைக்கப்பட்டுள்ள நெருப்புக்கு அஞ்சுங்கள். </span>
<span>3:132 அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். (அதனால்) நீங்கள் கருணை காட்டப்படலாம். </span>
<span>3:133 இறைவனிடமிருந்து வழங்கப்படும் மன்னிப்பு மற்றும் சுவனத்தின் பக்கம் (செல்லும் பாதையில்) விரைந்து செல்லுங்கள்! அது வானங்கள், பூமியின் அளவிற்கு விரிவானது. மேலும் அது இறையச்சமுடையோர்க்காக தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. </span>
<span>3:134 அவர்கள் எத்தகையோர் எனில் வசதியுள்ள நிலையிலும், வசதியற்ற நிலையிலும் செலவழிப்பார்கள். மேலும் அவர்கள் சினத்தை அடக்கிக் கொள்வார்கள். மேலும் மக்(களின் தவறு)களை மன்னித்து விடுவார்கள். இத்தகைய உயர்ந்த பண்பினரை (முஹ்ஸின்களை) அல்லாஹ் நேசிக்கின்றான். </span>
<span>3:135 மேலும் அவர்கள் எத்தகையோர் எனில், மானக்கேடான செயலைச் செய்துவிட்டால் அல்லது (ஏதேனும் பாவங்கள் செய்து) தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டால், உடனே அவர்கள் அல்லாஹ்வை நினைத்து, தம் பாவங்களுக்காக அவனிடம் மன்னிப்புக் கோருவார்கள். (ஏனெனில்) அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னித்தருள்பவன் வேறு யார்? மேலும் தாம் செய்தவற்றில் அறிந்து கொண்டே பிடிவாதமாக இருக்கமாட்டார்கள். </span>
<span>3:136 இத்தகையோரின் கூலி, அவர்களுடைய இறைவனிட மிருந்து கிடைக்கின்ற மன்னிப்பும், கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களுமாகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள். நற்செயல்கள் புரிவோருக்கான கூலி எத்துணை நன்றாய் இருக்கின்றது! </span>
<span>3:137 உங்களுக்கு முன் பல்வேறு காலகட்டங்கள் கடந்து சென்றிருக்கின்றன. பூமியில் சுற்றித் திரிந்து (அல்லாஹ்வின் சட்டதிட்டங்களையும், அறிவுரைகளையும்) பொய் என்று கூறியவர்களின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதைப் பாருங்கள்! </span>
<span>3:138 இது மக்களுக்குரிய தெளிவான விளக்கமாகும். மேலும், இறைவனை அஞ்சி வாழ்வோர்க்கு வழிகாட்டியும், அறவுரையுமாகும். </span>
<span>3:139 நீங்கள் மனந்தளர்ந்து விடாதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் இறைநம்பிக்கையுடையோராயின், நீங்களே மேலோங்குவீர்கள். </span>
<span>3:140 (இப்பொழுது) உங்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது என்றால், இதற்கு முன்னர் (உங்கள்) எதிரணியினருக்கும் இதேபோன்ற காயம் ஏற்படத்தான் செய்தது. இவையெல்லாம் கால(த்தின் மாற்ற)ங்கள் ஆகும். இவற்றை மக்களிடையே நாம் மாறிமாறி வரச் செய்கின்றோம். (உங்களுக்கு இப்படியொரு சந்தர்ப்பம் வரக் காரணம்) உங்களில் உண்மையான நம்பிக்கையுடையவர்கள் யார் என்பதனை அல்லாஹ் கண்டறிந்து உண்மையிலேயே சத்தியத்திற்குச் சான்று பகர்கின்றவர்களை (ஷûஹதா) உங்களிலிருந்து வேறுபடுத்துவதற்காகத் தான்! ஏனெனில் அக்கிரமக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. </span>
<span>3:141 (இவ்வாறெல்லாம் சோதனை செய்வதன் மூலம்) நம்பிக்கையாளர்களைப் பிரித்துத் தேர்ந்தெடுக்கவும், நிராகரிப்போரை நசுக்கவும் அல்லாஹ் நாடியிருந்தான். </span>
<span>3:142 உங்களில் யார் அவனுடைய பாதையில் முனைப்போடு போராடுபவர்கள் என்பதை அல்லாஹ் அறியாமலும், உங்களில் நிலைகுலையாமல் நிற்பவர்கள் யார் என்பதை அவன் அறியாமலும் நீங்கள் (எளிதில்) சுவனம் புகுந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டீர்களா? </span>
<span>3:143 மரணம் உங்கள் எதிரில் வருவதற்கு முன்பு நீங்கள் நிச்சயமாக அதனை விரும்பிக் கொண்டிருந்தீர்கள். இதோ, இப்பொழுது அது உங்கள் முன் வந்துவிட்டது! அதனை நீங்கள் கண்கூடாய்ப் பார்த்துவிட்டீர்கள். </span>
<span>3:144 முஹம்மத் ஒரு தூதரேயன்றி வேறல்லர். திண்ணமாக, அவருக்கு முன்பும் தூதர்கள் பலர் சென்றுள்ளனர். எனவே அவர் மரணமெய்திவிட்டால், அல்லது கொல்லப்பட்டுவிட்டால் நீங்கள் முந்திய வாழ்க்கைக்குத் திரும்பிச் சென்று விடுவீர்களா? நினைவிருக்கட்டும்! எவன் அவ்வாறு திரும்பிச் செல்கின்றானோ, அவனால் அல்லாஹ்விற்கு எத்தகையத் தீங்கும் செய்துவிட முடியாது. ஆயினும், நன்றி செலுத்தி வாழ்பவர்க்கு அல்லாஹ் மிக விரைவில் அதற்குரிய கூலியை வழங்குவான். </span>
<span>3:145 எந்த உயிரினமும் அல்லாஹ்வுடைய உத்தரவின்றி இறக்க முடியாது. மரண நேரம் விதிக்கப்பட்டுவிட்டது. எவர் உலகாயத லாபங்களைக் கருதிச் செயலாற்றுகின்றாரோ அவருக்கு அதிலிருந்தே நாம் வழங்குவோம். எவர் மறுமைப் பேற்றைக் கருதிச் செயலாற்றுகின்றாரோ அவருக்கு அதிலிருந்தே நாம் வழங்குவோம். மேலும், நன்றி செலுத்துவோர்க்கு அதிவிரைவில் நாம் கூலி வழங்கிடுவோம். </span>
<span>3:146 (இதற்கு முன்பு) எத்தனையோ இறைத்தூதர்(களும் அவர்)களோடு சேர்ந்து இறை அன்பர்கள் பலரும் போர் புரிந்துள்ளார்கள். அல்லாஹ்வின் வழியில், அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களினால் அவர்கள் மனந்தளர்ந்து விடவில்லை; ஊக்கம் குன்றிவிடவுமில்லை. (அசத்தியத்திற்கு முன்) அவர்கள் பணிந்திடவுமில்லை. நிலைகுலையாத இத்தகைய பொறுமையாளர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான். </span>
<span>3:147 அவர்களுடைய பிரார்த்தனை இதுவாகத்தான் இருந்தது: “எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் பிழைகளையும் நீ மன்னித்தருள்வாயாக! எங்கள் பணிகளில் உன் வரம்பை மீறி நாங்கள் செய்தவற்றை நீ மன்னிப்பாயாக! மேலும் எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! சத்தியத்தை நிராகரிப்பவர்களை வெற்றிகொள்ள எங்களுக்கு நீ உதவி செய்வாயாக!”</span>
<span>3:148 இறுதியில் இவர்களுக்கு அல்லாஹ் இவ்வுலக நன்மைகளையும் அளித்தான்; அதைவிட உன்னதமான மறுமைப் பேறுகளையும் வழங்கினான். இத்தகைய நற்செயல்கள் புரியும் முஹ்ஸின்கள் தாம் அல்லாஹ்வின் விருப்பத்திற்கு உரியவர்கள். </span>
<span>3:149 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நிராகரிக்கும் போக்கினை மேற்கொண்டவர்களின் கூற்றுகளை நீங்கள் பின்பற்றினால், அவர்கள் உங்களை முந்திய வாழ்க்கைக்குத் திருப்பி விடுவார்கள். மேலும் நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவீர்கள். (அவர்களுடைய கூற்று தவறானவையே! </span>
<span>3:150 உண்மை என்னவெனில்) அல்லாஹ்தான் உங்களின் பாதுகாவலன். மேலும் அவன் உதவி செய்வோரில் மிகச் சிறந்தவன். </span>
<span>3:151 (சத்தியத்தை) நிராகரிப்போரின் உள்ளங்களில் வெகுவிரைவில் நாம் பேரச்சத்தை ஏற்படுத்துவோம். ஏனெனில், இறைவனுக்கு இணையானவை என்று நிரூபிக்கும் எந்த ஆதாரத்தையும் எவற்றுக்கு அல்லாஹ் இறக்கிடவில்லையோ அவற்றை அவனுடன் இணையாக்கிவிட்டார்கள். இவர்கள் இறுதியாகப் போய்ச் சேருமிடம் நரகமே! அக்கிரமக்காரர்கள் சேர இருக்கும் இந்த இடம் எத்துணைக் கெட்டது!</span>
<span>3:152 அல்லாஹ் உங்களுக்கு (உதவி செய்வதாகக் கூறிய) தனது வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டான். துவக்கத்தில் அவனது அனுமதியின்படி அவர்களை நீங்கள்தாம் (போரில்) வெட்டி வீழ்த்தினீர்கள்! ஆனால் இறுதியில் நீங்கள் ஊக்கமிழந்து உங்களுடைய பணிகள் குறித்து ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொண்டீர்கள்; மேலும் நீங்கள் மோகம் கொண்டிருந்தவற்றை (போர்ப் பொருட்களை) அல்லாஹ் உங்கள் கண்ணெதிரே காட்டிய உடனேயே (உங்கள் தலைவரின் கட்டளைக்கு) நீங்கள் மாறு செய்தீர்கள். ஏனெனில் உங்களில் சிலர் இம்மையை விரும்புவோராய் இருந்தனர்; வேறு சிலர் மறுமையை விரும்புவோராய் இருந்தனர். பிறகு அல்லாஹ் உங்களைச் சோதிக்கும் பொருட்டு இறைமறுப்பாளர்களை எதிர்த்து நிற்க முடியாத வண்ணம் உங்களை திசை திருப்பிவிட்டான். இதன் பிறகும் அவன் உங்களை மன்னித்தருளினான். ஏனெனில், அல்லாஹ் இறைநம்பிக்கையுடையோர் மீது பெரிதும் கருணை பொழிபவனாக இருக்கின்றான். </span>
<span>3:153 இறைத்தூதர் உங்கள் பின்னால் இருந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்க நீங்கள் யாரையும் திரும்பிப் பார்க்காதவாறு ஓடிக் கொண்டிருந்த நேரத்தை நினைத்துப் பாருங்கள். இதன் விளைவாக அல்லாஹ் உங்களுக்குத் துன்பத்திற்கு மேல் துன்பத்தைக் கொடுத்தான். ஏனெனில், உங்களை விட்டு நழுவிப் போனவை பற்றியும், உங்களுக்குத் துன்பம் ஏற்பட்டது பற்றியும், (இனிமேல்) நீங்கள் வருந்தக் கூடாது எனும் படிப்பினையை இதிலிருந்து பெறவேண்டும் என்பதற்காக! அல்லாஹ் நீங்கள் செய்வதனைத்தையும் நன்கறிபவனாக இருக்கின்றான். </span>
<span>3:154 பின்னர் இத் துன்பத்திற்குப் பிறகு மன ஆறுதலை அளிக்கக்கூடிய சிற்றுறக்கத்தை அல்லாஹ் உங்களுக்கு அருளினான். உங்களில் ஒரு குழுவினரை அது ஆட்கொண்டது. ஆனால் மற்றும் சிலரோ தமது நலன்களையே முக்கியமாகக் கருதி உண்மைக்குப் புறம்பாக, அல்லாஹ்வைப் பற்றி அறியாமை மிக்க பல யூகங்களைக் கொண்டிருந்தனர். “இந்த விவகாரங்களில் எங்களுக்கும் ஏதாவது பங்குண்டா?” என்று அவர்கள் வினவுகின்றனர். நீர் கூறும்: “(யாருக்கும் எத்தகையப் பங்குமில்லை.) இவற்றின் அனைத்து அதிகாரங்களும் நிச்சயமாக அல்லாஹ்வின் கைவசமே உள்ளன.” உண்மையில் அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்திருப்பவற்றை உம்மிடம் வெளிப்படுத்துவதில்லை. அவர்கள் கேட்டதன் பொருள் இதுதான்: “தலைமையதிகாரங்களில் எங்களுக்கும் சிறிது பங்கு இருந்திருந்தால், நாங்கள் இங்குக் கொல்லப்பட்டிருக்க மாட்டோம்” என்று அவர்கள் சொல்கின்றார்கள். அதற்கு நீர் கூறும்: “நீங்கள் உங்கள் வீடுகளில் அடைந்திருந்தாலும் யாருடைய விதியில் மரணம் எழுதப்பட்டு விட்டதோ, அவர்கள் தம் மரணக்களங்களை நோக்கி வந்தே தீருவர்!” மேலும் அல்லாஹ் உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றைச் சோதிக்கவும் உங்கள் இதயங்களில் படிந்திருக்கும் மாசுகளை அகற்றவுமே இவ்வாறெல்லாம் நிகழும்படிச் செய்தான். அல்லாஹ் உங்கள் உள்ளங்களின் நிலையை நன்கறிபவனாக இருக்கின்றான். </span>
<span>3:155 இரு கூட்டத்தாரும் மோதிக் கொண்ட நாளில் உங்களில் யார் புறங்காட்டி ஓடினார்களோ, அவர்கள் செய்த சில தவறுகள் காரணமாகத்தான் ஷைத்தான் அவர்களை அடிசறுக்கச் செய்தான். எனினும் அல்லாஹ் அவர்களைப் பொறுத்தருளினான். திண்ணமாக, அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் சகிப்புத்தன்மையுடையவனுமாய் இருக்கின்றான். </span>
<span>3:156 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நிராகரிப்போரைப் போன்று பேசாதீர்கள்! அவர்கள், தங்களுடைய உற்றார் உறவினர் எப்போதேனும் பயணம் சென்றால், அல்லது போரில் கலந்து (ஏதேனும் துன்பத்திற்குள்ளாகி) விட்டால், “இவர்கள் எங்களுடன் இருந்திருந்தால் மரணமடைந்திருக்கவும் மாட்டார்கள்; கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்” என்று கூறுகின்றார்கள். அவர்களுடைய இப்படிப்பட்ட பேச்சுகளின் காரணமாக, அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் கடுந்துயரத்தை ஏற்படுத்துகிறான். உண்மையில் உயிரைக் கொடுப்பவனும், உயிரைப் பறிப்பவனும் அல்லாஹ்வே ஆவான்; மேலும், நீங்கள் செய்கின்றவற்றையெல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான். </span>
<span>3:157 நீங்கள் அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டாலோ அல்லது மரணமடைந்தாலோ, அப்போது உங்களுக்கு வழங்கப்படவிருக்கும் அல்லாஹ்வின் மன்னிப்பும் கருணையும் இ(ந்நிராகரிப்ப)வர்கள் திரட்டி வைத்துக் கொண்டிருக்கின்ற அனைத்தையும்விட மிகச் சிறந்தவையாகும். </span>
<span>3:158 நீங்கள் மரணமடைந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள். </span>
<span>3:159 (நபியே!) அல்லாஹ்வின் மாபெரும் அருளினாலேயே நீர் இவர்களிடம் மென்மையாக நடந்து கொள்கின்றீர். நீர் கடுகடுப்பானவராகவும் வன்னெஞ்சராகவும் இருந்திருந்தால், இவர்களெல்லோரும் உம்மை விட்டு விலகிப் போயிருப்பார்கள். ஆகவே இவர்(களின் தவறு)களைப் பொறுத்துக் கொள்வீராக! மேலும் இவர்களுக்காக (இறைவனிடம்) மன்னிப்புக் கோருவீராக! மேலும் தீனுடைய பணிகளில் இவர்களையும் கலந்தாலோசிப்பீராக! (ஏதாவதொரு விஷயத்தில்) நீர் உறுதியான முடிவுக்கு வந்துவிட்டால், அப்பொழுது அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக! திண்ணமாக, தன்னை முழுமையாகச் சார்ந்திருந்து செயல்படுவோரை அல்லாஹ் நேசிக்கின்றான். </span>
<span>3:160 அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானாகில், பிறகு எந்தச் சக்தியும் உங்களை வென்றிட முடியாது! மேலும் உங்களுக்கு அவன் உதவி செய்யாவிட்டாலோ, அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்யக்கூடியவர் யார்? எனவே வாய்மையான இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்வை முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டும். </span>
<span>3:161 வஞ்சனை செய்தல் எந்த ஒரு நபிக்குரிய செயலாகவும் இருக்க முடியாது. எனவே எவர் வஞ்சனை செய்கின்றாரோ அவர் மறுமைநாளில் தான் செய்த வஞ்சனையுடன்தான் வருவார். பின்னர் ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் சம்பாதித்ததற்கான கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். அவர்களில் யார் மீதும் அநீதி இழைக்கப்பட மாட்டாது. </span>
<span>3:162 எப்பொழுதுமே அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றி நடக்கும் ஒருவர் அல்லாஹ்வின் சினத்துக்கு ஆளானவரைப் போலவும், மிகவும் கெட்ட இருப்பிடமான நரகத்தைப் புகலிடமாகப் பெற்றிருப்பவரைப் போலவும் செயல்படுவாரா? </span>
<span>3:163 அல்லாஹ்விடம் இவ்விரு வகை மனிதர்களுக்கும் இடையில் வேறுபட்ட படித்தரங்கள் இருக்கின்றன. மேலும், அல்லாஹ் இவர்கள் அனைவரின் செயல்களையும் நன்கு பார்ப்பவனாக இருக்கின்றான். </span>
<span>3:164 திண்ணமாக, அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்கு மகத்தான பேருதவி புரிந்துள்ளான். அதாவது, அவர்களிடையே தன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பிப்பவரும், அவர்களின் வாழ்க்கையைத் தூய்மைப்படுத்துபவரும், அவர்களுக்கு வேதத்தையும் நுண்ணறிவையும் கற்றுக்கொடுப்பவருமான ஒரு தூதரை அவர்களிலிருந்தே அவன் தோற்றுவித்தான். ஆனால், அவர்களோ இதற்கு முன் அப்பட்டமான வழிகேட்டில்தான் இருந்தார்கள். </span>
<span>3:165 (என்னே உங்கள் நிலை!) உங்களுக்கு ஏதேனும் துன்பம் வரும்போது, “அது எங்கிருந்து வந்தது?” என்று கேட்கிறீர்கள். (ஆனால் பத்ருப் போரில்) இது போன்ற இரு மடங்கு துன்பம் உங்கள் கைகளால் எதிரிகளுக்கு ஏற்பட்டிருந்ததே! (நபியே!) நீர் அவர்களுக்குக் கூறும்: “இத்துன்பம் உங்களால்தான் வந்தது. திண்ணமாக, அல்லாஹ் யாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன்.” </span>
<span>3:166 இரு சாராரும் மோதிக் கொண்ட நாளில் உங்களுக்கு வந்த துன்பங்கள் அல்லாஹ்வின் நாட்டத்தினால்தான் ஏற்பட்டன. </span>
<span>3:167 மேலும் உங்களில் நம்பிக்கையாளர்கள் யார், நயவஞ்சகர்கள் யார் என்று அல்லாஹ் இனங்கண்டு கொள்வதற்காகவும்தான் (ஏற்பட்டன). “வாருங்கள், இறைவழியில் போர்புரியுங்கள்; அல்லது குறைந்த பட்சம் (உங்களின் நகரத்தையாவது) தற்காத்துக் கொள்ளுங்கள்” என்று இந்த நயவஞ்சகர்களிடம் கூறப்பட்டது. அதற்கு, “இன்று போர் நடைபெறும் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தால் நாங்களும் உங்களை நிச்சயம் பின்தொடர்ந்து வந்திருப்போம்” என்று அவர்கள் கூறினார்கள். இவ்வாறு அவர்கள் கூறிய நேரத்தில் இறைநம்பிக்கையைவிட நிராகரிப்புடன் (குஃப்ருடன்) அவர்கள் மிக நெருக்கமாய் இருந்தார்கள். தம் உள்ளங்களில் இல்லாதவற்றை நாவினால் கூறுகின்றார்கள்; மேலும், அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்திருப்பவற்றை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான். </span>
<span>3:168 இவர்கள் எத்தகையவர்களென்றால், தாம் போரில் கலந்து கொள்ளாததுடன் (அதில் பங்கு பெற்று கொல்லப்பட்ட தம் சகோதரர்களைப் பற்றி) “அவர்கள் எங்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டிருந்தால், கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்றும் கூறினார்கள். (நபியே!) நீர் அவர்களிடம் கூறும்: “நீங்கள் வாய்மையுடையோராயின், மரணம் வரும்போது உங்களை விட்டு அதனைத் தடுத்து விடுங்கள் பார்ப்போம்!”</span>
<span>3:169 இறைவழியில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்களாக ஒருபோதும் கருதாதீர்! உண்மையில் அவர்கள் உயிரோடு இருக்கின்றார்கள். அவர்கள் தம் இறைவனிடமிருந்து தங்களுக்குத் தேவையான வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். </span>
<span>3:170 அல்லாஹ் தனது அருளிலிருந்து அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றார்கள். தங்களுக்குப் பின் உலகில் வாழ்ந்து வருகின்ற இன்னும் தங்களுடன் வந்து சேராமல் இருக்கின்ற இறைநம்பிக்கையாளர்கள் குறித்து, அவர்களுக்கு எத்தகைய அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள் என்று இவர்கள் மனநிறைவு பெறுகின்றார்கள். </span>
<span>3:171 அல்லாஹ் அளித்த கொடையினாலும், அருளினாலும் அவர்கள் அகமகிழ்வுடன் இருக்கின்றார்கள். இறைநம்பிக்கை கொண்டோரின் நற்கூலி வீணாகி விடுவதில்லை என்பது அவர்களுக்குத் தெரிந்து விட்டிருக்கிறது. </span>
<span>3:172 (அவர்கள் எத்தகைய நம்பிக்கையாளர்கள் என்றால்) அவர்கள் (போரில்) தமக்குக் காயங்கள் ஏற்பட்ட பின்னரும் அல்லாஹ்வு(டைய அழைப்பு)க்கும் தூதரு(டைய அழைப்பு)க்கும் மறுமொழியளித்தார்கள். அவர்களில் யார் நற்செயல் புரிந்து பாவங்களிலிருந்து விலகி வாழ்கின்றார்களோ அவர்களுக்கு மாபெரும் கூலியுண்டு. </span>
<span>3:173 “உங்களுக்கு எதிராகப் பகைவர்கள் (பெரும்படையாகத்) திரண்டிருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு அஞ்சுங்கள்!” என்று மக்கள் அவர்களிடம் கூறினார்கள். அதனைக் கேட்டு அவர்களின் இறைநம்பிக்கை இன்னும் அதிகமாகிவிட்டது. அதுமட்டுமல்ல, “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். அவனே சிறந்த பாதுகாவலன்” என்றும் கூறினார்கள். </span>
<span>3:174 இறுதியில் அவர்கள் அல்லாஹ்வின் பெருங் கொடைகளையும் அருளையும் பெற்றுத் திரும்பினார்கள். அவர்களுக்கு எத்தகைய தீங்கும் ஏற்படவில்லை. இன்னும் அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தின்படி நடந்தார்கள் (எனும் சிறப்பும் அவர்களுக்குக் கிடைத்தது). மேலும், அல்லாஹ் மகத்தான கொடையாளனாக இருக்கின்றான். </span>
<span>3:175 தன் நண்பர்களைக் கொண்டு உங்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஷைத்தானே அவ்வாறு கூறியவன் (என்பது இப்போது உங்களுக்குப் புரிந்துவிட்டது). எனவே நீங்கள் உண்மையிலேயே இறைநம்பிக்கையுடையோராயின் (இனி) அம்மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்!</span>
<span>3:176 (நபியே! இன்று) இறைநிராகரிப்பின் வழியில் மும்முரமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்(களின் நடவடிக்கை)கள் உம்மைத் துயரத்தில் ஆழ்த்திட வேண்டாம். நிச்சயமாக அவர்களால் அல்லாஹ்வுக்குச் சிறிதும் தீங்கு விளைவித்திட முடியாது. அவர்களுக்கு மறுமையில் எத்தகைய நற்பேறும் கிடைக்கக்கூடாது என்பது அல்லாஹ்வின் நாட்டமாகும். இறுதியில் அவர்களுக்கு மிகப்பெரும் தண்டனையும் கிடைக்கும். </span>
<span>3:177 எவர்கள் இறைநம்பிக்கைக்குப் பதிலாக நிராகரிப்பை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ அவர்களால் அல்லாஹ்வுக்கு எத்தகைய தீங்கினையும் திண்ணமாக ஏற்படுத்திட முடியாது. துன்புறுத்தும் வேதனைதான் அவர்களுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது. </span>
<span>3:178 இவ்வாறு அவர்களை நாம் (உடனடியாகத் தண்டிக்காமல்) விட்டு வைப்பது தங்களுக்கு நன்மையாகும் என நிராகரிப்பவர்கள் எண்ணிவிட வேண்டாம்! அவர்களை நாம் விட்டு வைப்பதெல்லாம் பாவச் சுமையை அவர்கள் அதிகமாக்கிக் கொள்ளட்டும் என்பதற்காகத்தான்! பின்னர் அவர்களுக்கு இழிவு மிக்க வேதனை இருக்கிறது. </span>
<span>3:179 இப்பொழுது நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ, அதே நிலையில் அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களை ஒருபோதும் வைத்திருக்க மாட்டான். தூய்மையானவர்களை தூய்மையற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியே தீருவான். மேலும், மறைவானவற்றை உங்களுக்கு அறிவிப்பது அல்லாஹ்வின் நியதியல்ல. எனினும் (அவற்றை அறிவித்துக் கொடுப்பதற்காக) தன்னுடைய தூதர்களில் தான் நாடுகின்றவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுக்கின்றான். எனவே (மறைவானவற்றில்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்புங்கள்! நீங்கள் இறைநம்பிக்கை கொண்டு இறையச்சத்தோடும் வாழ்வீர்களாயின் உங்களுக்கு மகத்தான கூலி இருக்கிறது. </span>
<span>3:180 அல்லாஹ் தனது அருளிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் எவர்கள் கஞ்சத்தனம் புரிகின்றார்களோ அவர்கள் அதனைத் தமக்கு நல்லது என எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு மிகவும் கெட்டதாகும். தமது கஞ்சத்தனத்தின் மூலம் அவர்கள் சேமித்து வைத்தவை எல்லாம் மறுமைநாளில் அவர்களின் கழுத்தில் விலங்காகப் பூட்டப்படும். வானங்களும், பூமியும் அல்லாஹ்வுக்கே உரித்தானவையாய் இருக்கின்றன. மேலும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான். </span>
<span>3:181 “அல்லாஹ் வறியவன்; நாங்கள் செல்வந்தர்கள்!” என்று கூறியவர்களின் சொல்லை நிச்சயமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான். இவ்வாறு அவர்கள் கூறியதை நாம் பதிவு செய்கின்றோம். (இதற்கு முன்) தூதர்களை நியாயமின்றி அவர்கள் கொலை செய்து வந்ததும் செயலேட்டில் பதிக்கப்பட்டுள்ளது. மேலும், (தீர்ப்புக் கூறும் நேரம் வரும்போது) நாம் அவர்களிடம் கூறுவோம்: “இதோ, சுட்டுப் பொசுக்கும் நரக வேதனையை இப்பொழுது சுவையுங்கள்!” </span>
<span>3:182 இது உங்கள் கைகள் சம்பாதித்ததுதான்! நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய அடிமைகள்மீது கொடுமை புரிபவன் அல்லன். </span>
<span>3:183 “(திடீரென்று வரும்) நெருப்பு கரித்து விடுகின்ற வண்ணம் ஒரு குர்பானியை (பலியை) எங்கள் கண்ணெதிரே கொண்டு வரும் வரை எந்த ஒருவரையும் இறைத்தூதராக ஏற்றுக்கொள்ள வேண்டாமென்று திண்ணமாக அல்லாஹ் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான்” என்று சொன்னவர்களிடம் (நபியே!) நீர் கூறும்: “நிச்சயமாக எனக்கு முன்பு உங்களிடையே தூதர்கள் பலர் தெளிவான பல சான்றுகளுடன் வந்திருந்தனர். (ஏன்) நீங்கள் இப்பொழுது குறிப்பிடுகின்ற சான்றினையும் கூட அவர்கள் கொண்டு வந்தனர். (இறைநம்பிக்கை கொள்வதற்கு இதனை ஒரு நிபந்தனையாய்க் கூறுவதில்) நீங்கள் உண்மையாளர்களாயிருந்தால், பிறகு அத்தகைய தூதர்களை ஏன் கொலை செய்தீர்கள்?” </span>
<span>3:184 (முஹம்மதே! இப்போது) இவர்கள் உம்மைப் பொய்யர் எனக் கூறுகின்றார்கள். ஆனால், உமக்கு முன் தெள்ளத் தெளிவான சான்றுகளையும் ஆகமங்களையும், ஒளியூட்டும் வேதங்களையும் கொணர்ந்த தூதர்களில் பலரும் பொய்யர்கள் எனக் கூறப்பட்டனர். </span>
<span>3:185 ஆக ஒவ்வொரு மனிதனும் மரணத்தைச் சுவைக்க வேண்டியவனாய் இருக்கின்றான். நீங்கள் அனைவரும் உங்களுடைய கூலியை மறுமைநாளன்றுதான் முழுமையாகப் பெறுவீர்கள். (அங்கு) எவன் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட்டு, சுவனத்தில் நுழைவிக்கப் படுகின்றானோ அவனே உண்மையில் வெற்றி பெற்றவன் ஆவான்! இவ்வுலக வாழ்வென்பது ஏமாற்றக்கூடிய அற்ப இன்பமேயன்றி வேறில்லை!</span>
<span>3:186 (முஸ்லிம்களே!) உங்கள் உடைமைகளிலும் உயிர்களிலும் நீங்கள் நிச்சயமாக சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டவர்களிடமிருந்தும், இணைவைப்போரிடமிருந்தும் அதிகமான வேதனை தரும் பல வார்த்தைகளைத் திண்ணமாக நீங்கள் கேட்பீர்கள். (இத்தகைய நிலைமைகளில்) நீங்கள் பொறுமையும், இறையச்சமும் கொண்ட நடத்தையை வலுவாகக் கடைப்பிடித்தால் திண்ணமாக அது ஊக்கமுடைய செயலாக இருக்கும். </span>
<span>3:187 வேதம் அருளப்பட்டவர்களிடம், “வேதக் கருத்துகளை மக்களிடையே நீங்கள் பரப்பிட வேண்டும்; அவற்றை மறைத்து வைக்கக் கூடாது” என்று அல்லாஹ் வாக்குறுதி வாங்கியதை நீர் அவர்களுக்கு நினைவூட்டுவீராக! எனினும் அவர்கள் வேதத்தைத் தம் முதுகுக்குப் பின்னே எறிந்து விட்டார்கள்! மேலும் அதனை அற்ப ஆதாயத்திற்காக விற்று விட்டார்கள். அவர்களுடைய கொடுக்கல் வாங்கல் எத்துணைத் தரங்கெட்டது! </span>
<span>3:188 தாம் செய்கின்ற இழிசெயல்களைக் குறித்து மகிழ்ந்திருப்பவர்கள் செய்யாத செயல்களுக்காகத் தாம் பாராட்டப்பட வேண்டுமென்று விரும்புகின்றவர்கள் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டவர்கள் என்று ஒருபோதும் நீர் கருதிவிட வேண்டாம். (உண்மையில்) அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது. </span>
<span>3:189 வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. மேலும், அவனுடைய பேராற்றல் யாவற்றையும் உள்ளடக்கியுள்ளது!</span>
<span>3:190 திண்ணமாக வானங்கள், பூமி ஆகியவற்றின் ஒழுங்கமைப்பிலும், இரவுபகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன. </span>
<span>3:191 அவர்கள் எத்தகையவர்கள் எனில் நிற்கும்போதும், உட்காரும்போதும், படுத்திருக்கும்போதும் ஆக எல்லா நிலைகளிலும், அல்லாஹ்வை நினைக்கின்றார்கள்; மேலும், வானங்கள் மற்றும் பூமியின் அமைப்பைக் குறித்துச் சிந்திக்கின்றார்கள். (பிறகு அவர்கள் உணர்ச்சி பொங்க இப்படிப் பிரார்த்திக்கின்றார்கள்:) “எங்கள் இறைவனே! இவையனைத்தையும் நீ வீணாக (யாதொரு நோக்கமுமின்றிப்) படைக்கவில்லை. (வீணான செயல்களை விட்டு) நீ தூய்மையானவன். எனவே, நரக வேதனையிலிருந்து நீ எங்களைக் காப்பாற்றுவாயாக! </span>
<span>3:192 எங்கள் இறைவனே! நீ யாரை நரகத்தில் புகுத்தினாயோ, அவனை நீ உண்மையில் மிகக் கேவலப்படுத்திவிட்டாய். மேலும் இப்படிப்பட்ட அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர். </span>
<span>3:193 எங்கள் அதிபதியே! இறைநம்பிக்கையின் பக்கம் அழைக்கக் கூடிய ஒருவரின் அழைப்பினை நாங்கள் செவியேற்றோம். ‘உங்கள் இறைவனை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று அவர் கூறினார். நாங்கள் ஏற்றுக்கொண்டோம். எனவே, “எங்கள் அதிபதியே! எங்கள் குற்றங்குறைகளை மன்னித்து அருள்வாயாக! எங்களிடம் உள்ள தீமைகளை அகற்றுவாயாக! மேலும், எங்களை நல்லவர்களுடன் மரணிக்கச் செய்வாயாக! </span>
<span>3:194 எங்கள் இறைவா! மேலும், தூதர்களின் வாயிலாக நீ அளித்த வாக்குறுதிகளை எங்களுக்கு நிறைவேற்றித் தந்தருள்வாயாக! மேலும், மறுமைநாளில் எங்களைக் கேவலப்படுத்தி விடாதே! திண்ணமாக, நீ வாக்குறுதி மீறாதவன் ஆவாய்!”</span>
<span>3:195 அவர்களுடைய அதிபதி அவர்களுக்கு இவ்வாறு மறுமொழி கூறினான்: “உங்களில் எவருடைய நற்செயலையும் நான் வீணாக்கவே மாட்டேன் அவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி! நீங்கள் ஒருவர் மற்றவரிலிருந்து தோன்றிய (ஒரே இனத்த)வர்களே! எனவே (எனக்காக) நாட்டைத் துறந்தவர்கள், மேலும் என் வழியில் தம் இல்லங்களை விட்டு வெளியேற்றப்பட்டு துன்பத்திற்குள்ளாக்கப்பட்டவர்கள், இன்னும் (எனக்காக) போர் புரிந்தவர்கள், கொல்லப்பட்டவர்கள் ஆகியோரின் குற்றங்குறைகளையும் நான் மன்னிப்பேன். இன்னும் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களில் திண்ணமாக அவர்களை நுழைவிப்பேன். இது, அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் நற்கூலியாகும். மேலும் அழகிய நற்கூலி அல்லாஹ்விடமேயுள்ளது. </span>
<span>3:196 உலகின் பல பகுதிகளில் (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவர்களின் நடமாட்டம் உம்மை ஒருபோதும் ஏமாற்றத்தில் ஆழ்த்திட வேண்டாம். </span>
<span>3:197 இது (சில நாள் வாழ்க்கையின்) அற்ப இன்பம்தான். பிறகு அவர்கள் சேருமிடம் நரகமேயாகும். எத்துணை இழிவான தங்குமிடம் அது! </span>
<span>3:198 இதற்கு மாறாக எவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சிய வண்ணம் வாழ்ந்து வருகின்றார்களோ அவர்களுக்கு, கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். இது அல்லாஹ்விடமிருந்து அளிக்கப்படும் மிகச் சிறந்த உபசரிப்பாகும். மேலும், நல்லவர்களுக்கு அல்லாஹ்விடம் இருப்பவையே மிகவும் சிறந்தவையாகும். </span>
<span>3:199 திண்ணமாக, வேதம் அருளப்பட்டவர்களில் இப்படிச் சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் அல்லாஹ்வையும், உம்மீது இறக்கியருளப்பட்டதையும், (முன்னர்) தங்கள் மீது இறக்கியருளப்பட்டதையும் நம்புகிறார்கள். அல்லாஹ்வின் திருமுன் பணிந்த வண்ணமிருக்கின்றார்கள். மேலும் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்பதில்லை. அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. திண்ணமாக, அல்லாஹ் கணக்கு வாங்குவதில் விரைவானவனாக இருக்கின்றான். </span>
<span>3:200 இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையை கைக்கொள்வீர்களாக! சத்தியவாதிகளுக்கு எதிரில் உறுதியாக நிலைத்து நிற்பீர்களாக! (சத்தியத்திற்காக தொண்டு புரிய) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருப்பீர்களாக! மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சியே வாழ்வீர்களாக! (இதனால்) நீங்கள் வெற்றியாளர்களாய்த் திகழக்கூடும்!</span>
</div><div>
<span>அன்னிஸா</span>
<span>4:1 மனிதர்களே, உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். </span>
<span>4:2 அநாதைகளுக்கு அவர்களுடைய உடைமைகளைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்! நல்ல பொருளுக்குப் பதிலாக தீய பொருளை மாற்றாதீர்கள்; மேலும், அவர்களின் பொருள்களை உங்களின் பொருள்களோடு கலந்து உண்ணாதீர்கள்; திண்ணமாக இது பெரும் பாவமாகும். </span>
<span>4:3 அநாதைகளுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள்; அல்லது உங்கள் கைகள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருப்பதற்கு இதுவே மிக நெருக்கமானதாகும். </span>
<span>4:4 மேலும், பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹ்ரை (கடமையெனக் கருதி) மனமுவந்து அளித்துவிடுங்கள்! ஆயினும், அந்த மஹ்ரிலிருந்து ஒரு பாகத்தை அவர்கள் உங்களுக்கு மனமுவந்து விட்டுக் கொடுத்தால், அதனை நீங்கள் தயக்கமின்றி அனுபவிக்கலாம். </span>
<span>4:5 மேலும், உங்களுடைய வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள பொருள்களை விவரமறியாதவர்(களாய் உள்ள அநாதை)களிடம் ஒப்படைக்காதீர்கள்; ஆனால், அப்பொருள்களிலிருந்து அவர்களுக்கு உண்ணவும், உடுக்கவும் அளியுங்கள்! மேலும் அவர்களுக்கு நல்ல விஷயங்களை அறிவுறுத்துங்கள்!</span>
<span>4:6 மேலும், அநாதைகளை அவர்கள் திருமணப் பருவத்தை அடையும் வரை சோதித்து வாருங்கள்! அவர்களிடம் (பகுத்துணரும்) தகுதியை நீங்கள் கண்டால், அவர்களுக்குரிய உடைமைகளை அவர்களிடமே ஒப்படைத்து விடுங்கள். அவர்கள் பெரியவர்களாகி(த் தங்களின் உரிமைகளைக் கேட்டு)விடுவார்களென அஞ்சி அந்த உடைமைகளை நீதிக்குப் புறம்பாக, வீண் விரயமாக, அவசரமாக விழுங்கி விடாதீர்கள்! அநாதைகளைப் பராமரிப்பவர் செல்வந்தராக இருந்தால், அவர் அநாதைகளின் சொத்துக்களிலிருந்து உண்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவோடு உண்ணலாம். அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அதற்குச் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் கணக்கு கேட்பதற்கு அல்லாஹ் போதுமானவன். </span>
<span>4:7 (மரணமடைந்த) தாய், தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்குப் பங்குண்டு. (அது போல) தாய், தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு; அச்சொத்துக் குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தாலும் சரியே! இந்தப் பங்கு அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்டதாகும். </span>
<span>4:8 மேலும், பங்கீடு செய்யும்போது (வாரிசு அல்லாத) உறவினர்களோ, அநாதைகளோ, வறியவர்களோ வந்தால் அச்சொத்திலிருந்து அவர்களுக்கும் சிறிது வழங்குங்கள்! மேலும், அவர்களிடம் கனிவாகப் பேசுங்கள்!</span>
<span>4:9 மக்கள் தங்களுக்குப் பின்னால் ஒன்றுக்கும் இயலாத குழந்தைகளை விட்டுவிட்டு மரணமடைய நேரிட்டால், அப்பொழுது தம் குழந்தைகள் குறித்து எந்த அச்சங்களுக்கு அவர்கள் ஆளாவார்களோ அதனைக் கருத்தில் கொண்டு (இவர்கள் விஷயத்திலும் இப்பொழுது) அவர்கள் அஞ்சிக் கொள்ளட்டும்; எனவே அவர்கள் அல்லாஹ்வுக்கு பயந்து வாழட்டும்; மேலும் நேர்மையான வார்த்தைகளையே பேசட்டும்! </span>
<span>4:10 அநாதைகளின் சொத்துகளை யார் அநியாயமாக உண்கிறார்களோ, அவர்கள் உண்மையில் தங்கள் வயிறுகளில் நெருப்பைத்தான் நிரப்பிக் கொள்கிறார்கள். மேலும், அதிவிரைவில் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பில் வீசி எறியப்படுவார்கள். </span>
<span>4:11 உங்களுடைய பிள்ளைகள் குறித்து அல்லாஹ் உங்களுக்கு இவ்வாறு ஏவுகின்றான்: ஓர் ஆணின் பங்கு இரு பெண்களின் பங்கிற்குச் சமமானது. (இறந்து போனவருக்கு) இரண்டுக்கு மேற்பட்ட பெண் மக்கள் இருந்தால், இறந்தவர் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரு பங்கு அவர்களுக்குரியதாகும். மேலும், ஒரு மகள் மட்டும் இருந்தால் (சொத்தில்) பாதி அவளுக்குரியதாகும். இறந்துபோனவருக்குக் குழந்தைகள் இருப்பின், அவருடைய பெற்றோரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கு உண்டு. மேலும், அவருக்குக் குழந்தைகள் இல்லாமல் பெற்றோர் மட்டுமே வாரிசுகளாக இருப்பின், தாய்க்கு மூன்றில் ஒரு பங்கு அளிக்கப்பட வேண்டும்; அவருக்கு சகோதர சகோதரிகளுமிருந்தால் தாய் ஆறிலொரு பங்கிற்கு உரிமை பெறுவாள். இறந்து போனவர் செய்த வஸிய்யத் (மரண சாசனம்) நிறைவேற்றப்பட்ட பின்பும், (அவர் மீதுள்ள) கடன் அடைக்கப்பட்ட பின்பும்தான் (சொத்துக்கள் பங்கீடு செய்யப்பட வேண்டும்). உங்களுடைய பெற்றோர்களிலும், உங்களுடைய பிள்ளைகளிலும் உங்களுக்கு நன்மை செய்வதில் யார் மிக நெருக்கமாக இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். (இப்பங்குகளை) அல்லாஹ்வே நிர்ணயம் செய்துள்ளான். திண்ணமாக, அல்லாஹ் (எல்லா உண்மை நிலைகளையும்) நன்கறிந்தவனாகவும் (பயன்களை) நன்கு புரிந்தவனாகவும் இருக்கின்றான். </span>
<span>4:12 மேலும் (மரணமடைந்த) உங்களுடைய மனைவியர் விட்டுச் சென்ற சொத்தில், அவர்களுக்குக் குழந்தைகள் இல்லையெனில் பாதிப்பங்கு உங்களுக்குரியது; அவர்களுக்குக் குழந்தைகள் இருந்தால், அவர்கள் விட்டுச் சென்ற சொத்தில் நான்கில் ஒரு பாகம் உங்களுக்குரியது. அவர்கள் செய்த மரண சாஸனம் நிறைவேற்றப்பட்ட பிறகும், அவர்கள் விட்டுச் சென்ற கடன் அடைக்கப்பட்ட பிறகும்தான் (அந்தப் பங்கு உங்களுக்கு உரியதாகும்). உங்களுக்குக் குழந்தைகள் இல்லையானால், நீங்கள் விட்டுச் சென்ற சொத்தில் நான்கில் ஒரு பாகம் மனைவியர்க்குரியது; ஆனால், உங்களுக்குக் குழந்தைகள் இருந்தால் நீங்கள் விட்டுச் சென்ற சொத்திலிருந்து எட்டில் ஒரு பாகம் அவர்களுக்குரியதாகும். நீங்கள் செய்கின்ற வஸிய்யத் மரண சாசனம் நிறைவேற்றப்பட்ட பிறகும் உங்களுடைய கடன் அடைக்கப்பட்ட பிறகும்தான் (அந்தப் பங்கு அவர்களுக்குரியதாகும்). தாய்தந்தையரும் பிள்ளைகளும் இல்லாத (நிலையில், இறந்து போன) ஓர் ஆண் அல்லது ஒரு பெண்ணுடைய சொத்து பங்கிடப்பட வேண்டியிருந்தால், அவருக்கு ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி மட்டும் இருப்பின் அந்தச் சகோதரர் அல்லது சகோதரிக்கு ஆறில் ஒரு பாகம் கிட்டும். உடன்பிறப்புகள் ஒருவருக்கு மேற்பட்டவர்களாயிருந்தால் முழுச் சொத்தில் மூன்றில் ஒரு பாகத்தில் அவர்கள் எல்லோரும் பங்கு பெறுவார்கள். ஆனால், இது இறந்து போனவர் செய்திருந்த வஸிய்யத் மரண சாஸனம் நிறைவேற்றப்பட்ட பின்பும் (அவருடைய) கடன் அடைக்கப்பட்ட பின்பும்தான் (அந்தப் பங்கை அவர்கள் பெறுவார்கள். ஆனால் ஒரு நிபந்தனை:) அந்த மரண சாஸனம் யாருக்கும் கேடு விளைவிக்காத வகையில் அமைந்திருக்க வேண்டும். இது அல்லாஹ் இட்ட கட்டளையாகும். அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், மென்மையான இயல்புடையவனாகவும் இருக்கின்றான். </span>
<span>4:13 இவை அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட வரம்புகளாகும். எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப் படிகின்றார்களோ அவர்களை கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனப் பூங்காக்களில் அவன் நுழையவைப்பான். அவற்றில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும். </span>
<span>4:14 மேலும், எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிய மறுத்து அவனுடைய வரம்புகளை மீறுகின்றார்களோ, அவர்களை அல்லாஹ் நரகத்தில் தள்ளுவான்! அதில் அவர்கள் நிலையாக விழுந்து கிடப்பார்கள். அவர்களுக்கு (அங்கு) இழிவுபடுத்தும் தண்டனையும் இருக்கிறது. </span>
<span>4:15 உங்களுடைய பெண்களில் எவர்கள் மானக்கேடான செயல்புரிந்துவிடுகின்றார்களோ, அவர்களின் மீது குற்றத்தை நிரூபிக்க உங்களிலிருந்து நால்வரைச் சாட்சியாகக் கொண்டு வாருங்கள். அவர்கள் சாட்சியமளித்துவிட்டால், அப்பெண்களுக்கு மரணம் வரும் வரை அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஏதேனுமொரு தீர்ப்பை வழங்கும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்! </span>
<span>4:16 அதே செயலை உங்களில் இருவர் செய்துவிட்டால், அவ்விருவருக்கும் தண்டனை அளியுங்கள். பிறகு அவ்விருவரும் பாவ மன்னிப்புத் தேடித் தம்மைத் திருத்திக் கொண்டார்களாயின் அவர்களை விட்டுவிடுங்கள்! திண்ணமாக, அல்லாஹ் பாவ மன்னிப்புக் கோருதலை ஏற்றுக்கொள்ளக் கூடியவனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான். </span>
<span>4:17 நன்கு அறிந்து கொள்ளுங்கள்: அறியாமையின் காரணமாக, ஏதேனும் பாவச் செயலைச் செய்துவிட்டாலும் உடனடியாக எவர்கள் பாவமன்னிப்புக் கோருகின்றார்களோ அவர்களின் பாவ மன்னிப்பை ஏற்றுக்கொள்வதே அல்லாஹ்வின் பொறுப்பாகும். ஆகவே அத்தகையோரை நோக்கி அல்லாஹ் தன் கருணைப் பார்வையை மீண்டும் திருப்புகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவுடையவனாகவும் இருக்கின்றான். </span>
<span>4:18 எவர்கள் தீய செயல்கள் புரிந்தவாறு இருந்து மரணம் நெருங்கும்போது ‘நான் இப்போது மன்னிப்புக் கோருகின்றேன்’ என்று கூறுகின்றார்களோ அவர்களுக்குப் பாவமன்னிப்புக் கிடையாது. மேலும் இறுதி மூச்சுவரை நிராகரிப்பிலேயே மூழ்கியிருப்பவர்களுக்கும் பாவமன்னிப்புக் கிடையாது. இத்தகையோருக்குத் துன்புறுத்தும் தண்டனையை நாம் தயார் செய்து வைத்துள்ளோம். </span>
<span>4:19 இறைநம்பிக்கை கொண்டவர்களே! விதவைப் பெண்களுக்கு பலவந்தமான வாரிசுதாரர்களாய் நீங்கள் திகழ்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல! மேலும், அவர்களுக்கு நீங்கள் அளித்த மஹ்ரின் ஒரு பகுதியைப் பறித்துக் கொள்வதற்காக அவர்களைக் கஷ்டப்படுத்துவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல; அவர்கள் ஏதேனும் வெளிப்படையான இழிசெயலைச் செய்தாலேயன்றி! அவர்களோடு நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். அவர்களுடன் சேர்ந்து வாழ நீங்கள் விரும்பாவிட்டாலும் பொறுமையைக் கைக்கொள்ளுங்கள். ஏனெனில், ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் அல்லாஹ் அதில் பல நன்மைகளை வைத்திருக்கக் கூடும். </span>
<span>4:20 நீங்கள் ஒரு மனைவிக்குப் பதிலாக வேறு ஒருத்தியை மனைவியாகக் கொண்டு வர நாடினால் நீங்கள் அவளுக்கு பணக்குவியலையே (மஹ்ராக) கொடுத்திருந்தாலும் கூட, அதிலிருந்து கொஞ்சம் கூட திரும்பப் பெறாதீர்கள். நீங்கள் அவதூறு கூறியும், வெளிப்படையாக கொடுமை இழைத்தும் அதனைத் திரும்பப் பெறுவீர்களா? </span>
<span>4:21 சந்தேகமின்றி நீங்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து இன்பம் துய்த்திருக்கின்றீர்களே! மேலும் அந்த மனைவியர் உங்களிடமிருந்து உறுதியான ஒப்பந்தத்தையும் பெற்றிருக்கின்றார்களே! (அவ்வாறிருக்க) அப்பொருளை அவர்களிடமிருந்து எவ்வாறு திரும்பப் பெற முடியும்? </span>
<span>4:22 மேலும், உங்கள் தந்தையர் மணமுடித்திருந்த பெண்களை நீங்கள் ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளாதீர்கள்! முன்னால் நடந்தது நடந்துவிட்டது. உண்மையில் இது ஒரு மானக்கேடான, வெறுக்கத்தக்க செயலாகும். கீழ்த்தரமான நடத்தையுமாகும். </span>
<span>4:23 (பின்வரும் பெண்களை மணம் புரிவது) உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது: உங்கள் தாய்மார்கள், உங்கள் புதல்விகள், உங்கள் சகோதரிகள் மற்றும் உங்கள் தந்தையின் உடன்பிறந்த சகோதரிகள், உங்கள் அன்னையின் உடன் பிறந்த சகோதரிகள்; மேலும் சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள்; மேலும், உங்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாய்மார்கள், மேலும், உங்கள் பால்குடிச் சகோதரிகள், மேலும் உங்கள் மனைவியரின் தாய்மார்கள், நீங்கள் உடலுறவு கொண்ட மனைவியர் (தம் முன்னாள் கணவர் மூலம்) பெற்றெடுத்து, உங்கள் மடிகளில் வளர்ந்துள்ள புதல்விகள், ஆனால் (திருமணம் ஆகி) நீங்கள் அம்மனைவியருடன் உடலுறவு கொள்ளவில்லையாயின் (அவர்களை விடுத்து, அவர்களின் புதல்விகளை மணமுடித்துக் கொள்வதில்) உங்கள் மீது எத்தகையக் குற்றமும் இல்லை. மேலும் உங்கள் முதுகுத் தண்டுகளிலிருந்து பிறந்த உங்கள் புதல்வர்களின் மனைவியரை மணம் புரிவதும், இரு சகோதரிகளை நீங்கள் ஒருசேர மனைவிய ராக்குவதும் (தடை செய்யப்பட்டுள்ளன.) ஆனால் முன்னால் நடந்தது நடந்துவிட்டது. திண்ணமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>4:24 மேலும், பிறருக்கு மனைவியராக இருக்கின்றவர்களும் (உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் போரில்) உங்கள் கைவசம் வந்துவிட்ட பெண்கள் விதிவிலக்கானவர்கள். இது இறைச் சட்டமாகும். இதைப் பின்பற்றுவது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர மற்றப் பெண்களை உங்கள் செல்வத்தின் வாயிலாக (மஹ்ர் கொடுத்து) அடைந்து கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது; (ஆனால் இந்த நிபந்தனையுடன்:) திருமண வரையறைக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டு வந்துவிட வேண்டும். அவ்வாறு செய்யாமல் அவர்களுடன் நீங்கள் தகாத உறவில் ஈடுபடக்கூடாது. நீங்கள் அவர்களிடம் அனுபவித்த இன்ப சுகத்திற்குப் பதிலாக அவர்களின் மஹ்ரை கடமை என உணர்ந்து அதனைக் கட்டாயம் அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! ஆயினும் மஹ்ரை நிர்ணயம் செய்த பின்பு ஒருவருக்கொருவர் மனநிறைவோடு நீங்கள் ஏதேனும் உடன்பாடு செய்துகொண்டால் உங்கள் மீது தவறேதுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>4:25 மேலும், ஈமான் இறைநம்பிக்கை கொண்ட அடிமைகளல்லாத பெண்களைத் திருமணம் செய்து கொள்ள உங்களில் எவர் வசதி வாய்ப்புப் பெறவில்லையோ அவர் உங்கள் ஆதிக்கத்தில் இருக்கின்ற இறைநம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளட்டும்! அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை நன்கறியக்கூடியவன். நீங்கள் ஒருவர் இன்னொருவரிலிருந்து தோன்றியிருக்கிறீர்கள். எனவே அவ்வடிமைப் பெண்களை, அவர்களைப் பராமரிப்போரின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ளுங்கள்! மேலும் அவர்களுக்குரிய மஹ்ரை நல்ல முறையில் அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அப்பெண்கள் திருமண வரையறைக்கு உட்பட்டவர்களாகவும், தகாத உறவில் ஈடுபடாதவர்களாகவும், மற்றும் கள்ளக் காதலர்களை வைத்துக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக (இந்த வரையறைகள் வழங்கப்பட்டுள்ளன!) மேலும் அவ்வடிமைப் பெண்கள் திருமண வரம்புக்குள் கொண்டுவரப்பட்ட பிறகு ஒழுக்கக்கேடான செயல் எதனையும் செய்து விட்டால் அடிமைகளல்லாத பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதி அவர்களுக்கு உண்டு. திருமணம் முடிக்காத காரணத்தால் இறையச்சமுடைய வாழ்விலிருந்து பிறழ்ந்து விடுவோமோ என்ற அச்சமுடையவர்க்கே (அடிமைப் பெண்களை மணந்து கொள்ளலாம் எனும்) இந்தச் சலுகை அளிக்கப்படுகிறது. ஆயினும், நீங்கள் பொறுமையை மேற்கொள்வதே உங்களுக்குச் சிறந்ததாகும். மேலும் அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் கருணை பொழிபவனும் ஆவான். </span>
<span>4:26 உங்களுக்கு முன்சென்ற உத்தமர்களின் வழிமுறைகளை உங்களுக்கு விளக்கிடவும், அவ்வழிகளிலே உங்களை நடத்திச் செல்லவும் அல்லாஹ் விரும்புகின்றான் அவன் உங்கள் பக்கம் தன் கருணைப் பார்வையைத் திருப்ப நாட்டம் கொண்டுள்ளான். மேலும், அல்லாஹ் நன்கறிபவனாகவும், நுண்ணறிவு மிக்கவனாகவும் இருக்கின்றான். </span>
<span>4:27 ஆம்! அல்லாஹ் உங்கள் பக்கம் தன் கருணைப் பார்வையைத் திருப்பவே விரும்புகிறான். ஆனால், தம் மன இச்சைகளைப் பின்பற்றிக் கொண்டிருப்பவர்களோ நேரிய வழியிலிருந்து நீங்கள் வெகுதூரம் விலகிச் சென்றிட வேண்டும் என்று விரும்புகின்றார்கள். </span>
<span>4:28 அல்லாஹ் உங்கள் மீதுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்த விரும்புகின்றான். ஏனென்றால், மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான். </span>
<span>4:29 நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவர் மற்றொரு வரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! (பொருளீட்டுவதற்கு) உங்களுக்கிடையே பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையில் கொடுக்கல்வாங்கல் இருக்க வேண்டும். உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ள வேண்டாம். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்கள்மீது அளப்பரிய கருணை புரிபவனாக இருக்கின்றான். </span>
<span>4:30 எவன் வரம்பு மீறியும் அநீதியாகவும் இவ்வாறு செய்கின்றானோ அவனை நாம் நெருப்பில் வீசியே தீருவோம்! மேலும், இது அல்லாஹ்வுக்கு இலகுவானதாக உள்ளது. </span>
<span>4:31 உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ள பெரும் பாவங்களைத் தவிர்த்து வந்தீர்களானால் உங்களுடைய சின்னஞ்சிறு தவறுகளை உங்கள் கணக்கிலிருந்து நாம் நீக்கி விடுவோம்; மேலும் உங்களை கண்ணியமான இடத்தில் நுழைய வைப்போம். </span>
<span>4:32 அல்லாஹ் உங்களில் சிலருக்கு சிலரைவிட எதனைக் கொண்டு சிறப்பளித்திருக்கின்றானோ அதனை அடைய நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததற்கேற்ப பங்கு உண்டு. மேலும், பெண்களுக்கு அவர்கள் சம்பாதித் ததற்கேற்ப பங்கு உண்டு. இருப்பினும் அல்லாஹ்விடம் அவனுடைய அருளைக் கோரிய வண்ணம் இருங்கள். திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். </span>
<span>4:33 தாய் தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்துக்களிலிருந்து (பங்கு பெறுகின்ற) வாரிசுக்காரர்களை நாம் ஒவ்வொருவருக்கும் நிர்ணயித்துள்ளோம். நீங்கள் யாரோடு உடன்படிக்கை செய்துள்ளீர்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய பங்கைக் கொடுத்துவிடுங்கள்! திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான். </span>
<span>4:34 ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர். இதற்குக் காரணம் அல்லாஹ் அவர்களில் சிலருக்குச் சிலரைவிட உயர்வை அளித்திருக்கின்றான் என்பதும், ஆண்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து செலவு செய்கிறார்கள் என்பதுமாகும். எனவே ஒழுக்கமான பெண்கள் கீழ்ப்படிந்தே நடப்பார்கள். மேலும், ஆண்கள் இல்லாதபோது (அப்பெண்கள்) அல்லாஹ்வின் பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் இருக்கின்ற காரணத்தால் அவர்களின் உரிமைகளைப் பேணுவார்கள். மேலும், எந்தப் பெண்கள் குறித்து அவர்கள் (தம் கணவருக்கு)மாறு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ அந்தப் பெண்களுக்கு நல்லறிவு புகட்டுங்கள்; படுக்கைகளிலிருந்தும் அவர்களை ஒதுக்கி வையுங்கள்! மேலும் அவர்களை அடியுங்கள்! ஆனால் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்துவிட்டால், பிறகு அவர்களுக்கு எதிராகக் கை நீட்ட எந்த சாக்குபோக்குகளையும் தேடாதீர்கள்! திண்ணமாக நம்புங்கள்: அல்லாஹ் மேலே இருக்கின்றான்; அவன் உயர்வானவனும் பெரியோனுமாய் இருக்கின்றான். </span>
<span>4:35 மேலும், கணவன், மனைவிக்கிடையே உறவு முறியுமோ என நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினரிலிருந்து ஒரு நடுவரையும், மனைவியரின் உறவினரிலிருந்து மற்றொரு நடுவரையும் நியமியுங்கள். அவ்விருவரும் உறவைச் சீர்படுத்த நாடினால், அல்லாஹ்வும் அவ்விருவருக்குமிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவான். திண்ணமாக, அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான். </span>
<span>4:36 மேலும், நீங்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கே அடிபணிந்து வாழுங்கள். அவனோடு எதனையும் இணையாக்காதீர்கள். தாய் தந்தையரிடம் நல்ல விதமாக அன்புடன் நடந்து கொள்ளுங்கள்! மேலும் உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள் ஆகியோருடனும் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். மேலும் உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர், மற்றும் வழிப்போக்கர், உங்கள் கைவசத்திலுள்ள அடிமைகள் ஆகியோருடனும் நயமாக நடந்து கொள்ளுங்கள்! திண்ணமாக, அறிந்து கொள்ளுங்கள்: வீண் பெருமையிலும், கர்வத்திலும் உழல்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. </span>
<span>4:37 அவர்கள் தாமும் உலோபிகளாயிருந்து பிற மக்களையும் உலோபித்தனம் புரியுமாறு ஏவுவார்கள். மேலும், அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கியுள்ள செல்வங்களை மறைப்பார்கள். (இத்தகையவர்களையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.) இத்தகைய நன்றி கெட்ட ஈனர்களுக்கு நாம் இழிவு தரும் வேதனையைத் தயார் செய்து வைத்திருக்கின்றோம். </span>
<span>4:38 மேலும், எவர்கள் தம் பொருளை பிறர் மெச்சுவதற்காகச் செலவழிக்கின்றார்களோ, மேலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாதிருக்கின்றார்களோ அத்தகையவர்களையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. உண்மை என்னவெனில், ஷைத்தான் யாருக்குத் தோழனாகின்றானோ அவர் மிகவும் கெட்ட தோழனையே அடையப் பெற்றவராவார். </span>
<span>4:39 இவர்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ் தமக்கு அளித்தவற்றிலிருந்து செலவும் செய்தால் இவர்களுக்கு என்ன கேடு வந்துவிடப்போகிறது? (இவ்வாறு செய்திருந்தால்) இவர்கள் புரிந்த நன்மை அல்லாஹ்வைவிட்டு மறைந்துவிடாது. </span>
<span>4:40 திண்ணமாக, அல்லாஹ் எவருக்கும் அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான். அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அல்லாஹ் அதனை இரட்டிப்பாக்குகின்றான். தன்னிடமிருந்து மாபெரும் கூலியையும் வழங்குகின்றான். </span>
<span>4:41 (முஹம்மதே!) நாம் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் சாட்சியாளர் ஒருவரைக் கொண்டு வந்து, உம்மையும் இவர்கள் மீது சாட்சியாளராகக் கொண்டு வரும் வேளையில் இவர்கள் என்ன செய்வார்கள் (என்று சிந்தியுங்கள்). </span>
<span>4:42 எவர்கள் இறைத்தூதரின் சொல்லைக் கேட்காமலும், அவருக்கு மாறு செய்து கொண்டும் இருந்தார்களோ அவர்கள் பூமி பிளந்து தங்களை விழுங்கியிருக்கக் கூடாதா என அந்நாளில் ஏங்குவார்கள். அங்கு அவர்கள் (தம்முடைய) எந்தச் செய்தியையும் அல்லாஹ்விடம் மறைத்திட முடியாது. </span>
<span>4:43 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் போதையோடிருக்கும் நிலையில் தொழுகையை நெருங்காதீர்கள்; நீங்கள் என்ன கூறுகின்றீர்கள் என்பதை அறிகின்ற போதுதான் தொழ வேண்டும். மேலும், நீங்கள் பெருந்துடக்குடையவர்களாய் இருக்கும் நிலையில், குளிக்கின்ற வரை தொழுகையை நெருங்காதீர்கள்! பாதையைக் கடப்பவர்களாக இருந்தாலே தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, பயணத்திலோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் மலஜலம் கழித்துவிட்டு வந்தால் அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தால், பிறகு தண்ணீர் உங்களுக்குக் கிடைக்கவில்லையெனில் சுத்தமான மண்ணைக் கொண்டு உங்களைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். அதாவது (அதனை) உங்களின் முகங்களிலும் கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் கனிவு உடையவனாகவும், மன்னிப்பு வழங்குபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>4:44 வேதத்திலிருந்து சிறிதளவு அறிவு வழங்கப்பட்டிருப்பவர்களை நீர் பார்க்கவில்லையா? அவர்கள், வழிகேட்டினை விலைக்கு வாங்குகின்றார்கள்; நீங்களும் வழிதவறிட வேண்டும் என்று விரும்புகின்றார்கள். </span>
<span>4:45 அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிபவனாயிருக்கின்றான். மேலும் உங்களுக்கு ஆதர வளிக்கவும், உதவி செய்யவும் அல்லாஹ்வே போதுமானவன். </span>
<span>4:46 யூதர்களில் சிலர் (வேதத்தின்) சொற்களை அவற்றின் இடங்களிலிருந்து புரட்டுகின்றனர். சத்திய நெறியைப் பழித்துரைத்தவாறு தம் நாவுகளைச் சுழற்றி ‘ஸமிஃனா, வ அஸய்னா’ என்றும் ‘இஸ்மஃ கைர முஸ்மயின்’ என்றும் ‘ராயினா’ என்றும் கூறுகின்றனர், ஆனால் அவர்கள் ‘ஸமிஃனா வ அதஃனா’ என்றும் ‘இஸ்மஃ’ என்றும் ‘உன்ளுர்னா’ என்றும் கூறியிருப்பார்களேயானால் அது அவர்களுக்கு நன்மையானதாகவும், மிக நேர்மையான வழிமுறையாகவும் இருந்திருக்கும். எனினும், அவர்களின் அசத்தியப் போக்கின் காரணமாக அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்பட்டுவிட்டது. எனவே, அவர்கள் குறைவாகவே நம்பிக்கை கொள்கின்றார்கள். </span>
<span>4:47 வேதம் வழங்கப்பட்டவர்களே! (இப்போது) நாம் இறக்கி வைத்துள்ள (வேதத்)தின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். இது (முன்பு) உங்களிடம் இருந்த (வேதத்)தை மெய்ப்படுத்தக்கூடியதாய் இருக்கின்றது! நாம் முகங்களை உருக்குலைத்து அவற்றைப் பின்புறமாய்த் திருப்பி விடுவதற்கு முன்பே அல்லது அஸ்ஹாபுஸ் ஸப்த்தை சபித்தது போல நாம் சபிப்பதற்கு முன்பே! (நம்பிக்கை கொண்டு விடுங்கள்.) இன்னும் அல்லாஹ்வின் கட்டளை நிறைவேற்றப்பட்டே தீரும் (என்பதை நினைவில் வையுங்கள்.) </span>
<span>4:48 திண்ணமாக, தனக்கு இணை வைக்கப்படுவதை அல்லாஹ் மன்னிப்பதில்லை. இதைத் தவிர அனைத்துப் பாவங்களையும் தான் நாடுகின்றவர்களுக்கு மன்னித்து விடுகின்றான். அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்கள், திண்ணமாக பெரும் பொய்யைப் புனைந்தவராவர்; மேலும் பாவத்தைப் புரிந்தவராவர். </span>
<span>4:49 தம்மைத் தாமே தூய்மையானவர்கள் எனப் பெருமையடித்துக் கொள்கின்றவர்களை நீர் பார்க்கவில்லையா? உண்மை என்னவெனில், தான் நாடுகின்றவர்களையே அல்லாஹ் தூய்மையாக்குகிறான். (அவர்கள் தூய்மைப்படுத்தப்படவில்லை எனில் அதற்கு யார் பொறுப்பு?) மேலும் அவர்கள் யார் மீதும் அணுவளவும் அநீதி இழைக்கப்படமாட்டாது. </span>
<span>4:50 பாருங்கள்! இவர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைக்க சற்றும் தயங்குவதில்லையே! மேலும், வெளிப்படையான பாவியாவதற்கு இது ஒன்றே போதுமானதாகும். </span>
<span>4:51 வேதத்திலிருந்து சிறிதளவு அறிவு வழங்கப்பட்டவர்களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களோ ஜிப்தையும்*, தாஃகூத்தையும் ஏற்றுக்கொள்கின்றார்கள். மேலும் நம்பிக்கையற்றவர்களைக் குறித்து, “இவர்கள்தாம் இறை நம்பிக்கை கொண்டவர்களைவிட மிகவும் நேர்வழியிலிருக்கின்றார்கள்” என்று கூறுகிறார்கள். </span>
<span>4:52 இத்தகையோரைத்தான் அல்லாஹ் சபித்துள்ளான். மேலும், யாரை அல்லாஹ் சபித்துவிட்டானோ அத்தகையவருக்கு உதவி செய்பவர் எவரையும் நீர் காணமாட்டீர்! </span>
<span>4:53 ஆட்சி அதிகாரத்தில் இவர்களுக்கு ஏதாவது பங்குண்டா? அப்படி இருக்குமாயின் இவர்கள் மற்றவர்களுக்கு அற்பப் பொருளைக்கூட கொடுக்க மாட்டார்கள். </span>
<span>4:54 மேலும், இவர்கள் அல்லாஹ் தன் அருளினால் மக்களுக்கு வழங்கியிருப்பதைக் கண்டு அவர்கள்மீது பொறாமை கொள்கின்றார்களா? அப்படியென்றால் நாம் இப்ராஹீமின் வழித்தோன்றல்களுக்கு வேதத்தையும், நுண்ணறிவையும் கொடுத்து மாபெரும் அரசாட்சியையும் வழங்கியிருக்கிறோமே! </span>
<span>4:55 ஆனால், இவர்களில் சிலர் அதனை நம்பினார்கள்; மற்றும் சிலர் புறக்கணித்தார்கள். மேலும், (புறக்கணிப்பவர்களுக்கு) கொழுந்து விட்டெரியும் நரகமே போதுமானதாகும். </span>
<span>4:56 எவர்கள் நம் சான்றுகளை மறுக்கின்றார்களோ அவர்களை நிச்சயம் நாம் நரகில் வீசி எறிவோம்! அவர்களுடைய உடலின் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றிக் கொண்டே இருப்போம்; வேதனையை அவர்கள் நன்கு சுவைத்துக் கொண்டேயிருப்பதற்காக! திண்ணமாக அல்லாஹ் மிகையான ஆற்றல் உள்ளவனாகவும் (தன் முடிவுகளைச் செயல்படுத்தும் நுட்பத்தை) நன்கு அறிந்தவனாகவும் இருக்கின்றான். </span>
<span>4:57 மேலும் எவர்கள் நம் வசனங்களை ஏற்று நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களை கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனப் பூங்காக்களில் நுழைவிப்போம். அங்கு அவர்கள் என்றென்றும் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். அங்கு அவர்களுக்கு மிகத் தூய்மையான துணைவியர் இருப்பர். மேலும் அவர்களை நாம் அடர்ந்த நிழலில் அமரச் செய்வோம். </span>
<span>4:58 (முஸ்லிம்களே!) அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான். அமானத் அடைக்கலப் பொருள்களை அவற்றிற்குரியவர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடுங்கள்; நீங்கள் மக்களிடையே தீர்ப்பு வழங்கினால் நீதத்துடன் தீர்ப்பு வழங்குங்கள். திண்ணமாக, அல்லாஹ் உங்களுக்கு வழங்குகின்ற அறிவுரை மிக உன்னதமானதாகும். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>4:59 நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். மேலும், உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் (கீழ்ப்படியுங்கள்.) பின்னர், ஏதேனும் விவகாரத்தில் நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டால் அதனை அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் திருப்பி விடுங்கள். நீங்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொண்டோராயின் இதுதான் சரியான வழிமுறையாகும்; இறுதி விளைவின் கோணத்திலிருந்து பார்த்தாலும் இதுவே சிறந்தது. </span>
<span>4:60 (நபியே!) நீர் இவர்களைப் பார்க்கவில்லையா? “உமக்கு இறக்கியருளப்பட்ட வேதத்தையும் உமக்கு முன்னால் இறக்கியருளப்பட்ட வேதங்களையும் நாங்கள் நம்பினோம்” எனக் கூறுகின்றார்கள். எனினும், அவர்கள் தீர்ப்புக்காக தம் விவகாரங்களை தாஃகூத்திடம் கொண்டு செல்லவே விரும்புகின்றார்கள். ஆயினும் தாஃகூத்தை நிராகரிக்குமாறுதான் அவர்கள் கட்டளையிடப் பட்டிருந்தார்கள். ஷைத்தான் அவர்களை முற்றிலும் வழிகெடுத்து வெகுதூரம் கொண்டு செல்ல விரும்புகின்றான். </span>
<span>4:61 மேலும், ‘அல்லாஹ் இறக்கிவைத்த (சட்டத்)தின் பக்கமும், தூதரின் பக்கமும் வாருங்கள்’ என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வராமல் விலகிச் செல்வதையே நீர் பார்க்கின்றீர். </span>
<span>4:62 பின்னர் அவர்களின் கைகள் செய்த தீவினைகளின் காரணத்தால் அவர்களுக்குத் துன்பம் ஏற்படும்போது நிலைமை என்னவாகும்? பிறகு அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நன்மை செய்வதையும், இரு பிரிவினரிடையே உடன்பாடு ஏற்படுத்து வதையும் தவிர நாங்கள் வேறெதையும் நாடவில்லை” என்று சத்தியம் செய்துகொண்டு உம்மிடம் வருவார்கள். </span>
<span>4:63 இத்தகையவர்களின் இதயங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான். எனவே, நீர் அவர்களின் நடத்தையைப் புறக்கணித்து விடுவீராக! அவர்களுக்கு அறிவுரை கூறுவீராக! மேலும் அவர்களின் உள்ளங்களில் பதியக்கூடிய நல்லுரையை நீர் அவர்களுக்குக் கூறுவீராக! </span>
<span>4:64 மேலும் (அவர்களுக்கு அறிவித்துவிடுவீராக:) அல்லாஹ்வின் கட்டளைப்படி மக்கள் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காகவே தவிர எந்தத் தூதரையும் நாம் அனுப்பவில்லை. தமக்குத் தாமே அவர்கள் அநீதி இழைத்துக்கொண்ட வேளையில், உம்மிடம் அவர்கள் வந்திருந்தால், இன்னும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரியிருந்தால், அவர்களுக்காக தூதரும் மன்னிப்புக் கோரியிருந்தால், திண்ணமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பு வழங்குபவனாகவும் பெருங் கருணையுடையவனாகவும் இருப்பதைக் கண்டிருப்பார்கள். </span>
<span>4:65 இல்லை! (முஹம்மதே!) உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில் உம்மை நீதிபதியாக ஏற்றுக்கொண்டு பின்னர் நீர் அளிக்கின்ற தீர்ப்பு குறித்து தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல் முற்றிலும், அதற்கு அடிபணியாதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள். </span>
<span>4:66 உங்களை நீங்களே அழித்துக் கொள்ளுங்கள் என்றோ, உங்கள் இல்லங்களிலிருந்து வெளியேறிச் செல்லுங்கள் என்றோ நாம் அவர்களுக்குக் கட்டளையிட்டால், அவர்களில் சிலர்தான் அதன் படி செயல்பட்டிருப்பார்கள். எனினும், அவர்கள் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டபடி செயலாற்றுவார்களேயானால், அது அவர்களுக்கு மிக நன்மை அளிப்பதாகவும் (சத்தியத்தில்) அவர்களை நன்கு உறுதிப்படுத்தக்கூடியதாகவும் இருந்திருக்கும். </span>
<span>4:67 மேலும், அவ்வாறு செயல்பட்டிருந்தால் நம்மிடமிருந்து அவர்களுக்கு மகத்தான கூலியைக் கண்டிப்பாக நாம் வழங்கியிருப்போம். </span>
<span>4:68 மேலும், அவர்களுக்கு நாம் நேரான வழியைக் காட்டியுமிருப்போம். </span>
<span>4:69 எவர்கள் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கீழ்ப்படிகின்றார்களோ அவர்கள், அல்லாஹ் அருள்புரிந்துள்ள நபிமார்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த் தியாகம் புரிந்தவர்கள் மற்றும் உத்தமர்கள் ஆகியோருடன் இருப்பார்கள். இவர்கள் எத்துணைச் சிறந்த தோழர்கள்! </span>
<span>4:70 இது அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் உண்மையான அருளாகும். மேலும் (இந்த மக்களுடைய) உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன். </span>
<span>4:71 நம்பிக்கையுடையவர்களே! (போராடுவதற்காக எந்நேரமும்) நீங்கள் முன்னெச்சரிக்கையாக இருங்கள்! பிறகு (சந்தர்ப்பத்திற்கு ஏற்ப) தனித்தனிப் பிரிவுகளாகக் கிளம்புங்கள்! அல்லது எல்லோரும் சேர்ந்து புறப்படுங்கள்! </span>
<span>4:72 உண்மையில், போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கி விடுபவனும் உங்களில் இருக்கின்றான். பிறகு உங்களுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால் அவன் “திண்ணமாக, அல்லாஹ் என் மீது கருணை புரிந்துள்ளான். ஏனெனில், நான் அவர்களுடன் கலந்து கொள்ளவில்லை” என்று கூறுவான். </span>
<span>4:73 ஆனால், அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு நல்லருள் கிடைத்தால் உங்களுக்கும் அவனுக்கும் இடையே எவ்வித நட்பும் இல்லாததுபோல் “அய்யகோ! நானும் அவர்களுடன் இருந்திருக்கலாமே; அதன் மூலம் மாபெரும் வெற்றியை நான் அடைந்திருப்பேனே!” என்று புலம்புவான். </span>
<span>4:74 (இத்தகையோர்க்கு இவ்வுண்மை தெரிந்திருக்க வேண்டுமே:) இவ்வுலக வாழ்வை விற்று மறுமையைப் பெற விரும்புவோர் அல்லாஹ்வின் வழியில் போர் புரியட்டும்! பிறகு, யார் அல்லாஹ்வின் வழியில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றி பெற்றாலும் சரி, அவருக்கு உறுதியாக மகத்தான கூலியை நாம் வழங்குவோம். </span>
<span>4:75 மேலும், பலவீனர்களாக்கப்பட்ட அடக்கி ஒடுக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்காக அல்லாஹ்வின் வழியில், நீங்கள் போர் புரியாமல் இருக்க என்னதான் காரணம்? அவர்களோ, “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் வாழும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! மேலும் எங்களைப் பாதுகாக்கக்கூடிய ஒருவரை உன்னிடமிருந்து தோற்றுவிப்பாயாக! எங்களுக்கு உதவி செய்பவரையும் உன்னிடமிருந்து தோற்றுவிப்பாயாக!” என்று பிரார்த்தனை செய்கின்றார்கள். </span>
<span>4:76 இறைநம்பிக்கையுடைய நடத்தையை மேற்கொண்டவர்கள் அல்லாஹ்வின் வழியில் போர்புரிவார்கள். நிராகரிப்புப் போக்கினை மேற்கொண்டவர்கள் தாஃகூத்தின் வழியில் போர்புரிவார்கள். எனவே ஷைத்தானின் தோழர்களுடன் போர் புரியுங்கள்! திண்ணமாக, அறிந்து கொள்ளுங்கள்: ஷைத்தானுடைய சூழ்ச்சி மிகவும் பலவீனமானதாகும். </span>
<span>4:77 (போர் புரியாமல்) உங்கள் கரங்களைத் தடுத்துக் கொள்ளுங்கள்; மேலும் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; ஜகாத்தையும் கொடுங்கள் என்று எவர்களிடம் கூறப்பட்டதோ அவர்களை நீர் கவனிக்கவில்லையா? இப்பொழுது போர் புரியுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்கு அஞ்சுவதைப் போல ஏன் அதைவிட அதிகமாக மனிதர்களுக்கு அஞ்சுகின்றார்கள்! “எங்கள் இறைவனே! போர் புரிவதை எங்கள் மீது ஏன் கடமையாக்கினாய்? இன்னும் சிறிது காலம் வரை எங்களுக்குத் தவணை அளித்திருக்கக் கூடாதா?” என்று கேட்கிறார்கள். (நபியே! அவர்களிடம்) கூறுவீராக: இவ்வுலக வாழ்வின் இன்பமனைத்தும் அற்பமானதே! மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சி வாழ்பவர்க்கு மறுமை மிகவும் சிறந்ததாகும். இன்னும் உங்களுக்கு இம்மியளவும் அநீதியிழைக்கப்படமாட்டாது. </span>
<span>4:78 நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். நீங்கள் உறுதி மிக்க கோட்டைகளில் இருந்தாலும் சரியே!
 மேலும், அவர்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்குமாயின், “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது” என்கிறார்கள்; ஆனால் அவர்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமாயின், “(முஹம்மதே!) இது உம்மிடமிருந்து வந்தது” எனக் கூறுகிறார்கள். நீர் கூறுவீராக: அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே ஏற்படுகின்றன. இம்மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? இவர்கள் எந்த விஷயத்தையும் புரிந்து கொள்வதில்லையே!</span>
<span>4:79 (மனிதனே!) உனக்கு ஏதேனும் நன்மை கிடைக்குமாயின் அது அல்லாஹ்வின் அருளால்தான் கிடைக்கின்றது. ஆனால் உனக்கு ஏதேனும் கேடு ஏற்பட்டால் அது உன் வினையினால்தான் விளைகிறது. (முஹம்மதே!) மக்களுக்காக உம்மைத் தூதராய் நாம் அனுப்பியுள்ளோம். மேலும், இதற்கு அல்லாஹ்வின் சாட்சியே போதுமானது. </span>
<span>4:80 யார், அல்லாஹ்வின் தூதருக்குக் கீழ்ப்படிகின்றாரோ அவர் உண்மையில் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிபவராவார். மேலும் யாரேனும் புறக்கணித்துவிட்டால், அவர்களின் பாதுகாவலராக உம்மை நாம் அனுப்பவில்லை. </span>
<span>4:81 ‘நாங்கள் கீழ்ப்படிகிறோம்’ என (நேரில்) அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால், உம்மை விட்டு வெளியேறிவிட்டால், அவர்களில் ஒரு பிரிவினர் இரவில் கூடி நீர் கூறுகின்றவற்றிற்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டுகின்றனர். அவர்களின் இந்த இரகசி யப் பேச்சுக்களையெல்லாம் அல்லாஹ் பதிவு செய்து வைக்கிறான். எனவே நீர் அவர்களைப் பொருட்படுத்தாதீர். மேலும், அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக! சார்ந்திருப்பதற்கு அல்லாஹ் போதுமானவன். </span>
<span>4:82 அவர்கள் குர்ஆனைப் பற்றிச் சிந்திப்பதில்லையா? இது அல்லாஹ்வை அன்றி வேறொருவரிடமிருந்து வந்திருந்தால் அதிகமான முரண்பாடுகளை இதில் கண்டிருப்பார்கள். </span>
<span>4:83 அமைதியளிக்கக்கூடிய அல்லது அச்சம் தரக்கூடிய ஏதேனும் செய்தி அவர்களிடம் வந்தால், அதனை அவர்கள் பரப்பி விடுகின்றார்கள். ஆனால், அதனைத் தூதரிடமும், தம்மில் பொறுப்புள்ளவர்களிடமும் தெரிவித்திருப்பார்களேயானால், நுணுகி ஆராயும் திறனுடையவர்கள் அச்செய்தியின் உண்மை நிலையை நன்கு அறிந்திருப்பார்கள். (உங்களிடம் எந்த அளவுக்குப் பலவீனங்கள் இருந்தன என்றால்) உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கருணையும் இல்லாமல் போயிருந்தால், உங்களில் சிலரைத் தவிர அனைவரும் ஷைத்தானையே பின்பற்றியிருப்பீர்கள். </span>
<span>4:84 எனவே, (நபியே!) நீர் அல்லாஹ்வின் வழியில் போர் புரிவீராக! உம்மைத் தவிர வேறு யாருக்கும் நீர் பொறுப்பாளியல்லர். ஆயினும், இறைநம்பிக்கையாளர்களுக்கு(ப் போர் புரியும்படி) ஆர்வமூட்டுவீராக! அல்லாஹ் இறைமறுப்பாளர்களின் பலத்தை முறியடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அல்லாஹ் அனைவரையும்விட வலிமை மிக்கவன். மேலும், தண்டிப்பதில் மிகக் கடுமையானவன்! </span>
<span>4:85 யார் நன்மைக்காகப் பரிந்துரைக்கின்றாரோ அவர் அந்நன்மையில் பங்கு பெறுவார்; மேலும், யார் தீமைக்காகப் பரிந்துரைக்கின்றாரோ அவர் அத்தீமையில் பங்கு பெறுவார். மேலும், அல்லாஹ் எல்லாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான். </span>
<span>4:86 மேலும், உங்களுக்கு (ஸலாம் எனும்) வாழ்த்துக் கூறப்பட்டால் நீங்கள் அதைவிட அழகிய முறையில் அல்லது (குறைந்தபட்சம்) அதைப் போன்றாவது பதில் வாழ்த்துக் கூறுங்கள்! திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு செயலுக்கும் கணக்கு வாங்குபவனாய் இருக்கின்றான். </span>
<span>4:87 அல்லாஹ் (எத்தகையவனென்றால்) அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் உங்கள் அனைவரையும் மறுமைநாளில் திண்ணமாக ஒன்று திரட்டுவான். அ(ந் நாள் வருவ)தில் எவ்வித ஐயமும் இல்லை. மேலும், அல்லாஹ்வைவிட உண்மை பேசுபவர் வேறு எவருமில்லை. </span>
<span>4:88 பிறகு உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் இரு கருத்துடையவர்களாய் ஆகிவிட்டீர்கள்! ஆயினும் அல்லாஹ் அவர்கள் சம்பாதித்துக் கொண்ட தீவினைகளின் காரணமாக அவர்களைத் தலைகீழாகப் புரட்டி விட்டிருக்கின்றான். அல்லாஹ் எவருக்கு நேர்வழி வழங்கவில்லையோ, அவருக்கு நேர்வழிகாட்ட நீங்கள் விரும்புகின்றீர்களா? எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்தானோ அவர்களுக்கு எவ்வித வழியையும் நீர் காணமாட்டீர். </span>
<span>4:89 அவர்கள் நம்பிக்கை கொள்ளாததைப் போலவே நீங்களும் நம்பிக்கை கொள்ளாதிருக்க வேண்டும்; (இவ்வகையில்) நீங்களும் அவர்களும் சமமாகிவிட வேண்டும் என்றே அவர்கள் விரும்புகின்றார்கள். எனவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத்* செய்யும் வரையில், அவர்களில் எவரையும் நீங்கள் நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! மேலும், அவர்கள் (ஹிஜ்ரத்தைப்) புறக்கணித்துவிட்டால், அவர்களை நீங்கள் எங்குக் கண்டாலும் பிடித்துக் கொன்று விடுங்கள். மேலும், அவர்களில் எவரையும் உங்களின் நண்பராகவோ, உதவியாளராகவோ ஆக்கிக் கொள்ளாதீர்கள். </span>
<span>4:90 ஆனால், எந்தச் சமுதாயத்திடம் நீங்கள் உடன் படிக்கை செய்துள்ளீர்களோ அந்தச் சமுதாயத்தோடு சேர்ந்துகொள்ளும் நயவஞ்சகர்கள் (இந்தக் கட்டளையிலிருந்து) விதிவிலக்கானவர்கள்! அதேபோல், உங்களுடன் போர் புரியவோ, தம் கூட்டத்தாருடன் போர் புரியவோ மனமில்லாமல் உங்களிடம் வருகின்ற நயவஞ்சகர்களும் விதிவிலக்கானவர்கள்! அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் மீது அவர்களின் ஆதிக்கத்தைத் திணித்திருப்பான். அவர்களும் உங்களுக்கு எதிராகப் போர் புரிந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் உங்களோடு போர் புரியாமல், உங்களை விட்டு விலகியிருந்தால், மேலும் அவர்கள் உங்களிடம் சமாதானக் கரம் நீட்டினால் அவர்களுக்கெதிராக கை நீட்டிட அல்லாஹ் உங்களுக்கு வழியேதும் வைத்திடவில்லை. </span>
<span>4:91 மற்றொரு வகை நயவஞ்சகர்களையும் நீங்கள் காண்பீர்கள். அவர்கள் உங்களிடமும் பாதுகாப்புப் பெற வேண்டும்; தமது சமுதாயத்திலும் பாதுகாப்புப் பெற வேண்டும் என விரும்புகின்றார்கள். ஆனால், குழப்பத்திற்கான வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதில் அவர்கள் குதித்து விடுவார்கள்! இத்தகையோர் உங்களோடு மோதுவதிலிருந்து விலகி உங்களிடம் சமாதானத்திற்கு வரவில்லையாயின், மேலும் தம் கைகளைத் தடுத்துக் கொள்ளவில்லையாயின், அப்போது அவர்களை நீங்கள் எங்கு கண்டாலும் பிடித்துக் கொன்றுவிடுங்கள்! அவர்களுக்கெதிராக கைநீட்டிட உங்களுக்குத் தெளிவான ஆதாரத்தை நாம் அளித்துவிட்டோம். </span>
<span>4:92 ஓர் இறைநம்பிக்கையாளருக்கு மற்றோர் இறை நம்பிக்கையாளரைக் கொல்வது என்பது ஏற்ற செயல் அல்ல; தவறாகக் கொன்றுவிட்டாலே தவிர! ஒருவர் ஓர் இறைநம்பிக்கையாளரைத் தவறாகக் கொலை செய்துவிட்டால் (அதற்குரிய பாவப் பரிகாரம்) இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்வதாகும். மேலும், கொல்லப்பட்ட வரின் வாரிசுகளுக்கு உயிரீட்டுத் தொகையைக் கொடுத்துவிட வேண்டும்; அவர்கள் அதனை மன்னித்துவிட்டாலே தவிர! ஆனால் கொல்லப்பட்டவர் உங்களோடு பகைமை கொண்ட சமுதாயத்தைச் சார்ந்த இறைநம்பிக்கையாளராய் இருந்தால், (அதற்குரிய பரிகாரம்) ஓர் இறைநம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்வதாகும். மேலும், கொல்லப்பட்டவர் உங்களோடு உடன்படிக்கை செய்து கொண்ட (முஸ்லிமல்லாத) சமுதாயத்தைச் சார்ந்தவராக இருந்தால் (அதற்குரிய பரிகாரம்) அவருடைய வாரிசுகளுக்கு உயிரீட்டுத் தொகையை அளிப்பதுடன், இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும். ஆனால், அடிமை கிடைக்கப் பெறாதவன் தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். இவை பாவமன்னிப்புக்காக, அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட முறைகளாகும். மேலும், அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவுடையவனாகவும் இருக்கின்றான். </span>
<span>4:93 ஓர் இறை நம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்து விட்டால், அவனுக்குரிய கூலி நரகமாகும். அதில் அவன் நிலையாக வீழ்ந்துகிடப்பான். மேலும், அவன் மீது அல்லாஹ்வின் கோபமும் அவனுடைய சாபமும் திணிக்கப்பட்டிருக்கிறது. மேலும், மிகப் பெரிய வேதனையும் அவனுக்காகத் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. </span>
<span>4:94 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் வழியில் (ஜிஹாத் செய்யப்) புறப்படுவீர்களாயின் (பகைவனையும் நண்பனையும்) தெளிவாகப் பிரித்தறிந்து கொள்ளுங்கள். மேலும், உங்களுக்கு ஸலாம் (சாந்தி உண்டாகட்டும் என்று) சொன்னவரைப் பார்த்து, “நீ இறை நம்பிக்கை கொண்டவன் அல்லன்” எனக் கூறாதீர்கள். நீங்கள் இவ்வுலக வாழ்க்கைக்குரிய பொருள்களைத்தான் தேடுகிறீர்கள் என்றால், அல்லாஹ்விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. இதற்கு முன்பு நீங்களும் இதே நிலையில்தான் இருந்தீர்கள். பிறகு அல்லாஹ் உங்களுக்குப் பேருதவி புரிந்தான். எனவே, நீங்கள் தெளிவாகப் புரிந்து செயல்படுங்கள்! நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் திண்ணமாகத் தெரிந்திருக்கின்றான். </span>
<span>4:95 இறைநம்பிக்கையாளர்களில் எவர்கள் தக்க காரணம் எதுவுமின்றி ஜிஹாதில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் தங்கி விடுகின்றார்களோ அவர்களும், எவர்கள் தங்களுடைய உயிராலும் பொருளாலும், அல்லாஹ்வின் வழியில் ஜிஹாத் செய்கின்றார்களோ அவர்களும் சமமாக மாட்டார்கள். ஜிஹாதில் கலந்து கொள்ளாமல் தங்கிவிட்டவர்களை விட தங்களுடைய உயிராலும் பொருளாலும் ஜிஹாத் செய்பவர்களுக்கு அல்லாஹ் சிறப்பான அந்தஸ்தை வைத்திருக்கின்றான். ஒவ்வொருவருக்கும் நன்மையையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். எனினும் ஜிஹாதில் கலந்து கொள்ளாமல் தங்கிவிட்டவர்களைவிட கலந்து கொண்டவர்களின் கூலி அவனிடம் மிக அதிகமானதாக இருக்கிறது. </span>
<span>4:96 அவர்களுக்கு அல்லாஹ்விடம் மிக உயர்ந்த பதவிகளும் மன்னிப்பும் பேரருளும் இருக்கின்றன. மேலும் அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும், அருளிரக்கம் உடையவனுமாய் இருக்கின்றான். </span>
<span>4:97 தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது, அவர்களிடம் “நீங்கள் எந்நிலையில் இருந்தீர்கள்?” என வினவுவார்கள். அதற்கு அவர்கள் “பூமியில் நாங்கள் பலவீனர்களாய் இருந்தோம்” என பதிலளிப்பார்கள். “அல்லாஹ்வின் பூமி விசாலமானதாய் இருக்கவில்லையா? அதில் நீங்கள் நாட்டைத் துறந்து (ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா?” என வானவர்கள் வினவுவார்கள். இவர்களுக்குரிய இருப்பிடம் நரகம்தான்! மேலும் அது மிகக் கொடிய இருப்பிடமாகும். </span>
<span>4:98 ஆனால், எவ்வித உபாயத்தையும் மேற்கொள்ள முடியாமல், எந்த வழிவகையும் பெறாமல், உண்மையிலேயே இயலாதவர்களாயிருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தவிர. </span>
<span>4:99 அவர்களை அல்லாஹ் பிழை பொறுக்கக்கூடும். அல்லாஹ் மிக்க பிழை பொறுப்பவனும், மன்னிப்பு வழங்குபவனும் ஆவான். </span>
<span>4:100 எவர் அல்லாஹ்வின் வழியில் ஹிஜ்ரத் செய்கின்றாரோ, அவர் பூமியில் எண்ணற்ற தங்குமிடங்களையும் வாழ்வதற்கான பெரும் வசதி வாய்ப்பையும் காண்பார். மேலும் ஒருவர் அல்லாஹ்வின் பக்கமும், அவனுடைய தூதரின் பக்கமும் ஹிஜ்ரத் செய்வதற்காகத் தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறிய பிறகு (வழியிலேயே) அவருக்கு மரணம் ஏற்பட்டுவிட்டால், திண்ணமாக அவருக்கு நற்கூலி வழங்குவது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. அல்லாஹ் மிகவும் மன்னிப்பு வழங்குபவனாகவும், கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>4:101 மேலும், நீங்கள் பயணம் புறப்பட்டுச் சென்றால் சில தொழுகைகளைச் சுருக்கிக் கொள்வதில் உங்கள் மீது தவறேதுமில்லை. (குறிப்பாக) இறைநிராகரிப்பாளர்கள் உங்களுக்குத் தொல்லை கொடுப்பார்கள் என்று நீங்கள் அஞ்சினால் (சுருக்கிக் கொள்ளலாம்). ஏனென்றால், திண்ணமாக நிராகரிப்பாளர்கள் உங்களுக்கு வெளிப்படையான பகைவர்களாய் இருக்கின்றார்கள். </span>
<span>4:102 மேலும், (நபியே!) நீர் முஸ்லிம்களிடையே இருக்கும்போது (போர் நிலையில்) அவர்களுக்குத் தொழ வைப்பீராயின் அவர்களில் ஒரு குழுவினர் தங்களுடைய ஆயுதங்களை ஏந்திக் கொண்டு உம்மோடு நின்று கொள்ள வேண்டும். பிறகு அவர்கள் ஸுஜூது செய்து முடித்துவிட்டால் பின்னால் சற்று விலகிச் சென்றுவிட வேண்டும். தொழாமல் இருக்கும் மற்றொரு குழுவினர் வந்து உம்மோடு தொழ வேண்டும். அத்துடன் அவர்களும் முன்னெச்சரிக்கையோடு தம் ஆயுதங்களை ஏந்திக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், உங்கள் ஆயுதங்களிலும் பொருள்களிலும் நீங்கள் கவனக் குறைவாக இருந்துவிட்டால், உங்கள் மீது ஒரேயடியாக திடீர் தாக்குதல் நடத்த நிராகரிப்போர் தக்க தருணத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆயினும் மழையின் காரணமாக உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால், அல்லது நீங்கள் நோயுற்றவர்களாய் இருந்தால், ஆயுதங்களைக் கீழே வைத்துவிடுவதில் உங்கள் மீது தவறேதுமில்லை. ஆனாலும் எச்சரிக்கையாகவே இருங்கள். திண்ணமாக, அல்லாஹ் நிராகரிப்போருக்கு இழிவுபடுத்தும் வேதனையைத் தயார் செய்து வைத்துள்ளான். </span>
<span>4:103 நீங்கள் தொழுகையை நிறைவேற்றிவிட்டால் நிற்கும்போதும், உட்காரும்போதும், படுக்கும்போதும் அல்லாஹ்வை நினைவுகூருங்கள். மேலும், எதிரிகள் குறித்து அச்சம் நீங்கிவிட்டால் தொழுகையை முழுமையாக நிறைவேற்றுங்கள்! உண்மையாகவே குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் இறைநம்பிக்கையாளர்கள் மீது தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது. </span>
<span>4:104 அந்தக் கூட்டத்தைத் துரத்திச் செல்வதில் தளர்ந்து விடாதீர்கள்! நீங்கள் கஷ்டப்படுகிறீர்களென்றால், உங்களைப் போன்று அவர்களும்தான் கஷ்டப்படுகிறார்கள். மேலும், அல்லாஹ்விடமிருந்து அவர்கள் எதிர்பார்க்காதவற்றை நீங்கள் விரும்பி எதிர்பார்க்கின்றீர்கள். மேலும், அல்லாஹ் நன்கறிபவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>4:105 (நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்துத் தந்த நேரிய வழியின்படி மக்களிடையே நீர் தீர்ப்பு வழங்கவேண்டும் என்பதற்காகவே உம்மீது இத்திருமறையை சத்தியத்துடன் நாம் இறக்கி வைத்தோம். நீர் நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களுக்கு வாதாடுபவராய் இருக்க வேண்டாம். </span>
<span>4:106 மேலும், அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவீராக! திண்ணமாக அல்லாஹ், மன்னிப்பு வழங்குபவனாகவும், கருணை புரிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>4:107 தமக்குத் தாமே வஞ்சகம் செய்து கொள்கின்றவர்களுக்காக நீர் வாதாடாதீர்! திண்ணமாக, நம்பிக்கைத் துரோகம் செய்பவனையும் பாவம் புரிவதையே வழக்கமாகக் கொண்டவனையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. </span>
<span>4:108 அவர்கள் (தம் இழிசெயல்களை) மனிதர்களுக்குத் தெரியாமல் மறைத்துக் கொள்ளலாம். ஆனால், அல்லாஹ்விடம் மறைக்க முடியாது. அவனோ அவனுடைய விருப்பத்திற்கு மாறாக அவர்கள் சதியாலோசனை செய்து கொண்டிருக்கும்போது கூட அவர்களுடன் இருக்கின்றான். மேலும், அல்லாஹ் அவர்கள் செய்கின்ற அனைத்துச் செயல்களையும் சூழ்ந்தறிந்து கொண்டிருக்கின்றான். </span>
<span>4:109 சரி! இக்குற்றவாளிகளின் சார்பில் உலக வாழ்க்கையின்போது நீங்கள் வாதாடிவிட்டீர்கள். ஆனால், மறுமைநாளில் அல்லாஹ்விடம் அவர்களுக்காக வாதாடுபவர் யார்? அல்லது அவர்களுக்காக பொறுப்பேற்பவர் யார்? </span>
<span>4:110 மேலும் ஒருவர் தீய செயல்புரிந்து, அல்லது தனக்குத்தானே அநீதி இழைத்துக்கொண்டு பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால், அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணையாளனாகவும் இருப்பதை அவர் காண்பார். </span>
<span>4:111 ஆனால், ஒருவன் பாவத்தைச் சம்பாதிப்பானாகில் தனக்குக் கேடாகவே அவன் அதைச் சம்பாதித்துக் கொள்கின்றான். அல்லாஹ் நன்கறிபவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>4:112 மேலும், ஒருவன் ஒரு தவறை அல்லது ஒரு பாவத்தைச் செய்துவிட்டு ஒரு நிரபராதியின் மீது அதைச் சுமத்திவிட்டால் அவன் பெரும் அவதூறையும் வெளிப்படையான பாவத்தையும் நிச்சயம் சுமந்து கொள்பவனாவான். </span>
<span>4:113 (நபியே!) அல்லாஹ்வின் கருணையும், அவனுடைய அருளும் உம்மீது பொழிந்திராவிட்டால் (உம்மை அவர்கள் வழி தவறச் செய்திருப்பார்கள். ஏனெனில்) அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மைத் தவறான கருத்தில் ஆழ்த்திட வேண்டும் என்று முடிவு கட்டியிருந்தார்கள். உண்மையில், அவர்கள் தங்களை அன்றி வேறெவரையும் தவறான கருத்தில் ஆழ்த்திக்கொள்ளவில்லை. மேலும், அவர்களால் உமக்கு யாதொரு தீங்கையும் இழைக்க முடியாது. அல்லாஹ் உமக்கு வேதத்தையும், நுண்ணறிவையும் அருளினான். மேலும், நீர் அறியாதவற்றையும் உமக்குக் கற்றுத் தந்தான். அல்லாஹ் உம்மீது பொழிந்த அருட்கொடையோ மகத்தானதாகும். </span>
<span>4:114 மனிதர்களின் பெரும்பாலான இரகசியப் பேச்சுகளில் எவ்வித நன்மையும் இருப்பதில்லை. தான தர்மம் செய்யும்படியோ, நற்செயல் புரியும்படியோ, மனிதர்களுக்கிடையே சீர்திருத்தம் செய்யும்படியோ அறிவுரை கூறுபவர்களின் பேச்சுக்களைத் தவிர! (அவற்றில் நன்மை உண்டு.) மேலும் எவர் அல்லாஹ்வின் உவப்பைத் தேடுவதற்காக இவ்வாறு செய்கின்றாரோ அவருக்கு நாம் விரைவில் மகத்தான கூலியை வழங்குவோம். </span>
<span>4:115 மேலும், தனக்கு நேர்வழி தெளிவாகிவிட்ட பின்னரும், எவன் இறைத்தூதரிடம் பகைமை காட்டுவதில் முனைப்பாக இருக்கின்றானோ, இறைநம்பிக்கையாளர்களின் நடத்தைக்கு மாறான பாதையில் செல்கின்றானோ, அவனை அவன் திரும்பிவிட்ட திசையிலேயே நாம் செலுத்துவோம்; பின்னர் அவனை நரகத்தில் வீசி எறிவோம்! அது மிகக் கெட்ட தங்குமிடமாகும். </span>
<span>4:116 திண்ணமாக தனக்கு இணைவைப்பதை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்; இது தவிர அனைத்தையும் தான் நாடுகின்றவர்களுக்கு அவன் மன்னித்து விடுவான். எனவே, யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அவன் வழிகேட்டில் வெகுதூரம் சென்றுவிட்டான். </span>
<span>4:117 அவர்கள் அல்லாஹ்வை விடுத்து தேவதைகளை வணக்கத்திற்குரியவர்களாக எடுத்துக்கொள்கின்றார்கள்! மூர்க்கத்தனம் கொண்ட ஷைத்தானை அவர்கள் வணக்கத்திற்கு உரியவனாக எடுத்துக் கொள்கிறார்கள்! </span>
<span>4:118 அவனையோ அல்லாஹ் சபித்திருக்கின்றான். (இவர்கள் பின்பற்றும் ஷைத்தான் எத்தகையவன் எனில்) அவன் அல்லாஹ்வை நோக்கிக் கூறினான்: “உன் அடிமைகளிடமிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கினை திண்ணமாக நான் வாங்கியே தீருவேன். </span>
<span>4:119 மேலும், நிச்சயமாக நான் அவர்களை வழிகெடுப்பேன்; ஆசைகளில் அவர்களை உழலவைப்பேன். இன்னும், நான் அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; (அதன்படி) அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுத்து விடுவார்கள். மேலும், நான் அவர்களுக்கு ஆணை பிறப்பிப்பேன்; (அதன்படி) அல்லாஹ் படைத்த ஒழுங்கமைப்பில் அவர்கள் மாற்றங்கள் செய்வார்கள்.” எவன் அல்லாஹ்வை விட்டுவிட்டு, இந்த ஷைத்தானைத் தன்னுடைய நண்பனாகவும், பாதுகாவலனாகவும் எடுத்துக் கொள்கின்றானோ அவன் அப்பட்டமான இழப்புக் குரியவன் ஆவான். </span>
<span>4:120 அவன் அவர்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கின்றான்; ஆசையூட்டுகின்றான். ஆனால், ஷைத்தான் அவர்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் ஏமாற்றத்தைத் தவிர வேறொன்றுமில்லை. </span>
<span>4:121 இத்தகையோர் தங்குமிடம் நரகம்தான்! அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழி எதனையும் அவர்கள் காணமாட்டார்கள். </span>
<span>4:122 யார் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களை கீழே ஆறுகள் ஓடும் சுவனப்பூங்காக்களில் நுழைய வைப்போம்; அவற்றில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். இது அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதியாகும். தம் சொல்லில், அல்லாஹ்வைவிட உண்மையானவர்கள் வேறு யார் உளர்?</span>
<span>4:123 இறுதி விளைவு, நீங்கள் ஆசைப்படுவது போலவோ, வேதம் அருளப்பட்டவர்கள் ஆசைப்படுவது போலவோ ஏற்படப்போவதில்லை. எவன் தீமை செய்தாலும் அவன் அதற்குரிய விளைவை அடைவான். அல்லாஹ்வைத் தவிர தனக்கு வேறெந்த காப்பாளனையும், உதவியாளனையும் அவன் காணமாட்டான். </span>
<span>4:124 மேலும் நற்செயல்கள் புரிவோர் அவர்கள் ஆணாயினும், பெண்ணாயினும் சரி இறைநம்பிக்கை கொண்டவர்களாக இருப்பின், அவர்கள்தாம் சுவனத்தில் நுழைவார்கள். மேலும் இம்மியளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். </span>
<span>4:125 மேலும், எவர் அல்லாஹ்வுக்கு முழுமையாக அடிபணிந்து, தன்னுடைய நடத்தையையும் நல்லதாக்கிக் கொண்டு ஒருமனப்பட்டு இப்ராஹீமின் வழிமுறையையும் பின்பற்றினாரோ அவரை விடச் சிறந்த வாழ்க்கை நெறி உடையவர் யார்? இப்ராஹீமையோ அல்லாஹ் தன் உற்ற நண்பராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். </span>
<span>4:126 வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது; மேலும் அல்லாஹ் யாவற்றையும் சூழ்ந்தறிந்தவனாக இருக்கின்றான். </span>
<span>4:127 பெண்கள் விவகாரத்தில் தீர்ப்பு வழங்குமாறு அவர்கள் உம்மிடம் கோருகின்றார்கள். (நபியே!) நீர் கூறும்: “அவர்கள் விவகாரத்தில் அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றான். மேலும், இவ்வேதத்தில் (முன்பிருந்தே) உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகின்ற சட்டங்களையும் (நினைவுபடுத்துகின்றான்). அதாவது எந்த அநாதைப் பெண்களுக்கு, அவர்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட உரிமையை நீங்கள் கொடுப்பதில்லையோ, அவர்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதுமில்லையோ (அல்லது பேராசையின் காரணமாக நீங்களே அவர்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறீர்களோ) அந்த அநாதைப் பெண்கள் பற்றிய சட்டங்களையும் மற்றும் பலவீனமான குழந்தைகள் பற்றிய சட்டங்களையும் (உங்களுக்கு நினைவுபடுத்துகிறான்). மேலும், அநாதைகள் விஷயத்தில் நீதியைக் கடைப்பிடியுங்கள் என்றும் அல்லாஹ் உங்களுக்கு ஏவுரை வழங்குகின்றான். மேலும், நீங்கள் செய்யும் எந்த ஒரு நன்மையையும் திண்ணமாக அல்லாஹ் நன்கு அறிந்தே இருக்கின்றான். </span>
<span>4:128 ஒரு பெண், தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்து கொள்ள மாட்டான் என்றோ, புறக்கணித்து விடுவான் என்றோ அஞ்சினால் கணவன்மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறேதும் இல்லை; எந்நிலையிலும் சமாதானம் செய்து கொள்வதே நலம் தரக்கூடியதாகும். மனித உள்ளங்கள் குறுகிய எண்ணத்திற்கும் உலோபித்தனத்திற்கும் (விரைவாக) உட்பட்டுவிடுகின்றன. ஆனால், நீங்கள் இஹ்ஸான் நன்முறையில் வாழ்ந்து, இறையச்சத்தோடு செயல்படுவீர்களானால் திண்ணமாக அல்லாஹ் நீங்கள் செய்கின்றவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான். </span>
<span>4:129 மனைவியருக்கு இடையே முழுக்க முழுக்க நீதியாக நடந்துகொள்ள நீங்கள் விரும்பினாலும், அது உங்களால் முடியாது. எனவே, நீங்கள் (ஒரு மனைவியின் பக்கமே) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் விடப்பட்டவள் போல் ஒதுக்கிவிடாதீர்கள். (இதுவே இறைச்சட்டத்தின் நோக்கத்தை நிறைவு செய்யப் போதுமானதாகும்.) நீங்கள், உங்கள் நடத்தையைச் சீராக்கிக் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழ்ந்தால் திண்ணமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>4:130 ஆனால் கணவன் மனைவியரில் ஒருவர் மற்றவரை விட்டுப் பிரிந்து போவார்களானால், அல்லாஹ், தனது பரந்த ஆற்றலினால் அவர்களை ஒருவர் மற்றவரின் பக்கம் தேவையற்றவராய் ஆக்கிவிடுவான். அல்லாஹ் பரந்த ஆற்றலுடையவனும் அறிவார்ந்தவனுமாவான். </span>
<span>4:131 வானங்கள் மற்றும் பூமியிலுள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சிய வண்ணம் செயல்படுங்கள் என்றே உங்களுக்கு முன்னால் வேதம் வழங்கப்பட்டவர்களுக்கு நாம் அறிவுறுத்தியிருந்தோம். இப்போது உங்களுக்கும் (அதனையே அறிவுறுத்துகின்றோம்.) நீங்கள் நம்பவில்லையெனில் நம்பாதிருங்கள்! வானங்களிலுள்ள வையும், பூமியிலுள்ளவையும் திண்ணமாக அல்லாஹ்வுக்கே உரியன (என்பதை நினைவில் வையுங்கள்!) அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும், அனைத்துப் புகழுக்கும் உரியவனாகவும் இருக்கின்றான். </span>
<span>4:132 ஆம்! வானங்கள் பூமியிலுள்ள அனைத்திற்கும் அல்லாஹ்வே உரிமையாளன் ஆவான். அவற்றின் பொறுப்புகளை ஏற்க அவனே போதுமானவன்! </span>
<span>4:133 மனிதர்களே, அவன் நினைத்தால் உங்களை அகற்றிவிட்டு (உங்களுக்குப் பகரமாக) மற்றவர்களைக் கொண்டு வருவான். இவ்வாறு செய்ய அல்லாஹ் முழு வலிமை பெற்றவனாக இருக்கின்றான். </span>
<span>4:134 இம்மைக்குரிய பயனை மட்டும் விரும்புகின்றவர் அல்லாஹ்விடத்தில் இம்மை, மறுமை இரண்டிற்குரிய நற்பயன்களும் இருக்கின்றன என்பதனைத் தெரிந்து கொள்ளட்டும்! மேலும் அல்லாஹ் யாவற்றையும் செவியேற்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். </span>
<span>4:135 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நீதியைக் கடைப்பிடிப்பவராகவும் அல்லாஹ்வுக்காக சான்று வழங்குபவராகவும் திகழுங்கள்! (நீங்கள் செலுத்தும் நீதியும், வழங்கும் சாட்சியும்) உங்களுக்கோ உங்கள் பெற்றோருக்கோ நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே! (நீங்கள் யாருக்காக சாட்சி சொல்கின்றீர்களோ) அவர் செல்வந்தராகவோ ஏழையாகவோ இருந்தாலும் சரியே! அல்லாஹ் அவர்களின் நலனில் உங்களைவிட அதிக அக்கறை உள்ளவனாக இருக்கின்றான். எனவே, மன இச்சையைப் பின்பற்றி நீதி தவறி விடாதீர்கள். நீங்கள் உண்மைக்குப் புறம்பாக சாட்சி சொன்னாலோ, சாட்சியளிக்காமல் விலகிச் சென்றாலோ திண்ணமாக அல்லாஹ் நீங்கள் செய்கின்றவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான். </span>
<span>4:136 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும், அவன் தன்னுடைய தூதர் மீது இறக்கி அருளிய வேதத்தின் மீதும், இதற்கு முன்னால் அவன் இறக்கி வைத்த வேதங்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். எவன் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், மறுமைநாளையும் மறுக்கின்றானோ அவன் வழி கேட்டிலே உழன்று வெகுதூரம் சென்றுவிட்டான். </span>
<span>4:137 எவர்கள் நம்பிக்கை கொண்ட பின்னர் நிராகரித்தார்களோ, மறுமுறையும் நம்பிக்கை கொண்டு அதற்குப் பின்பும் நிராகரித்தார்களோ பிறகு தம் நிராகரிப்பில் தீவிரமாக மூழ்கிக்கொன்டே சென்றார்களோ அத்தகையோரை ஒருபோதும் அல்லாஹ் மன்னிக்க மாட்டான்; மேலும், அவர்களுக்கு நேர்வழி காட்டவும் மாட்டான். </span>
<span>4:138 நயவஞ்சகர்களுக்கு திண்ணமாக துன்புறுத்தும் தண்டனை இருக்கின்றது எனும் நற்செய்தியை அறிவிப்பீராக!</span>
<span>4:139 இவர்கள் இறைநம்பிக்கையாளர்களை விட்டுவிட்டு நிராகரிப்போரைத் தம் நண்பர்களாக்கிக் கொள்கிறார்கள். இவர்கள் அந்நிராகரிப்போரிடம் கண்ணியத்தை தேடிச் செல்கின்றார்களா? உண்மையில் எல்லாவிதமான கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும். </span>
<span>4:140 எங்காவது (சிலரால்) அல்லாஹ்வின் திருவசனங்கள் மறுத்துரைக்கப்படுவதையும் அவை ஏளனம் செய்யப்படுவதையும் நீங்கள் செவியுற்றால், அவர்கள் வேறு பேச்சில் ஈடுபடும் வரை (அங்கு) அவர்களுடன் நீங்கள் உட்காராதீர்கள் என்று (முன்பே) இவ்வேதத்தில் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான். இனி அவ்வாறு செய்வீர்களாயின் நீங்களும் அவர்களைப் போன்றவராவீர்கள். உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்; அல்லாஹ் நயவஞ்சகர்களையும், நிராகரிப்பவர்களையும் நரகத்தில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றான். </span>
<span>4:141 இந்நயவஞ்சகர்கள் உங்களுக்கு என்ன நேரப் போகிறது என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு வெற்றி கிட்டினால், “நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று கூறுவார்கள். நிராகரிப்போரின் கை ஓங்கியிருந்தால், “உங்களுக்கு எதிராகப் போரிட நாங்கள் சக்தி பெற்றிருக்கவில்லையா? (இருந்தும்) இறை நம்பிக்கையாளரிடமிருந்து நாங்கள் உங்களைக் காப்பாற்றவில்லையா?” என்று (அவர்களிடம்) கூறுவார்கள். உங்களுக்கும் அவர்களுக்குமிடையே இதைக் குறித்து மறுமைநாளில் அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான். (அத்தீர்ப்பில்) இறைநம்பிக்கையாளர்களுக்கு எதிராக, நிராகரிப்பவர்கள் மேலோங்க எவ்வழியும் அல்லாஹ் ஒரு போதும் வைத்திடமாட்டான். </span>
<span>4:142 இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்றுகின்றார்கள். உண்மையில் அவனே இவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கி இருக்கின்றான். இவர்கள் தொழுகைக்காக எழுந்து நின்றால் சோம்பல்பட்டுக் கொண்டே நிற்கிறார்கள். மக்களுக்குக் காட்டிக் கொள்ளவே தொழுகிறார்கள். இன்னும், அல்லாஹ்வை மிகக் குறைவாகவே நினைவுகூருகிறார்கள். </span>
<span>4:143 (முழுமையாக இவர்களோடுமில்லாமல், அவர்களோடுமில்லாமல்), இறைநம்பிக்கைக்கும் நிராகரிப்புக்கும் இடையில் தடுமாறி நிற்கிறார்கள். அல்லாஹ் எவனை வழிகெடுக்கின்றானோ அவனை (நேர்வழிப் படுத்த) வேறு எந்த வழிவகையும் நீர் காணமாட்டீர். </span>
<span>4:144 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நம்பிக்கையாளர்களை விட்டுவிட்டு நிராகரிப்போரை உங்கள் நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்கு எதிராக தெளிவான ஆதாரத்தை நீங்களே அல்லாஹ்விடம் கொடுத்திட விரும்புகின்றீர்களா?</span>
<span>4:145 திண்ணமாக, நயவஞ்சகர்கள் நரகத்தின் மிக அடித்தட்டிற்கே செல்வார்கள். மேலும், அவர்களுக்கு உதவி செய்வோர் எவரையும் நீர் காணமாட்டீர். </span>
<span>4:146 ஆயினும், (இவர்களில்) யார் பாவமன்னிப்புக் கோருபவராக விளங்கி, தம் செயல்களைச் சீர்திருத்திக் கொள்கிறார்களோ, மேலும், அல்லாஹ்வின் வேதத்தை இறுகப் பற்றிக்கொண்டு தமது தீனை நெறியை அல்லாஹ்வுக்கே உரித்தானதாக்கிக் கொள்கின்றார்களோ, அத்தகையோர் இறைநம்பிக்கையாளர்களுடன் இருப்பர். மேலும், இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் மகத்தான கூலியை விரைவில் வழங்குவான். </span>
<span>4:147 நீங்கள் நன்றி செலுத்துபவர்களாய் இருந்து இறைநம்பிக்கையின் வழியில் நடப்பீர்களாயின் உங்களை ஏன் அல்லாஹ் தண்டிக்கப் போகின்றான்? மேலும், அல்லாஹ் நன்றியை மதிப்பவனாகவும், அவர்களை நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். </span>
<span>4:148 அநீதி இழைக்கப்பட்டவனைத் தவிர வேறு யாரும் தீங்கான சொற்களை வெளிப்படையாகப் பேசுவதை அல்லாஹ் விரும்புவதில்லை. மேலும், அல்லாஹ் அனைத்தையும் செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான். </span>
<span>4:149 (அநீதி இழைக்கப்பட்ட நிலையில், தீங்கான சொற்களை வெளிப்படையாகப் பேச உங்களுக்கு அனுமதியுண்டு.) ஆனால், நீங்கள் வெளிப்படையாகவும் மறைவாகவும் நற்செயலை செய்தவண்ணம் இருங்கள்; அல்லது குறைந்தபட்சம் (அநீதியாளர்களின் தீங்கை) மன்னித்துவிடுங்கள். அவ்வாறு செய்தால் (தண்டனை வழங்க) அவன் முழு ஆற்றல் பெற்றிருக்கின்றான். (ஆயினும்) அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான். </span>
<span>4:150 எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர்களுக்கும் இடையில் வேற்றுமையை ஏற்படுத்த விரும்புகின்றார்களோ, மேலும் நாங்கள் இறைத்தூதர்களில் சிலரை ஏற்றுக்கொள்வோம்; சிலரை ஏற்கமாட்டோம் என்று கூறுகின்றார்களோ, மேலும், இறைநம்பிக்கைக்கும் நிராகரிப்புக்கும் இடைப்பட்ட ஒரு வழியினை அமைத்திட விரும்புகின்றார்களோ </span>
<span>4:151 அவர்கள்தாம் உண்மையில் அப்பட்டமான நிராகரிப்போர் ஆவர். இந்நிராகரிப்பாளர்களுக்கு இழிவுபடுத்தும் தண்டனையை நாம் தயார் செய்து வைத்திருக்கிறோம். </span>
<span>4:152 (ஆனால்) எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்கள் அனைவரையும் நம்பி தூதர்களுக்கிடையே வேற்றுமை பாராட்டவுமில்லையோ அவர்களுக்கு அவர்களின் கூலிகளை நிச்சயம் வழங்குவோம். மேலும், அல்லாஹ் அதிக மன்னிப்பு வழங்குபவனும் கருணை நிறைந்தோனுமாய் இருக்கின்றான். </span>
<span>4:153 (நபியே!) வேதம் அருளப்பட்டவர்கள் (எழுதப்பட்ட நிலையில்) ஒரு வேதத்தை வானத்திலிருந்து தங்கள் மீது இறக்கி வைக்குமாறு இன்று உம்மிடம் கேட்கின்றார்கள் எனில், உண்மையில் இவர்கள் மூஸாவிடம் இதைவிடக் கொடூரமான கோரிக்கை விடுத்திருந்தார்கள். அவரிடமோ அவர்கள், “அல்லாஹ்வை எங்களுக்கு வெளிப்படையாகக் காட்டுவீராக!” என்று கூறியிருந்தனர். இவ்வாறு அவர்கள் அக்கிரமமாக நடந்து கொண்டதால், திடீரென அவர்களை ஒரு பேரிடி தாக்கியது. பிறகு அவர்களுக்குத் தெளிவான சான்றுகள் வந்த பின்னரும் பசுவின் கன்றைத் தங்களுடைய தெய்வமாக்கிக் கொண்டார்கள். அதனையும் நாம் மன்னித்தோம். நாம் மூஸாவிற்குத் தெளிவான கட்டளையை வழங்கினோம். </span>
<span>4:154 இன்னும், தூர்மலையை அவர்களுக்கு மேல் உயர்த்தி (இக்கட்டளைக்குக் கீழ்ப்படியுமாறு) அவர்களிடம் வாக்குறுதி வாங்கினோம். “தலை தாழ்த்தியவாறு வாயிலில் நுழையுங்கள்!” என்று நாம் அவர்களுக்குக் கட்டளையிட்டோம். ஸப்த் சனிக்கிழமை விதியை மீறாதீர்கள் என்றும் நாம் அவர்களுக்குக் கூறினோம்; மேலும், இவ்விஷயத்தில் திடமான வாக்குறுதியையும் அவர்களிடம் நாம் வாங்கினோம். </span>
<span>4:155 அவர்கள் தம் வாக்குறுதியை மீறியதாலும், அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்ததாலும், இறைத்தூதர்கள் பலரை நியாயமின்றி அவர்கள் கொலை செய்ததாலும், மற்றும் எங்களுடைய உள்ளங்கள் உறைக்குள் நன்கு பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்று கூறியதாலும் அவர்களை நாம் சபித்தோம் உண்மை என்னவெனில், அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவே அவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரை வைத்துவிட்டான். எனவே, அவர்கள் மிகக் குறைவாகவே நம்பிக்கை கொள்கின்றனர். </span>
<span>4:156 மேலும், அவர்கள் தம் நிராகரிப்பி(ல் எல்லை மீறிவிட்டத)னாலும் மர்யம் மீது பெரியதொரு அவதூறை அவர்கள் கூறியதாலும், (அவர்களை நாம் சபித்தோம்). </span>
<span>4:157 மேலும், அல்லாஹ்வுடைய தூதரும் மர்யமின் மகனுமான ஈஸா மஸீஹை நாங்கள்தாம் கொன்றோம் என அவர்கள் கூறியதாலும் (அவர்களை நாம் சபித்தோம்). உண்மையில் அவர்கள் அவரைக் கொலை செய்யவுமில்லை; அவரைச் சிலுவையில் அறையவுமில்லை! மாறாக, அவருடைய நிலைமை அவர்களுக்குச் சந்தேகத்துக்குரியதாய் ஆக்கப்பட்டுவிட்டது. மேலும், எவர்கள் ஈஸா விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ அவர்கள் இதுபற்றி சந்தேகத்திலே இருக்கின்றார்கள். யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர இதுபற்றி வேறு எந்த அறிவும் அவர்களிடத்தில் இல்லை. நிச்சயமாக அவர்கள் அவரை மஸீஹை கொலை செய்யவேயில்லை. </span>
<span>4:158 மாறாக, அல்லாஹ் அவரைத் தன் பக்கம் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வலிமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமாய் இருக்கின்றான். </span>
<span>4:159 வேதம் அருளப்பட்டவர்களில் யாரும் அவர் மரணமாவதற்கு முன்னால் அவர் மீது நம்பிக்கை கொள்ளாமலிருக்க மாட்டார்கள். மேலும், மறுமைநாளில் அவர்களுக்கு எதிராக அவர் சாட்சி சொல்பவராய் இருப்பார். </span>
<span>4:160 யூதர்கள் செய்த அக்கிரமத்தின் காரணமாகவும், அல்லாஹ்வின் வழியிலிருந்து அதிகமான மனிதர்களை அவர்கள் தடுத்துக் கொண்டிருப்பதாலும், (முன்பு) அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த பல தூய்மையான நல்ல பொருள்களை அவர்கள் மீது நாம் தடை செய்துவிட்டோம். </span>
<span>4:161 மேலும் வட்டி அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருக்க அதனை அவர்கள் வாங்கிக் கொண்டிருப்பதாலும், மக்களின் சொத்துகளைத் தவறான முறையில் அவர்கள் விழுங்கிக் கொண்டிருப்பதாலும் (முன்பு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த பல தூய்மையான நல்ல பொருள்களை அவர்கள் மீது நாம் தடை செய்து விட்டோம்). மேலும் அவர்களில் நிராகரிப்பாளர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை நாம் தயார்செய்து வைத்துள்ளோம். </span>
<span>4:162 ஆனால், அவர்களில் அறிவுத்திறன் மிக்கவர்கள் மற்றும் இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் (நபியே!) உம்மீதும், உமக்கு முன்னரும் இறக்கியருளப்பட்ட அறிவுரைகளை நம்புகின்றார்கள்! (இவ்வாறு நம்பிக்கை கொண்டு) தொழுகையையும், ஜகாத்தையும் முறையாகப் பேணுபவர்கள், மேலும், அல்லாஹ்வையும் மறுமைநாளையும் உறுதியாக நம்புபவர்கள் ஆகியோருக்கு அதிவிரைவில் மகத்தான கூலியை நாம் நிச்சயமாக வழங்குவோம். </span>
<span>4:163 (நபியே!) நூஹுக்கும் அவருக்குப் பின்னால் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹி அறிவித்ததுபோல திண்ணமாக உமக்கும் நாம் வஹி அறிவித்துள்ளோம். மேலும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோருக்கும் மற்றும் யஃகூபின் வழித்தோன்றல்களுக்கும் ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன் மற்றும் ஸுலைமான் ஆகியோருக்கும் நாம் வஹி அறிவித்திருக்கின்றோம். தாவூதுக்கு ஜபூரை வழங்கினோம். </span>
<span>4:164 மேலும், முன்னரே உம்மிடம் நாம் எந்த இறைத்தூதர்கள் பற்றி எடுத்துரைத்துள்ளோமோ அந்த இறைத்தூதர்களுக்கும் உம்மிடம் எடுத்துரைக்கப்படாத இறைத்தூதர்களுக்கும் (வஹி அறிவித்திருக்கின்றோம்). அல்லாஹ் மூஸாவிடம் நேரடியாகப் பேசியும் இருக்கின்றான். </span>
<span>4:165 இறைத்தூதர்கள் அனைவரும் நற்செய்தி அறிவிப்பவர்களாகவும் எச்சரிப்பவர்களாகவும் அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஏனெனில், அத்தூதர்கள் அனுப்பப்பட்ட பிறகு அல்லாஹ்விடம் முறையிட மக்களுக்கு ஆதாரம் ஏதும் இருக்கக் கூடாது என்பதற்காக! மேலும், எந்நிலையிலும், அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>4:166 (இவர்கள் நம்பினாலும் சரி; நம்பாவிட்டாலும் சரி) ஆனால் (நபியே!) அல்லாஹ் உம்மீது இறக்கியருளியவற்றை தன் பேரறிவைக்கொண்டே இறக்கியருளினான் என்பதற்கு தானே சான்று வழங்குகின்றான்; வானவர்களும் சாட்சி வழங்குபவர்களாக இருக்கின்றார்கள். ஆயினும், அல்லாஹ்வின் சான்றே முற்றிலும் போதுமானது; </span>
<span>4:167 எவர்கள் (இவற்றை) தாமும் ஏற்க மறுத்து, அல்லாஹ்வின் வழியில் செல்லவிடாமல் மற்றவர்களையும் தடுக்கின்றார்களோ அவர்கள் திண்ணமாக வழிகேட்டில் (மூழ்கி, சத்தியத்தைவிட்டு) வெகுதூரம் சென்றுவிட்டார்கள். </span>
<span>4:168 எவர்கள் இவ்வாறு நிராகரிப்பை அல்லாஹ்வை எதிர்க்கும் போக்கை மேற்கொண்டு, அக்கிரமம் புரிந்தார்களோ அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கமாட்டான். </span>
<span>4:169 அவர்களுக்கு நரகத்திற்கான வழியினைத் தவிர வேறெந்த வழியையும் காட்டவும் மாட்டான். அவர்கள் நிரந்தரமாக அதில் வீழ்ந்து கிடப்பார்கள்! இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிக எளிதான செயலே ஆகும். </span>
<span>4:170 மனிதர்களே! இந்தத் தூதர் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்குச் சத்தியத்தைக் கொண்டு வந்திருக்கின்றார். எனவே, நம்பிக்கை கொள்ளுங்கள். அது உங்களுக்கே நன்மை பயக்கும். ஆனால் நீங்கள் நிராகரித்தால் வானங்கள், பூமியிலுள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்! மேலும் அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>4:171 வேதம் அருளப்பட்டவர்களே! உங்களுடைய தீனில் மார்க்கத்தில் (எதையும்) மிகைப்படுத்தாதீர்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் விஷயத்தில் சத்தியத்தைத் தவிர வேறு எதையும் கூறாதீர்கள். திண்ணமாக, மர்யமின் மகன் ஈஸாஅல்மஸீஹ், அல்லாஹ்வின் தூதரும் மர்யமுக்கு அவன் அனுப்பிய அவனுடைய கட்டளையுமாவார். மேலும், அல்லாஹ்விடமிருந்து வந்த ஒரு ரூஹும் ஆவார். (அது மர்யமின் கருவறையில் குழந்தையாக வடிவம் பெற்றது.) எனவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்! மேலும், மூன்று (கடவுள்) எனச் சொல்லாதீர்கள். (அப்படிச் சொல்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள்! இதுவே உங்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில், அல்லாஹ் ஒரே இறைவன்தான்; தனக்கு மகனை ஏற்படுத்திக் கொள்வதை விட்டு அவன் தூய்மையானவன். வானங்கள் மற்றும் பூமியிலுள்ளவை அனைத்தும் அவனுக்கே உரியனவாகும். மேலும் (அவை அனைத்தையும் பராமரித்துப் பாதுகாக்கும்) பொறுப்பினை ஏற்பதற்கு அவனே போதுமானவனாவான். </span>
<span>4:172 தான் அல்லாஹ்வின் அடிமையாக இருப்பதை மஸீஹ் எப்போதுமே இழிவாகக் கருதியதில்லை. இறையண்மை பெற்ற வானவர்களும் அதனை இழிவாகக் கருதுவதில்லை. எவர்கள் அல்லாஹ்வுக்குப் பணிந்து வாழ்வதை இழிவாகக் கருதி, தற்பெருமையும் கொள்கின்றார்களோ அவர்கள் அனைவரையும் விரைவில் அல்லாஹ் ஒன்று திரட்டித் தன்முன் கொண்டுவருவான். </span>
<span>4:173 (அவ்வேளையில்) எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களுக்கு அவன் அவர்களுடைய கூலிகளை நிறைவாகக் கொடுப்பான். மேலும், தனது அருளால் இன்னும் அதிகம் (கூலி) வழங்குவான். மேலும், எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பணிந்து வாழ்வதை இழிவாகக் கருதித் தற்பெருமையும் கொண்டிருந்தார்களோ அவர்களுக்கு அல்லாஹ் துன்புறுத்தும் தண்டனை அளிப்பான். மேலும், அல்லாஹ்வை அன்றி (தாம் நம்பிக்கை கொண்டிருந்த) பாதுகாவலர் மற்றும் உதவியாளர் எவரையும் அங்கு அவர்கள் காணமாட்டார்கள். </span>
<span>4:174 மனிதர்களே! உங்களுடைய அதிபதியிடமிருந்து உங்களுக்குத் தெளிவான சான்று வந்துள்ளது. தெள்ளத் தெளிவாய் வழிகாட்டும் ஒளியையும் நாம் உங்களுக்கு அனுப்பியிருக்கின்றோம். </span>
<span>4:175 (இனி) எவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றார்களோ, மேலும் அவனிடம் புகலிடம் தேடுகின்றார்களோ அவர்களை அதிவிரைவில் தனது கருணையிலும் அருளிலும் அல்லாஹ் நுழையச் செய்வான். மேலும், தன் பக்கம் வருவதற்கான நேரான வழியையும் அவர்களுக்குக் காண்பிப்பான். </span>
<span>4:176 (நபியே!) மக்கள் உம்மிடம் கலாலா பற்றி தீர்ப்பு வழங்குமாறு கேட்கிறார்கள். நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு கலாலா பற்றி இவ்வாறு தீர்ப்பளிக்கின்றான்: குழந்தை இல்லாத ஒருவன், ஒரு சகோதரி அவனுக்கு இருக்கும் நிலையில் இறந்துவிட்டால், அவன் விட்டுச் சென்ற சொத்தில் பாதி அவளுக்கு உரியதாகும். குழந்தை இல்லாமல் அந்தச் சகோதரி இறந்துவிட்டால் சகோதரன் அவளுக்கு வாரிசாவான். இறந்து போனவருக்கு இரு சகோதரிகள் இருந்தால், அவ்விருவருக்கும் அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரு பங்கு உரியதாகும். சகோதர சகோதரிகள் பலர் இருந்தால், அவர்களில் ஓர் ஆணின் பங்கு இரு பெண்களின் பங்கிற்குச் சமமானதாகும். அல்லாஹ் உங்களுக்குச் சட்ட திட்டங்களைத் தெளிவாக விவரிக்கின்றான்; நீங்கள் வழி தவறிவிடக் கூடாது என்பதற்காக! மேலும், அல்லாஹ் ஒவ்வொரு விஷயத்தைக் குறித்தும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். </span>
</div><div>
<span>அல்மாயிதா</span>
<span>5:1 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் மீதுள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக நிறைவேற்றுங்கள். பின்னால் உங்களுக்குக் கூறப்படுபவை தவிர கால்நடை வகையைச் சேர்ந்த அனைத்து பிராணிகளும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் இஹ்ராமுடைய நிலையில் வேட்டையாடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதென்று கருதிவிடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுவதைக் கட்டளையிடுகின்றான். </span>
<span>5:2 இறைநம்பிக்கை கொண்டவர்களே! இறைவழிபாட்டுக்குரிய சின்னங்களை அவமதிக்காதீர்கள். சங்கைக்குரிய எந்த மாதத்தையும் போர் புரிவதற்கு அனுமதிக்கப்பட்டதாய் கொள்ளாதீர்கள்! இன்னும் குர்பானிக்குரிய பிராணிகளையும், இறைவனுக்காக நேர்ந்துவிடப்பட்டவை என்பதற்கு அறிகுறியாக கழுத்தில் பட்டை கட்டப்பட்ட பிராணிகளையும் துன்புறுத்தாதீர்கள்! இன்னும் தன்னுடைய இறைவனின் திருவருளையும், திருப்பொருத்தத்தையும் பெற எண்ணி புண்ணியத்தலம் (கஅபா) நோக்கிச் செல்வோரை சிரமத்திற்குள்ளாக்காதீர்கள்! ஆனால், இஹ்ராமின் நிலையிலிருந்து விலகி விட்டால் நீங்கள் வேட்டையாடலாம். மேலும் பாருங்கள்: மஸ்ஜிதுல் ஹராமுக்குள் செல்ல முடியாதவாறு உங்கள் வழியினை அடைத்துவிட்ட கூட்டத்தார் மீதுள்ள வெறுப்பு, அவர்களுக்கு எதிராக நீங்கள் வரம்பு மீறிச் செல்லும் அளவுக்கு உங்களைக் கொதித்தெழும்படிச் செய்துவிடக்கூடாது. எப்பணி நல்லதாகவும் இறையச்சத்திற்கு உரியதாகவும் உள்ளதோ அதில் எல்லோருடனும் ஒத்துழையுங்கள்! ஆனால் எது பாவமானதாகவும், வரம்பு கடந்ததாகவும் உள்ளதோ அதில் எவருடனும் ஒத்துழையாதீர்கள். மேலும், இறைவனை அஞ்சுங்கள்! நிச்சயமாக அவனுடைய தண்டனை மிகக் கடுமையானது. </span>
<span>5:3 செத்த பிராணியும், இரத்தமும், பன்றி இறைச்சியும், இறைவனல்லாத மற்றவர் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணியும், கழுத்து நெரிக்கப்பட்டும், அடிபட்டும், உயரத்திலிருந்து வீழ்ந்தும், மோதப்பட்டும் இறந்த பிராணிகளும் உங்களுக்குத் தடுக்கப்பட்டவையாகும். மேலும், கொடிய விலங்குகளால் கடித்துக் குதறப்பட்ட பிராணிகளும் (தடுக்கப்பட்டவையாகும்.) எவற்றை உயிருடன் நீங்கள் அறுத்துவிட்டீர்களோ அவற்றைத் தவிர! இன்னும் பலி பீடங்கள் மீது அறுக்கப்பட்ட பிராணியும் உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. குறி பார்ப்பதன் மூலம் விதிகளை நிர்ணயிப்பதும் உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது. இவை யாவும் பாவமான செயல்களாகும். இன்று உங்களுடைய தீன்வாழ்க்கை நெறி குறித்து நிராகரிப்போர் முற்றிலும் நிராசை அடைந்துவிட்டிருக்கின்றனர். எனவே, நீங்கள் அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். மாறாக எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்களுடைய தீனை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். எனது அருட் கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களுடைய தீன்வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு விட்டேன். (எனவே, உங்கள் மீது விதிக்கப்பட்ட ஹலால், ஹராமெனும் வரம்புகளைப் பேணி நடந்து வாருங்கள்.) ஆயினும் கடும் பசியினால் நிர்பந்திக்கப்பட்டு பாவம் செய்யும் நாட்டமின்றி ஒருவர் அவற்றில் ஏதாவதொன்றைப் புசித்து விட்டால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பெருங்கருணை உடையவனாகவும் இருக்கின்றான். </span>
<span>5:4 மக்கள் எவை தங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன என்று உம்மிடம் வினவுகின்றனர். நீர் கூறுவீராக: “தூய்மையான அனைத்துப் பொருட்களும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.” மேலும் எந்த வேட்டைப் பிராணிகளுக்கு நீங்கள் வேட்டையாடக் கற்றுத் தந்திருக்கின்றீர்களோ அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அறிவைக் கொண்டு அவற்றுக்கு வேட்டையாடக் கற்றுத் தந்திருக்கிறீர்கள் பிறகு அந்த வேட்டைப் பிராணிகள் உங்களுக்காகப் பிடித்து வைத்திருப்பவற்றை நீங்கள் உண்ணலாம். ஆயினும் அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரை உச்சரியுங்கள்! இன்னும் அல்லாஹ்வின் சட்டங்களுக்கு மாறு செய்ய அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் கணக்குக் கேட்பதில் மிக விரைவானவன். </span>
<span>5:5 இன்று உங்களுக்குத் தூய்மையான பொருட்கள் அனைத்தும் அனுமதிக்க (ஹலாலாக்க)ப்பட்டிருக்கின்றன. வேதம் அருளப்பட்டவர்களின் உணவு உங்களுக்கும், உங்களது உணவு அவர்களுக்கும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. மேலும், நல்லொழுக்கமுள்ள பெண்கள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களே; அவர்கள் ஈமான் இறைநம்பிக்கை கொண்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களானாலும் சரி; உங்களுக்கு முன்னர் வேதம் அருளப்பட்டவர்களின் சமுதாயங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி. ஆனால், அவர்களுக்குரிய மஹ்ரைக் கொடுத்து, அவர்களைத் திருமணம் செய்துகொண்டு அவர்களின் பாதுகாவலர்களாய் நீங்கள் திகழவேண்டுமே தவிர, அவர்களுடன் விபச்சாரத்திலோ கள்ளக் காதலிலோ ஈடுபடக்கூடாது. மேலும், எவன் ஈமானின் வழியில் செல்ல மறுக்கின்றானோ அவனது வாழ்வின் அனைத்துச் செயல்களும் வீணாகிவிடும். மேலும், அவன் மறுமையில் பேரிழப்புக்கு ஆளாவான். </span>
<span>5:6 இறைநம்பிக்கை கொண்டவர்களே! தொழுகைக்காகச் செல்லும்போது உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்களுடைய கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள்; இன்னும் உங்களுடைய தலைகளை (நீரால்) தடவிக் கொள்ளுங்கள்! மேலும், உங்கள் கால்களை இரு கணுக்கால்கள் வரை கழுவிக் கொள்ளுங்கள்! மேலும், நீங்கள் ஜுனுபாளியாக* இருந்தால் (குளித்துத்) துப்புரவாகி விடுங்கள். ஆனால், நீங்கள் நோயாளிகளாகவோ, பயணத்திலோ இருந்தால் அல்லது உங்களில் எவரேனும் மலஜலம் கழித்துவிட்டு வந்திருந்தால், அல்லது பெண்களைத் தீண்டியிருந்தால் தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைப் பயன்படுத்துங்கள்! அதில் உங்கள் கைகளைப் பதித்து முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! உங்கள் வாழ்க்கையில் எந்தச் சிரமத்தையும் உண்டு பண்ண அல்லாஹ் விரும்பவில்லை. ஆயினும் உங்களைத் தூய்மை செய்யவும் உங்கள் மீது தனது அருட்பேற்றை நிறைவு செய்யவுமே அவன் விரும்புகின்றான். இதனால் நீங்கள் நன்றி செலுத்தக்கூடியவர்களாய்த் திகழக்கூடும். </span>
<span>5:7 இன்னும் அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட்பேற்றினை நினைத்துப் பாருங்கள். மேலும் உங்களிடமிருந்து அவன் பெற்றுக்கொண்ட உறுதிமொழியை மறந்து விடாதீர்கள். அப்பொழுது நீங்கள் “செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம்” என்று கூறியிருந்தீர்கள். எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ், இதயங்களில் மறைந்திருப்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான். </span>
<span>5:8 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்காக வாய்மையில் நிலைத்திருப்போராயும் நீதிக்குச் சான்று வழங்குவோராயும் திகழுங்கள்! எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்துவிடக் கூடாது. நீங்கள் நீதி செலுத்துங்கள். இதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானது. அல்லாஹ்வுக்கு அஞ்சிச் செயலாற்றுங்கள். நீங்கள் செய்வனவற்றை முழுமையாக அல்லாஹ் அறிந்தவனாக இருக்கின்றான். </span>
<span>5:9 எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுமென்றும் மகத்தான நற்கூலி அவர்களுக்கு உண்டு என்றும் அல்லாஹ் அவர்களுக்கு வாக்களித்திருக்கின்றான். </span>
<span>5:10 மேலும், எவர்கள் நிராகரித்து நம் வசனங்களைப் பொய்யென்று கூறுகின்றார்களோ அவர்கள் நரகவாசிகளே!</span>
<span>5:11 இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு (அண்மையில்) செய்த பேருதவியை நினைத்துப் பாருங்கள்! ஒரு கூட்டத்தார் உங்களுக்கு எதிராகத் தம் கைகளை நீட்டிட நாடியிருந்தபோது, அல்லாஹ் அவர்களுடைய கைகளை உங்களை விட்டும் தடுத்து நிறுத்தினான். அல்லாஹ்வுக்கு அஞ்சிய வண்ணம் வாழுங்கள்! நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்து நிற்க வேண்டும். </span>
<span>5:12 இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் அல்லாஹ் வலுவான உறுதிமொழி வாங்கியிருந்தான். மேலும் அவர்களில் பன்னிரண்டு பேரைக் கண்காணிப்பாளராய் நியமித்திருந்தான். இன்னும் அல்லாஹ் அவர்களிடம் கூறினான்: “திண்ணமாக, நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் தொழுகையை நிலை நிறுத்தியும் ஜகாத்தை அளித்தும், என்னுடைய தூதர்களை ஏற்று அவர்களுக்கு உதவி புரிந்தும், உங்களுடைய இறைவனுக்கு அழகிய கடன் அளித்தும் வந்தீர்களாயின் திண்ணமாக நான் உங்களுடைய தீமைகளைப் போக்கிவிடுவேன். மேலும், கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனப் பூங்காக்களில் உங்களை நுழைவிப்பேன். ஆனால் இதன் பின்னரும் உங்களில் எவரேனும் நிராகரிப்புப் போக்கை மேற்கொண்டால் நிச்சயமாக அவர் “ஸவாவுஸ் ஸபீலை” இராஜபாட்டையை விட்டுப் பிறழ்ந்தவராவார்”. </span>
<span>5:13 பிறகு அவர்கள் தாம் செய்த வாக்குறுதியை முறித்ததற்காக நாமும் அவர்களை நமது அருளிலிருந்து தூர எறிந்துவிட்டோம். மேலும், அவர்களுடைய நெஞ்சங்களை இறுகச் செய்துவிட்டோம். இப்பொழுது அவர்களுடைய நிலை என்னவெனில் வேத வாக்குகளை அவற்றின் இடங்களிலிருந்து புரட்டியும் திரித்தும் விதவிதமாகப் பொருள் கொள்கின்றனர். இன்னும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்ட உயர் அறிவுரைகளில் பெரும்பாலானவற்றை மறந்தே போயினர். நாள்தோறும் அவர்களுடைய மோசடிச் செயல்களில் ஏதேனும் ஒன்று உங்களுக்குத் தென்பட்டுக் கொண்டே இருக்கும். அவர்களில் மிகச் சிலரே இத்தகைய இழி செயலிலிருந்து விலகி இருக்கிறார்கள். (அவர்கள் இவ்வளவு மோசமான நிலைக்கு இறங்கி வந்தபின் அவர்கள் எத்தகைய குறும்புத்தனங்கள் புரிந்தாலும் அவை எதிர்பார்க்கப்பட்டவைதாம்) எனவே, அவர்களை மன்னித்து விடுங்கள். அவர்களின் தவறான செயல்களைப் பொருட்படுத்தாதீர்கள். நன்னடத்தையை மேற்கொள்பவர்களையே திண்ணமாக அல்லாஹ் நேசிக்கின்றான். </span>
<span>5:14 “நாங்கள் கிறிஸ்தவர்கள்” என்று கூறிக் கொண்டிருந்தவர்களிடமும் இவ்வாறே நாம் வாக்குறுதி வாங்கியிருந்தோம். அவர்களும்கூட தங்களுக்கு நினைவூட்டப்பட்ட நல்லுரைகளில் பெரும்பகுதியை மறந்தே போயினர். இறுதியில் நாம் அவர்களுக்கிடையே மறுமைநாள் வரை பகைமையையும், காழ்ப்புணர்ச்சியையும் விதைத்து விட்டோம். மேலும், அவர்கள் உலகில் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதனை அல்லாஹ் காண்பித்துத் தருகின்ற ஒரு நேரமும் நிச்சயமாக வரத்தான் போகின்றது. </span>
<span>5:15 வேதம் அருளப்பட்டவர்களே! நம்முடைய தூதர் உங்களிடம் வருகை தந்துள்ளார். இறைவேதத்தில் நீங்கள் மூடிமறைத்துக் கொண்டிருந்த பல விஷயங்களைத் தெள்ளத் தெளிவாய் அவர் விளக்குகின்றார். இன்னும் பல விஷயங்களை மன்னித்தும் விடுகின்றார். அல்லாஹ்விடமிருந்து பேரொளி மிக்க, சத்தியத்தைத் தெளிவாக எடுத்துரைக்கின்ற திருமறை உங்களிடம் வந்துள்ளது. </span>
<span>5:16 அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை விரும்புவோருக்கு அல்லாஹ் அதன் மூலம் சாந்திக்கான வழிகளைக் காண்பிக்கின்றான். மேலும், அவன் தனது கட்டளையைக் கொண்டு இருள்களிலிருந்து அவர்களை வெளியாக்கி ஒளியின் பக்கம் கொண்டு வருகிறான். இன்னும் அவர்களை நேர்வழியின் பக்கம் வழிகாட்டவும் செய்கின்றான். </span>
<span>5:17 திண்ணமாக “மர்யத்தின் குமாரர் மஸீஹ்தான் அல்லாஹ்” என்று கூறியவர்கள், நிச்சயமாக நிராகரித்தவர்களாவார்கள். (நபியே!) அவர்களிடம் நீர் கூறும்: “மர்யத்தினுடைய மகன் மஸீஹையும் அவருடைய அன்னையையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்திட நாடினால் அவனைத் தடுத்திட யாருக்குத் துணிவு உண்டு? வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடையே இருக்கும் அனைத்தின் மீதும் உள்ள அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியவற்றைப் படைக்கின்றான். மேலும், அவனது வலிமை அனைத்தையும் சூழ்ந்து நிற்கிறது.”</span>
<span>5:18 “நாங்கள் அல்லாஹ்வின் புதல்வர்கள்; மேலும், அவனது அன்பிற்குரியவர்கள்” என்றெல்லாம் யூதர்களும், கிறிஸ்தவர்களும் கூறுகின்றார்கள். அவர்களிடம் நீர் கேளும்: “அவ்வாறாயின் உங்களின் பாவச் செயல்களுக்காக அவன் ஏன் உங்களுக்குத் தண்டனை அளிக்கின்றான்?” உண்மையில், அவன் படைத்த மற்ற மனிதர்களைப்போல் நீங்களும் மனிதர்கள்தானே! தான் நாடுபவர்களை அவன் மன்னிக்கின்றான். மேலும் தான் நாடுபவர்களைத் தண்டிக்கின்றான். பூமி, வானங்கள் மற்றும் அவற்றில் உள்ள அனைத்துப் பொருட்களும் அவனுக்கே உரியன. மேலும், அவனிடமே எல்லாரும் செல்ல வேண்டியிருக்கிறது. </span>
<span>5:19 வேதம் அருளப்பட்டவர்களே! தூதர்களின் வருகைத் தொடர் சிறிது காலம் வரை நின்று போயிருந்த சமயத்தில் எம்முடைய இந்தத் தூதர் உங்களிடம் வந்துள்ளார். மேலும், இறைநெறியின் தெளிவான அறிவுரைகளை உங்களுக்குக் கற்றுத் தந்து கொண்டிருக்கின்றார். எதற்காகவெனில், நற்செய்தி கூறக்கூடிய, அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடிய எவரும் எங்களிடம் வரவில்லையே என்று நீங்கள் கூறாமல் இருப்பதற்காக! (இதோ பாருங்கள்:) இப்போது நற்செய்தி கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரும் உங்களிடம் வந்து விட்டார். மேலும், அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கின்றான். </span>
<span>5:20 மூஸா தம் சமூகத்தாரிடம் கூறியதை நினைவு கூருங்கள்: “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களிடையே நபிமார்களைத் தோற்றுவித்தான். உங்களை ஆட்சியாளர்களாகவும் ஆக்கினான். மேலும், உலக மக்களில் எவர்க்கும் வழங்கப்படாதவற்றையெல்லாம் உங்களுக்கு வழங்கினான். </span>
<span>5:21 என் சமூகத்தாரே! உங்களுக்காகவே அல்லாஹ் விதித்துவிட்ட தூய பூமியில் நுழைந்து விடுங்கள்! இன்னும் புறங்காட்டி ஓடாதீர்கள்! நீங்கள் அவ்வாறு செய்தால் பேரிழப்புக்கு ஆளாவீர்கள்.” </span>
<span>5:22 அதற்கவர்கள், “மூஸாவே...! அப்பூமியில் மிக்க வலிமை வாய்ந்தவர்கள் இருக்கின்றார்கள்; அதிலிருந்து அவர்கள் வெளியேறாத வரை நாங்கள் அங்குச் செல்லவே மாட்டோம். ஆயினும் அவர்கள் அதிலிருந்து வெளியேறிவிட்டால், நிச்சயமாக நாங்கள் நுழையத் தயாராய் உள்ளோம்” என்று பதில் தந்தார்கள். </span>
<span>5:23 அவ்வாறு (நுழைய) அஞ்சிக் கொண்டிருந்த மக்களின் மத்தியில் அல்லாஹ்வின் அருளைப் பெற்றிருந்த இருவர் இருந்தனர். அவர்கள் கூறினார்கள்: “வலிமை வாய்ந்தவர்களைப் பொருட்படுத்தாமல் வாயிலினுள் நுழைந்து விடுங்கள்! அவ்வாறு உள்ளே நுழைந்து விடுவீர்களாயின் நீங்கள்தாம் வெற்றியாளர்களாய்த் திகழ்வீர்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயின் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருங்கள்!” </span>
<span>5:24 ஆனால் அவர்கள் மீண்டும் இவ்வாறே கூறினார்கள்: “மூஸாவே! அவர்கள் அங்கு இருக்கும் வரை நாங்கள் ஒருபோதும் அங்குப் போகமாட்டோம். வேண்டுமாயின், நீரும் உம்முடைய இறைவனும் சென்று போரிடுங்கள்; நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கின்றோம்.” </span>
<span>5:25 அதற்கு மூஸா, “என் இறைவனே! என்னையும், என் சகோதரரையும் தவிர நிச்சயமாக வேறு யாரும் என்னுடைய அதிகாரத்தில் இல்லை; எனவே, கீழ்ப்படியாத இம்மக்களிடமிருந்து எங்களைப் பிரித்துவிடுவாயாக!” எனக் கூறினார். </span>
<span>5:26 அதற்கு அல்லாஹ் மறுமொழி பகர்ந்தான்: “அப்படியென்றால் நாற்பதாண்டு காலம் வரைஅந்நாடு அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டதாகும். அவர்கள் பூமியில் அலைக்கழிந்து திரிவார்கள். கீழ்ப்படியாத அந்த மக்களுக்காக நீர் அனுதாபப்படாதீர்!”</span>
<span>5:27 (நபியே!) இனி, அவர்களுக்கு ஆதமுடைய இரு மகன்களின் வரலாற்றைக் கூடுதல் குறைவின்றி எடுத்துரைப்பீராக! அவர்கள் இருவரும் குர்பானி கொடுத்தபோது அவர்களில் ஒருவருடைய குர்பானி ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் மற்றொருவருடையது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இரண்டா மவர், “திண்ணமாக நான் உன்னைக் கொன்றுவிடுவேன்!” என்று கூறினார். அதற்கு முதலாமவர் கூறினார்: “இறையச்சமுடையோரின் வழிபாடுகளை மட்டுமே அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான்; </span>
<span>5:28 நீ என்னைக் கொல்வதற்குக் கை நீட்டினாலும் நான் உன்னைக் கொல்வதற்குக் கை நீட்ட மாட்டேன். நான் அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே அஞ்சுகிறேன். </span>
<span>5:29 என்னுடைய பாவத்தையும் உன்னுடைய பாவத்தையும் நீயே சேகரித்துக் கொண்டு நீ நரகவாசியாகி விடுவதை நான் விரும்புகின்றேன். இதுதான் அக்கிரமக்காரர்கள் புரிந்த கொடுமைக்குச் சரியான கூலியாகும்.” </span>
<span>5:30 இறுதியில் தன்னுடைய சகோதரரைக் கொலை செய்யும்படி அவனுடைய மனம் அவனைத் தூண்டியது. அதனால் அவன் அவரைக் கொலை செய்து பேரிழப்பிற்கு ஆளாகிவிட்டான். </span>
<span>5:31 பிறகு அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியைத் தோண்டிற்று; அவனுடைய சகோதரனின் சடலத்தை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்பதனை அவனுக்குக் காண்பிப்பதற்காக! இதனைக் கண்ணுற்ற அவன், “அந்தோ, என் துயரமே! இந்த காகத்தைப் போன்றுகூட நான் இல்லையே! (அவ்வாறு இருந்திருந்தால்) என்னுடைய சகோதரருடைய சடலத்தை அடக்கம் செய்வதற்கான முறை எனக்குப் புலப்பட்டிருக்குமே! எனப் புலம்பினான். பின்னர், தான் செய்தது குறித்து அவன் பெரிதும் வருந்தினான். </span>
<span>5:32 இதன் காரணமாகவே, இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு நாம் கட்டளை பிறப்பித்தோம்: “எவனொருவன் ஒரு மனிதனைக் கொலை செய்ததற்குப் பகரமாக அன்றி அல்லது பூமியில் குழப்பத்தைப் பரப்பிய காரணத்திற்காக அன்றி வேறு காரணத்திற்காக மற்றவனைக் கொலை செய்கின்றானோ அவன் மனிதர்கள் எல்லோரையும் கொலை செய்தவன் போல் ஆவான். மேலும், எவனொருவன் பிறிதொருவனுக்கு வாழ்வு அளிக்கின்றானோ அவன் எல்லா மனிதர்களுக்கும் வாழ்வு அளித்தவன் போல் ஆவான்.” ஆனால் அவர்களின் நிலை என்னவெனில், நம்முடைய தூதர்கள் (தொடர்ச்சியாக) அவர்களிடம் தெள்ளத் தெளிவான கட்டளைகள் கொண்டு வந்த பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு மீறிய செயல்கள் புரிபவர்களாகவே இருக்கின்றனர். </span>
<span>5:33 எவர்கள் அல்லாஹ்வோடும் அவனுடைய தூதரோடும் போரிடுகின்றார்களோ, மேலும் பூமியில் கலகம் விளைவிக்க தீவிரமாக முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்குரிய தண்டனை இதுதான்: அவர்கள் கொல்லப்பட வேண்டும்; அல்லது தூக்கில் ஏற்றப்பட வேண்டும்; அல்லது அவர்களுடைய மாறுகை, மாறுகால்கள் வெட்டப்பட வேண்டும்; அல்லது அவர்கள் நாடுகடத்தப்பட வேண்டும். இது அவர்களுக்கு உலகில் கிடைக்கும் இழிவாகும். மேலும், மறுமையில் அவர்களுக்கு இதைவிடக் கடுமையான தண்டனை இருக்கிறது. </span>
<span>5:34 எனினும் உங்கள் பிடியில் நீங்கள் அவர்களைக் கொண்டு வருவதற்கு முன் எவர்கள் பாவமன்னிப்புக் கோரினார்களோ நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்: திண்ணமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பு வழங்குபவனும், மிகுந்த கருணை உள்ளவனுமாவான். </span>
<span>5:35 இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; அவன் பக்கம் நெருங்கிச் செல்வதற்கான வழி வகையினைத் தேடுங்கள்; மேலும், அவனுடைய வழியில் கடுமையாகப் பாடுபடுங்கள்! நீங்கள் வெற்றி பெறக்கூடும். </span>
<span>5:36 நன்கு தெரிந்து கொள்ளுங்கள்: எவர்கள் நிராகரிக்கும் போக்கினை மேற்கொள்கின்றார்களோ அவர்களிடம் பூமி முழுவதிலும் உள்ள செல்வம் அனைத்தும், அத்துடன் அதேபோல் இன்னொரு பங்கும் இருந்து அவற்றை மறுமைநாளின் வேதனையிலிருந்து (தாங்கள்) விடுபட ஈடாகக் கொடுக்க விரும்பினாலும் அது அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை கிடைத்தே தீரும்! </span>
<span>5:37 அவர்கள் நரகத்தை விட்டு ஓட நினைப்பார்கள். ஆனால் அவர்கள் அதை விட்டு வெளியேற முடியாது. மேலும், அவர்களுக்கு நிலையான வேதனை தரப்படும். </span>
<span>5:38 திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, அவர்களுடைய கைகளைத் துண்டித்து விடுங்கள். இது அவர்களுடைய சம்பாதனைக்கான கூலியாகும். மேலும், அல்லாஹ் வழங்கும் படிப்பினைமிக்க தண்டனையுமாகும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தோனும் நுண்ணறிவுள்ளோனும் ஆவான். </span>
<span>5:39 எனவே, யாரேனும் அநீதி இழைத்தபின் பாவ மன்னிப்புக்கோரி, தன்னைச் சீர்திருத்திக் கொண்டால் அல்லாஹ்வின் கருணைப் பார்வை அவன் பக்கம் மீண்டும் திரும்புகிறது. நிச்சயமாக, அல்லாஹ் பெரிதும் மன்னிப்பு வழங்குபவனும் அளப்பரிய கருணையுள்ளவனுமாவான். </span>
<span>5:40 அல்லாஹ் வானங்கள், பூமி இவற்றின் ஆட்சிக்கு உரியவன் என்பதை நீர் அறியவில்லையா? தான் நாடுபவர்களை அவன் தண்டிப்பான்; மேலும் நாடுபவர்களை மன்னிப்பான்; அல்லாஹ் யாவற்றின் மீதும் ஆற்றல் உள்ளவனாக இருக்கின்றான். </span>
<span>5:41 தூதரே! நிராகரிப்பில் முனைப்புடன் இருக்கின்றவர்கள் உம்மைக் கவலையில் ஆழ்த்திட வேண்டாம். அவர்கள், “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று வாயளவில் கூறிவிட்டு, உள்ளத்தில் நம்பிக்கை கொள்ளாதவர்களாயினும் சரி, அல்லது யூதர்களைச் சார்ந்தவர்களாய் இருந்தாலும் சரி! அவர்களின் நிலை எவ்வாறு உள்ளதென்றால் பொய்யுரைகளை அதிகமாகச் செவிமடுக்கின்றார்கள்; உங்களிடம் என்றுமே வந்திராத மற்றவர்களுக்காக இரகசியங்களைத் துப்பறிந்து கொண்டு திரிகின்றார்கள். இறைவேதத்தின் சொற்களை அவற்றிற்குரிய சரியான இடங்கள் வரையறுக்கப்பட்டிருக்க, அவற்றின் உண்மையான பொருளிலிருந்து மாற்றுகின்றார்கள். மேலும், அவர்கள் மக்களிடம் “உங்களுக்கு இன்ன கட்டளை கொடுக்கப்பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள்; இல்லாவிடில் ஏற்க மறுத்து விடுங்கள்” என்று கூறுகின்றார்கள். ஒருவனைக் குழப்பத்தில் ஆழ்த்திட வேண்டும் என்று அல்லாஹ் நாடிவிட்டானாகில் அல்லாஹ்வின் பிடியிலிருந்து அவனைக் காப்பாற்ற உம்மால் முடியாது. இவர்களுடைய உள்ளங்களைத் தூய்மை செய்ய அல்லாஹ் நாடவில்லை. இவர்களுக்கு இவ்வுலகிலும் இழிவுதான்; மறுமையிலும் கடும் தண்டனைதான் இருக்கின்றது. </span>
<span>5:42 அவர்கள், பொய்யுரைகளைச் செவியேற்பவர்களும் தடுக்கப்பட்ட பொருள்களை அதிகம் உண்பவர்களுமாவார்கள். எனவே, அவர்கள் உம்மிடம் (தமது வழக்குகளைச் சமர்ப்பிக்க) வந்தால் விரும்பினால் அவர்களுக்குத் தீர்ப்பு வழங்குவதற்கும், அல்லது மறுத்து விடுவதற்கும் உமக்கு உரிமை உண்டு; நீர் மறுத்து விட்டால் அவர்களால் எந்தத் தீங்கும் ஒருபோதும் உமக்குச் செய்து விட முடியாது. மேலும், தீர்ப்பு வழங்குவீராயின் அவர்களிடையே நீதியைக் கொண்டே தீர்ப்பு வழங்குவீராக! திண்ணமாக, அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கின்றான். </span>
<span>5:43 மேலும், உம்மை நீதிபதியாக அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? அவர்களிடமோ அல்லாஹ்வின் சட்டங்கள் அடங்கிய தவ்ராத் இருந்த போதிலும் அவர்கள் அதனைப் புறக்கணித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், அவர்களுக்கு நம்பிக்கை என்பதே இல்லை. </span>
<span>5:44 திண்ணமாக நாம் தவ்ராத்தை இறக்கினோம். அதில் நேர்வழி காட்டுதலும் ஒளியும் இருந்தது. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் அடிபணிந்த நபிமார்கள் அனைவரும் அதைக் கொண்டே இந்த யூதர்(களின் விவகாரங்)களுக்குத் தீர்ப்பளித்து வந்தனர். அவ்வாறே ரப்பானிகளும், அஹ்பாரும்* (அதனைக் கொண்டே தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள்)! ஏனெனில், அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். மேலும், அதற்கு அவர்கள் சாட்சிகளாகவுமிருந்தார்கள். எனவே (யூதக் கூட்டத்தாரே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்! மேலும், என்னுடைய திருவசனங்களை அற்ப விலைக்கு விற்றுவிடாதீர்கள்! எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்பத் தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள்தாம் நிராகரிப்பாளர்கள். </span>
<span>5:45 அ(த் தவ்ராத்)தில் யூதர்கள் மீது “உயிருக்குப் பதில் உயிரும், கண்ணுக்குப் பதில் கண்ணும், மூக்குக்குப் பதில் மூக்கும், காதுக்குப் பதில் காதும், பல்லுக்குப் பதில் பல்லும் (இதே போன்று) காயங்களுக்கும் சமமான முறையில் பழிவாங்கப்படும்” என்று நாம் விதியாக்கியிருந்தோம். ஆயினும், யாரேனும் பழிவாங்காமல் மன்னித்து விட்டுவிடுவாராகில், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள்தாம் அநீதியாளர்கள். </span>
<span>5:46 பிறகு அந்த நபிமார்களின் அடிச்சுவடுகளில் மர்யம் உடைய குமாரர் ஈஸாவை நாம் பின்தொடரச் செய்தோம். தவ்ராத்தி(ன் அறிவுரைகளி)ல் எவை அவர்முன் (எஞ்சி) இருந்தனவோ அவற்றை அவர் மெய்ப்படுத்துபவராய் இருந்தார். மேலும் நாம் அவருக்கு இன்ஜீலை வழங்கினோம். அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. இன்னும் தவ்ராத்தி(ன் அறிவுரைகளி)ல் எவை அப்போது எஞ்சியிருந்தனவோ அவற்றை மெய்யென உறுதிப்படுத்தக் கூடியதாகவும் அது திகழ்ந்தது. மேலும், இறையச்சமுடையவர்களுக்கு முற்றிலும் நேர்வழி காட்டக் கூடியதாகவும், நல்லுரை யாகவும் அது இருந்தது. </span>
<span>5:47 மேலும், இன்ஜீல் அருளப்பட்டவர்கள், அதில் எந்தச் சட்டத்தை அல்லாஹ் இறக்கி வைத்தானோ அந்தச் சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கட்டும் (என்பதே நம் கட்டளையாக இருந்தது)! மேலும், எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கவில்லையோ, அவர்கள்தாம் ஃபாஸிக்கள் பாவிகளாவர். </span>
<span>5:48 பிறகு (நபியே!) சத்தியத்தைத் தாங்கி வந்திருக்கும் இவ்வேதத்தை உம்மளவில் நாம் அனுப்பினோம். இது, அல்கிதாபின் அறிவுரைகளில் தன் முன்னே எவை எஞ்சி நிற்கின்றனவோ அவற்றை உறுதிப்படுத்தக்கூடியதாயும், அவற்றைப் பாதுகாக்கக் கூடியதாயுமிருக்கின்றது; எனவே, நீர் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப மக்களின் விவகாரங்களில் தீர்ப்பளிப்பீராக! மேலும், உம்மிடம் வந்திருக்கும் சத்தியத்தைப் புறக்கணித்துவிட்டு அவர்களுடைய ஆசாபாசங்களைப் பின்பற்றாதீர் நாம் (மனிதர்களாகிய) உங்களில் ஒவ்வொரு சமூகத்தாருக்கும் ஷரீஅத்தையும் ஒரு செயல்வழியையும் அமைத்துத் தந்தோம். அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயமாகவும் ஆக்கியிருக்க முடியும்! ஆனால் அவன் உங்களுக்கு அளித்தவற்றில் உங்களைச் சோதிப்பதற்காகத்தான் (இவ்வாறு செய்தான்). எனவே நன்மைகளில் ஒருவரையொருவர் முந்துவதற்கு முயற்சி செய்யுங்கள்! இறுதியில் நீங்கள் எல்லாரும் அல்லாஹ்வின் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கின்றது. பிறகு நீங்கள் எவற்றைக் குறித்து கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ அவற்றின் உண்மை நிலையை அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான். </span>
<span>5:49 எனவே (நபியே!) அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப அவர்களுடைய விவகாரங்களில் தீர்ப்பளியுங்கள்; அவர்களுடைய ஆசாபாசங்களைப் பின்பற்றாதீர்கள்! அவர்கள் உம்மைக் குழப்பத்திலாழ்த்தி, அல்லாஹ் உம்மீது இறக்கியருளிய அறிவுரைகள் சிலவற்றிலிருந்து (உம்மை) இம்மியளவும் நழுவச் செய்திடா வண்ணம் நீர் அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக! பிறகும் அவர்கள் இதனைப் புறக்கணித்தார்களாயின், அல்லாஹ் அவர்களுடைய சில பாவங்களின் காரணமாக அவர்களைத் துன்பத்திலாழ்த்திடவே நாடிவிட்டான் என்று அறிந்து கொள்ளுங்கள். மேலும், திண்ணமாக அந்த மக்களில் பெரும்பாலோர் வரம்பு மீறியவர்களாவர். </span>
<span>5:50 (அவர்கள் அல்லாஹ்வின் சட்டத்தைப் புறக்கணிக்கிறார்களென்றால்) பிறகு ஜாஹிலியத்தின்* தீர்ப்பினையா அவர்கள் விரும்புகிறார்கள்! ஆயினும் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர்களைப் பொறுத்தவரை, அல்லாஹ்வைவிட நல்ல தீர்ப்பு வழங்கக்கூடியவன் யார்?</span>
<span>5:51 இறைநம்பிக்கை கொண்டவர்களே! யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் உங்கள் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! அவர்களில் சிலர் சிலருக்கு நெருங்கிய நண்பர்களாய் இருக்கின்றனர். மேலும், உங்களில் எவரேனும் அவர்களைத் தம் உற்ற நண்பர்களாய் ஆக்கிக் கொண்டால், அவரும் அவர்களைச் சார்ந்தவராகவே கணிக்கப்படுவார். திண்ணமாக, அல்லாஹ் அக்கிரமக்காரர்களுக்கு நேர்வழி காட்டுவதில்லை. </span>
<span>5:52 எவருடைய உள்ளங்களில் நயவஞ்சகப் பிணி உள்ளதோ அத்தகையோர் அவர்களிடையிலேயே முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதை நீர் காண்கின்றீர். “ஏதேனுமொரு துன்பம் எங்களைப் பிடித்து விடுமோ என்று நாங்கள் அஞ்சுகின்றோம்” என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். ஆயினும், அல்லாஹ் தன்னிடமிருந்து (தீர்க்கமான) வெற்றியையோ ஏதேனுமோர் உதவியையோ அளித்துவிடக்கூடும்; அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்த (நயவஞ்சகத்)தைக் குறித்து வருந்துவார்கள். </span>
<span>5:53 அவ்வேளை இறைநம்பிக்கை கொண்டவர்கள் வினவுவார்கள்: “நாங்களும் உங்களோடுதான் இருக்கின்றோம் என்று பேரார்வத்துடன் கூறி, அல்லாஹ்வைக் கொண்டு மிக உறுதியான முறையில் சத்தியம் செய்தவர்கள் இவர்கள்தாமா?” (இறுதியில்) அந்நயவஞ்சகர்களுடைய எல்லாச் செயல்களும் வீணாகி விட்டன. மேலும், அவர்கள் நஷ்டமடைந்தவர்களாகி விட்டார்கள். </span>
<span>5:54 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் எவரேனும் தனது தீனை நெறியை விட்டுத் திரும்பி விடுவாராயின் (திரும்பிப் போகட்டும்.) அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைத் தோற்றுவிப்பான். (அவர்கள் எத்தகையவர்களாய் இருப்பார்களெனில்) அல்லாஹ் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அல்லாஹ்வை நேசிப்பார்கள். அவர்கள் இறைநம்பிக்கையாளர்களிடம் மென்மையாகவும், நிராகரிப்போரிடம் கடுமையாகவும் இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் கடும் முயற்சிகளை மேற்கொள்வார்கள்; நிந்திப்பவர்களின் எந்த நிந்தனைக்கும் அவர்கள் அஞ்சமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். தான் நாடுகின்றவர்களுக்கு இதனை அவன் அருளுகின்றான். மேலும், அல்லாஹ் பரந்த வளங்களின் உரிமையாளனாகவும் அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான். </span>
<span>5:55 அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், இறை நம்பிக்கையாளர்களும்தாம் உண்மையிலேயே உங்களுக்கு உற்ற நண்பர்கள். (அந்த இறைநம்பிக்கையாளர்கள் எத்தகையோர் எனில்,) தொழுகையை நிலைநாட்டுவார்கள்; மேலும், ஜகாத்தை அளிப்பார்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப்) பணிந்து வாழ்வார்கள். </span>
<span>5:56 எவர் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், இறைநம்பிக்கையாளர்களையும் தம் உற்ற நண்பர்களாய் ஆக்கிக் கொள்கின்றாரோ அவர் தெரிந்து கொள்ளட்டும்: ‘அல்லாஹ்வின் குழுவினர்தாம் வெற்றியாளர்கள்.’</span>
<span>5:57 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டவர்களில் எவர்கள் உங்களுடைய தீனை (நெறியை) கேலிக்கும் விளையாட்டுக்கும் உரித்தாக்கிக் கொண்டார்களோ அவர்களையும், மற்ற நிராகரிப்பாளர்களையும் உங்களின் உற்ற நண்பர்களாய் நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்! நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாய் இருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். </span>
<span>5:58 மேலும், நீங்கள் தொழுகைக்கு அழைப்பு விடுத்தால், அதனை இவர்கள் கேலிக்கும் விளையாட்டுக்கும் உரியதாக எடுத்துக் கொள்கின்றார்கள். இதற்குக் காரணம்: அவர்கள் அறியாத மக்களாய் இருப்பதேயாகும். </span>
<span>5:59 நீர் அவர்களிடம் கூறுவீராக: “வேதம் அருளப்பட்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், எங்களுக்கு இறக்கியருளப்பட்ட அறிவுரைகள் மீதும், இன்னும் எங்களுக்கு முன்னர் அருளப்பட்டவற்றின் மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்பதற்காகத்தான் எங்கள் மீது நீங்கள் வெறுப்புக் காட்டுகின்றீர்கள். மேலும், உங்களில் பெரும்பாலோர் தீயவர்களாகவே இருக்கின்றீர்கள்.” </span>
<span>5:60 மேலும், கூறுங்கள்: “அல்லாஹ்விடத்தில் இ(த்தீய)வர்களின் கதியைவிட இன்னும் மோசமான கதியுடையோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” எவர்களை அல்லாஹ் சபித்தானோ, எவர்கள் மீது கோபம் கொண்டானோ, மேலும் எவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மாற்றினானோ மேலும் எவர்கள் தாஃகூத்துக்கு அடிபணிந்தார்களோ அத்தகையவர்கள்தாம் அவர்களைவிட மிகவும் தரங்கெட்டவர்கள்; மேலும், அவர்கள் செம்மையான பாதையிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றவர்கள் ஆவர். </span>
<span>5:61 அவர்கள் உங்களிடம் வரும்போது “நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்று கூறுகிறார்கள். ஆயினும் அவர்களோ இறைநிராகரிப்புடன்தான் வந்தார்கள்; இறைநிராகரிப்புடன்தான் திரும்பியும் சென்றார்கள். மேலும், (தம் உள்ளங்களில்) அவர்கள் மறைத்திருப்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாய் இருக்கின்றான். </span>
<span>5:62 மேலும், அவர்களில் பெரும்பாலோர் பாவத்திலும், வரம்பு மீறிய செயல்களிலும், விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலும் விரைந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதை நீர் காணுகிறீர். அவர்கள் செய்து கொண்டிருக்கும் செயல்கள் எத்துணைத் தீமையானவை! </span>
<span>5:63 தீய வார்த்தைகளைப் பேசுவதிலிருந்தும், விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலிருந்தும் அவர்களின் குருமார்களும் அறிஞர்களும் அவர்களை ஏன் தடுப்பதில்லை? வாழ்நாள் முழுவதும் இவர்கள் புரிந்து வரும் சாதனை எத்துணை மோசமானது!</span>
<span>5:64 யூதர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது.” கட்டப்பட்டிருப்பவை அவர்களுடைய கைகள்தாம். அவர்கள் பேசிக் கொண்டிருந்த இந்தப் பேச்சின் காரணமாக சாபத்திற்குள்ளானார்கள். அல்லாஹ்வின் கைகளோ விரிந்திருக்கின்றன. தான் நாடும் விதத்தில் அவன் அள்ளி வழங்குகின்றான். (உண்மை யாதெனில்) உம்முடைய இறைவனிடமிருந்து உம்மளவில் இறக்கிவைக்கப்பட்ட இவ்வேதம் அவர்களில் பெரும்பாலோரிடம் வரம்பு மீறலையும், அசத்தியப்போக்கையும் இன்னும் அதிகப்படுத்திவிட்டது. மேலும் (இதற்குத் தண்டனையாக) மறுமைநாள் வரை அவர்களிடையே பகைமையையும் வெறுப்பு உணர்ச்சியையும் நாம் விதைத்து விட்டோம். போர் நெருப்பை அவர்கள் மூட்டும் போதெல்லாம் அல்லாஹ் அதனை அணைத்து விடுகின்றான். அவர்கள் பூமியில் குழப்பத்தைப் பரப்ப முயற்சி செய்கிறார்கள். (ஆனால்) இத்தகைய குழப்பவாதிகளை அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லை. </span>
<span>5:65 வேதம் அருளப்பட்டவர்கள் (இவ்வரம்பு மீறிய போக்கினைக் கைவிட்டு) இறைநம்பிக்கை கொண்டு, மேலும் இறையச்சத்துடன் செயல்பட்டிருந்தால், அவர்களின் தீமைகளை அவர்களை விட்டு நாம் அகற்றியிருப்போம். மேலும் அருட்கொடை நிரம்பிய சுவனங்களில் அவர்களை நுழையச் செய்திருப்போம். </span>
<span>5:66 மேலும், தவ்ராத்தையும் இன்ஜீலையும் மற்றும் தம் இறைவனிடமிருந்து தமக்கு இறக்கியருளப்பட்ட இதர வேதங்களையும் அவர்கள் முழுமையாக நிலைநாட்டியிருந்தால் அவர்களுக்காக ஆகாரம் மேலிருந்தும் பொழிந்திருக்கும்; கீழிருந்தும் பொங்கிப் பெருகியிருக்கும். ஆயினும் அவர்களில் சிலர் நேர்மையாளர்களாய் இருக்கின்றனர். எனினும், அவர்களில் பெரும்பாலோர் தீய செயல்கள் புரிபவர்கள் ஆவார்கள். </span>
<span>5:67 தூதரே! உம்முடைய இறைவனிடமிருந்து உம்மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுவீராக! நீர் அவ்வாறு செய்யாவிடில் அவன் வழங்கிய தூதுத்துவப் பொறுப்பை நிறைவேற்றியவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களின் தீங்கிலிருந்து காப்பாற்றுபவனாக இருக்கின்றான். (உங்களுக்கு எதிராக) நிராகரிப்போருக்கு வெற்றிக்கான பாதையை அல்லாஹ் ஒருபோதும் காண்பிக்க மாட்டான். </span>
<span>5:68 “வேதம் அருளப்பட்டவர்களே! தவ்ராத்தையும், இன்ஜீலையும் மற்றும் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட இதர வேதங்களையும் முழுமையாகச் செயல்படுத்தாதவரை, நீங்கள் எந்த அடிப்படையிலும் இல்லை” என்று (நபியே!) தெளிவாய்க் கூறிவிடுங்கள். உம்மீது இறக்கி வைக்கப்பட்ட இந்த வேதக் கட்டளை அவர்களில் பெரும்பாலோரிடம் வரம்பு மீறலையும், நிராகரிப்பையுமே இன்னும் அதிகப்படுத்தி விட்டது. ஆயினும் நிராகரிப்போரின் நிலை குறித்துச் சிறிதும் நீர் வருந்தாதீர்! </span>
<span>5:69 (இங்கு யாருக்கும் எதிலும் ஏகபோக உரிமை கிடையாது என்பதனை நன்கறிந்து கொள்ளுங்கள்.) முஸ்லிம்கள், யூதர்கள், ஸாபிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோரில், யார் அல்லாஹ்வின் மீதும், மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொண்டு, நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். </span>
<span>5:70 உண்மையில் நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் (வலுவான) வாக்குறுதி வாங்கினோம். மேலும், அவர்களிடம் இறைத்தூதர்கள் பலரையும் அனுப்பினோம். (ஆயினும்) யாரேனும் ஒரு தூதர் அவர்களின் மனம் விரும்பாதவற்றை அவர்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் (தூதர்களில்) சிலரை அவர்கள் பொய்யர் எனத் தூற்றினர்; சிலரைக் கொலை செய்தனர். </span>
<span>5:71 இதனால் எந்த ஃபித்னாவும் (குழப்பமும்) ஏற்படாது என்றும் தாங்களாகவே எண்ணிக் கொண்டார்கள். இவ்வாறு அவர்கள் குருடர்களாயும், செவிடர்களாயும் ஆகிவிட்டார்கள். பின்னர் அல்லாஹ் அவர்களை மன்னித்தபோது அவர்களில் பெரும்பாலோர் இன்னும் அதிகமாக குருடர்களாயும் செவிடர்களாயும் ஆகிவிட்டனர். அவர்கள் செய்கின்ற எல்லாச் செயல்களையும் அல்லாஹ் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றான். </span>
<span>5:72 திண்ணமாக, “மர்யம் உடைய குமாரர் மஸீஹ்தான் அல்லாஹ்” என்று கூறியவர்கள் சந்தேகமின்றி நிராகரித்தவர்களாகிவிட்டார்கள். உண்மையில் மஸீஹ் இப்படித்தான் கூறியிருந்தார்: “இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்!” எவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்றானோ, அவனுக்குத் திண்ணமாக அல்லாஹ் சுவனத்தைத் தடை செய்திருக்கின்றான். மேலும், அவனுடைய இருப்பிடம் நரகமாகும். மேலும், இத்தகைய அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் யாருமில்லை. </span>
<span>5:73 நிச்சயமாக, அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்களும் திண்ணமாக நிராகரிப்பாளர்களாகி விட்டார்கள். உண்மையில் ஒரே இறைவனைத் தவிர வேறு எந்த இறைவனு மில்லை. தாம் இவ்வாறு கூறுவதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளவில்லையாயின், இத்தகைய நிராகரிப்பாளர்கள் அனைவர்க்கும் துன்புறுத்தும் தண்டனை கொடுக்கப்பட்டே தீரும். </span>
<span>5:74 (அவ்வாறிருக்க) அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் மீண்டு அவனிடத்தில் பாவமன்னிப்புக் கோரிட வேண்டாமா? மேலும், அல்லாஹ் பெரிதும் மன்னிப்பு வழங்குபவனும், மாபெரும் கருணையாளனும் ஆவான். </span>
<span>5:75 மர்யத்தின் குமாரர் மஸீஹ் ஓர் இறைத்தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன் இறைத்தூதர்கள் பலர் சென்றிருக்கிறார்கள். மேலும், அவருடைய அன்னை வாய்மையுள்ள ஒரு பெண்மணியாவார். அவ்விருவரும் உணவு உண்பவர்களாகவே இருந்தார்கள். பாருங்கள்! நாம் (சத்தியத்திற்கான) சான்றுகளை எவ்வாறெல்லாம் அவர்களுக்குத் தெளிவாக்குகின்றோம். மீண்டும் பாருங்கள்; அவர்கள் எவ்வாறெல்லாம் உண்மையை விட்டுப் பிறழ்ந்து செல்கிறார்கள். </span>
<span>5:76 நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு இழப்பையோ லாபத்தையோ அளிப்பதற்கு சக்தியில்லாதவற்றையா நீங்கள் வணங்குகின்றீர்கள்? ஆனால் அல்லாஹ்தான் யாவற்றையும் செவியேற்பவனும் நன்கு அறிபவனும் ஆவான்.” </span>
<span>5:77 நீர் கூறும்: “வேதம் அருளப்பட்டவர் களே! உங்கள் தீனில் (நெறியில்) அநியாயமாக எதையும் மிகைப்படுத்தாதீர்கள்! மேலும், உங்களுக்கு முன்னர் தாமும் வழிகெட்டு, பலரையும் வழிகெடுத்து மேலும், நேரிய வழியிலிருந்து தடம்புரண்டு போன மக்களுடைய விருப்பங்களை நீங்கள் பின்பற்றாதீர்கள்!”</span>
<span>5:78 இஸ்ராயீலின் வழித்தோன்றலில் எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்கள் தாவூது மற்றும் மர்யத்தின் குமாரர் ஈஸா ஆகியோரின் நாவினால் சபிக்கப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் (இறைக்கட்டளைக்கு) மாறு செய்தார்கள். மேலும், இறைவரம்புகளை மீறியவாறு இருந்தார்கள். </span>
<span>5:79 தாம் செய்து கொண்டிருந்த தீய செயலிலிருந்து அவர்கள் ஒருவரையொருவர் தடுக்காமல் இருந்தார்கள். இவ்வாறு அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்கள் யாவும் மிகவும் தரங்கெட்டவையாய் இருந்தன. </span>
<span>5:80 இன்று அவர்களில் பெரும்பாலோர் (இறைநம்பிக்கையாளர்களுக்கு எதிராக) நிராகரிப்பாளர்களுக்கு ஆதரவாளர்களாயும், உற்ற நண்பர்களாயுமிருப்பதை நீர் காண்கிறீர். சந்தேகமின்றி அவர்கள் தமக்காக சம்பாதித்தவை எத்துணைத் தரங்கெட்டவை! இதனாலேயே அல்லாஹ் அவர்கள் மீது கோபங் கொண்டான். மேலும் நிரந்தரமான வேதனைக்கு அவர்கள் பலியாவார்கள். </span>
<span>5:81 உண்மையிலேயே அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறைத்தூதரின் மீதும் அவருக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருப்பார்களாயின் (நம்பிக்கையாளர்களுக்கு எதிராக) நிராகரிப்போரை தம் உற்ற நண்பர்களாய் ஒருபோதும் ஆக்கிக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிவதிலிருந்து விலகிச் சென்றுவிட்டனர். </span>
<span>5:82 திண்ணமாக யூதர்களும், இணைவைப்பவர்களும் மற்ற அனைத்து மக்களையும் விட இறைநம்பிக்கையாளர்களுக்குக் கடும் பகைவர்களாக இருப்பதை (நபியே!) நீர் காண்பீர். நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களே என்று சொல்பவர்கள்தாம் மற்ற அனைவரையும்விட இறைநம்பிக்கையாளர்களுடன் நேசம் கொண்டிருப்பதை நீர் காண்பீர். இதற்குக் காரணம் அவர்களுள் வணக்கத்தில் திளைத்த அறிஞர்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும், அவர்கள் அகந்தை கொண்டவர்களாகவும் இல்லை. </span>
<span>5:83 இறைத்தூதர் மீது இறக்கியருளப்பட்ட இவ் வேதத்தை அவர்கள் செவியுறும்போது சத்தியத்தை அவர்கள் அறிந்து கொண்டதன் விளைவாக அவர்களின் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்கிறீர். மேலும், அவர்கள் இறைஞ்சுகின்றார்கள்: “எங்கள் இறைவனே! நாங்கள் நம்பிக்கை கொண்டுவிட்டோம். எனவே சாட்சி வழங்குபவர்களில் எங்கள் பெயர்களையும் எழுதி வைப்பாயாக!” </span>
<span>5:84 மேலும், அவர்கள் கூறுகிறார்கள்: “எங்களுடைய இறைவன் எங்களை ஒழுக்க நலமுடையவர்களோடு இணைத்தருள வேண்டுமென்று நாங்கள் பேராவல் கொண்டிருக்க, அல்லாஹ்வின் மீதும், எங்களிடம் வந்த சத்தியத்தின் மீதும் எவ்வாறு நாங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருப்போம்?” </span>
<span>5:85 அவர்கள் இவ்வாறு கூறியதால் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனத் தோட்டங்களை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கினான். அதில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். இதுவே நன்மை புரிவோருக்கான கூலியாகும். </span>
<span>5:86 மேலும் எவர்கள் நம் திருவசனங்களை நிராகரித்து, அவற்றைப் பொய்யானவை என வாதிட்டார்களோ அத்தகையோர் நரகவாசிகளே ஆவர்!</span>
<span>5:87 இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த தூய பொருள்களை ஹராமானவை விலக்கப்பட்டவையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்! மேலும், வரம்பு மீறாதீர்கள்! திண்ணமாக வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். </span>
<span>5:88 அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள பொருள்களில் அனுமதிக்கப்பட்டதும், தூய்மையானதுமான பொருள்களை உண்ணுங்கள் (பருகுங்கள்)! மேலும், எந்த இறைவன்மீது நீங்கள் நம்பிக்கை கொண்டு இருக்கின்றீர்களோ அவனுக்கு மாறு செய்வதிலிருந்து விலகி வாழுங்கள்!</span>
<span>5:89 நீங்கள் செய்த வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிப்பதில்லை. ஆயினும் நீங்கள் உறுதிப்படுத்திச் செய்த சத்தியங்களுக்காக (அவற்றை நீங்கள் முறித்துவிட்டால்) உங்களை அவன் நிச்சயம் தண்டிப்பான். (முறித்துவிட்ட) சத்தியத்திற்கான குற்றப்பரிகாரம் (இதுதான்): நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்கு அளிக்கின்ற உணவுகளில் நடுத்தரமான வகையிலிருந்து பத்து வறியவர்களுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு ஆடைகள் வழங்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். ஆனால் (இவற்றில்) எதற்கும் சக்தி பெறாதவர்கள் மூன்று நாட்களுக்கு நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் செய்த சத்தியங்களை முறித்து விட்டால், இதுதான் அவற்றுக்குரிய குற்றப்பரிகாரமாகும். எனவே உங்கள் சத்தியங்களை (முறித்துவிடாமல்) பேணுங்கள்! இவ்வாறு தன்னுடைய சட்ட திட்டங்களை அல்லாஹ் உங்களுக்குத் தெளிவாக்குகின்றான்; நீங்கள் நன்றி செலுத்துபவராய்த் திகழக் கூடும் என்பதற்காக!</span>
<span>5:90 இறை நம்பிக்கை கொண்டவர்களே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். அவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்! அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம். </span>
<span>5:91 மது மற்றும் சூதாட்டத்தின் வாயிலாக உங்களுக்கிடையில் பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி அல்லாஹ்வை நினைவுகூர்வதிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவே ஷைத்தான் விரும்புகிறான். இதற்குப் பிறகாவது நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்வீர்களா? </span>
<span>5:92 அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள் (மாறு செய்வதிலிருந்து) விலகியிருங்கள். இதனை (ஆணையை) நீங்கள் புறக் கணித்து விட்டால் (நமது தூதைத்) தெள்ளத் தெளிவாய் எடுத்துரைப்பது மட்டுமே நமது தூதர் மீது கடமையாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். </span>
<span>5:93 இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள், (முன்னர்) எதையும் உண்டவை பற்றி அவர்கள் மீது குற்றமில்லை. (ஆனால் இனி) தடுக்கப்பட்ட பொருள்களிலிருந்து அவர்கள் விலகியிருக்க வேண்டும். மேலும், இறைநம்பிக்கையில் உறுதியாக நிலைத்திருப்பவர்களாகவும், நற்செயல் புரிபவர்களாகவும், இன்னும் எந்த எந்தப் பொருள்களைவிட்டு தடுக்கப்படுகின்றனரோ அவற்றிலிருந்து விலகியிருப்பவர்களாகவும், மேலும் இறைக் கட்டளைகளை ஏற்று வாழ்பவர்களாகவும் இன்னும் இறையச்சத்துடன் நன்னடத்தையை மேற்கொள்பவர்களாகவும் திகழ வேண்டும். அல்லாஹ் நன்னடத்தையுடையோரை நேசிக்கின்றான். </span>
<span>5:94 இறைநம்பிக்கை கொண்டவர்களே! (இஹ்ராமுடைய நிலையில்) உங்கள் கைகளும் உங்கள் ஈட்டிகளும் (சுலபமாக) அடையக்கூடிய வேட்டைப் பிராணிகள் ஏதாவதொன்றின் மூலம் அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். மறைவான நிலையிலும் தன்னை அஞ்சக்கூடியவர்கள் யார் என்று அல்லாஹ் அறிந்து கொள்வதற்காக! இவ்வாறு எச்சரித்த பிறகு யார் (அல்லாஹ் நிர்ணயித்த) வரம்பை மீறுகின்றாரோ அவருக்குத் துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது. </span>
<span>5:95 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராமுடைய நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! மேலும், உங்களில் யாரேனும் வேண்டுமென்றே வேட்டை(யாடி)ப் பிராணியைக் கொன்றுவிட்டால், அதற்குப் பரிகாரமாக அவர், தான் கொன்ற பிராணிக்குச் சமமான ஒரு பிராணியைக் கால்நடைகளிலிருந்து பலி கொடுக்க வேண்டும். உங்களில் இரு நீதியாளர்கள் அதனைத் தீர்மானிக்க வேண்டும். அந்தப் பலிப் பிராணி கஅபாவில் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். அல்லது (அச்செயலுக்கு) குற்றப்பரிகாரமாக ஏழை எளியவர்களுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்குச் சமமாக அவர் நோன்பு நோற்க வேண்டும். தான் செய்த தீய செயலின் விளைவை அவர் சுவைப்பதற்காகவே (இவ்வாறு விதிக்கப்பட்டுள்ளது). முன்பு செய்தவற்றையெல்லாம் அல்லாஹ் மன்னித்து விட்டான். எனவே யாரேனும் மீண்டும் அச்செயலைப் புரிந்தால், அல்லாஹ் அவரைப் பழிவாங்குவான். மேலும், அல்லாஹ் யாவரையும் மிகைத்தவனாகவும், பழிவாங்கும் ஆற்றல் உடையவனாகவும் இருக்கின்றான். </span>
<span>5:96 (இஹ்ராமுடைய நிலையில்) நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கும் பயணக்கூட்டத்தாருக்கும் பயன் தருவதற்காக கடல் வேட்டையும் அதனை உண்பதும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆயினும், நீங்கள் இஹ்ராமுடைய நிலையில் இருக்கும் வரை தரையில் வேட்டையாடுவது உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது. யார் முன்னிலையில் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்பட இருக்கின்றீர்களோ அந்த இறைவனுக்கு மாறு செய்வதைத் தவிர்த்து வாழுங்கள்!</span>
<span>5:97 அல்லாஹ், கண்ணியமிக்க ஆலயமாகிய கஅபாவை மக்களுக்கு (அவர்களின் கூட்டு வாழ்க்கைக்கான) கேந்திரமாய் அமைத்தான். மேலும், சங்கைக்குரிய மாதத்தையும், பலி பிராணிகளையும் (அவற்றின் கழுத்தில் இடப்பட்ட) அடையாள மாலைகளையும் இதற்குத் துணை புரியக் கூடியனவாய் ஆக்கினான். எதற்கு எனில் நீங்கள் இதனை நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக! வானங்களில் உள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் அல்லாஹ் திண்ணமாக நன்கு அறிகின்றான்; மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கு அறிபவனாக இருக்கின்றான். </span>
<span>5:98 இன்னும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்! திண்ணமாக, அல்லாஹ் தண்டனையளிப்பதில் கடுமையானவன்; மேலும், அல்லாஹ் பெரிதும் மன்னிப்பு வழங்குபவனாகவும் மாபெரும் கருணையாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>5:99 தூதுச் செய்தியை எடுத்துரைப்பதே தூதரின் பொறுப்பாகும்; நீங்கள் வெளிப்படுத்துகின்றவற்றையும், மூடி மறைக்கின்றவற்றையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான். </span>
<span>5:100 (நபியே!) நீர் அவர்களிடம் கூறிவிடும்: “தூய்மையானவையும், தூய்மையற்றவையும் ஒரு போதும் சமமாகமாட்டா. தூய்மையில்லாதவை பெருகிக்கிடப்பது உம்மை வியப்பில் ஆழ்த்தினாலும் சரியே! எனவே அறிவுடைய மக்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதை விட்டு விலகியே வாழுங்கள்; நீங்கள் வெற்றி பெறக்கூடும்.”</span>
<span>5:101 இறைநம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்கள் உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும். அவற்றைப் பற்றி நீங்கள் வினவாதீர்கள். ஆயினும் குர்ஆன் இறக்கியருளப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவற்றைப் பற்றி நீங்கள் வினவினால் அப்போது அவை உங்களுக்கு வெளிப்படையாகக் கூறப்பட்டு விடும். நீங்கள் (இதுவரை) கேட்டவற்றை அல்லாஹ் மன்னித்துவிட்டான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் சகிப்புத்தன்மையுடையவனாகவும் இருக்கின்றான். </span>
<span>5:102 உங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு கூட்டத்தார் இத்தகைய கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பிறகு அவற்றின் காரணமாகவே அவர்கள் நிராகரிப்பில் ஆழ்ந்து விட்டார்கள். </span>
<span>5:103 ‘பஹீரா’, ஸாயிபா, வஸீலா, ஹாம்,* என்பனவற்றை யெல்லாம் அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. ஆயினும் நிராகரிப்போர்தான் அல்லாஹ்வின் மீது பொய்களைப் புனைந்து கூறுகின்றனர். மேலும், அவர்களில் பெரும்பாலோர் (இத்தகைய மூட நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு) அறிவற்றவர்களாய் இருக்கின்றனர். </span>
<span>5:104 “மேலும், அல்லாஹ் இறக்கி வைத்த சட்டத்தின் பக்கமும், இறைத்தூதரின் பக்கமும் வாருங்கள்!” என்று அவர்களிடம் கூறப்படுமாயின் “எங்கள் மூதாதையர் எவ்வழியில் வாழக்கண்டோமோ அவ்வழியே எங்களுக்குப் போதுமானது” என்று பதில் கூறுகிறார்கள். இவர்களின் மூதாதையர் எதையும் புரியாதவர்களாகவும், நேர்வழியைக் குறித்து எதையும் அறியாதவர்களாகவும் இருந்தாலுமா அவர்களை இவர்கள் பின்பற்றிச் செல்வார்கள்?</span>
<span>5:105 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுங்கள்! நீங்கள் நேர்வழியில் இருந்தால் மற்றவர்களின் வழிகேடு உங்களுக்கு எந்தத் தீங்கையும் செய்திடாது. அல்லாஹ்விடமே நீங்கள் அனைவரும் திரும்பிச் செல்லவேண்டியுள்ளது. பின்னர் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான். </span>
<span>5:106 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் எவருக்கேனும் மரண வேளை நெருங்கி விட்டால், அவர் வஸிய்யத் மரண சாசனம் தரும் நேரத்தில் அதைப் பற்றிச் சாட்சியம் அளிப்பதற்கான விதிமுறை இதுவே; உங்களிடையே நீதமுள்ள இருவர் சாட்சிகளாக்கப்பட வேண்டும். அல்லது நீங்கள் பயணம் செய்து கொண்டிருக்கும்போது மரண வேதனை உங்களுக்கு வந்துவிட்டால் உங்களைத் தவிர வேறு இருவரைச் சாட்சிகளாய் ஆக்கிக்கொள்ள வேண்டும். அவர்களைப் பற்றி நீங்கள் சந்தேகம் கொள்வீர்களாயின் தொழுகைக்குப் பிறகு (பள்ளியில்) அவர்களை நீங்கள் தடுத்து வையுங்கள்! அவ்விருவரும் இறைவன் மீது ஆணையிட்டு (இவ்வாறு) கூறவேண்டும்: “நாங்கள் சொந்த லாபத்திற்காக சாட்சியத்தை விற்கமாட்டோம். மேலும், யாருக்காக சாட்சி சொல்கிறோமோ அவர் எங்கள் உறவினராக இருந்தாலும் சரியே! (அதற்காக அவருக்கு எந்தச் சலுகையும் காட்ட மாட்டோம்.) மேலும், அல்லாஹ்வுக்காக கூறும் சாட்சியத்தில் நாங்கள் எதையுமே மறைக்க மாட்டோம். அவ்வாறு செய்வோமாயின் திண்ணமாக நாங்கள் பாவிகளாகி விடுவோம்.” </span>
<span>5:107 ஆனால் அவ்விருவரும் (பொய் சாட்சியம் கூறி) பாவத்திற்கு ஆளாகி விட்டார்கள் என்று திண்ணமாக அறியப்பட்டால் உரிமை பாதிக்கப்பட்டவர்களிலிருந்து அதிகத் தகுதி வாய்ந்த வேறு இருவர் அவ்விருவருடைய இடத்தில் (சாட்சிகூற) நிற்க வேண்டும். மேலும், “எங்களுடைய சாட்சியம் திண்ணமாக அவ்விருவருடைய சாட்சியத்தை விட வாய்மையானது. நாங்கள் (சாட்சியங் கூறுவதில்) வரம்பு மீறவில்லை. அவ்வாறு வரம்பு மீறியிருந்தால் திண்ணமாக நாங்கள் கொடுமைக்காரர்களாகி விடுவோம்” என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூற வேண்டும். </span>
<span>5:108 மக்கள் சரியான முறையில் சாட்சியம் அளிப்பதற்கு அல்லது (குறைந்தபட்சம்) தம் சாட்சியங்களுக்குப் பிறகு (பிறர் சாட்சியம் அளித்து) தம் சாட்சியங்கள் மறுக்கப்பட்டு விடுமோ என அவர்கள் அஞ்சி, (உண்மையாக) சாட்சி அளிப்பதற்கு இந்த வழிமுறைதான் அதிகப் பொருத்தமானதாகும். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழுங்கள்! அவனுக்கே செவிசாயுங்கள்! அல்லாஹ் (தனது கட்டளைக்கு) கீழ்ப்படியாதவர்களை நேர்வழிப்படுத்துவதில்லை. </span>
<span>5:109 அல்லாஹ் எல்லா இறைத்தூதர்களையும் ஒன்று சேர்த்து, “உங்களு(டைய அழைப்பு)க்கு அளிக்கப்பட்ட மறுமொழி என்ன?” என்று கேட்கும் நாளில், “எங்களுக்கு எதுவும் தெரியாது. மறைவான உண்மைகள் அனைத்தையும் நன்கு அறிந்தவன் நீயே!” என்று அவர்கள் (பணிந்து) கூறுவார்கள். </span>
<span>5:110 அல்லாஹ், இவ்வாறு கூறும் சந்தர்ப்பத்தை நினைத்துப் பாருங்கள்: “மர்யத்தின் குமாரர் ஈஸாவே! நான் உமக்கும் உம்முடைய அன்னைக்கும் வழங்கியிருந்த அருட்கொடைகளை நினைவுகூரும். பரிசுத்த ஆன்மாவின் மூலம் உமக்கு நான் உதவி செய்திருந்தேன். (அதனால்) நீர் தொட்டில் பருவத்திலும் பக்குவமான வயதை அடைந்த பின்பும் மக்களிடம் உரையாடினீர்; மேலும், நான் உமக்கு வேதத்தையும் நுண்ணறிவையும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் கற்றுத் தந்திருந்தேன். மேலும், நீர் எனது கட்டளைப்படி களிமண்ணிலிருந்து பறவையின் உருவத்தைப் போல் ஒன்றைச் செய்து அதில் ஊதினீர். அது எனது கட்டளைப்படி (உயிருள்ள) பறவையாகிவிட்டது. நீர் பிறவிக் குருடனையும், வெண்குஷ்டக்காரனையும் எனது கட்டளைப்படி குணப்படுத்தினீர். நீர் மரணித்தவர்களை எனது கட்டளைப்படி வெளிக்கொணர்ந்தீர். மேலும், நீர் இஸ்ராயீலின் வழித்தோன்றலிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டுசென்ற போது, அவர்களில் சத்தியத்தை நிராகரித்துக் கொண்டிருந்தவர்கள் “இச்சான்றுகள் தெளிவான சூனியமே அன்றி வேறில்லை” என்று கூறிய வேளையில், அவர்களை விட்டும் நான் உம்மைக் காப்பாற்றிய சந்தர்ப்பத்தையும் நினைத்துப் பாரும்!” </span>
<span>5:111 மேலும், “என்மீதும், என்னுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்!” என்று திருத்தொண்டர்களாகிய ஹவாரிகளுக்கு நான் உணர்த்தியபோது அவர்கள் “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்; மேலும், நாங்கள் முஸ்லிம்கள் (முற்றிலும் அடிபணிந்தவர்கள்) என்பதற்கு நீ சாட்சியாக இருப்பாயாக!” என்று கூறினார்கள். </span>
<span>5:112 ஹவாரிகள் (இவ்வாறு) கேட்டதையும் நினைவு கூரும்: “மர்யத்தின் குமாரர் ஈஸாவே! உம்முடைய இறைவனால் வானத்திலிருந்து ஓர் உணவுத் தட்டை எங்களுக்கு இறக்கி வைக்க முடியுமா?” அதற்கு ஈஸா “நீங்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களாய் இருப்பின், அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!” என்று பதில் தந்தார். </span>
<span>5:113 அதற்கு அவர்கள் “நாங்கள் விரும்புவது இவற்றை மட்டுமே: நாங்கள் அத்தட்டிலிருந்து புசிக்க வேண்டும். அதன் மூலம் எங்கள் உள்ளங்கள் நிம்மதி அடைய வேண்டும்; மேலும் நீர் எங்களிடம் கூறியவை அனைத்தும் உண்மையானவை என்று நாங்கள் அறிந்து அதற்குச் சாட்சிகளாக இருக்க வேண்டும் என்பதுதான்” என்று கூறினார்கள். </span>
<span>5:114 மர்யத்தின் குமாரர் ஈஸா “அல்லாஹ்வே! எங்கள் அதிபதியே! வானத்திலிருந்து எங்களுக்கு ஓர் உணவுத்தட்டை இறக்கி வைப்பாயாக! அது, எங்களுக்கும் எங்கள் காலத்தில் வாழ்பவர்களுக்கும் இனி வரக்கூடியவர்களுக்கும் மகிழ்ச்சிக்குரிய வாய்ப்பாகவும் மேலும், உன்னிடமிருந்து ஒரு சான்றாகவும் திகழட்டும்! மேலும், எங்களுக்கு ஆகாரம் வழங்குவாயாக! வழங்குவோரில் மிகச் சிறந்தவன் நீயே!” என்று இறைஞ்சினார். </span>
<span>5:115 அதற்கு அல்லாஹ், “நான் உங்களுக்கு அதனை இறக்கித் தருகிறேன். ஆனால், அதன் பின்னர் உங்களில் யாரேனும் நிராகரித்தால், அகிலத்தாரில் இதுவரை யாரையும் தண்டிக்காத அளவுக்கு அவரை நான் மிகவும் கடுமையாகத் தண்டிப்பேன்” என பதில் அளித்தான். </span>
<span>5:116 (ஆக இப்பேருதவிகளையெல்லாம் நினைவுபடுத்தி) அல்லாஹ் இவ்வாறு வினவுவான்: “மர்யத்தின் குமாரர் ஈஸாவே! ‘அல்லாஹ்வை விடுத்து என்னையும் என் அன்னையையும் கடவுள்களாக எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று நீர் மக்களிடம் கூறினீரா?” (அப்போது) அவர் பணிந்து கூறுவார்: “தூய்மை அனைத்தும் உனக்கே! எனக்கு உரிமையில்லாதவற்றைக் கூறுவது என்னுடைய பணியல்ல. அவ்வாறு நான் கூறி இருந்தால் அதனை நிச்சயம் நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் இருப்பவற்றை நீ அறிவாய்; ஆனால் உன் உள்ளத்திலிருப்பவற்றை நான் அறியமாட்டேன். திண்ணமாக மறைவான உண்மைகள் அனைத்தையும் நீ நன்கறிந்தவனாகவே இருக்கின்றாய். </span>
<span>5:117 “என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வுக்கே அடிபணியுங்கள்!” என்று நீ எனக்குக் கட்டளையிட்டதைத் தவிர வேறெதனையும் நான் அவர்களுக்குக் கூறவில்லை. நான் அவர்களோடு இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டபோது நீயே அவர்களையும் கண்காணிப்பவனாக இருந்தாய்! மேலும் நீ அனைத்தையும் கண்காணிப்பவனாக இருக்கின்றாய். </span>
<span>5:118 (இப்போது) நீ அவர்களுக்குத் தண்டனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடிமைகளே! நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும், நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய்.” </span>
<span>5:119 அப்போது அல்லாஹ் கூறுவான்: “உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மை பயனளிக்கக்கூடிய நாளாகும் இது. இத்தகையோருக்கு, கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்கள் உண்டு. அங்கு அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் அவர்களைப் பற்றி திருப்தி கொண்டான்; அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி கொண்டார்கள். இதுவே மாபெரும் வெற்றியாகும்.”</span>
<span>5:120 வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ள அனைத்துப் படைப்புகளின் பேராட்சி அல்லாஹ்வுக்கே உரியதாகும். மேலும், அவன் யாவற்றின் மீதும் பேராற்றல் கொண்டவனாய் இருக்கின்றான்!</span>
</div><div>
<span>அல்அன்ஆம்</span>
<span>6:1 வானங்களையும், பூமியையும் படைத்து இருள்களையும், ஒளியையும் உருவாக்கியவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அப்படியிருந்தும் சத்தியத்தை ஏற்க மறுத்தோர், மற்றவர்களையும் தம் இறைவனுக்குச் சமமாக்குகின்றார்கள். </span>
<span>6:2 அவன்தான் உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்தான். பிறகு உங்களுக்காக ஒரு வாழ்க்கைத் தவணையை நிர்ணயித்தான். மேலும், அவனிடத்தில் முடிவு செய்யப்பட்ட மற்றொரு தவணையும் உண்டு. ஆனால் நீங்களோ சந்தேகத்தில் உழல்கின்றீர்கள். </span>
<span>6:3 மேலும், அந்த ஏகனாகிய அல்லாஹ்தான் வானங்களிலும், பூமியிலும் இறைவனாக இருக்கின்றான். உங்களுடைய மறைவான, வெளிப்படையான அனைத்து நிலைமைகளையும் அவன் அறிகின்றான். மேலும், நீங்கள் சம்பாதிக்கின்ற (நல்வினை, தீவினை ஆகிய)வற்றையும் அறிகின்றான். </span>
<span>6:4 (மக்களின் நிலை என்னவெனில்) அவர்களுடைய அதிபதியின் சான்றுகளில் எந்த ஒரு சான்று அவர்களிடம் வந்தபோதும் அதனை அவர்கள் புறக்கணிப்பவர்களாகவே இருந்தனர். </span>
<span>6:5 இவ்வாறே இப்போது அவர்களிடம் வந்துள்ள சத்தியத்தையும் அவர்கள் பொய்யென்று சொல்கிறார்கள். எதனை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருக்கிறார்களோ அதனைப் பற்றிய சில செய்திகள் விரைவில் அவர்களிடம் வந்துவிடும் </span>
<span>6:6 (தத்தமது காலத்தில் ஆட்சியுரிமை பெற்றிருந்த) எத்தனையோ சமூகத்தாரை இவர்களுக்கு முன்னர் நாம் அழித்துவிட்டிருக்கிறோம் என்பதை இவர்கள் கவனிக்கவில்லையா? உங்களுக்கு வழங்கிடாத ஆட்சியதிகாரத்தை அவர்களுக்கு நாம் வழங்கியிருந்தோம். மேலும், அவர்களுக்காக நாம் வானத்திலிருந்து நன்கு மழை பொழிய வைத்தோம். மேலும், அவர்களுக்குக் கீழே ஆறுகளையும் ஓடச் செய்தோம். ஆனால் இறுதியில் (அவர்கள் நன்றி கொன்ற போது) அவர்கள் செய்த பாவங்களினால் நாம் அவர்களை அழித்துவிட்டோம். இன்னும் (அவர்களுக்குப் பகரமாக) வேறு தலைமுறையினரை உருவாக்கினோம். </span>
<span>6:7 (நபியே!) தாளில் எழுதப்பட்ட ஒரு வேதத்தை நாம் உம்மீது இறக்கி, மக்கள் அதனைத் தம் கைகளால் தொட்டுப் பார்த்தாலும் கூட, சத்தியத்தை நிராகரிப்பவர்கள், ‘இது அப்பட்டமான மந்திரவித்தையே அன்றி வேறில்லை’ என்றுதான் கூறியிருப் பார்கள். </span>
<span>6:8 மேலும், இந்நபியிடத்தில் ஏன் ஒரு வானவர் அனுப்பப்படவில்லை? என்றும் கேட்கிறார்கள். வானவரை நாம் இறக்கியிருப்போமாயின் எப்போதோ விவகாரம் முடிந்துவிட்டிருக்கும். பிறகு அவர்களுக்கு எத்தகைய அவகாசமும் கிடைத்திருக்காது. </span>
<span>6:9 இன்னும் நாம் வானவரை நபியாக அனுப்ப நேர்ந்தால்கூட அவரை மனித உருவிலேயே அனுப்பிவைத்திருப்போம். மேலும், இப்போது இவர்கள் உழன்று கொண்டிருக்கின்ற சந்தேகத்திலேயே (அப்போதும்) உழன்று கொண்டிருக்கும்படிச் செய்திருப்போம். </span>
<span>6:10 (நபியே,) உமக்கு முன்னரும் தூதர்களில் பலர் பரிகாசம் செய்யப்பட்டிருந்தார்கள். ஆயினும் அவர்களைக் கேலி செய்தவர்கள் எதனைக் குறித்துக் கேலி செய்து வந்தார்களோ, அதுவே கடைசியில் அவர்களைச் சூழ்ந்து கொண்டது. </span>
<span>6:11 (அவர்களிடம்) நீர் கூறும்: “(சற்று) பூமியைச் சுற்றிப் பாருங்கள், பிறகு சத்தியத்தைப் பொய்யென்று உரைத்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைக் கவனியுங்கள்!”</span>
<span>6:12 “வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்தும் யாருக்குரியவை?” என்று நீர் அவர்களிடம் கேளும். “அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை” என்று கூறும். கருணை புரிவதை அவன் தன்மீது கடமையாக்கிக் கொண்டான். (எனவே உங்களில் இறைக்கட்டளைக்குக் கீழ்ப்படியாதவர்களையும், அதனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்பவர்களையும் உடனே அவன் பிடிப்பதில்லை) மறுமைநாளில் அவன் உங்கள் அனைவரையும் திண்ணமாக ஒன்று திரட்டுவான். இது சந்தேகத்திற்கிடமில்லாத ஓர் உண்மையாகும். ஆனால், எவர்கள் தம்மைத் தாமே அழிவுக்குள்ளாக்கிக் கொண்டார்களோ அவர்கள் இதனை ஏற்பதில்லை. </span>
<span>6:13 மேலும், இரவிலும், பகலிலும் நிலை கொண்டுள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். மேலும், அவன் அனைத்தையும் செவியேற்பவனாகவும், நன்கறிபவனாகவுமிருக்கிறான். </span>
<span>6:14 (நபியே!) கூறுவீராக: “வானங்களையும், பூமியையும் படைத்தவனாகிய அல்லாஹ்வையன்றி வேறு ஒருவரை நான் பாதுகாவலனாக எடுத்துக் கொள்வேனா? அவன் உணவு வழங்குபவனேயன்றி உணவைப் பெறுபவனல்லன்.” மேலும், நீர் கூறுவீராக: “அவன் முன்னிலையில் சிரம் பணிவோரில் முதன்மையானவனாய் நான் ஆகிவிடவேண்டும் என்பதே எனக்கு இடப்பட்ட கட்டளையாகும்.” (இன்னும் எனக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.) இறைவனுக்கு இணைவைப்போரில் ஒருவராய் ஒருபோதும் நீர் ஆகிவிடாதீர்! </span>
<span>6:15 கூறுவீராக: “நான் என்னுடைய அதிபதியின் கட்டளைக்கு அடிபணியாது போனால், ஒரு மாபெரும் (பயங்கரமான) நாளின் தண்டனையை அனுபவிக்க வேண்டி வருமே என்று நிச்சயம் நான் அஞ்சுகிறேன். </span>
<span>6:16 அன்றைய நாளில் தண்டனையிலிருந்து எவர் காப்பாற்றப்படுகின்றாரோ அவருக்கு உண்மையில் அல்லாஹ் தன் பெருங்கருணையைப் பொழிந்து விட்டான்! இதுதான் தெளிவான வெற்றியாகும். </span>
<span>6:17 அல்லாஹ் உமக்கு ஏதேனும் தீங்கினைத் தந்துவிட்டால், அதிலிருந்து உம்மைக் காப்பாற்றுபவர் அவனைத் தவிர வேறு யாருமில்லை. மேலும், அவன் உமக்கு ஏதேனும் நன்மை(யளித்துச் செழிப்புறச்) செய்வானாகில், அவன் யாவற்றின் மீதும் மிக்க ஆற்றலுடையவனாக இருக்கின்றான். </span>
<span>6:18 அவன் தன் அடிமைகள் மீது முழு அதிகாரமுடையவன். மேலும், அவன் நுண்ணறிவாளனாகவும் யாவற்றையும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.”</span>
<span>6:19 நீர் கேளும்: “யாருடைய சாட்சி எல்லாவற்றையும் விட மேலானது?” நீர் கூறும்: “எனக்கும், உங்களுக்கும் இடையில் அல்லாஹ் சாட்சியாக இருக்கின்றான். மேலும் இக்குர்ஆன் எனக்கு வஹி மூலம் அருளப்பட்டது. எதற்காகவெனில், உங்களையும் இன்னும் யார் யாரையெல்லாம் இது எட்டுகிறதோ அவர்களையும் இதன் மூலம் நான் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக...! அல்லாஹ்வுடன் மற்ற கடவுள்களும் இருக்கிறார்கள் என்பதற்கு உண்மையிலேயே நீங்கள் சாட்சியங்கூற முடியுமா?” “நான் அவ்வாறு ஒருபோதும் சாட்சி அளிக்கமாட்டேன்” என்று கூறுவீராக! “திண்ணமாக, அல்லாஹ்தான் ஏக இறைவன். மேலும், நீங்கள் செய்து கொண்டிருக்கும் இணைவைப்புச் செயல்களிலிருந்து முற்றிலும் நான் விலகியவனாவேன்” என்றும் கூறுவீராக! </span>
<span>6:20 யாருக்கு நாம் வேதத்தை அருளினோமோ அவர்கள் தம் குழந்தைகளை (ஐயமற) அறிந்து கொள்வது போல், இந்த விஷயத்தையும் நன்கறிவார்கள். ஆயினும் எவர்கள் தம்மைத் தாமே பேரிழப்புக்கு ஆளாக்கிக் கொண்டார்களோ, அவர்கள் இதனை ஏற்பதில்லை. </span>
<span>6:21 அல்லாஹ்வின் மீது பொய்யை ஏற்றிச் சொல்பவனைவிட அல்லது அவனுடைய சான்றுகளைப் பொய் என வாதிடுபவனைவிட அக்கிரமக்காரன் யார்? இத்தகைய அக்கிரமக்காரர்கள் திண்ணமாக ஒருபோதும் வெற்றியடைய மாட்டார்கள். </span>
<span>6:22 மேலும், அந்நாளில் அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம். பிறகு இறைவனுக்கு இணைவைத்துக் கொண்டிருந்தவர்களிடம், “உங்களுடைய கடவுளெனக் கருதி யார் யாரையெல்லாம் நீங்கள் இறைவனுக்கு இணைவைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?” என்று நாம் கேட்போம். </span>
<span>6:23 “எங்கள் இறைவனாகிய உன்மீது ஆணையாக! நாங்கள் ஒருபோதும் இணைவைப்போராக இருக்கவில்லை” என்று (ஒரு பொய்யைக்) கூறுவதைத் தவிர வேறு எந்தவொரு குழப்பத்தையும் அவர்கள் விளைவிக்க மாட்டார்கள். </span>
<span>6:24 பாருங்கள், (அவ்வேளை) அவர்கள் தங்களைப் பற்றியே எவ்வாறெல்லாம் பொய் உரைக்கின்றார்கள்! மேலும் அங்கு அவர்களின் போலிக் கடவுள்கள் எல்லாம் அவர்களை விட்டுக் காணாமல் போய்விடும். </span>
<span>6:25 அவர்களில் சிலர், நீங்கள் கூறுவதைச் செவி சாய்த்துக் கேட்கின்றார்கள். ஆயினும் நிலைமை என்னவெனில், நாம் அவர்களுடைய இதயங்களில் திரையைப் போட்டிருக்கின்றோம். இதனால் அவர்கள் அதனைக் கொஞ்சமும் புரிந்துகொள்வதில்லை. மேலும், அவர்களுடைய காதுகளை நாம் மந்தமாக்கி விட்டோம். (எல்லாவற்றையும் செவியேற்ற பிறகும் எதனையும் செவியேற்காதவர்கள் போல் இருக்கின்றார்கள்.) அவர்கள் எந்த ஒரு சான்றினைப் பார்த்தாலும் அதன்மீது நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். எந்த அளவுக்கெனில், உம்மிடம் வந்து அவர்கள் தர்க்கம் புரியும்போது அவர்களில் யார் நிராகரித்திட வேண்டுமென முடிவு செய்துள்ளார்களோ, அவர்கள் (இந்த அறிவுரைகள் அனைத்தையும் கேட்ட பின்பும்) “இவை முன்னோர்களின் கட்டுக்கதைகளே தவிர வேறில்லை!” என்று தான் கூறுகிறார்கள். </span>
<span>6:26 அவர்கள் இந்த சத்தியத்தை ஏற்கவிடாமல் (மக்களையும்) தடுக்கிறார்கள்; தாமும் இதை விட்டு விலகி ஓடுகிறார்கள். (இவ்வாறு செய்வதனால் அவர்கள் உமக்கு ஏதோ தீங்கு இழைத்துக் கொண்டிருப்பதாக நினைக்கின்றனர்.) உண்மையில் அவர்கள் தங்களைத் தாங்களே அழிவுக்குள்ளாக்கிக் கொள்கின்றனர். ஆனால் அதைப்பற்றி அவர்கள் உணர்வதில்லை. </span>
<span>6:27 அந்தோ! நரகத்தின் விளிம்பில் அவர்கள் நிறுத்தப்படும்போது அந்நிலையை நீர் பார்க்க வேண்டுமே! அந்நேரத்தில் “அந்தோ! நாங்கள் உலகிற்குத் திரும்பிச் செல்ல ஒரு வாய்ப்புக் கிடைக்காதா? (அவ்வாறு கிடைத்தால்) எங்களுடைய இறைவனின் சான்றுகளைப் பொய்யென்று வாதிடாமல், இறைநம்பிக்கை கொண்டவர்களாக திகழ்ந்திருப்போமே!” என்று அவர்கள் புலம்புவார்கள். </span>
<span>6:28 அவர்கள் இவ்வாறு கூறுவதற்குக் காரணம், முன்பு எந்த உண்மையை அவர்கள் மூடிமறைத்திருந்தார்களோ அந்த உண்மை அப்போது அவர்கள் முன்னால் எந்தத் திரையுமின்றி தெளிவாகி விட்டிருக்கும். ஒருவேளை அவர்கள் முந்திய வாழ்க்கைக்கே திரும்ப அனுப்பப்பட்டாலும் தடுக்கப்பட்டிருந்த செயல்களையே மீண்டும் செய்வார்கள். திண்ணமாக, அவர்கள் பொய்யர்கள்தாம்! </span>
<span>6:29 (ஆகையால்தான் ‘உலகிற்குத் திரும்ப அனுப்பப்பட்டால் நம்பிக்கை கொள்வோம்’ என்று பொய் சொல்கிறார்கள். இவ்வுலகில்) அவர்கள் கூறுகிறார்கள்: “வாழ்க்கை என்பது நம்முடைய இவ்வுலக வாழ்க்கை மட்டும்தான். மேலும், நாம் இறந்த பிறகு ஒருபோதும் திரும்ப எழுப்பப்பட மாட்டோம்.” </span>
<span>6:30 அவர்கள் தம் அதிபதியின் திருமுன் நிறுத்தப்படும் காட்சியை நீர் காணவேண்டுமே! அப்போது அவன் அவர்களிடம் வினவுவான்: “இது உண்மை அல்லவா?” அதற்கவர்கள், “ஆம், எங்கள் அதிபதியே, இது உண்மையேதான்” என பதில் கூறுவார்கள். அதற்கு அவன் கூறுவான்: “சரி, நீங்கள் இந்த உண்மையை நிராகரித்துக் கொண்டிருந்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்!”</span>
<span>6:31 அல்லாஹ்வைச் சந்திக்க இருப்பதைப் பொய் என்று வாதிட்டவர்கள் பேரிழப்புக்குள்ளாகி விட்டார்கள். எந்த அளவுக்கு எனில், அந்நேரம் திடீரென்று வந்துவிடும்போது, “ஐயகோ! இவ்விஷயத்தில் நாம் எத்தகைய குறைபாடுகளைச் செய்து விட்டோம்” என்று இவர்கள் புலம்புவார்கள். அப்பொழுது அவர்களின் நிலை எப்படி இருக்கும் எனில், தங்களுடைய பாவச்சுமைகளைத் தங்களுடைய முதுகுகளில் சுமந்தவாறு இருப்பார்கள். பாருங்கள்! அவர்கள் சுமந்து கொண்டிருப்பது எத்துணைக் கெட்டது! </span>
<span>6:32 உலக வாழ்க்கை என்பது விளையாட்டும் வேடிக்கையுமே அன்றி வேறில்லை. உண்மையில், எவர்கள் தீய நடத்தையைத் தவிர்க்க விரும்புகின்றார்களோ அவர்களுக்கு மறுமை இல்லமே மிகவும் நலமுடையதாயிருக்கும். அவ்வாறிருக்க, நீங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தமாட்டீர்களா?</span>
<span>6:33 (நபியே!) இவர்கள் (புனைந்து) கூறுபவை திண்ணமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றன என்பதை நாம் அறிவோம். ஆனால், உண்மையில் அவர்கள் உம்மைப் பொய்யரென்று தூற்றவில்லை; மாறாக அல்லாஹ்வின் வசனங்களையே இவ்வக்கிரமக்காரர்கள் மறுக்கின்றனர். </span>
<span>6:34 உமக்கு முன்னரும் தூதர்கள் பலர் பொய்யரென்று தூற்றப்பட்டுள்ளார்கள். ஆனால், நம்முடைய உதவி அவர்களிடம் வரும் வரை, பொய்யர்கள் என்று தாம் தூற்றப்பட்டதையும் பொறுமையுடன் அவர்கள் சகித்துக் கொண்டிருந்தனர். அல்லாஹ்வின் வாக்குகளை மாற்றுவதற்கான வல்லமையுடையவர் எவருமிலர். இன்னும் முந்திய நபிமார்(களுக்கு ஏற்பட்ட நிலைமை)களின் செய்திகள் உமக்குக் கிடைத்தே உள்ளன. </span>
<span>6:35 இருப்பினும் இம்மக்கள் புறக்கணிப்பதை உம்மால் சகித்துக் கொள்ள முடியவில்லையென்றால், உமக்கு வலிமையிருக்குமாயின் பூமியில் சுரங்க வழியைத் தேடியோ, வானில் ஏணிவைத்து ஏறியோ ஏதேனும் ஒரு சான்றினை நீர் அவர்களிடம் கொண்டுவர முயற்சி செய்வீராக! அல்லாஹ் நாடியிருந்தால் நிச்சயமாக அவர்கள் எல்லோரையும் நேர்வழியில் ஒன்று திரட்டியிருப்பான். எனவே அறிவிலிகளில் நீரும் ஒருவராகிவிடாதீர். </span>
<span>6:36 செவியுறுபவர்கள்தாம் சத்திய அழைப்பை ஏற்றுக் கொள்வார்கள். இறந்து போனவர்களை அல்லாஹ் (அடக்கத் தலங்களிலிருந்து) எழுப்பியே தீருவான். பிறகு அவர்கள் அவனிடமே (நீதி விசாரணைக்காக) கொண்டு வரப்படுவார்கள். </span>
<span>6:37 ‘இந்த நபி மீது அவருடைய இறைவனிடமிருந்து ஏதேனுமொரு சான்று இறக்கப்பட்டிருக்கக் கூடாதா?’ என்று அவர்கள் வினவுகிறார்கள். நீர் கூறும்: “சான்றினை இறக்குவதற்கு அல்லாஹ் முழு ஆற்றல் பெற்றவன்தான். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அறியாமையில் இருக்கின்றார்கள்.” </span>
<span>6:38 பூமியில் வாழும் எல்லாப் பிராணிகளும், தன் இரு சிறகுகளின் துணைகொண்டு பறந்து செல்லும் எல்லாப் பறவைகளும் உங்களைப் போன்ற உயிரினங்களாகவே இருக்கின்றன (என்பதைக் கவனியுங்கள்). நாம் அவர்களைப் பற்றிப் பதிவு செய்வதில் யாதொரு குறையையும் வைக்கவில்லை. பிறகு இவர்கள் அனைவரும் தம் இறைவனிடமே ஒன்று சேர்க்கப்படுவார்கள். </span>
<span>6:39 ஆயினும் எவர்கள் நம்முடைய சான்றுகளைப் பொய் என வாதிடுகின்றார்களோ அவர்கள் செவிடர்களாயும், ஊமையர்களாயும் இருள்களில் உழன்று கொண்டுமிருக்கின்றார்கள். தான் நாடுகின்றவர்களை அல்லாஹ் வழிகேட்டில் சிக்கவைக்கிறான். மேலும் தான் நாடுகின்றவர்களை நேர்வழியில் செலுத்துகின்றான். </span>
<span>6:40 இவர்களிடம் நீர் கூறும்: “அல்லாஹ்விடமிருந்து ஏதேனும் பெருந் துன்பம் உங்களுக்கு வந்துவிடும்போது அல்லது உங்களுக்கு இறுதி நேரம் வந்துவிடும்போது அப்போது அல்லாஹ்வை அன்றி வேறு ஒருவரையா அழைக்கிறீர்கள்? நீங்கள் வாய்மையுடையோராயின் சற்று சிந்தித்துக் கூறுங்கள்! </span>
<span>6:41 உண்மையில் நீங்கள் அல்லாஹ்வையே அழைக்கின்றீர்கள்; பிறகு எதற்காக அவனை அழைக்கின்றீர்களோ அத்துன்பத்தை அவன் நாடினால் (உங்களை விட்டு) நீக்கி விடுகின்றான். இறைவனோடு நீங்கள் இணைவைக்கும் கடவுள்களை (இத்தகைய சந்தர்ப்பங்களில்) மறந்து விடுகின்றீர்கள்.”</span>
<span>6:42 (நபியே!) உமக்கு முன்னரும் பல சமூகத்தாரிடம் நாம் தூதர்களை அனுப்பியிருந்தோம். மேலும், அச்சமூகத்தார் நமக்குப் பணிந்திட வேண்டும் என்பதற்காக அவர்களைத் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாக்கினோம். </span>
<span>6:43 ஆனால் நம்மிடமிருந்து இவர்களுக்குத் துன்பங்கள் வந்தபோது இவர்கள் ஏன் பணியவில்லை? உண்மை யாதெனில் இவர்களுடைய உள்ளங்கள் அதிகம் இறுகிவிட்டன. மேலும், இவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களை ஷைத்தான் இவர்களுக்கு அழகாக்கிக் காண்பித்துக் கொண்டிருந்தான். </span>
<span>6:44 பின்னர், அவர்களுக்கு போதிக்கப்பட்ட நல்லுரைகளை அவர்கள் மறந்துவிட்டபோது, அருள்வளங்களின் அனைத்து வாயில்களையும் அவர்களுக்காக நாம் திறந்து விட்டோம். எதுவரையெனில், தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த இன்ப நலன்களில் அவர்கள் திளைத்திருந்தபோது திடீரென்று அவர்களை நாம் பிடித்தோம். அப்போது அவர்கள் முற்றிலும் நிராசை கொண்டோராய் ஆகிவிட்டனர்! </span>
<span>6:45 இவ்வாறு, அக்கிரமம் செய்த அச்சமுதாயத்தினர் அடியோடு வேரறுக்கப்பட்டார்கள். அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரியதாகும். (அவனே அக்கிரமக்காரர்களை வேரறுத்தான்!)</span>
<span>6:46 (நபியே!) நீர் அவர்களிடம் கேளும்: “அல்லாஹ் உங்களின் செவிப்புலனையும் பார்வைப் புலனையும் பறித்து உங்கள் இதயங்களிலும் முத்திரையிட்டுவிட்டால் அல்லாஹ்வைத் தவிர வேறு எந்தக் கடவுளால் இவ்வாற்றல்களை உங்களுக்குத் திரும்பத் தர முடியும் என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா?” நம்முடைய சான்றுகளை மீண்டும் மீண்டும் அவர்கள் முன் எப்படி வைக்கிறோம் என்பதையும், பிறகு அவர்கள் எவ்வாறெல்லாம் அவற்றைப் புறக்கணித்துக் கொண்டே செல்கின்றார்கள் என்பதையும் பாருங்கள். </span>
<span>6:47 “திடீரென்றோ முன்னறிவிப்புடனோ அல்லாஹ்வின் தண்டனை உங்களிடம் வந்துவிடுமாயின் அக்கிரமக்காரர்கள் தவிர வேறு எவரேனும் அழிக்கப்படுவார்களா? இதனை நீங்கள் எப்பொழுதேனும் சிந்தித்ததுண்டா?” என்று நீர் கேளும். </span>
<span>6:48 (நல்லவர்களுக்கு) நற்செய்தி கூறுபவர்களாகவும், (தீயவர்களை) எச்சரிப்பவர்களாகவும் திகழ வேண்டும் என்பதற்காகத்தான் நாம் தூதர்களை அனுப்புகின்றோம். பிறகு எவர்கள் அத்தூதர்கள் கூறுவனவற்றை ஏற்றுக்கொண்டு, மேலும் தமது நடத்தையைத் திருத்திக்கொள்கின்றார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். </span>
<span>6:49 மேலும், நமது திருவசனங்களைப் பொய்யென்று வாதிட்டவர்கள் நமக்குக் கீழ்ப்படியாமல் வாழ்ந்து கொண்டிருந்ததன் காரணமாக தண்டனையை அனுபவித்தே தீருவார்கள். </span>
<span>6:50 (நபியே!) இவர்களிடம் கூறும்: “அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன என்றும், மறைவானவற்றை நான் அறிகிறேன் என்றும் உங்களிடம் நான் கூறவில்லை; மேலும் நான் ஒரு வானவர் என்றும் கூறவில்லை; என் மீது இறக்கியருளப்படுகின்ற வஹியை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன்.” மேலும் நீர் அவர்களிடம் கேளும்: “பார்வையுள்ளவனும் பார்வையற்றவனும் சமமாவார்களா? நீங்கள் சிந்திக்கவே மாட்டீர்களா?”</span>
<span>6:51 மேலும், (நபியே!) தங்கள் இறைவன் முன்னிலையில் தாம் கொண்டு வந்து நிறுத்தப்படுவோம் என்றும், அந்நாளில் அல்லாஹ்வைத் தவிர தங்களுக்குப் பாதுகாப்பு அளித்து உதவிபுரிபவரோ, பரிந்துரை செய்பவரோ வேறு யாருமில்லை என்றும் அஞ்சக்கூடிய மக்களுக்கு நீர் இந்த வஹி மூலம் அறிவுரை கூறுவீராக! (இந்த அறிவுரையால் உணர்வு பெற்று) அவர்கள் இறையச்சமுள்ள நடத்தையை மேற்கொள்ளக் கூடும். </span>
<span>6:52 மேலும், எவர்கள் காலையிலும் மாலையிலும் தங்களுடைய இறைவனைப் பிரார்த்தித்த வண்ணம் இருக்கின்றார்களோ, இன்னும் அவனுடைய உவப்பைத் தேடிய வண்ணம் இருக்கின்றார்களோ அவர்களை நீர் (உம்மை விட்டு) விரட்டி விடாதீர்! அவர்களுடைய கேள்வி கணக்குகளிலிருந்து எந்தச் சுமையும் உங்கள் மீதில்லை; உம்முடைய கேள்வி கணக்கிலிருந்து எந்தச் சுமையும் அவர்கள் மீதில்லை. இதன் பின்னரும் நீர் அவர்களை விரட்டி விட்டால் அக்கிரமக்காரர்களில் நீரும் ஒருவராகி விடுவீர். </span>
<span>6:53 உண்மையில், இவ்வாறு நாம் அவர்களில் சிலரை வேறு சிலரைக் கொண்டு சோதனைக்குள்ளாக்கியுள்ளோம். இதன் விளைவாக அவர்கள் இவர்களைப் பார்த்து, “நம்மிடையே அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெற்றவர்கள் இவர்கள் தாமா?” என்று கூறுகின்றனர் ஆம்; தனக்கு நன்றி செலுத்துவோரை (இவர்களைவிட) அல்லாஹ் அதிகம் அறிந்தவனல்லவா? </span>
<span>6:54 நம்முடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களிடம் நீர் கூறும்: “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், உங்களின் இறைவன் கருணை பொழிவதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டுள்ளான். (மேலும் அவனுடைய கருணையின் வெளிப்பாடு இது:) உங்களில் எவரேனும் அறியாமையால் ஒரு தவறைச் செய்துவிட்டு, பின்னர் அதற்காக மன்னிப்புக் கோரி, மேலும் தன்னைத் திருத்திக் கொண்டால் திண்ணமாக அல்லாஹ் (அவரை) மன்னித்துவிடுகிறான்; மேலும், அவருடன் இரக்கத்தோடு நடந்து கொள்கின்றான். </span>
<span>6:55 மேலும், குற்றவாளிகளின் வழி இதுதான் என்று ஐயமறத் தெளிவாகிவிட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நாம் நம்முடைய சான்றுகளைத் தெள்ளத்தெளிவாய் விவரிக்கின்றோம்.”</span>
<span>6:56 (நபியே! இவர்களிடம்) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை விடுத்து வேறு யார் யாரையெல்லாம் அழைத்துப் பிரார்த்திக்கின்றீர்களோ அவர்களுக்கு அடிபணியக்கூடாது என்று நான் தடுக்கப்பட்டுள்ளேன்.” நீர் கூறும்: “நான் உங்களின் விருப்பங்களைப் பின்பற்ற மாட்டேன். அவ்வாறு பின்பற்றினால் நான் வழிதவறியவனாகி விடுவேன்; இன்னும் நேர்வழி அடைந்தவர்களிலும் நான் சேர முடியாது.” </span>
<span>6:57 நீர் கூறும்: “திண்ணமாக, நான் என்னுடைய இறைவனிடமிருந்து வந்துள்ள தெளிவான சான்றின் மீதே நிலைத்துள்ளேன். நீங்களோ அதனைப் பொய் எனக் கூறிவிட்டீர்கள். எது சீக்கிரம் வரவேண்டும் என்று நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ, அதைக் கொண்டு வரும் ஆற்றல் என்னிடத்தில் இல்லை. தீர்ப்பின் அனைத்து அதிகாரங்களும் அல்லாஹ்வுக்குத்தான் உரியன. அவன்தான் சத்தியத்தைத் தெளிவாய் விவரிக்கின்றான். மேலும், அவன்தான் தீர்ப்பு வழங்குவோரில் மிகச் சிறந்தவன்.” </span>
<span>6:58 மேலும், நீர் கூறும்: “நீங்கள் எது சீக்கிரம் வரவேண்டுமென்று அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ அதைக் கொண்டுவரும் ஆற்றல் என்னிடத்தில் இருந்திருக்குமேயானால், எனக்கும் உங்களுக்குமிடையே உள்ள விவகாரம் எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும்.” ஆயினும் இத்தகைய அக்கிரமக்காரர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கின்றான். </span>
<span>6:59 மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவற்றை அவனைத் தவிர வேறு யாரும் அறிவதில்லை. கடலிலும், தரையிலும் இருப்பவை அனைத்தையும் அவன் அறிந்திருக்கின்றான். மரத்திலிருந்து எந்த இலையும் அவன் அறியாமல் உதிர்வதில்லை. பூமியின் இருள்களினுள் மறைந்திருக்கும் எந்த விதையையும் அவன் அறியாமல் இல்லை. பசுமையான மற்றும் உலர்ந்த அனைத்துமே தெளிவான ஓர் ஏட்டில் பதிக்கப்பட்டிருக்கின்றன. </span>
<span>6:60 அவனே இரவில் உங்கள் உயிர்களைக் கைப்பற்றுகின்றான். இன்னும் நீங்கள் பகலில் செய்கின்ற செயல்கள் அனைத்தையும் அறிகின்றான். பிறகு மறுநாள் இந்த வாழ்க்கை எனும் செயற்களத்தில் மீண்டும் உங்களை எழுப்புகின்றான்; நிர்ணயிக்கப்பட்ட வாழ்க்கைத் தவணையை நிறைவு செய்யும் பொருட்டு! இறுதியில் நீங்கள் அவனிடமே செல்ல வேண்டியிருக்கிறது. அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பது பற்றி உங்களுக்கு அவன் அறிவித்துவிடுவான். </span>
<span>6:61 அவன் தன்னுடைய அடிமைகள் மீது பேரதிகாரம் கொண்டவனாக இருக்கின்றான். மேலும், உங்களைக் கண்காணிப்பவர்களை நியமித்து அனுப்புகின்றான். எதுவரையெனில் உங்களில் ஒருவருக்கு மரண(நேர)ம் வந்துவிட்டால் அவன் அனுப்பிய வானவர்கள் அவருடைய உயிரைக் கைப்பற்றுகின்றார்கள். மேலும், அவர்கள் (தமது கடமையினை நிறைவேற்றுவதில்) எவ்விதக் குறையும் வைப்பதில்லை. </span>
<span>6:62 பிறகு அனைவரும் தங்களின் உண்மையான அதிபதியாகிய அல்லாஹ்விடமே திரும்பக் கொண்டு வரப்படுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்! தீர்ப்பு வழங்கும் அனைத்து அதிகாரங்களும் அவனுக்கே உரியனவாகும். மேலும் அவன் கணக்கு வாங்குவோரில் மிக விரைவானவன். </span>
<span>6:63 (நபியே! நீர் இவர்களிடம்) கேளும்: “தரை மற்றும் கடலின் இருள்(களின் அபாயங்)களிலிருந்து உங்களைக் காப்பாற்றுவோர் யார்? (துன்பம் வரும்போது) நடுங்கியவாறும் மெதுவாகவும் யாரிடம் நீங்கள் இறைஞ்சுகின்றீர்கள்? ‘இத்துன்பங்களிலிருந்து அவன் எங்களைக் காப்பாற்றி விட்டால் நாங்கள் நிச்சயம் நன்றி செலுத்துவோராயிருப்போம்’ என்று யாரிடம் கூறுகின்றீர்கள்?”</span>
<span>6:64 நீர் கூறும்: “இத்துன்பங்களில் இருந்தும் மற்றும் எல்லாவிதமான இடர்களிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுபவன் அல்லாஹ்தான். இதற்குப் பின்னரும் நீங்கள் அவனுக்கு இணை வைக்கின்றீர்களே!” </span>
<span>6:65 (நபியே!) நீர் கூறும்: “உங்களுக்கு மேலிருந்தோ, உங்களின் கால்களுக்குக் கீழேயிருந்தோ ஏதேனுமொரு வேதனையை உங்கள்மீது இறக்கவும், அல்லது உங்களைப் பல்வேறு கூட்டங்களாகப் பிரித்து, உங்களில் ஒரு கூட்டத்தார் கொடுக்கும் துன்பத்தை மற்றொரு கூட்டத்தார் சுவைக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்.” பாருங்கள்! அவர்கள் உண்மையை உணரும் பொருட்டு நம் சான்றுகளை எவ்வாறெல்லாம் மீண்டும் மீண்டும் அவர்கள் முன் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறோம். </span>
<span>6:66 (நபியே!) உம்முடைய சமுதாயத்தினர் இதனைப் பொய்யென்று வாதிட்டுக் கொண்டிருக்கின்றனர். இருந்தபோதிலும் இதுதான் உண்மை! “நான் உங்களுக்குப் பொறுப்பாளனாக நியமிக்கப்படவில்லை” என்பதை அவர்களிடம் நீர் கூறிவிடும். </span>
<span>6:67 ஒவ்வொரு செய்திக்கும் (அது வெளிப்படுவதற்கென) குறிப்பிட்ட காலம் இருக்கிறது. (இறுதி முடிவு என்னவென்று) விரைவில் உங்களுக்குத் தெரிந்துவிடும். </span>
<span>6:68 மேலும், (நபியே!) நம் வசனங்கள் பற்றிக் குறை கூறிக் கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதனை விட்டு வேறு பேச்சில் ஈடுபடும் வரை நீர் அவர்களைவிட்டு ஒதுங்கிவிடும்! மேலும், எப்பொழுதேனும் ஷைத்தான் உம்மை மறதியில் ஆழ்த்திவிட்டால் அத்தவறை உணர்ந்து கொண்ட பிறகு அக்கிரமம் செய்யும் இக்கூட்டத்தாரோடு நீர் உட்காராதீர்! </span>
<span>6:69 அவர்களுடைய கேள்வி கணக்குகளில் எதற்கும் இறையச்சமுடையோர் பொறுப்பாளிகள் அல்லர். ஆயினும் அறிவுரை கூறுவது அவர்கள் மீது கடமையாகும். இதனால் அவர்கள் (அந்த மக்கள்) தவறான போக்கிலிருந்து விலகிக் கொள்ளக்கூடும். </span>
<span>6:70 யார் தங்களுடைய தீன் எனும் வாழ்க்கை நெறியை விளையாட்டாகவும், வேடிக்கையாகவும் ஆக்கிக் கொண்டார்களோ அவர்களை நீர் விட்டுவிடும்! உலக வாழ்க்கை அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி விட்டது! ஆனால் எந்த மனிதனும் தான் செய்த தீய செயல்களின் காரணமாக துன்பத்தால் பீடிக்கப்படாமலிருக்க (இந்த குர்ஆனைக் கொண்டு) நல்லுரை கூறி (எச்சரித்து)க் கொண்டேயிருப்பீராக! அப்படி பீடிக்கப்பட்டால், அல்லாஹ்விடமிருந்து அவனுக்குப் பாதுகாப்பளித்து உதவி புரிபவரோ பரிந்துரை செய்பவரோ எவரும் இருக்க மாட்டார்கள். மேலும், (தன் கைவசத்திலுள்ள) எல்லாப் பொருள்களையும் ஈடாகச் செலுத்தி அதிலிருந்து விடுபட நாடினாலும் அதுவும் அவனிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஏனெனில் அவர்கள், தாம் சம்பாதித்த தீவினைகளின் காரணமாக பீடிக்கப்பட்டிருந்தார்கள். சத்தியத்தை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால், நன்கு கொதிக்கும் நீரும், துன்புறுத்தும் வேதனையும்தான் அவர்களுக்குக் கிடைக்கும். </span>
<span>6:71 (நபியே!) அவர்களிடம் நீர் கேளும்: “அல்லாஹ்வை விடுத்து எங்களுக்கு நன்மையோ தீமையோ அளித்திட முடியாதவற்றிடமா நாங்கள் பிரார்த்திப்போம்? அல்லாஹ் எங்களை நேரான வழியில் செலுத்திய பிறகு முந்தைய (நிராகரிப்பு) நிலைக்கு நாங்கள் திரும்பி விடுவோமா? ஒருவருக்கு அவருடைய நண்பர்கள் நேர்வழிகாட்டி ‘எங்களிடம் வந்துவிடு!’ என அழைத்துக் கொண்டிருக்கும் போது, ஷைத்தான்கள் அவரை வழிகெடுத்து, அதன் காரணமாக பூமியில் அவர் தட்டழிந்து திரிவதைப் போன்று நாங்கள் ஆகிவிடுவோமா என்ன?” (நபியே!) நீர் கூறும்: “உண்மையில் அல்லாஹ் காட்டும் வழியே நேர்வழியாகும். அகிலமனைத்திற்கும் அதிபதியான இறைவனுக்கு நாங்கள் முற்றிலும் அடிபணிந்து வாழ வேண்டுமென கட்டளையிடப்பட்டுள்ளோம். </span>
<span>6:72 மேலும், தொழுகையை நிலைநிறுத்துங்கள்! அவனுக்கு மாறு செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்! ஏனெனில் நீங்கள் அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்றும் நாங்கள் கட்டளையிடப்பட்டுள்ளோம்.” </span>
<span>6:73 வானங்களையும் பூமியையும் சத்தியத்தின் அடிப்படையில் படைத்தவன் அவனே! மேலும், எந்நாளில் அவன் ‘ஆகுக’ என்று கூறுவானோ அந்நாளில் அது (மறுமை) ஆகிவிடும். அவனுடைய கூற்றுதான் முற்றிலும் உண்மையானது. மேலும், எந் நாளில் ‘ஸூர்’ (எக்காளம்) ஊதப்படுமோ அந்நாளில் ஆட்சி அதிகாரம் அனைத்தும் அவனுக்கே உரியதாயிருக்கும். அவன் மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அறிந்தவனாக இருக்கின்றான். மேலும், அவனே நுண்ணறிவாளனாகவும் அனைத்தும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான். </span>
<span>6:74 மேலும், இப்ராஹீம் தம் தந்தை ஆஜரை நோக்கி, “சிலைகளையா நீங்கள் கடவுளராக்குகின்றீர்கள்? நிச்சயமாக நீங்களும், உங்களுடைய சமூகத்தாரும் வெளிப்படையான வழிகேட்டில் இருப்பதை நான் காண்கின்றேன்” என்று கூறிய சந்தர்ப்பத்தை நீர் நினைவுகூரும். </span>
<span>6:75 இவ்வாறே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியமைப்பை நாம் இப்ராஹீமுக்குக் காண்பித்துக் கொடுத்தோம்; உறுதியான நம்பிக்கையுடையோரில் ஒருவராய் அவர் திகழ வேண்டும் என்பதற்காக!</span>
<span>6:76 எனவே, இரவு அவரைச் சூழ்ந்தபோது அவர் ஒரு நட்சத்திரத்தைக் கண்டு “இதுதான் என்னுடைய இறைவன்” என்று கூறினார். ஆனால் அது மறைந்துவிட்டபோது, “மறைந்து போகின்றவற்றை நான் நேசிப்பவனல்லன்” என்று உரைத்தார். </span>
<span>6:77 பின்னர் ஒளிரும் சந்திரனைக் கண்ட அவர் “இதுதான் என்னுடைய இறைவன்” என்று கூறினார். ஆனால் அதுவும் மறைந்தபோது “என்னுடைய இறைவன் எனக்கு வழிகாட்டவில்லையெனில் வழிதவறிய கூட்டத்தாருள் நிச்சயமாக நானும் சேர்ந்திருப்பேன்” என்று கூறினார். </span>
<span>6:78 பின்னர் ஒளிரும் சூரியனைக் கண்டபோது “இதுதான் என்னுடைய இறைவன்; இது எல்லாவற்றையும் விட மிகப் பெரியது” என்று கூறினார். ஆனால் அதுவும் மறைந்து போகவே, “என் சமூகத்தவரே! நீங்கள் இறைவனுக்கு இணைவைக்கும் அனைத்தை விட்டும் திண்ணமாக நான் விலகி விட்டேன். </span>
<span>6:79 வானங்களையும், பூமியையும் படைத்தவனின் பக்கம் ஒருமனத்துடன் என் முகத்தை நான் திருப்பிவிட்டேன்; மேலும், ஒருபோதும் நான் இணைவைப்பவர்களில் உள்ளவனல்லன்” என்று கூறினார். </span>
<span>6:80 மேலும், அவருடைய சமூகத்தார் அவரிடம் தர்க்கம் செய்தபோது அவர் (தம் சமூகத்தாரை நோக்கி) கூறினார்: “திண்ணமாக அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டியிருக்க, அவனைப் பற்றியா என்னிடம் நீங்கள் தர்க்கம் செய்கின்றீர்கள்? மேலும், எவற்றை நீங்கள் இறைவனுக்கு இணைவைக்கின்றீர்களோ அவற்றுக்கு நான் அஞ்சமாட்டேன். என் இறைவன் நாடினால்தான் எது ஒன்றும் நிகழ முடியும். என் இறைவனின் ஞானம் அனைத்தையும் சூழ்ந்துள்ளது. நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?</span>
<span>6:81 எவற்றைக் குறித்து (இவை இறைமையில் கூட்டானவைதாம் என்பதற்கு) எந்த ஆதாரத்தையும் அல்லாஹ் உங்களுக்கு இறக்கி வைத்திடவில்லையோ அவற்றை அவனுக்கு இணையாக்க நீங்கள் அஞ்சாதபோது நீங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட கடவுளருக்கு நான் எப்படி அஞ்சுவேன்? எனவே, நம் இரு கூட்டத்தாரில் அச்சமற்று வாழ்வதற்கு அதிகம் தகுதியுடையோர் யார்? நீங்கள் அறிவுடையோராயின் இதற்குப் பதில் தாருங்கள்! </span>
<span>6:82 எவர்கள் நம்பிக்கை கொண்டு, பிறகு தம் நம்பிக்கையை இணை வைப்பு எனும் அநீதியால் மாசுபடுத்தவில்லையோ அவர்களுக்கே உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நேர்வழி அடைந்தவர்கள் ஆவார்கள்.”</span>
<span>6:83 மேலும், இப்ராஹீம் தம்முடைய சமூகத்தாருக்கு எதிராக வாதம் புரிய நாம் அவருக்கு வழங்கிய ஆதாரங்கள் இவைதாம்! நாம் நாடுகின்றவர்களுக்கு உயர்ந்த படித்தரங்களை வழங்குகின்றோம். நிச்சயமாக உம்முடைய இறைவன் நுண்ணறிவாளனும், பேரறிவாளனும் ஆவான். </span>
<span>6:84 பிறகு நாம் இப்ராஹீமுக்கு இஸ்ஹாக், யஃகூப் போன்ற வழித்தோன்றல்களையும் வழங்கினோம். மேலும், ஒவ்வொருவருக்கும் நேர்வழி காட்டினோம். (எத்தகைய வழி எனில்) அதற்கு முன்பு நூஹுக்கும் (அந்த) நேர்வழியினைக் காட்டியிருந்தோம். மேலும், இப்ராஹீமுடைய வழித்தோன்றலைச் சேர்ந்த தாவூத், ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோருக்கும் நேர்வழி காட்டினோம். இவ்வாறு நாம் நல்லவர்களுக்கு (அவர்களுடைய நற்செயல்களுக்காக) கூலி வழங்குகின்றோம். </span>
<span>6:85 மேலும் (அவருடைய வழித்தோன்றலைச் சேர்ந்த) ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் ஆகியோருக்கும் (நாம் நேர்வழி காட்டினோம்.) அவர்கள் ஒவ்வொருவரும் உத்தமர்களாய் இருந்தார்கள். </span>
<span>6:86 (அவருடைய பாரம்பரியத்தில்) இஸ்மாயீல், அல்யஸஃ, யூனுஸ், லூத் ஆகியோருக்கும் நேர்வழி காட்டினோம். அவர்களில் ஒவ்வொருவருக்கும் அகிலத்தார் அனைவரையும்விட மேலான சிறப்பினை வழங்கினோம். </span>
<span>6:87 மேலும், அவர்களின் மூதாதையர், வழித்தோன்றல்கள் மற்றும் அவர்களின் சகோதரர்கள் ஆகியோரில் எத்தனையோ பேருக்கு நாம் (நற்பேற்றினை) வழங்கினோம்! நமது பணிகளுக்காக அவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை நேரிய வழியில் செலுத்தினோம். </span>
<span>6:88 இது அல்லாஹ்வுடைய வழிகாட்டுதலாகும். தன்னுடைய அடியார்களில் தான் நாடுவோர்க்கு இதன் மூலம் அவன் வழிகாட்டுகின்றான். ஆனால், அவர்கள் இறைவனுக்கு இணை வைத்திருப்பார்களாயின் அவர்கள் செய்தவை யாவும் வீணாகிப் போயிருக்கும். </span>
<span>6:89 இவர்களுக்குத்தாம் நாம் வேதத்தையும், ஞானத்தையும், தூதுத்துவத்தையும் வழங்கியிருந்தோம். இனி (மக்காவாசிகளான) இம்மக்கள் இந்த அருட்கொடையை ஏற்க மறுப்பார்களாயின் (மறுத்துவிட்டுப் போகட்டும்!) நாம் இந்த அருட்கொடையை வேறு மக்களிடம் ஒப்படைத்திருக்கின்றோம். அவர்களோ அதனை மறுப்பவர்களாக இல்லை. </span>
<span>6:90 (நபியே!) அவர்கள்தாம் அல்லாஹ்வினால் நேர்வழி காட்டப்பட்டவர்கள். அவர்களுடைய வழியினையே (நபியே, நீரும்) பின்பற்றிச் செல்வீராக! “நான் இந்த (அழைப்புப்) பணிக்காக எந்தவிதக் கூலியையும் உங்களிடம் கோரவில்லை” என்று கூறுவீராக! இது அகிலத்தார் அனைவர்க்கும் உரிய ஓர் அறிவுரையே ஆகும். </span>
<span>6:91 அல்லாஹ்வை எவ்வாறு மதிப்பிட வேண்டுமோ அவ்வாறு அவர்கள் மதிப்பிடவில்லை. அதனால்தான் “அல்லாஹ் எந்த மனிதன் மீதும் எதனையும் இறக்கிடவில்லை” என்று அவர்கள் கூறினார்கள். “மூஸா கொண்டு வந்த வேதத்தை இறக்கியவன் யார்?” என்று அவர்களிடத்தில் நீர் கேளும்! அதுவோ மனிதர்களுக்கு ஒளியாகவும், நேர்வழியாகவும் திகழ்ந்தது. அதனை நீங்கள் பகுதி பகுதிகளாய்ப் பிரித்து அதில் சிலவற்றை வெளிப்படுத்துகின்றீர்கள்; பெரும்பாலானவற்றை மறைத்து விடுகின்றீர்கள். மேலும், நீங்களும் உங்களுடைய மூதாதையர்களும் அறிந்திராதவையெல்லாம் எதன் மூலம் உங்களுக்குப் புகட்டப்பட்டதோ அதனை இறக்கியவன் யார்? “அல்லாஹ்தான்” என்று கூறுவீராக! அவர்களைத் தங்களின் வீண் விவாதங்களிலேயே விளையாடிக் கொண்டிருக்குமாறு விட்டுவிடுவீராக! </span>
<span>6:92 (அந்த வேதத்தைப் போன்றே) இதுவும் ஒரு வேதமாகும். இதனை நாம் இறக்கி வைத்திருக்கின்றோம். இது அருள்வள மிக்கதாகவும், தனக்கு முன்னால் வந்த வேதத்தை மெய்ப்படுத்துவதாகவும் இருக்கின்றது. மேலும், இத்தலைநகரத்திலும் (மக்காவிலும்) அதன் சுற்றுப்புறங்களிலும் வசிப்பவர்களுக்கு நீர் எச்சரிக்கை செய்வதற்காகவும் இது அருளப்பட்டுள்ளது. மேலும், எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இவ்வேதத்தையும் நம்புவார்கள்; தமது தொழுகையிலும் பேணுதலாக இருப்பார்கள். </span>
<span>6:93 அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனைவிட அல்லது தனக்கு வஹி வராத நிலையில் தனக்கு வஹி வருவதாகச் சொல்பவனைவிட மேலும், அல்லாஹ் இறக்கி வைத்தது போன்று (அதற்குப் போட்டியாக) நானும் இறக்கிக் காண்பிப்பேன் என்று பிதற்றுபவனைவிடக் கொடிய அக்கிரமக்காரன் யார்? அந்தோ! இந்த அக்கிரமக்காரர்கள் மரண வேதனைகளில் சிக்கியிருக்கும்போது நீர் பார்க்க வேண்டும்! மேலும், வானவர்கள் தங்கள் கைகளை நீட்டியவாறு “உங்களுடைய உயிர்களைக் கொடுங்கள்; அல்லாஹ்வைப் பற்றி உண்மைக்குப் புறம்பானவற்றை நீங்கள் கூறிக் கொண்டிருந்ததாலும், அவனுடைய வசனங்களைப் புறக்கணித்து நீங்கள் ஆணவங் கொண்டிருந்ததாலும் இன்று உங்களுக்கு இழிவு மிக்க வேதனை கூலியாகத் தரப்படுகின்றது” (என்று கூறுவார்கள்). </span>
<span>6:94 மேலும், (அல்லாஹ் கூறுவான்:) நாம் முதன் முதலில் உங்களைப் படைத்தது போன்று நீங்கள் இப்போது தன்னந்தனியாக எம்மிடம் வந்துவிட்டீர்கள். நாம் உலகில் உங்களுக்கு வழங்கியவை அனைத்தையும் உங்களுக்குப் பின்னால் விட்டுவிட்டு வந்திருக்கிறீர்கள். உங்களுடைய செயல்களை நிறைவேற்றுவதில் அல்லாஹ்வுக்கு இணையாக யார் யாரையெல்லாம் நீங்கள் கருதி வந்தீர்களோ அத்தகைய உங்கள் பரிந்துரையாளர்களையும் இப்போது உங்களுடன் காணவில்லையே! உங்களுக்கிடையில் இருந்த அனைத்துத் தொடர்புகளும் முறிந்துவிட்டன! மேலும் (உங்களுக்கு உதவுவார்கள் என்று) நீங்கள் கருதி வந்த அனைவரும் உங்களை விட்டுக் காணாமல் போய்விட்டார்கள். </span>
<span>6:95 திண்ணமாக, விதையையும், கொட்டையையும் வெடிக்கச் செய்பவன் அல்லாஹ்தான்! உயிரில்லாததிலிருந்து உயிருள்ளதையும் அவனே வெளிக்கொணர்கிறான். மேலும், உயிருள்ளதிலிருந்து உயிரில்லாததை வெளிப்படுத்துபவனும் அவனே! இப்பணிகள் அனைத்தையும் செய்கின்றவன் அல்லாஹ்தான்! இதற்குப் பிறகும் நீங்கள் எங்கே வழிமாறிச் சென்று கொண்டிருக்கின்றீர்கள்? </span>
<span>6:96 (இரவை அகற்றி) வைகறைப் பொழுதை வெளிப்படுத்துபவனும் அவனே! இரவை அமைதி பெறும் நேரமாக அமைத்தவனும் அவனே! சூரியன், சந்திரனுடைய (உதயம், மறைவு ஆகியவற்றின்) கணக்கினை வரையறுத்தவனும் அவனே! இது பேரறிவு கொண்டவனும், வல்லமை மிக்கவனுமான இறைவனால் நிர்ணயிக்கப்பட்டதாகும். </span>
<span>6:97 அவனே உங்களுக்காக நட்சத்திரங்களைப் படைத்தான்; அவற்றின் மூலம் தரை மற்றும் கடலின் இருள்களில் நீங்கள் வழி தெரிந்து கொள்வதற்காக! திண்ணமாக, அறிவாற்றல் கொண்ட சமுதாயத்தினர்க்கு நாம் சான்றுகளை விவரித்துக் கூறிவிட்டோம். </span>
<span>6:98 மேலும் அவனே ஓருயிரில் இருந்து உங்களைப் படைத்தான். பிறகு ஒவ்வொருவருக்கும் ஒரு தங்குமிடமும் இருக்கிறது; ஒப்படைக்கப்படும் இடமும் இருக்கிறது. புரிந்து கொள்ளும் சமூகத்தினர்க்கு இத்தகைய சான்றுகளையெல்லாம் நாம் விளக்கிக் கூறிவிட்டோம். </span>
<span>6:99 மேலும், வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்தவன் அவனே! அதன் வாயிலாக எல்லாவிதமான தாவரங்களையும் வெளியாக்கினோம். பின்னர் அதிலிருந்து பசுமையான பயிர்களை உருவாக்கி, அவற்றிலிருந்து அடர்த்தியான தானியமணிகளை வெளிப்படுத்தினோம். மேலும், பேரீச்ச மரத்தின் பாளையிலிருந்து சுமை தாளாமல் தொங்கிக் கொண்டிருக்கும் பழக்குலைகளையும் வெளிப்படுத்தினோம். ஒன்றோடொன்று ஒப்பானவையாகவும் (அதே நேரத்தில்) தனித்தன்மைகளும் கொண்ட திராட்சை, ஜைத்தூன் (ஒலிவம்), மாதுளை ஆகியவற்றின் தோட்டங்களையும் அமைத்திருக்கின்றோம். இவை பருவகாலத்தில் எவ்வாறு கனிகின்றன என்பதனைச் சற்று ஆழ்ந்து சிந்தியுங்கள்! இறைநம்பிக்கை கொண்ட மக்களுக்குத் திண்ணமாக இவற்றில் பல சான்றுகள் உள்ளன. </span>
<span>6:100 இருந்தும் மக்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையாக்கி விட்டார்கள். உண்மை யாதெனில், அவன்தான் அந்த ஜின்களைப் படைத்தவன். மேலும், அவர்கள் அறியாமையினால் அல்லாஹ்வுக்கு ஆண்மக்களும், பெண்மக்களும் இருப்பதாகப் புனைந்து கூறுகிறார்கள். ஆனால் அவனோ தூய்மையானவன்; மேலும், இவ்வாறு அவர்கள் புனைந்து கூறுபவற்றிலிருந்து அல்லாஹ் உயர்ந்தவனாவான். </span>
<span>6:101 வானங்களையும் பூமியையும், முன்மாதிரியின்றிப் படைத்தவன் அவனே! அவனுக்கு மனைவியே இல்லாதபோது குழந்தை எப்படி இருக்க முடியும்? அவனே ஒவ்வொன்றையும் படைத்திருக்கின்றான். மேலும், ஒவ்வொன்றைப் பற்றியும் நன்கறிந்தவனாக இருக்கிறான். </span>
<span>6:102 அவன்தான் உங்களைப் படைத்து, பரிபாலிப்பவனாகிய அல்லாஹ்! அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஒவ்வொரு பொருளையும் படைத்தவன் அவனே! எனவே நீங்கள் அவனுக்கே அடிபணியுங்கள்! அவன் எல்லாவற்றிற்கும் பொறுப்பாளனாக இருக்கிறான். </span>
<span>6:103 பார்வைகளால் அவனைப் பார்த்திட முடியாது. அவனோ எல்லாப் பார்வைகளையும் அறிந்து கொள்கின்றான். அவன் நுட்பமானவனும், எல்லாம் தெரிந்தவனுமாயிருக்கின்றான். </span>
<span>6:104 (பாருங்கள்:) உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவான சான்றுகள் வந்திருக்கின்றன. இனி, எவர் கண்ணை விழித்துப் பார்த்து செயல்படுகின்றாரோ அவர் தமக்கே நன்மை செய்து கொண்டவராவார். மேலும், எவர் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுகின்றாரோ அவர் தமக்கே இழப்பை ஏற்படுத்திக் கொண்டவராவார். மேலும், நான் உங்களைப் பாதுகாப்பவனல்லன். </span>
<span>6:105 இவ்வாறு நாம் நம்முடைய சான்றுகளை மீண்டும் மீண்டும் (பல்வேறு முறைகளில்) விவரிக்கின்றோம். மேலும், “நீர் யாரிடமிருந்தோ கற்றுக்கொண்டு வந்திருக்கிறீர்!” என்று அவர்கள் கூறிவிடுவார்கள் என்பதற்காகவும், அறிவுடைய மக்களுக்கு நாம் உண்மையினைத் தெளிவுபடுத்துவதற்காகவும்தான் (இவ்வாறு விவரிக்கின்றோம்.) </span>
<span>6:106 (நபியே!) உம்முடைய அதிபதியிடமிருந்து உமக்கு அருளப்படுகின்ற வஹியைப் பின்பற்றி நடப்பீராக! அந்த அதிபதியைத் தவிர வேறு இறைவன் இல்லை. மேலும், இறைவனுக்கு இணை வைப்பவர்களை நீர் புறக்கணித்து விடுவீராக! </span>
<span>6:107 அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அவனுக்கு இணை வைத்திருக்கமாட்டார்கள். (அத்தகைய ஏற்பாட்டை அவனே செய்திருப்பான்.) நாம் உம்மை அவர்களின் பாதுகாவலராக நியமிக்கவில்லை. மேலும், நீர் அவர்களின் பொறுப்பாளருமல்லர். </span>
<span>6:108 மேலும் (முஸ்லிம்களே!) அவர்கள் அல்லாஹ்வை விடுத்து யாரிடம் பிரார்த்தனை புரிகின்றார்களோ அவர்களை நீங்கள் ஏசாதீர்கள்! பிறகு அவர்கள் அறியாமையினால், எல்லைமீறி அல்லாஹ்வையே திட்ட ஆரம்பித்து விடுவார்கள். நாம் இவ்வாறே ஒவ்வொரு பிரிவினருக்கும் அவரவருடைய செயலை அழகாக்கியிருக்கின்றோம். பிறகு அவர்கள் தம் இறைவனிடமே திரும்பி வரவேண்டியதிருக்கிறது. அப்போது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதனை அவர்களுக்கு அவன் அறிவித்துவிடுவான். </span>
<span>6:109 அவர்கள் அல்லாஹ்வின் மீது அழுத்தமான சத்தியங்கள் செய்து “எங்களிடம் ஏதேனும் சான்று (முஃஜிஸா) வந்துவிட்டால் நிச்சயம் அதன்மீது நம்பிக்கை கொள்வோம்” என்று கூறுகின்றார்கள். (நபியே!) அவர்களிடம் கூறும்: சான்றுகள் அனைத்தும் அல்லாஹ்விடமே உள்ளன! மேலும், சான்றுகள் வந்துவிட்டாலும்கூட அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று உங்களுக்கு எப்படிப் புரியவைப்பது? </span>
<span>6:110 ஆரம்பத்தில் அவர்கள் இவ்வேதத்தின் மீது நம்பிக்கை கொள்ளாதிருந்தது போன்று (இப்போதும் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதற்காக) அவர்களின் உள்ளங்களையும், பார்வைகளையும் நாம் திருப்புகின்றோம். மேலும், அவர்களை வரம்பு மீறிய போக்கிலேயே உழன்று கொண்டிருக்குமாறு நாம் விட்டு விடுகின்றோம். </span>
<span>6:111 நாம் வானவர்களை அவர்களிடம் இறக்கி வைத்தாலும், இறந்து போனவர்கள் வந்து அவர்களிடம் பேசினாலும் (உலகிலுள்ள) அனைத்தையும் அவர்களின் கண்ணெதிரே கொண்டு வந்து குவித்தாலும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். ஆனால் (அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று) அல்லாஹ் நாடினாலே தவிர! ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அறிவற்ற பேச்சுகளைப் பேசிக் கொண்டிருக்கின்றனர். </span>
<span>6:112 இவ்வாறே நாம் ஒவ்வொரு நபிக்கும் மனிதர்கள் மற்றும் ஜின்களில் உள்ள ஷைத்தான்களைப் பகைவர்களாக்கினோம். அவர்களில் சிலர், வேறு சிலரிடம் ஏமாற்றும் நோக்குடன் அலங்காரமான சொற்களைக் கூறிக் கொண்டேயிருக்கின்றனர். உம்முடைய இறைவன் நாடியிருந்தால் அவர்கள் ஒருபோதும் இச்செயலைச் செய்திருக்க மாட்டார்கள். </span>
<span>6:113 எனவே நீர் அவர்களை விட்டுவிடும்! அவர்கள் புனைந்து கூறிக்கொண்டிருக்கட்டும்! மேலும் (இச்செயல்களைச் செய்யுமாறு அவர்களை நாம் ஏன் விட்டு வைத்திருக்கின்றோம் என்றால்) மறுமையை நம்பாதவர்களின் மனம் இந்த அலங்காரமான (ஏமாற்று)ப் பேச்சின் பக்கம் சாய்ந்து அதனை அவர்கள் மனநிறைவு கொள்வதற்காகவும், மேலும் அவர்கள் சம்பாதிக்க விரும்பும் தீவினைகளை அவர்கள் சம்பாதிப்பதற்காகவும்தான்!</span>
<span>6:114 இவ்வாறிருக்க, அல்லாஹ்வை விடுத்து வேறொரு தீர்ப்பாளனையா நான் தேடுவேன்? அவனோ முழு விளக்கத்துடன் உங்களுக்கு வேதத்தை இறக்கியுள்ளான். மேலும் (உங்களுக்கு முன்னால்) எவர்களுக்கு நாம் வேதத்தை வழங்கினோமோ அவர்கள் இவ்வேதம் உம்முடைய இறைவனிடமிருந்து சத்தியத்துடன் இறங்கியிருக்கின்றது என்பதை நன்கறிவார்கள். எனவே சந்தேகம் கொள்வோரில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம். </span>
<span>6:115 உம்முடைய இறைவனின் வாக்கில் உண்மையும் நீதியும் முழுமையாக உள்ளன! அவனுடைய கட்டளைகளை மாற்றக்கூடியவர் எவருமிலர். மேலும், அவன் அனைத்தையும் செவியேற்பவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>6:116 மேலும் (நபியே,) உலகில் வாழும் மக்களில் பெரும்பான்மை(யினரின் கூற்று)க்கு நீர் கீழ்ப்படிவீராயின் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் வழியிலிருந்து பிறழச் செய்து விடுவார்கள்! அவர்களோ வெறும் யூகங்களையே பின்பற்றுகின்றார்கள். மேலும், கற்பனைகளிலேயே மூழ்கிக் கிடக்கின்றார்கள். </span>
<span>6:117 நிச்சயமாக உம் இறைவன் தன் வழியிலிருந்து தவறியிருப்பவர் யார்; இன்னும் நேர்வழியில் செல்பவர்கள் யார் என்பதை நன்கறிபவனாக இருக்கின்றான். </span>
<span>6:118 நீங்கள் அல்லாஹ்வுடைய வசனங்கள் மீது நம்பிக்கை உடையோராயின் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணிகளின் மாமிசத்தைப் புசியுங்கள்! </span>
<span>6:119 அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணியை நீங்கள் புசிக்காமல் இருக்க என்ன காரணம்? கட்டாயச் சூழ்நிலைகளைத் தவிர மற்ற சமயங்களில் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளவை பற்றி ஏற்கனவே உங்களுக்கு விளக்யிருக்கின்றானே...! ஆனால், பெரும்பான்மையினரின் நிலை என்னவெனில், அறிவில்லாமல் தம் மன இச்சைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மக்களை வழி பிறழச் செய்கின்றார்கள். திண்ணமாக, உம் இறைவன் வரம்பு மீறி நடப்போரை நன்கறிவான். </span>
<span>6:120 வெளிப்படையான, மறைவான பாவங்கள் அனைத்தையும் நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள்! எவர்கள் பாவத்தைச் சம்பாதிக்கின்றார்களோ அவர்களுக்கு அவர்கள் சம்பாதித்தவற்றின் கூலி அதிவிரைவில் வழங்கப்படும். </span>
<span>6:121 மேலும், அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத பிராணியின் மாமிசத்தை நீங்கள் புசிக்காதீர்கள்! நிச்சயமாக, இவ்வாறு செய்வது பாவமாகும். திண்ணமாக, ஷைத்தான்கள் தம் நண்பர்களின் உள்ளங்களில் ஐயப்பாடுகளையும் ஆட்சேபணைகளையும் விதைக்கின்றார்கள்; அவர்கள் உங்களோடு தர்க்கம் புரிய வேண்டும் என்பதற்காக! ஆனால், நீங்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பீர்களாயின் நிச்சயமாக நீங்களும் இணைவைப்பவர்கள்தாம்!</span>
<span>6:122 இறந்துவிட்டிருந்த ஒருவனுக்கு நாம் உயிர் கொடுத்தோம். பின்னர் அவனுக்கு ஓர் ஒளியையும் வழங்கினோம். அதன் உதவியால் அவன் மக்களிடையே நடமாடுகின்றான். இப்படிப்பட்டவனும் இருள்களில் சிக்கி, எவ்விதத்திலும் அவற்றிலிருந்து வெளியேற முடியாமலிருப்பவனும் சமம் ஆவார்களா? நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் செயல்கள் அழகாக்கப்பட்டுள்ளன. </span>
<span>6:123 மேலும் இதேபோன்று ஒவ்வோர் ஊரிலும் அங்குள்ள பெரும் பெரும் குற்றவாளிகளை நாம் விட்டு வைத்திருக்கின்றோம்; தங்களுடைய ஏமாற்று வலையை அங்கு அவர்கள் விரித்து வைக்கட்டும் என்பதற்காக! உண்மையில் அவர்களே தங்களின் ஏமாற்று வலையில் சிக்கிக் கொள்கின்றார்கள். ஆனால் அதை அவர்கள் உணர்வதில்லை. </span>
<span>6:124 அவர்களிடம் ஏதேனுமொரு சான்று வந்தால் “இறைத்தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டதைப் போன்று எங்களுக்கும் கொடுக்கப்படாத வரை நாங்கள் அதை ஏற்கமாட்டோம்” என்று கூறுகின்றார்கள். தூதுத்துவப் பணியை யாரிடம் வாங்க வேண்டும், எவ்வாறு வாங்க வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கறிவான். இத்தகைய குற்றவாளிகள் அதிவிரைவில் தாங்கள் செய்துகொண்டிருக்கும் சூழ்ச்சிகளுக்குப் பகரமாக அல்லாஹ்விடம் இழிவையும் கடுமையான வேதனையையும் அடைவார்கள். </span>
<span>6:125 எனவே எவருக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட நாடுகின்றானோ அவருடைய நெஞ்சத்தை இஸ்லாத்திற்காக விரிவாக்கிவிடுகின்றான். எவனை வழிகேட்டிலாழ்த்த நாடுகின்றானோ அவனது நெஞ்சத்தை இறுக்கமாக்கி விடுகின்றான்; எந்த அளவுக்கெனில் (இஸ்லாத்தைப் பற்றி நினைத்ததுமே) அவனுடைய உயிர் வானத்தை நோக்கி ஏறுவதைப் போல் உணர்கின்றான். இவ்வாறாக, இறைநம்பிக்கை கொள்ளாதவர்கள் மீது (சத்தியத்தை விட்டு விரண்டோடுவது, அதன் மீது வெறுப்புக் கொள்வது போன்ற) தூய்மையற்ற நிலையைத் திணித்துவிடுகின்றான். </span>
<span>6:126 ஆயினும், இவ்வழி உம் இறைவனின் நேர்வழியாகும். திண்ணமாக, நல்லுரையினை ஏற்கும் மக்களுக்கு அதன் சான்றுகளை நாம் தெளிவுபடுத்திவிட்டோம். </span>
<span>6:127 அவர்களின் இறைவனிடம் அவர்களுக்குச் சாந்தி அளிக்கும் இல்லம் உண்டு. மேலும், அவர்கள் மேற்கொண்ட நேரிய செயல்முறையின் காரணமாக அவனே அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பவனாக இருக்கின்றான். </span>
<span>6:128 மேலும், எந்நாளில் அவர்கள் எல்லோரையும் அல்லாஹ் ஒன்று திரட்டுவானோ அந்நாளில் ஜின்களை (ஜின் இனத்தைச் சார்ந்த ஷைத்தான்களை) நோக்கி அவன் கூறுவான்: “ஜின் கூட்டத்தாரே! நீங்கள் மனிதர்களில் பெரும்பாலோரை உங்கள் பக்கம் நன்கு கவர்ந்திழுத்துக் கொண்டீர்களே!” மேலும், மனிதர்களில் யார் யார் அவர்களுக்கு நண்பர்களாக இருந்தார்களோ அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவனே! நாங்கள் ஒருவரை ஒருவர் நன்கு பயன்படுத்திக் கொண்டோம். எந்த நேரத்தை எங்களுக்காக நீ விதித்திருந்தாயோ அந்த நேரத்தை இப்பொழுது நாங்கள் அடைந்திருக்கின்றோம்.” அப்போது அல்லாஹ் கூறுவான்: “இனி நரகம்தான் உங்களின் தங்குமிடமாகும். அதில் நீங்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பீர்கள்!” அதிலிருந்து அல்லாஹ் யாரைக் காப்பாற்ற நாடுகின்றானோ அவர்கள் மட்டுமே அதிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள். நிச்சயமாக, உம் இறைவன் நுண்ணறிவாளனும், பேரறிவு கொண்டவனுமாவான். </span>
<span>6:129 (பாருங்கள்!) இவ்வாறே அக்கிரமக்காரர்கள் (உலகில் ஒன்றிணைந்து) சம்பாதித்துக் கொண்டிருந்தவற்றின் காரணத்தால், (மறுமையில்) அவர்களில் சிலரை வேறு சிலருக்கு நண்பர்கள் ஆக்குவோம். </span>
<span>6:130 (அச்சமயத்தில் அல்லாஹ் அவர்களிடம் இப்படி வினவுவான்:) “ஜின் மற்றும் மனிதக் கூட்டத்தார்களே! உங்களுக்கு என் வசனங்களை ஓதிக் காட்டி நீங்கள் சந்திக்கப்போகும் இந்நாளின் விளைவு குறித்து எச்சரிக்கை செய்கின்ற தூதர்கள் உங்களிலிருந்தே உங்களிடம் வரவில்லையா?” அதற்கு அவர்கள் “ஆம் (வந்தார்கள்); எங்களுக்கு எதிராக நாங்களே சாட்சி கூறுகின்றோம்” என்று கூறுவார்கள். இந்த உலக வாழ்க்கை இன்று அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கின்றது. ஆனால் அவர்கள் நிராகரிப்பாளர்களாய் வாழ்ந்ததாக அன்று தங்களுக்கு எதிராக சாட்சி கூறுவார்கள். </span>
<span>6:131 (இவ்வாறு அவர்களிடம் சாட்சியம் பெறுவது) எதற்காகவெனில், உம் இறைவன் எந்த ஊரையும் அங்கு வாழ்வோர் உண்மையை அறியாதிருக்கும் நிலையில் அநியாயமாய் அழிப்பதில்லை (எனும் உண்மை நிரூபணமாவதற்காகத்தான்!)</span>
<span>6:132 ஒவ்வொருவருக்கும் அவரவரின் செயல்களைப் பொறுத்து சில படித்தரங்கள் உள்ளன. உம் இறைவன் அவர்கள் செய்கின்ற செயல்களைப் பற்றி கவனமற்றவனாய் இல்லை. </span>
<span>6:133 மேலும், உம்முடைய இறைவன் தன்னிறைவானவனும், இரக்கம் உடையவனுமாய் இருக்கின்றான். அவன் நாடினால் உங்களை அகற்றிவிட்டு, இதற்கு முன்பு இதர மக்களின் சந்ததியிலிருந்து உங்களைக் கொண்டு வந்தது போல், உங்களுடைய இடத்தில் தான் நாடுகின்ற மற்றவர்களைக் கொண்டுவந்து விடுவான். </span>
<span>6:134 உங்களுக்கு வாக்களிக்கப்படும் விஷயம் திண்ணமாக வந்தே தீரும். (இறைவனை) இயலாமைக்குள்ளாக்கும் வலிமை உங்களுக்கில்லை! </span>
<span>6:135 (நபியே!) கூறுவீராக: “என் சமூகத்தாரே! நீங்கள் உங்கள் வழியில் செயல்பட்டுக் கொண்டிருங்கள்; நானும் எனது வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றேன். இவ்வுலக வாழ்வின் இறுதி விளைவு யாருக்குச் சாதகமாக அமையும் என்பதை நீங்கள் விரைவில் அறிந்து கொள்வீர்கள். அக்கிரமக்காரர்கள் வெற்றியடைய மாட்டார்கள் என்பது எந்நிலையிலும் எதார்த்த உண்மையாகும்.”</span>
<span>6:136 இந்த மக்கள் அல்லாஹ்வுக்காக, அவனே உற்பத்தி செய்த வேளாண்மை, கால்நடைகள் ஆகியவற்றிலிருந்து ஒரு பாகத்தை ஒதுக்கி, இது அல்லாஹ்வுக்குரியது என்றும், (மற்றொரு பாகத்தை ஒதுக்கி) இது நாங்கள் ஏற்படுத்திய இணைத்தெய்வங்களுக்கு உரியது என்றும் (எந்த அடிப்படையுமில்லாமல்) கூறுகின்றார்கள். எப்பாகம் அவர்களுடைய இணைத்தெய்வங்களுக்கு உரியதோ அது அல்லாஹ்வுக்குச் சேருவதில்லை. ஆனால் எது அல்லாஹ்வுக்கு உரியதோ அது அவர்களின் இணைத்தெய்வங்களுக்குச் சேருகின்றது! அவர்கள் எடுக்கும் முடிவு எவ்வளவு மோசமானது!</span>
<span>6:137 இவ்வாறே இணைவைப்பாளர்களில் பலருக்குத் தங்கள் குழந்தைகளைத் (தாங்களே) கொலை செய்வதை அவர்களுடைய இணைத்தெய்வங்கள் அழகாக்கினார்கள். எதற்காகவெனில், அவர்களை அழிவுக்குள்ளாக்க வேண்டும்; அவர்களின் தீனை நெறியை அவர்களுக்கு குழப்பமாக்க வேண்டும் என்பதற்காக! அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். எனவே புனைந்து கூறிக் கொண்டிருக்கும் நிலையிலேயே நீர் அவர்களை விட்டுவிடும். </span>
<span>6:138 “இந்தக் கால்நடைகளும், வேளாண்மையும் (நேர்ச்சைக்காக) விடப்பட்டவையாகும். நாங்கள் யாரை விரும்பி அனுமதிக்கின்றோமோ அவர்கள் மட்டுமே இவற்றை உண்ணலாம்” என்று அவர்கள் கூறுகின்றார்கள். எனினும் இது அவர்களாகவே உருவாக்கிக் கொண்ட கட்டுப்பாடாகும்! வேறு சில கால்நடைகள் உண்டு; அவற்றின் மீது சவாரி செய்வதும் சுமை ஏற்றிச் செல்வதும் தடுக்கப்பட்டுள்ளன. மேலும், சில கால்நடைகளுண்டு; அவற்றை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயரை அவர்கள் உச்சரிப்பதில்லை. இவை அனைத்தையும் அல்லாஹ்வின் பெயரில் புனைந்து கூறியுள்ளார்கள். அவர்கள் புனைந்து கூறிக் கொண்டிருந்தமைக்காக அதிவிரைவில் அல்லாஹ் அவர்களுக்குத் தண்டனை வழங்குவான். </span>
<span>6:139 இன்னும் “இக்கால்நடைகளின் வயிற்றிலுள்ள குட்டிகள் எங்களைச் சேர்ந்த ஆண்களுக்கு மட்டுமே உரித்தானவையாகவும், எங்களைச் சேர்ந்த பெண்களுக்குத் தடுக்கப்பட்டவையாகவும் இருக்கின்றன. ஆனால் அவை செத்துப் போயிருந்தால், அவற்றைப் புசிப்பதில் இரு பாலாருக்கும் பங்கு உண்டு” என்று கூறுகின்றார்கள். அவர்களே புனைந்து கூறிய பொய்க்கூற்றுக்கான தண்டனையை அல்லாஹ் அவர்களுக்கு அளித்தே தீருவான். நிச்சயமாக அவன் நுண்ணறிவாளனும் யாவற்றையும் அறிந்தவனுமாயிருக்கின்றான். </span>
<span>6:140 எவர்கள் தம் குழந்தைகளை அறியாமையினாலும் மூடத்தனத்தினாலும் கொன்றுவிட்டார்களோ மேலும், அல்லாஹ்வின் மீது பழி சுமத்தி, அவர்களுக்கு வழங்கியிருந்தவற்றைத் தாங்களாகவே தடைசெய்து கொண்டார்களோ, அவர்கள் நிச்சயமாக பேரிழப்புக்கு ஆளாகிவிட்டார்கள். திண்ணமாக, அவர்கள் வழிதவறிப் போய் விட்டார்கள். அவர்கள் ஒருபோதும் நேர்வழி பெற்றவர்களாய் இருக்கவில்லை. </span>
<span>6:141 மேலும் (பந்தல்களில்) படரும் கொடிகள், படராத செடிகள் ஆகியவற்றைக் கொண்ட (விதவிதமான) தோட்டங்களையும், பேரீச்சந் தோப்புகளையும் பலவகைப்பட்ட உண்பொருள்களை அளிக்கக்கூடிய தாவரங்களையும் மற்றும் தோற்றத்தில் ஒரே மாதிரியாகவும் (சுவையில்) வேறுபட்டும் இருக்கும் ஒலிவம், மாதுளை ஆகியவற்றையும் படைத்தவன் அந்த அல்லாஹ்தான்! அவை காய்க்கும்போது அவற்றின் பலன்களை புசியுங்கள்! அவற்றின் அறுவடை நாளில் அல்லாஹ்வுக்குரிய பங்கினைக் கொடுத்து விடுங்கள். மேலும் வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுவோரை திண்ணமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. </span>
<span>6:142 சுமை சுமப்பதற்கு பயன்படக் கூடிய சில பிராணிகளையும் (உணவுக்கும் விரிப்புக்கும் பயன்படக்கூடிய) சில பிராணிகளையும் அவன்தான் படைத்தான். எனவே அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றைப் புசியுங்கள். மேலும், ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! திண்ணமாக, அவன் உங்களுக்கு வெளிப்படையான விரோதியாவான். </span>
<span>6:143 இவை எட்டு வகை (ஆண், பெண் பிராணி)கள் ஆகும். செம்மறி ஆட்டு வகையில் இரண்டும், வெள்ளாட்டு வகையில் இரண்டுமாகும். (நபியே!) அவர்களிடம் நீர் கேளும்: “அல்லாஹ் இவற்றில் எதனைத் தடுத்திருக்கிறான்? ஆணையா? பெண்ணையா? அல்லது அந்த இருவகை ஆடுகளின் கருவறைகளில் இருக்கும் குட்டிகளையா? நீங்கள் உண்மையாளர்களாயின் அறிவின் அடிப்படையில் துல்லியமாக விளக்குங்கள்.”</span>
<span>6:144 மேலும், இதே போன்று ஒட்டகத்தில் இருவகையும், மாட்டில் இருவகையும் உள்ளன. கேளுங்கள்: இவற்றில் எதனை அல்லாஹ் தடுத்திருக்கின்றான்? ஆணையா? பெண்ணையா? அந்த இருவகைப் பெண் பிராணிகளின் கருவறைகளில் உள்ள குட்டிகளையா? அல்லது இவை கூடாது என்று அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டபோது (அங்கு) நீங்கள் இருந்தீர்களா? எவ்வித அறிவுமின்றி மக்களை வழிகெடுப்பதற்காக அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனைவிட பெரிய அக்கிரமக்காரன் யார்? நிச்சயமாக இத்தகைய அக்கிரமக்காரர்களை அல்லாஹ் ஒரு போதும் நேர்வழியில் செலுத்த மாட்டான். </span>
<span>6:145 (நபியே! இவர்களிடம்) கூறும்: எனக்கு அருளப்பட்ட வஹியில், உண்பவர்களுக்கு எந்த உணவும் தடை செய்யப்பட்டதாக நான் காணவில்லை; ஆனால் செத்த பிராணியையும், ஓடும் இரத்தத்தையும், பன்றி இறைச்சியையும் தவிர! திண்ணமாக இவை அசுத்தங்களாகும். மேலும், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறி அறுக்கப்பட்டபாவமானவற்றைத் தவிர! பின்னர் யாரேனும் ஒருவர் மாறு செய்யும் நோக்கம் இன்றியும், வரம்பு மீறாமலும் இப்பொருள்களில் ஒன்றைப் புசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டால் திண்ணமாக, உம் இறைவன் பெரிதும் மன்னிப்பவனாகவும், கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>6:146 மேலும், யூதர்களுக்கு நகமுடைய பிராணிகள் எல்லாவற்றையும் நாம் தடை செய்திருந்தோம். ஆடு, மாடுகளின் கொழுப்பையும் (நாம் தடை செய்திருந்தோம்). ஆனால் அவற்றின் முதுகுகளில் அல்லது குடல்களில் அல்லது எலும்போடு கலந்திருக்கின்ற கொழுப்பைத் தவிர! அவர்கள் வரம்பு மீறிச் செயல்பட்டதன் காரணமாக, இவ்வாறு அவர்களுக்கு நாம் தண்டனை அளித்தோம். திண்ணமாக நாம் முற்றிலும் உண்மை கூறுபவர்களாய் இருக்கின்றோம். </span>
<span>6: 147 இனி அவர்கள் உம்மைப் பொய்யர் என்று கூறினால், “உங்கள் இறைவன் விசாலமான கருணையாளன்; எனினும், அவனுடைய தண்டனை குற்றவாளிகளை விட்டு நீக்கப்படமாட்டாது” என்று அவர்களிடம் நீர் கூறுவீராக!</span>
<span>6:148 (உமது இக்கூற்றுக்கு மறுமொழியாக) இணைவைப்பாளர்கள் திண்ணமாக கூறுவார்கள்: “அல்லாஹ் நாடியிருந்தால், நாங்கள் இணைவைத்திருக்க மாட்டோம்; எங்கள் மூதாதையர்களும் இணைவைத்திருக்க மாட்டார்கள். மேலும் நாங்கள் எப்பொருளையும் தடை செய்திருக்கவும் மாட்டோம்.” இவர்களுக்கு முன்சென்றவர்களும் இவ்வாறு கூறித்தான் சத்தியத்தைப் பொய்யெனக் கூறிக்கொண்டிருந்தார்கள். இறுதியில் நம்முடைய வேதனையின் சுவையை அவர்கள் அனுபவித்தார்கள். இவர்களிடம் நீர் கூறும்: “அறிவார்ந்த ஆதாரம் ஏதேனும் உங்களிடம் உண்டா? இருந்தால் அதனை எங்கள் முன் எடுத்து வையுங்கள்! நீங்கள் வெறும் யூகத்தைத்தான் பின்பற்றிச் செல்கின்றீர்கள். மேலும், நீங்கள் கற்பனையின் அடிப்படையிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.” </span>
<span>6:149 மேலும், நீர் கூறுவீராக: “(உங்களுடைய வாதத்திற்கு எதிராக) எதார்த்தத்தைக் கொண்டுள்ள முழுமையான வாதம் அல்லாஹ்விடமே இருக்கிறது. அவன் நாடியிருந்தால் நிச்ச யமாக உங்கள் அனைவரையும் நேர்வழியில் செலுத்தியிருப்பான்.”</span>
<span>6:150 “அல்லாஹ்தான் இப்பொருள்களைத் தடை செய்திருக்கின்றான் என்று சாட்சி கூறக்கூடிய உங்களின் சாட்சியாளர்களை அழைத்து வாருங்கள்” என அவர்களிடம் கூறுவீராக! பிறகு அவர்கள் சாட்சியம் அளித்துவிட்டால் நீர் அவர்களுடன் சேர்ந்து சாட்சியம் அளிக்க வேண்டாம். நம்முடைய வசனங்களைப் பொய்யென வாதிடுபவர்கள், மற்றும் மறுமையை மறுப்பவர்கள், மேலும், தங்களின் இறைவனோடு மற்றவர்களைச் சமம் ஆக்குகின்றவர்கள் ஆகியோரின் விருப்பங்களை நீர் பின் தொடராதீர்!</span>
<span>6:151 (நபியே! இவர்களிடம்) கூறும்: “வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது சுமத்தியுள்ள நிபந்தனைகள் எவை என்பதை நான் கூறுகின்றேன். (அதாவது) அவனோடு யாரையும் எதையும் இணை வைக்காதீர்கள். மேலும், பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். மேலும், வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். நாமே உங்களுக்கும் உணவளிக்கின்றோம்; அவர்களுக்கும் அளிப்போம். மேலும், மானக்கேடான செயல்களின் அருகேகூடச் செல்லாதீர்கள்! அவை வெளிப்படையானவையாயினும் மறைவானவையாயினும் சரியே! மேலும் அல்லாஹ் கண்ணியத்திற்கு உரியதாக்கிய எவ்வுயிரையும் நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள்! நீங்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்காக இவற்றைக் கொண்டு அல்லாஹ் உங்களுக்கு அறிவுறுத்துகின்றான். </span>
<span>6:152 மேலும், அநாதைகளின் செல்வத்தை அவர்கள் பருவ வயதினை அடையும்வரை நியாயமான முறையில் அன்றி நெருங்காதீர்கள்! மேலும், அளவையிலும், நிறுவையிலும் நீதியைக் கடைப்பிடியுங்கள். எந்த மனிதன் மீதும் அவனது சக்திக்கு ஏற்பவே தவிர நாம் பொறுப்பு சுமத்துவதில்லை. இன்னும் பேசும்போது நீதியுடன் பேசுங்கள்! உங்கள் நெருங்கிய உறவினர் பற்றிய விவகாரமாயினும் சரியே! மேலும் அல்லாஹ்வின் உடன்படிக்கையை நீங்கள் முழுமையாக நிறைவேற்றுங்கள்! நீங்கள் அறிவுரை பெற வேண்டும் என்பதற்காக இவற்றைக் கொண்டு அவன் உங்களுக்கு நல்லுரை கூறுகின்றான். </span>
<span>6:153 மேலும், அவன் அறிவுறுத்துகின்றான்: நிச்சயமாக இதுதான் என்னுடைய நேரான வழியாகும். எனவே, நீங்கள் இதனைப் பின்பற்றுங்கள். வேறு வழிகளைப் பின்பற்றாதீர்கள்! ஏனெனில் அவை நேரான வழியிலிருந்து உங்களைச் சிதறடித்துவிடும். உங்களுடைய இறைவன் உங்களுக்கு நல்கியுள்ள அறிவுரைகள் இவைதாம். இவற்றின் மூலம் நீங்கள் தவறான வழியைத் தவிர்த்து வாழக்கூடும். </span>
<span>6:154 பிறகு நாம் மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அவ்வேதம் நன்னடத்தையை மேற்கொண்டோருக்கு அருட் கொடையை நிறைவு செய்யத்தக்கதாகவும் அவசியமான ஒவ்வொன்றையும் விளக்கக் கூடியதாகவும் நேர்வழி காட்டக்கூடியதாகவும் அருள் மிக்கதாகவும் அமைந்திருந்தது. மக்கள் தம் இறைவனைச் சந்திப்போம் என்று நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காகவே (இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு அவ்வேதத்தை நாம் வழங்கினோம்)! </span>
<span>6:155 மேலும் (இதே போன்று) இவ்வேதத்தையும் நாம்தான் இறக்கினோம். இது மிக்க அருள்வளமுடையது. எனவே நீங்கள் இதனைப் பின்பற்றுங்கள். மேலும், இறையச்சமுள்ள போக்கினை மேற்கொள்ளுங்கள்! உங்கள் மீது இரக்கம் காட்டப்படலாம். </span>
<span>6:156 “எங்களுக்கு முன்சென்ற இருகூட்டத்தாருக்குத்தான் வேதம் வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் எதனைப் படித்தார்கள்; கற்பித்தார்கள் என்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது” என்று இனி நீங்கள் கூற முடியாது. </span>
<span>6:157 அல்லது எங்கள் மீது வேதம் இறக்கியருளப் பட்டிருந்தால் அவர்களைவிட நல்ல முறையில் நேர்வழி நடப்பவர்களாக விளங்கியிருப்போம் என்றும் இனி நீங்கள் சாக்குப்போக்குக் கூறிட முடியாது. உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றும் நேர்வழியும் அருட்கொடையும் உங்களிடம் வந்துள்ளன. இனி எவன் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யானவை என வாதிட்டு, அவற்றைப் புறக்கணித்தானோ அவனைவிட அக்கிரமக்காரன் யார்? எவர்கள் நம்முடைய வசனங்களைப் புறக்கணிக்கின்றார்களோ அவர்களுக்கு அவர்கள் புறக்கணித்துக் கொண்டிருந்ததன் காரணமாக இழிவான தண்டனையை நாம் அளித்தே தீருவோம். </span>
<span>6:158 என்ன, இப்போது இவர்கள் தங்கள் முன்னால் வானவர்கள் வந்து நிற்க வேண்டும்; அல்லது உம் இறைவனே வரவேண்டும்; அல்லது உம் இறைவனின் தெளிவான சான்றுகள் சில வெளிப்பட வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கின்றார்களா? உம் இறைவனின் சான்றுகளில் சில வெளிப்படும் நாளில் முன்னரே நம்பிக்கை கொள்ளாதவர்க்கும் அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் அதனுடன் யாதொரு நன்மையையும் சம்பாதிக்காதவர்க்கும் அவருடைய நம்பிக்கை எவ்வித பயனையும் அளிக்காது. எனவே (நபியே! இவர்களிடம்) கூறும்: “சரி, நீங்கள் எதிர்பார்த்திருங்கள்; நாங்களும் எதிர்பார்த்திருக்கிறோம்.”</span>
<span>6:159 எவர்கள் தங்களுடைய தீனை நெறியை துண்டு துண்டாக்கி, பல்வேறு குழுக்களாய் பிரிந்து விட்டார்களோ அவர்களோடு நிச்சயமாக உமக்கு எவ்விதத் தொடர்புமில்லை. அவர்களுடைய விவகாரம் அல்லாஹ்வின் பொறுப்பிலேயே உள்ளது. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதையும் அவனே அவர்களுக்கு அறிவித்துக் கொடுப்பான். </span>
<span>6:160 எவர் இறைவனின் திருமுன் நன்மையைக் கொண்டு வருவாரோ அவருக்கு அதைப்போல் பத்து மடங்கு நற்கூலி உண்டு. எவர் தீமையைக் கொண்டு வருவாரோ அவருக்கு அவர் செய்த தீமை அளவுக்குத்தான் தண்டனை கொடுக்கப்படும். மேலும், யாருக்கும் அநீதி இழைக்கப்படமாட்டாது. </span>
<span>6:161 (நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன், எனக்கு நேரான வழியைக் காட்டிவிட்டான். அது முற்றிலும் சரியான கோணல் இல்லாத தீன் (நெறி) ஆகும்; மன ஓர்மையுடன் இப்ராஹீம் கடைப்பிடித்து வந்த வழிமுறையும் ஆகும்; மேலும், அவர் இணைவைப்பாளர்களில் ஒருவராய் இருக்கவில்லை.” </span>
<span>6:162 கூறுவீராக: “நிச்சயமாக, எனது தொழுகையும் என்னுடைய வழிபாடுகளும் என்னுடைய வாழ்வும் என்னுடைய மரணமும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியனவாகும்.” </span>
<span>6:163 அவனுக்கோ யாரும் இணையில்லை. இவ்வாறே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. மேலும், நான் இறைவனுக்குக் கீழ்ப்படிவோரில் (முஸ்லிம்களில்) முதன்மையானவனாக உள்ளேன்.” </span>
<span>6:164 மேலும் கூறுவீராக: “அல்லாஹ்வே அனைத்திற்கும் அதிபதியாக இருக்க, அவனை விடுத்து வேறொரு அதிபதியை நான் தேடுவேனா? மேலும், எவரெவர் எதைச் சம்பாதிக்கின்றார்களோ அதற்கு அவரவரே பொறுப்பாளிகளாவர். மேலும், ஒருவரின் சுமையை மற்றவர்கள் சுமக்க மாட்டார்கள். பின்னர் நீங்கள் அனைவரும் உங்கள் அதிபதியிடமே திரும்ப வேண்டியுள்ளது. அச்சமயம் நீங்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ அதன் உண்மை நிலையை அவன் உங்களுக்கு வெளிப்படுத்திவிடுவான். </span>
<span>6:165 உங்களைப் பூமியில் பிரதிநிதிகளாக ஆக்கியவனும் அவனே! உங்களில் சிலருக்கு வேறு சிலரைவிட உயர்ந்த படித்தரங்களை அவன் வழங்கியிருக்கின்றான்; அவன் உங்களுக்கு வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக! நிச்சயமாக உம் அதிபதி தண்டனை வழங்குவதில் விரைவானவன்; மேலும் நிச்சயமாக அவன் மாபெரும் மன்னிப்பாளனாகவும் பெருங் கருணையாளனாகவும் இருக்கின்றான். </span>
</div><div>
<span>அல்அஃராஃப்</span>
<span>7:1 அலிஃப், லாம், மீம், ஸாத். </span>
<span>7:2 (நபியே!) இது உம்மீது இறக்கியருளப்பட்டிருக்கும் வேதமாகும். எனவே, இதனைப் பற்றி உமது உள்ளத்தில் எவ்விதத் தயக்கமும் ஏற்பட வேண்டாம். (சத்தியத்தை மறுப்போர்க்கு) இதன் மூலம் நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும். மேலும், இறைநம்பிக்கை கொண்டோர்க்கு இது ஓர் அறிவுரையாகத் திகழ வேண்டும் என்பதற்காகவே இது இறக்கி வைக்கப்பட்டது. </span>
<span>7:3 (மக்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்டவற்றைப் பின்பற்றுங்கள்! மேலும், அவனை விடுத்து வேறு பாதுகாவலர்களைப் பின்பற்றாதீர்கள்! ஆனால் நீங்கள் மிகக் குறைவாகவே நல்லுரைகளை ஏற்கின்றீர்கள். </span>
<span>7:4 எத்தனையோ ஊர்களை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். இரவு நேரத்தில் அல்லது நண்பகலில் அவர்கள் துயிலில் ஆழ்ந்திருந்தபோது திடீரென்று நம்முடைய வேதனை அவர்களைத் தாக்கியது. </span>
<span>7:5 அவ்வாறு நம்முடைய வேதனை அவர்களைத் தாக்கியபோது அவர்களால் எதையும் கூற இயலவில்லை; “உண்மையிலேயே நாங்கள் அக்கிரமக்காரர்களாகத்தான் இருந்தோம்” என்று கூக்குரலிட்டதைத் தவிர!</span>
<span>7:6 எனவே, எந்த மக்களிடம் தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ, அந்த மக்களிடம் திண்ணமாக நாம் விசாரணை நடத்துவோம். மேலும், தூதர்களிடமும் (தூதுத்துவக் கடமையை அவர்கள் எதுவரை நிறைவேற்றினார்கள்; மக்களிடமிருந்து என்ன பதில் கிடைத்தது என்பது பற்றி) நிச்சயம் விசாரிப்போம். </span>
<span>7:7 பிறகு (நடந்த நிகழ்ச்சிகள்) அனைத்தையும் நாம் முழு அறிவுடன் அம்மக்களுக்கு எடுத்துச் சொல்வோம். நாம் எங்கும் மறைந்து போய்விடவில்லை. </span>
<span>7:8 மேலும் அந்நாளில் சத்தியம் மட்டுமே கனமுடையதாயிருக்கும். எவர்களுடைய நன்மைகளின் எடை கனமாக இருக்குமோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள். </span>
<span>7:9 மேலும், எவர்களுடைய நன்மைகளின் எடை இலேசாக இருக்குமோ அவர்கள்தாம் தங்களைத் தாங்களே இழப்பிற்குள்ளாக்கிக் கொண்டவர்கள். காரணம், அவர்கள் நம்முடைய வசனங்களுடன் அக்கிரமமாக நடந்து கொண்டிருந்தார்கள்!</span>
<span>7:10 நாம், பூமியில் உங்களை அனைத்து அதிகாரங்களுடன் வாழச் செய்தோம். மேலும், அங்கே உங்களுக்கு வாழ்க்கைச் சாதனங்களையும் அமைத்துத் தந்தோம். ஆயினும், நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள். </span>
<span>7:11 நாம் உங்களைப் படைத்து, பிறகு உங்களுக்கு உருவம் கொடுத்தோம். பின்னர் ஆதமுக்கு சிரம் பணியுங்கள் என வானவர்களுக்குக் கட்டளையிட்டோம். (இக்கட்டளைக்கேற்ப) அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள். ஆனால் இப்லீஸைத் தவிர! அவன் சிரம் பணிவோரில் ஒருவனாய் இருக்கவில்லை. </span>
<span>7:12 “சிரம் பணியும்படி, நான் உனக்குக் கட்டளையிட்டபோது, அதைச் செய்யவிடாமல் உன்னைத் தடுத்தது எது?” என்று இறைவன் கேட்டான். அதற்கு இப்லீஸ் “நான் அவரை விட உயர்ந்தவன்; நீ என்னை நெருப்பிலிருந்து படைத்தாய்; அவரைக் களிமண்ணிலிருந்து படைத்தாய்” என்று பதில் கூறினான். </span>
<span>7:13 அதற்கு அல்லாஹ் கூறினான்: “நீ இங்கிருந்து கீழே இறங்கி விடு; இங்கு பெருமையடிக்க உனக்கு உரிமை கிடையாது; நீ வெளியேறிவிடு! ஏனெனில், தமக்குத் தாமே இழிவைத் தேடிக் கொண்டவர்களில் திண்ணமாக நீயும் ஒருவனாகி விட்டாய்.”</span>
<span>7:14 (இப்லீஸ் இவ்வாறு) வேண்டினான்: “இவர்கள் அனைவரும் திரும்ப எழுப்பப்படும் நாள் வரையிலும் எனக்கு அவகாசம் அளிப்பாயாக!” </span>
<span>7:15 அதற்கு “நீ அவகாசம் அளிக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்!” என்று அல்லாஹ் கூறினான். </span>
<span>7:16 அதற்கு இப்லீஸ் கூறினான்: “என்னை நீ வழிகேட்டில் ஆழ்த்திய காரணத்தால், திண்ணமாக, நானும் இம்மனிதர்களை உன்னுடைய நேரான வழியில் செல்லவிடாமல் தடுப்பதற்காக தருணம் பார்த்துக் கொண்டிருப்பேன். </span>
<span>7:17 பிறகு அவர்களின் முன்னாலும் பின்னாலும், வலப் புறமாகவும் இடப் புறமாகவும் அவர்களிடம் வந்து சுற்றி வளைத்துக் கொள்வேன். மேலும், அவர்களில் பெரும்பாலோரை நன்றி செலுத்துவோராக நீ காணமாட்டாய்.” </span>
<span>7:18 அதற்கு அல்லாஹ் கூறினான்: “நீ இழிந்தவனாகவும், விரட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறிவிடு! (உன்னையும்) அவர்களிலிருந்து உன்னைப் பின்பற்றுகின்றவர்கள் அனைவரையும் நரகில் போட்டு நிரப்புவேன். </span>
<span>7:19 மேலும், ஆதமே! நீரும் உம்முடைய மனைவியும் இச்சுவனத்தில் தங்கியிருங்கள்! நீங்கள் விரும்பிய இடத்தில் விரும்பியதைப் புசியுங்கள்! ஆனால் இம்மரத்தின் அருகில் நெருங்காதீர்கள்! அவ்வாறு நெருங்கினால், நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் சேர்ந்து விடுவீர்கள்.”</span>
<span>7:20 ஆனால் அவ்விருவரை விட்டும் பரஸ்பரம் மறைந்திருந்த அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக ஷைத்தான் அவர்களின் உள்ளங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தினான்; மேலும், இவ்வாறு கூறினான்: “உங்கள் இறைவன் இம்மரத்தின் அருகே செல்லக் கூடாது என்று உங்கள் இருவரையும் தடுத்ததற்கான காரணம், நீங்கள் இருவரும் வானவர்கள் ஆகிவிடக்கூடாது; அல்லது உங்களுக்கு நிரந்தர வாழ்வு கிடைத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்!” </span>
<span>7:21 மேலும், அவன் அவர்களிடம் சத்தியம் செய்து கூறினான்: “நான் உங்கள் இருவருக்கும் உண்மையான நலம் நாடுபவனாவேன்.”</span>
<span>7:22 இவ்வாறு அவ்விருவரையும் ஏமாற்றி படிப்படியாக தன்வசப்படுத்தினான். கடைசியில் அவர்கள் அம்மரத்தி(ன் கனியி)னைச் சுவைத்ததும் அவர்களின் வெட்கத்தலங்கள் பரஸ்பரம் அவர்களுக்கு வெளிப்பட்டு விட்டன. பிறகு, அவர்கள் தங்கள் உடல்களை சுவனத்தின் இலைகளால் மூடிக்கொள்ளலாயினர். (அப்போது) அவர்களின் இறைவன் அவர்களை அழைத்துக் கூறினான்: “இம் மரத்(தின் அருகில் செல்வ)தைவிட்டு உங்களிருவரையும் நான் தடுக்கவில்லையா? மேலும், ஷைத்தான் உங்களின் வெளிப்படையான பகைவன் என்றும் நான் உங்களுக்குக் கூறவில்லையா?” </span>
<span>7:23 அதற்கு அவர்களிருவரும் கூறினார்கள்: “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே அக்கிரமம் செய்துகொண்டோம். எங்களை நீ மன்னித்து எங்களுக்குக் கிருபை செய்யாவிடில், நிச்சயமாக நாங்கள் இழப்பிற்குரியவர்களாகி விடுவோம்.” </span>
<span>7:24 அதற்கு இறைவன் கூறினான்: “நீங்கள் இறங்கிவிடுங்கள்; நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாவீர்கள். மேலும், ஒரு குறிப் பிட்ட காலம் வரை பூமியில் உங்களுக்குத் தங்குமிடமும் வாழ்க்கைச் சாதனங்களும் உள்ளன.”  </span>
<span>7:25  (மேலும்) கூறினான்: “நீங்கள் அங்கேயே வாழ்ந்து அங்கேயே மரணமடைவீர்கள்; பின்னர், அங்கிருந்தே நீங்கள் வெளிக்கொணரப்படுவீர்கள்.”</span>
<span>7:26 ஆதத்தின் மக்களே! உங்களுடைய வெட்கத்தலங்களை மறைப்பதற்காகவும், உங்கள் உடலுக்குப் பாதுகாப்பாகவும் அலங்காரமாகவும் இருக்கக்கூடிய ஆடைகளை நாம் உங்களுக்கு அருளியிருக்கின்றோம். ஆயினும் இறையச்சம் (தக்வா) எனும் ஆடையே மிகச் சிறந்த ஆடையாகும். இது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒரு சான்றாகும். இதன் மூலம் மக்கள் நல்லுணர்வு பெறக் கூடும். </span>
<span>7:27 ஆதத்தின் மக்களே! எவ்வாறு ஷைத்தான் உங்கள் தாய் தந்தையரை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றினானோ, மேலும் அவர்களுடைய வெட்கத்தலங்களை பரஸ்பரம் வெளிப்படுத்திட வேண்டும் என்பதற்காக அவர்களுடைய ஆடைகளைக் களைந்தானோ அவ்வாறு மீண்டும் உங்களை அவன் குழப்பத்திலாழ்த்திட வேண்டாம். நீங்கள் பார்க்க முடியாத இடத்திலிருந்து அவனும், அவனுடைய நண்பர்களும் உங்களைப் பார்க்கின்றார்கள். திண்ணமாக, இறைநம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு இந்த ஷைத்தான்களை நண்பர்களாய் நாம் ஆக்கியுள்ளோம். </span>
<span>7:28 அவர்கள், ஏதேனும் மானக்கேடான செயலைச் செய்தால், “இப்படித்தான் எங்கள் மூதாதையர் வாழக் கண்டோம்” என்றும் “இவ்வாறு செய்யுமாறு அல்லாஹ்தான் எங்களுக்குக் கட்டளையிட்டான்” என்றும் கூறுகிறார்கள். நீர் கூறும்: “அல்லாஹ் மானக்கேடானவற்றைச் செய்யும்படி எப்போதும் கட்டளையிடுவதில்லை. எவற்றைக் குறித்து (அவை அல்லாஹ் கூறியவைதானா என்பதை) நீங்கள் அறியமாட்டீர்களோ அந்த விஷயங்களையா அல்லாஹ்வின் மீது ஏற்றிச் சொல்கின்றீர்கள்?” </span>
<span>7:29 (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “என் அதிபதி நீதியைக் கடைப்பிடிக்குமாறு கட்டளையிட்டுள்ளான்; மேலும் (இதுவும் அவனது கட்டளைதான்:) ஒவ்வொரு வழிபாட்டிலும் நீங்கள் முன்னோக்கும் திசைகளைச் சரியாக அமைத்துக் கொள்ளுங்கள்! மேலும், தீனை (நெறியை) அவனுக்கே உரித்தாக்கியவண்ணம் அவனை அழையுங்கள்! அவன் உங்களை இப்பொழுது எவ்வாறு படைத்திருக்கின்றானோ அவ்வாறே நீங்கள் மீண்டும் படைக்கப் படுவீர்கள். </span>
<span>7:30 ஒரு கூட்டத்தாரை அவன் நேர்வழிப்படுத்தி விட்டான்; மேலும், மற்றொரு கூட்டத்தார் மீது வழிகேடு விதிக்கப்பட்டுவிட்டது. ஏனெனில், அவர்கள் அல்லாஹ்வை விடுத்து ஷைத்தான்களை உதவியாளர்களாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், திண்ணமாக தாம் நேர்வழியில் இருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.”</span>
<span>7:31 ஆதத்தின் மக்களே! ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள்! மேலும், உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால் விரயம் செய்யாதீர்கள்! திண்ணமாக அல்லாஹ் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை. </span>
<span>7:32 (நபியே! அவர்களிடம்) நீர் கேட்பீராக: “அல்லாஹ் தன் அடிமைகளுக்காகத் தோற்றுவித்துள்ள அலங்காரத்தையும் மேலும், அவன் வழங்கியுள்ள தூய்மையான உண்பொருள்களையும் தடைசெய்தது யார்?” நீர் கூறும்: “இறைநம்பிக்கையாளர்களுக்கு இப்பொருள்கள் அனைத்தும் உலக வாழ்க்கையில் கிடைக்கும். மறுமைநாளில் அவர்களுக்கே அவை உரியனவாயிருக்கும்.” இவ்வாறு நாம் நம்முடைய வசனங்களை அறிவுடைய சமூகத்தாருக்குத் தெளிவாக விவரிக்கின்றோம். </span>
<span>7:33 (நபியே! இவர்களிடம்) நீர் கூறுவீராக: “என்னுடைய இறைவன் தடை செய்திருப்பவை இவற்றையெல்லாம்தாம்: மானக்கேடானவற்றைச் செய்தல் அவை வெளிப்படையாக இருந்தாலும் சரி; மறைவாக இருந்தாலும் சரி! பாவம் புரிதல், நேர்மைக்கு மாறாக வரம்புமீறிய செயல்களில் ஈடுபடுதல், மேலும் எவற்றைக் குறித்து எந்த ஆதாரத்தையும் அல்லாஹ் இறக்கிடவில்லையோ அவற்றை அல்லாஹ்வுடன் இணை வைத்தல், மேலும், எவற்றைக் குறித்து (அவை அல்லாஹ் கூறியவைதான் என்பதை) நீங்கள் அறியவில்லையோ அவற்றை அல்லாஹ்வின் மீது ஏற்றிச் சொல்லல்!”</span>
<span>7:34 ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் நிர்ணயிக்கப்பட்ட ஒரு தவணை இருக்கிறது. அவரவரின் தவணை பூர்த்தியாகிவிட்டால் ஒரு வினாடிகூட அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள். </span>
<span>7:35 (மேலும் முதல் மனிதரைப் படைத்தபோதே அல்லாஹ் இதைத் தெளிவாக்கி விட்டான்; அதாவது) ஆதத்தின் மக்களே...! (நினைவில் வையுங்கள்:) உங்களிலிருந்தே என்னுடைய வசனங்களை ஓதிக் காண்பிக்கின்ற தூதர்கள் உங்களிடம் வந்தால், அப்போது எவர்கள் மாறு செய்வதிலிருந்து விலகிக் கொள்கின்றார்களோ, மேலும் தங்களுடைய நடத்தையைச் சீர்திருத்திக் கொள்கின்றார்களோ அவர்களுக்கு எத்தகைய அச்சமுமில்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். </span>
<span>7:36 ஆனால் எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யென வாதிட்டு அவற்றை ஏற்காமல் ஆணவம் கொண்டார்களோ அவர்கள்தாம் நரகவாசிகள். அவர்கள் என்றென்றும் அதில் வீழ்ந்து கிடப்பார்கள். </span>
<span>7:37 எவன் அல்லாஹ்வின் பெயரில் பொய்களைப் புனைந்துரைக்கின்றானோ அல்லது அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யென்று கூறுகின்றானோ அவனைவிட அக்கிரமக்காரன் யார்? எனினும், அவர்களுக்கென்று விதிக்கப்பட்ட பங்கு அவர்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும். இறுதியில் நாம் அனுப்பிய வானவர்கள் அவர்களுடைய ஆன்மாக்களைக் கைப்பற்றுவதற்காக அவர்களிடம் வருவார்கள். அப்போது அவர்களிடம் கேட்பார்கள்: “அல்லாஹ்வை விடுத்து நீங்கள் எந்த தெய்வங்களை அழைத்து வந்தீர்களோ அந்த தெய்வங்கள் (இப்போது) எங்கே?” அதற்கு அவர்கள் “அவை அனைத்தும் எங்களை விட்டுக் காணாமல் போய்விட்டன” என்று கூறுவார்கள். பிறகு “நாங்கள் உண்மையிலேயே சத்தியத்தை நிராகரிப்பவர்களாய் இருந்தோம்” என்று தங்களுக்கு எதிராகத் தாங்களே சாட்சி கூறுவார்கள். </span>
<span>7:38 அல்லாஹ் கூறுவான்: “உங்களுக்கு முன் சென்ற ஜின் மற்றும் மனிதக் கூட்டத்தார்களுடன் நீங்களும் நரகத்திற்குச் செல்லுங்கள்!” ஒவ்வொரு கூட்டத்தாரும், (நரகத்தினுள்) நுழையும்போது தமக்கு முன்சென்ற கூட்டத்தாரைச் சபித்தவாறே செல்வார்கள். இறுதியில் எல்லோரும் அங்கு ஒன்று கூடும்போது அவர்களில் பிந்தைய கூட்டத்தார் முந்தைய கூட்டத்தாரைப் பற்றி, “எங்கள் இறைவனே! இவர்கள்தாம் எங்களை வழிகெடுத்தார்கள்! எனவே, இவர்களுக்கு நரகத்தில் இருமடங்கு வேதனையை அளிப்பாயாக!” என்று கூறுவார்கள். (அதற்கு மறுமொழியாக) அல்லாஹ் கூறுவான்: “ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பு வேதனைதான் உண்டு. ஆயினும், நீங்கள் அறிவதில்லை.” </span>
<span>7:39 மேலும், அவர்களில் முந்தைய கூட்டத்தார் பிந்தைய கூட்டத்தாரைப் பார்த்து “(நாங்கள் குற்றவாளிகள் என்றால்) எங்களைவிட நீங்கள் சிறந்தவர்களா என்ன? எனவே (இப்பொழுது) நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீவினையின் காரணமாக வேதனையைச் சுவையுங்கள்” என்று கூறுவார்கள். </span>
<span>7:40 (உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்:) எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யெனக்கூறி அவற்றைப் புறக்கணித்து ஆணவம் கொண்டார்களோ அவர்களுக்கு வானத்தின் வாயில்கள் ஒருபோதும் திறக்கப்படமாட்டா! அவர்கள் சொர்க்கத்தில் நுழைவது என்பது, ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைவது போன்று இயலாத ஒன்றாகும். மேலும், குற்றவாளிகளுக்கு நம்மிடம் இத்தகைய கூலிதான் கிடைக்கும். </span>
<span>7:41 அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், அவர்கள் போர்த்திக்கொள்ள நெருப்புப் போர்வைகளுமே கிடைக்கும். இவ்வாறே அக்கிரமக்காரர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்! </span>
<span>7:42 (இதற்கு மாறாக) எவர்கள் (நம்முடைய திருவசனங்கள் மீது) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ இது விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய சக்திக்கு ஏற்பவே நாம் பொறுப்பினைச் சுமத்துகின்றோம் அவர்கள் சுவனவாசிகள். அதில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். </span>
<span>7:43 மேலும், அவர்களின் நெஞ்சங்களில் (ஒருவர் மீது மற்றவருக்கு) இருந்த காழ்ப்புணர்வை நாம் போக்கி விடுவோம். அவர்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். மேலும், அவர்கள் கூறுவார்கள்: “எங்களுக்கு இவ்வழியினைக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அல்லாஹ் எங்களை நேர்வழியில் செலுத்தியிராவிடில், நாங்கள் நேர்வழியை அடைந்திருக்கவே மாட்டோம். உண்மையில், எங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தார்கள்.” (அந்நேரம்) கூறப்படும்: “நீங்கள் வாரிசுகளாக்கப்பட்ட சுவனம் இதுதான். நீங்கள் செய்து வந்த செயல்களுக்குப் பகரமாக இது உங்களுக்குக் கிடைத்திருக்கிறது!”</span>
<span>7:44 பிறகு சுவனவாசிகள் நரகவாசிகளை அழைத்துக் கேட்பார்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்கு வழங்குவதாக வாக்களித்திருந்த அனைத்தும் உண்மையானவையே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்கள் இறைவன் உங்களுக்கு வழங்குவதாக வாக்களித்திருந்த அனைத்தும் உண்மையானவைதாம் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?” அதற்கவர்கள், “ஆம்” என்பார்கள். அப்போது அவர்களுக்கு மத்தியில் ஒருவர் அறிவிப்பார்: அக்கிரமக்காரர்கள் மீது அல்லாஹ்வுடைய சாபம் உண்டாவதாக! </span>
<span>7:45 அவர்கள் (எத்தகையவர்களெனில்) அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களைத் தடுத்தார்கள்; மேலும் அதனைக் கோணலாக்க விரும்பினார்கள்; மேலும் மறுமையை மறுத்தார்கள். </span>
<span>7:46 மேலும், அவ்விரு பிரிவினருக்கும் இடையே ஓர் உறுதியான தடுப்பு இருக்கும். அதன் உச்சிகளில் மனிதர்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் (இப்பிரிவினர்) ஒவ்வொருவரையும் அவரவரின் முகக்கூறுகள் மூலம் அறிந்து கொள்வார்கள். மேலும், அவர்கள் சுவனவாசிகளை அழைத்துக் கூறுவார்கள்: “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்!” இவர்கள் இன்னும் சுவனம் புகவில்லை; ஆயினும் (அதனை அடைவதற்கு) ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பார்கள். </span>
<span>7:47 மேலும், இவர்களின் பார்வைகள் நரக வாசிகளின் பக்கம் திரும்பும்போது கூறுவார்கள்: “எங்கள் இறைவனே! இவ்வக்கிரமக்காரர்களோடு எங்களைச் சேர்த்துவிடாதே!” </span>
<span>7:48 பிறகு, உச்சிகளில் இருக்கும் இவர்கள் (நரகில் வீழ்ந்து கிடக்கும்) பெரும் பெரும் மனிதர்கள் சிலரை அவர்களுடைய முகக்கூறுகள் மூலம் அறிந்து அவர்களை அழைத்துக் கூறுவார்கள்: “(பார்த்தீர்களா!) உங்களுடைய கூட்டத்தினரும் நீங்கள் பெரிதாகக் கருதி வந்த சாதனங்களும் (இன்று) உங்களுக்கு எப்பலனையும் அளிக்கவில்லை.” </span>
<span>7:49 மேலும், அல்லாஹ் இவர்களுக்கு எந்த அருளையும் வழங்கிடமாட்டான் என்று யாரைப் பற்றி நீங்கள் சத்தியம் செய்து கூறினீர்களோ, அவர்கள்தானே இந்த சொர்க்கவாசிகள்! (இன்று அவர்களை நோக்கியே கூறப்படும்:) “நுழைந்து விடுங்கள் சொர்க்கத்தில்! உங்களுக்கு யாதொரு அச்சமுமில்லை; நீங்கள் துயரப்படவும் மாட்டீர்கள்.”</span>
<span>7:50 மேலும், நரகவாசிகள் சுவனவாசிகளை அழைத்துக் கேட்பார்கள்: “எங்கள் மீது சிறிது தண்ணீரை ஊற்றுங்கள்; அல்லது அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து சிறிதளவு கொடுங்கள்.” அதற்கு அவர்கள் பதில் அளிப்பார்கள்: “திண்ணமாக, அல்லாஹ் இவ்விரண்டையும் சத்தியத்தை மறுத்தவர்களுக்குத் தடைசெய்து விட்டான்.” </span>
<span>7:51 அவர்கள் எத்தகையோர் என்றால் தமது தீனை (நெறியை) வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டார்கள். மேலும் உலக வாழ்க்கை அவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியிருந்தது! (அல்லாஹ் கூறுவான்:) “எனவே, அவர்கள் இந்நாளைச் சந்திப்பது குறித்து எவ்வாறு மறந்திருந்தார்களோ, மேலும் நம் வசனங்களை எவ்வாறு மறுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவ்வாறே நாமும் இன்று அவர்களை மறந்துவிடுவோம்!”</span>
<span>7:52 திண்ணமாக, நாம் ஒரு வேதத்தை அவர்களுக்குக் கொண்டு வந்துள்ளோம். அது எத்தகையதென்றால், அறிவின் அடிப்படையில் நாம் அதில் (அனைத்தையும்) விவரித்திருக்கின்றோம். (மேலும் அது) இறைநம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடியதாகவும் ஓர் அருட்கொடையாகவும் திகழ்கின்றது. </span>
<span>7:53 இப்பொழுது சிலர் இவ்வேதம் எச்சரிக்கின்ற இறுதி முடிவைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்கின்றார்களா? அந்த இறுதி முடிவு வந்துவிடும் நாளில், முன்பு அதனை அலட்சியம் செய்தவர்கள் இவ்வாறு கூறுவார்கள்: “உண்மையில் எங்கள் இறைவனுடைய தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தார்கள்! (இப்பொழுது) எங்களுக்காகப் பரிந்து பேசுவதற்கு பரிந்துரையாளர் எவரும் எங்களுக்குக் கிடைப்பார்களா? அல்லது நாங்கள் முன்பு செய்து கொண்டிருந்ததைப் போல் அல்லாமல் வேறு செயல்களைச் செய்திட நாங்கள் திரும்ப அனுப்பப்படுவோமா?” அவர்கள் தமக்குத் தாமே இழப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். மேலும், அவர்கள் புனைந்து கூறிக்கொண்டிருந்தவை எல்லாம் இன்று அவர்களை விட்டுக் காணாமல் போய்விட்டன. </span>
<span>7:54 திண்ணமாக, அல்லாஹ்தான் உங்களுடைய அதிபதி; அவன் எத்தகையவனெனில், வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர், தன்னுடைய ஆட்சிபீடத்தில் அமர்ந்தான். அவன் இரவைக் கொண்டு பகலை மூடுகின்றான். மேலும், இரவுக்குப் பின்னால் பகல் விரைந்து வருகின்றது. அவனே சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றையும் படைத்தான். அவையனைத்தும் அவனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டிருக்கின்றன! அறிந்து கொள்ளுங்கள்: படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்குரியவையே! அனைத்துலகங்களுக்கும் அதிபதியாகிய அல்லாஹ் அருள்வளமிக்கவனாவான். </span>
<span>7:55 உங்கள் அதிபதியிடம் பணிந்தும், மெதுவாகவும் நீங்கள் இறைஞ்சுங்கள்! திண்ணமாக, அவன் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை. </span>
<span>7:56 மேலும், பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பிறகு நீங்கள் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! மேலும், அச்சத்துடனும் ஆவலுடனும் அல்லாஹ்வை அழையுங்கள்! திண்ணமாக, அல்லாஹ்வின் அருள் நன்னடத்தையுள்ள மக்களுக்கு அருகில் இருக்கிறது. </span>
<span>7:57 மேலும், அவனே தன்னுடைய அருள்மாரிக்கு முன்னர் நற்செய்திகளைக் கொண்ட காற்றுகளை அனுப்புகின்றான். பிறகு அவை (மழை நிறைந்த) கனமான மேகத்தைச் சுமந்து கொள்கின்றன. பின்னர் அவற்றை இறந்து போன பூமியின் பக்கமாக நாம் ஓட்டிச் செல்கின்றோம். பிறகு அங்கு மழையைப் பொழியச் செய்து அதன் மூலம் (இறந்து போயிருந்த அந்த பூமியிலிருந்தே) விதவிதமான கனிவகைகளை வெளிக் கொணர்கின்றோம். (பாருங்கள்!) இவ்வாறே இறந்தவர்களை (மீண்டும் உயிர்பெறச் செய்து) நாம் வெளிப்படுத்துகின்றோம். இவற்றின் மூலம் நீங்கள் படிப்பினை பெற்றிடக்கூடும். </span>
<span>7:58 நல்லபூமி தன்னுடைய இறைவனின் கட்டளைப் படி (நல்ல) விளைச்சலைத் தருகின்றது. ஆனால் கெட்ட பூமியோ மோசமான விளைச்சலைத் தவிர வேறெதையும் வெளிப்படுத்துவதில்லை. இவ்வாறே நாம், நன்றி செலுத்துகின்ற மக்களுக்கு நம்முடைய சான்றுகளை மீண்டும் மீண்டும் விவரித்துக் கூறுகின்றோம். </span>
<span>7:59 திண்ணமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என்னுடைய சமுதாயத்தவரே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்! அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை. மகத்தானதொரு நாளின் வேதனை உங்கள் மீது வந்து விடுமோ என்று நான் அஞ்சுகின்றேன்.”</span>
<span>7:60 அதற்கு அவருடைய சமுதாயத் தலைவர்கள் பதில் கூறினார்கள்: “நீர் வெளிப்படையான வழிகேட்டில் மூழ்கியிருப்பதையே நாங்கள் காண்கின்றோம்.” </span>
<span>7:61 அதற்கு நூஹ் சொன்னார்: “என்னுடைய சமுதாயத்தவரே! நான் எந்த வழிகேட்டிலும் மூழ்கியிருக்கவில்லை. நான் அகிலத்தாருடைய அதிபதியின் தூதனாக இருக்கின்றேன். </span>
<span>7:62 நான் என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். உங்களுக்கு நலம் நாடுபவனாகவும் இருக்கின்றேன். மேலும், நீங்கள் அறியாதவற்றையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து நான் அறிகின்றேன். </span>
<span>7:63 உங்களை எச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும், தவறான நடத்தையிலிருந்து நீங்கள் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், உங்கள் மீது இரக்கம் காட்டப்படுவதற்காகவும் உங்கள் சமூகத்தைச் சார்ந்த ஒருவரின் வாயிலாகவே உங்கள் இறைவனுடைய அறிவுரை உங்களிடம் வந்திருப்பது குறித்து நீங்கள் வியப்பு அடைகிறீர்களா?”</span>
<span>7:64 ஆயினும், அவர்கள் அவரைப் பொய்யரென்று கூறிவிட்டார்கள். இறுதியில், நாம் அவரையும் அவருடனிருந்தவர்களையும் ஒரு கப்பலில் (ஏற்றி) காப்பாற்றினோம். மேலும், எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யென்று கூறினார்களோ அவர்களை நாம் மூழ்கடித்தோம். திண்ணமாக, அவர்கள் கண்மூடித்தனமாக வாழும் மக்களாக இருந்தார்கள். </span>
<span>7:65 மேலும், ‘ஆத்’ கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை நாம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத்தாரே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்! அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை எனவே, நீங்கள் தவறான நடத்தையிலிருந்து விலகிக்கொள்ள மாட்டீர்களா?”</span>
<span>7:66 (அவருடைய இக்கூற்றை) ஏற்க மறுத்த அவரது சமுதாயத் தலைவர்கள், “திண்ணமாக, நீர் அறியாமையில் உழல்வதை நாங்கள் காண்கின்றோம். மேலும், நீர் பொய்யராக இருப்பீரோ என்றும் நாங்கள் ஐயங்கொள்கின்றோம்” என்று பதில் கூறினார்கள். </span>
<span>7:67 அதற்கு அவர் கூறினார்: “என் சமுதாயத்தாரே! நான் அறியாமையில் உழன்று கொண்டிருக்கவில்லை. மாறாக, நான் அகிலங்களுடைய அதிபதியின் தூதனாக இருக்கின்றேன். </span>
<span>7:68 நான் என் அதிபதியின் தூதுச்செய்திகளை உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். மேலும், நான் உங்களின் நம்பிக்கைக்குரிய நலம்விரும்பியாக இருக்கின்றேன். </span>
<span>7:69 உங்களை எச்சரிக்கை செய்வதற்காக உங்களுடைய சமூகத்தைச் சார்ந்த ஒருவரின் வாயிலாகவே உங்கள் இறைவனின் அறிவுரை உங்களிடம் வந்திருப்பது குறித்து நீங்கள் வியப்பு அடைகிறீர்களா? உங்களுடைய இறைவன் நூஹுடைய கூட்டத்தாருக்குப் பின் உங்களை (பூமியில்) வாரிசுகளாக்கினான். உங்களுக்கு நல்ல உடல் வலிமையையும், கம்பீரத்தையும் வழங்கியிருந்தான். இவற்றை நீங்கள் மறந்து விடாதீர்கள்! எனவே அல்லாஹ்வின் வியக்கத்தக்க ஆற்றல்களை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறக்கூடும்!” </span>
<span>7:70 அதற்கு அவர்கள் பதில் கூறினார்கள்: “நாங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும்; எங்கள் முன்னோர்கள் வழிபட்டு வந்தவற்றையெல்லாம் நாங்கள் விட்டுவிட வேண்டும் என்ப(தைச் சொல்வ)தற்காகவா நீர் எங்களிடம் வந்துள்ளீர்? நீர் உண்மையானவராயின் எந்த வேதனையைக் குறித்து எங்களை நீர் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்றீரோ அதனை எங்களிடம் கொண்டு வாரும்!” </span>
<span>7:71 அதற்கு அவர் கூறினார்: “உங்கள் இறைவனின் வேதனையும் சினமும் உங்கள் மீது விதிக்கப்பட்டுவிட்டன. நீங்களும் உங்கள் முன்னோர்களும் ஏற்படுத்திக்கொண்ட பெயர்களைக் குறித்தா என்னிடம் நீங்கள் தர்க்கம் செய்கின்றீர்கள்? அல்லாஹ் அவற்றிற்கு எந்த ஆதாரமும் இறக்கி வைக்கவில்லை! எனவே நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நானும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.” </span>
<span>7:72 இறுதியில் நமது அருளைக்கொண்டு ஹூதையும் அவருடைய தோழர்களையும் நாம் காப்பாற்றினோம். மேலும், எவர்கள் நம்முடைய சான்றுகளைப் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தார்களோ, மேலும், நம்பிக்கை கொள்ளாமல் இருந்தார்களோ அவர்கள் அனைவரையும் நாம் வேருடன் களைந்தோம். </span> 
<span>7:73 மேலும், ஸமூத் கூட்டத்தாரிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை நாம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத்தார்களே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்று உங்களிடம் வந்துவிட்டது. இது அல்லாஹ்வின் ஒட்டகம் இது உங்களுக்கு ஒரு சான்றாக உள்ளது. எனவே, அல்லாஹ்வின் பூமியில் மேய்ந்து திரிய இதனை விட்டு விடுங்கள்! இதற்கு எந்தத் தீங்கும் செய்யாதீர்கள்! அவ்வாறு செய்வீர்களாயின் துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும். </span>
<span>7:74 மேலும், நினைத்துப் பாருங்கள்; ஆத் சமுதாயத்திற்குப் பின் அல்லாஹ் உங்களை வாரிசுகளாக்கினான். மேலும், இப்பூமியில் சிறப்பான வசதிகளையும் உங்களுக்கு வழங்கினான். இப்போது அதன் சமவெளிகளில் நீங்கள் பிரம்மாண்டமான மாளிகைகளை எழுப்புகின்றீர்கள்; மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கின்றீர்கள். எனவே, அல்லாஹ்வின் (வல்ல மைக்குச் சான்றான) அருட்கொடைகளை நினைவு கூருங்கள்! மேலும், பூமியில் குழப்பம் விளைவித்துக் கொண்டு திரியாதீர்கள்!”</span>
<span>7:75 அவருடைய சமுதாயத்தவரில் ஆணவம் மிகுந்த தலைவர்கள், இறைநம்பிக்கை கொண்டிருந்த பலவீனமான மக்களை நோக்கி வினவினார்கள்: “உண்மையில் ஸாலிஹ் தன் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதர்தான் என்பதை நீங்கள் அறிவீர்களா?” அதற்கு அவர்கள் பதில் கூறினார்கள்: “எச்செய்தியுடன் அவர் அனுப்பப்பட்டுள்ளாரோ அதனை நாங்கள் திண்ணமாக ஏற்றுக் கொள்கின்றோம்.” </span>
<span>7:76 அதற்கு அந்த ஆணவக்காரர்கள், “எதனை நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றீர்களோ, அதனை நாங்கள் மறுக்கின்றோம்” என்று கூறினார்கள். </span>
<span>7:77 பிறகு அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்து விட்டார்கள்; தம்முடைய இறைவனின் ஆணையை ஆணவத்துடன் மீறினார்கள். மேலும், (ஸாலிஹிடம்) அவர்கள் கூறினார்கள்: “உண்மையில் இறைத்தூதர்களில் நீரும் ஒருவர்தாம் என்றால், எந்த வேதனை குறித்து எங்களை நீர் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறீரோ அதனை எங்களிடம் கொண்டு வாரும்!”</span>
<span>7:78 இறுதியில் திடுக்குறச் செய்யும் ஒரு நிலநடுக்கம் அவர்களைத் தாக்கியது. உடனே, அவர்கள் தம்முடைய இல்லங்களில் முகங்குப்புற விழுந்து இறந்து கிடந்தார்கள்! </span>
<span>7:79 பிறகு, ஸாலிஹ் “என் சமூகத்தாரே! நான் என்னுடைய இறைவனின் தூதுச் செய்தியை உங்களிடம் எடுத்துரைத்து விட்டேன். மேலும், நான் உங்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டிருந்தேன். ஆயினும் (நான் என்ன செய்ய முடியும்?) உங்களுக்கு நலன் நாடியவர்களை நீங்கள் நேசிக்கவில்லையே!” என்று கூறியவாறு அவர்களின் ஊரை விட்டு வெளியேறினார். </span>
<span>7:80 பிறகு, லூத்தை நாம் தூதராக அனுப்பினோம். அவர் தம்முடைய சமுதாயத்தாரை நோக்கி இவ்வாறு கூறியதை நினைத்துப் பாருங்கள்: “இந்த மானக்கேடான செயலைச் செய்கின்ற (அளவுக்கு நீங்கள் வெட்கமற்ற) வர்களாகி விட்டீர்களா? உங்களுக்கு முன்னர் அகிலத்தாரில் எவருமே இதனைச் செய்ததில்லை. </span>
<span>7:81 பெண்களை விடுத்து ஆண்களிடம் உங்களுடைய இச்சையை நீங்கள் நிறைவேற்றிக் கொள்கின்றீர்கள். உண்மை யாதெனில், நீங்கள் முற்றிலும் வரம்பு மீறிய கூட்டத்தார் ஆவீர்கள்.”</span>
<span>7:82 அதற்கு அக் கூட்டத்தார் இதைத்தான் பதிலாய்க் கூறினார்கள்: “இவர்களை உங்களுடைய ஊரை விட்டு வெளியேற்றுங்கள்! இவர்கள் பெரிய பரிசுத்தவான்கள் போல் நடக்கின்றார்கள்.” </span>
<span>7:83 இறுதியில் லூத்தையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் காப்பாற்றினோம்; அவருடைய மனைவியைத் தவிர! அவள் (வேதனையை அனுபவிக்க) பின்தங்கி விட்டவர்களில் ஒருத்தி யாக இருந்தாள். </span>
<span>7:84 பிறகு அக்கூட்டத்தார்கள் மீது நாம் பொழிந்தோம் (கல்) மழையை! பிறகு பாருங்கள், அக்குற்றவாளிகளின் கதி என்னவாயிற்று?</span>
<span>7:85 மேலும், மத்யன்வாசிகளிடம் அவர்களுடைய சகோதரரான ஷûஐபை அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத்தார்களே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை! உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்று உங்களிடம் வந்துள்ளது. எனவே, அளவையை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுங்கள்; மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைக் குறைத்துக் கொடுக்காதீர்கள்; பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பிறகு அதில் நீங்கள் குழப்பம் விளைவிக்காதீர்கள்! உண்மையிலேயே நீங்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களாயின் இதில்தான் உங்களுக்கு நன்மை இருக்கிறது. </span>
<span>7:86 மேலும் (வாழ்வின்) ஒவ்வொரு பாதையிலும் (கொள்ளைக்காரர்கள் போல) மக்களைப் பயமுறுத்துபவர்களாகவும், இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பவர்களாகவும் இருக்காதீர்கள்; மேலும், நேரான வழியைக் கோணலாக்க முயலாதீர்கள்! நீங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்த நேரத்தை நினைத்துப் பாருங்கள். பிறகு அல்லாஹ் உங்களைப் பல்கிப்பெருகச் செய்தான். இன்னும் (கண்திறந்து) பாருங்கள்; (உலகில்) குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தவர்களின் கதி என்னவாயிற்று என்பதை! </span>
<span>7:87 நான் என்னென்ன அறிவுரைகளுடன் அனுப்பப்பட்டுள்ளேனோ அவற்றின் மீது உங்களில் ஒரு பிரிவினர் நம்பிக்கை கொண்டும், மற்றொரு பிரிவினர் நம்பிக்கை கொள்ளாமலும் இருந்தீர்களானால், அல்லாஹ் நமக்கிடையே தீர்ப்பு வழங்கும் வரை பொறுமையுடன் (காத்துக் கொண்டு) இருங்கள்! அவனே தீர்ப்பு வழங்குவோரில் மிகச் சிறந்தவன்.”</span>
<span>7:88 அவருடைய சமுதாயத்தாரில் ஆணவம் மிகுந்த தலைவர்கள் கூறினார்கள்: “ஷûஐபே! உம்மையும், உம்முடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நாங்கள் நிச்சயமாக எங்களுடைய ஊரை விட்டு வெளியேற்ற வேண்டிவரும். அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்ப வேண்டியிருக்கும்.” அதற்கு ஷûஐப் பதில் தந்தார்: “நாங்கள் விரும்பாதவர்களாய் இருந்தாலுமா (எங்களைவற்புறுத்தி உங்கள் மார்க்கத்திற்குத் திருப்பி விடுவீர்கள்)? </span>
<span>7:89 உங்கள் மார்க்கத்திலிருந்து அல்லாஹ் எங்களைக் காப்பாற்றிவிட்ட பின்னர் அதன் பக்கமே நாங்கள் திரும்பினால், நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்களாய் ஆவோம்! மேலும், நாங்கள் அம்மார்க்கத்திற்குத் திரும்பி வருவது எங்களைப் பொறுத்து (எவ்விதத்திலும்) சாத்தியமானதன்று; எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி! எங்கள் இறைவனின் அறிவு அனைத்தையும் சூழ்ந்திருக்கிறது. அல்லாஹ்வையே நாங்கள் முழுமையாகச் சார்ந்துள்ளோம். எங்கள் இறைவனே! எங்களுக்கும், எங்களின் சமுதாயத்தாருக்குமிடையில் சரியாகத் தீர்ப்பளிப்பாயாக! நீயே சிறப்பாகத் தீர்ப்பு வழங்குபவனாய் இருக்கிறாய்.”</span>
<span>7:90 (அவர் கூறியதை) ஏற்க மறுத்துவிட்ட அவருடைய சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் (தமக்கிடையே) கூறிக் கொண்டார்கள்: “நீங்கள் ஷûஐபைப் பின்பற்றினால் நிச்சயமாக அழிந்து போவீர்கள்.” </span>
<span>7:91 ஆனால் (நடந்தது என்னவெனில்) திடுக்குறச் செய்கின்ற ஒரு நிலநடுக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அவர்கள் தம் இல்லங்களில் முகங்குப்புற வீழ்ந்து கிடந்தார்கள். </span>
<span>7:92 (ஆம்!) ஷûஐபைப் பொய்யரெனக் கூறியவர்கள் அவ்வில்லங்களில் வசிக்காதவர்கள் போன்று அடியோடு அழிந்து போய் விட்டார்கள். ஷûஐபைப் பொய்யரெனக் கூறியவர்கள்தாம் இறுதியில் இழப்புக்குரியவர்களானார்கள். </span>
<span>7:93 மேலும், ஷûஐப், “என்னுடைய சமுதாயத்தாரே! நான் என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டேன். மேலும், உங்களுக்கு நலன் நாடும் பொறுப்பை நிறைவேற்றிவிட்டேன். ஆனால் சத்தியத்தை மறுக்கின்ற சமுதாயத்தவர்மீது நான் எவ்வாறு அனுதாபம் கொள்வேன்?” என்று கூறியபடி (அவ்வூரைவிட்டு) வெளியேறிவிட்டார். </span>
<span>7:94 நாம் நபியை அனுப்பி வைத்த எந்த ஊர் மக்களையும் அவர்கள் பணிந்து நடந்திட வேண்டும் என்பதற்காக, (முதலில்) கடுமையான துன்ப துயரங்களைக் கொண்டு சோதிக்காமல் இருக்கவில்லை. </span>
<span>7:95 பிறகு அவர்களின் துன்பத்தை இன்பமாய் மாற்றினோம். எந்த அளவுக்கு எனில் அவர்கள் இன்ப நலத்தில் நன்கு திளைத்து, “எங்களின் முன்னோர்களுக்குங்கூட துன்பமும் இன்பமும் ஏற்பட்டுக் கொண்டுதானிருந்தன” என்று கூறினார்கள். இறுதியில், அவர்கள் எதிர்பாராத நிலையில், திடீரென்று அவர்களைப் பிடித்தோம். </span>
<span>7:96 ஆனால், அவ்வூர்களில் வாழ்ந்த மக்கள் இறைநம்பிக்கை கொண்டு, இறையச்சமுள்ள நடத்தையை மேற் கொண்டிருப்பார்களேயானால் வானம், பூமி ஆகியவற்றின் அருள்வளங்க(ளின் வாயில்)கள் அனைத்தையும் அவர்களுக்கு நாம் திறந்து விட்டிருப்போம். ஆனால், அவர்கள் சத்தியத்தைப் பொய்யென்று உரைத்தார்கள். எனவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீய செயல்களின் காரணமாக அவர்களை நாம் தண்டித்தோம். </span>
<span>7:97 இரவில் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில், நம்முடைய வேதனை அவர்களைத் திடீரென தாக்காது என்று இவ்வூர்களில் வாழும் மக்கள் அச்சமற்று இருக்கிறார்களா? </span>
<span>7:98 அல்லது பகலில் அவர்கள் வீண் விளையாட்டுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே நம்முடைய வேதனை அவர்களைத் தாக்காது என்று இவர்கள் நிம்மதியுடன் இருக்கின்றார்களா? </span>
<span>7:99 என்ன, இம்மக்கள் அல்லாஹ்வின் சூழ்ச்சி குறித்து அச்சமற்றிருக்கின்றார்களா? உண்மையில் அழிந்து போகக்கூடிய மக்கள்தாம் அல்லாஹ்வின் சூழ்ச்சி குறித்து அச்சமற்றிருப்பார்கள். </span>
<span>7:100 முன்பு வாழ்ந்து சென்ற புவிவாழ் மக்களுக்குப் பின்னர் பூமிக்கு வாரிசாக வந்துள்ள இவர்களுக்கு இந்த உண்மை படிப்பினை தரவில்லையா? (அது யாதெனில்), நாம் நாடினால், இவர்களின் பாவங்கள் காரணமாக இவர்களைத் தண்டித்திட முடியும் என்பது! (ஆனால் இவர்கள் இத்தகைய படிப்பினை மிக்க பேருண்மைகளில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருக்கின்றனர்.) மேலும், இவர்களுடைய உள்ளங்கள் மீது நாம் முத்திரையிட்டு விடுகின்றோம். எனவே, இவர்கள் (எதனையும்) செவியேற்பதில்லை. </span>
<span>7:101 அவ்வூர்களின் வரலாறுகளை உமக்கு நாம் கூறுகின்றோம். (அவை உமக்கு எடுத்துக்காட்டுகளாய் விளங்குகின்றன.) அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். ஆனால் அம்மக்கள் முன்னர் எதனைப் பொய்யெனக் கூறிவிட்டிருந்தார்களோ அதனைப் பிறகு அவர்கள் ஏற்பவர்களாயில்லை. (பாருங்கள்) இவ்வாறே சத்தியத்தை மறுப்போரின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகின்றான்! </span>
<span>7:102 அவர்களில் பெரும்பாலோரிடம் வாக்குறுதி பேணும் பண்பினை நாம் காணவில்லை. மாறாக அவர்களில் பெரும்பாலோரைப் பாவிகளாகவே நாம் காண்கிறோம். </span>
<span>7:103 பின்னர், (மேற்கூறப்பட்ட) அந்தச் சமூகங்கள் சென்ற பிறகு மூஸாவை, நம்முடைய சான்றுகளோடு ஃபிர்அவ்னிடமும் அவனுடைய சமுதாயத்தின் தலைவர்களிடமும் நாம் அனுப்பினோம். ஆயினும், அவர்களும் நம்முடைய சான்றுகளுக்கு அநீதி இழைத்தார்கள். எனவே, பாருங்கள் (இவ்வாறு) குழப்பம் செய்து திரிந்த அவர்களின் கதி என்னவாயிற்று என்பதை!</span>
<span>7:104 மூஸா கூறினார்: “ஃபிர்அவ்னே! நான் அகிலமனைத்தின் அதிபதியிடமிருந்து அனுப்பப்பட்ட தூதராவேன். </span>
<span>7:105 அல்லாஹ்வின் பெயரால் சத்தியத்தைத் தவிர வேறெதனையும் சொல்லமாட்டேன். இதுவே என்னுடைய பொறுப்பாகும். நான் உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன். எனவே, நீ இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை என்னுடன் அனுப்பி வைத்துவிடு!”</span>
<span>7:106 அதற்கு ஃபிர்அவ்ன், “நீர் தெளிவான சான்று ஏதேனும் கொண்டு வந்திருப்பீராயின் நீர் (உம்முடைய வாதத்தில்) உண்மையானவரானால் அதனைக் காட்டும் பார்க்கலாம்!” என்று கூறினான். </span>
<span>7:107 அப்போது மூஸா தம்முடைய கைத்தடியை எறிந்தார். உடனே அது உயிருள்ள பெரியதொரு பாம்பாக மாறியது. </span>
<span>7:108 பிறகு அவர் தமது (கட்கத்திலிருந்து) கையை வெளியே எடுத்தார். பார்ப்பவர் முன்னிலையில் அது வெண்மையாய்ப் பளிச்சிட்டது. </span>
<span>7:109 (இதனைக் கண்ணுற்ற) ஃபிர்அவ்னுடைய சமுதாயத் தலைவர்கள், “உண்மையிலேயே இவர் ஒரு திறமை மிக்க மந்திரவாதிதான். </span>
<span>7:110 உங்களுடைய நாட்டை விட்டு உங்களை வெளியேற்றிவிட இவர் நினைக்கிறார். இதைப்பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்” என்று தமக்குள்ளே பேசிக்கொண்டார்கள். </span>
<span>7:111 பிறகு அவர்கள் எல்லாரும் (ஃபிர்அவ்னுக்கு) ஆலோசனை கூறினார்கள்: “இவரையும் இவருடைய சகோதரரையும் சற்று நிறுத்தி வையுங்கள்! எல்லா ஊர்களுக்கும் ஆட்களை அனுப்புங்கள் </span>
<span>7:112 தேர்ச்சி பெற்ற மந்திரவாதிகள் அனைவரையும் ஒன்று திரட்டி உங்களிடம் அழைத்து வருவதற்காக (ஆட்களை எல்லா ஊர்களுக்கும் அனுப்புங்கள்). </span>
<span>7:113 அவ்வாறே மந்திரவாதிகள் அனைவரும் ஃபிர்அவ்னிடம் வந்தார்கள். “நாங்கள் வெற்றி பெற்றால் அதற்கான வெகுமதி எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் அல்லவா?” என்று கேட்டார்கள். </span>
<span>7:114 அதற்கு ஃபிர்அவ்ன், “ஆம்! மேலும், திண்ணமாக நீங்கள் அரசவையில் நெருக்கமானவர்களாயும் இருப்பீர்கள்” என்று பதிலுரைத்தான். </span>
<span>7:115 பிறகு அவர்கள் மூஸாவிடம் கேட்டார்கள்: “நீர் எறிகிறீரா அல்லது நாங்கள் எறியட்டுமா?” </span>
<span>7:116 அதற்கு மூஸா, “நீங்களே எறியுங்கள்!” என்று கூறினார். அவர்கள் (தம்முடைய மந்திர சாதனங்களை) எறிந்தபோது (அவற்றின் மூலம்) மக்களின் கண்களை மயக்கி அவர்களைப் பீதிகொள்ளச் செய்தார்கள்; இவ்வாறு மாபெரும் சூனியத்தைச் செய்து காட்டினார்கள். </span>
<span>7:117 “நீர் உமது கைத்தடியைப் போடும்!” என்று நாம் மூஸாவுக்கு அறிவித்தோம். அவர் அதனைக் கீழே போட்டதும் அது அவர்கள் செய்த சூனியங்கள் அனைத்தையும் (நொடிப் பொழுதில்) விழுங்கி விட்டது!</span>
<span>7:118 இவ்வாறு சத்தியம், சத்தியம்தான் என்று உறுதியாயிற்று. அவர்கள் செய்தவை யாவும் வீணாகி விட்டன. </span>
<span>7:119 (ஃபிர்அவ்னும்) அவனுடைய நண்பர்களும் (வெற்றிவாகை சூடுவதற்குப் பதிலாக) இழிவை அடைந்தார்கள். அங்கே (போட்டி அரங்கில்) முறியடிக்கப்பட்டார்கள். </span>
<span>7:120 மேலும், அந்த மந்திரவாதிகளின் நிலை என்னவாயிற்று எனில், ஏதோ ஓர் உள்ளுணர்வு அவர்களை ஸஜ்தாவில் வீழ்த்தியது; </span>
<span>7:121 அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் ஏற்றுக் கொண்டோம்; அகிலங்களின் அதிபதியை!</span>
<span>7:122 மூஸா மற்றும் ஹாரூனின் அதிபதியை!”</span>
<span>7:123 ஃபிர்அவ்ன் கூறினான்: “நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்பே நீங்கள் அவன் மீது நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? திண்ணமாக, இந்தத் தலைநகரில் நீங்கள் மேற் கொண்ட சூழ்ச்சியாகும் இது; இங்குள்ள ஆட்சியாளர்களை இங்கிருந்து நீங்கள் வெளியேற்ற வேண்டுமென்பதற்காக! விரைவில் (இதன் விளைவை) நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். </span>
<span>7:124 திண்ணமாக, நான் உங்களின் மாறுகை, மாறுகால்களைத் துண்டித்து விடுவேன். பின்னர் உங்கள் அனைவரையும் சிலுவையில் ஏற்றிவிடுவேன்.”</span>
<span>7:125 அவர்கள் பதில் கூறினார்கள்: “(எவ்வாறாயினும்) நாங்கள் எங்கள் இறைவனின் பக்கமே திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம். </span>
<span>7:126 எங்கள் இறைவனுடைய சான்றுகள் எங்களிடம் வந்துவிட்டன; அவற்றின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுவிட்டோம் எனும் காரணத்திற்காகத்தான் நீ எங்களை பழிவாங்க நாடுகிறாய்! எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறு மையை அருள்வாயாக! மேலும், உனக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த நிலையிலேயே எங்களை மரணிக்கச் செய்வாயாக!”</span>
<span>7:127 ஃபிர்அவ்னின் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் (ஃபிர்அவ்னிடம்) கேட்டார்கள்: “பூமியில் குழப்பம் விளைவிப்பதற்காகவும் உமக்கும் உம்முடைய கடவுள்களுக்கும் பணிந்து வாழ்வதைக் கைவிட்டு விடுவதற்குமா மூஸாவையும் அவருடைய சமூகத்தாரையும் நீர் விட்டு வைக்கின்றீர்?” அதற்கு ஃபிர்அவ்ன் பதிலளித்தான்: “நாம் அவர்களுடைய ஆண்மக்களைக் கொன்றுவிட்டு அவர்களுடைய பெண்மக்களை (மட்டும்) உயிர் வாழ விடுவோம். திண்ணமாக, அவர்கள் மீது நம்முடைய ஆதிக்கம் வலுவாக இருக்கிறது.”</span>
<span>7:128 மூஸா, தம் மக்களை நோக்கிக் கூறினார்: “அல்லாஹ்விடம் உதவி கோருங்கள்; மேலும், பொறுமையை மேற்கொள்ளுங்கள்! திண்ணமாக, இந்த பூமி அல்லாஹ்வுக்கு உரியது. தன் அடிமைகளில் தான் நாடுவோரை அதற்கு அவன் உரிமையாக்குகிறான். இன்னும் அவனுக்கு அஞ்சிய வண்ணம் வாழ்பவர்களுக்கே இறுதி வெற்றி இருக்கிறது.” </span>
<span>7:129 அதற்கு மூஸாவின் சமுதாயத்தார் கூறினார்கள்: “நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்பத்திற்குள்ளாக்கப்பட்டோம். இப்போது, எங்களிடம் நீர் வந்த பின்பும் (துன்புறுத்தப்பட்டு வருகின்றோம்).” அதற்கு மூஸா பதிலுரைத்தார்: “உங்கள் இறைவன் உங்களுடைய பகைவனை அழித்துவிட்டு, இப்பூமியில் உங்களைப் பிரதிநிதிகளாக்கி நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்பதைப் பார்க்கும் காலம் நெருங்கிவிட்டது.”</span>
<span>7:130 ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைப் பல ஆண்டுகளாய் நீடித்த பஞ்சத்தினாலும், விளைபொருள் குறைவினாலும் சோதித்தோம்; அவர்கள் நல்லுணர்வு பெறவேண்டும் என்பதற்காக!</span>
<span>7:131 ஆனால் (அவர்களின் நிலை எவ்வாறிருந்ததெனில்) அவர்களுக்கு நல்ல காலம் வந்துவிட்டால், “நாங்கள் இதற்கு உரியவர்கள்தாம்!” என்று கூறுவார்கள்; அவர்களுக்கு கெட்டகாலம் ஏற்பட்டு விட்டாலோ மூஸாவையும், அவருடன் உள்ளவர்களையும் (தமக்கு நேர்ந்த) அபசகுனமாய்க் கருதுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்: உண்மையில் அவர்களுடைய அபசகுனம் அல்லாஹ்விடமே இருக்கிறது. ஆயினும், அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாயிருந்தார்கள். </span>
<span>7:132 அவர்கள் (மூஸாவிடம்) கூறினார்கள்: “நீர் எங்களைக் கவர்ந்திழுப்பதற்காக எந்தச் சான்றுகளை எங்களிடம் கொண்டு வந்தாலும், நாங்கள் நீர் கூறுவதை ஏற்றுக்கொள்பவர்களாய் இல்லை.”</span>
<span>7:133 இறுதியில் நாம் அவர்கள் மீது புயல் மழையை அனுப்பினோம்; மேலும், வெட்டுக்கிளியை ஏவினோம்; பேன்களைப் பரப்பினோம்; தவளைகளைப் பெருகச் செய்தோம்; இரத்தத்தைப் பொழியச் செய்தோம். இந்தச் சான்றுகள் அனைத்தையும் தனித்தனியே காண்பித்தோம். ஆயினும், அவர்கள் ஆணவம் கொண்டு நடந்தனர்; கொடூர குற்றவாளிகளாகவும் இருந்தனர். </span>
<span>7:134 (எப்பொழுதேனும்) அவர்களுக்குத் துன்பம் நேர்ந்தால், அவர்கள் கூறுவார்கள்: “மூஸாவே! உம்முடைய இறைவனிடம் உமக்கு அவன் அளித்துள்ள அந்தஸ்தைக் கொண்டு எங்களுக்காக நீர் பிரார்த்தனை புரியும்; எங்களை விட்டு இத்துன்பத்தை நீர் நீக்கச் செய்தால், திண்ணமாக, நாங்கள் உம் கூற்றை ஏற்றுக்கொள்வோம்; இஸ்ராயீலின் வழித்தோன்றல்களையும் உம்முடன் அனுப்பி வைப்போம்.” </span>
<span>7:135 ஆயினும், எந்த நிலையிலும் அவர்கள் அடையவிருக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவர்களை விட்டு வேதனையை நாம் நீக்கிவிட்டாலோ உடனே அவர்கள் (தம் வாக்குறுதியை) முறித்துவிடுகின்றார்கள். </span>
<span>7:136 ஆகையால் அவர்களை நாம் பழிவாங்கினோம்; மேலும், கடலிலே அவர்களை மூழ்கடித்தோம். ஏனெனில் அவர்கள் நம்முடைய சான்றுகளைப் பொய்யெனக் கூறினார்கள்; மேலும், அவற்றைக் குறித்து அலட்சியமாகவும் இருந்தார்கள். </span>
<span>7:137 பிறகு (இவர்களுக்குப் பதிலாக) பலவீனமாக்கப்பட்டிருந்த மக்களை, நம்மால் அருள்வளமாக்கப்பட்ட பூமியின் கிழக்குப் பகுதிகளுக்கும் மேற்குப் பகுதிகளுக்கும் வாரிசுகளாக்கினோம். (இவ்வாறாக) உம் இறைவனின் சிறப்பான வாக்குறுதி இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் விஷயத்தில் முழுமையாக நிறைவேறியது. ஏனென்றால், அவர்கள் பொறுமையை மேற்கொண்டிருந்தார்கள். மேலும், ஃபிர்அவ்னும், அவனுடைய கூட்டத்தாரும் உருவாக்கியிருந்தவற்றையும், உயர்த்திக் கட்டியிருந்தவற்றையும் நாம் பாழாக்கி விட்டோம். </span>
<span>7:138 நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களைக் கடலைக் கடக்க வைத்தோம். பின்னர் (அவர்கள் தமது பயணத்தைத் தொடர்ந்தபோது) தம் சிலைகள் மீது பக்தி கொண்டிருந்த ஒரு சமுதாயத்தை அவர்கள் கடந்து செல்ல நேர்ந்தது. (உடனே) அவர்கள் “மூஸாவே! இம்மக்களுக்கு கடவுள்கள் இருப் பதுபோல் எங்களுக்கும் ஒரு கடவுளை உருவாக்கித் தாரும்!” என்று கூறலானார்கள். அதற்கு மூஸா கூறினார்: “திண்ணமாக, நீங்கள் அறிவில்லாமல் பேசும் கூட்டத்தினராய் இருக்கின்றீர்கள். </span>
<span>7:139 இவர்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் வழிமுறை நிச்சயம் அழிந்து போகக்கூடியதாகும். இவர்கள் செய்து கொண்டிருப்பவை (முற்றிலும்) வீணானவையாகும்.” </span>
<span>7:140 மேலும், மூஸா கூறினார்: “அல்லாஹ்வைத் தவிர வேறொரு கடவுளையா நான் உங்களுக்காகத் தேடுவேன்? உண்மையில் அவனே உங்களை அகிலத்தார் அனைவரையும்விட மேன்மை ஆக்கியுள்ளான்.” </span>
<span>7:141 மேலும் (அல்லாஹ் கூறுகின்றான்:) “ஃபிர்அவ்னுடைய கூட்டத்தார்களிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றிய சந்தர்ப்பத்தை நினைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்குக் கடுமையான வேதனை அளித்துக் கொண்டிருந்தார்கள்; உங்களுடைய ஆண்மக்களைக் கொலை செய்து, உங்களுடைய பெண்மக்களை உயிருடன் விட்டு வைத்திருந்தார்கள். மேலும், இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மாபெரும் சோதனை ஏற்பட்டிருந்தது.”</span>
<span>7:142 நாம் மூஸாவுக்கு முப்பது இரவுகளை (நாட்களை) வாக்களித்(து சினாய் மலைக்கு அழைத்)தோம். பிறகு அவற்றோடு பத்து இரவுகளை அதிகப்படுத்தினோம். இவ்வாறு, நாற்பது இரவுகள் என்று அவருடைய இறைவன் நிர்ணயித்த தவணை முழுமை அடைந்தது. மூஸா (சினாய் மலைக்குச் சென்றபோது) தம் சகோதரர் ஹாரூனிடம், “நான் சென்ற பிறகு நீர் என்னுடைய கூட்டத்தாரிடையே என் பிரதிநிதியாக இருந்து, சீராகச் செயல் புரிந்து வருவீராக! மேலும், குழப்பம் விளைவிப்போரின் நடைமுறையினை மேற்கொள்ளாதீர்!” என்று கூறினார். </span>
<span>7:143 நாம் குறிப்பிட்டிருந்த நேரத்தில் மூஸா வந்தார். பிறகு அவருடைய இறைவன் அவரிடம் உரையாடியபோது அவர் வேண்டினார்: “என் இறைவா! எனக்கு உன்னைப் பார்க்கும் வலிமையை வழங்குவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்.” அதற்கு இறைவன் கூறினான்: “என்னை நீர் காண முடியாது. ஆயினும் (எதிரிலுள்ள) மலையைப் பாரும்! அது தனது இருப்பிடத்தில் நிலைத்திருந்தால், என்னை நீர் காண முடியும்.” அவருடைய இறைவன் அம்மலையின் மீது வெளிப்பட்டபோது அது பொடிப் பொடியாகிவிட்டது. மூஸாவும் திடுக்கிட்டு மயங்கி விழுந்தார். பிறகு உணர்வு பெற்றபோது கூறினார்: “நீ மிகவும் தூய்மையானவன். நான் உன்னிடம் மன்னிப்புக் கோரி மீளுகின்றேன். மேலும், நான் நம்பிக்கை கொள்வோரில் முதன்மையானவனாக இருக்கின்றேன்.” </span>
<span>7:144 அதற்கு அல்லாஹ், “மூஸாவே! என்னுடைய தூதுப் பணிகளுக்காகவும், என்னுடன் உரையாடுவதற்காகவும் மனிதர்கள் யாவரையும் விட (முன்னுரிமை வழங்கி) உம்மை நான் தேர்ந்தெடுத்திருக்கின்றேன். எனவே, நான் உமக்கு வழங்கியதைப் பெற்றுக் கொள்வீராக! மேலும், நன்றி செலுத்து வோராய்த் திகழ்வீராக!” என்று கூறினான். </span>
<span>7:145 இதன் பின்னர், நாம் மூஸாவுக்கு (வாழ்க்கைத் துறை) ஒவ்வொன்றுக்கும் வேண்டிய அறிவுரையையும், ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கத்தையும் பலகைகளில் எழுதிக் கொடுத்தோம். மேலும், (நாம் அவருக்குக் கூறினோம்:) “இந்த அறிவுரைகளை நீர் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்வீராக! மேலும், இவற்றிலுள்ள சிறந்த கருத்துகளைப் பின்பற்றும்படி உம்முடைய சமுதாயத்தாருக்கு நீர் கட்டளையிடுவீராக! அதிவிரைவில் பாவம் புரிவோர்க்குரிய இருப்பிடத்தை நான் உங்களுக்குக் காண்பிப்பேன். </span>
<span>7:146 பூமியில் நியாயமின்றிப் பெருமை கொள்பவர்(களின் பார்வை)களை என்னுடைய சான்றுகளை விட்டு நான் திருப்பி விடுவேன். அவர்கள் எந்தச் சான்றுகளைக் கண்டாலும் (ஒருபோதும்) அவற்றின் மீது நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். மேலும், நேர்வழியினை(த் தம் கண்ணெதிரே) அவர்கள் கண்டாலும்கூட அதனை மேற்கொள்ள மாட்டார்கள். ஆனால், வழிகேடான பாதையைக் காண்பார்களானால், அதனை மேற்கொள்ள முனைந்து விடுகின்றார்கள். அதற்குக் காரணம் யாதெனில், அவர்கள் நம்முடைய சான்றுகளைப் பொய்யெனக் கூறினார்கள். மேலும், அவற்றை அலட்சியப்படுத்திக் கொண்டிருந்தார்கள். </span>
<span>7:147 எனவே எவர்கள் நம்முடைய சான்றுகளைப் பொய் எனக் கூறினார்களோ, மேலும் மறுமைநாளைச் சந்திக்க இருப்பதையும் மறுத்தார்களோ அவர்களுடைய செயல்கள் அனைத்தும் வீணாகிவிட்டன. தாங்கள் செய்து கொண்டிருக்கும் செயல்களுக்குரிய கூலியைத் தவிர வேறு எதனை இவர்கள் பெறமுடியும்?”</span>
<span>7:148 மூஸா (சினாய் மலைக்குச்) சென்ற பிறகு அவருடைய சமூகத்தார் தங்களுடைய ஆபரணங்களை உருக்கி, கன்றுக்குட்டியின் வடிவத்தை உருவாக்கி(வணங்கி)னார்கள். அதற்கு மாட்டின் சப்தம் இருந்தது. அது அவர்களிடம் பேசுவதுமில்லை; (எந்த விவகாரங்களிலும்) அவர்களுக்கு வழிகாட்டுவதுமில்லை என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? ஆயினும், அதனை அவர்கள் தெய்வமாக்கிக் கொண்டார்கள். மேலும், அவர்கள் பெரும் அக்கிரமக்காரர்களாகிவிட்டார்கள். </span>
<span>7:149 பிறகு அவர்கள் உருவாக்கியவை அனைத்தும் தகர்ந்துவிட்டன; மேலும், உண்மையிலேயே வழிதவறிவிட்டோம் என்பதை அவர்கள் உணர்ந்தனர். அப்போது அவர்கள் கூறலானார்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்குக் கருணை புரிந்து, எங்களுக்கு மன்னிப்பு வழங்கியிராவிட்டால், நிச்சயமாக நாங்கள் இழப்புக்குள்ளாகியிருப்போம்!” </span>
<span>7:150 மூஸா தம் சமுதாயத்தாரிடம் கோபமும் வேதனையும் கொண்டவராகத் திரும்பினார். வந்தவுடனேயே அவர் கூறினார்: “நான் சென்ற பிறகு என்னுடைய பிரதிநிதிகளாய் இருந்து நீங்கள் செய்த செயல் எத்துணைக் கெட்டது! உங்கள் இறைவனின் கட்டளையை எதிர்பார்த்துப் பொறுமையாய் இருந்திடக் கூடாதா?” மேலும் பலகைகளைப் போட்டுவிட்டார்; மேலும் தம் சகோதரரின் (ஹாரூனின்) தலை(முடி)யைப் பிடித்து இழுத்தார். ஹாரூன் கூறினார்: “என் தாயின் மகனே! இம்மக்கள் என்னைப் பலவீனனாகக் கருதி, என்னைக் கொலை செய்யவும் முனைந்து விட்டார்கள். எனவே எதிரிகள் என்னைப் பார்த்து நகைக்குமாறு நீர் செய்துவிடாதீர்! மேலும், இந்த அக்கிரமக்காரக் கூட்டத்தார்களுடன் என்னையும் சேர்த்துவிடாதீர்!” </span>
<span>7:151 (அப்போது) மூஸா, “என் இறைவா! என்னையும், என் சகோதரரையும் மன்னிப்பாயாக! மேலும், உன்னுடைய கருணையில் எங்களைச் சேர்த்துக்கொள்வாயாக! நீ அனைவரையும்விட அதிகம் கருணை புரிபவனாவாய்” என்று இறைஞ்சினார். </span>
<span>7:152 (அதற்கு இவ்வாறு பதில் அளிக்கப்பட்டது:) “எவர்கள் கன்றுக்குட்டியைத் தெய்வமாக எடுத்துக் கொண்டார்களோ அவர்கள் நிச்சயம் தம் இறைவனின் சினத்திற்கு ஆளாகியே தீருவார்கள். மேலும், உலக வாழ்விலும் இழிவுக்குரியவர்களாகி விடுவார்கள். பொய் புனைந்துரைப்பவர்களுக்கு நாம் இவ்வாறே தண்டனை அளிக்கின்றோம். </span>
<span>7:153 மேலும், எவர்கள் தீவினைகள் புரிகின்றார்களோ, பின்னர் அவற்றிலிருந்து விலகி மன்னிப்புக்கோரி இறைநம்பிக்கையும் கொண்டார்களேயானால், அதன் பிறகு திண்ணமாக உம் இறைவன் அவர்களை அதிகம் மன்னித்து கிருபை செய்பவனாக இருக்கின்றான்.”</span>
<span>7:154 மேலும், மூஸாவுக்குக் கோபம் தணிந்தபோது அப்பலகைகளை அவர் எடுத்துக் கொண்டார். மேலும், எவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சுகின்றார்களோ அவர்களுக்கு அவற்றில் எழுதப்பட்டிருந்த அறிவுரைகளில் வழிகாட்டலும் அருளும் இருந்தன. </span>
<span>7:155 மேலும், மூஸா தம் சமுதாயத்தைச் சார்ந்தவர்களில் எழுபது பேரை நாம் குறிப்பிட்ட நேரத்தி(ல் தம்முடன் வருவத)ற்காகத் தேர்ந்தெடுத்தார். கடும் பூகம்பம் அவர்களைத் தாக்கியபோது மூஸா இறைஞ்சினார்: “என் இறைவனே! நீ நாடியிருந்தால் அவர்களையும் என்னையும் முன்பே அழித்துவிட்டிருக்க முடியும்! எங்களில் சில அறிவிலிகள் செய்த தவறுகளுக்காக எங்கள் அனைவரையும் அழிக்கப்போகின்றாயா? இது உன்னுடைய சோதனையே அன்றி வேறில்லை; இதன் மூலம் நீ நாடுகின்றவர்களை வழிகெடுக்கிறாய்; இன்னும் நீ நாடுகின்றவர்களுக்கு நேர்வழியைக் காண்பிக்கின்றாய். எங்கள் பாதுகாவலன் நீயே! எனவே எங்களை மன்னித்து, மேலும் எங்கள் மீது கருணை புரிவாயாக! நீ எல்லோரையும் விட அதிகம் மன்னிப்பவனாய் இருக்கின்றாய்.” </span>
<span>7:156 இன்னும், “எங்களுக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் நன்மையை எழுதிவைப்பாயாக! திண்ணமாக, நாங்கள் உன் பக்கம் திரும்பி விட்டோம்.” அதற்கு இறைவன், “நான் நாடுகின்றவர்களுக்கு தண்டனை அளிப்பேன். ஆயினும், என்னுடைய அருள் அனைத்தையும் சூழ்ந்திருக்கின்றது. எனவே, எவர்கள் இறைவனுக்கு அஞ்சுகின்றார்களோ மேலும், ஜகாத்தையும் அளிக்கின்றார்களோ மேலும், என்னுடைய வசனங்களையும் நம்புகின்றார்களோ அவர்களுக்கு நான் அந்த அருளை உரித்தாக்குவேன்” என்று பதிலுரைத்தான். </span>
<span>7:157 (எனவே இன்று) அந்த அருளுக்குரியவர்கள் எத்தகையவர்களெனில், அவர்கள் ‘உம்மீ’ நபியாகிய இந்தத் தூதரைப் பின்பற்றுவார்கள்; இவரைக் குறித்து அவர்களிடமுள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். இவர் நன்மை செய்யுமாறு அவர்களை ஏவுகின்றார்; தீமைகளிலிருந்து அவர்களைத் தடுக்கின்றார். மேலும், அவர்களுக்குத் தூய்மையானவற்றை அனுமதிக்கின்றார்; தூய்மையில்லாதவற்றைத் தடை செய்கின்றார். மேலும், அவர்களின் மீதுள்ள சுமையை இறக்குகின்றார்; அவர்களைப் பிணைத்திருந்த விலங்குகளையும் உடைத்தெறிகின்றார். எனவே எவர்கள் இந்நபி மீது நம்பிக்கை கொண்டு இவரைக் கண்ணியப்படுத்தி, உதவியும் புரிகின்றார்களோ, மேலும் இவருடன் இறக்கியருளப்பட்ட ஒளி யினைப் பின்பற்றுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாவர். </span>
<span>7:158 (முஹம்மதே!) நீர் கூறும்: “மனிதர்களே! திண்ணமாக, வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியாகிய அல்லாஹ்வின் தூதராக நான் உங்கள் அனைவர்பாலும் அனுப்பப்பட்டுள்ளேன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனே வாழ்வையும் மரணத்தையும் கொடுக்கின்றான். எனவே, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவனால் அனுப்பப்பட்ட ‘உம்மீ’ நபி மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்! அவரோ அல்லாஹ்வையும் அவனுடைய வேதவாக்குகளையும் நம்புகின்றார். மேலும், அவரைப் பின்பற்றுங்கள்! அதனால் நீங்கள் நேர்வழி பெறக்கூடும்.”</span>
<span>7:159 சத்தியத்தின் அடிப்படையில் வழிகாட்டி, அதற்கு ஏற்பவே நீதி செலுத்தக்கூடிய ஒரு பிரிவினர் மூஸாவுடைய சமுதாயத்தாரில் இருந்தனர். </span>
<span>7:160 மேலும், நாம் அச்சமூகத்தை பன்னிரண்டு குலங்களாகப் பிரித்து ஒவ்வொன்றையும் தனிப் பெரும் சமுதாயங்களாக அமைத்தோம். மேலும், மூஸாவிடம் அவருடைய சமுதாயத்தார்கள் தண்ணீர் வேண்டியபோது, ‘இன்ன பாறையை உமது கைத்தடியைக் கொண்டு அடியும்!’ என்று அவருக்கு அறிவித்தோம். அப்பாறையிலிருந்து உடனே பன்னிரண்டு ஊற்றுகள் பொங்கின. ஒவ்வொரு குழுவினரும் தாங்கள் தண்ணீர் பருகும் இடத்தை நன்கு அறிந்து கொண்டார்கள். மேலும், நாம் அவர்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மேலும், அவர்களுக்கு மன்னுவும், ஸல்வாவும், இறக்கிவைத்தோம். “நாம் உங்களுக்கு அளித்த தூய்மையான பொருள்களைப் புசியுங்கள்!” (என்று கூறினோம்). ஆனால் அவர்கள் (இதன் பின்னரும் தீயசெயல்களை மேற்கொண்டதனால்) நமக்கு அநீதி இழைத்திடவில்லை; மாறாக தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டிருந்தனர். </span>
<span>7:161 மேலும், இவ்வாறு அவர்களிடம் கூறப்பட்டதை நீர் நினைவுகூரும்: “நீங்கள் இவ்வூரில் வசியுங்கள்! மேலும் இங்கு (கிடைப்பவற்றை) விரும்பியவாறு தாராளமாகப் புசியுங்கள்; இன்னும் ‘ஹித்ததுன்’ என்று சொல்(லியவாறே செல்)லுங்கள்; மேலும், ஊரின் தலைவாயிலில் சிரம்பணிந்தவாறு நுழையுங்கள்! நாம் உங்களுடைய தவறுகளை மன்னிப்போம். சிறந்த முறையில் நற்செயல் புரிவோருக்கு விரைவில் அதிக நற்கூலி வழங்குவோம்.” </span>
<span>7:162 ஆயினும், அவர்களில் அக்கிரமக்காரர்கள் தங்களுக்குக் கூறப்பட்ட சொல்லை வேறொன்றாக மாற்றிவிட்டார்கள். ஆகவே இவ்வாறு அவர்கள் அக்கிரமம் செய்து கொண்டிருந்த காரணத்தால் வானத்திலிருந்து வேதனையை அவர்கள்மீது அனுப்பினோம். </span>
<span>7:163 கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்த ஓர் ஊரைப் பற்றியும் இவர்களிடம் நீர் கேளும்! அங்கு வாழ்ந்த மக்கள் ஸப்த் சனிக்கிழமையில் இறைக்கட்டளையை மீறியதை (இவர்களுக்கு) நினைவூட்டும்! அந்தச் சனிக்கிழமைகளில் அவர்களுடைய மீன்கள் தண்ணீரின் மேல் மட்டத்தில் உயர்ந்து அவர்களிடம் வரும். மேலும், சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவ்வாறு அம்மீன்கள் அவர்களிடம் வரமாட்டா. அவர்கள் கீழ்ப்படியாதிருந்த காரணத்தால், அவர்களை இவ்வாறு சோதனைக்குள்ளாக்கியிருந்தோம். </span>
<span>7:164 மேலும், இவர்களுக்கு நினைவூட்டும்; அவர்களில் ஒரு குழுவினர் (மற்றொரு குழு வினரிடம்) “எந்த மக்களை அல்லாஹ் அழிக்கவிருக்கின்றானோ அல்லது கடுமையான தண்டனைக்கு ஆளாக்கவிருக்கின்றானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுரை வழங்குகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “நாங்கள் உங்கள் இறைவனிடம் தகுந்த காரணம் கூறவேண்டும் என்பதற்காகவே இவர்களுக்கு நல்லுரை கூறுகின்றோம். மேலும், இதன் மூலம் இவர்கள் இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளவும் கூடும்” என்று பதில் கூறினார்கள். </span>
<span>7:165 இறுதியில் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தவற்றை முற்றிலும் அவர்கள் மறந்து விட்டபோது தீமைகளிலிருந்து தடுத்துக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம். அநீதி புரிந்த அனைவரையும் அவர்கள் கீழ்ப்படியாமலிருந்த காரணத்தால் கடுமையான வேதனை கொடுத்து தண்டித்தோம். </span>
<span>7:166 பிறகு அவர்கள் எந்தச் செயல்களைச் செய்யக்கூடாதெனத் தடுக்கப்பட்டார்களோ அவற்றையே அவர்கள் ஆணவத்துடன் செய்து கொண்டிருந்தபோது “நீங்கள் குரங்குகளாகி இழிவடைந்து விடுங்கள்!” என்று நாம் கூறினோம். </span>
<span>7:167 மேலும், அவர்களுக்கு மோசமான வேதனையைக் கொடுக்கக்கூடியவர்களையே மறுமைநாள் வரை நாம் அவர்கள் மீது ஏவிக் கொண்டிருப்போம் என உம் இறைவன் அறிவித்ததை நீர் நினைவுகூருவீராக! திண்ணமாக, உம்முடைய இறைவன் தண்டனை வழங்குவதில் மிக விரைவானவன் ஆவான். மேலும், திண்ணமாக அவன் மன்னிப்பவனாகவும் கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>7:168 நாம் இப்பூமியில் அவர்களைப் பல சமூகங்களாகப் பிரித்து பிளவுபடச் செய்தோம். அவர்களில் சிலர் நல்லவர்களாய் இருந்தனர். வேறு சிலர் அப்படி இருக்கவில்லை. மேலும் இன்ப துன்ப நிலைகளுக்கு ஆளாக்கி, அவர்களைச் சோதித்துக் கொண்டிருந்தோம்; அவர்கள் (நல்வழியின் பக்கம்) திரும்ப வேண்டும் என்பதற்காக! </span>
<span>7:169 ஆனால் அந்த முந்தைய சந்ததிகளுக்குப் பிறகு தீயோர் அவர்களின் பிரதிநிதிகளாய் வந்தார்கள். அவர்கள் இறைமறையின் வாரிசுகளாய் இருந்தபோதிலும் இந்த அற்ப உலகின் ஆதாயங்களைப் பெறுகின்றார்கள். “நாங்கள் நிச்சயம் மன்னிக்கப்படுவோம்” என்றும் கூறுகின்றார்கள். பிறகும் அதுபோன்ற ஆதாயங்கள் அவர்களிடம் வரும்போது அவற்றையும் பாய்ந்து பெறுகின்றார்கள். அல்லாஹ்வின் விஷயத்தில் சத்தியத்தைத் தவிர வேறு எதையும் கூறக்கூடாது என்று வேதத்தில் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப்பட வில்லையா? மேலும், வேதத்தில் என்ன (எழுதப்பட்டு) உள்ளது என்பதை அவர்கள் படித்திருக்கிறார்களே! இறையச்சமுடையோருக்கு மறுமை இல்லமே சிறந்ததாகும். இதனைக்கூட நீங்கள் புரிந்துகொள்ளமாட்டீர்களா? </span>
<span>7:170 யார் யார் வேதத்தை முறையாகக் கடைப்பிடித்து தொழுகையையும் நிலைநிறுத்துகின்றார்களோ, அத்தகைய நல்லொழுக்கமுடையோருக்கான கூலியைத் திண்ணமாக நாம் வீணாக்கமாட்டோம். </span>
<span>7:171 மேலும், இதையும் அவர்களுக்கு நினைவூட்டுவீராக; நாம் மலையைப் பெயர்த்து அதனை அவர்களுக்கு மேல் குடையைப் போன்று நிழலிடச் செய்தோம். அது தங்கள் மீது விழுந்துவிடுமோ என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். (அப்போது நாம் அவர்களிடம் கூறினோம்:) “நாம் உங்களுக்கு வழங்கியிருக்கின்ற வேதத்தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்! மேலும், அதில் உள்ளவற்றை நினைவில் வையுங்கள்! (அதனால்) நீங்கள் தவறான நடத்தையிலிருந்து தவிர்ந்து கொள்ளக்கூடும்.”</span>
<span>7:172 மேலும், (நபியே! இதனையும் இம்மக்களுக்கு) நினைவூட்டுவீராக! உம் இறைவன் ஆதம் உடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய வழித்தோன்றல்களை வெளிப்படுத்தி அவர்களையே அவர்களுக்குச் சாட்சியாக்கி, “நான் உங்கள் இறைவன் அல்லவா?” என்று கேட்டான். “ஆம், நிச்சயமாக நீதான் எங்கள் இறைவன்; இதற்கு நாங்கள் சாட்சியாக இருக்கின்றோம்” என்று அவர்கள் கூறினார்கள். எதற்காக நாம் இவ்வாறு செய்தோமெனில், மறுமைநாளில், “நாங்கள் இதனைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களாயிருந்தோம்” என்று நீங்கள் கூறிவிடக் கூடாது; </span>
<span>7:173 அல்லது முன்னர் எங்கள் மூதாதையர்களே இறைவனுக்கு இணை கற்பிக்கத் தொடங்கி விட்டிருந்தார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னர் வந்த வழித்தோன்றல்கள்தாம்! எனவே தவறான மக்கள் செய்த செயலுக்காக எங்களை நீ தண்டிக்கப் போகின்றாயா என்றும் நீங்கள் கூறக்கூடாது என்பதற்காகத்தான்! </span>
<span>7:174 மேலும், இவ்வாறு நாம் சான்றுகளைத் தெளிவாக எடுத்துரைக்கின்றோம்; (நல்வழியின் பக்கம்) அவர்கள் திரும்பிவிடக்கூடும் என்பதற்காக!</span>
<span>7:175 மேலும், (நபியே!) ஒரு மனிதனின் நிலையை நீர் இவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவன் எத்தகையவன் என்றால், நாம் அவனுக்கு நம்முடைய வசனங்களின் அறிவை வழங்கியிருந்தும் அவன், அவற்றைப் பின்பற்றாமல் நழுவி ஓடினான். இறுதியில், ஷைத்தான் அவனைப் பின்தொடர்ந்தான். இவ்வாறாக, அந்த மனிதன் வழிகெட்டவர்களில் ஒருவனாகி விட்டான். </span>
<span>7:176 நாம் நாடியிருந்தால், அவ்வசனங்களின் மூலம் அவனை உயர்த்தியிருப்போம். ஆயினும் அவன் இவ்வுலக வாழ்விலேயே மோகம் கொண்டான்; மேலும், தன்னுடைய மன இச்சைகளையே பின்பற்றலானான். எனவே அவனுடைய நிலை நாயைப் போன்றதாகும்! அதனை நீர் துரத்தினாலும், நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டுதானிருக்கும்; துரத்தாமல் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டுதானிருக்கும்! நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகின்ற மக்களுக்கு இதுவே உதாரணமாகும். இச்சம்பவங்களை நீர் இவர்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருப்பீராக! அதன் மூலம் இவர்கள் சிந்தித்து உணரக்கூடும்! </span>
<span>7:177 நம்முடைய வசனங்களைப் பொய்யெனக் கூறி, தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டிருந்த சமுதாயத்தாரின் உவமை எத்துணைக் கெட்டது!</span>
<span>7:178 அல்லாஹ் எவருக்கு நேர்வழியை அருளுகின்றானோ அவரே நேர்வழி பெற்றவராவார். மேலும், யாருக்கு அல்லாஹ் தன் வழிகாட்டுதலை வழங்கவில்லையோ அத்தகையவர்களே பேரிழப்புக்கு ஆளானவர்கள்! </span>
<span>7:179 மேலும் உண்மை யாதெனில், ஜின் மற்றும் மனித வர்க்கத்தில் பெரும்பாலோரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கின்றோம். அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன; ஆயினும், அவற்றால் அவர்கள் சிந்தித்துணர்வதில்லை; அவர்களுக்குக் கண்கள் இருக்கின்றன; ஆயினும் அவற்றால் அவர்கள் பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள்; ஏன் அவற்றை விடவும் அவர்கள் தாழ்ந்தவர்கள்! அவர்கள்தாம் அலட்சியத்தில் மூழ்கியிருப்பவர்கள். </span>
<span>7:180 அல்லாஹ் அழகிய பெயர்களுக்கு உரித்தானவன்; எனவே, அந்த அழகிய பெயர்களைக் கொண்டே அவனை அழையுங்கள்! மேலும், அவனுக்குப் பெயர்கள் வைப்பதில் வழிபிறழ்ந்து செல்பவர்களை விட்டுவிடுங்கள்! அவர்கள் செய்துகொண்டிருப்பவற்றின் கூலியை அவர்கள் பெற்றே தீருவார்கள். </span>
<span>7:181 நாம் படைத்த மக்களில் ஒரு பிரிவினர் இப்படியும் இருக்கிறார்கள்; அவர்கள் முற்றிலும் சத்தியத்திற்கேற்பவே வழிகாட்டுகிறார்கள்.மேலும், சத்தியத்திற்கேற்பவே நீதிவழங்குகிறார்கள். </span>
<span>7:182 நம்முடைய வசனங்களைப் பொய்யென்றுரைத்தவர்களை, அவர்கள் அறியாத வகையில் படிப்படியாக அழிவின் பக்கம் நாம் கொண்டு செல்வோம். </span>
<span>7:183 மேலும், நான் அவர்களுக்கு அவகாசம் அளித்துக்கொண்டிருக்கின்றேன்; திண்ணமாக என்னுடைய சூழ்ச்சியை யாராலும் முறியடித்துவிட முடியாது. </span>
<span>7:184 இவர்கள் (எப்போதேனும்) சிந்தித்திருக்கின்றார்களா? இவர்களுடைய தோழருக்கு எவ்விதப் பைத்தியமும் இல்லை. அவர் (தீய விளைவு ஏற்படும் முன்னர் அதைப் பற்றி) தெளிவான முறையில் எச்சரிக்கை செய்பவரேயாவார். </span>
<span>7:185 வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சியமைப்பைக் குறித்து இவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? மேலும், அல்லாஹ் படைத்திருக்கும் எந்தப் பொருளையேனும் இவர்கள் கண் திறந்து பார்க்கவில்லையா? இன்னும் தங்கள் வாழ்க்கைத் தவணை முடியும் நேரம் நெருங்கிவிட்டது என்பதைக்கூட இவர்கள் சிந்திக்கவில்லையா? ஆக, (தூதரின்) இந்த எச்சரிக்கைக்குப் பின் வேறு எந்த அறிவுரையின் மீதுதான் இவர்கள் நம்பிக்கை கொள்ளப் போகின்றார்கள்? </span>
<span>7:186 அல்லாஹ் எவரை வழிதவறச் செய்கின்றானோ அவரை நேர்வழிப்படுத்துபவர் எவருமிலர். மேலும், அல்லாஹ் இவர்களை தங்களுடைய ஆணவப் போக்கிலேயே உழன்று கொண்டிருக்குமாறு விட்டுவிடுகின்றான். </span>
<span>7:187 இறுதித் தீர்ப்புக்குரிய நேரத்தைப் பற்றி அது எப்போது வரும் என்று இவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும்: “அதைப் பற்றிய அறிவு என் இறைவனிடமேயுள்ளது. அவனே அதற்குரிய நேரத்தில் அதனை வெளிப்படுத்துவான். வானங்களிலும், பூமியிலும் (உள்ளவர்களுக்கு) அது மிகக் கடுமையான நேரமாயிருக்கும். அது திடீரென்றுதான் உங்களை வந்தடையும்.” அதைப் பற்றி நீர் ஆராய்ந்து கொண்டிருப்பவரைப் போல உம்மைக் கருதி உம்மிடம் வினவுகின்றார்கள். நீர் கூறும்: “அதைப்பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது.” ஆயினும் மக்களில் பெரும்பாலோர் இவ்வுண்மையை அறியாதிருக்கிறார்கள். </span>
<span>7:188 (நபியே, அவர்களிடம்) நீர் கூறும்: “நான் எனக்கு எவ்வித நன்மையையும், இழப்பையும் ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றிலேன். அல்லாஹ் எதை நாடுகின்றானோ அதுவே நிகழ்கிறது. மறைவானவற்றை நான் அறிபவனாக இருந்திருந்தால் எனக்கு நானே நிறைய ஆதாயங்களைப் பெற்றிருப்பேன். மேலும், எந்தத் தீங்கும் என்னை அணுகியிருக்காது. என்னை நம்புகின்ற மக்களுக்கு நான் எச்சரிக்கை செய்பவனும், நற்செய்தி அறிவிப்பவனுமாகவே இருக்கின்றேன்.”</span>
<span>7:189 அல்லாஹ்தான் உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான்; மேலும், அதிலிருந்தே அதனுடைய துணையைப் படைத்தான்; அதனிடம் அது அமைதி பெறுவதற்காக! பிறகு ஆண், பெண்ணோடு கூடியபோது அவள் இலேசான கர்ப்பம் தரித்தாள். அதனை அவள் சுமந்து கொண்டு நடமாடிக் கொண்டிருந்தாள். பின்னர், அது கனமானபோது இருவரும் சேர்ந்து தங்கள் இறைவனாகிய அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள்: “நீ எங்களுக்கு நல்லதொரு குழந்தையைத் தந்தால், திண்ணமாக நாங்கள் உனக்கு நன்றி செலுத்துவோராயிருப்போம்.” </span>
<span>7:190 ஆனால், அல்லாஹ் அவர்களுக்கு நல்லதொரு குழந்தையை வழங்கியபோது அவன் அவர்களுக்கு வழங்கிய கொடையில், அவனோடு மற்றவர்களையும் இணையாக்கினார்கள். அவர்களுடைய இணைவைப்புச் செயல்களிலிருந்து அல்லாஹ் மிகவும் உயர்ந்தவன் ஆவான். </span>
<span>7:191 (எத்தகைய அறிவிலிகளாக இருக்கின்றார்கள், இவர்கள்!) எப்பொருளையும் படைக்க முடியாதவற்றையா அவனோடு இணை வைக்கின்றார்கள்? அவையே இறைவனால் படைக்கப்பட்டவைதாமே! </span>
<span>7:192 இவர்களுக்கு எவ்வித உதவியும் செய்திட அவற்றால் முடியாது. ஏன் தமக்குத்தாமே உதவி செய்யும் நிலையில்கூட அவை இல்லை. </span>
<span>7:193 நேரான வழியில் வருமாறு அவற்றுக்கு நீங்கள் அழைப்பு விடுத்தால், அவை உங்களைப் பின்பற்றி வரமாட்டா! நீங்கள் அவற்றிடம் பிரார்த்திப்பதும் அல்லது நீங்கள் மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்தவரை சமமே! </span>
<span>7:194 அல்லாஹ்வை விடுத்து எவற்றை நீங்கள் அழைக்கின்றீர்களோ அவை உங்களைப் போன்ற படைப்பினங்களே! அவற்றிடம் பிரார்த்தனை செய்து பாருங்கள்! அவற்றைப் பற்றி உங்கள் எண்ணங்கள் சரியாக இருந்தால் அவை உங்கள் அழைப்பை ஏற்று பதில் தரட்டுமே! </span>
<span>7:195 அவற்றிற்கு கால்கள் இருக்கின்றனவா, நடப்பதற்கு? கைகள் இருக்கின்றனவா, பிடிப்பதற்கு? கண்கள் இருக்கின்றனவா, பார்ப்பதற்கு? காதுகள் உள்ளனவா, கேட்பதற்கு? (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “நீங்களாக ஏற்படுத்திக் கொண்ட இணைக்கடவுள்களை அழையுங்கள்! பிறகு நீங்கள் (அனைவரும் ஒன்றுகூடி) எனக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்யுங்கள்! எனக்கு அறவே அவகாசம் அளிக்காதீர்கள்! </span>
<span>7:196 இந்த வேதத்தை இறக்கியருளிய இறைவனே திண்ணமாக, எனக்குப் பாதுகாப்பு அளிப்பவனாவான். மேலும், அவனே நல்லவர்களுக்கு பாதுகாப்பு நல்குகின்றான். </span>
<span>7:197 ஆனால் அல்லாஹ்வையன்றி எவற்றை நீங்கள் அழைக்கின்றீர்களோ அவற்றால் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. ஏன், அவற்றால் தமக்குத்தாமேகூட உதவி செய்து கொள்ள முடியாது! </span>
<span>7:198 மேலும், நீங்கள் அவற்றை நேரிய வழியில் வருமாறு அழைத்தால் உங்கள் பேச்சை அவற்றால் கேட்கவும் இயலாது. வெளித்தோற்றத்தில் அவை உம்மைப் பார்ப்பது போல் உமக்குத் தோன்றலாம்; ஆனால், உண்மையில் அவை (எதையும்) பார்ப்பதில்லை”. </span>
<span>7:199 (நபியே!) மென்மையையும், மன்னிக்கும் நடத்தையையும் மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும், அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக!</span>
<span>7:200 எப்பொழுதேனும் ஷைத்தானிடமிருந்து ஊசலாட்டம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரும்! திண்ணமாக, அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>7:201 உண்மையில், எவர்கள் இறையச்சத்துடன் வாழ்கின்றார்களோ, அவர்களுக்கு ஷைத்தானுடைய தாக்கத்தினால் ஏதேனும் தீய எண்ணம் ஏற்பட்டால் உடனே விழிப்படைந்து விடுவார்கள். அப்போது அவர்களுக்கு(ச் சரியான செயல்முறை எதுவென்பது) தெளிவாய்ப் புலப்பட்டு விடுகின்றது. </span>
<span>7:202 ஆனால், அவர்களின் (ஷைத்தான்களின்) சகோதரர்களையோ அவர்களின் வழிதவறிய போக்கிலேயே ஷைத்தான்கள் இழுத்துக்கொண்டு செல்கின்றார்கள். மேலும் அவர்களை வழிகெடுப்பதில் எந்தக் குறையும் வைப்பதில்லை. </span>
<span>7:203 மேலும் (நபியே!) ஏதேனும் சான்றினை (முஃஜிஸா அற்புதத்தை) நீர் இவர்களுக்குச் சமர்ப்பிக்கவில்லையாயின் அவர்கள் கேட்கிறார்கள்: “நீர் உமக்காக ஒரு சான்றினை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை?” (அதற்கு) நீர் கூறும்: “என் இறைவனிடமிருந்து எனக்கு அனுப்பப்படுகின்ற வஹியை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன். இது உங்கள் இறைவனால் வழங்கப்பட்ட தெளிவான சான்றாகும். மேலும், (இதனை) நம்புகின்ற சமுதாயத்தாருக்கு இது நேர்வழி காட்டக்கூடியதாகவும், ஓர் அருளாகவும் இருக்கின்றது. </span>
<span>7:204 மேலும், குர்ஆன் (உங்கள் முன்) ஓதப்படும்போது அதனைக் கவனமாய்க் கேளுங்கள்; மௌனமாகவும் இருங்கள்! உங்கள் மீதும் அருள் பொழியப்படலாம்.”</span>
<span>7:205 மேலும் (நபியே!) காலையிலும், மாலையிலும் உம் இறைவனை நினைவுகூர்வீராக! உம் மனத்திற்குள் பணிவாகவும் அச்சத்துடனும் மேலும் மெதுவான குரலிலும்! மேலும் அலட்சியமாய் இருப்போர்களுள் நீரும் ஒருவராகி விடாதீர்! </span>
<span>7:206 உம் இறைவனிடத்தில் நெருக்கமாய் இருக்கும் வானவர்கள் அவனை வணங்காமல் புறக்கணித்துத் தற்பெருமை கொள்வதில்லை. மாறாக அவனை அவர்கள் துதிக்கிறார்கள். அவனின் திருமுன்னர் மட்டுமே பணிகின்றார்கள். </span>
</div><div>
<span>அல்அன்ஃபால்</span>
<span>8:1 (நபியே!) அன் ஃபால் பற்றி அவர்கள் உம்மிடம் வினவுகின்றார்கள். கூறுவீராக: “அன் ஃபால் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியனவாகும். எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! மேலும், உங்களுக்கிடையே உள்ள உறவுகளைச் சீராக்கிக் கொள்ளுங்கள்! மேலும், நீங்கள் நம்பிக்கை கொண்டோராயின் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்.” </span>
<span>8:2 உண்மையான இறைநம்பிக்கையாளர்கள் யாரெனில், அல்லாஹ்வின் பெயர் கூறப்படும்போது, அவர்களுடைய உள்ளங்கள் அஞ்சி நடுங்கும்! மேலும், அவனுடைய வசனங்கள் அவர்கள் முன் ஓதப்பட்டால் அவர்களுடைய நம்பிக்கை அதிகமாகிவிடும். மேலும், அவர்கள் தங்களுடைய இறைவனையே முழுவதும் சார்ந்திருப்பார்கள். </span>
<span>8:3 அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள். இன்னும் நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நம்முடைய வழியில்) செலவு செய்வார்கள். </span>
<span>8:4 இத்தகையோர்தாம் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உயர்ந்த படித்தரங்கள் இருக்கின்றன. மேலும், தவறுகளுக்கு மன்னிப்பும் கண்ணியமான நற்பேறும் இருக்கின்றன. </span>
<span>8:5 (இந்தப் போர்ப் பொருட்கள் விவகாரத்தில் உருவாகிக் கொண்டிருக்கிற நிலை, முன்பு ஏற்பட்ட நிலையைப் போன்றே உள்ளது. அப்போது) உம் இறைவன் உம்மைச் சத்தியத்துடன் உம் வீட்டிலிருந்து வெளிக் கொணர்ந்தான். இறைநம்பிக்கையாளர்களில் ஒரு பிரிவினருக்கு அது வெறுப்பாக இருந்தது. </span>
<span>8:6 அவர்கள் சத்தியம் தெளிவாகி விட்ட பின்னரும் அது குறித்து உம்மிடம் தர்க்கம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுடைய நிலைமை, கண்களால் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மரணத்தின் பக்கமாக இழுத்துச் செல்லப்படுவது போன்று இருந்தது. </span>
<span>8:7 மேலும், இதனையும் நினைத்துப் பாருங்கள்; “இரு கூட்டத்தாரில் ஒரு கூட்டம் நிச்சயம் உங்கள் கைக்குக் கிடைத்து விடுவர்” என்று அல்லாஹ் உங்களிடம் வாக்குறுதி அளித்தான். ஆனால், நிராயுதபாணிகளான கூட்டத்தினர் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என நீங்கள் விரும்பினீர்கள். ஆனால் அல்லாஹ்வோ தன் வாக்குகளால் சத்தியத்தை சத்தியம் என்று காட்டவும், நிராகரிப்பாளர்களை வேரறுக்கவுமே நாடியிருந்தான். </span>
<span>8:8 ஏனெனில், சத்தியம் சத்தியம்தான் என்றும், அசத்தியம் அசத்தியம்தான் என்றும் தெளிவாக்கிட வேண்டும் என்பதற்காக! குற்றவாளிகள் (இதனை எவ்வளவு) வெறுத்தாலும் சரியே!</span>
<span>8:9 உங்கள் இறைவனிடம் நீங்கள் உதவி தேடி முறையிட்டுக் கொண்டிருந்ததையும் நினைத்துப் பாருங்கள்; அப்போது அவன் பதிலளித்தான்; “ஓராயிரம் வானவர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி, திண்ணமாக உங்களுக்கு நான் உதவி செய்வேன்.”</span>
<span>8:10 அல்லாஹ் இதனை அறிவித்தது, உங்களுக்கு ஒரு நற் செய்தியாகவும், இதன் மூலம் உங்கள் இதயங்கள் நிம்மதியடைவதற்காகவுமே! தவிர, வெற்றி என்றைக்கும் அல்லாஹ்விடமிருந்துதான் ஏற்படுகிறது! நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவாளனுமாவான். </span>
<span>8:11 இதையும் நினைத்துப் பாருங்கள்; அல்லாஹ் உங்களைச் சிற்றுறக்கம் கொள்ளச் செய்து தன் சார்பிலிருந்து உங்களுக்கு மன நிம்மதியையும் அச்சமின்மையையும் ஏற்படுத்தினான். மேலும், உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தான் ஏற்படுத்திய அசுத்தங்களை உங்களை விட்டு அகற்றுவதற்காகவும், உங்கள் இதயங்களை வலுப்படுத்துவதற்காகவும், அதன் மூலம் உங்கள் பாதங்களை நிலைப்படுத்துவதற்காகவும் வானத்திலிருந்து உங்கள் மீது மழையையும் பொழியச் செய்தான். </span>
<span>8:12 இதனையும் நினைவுகூருங்கள்: உம் இறைவன் வானவர்களிடம் அறிவித்துக் கொண்டிருந்தான்: “நிச்சயமாக நான் உங்களோடு இருக்கின்றேன். எனவே நம்பிக்கையாளர்களை நீங்கள் உறுதியாக இருக்கச் செய்யுங்கள்! இதோ! நிராகரிப் பாளர்களின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தி விடுகின்றேன். எனவே, நீங்கள் அவர்களுடைய பிடரிகளில் தாக்குங்கள்; அவர்களின் ஒவ்வொரு விரல் மூட்டுகளிலும் அடியுங்கள்!”</span>
<span>8:13 இதற்குக் காரணம், அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் எதிர்த்துக் கொண்டிருந்ததுதான்! மேலும், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் யார் எதிர்க்கின்றார்களோ (அவர்களை) நிச்சயமாக அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவனாய் இருக்கின்றான். </span>
<span>8:14 “இதுதான் உங்களுக்குரிய தண்டனை. இப்பொழுது இதனைச் சுவையுங்கள்!” மேலும், சத்தியத்தை நிராகரிப்பவர்களுக்குத் திண்ணமாக நரக வேதனை இருக்கிறது (என்பதனை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்). </span>
<span>8:15 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் படையாகத் திரண்டு சென்று இறைநிராகரிப்பாளர்களுடன் போரிட நேர்ந்தால், அவர்களுக்குப் புறமுதுகு காட்டி ஓடாதீர்கள்! </span>
<span>8:16 அந்நாளில் யாரேனும் புறமுதுகு காட்டி ஓடினால் போர்த் தந்திரத்திற்காகவோ, வேறொரு படையுடன் சேர்ந்து கொள்வதற்காகவோ செல்பவரைத் தவிர மற்றவர்கள் திண்ணமாக அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிவிடுவர். மேலும், அவர்களுடைய புகலிடம் நரகமாகும். அது மோசமான இருப்பிடமாகும். </span>
<span>8:17 உண்மை யாதெனில், நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை; அல்லாஹ்தான் அவர்களைக் கொன்றான்! மேலும் (நபியே!) நீர் எறிந்தபோது உண்மையில் எறிந்தது நீரல்லர். மாறாக, அல்லாஹ்தான் எறிந்தான். மேலும், (இறை நம்பிக்கையாளர்களை இதில் பங்கேற்கச் செய்தது எதற்காகவெனில், அல்லாஹ் நம்பிக்கையாளர்களை நன்மை தரக்கூடிய சோதனையில் ஆழ்த்தி வெற்றியடையச் செய்ய வேண்டும் என்பதற்காக! திண்ணமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>8:18 இது உங்கள் விஷயத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலையாகும். ஆனால் நிராகரிப்பாளர் (களின் நிலை யாதெனில் அவர்)களின் சதித்திட்டங்களைத் திண்ணமாக, அல்லாஹ் பலவீனப்படுத்தக்கூடியவனாய் இருக்கின்றான். </span>
<span>8:19 (இந்நிராகரிப்பாளர்களிடம் நீர் கூறுவீராக) “நீங்கள் ஒரு முடிவை விரும்புகின்றீர்கள் என்றால், இதோ! அந்த முடிவு உங்கள் முன் வந்துவிட்டது. இனி நீங்கள் தவறான போக்கைத் தவிர்த்துக் கொண்டால், அது உங்களுக்கு நல்லதாகும். (அறிவற்ற இதே செயலின் பக்கம்) நீங்கள் மீண்டும் திரும்பினால், நாமும் மீண்டும் தண்டிப்போம். உங்களுடைய கூட்டம் எவ்வளவு அதிகமாயினும் சரியே, அது உங்களுக்கு யாதொரு பலனையும் அளிக்காது. திண்ணமாக, அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கின்றான்.”</span>
<span>8:20 இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்! மேலும் (கட்டளையைச்) செவியேற்ற பின் அதைப் புறக்கணிக்காதீர்கள்;</span>
<span>8:21 மேலும், செவியேற்காமல் இருந்து கொண்டு “நாங்கள் செவியேற்றோம்” என்று கூறியவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்! </span>
<span>8:22 திண்ணமாக சிந்தித்து உணராத செவிடர்களும், ஊமையர்களும்தான் அல்லாஹ்விடத்தில் மிகவும் இழிவான விலங்குகளாவர். </span>
<span>8:23 அவர்களிடம் கொஞ்சமேனும் நல்லியல்பு இருப்பதாக அல்லாஹ் அறிந்திருந்தால், நிச்சயம் அவர்களுக்குச் செவியுறும் பேற்றினை அருளியிருப்பான். ஆனால் (நல்லியல்பற்றவர்களாய் இருந்தும்) அவன் அவர்களைச் செவியேற்கச் செய்திருந்தால் புறக்கணித்தவர்களாய் முகம் திருப்பிக் கொண்டு போயிருப்பார்கள்!</span>
<span>8:24 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு வாழ்வு அளிக்கக்கூடியதன் பக்கம் இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரைந்து பதில் அளியுங்கள்! அல்லாஹ், மனிதனையும் அவனது உள்ளத்தையும் சூழ்ந்து நிற்கின்றான் என்பதையும், திண்ணமாக அவனிடமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். </span>
<span>8:25 மேலும் எந்த ஃபித்னாவின் குழப்பத்தின் தீய விளைவு உங்களில் பாவம் புரிந்தவர்களைத் தாக்குவதுடன் மட்டும் நின்றுவிடாதோ அந்தக் குழப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்! மேலும், திண்ணமாக அல்லாஹ் கடுமையாக தண்டனை அளிப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! </span>
<span>8:26 மேலும், இந்த சந்தர்ப்பத்தை நினைத்துப் பாருங்கள்: நீங்கள் சிறுபான்மையோராய் இருந்தீர்கள்; பூமியில் வலிமையற்றவர்களாய்க் கருதப்பட்டீர்கள்; பிற மக்கள் உங்களை இறாஞ்சிச் சென்று விடுவார்களோ என்று நீங்கள் அஞ்சிக் கொண்டிருந்தீர்கள். அப்போது, அல்லாஹ் உங்களுக்கு தஞ்சம் அளித்தான். தனது உதவியின் மூலம் உங்களுடைய கைகளை வலுப்படுத்தினான். மேலும், அவன் நல்ல பொருள்களிலிருந்து உங்களுக்கு உணவு வழங்கினான்; நீங்கள் நன்றி செலுத்தக் கூடும் என்பதற்காக! </span>
<span>8:27 நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் (அறிந்தும் புரிந்தும்) வஞ்சனை செய்யாதீர்கள்; அறிந்து கொண்டே உங்களுடைய அமானிதங்களில் நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள். </span>
<span>8:28 உங்கள் செல்வங்களும் உங்கள் பிள்ளைகளும் உண்மையில் சோதனைப் பொருள்களே என்பதையும், திண்ணமாக அல்லாஹ்விடம் மகத்தான கூலி இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! </span>
<span>8:29 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழ்ந்தீர்களாயின் உங்களுக்கு (சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக்காட்டக்கூடிய) “உரைகல்லை” வழங்குவான். மேலும், உங்களுடைய தீமைகளை உங்களை விட்டு நீக்கி விடுவான். மேலும், உங்களை மன்னித்து விடுவான். அல்லாஹ் மாபெரும் அருளுடையவனாக இருக்கின்றான். </span>
<span>8:30 மேலும், இந்த நேரத்தையும் நினைவுகூருங்கள்: சத்தியத்தை நிராகரித்தவர்கள் உமக்கு எதிராக சதித் திட்டங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்; உம்மைக் கைது செய்ய வேண்டும் அல்லது உம்மைக் கொலை செய்ய வேண்டும் அல்லது நாடு கடத்த வேண்டும் என்பதற்காக! (இவ்வாறாக) அவர்கள் தங்களுடைய சூழ்ச்சியைச் செய்துகொண்டிருந்தார்கள்; மேலும், அல்லாஹ் தன்னுடைய சூழ்ச்சியைச் செய்துகொண்டிருந்தான். இன்னும் அல்லாஹ் சூழ்ச்சி செய்வோரில் அனைவரையும்விடச் சிறந்தவனாய் இருக்கின்றான். </span>
<span>8:31 மேலும், நம் வசனங்கள் அவர்கள் முன் ஓதிக் காண்பிக்கப்படும்போது கூறுவார்கள்: “நாங்கள் கேட்டுக் கொண்டோம்; நாங்கள் நினைத்தால் இதைப் போன்று நாங்களும் உருவாக்கிக் கூறமுடியும்! இவையெல்லாம் முன்னோர்கள் கூறிவரும் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை.” </span>
<span>8:32 மேலும், அவர்கள் இவ்வாறு கூறியதை நினைத்துப் பாரும்: “இறைவனே! இது உன்னிடமிருந்து அருளப்பட்ட சத்தியம் என்பது உண்மையாயின், எங்கள் மீது வானத்திலிருந்து கல்மாரி பொழிந்து விடு; அல்லது துன்புறுத்தும் வேதனையை எங்களுக்குக் கொண்டுவா!” </span>
<span>8:33 ஆனால் நீர் அவர்களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர்கள்மீது வேதனையை இறக்குபவனாக இல்லை. மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் மீது வேதனையை இறக்கிவிடுவது அல்லாஹ்வின் நியதியல்ல. </span>
<span>8:34 அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமுக்கு (முறையான) நிர்வாகிகளாக இல்லாத நிலையில் (மக்களை) அங்குச் செல்லவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அல்லாஹ் அவர்களை வேதனைக்கு உள்ளாக்காமல் இருப்பதற்கு அவர்களிடம் என்ன காரணம் உள்ளது? இறையச்சமுள்ளவர்கள் மட்டுமே அதன் (முறையான) நிர்வாகிகளாய் ஆக முடியும்! எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிய மாட்டார்கள். </span>
<span>8:35 கஅபா ஆலயத்தில் அவர்களுடைய தொழுகை, சீட்டி அடிப்பதும் கை தட்டுவதுமே அன்றி வேறில்லை! எனவே, “நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் (இப்போது) வேதனையைச் சுவையுங்கள்!” </span>
<span>8:36 சத்தியத்தை மறுத்தவர்கள், அல்லாஹ்வின் வழியில் செல்ல விடாமல் (மக்களைத்) தடுப்பதற்காகத் தங்களுடைய பொருள்களைச் செலவழிக்கின்றார்கள். மென்மேலும் செலவழித்துக் கொண்டேயிருப்பார்கள். ஆனால் இறுதியில், இந்தச் செயல்களே அவர்கள் வருந்துவதற்குக் காரணமாய் அமைந்துவிடும். பிறகு அவர்கள் தோல்வி அடைவார்கள். மேலும், இந்நிராகரிப்பாளர்கள் நரகின் பக்கமே ஒன்று சேர்க்கப்படுவார்கள்; </span>
<span>8:37 எதற்காகவெனில், அல்லாஹ் தூய்மையானதிலிருந்து தூய்மையற்றதைப் பிரித்தெடுத்து, தூய்மையற்ற ஒவ்வொன்றையும் ஒன்று சேர்த்து, பிறகு அந்தக் குவியலை நரகத்தில் வீசி எறிவதற்காக! இத்தகையோர் தாம் முற்றிலும் இழப்புக்குரியவர்களாவர். </span>
<span>8:38 (நபியே!) இந்நிராகரிப்பாளர்களிடம் நீர் கூறும்: “(இப்போதேனும் அசத்தியப் போக்கிலிருந்து) அவர்கள் விலகிக் கொள்வார்களாயின், முன்பு செய்த குற்றங்கள் யாவும் மன்னிக்கப்படும். ஆனால், (பழைய போக்கிற்கு) அவர்கள் மீண்டும் திரும்புவார்களாயின் முற்கால மக்கள் என்ன கதிக்கு ஆளானார்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே!”</span>
<span>8:39 (இறைநம்பிக்கை கொண்டவர்களே!) குழப்பம் இல்லாதொழிந்து தீன் முழுவதும் அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும் வரை நீங்கள் இந்நிராகரிப்பாளர்களுடன் போர் புரியுங்கள்! பிறகு, அவர்கள் (அதிலிருந்து) விலகிக்கொண்டால் அவர்களுடைய செயல்களைத் திண்ணமாக அல்லாஹ் உற்று நோக்குபவனாக இருக்கின்றான். </span>
<span>8:40 மேலும், அவர்கள் (ஏற்றுக் கொள்ளாமல்) புறக்கணித்தால், அல்லாஹ் உங்கள் பாதுகாவலனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அவன் சிறந்த பாதுகாவலனும், சிறந்த முறையில் உதவி புரிபவனும் ஆவான். </span>
<span>8:41 மேலும், நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்! போரில் ஏதேனும் பொருள்களை நீங்கள் பெற்றால் அவற்றில் ஐந்திலொரு பாகம், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உறவினர்களுக்கும் அநாதைகளுக்கும் வறியவர்களுக்கும் பயணிகளுக்கும் உரியதாகும். நீங்கள் அல்லாஹ்வின் மீதும் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில், அதாவது (பத்ரு போரின்போது) இரு படைகளும் மோதிக் கொண்ட நாளில் நம் அடியாருக்கு நாம் இறக்கியருளியதன் மீதும் நம்பிக்கை கொள்பவர்களாயிருந்தால் (இந்தப் பாகத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றி விடுங்கள்!) அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாய் இருக்கின்றான். </span>
<span>8:42 நீங்கள் (பள்ளத்தாக்கிலிருந்து) மிக நெருங்கிய பகுதியிலும் அவர்கள் மிகத் தொலைவான பகுதியிலும் (தளம் அமைத்து) இருந்ததையும், மேலும் பயணக் கூட்டம் உங்களுக்குக் கீழே (கடற்கரை ஓரமாக) இருந்ததையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள்! (முன்னரே) நீங்களும் அவர்களும் (எங்காவது குறிப்பிட்ட இடத்தில் போர் செய்வதென) முடிவு செய்திருப்பீர்களாயின் அப்போது அந்த முடிவிலிருந்து நிச்சயம் நீங்கள் நழுவிச் சென்றிருப்பீர்கள். ஆயினும், தீர்மானிக்கப்பட்டிருந்த விஷயத்தை அல்லாஹ் நிறைவேற்றிட வேண்டும் என்பதற்காக (இவ்வாறெல்லாம் நிகழ்ந்தன). ஏனெனில், அழிய வேண்டியவன் தக்க காரணத்துடன் அழிய வேண்டும்; மேலும், உயிர்வாழ வேண்டியவன் தக்க காரணத்துடன் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக! மேலும், திண்ணமாக அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவனும் நன்கறிபவனுமாவான். </span>
<span>8:43 (நபியே!) அல்லாஹ் உம்முடைய கனவில் அவர்களின் எண்ணிக்கையை குறைவாய்க் காண்பித்ததை நீர் நினைத்துப் பாரும். அவன் உமக்கு அவர்களுடைய எண்ணிக்கையை அதிகமாய்க் காண்பித்திருந்தால், நிச்சயம் நீங்கள் ஊக்கம் குன்றியிருப்பீர்கள்; மேலும், போர் விஷயத்தில் ஒருவருக்கொருவர் பிணங்கியிருப்பீர்கள். எனினும், அல்லாஹ்தான் (உங்களை இதிலிருந்து) காத்தருளினான். திண்ணமாக, அவன் நெஞ்சங்களில் மறைந்திருப்பவற்றைக்கூட நன்கறிந்தவனாய் இருக்கின்றான். </span>
<span>8:44 மேலும், இதனையும் நினைத்துப்பாருங்கள்: நீங்கள் போரிட்டபோது அவன், உங்களுடைய கண்களுக்கு அவர்களின் எண்ணிக்கையைக் குறைவாகவும், அவர்களுடைய கண்களுக்கு உங்களுடைய எண்ணிக்கையைக் குறைவாகவும் காண்பித்தான்; எதற்காகவெனில், நிகழ வேண்டிய செயலை அல்லாஹ் வெளிப்படுத்திட வேண்டும் என்பதற்காக! (இறுதியில்) விவகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்விடமே திரும்பக்கொண்டு வரப்பட இருக்கின்றன. </span>
<span>8:45 இறைநம்பிக்கை கொண்டவர்களே! ஏதேனும் ஒரு குழுவினரோடு நீங்கள் போரிடும்போது நிலைகுலையாமல் இருங்கள்! மேலும், அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருங்கள்! நீங்கள் வெற்றி அடையலாம். </span>
<span>8:46 மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொள்ளாதீர்கள்! அவ்வாறு செய்தால் உங்களிடையே பலவீனம் தோன்றிவிடும். மேலும், உங்கள் மதிப்பும் வலிமையும் அழிந்து போய்விடும். ஆகவே பொறுமையை மேற்கொள்ளுங்கள். திண்ணமாக, அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். </span>
<span>8:47 மேலும், இறுமாப்புடனும் (தன் மதிப்பை) பிற மக்களுக்குக் காட்டும் வகையிலும் தங்களுடைய இல்லங்களிலிருந்து எவர்கள் வெளியேறினார்களோ, மேலும் அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாமல் (மக்களைத்) தடுக்கின்றார்களோ அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்! அல்லாஹ் அவர்கள் செய்பவை அனைத்தையும் சூழ்ந்தறிபவனாய் இருக்கின்றான். </span>
<span>8:48 மேலும், இதையும் நினைத்துப்பாருங்கள்: ஷைத்தான் அவர்களுடைய (தீய) செயல்களை அவர்களின் பார்வையில் அழகாக்கிக் காட்டினான். மேலும், “இன்று மக்களில் எவரும் உங்களை வென்றிட முடியாது. நான் உங்களுக்கு உறுதுணையாய் இருக்கின்றேன்” என்றும் அவர்களிடம் கூறினான். ஆயினும் இரு படைகளும் மோதிக்கொண்டபோது அவன் புறங்காட்டித் திரும்பிச் சென்றுவிட்டான். மேலும், அவன் கூறினான்: “நான் உங்களை விட்டு விலகிக் கொண்டேன். நீங்கள் பார்க்காதவற்றை நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். நான் அல்லாஹ்வைக் குறித்து அஞ்சுகின்றேன். மேலும், அல்லாஹ் தண்டனை அளிப்பதில் மிகக் கடுமையானவன்.” </span>
<span>8:49 இதனையும் நினைத்துப் பாருங்கள்: நயவஞ்சகர்களும், எவர்கள் உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களும் “இவர்களுடைய மார்க்கம் இவர்களை மயக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது” என்று கூறினார்கள். உண்மை யாதெனில், எவரேனும் அல்லாஹ்வை முழுதும் சார்ந்து வாழ்வாரானால் (அல்லாஹ் அவருக்குப் போதுமானவன் ஆவான்.) திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்!</span>
<span>8:50 (வீழ்த்தப்பட்ட) நிராகரிப்பாளர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றிக் கொண்டிருந்ததை நீர் கண்டிருக்க வேண்டுமே! அந்த வானவர்கள் அவர்களின் முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கொண்டிருந்தார்கள். மேலும், (அவர்களிடம்) கூறிக் கொண்டிருந்தார்கள்: “இதோ, சுட்டுப் பொசுக்குகின்ற தண்டனையைச் சுவையுங்கள்! </span>
<span>8:51 உங்கள் கைகள் முன்பே சம்பாதித்த செயல்களினால் விளைந்த தண்டனைதான் இது! திண்ணமாக அல்லாஹ் தன்னுடைய அடிமைகளுக்கு அநீதி இழைப்பவன் அல்லன்.” </span>
<span>8:52 இவர்களுக்கு நேர்ந்த கதி ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாருக்கும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களுக்கும் நேர்ந்தது போன்றதாகும். அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். ஆகையால், அவர்களுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். திண்ணமாக, அல்லாஹ் மிக்க வலிமையுடையவனாகவும் கடும் தண்டனை அளிப்பவனாகவும் இருக்கின்றான். </span>
<span>8:53 ‘எந்தச் சமுதாயத்தாரும் தங்களின் நடை முறையை மாற்றிக் கொள்ளாதவரை நிச்சயமாக அல்லாஹ்வும் அவர்களுக்குப் புரிந்த எந்த ஓர் அருட் கொடையையும் மாற்றுவதில்லை’ எனும் அல்லாஹ்வின் நியதிக்கேற்பவே இது நடைபெற்றது. அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>8:54 ஃபிர்அவ்னின் கூட்டத்தாருக்கும் அவர்களுக்கு முன் சென்றவர்களுக்கும் நேர்ந்த கதி இந்த நியதியின்படியே ஏற்பட்டது. தங்களுடைய இறைவனின் சான்றுகளை அவர்கள் பொய்யெனக் கூறினார்கள். அப்போது, அவர்கள் செய்த பாவச் செயல்களின் காரணமாக அவர்களை நாம் அழித்தோம். இன்னும், ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை நாம் மூழ்கடித்தோம். ஏனெனில், அவர்கள் அனைவரும் கொடுமை இழைப்பவர்களாய் இருந்தார்கள். </span>
<span>8:55 திண்ணமாக, எவர்கள் சத்தியத்தை நிராகரித்தார்களோ, பிறகு (எவ்விதத்திலும்) அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராய் இல்லையோ அவர்கள்தாம் பூமியில் நடமாடும் படைப்புகளிலேயே அல்லாஹ்விடத்தில் மிகவும் மோசமானவர்கள். </span>
<span>8:56 (குறிப்பாக) உம்மோடு ஒப்பந்தம் செய்து கொண்டு பின்னர் ஒவ்வொரு முறையும் தங்களுடைய ஒப்பந்தத்தை எவர்கள் முறிக்கின்றார்களோ, மேலும் கொஞ்சமும் இறையச்சம் கொள்ளாதிருக்கின்றார்களோ அவர்கள்தாம் இவர்களில் மிகவும் கெட்டவர்களாவர். </span>
<span>8:57 எனவே, போரில் அவர்களை நீர் சந்தித்தால் அவர்களைச் சின்னாபின்னமாய்ச் சிதற அடித்து அவர்களுக்குப் பின்வருவோரைத் திகிலடையச் செய்திட வேண்டும். (உடன்படிக்கையை மீறுவதால் ஏற்படும் தீய கதியினைக் கண்டு) அவர்கள் படிப்பினை பெறக்கூடும். </span>
<span>8:58 (உடன்படிக்கை செய்து கொண்டு) ஏதாவது ஒரு கூட்டத்தினர் உம்மிடம் நம்பிக்கைத் துரோகமாக நடந்து கொள்வார்களோ என்று நீர் அஞ்சினால் (அவர்களின் உடன்படிக்கையை) வெளிப்படையாக அவர்களிடமே எறிந்து விடும்! திண்ணமாக, அல்லாஹ் நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களை நேசிப்பதில்லை. </span>
<span>8:59 மேலும், இறைமறுப்பாளர்கள், தாம் தப்பித்து விட்டதாக எண்ணிக்கொண்டிருக்க வேண்டாம். திண்ணமாக, அவர்கள் நம்மை இயலாமையில் ஆழ்த்திட முடியாது. </span>
<span>8:60 மேலும், அவர்களை எதிர்ப்பதற்கென உங்களால் முடிந்த அளவு அதிகமான வலிமையையும் தயார்நிலையிலுள்ள குதிரைப் படையையும் திரட்டி வையுங்கள்! இவற்றின் மூலம் அல்லாஹ்வுக்கும், உங்களுக்கும் பகைவர்களாய் உள்ளவர்களையும் இவர்கள் அல்லாத வேறு பகைவர்களையும் நீங்கள் திகிலடையச் செய்திட வேண்டும். அந்தப் பகைவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள். ஆனால் அல்லாஹ் அவர்களை அறிவான். மேலும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எதனைச் செலவு செய்தாலும் அதற்குரிய முழுமையான கூலி உங்களுக்கு வழங்கப்படும். மேலும், நீங்கள் ஒருபோதும் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள். </span>
<span>8:61 (நபியே!) பகைவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்தால், நீரும் அதற்குத் தயாராகிவிடும். இன்னும், அல்லாஹ்வையே முழுவதும் சார்ந்திருப்பீராக! திண்ணமாக, அவன் யாவற்றையும் செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>8:62 அவர்கள் உம்மை ஏமாற்ற முனைந்தால் அல்லாஹ் உமக்குப் போதுமானவனாக இருக்கின்றான். தன்னுடைய உதவியினாலும் இறைநம்பிக்கையாளர் மூலமாகவும் உமக்கு வலுவூட்டியவனும் அவனே. </span>
<span>8:63 அவர்களுக்கிடையே உளப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தியவனும் அவனே! உலகத்திலுள்ள பொருள்கள் அனைத்தையும் நீர் செலவழித்தாலும் அவர்களிடையே உளப்பூர்வமான இணைப்பை உம்மால் ஏற்படுத்தியிருக்க முடியாது. ஆயினும், அல்லாஹ் அவர்களின் உள்ளங்களைப் பிணைத்தான். திண்ணமாக, அவன் வலிமைமிக்கவனும் நுண்ணறிவாளனுமாவான். </span>
<span>8:64 நபியே! உமக்கும், உம்மைப் பின்பற்றுகின்ற இறைநம்பிக்கையாளர்களுக்கும் அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான். </span>
<span>8:65 நபியே! போர்புரிவதில் இறைநம்பிக்கையாளர்களுக்கு ஆர்வமூட்டுவீராக! உங்களில் நிலைகுலையாத இருபது பேர் இருப்பின் (இறைமறுப்பாளர்களில்) இருநூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள். மேலும், இத்தகையோர் உங்களில் நூறுபேர் இருந்தால், இறை மறுப்பாளர்களில் ஓராயிரம் பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்; ஏனெனில், இவர்கள் புரிந்துகொள்ளாத மக்களாக இருக்கின்றார்கள். </span>
<span>8:66 இப்போது அல்லாஹ் உங்கள் சுமையைக் குறைத்துவிட்டான். இப்பொழுதும் உங்களிடம் பலவீனம் இருப்பதை அவன் அறிவான். எனவே, உங்களில் நூறு பேர் உறுதி குலையாதவர்களாய் இருந்தால், இருநூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள். அத்தகையோர் உங்களில் ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு இரண்டாயிரம் பேரை அவர்கள் வென்று விடுவார்கள். மேலும், அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். </span>
<span>8:67 பூமியில் பகைவர்களை முற்றிலும் முறியடிக்காத வரையில் அவர்களைச் சிறைப்பிடிப்ப(தில் ஈடுபடுவ)து எந்த நபிக்கும் உகந்ததல்ல. நீங்கள் உலக ஆதாயங்களை விரும்புகிறீர்கள். ஆனால், அல்லாஹ் (உங்களுக்கு) மறுமை நலன்களை விரும்புகின்றான். மேலும், அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>8:68 அல்லாஹ்வின் தீர்ப்பு முன்னரே எழுதப்படாமல் இருந்தால், நீங்கள் (கைதிகளிடமிருந்து) பெற்றுக் கொண்டவற்றுக்குப் பகரமாக உங்களுக்குக் கடும் தண்டனை வழங்கப்பட்டிருக்கும். </span>
<span>8:69 எனவே, நீங்கள் போரில் கைப்பற்றிய பொருள்களை உண்ணுங்கள்; அவை அனுமதிக்கப்பட்டவையும் தூய்மையானவையுமாகும். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழ்ந்து வாருங்கள்! திண்ணமாக அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான். </span>
<span>8:70 நபியே! உங்கள் கைவசத்திலுள்ள கைதிகளிடம் நீர் கூறும்: “உங்கள் உள்ளங்களில் (சிறிதளவாவது) நன்மை இருப்பதாக அல்லாஹ் அறிவானாகில், உங்களிட மிருந்து வாங்கப்பட்டதை விடவும் சிறப்பானதை அவன் உங்களுக்கு வழங்குவான். உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். மேலும், அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான்.” </span>
<span>8:71 ஆயினும், அவர்கள் உமக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ய நினைத்தால் இதற்கு முன் அவர்கள் அல்லாஹ்வுக்கே நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்கள். அதனால்தான் அல்லாஹ் உம்மைக் கொண்டு அவர்களைக் கைது செய்யவைத் தான் அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>8:72 எவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் ஹிஜ்ரத் செய்து (நாட்டைத் துறந்து சென்று) அல்லாஹ்வின் வழியில் தங்களின் உயிர்களாலும் உடைமைகளாலும் போர் புரிகின்றார்களோ அவர்களும், எவர்கள் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கு) தஞ்சம் அளித்து உதவியும் புரிந்தார்களோ அவர்களும் உண்மையில் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களாய் இருக்கின்றார்கள். ஆனால் எவர்கள் நம்பிக்கை கொண்ட பின்பும் (தாருல் இஸ்லாமிற்கு) ஹிஜ்ரத் செய்யவில்லையோ, அவர்களுடைய எந்த விஷயத்திற்கும் நீங்கள் பொறுப்பாளர்கள் அல்லர்; அவர்கள் ஹிஜ்ரத் செய்யும் வரையில்! ஆயினும் மார்க்க விவகாரங்களில் உங்களிடம் அவர்கள் உதவிகோரினால் அவர்களுக்கு உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும். ஆனால், (இந்த உதவிகூட) உங்களோடு உடன்படிக்கை செய்துள்ள கூட்டத்தாருக்கு எதிரானதாக இருக்கக்கூடாது. நீங்கள் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான். </span>
<span>8:73 சத்தியத்தை நிராகரித்துக் கொண்டிருப்போர் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களாய் இருக்கின்றார்கள். எனவே, நீங்கள் இவ்வாறு செய்யாவிடில் பூமியில் குழப்பமும் பெரும் சீர்குலைவும் ஏற்பட்டுவிடும். </span>
<span>8:74 மேலும், எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, மேலும் ஹிஜ்ரத் செய்து அல்லாஹ்வின் வழியில் போராடினார்களோ அவர்களும், எவர்கள் தஞ்சம் அளித்து உதவி புரிந்தார்களோ அவர்களும்தாம் உண்மையான இறைநம்பிக்கையாளர்களாவர். அவர்களுக்குப் பாவமன்னிப்பு இருக்கிறது. மேலும் நற்பேறுகளும் இருக்கின்றன. </span>
<span>8:75 மேலும் அவர்களுக்குப் பின்னர் எவர்கள் நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்து, மேலும் உங்களுடன் சேர்ந்து போராடினார்களோ, அவர்களும் உங்களைச் சேர்ந்தவர்கள்தாம். ஆயினும், அல்லாஹ்வின் வேதப்படி, இரத்தபந்தமுடையவர்கள்தாம் ஒருவர் மற்றொருவருக்கு உதவுவதில் அதிக உரிமையுடையவர்களாவர். திண்ணமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். </span>
</div><div>
<span>அத்தவ்பா</span>
<span>9:1 நீங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள இணைவைப்பாளர்களுக்கு, அவர்களை விட்டு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர் என்று விடுக்கப்படும் அறிவிப்பாகும் இது.  </span>
<span>9:2 எனவே, (இணை வைப்பாளரான) நீங்கள் நான்கு மாதங்களுக்கு பூமியில் நடமாடிக் கொள்ளுங்கள்; மேலும் திண்ணமாக நீங்கள் அல்லாஹ்வை தோல்வியுறச் செய்ய முடியாது என்பதையும், சத்தியத்தை நிராகரிப்பவர்களை நிச்சயம் அல்லாஹ் இழிவுபடுத்துவான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!</span>
<span>9:3 மேலும், மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் சார்பில் எல்லா மக்களுக்கும் விடுக்கப்படும் பொது அறிவிப்பு என்னவெனில், இறைவனுக்கு இணைவைப்பவர்களை விட்டு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் திண்ணமாக விலகி விட்டார்கள். ஆகவே, நீங்கள் பாவமன்னிப்புத் தேடி மீளுவீர்களாயின் அது உங்களுக்கு நன்மை பயக்கும். நீங்கள் புறக்கணித்தால், அல்லாஹ்வை நீங்கள் தோல்வியுறச் செய்ய முடியாது என்பதை நன்கறிந்து கொள்ளுங்கள். மேலும், (நபியே!) கடுமையான வேதனை உண்டெனும் நற்செய்தியை இறைமறுப்பாளர்களுக்கு அறிவிப்பீராக! </span> 
<span>9:4 ஆனால் இணைவைப்பாளர்களில் எவர்களுடன் உங்களுக்கு உடன்படிக்கை ஏற்பட்டு, பின்னர் அவர்கள் (தமது வாக்குறுதியை நிறைவேற்றுவதில்) உங்களிடம் எந்தக் குறைபாடும் செய்யாமலும், உங்களுக்கு எதிராக எவருக்கும் உதவாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. அத்தகையவர்களின் உடன்படிக்கையை உரிய தவணை வரை நிறைவாக்குங்கள்! ஏனெனில், திண்ணமாக அல்லாஹ் இறையச்சம் உடையோரையே நேசிக்கின்றான். </span>
<span>9:5 எனவே, சங்கைக்குரிய மாதங்கள் கழிந்துவிட்டால், இறைவனுக்கு இணைவைப்போரை நீங்கள் எங்கு கண்டாலும் கொன்று விடுங்கள்! மேலும், அவர்களைச் சிறைப்பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள்! மேலும், எல்லா இடங்களிலிருந்தும் அவர்களைக் கண்காணியுங்கள். பிறகு, அவர்கள் பாவமன்னிப்புக் கோரி, தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தையும் கொடுத்தால் அவர்களை விட்டுவிடுங்கள்! திண்ணமாக, அல்லாஹ் அதிகம் மன்னிப்பவனாகவும் பெரிதும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>9:6 இணைவைப்பாளர்களில் எவரேனும் அடைக்கலம் கோரி உம்மிடம் (அல்லாஹ்வின் வேதத்தைச் செவியுறுவதற்காக) வந்தால், அப்பொழுது அல்லாஹ்வின் வேதத்தை அவர் செவியுறும் வரையில் அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பிறகு அவரை அவருடைய பாதுகாப்பிடத்தில் சேர்த்து விடுவீராக! இவ்வாறு ஏன் செய்ய வேண்டும் எனில், திண்ணமாக அவர்கள் அறியாத சமூகத்தினராய் இருக்கின்றனர். </span>
<span>9:7 அல்லாஹ்விடத்திலும் அவனுடைய தூதரிடத்திலும் இந்த இணைவைப்பாளர்களின் உடன்படிக்கைக்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியும்? ஆனால் மஸ்ஜிதுல் ஹராமுக்கு அருகில் யாருடன் நீங்கள் உடன்படிக்கை செய்திருந்தீர்களோ அவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. அவர்கள் உங்களோடு நேர்மையுடன் நடந்து கொள்ளும் வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாய் நடந்துகொள்ளுங்கள்! ஏனென்றால், அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களை விரும்புகின்றான் . </span>
<span>9:8 (அவர்களைத் தவிர மற்ற இணைவைப்பாளர்களிடம்) எவ்வாறு உடன்படிக்கை வைத்துக்கொள்ள முடியும்? அவர்கள் (இப்படித்தான் நடந்து கொள்கின்றனர்.) உங்களை வெற்றிகொண்டு விட்டால் உங்கள் விஷயத்தில் எந்த உறவுமுறையையும் பார்ப்பதில்லை; மேலும் ஒப்பந்தத்தின் எந்தப் பொறுப்பையும் மதிப்பதில்லை. தங்களுடைய வாய்ப்பேச்சுகளால் உங்களைத் திருப்திப்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால், அவர்களின் உள்ளங்கள் அவற்றை மறுக்கின்றன. மேலும், அவர்களில் பெரும்பாலோர் தீயவர்களாவர். </span>
<span>9:9 அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்றார்கள். பின்னர் அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாமல் (மக்களைத்) தடுத்தார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்கள் எத்துணைக் கெட்டவை! </span>
<span>9:10 இறைநம்பிக்கையாளனின் விஷயத்தில் எந்த உறவுமுறையையும் பார்ப்பதில்லை; ஒப்பந்தத்தின் எந்தப் பொறுப்பையும் அவர்கள் மதிப்பதில்லை. மேலும், இத்தகையவர்கள்தாம் எப்போதும் வரம்பு மீறுபவர்களாய் இருக்கின்றனர். </span>
<span>9:11 ஆயினும், இவர்கள் பாவமீட்சி பெற்று தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தையும் கொடுத்தால், தீனில் மார்க்கத்தில் இவர்கள் உங்கள் சகோதரர்களாவர். மேலும், அறியக்கூடிய சமூகத்தாருக்கு நம்முடைய கட்டளைகளை நாம் நன்கு விளக்கிக் கூறுகின்றோம். </span>
<span>9:12  உடன்படிக்கை செய்துகொண்ட பிறகு இவர்கள் தங்களுடைய சத்தியங்களை முறித்து விட்டு உங்களுடைய மார்க்கத்தைத் தாக்க முற்பட்டால், இறைநிராகரிப்பின் தலைவர்களோடு போர் புரியுங்கள்! ஏனென்றால், அவர்களுடைய சத்தியங்களுக்கு எவ்வித மதிப்பு மில்லை. அவர்கள் (பின்னர் வாளுக்கு அஞ்சியேனும் இத்தகைய விஷமத்தனங்களிலிருந்து) விலகியிருக்கக்கூடும். </span>
<span>9:13 எவர்கள் தங்கள் உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டே இருக்கின்றார்களோ, மேலும், எவர்கள் இறைத்தூதரை நாட்டைவிட்டு வெளியேற்ற முடிவு செய்திருந்தார்களோ அக்கிரமம் செய்யத் தொடங்கியது முதலில் அவர்களாகவே இருந்தும் அத்தகைய மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்களுக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்? நீங்கள் நம்பிக்கையுடையவர்களாயின் நீங்கள் அஞ்சுவதற்கு மிகவும் தகுதியுள்ளவன் அல்லாஹ்வே ஆவான். </span>
<span>9:14 நீங்கள் அவர்களோடு போர் புரியுங்கள்; அல்லாஹ் உங்களுடைய கைகளால் அவர்களுக்குத் தண்டனை அளிக்கச் செய்வான். மேலும், அவர்களை இழிவுபடுத்துவான். இன்னும் நீங்கள் அவர்களை வென்றிட உங்களுக்கு உதவி புரிவான். மேலும், நம்பிக்கை கொண்ட மக்களின் இதயங்களைக் குளிரச் செய்வான்;</span>
<span>9:15 மேலும், அவர்களுடைய உள்ளங்களிலிருந்து கடுஞ்சினத்தையும் அகற்றிவிடுவான். மேலும், தான் நாடுகின்றவர்களுக்கு பாவமீட்சி பெறுவதற்கான பேற்றை அருள்வான். அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனும், நுண்ணறிவாளனுமாய் இருக்கின்றான். </span>
<span>9:16 உங்களில் (இறைவழியில்) உயிர்த்தியாகம் செய்தவர்கள் யார், இன்னும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், இறைநம்பிக்கையாளர்களையும் விடுத்து வேறெவரையும் அந்தரங்க நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதவர்கள் யார் என அல்லாஹ் இன்னும் வேறுபடுத்தி அறிந்திடாத நிலையில் நீங்கள் வெறுமனே விடப்பட்டு விடுவீர்கள் என்று நினைத்துக்கொண்டீர்களா? நீங்கள் செய்வதனைத்தையும் அல்லாஹ் நன்கு தெரிந்தே இருக்கின்றான். </span>
<span>9:17 தாங்கள் நிராகரிப்பாளர்கள் என்பதற்குத் தாங்களே சான்று வழங்கிக் கொண்டிருக்கும் இந்த இணைவைப்பாளர்களுக்கு இறையில்லங்களைப் பராமரிக்கும் உரிமை இல்லை. அத்தகையவர்களின் எல்லாச் செயல்களும் பாழாகிவிட்டன. மேலும், அவர்கள் நரகத்திலேயே என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள். </span>
<span>9:18 யார் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்புகின்றார்களோ, மேலும், தொழுகையை நிலைநாட்டி, ஜகாத் கொடுக்கின்றார்களோ, மேலும், அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாமல் இருக்கின்றார்களோ அவர்கள்தாம் இறையில்லங்களைப் பராமரிப்பவர்களாய் (அவற்றின் ஊழியர்களாய்) ஆக முடியும்! அத்தகையவர்களே நேர்வழியில் செல்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். </span>
<span>9:19 ஹஜ் செய்பவர்களுக்குத் தண்ணீர் புகட்டுவதும், சங்கைமிகு கஅபா பள்ளிவாசலுக்கு ஊழியம் புரிவதும் அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் பாதையில் கடுமையாக உழைப்பவனின் பணிக்குச் சமம் ஆகுமா? அல்லாஹ்விடத்தில் இவையிரண்டும் சமம் ஆகமாட்டா. மேலும், அக்கிரமம் புரியும் சமூகத்தாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை. </span>
<span>9:20 எவர்கள் நம்பிக்கை கொண்டு, (இறைவழியில்) யாவற்றையும் துறந்து, தம் உயிர்களாலும், பொருள்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போராடினார்களோ அவர்கள் அல்லாஹ்விடம் உயர்ந்த படித்தரம் பெற்றவர்களாவர். மேலும், அத்தகையவர்கள் வெற்றியாளர்கள். </span>
<span>9:21 தன்னுடைய அருளும் உவப்பும் சுவனங்களும் அவர்களுக்கு இருக்கின்றன என்று அவர்களின் இறைவன் நற்செய்தி அறிவிக்கின்றான். அங்கே அவர்களுக்கு நிலையான அருட்பேறுகள் இருக்கின்றன. </span>
<span>9:22 அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். திண்ணமாக, சேவைகளுக்கான மாபெரும் கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது. </span>
<span>9:23 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களின் தந்தையரும், உங்களின் சகோதரர்களும் இறைநம்பிக்கையைக் கைவிட்டு நிராகரிப்புக்கு முன்னுரிமை தந்தால், நீங்கள் அவர்களை உங்களுடைய ஆதரவாளர்களாக்கிக் கொள்ள வேண்டாம். உங்களில் யார் அவர்களை ஆதரவாளர்களாக்கிக் கொள்கின்றார்களோ அவர்கள்தாம் அக்கிரமக்காரர்கள். </span>
<span>9:24 (நபியே!) நீர் கூறிவிடுவீராக: “உங்கள் தந்தையர், உங்கள் பிள்ளைகள், உங்கள் சகோதரர்கள், உங்கள் மனைவியர், உங்களுடைய உறவினர்கள், நீங்கள் சம்பாதித்த செல்வங்கள் மற்றும் தேக்கநிலை ஏற்பட்டுவிடுமோ என நீங்கள் அஞ்சுகின்ற உங்களுடைய வணிகம் மற்றும் உங்களுக்கு விருப்பமான இல்லங்கள் ஆகியவை அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும்விட அவன் வழியில் போராடுவதைவிட உங்களுக்கு நேசமானவையாயிருந்தால், அல்லாஹ் தன்னுடைய தீர்ப்பினை (உங்களிடம்) செயல்படுத்தும் வரை நீங்கள் எதிர்பார்த்திருங்கள்! அல்லாஹ் தீய சமுதாயத்துக்கு நேர்வழி காட்டுவதில்லை.”</span>
<span>9:25 (இதற்கு முன்னர்) பெரும்பாலான சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்துள்ளான். (இப்போது) ஹுனைன் (போர் நடைபெற்ற) நாளிலும் (அவன் உதவி செய்ததை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்). அன்று உங்களின் படைப்பெருக்கம் உங்களை இறுமாப்பில் ஆழ்த்தியிருந்தது. ஆயினும், அது உங்களுக்கு எத்தகைய பலனுமளிக்கவில்லை. மேலும், பூமி இவ்வளவு விரிவாயிருந்தும் உங்களுக்குக் குறுகிப் போய்விட்டது. பின்னர் நீங்கள் புறங்காட்டி ஓடிவிட்டீர்கள். </span>
<span>9:26 பிறகு அல்லாஹ் தன் தூதர் மீதும், நம்பிக்கை கொண்டோர் மீதும் தனது சாந்தியை இறக்கி அருளினான். மேலும், உங்களின் பார்வையில் தென்படாதிருந்த படைகளை இறக்கி இறைமறுப்பாளர்களைத் தண்டித்தான். இதுதான் (சத்தியத்தை) மறுத்தோருக்குரிய கூலி! </span>
<span>9:27 பின்னர், இவ்வாறு தண்டனை வழங்கிய பிறகு அல்லாஹ் தான் நாடுகின்றவர்களுக்கு பாவமீட்சி பெறும் பேற்றினை வழங்குகின்றான் (என்பதையும் நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள்). அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும், கருணையுடையவனும் ஆவான். </span>
<span>9:28 இறைநம்பிக்கை கொண்டவர்களே! இணை வைப்பாளர்கள் அசுத்தமானவர்கள்தாம்! எனவே, அவர்கள் இந்த ஆண்டுக்குப் பின் சங்கைமிகு கஅபா பள்ளிவாசலின் அருகில்கூட நெருங்கக் கூடாது. நீங்கள் வறுமைக்கு அஞ்சுவீர்களாயின், அல்லாஹ் நாடினால் தன் கருணையினால் விரைவில் உங்களுக்குச் செல்வத்தை வழங்குவான். திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>9:29 வேதம் வழங்கப்பட்டவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடுத்தவற்றை ‘தடுக்கப்பட்டவை’ என்று கருதாமலும் சத்திய மார்க்கத்தைப் பின்பற்றாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள்; அவர்கள் சிறுமை அடைந்தவர்களாகி (தமது) கையால் ஜிஸ்யா வரியைச் செலுத்தும் வரை! </span>
<span>9:30 “உஸைர் அல்லாஹ்வின் புதல்வர்” என்று யூதர்கள் கூறுகின்றார்கள். “மஸீஹ் அல்லாஹ்வின் புதல்வர்” என்று கிறிஸ்தவர்கள் கூறுகின்றார்கள். அவர்கள் தங்களுடைய நாவினால் கூறும் (உண்மைக்குப் புறம்பான) கூற்றுகளாகும் இவை. இவர்களுக்கு முன்னர் இறைநிராகரிப்பை மேற்கொண்டிருந்தவர்கள் கூறியதைப்போல் இவர்களும் கூறுகின்றனர். அல்லாஹ் இவர்களை நாசப்படுத்துவானாக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றார்கள்! </span>
<span>9:31 அவர்கள் அல்லாஹ்வை விடுத்து மார்க்க மேதைகளையும், துறவிகளையும் தங்களின் ரப் கடவுளராக்கிக் கொண்டார்கள். மேலும் (இதே போன்று) மர்யத்தின் குமாரர் மஸீஹையும் (இறைவனாக்கிக் கொண்டனர்). உண்மை யாதெனில், ஒரே இறைவனைத் தவிர வேறெவரையும் வணங்க அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டதில்லை. வணக்கத்திற்குரிய இறைவன் அவனையன்றி யாரும் இல்லை. அவர்கள் செய்யும் இணைவைப்புச் செயல்களிலிருந்து அவன் தூய்மையானவன். </span>
<span>9:32 அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாயால் ஊதி அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள். ஆயினும் அல்லாஹ் தன் ஒளியை நிறைவு செய்யாமல் விடமாட்டான். இறைநிராகரிப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே! </span>
<span>9:33 அல்லாஹ்தான் தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பிவைத்தான்; அவர் அந்த மார்க்கத்தை ஏனைய அனைத்து மார்க்கங்களை விடவும் மேலோங்கச் செய்யவேண்டும் என்பதற்காக! இணைவைப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே! </span>
<span>9:34 இறைநம்பிக்கையாளர்களே! (வேதம் வழங்கப்பட்டவர்களைச் சார்ந்த) பெரும்பாலான அறிஞர்களும், துறவிகளும் மக்களின் பொருள்களைத் தவறான முறையில் விழுங்குகிறார்கள். மேலும் அவர்களை அல்லாஹ்வின் வழியில் செல்லவிடாமல் தடுக்கிறார்கள். எவர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாமலிருக்கின்றார்களோ அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது எனும் ‘நற்செய்தி’யினை நீர் அறிவிப்பீராக! </span>
<span>9:35 ஒருநாள் வரும்; அந்நாளில் இதே தங்கமும், வெள்ளியும் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு பிறகு அவற்றால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் இவைதாம் நீங்கள் உங்களுக்காக சேகரித்து வைத்திருந்த கருவூலங்கள்! எனவே நீங்கள் சேகரித்து வைத்திருந்த செல்வத்தைச் சுவையுங்கள்!</span>
<span>9:36 உண்மையாக, அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். வானங்களையும் பூமியையும் அவன் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் இவ்வாறே உள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன. இதுதான் சரியான நெறிமுறையாகும். எனவே, இம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநீதி இழைத்துக் கொள்ளாதீர்கள்! எவ்வாறு, இணை வைப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உங்களோடு போரிடுகிறார்களோ அவ்வாறே நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களுடன் போர்புரியுங்கள்! மேலும் இறையச்சம் உள்ளவர்களோடு அல்லாஹ் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! </span>
<span>9:37 ‘நஸீஃ’ நிராகரிப்பை அதிகப்படுத்தும் செயலாகும். நிராகரிப்பை மேற்கொண்ட மக்கள் இதனால் மேலும் வழிகெடுக்கப்படுகின்றார்கள். ஏதேனும் ஓர் ஆண்டில் (போர் விலக்கப்பட்ட) ஒரு மாதத்தை (போருக்காக) அவர்கள் அனுமதிக்கப்பட்டதாக்கிக் கொள்கின்றார்கள். ஆனால் மறு ஆண்டில் அதே மாதத்தில் போர் புரிவது கூடாது என்று தடுத்து விடுகிறார்கள். ஏனெனில், அல்லாஹ்வினால் (போர்புரிய) தடைசெய்யப்பட்டுள்ள மாதங்களின் எண்ணிக்கையை நிறைவு செய்ய வேண்டும் என்பதற்காக! இவ்வாறாக அல்லாஹ்வினால் தடுக்கப்பட்ட மாதத்தை இவர்கள் அனுமதிக்கப்பட்டதாய் ஆக்கிக் கொள்கின்றனர் அவர்களுடைய தீய செயல்கள் அவர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன. சத்தியத்தை மறுக்கும் மக்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை. </span>
<span>9:38 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? ‘அல்லாஹ்வின் வழியில் புறப்படுங்கள்’ என்று உங்களிடம் கூறப்பட்டால், பூமியிலேயே அமிழ்ந்து கிடக்கின்றீர்களே! மறுமையைவிட உலக வாழ்க்கையில் நிறைவடைந்து விட்டீர்களா? (அவ்வாறாயின் அறிந்து கொள்ளுங்கள்:) உலக வாழ்க்கையின் இன்பங்கள் அனைத்தும் மறுமைக்கு முன் மிக அற்பமானவையாகவே இருக்கும். </span>
<span>9:39 நீங்கள் இறைவழியில் புறப்படவில்லையாயின், அல்லாஹ் உங்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை அளிப்பான். மேலும், உங்களுக்குப் பதிலாக வேறொரு சமூகத்தினரைக் கொண்டு வருவான். மேலும், அல்லாஹ்வுக்கு நீங்கள் எந்த ஒரு தீங்கும் செய்திட முடியாது. அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். </span>
<span>9:40 நீங்கள் இந்த நபிக்கு உதவி செய்யாவிட்டால் (அதனால் என்ன), நிராகரிப்பாளர்கள் அவரை வெளியேற்றியபோது திண்ணமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்துள்ளான். அவர்கள் இருவரும் குகையில் தங்கியிருந்தபோது இருவரில் இரண்டாமவராய் இருந்த அவர் தன் தோழரை நோக்கி “கவலை கொள்ளாதீர்; அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அல்லாஹ் அவருக்குத் தன்னிடமிருந்து மனஅமைதியை இறக்கி அருளினான். மேலும், உங்களின் பார்வைக்குத் தென்படாதிருந்த படைகளின் மூலம் அவருக்கு உதவி செய்தான். மேலும், இறைநிராகரிப்பாளர்களின் வாக்கைத் தாழ்த்தினான். மேலும், அல்லாஹ்வின் வாக்குதான் மேலானதாக இருக்கிறது. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமாவான். </span>
<span>9:41 கனமாக இருந்தாலும் சரி, இலேசாக இருந்தாலும் சரி, நீங்கள் புறப்படுங்கள்! உங்களுடைய உடைமைகளைக் கொண்டும் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் வழியில் போராடுங்கள்! நீங்கள் அறிவுடையோராயின் இதுவே உங்களுக்கு மிகச் சிறந்ததாகும். </span>
<span>9:42 (நபியே!) விரைவில் பலன் கிட்டுவதாயும், பயணம் சிரமமின்றியும் இருந்திருப்பின், நிச்சயமாக அவர்கள் உம்மைப் பின்தொடர்ந்து வந்திருப்பார்கள். ஆனால், இப்பயணம் அவர்களுக்கு மிகவும் சிரமமாகத் தோன்றியது. “எங்களால் இயலுமாயின் நிச்சயம் நாங்கள் உங்களோடு கிளம்பியிருப்போம்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுவார்கள். அவர்கள் தம்மைத் தாமே அழிவுக்குள்ளாக்குகிறார்கள். அவர்கள் பொய்யர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான். </span>
<span>9:43 (நபியே!) அல்லாஹ் உம்மை மன்னித்தருள்வானாக! (போரில் கலந்திடாமல் இருக்க) நீர் ஏன் அவர்களுக்கு அனுமதி அளித்தீர்? (நீர் அனுமதி அளிக்காமல் இருந்திருந்தால்) வாய்மையாளர்கள் யார் என்றும், பொய்யர்கள் யார் என்றும் உமக்கு வெளிப்படையாகத் தெரிந்திருக்குமே! </span>
<span>9:44 அல்லாஹ்வின் மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொள்கின்றவர்கள் தங்களுடைய உடைமைகளையும், உயிர்களையும் அர்ப்பணித்துப் போர்புரிவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்று ஒருபோதும் உம்மிடம் கோரமாட்டார்கள். அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களை நன்கறிபவனாக இருக்கின்றான். </span>
<span>9:45 எவர்கள் அல்லாஹ்வின் மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொள்வதில்லையோ, மேலும் தங்களுடைய உள்ளங்களில் சந்தேகம் கொண்டிருக்கின்றார்களோ, மேலும், அந்த சந்தேகத்திலேயே தடுமாறிக் கொண்டிருக்கின்றார்களோ அவர்கள்தாம் இத்தகைய கோரிக்கைகளை உம்மிடம் சமர்ப்பிக்கின்றனர். </span>
<span>9:46 மேலும், உண்மையிலேயே (ஜிஹாதுக்காகப்) புறப்பட அவர்கள் நாடியிருந்தால், அதற்கு வேண்டிய சில ஆயத்தங்களை அவர்கள் செய்திருப்பார்கள். ஆனால், அவர்கள் கிளம்புவதை அல்லாஹ் விரும்பவேயில்லை. எனவே, அவன் அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டான். ஆகவே, ‘தங்கியிருப்பவர்களோடு சேர்ந்து நீங்களும் தங்கி விடுங்கள்!’ என்று அவர்களுக்குக் கூறப்பட்டது. </span>
<span>9:47 அவர்கள் உங்களோடு வந்திருந்தால், வீண் குழப்பங்களைத் தவிர வேறு எதனையும் அவர்கள் உங்களிடையே அதிகப்படுத்தியிருக்க மாட்டார்கள். உங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக உங்களுக்கிடையே விஷமம் செய்துகொண்டு திரிந்திருப்பார்கள். ஆனால் (உங்களுடைய நிலை என்னவெனில்) இன்னும்கூட அவர்களுடைய வார்த்தைகளுக்குச் செவிசாய்ப்பவர் உங்களில் பலர் இருக்கின்றனர். அல்லாஹ் அக்கிரமக்காரர்களை நன்கறிபவனாய் இருக்கின்றான். </span>
<span>9:48 இதற்கு முன்னரும் அவர்கள் குழப்பம் செய்ய முயன்றிருக்கிறார்கள். மேலும், உம்மைத் தோல்வியுறச் செய்ய எல்லாவிதமான தில்லுமுல்லுகளையும் கையாண்டிருக்கிறார்கள். இறுதியில், அவர்கள் விரும்பாத நிலையிலும் சத்தியம் வந்தது; அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்கவே செய்தது. </span>
<span>9:49 மேலும் (போருக்குச் செல்லாதிருக்க) “எனக்கு அனுமதி தாரும்; என்னைச் சோதனைக்குள்ளாக்காதீர்!” என்று கூறுவோரும் அவர்களில் இருக்கின்றனர். இதோ கேளுங்கள்; சோதனையிலேயே அவர்கள் வீழ்ந்து கிடக்கிறார்கள். மேலும் நரகம் இத்தகைய இறைநிராகரிப்பாளர்களைத் திண்ணமாக சூழ்ந்து கொண்டிருக்கிறது. </span>
<span>9:50 உமக்கு ஏதேனும் நன்மை கிடைத்தால், அது அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகின்றது. மேலும், உமக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் “நாங்கள் முன்னரே எங்கள் விஷயத்தில் எச்சரிக்கையாய் இருந்துகொண்டோம்” என்று கூறிக்கொண்டு மிகவும் மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்கின்றனர். </span>
<span>9:51 நீர் அவர்களிடம் கூறுவீராக: “(நன்மையோ, தீமையோ) அல்லாஹ் எங்களுக்காக விதித்து வைத்திருப்பவற்றைத் தவிர எதுவும் எங்களை அடையாது. அவன்தான் எங்களின் பாதுகாவலன். மேலும், நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே முழுமை யாய்ச் சார்ந்திருக்க வேண்டும்.”</span>
<span>9:52 அவர்களிடம் கூறும்: “எங்கள் விஷயத்தில் இரு நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதனை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்? ஆனால், நாங்கள் உங்கள் விஷயத்தில் எதிர்பார்ப்பது, அல்லாஹ்வே உங்களுக்குத் தண்டனை கொடுக்கின்றானா? அல்லது எங்கள் கைகளின் மூலம் கொடுக்க வைக்கின்றானா என்பதைத்தான்! ஆக, நீங்களும் எதிர்பார்த்திருங்கள்! நாங்களும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.”</span>
<span>9:53 அவர்களிடம் நீர் கூறும்: “நீங்கள் (உங்கள் பொருளை) விருப்புடனோ, வெறுப்புடனோ எவ்வாறேனும் செலவு செய்யுங்கள்; ஆனால், அது உங்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஏனென்றால், திண்ணமாக நீங்கள் பாவம் செய்யும் சமூகத்தினராய் இருக்கின்றீர்கள்.” </span>
<span>9:54 அவர்கள் செலவு செய்த பொருள்கள் அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படாததற்குக் காரணம், அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும், தொழுகைக்கு வரும்போது சோம்பல் பட்டவர்களாகவே வருகின்றார்கள். இறைவழியில் செலவழிக்கும்போதும் மனமில்லாமலேயே செலவழிக்கின்றார்கள். </span>
<span>9:55 அவர்களிடமுள்ள செல்வங்களும், அவர்களின் மக்களும் உம்மை வியப்பில் ஆழ்த்திட வேண்டாம்! அல்லாஹ்வோ இவற்றின் மூலம் உலக வாழ்க்கையில் அவர்களை வேதனையில் ஆழ்த்திட வேண்டும் என்றும், சத்தியத்தை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவர்களின் உயிர்கள் பிரிய வேண்டும் என்றும்தான் நாடுகின்றான். </span>
<span>9:56 மேலும், “நாங்கள் உங்களைச் சார்ந்தவர்கள்தாம்” என்று அல்லாஹ்வின் மீது மீண்டும் மீண்டும் சத்தியம் செய்து அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால், ஒருபோதும் அவர்கள் உங்களைச் சார்ந்தவர்களல்லர். உண்மையில், அவர்கள் (உங்களைக் கண்டு) அஞ்சுகின்ற மக்களாவர்; </span>
<span>9:57 ஏதேனும் ஒரு தஞ்சம் புகும் இடத்தையோ, குகையையோ, நுழைவிடத்தையோ அவர்கள் காண்பார்களானால் அங்கே விரைந்து ஓடி ஒளிந்து கொள்வார்கள்!</span>
<span>9:58 மேலும், (நபியே!) அவர்களில் சிலர், தானதர்மங்களைப் பங்கிடும் விஷயத்தில் உம்மைக் குறைகூறுகிறார்கள். அவற்றிலிருந்து அவர்களுக்குச் சிறிது கொடுக்கப்பட்டால் மனநிறைவு கொள்கின்றார்கள். அவற்றிலிருந்து அவர்களுக்கு கொடுக்கப்படவில்லையானால், அவர்கள் கோபம் அடைகிறார்கள். </span>
<span>9:59 அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு அவர்கள் மனநிறைவு கொண்டு “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்; அல்லாஹ் தன்னுடைய அருட்கொடையிலிருந்து எங்களுக்கு இன்னும் அதிகம் வழங்குவான். அவனுடைய தூதரும் எங்களுக்கு வழங்குவார்கள். அல்லாஹ்விடமே நாங்கள் ஆவல் கொண்டிருக்கின்றோம்” என்று கூறியிருந்தார்களேயானால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்! </span>
<span>9:60 இந்த தானதர்மங்களெல்லாம் ஏழைகள், வறியவர்கள், இந்த தானதர்மங்களை வசூலிக்கவும் பங்கிடவும் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டியவர்கள் ஆகியோருக்கும், பிடரிகளை விடுவிப்பதற்கும், கடனாளிகளுக்கும் மற்றும் இறைவழியில் செலவு செய்வதற்கும், பயணிகளுக்கும் உரியனவாகும். இது அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட கடமையாகும்! மேலும் அல்லாஹ் யாவற்றையும் அறிந்தோனும் நுண்ணறிவாளனுமாயிருக்கின்றான். </span>
<span>9:61 மேலும், நபிக்கு மனவேதனை அளிக்(கும் முறையில் பேசு)கின்ற சிலரும் அவர்களில் இருக்கின்றனர். அவர்கள் கூறுகின்றார்கள்: “இவர் தம்முடைய காதில் விழுவதையெல்லாம் நம்புகிறார்!” நீர் கூறும்: “உங்களுக்கு நன்மை அளிப்பவற்றைத் தான் செவியேற்கிறார். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றார். மேலும் நம்பிக்கையாளர்களை நம்புகின்றார். உங்களில் யார் நம்பிக்கையாளர்களாய் விளங்குகின்றார்களோ அவர்களுக்கு முற்றிலும் அருட்கொடையாயும் இருக்கிறார். ஆனால், எவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு நோவினை தருகின்றார்களோ அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது.”</span>
<span>9:62 அவர்கள் உங்களைத் திருப்தியுறச் செய்வதற்காக உங்களிடம் அல்லாஹ்வின் பெயர் கூறி சத்தியம் செய்கின்றார்கள். உண்மையில் அவர்கள் நம்பிக்கையாளர்களாய் இருந்தால், அவர்கள் திருப்தியுறச் செய்வதற்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே மிகவும் தகுதியானவர்கள். </span>
<span>9:63 எவன் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் பகைக்கின்றானோ அவனுக்குத் திண்ணமாக நரக நெருப்பு இருக்கிறது! அதில் அவன் என்றென்றும் வீழ்ந்து கிடப்பான்! இது மாபெரும் இழிவாகும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லையா?</span>
<span>9:64 இறைநம்பிக்கையாளர்கள் மீது ஏதேனும் ஓர் அத்தியாயம் இறக்கியருளப்பட்டு, அது தம்முடைய உள்ளங்களில் உள்ளவற்றை அவர்களுக்கு வெளிப்படுத்திவிடுமோ என்று இந்நயவஞ்சகர்கள் அஞ்சுகிறார்கள். (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “நீங்கள் பரிகாசம் செய்து கொண்டே இருங்கள். எவை வெளிப்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ அவற்றை அல்லாஹ் வெளிப்படுத்தியே தீருவான்.” </span>
<span>9:65 (நீங்கள் என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று) அவர்களிடம் நீர் கேட்பீராயின் உடனே அவர்கள் கூறுவர்: “நாங்கள் நகைச்சுவையாகவும் விளையாட்டாகவும்தான் பேசிக்கொண்டிருந்தோம்.” அவர்களிடம் நீர் கூறும்: “அல்லாஹ்வையும் அவனுடைய வசனங்களையும் அவனுடைய தூதரையும்தான் நீங்கள் பரிகாசம் செய்து கொண்டிருக்க வேண்டுமா? </span>
<span>9:66 உங்கள் தவறுகளை நீங்கள் நியாயப்படுத்த வேண்டாம். நீங்கள் இறைநம்பிக்கை கொண்டபின் திண்ணமாக நிராகரித்துவிட்டீர்கள். உங்களில் ஒரு கூட்டத்தாரை நாம் மன்னித்துவிட்டாலும் மற்றொரு கூட்டத்தாருக்கு நாம் தண்டனை வழங்கியே தீருவோம்! ஏனென்றால், அவர்கள் குற்றவாளிகளாகி விட்டனர்.”</span>
<span>9:67 நயவஞ்சக ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒரேவித மானவர்கள்தாம்! அவர்கள் தீமை புரியுமாறு ஏவுகிறார்கள்; நன்மையை விட்டுத் தடுக்கிறார்கள். மேலும், தங்களுடைய கைகளை (நன்மையானவற்றை விட்டு) முடக்கிக் கொள்கின்றார்கள். அவர்கள் அல்லாஹ்வை மறந்ததனால் அல்லாஹ்வும் அவர்களை மறந்தான்! திண்ணமாக, இந்நயவஞ்சகர்கள் தீயவர்கள்தாம்! </span>
<span>9:68 இந்நயவஞ்சக ஆண்களுக்கும், பெண்களுக்கும் மற்றும் நிராகரிப்பாளர்களுக்கும் நரக நெருப்பு உண்டென்று அல்லாஹ் எச்சரிக்கை செய்திருக்கின்றான். அதில் அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்! அதுவே அவர்களுக்குப் பொருத்தமான இடமாகும். மேலும், அவர்கள்மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படும். அவர்களுக்கு நிலையான வேதனையும் இருக்கிறது. </span>
<span>9:69 உங்களுக்கு முன்னிருந்தவர்களைப் போன்றே நீங்களும் நடந்து கொள்கின்றீர்கள். அவர்கள் உங்களைவிடவும் அதிக ஆற்றல் பெற்றவர்களாயும், அதிகப் பொருள்களும் வழித்தோன்றல்களும் உடையவர்களாயும் இருந்தனர். உலகில் தமக்குரிய பங்கினை அவர்கள் அனுபவித்தார்கள். உங்களுக்கு முன் சென்றவர்கள், தமக்குரிய பங்கினை அனுபவித்தது போன்று நீங்கள் உங்களுக்குரிய பங்கினை அனுபவித்து விட்டீர்கள்! மேலும், வீண்வாதங்களில் ஈடுபட்டிருந்த அவர்களைப் போன்று நீங்களும் ஈடுபட்டீர்கள். (இறுதியில் அவர்களுக்கு என்ன கதி ஏற்பட்டதென்றால்) அவர்கள் செய்த எல்லாச் செயல்களும் இம்மையிலும், மறுமையிலும் வீணாகிவிட்டன. மேலும், அத்தகையவர்களே இழப்புக்குரியவர்களாவர்! </span>
<span>9:70 தமக்கு முன்சென்றவர்களான நூஹுடைய சமூகத்தினர், ஆத் மற்றும் ஸமூத் கூட்டத்தினர், இப்ராஹீமின் சமூகத்தினர், மத்யன்வாசிகள் மற்றும் தலைகீழாகப் புரட்டப்பட்ட ஊர்கள் ஆகியோரின் வரலாறு இவர்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்களுடைய தூதர்கள் தெளிவான சான்றுகளை அவர்களிடம் கொண்டு வந்தார்கள். எனவே, அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. ஆனால் அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டிருந்தார்கள்!</span>
<span>9:71 இறைநம்பிக்கை கொண்ட ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களாய் இருக்கின்றார்கள். அவர்கள் நன்மை புரியுமாறு ஏவுகிறார்கள்; தீமையிலிருந்து தடுக்கிறார்கள். மேலும், தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்; ஜகாத்தும் கொடுக்கிறார்கள். மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகிறார்கள். அத்தகையோர் மீதுதான் அல்லாஹ்வின் கருணை பொழிந்து கொண்டிருக்கும்! திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>9:72 கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்களை வழங்குவதாக இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள்! மேலும், அந்த நிலையான சுவனங்களில் தூய்மையான இல்லங்கள் அவர்களுக்கு இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலான அல்லாஹ்வின் உவப்பும் அவர்களுக்குக் கிட்டும். இதுவே மாபெரும் வெற்றியாகும்!</span>
<span>9:73 நபியே! இறைநிராகரிப்பாளர்கள், நயவஞ்சகர்கள் ஆகியோருடன் (முழு வலிமையோடு) போராடுவீராக! மேலும், அவர்களிடம் கடினமாக நடந்து கொள்வீராக! இறுதியில், அவர்களின் தங்குமிடம் நரகமாகும். அது மிகக் கெட்ட இருப்பிடமாகும். </span>
<span>9:74 இறைநிராகரிப்புச் சொல்லினைத் திண்ணமாக கூறியிருந்தும், ‘நாங்கள் அவ்வாறு கூறவில்லை’ என்று அல்லாஹ்வின் மீது அவர்கள் (மீண்டும் மீண்டும்) சத்தியம் செய்கின்றார்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபின் நிராகரிப்பை மேற்கொண்டு விட்டார்கள். மேலும் தம்மால் செய்ய முடியாத செயலைச் செய்ய நினைத்தார்கள். தன்னுடைய அருளால் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குச் செல்வம் வழங்கியதற்காகவா, அவர்கள் இவ்வளவு வெறுப்புக் கொள்கிறார்கள். அவர்கள் தம்முடைய இந்நடத்தையிலிருந்து விலகிக்கொண்டால் அது அவர்களுக்குச் சிறந்ததாகும். விலகிக்கொள்ளாவிட்டால் அல்லாஹ் அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்புறுத்தும் தண்டனை அளிப்பான். இப்பூமியில் அவர்களை ஆதரிப்பாரும், அவர்களுக்கு உதவி புரிவாரும் யாரும் இரார். </span>
<span>9:75 அவர்களில் இப்படிச் சிலர் இருக்கின்றனர்: “அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து எங்களுக்கு வழங்கினால், நிச்சயம் நாங்கள் தானதர்மங்கள் செய்வோம்; மேலும், நல்லவர்களாவோம்” என்று அல்லாஹ்விடம் அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள். </span>
<span>9:76 ஆனால், அல்லாஹ் தன்னுடைய அருட் கொடையிலிருந்து அவர்களுக்கு வழங்கியபோது, அதில் அவர்கள் கஞ்சத்தனம் செய்தார்கள். மேலும், சிறிதும் பொருட்படுத்தாதவர்களாய் (தமது வாக்குறுதியிலிருந்து) நழுவிச் சென்றார்கள். </span>
<span>9:77 எனவே, அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதிக்கு அவர்கள் மாறுசெய்த காரணத்தாலும், பொய்யுரைத்துக் கொண்டிருந்ததாலும் அல்லாஹ் அவர்களின் உள்ளத்தில் வஞ்சக எண்ணத்தை ஏற்படுத்தினான். அவனை அவர்கள் சந்திக்கும் நாள் வரை அது அவர்களிடம் இருக்கும். </span>
<span>9:78 அவர்களுடைய அந்தரங்கத்தையும், அதைவிட இரகசியமானவற்றையும் திண்ணமாக அல்லாஹ் அறிகின்றான் என்பதையும் மறைவான உண்மைகள் அனைத்தையும் அவன் முழுமையாக அறியக்கூடியவன் ஆவான் என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்ளவில்லையா? </span>
<span>9:79 இக்கஞ்சர்கள் (என்ன செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் அறிகிறான்.) இறைநம்பிக்கையாளர்களில் மனமுவந்து வாரி வழங்குவோரின் தானதர்மங்களைப் பற்றியும் இவர்கள் குறை கூறுகின்றார்கள். (இறைவழியில் செலவழிப்பதற்காக) சிரமப்பட்டு சம்பாதித்ததைத் தவிர வேறெதுவும் இல்லாதவர்களைப் பற்றியும் இவர்கள் கேலி செய்கின்றார்கள். அல்லாஹ் இவர்களைக் கேலி செய்கின்றான். மேலும், இவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனையும் இருக்கிறது. </span>
<span>9:80 (நபியே!) நீர் இவர்களுக்காக பாவமன்னிப் புக் கோரினாலும் சரி, கோராவிட்டாலும் சரி, எழுபது தடவைகள் இவர்களுக்காக நீர் மன்னிப்புக் கோரினாலும் அல்லாஹ் இவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டான்! ஏனென்றால் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் இவர்கள் நிராகரித்து விட்டார்கள். பாவம் புரியும் மக்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டு வதில்லை. </span>
<span>9:81 போருக்குச் செல்லாமல் தங்கிவிட அனுமதி பெற்றவர்கள், அல்லாஹ்வின் தூதர் புறப்பட்டதற்குப் பின்னால் தத்தம் வீடுகளில் இருப்பது குறித்து மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்கள் தங்கள் உயிர்களையும், உடைமைகளையும் அல்லாஹ்வின் வழியில் அர்ப்பணித்துப் போராடுவதை வெறுத்தார்கள். மேலும், ‘கடுமையான இந்த வெப்ப காலத்தில் போருக்குப் புறப்படாதீர்கள்’ என்று (மக்களிடம்) கூறினார்கள். (இவர்களிடம்) நீர் கூறுவீராக: “நரக நெருப்பு இதைவிட அதிக வெப்பமுடையது.” அந்தோ! இதனை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டாமா! </span>
<span>9:82 இனி அவர்கள் குறைவாக சிரிக்கட்டும்; அதிகமாக அழட்டும்! ஏனெனில் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீவினையின் விளைவு இவ்வாறுதான் இருக்கிறது. (அதனால் அவர்கள் அதிகம் அழட்டும்!) </span>
<span>9:83 அவர்களிடையே அல்லாஹ் உம்மைத் திரும்பக் கொண்டு வரும்போது (ஜிஹாதுக்காகப்) புறப்பட அவர்களில் ஒரு பிரிவினர் உம்மிடம் அனுமதி கோரினால், நீர் அவர்களிடம் (தெளிவாகக்) கூறிவிட வேண்டும்: “இனி ஒருபோதும் உங்களால் என்னுடன் வர இயலாது; என்னோடு வந்து எந்தப் பகைவர்களையும் எதிர்த்துப் போரிட உங்களால் முடியாது. ஏனெனில், முதல் தடவை (போருக்கு) வராமல் தங்கி விடுவதை நீங்கள் விரும்பினீர்கள். ஆகையால் (இனி) வராமல் தங்கி விட்டவர்களுடன் நீங்களும் தங்கி விடுங்கள்!”</span>
<span>9:84 (இனி,) அவர்களில் எவரேனும் இறந்துவிட்டால் ஒருபோதும் அவருக்காக (ஜனாஸா) மரணத்தொழுகை தொழாதீர்; மேலும், அவருக்குப் பிரார்த்தனை செய்வதற்காக அவருடைய அடக்கத்தலத்தில் நிற்காதீர்! ஏனென்றால், திண்ணமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நிராகரித்து விட்டார்கள். மேலும், தீயவர்களாகவே அவர்கள் இறந்து போனார்கள். </span>
<span>9:85 அவர்களுடைய செல்வங்களும், அதிகமான பிள்ளைகளும் உம்மை வியப்பிலாழ்த்த வேண்டாம். இவற்றின் மூலம் அவர்களுக்கு இவ்வுலகிலே தண்டனை வழங்கிட வேண்டும் என்றும், நிராகரிப்பவர்களாகவே அவர்களின் உயிர்கள் பிரிய வேண்டும் என்றும்தான் அல்லாஹ் நாடுகின்றான். </span>
<span>9:86 “அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; மேலும், அவனுடைய தூதருடன் சேர்ந்து ஜிஹாத் செய்யுங்கள்!” என்று (அறிவுறுத்தும்) ஏதேனும் ஓர் அத்தியாயம் இறக்கியருளப்பட்டால், அவர்களில் சக்தி பெற்றவர்கள் (ஜிஹாதில் கலந்து கொள்ளாதிருக்க) அனுமதி வழங்குமாறு உம்மிடம் கோருவார்கள். “எங்களை விட்டுவிடும்; தங்கியிருப்பவர்களுடன் நாங்களும் சேர்ந்து விடுகின்றோம்” என்றும் கூறுவார்கள். </span>
<span>9:87 அத்தகையவர்கள் வீட்டில் தங்கியிருக்கும் பெண்கள் மற்றும் இயலாதோருடன் சேர்ந்துவிட விரும்பி விட்டார்கள். மேலும், அவர்களுடைய உள்ளங்கள் மீது முத்திரையிடப்பட்டுவிட்டது. எனவே அவர்கள் எதையும் புரிந்து கொள்ளமாட்டார்கள். </span>
<span>9:88 ஆனால், இறைத்தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் தம் உயிர்களையும் உடைமைகளையும் அர்ப்பணித்து ஜிஹாத் செய்தார்கள். (இனி) அத்தகையவர்களுக்கே எல்லா நன்மைகளும் இருக்கின்றன. அவர்கள்தாம் வெற்றி பெற்றவர்களுமாவர். </span>
<span>9:89 கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களை அல்லாஹ் அவர்களுக்காகத் தயார் செய்து வைத்திருக்கின்றான்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். இதுவே மாபெரும் வெற்றியாகும். </span>
<span>9:90 மேலும், (போருக்குச் செல்லாமலிருக்க) தங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக, சாக்குப் போக்குகள் கூறக்கூடிய நாட்டுப்புற அரபிகள் பலர் வந்தனர். இதுபோல், ஈமான் நம்பிக்கை கொள்வதாக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் பொய்யான வாக்குறுதி அளித்தவர்களும் போருக்குச் செல்லாமல் பின்தங்கி விட்டார்கள். இந்த நாட்டுப்புற அரபிகளில் எவர்கள் நிராகரிக்கும் போக்கினைக் கடைப்பிடித்தார்களோ அவர்களைத் துன்புறுத்தும் தண்டனை அதிவிரைவில் சூழ்ந்து கொள்ளும்!</span>
<span>9:91 இயலாதவர்கள், நோயாளிகள் மற்றும் ஜிஹாதில் கலந்துகொள்ள வசதி வாய்ப்பு அற்றவர்கள் ஆகியோர் அவர்கள் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதருக்கு வாய்மையாளர்களாய் இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது யாதொரு குற்றமும் இல்லை. இத்தகைய நன்னடத்தையுடையோரை ஆட்சேபிக்க எந்தக் காரணமும் இல்லை. மேலும், அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>9:92 இதேபோன்று பின்வருபவர்கள் மீதும் எவ்வித ஆட்சேபணையும் இல்லை: அவர்களாகவே உம்மிடம் வந்து தங்களுக்கு வாகன வசதி செய்து கொடுக்க வேண்டும் எனக் கோரினர். “உங்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்வதற்கு என்னிடம் வசதி எதுவும் இல்லையே!” என நீர் கூறியபோது வேறு வழியின்றி அவர்கள் திரும்பிச் சென்றனர். மேலும், ஜிஹாதில் கலந்து கொள்வதற்காக, சொந்தமாக செலவு செய்யும் ஆற்றலைப் பெற்றிருக்கவில்லையே என்ற துயரத்தில் அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. </span>
<span>9:93 ஆனால், எவர்கள் செல்வந்தர்களாயிருந்தும் (ஜிஹாதில் கலந்து கொள்ளாதிருக்க) உம்மிடம் அனுமதி கோருகின்றார்களோ அவர்கள் மீதே ஆட்சேபணை இருக்கின்றது. வீட்டில் தங்கியிருக்கும் பெண்கள் மற்றும் இயலாதோருடன் சேர்ந்திருக்கவே அவர்கள் விரும்பினார்கள். மேலும், அல்லாஹ் அவர்களின் உள்ளங்கள் மீது முத்திரையிட்டுவிட்டான்! ஆகவே, இவர்கள் (தங்களின் இந்த நடத்தை அல்லாஹ்வின் திருமுன் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை) இப்பொழுது அறிந்தார் இலர். </span>
<span>9:94 நீங்கள் அவர்களிடம் திரும்ப வருவீர்களானால், உங்களிடம் அவர்கள் (விதவிதமான) சாக்குப் போக்குகள் கூறுவார்கள். ஆனால், நீர் கூறும்: “சாக்குப் போக்கு கூறாதீர்கள்; நீங்கள் கூறும் எதனையும் நாங்கள் ஏற்கமாட்டோம். உங்களுடைய நிலைமைகளை அல்லாஹ் எங்களுக்கு அறிவித்து விட்டான். இனி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களுடைய செயல் முறையை நிச்சயம் பார்ப்பார்கள்! பின்னர் மறைவானவை, வெளிப்படையானவை ஆகிய அனைத்தையும் அறியக் கூடியவன் பக்கம் நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்! அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதனை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.” </span>
<span>9:95 நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும்போது அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிட வேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுங்கள்! ஏனென்றால், அவர்கள் அசுத்தமானவர்கள்; உண்மையில் அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீவினைகளுக்கு இதுவே கூலியாகும். </span>
<span>9:96 நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டுவிட வேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டாலும் திண்ணமாக அல்லாஹ் பாவிகளான இத்தகைய மக்கள் மீது ஒருபோதும் திருப்தி கொள்ள மாட்டான். </span>
<span>9:97 இந்த நாட்டுப்புற அரபிகள் இறைநிராகரிப்பிலும் நயவஞ்சகத்திலும் மிகவும் கடுமையானவர்களாவர். மேலும், அல்லாஹ் தன்னுடைய தூதர் மீது இறக்கியருளிய தீனின் (நெறியின்) வரையறைகளை அவர்கள் அறியாதிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அவர்களிடம் அதிகம் இருக்கின்றன. மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>9:98 இந்த நாட்டுப்புற அரபிகளில் சிலர் இப்படியும் இருக்கின்றனர்; இறைவழியில் சிறிதளவு செலவு செய்வதை (தங்கள் மீது விதிக்கப்பட்ட) தண்டத் தொகையாகக் கருதுகின்றார்கள். உங்களுக்குக் கெட்ட காலம் வரவேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். (அதாவது, நீர் ஏதேனும் துன்பத்தில் மாட்டிக் கொண்டால் அப்போது நீர் எந்த அமைப்பில் அவர்களைப் பிணைத்து வைத்திருக்கின்றீரோ அந்த அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்து தம்மை முற்றிலும் விடுவித்துக் கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.) உண்மை யாதெனில், கெட்ட காலம் அவர்களையே சூழ்ந்துள்ளது. மேலும், அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>9:99 இந்த நாட்டுப்புற அரபிகளில் சிலர் இவ்வாறும் உள்ளனர்: அல்லாஹ்வின் மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொள்கின்றனர். மேலும், அவர்கள் எதனைச் செலவழித்தாலும், அதனை அல்லாஹ்விடம் நெருக்கத்தையும் தூதரிடமிருந்து அருள்பாலிக்கப்படுவதற்குரிய பிரார்த்தனைகளையும் அடைவதற்கான சாதனமாக எடுத்துக்கொள்கின்றார்கள். ஆம்! திண்ணமாக, அது (அல்லாஹ்விடம்) அவர்கள் நெருங்குவதற்குரிய சாதனமாகும். தன்னுடைய கருணையில் அல்லாஹ் அவர்களை நிச்சயம் நுழைவிப்பான்! திண்ணமாக, அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>9:100 (இஸ்லாத்தின் அழைப்புக்கு) முதன் முதலில் பதிலளித்த முஹாஜிர்கள், அன்ஸாரிகளைக் குறித்தும், அவர்களை யார் நேர்மையோடு பின்பற்றினார்களோ அவர்களைக் குறித்தும் அல்லாஹ் திருப்தி கொண்டான். அவர்களும் அவனைக் குறித்து திருப்தி அடைந்தார்கள். கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனத் தோப்புகளை அல்லாஹ் அவர்களுக்காகத் தயார் செய்து வைத்திருக்கின்றான்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும். </span>
<span>9:101 உங்களைச் சுற்றியுள்ள நாட்டுப்புற அரபிகளில் பலர் நயவஞ்சகர்களாக இருக்கின்றனர். இதேபோன்று மதீனாவாசிகளிலும் உள்ளனர். அவர்களோ நயவஞ்சகத்தில் ஊறித் திளைத்து இருக்கிறார்கள். அவர்களை நீர் அறிய மாட்டீர்; நாம் அறிவோம். வெகு விரைவில் அவர்களுக்கு இருமடங்கு தண்டனை வழங்குவோம். பிறகு, அவர்கள் மாபெரும் தண்டனைக்காக திரும்பக் கொண்டுவரப்படுவார்கள். </span>
<span>9:102 மேலும், தம் குற்றங்களை ஒப்புக்கொண்டிருக்கும் வேறு சிலரும் (அவர்களில்) உள்ளனர்; அவர்கள் நற்செயலோடு தீயசெயலையும் கலந்துவிட்டிருக்கின்றார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்கள் மீது கருணை புரியக்கூடும். ஏனென்றால் திண்ணமாக அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனும், கருணை புரிபவனுமாவான். </span>
<span>9:103 (நபியே!) அவர்களுடைய பொருள்களிலிருந்து தானத்தை வசூல் செய்துகொண்டு அதன் மூலம் அவர்களைத் தூய்மையாக்குவீராக; (நல்வழியில்) அவர்களை முன்னேறச் செய்வீராக! மேலும், அவர்களுக்காக (நல்லருள் வேண்டிப்) பிரார்த்திப்பீராக! ஏனென்றால், உம்முடைய பிரார்த்தனை திண்ணமாக அவர்களுக்கு சாந்தி அளிக்கக்கூடியதாகும். மேலும், அல்லாஹ் யாவற்றையும் கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>9:104 திண்ணமாக, அல்லாஹ் தன்னுடைய அடிமைகளின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்கின்றான்; அவர்களின் தானதர்மங்களை அங்கீகரிக்கின்றான் என்பதையும், அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணையுடையவனாகவும் இருக்கின்றான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? </span>
<span>9:105 மேலும், (நபியே! இம்மக்களிடம்) கூறிவிடுவீராக: “நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருங்கள்! அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், இறை நம்பிக்கையாளர்களும் உங்களுடைய நடத்தை எப்படியிருக்கிறது என்பதைப் பார்க்கத்தான் செய்வார்கள். பிறகு, மறைவான வெளிப்படையான அனைத்தையும் அறிந்தவனிடம் அதிவிரைவில் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்தவை குறித்து உங்களுக்கு அவன் அறிவித்து விடுவான்.”</span>
<span>9:106 மேலும், இப்படியும் சிலர் இருக்கின்றார்கள்: அவர்களின் விவகாரம் அல்லாஹ்வின் ஆணைக்காக தாமதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவன் நாடினால் அவர்களைத் தண்டிப்பான்; நாடினால் அவர்களை மன்னித்து விடுவான். அல்லாஹ் யாவற்றையும் நன்கறிபவனும், நுண்ணறிவாளனுமாய் இருக்கின்றான். </span>
<span>9:107 மேலும், (அவர்களில்) சிலர் ஒரு பள்ளிவாசலை உருவாக்கியிருக்கின்றார்கள்; எதற்காகவெனில் (சத்திய அழைப்பிற்கு) ஊறு விளைவிக்க வேண்டும்; (அல்லாஹ்வுக்கு அடிபணிவதற்குப் பதிலாக அவனை) நிராகரிக்க வேண்டும்; மேலும், நம்பிக்கையாளர்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டும்; மேலும், இதற்குமுன் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துக் கொண்டிருந்த ஒருவனுக்குப் பதுங்குமிடமாக்க வேண்டும் என்பதற்காக! மேலும், “நாங்கள் நன்மையைத் தவிர வேறெதனையும் நாடவில்லை” என்று அவர்கள் சத்தியம் செய்து கூறுவார்கள். ஆனால், திண்ணமாக அவர்கள் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சி அளிக்கின்றான். </span>
<span>9:108 அப்படிப்பட்ட இடத்தில் நீர் ஒருபோதும் தொழ வேண்டாம். தொடக்க நாளிலிருந்து இறையச்சத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டிருக்கின்ற பள்ளிவாசல்தான் நீர் தொழுவதற்கு மிகவும் தகுதியானதாகும். தூய்மையுடன் வாழ விரும்பும் மனிதர்கள் அங்கு உள்ளனர். தூய்மையை மேற்கொள்பவர்களைத்தாம் அல்லாஹ்வும் நேசிக்கின்றான். </span>
<span>9:109 (இனி நீர் என்ன கருதுகின்றீர்?) இறையச்சத்தையும், இறை உவப்பையும் அடிப்படையாகக் கொண்டு தம் கட்டடத்தை நிர்மாணித்தவர் சிறந்தவரா? அல்லது வெள்ளத்தால் அரிக்கப்பட்ட உறுதியற்ற ஓடைக்கரையின் மீது தனது கட்டடத்தை நிர்மாணித்து, பிறகு அக்கட்டடத்துடன் சேர்ந்து தானும் நரக நெருப்பில் நேராக வந்து விழுந்து விட்டானே அவன் சிறந்தவனா? அக்கிரமம் இழைக்கும் இத்தகையக் கூட்டத்தாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை. </span>
<span>9:110 அவர்கள் எழுப்பிய இந்தக் கட்டடம் அவர்களின் உள்ளங்களில் என்றைக்கும் அமைதியின்மையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்; அவர்களின் உள்ளங்கள் நொறுங்கினால் ஒழிய (அந்த அமைதியின்மை நீங்குவதற்கு எவ்வழியும் இல்லை!) அல்லாஹ் அனைத்தையும் தெரிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>9:111 உண்மையாக, அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களின் உயிர்களையும், உடைமைகளையும் சுவனத்திற்குப் பகரமாய் விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் வழியில் போர் புரிகின்றார்கள்; கொல்கின்றார்கள்; கொல்லப்படுகின்றார்கள் அவர்களுக்கு (சுவனம் கிடைக்கும் எனும் இந்த வாக்குறுதி) அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள ஒரு திடமான வாக்குறுதியாகும். இதுவோ தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் ஆகியவற்றிலும் உள்ளது. மேலும், அல்லாஹ்வைவிட தனது வாக்குறுதியை சிறப்பாக நிறைவேற்றுபவன் யார்? எனவே, நீங்கள் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட உங்களுடைய இந்த வியாபாரம் குறித்து மகிழ்ச்சி கொண்டாடுங்கள்! இதுவே மாபெரும் வெற்றியாகும். </span>
<span>9:112 அல்லாஹ்விடம் மீண்டும் மீண்டும் திரும்புபவர்கள். அவனுக்கு அடிபணிந்து வாழ்பவர்கள், அவன் புகழ்பாடுபவர்கள், அவனுக்காகச் சுற்றித்திரிபவர்கள், அவன் முன்னால் குனிந்தும் சிரம் பணிந்தும் வணங்குபவர்கள், நன்மை புரியுமாறு ஏவுபவர்கள், மேலும் தீமையிலிருந்து தடுப்பவர்கள், அல்லாஹ்வின் வரம்புகளைக் காப்பவர்கள் (இத்தகைய மாண்புடைய இறை நம்பிக்கையாளர்கள் தாம் அல்லாஹ்விடம் ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் ஆவர்). மேலும் (நபியே!) நீர் இந்நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி அறிவிப்பீராக!</span>
<span>9:113 இறைவனுக்கு இணைவைப்பவர்கள் நரகத்திற்குரியவர்கள் என்பது நன்கு தெளிவாகிவிட்ட பின்னர் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திப்பது நபிக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் ஏற்ற செயல் அல்ல அவர்கள் நெருங்கிய உறவினராய் இருப்பினும் சரியே! </span>
<span>9:114 இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவமன்னிப்புக் கோரியது அவருக்குத் தாம் அளித்திருந்த வாக்குறுதியின் காரணமாகத்தான். ஆனால், தம்முடைய தந்தை அல்லாஹ்வுக்குப் பகைவனாக இருக்கின்றார் என்பது இப்ராஹீமுக்குத் தெளிவாகி விட்டபோது, அவர் தம் தந்தையை விட்டு விலகிக் கொண்டார். திண்ணமாக, இப்ராஹீம் மிக இளகிய மனமும், இறையச்சமும், சகிப்புத்தன்மையும் உடையவராய் இருந்தார். </span>
<span>9:115 ஒரு சமூகத்தாருக்கு நேர்வழி அளித்த பின்னால், எவற்றிலிருந்தெல்லாம் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்காத வரை அவர்களை வழிகேட்டிற்குள்ளாக்குவது அல்லாஹ்வின் நியதி அல்ல! திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாய் இருக்கின்றான். </span>
<span>9:116 உண்மையாகவே வானங்கள் மற்றும் பூமியினுடைய ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்குரியதாகும். வாழ்வும், மரணமும் அவன் கைவசமே உள்ளன. மேலும், அல்லாஹ்வைத் தவிர உங்களைப் பாதுகாப்பவரும் உதவிபுரிபவரும் யாருமில்லை. </span>
<span>9:117 நபியையும், துன்பம் சூழ்ந்த நேரத்தில் அவருக்கு உறுதுணையாய் இருந்த முஹாஜிர்களையும் அன்ஸார்களையும்* அல்லாஹ் பொறுத்தருளினான், அவர்களில் ஒரு சிலரின் உள்ளங்கள் நெறி தவறுதலின்பால் சற்று சாய்ந்துவிட்டிருந்த போதிலும்! (ஆனால் அவர்கள் நெறி தவறிச் செல்லாமல் நபிக்கு பக்கபலமாக இருந்தனர். அப்போது) அல்லாஹ் அவர்களை மன்னித்துவிட்டான். திண்ணமாக, அவன் அவர்கள் விஷயத்தில் அதிகப் பரிவும் கருணையும் கொண்டவனாக இருக்கின்றான். </span>
<span>9:118 மேலும், விவகாரம் ஒத்திப்போடப்பட்டிருந்த மூவரையும் அவன் மன்னித்தான்; அவர்கள் நிலைமை எந்த அளவு மோசமாகி விட்டிருந்ததெனில், பூமி இத்துணை விரிவாய் இருந்தும் அவர்களைப் பொறுத்தவரை அது குறுகி அவர்கள் உயிர்வாழ்வதே கஷ்டமாகி விட்டிருந்தது! இன்னும் அல்லாஹ்விடமிருந்து தப்பிப்பதற்கு அவனுடைய அருளின் பக்கம் திரும்புவதைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். பின்னர், அவர்கள் பாவமன்னிப்புக்கோரி தன்னிடம் மீண்டுவர வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்கள் மீது கருணை பொழிந்தான். திண்ணமாக, அவன் மிக மன்னிப்போனும், கருணையுடையோனுமாய் இருக்கின்றான். </span>
<span>9:119 இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், வாய்மையாளர்களுக்குத் துணையாக இருங்கள்! </span>
<span>9:120 அல்லாஹ்வுடைய தூதருடன் போருக்குச் செல்லாமல் தங்கிவிடுவதும், அவரைப் பொருட்படுத்தாமல் தங்களைப் பற்றியே அதிக அக்கறை கொள்வதும் மதீனாவாசிகளுக்கும் அவர்களைச் சுற்றி வாழும் நாட்டுப்புற அரபிகளுக்கும் அழகல்ல! ஏனெனில் அல்லாஹ்வின் பாதையில் பசி, தாகம் மற்றும் உடற்களைப்பின் எந்த ஒரு துன்பத்தை அவர்கள் சகித்துக் கொண்டாலும், மேலும் சத்தியத்தை நிராகரிப்பவர்களுக்கு வெறுப்பாக இருக்கும் பாதையில் எந்த ஓர் அடியை அவர்கள் எடுத்து வைத்தாலும், மேலும் எந்த ஒரு பகைவனிடமும் (சத்திய விரோதப் போக்கிற்காக) எந்தப் பழியை அவர்கள் வாங்கினாலும் அவை ஒவ்வொன்றுக்கும் பகரமாக அவர்களின் பெயரில் ஒரு நன்மை எழுதப்படாமல் ஒருபோதும் விடப்படமாட்டாது. திண்ணமாக, அல்லாஹ்விடம் நன்னடத்தை உடையோரின் கூலி வீணாக்கப்படுவதில்லை. </span>
<span>9:121 (இதேபோல்) அவர்கள் (அல்லாஹ்வின் வழியில்) சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ செலவு செய்யும் எது ஒன்றும், மேலும் (ஜிஹாதுக்காக) ஏதேனும் ஒரு பள்ளத்தாக்கைக் கடந்து செல்வதும் அவர்களுடைய பேரில் பதிவு செய்யப்படாமல் ஒருபோதும் விடப்பட மாட்டாது. எதற்காகவெனில், இவர்களுடைய சிறப்பான சாதனைகளுக்கான நற்கூலியை அல்லாஹ் இவர்களுக்கு வழங்கிட வேண்டும் என்பதற்காக!</span>
<span>9:122 மேலும், இறைநம்பிக்கை கொண்டவர்கள் அனைவருமே புறப்பட வேண்டுமென்பது தேவையில்லை. எனினும், அவர்கள் வாழும் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒரு சிலர் மட்டும் புறப்படலாமே! எதற்காகவெனில், மார்க்க அறிவை அவர்கள் பெற்றுக்கொண்டு தம் சமுதாயத்தாரிடம் திரும்பிவந்து அவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக! இதன் வாயிலாக (இஸ்லாத்திற்கு மாற்றமான போக்கை) அவர்கள் தவிர்த்துக் கொள்ளக்கூடும்!</span>
<span>9:123 இறைநம்பிக்கை கொண்டவர்களே! இறை மறுப்பாளர்களில் யார் உங்களை அடுத்திருக்கிறார்களோ அவர்களுடன் போர் புரியுங்கள்! அவர்கள் உங்களிடம் கடினமான போக்கைக் காணவேண்டும். மேலும், அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களோடு இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! </span>
<span>9:124 ஏதேனும் ஒரு (புதிய) அத்தியாயம் இறக்கியருளப்பட்டால், அவர்களில் சிலர் “இது உங்களில் எவருடைய நம்பிக்கையை அதிகப்படுத்தியது?” என்று (முஸ்லிம்களிடம் பரிகாசமாய்க்) கேட்கின்றார்கள். உண்மையில் யார் நம்பிக்கையாளர்களோ அவர்களின் நம்பிக்கையை ஒவ்வோர் அத்தியாயமும் அதிகமாக்கியே இருக்கிறது. அதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றார்கள். </span>
<span>9:125 ஆயினும், எவர்களுடைய உள்ளங்களில் (நயவஞ்சகப்) பிணி குடிகொண்டிருந்ததோ அவர்களிடம் ஏற்கனவே இருந்த அசுத்தத்தை அந்த (புதிய) அத்தியாயம் ஒவ்வொன்றும் மேலும் அதிகரிக்கச் செய்தது. மேலும், நிராகரிப்பாளர்களாகவே அவர்கள் மரணமடைந்தார்கள். </span>
<span>9:126 ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறையோ இரு முறையோ அவர்கள் சோதனைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள் என்பதை அவர்கள் கவனிப்பதில்லையா? இவ்வாறிருந்தும் அவர்கள் பாவமன்னிப்புக் கோருவதுமில்லை; நல்லுரை பெறுவதும் இல்லை! </span>
<span>9:127 ஏதாவது ஓர் அத்தியாயம் இறக்கியருளப்பட்டால் அவர்களில் ஒருவர் மற்றவரிடம் “உங்களை யாரும் பார்க்கவில்லையே?” என்று கண்களாலேயே சாடை காட்டி, (அங்கிருந்து) நழுவிச் சென்று விடுகின்றார்கள். அல்லாஹ் அவர்களுடைய இதயங்களைப் புரட்டி விடுகின்றான். ஏனெனில் அவர்கள் எதையும் புரிந்து கொள்ளாத மக்களாய் இருக்கின்றனர். </span>
<span>9:128 (பாருங்கள்!) உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்காளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்களுடைய வெற்றியில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்கள் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கின்றார்</span>
<span>9:129 (இனி) அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் (நபியே!) நீர் கூறிவிடும்: “அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கின்றேன். மேலும், அவன் மகத்தான அர்ஷின்* அதிபதியாயிருக்கின்றான்.”</span>
</div><div>
<span>யூனுஸ்</span>
<span>10:1 அலிஃப், லாம், றா இவை, ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும். </span>
<span>10:2 (அலட்சியத்தில் மூழ்கியிருக்கும்) மக்களை எச்சரிப்பீராக என்றும், ஈமான் நம்பிக்கை கொள்வோர்க்கு அவர்களின் இறைவனிடம் உண்மையான மதிப்பும் கண்ணியமும் உண்டு என்று நற்செய்தி அறிவிப்பீராக என்றும் அவர்களிலிருந்தே ஒரு மனிதருக்கு நாம் வஹி அனுப்பியது அவர்களுக்கு வியப்பாய் இருக்கிறதா? இதனைக் கண்டு இறைநிராகரிப்பாளர்கள் “இவர் ஒரு வெளிப்படையான சூனியக்காரர்” என்று கூறினார்கள். </span>
<span>10:3 உண்மை யாதெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் உங்கள் அதிபதி; அவனே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் ஆட்சி பீடத்தில் அமர்ந்து (பேரண்டத்தின்) அனைத்துச் செயல்பாடுகளையும் நிர்வகித்து வருகின்றான். எந்தப் பரிந்துரையாளரும் அவனது அனுமதி பெறாமல் பரிந்துரைக்க முடியாது! இத்தகைய அல்லாஹ்தான் உங்கள் அதிபதி ஆவான். எனவே, அவனையே வணங்குங்கள்! நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?</span>
<span>10:4 நீங்கள் அனைவரும் அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. இது அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதியாகும். நிச்சயமாக படைப்புகளை முதன் முறையாக அவனே படைக்கின்றான். பின்னர், மறுமுறையும் அவனே அவற்றைப் படைப்பான்; ஏனெனில், இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிவோருக்கு நீதியுடன் கூலி வழங்க வேண்டும் என்பதற்காக! மேலும், எவர்கள் இறைநிராகரிப்புப் போக்கை மேற்கொண்டார்களோ அவர்கள் (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் கொதிக்கும் நீரைக் குடிப்பார்கள்; துன்புறுத்தும் தண்டனையை அனுபவிப்பார்கள். </span>
<span>10:5 அவனே, சூரியனை வெளிச்சம் தரக்கூடியதாக அமைத்தான்; சந்திரனுக்கு ஒளியைக் கொடுத்தான். மேலும், வளர்ந்து தேயும் நிலைகளைச் சந்திரனுக்கு நிர்ணயம் செய்தான்; இவற்றின் மூலம் ஆண்டுகளின் எண்ணிக்கையையும், கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக! இவற்றையெல்லாம் அல்லாஹ் சத்தியத்துடனேயே படைத்துள்ளான். அறிவுடைய மக்களுக்கு அவன் தன் சான்றுகளைத் தெளிவாக விளக்குகின்றான். </span>
<span>10:6 திண்ணமாக, இரவு பகல் மாறி மாறி வருவதிலும்; வானங்கள் மற்றும் பூமியில் அல்லாஹ் படைத்திருப்பவற்றிலும் (தவறான நோக்கிலிருந்தும் நடத்தையிலிருந்தும்) தவிர்ந்து கொள்ள நாடும் மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. </span>
<span>10:7 உண்மை யாதெனில், எவர்கள் நம்மைச் சந்திக்க இருப்பதை நம்பவில்லையோ, மேலும், உலக வாழ்க்கையில் மனநிறைவு கொண்டு அதிலே முழு நிம்மதியும் அடைந்தார்களோ, மற்றும் எவர்கள் நம்முடைய சான்றுகளைக் குறித்து அலட்சியமாக இருக்கின்றார்களோ </span>
<span>10:8 அவர்களின் புகலிடம் (தங்களின் தவறான கொள்கைகள் மற்றும் நடைமுறையினால்) அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீமைகளின் காரணமாக நரகமாகும். </span>
<span>10:9 ஆனால், உண்மையில் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு (அதாவது, இவ்வேதத்தில் எடுத்துரைக்கப்பட்ட சத்தியங்களை ஏற்றுக்கொண்டு) நற்செயல்கள் புரிந்து கொண்டிருந்தார்களோ அவர்களை, அவர்களின் ஈமான் நம்பிக்கையின் காரணத்தால் அவர்களுடைய இறைவன் நேர்வழியில் செலுத்துவான். அருட்கொடைகள் நிறைந்த சுவனங்களில், அவர்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; </span>
<span>10:10 “இறைவா! நீயே தூய்மையானவன்” என்பதே அங்கு அவர்களின் துதியாக இருக்கும். மேலும், “சாந்தி நிலவட்டும்!” என்பதே அவர்களின் வாழ்த்தாக இருக்கும். மேலும், “அகிலத்தார்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!” என்பதே அவர்களுடைய அனைத்து விஷயங்களின் முடிவுரையாக இருக்கும். </span>
<span>10:11 மனிதர்கள் (உலகின்) நன்மைகளைக் கோருவதில் எந்த அளவு அவசரப்படுகின்றார்களோ அந்த அளவு மனிதர்களுக்குத் தீங்கிழைப்பதில் அல்லாஹ்வும் அவசரங் காட்டினால், அவர்களின் செயல்பாட்டிற்கான அவகாசம் என்றைக்கோ முடிக்கப்பட்டு விட்டிருக்கும். (ஆனால் இது நமது நியதி அல்ல.) எனவே, எவர்கள் நம்மைச் சந்திக்க இருப்பதை நம்பவில்லையோ அவர்களை அவர்களின் வரம்பு மீறிய செயல்களிலேயே உழன்று கொண்டிருக்கும்படி நாம் விட்டுவிடுகின்றோம். </span>
<span>10:12 மனிதனின் நிலை எவ்வாறு உள்ளதெனில், அவனுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால், நின்றும், உட்கார்ந்தும், படுத்தும் நம்மிடம் பிரார்த்திக்கின்றான். ஆனால், நாம் அவனுடைய துன்பத்தை அவனை விட்டு நீக்கிவிடும் போது, அவன் தனக்கு ஏற்பட்டிருந்த துன்பத்திற்காக எப்போதுமே நம்மிடம் பிரார்த்திக்காதவன் போல் சென்று விடுகின்றான்! வரம்பு மீறி நடப்பவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் இவ்வாறே அழகாகக் காட்டப்பட்டிருக்கின்றன. </span>
<span>10:13 (மக்களே) உங்களுக்கு முன்னர் வாழ்ந்த பல சமுதாயத்தார்களை அவர்கள் கொடுமைகள் புரிந்தபோது நாம் அழித்துவிட்டோம். அவர்களிடமோ அவர்களின் தூதர்கள் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வந்தனர்; ஆயினும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவே இல்லை. இவ்வாறே குற்றம் புரியும் கூட்டத்தாருக்கு அவர்களின் குற்றத்திற்கான கூலியை நாம் அளிக்கின்றோம். </span>
<span>10:14 பின்னர், அவர்களுக்குப் பிறகு பூமியில் அவர்களுடைய இடத்தில் இப்பொழுது உங்களை அமர்த்தினோம்; நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்ப்பதற்காக!</span>
<span>10:15 மேலும், நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் நம்மைச் சந்திக்க இருப்பதை நம்பாதவர்கள், “இதைத் தவிர வேறொரு குர்ஆனைக் கொண்டு வாரும்; அல்லது இதில் கொஞ்சம் மாற்றம் செய்யும்!” என்று கூறுகிறார்கள். (நபியே!) நீர் கூறும்: “என் விருப்பப்படி அதில் ஏதேனும் மாற்றங்கள் செய்வது என் பணியல்ல. எனக்கு அறிவிக்கப்படுகின்ற இறைச்செய்தியைத்தான் நான் பின்பற்றுகின்றேன். நான் என் இறைவனுக்கு மாறு செய்தால் ஒரு மாபெரும் பயங்கர நாளின் வேதனைக்கு அஞ்சுகின்றேன்.”</span>
<span>10:16 மேலும், நீர் கூறும்: “(நான் ஓதிக் காண்பிக்கக் கூடாது என்று) அல்லாஹ் நாடியிருந்தால், நான் உங்களுக்கு இந்தக் குர்ஆனை ஒருபோதும் ஓதிக் காண்பித்திருக்க மாட்டேன்; மேலும், அல்லாஹ்வும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். இதற்கு முன்னர் நீண்ட காலம் நான் உங்களுக்கு மத்தியில் வாழ்ந்திருக்கின்றேன். நீங்கள் சிந்தித்துணர வேண்டாமா?</span>
<span>10:17 அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனைவிட அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யென்று கூறுபவனைவிட பெரிய அக்கிரமக்காரன் யார்? நிச்சயமாக குற்றவாளிகள் ஒருபோதும் வெற்றியடையமாட்டார்கள்!”</span>
<span>10:18 இவர்கள், அல்லாஹ்வை விட்டுவிட்டு யாதொரு நஷ்டத்தையும், இலாபத்தையும் தங்களுக்கு அளித்திட இயலாதவற்றை வணங்குகின்றார்கள். மேலும், இவை எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைக்கும் என்றும் கூறுகின்றார்கள். (நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: “வானங்களிலோ பூமியிலோ அல்லாஹ் அறியாதவற்றை நீங்கள் அவனுக்கு அறிவித்துக் கொடுக்கின்றீர்களா?” இவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் தூய்மையானவனும் உயர்ந்தவனுமாவான். </span>
<span>10:19 மேலும், (தொடக்கத்தில்) மக்கள் அனைவரும் ஒரே சமுதாயமாகவே இருந்தனர்; பின்னர் பல்வேறு கொள்கைகளையும், வழிமுறைகளையும் தோற்றுவித்தனர். உம் இறைவனிடம் முன்னரே ஒரு விஷயம் முடிவு செய்யப்பட்டிராவிட்டால், அவர்கள் கருத்து முரண்பாடு கொண்டிருக்கும் விஷயத்தில் அவர்களுக்கிடையே தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டிருக்கும். </span>
<span>10:20 மேலும், “இந்த நபியின் மீது அவருடைய இறைவனிட மிருந்து ஏதேனும் ஒரு சான்று இறக்கி வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?” என்று அவர்கள் கேட்கின்றார்கள். நபியே! நீர் கூறும்: “மறைவானவற்றுக்கு உரியவன் அல்லாஹ்வே ஆவான். நீங்கள் எதிர்பாருங்கள்; நானும் உங்களோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.”</span>
<span>10:21 மனிதர்(களின் நிலை எவ்வாறு உள்ளதெனில் அவர்)களுக்குத் துன்பம் ஏற்பட்ட பின் நாம் அவர்களுக்கு அருட் கொடை(யின் சுவை)யை சுவைக்கச் செய்தால், உடனே அவர்கள் நம் சான்றுகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்யத் தொடங்கி விடுகின்றார்கள். நீர் கூறுவீராக: “அல்லாஹ் சூழ்ச்சிகளை (முறியடிக்கச்) செய்வதில் மிக விரைவானவன். அவனுடைய வானவர்கள் நீங்கள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளை எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.” </span>
<span>10:22 தரையிலும், கடலிலும் உங்களை இயங்கச் செய்பவன் அவனே! பிறகு, நீங்கள் கப்பல்களில் ஏறி, சாதகமாக வீசும் காற்றோடு மகிழ்ச்சிபூர்வமாக பயணம் செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று கடுமையான எதிர்க்காற்று வீசுகிறது. மேலும், எல்லாப் பக்கங்களிலிருந்தும் அலைகள் தாக்குகின்றன. அப்பொழுது தாம் கடும் பிரளயத்தால் சூழப்பட்டுள்ளதாகப் பயணிகள் எண்ணுகிறார்கள். அந்நேரத்தில் அவர்கள் கீழ்ப்படிதலை (தீனை) அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி, “(இறைவா!) இத்துன்பத்திலிருந்து நீ எங்களைக் காப்பாற்றினால் திண்ணமாக நாங்கள் நன்றியுடையவர்களாய் இருப்போம்” என்று அவனிடம் இறைஞ்சுகின்றார்கள். </span>
<span>10:23 ஆயினும் அல்லாஹ் அவர்களைக் காப்பாற்றிவிட்டாலோ, உடனே அவர்கள் சத்தியத்திற்கு எதிராக பூமியில் வரம்பு மீறி நடக்கத் தலைப்பட்டு விடுகின்றார்கள். மக்களே! உங்களுடைய இந்த வரம்பு மீறுதல் உங்களுக்குத்தான் கேடு விளைவிக்கும். உலக வாழ்வின் அற்ப இன்பங்களை அனுபவித்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் நம்மிடமே திரும்ப வரவேண்டியுள்ளது. அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை நாம் உங்களுக்கு அறிவித்து விடுவோம். </span>
<span>10:24 (எந்த உலக வாழ்க்கையின் போதையில் மயங்கி நம் சான்றுகள் குறித்து நீங்கள் அலட்சியமாக இருக்கின்றீர்களோ அந்த) உலக வாழ்க்கையின் உதாரணம் இதைப் போன்றதாகும்: நாம் வானத்திலிருந்து மழையை இறக்கினோம்; பின்னர் அதன் மூலம் மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக்கூடிய பூமியின் விளைபொருள்கள் நன்கு அடர்த்தியாக வளர்ந்தன; பூமி அழகாகவும், செழுமையாகவும் காட்சியளிக்க, அதன் பலனை அடைந்திட தாங்கள் ஆற்றல் பெற்றுள்ளோம் என அதன் உரிமையாளர்கள் எண்ணிக் கொண்டிருந்த அதே நேரத்தில் திடீரென இரவிலோ, பகலிலோ நம்முடைய கட்டளை வந்துவிட்டது! மேலும், நேற்று வரை எதுவும் அங்கு விளைந்திருக்காதது போல அதனை முற்றாக நாம் அழித்து விட்டோம்; சிந்தித்துணரும் மக்களுக்கு இவ்வாறு சான்றுகளை மிகத் தெளிவாக நாம் விளக்குகின்றோம். </span>
<span>10:25 (இந்த நிலையற்ற வாழ்வின் மோகத்தில் நீங்கள் மயங்கிக் கிடக்கின்றீர்கள்). அல்லாஹ் உங்களை அமைதி இல்லத்திற்கு அழைத்துக் கொண்டிருக்கின்றான். (நேர்வழி காட்டும் ஆற்றல் அவனிடமே உள்ளது.) தான் நாடுவோர்க்கு அவன் நேர்வழி அளிக்கின்றான். </span>
<span>10:26 எவர்கள் நன்மை புரிந்தார்களோ அவர்களுக்கு (கூலி) நன்மையே! இன்னும் அதிகப்படியான அருளும் கிடைக்கும். அவர்களின் முகங்களில் பாவப் புழுதியும் இழிவும் படியமாட்டா! அவர்கள் சுவனத்திற்குரியவர்களாவர். அதில் அவர்கள் நிலையாக வாழ்வார்கள். </span>
<span>10:27 மேலும், தீமைகளைச் சம்பாதித்தவர்கள், அத் தீமைக்கேற்பக் கூலி பெறுவார்கள். மேலும், அவர்களை இழிவு சூழ்ந்திருக்கும்; அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்றுபவர் யாரும் இருக்க மாட்டார்கள். இரவின் இருட்திரைகளால் மூடப் பட்டிருப்பது போன்று அவர்களின் முகங்களில் இருள் படிந்திருக்கும். அவர்கள் நரகத்திற்குரியவர்களாவர். அதில் அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள். </span>
<span>10:28 மேலும், ஒரு நாளில் அவர்கள் அனைவரையும் (நம்முடைய நீதிமன்றத்தில்) நாம் ஒன்று திரட்டுவோம். பின்னர் இறைவனுக்கு இணைவைத்தவர்களிடம், “நீங்களும், நீங்கள் ஏற்படுத்திய கடவுளர்களும் உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்!” என்று கூறுவோம். பின்னர் அவர்களுக்கிடையிலிருந்த அறிமுகமற்ற நிலையை அகற்றிவிடுவோம். அப்போது அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட கடவுளர்கள், “நீங்கள் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லை என்று கூறுவார்கள்;</span>
<span>10:29 எங்களுக்கும் உங்களுக்குமிடையே அல்லாஹ்வின் சாட்சி போதுமானது. (நீங்கள் எங்களை வணங்கியிருந்தாலும்) உங்கள் வணக்கத்தை நாங்கள் அறவே அறியாதிருந்தோம்’ என்றும் கூறுவார்கள். </span>
<span>10:30 அந்நாளில் ஒவ்வொரு மனிதனும் தான் செய்த வினைக(ளுக்குரிய கூலிக)ளை அனுபவிப்பான். மேலும், தம்முடைய உண்மையான எஜமானனாகிய அல்லாஹ்விடம் அவர்கள் அனைவரும் திரும்பக் கொண்டுவரப்படுவார்கள். அவர்கள் கற்பனை செய்து வந்த பொய்(த் தெய்வங்)கள் அனைத்தும் அவர்களை விட்டுக் காணாமல் போய்விடும்!</span>
<span>10:31 (நபியே! இவர்களிடம்) கேளும்: “வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? மேலும், உங்களிடமுள்ள கேட்கும் மற்றும் பார்க்கும் ஆற்றல்கள் யாருடைய அதிகாரத்தில் உள்ளன? மேலும், உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் தோற்றுவிப்பவன் யார்? மேலும், அகிலத்தின் ஒழுங்கமைப்பை நிர்வகிப்பவன் யார்?” அதற்கவர்கள் “அல்லாஹ்தான்” என்று பதில் கூறுவார்கள். “அவ்வாறாயின் நீங்கள் (உண்மைக்கு மாறாக நடப்பதை) தவிர்த்துக் கொள்ளக் கூடாதா?” என்று கேளும். </span>
<span>10:32 ஆகவே இந்த அல்லாஹ்தான் உங்களின் உண்மையான இறைவன்! இந்த உண்மையைக் கைவிட்ட பிறகு வழிகேட்டைத் தவிர வேறு என்ன எஞ்சியிருக்கும்? நீங்கள் எங்கு திருப்பப்படுகின்றீர்கள்? </span>
<span>10:33 (நபியே! பாரும்:) இவ்வாறு இறைக்கட்டளைக்கு மாறு செய்யும் போக்கினை மேற்கொள்வோர் குறித்து “திண்ணமாக அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்” என்ற உம் இறைவனின் வாக்கு உண்மையாகிவிட்டது. </span>
<span>10:34 “நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட கடவுளர்களுள் படைப்புகளை முதன்முறையில் படைத்து பின்னர் மறு முறையும் அவற்றைப் படைக்கக்கூடியவர் எவரும் உள்ளனரா?” என்று (நபியே!) நீர் கேளும் நீர் கூறும்: “அல்லாஹ்தான் படைப்புகளை முதன் முறையும் படைக்கின்றான்; பின்னர் அவற்றை மறுமுறையும் படைக்கின்றான். இதன் பிறகும் நீங்கள் எவ்வாறு வழி மாற்றப்படுகின்றீர்கள்?”</span>
<span>10:35 (நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: “உங்களால் உருவாக்கப்பட்ட கடவுளர்களில் சத்தியத்தின் பக்கம் வழி காட்டக்கூடியவர் எவரேனும் உண்டா?” நீர் கூறும்: “அல்லாஹ்தான் சத்தியத்தின் பக்கம் வழிகாட்டுகின்றான். ஆகவே, சத்தியத்தின் பக்கம் வழிகாட்டுபவன் பின்பற்றத் தகுந்தவனா? அல்லது பிறர் வழிகாட்டுதலின்றி தானாக நேர்வழியைப் பெறமுடியாதவன் பின்பற்றத் தகுந்தவனா? உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நீங்கள் எப்படியெல்லாம் (தவறான) முடிவுகளை எடுக்கின்றீர்கள்!”</span>
<span>10:36 உண்மையில், அவர்களில் பெரும்பாலோர் ஊகத்தைத்தான் பின்பற்றிச் சென்று கொண்டிருக்கின்றார்கள். ஆனால், ஊகமோ சத்தியத்தின் தேவையை சற்றும் நிறைவேற்றாது. இவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாய் இருக்கின்றான். </span>
<span>10:37 இந்தக் குர்ஆன் அல்லாஹ்(வின் வஹியே தவிர அவன்) அல்லாதவர்களால் புனைந்துரைக்கப்பட்டதன்று; உண்மையில் இது தனக்கு முன்னால் வந்துள்ள வேதங்களை மெய்ப்படுத்தக் கூடியதாகவும், ‘அல் கிதாபின்’ விளக்கமாகவும் திகழ்கின்றது. இது அகிலங்களின் அதிபதியிடமிருந்து வந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. </span>
<span>10:38 என்ன, இவர்கள் இறைத்தூதர் இதனைச் சுயமாக இயற்றியுள்ளார் என்று கூறுகின்றார்களா? நீர் கூறும்: “(இக் குற்றச்சாட்டில்) நீங்கள் உண்மையானவர்களாயின், இதுபோன்ற ஓர் அத்தியாயத்தை இயற்றிக்கொண்டு வாருங்கள். மேலும், அல்லாஹ்வை விடுத்து (உதவிக்காக) யார் யாரை உங்களால் அழைக்க முடியுமோ அவர்களையெல்லாம் அழைத்துக் கொள்ளுங்கள்!” </span>
<span>10:39 உண்மையில் எந்த வேதத்தை இவர்கள், தம் அறிவால் புரிந்து கொள்ளவில்லையோ அந்த வேதத்தையும், அது விடுக்கும் எச்சரிக்கையின் இறுதி விளைவு அவர்களிடம் வராத நிலையில் அதையும் (வெறும் கற்பனையின் அடிப்படையில்) பொய் என்று கூறுகின்றார்கள். இவ்வாறே இவர்களுக்கு முன் சென்றுபோன மக்களும் பொய்யென்று கூறி வந்தனர். எனவே, அந்த அக்கிரமக்காரர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பாரும்! </span>
<span>10:40 அவர்களில் சிலர் இதன் மீது நம்பிக்கை கொள்வார்கள். வேறு சிலர் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். இத்தகைய குழப்பவாதிகளை உம்முடைய இறைவன் நன்கறிபவனாக இருக்கின்றான். </span>
<span>10:41 மேலும், இவர்கள் உம்மைப் பொய்யர் என்று சொன்னால் நீர் கூறும்: “என்னுடைய செயல் எனக்குரியது; உங்களுடைய செயல் உங்களுக்குரியது. நான் செய்கின்ற செயல்களுக்கு நீங்கள் பொறுப்பாளர்களல்லர். நீங்கள் செய்கின்ற செயல்களுக்கு நானும் பொறுப்பாளன் அல்லன்!”</span> 
<span>10:42 மேலும், நீர் கூறுவதைக் கேட்பவர் (கள் போல பாவனை செய்பவர்)கள் அவர்களில் பலர் இருக்கிறார்கள். அவர்கள் எதையும் விளங்காமல் இருந்தாலும் அச்செவிடர்களைக் கேட்கும்படிச் செய்ய உம்மால் முடியுமா? </span>
<span>10:43 மேலும், உம்மைப் பார்ப்பவர்(போல பாவனை செய்பவர்)கள் அவர்களில் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் புலப்படாவிட்டாலும் அக்குருடர்களுக்கு உம்மால் வழிகாட்ட முடியுமா?</span>
<span>10:44 உண்மையில் அல்லாஹ் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை. எனினும் மனிதர்கள் தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொள்கின்றார்கள். </span>
<span>10:45 (இன்று இவர்கள் உலக வாழ்க்கையில் மதிமயங்கிக் கிடக்கின்றார்கள்.) ஆனால் அல்லாஹ் அவர்களை ஒன்று திரட்டும் நாளில், (இவ்வுலக வாழ்க்கை அவர்களுக்கு எவ்வாறு தோன்றுமெனில்) தமக்கிடையே ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்வதற்காக பகலின் சொற்ப நேரமே தவிர (உலகில்) தாங்கள் தங்கியிருக்கவில்லை என்பது போல் தோன்றும்! அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்யென்று கூறியவர்களும், ஒருபோதும் நேர் வழியின்படி வாழாதவர்களும் நிச்சயமாக பேரிழப்பிற்கு ஆளாகி விட்டார்கள் (என்பதும் அன்று உறுதியாகிவிடும்). </span>
<span>10:46 அவர்களுக்கு நாம் எச்சரிக்கை செய்துகொண்டிருக்கின்ற தீய விளைவின் ஒரு பகுதியை (நீர் உயிர் வாழும் போதே) காண்பித்து விட்டாலும் அல்லது (அதற்கு முன்னரே) நாம் உம்மை எடுத்துக் கொண்டாலும் எவ்வாறாயினும் நம்மிடமே அவர்கள் திரும்பி வர வேண்டியுள்ளது. மேலும், அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ அவற்றுக்கு அல்லாஹ் சாட்சியாக இருக்கின்றான். </span>
<span>10:47 ஒவ்வோர் உம்மத்திற்கும் ஓர் இறைத்தூதர் இருக்கிறார். பிறகு (ஏதேனும் உம்மத்தாரிடம்) அவர்களின் தூதர் வந்துவிட்டால், அவர்களுடைய கதி நீதியின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. மேலும், அவர்கள் மீது (இம்மியளவும்) அநீதி இழைக்கப்படுவதில்லை. </span>
<span>10:48 மேலும், “உங்களுடைய இந்த எச்சரிக்கை உண்மையாக இருந்தால் அது எப்போது நிறைவேறும்?” என்று அவர்கள் வினவுகின்றார்கள். </span>
<span>10:49 (நபியே!) நீர் கூறும்: “எனக்கு நானே பலனளித்துக் கொள்ளவும், நஷ்டம் விளைவித்துக் கொள்ளவும்கூட எனக்கு அதிகாரமில்லை. ஆனால், அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்தே இருக்கின்றன. ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு தவணை உண்டு. அவர்களுடைய இத்தவணை நிறைவடைந்து விட்டால் அவர்கள் ஒரு விநாடி பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.” </span>
<span>10:50 (நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: “நீங்கள் என்றாவது சிந்தித்திருக்கின்றீர்களா? அல்லாஹ்வின் வேதனை இரவிலோ பகலிலோ (திடீரென்று) உங்களிடம் வந்துவிட்டால் (அப்போது உங்களால் என்ன செய்ய இயலும்?) இக்குற்றவாளிகள் எதற்காக அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? </span>
<span>10:51 அது உங்களை வந்து தாக்கும்போதுதான் அதனை நம்புவீர்களா? இப்போது தப்பிக்கப் பார்க்கின்றீர்களா? அது வரவேண்டுமென்று நீங்கள்தானே அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்கள். </span>
<span>10:52 பிறகு அந்த அக்கிரமக்காரர்களிடம் கூறப்படும்: “இதோ! நிரந்தரமான வேதனையைச் சுவையுங்கள்! எதனை நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தீர்களோ அதற்குரிய தண்டனையைத் தவிர வேறு என்ன கூலிதான் உங்களுக்கு அளிக்கப்படும்?”</span>
<span>10:53 மேலும், “நீர் கூறுவது உண்மைதானா?” என்று உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும்: “என் இறைவன் மீது ஆணையாக! அது முற்றிலும் உண்மையானதே! மேலும், அதனைத் தடுத்து நிறுத்தும் வலிமையை நீங்கள் பெற்றிருக்கவில்லை.”</span>
<span>10:54 அக்கிரமம் செய்த ஒவ்வொருவனும் தன்னிடம் இந்த பூமியில் உள்ள செல்வம் அனைத்தும் இருந்தாலும், அந்த வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள அதனை (முழுவதும்) ஈடாக அளிப்பதற்குத் தயாராகி விடுவான். மேலும், இவர்கள் அவ்வேதனையைக் காணும்போது உள்ளூரப் பெரிதும் வருந்து வார்கள். ஆயினும், அவர்களிடையே முற்றிலும் நியாயமான முறையில் தீர்ப்பு வழங்கப்படும்; அவர்கள் (எவ்வகையிலும்) அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். </span>
<span>10:55 தெரிந்து கொள்ளுங்கள்! வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்துப் பொருள்களும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். தெரிந்து கொள்ளுங்கள்! திண்ணமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது! ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அறியாமலிருக்கின்றனர். </span>
<span>10:56 அவனே வாழ்வை அளிக்கின்றான். மேலும், மரணம் அளிப்பவனும் அவனே! மேலும் நீங்கள் அனைவரும் அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!</span>
<span>10:57 மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அறிவுரை உங்களிடம் திண்ணமாக வந்திருக்கிறது. இது இதயங்களில் உள்ள நோய்களைக் குணப்படுத்தக்கூடியதாகவும், தன்னை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களுக்கு வழி காட்டக்கூடிய தாகவும், ஓர் அருட்கொடையாகவும் திகழ்கின்றது. </span> 
<span>10:58 (நபியே) நீர் கூறும்: “அல்லாஹ் தன்னுடைய கருணையைக் கொண்டும் அருளைக் கொண்டும் இதனை இறக்கியுள்ளான். இதனைக் குறித்து மக்கள் மகிழ்ச்சி அடையட்டும். அவர்கள் சேகரித்துக் கொண்டிருக்கும் எல்லாவற்றையும்விட இது சிறந்ததாகும்.”</span>
<span>10:59 (நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: “நீங்கள் எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கின்றீர்களா? அல்லாஹ் உங்களுக்கு இறக்கியருளிய ரிஜ்கில் (அருட்பேற்றில்) சிலவற்றைத் தடுக்கப்பட்டவை என்றும், வேறு சிலவற்றை அனுமதிக்கப்பட்டவை என்றும் ஏற்படுத்திக் கொண்டீர்களே!” (நபியே! இவர்களிடம்) கேளுங்கள்: “இதற்கு அல்லாஹ் உங்களுக்கு அனுமதியளித்திருந்தானா? அல்லது நீங்கள் அல்லாஹ்வின் மீது புனைந்துரைக்கின்றீர்களா?” </span>
<span>10:60 அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைக்கின்றவர்கள் மறுமை நாளில் தங்களுக்கு ஏற்படும் நிலையைப் பற்றி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்? திண்ணமாக, அல்லாஹ் மக்கள் மீது கருணையுடையவனாக இருக்கின்றான். ஆனால், அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. </span>
<span>10:61 (நபியே!) நீர் எந்த நிலைமையிலிருந்தாலும், குர்ஆனிலிருந்து எதை நீர் ஓதிக் காண்பித்தாலும், (மக்களே) நீங்களும் எந்தச் செயலைச் செய்து கொண்டிருந்தாலும், அதை நீங்கள் செய்து கொண்டிருக்கும் போதே நாம் உங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். ஆக, வானம் மற்றும் பூமியில் உள்ள பொருள்களில் அணுவளவும் உம் இறைவனின் பார்வையை விட்டு மறைவானதல்ல! அதைவிடச் சிறியதோ, பெரியதோ அனைத்தும் ஒரு தெளிவான பதிவேட்டில் எழுதப்படாமல் இல்லை. </span>
<span>10:62 தெரிந்து கொள்ளுங்கள்! திண்ணமாக, அல்லாஹ்வின் நேசர்களுக்கு எத்தகைய அச்சமும் இல்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். </span>
<span>10:63 அவர்களோ நம்பிக்கை கொண்டு இறையச்சமுள்ள போக்கினை மேற் கொண்டிருந்தார்கள். </span>
<span>10:64 இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் அவர்களுக்கு நற்செய்திகள் இருக்கின்றன. அல்லாஹ்வின் வாக்குகள் மாறக்கூடியவையல்ல! இதுதான் மாபெரும் வெற்றியாகும். </span>
<span>10:65 (நபியே!) அவர்களுடைய (அவதூறான) பேச்சுகள் உம்மைக் கவலையில் ஆழ்த்திவிட வேண்டாம்! கண்ணியம் முழுவதும் திண்ணமாக அல்லாஹ்வின் அதிகாரத்தில் இருக்கிறது. அவன் அனைத்தையும் கேட்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>10:66 அறிந்து கொள்ளுங்கள்! வானங்களில் உள்ளவர்கள், பூமியில் உள்ளவர்கள் அனைவரும் அல்லாஹ்விற்குரியவர்களாவர். எவர்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு (தாம் உருவாக்கிக் கொண்ட) தெய்வங்களை அழைக்கின்றார்களோ அவர்கள் வெறும் யூகங்களைத்தான் பின்பற்றுகின்றார்கள். மேலும், வெறும் கற்பனைகளில்தான் மூழ்கியிருக்கின்றார்கள். </span>
<span>10:67 அல்லாஹ்தான் உங்களுக்காக இரவை அமைத்தான்; அதில் நீங்கள் நிம்மதி பெறவேண்டும் என்பதற்காக! மேலும், பகலை ஒளிமிக்கதாக அமைத்தான்! திண்ணமாக (திறந்த மனத்துடன் இறைத்தூதரின் அழைப்பைச்) செவிமடுக்கும் மக்களுக்கு இதில் பல சான்றுகள் இருக்கின்றன. </span>
<span>10:68 ‘அல்லாஹ் தனக்கு ஒரு மகனை ஏற்படுத்திக் கொண்டான்’ என மக்கள் கூறிவிட்டார்கள். (ஸுப்ஹானல்லாஹ்) அல்லாஹ் புனிதமானவன்! அவன் தேவைகள் இல்லாதவன். வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுக்கே உரியனவாகும். இந்நிலையில் இக்கூற்றுக்கு உங்களிடம் என்னதான் ஆதாரம் இருக்கிறது? நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது ஏற்றிச் சொல்கின்றீர்களா? </span>
<span>10:69 (நபியே!) நீர் கூறும்: “எவர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுகின்றார்களோ அவர்கள் ஒருபோதும் வெற்றியடைவதில்லை.”</span>
<span>10:70 உலகில் (அவர்கள் அனுபவிப்பது) கொஞ்ச நாள் வாழ்க்கைதான்! பிறகு நம்மிடமே அவர்கள் திரும்ப வரவேண்டியுள்ளது. பின்னர் அவர்கள் மேற்கொண்டிருந்த நிராகரிப்புப் போக்கிற்குப் பகரமாக கடுமையான வேதனையை அவர்கள் சுவைக்கும்படிச் செய்வோம். </span>
<span>10:71 மேலும், (நபியே!) இவர்களுக்கு நூஹுடைய செய்தியை எடுத்துரைப்பீராக! அவர் தன்னுடைய சமுதாயத்தினரை நோக்கி கூறினார்: “என் சமுதாயத்தினரே! நான் உங்களிடையே வாழ்வதையும் அல்லாஹ்வின் வசனங்களை (அவ்வப்போது) நான் எடுத்துரைத்து நினைவூட்டிக் கொண்டிருப்பதையும் உங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லையென்றால் (அறிந்து கொள்ளுங்கள்:) நான் அல்லாஹ்வையே சார்ந்திருக்கின்றேன். நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட கடவுளர்களின் உதவியைப் பெற்று உங்களுக்கிடையே ஒருமித்த தீர்மானத்திற்கு வாருங்கள்! பிறகு அந்தத் தீர்மானத்தின் எந்த அம்சமும் உங்கள் பார்வையிலிருந்து மறைந்துவிடாவண்ணம் அதனைப் பற்றி நன்கு சிந்தித்துக் கொள்ளுங்கள்; பிறகு (அதனை) எனக்கெதிராகச் செயல்படுத்துங்கள்; மேலும், எனக்குச் சற்றும் அவகாசம் அளிக்காதீர்கள்! </span>
<span>10:72 நீங்கள் (என் நல்லுரையைப்) புறக்கணித்தால் எனக்கு ஒன்றும் இழப்பு ஏற்பட்டு விடாது. நான் உங்களிடம் கூலி எதனையும் கேட்கவில்லை. என்னுடைய கூலி அல்லாஹ்விடமே உள்ளது. (எவர் ஏற்றுக்கொண்டாலும், ஏற்காவிட்டாலும்) நான் இறைவனுக்கு அடிபணிந்து வாழ்பவனாக (முஸ்லிமாக) விளங்க வேண்டும் என்றே நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.” </span>
<span>10:73 அவர்கள் அவரைப் ‘பொய்யர்’ என்று கூறினார்கள். இதன் விளைவாக நாம் அவரையும் அவருடன் கப்பலிலிருந்த மக்களையும் காப்பாற்றினோம்; மேலும் அவர்களை (இப்பூமியில்) பிரதிநிதிகளாக்கினோம். மேலும், நம் வசனங்களைப் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த அனைவரையும் மூழ்கடித்தோம். பாருங்கள்! எச்சரிக்கப்பட்டிருந்(தும் ஏற்றுக் கொள்ளா)தவர்களின் கதி என்னவாயிற்று?</span>
<span>10:74 பின்னர், நாம் நூஹுக்குப் பிறகு தூதர்கள் பலரை அவரவர்களுடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். மேலும், அத்தூதர்கள் அவர்களிடம் மிகத் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். ஆயினும், எவற்றை முன்னர் பொய்யெனக் கூறிவந்தார்களோ அவற்றை அவர்கள் இப்போதும் ஏற்றுக் கொள்ளவில்லை. இவ்வாறே வரம்பு மீறிச் செல்வோரின் உள்ளங்கள் மீது நாம் முத்திரையிட்டு விடுகின்றோம். </span>
<span>10:75 பின்னர், அவர்களுக்குப் பிறகு மூஸா மற்றும் ஹாரூனை, ஃபிர்அவ்னிடமும், அவனுடைய சமூகப் பிரமுகர்களிட மும் நம்முடைய சான்றுகளுடன் அனுப்பி வைத்தோம். ஆனால், அவர்கள் தற்பெருமை கொண்டதோடு குற்றம் புரியும் கூட்டத்தினராய் இருந்தனர். </span>
<span>10:76 எனவே, நம்மிடமிருந்து சத்தியம் அவர்களிடம் வந்தபோது, “திண்ணமாக இது வெளிப்படையான சூனியம்” என்று கூறினார்கள். </span>
<span>10:77 அதற்கு மூஸா கூறினார்: “சத்தியம் உங்களிடம் வந்த பிறகு அதைப் பற்றியா இவ்வாறு கூறுகின்றீர்கள்? இது என்ன சூனியமா? உண்மையில் சூனியக்காரர்கள் வெற்றி பெறுவதில்லை.”</span>
<span>10:78 அதற்கு அவர்கள் பதில் கூறினார்கள்: “எங்கள் முன்னோர்கள் எந்த வழியில் வாழ்ந்திடக் கண்டோமோ அந்த வழியிலிருந்து எங்களைத் திருப்பிவிட வேண்டும்; மேலும், இப்புவியில் உங்களுடைய மேலாதிக்கம் நிலை நாட்டப்பட வேண்டும் என்பதற்காகவா நீர் எங்களிடம் வந்திருக்கிறீர்? ஆகவே உங்களிருவரையும் நாங்கள் நம்பவே மாட்டோம்!” </span>
<span>10:79 மேலும், ஃபிர்அவ்ன், “கைதேர்ந்த சூனியக்காரர்கள் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று தன்னைச் சேர்ந்தவர்களிடம் கூறினான். </span>
<span>10:80 சூனியக்காரர்கள் வந்தபோது மூஸா, அவர்களை நோக்கி, “நீங்கள் எறிய இருப்பவற்றை எறியுங்கள்!” என்றார். </span>
<span>10:81 அவர்கள் எறிந்தபோது, மூஸா கூறினார்: “நீங்கள் நிகழ்த்திக்காட்டியது சூனியமேயாகும். திண்ணமாக, அல்லாஹ் அதனை இப்பொழுதே தகர்த்து விடுவான். ஏனெனில், அல்லாஹ் குழப்பம் புரிவோரின் செயலைச் சீர்படுத்துவதில்லை. </span>
<span>10:82 அல்லாஹ் தன் கட்டளைகளைக் கொண்டு சத்தியத்தை சத்தியம்தான் என்று நிரூபித்து விடுகின்றான். குற்றவாளிகளுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!”</span>
<span>10:83 (பாருங்கள்!) ஃபிர்அவ்னுக்கு அஞ்சியும், அவன் வேதனையில் ஆழ்த்திவிடுவானோ என்று பயந்த சமூகப் பிரமுகர்களுக்கு அஞ்சியும் மூஸாவை அவருடைய சமூகத்தாரில் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை சில இளைஞர்களைத் தவிர! உண்மை யாதெனில், ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெரும் வல்லமை கொண்டவனாக இருந்தான். திண்ணமாக, அவன் எந்த எல்லையை மீறுவதற்கும் தயங்காதவர்களில் ஒருவனாக இருந்தான். </span>
<span>10:84 மூஸா (தன் சமூகத்தாரை நோக்கிக்) கூறினார்: “என் சமூகத்தவரே! நீங்கள் உண்மையில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அவனையே முற்றிலும் சார்ந்து வாழுங்கள் நீங்கள் முஸ்லிம்களாக இருந்தால்!” </span>
<span>10:85 அதற்கு அவர்கள் பதில் அளித்தார்கள். “நாங்கள் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறோம். எங்கள் இறைவனே! அக்கிரமம் புரியும் கூட்டத்தாருக்கு எங்களை ஒரு சோதனையாக ஆக்கிவிடாதே! </span>
<span>10:86 மேலும், நிராகரிக்கும் கூட்டத்தாரிடமிருந்து உனது கருணையினால் எங்களைக் காப்பாற்றுவாயாக!”</span>
<span>10:87 மேலும், நாம் மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும் வஹி அறிவித்தோம்: “உங்களுடைய சமுதாயத்தாருக்காக எகிப்தில் சில இல்லங்களை அமைத்துக் கொள்ளுங்கள்! மேலும், உங்களுடைய அந்த இல்லங்களை கிப்லா ஆக்கிக் கொண்டு தொழுகையை நிலைநாட்டுங்கள்! மேலும், இறைநம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி அறிவியுங்கள்!”</span>
<span>10:88 மூஸா இவ்வாறு இறைஞ்சினார்: “எங்கள் இறைவனே! நீ ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய பிரமுகர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும் செல்வங்களையும் வழங்கியுள்ளாய்; எங்கள் இறைவனே! உன் வழியில் செல்லவிடாமல் (மக்களை) அவர்கள் திசை திருப்புவதற்காகவா (அவற்றை நீ அளித்திருக்கின்றாய்)? எங்கள் இறைவனே! அவர்களின் செல்வங்களை அழித்து விடுவாயாக! மேலும், துன்புறுத்தும் வேதனையைக் கண்ணால் காணும்வரை அவர்கள் நம்பிக்கை கொள்ளாதவாறு அவர்களுடைய இதயங்களை இறுகச்செய்வாயாக!” </span>
<span>10:89 அதற்கு அல்லாஹ் பதில் கூறினான்: “உங்கள் இருவருடைய இறைஞ்சுதலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே நீங்கள் நிலைகுலையாமல் இருங்கள்! அறியாதவர்களின் வழிமுறையை ஒருபோதும் நீங்கள் பின்பற்றாதீர்கள்!”</span>
<span>10:90 மேலும், நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களைக் கடலைக் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும் அநீதியும், அக்கிரமமும் இழைப்பதற்காக அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர். இறுதியில், ஃபிர்அவ்ன் நீரில் மூழ்கத் தொடங்கியபோது அலறினான்: “இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் எந்த இறைவன் மீது நம்பிக்கை கொண்டார்களோ அவனைத் தவிர உண்மையான இறைவன் வேறு யாருமில்லை என்று நானும் நம்பிக்கை கொண்டேன். மேலும் (அந்த இறைவனுக்குக்) கீழ்ப்படிந்து நடப்பவர்களில் நானும் ஒருவனாவேன்!” </span>
<span>10:91 (பதில் கூறப்பட்டது:) “இப்போதா நம்பிக்கை கொள்கிறாய்? இதற்குச் சற்று முன்வரை நீ மாறுசெய்து கொண்டிருந்தாய். குழப்பம் விளைவிப்பவர்களில் ஒருவனாயும் இருந்தாய். </span>
<span>10:92 இன்று உன் உடலை மட்டும் நாம் காப்பாற்றுவோம்; உனக்குப் பின்னால் வரக்கூடிய மக்களுக்குப் படிப்பினை தரும் சான்றாக விளங்கும் பொருட்டு! ஆயினும், மக்களில் பெரும்பாலோர் நம் சான்றுகளை அலட்சியப்படுத்துபவர்களாய் இருக்கின்றனர்.”</span>
<span>10:93 நாம் இஸ்ராயீயிலின் வழித்தோன்றல்களை மிகச் சிறந்த இடத்தில் வசிக்கச் செய்தோம். மேலும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கை வசதிகளையும் வழங்கினோம். உண்மையான அறிவு அவர்களிடம் வந்த பின்னரேயன்றி, அவர்கள் பிளவுபடவில்லை. அவர்கள் எதில் பிளவுபட்டிருந்தார்களோ அதைக் குறித்து மறுமைநாளில் அவர்களுக்கு இடையே திண்ணமாக உம்முடைய இறைவன் தீர்ப்பு வழங்குவான். </span>
<span>10:94 நாம் உம்மீது இறக்கியருளியவற்றில் உமக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், உமக்கு முன்பிருந்தே வேதத்தைப் படித்துக் கொண்டிருப்பவர்களிடம் நீர் கேளும். உண்மையில் உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்தியமே வந்துள்ளது. எனவே, சந்தேகம் கொள்வோருள் நீரும் ஒருவராகிவிடவேண்டாம். </span>
<span>10:95 மேலும், எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யென்று கூறினார்களோ அவர்களுள் ஒருவராகவும் நீர் ஆகிவிடவேண்டாம். அவ்வாறாயின் இழப்புக்கு ஆளானோரில் நீரும் ஒருவராகிவிடுவீர்! </span>
<span>10:96 உண்மை யாதெனில், எவர்கள் மீது உம்முடைய இறைவனின் வாக்கு மெய்யாகிவிட்டதோ, அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். </span>
<span>10:97 எத்தனை சான்றுகள் அவர்களிடம் வந்தாலும் சரியே! அவர்கள் துன்புறுத்தும் வேதனையைக் கண்டால் அன்றி; (அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்). </span>
<span>10:98 (இறைத்தண்டனையைக் கண்டபோது) நம்பிக்கை கொண்ட எந்த ஊர் மக்களுக்காவது அவர்களுடைய நம்பிக்கை பயன் அளித்திருப்பதாக எந்த ஓர் எடுத்துக்காட்டாவது இருக்கிறதா யூனுஸுடைய சமுதாயத்தைத் தவிர? (அத்தகைய எடுத்துக்காட்டு எதுவும் இல்லை) அந்தச் சமுதாயத்தினர் நம்பிக்கை கொண்டபோது உலக வாழ்க்கையில் இழிவு தரும் வேதனையை நாம் அவர்களை விட்டு அகற்றி விட்டோம். மேலும், ஒரு குறிப்பிட்ட காலம் வரை வாழ்வதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்கவும் செய்தோம். </span>
<span>10:99 (உலகிலுள்ள அனைவரும் நம்பிக்கை கொண்டு கீழ்ப்படிந்தவர்களாகவே இருக்க வேண்டும் என்பது) உம் இறைவனின் நாட்டமாக இருந்தால், இப்பூமியிலுள்ள அனைவருமே இறைநம்பிக்கை கொண்டிருப்பார்கள். அப்படியிருக்க, மக்கள் நம்பிக்கையாளர்களாகி விடவேண்டுமென்று நீர் அவர்களை கட்டாயப்படுத்துவீரா?</span>
<span>10:100 எந்த மனிதனும் அல்லாஹ்வின் நாட்டமின்றி நம்பிக்கை கொள்ள முடியாது. மேலும், எவர்கள் சிந்தித்துணரவில்லையோ அவர்கள்மீது அவன் மாசுபடியச் செய்கின்றான். (இதுவே அவனது நியதியாகும்.)</span>
<span>10:101 (நபியே! இவர்களிடம்) நீர் கூறும்: “வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றைக் கூர்ந்து நோக்குங்கள்.” நம்பிக்கை கொள்ள விரும்பாத கூட்டத்தாருக்கு, சான்றுகளும் எச்சரிக்கைகளும் என்ன பலனை அளித்துவிடப் போகின்றன? </span>
<span>10:102 தமக்கு முன்னால் சென்று போன மக்கள் அனுபவித்ததைப் போன்ற வேதனை நிறைந்த நாட்களைத் தவிர வேறு எதனை இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்? எனவே, இவர்களிடம் நீர் கூறும்: “நீங்கள் எதிர்பார்த்திருங்கள்! நானும் உங்களோடு எதிர்பார்ப்பவனாய் இருக்கின்றேன்.” </span>
<span>10:103 பிறகு (இவ்வாறான சந்தர்ப்பம் வரும்போது) நாம் நம் தூதர்களையும் நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றிவிடுகின்றோம். இதுவே நம்முடைய வழிமுறையாகும். நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவது நம் மீது கடமையாகும். </span>
<span>10:104 (நபியே!) நீர் கூறிவிடுவீராக: “மனிதர்களே, நீங்கள் (இப்பொழுதும்கூட) என்னுடைய தீனை (நெறியை)ப் பற்றி ஏதேனும் சந்தேகம் கொண்டிருந்தால் (தெரிந்து கொள்ளுங்கள்!) அல்லாஹ்வைத் தவிர நீங்கள் யாருக்கெல்லாம் அடிபணிகின்றீர்களோ அவர்களுக்கு நான் அடிபணிவதில்லை. மாறாக, எந்த இறைவனின் பிடியில் உங்கள் மரணம் இருக்கிறதோ அந்த இறைவனுக்கு மட்டும் நான் அடிபணிகின்றேன். மேலும், நான் நம்பிக்கை கொண்டவர்களில் ஒருவனாக இருக்க வேண்டுமென்று கட்டளையிடப்பட்டுள்ளேன். </span>
<span>10:105 மேலும், ‘ஒருமனப்பட்டு இந்த தீனில் (நெறியில்) உம்மை முற்றிலும் நிலைப்படுத்திக் கொள்வீராக! மேலும், எந்நிலையிலும் இணை வைப்பவர்களில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம்’ என்றும் நான் அறிவுறுத்தப்பட்டுள்ளேன்.” </span>
<span>10:106 மேலும், அல்லாஹ்வை விட்டுவிட்டு உமக்குப் பலனளிக்கவும் கேடு விளைவிக்கவும் இயலாதவற்றிடம் நீர் பிரார்த்திக்காதீர். அவ்வாறு செய்வீராயின் அப்போது நீர் திண்ணமாக அக்கிரமம் செய்பவர்களுள் ஒருவராகி விடுவீர். </span>
<span>10:107 மேலும், ஏதேனும் துன்பத்தை அல்லாஹ் உமக்குக் கொடுத்தால், அதனை அகற்றுபவர் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. மேலும், உமக்கு ஏதேனும் நன்மை அளிக்க அவன் நாடினால் அவனுடைய அருளைத் தடுப்பவரும் யாரும் இல்லை. தன்னுடைய அடிமைகளில், தான் நாடுபவருக்குத் தன் அருளை அவன் வழங்குகின்றான். மேலும், அவன் மாபெரும் மன்னிப்பாளனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>10:108 (நபியே!) நீர் கூறுவீராக: “மக்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு சத்தியம் வந்துவிட்டது. ஆகவே, யாரேனும் நேரிய வழியை மேற்கொண்டால் அவருடைய நேர்வழி அவருக்கே நன்மை பயக்கும். யாரேனும் வழிகெட்டுப்போனால் அவனுடைய வழிகேடு அவனுக்கே தீங்கினை அளிக்கும்! மேலும், உங்களின் எந்த விஷயத்திற்கும் நான் பொறுப்பாளன் அல்லன்.” </span>
<span>10:109 (நபியே!) வஹியின் வாயிலாக உமக்கு அனுப்பப்படுகின்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடப்பீராக! அல்லாஹ் தீர்ப்பு வழங்கும்வரை பொறுமையுடன் இருப்பீராக! மேலும், தீர்ப்பளிப்பவர்களில் அவன் மிகச் சிறந்தவனாவான். </span>
</div><div>
<span>ஹூத்</span>
<span>11:1 அலிஃப், லாம், றா. வேதக் கட்டளையாகும் இது. அனைத்தையும் அறிந்தவனும் நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்வின் தரப்பிலிருந்து இதனுடைய வசனங்கள் உறுதியான முறையிலும் விரிவாகவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. </span>
<span>11:2 (அந்தக் கட்டளை இதுதான்:) ‘அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் நீங்கள் அடிபணியாதீர்கள்!’ திண்ணமாக, நான் அவன் சார்பில் உங்களை எச்சரிக்கை செய்பவனாகவும் உங்களுக்கு நற்செய்தி கூறுபவனாகவும் இருக்கின்றேன். </span>
<span>11:3 மேலும், நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்புக்கோரி, அவன் பக்கம் திரும்புங்கள்! அப்போது ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்கு அழகான வாழ்வாதாரங்களை வழங்கி இன்புறச் செய்வான். மேலும், சிறப்புக்குரியவர் ஒவ்வொருவருக்கும் அவருடைய சிறப்புக்கேற்ப தன் அருளை வழங்குவான். நீங்கள் புறக்கணிப்பீர்களேயானால், திகிலூட்டக்கூடிய ஒரு மாபெரும் நாளின் வேதனை உங்களுக்கு வந்துவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன். </span>
<span>11:4 அல்லாஹ்விடமே நீங்கள் திரும்பிவரவேண்டியுள்ளது. மேலும், அவன் அனைத்தையும் செய்வதற்கு ஆற்றல் உள்ளவனாக இருக்கின்றான். </span>
<span>11:5 பாருங்கள்! அவருடைய பார்வையை விட்டு மறைந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த மக்கள் தங்களுடைய நெஞ்சங்களைத் திருப்பிக் கொள்கின்றார்கள். தெரிந்து கொள்ளுங்கள்! இவர்கள் ஆடைகளால் தங்களை மூடி மறைத்துக்கொண்ட போதிலும் அவர்களின் இரகசியங்களையும், அவர்கள் வெளிப்படுத்துகின்றவற்றையும் அல்லாஹ் நன்கறிகின்றான். திண்ணமாக, அவன் நெஞ்சங்களில் மறைந்திருக்கும் இரகசியங்களையும் நன்கறியக்கூடியவனாக இருக்கின்றான். </span>
<span>11:6 உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்காத எந்த உயிரினமும் பூமியில் இல்லை. மேலும் அது வசிக்குமிடத்தையும், சென்று சேரும் இடத்தையும் அவன் நன்கறிகின்றான். அனைத்தும் ஒரு தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. </span>
<span>11:7 அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் அதற்கு முன்னர் அவனுடைய அர்ஷ்* நீரின் மீது இருந்தது எதற்காகவெனில் உங்களில் யார் நற்செயல் புரியக்கூடியவர் என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்காக! இப்போது நபியே! நீர் மக்களிடம் “நீங்கள் மரணமடைந்த பின் திண்ணமாக எழுப்பப்படுவீர்கள்!” என்று கூறினால் இறைநிராகரிப்பாளர்கள் உடனே கூறுவார்கள்: “இது வெளிப்படையான சூனியமே அன்றி வேறில்லை.” </span>
<span>11:8 ஒரு குறிப்பிட்ட காலம் வரை நாம் அவர்களுடைய தண்டனையை தாமதப்படுத்தினால் அதனைத் தடுத்து வைத்திருப்பது எது? என்று கேட்க ஆரம்பித்துவிடுகின்றார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அத்தண்டனை அவர்களிடம் வந்துவிடும் நாளில் அவர்களை விட்டு அதனை யாராலும் தடுத்துவிட முடியாது! மேலும், எதனை அவர்கள் ஏளனம் செய்து கொண்டிருந்தார்களோ அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்!</span>
<span>11:9 மேலும், மனிதனுக்கு எப்போதேனும் நாம் நமது அருட்கொடையை வழங்கிய பிறகு அதனை அவனிடமிருந்து பறித்துக் கொண்டால், திண்ணமாக அவன் நிராசையடைந்து விடுகின்றான். மேலும், நன்றி கெட்டவன் ஆகிவிடுகின்றான். </span>
<span>11:10 மேலும், அவனுக்கு ஏற்பட்ட துன்பத்துக்குப் பிறகு அவனுக்கு நாம் அருளை வழங்கி இன்புறச் செய்தால், ‘துன்பங்கள் எல்லாம் என்னை விட்டு நீங்கிவிட்டன!’ என்று கூறுகின்றான். பிறகு பூரிப்பில் திளைத்தவனாகவும் அகந்தை கொண்டவனாகவும் ஆகிவிடுகின்றான்; </span>
<span>11:11 ஆனால் பொறுமையை மேற்கொண்டு நற்செயல்கள் புரிபவர்கள்தாம் இத்தகைய குறைபாடு இல்லாதவர்கள். அவர்களுக்குத்தான் மன்னிப்பும் பெரும்கூலியும் இருக்கின்றன. </span>
<span>11:12 (நபியே!) வஹியின் மூலம் உமக்கு அறிவிக்கப்படுகின்றவற்றில் சிலவற்றை நீர் (எடுத்துரைக்காமல்) விட்டு விடுவது கூடாது! மேலும், ‘ஏதேனும் செல்வக் கருவூலம் இவருக்கு இறக்கி வைக்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருடன் யாரேனும் வானவர் வந்திருக்கக் கூடாதா?’ என்றெல்லாம் இவர்கள் கூறுவதால் உமது நெஞ்சம் சஞ்சலமடைவதும் கூடாது. நீர் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவீர்! அதற்குப் பிறகு அனைத்திற்கும் பொறுப்பேற்பவனாக அல்லாஹ் இருக்கின்றான். </span>
<span>11:13 “இவர்தான் இவ்வேதத்தைப் புனைந்து கூறுகிறார்” என்று இவர்கள் வாதிடுகின்றார்களா? நீர் கூறும்: “அவ்வாறாயின் இதுபோன்ற பத்து அத்தியாயங்களை நீங்கள் இயற்றிக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர யார் யார் (உங்கள் கடவுள்களாக) இருக்கின்றார்களோ அவர்களையும் (முடிந்தால்) உதவிக்கு அழைத்துக் கொள்ளுங்கள்; (அவர்களைக் கடவுள்களாகக் கருதுவதில்) நீங்கள் உண்மையானவர்களாயின்! </span>
<span>11:14 ஆனால், அவர்கள் உங்கள் உதவிக்கு வரவில்லையென்றால், இது அல்லாஹ்வின் ஞானத்தைக் கொண்டே இறக்கியருளப்பட்டிருக்கிறது என்பதையும் மேலும், அவனைத் தவிர உண்மையான இறைவன் வேறு யாரும் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! இனியாவது நீங்கள் (இந்த சத்தியத்திற்கு) முற்றிலும் அடிபணிவீர்களா?</span>
<span>11:15 எவர்கள் இவ்வுலக வாழ்வையும், அதன் அலங்காரத்தையும் நாடுகின்றார்களோ அவர்களுக்கு, அவர்களின் செயல்களுக்கேற்ற கூலியை இங்கே நாம் அளித்து விடுகின்றோம்; அதில் அவர்களுக்கு எவ்விதக் குறைபாடும் செய்யப்பட மாட்டாது. </span>
<span>11:16 ஆனால், இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறொன்றும் இருக்காது. மேலும், அவர்கள் இவ்வுலகில் உருவாக்கியவை அனைத்தும் அடியோடு அழிந்து போய் விட்டன (என்பதும்) அவர்கள் செய்து வந்தவை யாவும் வீணானவை (என்பதும் அங்கு அவர்களுக்குப் புரிந்துவிடும்)!</span>
<span>11:17 ஒருவர் தன் இறைவனிடமிருந்து தெளிவான சான்றினைப் பெற்றிருக்கும்போது, மேலும் அதன் பிறகு (அதற்கு வலுவூட்டும் வண்ணம்) வேறொரு சான்றும் தொடர்ந்து இறைவனிடமிருந்து வந்துள்ளபோது, அத்துடன் இதற்கு முன்பே மூஸாவின் வேதம் வழிகாட்டியாகவும் அருட்கொடையாகவும் வந்திருக்கும்போது (பிற உலகாயதவாதிகளைப் போன்று இவரும் இதனை மறுக்க முடியுமா?) இத்தகையோர் இதன்மீது நம்பிக்கை கொள்ளத்தான் செய்வார்கள். மேலும், மனித சமூகங்களைச் சேர்ந்த எவரேனும் இதனை மறுத்தால் அவருக்கு வாக்களிக்கப்பட்ட இடம் நரகமாகும். எனவே, (நபியே!) நீர் இதைப்பற்றி எவ்வித ஐயமும் கொள்ள வேண்டாம். திண்ணமாக இது உம் இறைவனிடமிருந்து வந்த சத்தியமாகும். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. </span>
<span>11:18 அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவர்களைவிட கொடிய அக்கிரமக்காரர்கள் யார்? இத்தகையோர் தம் இறைவனின் திருமுன் கொண்டு வரப்படுவார்கள். அப்போது சாட்சியாளர்கள் “இவர்கள்தாம் தம் இறைவன் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள்” என்று கூறுவார்கள். எச்சரிக்கை! இத்தகைய அக்கிரமக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும். </span>
<span>11:19 இந்த அக்கிரமக்காரர்கள் அல்லாஹ்வின் வழியில் செல்லவிடாமல் மக்களைத் தடுக்கின்றார்கள்; அதனைக் கோணலாக்க விரும்புகின்றார்கள். மேலும், மறுமையை மறுக்கின்றார்கள் </span>
<span>11:20 இப்புவியில் அல்லாஹ்வை இயலாமையிலாக்கும் வலிமையை அவர்கள் பெற்றிருக்கவில்லை; மேலும், அல்லாஹ்வுக்கு எதிராக அவர்களுக்கு உதவி புரிவோர் எவரும் இருக்கவில்லை! இப்போது இவர்களுக்கு இரு மடங்கு வேதனை அளிக்கப்படும். இவர்களால் எதையும் செவியுறவும் முடியவில்லை; எதுவும் இவர்களுக்குப் புலப்படவும் இல்லை. </span>
<span>11:21 இவர்கள் தமக்குத் தாமே இழப்பினை ஏற்படுத்திக் கொண்டவர்களாவர். மேலும், இவர்கள் தாமாக ஏற்படுத்திக் கொண்டிருந்த அனைத்தும் இவர்களை விட்டு மறைந்துவிடும். </span>
<span>11:22 மறுமையில் இவர்கள்தாம் மற்றவர்களைவிட அதிக இழப்பிற்குரியவர்களாய் இருப்பர் என்பதில் ஐயமே இல்லை!</span>
<span>11:23 திண்ணமாக, எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து, தம் இறைவனுக்கே உரித்தானவர்களாகி விடுகின்றார்களோ அவர்கள்தாம் சுவனவாசிகள்! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். </span>
<span>11:24 இவ்விரு வகையினரின் உவமை இரு மனிதர்களைப் போன்றுள்ளது: ஒருவன் குருடனாகவும் செவிடனாகவும் இருக்கின்றான். மற்றொருவன் பார்வையுடையவனாகவும் செவியுறுபவனாகவும் இருக்கின்றான். இவ்விருவரும் சமமானவராய் ஆக முடியுமா? (இவ்வுவமையின் மூலம்) நீங்கள் எந்த ஒரு படிப்பினையும் பெறுவதில்லையா?</span>
<span>11:25 திண்ணமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் தூதராக அனுப்பினோம். (அப்போதும் மக்களின் நிலைமை இவ்வாறே இருந்தது. நூஹ் கூறினார்:) நான் உங்களுக்குத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன் ஆவேன். </span>
<span>11:26 அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் நீங்கள் அணிபணியாதீர்கள்! (இல்லையானால்) துன்புறுத்தும் நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளுமோ என்று நான் அஞ்சுகின்றேன்.”</span>
<span>11:27 (அவருடைய அறிவுரையை) ஏற்க மறுத்த அவருடைய சமுதாயத் தலைவர்கள் கூறினார்கள்: “எங்களுடைய பார்வையில் நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி வேறல்லர்...! மேலும், எங்களிடையே யார் மிகவும் இழிவானவர்களோ அவர்கள் மட்டுமே சிந்திக்காமல் உம்மைப் பின்பற்றுவதைப் பார்க்கின்றோம். ஆக, எங்களைவிட எவ்விதச் சிறப்பும் உமக்கு இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. உண்மையில் உங்களைப் பொய்யர்கள் என்றே நாங்கள் கருதுகின்றோம்.” </span>
<span>11:28 அதற்கு நூஹ் கூறினார்: “என் சமுதாயத்தினரே! கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! நான் என்னுடைய அதிபதியிடமிருந்து தெளிவான சான்றினைப் பெற்றுள்ளேன்; மேலும், அவன் தனது தனிப்பட்ட அருளையும் எனக்கு வழங்கியிருக்கின்றான். ஆனால் அது உங்கள் பார்வைக்குப் புலப்படுவதில்லை; நீங்கள் அதனை ஏற்றுக்கொள்வதுமில்லை எனில், நாம் அதனை வலிந்து உங்கள் மீது திணிக்க முடியுமா? </span>
<span>11:29 மேலும், என் சமுதாயத்தினரே! இந்தப் பணிக்காக நான் உங்களிடம் எந்தப் பொருளும் கேட்கவில்லை. என்னுடைய கூலியோ அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது. மேலும், எவர்கள் (எனது பேச்சை) ஏற்றுக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை நான் விரட்டுபவன் அல்லன். திண்ணமாக, அவர்கள் தங்களுடைய இறைவனைச் சந்திக்க இருக்கின்றார்கள்; ஆனால் நான் உங்களை அறியாமையில் உழன்று கொண்டிருக்கும் சமுதாயத்தினராய்ப் பார்க்கின்றேன். </span>
<span>11:30 மேலும், என் சமுதாயத்தினரே! நான் இவர்களை விரட்டிவிட்டால், அல்லாஹ்வின் பிடியிலிருந்து என்னைக் காப்பாற்றுபவர் யார்? இதைக்கூட நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்களா?</span>
<span>11:31 மேலும், அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன என்றும், நான் மறைவானவற்றை அறிபவன் என்றும் உங்களிடம் கூறவில்லை. நான் ஒரு வானவர் என்றும் வாதிடவில்லை. மேலும், எவர்களை உங்கள் கண்கள் இழிந்தவர்களாய்க் காண்கின்றனவோ அவர்களைக் குறித்து ‘அல்லாஹ் எந்த நன்மையையும் அவர்களுக்கு அளிக்கவில்லை’ என்றும் நான் கூற மாட்டேன் அவர்களின் நெஞ்சங்களிலுள்ளவற்றை அல்லாஹ்தான் நன்கறிகின்றான் அவ்வாறு கூறினால் திண்ணமாக நான் அக்கிரமக்காரனாகி விடுவேன்!”</span>
<span>11:32 இறுதியில் அவர்கள் “நூஹே! நீர் எங்களிடம் தர்க்கம் புரிந்துவிட்டீர்! அதுவும் அளவுக்கதிகமாக தர்க்கம் செய்துவிட்டீர்! நீர் உண்மையாளராயின் எந்த வேதனையைப் பற்றி எங்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றீரோ அந்த வேதனையை எங்களிடம் கொண்டு வாரும்!” என்று கூறினார்கள். </span>
<span>11:33 அதற்கு மறுமொழியாக நூஹ் கூறினார்: “அல்லாஹ் நாடினால் அவனே அதனை உங்களிடம் கொண்டு வருவான். (அது வந்துவிட்டால்) அதனைத் தடுத்து நிறுத்தும் அளவுக்கு நீங்கள் வலிமையுடையவர்கள் அல்லர். </span>
<span>11:34 உங்களை வழிகேட்டிலாழ்த்திட வேண்டுமென்று அல்லாஹ் நாடியிருந்தால், உங்களின் நன்மைக்காக நான் எது கூறினாலும் அது உங்களுக்கு எவ்விதப் பலனையும் அளித்திடாது. அவன்தான் உங்கள் இறைவன்; அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்!”</span>
<span>11:35 “இதனை இவரே சுயமாகப் புனைந்துள்ளார்” என்று (நபியே) இவர்கள் கூறுகின்றார்களா? நீர் கூறும்: “நானே இதனைச் சுயமாகப் புனைந்திருந்தால் அந்தக் குற்றத்திற்கு நானே பொறுப்பாளி ஆவேன். ஆனால் நீங்கள் செய்யும் குற்றங்களுக்கு நான் பொறுப்பாளி அல்லன்.”</span>
<span>11:36 மேலும், நூஹுக்கு இவ்வாறு வஹி அனுப்பப்பட்டது: “உம்முடைய சமுதாயத்தினரில் எவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்களோ அவர்களைத் தவிர இனி வேறெவரும் நம்பிக்கை கொள்ளப் போவதில்லை. எனவே, அவர்களின் தவறான செயல்களுக்காக நீர் துயரப்பட வேண்டாம். </span>
<span>11:37 மேலும், நமது கண்காணிப்பில் நம் கட்டளைக்கேற்ப ஒரு கப்பலைக் கட்டத் தொடங்குவீராக! மேலும், அநீதி இழைத்தவர்களுக்காக என்னிடம் பரிந்துரை செய்யாதீர்! அவர்கள் அனைவரும் மூழ்கடிக்கப்படுபவர்களேயாவர்”. </span>
<span>11:38 நூஹ் கப்பலைக் கட்டிக் கொண்டிருந்தார். அவருடைய சமுதாயத் தலைவர்களில் எவரேனும் அவரைக் கடந்து செல்லும்போதெல்லாம் அவரை ஏளனம் செய்தனர். அதற்கு அவர் கூறினார்: “நீங்கள் எங்களைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிக்கின்றீர்கள் எனில், நீங்கள் சிரிப்பது போன்று நாங்களும் உங்களைக் குறித்து சிரித்துக் கொண்டிருக்கிறோம்! </span>
<span>11:39 இழிவுபடுத்தக்கூடிய வேதனைக்கு யார் ஆளாகப் போகின்றார் என்பதையும், தடுத்து நிறுத்த முடியாத வேதனை யார் மீது இறங்கப் போகின்றது என்பதையும் வெகு விரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.”</span>
<span>11:40 இறுதியில் நம்முடைய கட்டளை வந்துவிட்டது; மேலும் அந்த உலை அடுப்பு பொங்கியது. அப்போது நாம் கூறினோம்: “எல்லா வகையான பிராணிகளிலிருந்தும் ஒவ்வொரு ஜோடியை இக்கப்பலில் ஏற்றிக்கொள்வீராக! உம்முடைய குடும்பத்தினரையும் யாரைக் குறித்து முன்னரே கூறப்பட்டு விட்டதோ அவர்களைத் தவிர அதில் ஏற்றிக் கொள்வீராக! மேலும், யார்யாரெல்லாம் இறைநம்பிக்கை கொண்டுள்ளார்களோ அவர்களையும் (ஏற்றிக் கொள்வீராக!)” மேலும், நூஹுடன் இறைநம்பிக்கை கொண்டிருந்தவர்கள் குறைவாகவே இருந்தார்கள்; </span>
<span>11:41 மேலும், நூஹ் கூறினார்: “இதில் ஏறிக் கொள்ளுங்கள்! இது செல்வதும் நிலை கொள்வதும் அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டே ஆகும். திண்ணமாக, என் அதிபதி பெரிதும் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான்.”</span>
<span>11:42 அக்கப்பல் அவர்களைச் சுமந்து சென்று கொண்டிருந்தது. அலைகள் ஒவ்வொன்றும் மலைபோல் உயர்ந்து கொண்டிருந்தது. நூஹுடைய மகன் தொலைவில் இருந்தான். அவர் தம் மகனை கூவியழைத்துக் கூறினார்: “என் அன்பு மகனே! எங்களோடு நீயும் ஏறிக்கொள்; நிராகரிப்பாளர்களுடன் இருக்காதே!” </span>
<span>11:43 அதற்கு அவன் பதிலளித்தான்: “நான் இப்போதே ஒரு மலையின் மீது ஏறிக்கொள்கின்றேன்; அது என்னை வெள்ளத்திலிருந்து காப்பாற்றிவிடும்.” அதற்கு அவர் கூறினார்: “இன்று அல்லாஹ்வின் தீர்ப்பிலிருந்து காப்பாற்றக் கூடியது எதுவும் இல்லை; ஆனால், அல்லாஹ் யாருக்குக் கருணை புரிந்தானோ அவர்கள் மட்டும் காப்பாற்றப்படுவார்கள்.” இதற்குள்ளாக இருவருக்குமிடையே ஓர் அலை குறுக்கிட்டுவிட்டது. மேலும் மூழ்கடிக்கப்பட்டவர்களில் அவன் சேர்ந்து விட்டான்!</span>
<span>11:44 பின்னர், “பூமியே! உனது நீர் முழுவதையும் விழுங்கிவிடு; வானமே, நிறுத்திக்கொள்!” என்று கட்டளையிடப்பட்டது. அவ்வாறே நீர் வற்றிவிட்டது. கட்டளை நிறைவேற்றப்பட்டுவிட்டது. மேலும் கப்பல், ஜூதி எனும் மலையில் நிலை கொண்டது; பிறகு கூறப்பட்டது: “ஒழிந்து விட்டார்கள், அக்கிரமம் புரிந்த மக்கள்!”</span>
<span>11:45 நூஹ் தன் இறைவனிடம் பிரார்த்தித்துக் கூறினார்: “என் இறைவனே! என்னுடைய மகன் எனது குடும்பத்தைச் சேர்ந்தவன்; மேலும், திண்ணமாக உனது வாக்குறுதி உண்மையானதாகும். மேலும், தீர்ப்பளிப்பவர்களில் நீ மிகச் சிறந்தவனும் உயர்ந்தவனுமாவாய்!” </span>
<span>11:46 அதற்கு அல்லாஹ் பதிலளித்தான்: “நூஹே! திண்ணமாக அவன் உமது குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். அவன் ஒரு வீணான ‘செயல்’ ஆவான். எதனுடைய உண்மை நிலையை நீர் அறிய மாட்டீரோ அதைப் பற்றி என்னிடம் கேட்காதீர்! அறிவிலிகளில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம் என்று நான் உம்மை அறிவுறுத்துகிறேன்.” </span>
<span>11:47 உடனே, நூஹ் பணிந்து கூறினார்: “என் இறைவனே! எதைப் பற்றி எனக்கு அறிவு இல்லையோ அதைப்பற்றி உன்னிடம் கேட்பதைவிட்டு உன்னிடத்தில் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன். நீ என்னை மன்னிக்காவிட்டால் மேலும், அருள் புரியாவிட்டால் நான் அழிந்து போய்விடுவேன்!”</span>
<span>11:48 கட்டளை அருளப்பட்டது: “நூஹே! இறங்குவீராக; உம்மீதும், உம்முடன் இருக்கும் சமூகத்தின் மீதும் நம்முடைய சாந்தியும் அருள்வளங்களும் உண்டாகட்டும்! மேலும், உங்களில் வேறு சில சமூகங்களும் (தோன்ற) உள்ளன. அவர்களுக்கு சொற்ப காலத்திற்கான வாழ்க்கை வசதிகளை வழங்குவோம். பிறகு, நம்மிடமிருந்து துன்புறுத்தும் வேதனை வந்து அவர்களைப் பிடித்துக் கொள்ளும்!”</span>
<span>11:49 (நபியே!) இவை மறைவான செய்திகளாகும். இவற்றை நாம் உமக்கு அறிவிக்கின்றோம். இதற்கு முன்னர் நீரும் இவற்றை அறிந்திருக்கவில்லை; உம்முடைய சமுதாயத்தினரும் இவற்றை அறிந்திருக்கவில்லை. எனவே பொறுமையை மேற்கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் நல்ல முடிவு இறையச்சம் உள்ளவர்களுக்கே உரியதாகும். </span>
<span>11:50 மேலும், ஆத் சமுதாயத்தினரிடம் அவர்களின் சகோதரர் ஹூதை நாம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத் தவரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்! அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. நீங்கள் பொய்யானவற்றைத்தான் (கடவுள்களாக) ஏற்படுத்தி வைத்திருக்கிறீர்கள். </span>
<span>11:51 என் சமுதாயத்தினரே! இந்தப் பணிக்காக நான் உங்களிடம் எந்தப் பிரதிபலனையும் கோரவில்லை. என்னுடைய கூலி என்னைப் படைத்தவன் பொறுப்பில் உள்ளது. நீங்கள் சிந்தித்துணர்வதில்லையா? </span>
<span>11:52 மேலும், என் சமுதாயத்தினரே! உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். பின்னர் அவன் பக்கம் திரும்புங்கள்; உங்கள் மீது மழையை அதிகமாகப் பொழியும்படிச் செய்வான். மேலும், உங்களுக்கு வலிமைக்கு மேல் வலிமையை வழங்குவான். எனவே நீங்கள் பாவம் புரிபவர்களாகி (இறைவனுக்கு அடிபணிவதிலிருந்து) முகம் திருப்பிக் கொள்ளாதீர்கள்!”</span>
<span>11:53 அவர்கள் பதில் கூறினார்கள்: “ஹூதே! நீர் எங்களிடம் தெளிவான சான்று எதனையும் கொண்டுவரவில்லை. மேலும், நீர் கூறுவதால் நாங்கள் எங்களுடைய கடவுள்களை விட்டுவிடக் கூடியவர்களல்லர். மேலும், உம்மீது நாங்கள் நம்பிக்கை கொள்பவர்களாகவும் இல்லை; </span>
<span>11:54 எங்கள் கடவுள்களில் ஏதோ ஒரு கடவுள் உம்மைத் தாக்கியிருக்கிறது என்றே நாங்கள் கருதுகின்றோம்.” அதற்கு ஹூத் கூறினார்: “அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களை அவனுடைய இறைமையில் நீங்கள் இணையாக்குகின்றீர்கள். அவற்றுக்கும் எனக்கும் திண்ணமாக எந்தத் தொடர்பும் இல்லை என்பதற்கு நான் அல்லாஹ்வைச் சாட்சியாக்குகின்றேன்; நீங்களும் சாட்சிகளாய் இருங்கள்!</span>
<span>11:55 நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்வதில் எந்தக் குறையும் வைக்காதீர்கள்! பிறகு சிறிதும் எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்!</span>
<span>11:56 திண்ணமாக நான் என்னுடைய அதிபதியும் உங்களுடைய அதிபதியுமாகிய அல்லாஹ்வையே முழுவதும் சார்ந்திருக்கின்றேன். எந்த உயிரினமானாலும் அதன் குடுமி அவனுடைய பிடியிலேயே உள்ளது! நிச்சயமாக என் இறைவன் நேரான வழியில் இருக்கின்றான். </span>
<span>11:57 நீங்கள் புறக்கணித்தால் (புறக்கணித்துக் கொள்ளுங்கள்!) எந்தத் தூதுச் செய்தியுடன் நான் உங்களிடம் அனுப்பப்பட்டேனோ அதனை நான் உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். இனி என் இறைவன் உங்களுக்குப் பகரமாக வேறொரு சமுதாயத்தினரைக் கொண்டு வருவான். நீங்கள் யாதொரு தீங்கும் அவனுக்கு இழைத்திட முடியாது. உறுதியாக என் இறைவன் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.”</span>
<span>11:58 பிறகு நம்முடைய கட்டளை வந்தபோது, நாம் நமது அருளால் ஹூதுக்கும் அவருடன் நம்பிக்கை கொண்டிருந்தவர்களுக்கும் ஈடேற்றம் அளித்தோம்; மேலும் கடுமையான வேதனை யிலிருந்து அவர்களைக் காப்பாற்றினோம். </span>
<span>11:59 இவர்கள்தாம் ஆத் இனத்தவர்! இவர்கள் தம் இறைவனின் சான்றுகளை மறுத்தார்கள். அவனுடைய தூதர்களின் அழைப்பையும் ஏற்கவில்லை. மேலும், சத்தியத்துக்கு எதிரியான கொடுங்கோலர்கள் ஒவ்வொருவரின் கட்டளையையும் பின்பற்றிக் கொண்டிருந்தார்கள். </span>
<span>11:60 இறுதியில், இவ்வுலகிலும் அல்லாஹ்வின் சாபத்திற்கு அவர்கள் ஆளானார்கள். மறுமைநாளிலும் அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளாகுவார்கள். தெரிந்து கொள்ளுங்கள்! ஆத் இனத்தவர்கள் தம் இறைவனுக்கு மாறு செய்தார்கள். தெரிந்து கொள்ளுங்கள்! தூக்கி எறியப்பட்டார்கள், ஹூதுடைய சமுதாயத்தினரான ஆத் மக்கள்!</span>
<span>11:61 ஸமூத் இனத்தாரிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்! அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. அவன்தான் உங்களைப் பூமியிலிருந்து படைத்தான். மேலும், அதில் உங்களை வாழச் செய்துள்ளான். எனவே, அவனிடம் மன்னிப்புக் கோருங்கள்; பின்னர் அவன் பக்கம் நீங்கள் மீளுங்கள்! திண்ணமாக என் இறைவன் அருகில் இருக்கின்றான். (பிரார்த்தனைகளுக்குப்) பதிலளிப்பவனாக இருக்கின்றான்.”</span>
<span>11:62 அதற்கு அவர்கள் கூறினார்கள்: “ஸாலிஹே! இதற்கு முன்போ எங்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்குரியவராய் எங்கள் மத்தியில் இருந்தீர்! இப்பொழுதோ எங்கள் மூதாதையர் வணங்கிக் கொண்டிருந்த கடவுள்களை நாங்கள் வணங்குவதை விட்டு எங்களைத் தடுக்கின்றீரே? மேலும், நீர் எந்த நெறியின் பக்கம் எங்களை அழைக்கின்றீரோ அதுபற்றிக் கடும் சந்தேகத்திலேயே நாங்கள் இருக்கின்றோம். அது எங்களைப் பெரும் மனக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது!”</span>
<span>11:63 அவர் கூறினார்: “என் சமுதாயத்தினரே! இதனையும் கொஞ்சம் சிந்தித்தீர்களா? நான் என்னுடைய அதிபதியிடமிருந்து தெளிவான ஒரு சான்றினைப் பெற்று, அவன் தனது அருளையும் எனக்கு வழங்கியிருக்கும் நிலையில் நான் அவனுக்கு மாறு செய்தால் அல்லாஹ்வின் பிடியிலிருந்து என்னைக் காப்பாற்றுபவர் யார்? எனக்கு மேலும் இழப்பை ஏற்படுத்துவதைத் தவிர வேறு என்னதான் உங்களால் செய்ய இயலும்? </span>
<span>11:64 மேலும் என் சமுதாயத்தினரே! (பாருங்கள்) இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகம்! உங்களுக்கு ஒரு சான்றாகத் திகழ்கின்றது. எனவே இதனை அல்லாஹ்வின் பூமியில் (சுதந்திரமாய்) மேய்வதற்கு விட்டுவிடுங்கள்; இதற்கு யாதொரு தீங்கும் இழைக்காதீர்கள்! அவ்வாறு தீங்கிழைத்தால், இறைவனின் வேதனை உங்களைப் பீடிப்பதற்கு வெகுநேரம் ஆகாது!”</span>
<span>11:65 ஆயினும், அவர்கள் அந்த ஒட்டகத்தைக் கொன்று விட்டார்கள்! அப்போது ஸாலிஹ் (அம்மக்களுக்கு) எச்சரிக்கை செய்தார்: “மூன்று நாட்கள் உங்கள் வீடுகளில் சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள்! இந்தக் காலத் தவணை பொய்யானதல்ல!”</span>
<span>11:66 இறுதியில், நம் தீர்ப்பு(க்கான வேளை) வந்துவிட்டது. இப்போது, நமது அருளால் ஸாலிஹையும் அவரோடு நம்பிக்கை கொண்டிருந்தவர்களையும் காப்பாற்றினோம்; மேலும், அந்நாளின் இழிவிலிருந்தும் அவர்களைப் பாதுகாத்தோம். திண்ணமாக, உம் இறைவன் மாபெரும் வலிமையுடையவனும் அனைவரையும் மிகைத்தவனும் ஆவான். </span>
<span>11:67 அக்கிரமம் செய்தவர்களை ஒரு பயங்கர ஓசை தாக்கியது! அவர்கள் தம் வீடுகளில் அப்படியப்படியே முகம் குப்புற வீழ்ந்து மடிந்துவிட்டனர்;</span>
<span>11:68 அங்கு அவர்கள் வாழவே இல்லை என்பதுபோல! தெரிந்து கொள்ளுங்கள்! ஸமூத் இனத்தார் தம் இறைவனை நிராகரித்தார்கள்; தெரிந்து கொள்ளுங்கள்! இறையருளிலிருந்து தூக்கி எறியப்பட்டார்கள், ஸமூத் இனத்தார்!</span>
<span>11:69 மேலும் (பாருங்கள்!) நம்முடைய வானவர்கள் இப்ராஹீமிடம் ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தார்கள்; “உங்கள் மீது சாந்தி நிலவட்டும்!” என்றார்கள். அதற்கு, “உங்கள் மீதும் சாந்தி நிலவுக!” என்று இப்ராஹீம் பதிலளித்தார். பிறகு சிறிது நேரத்திற்குள் (அவர்களுக்கு விருந்தளிப்பதற்காக) வறுத்த கன்றின் மாமிசத்தைக் கொண்டு வந்தார். </span>
<span>11:70 ஆனால், அவர்களின் கைகள் உணவைத் தொடவே இல்லை என்பதை இப்ராஹீம் பார்த்தபோது அவர்களைப் பற்றி அவருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. மேலும், அவர்களைக் கண்டு அவர் அஞ்சினார். அதற்கு அவ்வானவர்கள், “நீர் அஞ்ச வேண்டாம்; திண்ணமாக நாங்கள் லூத் சமூகத்தாரின்பால் அனுப்பப்பட்டிருக்கின்றோம்” என்று கூறினார்கள். </span>
<span>11:71 அப்போது இப்ராஹீமுடைய மனைவியும் நின்று கொண்டிருந்தார். அவர் (இதனைக் கேட்டதும்) சிரித்தார். நாம் அவருக்கு இஸ்ஹாக் (பிறக்கப்போவது) பற்றியும் இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூப் பற்றியும் நற்செய்தி அறிவித்தோம்! </span>
<span>11:72 அதற்கு அவர் “அந்தோ! என் துர்பாக்கியமே! நானும் முதியவளாகி விட்டேன். என்னுடைய கணவராகிய இவரும் முதுமை அடைந்து விட்டார். இந்நிலையில் எனக்குக் குழந்தை பிறக்குமா? திண்ணமாக, இது ஒரு வியப்புக்குரிய செய்தியாய் இருக்கின்றது!” என்று கூறினார். </span>
<span>11:73 வானவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் கட்டளை குறித்து வியப்புறுகின்றீரா? இப்ராஹீமின் குடும்பத்தாரே! உங்கள்மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய வாழ்த்துக்களும் பொழிந்து கொண்டிருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ் பெரும் புகழுக்குரியவனாகவும், பெரும் மாட்சிமை உடையவனாகவும் இருக்கின்றான்.”</span>
<span>11:74 இப்ராஹீம் அச்சம் அகன்று (குழந்தைப் பேறு பற்றிய நற்செய்தியால்) அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டபோது, லூத் இனத்தாரைப் பற்றி அவர் நம்மிடம் தர்க்கம் செய்யத் தொடங்கிவிட்டார். </span>
<span>11:75 திண்ணமாக, இப்ராஹீம் இரக்கமுடையவராகவும் மென்மையான உள்ளமுடையவராகவும் இருந்தார். </span>
<span>11:76 மேலும், எந்நிலையிலும் (நம் பக்கம்) மீளக்கூடியவராகவும் இருந்தார்! (இறுதியில் நம் வானவர்கள் அவரிடம் கூறினார்கள்:) “இப்ராஹீமே, இவ்வாறு தர்க்கம் செய்வதை விட்டுவிடுவீராக! திண்ணமாக, உம் அதிபதியின் கட்டளை வந்தாகிவிட்டது. இனி எவராலும் தடுத்து நிறுத்த முடியாத வேதனை அவர்களிடம் வந்தே தீரும்!”</span>
<span>11:77 மேலும், நம்முடைய வானவர்கள் லூத்திடம் வந்தபோது அவர் பீதியடைந்தார். மேலும், மனவேதனைக்குள்ளானார். மேலும், கூறலானார்: “இது துன்பமானதொரு நாளாகும்.”</span>
<span>11:78 (இந்த விருந்தாளிகளைக் கண்டதும்) அவருடைய சமுதாயத்தினர் அவரது வீட்டை நோக்கி விரைந்தோடி வந்தார்கள். அவர்கள் முன்பே தீய செயல்களைச் செய்து கொண்டிருந்தார்கள். லூத் (அவர்களிடம்) கூறினார்: “என்னுடைய சமுதாயத்தினரே! இதோ! என்னுடைய பெண்மக்கள் இருக்கின்றனர், அவர்கள் உங்களுக்கு மிகவும் தூய்மையானவர்களாவர். நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! என் விருந்தாளிகள் விஷயத்தில் என்னைக் கேவலப்படுத்தாதீர்கள்! நேர்மையான சிந்தனை கொண்டவர் உங்களில் யாரும் இல்லையா?” </span>
<span>11:79 அதற்கு அவர்கள் “உம்முடைய பெண்மக்கள் எங்களுக்குத் தேவையில்லை என்பதை நீர் நன்கு அறிவீர். மேலும், நாங்கள் எதை விரும்புகின்றோம் என்பதையும் திண்ணமாக நீர் அறிவீர்!” என்று பதிலளித்தார்கள். </span>
<span>11:80 அதற்கு லூத், “அந்தோ! உங்களைத் திருத்துகின்ற அளவுக்கு என்னிடம் வலிமை இருந்திருக்கக் கூடாதா? அல்லது நான் புகலிடம் பெறும் அளவுக்கு ஒரு வலிமைமிக்க துணை எனக்கு இருந்திருக்கக் கூடாதா?” என்று கூறினார். </span>
<span>11:81 அப்பொழுது வானவர்கள் அவரிடம் கூறினார்கள்: “லூத்தே! திண்ணமாக நாங்கள் உம் இறைவனால் அனுப்பப்பட்ட வானவர்களாவோம். இவர்கள் உமக்கு எவ்விதத் தீங்கும் அளித்திட முடியாது! எனவே, இரவின் ஒரு பகுதி இருக்கும்போது நீர் உம்முடைய குடும்பத்தை அழைத்துக் கொண்டு சென்றுவிடும். உங்களில் எவரும் பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டாம்! ஆனால் உம்முடைய மனைவியை உம்முடன் அழைத்துச் செல்ல வேண்டாம்! ஏனெனில், எந்த வேதனை இம்மக்களைப் பீடிக்கப்போகிறதோ, அந்த வேதனை திண்ணமாக அவளையும் பீடிக்கப்போகிறது. இவர்களை அழிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரம் அதிகாலையாகும். அதிகாலை வருவதற்கு வெகு நேரமா இருக்கிறது?”</span>
<span>11:82 பிறகு நமது கட்டளை(க்குரிய நேரம்) வந்த போது, அந்த ஊரைத் தலைகீழாகப் புரட்டிவிட்டோம்! மேலும், அதன் மீது சுட்டகளிமண் கற்களைத் தொடர்ந்து பொழியச் செய்தோம்;</span>
<span>11:83 அக்கற்கள் ஒவ்வொன்றும் உம் இறைவனால் அடையாளம் இடப்பட்டிருந்தது! மேலும் அக்கிரமக்காரர்களுக்கு இது போன்ற தண்டனை தொலைவில் இல்லை!</span>
<span>11:84 மேலும், மத்யன்வாசிகளிடம் அவர்களின் சகோதரர் ஷûஐபை நாம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்! அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. மேலும் அளவையிலும், நிறுவையிலும் குறைவு செய்யாதீர்கள்! (இன்று) உங்களை நல்ல நிலையில் நான் காண்கின்றேன். ஆனால் (விரைவில்) துன்பம் சூழும் ஒரு நாளின் வேதனை உங்களைப் பீடிக்குமோ என நான் அஞ்சுகின்றேன். </span>
<span>11:85 மேலும், என்னுடைய சமுதாயத்தினரே! நேர்மையான முறையில் முழுமையாய் அளந்து கொடுங்கள்; முழுமையாய் நிறுத்துக் கொடுங்கள்! மேலும் மக்களுக்கு அவர்களுடைய பொருட்களைக் குறைத்துத் தராதீர்கள்! பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரியாதீர்கள்!</span>
<span>11:86 அல்லாஹ்வினால் மீதப்படுத்தப்பட்ட லாபமே உங்களுக்குச் சிறந்ததாகும் நீங்கள் இறைநம்பிக்கையுடையோராயின்! ஆயினும் நான் எந்நிலையிலும் உங்களைக் கண்காணிப்பவன் அல்லன்.”</span>
<span>11:87 அதற்கு அவர்கள், “ஷûஐபே! எங்கள் மூதாதையர் வணங்கி வந்தவற்றை நாங்கள் விட்டுவிட வேண்டும் என்றா அல்லது எங்களுடைய செல்வத்தை எங்கள் விருப்பப்படி பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கக்கூடாது என்றா உம்முடைய தொழுகை உமக்குக் கற்றுத் தருகிறது? உண்மையில் நீர் பெருந்தன்மையும் நேர்மையும் கொண்டவர்தாம்” என்று (ஏளனமாகக்) கூறினார்கள். </span>
<span>11:88 அதற்கு ஷûஐப் கூறினார்: “என்னுடைய சமுதாயத்தினரே! நீங்களே சற்று சிந்தியுங்கள். நான் என் இறைவனிட மிருந்து தெளிவான சான்றினைப் பெற்றிருக்கிறேன். அத்துடன் அவன் தன் சார்பிலிருந்து தூய்மையான உணவையும் எனக்கு வழங்கி இருக்கின்றான். (அதற்குப் பிறகும் உங்களுடைய தவறான செயல்களிலும், தடுக்கப்பட்டவற்றை உண்பதிலும் உங்களோடு எவ்வாறு நான் கூட்டுச் சேர முடியும்?) மேலும், எவற்றைச் செய்ய வேண்டாம் என்று உங்களை நான் தடுக்கின்றேனோ அவற்றை நான் செய்வதற்கு ஒருபோதும் விரும்புவதில்லை. என்னால் முடிந்த வரை சீர்திருத்தம் செய்யவே நான் விரும்புகின்றேன். மேலும் (நான் ஆற்ற விரும்புகின்ற அனைத்தும்) அல்லாஹ்வின் பேருதவியைப் பொறுத்தே இருக்கின்றன. நான் அவனையே முழுமையாகச் சார்ந்துவிட்டேன்! மேலும், (ஒவ்வொரு விஷயத்திலும்) அவன் பக்கமே நான் திரும்புகின்றேன். </span>
<span>11:89 மேலும், என் சமூகத்தினரே! என்னோடு நீங்கள் கொண்டுள்ள பிணக்கும், பகைமையும் நூஹுடைய சமுதாயத்தினரை அல்லது ஹூத் மற்றும் ஸாலிஹ் உடைய சமுதாயத்தினரைப் பீடித்தது போன்ற வேதனையில் உங்களையும் கொண்டு போய்ச் சேர்த்துவிடக் கூடாது. மேலும், லூத் சமூகத்தினரோ உங்களிலிருந்து வெகு தூரத்தில் இல்லை. </span>
<span>11:90 எனவே, உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கேளுங்கள்! பிறகு அவன் பக்கம் மீளுங்கள்! திண்ணமாக, என் இறைவன் கருணை பொழிபவனாகவும் (தன் படைப்பினங்கள் மீது) பேரன்பு கொண்டவனாகவும் இருக்கின்றான்.”</span>
<span>11:91 அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “ஷûஐபே! நீர் கூறுகின்ற பெரும்பாலான விஷயங்கள் எங்களுக்குப் புரிவதில்லை. மேலும், எங்களுக்கிடையே நீர் வலிமை குன்றியவராக இருப்பதைத்தான் நாங்கள் காண்கிறோம். உம்முடைய குடும்பத்தார் இல்லையென்றால், எப்பொழுதோ உம்மைக் கல்லெறிந்து கொன்றிருப்போம்! மேலும் (நாங்கள் உம்மை மதிக்கும் அளவுக்கு) நீர் எங்களிடையே வலிமையுடையவர் அல்லர்!”</span>
<span>11:92 ஷûஐப் கூறினார்: “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வைவிட என்னுடைய குடும்பத்தார்களையா அதிக வலிமையுள்ளவர்களாக நீங்கள் கருதுகிறீர்கள்? (என்னுடைய குடும்பத்தாருக்கு அஞ்சுகின்றீர்கள்; ஆனால்) அல்லாஹ்வை அலட்சியமாகப் புறக்கணித்து விட்டீர்கள்! திண்ணமாக, என்னுடைய அதிபதி நீங்கள் செய்கின்றவற்றைச் சூழ்ந்தறிந்தவனாக இருக்கின்றான். </span>
<span>11:93 என் சமுதாயத்தினரே! நீங்கள் உங்கள் வழியில் செயல்பட்டுக் கொண்டிருங்கள்; நான் (எனது வழியில்) செயல்பட்டுக் கொண்டு இருப்பேன். இழிவுறுத்தும் வேதனை யாரை வந்தடையும் என்பதையும், யார் பொய் உரைக்கின்றார் என்பதையும் விரைவில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். எனவே, நீங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள். நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்!”</span>
<span>11:94 இறுதியில், நமது கட்டளைக்குரிய நேரம் வந்து விட்டது. அப்போது நமது அருளால் நாம் ஷûஐபையும் அவருடைய நம்பிக்கை கொண்ட தோழர்களையும் காப்பாற்றினோம். மேலும், அக்கிரமம் செய்தவர்களை ஒரு பயங்கரமான ஓசை தாக்கியது! அவர்கள் தம் ஊர்களில் தலைக்குப்புற வீழ்ந்து மடிந்தனர்; 95 அங்கு அவர்கள் வாழவே இல்லை என்பது போல! </span>
<span>11:95 தெரிந்து கொள்ளுங்கள்: இறையருளிலிருந்து மத்யன் வாசிகளும் தூக்கி எறியப்பட்டார்கள்; ஸமூத் இனத்தார் தூக்கி எறியப்பட்டது போன்று!</span>
<span>11:96 மேலும், மூஸாவை ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய அரசுப் பிரமுகர்களிடம் நம் சான்றுகளுடனும், (தூதுத்துவத்திற்கான) வெளிப்படையான அத்தாட்சியுடனும் நாம் அனுப்பி வைத்தோம். </span>
<span>11:97 ஆயினும் அம்மக்கள் ஃபிர்அவ்னுடைய கட்டளையையே பின்பற்றினார்கள் அவனுடைய கட்டளை நேர்மையற்றதாக இருந்தபோதிலும்! </span>
<span>11:98 மறுமைநாளில் அவன் தன் சமுதாயத்தினர் அனைவரையும்விட முன்னணியில் இருப்பான். மேலும் தன் தலைமையில் அவர்களை நரகத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பான். சேருமிடங்களில் எத்துணைக் கொடிய இடமாகும் அது! </span>
<span>11:99 மேலும், அம்மக்கள் மீது இம்மையிலும் சாபம் ஏற்பட்டது. மறுமையிலும் ஏற்பட்டே தீரும்! வழங்கப்படும் வெகுமதிகளில் எத்துணை மோசமான வெகுமதி இது!</span>
<span>11:100 இவை சில ஊர்களைப் பற்றிய வரலாறுகளாகும்; அவற்றை நாம் உமக்கு எடுத்துச் சொல்கின்றோம். அவற்றில் சில இன்றும் இருக்கின்றன; சில முற்றிலும் அழிந்துவிட்டன. </span>
<span>11:101 நாம் அவர்களுக்கு அநீதி இழைக்கவில்லை; மாறாக அவர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள். மேலும் உம் இறைவனின் கட்டளை வந்துவிட்டபோது, அல்லாஹ்வை விடுத்து அவர்கள் அழைத்தவண்ணம் இருந்த அவர்களுடைய கடவுள்கள் அவர்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை. நாசத்தைத் தவிர வேறு எந்தப் பயனையும் அவை அவர்களுக்குத் தரவில்லை. </span>
<span>11:102 மேலும் அக்கிரமம் புரிந்துகொண்டிருக்கக்கூடிய ஊர்களை உம் இறைவன் தண்டிக்கும்போது அவனுடைய தண்டனை இப்படித்தான் இருக்கும்! திண்ணமாக, அவனது தண்டனை வேதனை மிக்கதும் மிகக் கடுமையானதுமாகும். </span>
<span>11:103 உண்மையில், மறுமைநாளின் வேதனை குறித்து அஞ்சும் ஒவ்வொருவருக்கும் இதில் ஒரு சான்று இருக்கிறது. அது மக்கள் அனைவரும் ஒன்று திரட்டப்படும் நாளாகும். அன்று நடைபெறுகின்ற அனைத்தும் வெளிப்படையாகவே நடைபெறும். </span>
<span>11:104 அந்நாளைக் கொண்டு வருவதில் நாம் அதிக தாமதம் செய்யப்போவதில்லை; நிர்ணயிக்கப்பட்ட சொற்ப காலத்தைத் தவிர! </span>
<span>11:105 அந்நாள் வரும்போது இறைவனின் அனுமதி இன்றி எந்த மனிதனும் பேச முடியாது. பிறகு அவர்களில் சிலர் துர்பாக்கியவான்களாகவும் வேறு சிலர் நற்பேறுடையவர்களாகவும் இருப்பார்கள். </span>
<span>11:106 எவர்கள் துர்பாக்கியவான்களோ அவர்கள் நரகம் செல்வார்கள்! அங்கு (வெப்பம் மற்றும் தாகத்தின் கடுமையால்) மூச்சிரைக்கக் கூச்சலிடுவார்கள்; கதறுவார்கள். </span>
<span>11:107 வானங்களும் பூமியும் இருக்கும் காலமெல்லாம் அங்கு அவர்கள் அதே நிலையிலேயே கிடப்பார்கள்; ஆனால் (அந்நிலையை மாற்ற) உம் இறைவன் நாடினாலே தவிர! தான் நாடுவதைச் செய்வதற்கு முழு அதிகாரம் உள்ளவனாக அவன் இருக்கின்றான். </span>
<span>11:108 மேலும் எவர்கள் நற்பேறுடையவர்களோ அவர்கள் சுவனம் செல்வார்கள். வானங்களும் பூமியும் இருக்கும் காலமெல்லாம் அங்கே அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள்; ஆனால் (அந்நிலையை மாற்ற) உம் இறைவன் நாடினாலே தவிர! முடிவுறாத அருட்கொடைகள் (அங்கு) அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும். </span>
<span>11:109 எனவே (நபியே!) இவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் கடவுள்கள் குறித்து நீர் சற்றும் சந்தேகம் கொள்ள வேண்டாம். இவர்களோ முன்பு தம் மூதாதையர் எவ்வாறு ஆராதனை செய்து வந்தார்களோ அவ்வாறே (கண்மூடித்தனமாக) ஆராதனை செய்து வருகிறார்கள். மேலும், திண்ணமாக நாம் இவர்களுக்குரிய பங்கினை யாதொரு குறைவுமின்றி நிறைவாகக் கொடுப்போம். </span>
<span>11:110 நாம் (இதற்கு முன்பு) மூஸாவுக்கும் வேதத்தை அருளியிருக்கின்றோம். அது குறித்தும் கருத்து முரண்பாடு கொள்ளப்பட்டது; (இன்று உமக்கு அருளப்பட்டிருக்கும் இந்த வேதத்தை ஏற்பதில் கருத்து முரண்பாடு கொள்ளப்படுவதைப் போன்று!) உம் இறைவனிடம் முன்னரே ஒரு விஷயம் முடிவு செய்யப்படாதிருந்தால், கருத்து முரண்பாடு கொண்டவர்களுக் கிடையே எப்போதோ தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும். உண்மை யாதெனில் இவர்கள் இதனைக் குறித்து கடும் சந்தேகத்தில் இருக்கிறார்கள். மேலும், மனக்கலக்கத்தில் ஆழ்ந்துள்ளார்கள். </span>
<span>11:111 மேலும், உம் இறைவன் இவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்குரிய கூலியை நிறைவாகக் கொடுத்தே தீருவான்! திண்ணமாக, அவன் அவர்களின் செயல்கள் அனைத்தையும் நன் கறிந்தவனாய் இருக்கின்றான். </span>
<span>11:112 எனவே, (நபியே!) நீரும் (நிராகரிப்பையும், கீழ்ப்படியாமையையும் கைவிட்டு, நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதலின் பக்கம்) திரும்பிய உம்முடைய தோழர்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்டது போன்று நேரான வழியில் நிலைத்திருங்கள். மேலும், அடிபணிவதற்கான வரம்புகளை மீறிவிடாதீர்கள். நீங்கள் செய்துகொண்டிருக்கும் அனைத்தையும் திண்ணமாக உங்கள் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் </span>
<span>11:113 இந்த அக்கிரமக்காரர்களின் பக்கம் சிறிதும் சாய்ந்துவிடாதீர்கள். அவ்வாறு சாய்ந்தால், நரக நெருப்பு உங்களைச் சூழ்ந்து கொள்ளும்! மேலும் அல்லாஹ்விடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். </span>
<span>11:114 பிறகு (எங்கிருந்தும்) உங்களுக்கு உதவி கிடைக்காது. மேலும், பகலின் இரு ஓரங்களிலும் இரவு சிறிது கழிந்த நேரத்திலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! திண்ணமாக, நன்மைகள் தீமைகளைக் களைந்து விடுகின்றன. அல்லாஹ்வை நினைவு கூர்கின்றவர்களுக்கு இது ஒரு நினைவூட்டி ஆகும். </span>
<span>11:115 மேலும், பொறுமையைக் கைக்கொள்வீராக! நற்செயல்கள் புரிவோரின் கூலியை திண்ணமாக அல்லாஹ் வீணாக்குவதில்லை. </span>
<span>11:116 பூமியில் குழப்பம் விளைவிப்பதைத் தடுக்கக்கூடிய நல்லவர்கள் உங்களுக்கு முன் வாழ்ந்து சென்ற சமூகங்களில் இருந்திருக்க வேண்டாமா? அப்படிப்பட்டவர்கள் இருந்தாலும் மிகக் குறைவாக இருந்திருக்கிறார்கள். அவர்களை அம்மக்களிட மிருந்து நாம் காப்பாற்றினோம். ஆனால் அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சுகபோக வாழ்க்கையில் மூழ்கிக் கிடந்தார்கள்; மேலும் குற்றவாளிகளாக இருந்தார்கள். </span>
<span>11:117 மேலும், உம் இறைவன் எந்த ஊரையும் அவ்வூர் மக்கள் சீர்திருத்தம் புரிவோராய் இருக்கும் நிலையில், நியாயமின்றி அழித்துவிடக் கூடியவன் அல்லன். </span>
<span>11:118 உம் இறைவன் நாடினால், நிச்சயம் மனித இனம் முழுவதையும் ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். (அவ்வாறு இல்லை.) ஆதலால், இனி அவர்கள் மாறுபட்ட வழிமுறைகளில்தான் சென்று கொண்டிருப்பார்கள். </span>
<span>11:119 மேலும், உம் இறைவன் எவர்கள் மீது கருணை புரிந்தானோ அவர்கள் மட்டுமே மாறுபட்ட வழியில் செல்வதிலிருந்து விலகியிருப்பார்கள். இதற்காகவே (தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கிச் சோதித்துப் பார்ப்பதற்காகவே) அவன் அவர்களைப் படைத்துள்ளான். மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவரைக் கொண்டும் திண்ணமாக நான் நரகத்தை நிரப்புவேன் எனும் உம் இறைவனின் வாக்கு நிறைவேறிவிட்டது. </span>
<span>11:120 (நபியே!) இறைத்தூதர்களின் வரலாறுகளிலிருந்து நாம் எடுத்துக் கூறும் இந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் எப்படிப்பட்டவை என்றால், அவற்றின் மூலம் நாம் உமது இதயத்தை உறுதிப்படுத்துகிறோம். மேலும், இவற்றில் உமக்கு சத்தியத்தைப் பற்றிய அறிவும் கிடைத்தது. இறைநம்பிக்கையாளர்களுக்கு இவற்றில் அறிவுரையும் நினைவூட்டலும் இருக்கின்றன. </span>
<span>11:121 ஆனால், நம்பிக்கை கொள்ளாதவர்களை நோக்கி நீர் கூறும்: “நீங்கள் உங்கள் வழியில் செயல்பட்டுக் கொண்டிருங்கள்; நாங்கள் எங்கள் வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். </span>
<span>11:122 விளைவை நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.” </span>
<span>11:123 வானங்கள், பூமி ஆகியவற்றில் மறைந்துள்ள அனைத்தும் அல்லாஹ்வின் அதிகாரத்திற்குட்பட்டனவாகும். மேலும், அனைத்து விவகாரங்களும் அவனிடமே திரும்பக் கொண்டுவரப்படுகின்றன. எனவே, (நபியே!) நீர் அவனுக்கே அடிபணிவீராக! மேலும் அவனையே முழுவதும் சார்ந்திருப்பீராக! நீங்கள் செய்து கொண்டிருப்பவை அனைத்தையும் உம் இறைவன் கவனிக்காமல் இல்லை. </span>
</div><div>
<span>யூஸுஃப்</span>
<span>12:1 அலிஃப் லாம் றா. இவை (தனது கருத்தைத்) தெளிவாக விவரிக்கும் வேதத்தின் வசனங்களாகும். </span>
<span>12:2 இதனை (அரபிகளாகிய) நீங்கள் நன்கு புரிந்து கொள்ளும் பொருட்டு குர்ஆனாக அரபிமொழியில் திண்ணமாக நாம் இறக்கிவைத்துள்ளோம். </span>
<span>12:3 (நபியே!) நாம் இந்தக் குர்ஆனை உமக்கு வஹி மூலம் அருளி, சம்பவங்களையும் உண்மை நிலைகளையும் மிக அழகிய முறையில் உமக்கு எடுத்துரைக்கின்றோம். இதற்கு முன்னர் நிச்சயமாக நீர் (இவற்றைப் பற்றி) எதுவும் அறியாதிருந்தீர். </span>
<span>12:4 இதனை நினைவுகூர்வீராக: யூஸுஃப் தன் தந்தையிடம், “என் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும் சந்திரனையும் நான் கனவில் கண்டேன்; அக்கனவில் அவை என் முன் தாழ்ந்து பணிந்து கொண்டிருப்பதாகவும் கண்டேன்!” என்று கூறினார். </span>
<span>12:5 அதற்கு அவருடைய தந்தை கூறினார்: “என் அருமை மகனே! உனது கனவை உன் சகோதரர்களிடம் கூறிவிடாதே! அவ்வாறு கூறினால் அவர்கள் உனக்கு எதிராக சதி செய்ய முற்படுவார்கள். திண்ணமாக, ஷைத்தான் மனிதனின் வெளிப்படையான பகைவனாவான். </span>
<span>12:6 மேலும், இ(க்கனவில் நீ கண்ட)து போன்றே நடைபெறும். உன் அதிபதி உன்னைத் (தனது பணிக்காக) தேர்ந்தெடுப்பான். மேலும், விஷயங்களின் உட்கருத்துகளைப் புரிந்துகொள்ளும் முறையை உனக்குக் கற்றுத் தருவான். இதற்கு முன்னர் உன் மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகியோர் மீது தன் அருட்பேற்றினை அவன் நிறைவு செய்தது போன்று உன் மீதும், யஃகூபின் குடும்பத்தினர் மீதும் நிறைவு செய்வான். திண்ணமாக, உன் இறைவன் நன்கறிந்தவனும், நுண்ணறிவாளனும் ஆவான்.”</span>
<span>12:7 யூஸுஃப் மற்றும் அவருடைய சகோதரர்களின் வரலாறு பற்றிக் கேட்பவர்களுக்கு அதில் பெரும் சான்றுகள் இருக்கின்றன. </span>
<span>12:8 (இந்த வரலாறு இப்படித் தொடங்குகின்றது:) அவருடைய சகோதரர்கள் தமக்கிடையே கூறினார்கள்: “யூஸுஃபும் அவருடைய சகோதரரும் நம்மைவிட நம் தந்தைக்கு மிகப் பிரியமானவர்களாய் இருக்கின்றனர். ஆயினும், நாம்தாமே அதிக எண்ணிக்கையுள்ள ஒரு குழுவாக இருக்கின்றோம். திண்ணமாக, நம் தந்தை பெருந் தவறில் இருக்கின்றார். </span>
<span>12:9 எனவே, யூஸுஃபைக் கொன்று விடுங்கள்; அல்லது அவரை எங்காவது கொண்டுபோய் வீசி விடுங்கள்! இவ்வாறு செய்தால்தான் உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கம் மட்டும் திரும்பும். மேலும், இதன் பின்னர் நீங்கள் நல்ல மனிதர்களாகிவிடுவீர்கள்.” </span>
<span>12:10 அவர்களில் ஒருவர் கூறினார்: “யூஸுஃபைக் கொன்றுவிடாதீர்கள்! நீங்கள் ஏதேனும் செய்துதான் ஆகவேண்டும் என்று இருந்தால், அவரை ஆழமானதொரு கிணற்றில் போட்டுவிடுங்கள்! அவ்வழியே வந்து போகும் பயணிகளில் எவரேனும் அவரை வெளியே எடுத்துக் கொண்டு போகக்கூடும்.” </span>
<span>12:11 (இந்தத் திட்டத்தின்படித் தம் தந்தையிடம் சென்று) அவர்கள் கேட்டார்கள்: “எங்கள் தந்தையே! நாங்கள் யூஸுஃபின் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருக்கும் நிலையில், அவர் விஷயத்தில் நீங்கள் எங்களை நம்பாமலிருக்கக் காரணம் என்ன? </span>
<span>12:12 நாளை எங்களுடன் அவரை அனுப்பி வையுங்கள்; அவர் உண்டு மகிழ்ந்து விளையாடட்டும்! அவரைப் பாதுகாத்திட நாங்கள் இருக்கின்றோம்” என்று கூறினார்கள். </span>
<span>12:13 தந்தை கூறினார்: “நீங்கள் அவரை அழைத்துச் செல்வது என்னைக் கவலையில் ஆழ்த்துகிறது. மேலும், நீங்கள் அவர் விஷயத்தில் கவனக் குறைவாக இருக்கும்போது அவரை ஓநாய் அடித்துத் தின்றுவிடுமோ என்று நான் அஞ்சுகின்றேன்.” </span>
<span>12:14 அதற்கு அவர்கள், “நாங்கள் ஒரு குழுவாக இருக்கும்போது அவரை ஓநாய் தின்று விடுமானால், திண்ணமாக, நாங்கள் ஒன்றுக்கும் உதவாதவர்களாய் அல்லவா ஆகி விடுவோம்!” என்று பதில் கூறினார்கள். </span>
<span>12:15 (இவ்வாறு வற்புறுத்தி) அவரை அழைத்துச் சென்று, ஓர் ஆழமான கிணற்றில் போட்டுவிட வேண்டுமென அவர்கள் முடிவு செய்தார்கள். அப்போது நாம் யூஸுஃபுக்கு அறிவித்தோம்: “ஒரு காலம் வரும்; அப்போது அவர்கள் தங்களுடைய இந்தச் செயல்களின் விளைவுகளை அறியாதிருக்கும் நிலையில் நீர் அவர்களுக்கு அறிவித்துக் கொடுப்பீர்!” </span>
<span>12:16 அந்தி சாயும் நேரத்தில் அழுது புலம்பிக் கொண்டு தங்கள் தந்தையிடம் அவர்கள் வந்து கூறினார்கள்:</span>
<span>12:17 “எங்கள் தந்தையே! நாங்கள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தோம். யூஸுஃபை எங்கள் பொருட்களின் அருகில் விட்டிருந்தோம். திடீரென்று ஓநாய் வந்து அவரைத் தின்றுவிட்டது; (இப்போது) நாங்கள் உண்மை சொல்பவர்களாய் இருந்தாலும் எங்களை நீங்கள் நம்பமாட்டீர்கள்.”</span>
<span>12:18 மேலும், அவர்கள் யூஸுஃபின் சட்டையில் போலி இரத்தத்தைத் தேய்த்துக் கொண்டு வந்திருந்தார்கள். இதனைக் கேட்ட அவர்களுடைய தந்தை கூறினார்: “அவ்வாறில்லை, உங்கள் மனம் ஒரு பெரும் செயலை உங்களுக்கு எளிதாக்கிவிட்டது. சரி, மிக அழகிய முறையில் நான் பொறுமையை மேற்கொள்வேன். நீங்கள் புனைந்து கூறும் விஷயத்தில் அல்லாஹ்விடம்தான் உதவி கோர வேண்டும்.”</span>
<span>12:19 (அங்கு) பயணக் கூட்டமொன்று வந்தது. அவர்கள் தங்களுக்குத் தண்ணீர் கொண்டு வருவதற்காக நியமிக்கப்பட்டிருந்தவரை அனுப்பி வைத்தார்கள். அவர் (கிணற்றினுள்) தம்முடைய வாளியை விட்டதும் யூஸுஃபைக் கண்டார். உடனே, “இதோ ஒரு நற்செய்தி! இங்கு ஒரு சிறுவன் இருக்கின்றான்!” என்று (உரக்கக்) கூறினார். அவர்கள் அச்சிறுவனை வணிகப் பொருளாகக் கருதி மறைத்துக் கொண்டனர். ஆயினும், அவர்கள் செய்து வந்தவற்றை அல்லாஹ் நன்கறிந்திருந்தான். </span>
<span>12:20 இறுதியாக அவர்கள் அவரை மிக அற்ப விலைக்கு ஒரு சில வெள்ளி நாணயங்களுக்கு விற்று விட்டார்கள்! அவருக்கு விலை நிர்ணயிப்பதில் அவர்கள் அதிகம் எதிர்பார்க்காதவர்களாய் இருந்தார்கள். </span>
<span>12:21 அவரை விலை கொடுத்து வாங்கிய எகிப்தியர் தன் மனைவியிடம் கூறினார்: “இவரைக் கண்ணியமான முறையில் கவனித்துக்கொள்; இவர் நமக்குப் பயன்படலாம் அல்லது இவரை நாம் மகனாக ஆக்கிக் கொள்ளலாம்.” இவ்வாறு, அந்த பூமியில் காலூன்றுவதற்கான சூழ்நிலையை யூஸுஃபுக்கு நாம் ஏற்படுத்தினோம். மேலும், விஷயங்களின் உட்கருத்துகளைப் புரிந்து கொள்ளும் முறையை நாம் அவருக்குக் கற்றுக் கொடுப்பதற்கும் தக்க ஏற்பாடு செய்தோம். அல்லாஹ் தன் பணிகளை நிறைவேற்றியே தீருவான்! ஆயினும் மக்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை. </span>
<span>12:22 அவர் முழுமையான வாலிபத்தை அடைந்ததும், நாம் அவருக்குத் தீர்மானிக்கும் ஆற்றலையும் ஞானத்தையும் வழங்கினோம். இவ்வாறே நாம் நல்லவர்களுக்குக் கூலி வழங்குகின்றோம். </span>
<span>12:23 அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ அந்தப் பெண் அவரை அடைய வலை விரித்தாள்! (ஒரு நாள்) வாயில்களை எல்லாம் அடைத்துத் தாழிட்டு விட்டு “வாரும்!” என்று அழைத்தாள். அதற்கு யூஸுஃப் கூறினார்: “அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்! திண்ணமாக என் ரப் அதிபதி எனக்கு நல்ல கண்ணியத்தை வழங்கியுள்ளான். (அப்படியிருக்க இத்தகைய இழிசெயலை நான் செய்வேனா? இத்தகைய) அக்கிரமக்காரர்கள் ஒருபோதும் வெற்றி அடைவதில்லை!”</span>
<span>12:24 அவள் அவரை அடைய முனைந்து விட்டாள். தன் அதிபதியின் தெளிவான சான்றினை உணராதிருந்தால் அவரும் அவளை அடைய முனைந்திருப்பார்! தீமையையும் மானக்கேடானவற்றையும் அவரை விட்டு விலக்கிவிட வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தோம். உண்மையிலேயே அவர் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லடியார்களுள் ஒருவராவார். </span>
<span>12:25 இறுதியில் யூஸுஃபும், அவளும் (முன்னும் பின்னுமாக) வாயிலை நோக்கி ஓடினார்கள். அவள் பின்புறத்திலிருந்து அவருடைய சட்டையை (இழுத்து)க் கிழித்தாள்! அவ்வேளை வாயிலில், அவளுடைய கணவர் நிற்பதை இருவரும் கண்டார்கள். (அவரைப் பார்த்ததும்) அவள் கூறலானாள்: “உம்முடைய மனைவியிடம் தீய நோக்கத்துடன் நடந்துகொள்ள முயன்றவனுக்குத் தண்டனை என்ன? சிறையில் அடைப்பதையோ, கடும் வேதனையில் ஆழ்த்துவதையோ தவிர வேறு என்னதான் தண்டனை இருக்க முடியும்?” </span>
<span>12:26 அதற்கு யூஸுஃப், “இவள்தான் தவறான வழிக்கு என்னை அழைத்தாள்!” என்று கூறினார். அவளுடைய குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் (சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு) சாட்சியம் கூறினார்: “யூஸுஃபுடைய சட்டை முன்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் சொல்வதுதான் உண்மை; அவர் பொய்யராவார்! </span>
<span>12:27 அவருடைய சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் கூறுவது பொய்; அவர் கூறுவது உண்மையாகும்!” </span>
<span>12:28 அவளுடைய கணவர், யூஸுஃபுடைய சட்டை பின்புறமாகக் கிழிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தபோது கூறினார்: “திண்ணமாக, இது பெண்களாகிய உங்களுடைய சூழ்ச்சிதான். உண்மை யாதெனில், உங்கள் சூழ்ச்சி மிகவும் அபாயகரமானதாகும். </span>
<span>12:29 யூஸுஃபே! இதனைப் பொருட்படுத்தாதீர்!” பிறகு (தன் மனைவியை நோக்கி), “உனது குற்றத்திற்காக நீ மன்னிப்புத் தேடிக்கொள்! ஏனெனில் நீதான் உண்மையில் தவறிழைத்திருக்கின்றாய்!”</span>
<span>12:30 நகரத்திலுள்ள பெண்கள், தமக்கிடையே பேசிக் கொள்ளலாயினர்: “அஜீஸுடைய மனைவி தன்(னிடம் அடிமையாய் உள்ள) இளைஞரிடம் தகாத முறையில் நடந்திட முயன்றிருக்கின்றாள். அவர் மீதுள்ள காதல் அவளை நிதானமிழக்கச் செய்து விட்டது! உண்மையில் ஒரு வெளிப்படையான தவறை அவள் செய்து கொண்டிருக்கிறாள் என்றே நாங்கள் கருதுகின்றோம்.”</span>
<span>12:31 இவ்வாறு அப்பெண்கள் இழிவாகப் பேசிக் கொள்வதை அவள் கேள்விப்பட்டபோது, அவர்களுக்கு அழைப்பு அனுப் பினாள். அவர்களுக்காக சாய்விருக்கைகளைக் கொண்ட மண்டபத்தைத் தயாராக்கினாள். மேலும் (விருந்துண்ணும்போது) அப்பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கத்தியைக் கொடுத்தாள். (அவர்கள் பழத்தை அறுத்துத் தின்னும் சந்தர்ப்பத்தில், யூஸுஃபை நோக்கி) அவர்களின் முன்னே செல்லும் என சாடை காட்டினாள். அப்பெண்கள் அவரைப் பார்த்ததும் பிரமித்துப் போய் தம் கைகளை அறுத்துக் கொண்டார்கள். “ஹாஷலில்லாஹ்! (அல்லாஹ் மிகத் தூய்மையானவன்) இவர் ஒரு மனிதரே அல்லர்; இவர் சிறப்புக்குரிய ஒரு வானவரே ஆவார்!” என்று (தங்களையும் மறந்து) கூறினர். </span>
<span>12:32 மன்னரின் மனைவி கூறினாள்: “(பார்த்தீர்களா!) எவர் விஷயத்தில் என்னை நீங்கள் பழித்தீர்களோ அவர் இவர்தான்; சந்தேகமில்லாமல், நான்தான் இவரை என் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தினேன். ஆனால் இவர் தப்பிவிட்டார்; நான் சொல்வதை இவர் கேட்டு நடக்காவிட்டால் திண்ணமாக சிறையிலடைக்கப்பட்டு, சிறுமைக்குள்ளாவார்!” </span>
<span>12:33 யூஸுஃப் கூறினார்: “என் இறைவனே! எந்தச் செயலைச் செய்ய வேண்டுமென என்னை இவர்கள் அழைக்கின்றார்களோ அந்தச் செயலைவிட சிறையே எனக்கு மிகவும் உவப்பானது! மேலும், அவர்களின் சூழ்ச்சிகளிலிருந்து என்னை நீ காப்பாற்றாவிட்டால், நான் அவர்களுடைய வலையில் சிக்கியிருப்பேன். மேலும், அறியாதவர்களில் நானும் ஒருவனாகியிருப்பேன்” </span>
<span>12:34 அவருடைய இறைவன் அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு, அப்பெண்களின் சூழ்ச்சிகளிலிருந்து அவரைக் காப்பாற்றினான். திண்ணமாக, அவனே அனைத்தையும் செவியுறுபவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>12:35 பிறகு, (யூஸுஃபுடைய ஒழுக்கத் தூய்மைக்கும், தம் பெண்கள்தாம் தவறிழைத்தவர்கள் என்பதற்கும்) தெளிவான சான்றுகளை அவர்கள் கண்ட பின்பும், சிறிதுகாலம் அவரைச் சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்குத் தோன்றியது. </span>
<span>12:36 அவருடன், இரு இளைஞர்களும் சிறை புகுந்தார்கள். (ஒருநாள்) அவ்விருவரில் ஒருவர், “நான் திராட்சைச் சாறு பிழிந்து கொண்டிருப்பதாகக் கனவு கண்டேன்” என்று கூறினார். மற்றொருவர் கூறினார்: “நான் என் தலை மீது ரொட்டிகளைச் சுமந்திருப்பதாகவும் அவற்றைப் பறவைகள் தின்று கொண்டிருப்பதாகவும் கனவு கண்டேன்.” (அவ்விருவரும் யூஸுஃபிடம் கூறினர்:) “நீர் இதன் விளக்கத்தை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். உம்மை ஒரு நல்ல மனிதராக நாங்கள் காண்கிறோம்.” </span>
<span>12:37 அதற்கு அவர் கூறினார்: “இங்கு உங்களிருவருக்கும் வழங்கப்படும் உணவு உங்களிடம் வருவதற்கு முன்பே இக்கனவின் விளக்கத்தை உங்களுக்கு அறிவித்து விடுவேன். என் இறைவன் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ள அறிவுகளில் இதுவும் ஒன்றாகும். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாமலும், மறுமையை ஏற்காமலும் வாழ்கின்ற சமூகத்தாரின் வழிமுறையைத் திண்ணமாக நான் விட்டுவிட்டேன். </span>
<span>12:38 என் மூதாதையரான இப்ராஹீம், இஸ்ஹாக் மற்றும் யஃகூப் ஆகியோரின் வழிமுறையைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுடன் எதனையும் இணையாக்குவது எங்களுடைய பணி அல்ல. உண்மையிலேயே, (அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் நாம் அடிமைகளல்லர் எனும்) இந்நிலை, நம்மீதும் மனித குலம் அனைத்தின் மீதும் அல்லாஹ் பொழிந்துள்ள ஓர் அருட்பேறாகும். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் இதற்கு நன்றி செலுத்துவதில்லை. </span>
<span>12:39 என்னுடைய சிறைத் தோழர்களே! (நீங்களே சிந்தித்துப் பாருங்கள்!) பல்வேறுபட்ட கடவுளர்கள் சிறந்தவர்களா? அல்லது யாவற்றையும் அடக்கியாளுகின்ற ஏக இறைவனாகிய அல்லாஹ் சிறந்தவனா? </span>
<span>12:40 அவனை விடுத்து எவற்றுக்கு நீங்கள் அடிபணிந்து வருகின்றீர்களோ அவை யாவும் நீங்களும், உங்கள் மூதாதையர்களும் சூட்டிக் கொண்ட வெறும் பெயர்களே(தவிர வேறொன்றுமில்லை)! அவற்றை வணங்குவதற்கு எத்தகைய ஆதாரத்தையும் அல்லாஹ் இறக்கி வைக்கவில்லை. ஆட்சி செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனைத் தவிர வேறு யாருக்கும் நீங்கள் அடிபணியக் கூடாதென்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுதான் முற்றிலும் நேரான வாழ்க்கை நெறியாகும்! ஆயினும் மக்களில் பெரும்பாலோர் அறியாதிருக்கின்றனர். </span>
<span>12:41 என்னுடைய சிறைத் தோழர்களே! (உங்கள் கனவுகளுக்கான விளக்கம் இதுதான்:) உங்களில் ஒருவர் தம் எஜமான(னாகிய எகிப்து அரச)னுக்கு மது புகட்டுவார். மற்றொருவர் கழுவிலேற்றப்படுவார்; பறவைகள் அவருடைய தலையைக் கொத்தித் தின்னும்! நீங்கள் எந்த விஷயம் குறித்து விளக்கம் கேட்டீர்களோ அந்த விஷயம் தீர்மானிக்கப்பட்டு விட்டது.”</span>
<span>12:42 பிறகு, அவ்விருவரில் எவரைக் குறித்து திண்ணமாக அவர் விடுதலையாகி விடுவார் என்று யூஸுஃப் கருதினாரோ அவரிடம் “உன்னுடைய எஜமான(னாகிய எகிப்தின் அரச)னிடம் என்னைப் பற்றி எடுத்துக்கூற வேண்டும்” என்றார். ஆனால், தன் எஜமானனிடம் (யூஸுஃபை) நினைவுபடுத்தவிடாமல் அவரை ஷைத்தான் மறதியிலாழ்த்தி விட்டான். யூஸுஃப் மேலும் சில ஆண்டுகள் சிறையிலே கிடந்தார். </span>
<span>12:43 (ஒருநாள்) அரசன் கூறினான்: “நான் ஒரு கனவு கண்டேன். ஏழு கொழுத்த பசுக்களை ஏழு மெலிந்த பசுக்கள் தின்று கொண்டிருக்கின்றன; மேலும் பசுமையான ஏழு தானியக் கதிர்களையும், ஏழு காய்ந்த கதிர்களையும் நான் கண்டேன். எனவே, அவையோரே! கனவிற்கான விளக்கத்தை நீங்கள் தெரிந்தவர்களாயிருந்தால் எனது கனவுக்குரிய விளக்கத்தைக் கூறுங்கள்!” </span>
<span>12:44 அதற்கு அவர்கள், “இவை குழப்பமான கனவுகளாகும். இவை போன்ற கனவுகளுக்கான விளக்கங்களை நாங்கள் அறிந்தவர்களல்லர்” என்றனர். </span>
<span>12:45 அவ்விரு கைதிகளில் விடுதலையடைந்தவர், வெகு காலத்திற்குப் பிறகு (யூஸுஃப் பற்றி) நினைவு வந்தபோது கூறினார்: “நான் இக்கனவின் விளக்கத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன். என்னை(ச்சிறையில் உள்ள யூஸுஃபிடம்) அனுப்புங்கள்!”</span>
<span>12:46 (அவர் அங்கு சென்று கூறினார்:) “யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த பசுக்களை ஏழு மெலிந்த பசுக்கள் தின்று கொண்டிருப்பதாகவும், மேலும் பசுமையான ஏழு கதிர்களையும் காய்ந்து போன ஏழு கதிர்களையும் கனவில் கண்டால் அதன் விளக்கம் என்ன என்பதை எங்களுக்குக் கூறுவீராக! நான் இம்மக்களிடம் திரும்பச் செல்ல வேண்டும்; அவர்கள் அறிந்து கொள்ளக்கூடும்!” </span>
<span>12:47 யூஸுஃப் கூறினார்: “ஏழாண்டுகள் வரை தொடர்ந்து நீங்கள் விவசாயம் செய்து கொண்டிருப்பீர்கள். (அந்த ஏழாண்டுகளில்) நீங்கள் அறுவடை செய்வதில் உங்கள் உணவுக்குப் பயன்படும் ஒரு சிறு பாகத்தைத் தவிர, மற்றவற்றை அவற்றின் கதிர்களிலேயே விட்டு வையுங்கள்! </span>
<span>12:48 அதன் பின்னர் மிகக் கடினமான ஏழாண்டுகள் வரும். அப்போது அந்நேரத்திற்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்த அனைத்தும் உட்கொள்ளப்பட்டு விடும்! அவற்றிலிருந்து நீங்கள் தனியே பாதுகாத்து வைத்திருந்ததைத் தவிர! </span>
<span>12:49 பின்னர் மீண்டும் ஓர் ஆண்டு வரும். அப்பொழுது அருள் மாரி பொழியப்பட்டு மக்களின் துயரங்கள் களையப்படும். அன்று அவர்கள் பழரசங்கள் பிழிவார்கள் (செழிப்பாக வாழ்வார்கள்)!”</span>
<span>12:50 அரசர், “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்!” என்றார். (அரசரின்) தூதுவர் வந்தபோது, யூஸுஃப் அவரிடம் கூறினார்: “நீர் உம் எஜமானனிடம் திரும்பிச் சென்று, ‘தம் கைகளை அறுத்துக் கொண்ட பெண்களின் நிலை என்னவாயிற்று?’ என்று கேட்டுவாரும். திண்ணமாக, என் இறைவன் அப்பெண்களின் சூழ்ச்சியை நன்கு அறிந்தவனாவான்.” </span>
<span>12:51 பிறகு அரசன் அப்பெண்களிடம் வினவினான்: “நீங்கள் யூஸுஃபை உங்கள் ஆசைக்கு இணங்க வைக்க முயன்றபோது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன?” அதற்கு அப்பெண்கள், “ஹாஷலில்லாஹ்! (அல்லாஹ் தூய்மையானவன்!) நாங்கள் அவரிடம் எத்தகைய தீய அம்சத்தையும் காணவில்லை” என ஒருமித்த குரலில் கூறினர். அஜீஸின் மனைவி கூறினாள்: “இப்பொழுது உண்மை வெளிப்பட்டுவிட்டது. நானே அவரை என் ஆசைக்கு இணங்க வைக்க முயற்சி செய்தேன். திண்ணமாக, அவர் முற்றிலும் வாய்மையுடையவரே!”</span>
<span>12:52 (யூஸுஃப் கூறினார்): “இதில் எனது நோக்கம் என்ன வெனில், திரை மறைவில் அஜீஸுக்கு நான் நம்பிக்கைத் துரோகம் செய்யவில்லை என்பதையும், நம்பிக்கைத் துரோகம் செய்வோரின் சூழ்ச்சிகளை அல்லாஹ் ஒருபோதும் வெற்றியடையச் செய்வதில்லை என்பதையும் அவர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதேயாகும். </span>
<span>12:53 மேலும், நான் என்னைத் தூய்மையானவன் எனக் கூறிக் கொள்ளவில்லை. ஏனெனில், திண்ணமாக மனித மனம், தீயவற்றை அதிகமாக தூண்டிவிடக்கூடியதாகும்; ஆனால் எவருக்கு இறைவன் கருணை புரிந்தானோ அவருடைய மனத்தைத் தவிர! திண்ணமாக, என் இறைவன் மிக்க மன்னிப்பு வழங்குபவனாகவும் பெரும் கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான்.”</span>
<span>12:54 அரசர் “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள். அவரை எனக்கே உரியவராய் வைத்துக் கொள்கின்றேன்” என்றார். யூஸுஃப் அவரிடம் உரையாடினார். அப்போது அரசர் கூறினார்: “இப்போது நீர் திண்ணமாக நம்மிடம் மதிப்பிற்குரியவராகவும் முழுநம்பிக்கைக்குரியவராகவும் ஆகிவிட்டீர்.” </span>
<span>12:55 அதற்கு யூஸுஃப் “நாட்டின் கருவூலங்களுக்கு என்னைப் பொறுப்பாளராக்குங்கள்! நான் நன்கு பாதுகாப்பவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கின்றேன்” என்று கூறினார். </span>
<span>12:56 மேலும், இவ்வாறு நாம் யூஸுஃபுக்கு அந்த பூமியில் அதிகாரத்தை வழங்கினோம். அங்கே, தாம் விரும்பும் எந்த இடத்திலும் அவர் தங்கி வாழும் உரிமை பெற்றிருந்தார். நாம் விரும்புகின்றவர்கள் மீது நமது கருணையைப் பொழிகின்றோம். நல்லவர்களின் கூலியை நாம் வீணாக்கிட மாட்டோம். </span>
<span>12:57 மேலும் எவர்கள் நம்பிக்கை கொண்டு, இறைவனுக்கு அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களோ அவர்களுக்கு மறுமையின் கூலி மிகச் சிறப்புடையதாகும். </span>
<span>12:58 பிறகு யூஸுஃபின் சகோதரர்கள் எகிப்துக்கு வந்து அவருடைய அவைக்குச் சென்றார்கள். அப்போது அவர் அவர்களை அறிந்து கொண்டார். ஆனால் அவர்கள் அவரை அறியவில்லை. </span>
<span>12:59 யூஸுஃப், அவர்களுக்குத் தேவையான பொருட்களை வழங்கிட ஏற்பாடு செய்துவிட்டு (அவர்கள் புறப்படும் நேரத்தில்) கூறினார்: “உங்கள் தந்தைவழிச் சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள்; நான் எவ்வளவு நிறைவாக அளந்து தருகின்றேன்; எப்படிச் சிறந்த முறையில் விருந்துபசாரம் செய்பவனாக இருக்கின்றேன் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? </span>
<span>12:60 நீங்கள் அவரை என்னிடம் அழைத்து வராவிடில், இனி என்னிடத்திலிருந்து உங்களுக்கு எந்த தானியமும் கிடைக்காது. ஏன், என் அருகிலும்கூட நீங்கள் வரக்கூடாது.”</span>
<span>12:61 அதற்கு அவர்கள், “அவரை எங்களுடன் அனுப்புவதற்காக அவருடைய தந்தையின் சம்மதத்தைப் பெற முயல்வோம். கண்டிப்பாக நாங்கள் இதனைச் செய்வோம்” என்று கூறினார்கள். </span>
<span>12:62 யூஸுஃப், தம் பணியாட்களிடம் “தானியத்துக்காக அவர்கள் கொடுத்த சரக்குகளை அவர்களுடைய பொதிகளிலேயே (மறைத்து) வைத்து விடுங்கள்!” என்று கூறினார். அவர்கள் ஊருக்குத் திரும்பிச் சென்றதும் (மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்ட) பொருட்களை அறிந்து கொள்ளக்கூடும். (மேலும், இந்தப் பேருதவிக்கு நன்றியுள்ளவர்களாகக் கூடும்) மேலும், அவர்கள் திரும்பி வரவும் கூடும் (எனும் நம்பிக்கையில் யூஸுஃப் இவ்வாறு செய்தார்.)</span>
<span>12:63 அவர்கள் தம் தந்தையிடம் திரும்பி வரும்போது, “எங்கள் தந்தையே! (இனிமேல்) நமக்குத் தானியம் வழங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே எங்களுடன் எங்கள் சகோதரரையும் அனுப்பி வையுங்கள், நாங்கள் தானியம் வாங்கி வருகின்றோம். மேலும், அவரைப் பாதுகாக்க நாங்கள் பொறுப்பேற்கிறோம்” என்று கூறினார்கள். </span>
<span>12:64 அதற்கு யஃகூப், “இதற்கு முன் இவருடைய சகோதரர் (யூஸுஃப்) விஷயத்தில் உங்களை நான் நம்பியது போன்று இவர் விஷயத்தில் இப்பொழுது உங்களை நான் நம்புவேனா? அல்லாஹ்தான் மிகச் சிறந்த பாதுகாவலன்; அவன் கருணையாளர்களிலேயே மிகவும் கருணையாளன்” என்று பதில் கூறினார். </span>
<span>12:65 பின்னர் அவர்கள் தம் பொதிகளை அவிழ்த்தபோது அவர்களின் சரக்குகள் அவர்களிடமே திருப்பிக் கொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டு “எங்கள் தந்தையே! இனி நமக்கு என்ன வேண்டும்? இதோ (பாருங்கள்!) நம்முடைய சரக்குகள் நம்மிடமே திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளன. (நாங்கள் சென்று) நமது குடும்பத்துக்கு வேண்டிய உணவுப் பொருட்களை வாங்கி வருவோம்; மேலும், எங்கள் சகோதரரைப் பாதுகாத்துக் கொள்வோம்; மேலும், ஓர் ஒட்டகச் சுமையளவு தானியத்தை அதிகமாகக் கொண்டு வருவோம். இந்த அளவு அதிக தானியம் எளிதில் கிடைத்துவிடும்” என்று கூறினார்கள். </span>
<span>12:66 அதற்குத் தந்தை கூறினார்: “நீங்கள் கண்டிப்பாக அவரை என்னிடம் (திரும்ப) அழைத்து வந்து விடுவீர்கள் என்று அல்லாஹ்வின் பெயரால் எனக்கு உறுதிமொழி தராதவரை ஒருபோதும் அவரை நான் உங்களுடன் அனுப்ப மாட்டேன்; ஆனால் ஏதேனும் ஆபத்து உங்களைச் சூழ்ந்து கொண்டாலே தவிர!” அவர்கள் அவ்வாறு அவரிடம் உறுதிமொழி அளித்தபோது, அவர் கூறினார்: “நாம் இவ்வாறு பேசிக் கொள்வதை அல்லாஹ் கண்காணிப்பவனாக இருக்கின்றான்!” </span>
<span>12:67 பிறகு யஃகூப் கூறினார்: “என்னுடைய மக்களே! (எகிப்தின் தலைநகரினுள்) நீங்கள் எல்லோரும் ஒரே வாயில் வழியாக நுழையாதீர்கள்! மாறாக பல்வேறு வாயில்கள் வழியாக நுழையுங்கள். ஆயினும், அல்லாஹ்வின் நாட்டத்திலிருந்து உங்களை என்னால் சிறிதும் காப்பாற்ற முடியாது. அதிகாரம் அல்லாஹ்வுக்கே அன்றி வேறெவருக்கும் இல்லை. நான் அவனையே முழுமையாகச் சார்ந்திருக்கின்றேன். சார்ந்திருப்பவர்கள் அனைவரும் முழுமையாக அவனைச் சார்ந்திருக்கட்டும்!” </span>
<span>12:68 ஆனால் (நடந்தது இது தான்:) அவர்கள் தம் தந்தை கட்டளையிட்டபடி நகரினுள் (பல்வேறு வாயில்கள் வழியாக) நுழைந்தபோது அவர்களின் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை அல்லாஹ்வின் நாட்டத்திற்கு மாறாக எவ்விதப் பலனையும் அவர்களுக்கு அளித்திடவில்லை. ஆனால் யஃகூபின் மனத்திற்குள் ஒரு சஞ்சலம் இருந்தது. அதனை நீக்குவதற்கு அவராக ஒரு முயற்சி செய்து கொண்டார். மேலும், அவருக்கு நாம் கற்றுத் தந்தவற்றைக் கொண்டு அவர் அறிவுடையவராகவே திகழ்ந்தார். ஆனால், மக்களில் பெரும்பாலோர் (இந்த விஷயத்தின் எதார்த்தத்தை) அறிந்து கொள்வதில்லை. </span>
<span>12:69 அவர்கள் யூஸுஃபின் அவைக்கு வந்தபோது அவர் தம் சகோதரரை மட்டுமே தம்மருகே அமர்த்திக் கொண்டார். பிறகு, “நான்தான் (காணாமல் போன) உன்னுடைய சகோதரன்; எனவே, இவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களுக்காக நீ வருந்தாதே!” என்று கூறினார். </span>
<span>12:70 யூஸுஃப் (தம் சகோதரர்களாகிய) அவர்களுக்கு வேண்டிய பொருள்களை வழங்கிட ஏற்பாடு செய்தபின் தம் சகோதரரின் பொதியுனுள் தமது கோப்பையை வைத்துவிட்டார். பிறகு அறிவிப்பாளர் ஒருவர், “பயணக்கூட்டத்தினரே! நீங்களெல்லோரும் திருடர்கள்!” என உரக்கக் கூவினார். </span> 
<span>12:71 அதற்கு அவர்கள் அவரை நோக்கித் திரும்பி வந்து, “உங்களுடைய எந்தப் பொருள் காணாமல் போய்விட்டது?” என்று வினவினார்கள். </span>
<span>12:72 அதற்கு (அரசு ஊழியர்களாகிய) அவர்கள், “அரசரின் அளவுக் கோப்பையைக் காணவில்லை” என்று கூறினார்கள். மேலும் (அந்த ஊழியர்களின் தலைவர் கூறினார்:) “யார் அதனைக் கொண்டு வருகின்றாரோ அவருக்கு ஓர் ஒட்டகச் சுமை அளவு வெகுமதி உண்டு; அதனை வாங்கித்தர நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்.” </span>
<span>12:73 அச்சகோதரர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் இந்த நாட்டில் குழப்பம் விளைவிக்க வரவில்லை என்பதையும், நாங்கள் திருடர்கள் அல்லர் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.” </span>
<span>12:74 அதற்கு அவர்கள், “சரி, நீங்கள் சொல்வது பொய் என்று நிரூபணமானால் திருடியவருக்குரிய தண்டனை என்ன?” என்று வினவினார்கள. </span>
<span>12:75 அதற்கவர்கள் “அவருக்குரிய தண்டனை...? எவருடைய மூட்டையில் அந்தப் பொருள் காணப்படுகின்றதோ அவரைப் பிடித்து வைத்துக்கொள்வதே அவருக்குரிய தண்டனையாகும். இத்தகைய அக்கிரமக்காரர்களுக்கு இம்முறையில்தான் நாங்கள் தண்டனை வழங்குவோம்” என்று மறுமொழி கூறினார்கள். </span>
<span>12:76 (அப்போது யூஸுஃப்) தம் சகோதரரின் மூட்டையைச் சோதனையிடுவதற்கு முன் அவர்களின் மூட்டைகளைச் சோதனையிடத் தொடங்கினார். பின்னர் தம் சகோதரரின் மூட்டையிலிருந்து காணாமல் போன பொருளைக் கண்டெடுத்தார். இவ்வாறு (நமது உபாயத்தின் மூலம்) யூஸுஃபுக்கு நாம் உதவினோம். மன்னனின் தீனின்படி (அதாவது, எகிப்து நாட்டு அரசுச் சட்டப்படி) தம் சகோதரரைப் பிடித்து வைத்துக் கொள்வது அவருக்கு ஏற்புடையதாய் இருக்கவில்லை; ஆனால் அல்லாஹ் அதனை நாடினாலே தவிர! நாம் நாடுபவர்களின் தகுதிகளை உயர்த்தி விடுகின்றோம். மேலும், அனைத்து அறிவாளிகளுக்கும் மேலாக ஓர் அறிவாளி இருக்கின்றான். </span>
<span>12:77 அச்சகோதரர்கள் கூறலானார்கள்: “இவர் திருடினார் என்றால் ஆச்சரியம் எதுவுமில்லை; ஏனெனில் இதற்கு முன்பு (யூஸுஃப் எனும்) இவருடைய சகோதரரும் திருடியிருக்கின்றார்.” அவர்களின் இந்தப் பேச்சை யூஸுஃப் தம் மனத்திற்குள் வைத்துக் கொண்டார். உண்மை நிலையை அவர்களுக்கு வெளிப்படுத்தவில்லை. “நீங்கள் மிகவும் கெட்டவர்கள்; மேலும், (என் முன்னிலையில் என்மீது) நீங்கள் எந்தக் குற்றச்சாட்டை சுமத்துகின்றீர்களோ, அதன் உண்மை நிலையை அல்லாஹ் நன்கறிவான்!” என்று (மெதுவாகக்) கூறினார். </span>
<span>12:78 அவர்கள் கூறினார்கள்: “அரசாதிபதியே! (அஜீஸே!) இவருடைய தந்தை மிகவும் வயது முதிர்ந்தவராய் இருக்கின்றார். எனவே இவருக்குப் பதிலாக எங்களில் எவரையேனும் நீங்கள் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்! திண்ணமாக, உங்களை மிகவும் நல்லவராக நாங்கள் காண்கிறோம்.” </span>
<span>12:79 அதற்கு யூஸுஃப் கூறினார்: “அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! எவரிடத்தில் எங்கள் பொருள் இருப்பதைக் கண்டோமோ, அவரைத் தவிர வேறொருவரை எவ்வாறு நாங்கள் பிடித்து வைத்துக் கொள்ள இயலும்? அவ்வாறு செய்தால் திண்ணமாக நாங்கள் அக்கிரமக்காரர்களாகி விடுவோம்.”</span>
<span>12:80 யூஸுஃபிடம் அவர்கள் நம்பிக்கை இழந்துவிடவே, அவர்கள் எல்லோரும் தனியாகச் சென்று தங்களுக்கிடையே ஆலோசனை செய்தார்கள். அவர்களில் மூத்தவர் கூறினார்: “உங்கள் தந்தை உங்களிடம் அல்லாஹ்வின் பெயரால் வாக்குறுதி வாங்கியுள்ளார் என்பது உங்களுக்குத் தெரியாதா? இதற்கு முன்னர் யூஸுஃபின் விவகாரத்தில் நீங்கள் எவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, என் தந்தை எனக்கு அனுமதி தரும் வரையில் அல்லது அல்லாஹ் என் விஷயத்தில் ஏதாவது தீர்ப்பு வழங்கும் வரையில் நான் இங்கிருந்து வரவே மாட்டேன்! அவன் தீர்ப்பு வழங்குவோரில் மிகச் சிறந்தவனாவான். </span>
<span>12:81 நீங்கள் உங்கள் தந்தையிடம் திரும்பிச் சென்று கூறுங்கள்: எங்கள் தந்தையே! திண்ணமாக உங்கள் மகன் திருடிவிட்டார். அவர் திருடியதை நாங்கள் பார்க்கவில்லை; ஆனால் எங்களுக்குத் தெரியவந்ததைச் சொல்கின்றோம். மேலும், மறைவில் நடைபெற்ற விஷயங்களை எங்களால் கண்காணிக்க இயலவில்லை. </span>
<span>12:82 நாங்கள் தங்கியிருந்த ஊர் மக்களிடமும் (கேட்டுப் பாருங்கள்!) எந்தப் பயணக் கூட்டத்துடன் நாங்கள் வந்தோமோ அந்தப் பயணக் கூட்டத்திட மும் விசாரித்துப் பாருங்கள்; திண்ணமாக நாங்கள் உண்மையைத்தான் சொல்கிறோம்!”</span>
<span>12:83 (இதைக் கேட்ட) தந்தை கூறினார்: “உண்மை என்ன வெனில், உங்கள் மனம் இன்னொரு பெரும் செயலை உங்களுக்கு எளிதாக்கி விட்டது. இப்போது நான் அழகிய பொறுமையை மேற்கொள்கின்றேன். அவர்கள் அனைவரையும் அல்லாஹ் என்னிடம் கொண்டு வந்து சேர்த்திடக் கூடும்! திண்ணமாக, அவன் அனைத்தையும் நன்கறிந்தவனும், அனைத்துச் செயல்களையும் நுண்ணறிவோடு மேற்கொள்பவனும் ஆவான்!” </span>
<span>12:84 பிறகு அவர், அவர்களை விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு, “ஐயகோ, யூஸுஃபே!” என்று புலம்பலானார். கவலையால் அவருடைய கண்கள் வெளுத்துப் போயிருந்தன. இந்தக் கடும் துன்பத்தை அவர் மனத்திற்குள்ளே அடக்கிக் கொண்டிருந்தார். </span>
<span>12:85 அதற்கு அவருடைய புதல்வர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் யூஸுஃப் பற்றி கவலைப்பட்டு அந்தக் கவலையிலேயே உருகிப் போய்விடும் அளவுக்கு அல்லது உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு அவரை நினைத்துக்கொண்டே இருக்கிறீர்களே!” என்று கூறினர். </span>
<span>12:86 அதற்கு அவர் கூறினார்: “என்னுடைய துக்கத்தையும் துயரத்தையும் நான் அல்லாஹ்விடம் மட்டுமே முறையிடுகிறேன். அல்லாஹ்விடமிருந்து நான் பெற்றிருக்கும் அறிவை நீங்கள் பெற்றிருக்கவில்லை. </span>
<span>12:87 என் பிள்ளைகளே! நீங்கள் சென்று யூஸுஃப் மற்றும் அவருடைய சகோதரரைப் பற்றித் தீர விசாரியுங்கள்; அல்லாஹ்வின் கருணையைக் குறித்து நிராசை அடையாதீர்கள்! நிராகரிக்கும் மக்கள்தாம் அவனுடைய கருணையைக் குறித்து நிராசை அடைகின்றார்கள். </span>
<span>12:88 அவர்கள் (எகிப்து சென்று) யூஸுஃபின் அவைக்கு வந்தபோது கூறினார்கள்: “அரசாதிபதியே! எங்களையும், எங்கள் குடும்பத்தாரையும் கடுந்துன்பம் பீடித்துள்ளது. மேலும், நாங்கள் அற்பமான சில பொருள்கள் கொண்டு வந்திருக்கின்றோம்; (அவற்றுக்குப் பதிலாக) நீங்கள் எங்களுக்கு நிறைவாக தானியம் வழங்கி எங்களுக்கு நன்மை செய்யுங்கள்! இவ்வாறு நன்மை செய்வோருக்குத் திண்ணமாக அல்லாஹ் கூலி வழங்குகின்றான்.” </span>
<span>12:89 (இதைக் கேட்டதும் பொறுக்க முடியாமல்) யூஸுஃப் கூறினார்: “நீங்கள் அறிவற்றவர்களாய் இருந்தபோது, யூஸுஃப் மற்றும் அவருடைய சகோதரரிடம் எவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்பது நீங்கள் அறிந்த விஷயம்தானே!” </span>
<span>12:90 உடனே அவர்கள், “நீர்தானா யூஸுஃப்?” என்று (ஆச்சரியத்துடன் கேட்டனர்.) அதற்கவர், “(ஆம்!) நான்தான் யூஸுஃப். இவர் என் சகோதரர்! அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்துள்ளான். திண்ணமாக, எவர்கள் இறையச்சம் கொண்டு, நிலைகுலையாது இருக்கின்றார்களோ அத்தகைய நல்லவர்களின் கூலியை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கி விடுவதில்லை!” என்று கூறினார். </span>
<span>12:91 அதற்கவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உண்மையில் அல்லாஹ் எங்களைவிட உமக்குச் சிறப்பை வழங்கியுள்ளான். மேலும், திண்ணமாக நாங்கள் தவறிழைத்தவர்களாகவே இருந்தோம்” என்று கூறினார்கள். </span>
<span>12:92 அதற்கு அவர் கூறினார்: “இன்று உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை; அல்லாஹ் உங்களை மன்னிப்பான். அவன் எல்லோரையும்விட அதிகம் கருணை புரிபவனாவான். </span>
<span>12:93 எனது இந்த அங்கியைக் கொண்டு சென்று என் தந்தையின் முகத்தில் படச் செய்யுங்கள்; அவருக்குப் பார்வை திரும்பக் கிடைத்துவிடும். மேலும் உங்கள் குடும்பத்தார் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்!”</span>
<span>12:94 அந்தப் பயணக் கூட்டம் (எகிப்தை விட்டு) புறப்பட்டபோது, அவர்களின் தந்தை (கன்ஆன் என்ற ஊரில்) கூறினார்: “திண்ணமாக நான் யூஸுஃபின் நறுமணத்தை உணர்கின்றேன்; முதுமையில் நான் ஏதோ, அறிவிழந்து போய் பேசுவதாக நீங்கள் நினைத்துவிடாதீர்கள்!” </span>
<span>12:95 வீட்டிலுள்ளவர்கள் கூறினர்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் (இன்னும்) உங்களுடைய பழைய மனக்குழப்பத்திலேயே உழன்று கொண்டிருக்கிறீர்கள்.”</span>
<span>12:96 பிறகு நற்செய்தி அறிவிப்பவர் (யஃகூபிடம்) வந்தார்; யூஸுஃபின் அங்கியை அவருடைய முகத்தில் படச்செய்தார். உடனே அவருக்குப் பார்வை திரும்பக் கிடைத்துவிட்டது! (அப்போது) அவர் கூறினார்: “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நான் அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன் என்று உங்களிடம் நான் முன்பே கூறவில்லையா?” </span>
<span>12:97 பிறகு அவர்கள் எல்லோரும் “எங்கள் தந்தையே! நீங்கள் எங்கள் பாவமன்னிப்பிற்காக இறைஞ்சுங்கள்; உண்மையிலேயே நாங்கள் தவறிழைத்தவர்கள்தாம்!” என்று வேண்டினார்கள். </span>
<span>12:98 அதற்கவர், “நான் உங்களுக்காக என் இறைவனிடம் மன்னிப்புக்கோருவேன். திண்ணமாக அவன் மிக்க மன்னிப்பவனாகவும் கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான்” என்று கூறினார். </span>
<span>12:99 பிறகு, அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரைத் தம்முடன் அமர்த்திக் கொண்டார். மேலும் (தம் குடும்பத்தார் அனைவரையும் நோக்கி,) “நகரத்தினுள் செல்லுங்கள்! அல்லாஹ் நாடினால் நிம்மதியுடனும் அமைதியுடனும் வாழ்வீர்கள்!” என்றார். </span>
<span>12:100 (நகரத்தில் நுழைந்த பின்னர்) அவர் தம்முடைய தாய் தந்தையரை (தம் அருகிலிருந்த அரியணையின் மீது) அமர வைத்தார். அனைவரும் (தம்மையும் அறியாமல்) அவர் முன் சிரம் பணிந்தார்கள். அப்பொழுது யூஸுஃப் கூறினார்: “என் தந்தையே! நான் முன்னர் கண்ட கனவிற்கு இதுதான் விளக்கமாகும். என் இறைவன் அக்கனவை நனவாக்கிவிட்டான். மேலும் எனக்கு அவன் பேருதவி செய்தான். அதாவது சிறையிலிருந்து எனக்கு விடுதலை அளித்தான். எனக்கும் என்னுடைய சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்திய பின்னரும் உங்களையெல்லாம் பாலைவனச் சிற்றூரில் இருந்து (என்னிடம்) கொண்டுவந்து சேர்த்தான். உண்மை யாதெனில், என் இறைவன் மிக நுட்பமான முறையில் தன் நாட்டங்களை நிறைவேற்றுகின்றான். திண்ணமாக, அவன் நன்கறிந்தோனும் நுண்ணறிவாளனுமாவான். </span>
<span>12:101 என் இறைவா! நீ எனக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கினாய். மேலும், விஷயங்களின் உட்கருத்துகளைப் புரிந்து கொள்ளும் முறையைக் கற்றுத் தந்தாய். வானங்களையும் பூமியையும் படைத்தவனே! நீதான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன். நான் இஸ்லாத்தில் இருக்கும் நிலையிலேயே என்னை மரணிக்கச் செய்வாயாக! மேலும் என்னை ஒழுக்க சீலர்களுடன் சேர்ப்பாயாக!”</span>
<span>12:102 (நபியே!) இவ்வரலாறு நீர் அறியாத செய்திகளைச் சேர்ந்ததாகும். அதனை நாம் உமக்கு வஹியின் மூலம் அறிவித்துக் கொண்டிருக்கின்றோம். யூஸுஃபின் சகோதரர்கள் சதித் திட்டம் தீட்டி, அதனை நிறைவேற்ற வேண்டும் என்று தங்களுக்குள் முடிவு செய்தபோது நீர் அவர்களிடையே இருக்கவில்லையே! </span>
<span>12:103 ஆனால், நீர் எவ்வளவுதான் விரும்பினாலும், மக்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்ளக்கூடி யவர்களாய் இல்லை. </span>
<span>12:104 உண்மையில் இதற்காக நீர் அவர்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை. இந்தக் குர்ஆன், அகிலத்தார் அனைவருக்கும் உரிய ஒரு நல்லுரையே ஆகும். </span>
<span>12:105 வானங்களிலும், பூமியிலும் எத்தனையோ சான்றுகள் உள்ளன. இவர்கள் அவற்றைக் கடந்து சென்ற வண்ணம் இருக்கின்றார்கள். ஆயினும் அவற்றைக் குறித்து சற்றும் கவனம் செலுத்துவதில்லை. </span>
<span>12:106 அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆயினும் (அவனோடு மற்றவர்களையும்) இணையாக்குகிறார்கள். </span>
<span>12:107 அல்லாஹ்வின் வேதனைகளிலிருந்து அவர்களைத் திணற அடிக்கக்கூடிய ஒரு வேதனை அவர்களிடம் வராதென்றோ அவர்கள் அறியாதிருக்கும்போது திடீரென்று இறுதிநாள் அவர்களிடம் வராதென்றோ அவர்கள் அச்சமற்றிருக்கின்றார்களா </span>
<span>12:108 நீர் அவர்களிடம் தெளிவாகக் கூறி விடும்: “இதுதான் என்னுடைய வழி; நான் அல்லாஹ்வின் பக்கம் அழைக்கின்றேன். நானும் என்னைப் பின்பற்றியவர்களும் முழுத் தெளிவுடன் (எங்கள் பாதை எது என்பதை அறிந்து) இருக்கின்றோம்; மேலும் அல்லாஹ் தூய்மையானவன். அவனுக்கு இணை கற்பிப்பவர்களுடன் எனக்கு எத்தகைய தொடர்பும் இல்லை. </span>
<span>12:109 (நபியே!) உமக்கு முன்னர் (பல்வேறு ஊர்களுக்கு) தூதர்களாக நாம் அனுப்பி வைத்திருந்த அனைவரும் மனிதர்களாகவும் அந்தந்த ஊர்களைச் சார்ந்தவர்களாகவும்தாம் இருந்தார்கள். அவர்களுக்கு நாம் வஹி அறிவித்துக் கொண்டிருந்தோம். பின்னர் இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து, தமக்கு முன் சென்றுபோனவர்களின் கதி என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? எவர்கள் (இறைத்தூதர்களின் சொல்லை ஏற்று) இறையச்சத்துடன் வாழ்ந்தார்களோ அவர்களுக்குத் திண்ணமாக மறுமை இல்லம் மிகவும் சிறந்ததாகும். (இனியும்) நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா?</span>
<span>12:110 (முந்திய இறைத்தூதர்களுக்கும் இதே நிலை ஏற்பட்டது. அவர்கள் நீண்ட காலம் மக்களுக்கு நல்லுரை புகன்று வந்தார்கள். ஆனால் மக்கள் அதனைக் கேட்கவில்லை) எதுவரையெனில், மக்கள் இனி நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்று இறைத்தூதர்கள் நிராசையடைந்தார்கள்; மேலும் தங்களிடம் பொய்தான் சொல்லப்பட்டது என்று மக்களும் கருதலானார்கள். அப்பொழுது, நம் உதவி இறைத்தூதர்களுக்குக் கிடைத்துவிட்டது. (இவ்வாறான சந்தர்ப்பங்களில் நமது நியதி இதுதான்:) நாம் யாரை நாடுகின்றோமோ அவர்களைக் காப்பாற்றி விடுகின்றோம். மேலும் குற்றம் புரிந்த மக்களை விட்டு நமது தண்டனை அகற்றப்படுவதே இல்லை. </span>
<span>12:111 முற்காலத்தில் வாழ்ந்த மக்களின் இவ்வரலாறுகளில் பகுத்தறிவுடையோருக்கு அரிய படிப்பினை உள்ளது. (குர்ஆனில் விவரித்துக் கூறப்படுகின்ற) இச்செய்திகள் புனைந்துரைக்கப்பட்டவை அல்ல. மாறாக, இந்தக் குர்ஆன் தனக்கு முன் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பிக்கக் கூடியதாகவும், ஒவ்வொன்றையும் விவரிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது; மேலும், நம்பிக்கை கொள்ளும் சமூகத்தாருக்கு நேர்வழியாகவும் அருளாகவும் திகழ்கின்றது. </span>
</div><div>
<span>அர்ரஃத்</span>
<span>13:1 அலிஃப், லாம், மீம், றா. இவை இறைமறையின் வசனங்களாகும். மேலும், எது உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கியருளப்பட்டிருக்கிறதோ அது சத்தியமேயாகும். ஆயினும் (உமது சமுதாயத்தில்) பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ளாதிருக்கிறார்கள். </span>
<span>13:2 உங்கள் பார்வைக்குப் படக்கூடிய தூண்கள் எதுவுமின்றி அல்லாஹ்தான் வானங்களை உயர்த்தினான்; பிறகு தனது ஆட்சி பீடத்தில் அமர்ந்தான். மேலும் அவன் சூரியனையும், சந்திரனையும் ஒரு நியதிக்குக் கட்டுப்படும்படிச் செய்தான். இந்த முழு அமைப்பிலுள்ள ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை இயங்கிக் கொண்டிருக்கும். அல்லாஹ்தான் இவ்வனைத்துக் காரியங்களையும் நிர்வகித்து வருகிறான். அவன் சான்றுகளை மிகத் தெளிவாக விளக்குகின்றான்; உங்கள் இறைவனைச் சந்திக்க இருப்பதை நீங்கள் உறுதியாக நம்ப வேண்டும் என்பதற்காக!</span>
<span>13:3 அவன்தான் இந்த பூமியை விரித்து, அதில் மலைகளை நாட்டி ஆறுகளை ஓடச் செய்துள்ளான். மேலும், ஒவ்வொரு கனி வகை(தாவரங்)களின் ஜோடிகளையும் அதில் அவனே படைத்து உள்ளான். அவனே இரவை பகலின் மீது போர்த்துகிறான்! சிந்திக்கும் மக்களுக்கு இவை அனைத்திலும் பல சான்றுகள் உள்ளன. </span>
<span>13:4 மேலும், (பாருங்கள்:) அருகருகே அமைந்துள்ள (தனித்தனித் தன்மைகள் கொண்ட) பல பகுதிகள் பூமியில் உள்ளன; திராட்சைத் தோட்டங்களும் உள்ளன; வயல்களும் இருக்கின்றன; பேரீச்சை மரங்களும் இருக்கின்றன. அவற்றில் சில ஒற்றையாகவும் வேறு சில இரட்டையாகவும் முளைக்கின்றன. அனைத்திற்கும் ஒரே விதமான நீரே புகட்டப்படுகின்றது. ஆயினும் அவற்றில் சிலவற்றைச் சுவை மிகுந்ததாகவும் சிலவற்றை சுவை குறைந்ததாகவும் ஆக்குகின்றோம். திண்ணமாக, இவை அனைத்திலும் சிந்தித்துணரும் மக்களுக்கு பல சான்றுகள் இருக்கின்றன. </span>
<span>13:5 நீர் ஆச்சரியப்பட வேண்டுமாயின் மக்களின் இந்தக் கூற்றைக் குறித்துதான் ஆச்சரியப்பட வேண்டும்: “நாங்கள் இறந்து மண்ணோடு மண்ணாகி விட்டாலும் புதிதாகப் படைக்கப்படுவோமா?” இவர்கள் தம் இறைவனை நிராகரித்தவர்கள் ஆவர். இவர்களின் கழுத்துகளில் விலங்குகள் மாட்டப்பட்டுள்ளன. மேலும், இவர்கள் நரகவாசிகள் ஆவர். அதில் இவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்!</span>
<span>13:6 நன்மை வருவதற்கு முன் தீமையை விரைவாகக் கொண்டு வருமாறு இவர்கள் உம்மை வற்புறுத்துகின்றனர். ஆனாலும், இவர்களுக்கு முன்னர் (இதேபோன்ற போக்கினை மேற்கொண்டவர்மீது இறைவேதனை இறங்கியதற்கான) படிப்பினைமிக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றனவே! மக்கள் அக்கிரமம் இழைத்தும்கூட உம் இறைவன் அவர்களை மன்னிப்பவனாக இருக்கின்றான் என்பதும் உண்மைதான்; மேலும், உம் இறைவன் கடுமையாகத் தண்டிக்கக்கூடியவன் என்பதும் உண்மைதான். </span>
<span>13:7 (உமது அழைப்பை) ஏற்க மறுத்துவிட்டவர்கள், “இம்மனிதர் மீது அவருடைய இறைவனிடமிருந்து ஏதேனும் ஒரு சான்று ஏன் இறக்கி வைக்கப்படவில்லை?” என்று கேட்கின்றார்கள். ஆனால், நீர் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவீர். மேலும், ஒவ்வொரு சமூகத்துக்கும் வழி காட்டும் ஒருவர் இருக்கின்றார். </span>
<span>13:8 ஒவ்வொரு கர்ப்பிணியின் கருப்பையில் உள்ளதையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான். மேலும், கருப்பைகளில் ஏற்படுகின்ற குறைவையும் கூடுதலையும் அவன் அறிகின்றான். அவன் ஒவ்வொன்றுக்கும் ஓர் அளவை நிர்ணயித்துள்ளான். </span>
<span>13:9 மறைவான, மற்றும் வெளிப்படையான அனைத்தையும் அவன் அறியக் கூடியவனாகவும், மிக உயர்ந்தவனாகவும், (எல்லா நிலையிலும்) மேலானவனாகவும் இருக்கின்றான். </span>
<span>13:10 உங்களில் ஒருவர் மெதுவாகப் பேசினாலும் சரி, உரத்துப் பேசினாலும் சரி, மற்றும் இரவின் இருளில் ஒளிந்திருந்தாலும் சரி, பகலின் ஒளியில் நடந்து கொண்டிருந்தாலும் சரி இவை அனைத்தும் (அல்லாஹ்வைப் பொறுத்துச்) சமமானதே!</span>
<span>13:11 ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்கு முன்பும், பின்பும் கண்காணிப்பாளர்கள் (வானவர்கள்) நியமிக்கப்பட்டுள்ளனர். அல்லாஹ்வின் ஆணையின்படி அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்கள். எந்த ஒரு சமூகமும் தன் பண்புகளை மாற்றிக்கொள்ளாத வரை உண்மையில் அல்லாஹ்வும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை. மேலும், அல்லாஹ் ஒரு சமூகத்திற்குத் தீமையை நாடிவிட்டால் அதனை யாராலும் தடுத்து நிறுத்திட இயலாது. அல்லாஹ்வுக்கு எதிராக அத்தகைய சமூகத்தாருக்கு உதவி செய்வோரும் எவருமிலர். </span>
<span>13:12 பளீரெனத் தோன்றும் மின்னலை அவன்தான் உங்களுக்குக் காட்டுகின்றான். அதனைக் கண்டு உங்களுக்கு அச்சமும், ஆர்வமும் ஏற்படுகின்றன. மேலும், அவன்தான் (நீர் நிறைந்த) கனமான மேகத்தை எழுப்புகின்றான். </span>
<span>13:13 இடி முழக்கம் அவனைப் புகழ்வதோடு அவன் தூய்மையையும் பறைசாற்றுகின்றது. வானவர்களும் அவனுடைய பேரச்சத்தால் நடுங்கிய வண்ணம் அவனைப் புகழ்கின்றார்கள். மேலும், இடிகளை அவன் அனுப்புகின்றான்; தான் நாடுகின்றவர்கள் மீது அவர்கள், அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்து கொண்டிருக்கும் நிலையில் (சில சமயம்) அவற்றை விழச் செய்கின்றான். உண்மையில் அவனுடைய சூழ்ச்சி மிகவும் சக்தி வாய்ந்ததாகும். </span>
<span>13:14 அவனை அழைப்பதுதான் சரியானதாகும். அவனைத் தவிர இவர்கள் அழைக்கக் கூடிய வேறு கடவுள்களால் இவர்களின் அழைப்புக்கு எவ்வித பதிலும் அளிக்க முடியாது. அவர்களை அழைப்பது எப்படி இருக்கிறது என்றால், ஒருவன் தண்ணீரை நோக்கித் தன் இரு கைகளை நீட்டி, “தண்ணீரே, எனது வாயினுள் வந்து விடு!” என்று கோருவதைப் போன்று உள்ளது. உண்மையில் தண்ணீர் வாயினுள் தானாகவே செல்லக் கூடியதாய் இல்லை. இவ்வாறே இறைமறுப்பாளர்களின் இறைஞ்சுதல் இலக்கின்றி எறியப்படும் அம்பாகும். </span>
<span>13:15 வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அல்லாஹ்வுக்கே தலைசாய்க்கின்றன. மேலும், அனைத்துப் பொருட்களின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் அவன் முன்னிலையில் பணிந்து கொண்டிருக்கின்றன. </span>
<span>13:16 வானங்கள் மற்றும், பூமியின் அதிபதி யார் என்று அவர்களிடம் கேளும். “அல்லாஹ்” என்று (அதற்கு நீரே பதில்) கூறும். “உண்மை இவ்வாறிருக்க, அவனை விடுத்து, தமக்கே நன்மையும், தீமையும் அளிக்க சக்தியற்ற கடவுள்களையா நீங்கள் உங்கள் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டீர்கள்?” என்று அவர்களிடம் கேளும். “பார்வையற்றவனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? அல்லது இருளும் ஒளியும் சமமாகுமா?” என்றும் கேளும். இல்லையெனில், அல்லாஹ்வுக்கு இணையாக இவர்கள் ஏற்படுத்திக்கொண்ட கடவுள்களும் அவன் படைத்திருப்பதைப் போல் (எதனையும்) படைத்திருந்து, அதன் காரணமாக இது யாருடைய படைப்போ என்று இவர்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டதோ? நீர் கூறும்: “ஒவ்வொரு பொருளையும் படைத்தவன் அல்லாஹ்வே! அவன் தனித்தவனும் அனைத்தையும் அடக்கியாள்பவனுமாவான்!”</span>
<span>13:17 அல்லாஹ் வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்தான். ஒவ்வொரு நதியும் ஓடையும் தம் கொள்ளளவிற்கு ஏற்ப நீரால் நிரம்பி ஓடியது. பிறகு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அதன் மேற்பாகத்தில் பொங்கும் நுரையைச் சுமந்து செல்கிறது. நகைகள், பாத்திரங்கள் போன்றவற்றைச் செய்வதற்காக மக்கள் உலோகங்களை நெருப்பில் உருக்கும்போதும் இதே போன்ற நுரை ஏற்படுகிறது. அல்லாஹ் இவற்றையே சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் உவமையாகக் கூறுகின்றான். (பலன் தராத) நுரை ஒன்றுமில்லாமல் போய்விடுகின்றது; எது மக்களுக்குப் பலன் அளிக்கின்றதோ அது பூமியில் தங்கிவிடுகின்றது! இவ்வாறு அல்லாஹ் உவமானங்கள் மூலம் தன் செய்திகளை விளக்குகின்றான். </span>
<span>13:18 எவர்கள் தம் இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார்களோ அவர்களுக்கு மிகச் சிறந்த நன்மைகள் இருக்கின்றன. எவர்கள் அந்த அழைப்பை ஏற்கவில்லையோ, அவர்கள் உலகத்திலுள்ள அனைத்துச் செல்வத்திற்கும் உரிமையாளர்களாய் இருந்தாலும், மேலும், அத்துடன் அது போன்ற இன்னொரு மடங்கை அவர்கள் பெற்றிருந்தாலும் (அல்லாஹ்வின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக) அவை முழுவதையும் ஈடாகத் தந்துவிடத் தயாராகி விடுவார்கள்! அத்தகையவர்களிடம் கடுமையான முறையில் கணக்கு வாங்கப்படும். மேலும், அவர்கள் தங்குமிடம் நரகமாகும். அது மிகவும் கொடிய இருப்பிடமாகும். </span>
<span>13:19 உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கியருளப்பட்ட இவ்வேதம் உண்மையானதுதான் என்று அறிபவனும், இந்த உண்மையை அறியாமல் குருடனாக இருப்பவனும் சமம் ஆவார்களா? அறிவுடையவர்கள்தாம் நல்லுரைகளை ஏற்றுக்கொள்பவராய் இருக்கின்றனர். </span>
<span>13:20 அவர்கள் எத்தகையவர்கள் என்றால், அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளை நிறை வேற்றுவார்கள். உறுதிப்படுத்திய பிறகு அவ்வுடன்படிக்கைகளை முறிக்க மாட்டார்கள். </span>
<span>13:21 மேலும், அவர்கள் எத்தகைய நடத்தை கொண்டவர்கள் என்றால், எந்தெந்த உறவுமுறைகளைப் பிணைத்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளை இடுகின்றானோ அந்த உறவுமுறைகளைப் பிணைத்து வைக்கின்றார்கள். தம் அதிபதிக்கு அஞ்சுவார்கள். மேலும், கடுமையான முறையில் தம்மிடம் கணக்குக் கேட்கப்படுமோ என அச்சம் கொண்டவராக இருப்பார்கள். </span>
<span>13:22 மேலும் அவர்கள் எப்படிப்பட்டவர்களெனில், தம் இறைவனின் உவப்பை நாடி பொறுமையைக் கைக்கொள்கிறார்கள்; தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்; அவர்களுக்கு நாம் வழங்கியவற்றிலிருந்து மறைவாகவும் வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்கள். மேலும், தீமையை நன்மையைக் கொண்டு களைகின்றார்கள். மறுமையின் நல்ல முடிவு இவர்களுக்கே உரித்தானது. </span>
<span>13:23 அதாவது, நிலையான சுவனங்கள் அவர்களுக்கு இருக்கின்றன. அவற்றில் அவர்கள் நுழைவார்கள். (அவர்களுடன்) அவர்களின் மூதாதையர், மனைவியர், மற்றும் அவர்களின் வழித்தோன்றல்கள் ஆகியோரில் எவர்கள் நன்னடத்தை கொண்டவர்களோ அவர்களும் நுழைவார்கள். வானவர்கள் எல்லாப் புறங்களிலிருந்தும் அவர்களை வரவேற்க வருவார்கள். </span>
<span>13:24 மேலும், அவர்களிடம் கூறுவார்கள்: “உங்கள் மீது சாந்தி நிலவட்டும்; (உலகில்) நீங்கள் பொறுமையுடன் வாழ்ந்து வந்த காரணத்தால் இன்று இதற்குத் தகுதி பெற்றிருக்கிறீர்கள்.” மறுமையின் இல்லம் எத்துணை அருமையானது! </span>
<span>13:25 ஆனால் அல்லாஹ்வின் உடன்படிக்கைகளை உறுதிப்படுத்திய பின்னர் அவற்றை முறித்து விடுகின்றவர்களும், மேலும் எந்த உறவுமுறைகளுடன் இணைந்து வாழ வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டிருக்கின்றானோ அந்த உறவுமுறைகளைத் துண்டித்து விடுகின்றவர்களும், மேலும் உலகில் குழப்பம் செய்கின்றவர்களும் சாபத்திற்கு உரியவர்களாவர். மேலும், அவர்களுக்கு மறுமையில் கொடிய தங்குமிடமே கிடைக்கும்!</span>
<span>13:26 அல்லாஹ், தான் நாடுகின்றவர்களுக்கு தாராளமாக உணவு வழங்குகின்றான். மேலும், தான் நாடுகின்றவர்களுக்கு அவன் அளவோடு வழங்குகின்றான். எனினும் இவர்கள் உலக வாழ்க்கையில் மூழ்கி, அதைக் கொண்டே பெரிதும் மனநிறைவு அடைகின்றார்கள். ஆனால் மறுமைக்கு எதிரில் இவ்வுலக வாழ்க்கை சொற்ப இன்பமேயன்றி வேறில்லை!</span>
<span>13:27 (முஹம்மதின் தூதுத்துவத்தை) நிராகரித்தவர்கள், “இவருக்கு, இவருடைய இறைவனிட மிருந்து ஏதேனும் ஒரு சான்று ஏன் இறக்கியருளப்படவில்லை?” என்று கேட்கிறார்கள். நீர் சொல்லும்: “தான் நாடுபவர்களை அல்லாஹ் வழி கேட்டில் ஆழ்த்துகின்றான். மேலும், தன் பக்கம் திரும்புகிறவர்களுக்குத் தன்னை நோக்கி வருவதற்கான வழியை அவன் காட்டுகின்றான்.” </span>
<span>13:28 இவர்கள்தாம் (இந்த நபியின் அழைப்பை) ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். மேலும், அவர்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வை நினைவுகூர்வதால் நிம்மதியடைகின்றன. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை நினைவுகூர்வதால்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன! </span>
<span>13:29 பிறகு, எவர்கள் (சத்திய அழைப்பை) ஏற்றுக்கொண்டு, நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களுக்கு மகிழ்வும் நல்ல முடிவும் இருக்கின்றன. </span>
<span>13:30 (நபியே!) இவ்வாறே உம்மை நாம் ஒரு சமூக மக்களுக்கு நபியாக அனுப்பியிருக்கின்றோம்; அவர்களுக்கு முன்னால் பல சமுதாயங்கள் வாழ்ந்து மறைந்து விட்டிருக்கின்றன. உம்மை எதற்காக அனுப்பியிருக்கிறோம் எனில், கருணை மிக்க இறைவனை அவர்கள் மறுப்பவர்களாய் இருக்கும் நிலையில், உமக்கு வஹி மூலம் நாம் அறிவித்த செய்தியை அவர்களுக்கு நீர் எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக! (இவர்களிடம்) நீர் கூறுவீராக: “அவனே என் இறைவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. அவனையே முற்றிலும் நான் சார்ந்திருக்கின்றேன். அவனே என்னுடைய புகலிடம் ஆவான்.”</span>
<span>13:31 வேறொரு குர்ஆன் (இறக்கியருளப்பட்டு அதன்) மூலம் மலைகளை நகரும்படிச் செய்தாலும், அல்லது பூமியை பிளக்கச் செய்தாலும், அல்லது இறந்தவர்களை எழுப்பிப் பேசச் செய்தாலும் என்ன நேர்ந்திடப்போகிறது? (இதுபோன்ற சான்றுகளைக் காண்பிப்பது சிரமமான செயலே அல்ல) உண்மையில் அதிகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளன. பிறகு என்ன, இறை நம்பிக்கையாளர்கள் (நிராகரிப்பாளர்களின் கோரிக்கையின் பேரில் ஏதேனும் அற்புதம் வெளிப்பட வேண்டும் என்று இன்னும் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்களா?) மேலும், அல்லாஹ் நாடினால் எல்லா மனிதர்களையும் நேர்வழியில் செலுத்தியிருப்பான் என்பதை (அறிந்து) அவர்கள் அந்த ஆசையைக் கைவிட்டிருக்க வேண்டாமா? எவர்கள் இறைவனை நிராகரிக்கும் போக்கை மேற்கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்த தீயசெயல்களின் காரணத்தால் ஏதேனும் ஒரு துன்பம் வந்துகொண்டே இருக்கும்; அல்லது அத்துன்பம் அவர்கள் வீட்டின் அருகில் இறங்கிக்கொண்டே இருக்கும். அல்லாஹ்வின் வாக்குறுதி (மறுமை) வரும்வரை, இப்படலம் நீடிக்கும். திண்ணமாக, அல்லாஹ் தனது வாக்குறுதிக்கு மாறு செய்வதே இல்லை. </span>
<span>13:32 உமக்கு முன்னரும் இறைத்தூதர்கள் பலர் நிச்சயமாகப் பரிகாசம் செய்யப்பட்டனர். ஆனால், நான் நிராகரிப்பாளர்களுக்குத் தவணை அளித்தேன். இறுதியில் அவர்களைப் பிடித்துக் கொண்டேன். பாருங்கள், என்னுடைய தண்டனை எவ்வளவு கடினமாக இருந்தது!</span>
<span>13:33 பிறகு என்ன! ஒவ்வொரு ஆன்மாவின் சம்பாதனையையும் எந்த இறைவன் கண்காணித்துக் கொண்டிருக்கின்றானோ அந்த இறைவனுக்கா இவர்கள் (இவ்வளவு துணிச்சலாக) இணை வைக்கின்றார்கள்? (நபியே!) இவர்களிடம் கூறும்: “(உண்மையில் அவை இறைவனால் உருவாக்கப்பட்ட இணைகளாக இருந்தால்) சற்று அவற்றின் பெயர்களைச் சொல்லுங்களேன்!” பூமியில் அல்லாஹ்வுக்குத் தெரியாத (புதிய செய்தி) ஒன்றை அவனுக்கு நீங்கள் சொல்லித் தருகிறீர்களா? அல்லது உதட்டளவில் ஏதேனும் உளறிக் கொண்டிருக்கிறீர்களா? உண்மை என்னவெனில், எவர்கள் சத்திய அழைப்பினை ஏற்க மறுத்தார்களோ அவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சிகள் அழகாகக் காண்பிக்கப்பட்டுள்ளன. மேலும், அவர்கள் நேர்வழியிலிருந்து தடுக்கப்பட்டுள்ளார்கள். இனி, அல்லாஹ் யாரை வழிகேட்டில் ஆழ்த்தி விடுகின்றானோ அவருக்கு வழிகாட்டுபவர் எவருமிலர்; </span>
<span>13:34 இத்தகையோருக்கு உலக வாழ்க்கையிலேயே வேதனையுண்டு. மேலும் மறுமையின் வேதனை இதைவிடக் கடுமையானதாகும். அவர்களை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுவோர் எவருமிலர். </span>
<span>13:35 இறையச்சம் உடையோருக்காக வாக்களிக்கப்பட்டுள்ள சுவனத்தின் தன்மை என்னவெனில், அதன் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அதன் கனிகளும் நிலையானவை. அதன் நிழலும் நிலையானது. இறையச்சமுள்ளோருக்குக் கிடைக்கும் நல்ல முடிவாகும் இது. ஆனால், சத்தியத்தை நிராகரிப்போரின் முடிவோ நரக நெருப்பே ஆகும்!</span>
<span>13:36 (நபியே!) முன்னர் எவர்களுக்கு நாம் வேதம் வழங்கியிருந்தோமோ அவர்கள், உமக்கு இறக்கியருளப்பட்ட இவ்வேதத்தின் மூலம் மகிழ்ச்சி அடைகின்றார்கள். ஆனால், பல்வேறு கூட்டங்களைச் சார்ந்த சிலர் இவ்வேதத்தில் சிலவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. (நபியே!) தெளிவாகக் கூறிவிடும்: “அல்லாஹ்வுக்கு அடிபணிய வேண்டுமென்றும், அவனுக்கு யாரையும் இணைவைக்கக்கூடாதென்றும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். எனவே, நான் அவன் பக்கமே அழைக்கின்றேன். மேலும், அவன் பக்கமே நான் திரும்ப வேண்டியுள்ளது.” </span>
<span>13:37 இதே வழிகாட்டலுடன் அரபி மொழியிலான இக்கட்டளையை குர்ஆனை உம்மீது இறக்கியுள்ளோம். இந்த ஞானம் உம்மிடம் வந்த பின்னரும் அவர்களுடைய விருப்பங்களுக்கு நீர் இணங்கிச் சென்றால், அல்லாஹ்வுக்கு எதிராக உமக்கு உதவி புரிபவர் யாரும் இரார். மேலும், அவனுடைய பிடியிலிருந்து உம்மைக் காப்பாற்றுபவரும் எவரும் இரார். </span>
<span>13:38 உமக்கு முன்பும் தூதர்கள் பலரை நாம் அனுப்பியுள்ளோம். மேலும், மனைவிமக்களையுடையவர்களாகவே நாம் அவர்களை ஆக்கியிருக்கின்றோம். மேலும், அல்லாஹ்வின் அனுமதியின்றி (சுயமாக) ஒரு சான்றைக் கொண்டுவரும் ஆற்றல் எந்தத் தூதருக்கும் இருக்கவில்லை. ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு வேதம் இருக்கிறது. </span>
<span>13:39 தான் நாடுவதை அல்லாஹ் அழித்துவிடுகின்றான்; தான் நாடுவதை நிலைப்படுத்துகின்றான். உம்முல் கிதாப்* அவனிடமே உள்ளது. </span>
<span>13:40 (நபியே!) அவர்களுக்கு நாம் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்ற தீய விளைவுகளில் ஒரு பகுதியை (நீர் உயிர் வாழும்போதே) நாம் உமக்குக் காண்பித்தாலும் அல்லது (அதற்கு முன்பே) உம்மை நாம் எடுத்துக் கொண்டாலும் (எந்நிலையிலும்) தூதை எடுத்துரைப்பது மட்டுமே உமது பணியாகும். கணக்கு வாங்குவது நமது பணியாகும். </span>
<span>13:41 திண்ணமாக, நாம் இந்த பூமியில் வந்துகொண்டிருக்கிறோம் என்பதையும், அதன் சுற்றளவை நாற்புறங்களிலிருந்தும் குறைத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதையும் இவர்கள் கவனிக்கவில்லையா? மேலும், அல்லாஹ் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கின்றான். அவனுடைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கூடியவர் எவருமிலர். மேலும், அவன் கணக்கு வாங்குவதில் மிக விரைவானவன் ஆவான். </span>
<span>13:42 இவர்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களும் (பெரும் பெரும்) சூழ்ச்சிகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால் திட்டவட்டமான சூழ்ச்சி முழுவதும் அல்லாஹ்வின் கையில் உள்ளது. ஒவ்வொரு மனிதனும் என்னென்ன சம்பாதித்துக் கொண்டிருக்கின்றான் என்பதை அவன் அறிவான். மேலும், இறுதி முடிவு யாருக்கு நல்லவிதமாக அமையும் என்பதை இந்நிராகரிப்பாளர்கள் அதிவிரைவில் அறிந்து கொள்வார்கள். </span>
<span>13:43 “நீர் இறைவனால் அனுப்பப்பட்டவர் அல்லர்” என்று இந்த நிராகரிப்பாளர்கள் கூறுகின்றனர். நீர் கூறும்: “எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ்வின் சாட்சியம் போதுமானது; மேலும், அவனுடைய வேதத்தின் அறிவைப் பெற்றிருப்பவர்களின் சாட்சியம் போதுமானது!”</span>
</div><div>
<span>இப்ராஹீம்</span>
<span>14:1 அலிஃப், லாம், றா. (முஹம்மதே!) இது ஒரு வேதமாகும். இதனை உம்மீது நாம் இறக்கியுள்ளோம்; மக்களை, அவர்களுடைய இறைவனின் உதவி கொண்டு இருளிலிருந்து வெளியேற்றி, ஒளியின் பக்கம் நீர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக! (அதாவது) யாவற்றையும் மிகைத்தோனும் தனக்குத்தானே புகழுக்குரியோனுமாகிய </span>
<span>14:2 மேலும், வானங்கள் பூமியிலுள்ள அனைத்துக்கும் உரியவனுமாகிய அல்லாஹ்வின் பாதையின்பால் (கொண்டுவர வேண்டும் என்பதற்காக). சத்தியத்தை ஏற்க மறுப்பவர்களுக்கு அழிவைத் தரும் கடும் தண்டனை இருக்கிறது; </span>
<span>14:3 அவர்கள் எத்தகையவர்களெனில் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கைக்கு முன்னுரிமை வழங்குகிறார்கள்; மேலும், அல்லாஹ்வின் வழியிலிருந்து மக்களைத் தடுக்கிறார்கள். அவ்வழி (தங்கள் விருப்பப்படி) கோணலாகிவிட வேண்டும் என்று நாடுகிறார்கள். இத்தகையவர்கள் வழிகேட்டில் வெகுதூரம் சென்று விட்டிருக்கிறார்கள். </span>
<span>14:4 தூதர்கள் அனைவரையும், அவரவரின் சமுதாய மொழியிலேயே தூதுச் செய்தி அறிவிப்பவர்களாய் நாம் அனுப்பி வைத்தோம் (செய்தியை) அவர்களுக்குத் தெள்ளத் தெளிவாக அவர் எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக! பின்னர் அல்லாஹ் தான் நாடுகின்றவர்களை வழிபிறழச் செய்கின்றான்; நாடுகின்றவர்களுக்கு நேர்வழி காட்டுகின்றான். அவன் யாவரையும் மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமாவான். </span>
<span>14:5 (இதற்கு முன்பு) மூஸாவையும் நம்முடைய சான்றுகளுடன் அனுப்பி, “உம் சமுதாயத்தினரை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வாரும்; மேலும், அல்லாஹ்வின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாட்களை நினைவூட்டி, அவர்களுக்கு அறிவுரை வழங்கும்!” என்று கட்டளையிட்டிருந்தோம். பொறுமையாளராகவும் நன்றி செலுத்துபவராகவும் திகழும் ஒவ்வொருவருக்கும் இந்தச் சம்பவங்களில் பல சான்றுகள் இருக்கின்றன. </span>
<span>14:6 மூஸா தம்முடைய சமூகத்தாரிடம் இவ்வாறு கூறியதை நினைவு கூருங்கள்: “அல்லாஹ் உங்களுக்குச் செய்துள்ள பேருதவிகளை நினைத்துப் பாருங்கள்! உங்களுக்குக் கடுமையான துன்பம் இழைத்துக் கொண்டும், உங்கள் ஆண்மக்களைக் கொலை செய்து கொண்டும், உங்கள் பெண்மக்களை உயிருடன் விட்டு வைத்துக் கொண்டும் இருந்த ஃபிர்அவ்னின் ஆட்களிடமிருந்து அவன் உங்களை விடுவித்தான்! இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்குப் பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது. </span>
<span>14:7 மேலும், உங்கள் இறைவன் இவ்வாறு அறிவித்திருந்ததையும் நினைவு கூருங்கள்: “நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின் நிச்சயம் நான் உங்களுக்கு மேன்மேலும் வழங்குவேன்; நீங்கள் நன்றி கொல்வீர்களாயின் திண்ணமாக எனது தண்டனை மிகக்கடுமையானதாகும்.” </span>
<span>14:8 மேலும், மூஸா கூறினார்: “நீங்கள் நிராகரிக்கிறீர்கள் என்றால், ஏன் பூமியில் உள்ள அனைவருமே நிராகரிப்பாளர்களாய் ஆகிவிட்டாலும் கூட திண்ணமாக அல்லாஹ் தேவைகளற்றவனாகவும் தனக்குத்தானே புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான்.”</span>
<span>14:9 உங்களுக்கு முன் வாழ்ந்து சென்ற சமுதாயங்களின் செய்தி நூஹுடைய சமுதாயத்தினர் ஆத் மற்றும் ஸமூத் எனும் சமுதாயத்தினர், இன்னும் அவர்களுக்குப்பின் வந்த (ஏராளமான சமூகத்த)வர்களுடைய செய்தி உங்களிடம் வரவில்லையா? அவர்களின் எண்ணிக்கையை அல்லாஹ்வே அறிவான். அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டுவந்தபோது அவர்கள் தம் வாயில் கைகளை வைத்துக் கொண்டு கூறினார்கள்: “நீங்கள் எந்தச் செய்தியோடு அனுப்பப்பட்டுள்ளீர்களோ அதனைத் திண்ணமாக நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், நீங்கள் எதன் பக்கம் எங்களை அழைக்கின்றீர்களோ அதைக் குறித்து நாங்கள் கடும் சந்தேகத்தில் உழன்று கொண்டிருக்கிறோம்.”  </span>
<span>14:10 தூதர்கள் கூறினார்கள்: “வானங்கள், பூமியின் படைப்பாளனாகிய இறைவனைக் குறித்தா உங்களுக்குச் சந்தேகம்? உங்கள் குற்றங்களை மன்னிக்கவும், ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்கு அவகாசம் அளிக்கவும் அவன் உங்களை அழைத்துக் கொண்டிருக்கிறான்.” அதற்கு அந்த மக்கள் கூறினார்கள்: “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே தவிர வேறு ஒன்றுமில்லை. எங்கள் மூதாதையர் எவற்றை வணங்கி வந்தார்களோ அவற்றை நாங்கள் வணங்குவதிலிருந்து எங்களைத் தடுக்கவே நீங்கள் விரும்புகிறீர்கள். அப்படியானால் ஒரு தெளிவான சான்றினைக் கொண்டு வாருங்கள்!”  </span>
<span>14:11 அதற்கு அவர்களுடைய தூதர்கள் கூறினார்கள்: “உண்மையில் நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம்! ஆனால், அல்லாஹ் தன்னுடைய அடியார்களில் தான் நாடுகின்றவர்களுக்குப் பேரருளை வழங்குகின்றான். மேலும், உங்களிடம் சான்றினைக் கொண்டு வருவது எங்களுடைய அதிகாரத்தில் இல்லை. சான்று, அல்லாஹ்வின் உத்தரவு கொண்டுதான் வெளிப்படுகின்றது. மேலும், இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வைச் சார்ந்து நிற்க வேண்டும். </span>
<span>14:12 அல்லாஹ்வையே நாங்கள் முழுவதும் சாராதிருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது? எங்கள் வாழ்க்கைப் பாதைகளில் அவன்தானே எங்களுக்கு நேர்வழியைக் காட்டினான். எங்களுக்கு நீங்கள் இழைத்துக் கொண்டிருக்கின்ற தொல்லைகளைத் திண்ணமாக நாங்கள் பொறுத்துக் கொள்வோம். எனவே, சார்ந்திருப்பவர்கள் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டும்.”</span>
<span>14:13 இறுதியில் இறைமறுப்பாளர்கள் தம் தூதர்களிடம் கூறிவிட்டார்கள்: “நீங்கள் எங்கள் மார்க்கத்திற்கு திரும்பிவிட வேண்டும். இல்லையெனில், நிச்சயமாக எங்கள் ஊரிலிருந்து உங்களை வெளியேற்றிவிடுவோம்!” அப்போது அத்தூதர்களுக்கு அவர்களின் அதிபதி அறிவித்தான்: “நாம் இந்த அக்கிரமக்காரர்களை அழித்தே விடுவோம்!  </span>
<span>14:14 மேலும், அவர்களுக்குப் பிறகு இப்பூமியில் உங்களை வசிக்கச் செய்வோம். என்னிடத்தில் பதில் சொல்லியாக வேண்டும் என்று யார் பயப்படுகின்றாரோ, மேலும் என் எச்சரிக்கைக்கு யார் அஞ்சுகிறாரோ அவருக்குரிய வெகுமதியாகும் இது!” </span>
<span>14:15 அவர்கள் தீர்ப்பு வேண்டுமென விரும்பினார்கள். (ஆகையால் இவ்வாறு அவர்களுக்குத் தீர்ப்பு அளிக்கப்பட்டது). மேலும், சத்தியத்திற்கு விரோதியான ஒவ்வோர் ஆணவக்காரனும் இழப்புக்குள்ளாகி விட்டான். </span>
<span>14:16 இனி, அவனுக்கு நரகம்தான் இருக்கின்றது. அங்கு அவனுக்குச் சீழ் புகட்டப்படும். </span>
<span>14:17 அதனை அவன் கஷ்டப்பட்டு விழுங்க முயல்வான்; எனினும், அதனை எளிதில் விழுங்கிட அவனால் முடியாது. அனைத்துத் திசைகளிலிருந்தும் மரணம் அவனை நோக்கி வரும். ஆயினும், அவனால் மரணம் அடைய முடியாது. அதைத் தவிர ஒரு கடும்வேதனை அவன் உயிரை வதைத்துக் கொண்டிருக்கும். </span>
<span>14:18 எவர்கள் தம் அதிபதியை நிராகரித்தார்களோ அவர்களின் செயல்களுக்கான உவமை, கடும் புயல் வீசக்கூடிய ஒரு நாளில் அடித்துச் செல்லப்படும் சாம்பலைப் போன்றதாகும். தாங்கள் செய்த செயல்களிலிருந்து எந்தப் பலனையும் அவர்கள் பெற முடியாது. இதுவே அளவு கடந்த வழிகேடாகும். </span>
<span>14:19 நிச்சயமாக, அலலாஹ் வானங்களையும் பூமியையும் சத்தியத்தின் அடிப்படையில் படைத்து, நிலைபெறச் செய்துள்ளான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அவன் நாடினால் உங்களை அழித்துவிட்டு (அந்த இடத்தில்) ஒரு புதிய படைப்பைக் கொண்டு வருவான். </span>
<span>14:20 இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்குச் சிறிதும் சிரமமானதல்ல!</span>
<span>14:21 மேலும், இவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் திருமுன் ஒளிவு மறைவின்றி ஒன்று சேர்க்கப்படும்போது (உலகில்) பலவீனர்களாய் இருந்த மக்கள், ‘பெரிய மனிதர்களாய்க்’ கருதிக் கொண்டிருந்தவர்களை நோக்கி “(உலகில்) நாங்கள் உங்களைப் பின்பற்றி வந்தோம். (இப்போது) அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து எங்களைக் காப்பாற்ற உங்களால் ஏதேனும் செய்ய முடியுமா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள் கூறுவார்கள்: “அல்லாஹ் எங்களுக்கு (ஈடேற்றத்திற்கான) ஏதேனும் வழியைக் காட்டியிருந்தால், நாங்கள் அதனை உங்களுக்கும் நிச்சயம் காட்டித் தந்திருப்போம். இப்போது நாம் பதறினாலும் சரி, பொறுமையாய் இருந்தாலும் சரி இரண்டுமே நமக்கு சமம்தான்! எந்நிலையிலும் நாம் தப்புவதற்கு வழியே இல்லை!”</span>
<span>14:22 பிறகு விவகாரம் தீர்க்கப்பட்டுவிடும்போது ஷைத்தான் கூறுவான்: “திண்ணமாக அல்லாஹ் உங்களுக்கு என்னென்ன வாக்குறுதிகளை வழங்கியிருந்தானோ அவை அனைத்தும் உண்மையானவையே! மேலும், நான் உங்களுக்கு அளித்திருந்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றித் தரவில்லை. உங்கள்மீது எனக்கு எந்த ஆதிக்கமும் இருக்கவில்லை. ஆனால் நான் செய்ததெல்லாம் என் வழியில் வருமாறு உங்களை அழைத்ததுதான்! நீங்கள் எனது அழைப்பைத் தயக்கமின்றி ஏற்றுக் கொண்டீர்கள். எனவே, இப்பொழுது என்னை இகழாதீர்கள்; உங்களையே இகழ்ந்து கொள்ளுங்கள்! (இங்கு) நான் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. உங்களாலும் எனக்கு உதவி செய்ய முடியாது. இதற்கு முன்பு இறைவனுக்கு இணையாக நீங்கள் என்னை ஆக்கியதற்கு நான் பொறுப்பல்ல. இத்தகைய அக்கிரமக்காரர்களுக்கு திண்ணமாக துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது.”</span>
<span>14:23 ஆனால், எவர்கள் (இவ்வுலகில்) இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்கள் சுவனங்களில் நுழைவிக்கப்படுவார்கள்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்கள் தம் இறைவனின் அனுமதி கொண்டு என்றென்றும் வாழ்வார்கள். மேலும், ‘உங்கள்மீது சாந்தி நிலவட்டும்!” என்று அங்கு அவர்களுக்கு முகமன் கூறப்படும். </span>
<span>14:24 நல்ல வார்த்தை (கலிமா தய்யிபாவு)க்கு அல்லாஹ் எவ்வாறு உவமை கூறுகின்றான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது ஒரு நல்ல மரத்தைப் போன்றதாகும். அதன் வேர் பூமியில் ஆழப்பதிந்திருக்கின்றது; அதன் கிளைகள் வானளாவ உயர்ந்து நிற்கின்றன; </span>
<span>14:25 எந்நேரமும் அம்மரம் தன் இறைவனின் ஆணைக்கேற்பக் கனிகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் படிப்பினை பெற வேண்டுமென்பதற்காக அல்லாஹ் அவர்களுக்கு இத்தகைய உவமைகளைக் கூறுகின்றான். </span>
<span>14:26 மேலும், கெட்ட வார்த்தைக்கு உவமை, ஒன்றுக்கும் உதவாத ஒரு கெட்ட மரத்தைப் போன்றதாகும். அந்த மரம் பூமியின் மேல் மட்டத்திலிருந்து பிடுங்கி எறியப்படுகின்றது; அதற்கு எவ்வித நிலையான தன்மையும் கிடையாது! </span>
<span>14:27 நம்பிக்கை கொண்டோருக்கு, அல்லாஹ் ஒரு வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும், மறுமையிலும் உறுதிப்பாட்டை அருளுகின்றான். ஆனால், அக்கிரமக்காரர்களை அல்லாஹ் வழி தவறச் செய்கின்றான். அல்லாஹ், தான் நாடியவற்றைச் செய்(வதற்கு அதிகாரம் உள்ளவனாக இருக்)கின்றான். </span>
<span>14:28 அல்லாஹ்வின் அருட்கொடையைப் பெற்று பின்பு அதனை நன்றிகொல்லும் போக்கைக் கொண்டு மாற்றி (தங்களுடன்) தம் சமூகத்தையும் அழிவுக் கிடங்கில் தள்ளியவர்களை நீர் கவனிக்கவில்லையா? </span>
<span>14:29 (அந்த) நரகில் அவர்கள் எரிந்து கருகிவிடுவார்கள்! அது கொடிய இருப்பிடமாகும். </span>
<span>14:30 அல்லாஹ்வின் வழியிலிருந்து (மக்களைப்) பிறழச் செய்வதற்காக மற்றவர்களையும் அவனுக்கு நிகராய் ஆக்கினார்கள். (நபியே! அவர்களிடம்) கூறுவீராக: “நன்கு சுவைத்துக் கொள்ளுங்கள்; இறுதியில் நீங்கள் திரும்பிச் செல்வது நரகத்திற்குத்தான்!”</span>
<span>14:31 (நபியே!) நம்பிக்கை கொண்ட என் அடியார்களிடம், எவ்விதக் கொடுக்கல் வாங்கலும் நட்பும் பலன் தராத ஒருநாள் வருவதற்கு முன்பே தொழுகையை நிலைநாட்டும்படியும், மேலும், நாம் வழங்கியவற்றிலிருந்து மறைவாகவும் வெளிப்படையாகவும் (நற்பாதையில்) செலவிடும்படியும் கூறுவீராக!</span>
<span>14:32 அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் படைத்தவன். மேலும், அவன் வானத்திலிருந்து மழை பொழியச் செய்தான். பிறகு அதன் மூலம் உங்களுக்கு உணவாக விதவிதமான விளைபொருட்களை உற்பத்தி செய்தான். இன்னும், கப்பலை அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்; அது அவனது கட்டளைக்கேற்பக் கடலில் செல்கிறது. மேலும், உங்களுக்கு ஆறுகளை வசப்படுத்தித் தந்தான். </span>
<span>14:33 மேலும், சூரியனையும் சந்திரனையும் அவை தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் வண்ணம் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான். மேலும், இரவையும் பகலையும் உங்களுக்காக வசப்படுத்தித் தந்தான். </span>
<span>14:34 மேலும், நீங்கள் அவனிடம் வேண்டிக்கொண்ட அனைத்தையும் அவனே உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணக்கிடுவீர்களாயின், அவற்றை உங்களால் வரையறுக்கவே முடியாது. உண்மை யாதெனில், மனிதன் பெரும் அநீதியாளனாகவும், நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான். </span>
<span>14:35 இப்ராஹீம் இவ்வாறு பிரார்த்தனை புரிந்ததை நினைவுகூருங்கள்: “என் இறைவனே! (மக்காவாகிய) இந் நகரத்தை அமைதி அளிக்கக்கூடியதாக ஆக்குவாயாக! மேலும், என்னையும் என் மக்களையும் சிலைகளை வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக! </span>
<span>14:36 என் இறைவனே! திண்ணமாக இந்தச் சிலைகள் பெரும்பாலான மக்களை வழிகேட்டிலாழ்த்திவிட்டன; (என்னுடைய வழித்தோன்றல்களும் இவற்றால் வழி கெடலாம்; எனவே, அவர்களில்) எவர்கள் என்னுடைய வழிமுறையின்படி நடந்தார்களோ அவர்கள்தாம் திண்ணமாக என்னைச் சார்ந்தவர்களாவர். எவர்கள் எனக்கு முரணான வழியினை மேற்கொண்டார்களோ திண்ணமாக நீ பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணை பொழிபவனாகவும் இருக்கின்றாய்;</span>
<span>14:37 எங்கள் இறைவனே! நான் என் மக்களில் சிலரை விவசாயம் இல்லாத ஒரு பள்ளத்தாக்கில், கண்ணியத்திற்குரிய உன்னுடைய இல்லத்தருகில் குடியமர்த்திவிட்டேன். எங்கள் இறைவனே! அவர்கள் (இங்கு) தொழுகையை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்). எனவே, அவர்கள்மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக! மேலும், இவர்களுக்கு உண்பொருள்களை வழங்குவாயாக! இவர்கள் நன்றியுடையவர்களாய்த் திகழக்கூடும்! </span>
<span>14:38 எங்கள் இறைவனே! திண்ணமாக நாங்கள் மறைத்து வைக்கிற மற்றும் வெளிப்படுத்துகின்ற அனைத்தையும் நீ அறிவாய் பூமியிலும் சரி, வானத்திலும் சரி, எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததல்ல. </span>
<span>14:39 முதுமைக் காலத்தில் இஸ்மாயீல், இஸ்ஹாக் போன்ற மக்களை வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! திண்ணமாக என்னுடைய இறைவன் பிரார்த்தனைகளைச் செவியேற்பவனாவான். </span>
<span>14:40 என் இறைவா! தொழுகையை நிலைநிறுத்துபவனாய் என்னை ஆக்குவாயாக! என் வழித்தோன்றல்களிலிருந்தும் (தொழுகையை நிலைநாட்டுபவர்களை) தோற்றுவிப்பாயாக! எங்கள் இறைவனே! மேலும், எனது இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக!</span>
<span>14:41 எங்கள் இறைவனே! எனக்கும் என் பெற்றோருக்கும் நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளில் மன்னிப்பை அருள்வாயாக!”</span>
<span>14:42 இந்த அக்கிரமக்காரர்களின் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இருக்கின்றான் என்று (நபியே!) நீர் கருத வேண்டாம்! அவர்களை அவன் விட்டுவைத்திருப்பது ஒரு குறிப்பிட்ட நாள் வரைக்கும்தான்! அந்நாளில் அவர்களின் விழிகள் மருளும்; </span>
<span>14:43 அவர்கள் தம் தலைகளை மேலே உயர்த்திக் கொண்டு ஓடுவார்கள்; அவர்களின் பார்வை நிலை குத்தியிருக்கும்; மேலும், அவர்களுடைய இதயங்கள் சூன்யமாகிவிட்டிருக்கும்! </span>
<span>14:44 வேதனை வரக்கூடிய அந்நாளைப் பற்றி மக்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! அன்று இந்த அக்கிரமக்காரர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவனே! இன்னும் சிறிது காலம் வரை எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக! அவ்வாறு அளித்தால், உனது அழைப்பினை நாங்கள் விரைந்து ஏற்றுக் கொள்வோம். மேலும், (உன்) தூதர்களையும் பின்பற்றுவோம்.” (அப்போது அவர்களுக்கு இவ்வாறு தெளிவாகப் பதில் கூறப்படும்:) “எங்களுக்கு அழிவே இல்லை” என்று இதற்கு முன்னர் (பல முறை) சத்தியம் செய்து கூறிக் கொண்டிருந்தவர்கள்தாமே நீங்கள்! </span>
<span>14:45 உண்மையில் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்கள் வாழ்ந்த ஊர்களில்தான் நீங்கள் வசித்து வந்தீர்கள்; அவர்களிடம் நாம் எவ்வாறு நடந்துகொண்டோம் என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டிருந்தது; மேலும், அவர்களை உதாரணமாகக் கூறியும் உங்களுக்கு உண்மையைப் புரிய வைத்திருந்தோம்! </span>
<span>14:46 அவர்கள் விதவிதமான சூழ்ச்சிகளைச் செய்து பார்த்தனர். அவர்களுடைய சூழ்ச்சிகள் மலைகளையே பெயர்த்துவிடக் கூடியவையாக இருப்பினும் அவர்களுடைய ஒவ்வொரு சூழ்ச்சியையும் முறியடிக்கும் சூட்சுமம் அல்லாஹ்விடம் இருந்தது. </span>
<span>14:47 (நபியே!) அல்லாஹ் தன் தூதர்களிடம் அளித்துள்ள வாக்குறுதிக்கு மாறு செய்வான் என்று நீர் ஒருபோதும் கருதவேண்டாம். திண்ணமாக, அல்லாஹ் வல்லமையுடையவனும், பழிவாங்குபவனும் ஆவான். </span>
<span>14:48 அந்த நாளில் இந்த பூமி வேறு பூமியாகவும், இந்த வானங்கள் வேறு வானங்களாகவும் மாற்றப்பட்டு, அடக்கியாளும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் திருமுன்னர் ஒளிவு மறைவின்றி எல்லாரும் வந்து சேர்வார்கள் </span>
<span>14:49 அத்தகைய ஒரு நாளைக் குறித்து நீர் அவர்களை எச்சரிப்பீராக! அந்நாளில் குற்றவாளி(களின் கை கால்)கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருப்பதை நீர் காண்பீர். </span>
<span>14:50 அவர்கள் தார் ஆடைகளை அணிந்திருப்பார்கள். மேலும், அவர்களின் முகங்களை தீக்கொழுந்துகள் மூடியிருக்கும். </span>
<span>14:51 ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் செய்த செயல்களின் கூலியை அல்லாஹ் வழங்க வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்யப்படும்)! திண்ணமாக, அல்லாஹ் விரைவாய்க் கணக்கு வாங்குபவனாவான். </span>
<span>14:52 இது, மனிதகுலம் முழுவதற்கும் உரிய தூதுச் செய்தியாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்பட வேண்டும்; மேலும், உண்மையில் இறைவன் ஒருவனே என்பதை அவர்கள் அறிந்திட வேண்டும்; மேலும், அறிவுடையவர்கள் படிப்பினை பெற்றிட வேண்டும் என்பதற்காகவே (இந்தத் தூதுச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.)</span>
</div><div>
<span>அல்ஹிஜ்ர்</span>
<span>15:1 அலிஃப், லாம், றா. இறைமறையின் மற்றும் தெளிவான குர்ஆனின் வசனங்களாகும் இவை. </span>
<span>15:2 (இன்று இஸ்லாத்தின் அழைப்பை) ஏற்க மறுத்தவர்கள் “நாமும் இறைவனுக்கு அடிபணிந்தவர்களாக இருந்திருக்கக் கூடாதா?” என்று ஏக்கத்துடன் கூறும் நேரம் விரைவில் வரும். </span>
<span>15:3 (நபியே!) அவர்களை அவர்களுடைய போக்கில் விட்டுவிடும்! அவர்கள் உண்டு மகிழ்ந்து சுகம் அனுபவித்துக் கொள்ளட்டும்! மேலும், அவர்களின் நப்பாசைகள் அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி வைத்திருக்கட்டும்! இவர்கள் விரைவில் அறிந்து கொள்ளத்தான் போகிறார்கள்; </span>
<span>15:4 இதற்கு முன்பு நாம் எந்த ஊரை அழித்திருக்கின்றோமோ அதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்தவணை நிர்ணயிக்கப்பட்டே இருந்தது. </span>
<span>15:5 எந்தச் சமூகத்தினரும் தமக்குரிய காலத் தவணை முடியும் முன்பே அழியவும் முடியாது; அது முடிந்த பின்பு வாழவும் முடியாது. </span>
<span>15:6 இம்மக்கள் கூறுகின்றார்கள்: “இறை வாக்கு (திக்ர்) இறக்கியருளப்பட்டிருப்பவரே! திண்ணமாக, நீர் ஒரு பைத்தியக்காரர் ஆவீர். </span>
<span>15:7 நீர் உண்மையாளராய் இருப்பின் ஏன் எங்களிடம் வானவர்களை நீர் அழைத்து வருவதில்லை?” </span>
<span>15:8 நாம் வான வர்களை (வெறுமனே இறக்குவதில்லை.) அவர்கள் இறங்கும்போது சத்தியத்துடனே இறங்குவார்கள். அதன் பிறகு மக்களுக்கு அவகாசம் அளிக்கப்படுவதில்லை. </span>
<span>15:9 திண்ணமாக, இந்த நல்லு ரையை நாம்தாம் இறக்கிவைத்தோம். மேலும், நாமே இதனைப் பாதுகாப்போராகவும் இருக்கின்றோம். </span>
<span>15:10 (நபியே!) உமக்கு முன் சென்று போன எத்தனையோ சமூகங்களுக்குத் தூதர்களை நாம் அனுப்பியிருக்கின்றோம். </span>
<span>15:11 அவர்களிடம் எந்தத் தூதர் வந்தபோதும் அவரை அவர்கள் ஏளனம் செய்யாமல் இருக்கவில்லை. </span>
<span>15:12 இவ்வாறே இக்குற்றவாளிகளின் உள்ளங்களில் நாம் இந்நல்லுரையை (கம்பியைப் போன்று) செலுத்துகிறோம். </span>
<span>15:13 அதன்மீது அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை. தொன்றுதொட்டே இத்தகைய இயல்புடைய மக்களிடம் இதே நடைமுறைதான் இருந்து வருகிறது. </span>
<span>15:14 மேலும், வானத்தின் வாயிலொன்றை நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டிருந்தாலும், அதில் அவர்கள் பட்டப் பகலிலே ஏறத் தொடங்கிவிட்டிருந்தாலும் </span>
<span>15:15 அப்பொழுதும் அவர்கள் இவ்வாறே கூறியிருப்பர்: “எங்கள் கண்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றன; சரியாகச் சொல்வதானால் எங்களுக்குச் சூனியம் செய்யப்பட்டுள்ளது!”</span>
<span>15:16 (இது நமது செயல் திறனாகும்:) திண்ணமாக நாம், வானத்தில் உறுதி வாய்ந்த அரண்களை அமைத்தோம்; பார்ப்பவர்களுக்காக (நட்சத்திரங்களால்) அவற்றை அலங்கரித்தோம்; </span>
<span>15:17 மேலும், விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானைவிட்டும் அவற்றைப் பாதுகாக்கவும் செய்தோம். </span>
<span>15:18 ஆகையால் எந்த ஒரு ஷைத்தானும் அங்கு செல்ல முடியாது; எதையேனும் ஒட்டுக் கேட்பதைத் தவிர! (அப்படி அவன் ஒட்டுக் கேட்க முயன்றால்) பிரகாசமான ஒரு தீச்சுவாலை அவனைப் பின்சென்று விரட்டும்!</span>
<span>15:19 மேலும், நாம், பூமியை விரித்தோம்; அதில் மலைகளை நாட்டினோம். அதில், எல்லா வகையான தாவரங்களையும் மிகப் பொருத்தமான அளவில் முளைக்கச் செய்தோம். </span>
<span>15:20 மேலும், வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் அனைத்தையும் நாம் அதில் அமைத்தோம் உங்களுக்காகவும் நீங்கள் எவற்றுக்கு உணவளிப்பவர்களாக இல்லையோ அத்தகைய எண்ணற்ற படைப்பினங்களுக்காகவும்! </span>
<span>15:21 எந்தப் பொருள்களாய் இருந்தாலும் சரி, அதன் கருவூலம் நம்மிடம் இல்லாமல் இல்லை. எந்தப் பொருளையும் ஒரு குறிப்பிட்ட அளவிலேயே நாம் இறக்கி வைக்கின்றோம். </span>
<span>15:22 மேலும் (மேகங்களை) கருக்கொள்ளச் செய்யும் காற்றை நாமே அனுப்புகின்றோம். பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்கின்றோம். மேலும், அதனை உங்களுக்குப் புகட்டுகின்றோம். அதன் கருவூலதாரர் நீங்கள் அல்லவே! </span>
<span>15:23 திண்ணமாக, வாழ்வையும் மரணத்தையும் நாமே அளிக்கின்றோம். மேலும், அனைத்திற்கும் நாமே வாரிசாவோம். </span>
<span>15:24 உங்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களையும் பின்னால் வரப்போகின்றவர்களையும் நாம் அறிந்திருக்கின்றோம். </span>
<span>15:25 நிச்சயம் உம் அதிபதியே அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பான்; திண்ணமாக அவன் நுண்ணறிவாளனும் மிக அறிந்தவனுமாவான். </span>
<span>15:26 பேதகமடைந்த, (சுண்டினால் ஓசை வரக்கூடிய) காய்ந்த களிமண்ணிலிருந்து மனிதனை நாம் படைத்தோம். </span>
<span>15:27 அதற்கு முன்பு தீயின் கடும் வெப்பத்திலிருந்து ஜின்களைப் படைத்திருந்தோம். </span>
<span>15:28 பின்பு உம் அதிபதி வானவர்களை நோக்கிக் கூறியதை நினைவுகூரும்: “பேதகமடைந்த (சுண்டினால் ஓசை வரக்கூடிய) காய்ந்த களிமண்ணிலிருந்து ஒரு மனிதரை திண்ணமாக நான் படைக்கப் போகின்றேன். </span>
<span>15:29 நான் அவரை முழுமையாக்கி, அவருக்குள் என்னுடைய உயிரிலிருந்து ஊதியதும் நீங்கள் அனைவரும் அவருக்குச் சிரம் பணிந்திட வேண்டும்!” </span>
<span>15:30 வானவர்கள் அனைவரும் அவ்வாறே சிரம் பணிந்தார்கள். </span>
<span>15:31 இப்லீஸைத் தவிர! அவன் சிரம்பணிபவர்களுடன் சேர்ந்திட மறுத்து விட்டான். </span>
<span>15:32 அப்போது இறைவன் கேட்டான்: “இப்லீஸே! உனக்கு என்ன நேர்ந்து விட்டது? சிரம் பணிந்தவர்களுடன் நீ சேரவில்லையே, ஏன்?” </span>
<span>15:33 அதற்கு அவன் கூறினான்: “இந்த மனிதருக்குச் சிரம்பணிவது என் வேலை அல்ல! ஏனெனில் பேதகமடைந்த (சுண்டினால் ஓசை வரக்கூடிய) காய்ந்த களிமண்ணிலிருந்து அவரை நீ படைத்துள்ளாய்!” </span>
<span>15:34 அதற்கு இறைவன் “அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு! ஏனெனில், திண்ணமாக நீ விரட்டப்பட வேண்டியவனாய் இருக்கின்றாய்! </span>
<span>15:35 இனி கூலி கொடுக் கப்படும் நாள் வரை திண்ணமாக உன்மீது சாபம் விதிக்கப்பட்டிருக்கும்!” என்று கூறினான். </span>
<span>15:36 அதற்கு அவன், “என் இறைவனே! (அப்படியானால்) மக்கள் அனைவரும் மீண்டும் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!” என்று வேண்டிக் கொண்டான். </span>
<span>15:37 அதற்கு அல்லாஹ் கூறினான்: “உனக்கு அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. </span>
<span>15:38 “நாம் மட்டுமே அறிந்திருக்கக்கூடிய அந்த நாள் வரும்வரை.”</span>
<span>15:39 அதற்கு அவன் கூறினான்: “என் இறைவனே! நீ என்னை வழிபிறழச் செய்தது போன்று, திண்ணமாக நானும் உலகில் அவர்களுக்குக் கவர்ச்சிகளை ஏற்படுத்தி, அவர்கள் அனைவரையும் வழிபிறழச் செய்வேன்; </span>
<span>15:40 ஆனால், உன் அடியார்களில் எவர்களை வாய்மையாளர்களாய் நீ ஆக்கினாயோ அவர்களைத் தவிர!” </span>
<span>15:41 அதற்கு அல்லாஹ் கூறினான்: “இதுதான் (அந்த வாய்மையாளர்களின் வழிதான்) என் பக்கம் கொண்டு வந்து சேர்க்கும் நேரிய வழியாகும். </span>
<span>15:42 திண்ணமாக, என்னுடைய வாய்மையான அடியார்கள் மீது உனது அதிகாரம் செல்லுபடியாகாது. ஆனால் எவர்கள் உன்னைப் பின்பற்றி வழிகெட்டுப் போகின்றார்களோ, அவர்களிடம் மட்டும் உனது அதிகாரம் செல்லுபடியாகும். </span>
<span>15:43 திண்ணமாக, அத்தகையவர்கள் அனைவர்க்கும் நரகம் இருக்கிறது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.”</span>
<span>15:44 (இப்லீஸைப் பின்பற்றுவோருக்கு எச்சரிக்கப்பட்டுள்ள) அந்நரகத்திற்கு ஏழு வாயில்கள் உள்ளன. ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொரு பிரிவினர்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. </span>
<span>15:45 ஆனால், இறையச்சமுள்ளவர்கள் சுவனங்களிலும் (அங்குள்ள) நீரூற்றுகளிலும் இருப்பார்கள். </span>
<span>15:46 மேலும், அவர்களிடம் கூறப்படும்: “எவ்வித அச்சமுமின்றி சாந்தியுடன் அவற்றினுள் நுழையுங்கள்!” </span>
<span>15:47 அவர்களின் உள்ளங்களில் படிந்திருக்கும் குரோதங்களை நாம் அகற்றி விடுவோம். ஒருவருக்கொருவர் சகோதரர்களாக கட்டில்களில் எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள்; </span>
<span>15:48 அங்கு அவர்களுக்கு யாதொரு சிரமமும் ஏற்படாது; அங்கிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள். </span>
<span>15:49 ‘திண்ணமாக நான் பெரிதும் மன்னிப்பவனாகவும் பெருங்கருணை புரிபவனாகவும் இருக்கின்றேன்’ என்பதை என் அடிமைகளுக்கு (நபியே!) நீர் அறிவித்து விடும்! </span>
<span>15:50 ‘அத்துடன் என்னுடைய வேதனை மிகவும் துன்புறுத்தும் வேதனையாய் இருக்கும்’ என்பதையும் அறிவித்துவிடும். </span>
<span>15:51 மேலும், இப்ராஹீமின் விருந்தாளிகளைப் பற்றியும் இவர்களுக்கு எடுத்துரைப்பீராக!” </span>
<span>15:52 அவ்விருந்தாளிகள், “உம் மீது சாந்தி நிலவுவதாக!” என்று கூறி அவரிடம் வந்தபோது “உங்களைக் குறித்து எங்களுக்குப் பயமாக இருக்கிறது!” என்று அவர் கூறினார். </span>
<span>15:53 அதற்கு அவர்கள், “நீர் அஞ்ச வேண்டாம்! அறிவுக் கூர்மையுள்ள ஒரு குழந்தையைப் பற்றிய நற்செய்தியை உமக்கு நாங்கள் அறிவிக்கின்றோம்” என்று பதில் கூறினார்கள். </span>
<span>15:54 அதற்கு இப்ராஹீம், “இந்தத் தள்ளாத வயதிலா எனக்கு (குழந்தைப்பேறு பற்றி) நற்செய்தி அறிவிக்கின்றீர்கள்? நீங்கள் எப்படிப்பட்ட நற்செய்தியை அறிவிக்கிறீர்கள் என்பதைச் சற்று சிந்தியுங்கள்!” என்று கூறினார். </span>
<span>15:55 அதற்கு அவர்கள், “நாங்கள் சத்தியமான நற்செய்தியைத்தான் உமக்கு அறிவிக்கின்றோம்; நீர் நம்பிக்கை இழந்துவிடாதீர்!” என்று பதில் கூறினார்கள். </span>
<span>15:56 “வழிபிறழ்ந்தவர்கள் தாம் தம் இறைவனின் கருணை குறித்து நம்பிக்கையிழப்பார்கள்” என்று இப்ராஹீம் கூறினார். </span>
<span>15:57 பிறகு, “இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டிருப்பவர்களே! உங்கள் வருகையின் முக்கிய நோக்கம் என்ன?” என்று அவர் வினவினார். </span>
<span>15:58 அதற்கு அவர்கள் கூறினார்கள்: “குற்றம் புரிந்த சமுதாயத்தினரிடம் நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம். </span>
<span>15:59 ஆனால் லூத்துடைய குடும்பத்தார்கள் விதிவிலக்கானவர்கள். திண்ணமாக, அவர்கள் அனைவரையும் நாம் காப்பாற்றுவோம்! </span>
<span>15:60 ஆனால், அவருடைய மனைவியைத் தவிர! (அவளைக் குறித்து இறைவன் கூறுகின்றான்: “வேதனையை அனுபவிக்க) தங்கியிருப்பவர்களுள் அவளும் ஒருத்தியாவாள் என்று நாம் விதித்துவிட்டோம்.”</span>
<span>15:61 பிறகு அந்தத் தூதர்கள் லூத்திடம் வந்தபோது, </span>
<span>15:62 “நீங்கள் அறிமுகமற்றவர்களாய் இருக்கிறீர்களே” என்று லூத் கூறினார். </span>
<span>15:63 அதற்கு அவர்கள் கூறினார்கள்: “இல்லை! எதனைக் குறித்து இவர்கள் சந்தேகம் கொண்டிருந்தார்களோ அதனையே நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம். </span>
<span>15:64 நாங்கள் சத்தியத்துடன் உம்மிடம் வந்திருக்கின்றோம். நாங்கள் உண்மையைத்தான் சொல்கிறோம். </span>
<span>15:65 எனவே, நீர் இரவு சற்று இருக்கும்போதே உம்முடைய குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு வெளியேறிவிடும்; மேலும், நீர் அவர்களைப் பின்தொடர்ந்தே செல்லும்! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம்; எங்கு செல்லுமாறு உங்களுக்குக் கட்டளையிடப்படுகின்றதோ அங்கு நேராகச் செல்லுங்கள்!” </span>
<span>15:66 மேலும், விடிவதற்குள் இவர்கள் அனைவரும் வேரோடு அழிக்கப்பட்டு விடுவார்கள் என்ற நமது இந்த முடிவை நாம் திட்டவட்டமாக அவருக்கு அறிவித்து விட்டோம். </span>
<span>15:67 (இதற்குள்ளாக) ஊர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தவர்களாக லூத்தின் இல்லம் வந்(து சூழ்ந்)தனர். </span>
<span>15:68 லூத் கூறினார்; “(சகோதரர்களே!) இவர்கள் என்னுடைய விருந்தாளிகள்; என்னை அவமானப்படுத்திவிடாதீர்கள்; </span>
<span>15:69 அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னை இழிவுபடுத்தி விடாதீர்கள்!” </span>
<span>15:70 அதற்கு அவர்கள், “ஊர் உலகத்துக்கெல்லாம் நீர் வக்காலத்து வாங்க வேண்டாமென்று நாம் பலமுறை உம்மைத் தடுக்கவில்லையா?” என்றார்கள். </span>
<span>15:71 அதற்கு லூத், “நீங்கள் எதையும் செய்தே தீர வேண்டுமென்றால் இதோ என்னுடைய பெண் மக்கள் இருக்கின்றனர்!” என்று கூறினார். </span>
<span>15:72 (நபியே!) உம்முடைய உயிர் மீது ஆணையாக! சந்தேகமின்றி அவர்கள் ஒருவிதமான மயக்கத்தில் சிக்கி, அதில் தங்களை மறந்து தட்டழிந்து கொண்டிருந்தார்கள். </span>
<span>15:73 இறுதியில் விடியும் வேளையில் பயங்கரமான பேரோசை ஒன்று அவர்களைத் தாக்கியது! </span>
<span>15:74 மேலும், நாம் அவ்வூரைத் தலைகீழாகப் புரட்டினோம்; அவர்கள் மீது சுடப்பட்ட கற்களைப் பொழியச் செய்தோம். </span>
<span>15:75 திண்ணமாக, இந்நிகழ்ச்சிகளில் நுணுக்கமாய் சிந்திப்பவர்களுக்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. </span>
<span>15:76 மேலும், இந்த (நிகழ்ச்சி நடைபெற்ற) இடம் முதன்மைச் சாலையிலேயே அமைந்துள்ளது. </span>
<span>15:77 நிச்சயமாக நம்பிக்கையாளர்களுக்கு இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன. </span>
<span>15:78 திண்ணமாக, ‘அய்கா’ வாசிகள் அக்கிரமக்காரர்களாய் இருந்தார்கள். </span>
<span>15:79 எனவே, நாம் அவர்களையும் பழி வாங்கினோம் (என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்)! இவ்விரு சமூகத்தாரின் (பாழடைந்துபோன) பகுதிகள் அனைவரும் அறியக்கூடிய பாதையில் இருக்கின்றன. </span>
<span>15:80 “ஹிஜ்ர் வாசிகளும் இறைத்தூதர்களைப் பொய்யர்களெனக் கூறினார்கள். </span>
<span>15:81 நாம் நம்முடைய வசனங்களை அவர்களுக்கு அருளி (நம்முடைய சான்றுகளைக் காட்டி)னோம். ஆனால், அவர்கள் அவை அனைத்தையும் புறக்கணித்துக் கொண்டேயிருந்தார்கள். </span>
<span>15:82 மலைகளைக் குடைந்து, வீடுகள் அமைத்து அவற்றில் (எவ்வித அச்சமுமின்றி) நிம்மதியாக இருந்தார்கள். </span>
<span>15:83 இறுதியில் கடுமையான பேரோசையொன்று அதிகாலையில் அவர்களைத் தாக்கியது! </span>
<span>15:84 அப்போது அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கு எந்தப் பலனையும் அளிக்கவில்லை. </span>
<span>15:85 நாம் வானங்களையும், பூமியையும் இன்னும் அவற்றில் இருக்கின்ற அனைத்தையும் சத்தியத்தின் அடிப்படையிலேயே அன்றி படைக்கவில்லை. திண்ணமாக, இறுதித் தீர்ப்பு நாள் வரத்தான் போகிறது! எனவே (நபியே!) நீர் (அவர்களுடைய முறையற்ற செயல்களை) பொருட்படுத்தாமல் கண்ணியமான முறையில் விட்டுவிடும்! </span>
<span>15:86 திண்ணமாக, உம் அதிபதி அனைத்தையும் படைத்தவனும் நன்கறிந்தவனுமாவான். </span>
<span>15:87 திரும்பத் திரும்ப ஓதப்படக்கூடிய ஏழு வசனங்களையும் மகத்துவமிக்க குர்ஆனையும் திண்ணமாக நாம் உமக்கு வழங்கியுள்ளோம். </span>
<span>15:88 நாம் இம்மக்களில் பலதரப்பட்டவர்களுக்கு அளித்திருக்கும் வாழ்க்கை வசதிகளை நீர் ஏறிட்டும் பார்க்காதீர்! இவர்களின் நிலை குறித்து வருந்தாதீர். (இவர்களை விட்டுவிட்டு) நம்பிக்கையார்களின்பால் பணிவுடனும் கனிவுடனும் இருப்பீராக!</span>
<span>15:89 “திண்ணமாக, நான் தெள்ளத் தெளிவாக எச்சரிக்கக்கூடியவனே!” என்று (சத்தியத்தை ஏற்க மறுப்பவர்களிடம்) நீர் கூறிவிடும். </span>
<span>15:90 இந்த எச்சரிக்கை, பிளவை ஏற்படுத்தியவர்களுக்கு நாம் அனுப்பியிருந்த எச்சரிக்கையைப் போன்றதாகும். </span>
<span>15:91 அவர்களோ (தங்களுடைய) வேதத்தைப் பல கூறுகளாகப் பிரித்து விட்டிருந்தார்கள். </span>
<span>15:92 உம் இறைவன் மீது ஆணையாக, இவர்கள் அனைவரையும் நாம் நிச்சயமாக விசாரிப்போம்! </span>
<span>15:93 இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று. </span>
<span>15:94 எனவே, (நபியே!) உமக்குக் கட்டளையிடப்படுகின்றவற்றை வெளிப்படையாகக் கூறிவிடும்; மேலும், இணைவைப்போரைச் சிறிதும் பொருட்படுத்தாதீர்! </span>
<span>15:95 (உம்மை) ஏளனம் செய்கின்ற இந்த மக்களைக் கவனித்துக்கொள்ள உமக்காக நாமே போதுமாக இருக்கின்றோம். </span>
<span>15:96 அல்லாஹ்வுடன் மற்றவர்களையும் கடவுளாக்குகின்றவர்கள் விரைவில் அறிந்துகொள்ளத்தான் போகின்றார்கள். </span>
<span>15:97 (உம்மைக் குறித்து) இவர்கள் கூறும் கூற்றுகளால் உமது உள்ளம் வருந்துவதை திண்ணமாக நாம் அறிவோம். </span>
<span>15:98 (அதற்கான நிவாரணம் இதுதான்:) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! அவன் முன் சிரம்பணிபவராய்த் திகழ்வீராக! </span>
<span>15:99 மேலும், கட்டாயம் வரக்கூடிய அந்தக் கடைசி நேரம் வரை உம் இறைவனுக்கு அடிபணிந்து கொண்டிருப்பீராக!</span>
</div><div>
<span>அந்நஹ்ல்</span>
<span>16:1 வந்துவிட்டது, அல்லாஹ்வின் கட்டளை! எனவே, அதற்காக நீங்கள் அவசரப்படாதீர்கள்! இவர்களின் இணைவைப்புச் செயல்களை விட்டு அவன் தூய்மையானவனும், உயர்ந்தவனும் ஆவான். </span>
<span>16:2 அவன் இந்த ரூஹை* வானவர்களின் மூலம், தனது கட்டளையினால் தான் விரும்பும் அடியார்கள் மீது இறக்கி வைக்கின்றான்; (இந்த ஏவுரையுடன் மக்களை) எச்சரிக்கை செய்யுங்கள்: ‘நிச்சயமாக, வணக்கத்திற்குரிய இறைவன் என்னைத் தவிர வேறு யாரும் இல்லை. எனவே, எனக்கே அஞ்சுங்கள்!’ </span>
<span>16:3 அவன் வானங்களையும் பூமியையும் சத்தியத்துடன் படைத்திருக்கின்றான். இவர்களின் இணைவைப்புச் செயல்களை விட்டு அவன் மிகவும் மேலானவன். </span>
<span>16:4 அவன் மனிதனை ஒரு துளி விந்திலிருந்து படைத்தான்! இப்போது அந்த மனிதன் இறைவனுக்கு எதிராக வெளிப்படையாகத் தர்க்கம் புரிபவனாகி விட்டான். </span>
<span>16:5 மேலும், அவன் கால்நடைகளையும் படைத்தான்! அவற்றில் உங்களுக்கு உடையும் இருக்கிறது; உணவும் இருக்கிறது; இன்னும் பல பயன்களும் இருக்கின்றன. </span>
<span>16:6 மேலும், மாலை நேரத்தில் அவற்றை நீங்கள் ஓட்டி வரும் போதும், காலை நேரத்தில் (மேய்ச்சலுக்காக) அவற்றை நீங்கள் ஓட்டிச் செல்லும் போதும் அவை உங்களுக்கு அழகாகக் காட்சியளிக்கின்றன. </span>
<span>16:7 மேலும், மிகவும் சிரமப்பட்டே தவிர உங்களால் அடைய இயலாத இடங்களுக்கெல்லாம் அவை உங்கள் சுமைகளைச் சுமந்து செல்கின்றன. திண்ணமாக, உங்கள் அதிபதி அளவிலாப் பரிவும் கருணையும் உடையவனாயிருக்கின்றான். </span>
<span>16:8 மேலும், குதிரைகள், கோவேறு கழுதைகள் மற்றும் கழுதைகள் ஆகியவற்றையும் அவன் படைத்தான்; அவற்றின் மீது நீங்கள் பயணம் செய்ய வேண்டும்; மேலும், அவை உங்கள் வாழ்க்கையின் அலங்காரமாக இருக்க வேண்டும் என்பதற்காக! இன்னும் நீங்கள் அறிந்தேயிராத பலவற்றை (உங்கள் நன்மைக்காக) அவன் படைக்கின்றான். </span>
<span>16:9 மேலும், கோணலான பல வழிகள் இருக்கும் நிலையில், நேரிய வழியினைக் காண்பிக்கும் பொறுப்பு அல்லாஹ்வின் மீதே உள்ளது. அவன் நாடியிருந்தால் உங்கள் அனைவருக்கும் நேர்வழியைக் காட்டியிருப்பான். </span>
<span>16:10 அவனே வானத்திலிருந்து உங்களுக்காக மழையை இறக்கினான். அதனை நீங்களும் நன்கு அருந்துகின்றீர்கள்; மேலும், அதிலிருந்து உங்கள் கால்நடைகளை மேய்ப்பதற்காக புற்பூண்டுகளும் முளைக்கின்றன. </span>
<span>16:11 மேலும், அந்த நீரைக் கொண்டு பயிர்களை முளைக்கச் செய்கின்றான். மேலும், ஜைத்தூன் மற்றும் பேரீச்சை மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், விதவிதமான கனிகளையும் உற்பத்தி செய்கின்றான். திண்ணமாக, சிந்திக்கும் மக்களுக்கு இவற்றில் பெரும் சான்று உள்ளது. </span>
<span>16:12 மேலும், உங்கள் நலனுக்காக இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் கட்டுப்படுத்தி வைத்துள்ளான். நட்சத்திரங்களும் அவனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டிருக்கின்றன. பகுத்தறிவைப் பயன்படுத்தும் மக்களுக்கு இவற்றில் பல சான்றுகள் உள்ளன. </span>
<span>16:13 மேலும், பூமியில் உங்களுக்காகப் பல்வேறுபட்ட நிறங்களும் நன்மைகளும் கொண்ட பொருள்களை அவன் படைத்திருக்கின்றான். இவை அனைத்திலும் திண்ணமாக, படிப்பினை பெறும் மக்களுக்கு அரிய சான்று உண்டு. </span>
<span>16:14 அவனே (உங்களுக்காக) கடலை வசப்படுத்தித் தந்துள்ளான். அதிலிருந்து நீங்கள் புத்தம் புதிய மாமிசத்தைப் புசிக்க வேண்டும் என்பதற்காகவும், நீங்கள் அணிகின்ற அழகுப் பொருட்களை அதிலிருந்து வெளிக் கொணர்ந்திட வேண்டும் என்பதற்காகவும்! மேலும், கப்பல் கடலைப் பிளந்து கொண்டு செல்வதையும் நீர் காண்கின்றீர். மேலும், உங்கள் இறைவனின் அருளை நீங்கள் தேடுவதற்காகவும், அவனுக்கு நன்றி செலுத்தக் கூடியவர்களாய் நீங்கள் திகழ்வதற்காகவுமே இவையெல்லாம் இருக்கின்றன. </span>
<span>16:15 மேலும், பூமியில் மலைகளை (முளைகளாக) அவன் ஊன்றினான்; உங்களோடு சேர்ந்து அது சாய்ந்து விடக்கூடாது என்பதற்காக! மேலும், அவனே ஆறுகளை ஓடச் செய்தான்; இயற்கைபூர்வமான பாதைகளையும் அமைத்துத் தந்தான்; நீங்கள் நேர்வழியினைப் பெற வேண்டும் என்பதற்காக!</span>
<span>16:16 மேலும் (பூமியில்) வழிகாட்டும் அடையாளங்களையும் அமைத்தான். நட்சத்திரங்களின் வாயிலாகவும் மக்கள் நேரான வழியினை அடைந்துகொள்கின்றனர். </span>
<span>16:17 ஆகவே, படைக்கின்றவனும் படைக்காதவனும் சமமா வார்களா? நீங்கள் சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டாமா?</span>
<span>16:18 அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் எண்ணிட முயன்றால் அவற்றை உங்களால் எண்ணவே முடியாது. திண்ணமாக அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>16:19 நீங்கள் இரகசியமாய்ச் செய்வதையும், வெளிப்படையாய்ச் செய்வதையும் அல்லாஹ் நன்கறிகின்றான். </span>
<span>16:20 மேலும், அல்லாஹ்வை விட்டுவிட்டு எவர்களை(த் தெய்வங்களாக) மக்கள் அழைக்கின்றார்களோ, அவர்கள் எந்தப் பொருளுக்கும் படைப்பாளர்கள் அல்லர். மாறாக, அவர்களே படைக்கப்பட்டவர்களாவர். </span>
<span>16:21 அவர்கள் இறந்து போனவர்களே தவிர உயிருள்ளவர்கள் அல்லர். அவர்கள் எப்போது (மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு) எழுப்பப்படுவார்கள் என்பதையும் அறிய மாட்டார்கள். </span>
<span>16:22 உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்; ஆயினும், மறுமையை நம்பாதவர்களின் உள்ளங்கள் நிராகரிப்பின் உறை விடமாய் உள்ளன. மேலும், அவர்கள் தற்பெருமையில் உழன்று கொண்டிருக்கிறார்கள். </span>
<span>16:23 இவர்கள் மறைமுகமாகவும், வெளிப் படையாகவும் செய்கின்ற அனைத்துச் செயல்களையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகின்றான். அகந்தை கொள்வோரை அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லை. </span>
<span>16:24 “உங்கள் இறைவன் எதை இறக்கியருளியுள்ளான்?” என்று எவரேனும் அவர்களிடம் கேட்டால், “இவையெல்லாம் முற்காலத்தவர்களின் கட்டுக்கதைகள்” என்றே அவர்கள் கூறுகின்றார்கள். </span>
<span>16:25 இவ்வாறு அவர்கள் கூறுவதன் விளைவாக, மறுமைநாளில் தங்களுடைய பாவங்களை முழுமையாகச் சுமப்பதுடன், அறியாமையினால் யார் யாரை இவர்கள் வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய பாவங்களையும் சுமப்பார்கள். பாருங்கள்! எப்படிப்பட்ட மோசமான சுமையை இவர்கள் சுமந்து கொண்டிருக்கின்றார்கள்!</span>
<span>16:26 இவர்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களில் பலரும் (சத்தியத்தை வீழ்த்துவதற்காக இவ்வாறே) சூழ்ச்சிகளைச் செய்திருக்கின்றார்கள். ஆனால், அல்லாஹ் அவர்களின் சூழ்ச்சிக் கட்டடத்தை அடியோடு பெயர்த்துவிட்டான்! மேலிருந்து அதனுடைய முகடு, அவர்களின் தலைமீது விழுந்தது. மேலும், அவர்கள் சற்றும் எண்ணிப்பாராத திசையிலிருந்து வேதனை அவர்களை வந்தடைந்தது. பிறகு மறுமைநாளில் அல்லாஹ் அவர்களை இழிவுபடுத்துவான்! </span>
<span>16:27 மேலும், அவர்களிடம் கேட்பான்: “இப்பொழுது எனக்கு இணையாக்கப்பட்டவர்கள் எங்கே? அவர்களுக்காகத்தானே நீங்கள் சத்திய சீலர்களுடன் மோதிக் கொண்டிருந்தீர்கள்?” அறிவு வழங்கப்பட்டிருந்தவர்கள் கூறுவார்கள்: “இன்று இழிவும், துர்பாக்கியமும் நிராகரிப்பாளர்களுக்கே!” </span>
<span>16:28 அவர்கள் எத்தகையவர்களென்றால், தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது (வரம்பு மீறும் போக்கை விட்டுவிட்டு) சரணடைந்து “நாங்கள் எந்தக் குற்றமும் செய்து கொண்டிருக்கவில்லையே?” என்று கூறுவார்கள். அதற்கு (வானவர்கள்) பதில் கூறுவார்கள்: “செய்து கொண்டிருக்கவில்லையா...? அல்லாஹ் உங்களுடைய இழிசெயல்களை நன்கறிந்திருக்கின்றான். </span>
<span>16:29 இப்பொழுது நரக வாயில்களிலே நுழையுங்கள்! அங்கே நீங்கள் என்றென்றும் வீழ்ந்துகிடக்க வேண்டும்.” உண்மையில் ஆணவம் கொண்டவர்களின் தங்குமிடம் மிகவும் மோசமானதாகும். </span>
<span>16:30 (மற்றொரு புறம்) இறையச்சமுடையோரை நோக்கி வினவப்படும்: “உங்கள் இறைவன் இறக்கியருளியது என்ன?” அதற்கு அவர்கள், “மிகச் சிறந்ததை (இறக்கியருளினான்)” என்று மறுமொழி கூறுவார்கள். இவ்வாறு நற்செயல் புரிந்தவர்களுக்கு இவ்வுலகிலும் நன்மை இருக்கிறது. மறு உலகமோ திண்ணமாக அவர்களுக்கு மிகச் சிறப்புடையதாகவே இருக்கும். மேலும், இறையச்சமுடையவர்களின் இல்லம் மிகவும் சிறப்புடையதாகும். </span>
<span>16:31 அது நிலைத்திருக்கும் சுவனங்களாகும். அவற்றில் அவர்கள் நுழைவார்கள்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்களின் விருப்பத்திற்கேற்ப அனைத்தும் கிடைக்கும். இறையச்சமுடையவர்களுக்கு அல்லாஹ் இவ்வாறே கூலி வழங்குகின்றான். </span>
<span>16:32 அவர்கள் எத்தகையவர்களென்றால், தூய்மையான நிலையில், அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றுவார்கள். அப்போது வானவர்கள் கூறுவார்கள்: “உங்கள் மீது சாந்தி நிலவட்டும்; நீங்கள் செய்து கொண்டிருந்த நற்செயல்களின் பலனாக சுவனத்தில் நுழையுங்கள்!”</span>
<span>16:33 (நபியே!) இப்போது இவர்களிடம் வானவர்கள் வருவதைத் தவிர அல்லது உம் அதிபதியின் தீர்ப்பு வருவதைத் தவிர வேறு எதையேனும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்களா? இவர்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களும் இவ்வாறே (ஆணவப் போக்கினை) மேற்கொண்டு வந்தார்கள். பிறகு அல்லாஹ் அவர்களுக்கு யாதொரு அநீதியும் இழைக்கவில்லை; ஆனால், அவர்கள் தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள். </span>
<span>16:34 எனவே, அவர்களுடைய இழிசெயல்களின் கேடுகள் அவர்களையே பற்றிக்கொண்டன. மேலும், அவர்கள் எதனைக் கேலி செய்து கொண்டிருந்தார்களோ அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது. </span>
<span>16:35 இந்த இணைவைப்பாளர்கள் கூறுகின்றார்கள்: “அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதையர்களும் அவனை விடுத்து வேறு எதையும் வணங்கியிருக்க மாட்டோம். அவனது கட்டளையின்றி எதனையும் விலக்கப்பட்டதாய் ஆக்கியிருக்கமாட்டோம்.” இவர்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களும் இத்தகைய சாக்குபோக்குகளைத்தான் கூறிக்கொண்டிருந்தார்கள். தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர வேறு ஏதேனும் பொறுப்பு தூதர்கள் மீது உண்டா? </span>
<span>16:36 மேலும், நாம் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு தூதரை அனுப்பினோம். மேலும், “அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்; தாஃகூத்துக்கு அடிபணிவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்!” என்று (அவரின் வாயிலாக அனைவரையும்) எச்சரித்தோம். அதன் பின்னர் அவர்களில் சிலருக்கு அல்லாஹ் நேர்வழியை அளித்தான். வேறு சிலர் மீது வழிகேடு விதிக்கப்பட்டுவிட்டது. எனவே, பூமியில் சுற்றித்திரிந்து பாருங்கள் பொய்யாக்கியவர்களின் கதி என்னவாயிற்று என்பதை! </span>
<span>16:37 (நபியே!) அவர்கள் நேர்வழி அடைய வேண்டும் என்று நீர் எவ்வளவுதான் ஆர்வம் கொண்டாலும் சரியே, அல்லாஹ் எவரை வழிபிறழச் செய்கின்றானோ அவருக்குத் திண்ணமாக அவன் நேர்வழியைக் காட்டுவதில்லை. மேலும், இத்தகையோர்க்கு யாராலும் உதவி செய்ய இயலாது. </span>
<span>16:38 இவர்கள், அல்லாஹ்வின் பெயரில் அழுத்தமான சத்தியங்கள் செய்து கூறுகின்றார்கள், “இறந்துவிடுகின்ற எவரையும் அல்லாஹ் மீண்டும் உயிர்பெற்றெழச் செய்யமாட்டான்” என்று! ஏன் எழுப்பமாட்டான்! இது ஒரு வாக்குறுதியாயிற்றே! இதனை நிறைவேற்றுவதை அல்லாஹ் தன் மீது கடமையாக்கியுள்ளான். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் அறிவதில்லை. </span>
<span>16:39 (இறந்தவர்களை மீண்டும் உயிர்பெற்றெழச் செய்வது) இவர்கள் எதனைப் பற்றி கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றார்களோ அதனை அல்லாஹ் அவர்களுக்குத் தெளிவுபடுத்திவிட வேண்டும் என்பதற்காகவும் மேலும், சத்தியத்தை மறுப்பவர்கள் தாங்கள் பொய்யர்களாக இருந்ததை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவு மேயாகும். </span>
<span>16:40 (இவ்வாறு எழுப்புவது சாத்தியமே; ஏனெனில்) நாம் ஒரு பொருளை உருவாக்க நாடிவிட்டால் ‘ஆகிவிடு!’ என்று மட்டும்தான் ஆணையிடுகின்றோம்; உடனே அது ஆகிவிடுகின்றது. </span>
<span>16:41 எவர்கள் கொடுமைக்கு ஆளான பிறகு அல்லாஹ்வுக்காக ஹிஜ்ரத் செய்தார்களோ அவர்களுக்கு நாம் இவ்வுலகிலேயே நல்ல வசிப்பிடத்தை வழங்குவோம். மேலும், மறுமையின் கூலியோ அதைவிட மிகவும் மகத்தானதாகும். அவர்கள் (எத்தகைய நல்ல முடிவு தங்களுக்குக் காத்திருக்கின்றது என்பதை) அறிந்திட வேண்டுமே! </span>
<span>16:42 (கொடுமைக்கு ஆளான) அந்த மக்கள் பொறுமையைக் கைக்கொண்டு தம் அதிபதியை முழுமையாகச் சார்ந்திருக்கின்றார்கள். </span>
<span>16:43 (நபியே!) நாம் உமக்கு முன்பும் மனிதர்களையே தூதர்களாக அனுப்பிவைத்தோம். அவர்களுக்கு நம்முடைய செய்திகளை (வஹியை) அறிவித்துக் கொண்டிருந்தோம். எனவே, நீங்கள் அறியாதவர்களாய் இருந்தால் வேத அறிவு வழங்கப்பட்டவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்! </span>
<span>16:44 முன் சென்ற அத்தூதர்களுக்குத் தெளிவான சான்றுகள் மற்றும் வேதங்களை வழங்கி அவர்களை அனுப்பி வைத்திருந்தோம். மேலும், இப்பொழுது இந்நல்லுரையை உம்மீது நாம் இறக்கியருளியிருக்கின்றோம். எதற்காகவெனில் மக்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட அறிவுரையை நீர் அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காகவும் மேலும், அவர்களும் (சுயமாக) சிந்தித்துணர வேண்டும் என்பதற்காகவும்!</span>
<span>16:45 இனி எவர்கள் (தூதரின் அழைப்புக்கு எதிராக) தீய சூழ்ச்சிகளை மேற்கொண்டிருக்கின்றார்களோ அவர்கள் அல்லாஹ் தங்களை பூமி விழுங்கும்படிச் செய்திடுவான் அல்லது எங்கிருந்து வேதனை வரும் என்று அவர்கள் சற்றும் ஊகிக்கவில்லையோ அங்கிருந்து அல்லாஹ் தங்கள் மீது வேதனையைக் கொண்டு வந்து விடுவான் </span>
<span>16:46 அல்லது அவர்கள் நடந்து திரிந்து கொண்டிருக்கும்போதே திடீரென்று அவ்வேதனை தங்களைப் பிடித்துவிடும் அல்லது தங்களுக்கு வரக்கூடிய துன்பத்தைப் பற்றி அஞ்சிக் கொண்டிருக்கும் போதே அதிலிருந்து தப்பிப்பதற்கான வழிகளை மும்முரமாய்ச் சிந்தித்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும் (என்பன போன்ற பேரபாயங்கள் ஏற்படாது) என அவர்கள் அச்சமற்று இருக்கின்றார்களா? </span>
<span>16:47 (அவன் என்ன செய்ய நாடினாலும்) அவனை இயலாமைக்குள்ளாக்கும் வலிமையை அவர்கள் பெற்றிருக்கவில்லை. திண்ணமாக, உங்கள் அதிபதி அளவிலாப் பரிவும், பெரும் கிருபையும் கொண்டவனாக இருக்கின்றான். </span>
<span>16:48 அல்லாஹ் படைத்துள்ள பொருள்களுள் எதனையும் இவர்கள் பார்க்கவில்லையா அவற்றின் நிழல்கள் வலப்பக்கமும் இடப்பக்கமும் அல்லாஹ்வின் திருமுன் எவ்வாறு பணிந்து விழுகின்றன என்பதை! இப்படி அனைத்தும் பணிவை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. </span>
<span>16:49 வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களும், அனைத்து வானவர்களும் அல்லாஹ்வின் திருமுன் சிரம்பணிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் ஆணவம் கொள்வதில்லை. </span>
<span>16:50 அவர்கள் தங்களுக்கு மேலே இருக்கின்ற அதிபதிக்கு அஞ்சுகின்றார்கள். தங்களுக்கு இடப்படும் கட்டளைக்கு ஏற்ப செயல்படுகின்றார்கள். </span>
<span>16:51 மேலும், அல்லாஹ் கட்டளையிடுகின்றான்: “இரண்டு கடவுளரை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்! இறைவன் ஒரே ஒருவன்தான்! எனவே, எனக்கு அஞ்சுங்கள்!” </span>
<span>16:52 வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அவனுக்கே உரியவையாகும். மேலும், அவனுடைய தீன் (நெறி) மட்டுமே (இந்தப் பேரண்டம் முழுவதிலும்) செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறிருக்க அல்லாஹ்வை விடுத்து மற்றவர்களுக்கு நீங்கள் அஞ்சுவீர்களா?</span>
<span>16:53 மேலும், உங்களுக்குக் கிடைத்துள்ள அருட் கொடைகள் எல்லாம் அல்லாஹ்விடமிருந்து வந்தவைதாம். பிறகு உங்களுக்கு ஏதேனும் கஷ்டகாலம் வந்துவிடுமாயின் நீங்களே உங்கள் முறையீடுகளை எடுத்துக்கொண்டு அவனிடமே ஓடுகின்றீர்கள். </span>
<span>16:54 பிறகு அந்தக் கஷ்ட காலத்தை உங்களை விட்டு அல்லாஹ் நீக்கிவிட்டால், உடனே உங்களில் ஒரு பிரிவினர் (அதை நீக்கியதற்காகச் செலுத்தும் நன்றியில்) தம் இறைவனுடன் மற்றவர்களையும் இணையாக்கத் தொடங்குகின்றனர்; </span>
<span>16:55 அல்லாஹ் அவர்களுக்குச் செய்த பேருதவிக்கு நன்றி கொல்வதற்காக! சரி, நன்கு அனுபவித்துக் கொள்ளுங்கள்! விரைவில் (அதன் விளைவை) தெரிந்து கொள்வீர்கள். </span>
<span>16:56 நாம் இவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து ஒரு பங்கை எவற்றின் உண்மையான நிலையை இவர்கள் அறிந்திருக்கவில்லையோ அவற்றுக்கு ஒதுக்குகிறார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இல்லாத ஒன்றை எவ்வாறு நீங்கள் புனைந்தீர்கள் என்று உங்களிடம் நிச்சயம் விசாரணை செய்யப்படும். </span>
<span>16:57 இவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண்மக்கள் உண்டென ஏற்றிச் சொல்கின்றார்கள். அவனோ, தூய்மையானவனாக இருக்கின்றான் ஆனால், அவர்களுக்கோ அவர்கள் விரும்புகின்றவை! </span>
<span>16:58 இவர்களில் ஒருவருக்கு பெண் குழந்தை (பிறந்திருப்பது) பற்றி நற்செய்தி சொல்லப்பட்டால், அவரது முகத்தில் கருமை கவ்விக் கொள்கின்றது! துக்கத்தால் அவர் தொண்டை அடைத்துக் கொள்கிறது. </span>
<span>16:59 இந்தக் ‘கேவலமான’ செய்தி கிடைத்துவிட்டதே என்பதற்காக இனி யார் முகத்திலும் விழிக்கக்கூடாது என்று மக்களைவிட்டு ஒதுங்கிச் செல்கின்றார். அவமானப்பட்டுக் கொண்டு அப்பெண் குழந்தையை வைத்திருப்பதா அல்லது அதனை மண்ணில் புதைத்து விடுவதா என்று சிந்திக்கின்றார் பாருங்கள்! இறைவனைப் பற்றி இவர்கள் எடுத்த முடிவு எத்துணைக் கெட்டது!</span>
<span>16:60 தீய தன்மைகளால் வர்ணிக்கப்பட வேண்டியவர்கள் மறுமையின்மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் தாம்! ஆனால் அல்லாஹ்வுக்கோ அனைத்தையும்விட உயர்ந்த தன்மைகள் இருக்கின்றன. அவனோ யாவரையும் மிகைத்தவனாயும், விவேகத்தில் முழுமை பெற்றவனாயும் இருக்கின்றான். </span>
<span>16:61 மனிதர்கள் இழைக்கும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடிப்பதாயிருந்தால், பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைத்திருக்க மாட்டான்! ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களுக்கு அவன் அவகாசம் அளிக்கின்றான். பிறகு அந்த நேரம் வந்துவிடுமாயின் ஒரு வினாடிகூட அவர்களால் பிந்தவும் முடியாது; முந்தவும் முடியாது. </span>
<span>16:62 (இன்று) அவர்கள் தங்களுக்கே விருப்பம் இல்லாதவற்றை அல்லாஹ்வின் மீது ஏற்றிச் சொல்கிறார்கள். அவர்களுக்கு நன்மையே உண்டு என அவர்களின் நாவு பொய்யுரைக்கின்றது. திண்ணமாக, அவர்களுக்கு நரக நெருப்புதான் உண்டு என்பதிலும், எல்லோருக்கும் முன்பாக அவர்கள் அதில் கொண்டு சேர்க்கப்படுவார்கள் என்பதிலும் சந்தேகமே இல்லை. </span>
<span>16:63 அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (நபியே!) உமக்கு முன்பும் பல்வேறு சமூகங்களில் நாம் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம். ஆனால் (அப்போதும் என்ன நடந்ததெனில்) ஷைத்தான் அவர்களின் தீயசெயல்களை அவர்களுக்கு அழகுபடுத்திக் காட்டினான். (ஆகையால் தூதர்களின் நல்லுரைகளை அவர்கள் ஏற்றிடவில்லை.) அதே ஷைத்தான் இன்று இவர்களுக்கும் ஆதரவாளனாய் ஆகியிருக்கின்றான். எனவே, இவர்கள் துன்புறுத்தும் தண்டனைக்கு உரியவர்களாகிக் கொண்டிருக்கின்றார்கள். </span>
<span>16:64 இவர்கள் எவற்றில் கருத்து வேற்றுமை கொண்டிருக்கின்றார்களோ அவற்றின் உண்மை நிலையை இவர்களுக்கு நீர் தெளிவாக்கிட வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வேதத்தை உம்மீது நாம் இறக்கியருளியிருக்கிறோம். மேலும், இவ்வேதம் தன்னை ஏற்றுக்கொள்கின்ற மக்களுக்கு வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்கின்றது. </span>
<span>16:65 மேலும் (ஒவ்வொரு மழைக்காலத்திலும் நீங்கள் பார்க்கின்றீர்கள்:) அல்லாஹ் வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்தான்; உடனே அதனைக் கொண்டு இறந்து போன பூமிக்கு உயிரூட்டினான். திண்ணமாக, இதில் ஒரு சான்று இருக்கிறது செவியேற்கும் மக்களுக்கு!</span>
<span>16:66 மேலும், கால்நடைகளிலும் நிச்சயம் உங்களுக்கு ஒரு படிப்பினை உண்டு. சாணம், இரத்தம் ஆகியவற்றிற்கிடையே, அவற்றின் வயிற்றிலிருந்து தூய்மையான பாலை உங்களுக்கு நாம் புகட்டுகின்றோம்; அருந்துவோருக்கு அது இன்பமாய் இருக்கின்றது. </span>
<span>16:67 (இதே போன்று) பேரீச்சை மற்றும் திராட்சைப் பழங்களிலிருந்தும் உங்களுக்குப் புகட்டுகின்றோம்; அதிலிருந்து நீங்கள் போதைப் பொருளையும் தயாரிக்கின்றீர்கள்; இன்னும் தூய உண்பொருளையும்! திண்ணமாக அறிவைப் பயன்படுத்தும் மக்களுக்கு இதில் ஒரு சான்று இருக்கிறது. </span>
<span>16:68 மேலும், (பாருங்கள்!) உம் இறைவன் தேனீக்கு இவ்வாறு வஹி அறிவித்தான்: “மலைகளிலும் மரங்களிலும் பந்தல்(களில் படரும் கொடி)களிலும் நீ கூடுகளைக் கட்டிக்கொள்!</span>
<span>16:69 மேலும், பலதரப்பட்ட பழங்களிலிருந்து சாற்றை உறிஞ்சிக் கொள்! உன் இறைவன் சீராக அமைத்துத்தந்த வழியில் சென்று கொண்டிரு!” அந்தத் தேனீக்களின் உள்ளே இருந்து பலவிதமான நிறமுடைய ஒரு பானம் வெளிப்படுகின்றது. அதில் மக்களுக்கு நிவாரணம் இருக்கிறது. திண்ணமாக, சிந்திக்கக்கூடிய மக்களுக்கு இதில் ஒரு சான்று இருக்கிறது. </span>
<span>16:70 மேலும் (பாருங்கள்!) அல்லாஹ் உங்களைப் படைத்தான்; பின்னர் உங்களை மரணமடையச் செய்கின்றான். மேலும், உங்களில் சிலர் தள்ளாத முதுமை வயதுவரை கொண்டு செல்லப்படுகின்றார்கள் எல்லாவற்றையும் அறிந்த பிறகு எதையும் அறியாமல் போவதற்காக! உண்மை யாதெனில், அல்லாஹ்தான் அறிவிலும் பேராற்றலிலும் முழுமையானவனாய் இருக்கின்றான். </span>
<span>16:71 மேலும், (பாருங்கள்!) அல்லாஹ் உங்களில் சிலருக்கு வேறு சிலரைவிட, வாழ்க்கை வசதியில் சிறப்பு அளித்துள்ளான். இத்தகைய சிறப்பு வழங்கப்பட்டவர்கள் தாமும் தம்முடைய அடிமைகளும் வாழ்க்கை வசதியில் சமபங்குடையவர்களாகும் வகையில் அதனை அவர்களுக்குப் பங்கிட்டு அளிப்பதில்லையே! எனவே, இவர்கள் அல்லாஹ்வின் பேருதவியை ஏற்க மறுக்கின்றனரா?</span>
<span>16:72 மேலும், அல்லாஹ் உங்களினத்திலிருந்தே உங்களுக்குத் துணைவியரை அமைத்தான்; அத்துணைவியர் மூலம் உங்களுக்கு மகன்களையும் பேரன்களையும் வழங்கினான். மேலும், நல்ல நல்ல பொருள்களை உங்களுக்கு உணவாகக் கொடுத்தான். பிறகு என்ன, இவர்கள் (இவை அனைத்தையும் பார்த்து, புரிந்தும்கூட) அசத்தியத்தை மேற்கொள்கின்றார்களா? அல்லாஹ்வின் பேருதவிகளை நிராகரிக்கின்றார்களா?</span>
<span>16:73 மேலும், அல்லாஹ்வை விட்டு விட்டு, வானங்களிலிருந்தோ, பூமியிலிருந்தோ இவர்களுக்குச் சிறிதள வேனும் உணவு வழங்கும் சக்தி இல்லாத ஏன், வழங்க முயன்றாலும் முடியாதவற்றையா இவர்கள் வணங்குகின்றார்கள்? </span>
<span>16:74 ஆக, அல்லாஹ்வுக்கு உவமைகளைப் பொருத்தாதீர்கள்! திண்ணமாக, அல்லாஹ் நன்கறிகின்றான். ஆனால் நீங்கள் அறியமாட்டீர்கள். </span>
<span>16:75 அல்லாஹ் இவ்வாறு ஓர் உதாரணம் கூறுகின்றான்: பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை இருக்கிறார்; சுயமாக எதையும் செய்ய அதிகாரம் இல்லாதவர். மற்றொருவர் இருக்கின்றார்; அவருக்கு நாம் நம்மிடத்திலிருந்து நல்ல வாழ்க்கை வசதிகளை வழங்கியிருக்கின்றோம். அவர், அதிலிருந்து மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார். (கூறுங்கள்!) இவ்விருவரும் சமமாவார்களா? அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஆனால் (இந்நேரிய விஷயத்தை) அவர்களில் பெரும்பாலோர் அறிந்து கொள்வதில்லை. </span>
<span>16:76 அல்லாஹ் இன்னும் ஓர் உதாரணத்தைக் கூறுகின்றான். இரண்டு மனிதர்கள் இருக்கின்றனர். ஒருவர் ஊமை. எந்த வேலையும் செய்ய இயலாத அவர் தன் எஜமானருக்கு ஒரு சுமையாகவும் இருக்கின்றார். எஜமானர் அவரை எங்கு அனுப்பினாலும் எந்தப் பயனுள்ள வேலையையும் செய்யமாட்டார். மற்றொருவர் நேரான வழியில் இருக்கின்றார்; நீதியுடன் வாழுமாறு ஏவுகின்றார். (கூறுங்கள்) இவ்விருவரும் சமமாவார்களா?</span>
<span>16:77 மேலும், வானங்கள் மற்றும் பூமியின் மறைவான உண்மைகளைப் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே இருக்கிறது. மேலும், இறுதிநாள் நிகழ்வதற்கு அதிக நேரம் தேவையில்லை. கண் சிமிட்டும் நேரம், ஏன் அதைவிடவும் குறைந்த நேரம் போதுமானதாகும். உண்மை யாதெனில், அல்லாஹ் அனைத்தையும் செய்வதற்குப் பேராற்றல் கொண்டவனாக இருக்கின்றான். </span>
<span>16:78 அல்லாஹ் உங்களை உங்கள் அன்னையரின் வயிற்றிலிருந்து வெளிக்கொணர்ந்தான் நீங்கள் ஏதும் அறியாத நிலையில்! மேலும், செவிப்புலன்களையும், பார்வைப் புலன்களையும், சிந்திக்கும் இதயங்களையும் உங்களுக்கு வழங்கினான் நீங்கள் நன்றி செலுத்தக் கூடியவர்களாய்த் திகழ வேண்டும் என்பதற்காக!</span>
<span>16:79 இவர்கள் பறவைகளைக் கவனித்ததில்லையா? அவை விண் வெளியில் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன? அல்லாஹ்வைத் தவிர அவற்றைத் தாங்கிக் கொண்டிருப்பவன் வேறு யார்? நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு திண்ணமாக, இதில் பல சான்றுகள் உள்ளன. </span>
<span>16:80 மேலும், அல்லாஹ் உங்களுக்காக உங்கள் வீடுகளை அமைதியளிக்கும் இடங்களாக ஆக்கினான். மேலும், கால் நடைகளின் தோல்களின் மூலம் உங்களுக்கு எத்தகைய வீடுகளை உருவாக்கினானென்றால், நீங்கள் பயணம் செல்லும்போதும் அல்லது தங்கிவிடும் போதும் அவற்றை இலேசாகக் காண்கின்றீர்கள். மேலும், கால்நடைகளின் குறுமென் மயிர், முடி, ரோமம் ஆகியவற்றின் மூலம் (அணிவதற்கும் வீட்டு உபயோகத்திற்கும் உரிய) ஏராளமான பொருள்களை அவன் படைத்தான். வாழ்வின் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவை உங்களுக்குப் பயன்படுகின்றன. </span>
<span>16:81 மேலும், அல்லாஹ்தான் படைத்துள்ள பொருள்களின் மூலம் உங்களுக்காக நிழல்களை அமைத்துத் தந்தான். மலைகளில் உங்களுக்காகப் புகலிடங்களை அமைத்தான். வெப்பத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கும் ஆடைகளையும் (நீங்கள் போர் புரியும்போது) உங்களைப் பாதுகாக்கும் கவச ஆடைகளையும் உங்களுக்கு வழங்கினான். இவ்வாறு தன் அருட்கொடைகளை உங்கள் மீது நிறைவு செய்கின்றான். இதனால் நீங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவர்களாய் திகழக்கூடும். </span>
<span>16:82 இனி இவர்கள் புறக்கணித்தால் (நபியே! சத்தியத்தை) இவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர உம்மீது வேறெந்தப் பொறுப்பும் இல்லை. </span>
<span>16:83 இவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் புரிந்து கொள்கின்றார்கள். பிறகு அவற்றை மறுக்கின்றார்கள். மேலும், இவர்களில் பெரும்பாலோர் சத்தியத்தை ஏற்கத் தயாராய் இல்லை. </span>
<span>16:84 (மறுமைநாளில் என்ன நடக்கும் என்பது பற்றி அவர்கள் சிந்தித்திருக்கின்றார்களா?) அந்நாளில் நாம் ஒவ்வொரு சமூகத்தாரிலிருந்தும் ஒரு சாட்சியாளரை எழுப்பிக் கொண்டு வருவோம். பிறகு (தம் வாதங்களைச் சமர்ப்பிக்க) நிராகரிப்பாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவும் மாட்டாது. (இறைவனிடம் மன்னிப்புக் கோரி) அவனிடம் மீளும்படி அவர்களிடம் கோரப்படவும் மாட்டாது. </span>
<span>16:85 அநீதி இழைத்தவர்கள் வேதனையைக் கண் கூடாகக் கண்டுகொண்ட பிறகு அவர்களை விட்டு வேதனை கொஞ்சமும் குறைக்கப்பட மாட்டாது. (ஒரு விநாடிகூட) அவர்கள் தாமதப்படுத்தப்படவும் மாட்டார்கள். </span>
<span>16:86 மேலும் (உலகில்) இறைவனுக்கு இணைவைத்துக் கொண்டிருந்தவர்கள், தங்களுடைய போலிக்கடவுள்களைக் காணும்போது “எங்கள் இறைவனே! நாங்கள் உன்னைவிட்டு எவர்களை அழைத்து இறைஞ்சிக் கொண்டிருந்தோமோ அந்தக் கடவுள்கள் இவர்கள்தாம்!” என்று கூறுவார்கள். அதற்கு அக்கடவுள்கள், “நீங்கள் பொய்யுரைக்கின்றீர்கள்!” என்று அவர்களிடம் தெளிவாகப் பதில் கூறும்! </span>
<span>16:87 அவ்வேளை இவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் திருமுன் சரணடைந்து விடுவார்கள். (உலகில்) இவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்தவை யாவும் இவர்களை விட்டு அடியோடு காணாமல் போய் விடும். </span>
<span>16:88 எவர்கள் தாங்களும் இறைநிராகரிப்புப் போக்கை மேற்கொண்டு, மற்றவர்களையும் அல்லாஹ்வின் வழியில் செல்ல விடாமல் தடுக்கின்றார்களோ அவர்களுக்கு நாம் வேதனைக்கு மேல் வேதனையை அளிப் போம் உலகில் அவர்கள் செய்து கொண்டிருந்த குழப்பங்களுக்குப் பகரமாக!</span>
<span>16:89 (நபியே! மறுமை நாளைக் குறித்து இவர்களுக்கு எச்சரிக்கை செய்து விடும்:) அந்நாளில் ஒவ்வொரு சமூகத்திலேயும் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடிய ஒருவரை அவர்களிலிருந்தே நாம் எழுப்புவோம். மேலும், இந்த மக்களைக் குறித்து சாட்சி வழங்க உம்மை நாம் கொண்டு வருவோம். (இவ்வாறு சாட்சி அளிப்பதற்கான முன்னேற்பாடாகத்தான்) உமக்கு இவ்வேதத்தை நாம் இறக்கியருளியுள்ளோம். அது, யாவற்றையும் மிகத் தெளிவாக விவரிக்கக்கூடியதாய் இருக்கிறது. முற்றிலும் (இறைவனுக்கு) கீழ்ப்படிந்து வாழும் மக்களுக்கு இது நேர்வழி காட்டக்கூடியதாகவும், அருளாகவும், ஒரு நற்செய்தியாகவும் இருக்கிறது. </span>
<span>16:90 திண்ணமாக, அல்லாஹ் நீதி செலுத்தும்படியும் நன்மை செய்யும்படியும் உறவினர்களுக்கு ஈந்துதவும்படியும் கட்டளை யிடுகின்றான். மேலும், மானக்கேடான, வெறுக்கத்தக்க, மற்றும் அக்கிரமமான செயல்களை விலக்குகின்றான். நீங்கள் படிப்பினை பெறும் பொருட்டு உங்களுக்கு அறிவுரை கூறுகின்றான். </span>
<span>16:91 (அல்லாஹ்விடம்) நீங்கள் ஒப்பந்தம் ஏதும் செய்திருந்தால் அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! உங்களுடைய சத்தியங்களை உறுதிப்படுத்திய பின்னர் முறிக்காதீர்கள்! ஏனெனில் நீங்கள் அல்லாஹ்வை உங்களுக்குச் சாட்சியாக்கியுள்ளீர்கள். நீங்கள் செய்கின்ற அனைத்துச் செயல்களையும் திண்ணமாக, அல்லாஹ் நன்கறிகின்றான். </span>
<span>16:92 (சத்தியத்தை முறிப்பதன் மூலம்) உங்கள் நிலை, தானே சிரமப்பட்டு நூலை நூற்று பிறகு அதனைத் துண்டு துண்டாக்கி விட்டாளே, அத்தகைய பெண்ணின் நிலை போன்று ஆகிவிடக்கூடாது. (உங்களில்) ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை விட அதிக ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காக, உங்கள் விவகாரங்களில் உங்கள் சத்தியங்களை ஏமாற்றும் ஆயுதமாக ஆக்கிக் கொள்கின்றீர்கள். உண்மையில் அல்லாஹ் இத்தகைய சத்தியங்களின் மூலம் உங்களைச் சோதிக்கின்றான். மேலும், நீங்கள் எவற்றில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ, அவற்றின் எதார்த்த நிலையை மறுமைநாளில் திண்ணமாக, உங்களுக்குத் தெளிவாக்கிவிடுவான். </span>
<span>16:93 (உங்களிடையே கருத்து வேறுபாடுகளே இருக்கக்கூடாது என்று) அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் ஒரே சமூகமாக ஆக்கியிருப்பான். ஆயினும், தான் நாடுவோரை அவன் வழிபிறழச் செய்கின்றான், தான் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகின்றான். மேலும், உங்களுடைய செயல்கள் குறித்து உங்களிடம் திண்ணமாக கேள்வி கணக்கு கேட்கப்படும். </span>
<span>16:94 (முஸ்லிம்களே!) உங்களுடைய சத்தியங்களை உங்களில் ஒருவர் மற்றவரை ஏமாற்றுவதற்குரிய கருவியாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்! அப்படி நீங்கள் செய்தால் உறுதியுடனிருக்கும் பாதம்கூட பிறகு சறுகிப்போய்விடும்; மேலும், அல்லாஹ்வின் பாதையிலிருந்து பிற மக்களை நீங்கள் தடுத்தீர்கள் என்பதால் தீயவிளைவைச் சுவைப்பீர்கள். கடுமையான தண்டனையும் உங்களுக்குக் கொடுக்கப்படும். </span>
<span>16:95 நீங்கள் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை அற்ப ஆதாயங்களுக்காக விற்றுவிடாதீர்கள்! நீங்கள் அறிவுடையோராய் இருப்பின் அல்லாஹ்விடம் இருப்பவைதாம் உங்களுக்கு மிகச்சிறந்தவையாகும். </span>
<span>16:96 உங்களிடம் இருப்பவையெல்லாம் செலவழிந்து போகக்கூடியவையே! அல்லாஹ்விடத்தில் உள்ளவைதாம் என்றைக்கும் நிலைத்திருப்பவை! மேலும், எவர்கள் பொறுமையைக் கைக்கொள்கின்றார்களோ, அவர்களுக்கு அவர்கள் செய்கின்ற உன்னதமான செயல்களுக்கு ஏற்ப நாம் கூலி வழங்குவோம். </span>
<span>16:97 ஆணாயினும் பெண்ணாயினும் எவர் இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் நிலையில் நற்செயல் புரிகின்றாரோ அவரை (இவ்வுலகில்) தூய வாழ்வு வாழச் செய்வோம். (மறுமையிலும்) அத்தகையோர்க்கு அவர்களின் உன்னதமான செயல்களுக்கு ஏற்ப நாம் கூலி வழங்குவோம். </span>
<span>16:98 மேலும், நீங்கள் குர்ஆனை ஓதத் தொடங்கும்போது, சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்! </span>
<span>16:99 எவர்கள் நம்பிக்கை கொண்டு தம்முடைய இறைவனையே முழுமையாகச் சார்ந்திருக்கின்றார்களோ அவர்கள் மீது ஷைத்தானுக்கு எந்த அதிகாரமும் இல்லை. </span>
<span>16:100 எவர்கள் அவனைத் தங்களுடைய ஆதரவாளனாக ஏற்றுக் கொண்டு மேலும் (அவனுடைய தூண்டுதலினால்) அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றார்களோ, அவர்களிடமே அவனுடைய அதிகாரம் செல்லுபடியாகும். </span>
<span>16:101 ஒரு வசனத்திற்குப் பகரமாக வேறொரு வசனத்தை நாம் இறக்கியருளினால் எதை இறக்கியருள வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவனாவான் அப்போது இந்த மக்கள், “(இந்தக் குர்ஆனை) நீர்தான் புனைந்துரைக்கின்றீர்!” என்று கூறுகின்றார்கள். உண்மை யாதெனில், அவர்களில் பெரும் பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றார்கள். </span>
<span>16:102 இவர்களிடம் கூறுவீராக: “என் இறைவனிடமிருந்து ‘ரூஹுல் குத்ஸ்’* முற்றிலும் சரியாக இதனைச் சிறுகச் சிறுக இறக்கி வைத்தார்; இறைநம்பிக்கை கொண்டவர்களின் நம்பிக்கையை இது உறுதிப் படுத்த வேண்டும்; மேலும், இறைக்கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்களுக்கு, அவர்களின் வாழ்க்கை விவகாரங்களில் நேர்வழி காட்டவும் வேண்டும்; மேலும், வெற்றி, நற்பேறு பற்றி நற்செய்தி அறிவிக்கவும் வேண்டும் என்பதற்காக!”</span>
<span>16:103 மேலும், “ஒரு மனிதரே இதனை அவருக்கு கற்றுக் கொடுக்கின்றார்” என்று இவர்கள் (உம்மைப் பற்றிக்) கூறு வதைத் திண்ணமாக நாம் அறிவோம். ஆனால் உண்மையில் இவர்கள் சுட்டிக் காட்டுகின்ற மனிதருடைய மொழி வேற்று மொழி; இதுவோ தெளிவான அரபி மொழியாகும். </span>
<span>16:104 உண்மை யாதெனில், எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை ஏற்றுக்கொள்வதில்லையோ அவர்களுக்கு நேரிய வழியை அடையும் பேற்றினை அல்லாஹ் ஒருபோதும் வழங்குவதில்லை. மேலும், அத்தகையோருக்குத் துன்புறுத்தும் வேதனைதான் இருக்கிறது. </span>
<span>16:105 (நபியாக இருப்பவர் பொய்யுரைகளைப் புனைந்துரைக்க மாட்டார். மாறாக) அல்லாஹ்வின் வசனங்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள்தாம் பொய்யைப் புனைந்துரைப்பார்கள். உண்மை யாதெனில், அவர்களே பொய்யர்களாவர்!</span>
<span>16:106 எவரேனும் இறைநம்பிக்கை கொண்ட பிறகு கட்டாயத்திற்குள்ளாகி அவருடைய உள்ளம் இறைவனை ஏற்றுக் கொள்வதில் நிம்மதியுடன் இருக்கும் நிலையில் நிராகரித்தாரானால் அவர் மீது குற்றமில்லை! ஆனால் எவர் மனநிறைவுடன் நிராகரிப்பை ஏற்றுக்கொள்கின்றாரோ, அவர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும். இத்தகையவர்களுக்கு மாபெரும் வேதனையும் இருக்கிறது. </span>
<span>16:107 இதற்குக் காரணம், இவர்கள் மறுமையைவிட உலக வாழ்க்கையை அதிகம் நேசித்தார்கள் என்பதுதான். மேலும் (அல்லாஹ்வின் நியதி என்னவெனில்) நன்றி கொல்லும் மக்களுக்குத் திண்ணமாக அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை. </span>
<span>16:108 இவர்கள் எத்தகையவர்கள் எனில், இவர்களின் இதயங்கள், செவிகள் மற்றும் கண்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். மேலும், இவர்கள் மெய்மறதியில் ஆழ்ந்திருக்கின்றார்கள். </span>
<span>16:109 திண்ணமாக, மறுமையில் இவர்களே இழப்புக்குரியவர்களாவர். </span>
<span>16:110 ஆனால், எவர்கள் (இறைநம்பிக்கை கொண்ட காரணத்தால்) துன்புறுத்தப்பட்டபோது வீடு வாசல்களைத் துறந்து, ஹிஜ்ரத் செய்தார்களோ மேலும் இறைவழியில் துன்பங்களைச் சகித்தார்களோ, மேலும், பொறுமையைக் கடைப்பிடித்தார்களோ அவர்களைத் திண்ணமாக, உம் இறைவன் பெரிதும் மன்னிப்பவனாகவும் பெருங்கருணை புரிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>16:111 (இவை அனைத்திற்கும் அந்த மறுமைநாளில் தீர்வு ஏற்படும்) அந்நாளில் ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பாதுகாப்பதற்காக வாதாடிக் கொண்டு வருவான். மேலும், ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த செயல்களுக்கான கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். மேலும், அவர்களில் யாருக்கும் இம்மியளவும் அநீதி இழைக்கப்பட மாட்டாது. </span>
<span>16:112 மேலும், அல்லாஹ் ஓர் ஊரை எடுத்துக்காட்டாகக் கூறுகின்றான். அவ்வூர் மக்கள் அமைதியுடனும் நிம்மதியாகவும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு எல்லாத் திசைகளிலிருந்தும் வாழ்க்கைச் சாதனங்கள் தாராளமாய்க் கிடைத்துக் கொண்டிருந்தன. இந்நிலையில், அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி கொல்லலாயினர். அப்போது அல்லாஹ் அவர்கள் செய்து கொண்டிருந்த தீவினைகளின் விளைவை சுவைக்கச் செய்தான் பசி, அச்சம் எனும் துன்பங்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டன. </span>
<span>16:113 அவர்களிடம் அவர்களுடைய சமுதாயத்திலிருந்து ஒரு தூதர் வந்தார். ஆனால், அவரை அவர்கள் பொய்யர் என்று கூறினார்கள். இறுதியில் அவர்கள் அக்கிரமம் செய்பவர்களாய் ஆகிவிட்டபோது வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது. </span>
<span>16:114 எனவே, (மக்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையான, அனுமதிக்கப்பட்ட உணவுகளைப் புசியுங்கள்! மேலும், அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துங்கள்; நீங்கள் உண்மையில் அல்லாஹ்வுக்கே அடிபணிந்து வாழ்பவர்களாய் இருந்தால்! </span>
<span>16:115 செத்த பிராணி, இரத்தம், பன்றி இறைச்சி மற்றும் அல்லாஹ்வைத் தவிர, மற்றவற்றின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணி ஆகியவற்றைத்தான் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான். ஆயினும், யாரேனும் இறைச்சட்டத்திற்கு மாறு செய்யும் நோக்கமில்லாமலும், தேவையான அளவை மீறாமலும் இப்பொருள்களில் ஏதேனும் ஒன்றைப் புசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானால் நிச்சயமாக அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>16:116 உங்கள் நாவுகள் இன்ன பொருள் ‘ஹலால்’ (அனுமதிக்கப்பட்டது) இன்ன பொருள் ‘ஹராம்’ (தடுக்கப்பட்டது) என்று பொய்(ச் சட்டங்)களைக் கூறுவது போன்று அல்லாஹ்வின்மீது பொய்களை ஏற்றிச் சொல்லாதீர்கள்! யார் அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்துரைக்கின்றார்களோ அவர்கள் ஒருபோதும் வெற்றி அடைவதில்லை. </span>
<span>16:117 இவ்வுலக வாழ்வின் இன்பமோ சொற்ப நாட்கள்தான்! இறுதியில் அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது. </span>
<span>16:118 இதற்கு முன்பு நாம் உம்மிடம் எடுத்துக்கூறிய சில பொருட்களை குறிப்பாக யூதர்களுக்குத் தடை விதித்திருந்தோம். இது அவர்களுக்கு நாம் இழைத்த அநீதியல்ல. மாறாக, அவர்கள் தமக்குத் தாமே இழைத்துக் கொண்ட அநீதியாகும். </span>
<span>16:119 ஆயினும், எவர்கள் அறியாமையின் காரணமாக தீயசெயல் புரிந்தார்களோ, பிறகு பாவமன்னிப்புக்கோரி தம் செயல்களை சீர்திருத்திக் கொண்டார்களோ, அவ்வாறு அவர்கள் பாவ மன்னிப்புக் கோரி சீர்திருந்திய பிறகு நிச்சயமாக உம் இறைவன் அவர்களை மன்னித்தருளக் கூடியவனாகவும் அவர்களுக்குக் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்; </span>
<span>16:120 உண்மையில் இப்ராஹீம் ஒரு முழுச் சமுதாயமாய்த் திகழ்ந்தார். அல்லாஹ்வுக்கு அடிபணிபவராகவும் ஒருமனப்பட்டவராகவும் விளங்கினார். அவர் ஒருபோதும் இறைவனுக்கு இணைவைப்பவராய் இருந்ததில்லை. </span>
<span>16:121 தவிரவும், அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தக்கூடியவராய் இருந்தார். அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். மேலும், நேரிய வழியினையும் அவருக்குக் காண்பித்தான். </span>
<span>16:122 மேலும், அவருக்கு உலகில் நன்மையை நாம் வழங்கினோம். மறுமையிலும் நிச்சயமாக உத்தமர்களுள் ஒருவராய் அவர் திகழ்வார். </span>
<span>16:123 பிறகு நாம் உமக்கு இவ்வாறு ‘வஹி’* அனுப்பினோம்: நீர் இப்ராஹீமின் மார்க்கத்தை ஒருமனப்பட்டவராய்ப் பின்பற்றுவீராக! அவர் ஒருபோதும் இறைவனுக்கு இணைவைப்பவராய் இருந்ததில்லை. </span>
<span>16:124 எவர்கள் ‘ஸப்த்’ சனிக்கிழமை வரையறை குறித்து கருத்து முரண்பாடு கொண்டிருந்தார்களோ, அவர்கள் மீதே அது விதிக்கப்பட்டிருந்தது. மேலும், அவர்கள் எந்த விஷயங்களிலெல்லாம் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றார்களோ அவை அனைத்தையும் குறித்து இறுதித் தீர்ப்புநாளில் உம் அதிபதி நிச்சயம் தீர்ப்பு வழங்குவான். </span>
<span>16:125 (நபியே!) விவேகத்துடனும், அழகிய அறிவுரைகள் மூலமாகவும் உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக! மேலும், மிகச் சிறந்த முறையில் மக்களிடம் விவாதம் புரிவீராக! தன்னுடைய பாதையிலிருந்து வழிபிறழ்ந்தவர் யார் என்பதையும், நேர்வழியில் இருப்பவர்கள் யார் என்பதையும் உம் அதிபதி நன்கறிவான். </span>
<span>16:126 மேலும், நீங்கள் பழிவாங்கக் கருதினால், உங்கள் மீது எந்த அளவுக்கு அக்கிரமம் புரியப்பட்டதோ அதே அளவுக்குப் பழிவாங்குங்கள்! ஆயினும், நீங்கள் பொறுமையாக இருப்பீர்களாயின் திண்ணமாக இதுவே பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களுக்கு மிகச் சிறந்ததாகும். </span>
<span>16:127 (நபியே!) நீர் பொறுமையுடன் பணியாற்றிக் கொண்டிருப்பீராக! மேலும், உம்முடைய இந்தப் பொறுமை அல்லாஹ்வின் பேருதவியினால்தான் கிடைக்கின்றது. அவர்களின் செயல்கள் குறித்து நீர் வருந்த வேண்டாம். அவர்களின் சூழ்ச்சிகளைக் குறித்து நீர் மனம் நொந்து போகவும் வேண்டாம். </span>
<span>16:128 எவர்கள் இறையச்சம் கொள்கின்றார்களோ மேலும், நன்னடத்தையை மேற்கொள்கின்றார்களோ அத்தகையவர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான். </span>
</div><div>
<span>பனூ இஸ்ராயீல்</span>
<span>17:1 மிகத் தூய்மையானவன்; தன் அடியாரை ஓர் இரவில் அழைத்துச் சென்றவன்! மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து வெகு தொலைவில் உள்ள மஸ்ஜித் வரையில்! அதன் சுற்றுப்புறங்களை அவன் அருள்வளம் மிக்கதாய் ஆக்கினான். எதற்காக அழைத்துச் சென்றானெனில், தன்னுடைய சான்றுகளை அவருக்குக் காண்பிப்பதற்காக! உண்மையில் அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். </span>
<span>17:2 (இதற்கு முன்பு) நாம் மூஸாவுக்கு வேதத்தை வழங்கியிருந்தோம். மேலும், அதனை இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு வழிகாட்டக் கூடியதாக அமைத்தோம்; “நீங்கள் என்னைத் தவிர வேறு யாரையும் உங்களின் பொறுப்பாளனாய் ஆக்கிக்கொள்ளக்கூடாது” எனும் அறிவுறுத்தலுடன்!  </span>
<span>17:3  நீங்கள் நூஹுடன் கப்பலில் நாம் ஏற்றியிருந்த மக்களின் வழித்தோன்றல்கள் ஆவீர்கள். திண்ணமாக, நூஹ் நன்றியுள்ள ஓர் அடியாராகத் திகழ்ந்தார். </span>
<span>17:4 பிறகு, நாம் நமது வேதத்தில் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு ‘திண்ணமாக நீங்கள் பூமியில் இரு தடவை பெரும் குழப்பம் விளைவிப்பீர்கள்’ என்றும் ‘பெரிதும் அக்கிரமம் புரிவீர்கள்’ என்றும் முன்பே அறிவித்திருந்தோம். </span>
<span>17:5 இவ்வாறு குழப்பத்திற்கான முதல் சந்தர்ப்பம் வந்தபோது (இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே!) மிகவும் சக்தி வாய்ந்த நம்முடைய அடிமைகளை உங்களுக்கு எதிராக, நாம் எழச் செய்தோம்; அவர்கள் உங்கள் நாட்டில் ஊடுருவி, எல்லாத் திசைகளிலும் பகுதிகளிலும் பரவினார்கள். இது நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு வாக்குறுதியாகவே இருந்தது. </span>
<span>17:6 இதன் பின்னர், அவர்களை வெற்றி கொள்ளும் வாய்ப்பினை உங்களுக்கு நாம் வழங்கினோம். மேலும் பொருள் செல்வங்கள், மக்கள் செல்வங்கள் மூலம் உங்களுக்கு உதவி செய்தோம். உங்கள் எண்ணிக்கையை முன்பைவிட பெருகச் செய்தோம். </span>
<span>17:7 பாருங்கள், நீங்கள் நன்மை செய்த போது, அது உங்களுக்கு நன்மையாய் இருந்தது. நீங்கள் தீமை செய்தபோது அது உங்களுக்குத் தீமையாய் இருந்தது. பிறகு, இரண்டாவது சந்தர்ப்பம் வந்தபோது வேறு பகைவர்களை உங்கள் மீது நாம் சாட்டினோம். அவர்கள் உங்கள் முகங்களை உருக்குலைத்திட வேண்டும்; மேலும், முந்தைய பகைவர்கள் முதல் தடவை எவ்வாறு (பைத்துல் முகத்தஸ்) பள்ளியில் நுழைந்தார்களோ அவ்வாறு இவர்களும் அங்கே நுழைந்து, தங்கள் கைக்கு எட்டியவற்றையெல்லாம் அழித்துவிட வேண்டும் என்பதற்காக!”</span>
<span>17:8 இனி, உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை பொழியக்கூடும். ஆயினும், நீங்கள் உங்களுடைய முந்தைய நடத்தையை மீண்டும் மேற்கொள்வீர்களாயின் நாமும் மீண்டும் உங்களைத் தண்டிப்போம். மேலும், நன்றி கொல்லும் மக்களுக்கு நரகத்தைச் சிறையாக நாம் ஆக்கி வைத்துள்ளோம். </span>
<span>17:9 உண்மையில் இந்தக் குர்ஆன் முற்றிலும் நேரான வழியினைக் காண்பிக்கிறது. மேலும், இதனை ஏற்றுக் கொண்டு நற்செயல் செய்பவர்களுக்குத் திண்ணமாகப் பெரும் கூலி உண்டு என்று இது நற்செய்தி அறிவிக்கிறது. </span>
<span>17:10 ஆனால், மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயார்ப்படுத்தி வைத்திருக்கிறோம் என்று அறிவிக்கிறது. </span>
<span>17:11 நன்மையை எவ்வாறு கோர வேண்டுமோ அவ்வாறு தீமையை மனிதன் கோருகின்றான். மனிதன் பெரிதும் அவசரக்காரனாக இருக்கின்றான். </span>
<span>17:12 (பாருங்கள்) நாம் இரவையும் பகலையும் இரு சான்றுகளாய் அமைத்துள்ளோம். இரவு எனும் சான்றினை ஒளியற்றதாய் ஆக்கினோம். பகல் எனும் சான்றினை ஒளிரக்கூடியதாய்ச் செய்தோம். இதன் மூலம் நீங்கள் உங்கள் இறைவனின் அருட் கொடையைத் தேட வேண்டும்; மேலும், மாதங்கள், ஆண்டுகளின் எண்ணிக்கையையும் கணக்கையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக. இவ்வாறு ஒவ்வொன்றையும் மிகத் தெளிவாக நாம் வகைப்படுத்தி வைத்துள்ளோம். </span>
<span>17:13 மேலும், ஒவ்வொரு மனிதனின் சகுனத்தையும் நாம் அவனது கழுத்திலேயே மாட்டிவிட்டிருக்கின்றோம். மேலும் மறுமைநாளில், ஒரு வினைச் சுவடியை அவனுக்காக வெளிப் படுத்துவோம். அதனை அவன் ஒரு திறந்த புத்தகத்தைப் போன்று காண்பான். </span>
<span>17:14 “படித்துப்பார், உன்னுடைய இந்த வினைப்பட்டியலை! இன்று உன்னுடைய கணக்கைப் பரிசீலிக்க நீயே போதுமானவன்!”</span>
<span>17:15 ஒருவன் நேரான வழியை மேற்கொள்கிறானெனில், அவனது நேரான வழி அவனுக்கே பயனளிக்கும். ஒருவன் நெறிதவறிப் போகிறானெனில், அவனுடைய நெறிதவறிய போக்கு அவனுக்கே தீங்கு விளைவிக்கும். சுமையைச் சுமக்கும் எவரும் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். மேலும் (சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் உள்ள வேறுபாட்டை மக்களுக்கு உணர்த்திட) ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் யாரையும் தண்டிப்பவர் அல்லர்!</span>
<span>17:16 நாம் ஓர் ஊரை அழித்திட நாடினால் அங்கு சொகுசாக வாழ்வோருக்கு நாம் கட்டளையிடுகின்றோம்; அவர்கள் அங்கு (இக்கட்டளைக்கு) மாறு செய்யத் தலைப்படுகிறார்கள். அப்போது தண்டனைக்குரிய தீர்ப்பு அவ்வூரின் மீது விதிக்கப்பட்டு விடுகின்றது. ஆகவே, அதனை நாம் அழித்தொழித்து விடுகின்றோம். </span>
<span>17:17 (பாருங்கள்!) நூஹுக்குப் பிறகு வாழ்ந்த எத்தனையோ தலைமுறையினர் நம் கட்டளைக்கேற்ப அழிக்கப்பட்டிருக்கிறார்கள். தன் அடிமைகளின் பாவச் செயல்கள் குறித்து உம் இறைவன் நன்கறிந்தே இருக்கின்றான். மேலும் அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டும் இருக்கிறான். </span>
<span>17:18 விரைவில் கிடைக்கக்கூடிய (உலகப்) பலன்களை ஒருவன் விரும்புகிறான் எனில், அவனுக்கு இங்கேயே நாம் அதனைக் கொடுத்துவிடுகிறோம் நாம் நாடுகின்றவற்றை நாம் நாடுபவர்க்கு மட்டும்! பிறகு, நாம் அவனுடைய பங்கில் நரகத்தை எழுதிவிடுகின்றோம். சபிக்கப்பட்டவனாகவும் இறையருளை இழந்தவனாகவும் அவன் அதில் கிடந்து எரிவான். </span>
<span>17:19 மேலும், இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் நிலையில், யார் மறுமையை விரும்புகின்றாரோ அதற்காகப் பாடுபடுகின்ற முறைப்படி பாடுபடுகின்றாரோ அத்தகைய ஒவ்வொருவரின் முயற்சியும் மதிக்கப்படக்கூடியதாகவே இருக்கும். </span>
<span>17:20 (இம்மையை விரும்பும்) அவர்களுக்கும் (மறுமையை விரும்பும்) இவர்களுக்கும் ஆக இரு சாரார்க்கும் (உலகில்) நாம் வாழ்க்கை வசதிகளை அளித்துக்கொண்டிருக்கிறோம். இது உம் இறைவனின் கொடையாகும். மேலும், உம் இறைவனின் கொடையைத் தடுக்கக் கூடியவர் யாருமில்லை. </span>
<span>17:21 ஆயினும், (இம்மையிலேயே) அவர்களில் சிலருக்கு வேறு சிலரைவிட எவ்வாறு நாம் சிறப்பு அளித்துள்ளோம் என்பதைப் பாருங்கள். மேலும், மறுமையிலோ அவர்களுக்கு இன்னும் அதிக அந்தஸ்து உண்டு; பெரும் சிறப்பும் கிடைக்கும். </span>
<span>17:22 அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை ஏற்படுத்தாதீர்! அவ்வாறு செய்தால் நீர் இழிந்தவராயும் நாதியற்றவராயும் ஆகிவிடுவீர்!</span>
<span>17:23 உம் அதிபதி விதித்துள்ளான்: “அவனைத் தவிர வேறெவரையும் நீங்கள் வணங்காதீர்கள். தாய் தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்துகொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட நிலையில் உம்மிடம் இருந்தால், அவர்களை ‘சீ’ என்று கூடக் கூறாதீர்! மேலும், அவர்களைக் கடிந்து பேசாதீர்! மாறாக, அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக! </span>
<span>17:24 மேலும், பணிவுடனும், கருணையுடனும் அவர்களிடம் நடந்து கொள்வீராக! மேலும், நீர் இறைஞ்சிய வண்ணம் இருப்பீராக: “என் இறைவனே! சிறுவயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும் பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறு இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக!” </span>
<span>17:25 உங்கள் இதயங்களில் என்ன இருக்கின்றன என்பதை உங்கள் இறைவன் நன்கறிவான். நீங்கள் உத்தமர்களாய் வாழ்வீர்களாயின் தம் தவறை உணர்ந்து, அடிபணிந்து வாழ்வதன் பக்கம் திரும்புவோரை திண்ணமாக, அவன் மன்னித்தருளக்கூடியவனாக இருக்கின்றான். </span>
<span>17:26 உறவினர்களுக்கும் வறியவர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் அவரவர்க்குரிய உரிமையை வழங்கிவிடுங்கள். ஆனால், வீண் செலவு செய்யாதீர்! </span>
<span>17:27 திண்ணமாக, வீண் செலவு செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாவர். ஷைத்தானோ தன் இறைவனுக்கு மிகவும் நன்றி கொன்றவனாய் இருக்கின்றான். </span>
<span>17:28 உம் இறைவனின் அருளை நீர் விரும்பி எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை (உறவினர்கள், வறியவர்கள் மற்றும் வழிப்போக்கர்களில் தேவையுடையோரை) நீர் புறக்கணிக்க நேரிட்டால், அவர்களுக்கு இதமாகப் பதில் சொல்வீராக! </span>
<span>17:29 உமது கையை கழுத்தோடு சேர்த்துக் கட்டிவிடாதீர்; முற்றிலும் அதனை விரித்து விடாதீர். அப்படிச் செய்தால் பழிப்புக்குரியவராகவும் இயலாதவராகவும் நீர் ஆகிவிடுவீர். </span>
<span>17:30 திண்ணமாக உம் இறைவன், தான் நாடுவோர்க்குத் தாராளமாக வாழ்வாதாரம் வழங்குகிறான். திண்ணமாக, அவன் தன்னுடைய அடிமைகளை நன்கறிபவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான். </span>
<span>17:31 வறுமைக்கு அஞ்சி உங்கள் பிள்ளைகளைக் கொலை செய்யாதீர்கள்! நாம்தாம் அவர்களுக்கும் உணவளிக்கிறோம்; உங்களுக்கும் உணவளிக்கிறோம். உண்மையில், அவர்களைக் கொலை செய்வது பெரும் பாவமாகும். </span>
<span>17:32 மேலும், விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள்! திண்ணமாக, அது மானங்கெட்ட செயலாகவும், மிகத் தீய வழியாகவும் இருக்கிறது. </span>
<span>17:33 மேலும், இறைவன் தடுத்துள்ள எந்த ஓர் உயிரையும் கொலை செய்யாதீர்கள்; நியாயத்தின் அடிப்படையிலன்றி! மேலும், யாரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டால், அதற்குப் பழிவாங்கக் கோரும் உரிமையை அவருடைய பொறுப்பாளருக்கு நாம் அளித்திருக்கின்றோம். ஆனால் (பழிக்குப் பழியாகச் செய்யும்) கொலையில், அவர் வரம்பு மீற வேண்டாம். நிச்சயமாக அவர் உதவி செய்யப்படுவார். </span>
<span>17:34 நேர்மையான முறையிலன்றி அநாதைகளின் சொத்தை நெருங்காதீர்கள்; அவர்கள் வாலிபத்தை அடையும்வரை! மேலும், ஒப்பந்தத்தை முறையாகப் பேணி வாழுங்கள். ஏனெனில், ஒப்பந்தம் குறித்து நீங்கள் விசாரணை செய்யப்பட்டே தீருவீர்கள்! </span>
<span>17:35 மேலும் நீங்கள் அளந்து கொடுக்கும்போது நிறைவாக அளந்து கொடுங்கள். எடைபோடும்போது சரியான தராசு கொண்டு எடை போடுங்கள். இதுவே முறையானதும் (இறுதி முடிவைப் பொறுத்து) மிக நல்லதுமாகும். </span>
<span>17:36 உங்களிடம் எதைப்பற்றிய அறிவு இல்லையோ அதைப் பின்தொடராதீர்கள். திண்ணமாக காது, கண், இதயம் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் விசாரிக்கப்பட்டே தீரும். </span>
<span>17:37 மேலும், பூமியில் செருக்காக நடக்காதீர்கள். ஏனெனில், உம்மால் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையளவுக்கு உயர்ந்துவிடவும் முடியாது!</span>
<span>17:38 இவை ஒவ்வொன்றிலுமுள்ள தீமை உம் இறைவனிடம் வெறுப்புக்குரியதாகும். </span>
<span>17:39 உம் இறைவன் உமக்கு வஹி மூலம் அறிவித்திருக்கின்ற அறிவார்ந்த விஷயங்களாகும் இவை. மேலும் (பாரீர்) அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை ஏற்படுத்தாதீர்! அவ்வாறு செய்தால் பழிக்கப்பட்டவராயும் நன்மைகள் அனைத்தையும் இழந்தவராயும் நரகில் போடப்பட்டு விடுவீர். </span>
<span>17:40 எத்துணை ஆச்சரியமான விஷயம்! உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண் மக்களை வழங்கி, தனக்கு வானவர்களைப் பெண் மக்களாய் எடுத்துக்கொண்டானா? திண்ணமாக உங்கள் நாவிலிருந்து நீங்கள் வெளிப்படுத்துவது பெரும் பொய்தான்!</span>
<span>17:41 மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் குர்ஆனில் (உண்மைகளை) விதவிதமாக நாம் விளக்கினோம். ஆனால், அவர்கள் சத்தியத்தை விட்டு மேலும் மேலும் விலகி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். </span>
<span>17:42 (நபியே! இவர்களிடம்) நீர் கூறுவீராக: “இவர்கள் சொல்வது போல் அல்லாஹ்வுடன் வேறு கடவுளரும் இருந்திருந்தால், நிச்சயமாக அவர்கள் அர்ஷûடைய அதிபதியின் இடத்தை அடைவதற்குத் திண்ணமாக வழிவகையைத் தேடியிருப்பார்கள். </span>
<span>17:43 அவன் மிகத் தூய்மையானவனும், மிக உயர்ந்தவனும், மேலானவனும் ஆவான்; இவர்கள் கூறிக்கொண்டிருப்பதை விட்டு! </span>
<span>17:44 ஏழு வானங்களும் பூமியும் மற்றும் இவற்றிலுள்ள அனைத்துமே அவனுடைய தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றன. அவனைப் புகழ்வதுடன் அவனைத் துதி செய்து கொண்டிராத எந்த ஒரு பொருளும் இல்லை. ஆயினும், அவை துதி செய்வதை நீங்கள் புரிந்து கொள்வதில்லை. உண்மையில், அவன் சகிப்புத் தன்மையுடையவனாகவும், மன்னித்தருள்பவனாகவும் இருக்கின்றான். </span>
<span>17:45 நீர் குர்ஆனை ஓதும்போது உமக்கும் மறுமையை நம்பாதவர்களுக்கும் இடையில் நாம் ஒரு திரையைப் போட்டு விடுகிறோம். </span>
<span>17:46 எதையும் அவர்கள் புரிந்து கொள்ளாதவாறு அவர்களின் இதயங்கள் மீது உறைபோட்டு விடுகிறோம். மேலும், அவர்களின் காதுகளை மந்தமாக்கி விடுகிறோம். நீர் குர்ஆனில் உம்முடைய ஏகனாகிய அதிபதியைப் பற்றி எடுத்துரைக்கும்போது அவர்கள் வெறுப்போடு முகம் திருப்பிச் சென்றுவிடுகிறார்கள். </span>
<span>17:47 நீர் கூறுகின்றவற்றை அவர்கள் செவிதாழ்த்திக் கேட்கும்போது உண்மையில் எதனைக் கேட்கிறார்கள் என்பதையும், அவர்கள் தமக்கிடையே கிசுகிசுக்கும்போது என்ன பேசுகிறார்கள் என்பதையும் நாம் நன்கறிவோம். இந்த அக்கிரமக்காரர்கள் தமக்கிடையே கூறுகிறார்கள்: “இவரோ சூனியம் செய்யப்பட்டுள்ள மனிதர்; இவரைப் போய் நீங்கள் பின்பற்றிச் சென்று கொண்டிருக்கிறீர்களே!” </span>
<span>17:48 பாரும்! எப்படிப்பட்ட விஷயங்களையெல்லாம் இவர்கள் உம்மீது அள்ளி வீசுகிறார்கள். இவர்கள் வழிபிறழ்ந்து விட்டார்கள். இனி இவர்களுக்கு நேர்வழி கிடைக்கப்போவதில்லை. </span>
<span>17:49 அவர்கள் கேட்கிறார்கள்: “நாங்கள் வெறும் எலும்புகளாகி மண்ணோடு மண்ணாகிய பிறகு மீண்டும் புதிய படைப்பாய் எழுப்பப்படுவோமா?” </span>
<span>17:50 (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகிவிடுங்கள். </span>
<span>17:51 அல்லது உயிர் பெறவே முடியாது என்று நீங்கள் கருதுகின்ற இதைவிடவும் கடினமான வேறொரு பொருளாய் ஆகிவிடுங்கள்!” (எப்படியானாலும் நீங்கள் எழுப்பப்படுவீர்கள்!) “மீண்டும் எங்களை வாழ்க்கையின் பக்கம் திரும்பக்கொண்டு வருபவர் யார்?” என்று அவர்கள் அவசியம் கேட்பார்கள். நீர் கூறும்: “எவன், உங்களை முதல் தடவை படைத்தானோ, அவன்தான்!” தங்களின் தலையை ஆட்டி ஆட்டி அவர்கள் உம்மிடம் கேட்பார்கள், “சரி, அது எப்போது நிகழும்?” என்று! நீர் பதில் கூறும்: “வியப்பென்ன? மிக விரைவிலேயே அது நிகழக்கூடும்.” </span>
<span>17:52 எந்நாளில் அவன் உங்களை அழைப்பானோ அந்நாளில் அவனது அழைப்பிற்குப் பதில் அளிக்கும் வகையில், நீங்கள் அவனது புகழ்பாடிக் கொண்டு வருவீர்கள். ‘நாம் சிறிதுகாலமே இந்நிலையில் கிடந்திருந்தோம்’ என்பதுதான் அப்பொழுது உங்களுடைய நினைப்பாக இருக்கும்!</span>
<span>17:53 மேலும், (நபியே! நம்பிக்கையாளர்களான) என் அடியார்களிடம், அவர்கள் மிகவும் சிறந்த பேச்சைத்தான் பேச வேண்டும் என்று நீர் கூறுவீராக! உண்மையாதெனில், ஷைத்தான் மனிதர்களிடையே குழப்பம் உண்டாக்க முயற்சி செய்கிறான். திண்ணமாக, ஷைத்தான் மனிதர்களுக்கு வெளிப்படையான பகைவன் ஆவான். </span>
<span>17:54 உங்கள் இறைவன் உங்கள் நிலைமையை நன்கு அறிந்தவனாக இருக்கிறான். அவன் நாடினால் உங்களுக்கு அருள் புரிவான்; அவன் நாடினால் உங்களைத் தண்டிப்பான். மேலும் (நபியே!) மக்களுக்குப் பொறுப்பேற்பவராக நாம் உம்மை அனுப்பி வைக்கவில்லை. </span>
<span>17:55 உம் இறைவன் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள படைப்புகள் பற்றி அதிகம் அறிந்திருக்கிறான். நாம் தூதர்களில் சிலருக்கு சிலரைவிட சிறப்பளித்திருக்கிறோம். மேலும், நாம் தாவூதுக்கு ஜபூர் வேதத்தை வழங்கியிருந்தோம். </span>
<span>17:56 இவர்களிடம் கூறும்: “அல்லாஹ்வை விடுத்து (உங்கள் காரியங்களை நிறைவேற்றுபவர்களாய்) எந்தக் கடவுளர்களை நீங்கள் கருதுகிறீர்களோ அவர்களை அழைத்துப் பாருங்கள்! உங்களின் எந்தத் துன்பத்தையும் அவர்களால் அகற்றிவிட முடியாது; மாற்றிவிடவும் முடியாது. </span>
<span>17:57 அவர்களேகூட தம் இறைவனின் நெருக்கத்தை அடைவதற்கான வஸீலாவை வழிவகையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்; தங்களில் யார் அவனுக்கு அதிகம் நெருக்கமானவராய் ஆவது என்பதற்காக! மேலும், அவனுடைய அருளை எதிர்பார்த்துக் கொண்டும் அவன் தரக்கூடிய வேதனைக்கு அஞ்சிக் கொண்டும் இருக்கிறார்கள். உண்மையில் அஞ்ச வேண்டியது உம் அதிபதி தரும் வேதனைக்குத்தான்!</span>
<span>17:58 எந்த ஊரையும் மறுமைநாளைக்கு முன் அழித்தொழிக் காமலோ, கடுமையான வேதனையில் ஆழ்த்தாமலோ நாம் விட்டு விட மாட்டோம். இது இறைவனின் பதிவேட்டில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. </span>
<span>17:59 சான்றுகளை அனுப்புவதிலிருந்து நம்மைத் தடுக்க வில்லை; முன்பு வாழ்ந்தவர்கள் அவற்றைப் பொய்யெனத் தூற்றி விட்டார்கள் என்பதைத் தவிர! (பாருங்கள்:) ஸமூத் கூட்டத்தார்க்கு ஒரு பெண் ஒட்டகத்தை எல்லோரும் அறியும் வண்ணம் வெளிப்படையாக கொடுத்தோம். ஆனால், அவர்கள் அதற்குக் கொடுமை இழைத்தார்கள். நாம் சான்றுகளை அனுப்புவது, மக்கள் அவற்றைக் கண்டு அஞ்ச வேண்டும் என்பதற்காகவே! </span>
<span>17:60 மேலும் (நபியே!) திண்ணமாக உம் இறைவன் மக்களைச் சூழ்ந்து கொண்டிருக்கிறான் என்று நாம் உம்மிடம் கூறியிருந்ததை நினைத்துப் பாரும்! மேலும், இப்போது நாம் உமக்குக் காண்பித்துத் தந்தவற்றையும் குர்ஆனில் சபிக்கப்பட்டுள்ள மரத்தையும் இம்மக்களுக்கு ஒரு சோதனையாகவே ஆக்கியிருக்கிறோம். நாம் மீண்டும் மீண்டும் இவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒவ்வொரு அச்சுறுத்தலும் இவர்களுடைய வரம்பு மீறும் நடத்தையை அதிகப்படுத்தவே செய்கிறது. </span>
<span>17:61 மேலும், நினைத்துப் பாரும்: ஆதத்துக்குச் சிரம் பணியுங்கள் என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, அனைவரும் சிரம் பணிந்தார்கள் இப்லீசைத் தவிர! அவன் கேட்டான்: “நீ மண்ணினால் படைத்த ஒருவருக்கு நான் சிரம் பணிவேனா?”</span>
<span>17:62 மேலும், அவன் கூறினான்: “சற்று நீயே பார்! என்னைவிட இவருக்கு நீ கண்ணியம் அளித்துள்ளாயே, அதற்கு அவர் தகுதியுடையவர்தானா? நீ எனக்கு மறுமை நாள் வரை அவகாசம் அளித்தால், அவருடைய வழித்தோன்றல்கள் அனைவரையும் அடியோடு நான் ஒழித்துக்கட்டுவேன். மிகக் குறைவான மக்கள்தாம் என்னிடமிருந்து தப்ப முடியும்!” </span>
<span>17:63 அல்லாஹ் கூறினான்: “சரி! நீ போய்விடு; அவர்களில் யார் உன்னைப் பின்பற்றினாலும் உன்னோடு சேர்த்து அவர்கள் அனைவர்க்கும் நரகம்தான் நிறைவான கூலியாகும். </span>
<span>17:64 உனது பசப்பு வார்த்தையின் மூலம் அவர்களில் யாரை உன்னால் வழிபிறழச் செய்ய முடியுமோ வழிபிறழச் செய்! மேலும், உனது குதிரைப் படையையும் காலாட் படையையும் அவர்களுக்கு எதிராக அணிதிரட்டு! சொத்துக்களிலும் பிள்ளைகளிலும் நீ அவர்களுடன் பங்காளியாகிவிடு. உன்னுடைய வாக்குறுதி வலைக்குள் அவர்களைச் சிக்கவை! ஷைத்தானின் வாக்குறுதி பெரும் ஏமாற்றமே தவிர வேறொன்றுமில்லை </span>
<span>17:65 திண்ணமாக, என் அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இருக்காது. மேலும் முற்றிலும் சார்ந்து இருப்பதற்கு உம் இறைவனே போதுமானவன்!”</span>
<span>17:66 உங்கள் (உண்மையான) இறைவன் யாரெனில், அவன்தான் உங்களுக்காக கடலில் கப்பலைச் செலுத்துகிறான்; நீங்கள் அவனது அருளைத் தேடும்பொருட்டு! திண்ணமாக, அவன் உங்களுக்கு மிகவும் கிருபை புரிபவனாக இருக்கின்றான். </span>
<span>17:67 கடலில் உங்களுக்குத் துன்பம் ஏற்படும்போது அந்த ஏகனை விடுத்து, நீங்கள் யார் யாரையெல்லாம் அழைக்கிறீர்களோ, அவர்கள் அனைவரும் மறைந்துபோய் விடுகிறார்கள். ஆனால், அவன் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்துவிடும்போது நீங்கள் அவனைப் புறக்கணித்துவிடுகிறீர்கள். உண்மையில் மனிதன் மிகவும் நன்றி கொல்பவனாக இருக்கிறான். </span>
<span>17:68 கரை சேர்ந்த பிறகு என்றேனும் ஒருநாள் இறைவன் உங்களைப் பூமி விழுங்கும்படிச் செய்துவிடுவான் என்பது குறித்தும் அல்லது உங்கள் மீது கற்களைப் பொழியும் புயலை அனுப்பிவிடுவான் என்பது குறித்தும் பிறகு, அதிலிருந்து உங்களைக் காப்பாற்ற எந்தப் பாதுகாவலனையும் நீங்கள் காணமாட்டீர்கள் என்பதைக் குறித்தும் நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா என்ன? </span>
<span>17:69 அல்லது அல்லாஹ் மீண்டும் ஒருமுறை உங்களைக் கடலுக்குக் கொண்டு சென்று, நீங்கள் நன்றி கொன்றதற்குப் பதிலாக உங்கள் மீது கடும் புயல்காற்றை அனுப்பி, உங்களை மூழ்கடித்துவிடுவான்; அல்லது உங்களுக்கு ஏற்பட்ட இந்தக் கதி பற்றி அவனிடம் விசாரணை செய்யக்கூடிய எவரும் உங்களுக்குக் கிடைக்க மாட்டார்கள் என்பவற்றைக் குறித்தும் நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா?  </span>
<span>17:70 நாம் ஆதத்தின் வழித்தோன்றல்களுக்குக் கண்ணியம் அளித்துள்ளோம். மேலும், தரையிலும் கடலிலும் அவர்களுக்கு வாகனங்களை வழங்கினோம். தூய பொருள்களிலிருந்து அவர்களுக்கு ஆகாரம் வழங்கினோம். மேலும், நாம் படைத்த பெரும்பாலான படைப்புகளைவிட அவர்களுக்கு அதிகச் சிறப்புகளையும் வழங்கினோம். இவை நமது கொடைகளாகும். </span>
<span>17:71 மேலும் ஒவ்வொரு சமூகத்தையும் அவர்களுடைய தலைவருடன் நாம் அழைக்கவிருக்கும் நாளினை நினைவு கூருங்கள்: அந்நாளில் எவர்களின் வினைப்பட்டியல் அவர்களுடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ அவர்கள் தமது வினைப்பட்டியலைப் படிப்பார்கள். மேலும், அவர்களுக்கு இம்மியளவும் அநீதி இழைக்கப்படமாட்டாது. </span>
<span>17:72 மேலும், எவன் இவ்வுலகில் குருடனாக இருந்தானோ அவன் மறுமையிலும் குருடனாகவே இருப்பான். ஏன், வழியை அறிவதில் குருடனை விட அதிகம் தோல்வியுற்றவனாக இருப்பான். </span>
<span>17:73 (நபியே!) இம்மக்கள் உம்மைக் குழப்பத்திலாழ்த்தி, உம்மைத் திசை திருப்பும் முயற்சியில் எந்தக் குறையும் வைக்கவில்லை நாம் உமக்கு அனுப்பிய வஹியை விட்டு வேறு எதையாவது நீர் நம் மீது புனைந்துரைக்க வேண்டும் என்பதற்காக! நீர் அவ்வாறு புனைந்துரைத்திருந்தால் அவர்கள் உம்மை நண்பராக்கியிருப்பார்கள். </span>
<span>17:74 நாம் உமக்கு உறுதிப்பாட்டை வழங்காதிருந்தால், நீர் அவர்களின் பக்கம் சிறிதேனும் சாய்ந்திருக்கக் கூடும். </span>
<span>17:75 நீர் அவ்வாறு சாய்ந்திருந்தால், உலக வாழ்வில் இரு மடங்கு வேதனையையும் மரணத்திற்குப் பின்பு இரு மடங்கு வேதனையையும் நீர் சுவைக்கும்படிச் செய்திருப்போம். பிறகு நமக்கு எதிராக உதவிபுரிபவர் எவரையும் நீர் காணமாட்டீர். </span>
<span>17:76 இந்த மண்ணிலிருந்து உமது பாதத்தைப் பெயர்த்திட வேண்டும்; உம்மை இங்கிருந்து வெளியேற்றிட வேண்டும் என்று அவர்கள் மும்முரமாக முயன்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்தால் உமக்குப் பின் அவர்களும் இங்கு அதிக காலம் தங்கியிருக்க முடியாது!</span>
<span>17:77 உமக்கு முன்னால் அனுப்பப்பட்ட நம்முடைய அனைத்துத் தூதர்கள் விஷயத்திலும் நாம் கடைப்பிடித்து வந்த நிலையான நியதி இதுவே. நமது நியதியில் நீர் எந்த மாறுதலையும் காணமாட்டீர்!</span>
<span>17:78 சூரியன் (நடுவானை விட்டு) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் வரை தொழுகையை நிலைநிறுத்தும்! அதிகாலையில் ஓதுவதைக் கடைப்பிடியும். திண்ணமாக அதிகாலையில் (குர்ஆன்) ஓதுவது சாட்சி சொல்லப்படக்கூடியதாகும். </span>
<span>17:79 இரவில் தஹஜ்ஜுத் தொழுகையைக் கடைப்பிடியும். இது நீர் செய்யவேண்டிய அதிகப்படியான தொழுகையாகும். உம் இறைவன் உம்மை ‘மகாமே மஹ்மூத்’ எனும் அந்தஸ்துக்கு உயர்த்தலாம். </span>
<span>17:80 மேலும், பிரார்த்தனை புரிவீராக: “என் இறைவனே! நீ என்னை எங்கு கொண்டு சென்றாலும் உண்மையுடன் கொண்டு செல்வாயாக! என்னை எங்கிருந்து வெளியேற்றினாலும் உண்மையுடன் வெளியேற்றுவாயாக! உன் தரப்பிலிருந்து எனக்குப் பக்கபலமாக ஓர் அதிகாரத்தை வழங்குவாயாக!”</span>
<span>17:81 மேலும், பிரகடனம் செய்வீராக: “சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது. திண்ணமாக அசத்தியம் அழியக் கூடியதே!”</span>
<span>17:82 இந்தக் குர்ஆனை இறக்கியருளும் தொடரில் இறைநம்பிக்கையாளர்களுக்கு நிவாரணமாகவும் அருளாகவும் உள்ளவற்றை நாம் இறக்கியருளிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், கொடுமை புரிபவர்களுக்கு அது பேரிழப்பைத் தவிர வேறு எதையும் அதிகப்படுத்துவதில்லை. </span>
<span>17:83 மனிதனின் நிலை என்னவெனில், அவனுக்கு நாம் அருள்புரிந்தால் அகந்தையுடன் நடந்து கொள்கிறான்; மேலும், முகம் திருப்பிச் செல்கிறான். அவனுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமாயின் நிராசை யடைந்து போகிறான். </span>
<span>17:84 (நபியே! இவர்களிடம்) கூறிவிடும்: “ஒவ்வொருவரும் தத்தமது வழிமுறைப்படி செயலாற்றுகின்றனர். ஆனால், எவர் மிகவும் நேரான வழியில் உள்ளவர் என்பதை உம் அதிபதியே நன்கு அறிகின்றான்.”</span>
<span>17:85 ‘ரூஹ்’ பற்றி இவர்கள் உம்மிடம் வினவுகிறார்கள். கூறுவீராக: “ரூஹ் என் இறைவனின் கட்டளையினால் வருகிறது. ஆனால், உங்களுக்கு மிகக் குறைவாகவே ஞானம் வழங்கப்பட்டுள்ளது. </span>
<span>17:86 (நபியே!) நாம் நாடினால் வஹியின் மூலம் உமக்கு வழங்கியிருக்கும் அனைத்தையும் பறித்துவிடுவோம். பிறகு, நமக்கு எதிராக அவற்றைத் திரும்பப் பெற்றுத் தரக்கூடிய ஆதரவாளர் எவரையும் நீர் காணமாட்டீர். </span>
<span>17:87 உமக்குக் கிடைத்திருப்பவையெல்லாம், உம் அதிபதியின் கருணையால்தான் கிடைத்திருக்கின்றன. உண்மையாக, உம் மீது அவன் பொழியும் அருள் மாபெரியதாகும். </span>
<span>17:88 கூறும்: “மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தக் குர்ஆனைப் போன்று ஒன்றைக் கொண்டுவர முயன்றாலும் இதைப்போன்று அவர்களால் கொண்டுவர முடியாது; அவர்கள் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே!”</span>
<span>17:89 நாம் இந்தக் குர்ஆனில் பலவிதமான உவமைகளின் மூலம் மக்களுக்கு (உண்மைகளை) விவரித்துள்ளோம். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் நிராகரிப்பிலேயே விடாப்பிடியாய் இருக்கிறார்கள். </span>
<span>17:90 மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: நீர் பூமியைப் பிளந்து எங்களுக்காக ஒரு நீரூற்றை ஓடச் செய்யாதவரை,</span>
<span>17:91 அல்லது பேரீச்சைகளும் திராட்சைகளும் கொண்ட ஒரு தோட்டம் உமக்கு இருந்து, அதன் நடுவே ஆறுகளை நீர் ஓடச்செய்யாதவரை நாங்கள் உமது பேச்சை நம்ப மாட்டோம். </span>
<span>17:92 அல்லது நீர் வாதிடுவதுபோல் வானத்தை துண்டு துண்டாக்கி எங்கள்மீது போடாதவரை, அல்லது அல்லாஹ்வையும் வானவர்களையும் நேரடியாக எங்கள் முன் கொண்டுவராத வரை உம்மை நாங்கள் நம்பமாட்டோம். </span>
<span>17:93 அல்லது தங்கமாளிகை ஒன்று உமக்காக உருவாகாத வரை அல்லது வானத்தில் நீர் ஏறிச் செல்லாத வரை நீர் வானத்தில் ஏறினாலும்கூட நாங்கள் படிப்பதற்கு ஒரு நூலை எங்கள் மீது இறக்கித் தராத வரை உம்மை நம்பமாட்டோம்” (நபியே! இவர்களிடம்) கூறுவீராக: “தூய்மையானவனாக இருக்கிறான், என்னைப் பரிபாலிப்பவன்! நான் தூதுச் செய்தியைக் கொண்டுவருகின்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லையே!”</span>
<span>17:94 மக்களிடம் நேர்வழி வந்தபோதெல்லாம் அதன் மீது நம்பிக்கை கொள்ளவிடாமல் அவர்களைத் தடுத்தது, “அல்லாஹ் ஒரு மனிதரையா தூதராக அனுப்பியிருக்கிறான்?” என்று அவர்கள் கேட்டதுதான். </span>
<span>17:95 அவர்களிடம் கூறும்: “பூமியில் வானவர்களே நிம்மதியுடன் நடந்து திரிந்து கொண்டிருப்பார்களேயானால், நாம் அவர்களுக்காக வானத்திலிருந்து திண்ணமாக ஒரு வானவரையே தூதராக அனுப்பியிருப்போம்!”</span>
<span>17:96 (நபியே! அவர்களிடம்) கூறிவிடும்: “எனக்கும் உங்களுக்கு மிடையே அல்லாஹ்வின் சாட்சியமே போதுமானது. அவன் தன்னுடைய அடிமைகளின் நிலைமைகளை நன்கறிந்து கொண்டும் அனைத்தையும் பார்த்துக் கொண்டும் இருக்கின்றான்.”</span>
<span>17:97 யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகின்றானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் எவர்களை வழிகேட்டிலே ஆழ்த்துகின்றானோ அவர்களுக்கு அல்லாஹ்வை விடுத்து வேறு எந்தப் பாதுகாவலரையும் நீர் காணமாட்டீர். மறுமைநாளில் நாம் அவர்களை முகம் குப்புற இழுத்து வருவோம்; குருடர்களாய்; செவிடர்களாய் மேலும், ஊமையர்களாய்! அவர்களின் இருப்பிடம் நரகமாகும். அதன் வெப்பம் தணியத் தொடங்கும்போது நாம் அதனை இன்னும் கொழுந்துவிட்டு எரியும்படிச் செய்வோம். </span>
<span>17:98 அவர்கள் நம் சான்றுகளை நிராகரித்ததற்கும், “நாங்கள் வெறும் எலும்புகளாகி மக்கி மண்ணோடு மண்ணாய் ஆகிவிட்ட பிறகு புத்தம் புதிய படைப்பாய் நாங்கள் எழுப்பப்படுவோமா?” என்று கேட்டதற்கும் உரிய கூலியாகும் இது. </span>
<span>17:99 வானங்களையும் பூமியையும் படைத்திருக்கின்ற அல்லாஹ் இவர்கள் போன்றவர்களைப் படைப்பதற்குத் திண்ணமாக வல்லமை பெற்றவன் என்பது இவர்களுக்குப் புலப்படவில்லையா, என்ன? அவனே அவர்களை ஒன்று சேர்ப்பதற்கென குறிப்பிட்ட ஒரு காலத்தை நிர்ணயித்துள்ளான்; அது வருவது திண்ணம்! ஆயினும், கொடுமை புரிபவர்கள் அதனை மறுப்பதிலேயே பிடிவாதமாக இருக்கின்றார்கள். </span>
<span>17:100 (நபியே! இவர்களிடம்) கூறும்: ஒருவேளை என் அதிபதியின் அருட்களஞ்சியங்கள் உங்கள் கைவசத்தில் இருந்திருந்தால் செலவாகிவிடுமோ எனும் அச்சத்தில் நிச்சயம் அவற்றை நீங்கள் பதுக்கி வைத்திருப்பீர்கள். மனிதன் உண்மையிலேயே குறுகிய மனம் படைத்தவனாக இருக்கின்றான். </span>
<span>17:101 தெளிவாகப் புலப்படக்கூடிய ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு நாம் வழங்கியிருந்தோம். நீங்கள் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் கேட்டுப் பாருங்கள். அவர்களிடம் மூஸா வந்தபோது ஃபிர் அவ்ன் அவரிடம், “மூஸாவே! நான் உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே கருதுகின்றேன்” என்றல்லவா கூறினான்! </span>
<span>17:102 அதற்கு மூஸா கூறினார்: “அகத் தெளிவை ஏற்படுத்தக்கூடிய சான்றுகளை வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இறக்கி வைக்கவில்லை என்பதை நீ நன்கறிவாய். ஃபிர்அவ்னே! திண்ணமாக, நான் உன்னை நாசத்திற்குள்ளாகக் கூடிய மனிதனாகவே கருதுகின்றேன்.” </span>
<span>17:103 இறுதியில் மூஸாவையும் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களையும் அந்தப் பூமியிலிருந்து அடியோடு வெளியேற்றிட வேண்டும் என்று ஃபிர்அவ்ன் எண்ணியிருந்தான். ஆயினும், நாம் அவனையும் அவனுடைய ஆட்களையும் கூண்டோடு மூழ்கடித்தோம். </span>
<span>17:104 மேலும், அவனுக்குப் பின்னர் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் கூறினோம்: “நீங்கள் இந்தப் பூமியில் குடியிருங்கள். மறுமை பற்றி வாக்களிக்கப்பட்ட காலம் வரும்போது நாம் உங்கள் அனைவரையும் ஒன்று திரட்டிக் கொண்டு வருவோம்.”</span>
<span>17:105 இந்தக் குர்ஆனை நாம் சத்தியத்துடனேயே இறக்கியருளினோம்; அது சத்தியத்துடன்தான் இறங்கியுள்ளது. மேலும் (நபியே!) நாம் உம்மை, (ஏற்றுக் கொண்டவர்களுக்கு) நற்செய்தி அறிவிப்பதற்கும் (ஏற்றுக் கொள்ளாதோருக்கு) எச்சரிக்கை செய்வதற்குமே அன்றி வேறு எதற்காகவும் அனுப்ப வில்லை. </span>
<span>17:106 நாம் இந்தக் குர்ஆனை எதற்காக கொஞ்சம் கொஞ்சமாக இறக்கியருளினோமெனில், நீர் இதனை மக்களுக்கு நிறுத்தி நிறுத்தி ஓதிக்காட்ட வேண்டும் என்பதற்காகத்தான்! மேலும், இதனை நாம் படிப்படியாக (சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு) இறக்கி வைத்தோம். </span>
<span>17:107 (நபியே! இவர்களிடம்) கூறிவிடும்; “இதனை நீங்கள் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி; இதற்கு முன்பு ஞானம் வழங்கப்பட்ட மக்களிடம் இது ஓதிக்காட்டப்பட்டால், அவர்கள் முகங்குப்புற ஸஜ்தாவில் வீழ்கிறார்கள். </span>
<span>17:108 மேலும், “தூய்மையானவன் எங்கள் இறைவன்; அவனுடைய வாக்குறுதி நிச்சயம் நிறை வேற வேண்டியிருந்தது” என்று கூறுகின்றார்கள்; </span>
<span>17:109 அழுத வண்ணம் முகங்குப்புற விழுகின்றார்கள்! இதனைச் செவிமடுப்பது அவர்களின் இறையச்சத்தை இன்னும் அதிகப்படுத்திவிடுகின்றது. </span>
<span>17:110 (நபியே! இவர்களிடம்) கூறும்: ‘நீங்கள் அல்லாஹ் என்று அழைத்தாலும் சரி; ரஹ்மான் என்று அழைத்தாலும் சரி; நீங்கள் எந்தப் பெயரைக் கூறியும் அழையுங்கள். அவனுக்குரிய பெயர்கள் அனைத்தும் நல்லவைதாம்’. மேலும், உமது தொழுகையில் உமது குரலை மிகவும் உயர்த்த வேண்டாம்; மிகத் தாழ்த்தவும் வேண்டாம். இவ்விரண்டுக்கும் இடையில் மிதமான தொனியைக் கடைப்பிடியும். </span>
<span>17:111 கூறுவீராக: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் எத்தகையவன் எனில், அவன் யாரையும் மகனாக்கிக் கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுடன் யாரும் பங்கு கொண்டவராகவும் இல்லை; யாரேனும் அவனுக்கு உதவியாளராய் இருக்க வேண்டும் எனும் அளவுக்கு அவன் இயலாதவனும் அல்ல! மேலும், எடுத்துரைப்பீராக, அவனுடைய பரிபூரணமான பெருமையை!</span>
</div><div>
<span>அல் கஹ்ஃப்</span>
<span>18:1 புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே! அவனே தன்னுடைய அடியார் மீது இந்த வேதத்தை இறக்கியருளினான். இதில் எவ்விதக் கோணலையும் வைத்திடவில்லை. </span>
<span>18:2 இது முற்றிலும் சரியான விஷயத்தைக் கூறுகின்ற வேதமாகும். அல்லாஹ்வின் கடுமையான வேதனையைக் குறித்து (மக்களை) அவர் எச்சரிப்பதற்காகவும், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிவோர்க்குத் திண்ணமாக நற்கூலி இருக்கின்றது; </span>
<span>18:3 அதை என்றென்றும் பெற்றுக் கொண்டிருப்பார்கள் என்று நற்செய்தி அளிப்பதற்காகவும் </span>
<span>18:4 மேலும், “அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான்!” என்று கூறுவோரை எச்சரிப்பதற்காகவும்தான்! </span>
<span>18:5 அதைப் பற்றிய எவ்வித ஞானமும் அவர்களிடம் இல்லை; அவர்களுடைய மூதாதையரிடமும் இருக்கவில்லை. அவர்களின் வாயிலிருந்து வெளிப்படுகின்ற பேச்சு எத்துணை மோசமானது! அவர்கள் வெறும் பொய்யைத்தான் கூறுகின்றார்கள். </span>
<span>18:6 (நபியே!) இவர்கள் இந்த அறிவுரையின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையானால், இவர்களின் பின்னே கவலைப்பட்டு உமது உயிரை மாய்த்துக்கொள்வீர் போல் இருக்கிறதே!</span>
<span>18:7 திண்ணமாக, நாம் இப்பூமியின் மீதுள்ள அனைத்தையும் அதற்கு அலங்காரமாய் ஆக்கியுள்ளோம், இவர்களில் மிகவும் சிறந்த செயலைச் செய்பவர் யார் என்று இவர்களை சோதிப்பதற்காக! </span>
<span>18:8 இறுதியில் திண்ணமாக, நாம் இவையனைத்தையும் வெற்றுத்திடலாய் ஆக்கிட இருக்கிறோம். </span>
<span>18:9 குகை மற்றும் கல்வெட்டுக்காரர்கள் நம்முடைய வியக்கத்தக்க மாபெரும் சான்றாய்த் திகழ்ந்தனர் என்று நீங்கள் கருதுகின்றீர்களா? </span>
<span>18:10 இளைஞர்கள் சிலர் குகையில் தஞ்சம் புகுந்தபோது இறைஞ்சினார்கள்: “எங்கள் இறைவனே! உன்னுடைய தனிப்பட்ட அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் செயல்களை ஒழுங்குபடுத்தித் தருவாயாக!”  </span>
<span>18:11 அப்போது நாம் அவர்களை அதே குகையில் பல்லாண்டுகள் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தினோம். </span>
<span>18:12 பிறகு, அவர்களை எழச் செய்தோம்; அவர்கள் இரு பிரிவினரில் யார் தாங்கள் தங்கியிருந்த காலத்தை மிகச்சரியாக கணக்கிடுகிறார்கள் என்பதை நாம் அறிந்துகொள்வதற்காக!</span>
<span>18:13 அவர்களின் உண்மையான சரிதையை நாம் உமக்கு எடுத்துரைக்கிறோம். திண்ணமாக, அவர்கள் தம் இறைவன் மீது நம்பிக்கை கொண்டிருந்த இளைஞர்களாவர். நாம் அவர்களை நேர்வழியில் மேலும் மேலும் முன்னேறச் செய்தோம். </span>
<span>18:14 அவர்கள் எழுந்து, “யார் வானங்களுக்கும், பூமிக்கும் அதிபதியாக இருக்கின்றானோ அவனே எங்களுக்கும் அதிபதியாவான். அவனை விடுத்து வேறெந்தக் கடவுளையும் நாங்கள் அழைக்கமாட்டோம். அவ்வாறு அழைத்தால் திண்ணமாக நாங்கள் முறையற்ற பேச்சை பேசியவர்களாவோம்” என்று துணிந்து பிரகடனம் செய்தபோது அவர்களின் உள்ளங்களை நாம் திடப்படுத்தினோம். </span>
<span>18:15 (பிறகு, அவர்கள் தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள்:) “இந்த நம்முடைய சமுதாயத்தினர் பேரண்டத்தின் அதிபதியை விடுத்து பிறவற்றைத் தெய்வங்களாக்கி உள்ளார்கள். அவை தெய்வங்கள்தாம் என்பதற்கு ஏதேனும் தெளிவான சான்றினை இவர்கள் ஏன் கொண்டு வருவதில்லை? அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனை விட பெரும் கொடுமைக்காரன் வேறு யார்?</span>
<span>18:16 நீங்கள் இவர்களை விட்டும், அல்லாஹ்வை விடுத்து, இவர்கள் அழைத்து வருகின்ற பிற தெய்வங்களை விட்டும் விலகிக் கொண்டீர்கள் என்றால், இன்ன குகைக்குள் சென்று அபயம் தேடுங்கள்! உங்கள் இறைவன் தன் கருணையை உங்கள் மீது இன்னும் விரிவாக்குவான். மேலும், உங்கள் பணிகளுக்கு வேண்டிய அனைத்து வசதி வாய்ப்புகளையும் உங்களுக்கு உருவாக்கித் தருவான்.”</span>
<span>18:17 (நீர் குகையில் அவர்களைப் பார்த்தால்) சூரியன் உதயமாகும்போது அவர்களின் குகையைவிட்டு விலகி வலப்பக்கமாக உயர்வதையும் அது மறையும்போது அவர்களை விட்டுக் கடந்து இடப்பக்கமாகத் தாழ்வதையும் காண்பீர்; ஆனால், அவர்களோ குகையினுள் ஒரு விசாலமான இடத்தில் இருப்பார்கள். இது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒன்றாகும். யாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ அவரே நேர்வழி பெற்றவராவார். மேலும், யாரை அல்லாஹ் நெறிபிறழச் செய்கின்றானோ அவருக்கு உதவி புரிந்து வழிகாட்டுபவரை ஒருபோதும் நீர் காணமாட்டீர். </span>
<span>18:18 நீர் (அவர்களைப் பார்த்தால்) அவர்கள் விழித்திருக்கிறார்கள் என்று கருதுவீர். உண்மையில் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நாம் அவர்களை வலப்புறமும் இடப்புறமுமாகப் புரட்டிக் கொண்டேயிருந்தோம். மேலும், அவர்களின் நாய் குகைவாசலில் தன்னுடைய முன்னங்கால்களை விரித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது. நீர் அவர்களைச் சற்று எட்டிப் பார்த்தால் உடனே விரண்டோடியிருப்பீர்; மேலும், அவர்களைப் பார்த்ததினால் திகிலடைந்து போயிருப்பீர்!</span>
<span>18:19 மேலும், இவ்வாறே வியக்கத்தக்க முறையில் அவர்களை நாம் விழித்தெழச் செய்தோம், அவர்கள் தங்களுக்கிடையில் விசாரித்துக் கொள்வதற்காக! அவர்களில் ஒருவர் கேட்டார், “நீங்கள் எவ்வளவு காலம் இந்நிலையில் இருந்தீர்கள்?” என்று! அதற்கு மற்றவர்கள் கூறினார்கள்: “ஒருநாள் முழுவதும் அல்லது அதைவிடச் சற்றுக் குறைவாக இருந்திருப்போம்.” பிறகு, அவர்கள் கூறினார்கள்: “நாம் எவ்வளவு காலம் இவ்வாறு இருந்தோம் என்பதை அல்லாஹ்தான் நன்கறிவான். இனி நம்மில் யாரேனும் ஒருவர் இந்த வெள்ளி நாணயத்துடன் நகருக்குள் செல்லட்டும். மிகவும் நல்ல உணவு எங்கு கிடைக்கும் என்று அவர் பார்க்கட்டும். அங்கிருந்து சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கி வரட்டும். அவர் கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளட்டும். நாம் இங்கு இருப்பதை யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம். </span>
<span>18:20 அவர்கள் நம்மைப் பிடித்துவிட்டால், திண்ணமாய் நம்மைக் கல்லால் அடிப்பார்கள்; அல்லது அவர்களுடைய மார்க்கத்திற்கு நம்மைப் பலவந்தமாகக் கொண்டு சென்று விடுவார்கள். அப்படி நடந்துவிட்டால் ஒருபோதும் நம்மால் வெற்றி பெற முடியாது” </span>
<span>18:21 இவ்வாறு அவர்களின் நிலைமையை ஊர் மக்களுக்கு நாம் அறிவித்தோம். அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதையும், மறுமைக்குரிய வேளை நிச்சயமாக வந்தே தீரும் என்பதையும் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக! (ஆனால், சற்று கவனியுங்கள்: சிந்திக்க வேண்டிய முக்கியமான விஷயம் இதுவாக இருக்க) அந்நேரத்தில் (குகைவாசிகளான) இவர்கள் விஷயத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து மக்கள் தங்களிடையே தர்க்கித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர், “இவர்கள் மீது ஒரு சுவரை எழுப்புங்கள். இவர்களின் இறைவன்தான் இவர்களைக் குறித்து நன்கறிவான்” என்று கூறினார்கள். ஆயினும், இவர்கள் விஷயத்தில் அதிகாரம் பெற்றிருந்தவர்கள் கூறினார்கள்: “நாங்கள் இவர்கள் மீது ஒரு வணக்கத்தலத்தை அமைப்போம்.”</span>
<span>18:22 “அவர்கள் மூன்று பேர்; நான்காவது அவர்களின் நாய்” என மக்களில் சிலர் கூறுவர். வேறு சிலர், “அவர்கள் ஐந்து பேர், ஆறாவது அவர்களின் நாய்” என்று கூறுவர். இவர்கள் அனைவரும் குருட்டுத்தனமாக உளறுகிறார்கள். இன்னும் சிலர், “அவர்கள் ஏழுபேர்; எட்டாவது அவர்களின் நாய்” எனக் கூறுவர். நீர் கூறுவீராக: “அவர்கள் எத்தனை பேர் என்பதை என்னுடைய இறைவனே நன்கறிவான்.” அவர்களின் சரியான எண்ணிக்கையை வெகுசிலரே அறிவர். எனவே, அவர்களின் எண்ணிக்கை விஷயத்தில் மேலோட்டமான முறையிலே அன்றி (மக்களிடம்) அதிகமாக தர்க்கம் செய்யாதீர். அவர்களைப் பற்றி யாரிடத்திலும் எதுவும் கேட்காதீர். </span>
<span>18:23 மேலும், (பாருங்கள்) எந்தச் செயலைக் குறித்தும், “நாளை நான் அதனைச் செய்துவிடுவேன்” என்று ஒருபோதும் கூறாதீர்; </span>
<span>18:24 (உம்மால் எதுவும் செய்திட முடியாது) அல்லாஹ் நாடினால் அன்றி! ஆனால், மறந்து அவ்வாறு கூறிவிடுவீராயின், உடனே தம் இறைவனை நினைவுகூர்ந்து ‘இவ்விஷயத்தில் இதைவிட நேர்மைக்கு நெருக்கமானவற்றின் பக்கம் என் இறைவன் எனக்கு வழிகாட்டக் கூடும் என நான் நினைக்கிறேன்’ என்று கூறும்;</span>
<span>18:25 அவர்கள் தங்களுடைய குகையில் முந்நூறு ஆண்டுகள் தங்கியிருந்தார்கள். சிலர் (காலத்தைக் கணிப்பதில்) ஒன்பது ஆண்டுகளை அதிகமாக்கினார்கள். </span>
<span>18:26 நீர் கூறுவீராக: “அவர்கள் தங்கியிருந்த காலத்தை அல்லாஹ்தான் நன்கறிவான்.” வானங்கள் மற்றும் பூமியின் இரகசியங்கள் யாவும் அவனுக்கே தெரியும்! அவன் அனைத்தையும் எத்துணை நன்றாய்ப் பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும் இருக்கின்றான்! (பூமியிலும், வானத்திலும் உள்ள) படைப்புகளுக்கு அவனைத் தவிர வேறு பாதுகாவலர் யாரும் இல்லை! அவன் தனது ஆட்சியதிகாரத்தில் வேறு எவரையும் கூட்டு சேர்த்துக் கொள்வதில்லை!</span>
<span>18:27 (நபியே!) உம் இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதை (உள்ளது உள்ளபடி) எடுத்துச் சொல் வீராக! அவனுடைய வசனங்களை மாற்றுவதற்கு எவருக்கும் அனுமதி இல்லை. மேலும், (யாருக்கு வேண்டியாவது அவற்றை நீர் மாற்றினால்) அல்லாஹ்விடமிருந்து தப்பியோடுவதற்கு எந்தப் புகலிடமும் உமக்குக் கிடைக்காது. </span>
<span>18:28 எவர்கள் தம்முடைய இறைவனின் திருப்தியை நாடி காலையிலும் மாலையிலும் அவனை அழைக்கிறார்களோ, அவர்களுடன் சேர்ந்து இருப்பதில் உமது மனத்தைத் திருப்தி கொள்ளச் செய்வீராக! ஒருபோதும் உமது பார்வையை அவர்களைவிட்டுத் திருப்ப வேண்டாம். உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நீர் விரும்புகிறீரா என்ன? நம்மை நினைவுகூர்வதை விட்டும் எவனது இதயத்தை நாம் அலட்சியம் கொள்ளச் செய்துள்ளோமோ எவன் தன் இச்சைப்படி வாழும் நடத்தையை மேற்கொண்டிருக்கிறானோ எவன் தன் செயல்முறைகளில் வரம்பு மீறிச் சென்று கொண்டு இருக்கிறானோ அவனுக்கு நீர் கீழ்ப்படியாதீர்!  </span>
<span>18:29 தெளிவாகக் கூறிவிடும்: இது உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள சத்தியமாகும். இனி நம்பிக்கை கொள்ள விரும்புவோர் நம்பிக்கை கொள்ளட்டும்; நிராகரிக்க விரும்புவோர் நிராகரிக்கட்டும்! (நிராகரிக்கக்கூடிய) கொடுமையாளர்களுக்குத் திண்ணமாக நாம் ஒரு நெருப்பைத் தயார் செய்து வைத்திருக்கிறோம். அதன் சுவாலைகள் அவர்களைச் சுற்றி வளைத்தாகிவிட்டன. அங்கு அவர்கள் தண்ணீர் கேட்பார்களாயின், உருக்கிய உலோகம் போன்ற நீர் அவர்களுக்குக் கொடுக்கப்படும். அது அவர்களின் முகங்களைக் கரித்துவிடும். அது மிகவும் கேடு கெட்ட பானம் ஆகும். மேலும், அவர்களின் ஓய்விடம் தீயதாகும். </span>
<span>18:30 எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகின்றார்களோ அத்தகைய அழகிய செயல் புரிவோரின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்குவதில்லை. </span>
<span>18:31 அவர்களுக்கு நிலையான சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்களுக்குத் தங்கக் காப்புகள் அணிவிக்கப்படும். மேலும், மெல்லிய மற்றும் அழுத்தமான பச்சை நிறப் பட்டாடைகளையும் அணிவார்கள். மேலும், உயர்ந்த மஞ்சங்கள் மீது சாய்ந்திருப்பார்கள். இது மிகச்சிறந்த நற்கூலியும், மிக உயர்ந்த தங்குமிடமுமாகும். </span>
<span>18:32 (நபியே!) அவர்களிடம் ஓர் உதாரணத்தை எடுத் துரைப்பீராக இரண்டு மனிதர்கள்; அவர்களில் ஒருவருக்கு நாம் இரு திராட்சைத் தோட்டங்களை வழங்கினோம். அவற்றைச் சுற்றிலும் பேரீச்சை மரங்களை அமைத்தோம். அத்தோட்டங்களுக்கு இடையே பயிர் நிலத்தையும் உருவாக்கியிருந்தோம். </span>
<span>18:33 அவ்விரு தோட்டங்களும் நல்ல விளைச்சலைக் கொடுத்தன. அதில் அவை சிறிதளவும் குறை வைத்திடவில்லை! அத்தோட்டங்களின் நடுவே ஓர் ஆறு ஓடச்செய்தோம். </span>
<span>18:34 அவனுக்கு நல்ல பலன் கிடைத்தது. (இவற்றையெல்லாம் பெற்றிருந்த) அவன் ஒருநாள் தன் நண்பனிடம் உரையாடிக்கொண்டிருக்கும்போது கூறினான்: “நான் உன்னைவிட அதிக செல்வமுடையவன்; உன்னைவிட அதிக ஆள் பலமும் கொண்டவன்.”</span>
<span>18:35 பிறகு அவன் தனது தோட்டத்தினுள் நுழைந்தான்; அப்பொழுது தன்னுடைய ஆன்மாவுக்கே கொடுமை இழைப்பவனாய்க் கூறலானான்: “இந்தச் செல்வம் என்றைக்காவது அழிந்துவிடும் என்று நான் கருதவில்லை! </span>
<span>18:36 மறுமை எப்பொழுதேனும் வரும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை நான் என் இறைவனிடம் திரும்பக் கொண்டு செல்லப்பட்டால்கூட திண்ணமாக இதைவிட மகத்தான இடத்தையே நான் பெறுவேன்!” </span>
<span>18:37 அதற்கு அவனுடைய நண்பன் அவனிடம் உரையாடிக் கொண்டே கூறினான்: “அந்த மாபெரும் ஆற்றலுடையவனையா நிராகரிக்கிறாய்? அவனோ உன்னை மண்ணிலிருந்தும் பிறகு விந்திலிருந்தும் படைத்தான். பின்னர் உன்னை ஒரு முழு மனிதனாய் ஆக்கினான். </span>
<span>18:38 ஆனால், என்னைப் பொறுத்தமட்டில் அந்த அல்லாஹ்தான் என்னைப் பரிபாலிக்கும் இறைவன்! அந்த இறைவனுடன் எவரையும் நான் இணையாக்குவதில்லை. </span>
<span>18:39 நீ உன்னுடைய தோட்டத்தில் நுழைந்தபோது உன் நாவிலிருந்து ‘மாஷா அல்லாஹ், லா குவ்வத இல்லா பில்லாஹ்’* எனும் வார்த்தைகள் ஏன் வெளிப்படவில்லை? நான் பொருட் செல்வத்திலும், மக்கட் செல்வத்திலும் உன்னை விடக் குறைந்தவனாக இருக்கின்றேன் என்று நீ கருதினால், </span>
<span>18:40 என்னுடைய இறைவன் உன் தோட்டத்தைவிடச் சிறந்ததை எனக்கு அளித்துவிடக்கூடும். உன்னுடைய தோட்டத்தின் மீது வானத்திலிருந்து ஏதேனுமொரு ஆபத்தை அனுப்பிவிடக்கூடும். அதனால், அத்தோட்டம் வெறும் வெட்ட வெளியாக மாறிவிடக் கூடும் </span>
<span>18:41 அல்லது எந்தவிதத்திலும் உன்னால் வெளிக்கொணர முடியாத அளவுக்கு அதன் தண்ணீர் வற்றிப் போய்விடக்கூடும்!” </span>
<span>18:42 இறுதியில், அவனுடைய விளைபொருள்கள் யாவும் அழிக்கப்பட்டுவிட்டன. அவனுடைய திராட்சைத் தோட்டம் அதன் பந்தலில் குப்புற விழுந்து விட்டதைக் கண்டு, தான் அதில் முதலீடு செய்ததெல்லாம் வீணாகிவிட்டதே என்ற வருத்தத்துடன் தன் கைகளைப் பிசைந்து கொண்டு கூறலானான்: “அந்தோ! நான் என் இறைவனுடன் எவரையும் இணை வைக்காமல் இருந்திருக்கக் கூடாதா?” </span>
<span>18:43 அல்லாஹ்வை விடுத்து, அவனுக்கு உதவிபுரிவதற்கு எந்தக் கூட்டத்தாரும் இருக்கவில்லை. தானாகவே அந்த ஆபத்தைச் சமாளிப்பதற்கும் அவனால் இயலவில்லை. </span>
<span>18:44 காரியங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் அதிகாரம் உண்மையானவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது என்று அப்போது தெரிந்து விட்டது. மேலும், அவன் அருள்வதே சிறப்பான வெகுமதியாகும். இன்னும் அவன் காண்பிக்கின்ற முடிவே மகத்தான முடிவாகும். </span>
<span>18:45 (நபியே!) இவர்களுக்கு இம்மை வாழ்வின் உண்மைநிலையை இந்த உதாரணத்தைக் கொண்டு விளக்குவீராக: நாம் (இன்று) வானத்திலிருந்து மழை பொழியச் செய்கின்றோம். பிறகு, அதன் மூலம் பூமியில் செடிகொடிகள் நன்கு அடர்ந்து வளர்ந்தன. (நாளை) அதே கொடிகள் காற்றடித்துச் செல்லும் காய்ந்த பதராகிவிடுகின்றன. அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவனாக இருக்கின்றான். </span>
<span>18:46 இந்தப் பொருள்களும் இந்தப் பிள்ளைகளும் உலகவாழ்க்கையின் நிலையற்ற அலங்காரமே. உண்மையில், நிலைத்திருக்கக்கூடிய நற்செயல்கள் தாம், பலனைப் பொறுத்து உம் இறைவனிடம் சிறந்தவையாகும். மேலும், அவற்றின் மீதுதான் நல்ல எதிர்பார்ப்புகள் கொள்ள முடியும். </span>
<span>18:47 அந்த நாளைக் குறித்து கவலை கொள்ள வேண்டும். அன்று நாம் மலைகளைப் பெயர்த்துவிடும்போது பூமி முற்றிலும் வெட்ட வெளியாக இருப்பதை நீர் காண்பீர். மேலும், மனிதர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்ப்போம். (முற்காலத்து மற்றும் பிற்காலத்து மக்களில்) எவரையும் விட்டு வைக்க மாட்டோம். </span>
<span>18:48 மேலும், எல்லோரும் உம் அதிபதியின் முன்னிலையில் கொண்டு வந்து அணியணியாய் நிறுத்தப்படுவார்கள் “(பார்த்துக் கொள்ளுங்கள்!) வந்து விட்டீர்கள் அல்லவா, நீங்கள் எம்மிடம்? நாம் உங்களை முதல் தடவை எவ்வாறு படைத்திருந்தோமோ அவ்வாறு! உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட எந்த ஒரு நேரத்தையும் நாம் நிர்ணயிக்கவில்லை என்றுதானே நீங்கள் கருதியிருந்தீர்கள்!</span>
<span>18:49 மேலும், வினைப்பட்டியல் முன்னால் வைக்கப்பட்டுவிடும். நீர் பார்ப்பீர்: அவ்வேளை குற்றம் புரிந்தோர், தமது வாழ்க்கைப் புத்தகத்தில் உள்ளவற்றைக் கண்டு அஞ்சிக்கொண்டிருப்பார்கள்; மேலும் அவர்கள் புலம்பிக் கொண்டிருப்பார்கள்: “அந்தோ...! எங்கள் துர்பாக்கியமே! இது என்ன பதிவேடு! எங்கள் செயல்களில் சிறிதோ பெரிதோ எதையும் பதிக்காமல் இது விட்டு வைக்கவில்லையே!” தாங்கள் செய்தவை அனைத்தும் தம் முன்னால் இருப்பதை அவர்கள் காண்பார்கள். மேலும், உம் அதிபதி எவருக்கும் சிறிதும் அநீதி இழைக்கமாட்டான். </span>
<span>18:50 நாம் வானவர்களிடம் ‘ஆதத்திற்குச் சிரம் பணியுங்கள்’ என்று கூறியதை நினைவுகூருங்கள். அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள். ஆனால், இப்லீஸ் சிரம் பணியவில்லை. அவன் ஜின்களைச் சார்ந்தவனாக இருந்தான். ஆகையால், அவன் தன் அதிபதியின் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தான். (இப்போது) என்னை விடுத்து நீங்கள் அவனையும், அவனுடைய சந்ததிகளையும் உங்களுடைய பாதுகாவலர்களாய் ஆக்கிக் கொள்கிறீர்களா, என்ன? அவர்களோ உங்களின் பகைவர்களாவர். எத்தனை மோசமான மாற்றை இந்தக் கொடுமையாளர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். </span>
<span>18:51 நாம் வானங்களையும் பூமியையும் படைத்தபோது அவர்களை அழைக்கவில்லை. ஏன், அவர்களைப் படைக்கும்போதுகூட அவர்களை கூட்டுச் சேர்க்கவில்லை. வழி கெடுப்பவர்களை உதவியாளர்களாய் ஆக்கிக்கொள்வது என் நியதியல்ல. </span>
<span>18:52 “என்னுடன் இணையானவர்கள் என்று நீங்கள் கருதிக் கொண்டிருந்தவர்களை இப்போது அழையுங்கள்!” என்று இவர்களின் இறைவன் இவர்களிடம் கூறும் நாளில் (இவர்கள் என்ன செய்வார்கள்?) இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆயினும், அவர்கள் இவர்களுக்கு உதவிசெய்ய வரமாட்டார்கள். மேலும், நாம் அவர்களுக்கிடையே ஓர் அழிவுப்படுகுழியை அமைத்துவிடுவோம். </span>
<span>18:53 குற்றவாளிகள் அனைவரும் அந்நாளில் நரகநெருப்பைக் காண்பார்கள்; தாம் அதில் விழவிருக்கிறோம் என்று புரிந்து கொள்வார்கள். அதிலிருந்து தப்புவதற்கான எந்தப் புகலிடத்தையும் அவர்கள் காணமாட்டார்கள்!</span>
<span>18:54 நாம் இந்தக் குர்ஆனில் மக்களுக்கு பற்பல உதாரணங்களைக் கூறி விதவிதமாக விளக்கியுள்ளோம். ஆயினும், மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கின்றான். </span>
<span>18:55 மனிதர்களிடம் வழிகாட்டுதல் வந்தபோது அதனை ஏற்றுக்கொள்வதிலிருந்தும், தம்முடைய இறைவனிடம் பாவமன்னிப்பு கோருவதிலிருந்தும் அவர்களைத் தடுத்தது எது...? முந்தைய சமூகங்களுக்கு ஏற்பட்ட கதி தங்களுக்கும் ஏற்படுவதை அல்லது இறைத்தண்டனை தங்கள் கண்முன் வருவதை அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததைத் தவிர!</span>
<span>18:56 நற்செய்தி அறிவிப்பதற்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்குமே அன்றி வேறு எந்த நோக்கத்திற்காகவும் நாம் தூதர்களை அனுப்புவது இல்லை. ஆயினும் இறைநிராகரிப்பாளர்கள், அசத்தியத்தின் ஆயுதங்கள் கொண்டு சத்தியத்தை வீழ்த்த முயற்சி செய்கின்றார்கள். அவர்கள் என்னுடைய வசனங்களையும், தங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளையும் பரிகாசமாக்கினார்கள். </span>
<span>18:57 தன்னுடைய இறைவனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டு, அறிவுரை கூறப்பட்டபோது அவற்றைப் புறக்கணித்து தன் கைகளே செய்த தீவினைகளின் கதியை மறந்து விட்டவனைவிட பெரும் கொடுமைக்காரன் வேறு யார்? (எவர்கள் இத்தகைய நடத்தையை மேற்கொண்டார்களோ) அவர்கள் குர்ஆனை உணர்ந்து கொள்ளாதவாறு அவர்களின் இதயங்களின் மீது நாம் திரையிட்டு வைத்திருக்கின்றோம். மேலும், அவர்களின் செவிகளில் மந்தத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றோம். நேர்வழியின் பக்கம் அவர்களை நீர் எவ்வளவுதான் அழைத்தாலும், இந்நிலையில் அவர்கள் ஒருபோதும் நேர்வழி பெறமாட்டார்கள். </span>
<span>18:58 உம் இறைவன் பெரும் மன்னிப்பாளனும் கருணையுடையோனுமாய் இருக்கின்றான். இவர்கள் சம்பாதித்த தீவினைகளுக்காக இவர்களை அவன் தண்டிக்க நாடியிருந்தால் வேதனையை விரைவில் இவர்களுக்கு அனுப்பிவைத்திருப்பான்! ஆனால் இவர்களுக்கென வாக்களிக்கப்பட்ட ஒரு நேரம் இருக்கிறது. அதை விட்டுத் தப்பி ஓடுவதற்கு எந்த வழியையும் இவர்கள் காண மாட்டார்கள். </span>
<span>18:59 அழிவுக்குள்ளான இந்த ஊர்கள் உங்கள் முன் இருக்கின்றன. அவர்கள் கொடுமை செய்தபோது, அவர்களை நாம் அழித்துவிட்டோம். அவை ஒவ்வொன்றின் அழிவிற்கும் குறிப்பிட்ட தொரு காலத்தை நிர்ணயித்து இருந்தோம். </span>
<span>18:60 (மூஸாவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியை இவர்களுக்கு எடுத்துரையுங்கள்!) ஒருபோது மூஸா தம் பணி யாளரிடம் கூறினார்: “நான் இரு நதிகள் சங்கமம் ஆகுமிடத்தை அடையும்வரை என்னுடைய பயணத்தை முடித்துக் கொள்ள மாட்டேன்; இல்லையெனில் நெடுங்காலம் வரை நடந்து கொண்டே இருப்பேன்.” </span>
<span>18:61 பிறகு அவை சங்கமமாகும் இடத்தை அவர்கள் அடைந்தபோது, தங்களுடைய மீனை மறந்துவிட்டார்கள். அது நதியில் சுரங்கம் போல் வழியமைத்துக் கொண்டு சென்றுவிட்டது. </span>
<span>18:62 அவ்விருவரும் சற்று முன்னேறிச் சென்றபோது மூஸா தம் பணியாளரிடம் கூறினார்: “நமது சிற்றுண்டியைக் கொண்டு வாரும். இன்றைய பயணத்தில் நாம் மிகவும் களைப்படைந்து விட்டோம்.” </span>
<span>18:63 அதற்குப் பணியாளர் கூறினார்: “பார்த்தீர்களா, என்ன நடந்துவிட்டது என்று? நாம் அந்தப் பாறையின் அருகில் தங்கியிருந்தபோது எனக்கு மீனைப் பற்றி நினைவில்லாமல் போய்விட்டது. ஷைத்தான் என்னைக் கவனக்குறைவில் ஆழ்த்திவிட்டான். எனவே (தங்களிடம்) அதனைப் பற்றிக் கூற நான் மறந்துவிட்டேன். ஆனால், அதிசயமான முறையில் மீன் நதியினுள் சென்று விட்டது.”</span>
<span>18:64 மூஸா கூறினார்: “அந்த இடத்தைத்தானே நாம் தேடிக்கொண்டிருந்தோம்?” பிறகு அவர்கள் இருவரும் வந்தவழியே திரும்பிச் சென்றார்கள். </span>
<span>18:65 மேலும், அங்கு அவர்கள் நம்முடைய அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள். அவருக்கோ நம்முடைய அருளை நாம் வழங்கியிருந்தோம். மேலும், நம் சார்பிலிருந்து சிறப்பான ஞானத்தையும் வழங்கியிருந்தோம். </span>
<span>18:66 மூஸா, அவரிடம் கேட்டார்: “தங்களுக்கு கற்றுத் தரப்பட்டிருக்கும் நல்லறிவை நீங்கள் எனக்குக் கற்றுத் தரும் பொருட்டு நான் உங்களுடன் இருக்கலாமா?” </span>
<span>18:67 அதற்கு அவர் பதிலளித்தார்: “என்னோடு பொறுமையாய் இருக்க திண்ணமாக உம்மால் இயலாது. </span>
<span>18:68 மேலும், உமக்குச் சரியாகத் தெரியாத விஷயத்தில் எவ்வாறு உம்மால் பொறுமையாய் இருக்க முடியும்...?” </span>
<span>18:69 அதற்கு மூஸா கூறினார்: “இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) நீங்கள் என்னைப் பொறுமையாளராகக் காண்பீர்கள். எந்த விவகாரத்திலும் உங்களுக்கு நான் மாறு செய்யமாட்டேன்!” </span>
<span>18:70 அதற்கு அவர் கூறினார்: “சரி, நீர் என்னுடன் வருகிறீர் என்றால், நானே உம்மிடம் கூறும்வரை எதைப்பற்றியும் நீர் என்னிடம் கேட்கக்கூடாது.”</span>
<span>18:71 பிறகு அவர்கள் இருவரும் பயணம் மேற்கொண்டு ஒரு கப்பலில் ஏறியபோது, அவர் அதில் ஒரு துளையிட்டார்! அப்போது மூஸா கேட்டார்: “கப்பலில் உள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் அதில் துளையிட்டீர்கள்...? ஒரு கொடுமையான செயலைச் செய்து விட்டீர்களே!” </span>
<span>18:72 அதற்கு அவர் கூறினார்: “என்னுடன் பொறுமையாக இருக்க நிச்சயமாக உம்மால் முடியாது என்று நான் உம்மிடம் கூறவில்லையா?”</span>
<span>18:73 அதற்கு மூஸா கூறினார்: “நான் மறந்து போனதற்காக என்னைக் கண்டிக்காதீர்கள்! என் விஷயத்தில் நீங்கள் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள்.”</span>
<span>18:74 பிறகு இருவரும் தம் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கையில், ஒரு சிறுவனைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் அவனைக் கொன்றுவிட்டார். மூஸா கூறினார்: “ஒரு நிரபராதியின் உயிரைக் கொன்று விட்டீர்களே! அவன் யாரையும் கொலை செய்யவில்லையே? நீங்கள் மிகவும் தீய செயலைச் செய்துவிட்டீர்கள்.” </span>
<span>18:75 அதற்கு அவர் சொன்னார்: “என்னுடன் பொறுமையாக இருக்க திண்ணமாக உம்மால் முடியாது என்று நாம் உம்மிடம் கூறவில்லையா?” </span>
<span>18:76 அதற்கு மூஸா கூறினார்: “இதற்குப் பின்னர் எதையேனும் உங்களிடம் நான் கேட்டால், என்னை உங்களிடம் வைத்துக் கொள்ளாதீர்கள். என்னிடமிருந்து உங்களுக்குத் தக்க காரணம் கிடைத்து விட்டது.”</span>
<span>18:77 மேலும் அவர்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கையில், ஓர் ஊரை அடைந்தார்கள். அவ்வூர் மக்களிடம் உணவு கேட்டார்கள். ஆனால், அவர்கள் அவ்விருவரையும் உபசரிக்க மறுத்துவிட்டார்கள். அங்கே அவர்கள் ஒரு சுவரைக் கண்டார்கள். அது கீழே விழ இருந்தது. அவர் அந்தச் சுவரைச் சரிப்படுத்தி நிறுத்தினார். மூஸா கூறினார்: “நீர் விரும்பியிருந்தால், இப்பணிக்காகக் கூலி வாங்கியிருக்கலாமே!” </span>
<span>18:78 அதற்கு அவர் கூறினார்: “நானும் நீரும் பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது! உம்மால் பொறுமையாய் இருக்க முடியாத விஷயங்களின் உண்மை நிலையை இனி நான் உமக்கு அறிவித்துவிடுகின்றேன். </span>
<span>18:79 அந்தக் கப்பலைப் பற்றிய விஷயம் என்னவெனில், அது கடலில் கூலி வேலை செய்துகொண்டிருந்த சில ஏழைகளுக்குரியது. நான் அதைப் பழுதாக்கிட நாடினேன். ஏனெனில் அவர்களுக்கு முன்னே ஒரு மன்னன் ஆளும் பகுதி இருந்தது! அவன் ஒவ்வொரு கப்பலையும் நிர்ப்பந்தமாகப் பறித்துக் கொண்டிருந்தான். </span>
<span>18:80 மேலும், அந்தச் சிறுவனைப் பற்றிய விஷயம் என்னவெனில், அவனுடைய தாய்தந்தையர் இறைநம்பிக்கையாளர்களாய்த் திகழ்ந்தனர். அவன் தன்னுடைய வரம்புமீறிய போக்கினாலும், நிராகரிப்பினாலும் அவர்களுக்குச் சிரமம் கொடுப்பானோ என்று நாம் அஞ்சினோம். </span>
<span>18:81 ஆகையால் அவர்களுடைய இறைவன் அச்சிறுவனுக்குப் பதிலாக, அவனைவிடச் சிறந்த ஒழுக்கமுள்ள, குடும்ப உறவுகளைப் பெரிதும் பேணக்கூடிய பிள்ளைகளை அவர்களுக்கு வழங்கிட வேண்டுமென நாம் விரும்பினோம். </span>
<span>18:82 மேலும், அந்தச் சுவரைப் பற்றிய விஷயம் என்னவெனில், அது அவ்வூரிலிருந்த இரு அநாதைச் சிறுவர்களுக்குரியது. அதன் அடியில் அவர்களுக்குரிய புதையல் ஒன்று இருந்தது. மேலும், அவர்களின் தந்தை நல்ல மனிதராக இருந்தார். ஆகையால், அவர்கள் இருவரும் பருவ வயதை அடையவேண்டும் என்றும், அவர்களுக்குரிய புதையலை அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் உம் இறைவன் கருதினான். இவையெல்லாம் உம் இறைவனுடைய கருணையினால் நிகழ்ந்தவையாகும். இவற்றில் எதையுமே நான் என் விருப்பப்படி செய்யவில்லை. உம்மால் பொறுமை கொள்ள முடியாதிருந்த விஷயங்களின் உண்மைநிலை இதுதான்!”</span>
<span>18:83 மேலும் (நபியே,) இவர்கள் உம்மிடம் துல்கர்னைன் பற்றிக் கேட்கிறார்கள். நீர் இவர்களிடம் கூறும்: “நான் அவரைப் பற்றிய சில விவரங்களை உங்களுக்கு எடுத்துச் சொல்கின்றேன்.”</span>
<span>18:84 திண்ணமாக நாம் அவருக்கு பூமியில் ஆட்சியதிகாரத்தை அளித்திருந்தோம். மேலும், அவருக்கு எல்லாவிதமான சாதனங்களையும் வாய்ப்புகளையும் வழங்கியிருந்தோம். </span>
<span>18:85 அவர் (ஒரு முக்கியமான பணிக்காக முதலில் மேற்கு நோக்கிப்) புறப்பட்டார். </span>
<span>18:86 சூரியன் மறையும் எல்லையை அவர் அடைந்தபோது கறுப்பு நீரில் அது மறைவதைக் கண்டார். அங்கு அவர், ஒரு சமுதாயத்தார் வாழ்வதைக் கண்டார். அப்போது நாம் கூறினோம்: “துல்கர்னைனே! அவர்களைத் தண்டிக்கவும் உமக்கு ஆற்றல் இருக்கிறது. அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளவும் உம்மால் முடியும்.” </span>
<span>18:87 அதற்கு அவர் கூறினார்: “யாரேனும் கொடுமை புரிந்தால் அவரைத் தண்டிப்போம். பிறகு அவர் தன்னுடைய இறைவனிடம் திரும்பக் கொண்டுவரப்படுவார். அவன் அவருக்கு இன்னும் கடுமையாகத் தண்டனை அளிப்பான்.” </span>
<span>18:88 ஆனால், அவர்களில் எவர் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயலும் புரிகின்றாரோ அவருக்கு நற்கூலி இருக்கிறது. மேலும், நாம் அவருக்கு எளிதான கட்டளைகளையே வழங்குவோம். </span>
<span>18:89 மீண்டும் அவர், (மற்றொரு முக்கியமான பணிக்காகப்) புறப்பட்டார். </span>
<span>18:90 சூரியன் உதயமாகும் எல்லையை அவர் அடைந்துவிட்டார். அப்போது அது ஒரு சமுதாயத்தார் மீது உதிப்பதைக் கண்டார். அதன் வெயிலிலிருந்து தப்பிப்பதற்கான எந்தத் தடுப்பையும் நாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கவில்லை. </span>
<span>18:91 இதுதான் அச்சமுதாயத்தாரின் நிலை! துல்கர்னைனிடம் இருந்தவை அனைத்தையும் நாம் நன்கு அறிந்திருந்தோம். </span>
<span>18:92 பிறகு அவர், (வேறொரு முக்கிய பணியை முன்னிட்டு) புறப்பட்டார். </span>
<span>18:93 அவர் இரு மலைகளுக்கிடையே சென்றார். அப்போது அவற்றின் அருகில் எந்தப் பேச்சையும் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு சமுதாயத்தார் வாழ்வதைக் கண்டார். </span>
<span>18:94 அம்மக்கள் கூறினார்கள்: “துல்கர்னைனே! யஃஜூஜ்மஃஜூஜ் கூட்டத்தார் இந்நாட்டில் பரவலாக அராஜகத்தை விளைவிக்கின்றார்கள். எனவே, நீர் எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவரை எழுப்பித் தருவதற்காக நாங்கள் உமக்கு ஏதேனும் கப்பம் செலுத்த வேண்டுமா?”</span>
<span>18:95 அதற்கு அவர் பதிலளித்தார்: “என்னுடைய இறைவன் எனக்குக் கொடுத்திருப்பவை ஏராளமானவை. எனவே, உங்கள் உழைப்பின் மூலம் எனக்கு உதவி செய்யுங்கள். நான் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு தடுப்புச்சுவரை எழுப்பித் தருகிறேன்; </span>
<span>18:96 இரும்புப் பாளங்களை என்னிடம் கொண்டு வாருங்கள்.” இறுதியில் இரு மலைகளுக்கிடையிலான பகுதியை நிரப்பிவிட்டபோது அவர் (மக்களை நோக்கி) கூறினார்: “இப்பொழுது நெருப்பை மூட்டுங்கள்!” கடைசியில் அந்த இரும்புச் சுவர் முற்றிலும் நெருப்பாய்ப் பழுக்கக் காய்ந்தபோது அவர் கூறினார்: “கொண்டு வாருங்கள், இப்போது நான் உருக்கிய செம்புத்திரவத்தை! அதனைச் சுவற்றின் மேல் ஊற்றுவேன்.” </span>
<span>18:97 யஃஜூஜ்மஃஜூஜ் கூட்டத்தார் ஏறி வராத அளவுக்கு உயரமாகவும், துளையிட முடியாத அளவுக்கு வலுவாகவும் அந்தச் சுவர் அமைந்திருந்தது. </span>
<span>18:98 துல்கர்னைன் கூறினார்: “இது என்னுடைய இறைவனின் கருணையாகும். என் இறைவன் வாக்களித்த நேரம் வந்துவிட்டால், அவன் இதனைத் தூள்தூளாக்கி விடுவான். என்னுடைய இறைவனின் வாக்குறுதி உண்மையானதாகும்.”</span>
<span>18:99 அந்நாளில் நாம் மக்களை (கடல் அலைகளைப்போன்று) சிலருடன் சிலர் மோதிக்கொள்ளும் நிலையில் விட்டுவிடுவோம். (சூர்)எக்காளம் ஊதப்படும். பிறகு மனிதர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டுவோம். </span>
<span>18:100 அந்நாளில் இறைமறுப்பாளர்களின் முன்னே நரகத்தைக் கொண்டு வருவோம். </span>
<span>18:101 அந்நிராகரிப்பாளர்களோ, அவர்கள் எனது நல்லுரைகள் விஷயத்தில் குருடர்களாயும், அதனை செவியுறுவதற்கு முன்வராதவர்களாயும் இருந்தார்கள். </span>
<span>18:102. இறைவனை நிராகரிக்கும் இம்மக்கள் நினைத்திருக்கின்றார்களா, என்னை விடுத்து என்னுடைய அடிமைகளை (தங்களுடைய) காரியம் நிறைவேற்றுபவராய் ஆக்கிக் கொள்ளலாம் என்று? இத்தகைய நிராகரிப்பாளர்களை உபசரிப்பதற்காக நரகத்தை நாம் தயார் செய்து வைத்துள்ளோம். </span>
<span>18:103 (நபியே,) இவர்களிடம் நீர் கூறும்: தம்முடைய செயல்களில் பெரும் நஷ்டத்திற்கு ஆளானவர்கள் யார் என்பதை நாம் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? </span>
<span>18:104 அவர்கள் யாரென்றால், உலக வாழ்க்கையில் அவர்களுடைய முயற்சிகள் அனைத்தும் நேர்வழியிலிருந்து பிறழ்ந்தே இருந்தன. ஆனால், அவர்களோ தாம் அனைத்தையும் சரியாகச் செய்திருக்கின்றோம் என்ற கருத்தில் மூழ்கிக் கிடந்தார்கள். </span>
<span>18:105 அவர்கள்தாம் தங்களுடைய இறைவனின் சான்றுகளை ஏற்க மறுத்துவிட்டவராவர். மேலும் அவனுடைய சந்திப்பினைக் குறித்து நம்பிக்கைகொள்ளாதவராவர். இதனால் அவர்களுடைய செயல்கள் அனைத்தும் வீணாகிவிட்டன. மேலும் மறுமையில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் நாம் அளிக்கமாட்டோம். </span>
<span>18:106 அவர்களுக்குரிய கூலி நரகமேயாகும் அவர்கள் நிராகரித்ததன் காரணத்தாலும், என்னுடைய வசனங்களையும் என்னுடைய தூதர்களையும் பரிகசித்துக் கொண்டிருந்ததன் காரணத்தாலும்! </span>
<span>18:107 ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களை உபசரிப்பதற்காக ‘ஃபிர்தௌஸ்’ எனும் சுவனங்கள் இருக்கின்றன. </span>
<span>18:108 அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவற்றை விட்டு வெளியேறி வேறு எங்கேனும் சென்றிட அவர்கள் சற்றும் விரும்பமாட்டார்கள். </span>
<span>18:109 (நபியே,) கூறும்: “என் இறைவனின் வாக்குகளை எழுதுவதற்குக் கடலே மையாகிவிட்டாலும், கடல்நீர் தீர்ந்து போய்விடுமே தவிர என் இறைவனின் வாக்குகள் தீர்ந்துபோய் விடாது. அதேபோல இன்னொரு மடங்கு மையை நாம் கொண்டு வந்தாலும் அதுவும் போதாது.”</span>
<span>18:110 (நபியே,) கூறும்: “நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்! உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான் என்று எனக்கு வஹி வருகிறது. எனவே, எவர் தன் இறைவனின் சந்திப்பை எதிர்பார்த்தவராய் இருக்கின்றாரோ அவர் நற்செயல்கள் புரியட்டும்; அடிபணிவதில் தன் இறைவனுடன் யாரையும் இணையாக்காதிருக்கட்டும்!”</span>
</div><div>
<span>மர்யம்</span>
<span>19:1 காஃப், ஹா, யா, ஐன், ஸாத். </span>
<span>19:2 உம் இறைவன் தன் அடியார் ஜகரிய்யா மீது பொழிந்த அருளைப் பற்றிய செய்தியாகும் இது. </span>
<span>19:3 அவர் தம் இறைவனை மெதுவாக அழைத்தபோது!</span>
<span>19:4 அவர் பணிவுடன் வேண்டினார்: “என் அதிபதியே! என் எலும்புகளோ நலிவடைந்துவிட்டன. மேலும், நரையினால் என் தலை மினுமினுத்துவிட்டது. மேலும், என் அதிபதியே! நான் உன்னிடம் பிரார்த்தனை புரிந்து ஒருபோதும் ஏமாற்றம் அடைந்ததில்லை. </span>
<span>19:5 எனக்குப்பின் என் உறவினர்கள் (மேற்கொள்ளக்கூடிய) தீயவழி பற்றி நான் அஞ்சுகிறேன். மேலும், என்னுடைய மனைவி மலடியாக இருக்கின்றாள். எனவே, உனது தனிப்பட்ட அருளால் எனக்கு ஒரு வாரிசை வழங்குவாயாக! </span>
<span>19:6 அவர் எனக்கும் யஃகூபுடைய குடும்பத்தினருக்கும் வாரிசாகத் திகழட்டும். மேலும், என் இறைவா! அவரை விரும்பத்தக்க மனிதராய் ஆக்குவாயாக!” </span>
<span>19:7 (பதிலளிக்கப்பட்டது:) “ஜகரிய்யாவே! உமக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கும் என்று நாம் நற்செய்தி அறிவிக்கின்றோம்; அதன் பெயர் ‘யஹ்யா’ ஆகும். இந்தப் பெயருடைய எவரையும் இதற்கு முன் நாம் படைக்கவில்லை.” </span>
<span>19:8 அவர் கூறினார்: “என் இறைவா! எனக்கு எவ்வாறு ஆண் குழந்தை பிறக்கும்? என் மனைவியோ மலடியாக இருக்கிறாள். நானோ முதுமையினால் தளர்ந்து போய்விட்டேன்.”  </span>
<span>19:9 பதில் கிடைத்தது: “அவ்வாறே ஆகும்.” உம் இறைவன் கூறுகின்றான்: “இது என்னைப் பொறுத்து சுலபமானதாகும் இதற்கு முன், நீர் எப்பொருளாகவும் இல்லாதிருந்தபோது, நான் உம்மைப் படைத்திருக்கின்றேனே!” </span>
<span>19:10 அதற்கு ஜகரிய்யா, “என் இறைவனே! எனக்கு ஓர் அடையாளத்தை நிர்ணயம் செய்வாயாக” என்றார். அதற்கு இறைவன், “உமக்கு அடையாளம், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மக்களிடம் உம்மால் பேச இயலாமல் போவதாகும்” என்றான். </span>
<span>19:11 பிறகு, அவர் மாடத்திலிருந்து வெளியேறி தம் சமுதாயத்தாரிடம் வந்து, “நீங்கள் காலையிலும் மாலையிலும் இறைவனைத் துதியுங்கள்” என்று சாடையாய் உணர்த்தினார். </span>
<span>19:12 “யஹ்யாவே, நீர் வேதத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்ளும்.” குழந்தைப் பருவத்திலேயே அவருக்கு நாம் ஹுக்மை* வழங்கினோம். </span>
<span>19:13 மேலும், நம்மிடமிருந்து இளகிய மனத்தையும் தூய்மையையும் வழங்கியிருந்தோம். </span>
<span>19:14 அவர் மிகவும் பேணுதல் உள்ளவராயும் தம் தாய் தந்தையரின் கடமைகளைச் செவ்வனே ஆற்றுபவராகவும் திகழ்ந்தார். அவர் முரடராகவோ, கீழ்ப்படியாதவராகவோ இருக்கவில்லை. </span>
<span>19:15 அவர்மீது சாந்தி உண்டாகட்டும் அவர் பிறந்த நாளிலும், இறக்கும் நாளிலும், மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாளிலும்!</span>
<span>19:16 மேலும் (நபியே!) மர்யத்தைப் பற்றி இந்த வேதத்தில் (உள்ளதை) நீர் விவரித்துக் கூறுவீராக! அவர் தம்முடைய குடும்பத்தாரை விட்டு விலகி கிழக்குப் பக்கமாக ஒதுங்கியிருந்த நேரத்தில் அவர் ஒரு திரையிட்டு அவர்களிலிருந்து மறைந்திருந்தார். (அப்போது) நாம் அவரிடம் நம்முடைய ரூஹை (வானவரை) அனுப்பினோம். அவர் மர்யத்தின் முன்னிலையில் முழு மனித உருவில் தோன்றினார். </span>
<span>19:17 உடனே மர்யம் கூறினார்: “உம்மை விட்டுக் கருணைமிக்க இறைவனிடம் நான் பாதுகாவல் கோருகின்றேன், நீர் இறையச்சம் உள்ளவராயின்!” </span>
<span>19:18 அதற்கு அவர் கூறினார்: “நான் உம் இறைவனின் தூதராவேன்; தூய்மையான ஓர் ஆண் குழந்தையை உமக்கு வழங்குவதற்காக நான் அனுப்பப்பட்டுள்ளேன்.” </span>
<span>19:19 மர்யம் கூறினார்: “எனக்கு எவ்வாறு ஆண் குழந்தை பிறக்கும்? என்னை எந்த மனிதனும் தீண்டவில்லையே; நான் தீய நடத்தையுடையவளும் அல்லவே!” </span>
<span>19:20 அதற்கு வானவர் கூறினார்: “அவ்வாறே நிகழும்.” உம் இறைவன் கூறுகின்றான்: “அவ்வாறு செய்வது எனக்கு மிகவும் எளிதானது; </span>
<span>19:21 மேலும், நாம் அக்குழந்தையை மக்களுக்கு ஒரு சான்றாகவும் நம்மிடமிருந்து ஒரு கருணையாகவும் ஆக்குவதற்காகவே இவ்வாறு செய்கின்றோம். மேலும், அது நடந்தே தீரும்!”</span>
<span>19:22 பின்னர், மர்யம் அக்குழந்தையைக் கர்ப்பம் தரித்தார். கர்ப்பத்தோடு அவர் தொலைவான ஓர் இடத்திற்கு ஒதுங்கிச் சென்றார். </span>
<span>19:23 பிரசவ வேதனை அவரை ஒரு பேரீச்சை மரத்தடியின் பக்கம் கொண்டு வந்து சேர்த்தது. அப்போது அவர், “அந்தோ! நான் இதற்கு முன்னரே மரணமடைந்து முற்றிலும் மறக்கடிக்கப்பட்டுப் போயிருந்திருக்கக் கூடாதா?” என்று கூறலானார். </span>
<span>19:24 அப்பொழுது கீழே இருந்து ஒரு வானவர் அவரை அழைத்துக் கூறினார்: “நீர் கவலைப்படாதீர்; உம் இறைவன் உமக்குக் கீழே ஒரு நீரூற்றை அமைத்துள்ளான். </span>
<span>19:25 மேலும், பேரீச்சை மரத்தின் அடிப்பகுதியைப் பிடித்துச் சற்று உலுக்கும். அது உம்மீது புத்தம் புதிய பேரீச்சம் பழங்களை உதிர்க்கும்; </span>
<span>19:26 ஆக, நீர் புசித்தும் பருகியும் கண் குளிர்ந்திருப்பீராக! பிறகு, மனிதரில் எவரையேனும் நீர் கண்டால் (அவரிடம்) கூறிவிடும்: “கருணைமிக்க இறைவனுக்காக நோன்பு நோற்க வேண்டுமென நான் நேர்ந்திருக்கின்றேன். ஆதலால், இன்று நான் எவரிடமும் பேசமாட்டேன்.”</span>
<span>19:27 பிறகு, அவர் அக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினர்: “மர்யமே! நீ ஒரு பெரும் பாவச்செயலைச் செய்து விட்டாயே...! </span>
<span>19:28 ஹாரூனின் சகோதரியே! உன் தந்தை கெட்ட மனிதராய் இருக்கவில்லை; உன் தாயும் தீய நடத்தையுடையவளாய் இருக்கவில்லை!”</span>
<span>19:29 அப்போது, மர்யம் குழந்தையின் பக்கம் சைக்கினை செய்தார். அதற்கு மக்கள் கேட்டார்கள்: “தொட்டிலில் இருக்கும் குழந்தையிடம் நாங்கள் எப்படிப் பேசுவது?” </span>
<span>19:30 உடனே, குழந்தை கூறிற்று: “நான் அல்லாஹ்வின் அடிமை ஆவேன். அவன் எனக்கு வேதம் அருளினான்; என்னைத் தூதராகவும் ஆக்கினான்; </span>
<span>19:31 பெரும் பாக்கியமுடையவனாயும் ஆக்கினான் நான் எங்கிருந்தாலும் சரியே! தொழுகை மற்றும் ஜகாத்தை நிறைவேற்றுமாறும் அவன் எனக்குக் கட்டளையிட்டிருக்கின்றான், நான் உயிரோடு இருக்கும் காலம் வரை! </span>
<span>19:32 மேலும், என் தாயின் கடமையை நிறைவேற்றுபவனாயும் என்னை ஆக்கினான். மேலும், முரடனாகவும், துர்ப்பாக்கியமுடையவனாகவும் என்னை ஆக்கவில்லை. </span>
<span>19:33 என் மீது சாந்தி உண்டாகும் நான் பிறந்த நாளிலும், இறக்கும் நாளிலும், உயிரோடு மீண்டும் எழுப்பப்படும் நாளிலும்!”</span>
<span>19:34 இவர்தான் மர்யமின் குமாரர் ஈஸா! இதுதான் இவரைக் குறித்து மக்கள் ஐயம் கொண்டிருக்கும் விஷயத்தில் உண்மையான கூற்றாகும். </span>
<span>19:35 எவரையும் மகனாக ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வின் நியதியல்ல! அவன் புனிதமானவன்; அவன் ஒரு விஷயத்தைத் தீர்மானித்தால் “ஆகிவிடு” என்றுதான் ஆணையிடுகின்றான்; உடனே அது ஆகிவிடுகின்றது. </span>
<span>19:36 மேலும் (ஈஸா கூறியிருந்தார்:) “திண்ணமாக, என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனும் அல்லாஹ்தான்! எனவே, அவனுக்கே நீங்கள் அடிபணியுங்கள். இதுதான் நேரான வழியாகும்!” </span>
<span>19:37 ஆயினும், அவர்களில் பல்வேறு பிரிவினர் தமக்குள் கருத்து மாறுபாடு கொள்ளலாயினர். எனவே, அந்த மாபெரும் மறுமை நாளினை அவர்கள் பார்க்கும்போது இறைவனை நிராகரித்தவர்களுக்கு பெரும் கேடுதான் விளையும்! </span>
<span>19:38 அவர்கள் நம்மிடம் வரும் நாளில் அவர்களுடைய காதுகள் நன்கு கேட்டுக்கொண்டிருக்கும்; கண்கள் நன்கு பார்த்துக் கொண்டிருக்கும். ஆயினும், இந்தக் கொடுமையாளர்கள் இன்று வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடக்கின்றார்கள்!</span>
<span>19:39 (நபியே!) இம்மக்கள் கவனமின்றியும், நம்பிக்கை கொள்ளாதவர்களாயும் உள்ள இந்நிலையில், அந்த மறுமைநாளைக் குறித்து இவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! அந்நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும்போது வருந்துவதைத்தவிர வேறு வழியேதும் இராது. </span>
<span>19:40 இறுதியில், இப்பூமிக்கும் இதன் மீதுள்ள பொருள்கள் அனைத்திற்கும் நாமே வாரிசாகிவிடுவோம். மேலும், எல்லாரும் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவார்கள். </span>
<span>19:41 மேலும், இவ்வேதத்தில் உள்ள இப்ராஹீமின் சரிதையை விவரிப்பீராக! திண்ணமாக, அவர் வாய்மை உள்ளவராகவும், நபியாகவும் இருந்தார். </span>
<span>19:42 (சற்று அவர்களுக்குப் பின்வரும் சந்தர்ப்பத்தை நினைவூட்டும்:) அப்போது அவர் தம் தந்தையிடம் கூறினார்: “என் அன்புத் தந்தையே! கேட்கவோ, பார்க்கவோ முடியாத, உங்களுக்கு எவ்விதப் பலனும் அளிக்கவோ இயலாதவற்றை நீங்கள் ஏன் வணங்குகின்றீர்கள்? </span>
<span>19:43 என் தந்தையே! உங்களுக்குக் கிடைக்காத ஒரு ஞானம் எனக்குக் கிடைத்துள்ளது. எனவே, என்னைப் பின்பற்றுவீர்களாக! நான் உங்களுக்கு நேரிய வழியைக் காண்பிப்பேன். </span>
<span>19:44 என் தந்தையே! நீங்கள் ஷைத்தானுக்கு அடிபணியாதீர்கள்; திண்ணமாக, ஷைத்தான் கருணைமிக்க இறைவனின் கட்டளைக்கு மாறு செய்பவன் ஆவான். </span>
<span>19:45 என் தந்தையே! கருணைமிக்க இறைவனின் தண்டனைக்கு நீங்கள் இலக்காகி விடுவீர்களோ; மேலும் ஷைத்தானின் தோழனாகி விடுவீர்களோ என்று நான் அஞ்சுகின்றேன்!” </span>
<span>19:46 அதற்கு அவருடைய தந்தை கூறினார்: “இப்ராஹீமே! நீ என்னுடைய தெய்வங்களை நிராகரித்து விட்டாயா? இதனை நீ தவிர்த்துக் கொள்ளாவிடில் நிச்சயம் உன்னை நான் கல்லால் அடிப்பேன்; நீ என்றென்றும் என்னை விட்டுப் பிரிந்து போய்விடு!” </span>
<span>19:47 அதற்கு இப்ராஹீம் கூறினார்: “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! உங்களை மன்னித்தருளுமாறு என் இறைவனிடம் நான் இறைஞ்சுவேன். நிச்சயமாக, என் இறைவன் என் மீது மிகவும் கிருபையுள்ளவனாக இருக்கின்றான். </span>
<span>19:48 மேலும், உங்களைவிட்டும், அல்லாஹ்வை அன்றி, நீங்கள் பிரார்த்தித்து வருகின்ற தெய்வங்களை விட்டும் நான் ஒதுங்கிக் கொள்கின்றேன்; நான் என் இறைவனையே பிரார்த்திக்கின்றேன். நான் என் இறைவனைப் பிரார்த்தித்து ஏமாந்து போகமாட்டேன் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு.”</span>
<span>19:49 பிறகு, அம்மக்களையும், அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கி வருகின்ற பிற தெய்வங்களையும் விட்டு அவர் ஒதுங்கிக் கொண்டபோது, நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும் மற்றும் யஃகூப் போன்ற மக்களையும் வழங்கினோம். மேலும், அவர்கள் ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம். </span>
<span>19:50 மேலும், அவர்களுக்கு நம்முடைய அருட்கொடையிலிருந்து வழங்கினோம். உயர்ந்த, உண்மையான புகழையும் அவர்களுக்கு அளித்தோம். </span>
<span>19:51 மேலும், மூஸாவைப் பற்றி இவ்வேதத்தில் உள்ளதைக் கூறுவீராக. நிச்சயமாக, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருந்தார்; தூதராகவும், நபியாகவும் இருந்தார். </span>
<span>19:52 மேலும், நாம் ‘தூர்’ மலையின் வலப்பக்கத்தில் இருந்து அவரை அழைத்தோம்; தனியே உரையாடுவதன் மூலம் நம்மிடம் நெருங்குவதற்கான வாய்ப்பை அவருக்கு அளித்தோம். </span>
<span>19:53 மேலும், நம் தயவினால் அவருடைய சகோதரர் ஹாரூனை ஒரு நபியாக நியமித்து அவருக்கு உதவியாளராக ஆக்கினோம். </span>
<span>19:54 (நபியே!) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடுவீராக! திண்ணமாக, அவர் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார். </span>
<span>19:55 மேலும், அவர் தொழுகை மற்றும் ஜகாத்தை நிறைவேற்றுமாறு தம்முடைய குடும்பத்தாரைப் பணிப்பவராக இருந்தார்; மேலும், தம் இறைவனிடம் விரும்பத்தக்க மனிதராகவும் இருந்தார். </span>
<span>19:56 (நபியே!) இத்ரீஸைப் பற்றி இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடுவீராக! திண்ணமாக, அவர் ஒரு நேர்மையாளராகவும், நபியாகவும் இருந்தார். </span>
<span>19:57 மேலும், நாம் அவரை உயர்ந்த இடத்திற்கு உயர்த்தினோம். </span>
<span>19:58 இவர்களோ, அல்லாஹ் தன் அருட்பேறுகளை வழங்கியுள்ள நபிமார்கள் ஆவர். இவர்கள் ஆதத்தின் வழித்தோன்றல்களிலிருந்தும், நூஹுடன் (கப்பலில்) நாம் ஏற்றியிருந்த மக்களின் வழித்தோன்றல்களிலிருந்தும் இப்ராஹீம் மற்றும் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிலிருந்தும் தோன்றியவர்களாவர். மேலும், நாம் நேர்வழி காட்டி, தேர்ந்தெடுத்துக் கொண்ட மக்களைச் சார்ந்தவர்களுமாவர். இவர்களின் நிலைமை எவ்வாறிருந்த தெனில் கருணைமிக்க இறைவனின் வசனங்கள் இவர்களிடம் ஓதிக்காட்டப்பட்டால், அழுதுகொண்டே ஸுஜூதில்* விழுந்துவிடுவார்கள். </span>
<span>19:59 அவர்களுக்குப் பிறகு, சீர்கெட்ட மக்கள் அவர்களுடைய பிற்சந்ததிகளாகத் தோன்றினார்கள். அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள். மன இச்சைகளைப் பின்பற்றினார்கள்! அத்தகையவர்கள் தங்கள் வழிகேட்டின் தீயவிளைவை விரைவில் சந்திப்பார்கள். </span>
<span>19:60 ஆயினும், எவர்கள் பாவமன்னிப்புக் கோரி, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் புரிந்தார்களோ, அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். மேலும், அவர்களுக்கு இம்மியளவும் அநீதி இழைக்கப்பட மாட்டாது. </span>
<span>19:61 கருணைமிக்க இறைவன் தன்னுடைய அடியார்களுக்கு அவர்கள் காணாத நிலையில், அளித்துள்ள வாக்குறுதியான நிலையான சுவனபதிகள் அவர்களுக்கு இருக்கின்றன. நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நிறைவேறியே தீரும். </span>
<span>19:62 அங்கு அவர்கள் எவ்வித வீணான விஷயத்தையும் செவியுறமாட்டார்கள். எதைச் செவியுற்றாலும் சரியானவற்றையே செவியுறுவார்கள். மேலும், அங்கு அவர்களுக்குரிய உணவு காலையிலும், மாலையிலும் (தொடர்ந்து) அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும். </span>
<span>19:63 இத்தகைய சுவனமாகும் அது! நம் அடியார்களில் எவர்கள் இறையச்சம் கொண்டு வாழ்கின்றார்களோ அவர்களையே இதற்கு வாரிசுகளாக்குவோம். </span>
<span>19:64 (நபியே!) “நாங்கள் உம் இறைவனின் உத்தரவின்றி இறங்குவதில்லை; எங்களுக்கு முன்னால் இருப்பவை, பின்னால் இருப்பவை மற்றும் இவற்றிற்கிடையேயுள்ளவை ஆகிய ஒவ்வொன்றுக்கும் அவனே உரிமையாளன் ஆவான். மேலும், உம் இறைவன் மறக்கக் கூடியவனல்லன். </span>
<span>19:65 வானங்கள், பூமி மற்றும் அவ்விரண்டிற்குமிடையே உள்ள அனைத்திற்கும் அவன் அதிபதி ஆவான். எனவே, அவனுக்கு நீர் அடிபணிவீராக! மேலும், அவனுக்கு அடிபணிவதிலேயே நிலைத்திருப்பீராக! அவனுக்கு சமமானவர் எவரையேனும் நீர் அறிவீரா?”</span>
<span>19:66 மனிதன், கேட்கின்றான்: “நான் இறந்துவிட்டால், உண்மையிலேயே மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படுவேனா?” </span>
<span>19:67 முன்பு அவன் எப்பொருளாயும் இல்லாதிருந்தபோது நாம்தாம் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்ப்பதில்லையா? </span>
<span>19:68 உம் இறைவன் மீது ஆணையாக! அவர்கள் அனைவரையும் (அவர்களோடு) ஷைத்தான்களையும் அவசியம் நாம் ஒன்று திரட்டிக் கொண்டு வருவோம். பிறகு, நரகத்தைச் சுற்றிலும் அவர்களைக் கொண்டுவந்து முழங்காலிட்டு நிறுத்துவோம். </span>
<span>19:69 பிறகு, அவர்களில் எவன் கருணைமிக்க இறைவனுக்கு மாறு செய்வதில் தீவிரமாக இருந்தானோ அவனை ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் தனியே பிரித்துவிடுவோம். </span>
<span>19:70 பின்னர், அனைவரையும்விட நரகில் புகுத்தப்படுவதற்கு யார் அதிகம் தகுதியுடையவர்களோ அவர்களை நாம் நன்கு அறிவோம். </span>
<span>19:71 உங்களில் எவரும் நரகத்தைக் கடந்து செல்லாதவராய் இருக்க முடியாது. இது முடிவு செய்யப்பட்ட ஒரு விஷயமாகும்; இதனை நிறைவேற்றுவது உம்முடைய இறைவனின் பொறுப்பாகும். </span>
<span>19:72 (உலக வாழ்வில்) இறையச்சம் கொண்டு வாழ்ந்தவர்களை நாம் காப்பாற்றுவோம். கொடுமையாளர்களை அதிலேயே வீழ்ந்து கிடக்குமாறு விட்டுவிடுவோம். </span>
<span>19:73 இவர்களிடம் நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக்காட்டப்பட்டால், நிராகரிப்பவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களிடம், “நம் இரு பிரிவினரில் யார் நல்ல நிலையில் உள்ளவர்கள், யாருடைய அவைகள் மிகக் கம்பீரமாக இருக்கின்றன என்பதைக் காட்டுங்கள்” என்று கூறுவார்கள். </span>
<span>19:74 உண்மையில், இவர்களுக்கு முன் இவர்களைவிட எவ்வளவோ அதிகச் சாதனங்களை வைத்திருந்தவர்களும் வெளிப்பகட்டில் இவர்களைவிட மிகைத்திருந்தவர்களுமான எத்தனையோ சமூகங்களை நாம் அழித்திருக்கின்றோம். </span>
<span>19:75 இவர்களிடம் கூறுங்கள்: எவர்கள் வழிகேட்டிலே வீழ்ந்திருக்கின்றார்களோ அவர்களுக்கு கருணைமிக்க இறைவன் கால அவகாசம் அளிக்கின்றான். எதுவரையெனில், தங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்ததை அது அல்லாஹ் அளிக்கும் வேதனையாக இருந்தாலும் சரி, மறுமையாக இருந்தாலும் சரி, அதனை அவர்கள் காண்கிறார்கள்; அப்போது யாருடைய நிலைமை மோசமானது; யாருடைய கூட்டம் பலம் குன்றியது என்பது அவசியம் அவர்களுக்குத் தெரிந்துவிடும். </span>
<span>19:76 (இதற்கு மாறாக) எவர்கள் நேர்வழியை மேற்கொள்கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் நேர் வழியில் முன்னேற்றத்தை வழங்குகின்றான். மேலும், நிலைத்திருக்கும் நற்செயல்கள்தாம் உம் இறைவனிடத்தில் நற்கூலியையும் நல்ல முடிவையும் பொறுத்து மிகவும் சிறந்தவையாகும். </span>
<span>19:77 எவன் நம்முடைய சான்றுகளை மறுக்கின்றானோ மேலும், ‘பொருட் செல்வமும் மக்கட் செல்வமும் எனக்கு வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கும்’ என்றும் கூறுகின்றானோ அவனை நீர் பார்த்தீரா? </span>
<span>19:78 அவன் மறைவான உண்மைகளை அறிந்துகொண்டானா? அல்லது கருணை மிக்க இறைவனிடம் ஏதேனும் உடன்படிக்கை செய்து வைத்திருக்கின்றானா? </span>
<span>19:79 அப்படி ஒன்றும் இல்லை. அவன் பிதற்றுவதை நாம் எழுதி வைத்துக் கொள்வோம். அவனுக்குத் தண்டனையை மேலும் மேலும் அதிகமாக்குவோம். </span>
<span>19:80 எந்தப் பொருட் செல்வத்தையும் மக்கட் செல்வத்தையும் பற்றி அவன் பெருமையடித்துக் கொள்கின்றானோ அவை அனைத்தும் இறுதியில் நமக்கே உரியனவாகிவிடும்; அவன் தனியாகவே நம்மிடம் வருவான். </span>
<span>19:81 அல்லாஹ்வை விடுத்து வேறு கடவுளரை இவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்; அவர்கள் இவர்களுக்கு உதவியாளராய் ஆக வேண்டும் என்பதற்காக! </span>
<span>19:82 அவ்வாறு (எந்த உதவியாளரும்) இல்லை! அக்கடவுளர் அனைவரும் இவர்களின் வழிபாட்டை மறுத்துவிடுவர். ஏன், இவர்களுக்கு எதிரிகளாகவும் மாறிவிடுவர். </span>
<span>19:83 நீர் கவனிக்கவில்லையா? சத்தியத்தை நிராகரிப்போர் மீது ஷைத்தான்களை நாம் ஏவி விட்டிருக்கின்றோம். அவர்கள் (சத்தியத்தை எதிர்க்குமாறு) இவர்களை அதிகம் அதிகம் தூண்டிக் கொண்டிருக்கின்றார்கள்! </span>
<span>19:84 எனவே, இவர்கள் மீது வேதனை இறங்க வேண்டுமென நீர் அவசரப்படாதீர். நாம் அவர்களுக்காக (நாட்களை) எண்ணிக் கொண்டிருக்கின்றோம். </span>
<span>19:85 அந்த நாள் வரத்தான் போகின்றது. அன்று, கருணை மிக்க இறைவனின் திருமுன் இறையச்சமுள்ள மக்களை, விருந்தினரைப் போன்று ஒன்று சேர்ப்போம். </span>
<span>19:86 குற்றவாளிகளையோ தாகித்த மிருகங்களைப் போன்று நரகத்தின் பக்கம் விரட்டிச் செல்வோம். </span>
<span>19:87 அந்நாளில் எவராலும் எவ்விதப் பரிந்துரையும் சமர்ப்பிக்க இயலாது கருணை மிக்க இறைவனின் ஒப்புதல் பெற்றவர்களைத் தவிர!</span>
<span>19:88 “கருணைமிக்க இறைவன் ஒருவரை மகனாக ஏற்படுத்தியுள்ளான்” என்று அவர்கள் கூறுகின்றார்கள். </span>
<span>19:89 எத்தகைய அபத்தமான விஷயத்தை நீங்கள் இட்டுக்கட்டுகிறீர்கள்!</span>
<span>19:90 அதனால் வானங்கள் உடைந்துவிடவும், பூமி பிளந்துவிடவும், மலைகள் தகர்ந்து நொறுங்கிவிடவும் போகின்றன. </span>
<span>19:91 (ஏனெனில்) இப்படி கருணைமிக்க இறைவனுக்கு சந்ததி இருக்கிறது என்று மக்கள் கூறுவது கொடூரமான பேச்சாகும். </span>
<span>19:92 ஒருவரை மகனாக ஏற்படுத்திக்கொள்வது கருணைமிக்க இறைவனுக்கு ஏற்றது அல்ல! </span>
<span>19:93 வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைவரும் அடிமைகளாய் கருணை மிக்க இறைவனின் திருமுன் வரத்தான் போகின்றனர். </span>
<span>19:94 அவன் அவர்கள் அனைவரையும் சூழ்ந்து கொண்டும் இருக்கின்றான்; மேலும், அவர்களைக் கணக்கிட்டும் வைத்துள்ளான். </span>
<span>19:95 மறுமை நாளில் இவர்கள் எல்லோரும் தனித்தனியாக அவனது திருமுன் வருவார்கள். </span>
<span>19:96 எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்களோ அவர்களுக்காக விரைவில் கருணை மிக்க இறைவன் (மக்களின் உள்ளங்களில்) அன்பைத் தோற்றுவிப்பான். </span>
<span>19:97 எனவே (நபியே!) நாம் இந்த வேதத்தை உம்முடைய மொழியில் (இறக்கியருளி) எளிதாக்கி இருப்பது, இறையச்சம் கொண்டவர்களுக்கு நீர் இதன் மூலம் நற்செய்தி அறிவிப்பதற்காகவும் மேலும், பிடிவாதத்தில் மூழ்கியிருக்கும் சமூகத்தை இதன் மூலம் எச்சரிக்கை செய்வதற்காகவுமே ஆகும். </span>
<span>19:98 இவர்களுக்கு முன்னால் எத்தனையோ சமூகங்களை நாம் அழித்து விட்டிருக்கின்றோம்; (இன்று) அவர்களில் எவருடைய அடையாளத்தையேனும், நீர் எங்கேயாவது காண்கின்றீரா? அல்லது அவர்களுடைய எந்த அரவத்தையாவது எங்கேயாவது கேட்கின்றீரா?</span>
</div><div>
<span>தாஹா</span>
<span>20:1 தா; ஹா. </span>
<span>20:2 நீர் துன்பத்திற்குள்ளாக வேண்டும் என்பதற்காக இந்தக் குர்ஆனை உம்மீது நாம் இறக்கியருளவில்லை. </span>
<span>20:3 இதுவோ அஞ்சுகின்ற ஒவ்வொருவருக்கும் ஒரு நினைவூட்டுதலாகும்; </span>
<span>20:4 பூமியையும் உயர்வான வானங்களையும் படைத்தவனிடமிருந்து இறக்கியருளப்பட்டதும் ஆகும். </span>
<span>20:5 கருணைமிக்க இறைவன் (பேரண்டத்தின்) ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளான். </span>
<span>20:6 வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவற்றிற்கும் அவற்றிற்கிடையே உள்ளவற்றிற்கும் மற்றும் மண்ணுக்கு அடியில் உள்ளவற்றிற்கும் அவனே உரிமையாளன் ஆவான். </span>
<span>20:7 நீர் உம்முடைய சொற்களை உரக்கக் கூறும்; ஆனால், இரகசியமாகப் பேசுவதையும் ஏன், அதைவிட மறைவானவற்றையும் திண்ணமாக அவன் அறிகின்றான். </span>
<span>20:8 அவன்தான் அல்லாஹ்; அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவனுக்கு மிகவும் அழகிய பெயர்கள் உள்ளன. </span>
<span>20:9 மேலும் (நபியே!) மூஸாவின் செய்தி உமக்கு எட்டியதா? </span>
<span>20:10 அவர் நெருப்பைக் கண்டபோது தம்முடைய குடும்பத்தாரிடம் கூறினார்: “கொஞ்சம் இருங்கள்; நான் நெருப்பைக் காண்கின்றேன். அதிலிருந்து ஒரு கொள்ளியை உங்களுக்கு நான் கொண்டு வரக்கூடும்; அல்லது அந்த நெருப்பிற்கு அருகில் (பாதையை அறிந்துகொள்ள) ஏதாவது ஒரு வழிகாட்டுதல் எனக்குக் கிடைக்கக்கூடும்.”</span>
<span>20:11 அங்குச் சென்றதும் அவர் உரக்க அழைக்கப்பட்டார்: “மூஸாவே! </span>
<span>20:12 நானே உம்முடைய இறைவன்; உம்முடைய காலணிகளைக் கழற்றிவிடும். திண்ணமாக நீர் “துவா” எனும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர். </span>
<span>20:13 மேலும், நான் உம்மைத் தேர்ந்தெடுத்துள்ளேன். எனவே “வஹியாக”* அருளப்படுகின்றவற்றைச் செவியேற்பீராக! </span>
<span>20:14 திண்ணமாக, நான்தான் அல்லாஹ்; என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே, எனக்கு அடிபணிவீராக! என்னை நினைவுகூர்வதற்காகத் தொழுகையை நிலைநிறுத்துவீராக! </span>
<span>20:15 மறுமைநாள் வருவது திண்ணம். அது வரும் நேரத்தை நான் மறைத்து வைக்க விரும்புகின்றேன்; ஒவ்வொரு ஆன்மாவும் அவரவரின் முயற்சிகளுக்கேற்ற கூலி பெற வேண்டும் என்பதற்காக!</span>
<span>20:16 எனவே, எவன் அந்த நாளின் மீது நம்பிக்கை கொள்ளாமல் தன் மன இச்சையைப் பின்பற்றுகின்றானோ அவன் அந்நாளைப் பற்றிய சிந்தனையிலிருந்து உம்மைத் தடுத்திட வேண்டாம். அவ்வாறாயின் நீர் அழிவிற்குள்ளாகி விடுவீர் </span>
<span>20:17 மேலும், மூஸாவே! உம்முடைய வலக்கரத்தில் இருப்பது என்ன?”</span>
<span>20:18 அதற்கு மூஸா பதிலளித்தார்: “இது என்னுடைய கைத்தடி; இதனை ஊன்றிக் கொண்டு நடப்பேன்; இதன் மூலம் என்னுடைய ஆடுகளுக்கு இலை தழைகளைப் பறித்துப் போடுவேன்; இன்னும் இதன் மூலம் என்னுடைய வேறு பல தேவைகளும் நிறைவேறுகின்றன.” </span>
<span>20:19 அப்போது இறைவன், “மூஸாவே! நீர் அதனைக் கீழே எறிந்துவிடும்” என்றான். </span>
<span>20:20 அவர் அதனை எறிந்துவிட்டார். உடனே அது நெளிந்து செல்லும் பாம்பாயிற்று; </span>
<span>20:21 இறைவன் கூறினான்: “இதனைப் பிடியும்; அஞ்சாதீர்; முன்பு எப்படி இருந்ததோ அப்படியே இதனை மீண்டும் ஆக்கிவிடுவோம். </span>
<span>20:22 மேலும், உம்முடைய கையை உம்முடைய கக்கத்தில் சேர்த்து வைப்பீராக! அது பிரகாசமாக வெளிப்படும், எத்தகைய ஊறுமின்றி! இது மற்றொரு சான்றாகும். </span>
<span>20:23 ஏனெனில், நாம் உமக்கு நம்முடைய மாபெரும் சான்றுகளைக் காண்பிக்கக் கூடியவராய் இருக்கிறோம். </span>
<span>20:24 இனி, நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும்; அவன் வரம்பு மீறியவனாக இருக்கின்றான்.” </span>
<span>20:25 அதற்கு மூஸா வேண்டிக் கொண்டார்: “என் இறைவா, என் நெஞ்சத்தை விரிவாக்கியருள்வாயாக!</span>
<span>20:26 மேலும், என் செயல்களை எனக்கு இலகுவாக்கித் தருவாயாக. </span>
<span>20:27 என் நாவிலுள்ள முடிச்சை அவிழ்த்து விடுவாயாக;</span>
<span>20:28 நான் கூறுவதை மக்கள் புரிந்து கொள்வார்கள். </span>
<span>20:29 மேலும், என் குடும்பத்தாரிலிருந்து ஒருவரை;</span>
<span>20:30 என்னுடைய சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியாளராக நியமிப்பாயாக; </span>
<span>20:31 அவரைக் கொண்டு என் கையை வலுப்படுத்துவாயாக! </span>
<span>20:32 மேலும், என் பணியில் அவரை துணைவராக்குவாயாக </span>
<span>20:33 நாங்கள் உன்னை அதிகம் துதித்து மேலும், </span>
<span>20:34 உன்னை அதிகம் நினைவுகூரவேண்டும் என்பதற்காக! </span>
<span>20:35 திண்ணமாக, நீ எங்கள் நிலைமைகளை எப்பொழுதும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றாய்.”</span>
<span>20:36 இறைவன் கூறினான்: “மூஸாவே! நீர் வேண்டியவை யாவும் உமக்கு வழங்கப்பட்டுவிட்டன. </span>
<span>20:37 நாம் மற்றொரு தடவையும் உமக்கு உபகாரம் செய்துள்ளோம். </span>
<span>20:38 வஹியின் மூலமாகவே உணர்த்தப்படுகின்ற செய்தியை நாம் உம்முடைய தாய்க்கு உணர்த்திய நேரத்தை நினைவு கூரும். </span>
<span>20:39 “நீர் இக்குழந்தையைப் பெட்டகத்தினுள் வைத்து, பெட்டகத்தை ஆற்றில் விட்டு விடும். ஆறு, அதனைக் கரையில் ஒதுக்கிவிடும்; எனக்கும் அக்குழந்தைக்கும் பகைவனான ஒருவன் அதனை எடுத்துக்கொள்வான்.” “மேலும், என்னிடமிருந்து அன்பை உம்மீது பொழிந்திருக்கின்றேன். இன்னும் என் மேற்பார்வையில் உம்மை வளர்க்க ஏற்பாடு செய்தேன். </span>
<span>20:40 இதனையும் நினைத்துப் பாரும்: உம்முடைய சகோதரி நடந்து சென்று கொண்டிருந்தாள்; பிறகு, அங்குச் சென்று, “இக்குழந்தையை நல்லவிதமாக வளர்க் கக்கூடிய ஒருவரை நான் உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா?” என்று கேட்டாள். இவ்வாறு நாம் உம் தாயாரிடம் உம்மைக் கொண்டு வந்து சேர்த்தோம், அவர் கண்குளிரவும் கவலைப்படாமலும் இருப்பதற்காக! மேலும் (இதனையும் நினைத்துப்பாரும்:) நீர் ஒருவனைக் கொலை செய்துவிட்டிருந்தீர். அந்தச் சிக்கலில் இருந்தும் நாம் உம்மை விடுவித்தோம்! மேலும், நாம் உம்மைப் பல வகைகளிலும் சோதித்தோம். நீர் ‘மத்யன்’ வாசிகளிடம் பல ஆண்டுகள் தங்கியிருந்தீர். பின்னர் மூஸாவே, இப்போது நீர் சரியான நேரத்தில் வந்திருக்கின்றீர். </span>
<span>20:41 நான் உம்மை என்னுடைய பணிக்காகத் தேர்ந்தெடுத்திருக்கின்றேன்; </span>
<span>20:42 எனவே, நீரும் உம் சகோதரரும் என்னுடைய சான்றுகளோடு செல்லுங்கள். மேலும் (பாருங்கள்) என்னை நினைவுகூர்வதில் நீங்கள் குறைபாடு செய்து விடக்கூடாது. </span>
<span>20:43 நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; திண்ணமாக, அவன் வரம்பு மீறிவிட்டிருக்கின்றான். </span>
<span>20:44 அவனிடம் நீங்கள் மென்மையாகப் பேசுங்கள். அவன் அறிவுரையை ஏற்கக்கூடும்; அல்லது அஞ்சக்கூடும்.”</span>
<span>20:45 இருவரும் பணிந்து கூறினர்: “எங்கள் இறைவனே! அவன் அநீதியாகவோ, அல்லது கொடூரமாகவோ எங்களுடன் நடந்து கொள்வான் என்று நாங்கள் அஞ்சுகின்றோம்.” </span>
<span>20:46 அதற்கு அல்லாஹ் கூறினான்: “அஞ்சாதீர்கள். நான் உங்களுடன் இருக்கின்றேன். அனைத்தையும் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும் இருக்கின்றேன்.” </span>
<span>20:47 அவனிடம் சென்று கூறுங்கள்: “நாங்கள் இருவரும் உன்னுடைய இறைவனின் தூதர்களாவோம். இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை எங்களுடன் அனுப்பிவிடு; அவர்களைத் துன்புறுத்தாதே! உன் இறைவனுடைய சான்றை உன்னிடம் நாம் கொண்டு வந்திருக்கின்றோம். மேலும், சாந்தி உண்டாகும் நேர்வழியைப் பின்பற்றி நடப்போருக்கு! </span>
<span>20:48 வஹி மூலம் எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அளிக்கும் வேதனை திண்ணமாக இருக்கிறது பொய்யென்று தூற்றுபவர்க்கும், புறக்கணிப்பவர்க்கும்.”</span>
<span>20:49 ஃபிர்அவ்ன் கேட்டான்: “மூஸாவே! உங்கள் இருவரின் இறைவன் யார்?” </span>
<span>20:50 அதற்கு மூஸா கூறினார்: “ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய படைப்பமைப்பைக் கொடுத்து பின்னர் அதற்கு வழிகாட்டியவன் யாரோ அவன்தான் எங்கள் இறைவன்.” </span>
<span>20:51 ஃபிர்அவ்ன் கேட்டான்: “முன்சென்ற தலைமுறையினரின் நிலைமை என்ன?” </span>
<span>20:52 மூஸா கூறினார்: “அதைப் பற்றிய விவரம் என் இறைவனிடம் ஒரு பதிவேட்டில் பாதுகாக்கப்பட்டுள்ளது. என்னுடைய இறைவன் தவறிழைப்பதுமில்லை. மறப்பதுமில்லை; </span>
<span>20:53 அவன்தான் உங்களுக்காக பூமியை விரிப்பாக அமைத்து, அதில் நீங்கள் நடப்பதற்கான வழிகளை ஏற்படுத்தினான். மேலும், வானத்திலிருந்து மழையைப் பொழியச்செய்து அதன் மூலம் பல்வேறு வகையான தாவரங்களை வெளிப்படுத்தினான். </span>
<span>20:54 உண்ணுங்கள்; உங்கள் கால்நடைகளையும் மேய விடுங்கள். திண்ணமாக, இதில் அறிவுடையோர்க்கு நிறையச் சான்றுகள் உள்ளன.” </span>
<span>20:55 இதே பூமியிலிருந்துதான் நாம் உங்களைப் படைத்தோம். இதிலேயே நாம் உங்களைத் திருப்பிச் சேர்த்து விடுவோம். மேலும், இதிலிருந்தே உங்களை நாம் மறு தடவையும் வெளிக்கொணர்வோம். </span>
<span>20:56 நாம் ஃபிர்அவ்னுக்கு நம் சான்றுகள் அனைத்தையும் காட்டினோம். ஆயினும், அவன் அவற்றைப் பொய்யென்று தூற்றிக்கொண்டே இருந்தான்; ஏற்க மறுத்தான். </span>
<span>20:57 மேலும், கேட்டான்: “மூஸாவே! நீ உன்னுடைய சூனிய வலிமையால் எங்களுடைய நாட்டை விட்டு எங்களை வெளியேற்றவா வந்திருக்கிறாய்? </span>
<span>20:58 நாமும் அதே போன்ற சூனியத்தை உனக்கு எதிராகக் கொண்டு வருவோம். எப்போது எங்கே போட்டி போடலாம் என்று முடிவு செய்துகொள்! அதிலிருந்து நாங்களும் பின்வாங்க மாட்டோம். நீயும் பின் வாங்கக் கூடாது. ஒரு திறந்தவெளியில் நேரில் வா!” </span>
<span>20:59 அதற்கு மூஸா கூறினார்: “பண்டிகை நாளில் வைத்துக்கொள்ளலாம். மேலும் அன்று மக்கள் அனைவரும் முற்பகலில் ஒன்று சேர்க்கப்படட்டும்.”</span>
<span>20:60 ஃபிர்அவ்ன் திரும்பி வந்து தன்னுடைய (மந்திரச்) சூழ்ச்சிகள் அனைத்தையும் திரட்டிக்கொண்டு (போட்டிக்கு) வந்தான். </span>
<span>20:61 மூஸா (உரிய நேரத்தில் எதிர்த்தரப்பினரை நோக்கி) கூறினார்: “துர்ப்பாக்கியவான்களே! அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைக்காதீர்கள். அவ்வாறு செய்வீர்களாயின் ஒரு கடுமையான வேதனையின் மூலம் உங்களை அவன் அழித்து நாசமாக்கிவிடுவான். பொய்யை எவர்கள் புனைந்துரைத்தார்களோ அவர்கள் நிச்சயம் தோல்வியைத்தான் அடைந்தார்கள்.”</span>
<span>20:62 அவர்கள் (இதனைக் கேட்டு) தங்களுக்கிடையே கருத்து வேறுபாடு கொண்டார்கள். மேலும் இரகசிய ஆலோசனை செய்யலானார்கள். </span>
<span>20:63 இறுதியில், சிலர் கூறினர்: “இவர்கள் இருவரும் சூனியக்காரர்களே ஆவர். தம் சூனிய வலிமையால் உங்களை உங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்றும் உங்களின் முன்மாதிரியான வாழ்க்கை முறையை ஒழித்துவிட வேண்டும் என்றும் இவர்கள் கருதுகிறார்கள். </span> 
<span>20:64 எனவே (இன்று) உங்களின் அனைத்து சூழ்ச்சிகளையும் ஒன்றுதிரட்டி ஒருசேர (களத்திற்கு) வாருங்கள். இன்று எவருடைய கை மேலோங்குகிறதோ அவர்தான் வெற்றியடைந்தவராவார் (என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.)”</span>
<span>20:65 சூனியக்காரர்கள் கூறினர்: “மூஸாவே, நீர் எறிகின்றீரா? அல்லது நாங்கள் முதலில் எறியட்டுமா?” </span>
<span>20:66 (அதற்கு மூஸா கூறினார்:) “இல்லை, நீங்களே எறியுங்கள்.” உடனே அவர்களின் கயிறுகளும் கம்புகளும் அவர்களின் சூனிய வலிமையால் ஓடுவதுபோல் மூஸாவிற்குத் தென்படலாயின. </span>
<span>20:67 மூஸா தம் மனத்திற்குள் அஞ்சினார். </span>
<span>20:68 நாம் கூறினோம்: “அஞ்சாதீர்! நீர்தான் வெற்றியாளராவீர். </span>
<span>20:69 உம்முடைய கையில் உள்ளதை எறியும்! அவர்கள் உருவாக்கியவை அனைத்தையும் அது விழுங்கிவிடும். அவர்கள் போலியாக உருவாக்கிக் கொண்டு வந்திருப்பவை சூனியக்காரர்களின் சூழ்ச்சியே ஆகும். சூனியக்காரன் ஒருபோதும் வெற்றியடைவதில்லை. அவன் எத்தனை ஆரவாரத்தோடு வந்தாலும் சரியே!” </span>
<span>20:70 இறுதியில் சூனியக்காரர்கள் அனைவரும் ஸஜ்தாவிற்குத் தள்ளப்பட்டார்கள். மேலும், “நாங்கள் ஹாரூன் மற்றும் மூஸாவின் இறைவனை ஏற்றுக் கொண்டோம்” என்று உரக்கக் கூறினார்கள். </span>
<span>20:71 அப்போது ஃபிர்அவ்ன் கூறினான்: “நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன் நீங்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? அவர்தான் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுக்கொடுத்த உங்கள் குரு என்பது தெரிந்துவிட்டது. இப்பொழுது நான் உங்களின் மாறுகை, மாறுகால்களைத் துண்டித்துவிடுவேன்; மேலும் பேரீச்ச மரத்தின் கம்பங்களில் உங்களை அறைந்து கொல்லப்போகின்றேன். அப்போது, எங்களில் யாருடைய வேதனை மிகக்கடுமையானது; நீடித்து நிற்கக்கூடியது (அதாவது, என்னால் உங்களுக்கு அதிக தண்டனை கொடுக்க முடியுமா? அல்லது மூஸாவினாலா) என்பது உங்களுக்குத் தெரிந்துவிடும்.” </span>
<span>20:72 அதற்கு சூனியக்காரர்கள் மறுமொழி பகர்ந்தார்கள்: “எங்களைப் படைத்த இறைவன் மீது சத்தியமாக! தெளிவான சான்றுகள் எங்கள் கண்ணெதிரே வந்த பின்னரும் நாங்கள் (சத்தியத்தை விட) உனக்கு ஒருபோதும் முன்னுரிமை தரமாட்டோம். எனவே, நீ என்ன செய்ய விரும்புகின்றாயோ செய்துகொள். (அதிகபட்சம்) இவ்வுலக வாழ்வில் மட்டுமே உன்னால் தீர்ப்பு வழங்க முடியும். </span>
<span>20:73 திண்ணமாக, நாங்கள் எங்கள் இறைவன்மீது நம்பிக்கை கொண்டுவிட்டோம், எங்களின் குற்றங்களையும் எந்த சூனியத்தைக் கையாளுமாறு எங்களை நீ நிர்பந்தித்தாயோ அந்த சூனியச் செயலையும் அவன் மன்னிக்க வேண்டும் என்பதற்காக! அல்லாஹ்தான் சிறந்தவனும் நிலைத்திருப்பவனுமாவான்” </span>
<span>20:74 எவன் குற்றம் புரிந்தவனாய் தன் இறைவனிடம் வருவானோ அவனுக்குத் திண்ணமாக நரகம் உண்டு. அதில் அவன் வாழவும் மாட்டான். சாகவும் மாட்டான். </span>
<span>20:75 மேலும், எவர்கள் நம்பிக்கையாளராய் நற்செயல்கள் புரிந்த வண்ணம் அவன் திருமுன் வருகின்றார்களோ அத்தகைய அனைவருக்கும் உயர்பதவிகள் உள்ளன. </span>
<span>20:76 நிலையான சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கியிருப்பார்கள். நற்கூலியாகும் இது, தூய வாழ்க்கையை மேற்கொள்பவர்களுக்காக!</span>
<span>20:77 நாம் மூஸாவிற்கு வஹி அனுப்பினோம்: “நீர் இரவோடு இரவாக என் அடியார்களை அழைத்துக் கொண்டு செல்வீராக! மேலும், கடலில் அவர்களுக்காக உலர்ந்த பாதையை அமைப்பீராக! உம்மை யாரேனும் பின் தொடர்வார்களோ என சற்றும் நீர் அஞ்சத் தேவையில்லை: (கடலைக் கடந்து செல்லும் போது) உமக்கு பயமும் ஏற்பட வேண்டியதில்லை.”</span>
<span>20:78 ஃபிர்அவ்ன் தன் படைகளுடன் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான். பிறகு அவர்களைக் கடல் எவ்வாறு மூழ்கடிக்க வேண்டுமோ அவ்வாறு மூழ்கடித்தது. </span>
<span>20:79 ஃபிர்அவ்ன் தன்னுடைய சமுதாயத்தை வழிகெடுத்தே இருந்தான்; அவர்களுக்குச் சரியான வழியைக் காட்டியிருக்கவில்லை. </span>
<span>20:80 இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! “நாம் உங்கள் பகைவனிடமிருந்து உங்களைக் காப்பாற்றினோம். மேலும், ‘தூர்’ மலையின் வலப் பக்கத்தில் நீங்கள் வருவதற்கென நேரம் நிர்ணயித்தோம். ‘மன்னு’ மற்றும் ‘ஸல்வா’வை* உங்களுக்கு இறக்கி அருளினோம். </span>
<span>20:81 புசியுங்கள் நாம் உங்களுக்கு வழங்கியுள்ள தூய்மையான உண் பொருள்களை! அவற்றைப் புசித்துவிட்டு வரம்பு மீறிச் செயல்படாதீர்கள். அப்படிச் செய்தால் எனது கோபம் உங்கள் மீது இறங்கும்! எவன்மீது எனது கோபம் இறங்குகிறதோ அவன் நிச்சயமாக வீழ்ச்சி அடைந்தே தீருவான். </span>
<span>20:82 ஆயினும், எவன் பாவமன்னிப்புக் கோரி நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்து, பிறகு நேர்மையாகவும் வாழ்கின்றானோ, அவனைத் திண்ணமாக, நான் பெரிதும் மன்னிக்கக்கூடியவனாய் இருக்கின்றேன். </span>
<span>20:83 மேலும், “மூஸாவே! உம்மை உமது சமூகத்தாரை விட முதலில் வரச்செய்தது எது?” </span>
<span>20:84 அதற்கு அவர் கூறினார்: “இதோ! அவர்கள் எனக்குப் பின்னால் வந்து கொண்டே இருக்கிறார்கள். என் இறைவனே! நான் அவசரமாக உன் திருச்சமூகம் வந்து விட்டிருப்பது நீ என்மீது திருப்திகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்!” </span>
<span>20:85 அவன் (இறைவன்) கூறினான்: “கேளும்! நீர் வந்த பிறகு நாம் உம்முடைய சமுதாயத்தினரைத் திண்ணமாக சோதனைக்குள்ளாக்கியிருக்கிறோம். அவர்களை ஸாமிரி வழிகெடுத்துவிட்டான்.”</span>
<span>20:86 மூஸா கடுஞ்சினத்துடனும், மனவேதனையுடனும் தம் சமூகத்தாரிடம் திரும்பிவந்து கூறினார்: “என் சமூகத்தாரே! உங்கள் இறைவன் உங்களிடம் அழகிய வாக்குறுதி அளிக்கவில்லையா? அவ்வாறு வாக்குறுதி அளித்து நீண்டகாலம் ஓடிவிட்டதா என்ன? அல்லது உங்கள் இறைவனின் சினம் உங்கள் மீது இறங்க வேண்டும் என்று கருதி என்னிடம் வாக்குறுதிக்கு மாற்றமாய் நடந்து கொண்டீர்களா?” </span>
<span>20:87 அதற்கு அவர்கள் கூறினர்: “நாங்கள் எங்களின் சுய நாட்டப்படி உம்மிடம் வாக்குறுதிக்கு மாற்றமாய் நடந்து கொள்ளவில்லை; நடந்தது என்னவெனில், மக்களுடைய நகைகளின் பெருஞ்சுமை எங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நாங்கள் அவற்றை எறிந்து விட்டோம். பிறகு இதே போன்று ஸாமிரியும் கொஞ்சம் எறிந்தான். </span>
<span>20:88 மேலும், அவன் அவர்களுக்கு ஒரு காளைக் கன்றின் உருவச் சிலையைச் செய்து கொடுத்தான். அதிலிருந்து காளை மாட்டின் குரலைப் போன்று ஓசை வெளியாகிக்கொண்டிருந்தது. உடனே, மக்கள் உரக்கக் கூறினார்கள்: “உங்கள் இறைவனும் மூஸாவின் இறைவனும் இதுதான். ஆனால் மூஸா இதனை மறந்து விட்டார்.” </span>
<span>20:89 ‘அது, அவர்களின் கூற்றுக்கு மறுமொழி அளிக்காது என்பதையும், அவர்களுக்கு இலாபமோ, நட்டமோ அளிக்கும் யாதொரு ஆற்றலையும் அது பெற்றிருக்கவில்லை என்பதையும் இவர்கள் பார்க்கவில்லையா?’ </span>
<span>20:90 (மூஸா வருவதற்கு) முன்னரே அவர்களிடம் ஹாரூன் கூறியிருந்தார்: “என் சமூகத்தினரே! இக்காளைக் கன்றின் காரணமாக நீங்கள் குழப்பத்தில் வீழ்ந்துவிட்டிருக்கிறீர்கள். நிச்சயமாக ரஹ்மான் கருணை மிக்க இறைவன்தான் உங்கள் அதிபதி ஆவான். எனவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள். நான் சொல்வதை நம்புங்கள்.”</span>
<span>20:91 ஆயினும் அவர்கள், “மூஸா எங்களிடம் திரும்பி வரும்வரை நாங்கள் இதனை வழிபட்டுக்கொண்டே இருப்போம்” என்று (அவரிடம்) கூறிவிட்டார்கள். </span>
<span>20:92 மூஸா (தம் சமூகத்தினரைக் கண்டித்துவிட்டு ஹாரூனை நோக்கி) “ஹாரூனே! அவர்கள் வழிதவறிச் சென்று கொண்டிருந்ததை நீர் பார்த்தபோது, என் வழிமுறைப்படி செயல் படுவதிலிருந்து உம்மைத் தடுத்தது எது? </span>
<span>20:93 நீர் என் கட்டளைக்கு ஏன் மாறு செய்துவிட்டீர்?” என்று கேட்டார். </span>
<span>20:94 அதற்கு ஹாரூன் பதிலளித்தார்: “என் தாயின் மகனே! என் தாடியைப் பிடிக்காதீர்; என் தலைமுடியை இழுக்காதீர்; ‘இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடையே நீ பிரிவினை ஏற்படுத்திவிட்டாய்; மேலும், என்னுடைய சொல்லுக்காக காத்திருக்கவும் இல்லை’ என்று நீர் கூறிவிடுவீரோ என நான் அஞ்சினேன்.” </span>
<span>20:95 மூஸா கேட்டார்: “ஸாமிரியே! உன் விவகாரமென்ன?” </span>
<span>20:96 அதற்கு அவன், “இவர்களுக்குத் தென்படாத ஒன்றை நான் கண்டேன்; தூதரின் காலடியிலிருந்து நான் ஒரு பிடி மண்ணை எடுத்து அதனை எறிந்தேன்; இவ்வாறு செய்யும்படியே என் மனம் என்னைத் தூண்டியது.” </span>
<span>20:97 அதற்கு மூஸா கூறினார்: “சரி, நீ போய்விடு, வாழ்நாள் முழுவதும் ‘என்னைத் தொடவேண்டாம்’ என்றே நீ கூறிக்கொண்டிருப்பாய். மேலும், உனக்காக விசாரணை நேரம் ஒன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது உன்னைவிட்டு ஒருபோதும் நீங்கிவிடாது. இன்னும் நீ ஆர்வத்துடன் வழிபட்டு வந்த உனது தெய்வத்தைப் பார். இப்போது நாம் அதனை எரித்து விடுவோம். பிறகு, அதனைச் சாம்பலாக்கிக் கடலில் வீசி விடுவோம். </span>
<span>20:98 (மக்களே!) உங்கள் இறைவன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனுடைய அறிவு அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.”</span>
<span>20:99 (நபியே!) இவ்வாறே கடந்தகால நிகழ்ச்சிகளை நாம் உமக்கு எடுத்துச் சொல்கின்றோம். மேலும் நம் சார்பிலிருந்து தனிப்பட்ட ஒரு ஞானத்தை உமக்கு நாம் வழங்கியுள்ளோம். </span>
<span>20:100 யாரேனும் அதனைப் புறக்கணிப்பாராயின் அவர் மறுமைநாளில் கடுமையான பாவச் சுமையைச் சுமப்பார். </span>
<span>20:101 இத்தகையோர் அனைவரும் அந்தத் துன்பத்தில் என்றென்றும் கிடப்பார்கள்; மறுமைநாளில் இந்த(க் குற்றத்திற்குப் பொறுப்பேற்கும்) சுமை அவர்களுக்கு மிகக் கடுமையான சுமையாக இருக்கும். </span>
<span>20:102 எக்காளம் ஊதப்படும் நாளில், மேலும் (திகைப்பின் காரணத்தால்) கண்கள் நீலம் பூத்திருக்கும் நிலையில் குற்றவாளிகளை நாம் ஒன்று திரட்டுவோம். </span>
<span>20:103 அந்நாளில் அவர்கள் தமக்கிடையே மெதுவாகப் பேசிக் கொள்வார்கள்: “நீங்கள் (உலகில்) அதிகபட்சம் பத்து நாட்கள் தங்கியிருந்திருப்பீர்கள்” </span>
<span>20:104 அவர்கள் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவ்வேளை அவர்களில் மிகமிகக் கவனமாக மதிப்பிடக்கூடியவர், “ஒரே நாள்தான் நீங்கள் (உலகில்) வாழ்ந்துள்ளீர்கள்” என்று கூறுவார் (என்பதையும் நாம் நன்கறிவோம்) </span>
<span>20:105 மலைகள் (அன்றைய நாளில் எங்குச் சென்றுவிடும் என்பது) பற்றியும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறுவீராக: “என் இறைவன் அவற்றைத் தூள்தூளாக்கிப் பறக்க விட்டுவிடுவான். </span>
<span>20:106 பூமியை அதில் யாதொரு மேடுபள்ளத்தையும் நீர் காணாத அளவுக்கு</span>
<span>20:107 சமதளமாக்கிவிடுவான். </span>
<span>20:108 அந்நாளில் மக்கள் அனைவரும் அழைப்பாளரின் அழைப்பைக் கேட்டு நேராக நடந்து வருவார்கள். யாரும் சிறிதளவும் முரண்டு பிடிக்க முடியாது. மேலும், கருணைமிக்க இறைவனின் முன்னிலையில் குரல்களெல்லாம் அடங்கி ஒடுங்கி விடும். இலேசான முணுமுணுப்பைத் தவிர வேறு எதையும் நீர் கேட்கமாட்டீர். </span>
<span>20:109 அந்நாளில் எவருடைய பரிந்துரையும் பலனளிக்காது, கருணைமிக்க இறைவன் எவருக்கு அனுமதியளிப்பானோ எவருடைய பேச்சைக் கேட்க விரும்புவானோ அவருடைய பரிந்துரையைத் தவிர! </span>
<span>20:110 அவன், மக்களின் முந்தைய பிந்தைய நிலைமைகள் அனைத்தையும் நன்கறிகின்றான். ஆனால், மற்றவர்களுக்கோ அவனைப் பற்றிய முழுமையான ஞானம் இல்லை. </span>
<span>20:111 நித்திய ஜீவனும் (பேரண்டம் முழுவதையும்) நன்கு நிர்வகிப்பவனுமாகிய இறைவன் முன்னிலையில் மக்களின் தலைகள் பணிந்துவிடும். (அன்று) அக்கிரமத்தின் பாவச் சுமையைச் சுமந்து கொண்டவன் தோல்வி அடைந்தவன் ஆவான். </span>
<span>20:112 ஆனால், எவர் நம்பிக்கையாளராயிருந்து நற்செயல்கள் புரிகின்றாரோ (அவருக்கு அநீதி மற்றும் உரிமைப் பறிப்பு பற்றிய எந்த அச்சமும் இருக்காது.)</span>
<span>20:113 (நபியே!) இது போன்றே நாம் இதனை அரபி மொழியிலுள்ள குர்ஆனாக இறக்கியருளியுள்ளோம். மேலும், இதில் விதவிதமான எச்சரிக்கைகளும் கொடுத்துள்ளோம். இதன் மூலம் இவர்கள் (தவறான நடத்தையை) தவிர்த்துக் கொள்ளக்கூடும் அல்லது இது இவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடும்.  </span>
<span>20:114 அல்லாஹ் மிக உயர்ந்தவன் உண்மையான அரசன். மேலும் (பாரும்) குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; அதனுடைய வஹி முழுமையாக உமக்கு நிறைவு பெறுவதற்கு முன்பே! “என் இறைவனே எனக்கு அதிகமான ஞானத்தை வழங்குவாயாக!” என்றும் இறைஞ்சுவீராக!</span>
<span>20:115 நாம் முன்னர் ஆதத்துக்கு ஒரு கட்டளை பிறப்பித்திருந்தோம். ஆயினும் அவர் அதனை மறந்துவிட்டார். மேலும், நாம் அவரிடத்தில் மன உறுதியைக் காணவில்லை. </span>
<span>20:116 ‘ஆதத்துக்குச் சிரம்பணியுங்கள்’ என்று வானவர்களுக்கு நாம் கூறியதை நினைவுகூருங்கள். அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள், இப்லீஸைத் தவிர! அவன் மட்டும் மறுத்துவிட்டான். </span>
<span>20:117 அப்போது நாம் கூறினோம்: “ஆதமே! (பாருங்கள்) இவன் உமக்கும் உம்முடைய மனைவிக்கும் பகைவனாவான். இவன் உங்களிருவரையும் சுவனத்திலிருந்து வெளியேற்றிவிடக்கூடாது. மேலும், நீங்கள் துன்பத்தில் விழுந்து விடவும் கூடாது. </span>
<span>20:118 பசி தெரியாமலும் நிர்வாணமாகாமலும் இருக்க இங்கு உமக்கு வசதிகள் இருக்கின்றன. </span>
<span>20:119 மேலும், இங்கே தாகமும் வெப்பமும் உம்மை வாட்டாது.” </span>
<span>20:120 ஆயினும் ஷைத்தான் அவரைக் குழப்பினான். “ஆதமே! உமக்கு நிலையான வாழ்வையும் அழியாத அதிகாரத்தையும் தரக்கூடிய ஒரு மரத்தைக் காண்பிக்கவா?” என்று கேட்டான் </span>
<span>20:121 இறுதியில் (கணவன்மனைவியாகிய) அவ்விருவரும் அம்மரத்தின் பழத்தைப் புசித்துவிட்டார்கள். உடனே, அவ்விருவரின் மர்மஸ்தலங்கள் பரஸ்பரம் வெளிப்பட்டு விட்டன. மேலும், இருவரும் சுவனத்தின் இலைகளால் தங்களை மறைத்துக் கொள்ளலாயினர். ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்தார். நேர்வழி தவறினார். </span>
<span>20:122 பிறகு, அவருடைய இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்தான். மேலும் அவருடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவருக்கு நேர்வழி அருளினான். </span>
<span>20:123 மேலும், கூறினான்: நீங்கள் இருவரும் (மனிதனும், ஷைத்தானும்) இங்கிருந்து வெளியேறிவிடுங்கள், நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாயிருப்பீர்கள்; இனி, என்னிடமிருந்து ஏதேனும் வழிகாட்டல் உங்களுக்குக் கிடைத்தால், யார் என் வழிகாட்டலைப் பின்பற்றினாரோ அவர் வழிதவற மாட்டார்; துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகவும் மாட்டார். </span>
<span>20:124 எவன் என்னுடைய ‘திக்ரை’ (நல்லுரையைப்) புறக்கணிக்கின்றானோ அவனுக்கு (இவ்வுலகில்) கடினமான வாழ்க்கை இருக்கிறது. மேலும், மறுமை நாளில் அவனை நாம் குருடனாக எழுப்புவோம்” </span>
<span>20:125 அவன் கேட்பான்: “என் இறைவா! (உலகில்) நான் பார்வையுள்ளவனாக இருந்தேனே, இங்கு நீ என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” </span>
<span>20:126 அதற்கு அல்லாஹ், “ஆம்; இவ்வாறே நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்திருந்தபோது நீ அவற்றை மறந்து விட்டிருந்தாய்; அவ்வாறே இன்று நீயும் மறக்கடிக்கப்படுகின்றாய்” என்று கூறுவான். </span>
<span>20:127 இவ்விதமே, வரம்பு மீறிச் செல்வோருக்கும் தம்முடைய இறைவனின் வசனங்களை ஏற்காதோருக்கும் நாம் (இவ்வுலகில்) கூலி வழங்குகின்றோம். மேலும், மறுமையின் வேதனை மிகக் கடினமானதும் நீடித்து நிற்கக்கூடியதாகவும் இருக்கிறது. </span>
<span>20:128 பிறகு, இவர்களுக்கு முன்னர் எத்தனையோ சமூகத்தினரை நாம் அழித்திருக்கின்றோம். (இந்த வரலாற்றின் படிப்பினைகளிலிருந்து) இவர்களுக்கு நேர்வழி கிடைக்கவில்லையா என்ன? அவ்வாறு (அழிக்கப்பட்ட) அவர்களின் ஊர்களில் (இன்று) இவர்கள் நடமாடித் திரிகின்றார்கள். உண்மையில் இதில் நல்லறிவு உடையவர்களுக்கு சான்றுகள் நிறைய உள்ளன. </span>
<span>20:129 உம் இறைவனிடமிருந்து முன்னரே ஒரு விஷயம் முடிவாகாமலும், மேலும், குறிப்பிட்ட ஒரு காலத்தவணை நிர்ணயிக்கப்படாமலும் இருந்திருந்தால் இவர்களுடைய விஷயம் கண்டிப்பாக முன்பே தீர்க்கப்பட்டிருக்கும். </span>
<span>20:130 எனவே (நபியே!) இவர்கள் இட்டுக்கட்டிக்கூறும் விஷயத்தை நீர் பொறுத்துக் கொள்ளும். சூரியன் உதிப்பதற்கு முன்பும் அது மறைவதற்கு முன்பும் மேலும், இரவு நேரங்களிலும் பகலின் ஓரங்களிலும் உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! இதன் மூலம் நீர் மனத்திருப்தி அடையக் கூடும். </span>
<span>20:131 மேலும், நாம் அவர்களில் பல்வேறு பிரிவினர்க்கு வழங்கியிருக்கும் உலக வாழ்க்கையின் சுக போகங்களின் பக்கம் நீர் ஏறிட்டும் பார்க்காதீர். அவர்களை சோதிப்பதற்காகவே அவற்றை நாம் வழங்கியிருக்கின்றோம். மேலும், உம் இறைவனால் வழங்கப்பட்டுள்ள (ஆகுமான) வாழ்வாதாரம்தான் சிறந்ததும் நிலையானதுமாகும். </span>
<span>20:132 மேலும், தொழுகையைப் பேணி வருமாறு உம்முடைய குடும்பத்தார்க்கு நீர் கட்டளையிடுவீராக! நீரும் அதனை முறையாகக் கடைப்பிடிப்பீராக. ஏதேனும் வாழ்வாதாரம் அளிக்குமாறு உம்மிடம் நாம் கோருவதில்லை. நாமே உமக்கு வாழ்வாதாரம் அளித்துக் கொண்டிருக்கின்றோம். மேலும், நல்ல முடிவு இறையச்சத்திற்கே இருக்கின்றது. </span>
<span>20:133 “தம் இறைவனிடமிருந்து ஏதேனும் ஒரு சான்றை (முஃஜிஸாவை) இவர் ஏன் கொண்டுவரவில்லை” என்று அவர்கள் கேட்கின்றார்கள். முந்தைய வேதங்களில் உள்ள முழு அறிவுரைகளின் விளக்கம் அவர்களிடம் வரவில்லையா என்ன? </span>
<span>20:134 அவர் வருகைக்கு முன்பே ஏதேனும் ஒரு வேதனையை இறக்கி அவர்களை நாம் அழித்திருந்தால் அப்போது அவர்களே கூறுவர்: “எங்கள் இறைவனே! எங்களிடம் ஒரு தூதரை நீ அனுப்பியிருக்கக் கூடாதா? அவ்வாறு அனுப்பியிருந்தால் இழிவிற்கும் கேவலத்திற்கும் நாங்கள் ஆளாகும் முன்பே, உன் வசனங்களைப் பின்பற்றியிருப்போமே!” </span>
<span>20:135 (நபியே, அவர்களிடம்) நீர் கூறும்! “(தமது செயலின் விளைவை) ஒவ்வொருவரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தாம். எனவே நீங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள். அதிவிரைவில் உங்களுக்குத் தெரிந்துவிடும் நேர்வழியில் நடப்பவர் யார், மேலும், நேர்வழியைப் பெற்றவர்கள் யார் என்பது!”</span>
</div><div>
<span>அல் அன்பியா</span>
<span>21:1 நெருங்கி வந்திருக்கிறது; மக்களுக்கு அவர்களின் விசாரணைக்கான நேரம்! எனினும், அவர்களோ கவனமற்ற நிலையில் புறக்கணித்துக் கொண்டிருக்கின்றார்கள். </span>
<span>21:2 அவர்களுடைய இறைனிடமிருந்து புதிது புதிதாக எந்த அறிவுரை அவர்களிடம் வந்தாலும் அதனை விருப்பமின்றியே செவியேற்கிறார்கள்; கேளிக்கைகளிலும் இலயித்துக் கொண்டிருக்கிறார்கள். </span>
<span>21:3 அவர்களுடைய உள்ளங்கள் (வேறு சிந்தனைகளில்) மூழ்கியிருக்கின்றன. கொடுமையாளர்கள் தமக்கிடையே இரகசியமாகப் பேசிக்கொள்கின்றார்கள். “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர்தானே! இதனை நீங்கள் கண்கொண்டு பார்த்தும் மாயவலையில் சிக்கிக் கொள்வீர்களா, என்ன?”</span>
<span>21:4 அதற்கு இறைத்தூதர் கூறினார்: “என்னுடைய இறைவன் வானம் மற்றும் பூமியில் பேசப்படுபவை அனைத்தையும் அறிகின்றான். அவன் யாவற்றையும் செவியுறுபவனும் நன்கறிபவனுமாவான்.”</span>
<span>21:5 அதற்கு அவர்கள் கூறுகின்றார்கள்: “இவை வீண் கனவுகள்; இல்லையில்லை இவை, இவர் கற்பனை செய்து கொண்டவை. இன்னும் சொல்லப்போனால், இவர் ஒரு கவிஞரே! இல்லையென்றால் முற்காலத்து இறைத்தூதர்கள் சான்றுகளுடன் அனுப்பப்பட்டதுபோல் இவரும் நமக்கு ஒரு சான்றினைக் கொண்டுவரட்டும்!” </span>
<span>21:6 உண்மை யாதெனில், இவர்களுக்கு முன்னால் நாம் அழிவிற்குள்ளாக்கிய எந்த ஊரும் நம்பிக்கை கொள்ளவில்லை. இனி, இவர்கள் நம்பிக்கை கொள்ளப்போகிறார்களா?</span>
<span>21:7 மேலும் (நபியே!) உமக்கு முன்னரும் நாம் மனிதர்களையே தூதர்களாக அனுப்பியுள்ளோம். அவர்களுக்கும் நாம் வஹி அருளியிருந்தோம். நீங்கள் ஞானமற்றவர்களாயிருந்தால் வேதம் அருளப்பட்டவர்களிடம் கேட்டுப் பாருங்கள். </span>
<span>21:8 அத்தூதர்களுக்கு உணவு உட்கொள்ளாத உடலை நாம் அளிக்கவில்லை. மேலும், அவர்கள் நித்திய ஜீவிகளாயும் இருக்கவில்லை. </span>
<span>21:9 பின்னர் பாருங்கள், நாம் அவர்களிடம் அளித்திருந்த வாக்குறுதியையும் நிறைவேற்றினோம். மேலும் அவர்களையும், நாம் யார் யாரை நாடினோமோ அவர்கள் அனைவரையும் காப்பாற்றினோம். மேலும், வரம்பு மீறியவர்களை அழித்து விட்டோம். </span>
<span>21:10 (மக்களே!) உங்களுக்கு ஒரு வேதத்தை அனுப்பியுள்ளோம். அதில் உங்களைப் பற்றியே கூறப்பட்டுள்ளது. என்ன, நீங்கள் அறிந்துகொள்ள மாட்டீர்களா?</span>
<span>21:11 கொடுமைகள் புரிந்துகொண்டிருந்த எத்தனையோ ஊர்களை நாம் தகர்த்தெறிந்திருக்கிறோம். அதற்குப் பின் வேறு ஒரு சமூகத்தைத் தோற்றுவித்தோம். </span>
<span>21:12 நம்முடைய வேதனைச் சாட்டை தங்கள் மீது படப் போகிறது என அவர்கள் உணர்ந்தபோது, அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர். </span>
<span>21:13 (அப்போது கூறப்பட்டது:) “ஓடாதீர்கள்! நீங்கள் அனுபவித்துக் கொண்டிருந்த ஆடம்பர வாழ்வு மற்றும் இன்புற்று வாழ்ந்த இல்லங்கள் ஆகியவற்றை நோக்கிச் செல்லுங்கள். நீங்கள் அவற்றைப் பற்றி வினவப்படக் கூடும்.” </span>
<span>21:14 அதற்கு அவர்கள் புலம்பலானார்கள்: “அந்தோ, எங்கள் துர்பாக்கியமே! திண்ணமாக, நாங்கள் அக்கிரமக்காரர்களாயிருந்தோம்.” </span>
<span>21:15 தொடர்ந்து அவர்கள் புலம்பிக் கொண்டே இருந்தார்கள். எதுவரையெனில், வாழ்வின் ஒரு பொறியும் அவர்களிடம் எஞ்சி நிற்காத அளவுக்கு, அரிதாள்கள் அழிக்கப்படுவதுபோல் நாம் அவர்களை அழிக்கும்வரை!</span>
<span>21:16 நாம் இந்த வானத்தையும் பூமியையும், அவற்றிற்கிடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக படைக்கவில்லை. </span>
<span>21:17 விளையாட்டிற்காக நாம் ஏதேனும் ஒன்றைச் செய்ய நாடியிருந்தால் அதை மட்டுமே நாம் செய்ய வேண்டும் என்றிருந்தால் நம் சார்பாகவே அதனைச் செய்துவிட்டிருப்போம். </span>
<span>21:18 ஆயினும், நாம் சத்தியத்தைக் கொண்டு அசத்தியத்திற்கு அடி கொடுக்கின்றோம். அது, அசத்தியத்தின் தலையைப் பெயர்த்துவிடுகின்றது. பிறகு பார்த்துக் கொண்டிருக்கவே அசத்தியம் அழிந்தும் விடுகின்றது. நீங்கள் இட்டுக்கட்டிய பேச்சின் காரணத்தால் உங்களுக்குக் கேடுதான் இருக்கிறது. </span>
<span>21:19 வானங்களிலும், பூமியிலும் உள்ள படைப்பினங்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எவர்கள் அவன் அருகில் இருக்கின்றார்களோ (அதாவது வானவர்கள்) அவர்கள் கர்வம் கொண்டு அவனுக்கு அடிபணிய மறுப்பதில்லை; களைத்துப் போவதுமில்லை. </span>
<span>21:20 (மாறாக) இரவு பகல் எந்நேரமும் அவனைப் புகழ்ந்து துதி பாடிக்கொண்டேயிருக்கின்றார்கள்; சோர்வடைவதும் இல்லை. </span>
<span>21:21 இவர்கள் உருவாக்கிய பூலோக தெய்வங்கள் (உயிரில்லாதவற்றிற்கு உயிர் கொடுத்து) எழுப்பிக் கொண்டு வரக்கூடியவையா, என்ன!</span>
<span>21:22 வானத்திலும் பூமியிலும் அல்லாஹ் ஒருவனைத் தவிர மற்ற கடவுளர்களும் இருந்திருந்தால் அவ்விரண்டின் ஒழுங்கமைப்பும் சீர்குலைந்து போயிருக்கும். எனவே, அவர்களின் பொய்யான வர்ணனையிலிருந்து ‘அர்ஷû’க்கு* உரியவனான அல்லாஹ் மிகப் புனிதமானவன். </span>
<span>21:23 அவன் தன்னுடைய செயல்களுக்கு (எவர் முன்னிலையிலும்) பதில் சொல்ல வேண்டியவனல்லன். மற்றவர்கள் அனைவரும் பதில் சொல்ல வேண்டியவர்களே!</span>
<span>21:24 அவனை விடுத்து அவர்கள் மற்ற கடவுள்களை ஏற்றுக்கொண்டார்களா? (நபியே! இவர்களிடம்) கூறும்: “உங்களின் சான்றினைக் கொண்டு வாருங்கள். இந்த வேதமும் இருக்கிறது. இதில் நான் வாழும் காலத்தைச் சார்ந்தவர்களுக்கு அறிவுரை நல்கப்பட்டுள்ளது. மேலும், எனக்கு முன் சென்றுபோன மக்களுக்கு அறிவுரை வழங்கிய வேதங்களும் இருக்கின்றன.” ஆயினும், அவர்களில் பெரும்பாலோர் உண்மையைப் புரியாதவர்களாய் இருக்கின்றனர்; எனவே, அவர்கள் முகம் திருப்பிச் செல்பவர்களாய் இருக்கின்றனர். </span>
<span>21:25 உமக்கு முன்னர் நாம் அனுப்பிய எந்தத் தூதரிடத்திலும், “நிச்சயமாக என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே, என்னையே நீங்கள் அடிபணிய வேண்டும்” என்றே வஹி*யின் மூலம் நாம் அறிவித்திருந்தோம். </span>
<span>21:26 (கருணைமிக்க இறைவனாகிய) ரஹ்மானுக்கு பிள்ளைகள் உண்டு என்று அவர்கள் கூறுகின்றார்கள். அவன் மிகத் தூய்மையானவன்! உண்மையில் அவர்கள் (வானவர்கள்) அடியார்களாவர். அவர்களுக்குக் கண்ணியம் அளிக்கப்பட்டிருக்கின்றது. </span>
<span>21:27 அவர்கள் அவனது திருமுன் யாதொரு வார்த்தையையும் மீறிப் பேசுவதில்லை. அவனது கட்டளை எதுவோ அதன்படியே செயல்படுகின்றார்கள்.  </span>
<span>21:28 அவர்களுக்கு முன் உள்ளவற்றையும் அவன் அறிகின்றான்; அவர்களுக்கு மறைவாக இருப்பவற்றையும் அவன் அறிகின்றான். அவர்கள் யாருக்கும் பரிந்துரை செய்வதில்லை; எவருக்காகப் பரிந்துரை செய்வதை அல்லாஹ் விரும்புகின்றானோ அவர்களுக்காகத் தவிர! மேலும், அவர்கள் அவனுடைய அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருக்கின்றார்கள். </span>
<span>21:29 “அல்லாஹ்வையன்றி நானும் ஒரு கடவுள்தான்” என்று அவர்களில் எவரேனும் கூறினால், அவருக்கு நாம் நரகத்தினுடைய தண்டனையைக் கொடுப்போம். கொடுமையாளர்களுக்கு நாம் கொடுக்கும் கூலி இதுதான். </span>
<span>21:30 (நபியின் கூற்றை) நிராகரித்தவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? வானங்கள், பூமி அனைத்தும் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன. பிறகு அவற்றை நாம் தனித்தனியாகப் பிளந்தோம்; ஒவ்வொரு உயிரினத்தையும் தண்ணீரிலிருந்து நாம் படைத்தோம்; (நமது இந்தப் படைப்புத்திறனை) அவர்கள் ஏற்கமாட்டார்களா? </span>
<span>21:31 மேலும், பூமியில் நாம் மலைகளை ஊன்றி வைத்தோம்; அவர்களோடு அது சாய்ந்துவிடாமலிருப்பதற்காக! மேலும், அதில் அகன்ற சாலைகளையும் அமைத்தோம். மக்கள் தங்கள் பாதைகளை அறிந்து கொள்வதற்காக. </span>
<span>21:32 மேலும், வானத்தைப் பாதுகாக்கப்பட்ட ஒரு கூரையாகவும் அமைத்தோம். ஆயினும், அவர்கள் பேரண்டத்திலுள்ள சான்றுகளைக் கவனிப்பதேயில்லை. </span>
<span>21:33 இரவையும் பகலையும் ஏற்படுத்தியவனும், சூரியனையும், சந்திரனையும் படைத்தவனும் அந்த அல்லாஹ்தான்! அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு மண்டலங்களில் நீந்திக் கொண்டிருக்கின்றன. </span>
<span>21:34 (நபியே!) நாம் உமக்கு முன்னரும் எவருக்கும் நிரந்தர வாழ்வைக் கொடுக்கவில்லை. எனவே, நீர் இறந்துவிட்டால், இவர்கள் மட்டும் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்களா? </span>
<span>21:35 ஒவ்வோர் உயிரினமும் மரணத்தைச் சுவைத்தே தீரும். மேலும், நல்ல, கெட்ட நிலைமைகளைத் தந்து நாம் உங்களைச் சோதித்துக் கொண்டிருக்கின்றோம். பிறகு நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். </span>
<span>21:36 உண்மையை நிராகரிக்கும் இவர்கள் உம்மைக் காணும்போது கேலி செய்கின்றார்கள். “உங்களுடைய தெய்வங்களை (இழிவாகப்) பேசுகிறவர் இவர்தாமா?” (என்று கேட்கின்றார்கள்). ஆனால், இவர்களோ (கருணை மிக்க இறைவனாகிய) ரஹ்மானை நினைவுகூரவும் மறுக்கின்றார்கள். </span>
<span>21:37 மனிதன் மிகவும் அவசரப்படக்கூடிய படைப்பாவான். வெகு சீக்கிரத்தில் நான் என்னுடைய சான்றுகளை உங்களுக்குக் காண்பிக்கப் போகின்றேன். எனவே, நீங்கள் என்னிடம் அவசரப்படாதீர்கள் </span>
<span>21:38 அவர்கள் கேட்கின்றார்கள்: “நீங்கள் உண்மையாளர்களாயின் இந்த வாக்குறுதி எப்பொழுது நிறைவேறும்?” </span>
<span>21:39 அந்தோ! தங்களுடைய முகங்களையும் முதுகுகளையும் நரகத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியாத, மேலும், தமக்கு எங்கிருந்தும் உதவி கிட்டாத ஒரு நேரத்தைக் குறித்து இந்நிராகரிப்பாளர்கள் கொஞ்சம் அறிந்திருக்க வேண்டுமே! </span>
<span>21:40 ஆயினும் அந்த ஆபத்து திடீரென்று அவர்களைத் தாக்கும். அது அவர்களை எந்த அளவு திகைப்படையச் செய்து விடும் எனில், அவர்களால் அதனைத் தடுக்க முடியாது; மேலும், ஒரு கணப்பொழுது கூட அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட மாட்டாது. </span>
<span>21:41 (நபியே!) உமக்கு முன்பும் தூதர்கள் கேலி செய்யப்பட்டனர். ஆயினும், அவர்களைப் பரிகாசம் செய்தவர்கள், எதைக் குறித்துப் பரிகாசம் செய்தார்களோ அதுவே அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டது. </span>
<span>21:42 (நபியே!) “இரவிலோ, பகலிலோ கருணை மிக்க இறைவனின் பிடியிலிருந்து உங்களைக் காப்பாற்றக் கூடியவர் யார்?” என்று நீர் அவர்களிடம் கேளும். ஆயினும், அவர்கள் தம்முடைய இறைவனின் நல்லுரையைப் புறக்கணிப்பவர்களாகவே இருக்கின்றார்கள். </span>
<span>21:43 நமக்கு எதிராக அவர்களைப் பாதுகாக்கக்கூடிய வேறு கடவுள்கள் அவர்களுக்கு இருக்கிறார்களா, என்ன? அவை தமக்கே உதவி செய்ய முடியாதவையாக இருக்கின்றன. மேலும், நம்முடைய ஆதரவையும் அவை பெற்றிருக்கவில்லை. </span>
<span>21:44 உண்மை யாதெனில், இவர்களுக்கும் இவர்களுடைய மூதாதையருக்கும் நாம் வாழ்க்கை வசதிகளை அளித்துக் கொண்டிருந்தோம். அவ்வாறு அவர்களுடைய காலம் நீண்டு ஓடியது...! ஆனால், நாம் பூமியை பல்வேறு திசையிலிருந்தும் குறைத்துக் கொண்டே வருகிறோம் என்பது இவர்களுக்குத் தென்படவில்லையா? பிறகு, இவர்கள் (நம்மை) வெற்றி கொண்டு விடுவார்களா?</span>
<span>21:45 நபியே! நீர் அவர்களிடம் கூறும்: “நான் வஹியின் அடிப்படையில் உங்களுக்கு எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்றேன்” ஆயினும், செவிடர்கள் அழைப்பை செவியேற்கவே மாட்டார்கள்அவர்கள் எச்சரிக்கப்படும்போது! </span>
<span>21:46 உம்முடைய இறைவன் தரும் வேதனை சிறிதளவு அவர்களைத் தீண்டிவிட்டால் கூட “எங்களின் துர்ப்பாக்கியமே! திண்ணமாக, நாங்கள் கொடுமையாளர்களாய் இருந்தோம்” என்று அலறுவார்கள். </span>
<span>21:47 நாம் மறுமைநாளில் துல்லியமாக எடை போடும் தராசுகளை நிறுவுவோம். பிறகு, எவருக்கும் இம்மியளவும் அநீதி இழைக்கப்படமாட்டாது. எவருடைய ஒரு கடுகு மணியளவு செயலாயினும் அதனை நாம் (அங்கு) அவர்முன் கொண்டு வருவோம். கணக்கு வாங்குவதற்கு நாமே போதும். </span>
<span>21:48 முன்பு நாம் மூஸாவிற்கும், ஹாரூனுக்கும் (சத்தியத்தையும் அசத்தியத்தையும் வேறுபடுத்தக்கூடிய) ஃபுர்கானையும், ஒளியையும், அறிவுரையையும் அருளியிருந்தோம். இவை இறையச்சமுடையோருக்கு பயனளிக்கக் கூடியவையாகும். </span>
<span>21:49 அவர்கள் எப்படிப்பட்டவர்கள் எனில், கண்ணால் பார்க்காமலே தம் இறைவனுக்கு அஞ்சுகின்றார்கள். மேலும் (கணக்கு வாங்கும்) அந்நாளைப் பற்றி அஞ்சுகின்றார்கள். </span>
<span>21:50 மேலும், பாக்கியங்கள் நிறைந்த இந்த அறிவுரையை இப்பொழுது நாம் (உங்களுக்காக) இறக்கியிருக்கின்றோம். இனி, நீங்கள் இதனை ஏற்க மறுக்கின்றீர்களா, என்ன?</span>
<span>21:51 அதற்கும் முன்பு நாம் இப்ராஹீமுக்கு நல்லறிவை வழங்கியிருந்தோம். மேலும், நாம் அவரை நன்கு அறிந்திருந்தோம். </span>
<span>21:52 அவர் தம்முடைய தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் இவ்வாறு கூறியதை நினைத்துப் பாரும். “என்ன இது! நீங்கள் இந்த உருவச்சிலைகள் மீது இத்தனை ஆர்வத்துடன் பற்று கொண்டுள்ளீர்களே!” </span>
<span>21:53 அதற்கு அவர்கள், “எங்கள் மூதாதையர் அவற்றை வணங்கி வந்ததை நாங்கள் கண்டோம்” என்று மறுமொழி தந்தார்கள். </span>
<span>21:54 அதற்கு அவர் கூறினார்: “நீங்களும் வழி பிறழ்ந்திருக்கின்றீர்கள்; உங்களுடைய மூதாதையரும் வெளிப்படையான வழிகேட்டில் கிடந்தார்கள்” </span>
<span>21:55 அதற்கவர்கள் கேட்டார்கள்: “எங்களிடம் உண்மையான கருத்தைத்தான் எடுத்துரைக்கின்றீரா? அல்லது கேலி செய்கின்றீரா?” </span>
<span>21:56 அதற்கவர் பதிலளித்தார்: “இல்லை, உண்மையில் வானங்களையும் பூமியையும் படைத்து அவற்றிற்கு அதிபதியாக இருப்பவன் யாரோ அவனே உங்களின் அதிபதி ஆவான். இதற்கு நான் உங்கள் முன் சாட்சியம் கூறுகின்றேன். </span>
<span>21:57 மேலும், அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீங்கள் இல்லாத சமயம் உங்களுடைய உருவச் சிலைகளை திண்ணமாக, நான் ஒரு கை பார்ப்பேன்.”</span>
<span>21:58 பிறகு அவர் அவற்றைத் துண்டு துண்டாய் உடைத்தார். அவற்றில் பெரிய சிலையை மட்டும் விட்டு வைத்தார். அவர்கள் அதனை நோக்கி வரக் கூடும் என்பதற்காக! </span>
<span>21:59 அவர்கள் (திரும்பி வந்து சிலைகளின் இந்த நிலையைக் கண்டதும்) கேட்கலாயினர்: “நம்முடைய தெய்வங்களை இந்நிலைக்கு ஆளாக்கியவன் யார்? உண்மையில் அவன் பெரும் கொடுமைக்காரனாகத்தான் இருக்க வேண்டும்.” </span>
<span>21:60 (சிலர்) கூறினர்: “இப்ராஹீம் எனும் பெயருடைய ஓர் இளைஞர் இந்தச் சிலைகள் பற்றிக் கூறுவதை நாங்கள் கேட்டிருந்தோம்.”</span>
<span>21:61 அதற்கவர்கள் கூறினர்: “பிடித்துக் கொண்டு வாருங்கள் அவரை, எல்லோர் முன்னிலையிலும்! (அவர் மீது எவ்வளவு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதை) மக்கள் பார்க்கட்டும்!” </span>
<span>21:62 (இப்ராஹீம் வந்ததும்) அவர்கள் கேட்டார்கள்: “இப்ராஹீமே! நீர்தாமா எங்கள் கடவுள்களுடன் இவ்வாறு (தரக்குறைவாக) நடந்து கொண்டது?” </span>
<span>21:63 அதற்கு அவர், “இவற்றில் இந்தப் பெரிய சிலைதான் இவற்றையெல்லாம் செய்திருக்க வேண்டும். (துண்டுபட்ட) இவை பேசுமாயின் இவற்றிடமே கேட்டுப் பாருங்கள்” என்றார். </span>
<span>21:64 இதைக் கேட்டு அவர்கள் தங்களுடைய மனச்சாட்சியின் பக்கம் திரும்பினர். பிறகு, ஒவ்வொருவரும் (தங்களுக்குள்) “உண்மையில் நீங்களே அக்கிரமக்காரர்கள்” என்று கூறினார்கள். </span>
<span>21:65 ஆனால் பிறகு அவர்களுடைய புத்தி தலைகீழாக மாறிற்று. “இப்ராஹீமே! இவை பேசமாட்டா என்பது உமக்குத் தெரிந்ததுதானே!” என்று கூறினார்கள். </span>
<span>21:66 அதற்கு இப்ராஹீம் கூறினார்: “நீங்கள் அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு இலாபத்தையோ, நஷ்டத்தையோ அளிக்க வலிமையற்ற தெய்வங்களையா வணங்குகின்றீர்கள்? </span>
<span>21:67 சீச்சி! எவ்வளவு கேவலம்! உங்களுக்கும் நீங்கள் வழிபாடு செய்கின்ற தெய்வங்களுக்கும்! உங்களுக்குக் கொஞ்சமும் அறிவில்லையா, என்ன?” </span>
<span>21:68 அதற்கு அவர்கள் கூறினார்கள்: “எரித்துவிடுங்கள் இவரை! உதவுங்கள் உங்கள் தெய்வங்களுக்கு நீங்கள் ஏதும் செய்வதாயிருந்தால்!” </span>
<span>21:69 நாம் கூறினோம்: “நெருப்பே! நீ இப்ராஹீமுக்கு குளுமையாகவும், சாந்தமாகவும் ஆகிவிடு!” </span>
<span>21:70 அவர்கள் இப்ராஹீமுக்குத் தீங்கு செய்ய நாடினார்கள். ஆனால், நாம் அவர்களையே தோல்வியுறச் செய்தோம். </span>
<span>21:71 நாம் அவரையும், லூத்தையும் காப்பாற்றி, உலக மக்கள் அனைவர்க்கும் நாம் பாக்கியம் பொழிந்திருக்கிற பூமிக்கு அவர்களைக் கொண்டு வந்தோம். </span>
<span>21:72 நாம் அவருக்கு இஸ்ஹாக்கை வழங்கினோம்; அதிகப்படியாக யஃகூபையும் வழங்கினோம். இவர்கள் ஒவ்வொருவரையும் நன்மக்களாகவும் நாம் ஆக்கினோம். </span>
<span>21:73 நாம் அவர்களை நம்முடைய கட்டளைப்படி வழிகாட்டுகின்ற தலைவர்களாக (இமாம்களாக) திகழச் செய்தோம். மேலும், அவர்கள் நற்செயல்கள் புரியும்படியும், தொழுகையை நிலை நாட்டும்படியும், ஜகாத் கொடுத்து வரும்படியும் வஹியின் மூலம் அவர்களுக்கு நாம் வழிகாட்டினோம். அவர்கள் நமக்கே அடிபணிபவர்களாய்த் திகழ்ந்தார்கள். </span>
<span>21:74 மேலும், லூத்திற்கு நாம் ஹுக்ம் விவேகத்தையும் ஞானத்தையும் வழங்கினோம். மேலும், அருவருக்கத்தக்க செயல்கள் புரிந்து வந்த ஊரிலிருந்து அவரைக் காப்பாற்றி வெளியேற்றினோம். திண்ணமாக, அவ்வூர் மக்கள் மிகவும் கெட்டவர்களாகவும், பாவிகளாகவும் இருந்தார்கள் </span>
<span>21:75 மேலும், நாம் லூத்தை நம்முடைய அருளுக்கு உட்படுத்தினோம். அவர் உத்தமர்களில் ஒருவராய்த் திகழ்ந்தார். </span>
<span>21:76 இதே அருட்பேற்றினை நாம் நூஹுக்கும் வழங்கினோம். இவர்களனைவருக்கும் முன்னதாக அவர் நம்மிடம் இறைஞ்சியதை நினைவுகூரும்! நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு, அவரையும் அவர் குடும்பத்தையும் மாபெரும் துன்பத்திலிருந்து விடுவித்தோம். </span>
<span>21:77 நம் சான்றுகளைப் பொய்யெனத் தூற்றிய சமுதாயத்தார்க்கு எதிராக நூஹுக்கு நாம் உதவியளித்தோம். திண்ணமாக, அம்மக்கள் மிகவும் தீயவர்களாகவே இருந்தார்கள். எனவே, நாம் அவர்களனைவரையும் மூழ்கடித்தோம். </span>
<span>21:78 இதே அருட்பேற்றினை தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வழங்கினோம். அவர்கள் இருவரும் ஒரு வயல் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்ததை நினைத்துப் பாரும்: அந்த வயலிலோ இரவு நேரத்தில் மாற்றாரின் ஆடுகள் பரவலாக மேய்ந்து கொண்டிருந்தன. மேலும், அவர்கள் தீர்ப்பு வழங்கியதை நாம் பார்த்துக் கொண்டிருந்தோம். அவ்வேளை நாம் ஸுலைமானுக்குச் சரியான தீர்ப்பினை புலப்படுத்தினோம். ஆயினும், இருவருக்குமே தீர்ப்பு கூறும் நுண்ணறிவையும், ஞானத்தையும் நாம் வழங்கியிருந்தோம். </span>
<span>21:79 மலைகளையும், பறவைகளையும் தாவூதுக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். அவை அவருடன் துதிபாடிக் கொண்டிருந்தன. இந்தச்செயலைச் செய்தவர்கள் நாமேதாம்! </span>
<span>21:80 மேலும், உங்கள் நன்மைக்காக கவசம் தயார் செய்யும் கலையை நாம் அவருக்குக் கற்றுத் தந்தோம்; நீங்கள் போரிடும்போது உங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக! பிறகு நீங்கள் நன்றியுடையவர்களாய் இருக்கின்றீர்களா, என்ன? </span>
<span>21:81 மேலும், நாம் ஸுலைமானுக்கு வேகமான காற்றை வசப்படுத்தித் தந்தோம். அது அவருடைய கட்டளைக்கிணங்கி நாம் அருள் வழங்கிய நாடுகளின் பக்கம் வீசிக்கொண்டிருந்தது. மேலும், நாம் ஒவ்வொன்றைப் பற்றியும் அறிந்தவராகவே இருக்கின்றோம். </span>
<span>21:82 மேலும், ஷைத்தான்களில் பலவற்றை நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவை அவருக்காக (கடலில்) மூழ்கக்கூடியவையாகவும், இதர பணிகளைப் புரிபவையாகவும் இருந்தன. அவர்கள் அனைவரையும் கண்காணிப்பவராக நாமே இருந்தோம். </span>
<span>21:83 இவற்றையே (விவேகம், நுண்ணறிவு மற்றும் ஞானம் ஆகிய அருட்பேறுகளை) நாம் அய்யூபுக்கும் வழங்கியிருந்தோம். அவர், தம்முடைய இறைவனிடம் இறைஞ்சியதை நினைவுகூரும்: “என்னை நோய் பீடித்துவிட்டது; நீயோ கிருபை செய்வோரில் எல்லாம் பெருங்கிருபையாளனாய் இருக்கின்றாய்.” </span>
<span>21:84 நாம் அவருடைய இறைஞ்சுதலை ஏற்று அவருக்கிருந்த நோயைப் போக்கிவிட்டோம். அவருக்கு நாம் அவருடைய குடும்பத்தை மட்டும் வழங்கவில்லை, அவர்களுடன் அதே அளவுக்கு இன்னும் அதிகமானவர்களையும் வழங்கினோம் இது நம்முடைய சிறப்பான கிருபையாகவும், அடிபணிந்து வணங்குவோருக்கு ஒரு நினைவூட்டுதலாகவும் அமைவதற்காக!</span>
<span>21:85 மேலும், இதே அருட்பேற்றினை இஸ்மாயீலுக்கும், இத்ரீஸுக்கும், துல்கிஃப்லுக்கும் நாம் வழங்கியிருந்தோம். இவர்களனைவரும் பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களாய் இருந்தார்கள். </span>
<span>21:86 மேலும், நாம் அவர்களை நம்முடைய அருளில் நுழைவித்தோம். ஏனெனில், அவர்கள் அனைவரும் நல்லடியார்களாகவே திகழ்ந்தார்கள். </span>
<span>21:87 மேலும், மீன்காரருக்கும் நாம் அருள் பாலித்திருந்தோம். நாம் அவரைப் பிடிக்கமாட்டோம் என்று நினைத்து, கோபப்பட்டுக் கொண்டு அவர் சென்றுவிட்டதை நீர் நினைவுகூரும்! இறுதியில் அவர் இருள்களுக்குள் இருந்துகொண்டு இவ்வாறு இறைஞ்சினார்: “உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை; தூய்மையானவன் நீ! திண்ணமாக, நான் குற்றம் செய்துவிட்டேன்.” </span>
<span>21:88 அப்போது நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு, துன்பத்திலிருந்து அவரை விடுவித்தோம். மேலும், இவ்வாறே நம்பிக்கை கொண்டவர்களை நாம் காப்பாற்றிக் கொள்கின்றோம். </span>
<span>21:89 மேலும், ஜக்கரிய்யாவுக்கும் அருட்பேற்றினை வழங்கினோம். அவர்தம் இறைவனிடம், “என் இறைவனே! என்னை நீ தன்னந்தனியாக விட்டுவிடாதே! நீயே மிகச்சிறந்த வாரிசு ஆவாய்!” என்று பிரார்த்தித்த சமயத்தை நினைவுகூரும். </span>
<span>21:90 பிறகு நாம் அவருடைய வேண்டுதலை ஏற்றுக்கொண்டு, அவருக்கு யஹ்யாவை கொடையாக வழங்கினோம். அவருடைய மனைவியை அதற்கு அருகதையுள்ளவராகவும் ஆக்கினோம். இவர்கள் யாவரும் நற்பணிகளில் முனைந்து செயற்படுவோராகவும், பேரார்வத்துடனும், அச்சத்துடனும் நம்மிடம் இறைஞ்சக் கூடியவர்களாயும் திகழ்ந்தார்கள். நம் முன் பணிந்தவர்களாயும் விளங்கினார்கள். </span>
<span>21:91 தன்னுடைய கற்பைக் காப்பாற்றிக் கொண்ட அந்தப் பெண்ணிற்குள் நம்முடைய ரூஹிலிருந்து* ஊதினோம். மேலும், அப்பெண்ணையும் அவளுடைய மைந்தரையும் உலகத்தாரனைவருக்கும் சான்றாய் திகழச்செய்தோம். </span>
<span>21:92 உங்களின் இந்தச் சமுதாயம் உண்மையில் ஒரே ஒரு சமுதாயமே. மேலும், நானே உங்கள் அதிபதி. எனவே, நீங்கள் எனக்கே அடிபணியுங்கள். </span>
<span>21:93 (ஆயினும், இந்த மக்கள் செய்த தவறு என்னவெனில்) அவர்கள் தமக்கிடையே தம்முடைய தீனை மார்க்கத்தை துண்டு துண்டாக்கிவிட்டார்கள் அனைவரும் நம்மிடமே திரும்பி வரக் கூடியவர்களாவர். </span>
<span>21:94 பிறகு, எவர் நம்பிக்கையாளராய்த் திகழ்ந்து நற்செயல்கள் புரிகின்றாரோ அவருடைய உழைப்பு மதிப்பற்றுப் போகாது. மேலும், அதனை நாம் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம். </span>
<span>21:95 எந்த ஊர் மக்களை நாம் அழித்துவிட்டோமோ அவர்கள் மீண்டும் திரும்பி வருவது சாத்தியமில்லை. </span>
<span>21:96 எதுவரையெனில், யாஃஜூஜ், மாஃஜுஜ் திறந்துவிடப்பட்டு ஒவ்வொரு உயரமான இடங்களிலிருந்தும் அவர்கள் வெளியேறும் வரை. </span>
<span>21:97 மேலும், உண்மையான வாக்குறுதி நிறைவேறும் வேளை வரும் வரை! அப்போது சத்தியத்தை நிராகரித்தவர்களின் விழிகள் நிலைகுத்தி நின்றுவிடும். “ஆ! எங்கள் துர்ப்பாக்கியமே! இவ்விஷயத்தில் நாங்கள் அலட்சியமாக இருந்து விட்டோமே! ஏன், நாங்கள் கொடுமை புரிந்தவர்களாய் இருந்துவிட்டோமே!” என்று அவர்கள் புலம்புவார்கள். </span>
<span>21:98 திண்ணமாக, நீங்களும், அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வழிபட்டுக் கொண்டிருந்தவைகளும் நரகத்தின் எரிபொருள்களாவீர்கள். நீங்கள் அங்குதான் செல்லவேண்டியிருக்கும். </span>
<span>21:99 உண்மையில் இவர்கள் தெய்வங்களென்றால், அங்குப் போயிருக்கவே மாட்டார்கள். இனி, இவர்கள் எல்லாரும் என்றென்றும் அதிலேயே தங்க வேண்டியுள்ளது. </span>
<span>21:100 அதில் அவர்கள் கதறுவார்கள். நிலைமை எப்படியிருக்குமெனில், கூச்சல் குழப்பத்தால் அவர்கள் எதையும் செவிமடுக்க முடியாது. </span>
<span>21:101 நம்மிடமிருந்து எவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று முன்னரே முடிவு செய்யப்பட்டதோ அவர்கள் திண்ணமாக, நரகத்தைவிட்டு தொலைவில் வைக்கப்படுவார்கள். </span>
<span>21:102 அந்த நரகின் சலசலப்பைக்கூட அவர்கள் கேட்கமாட்டார்கள். தம் மனத்திற்குகந்த இன்பங்களுக்கு மத்தியில் அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள். </span>
<span>21:103 பெரும் திகிலை ஏற்படுத்தும் அந்நேரம் அவர்களைச் சிறிதளவும் துயரத்தில் ஆழ்த்தாது. மேலும், “உங்களிடம் வாக்களிக்கப்பட்ட நாள்தான் இந்நாள்” என்று கூறிக்கொண்டு வானவர்கள் அவர்களை எதிர் கொண்டு வரவேற்பார்கள். </span>
<span>21:104 எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போல் நாம் வானத்தை சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீண்டும் படைப்போம். இது நம்முடைய பொறுப்பிலுள்ள ஒரு வாக்குறுதியாகும். திண்ணமாக, அதனை நாம் நிறைவேற்றியே தீருவோம். </span>
<span>21:105 “ஜபூரில்”* நல்லுரை வழங்கிய பிறகு, “நம்முடைய நல்லடியார்களே இப்பூமிக்கு வாரிசுகள் ஆவார்கள்” என்று எழுதி வைத்துவிட்டோம். </span>
<span>21:106 அடிபணிந்து வாழும் மக்களுக்கு இதில் மாபெரும் அறிவிப்பு இருக்கிறது. </span>
<span>21:107 (நபியே!) நாம் உம்மை உலகத்தாருக்கு அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம். </span>
<span>21:108 நீர் அவர்களிடம் கூறும்: “உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் அவனுக்கு அடிபணிந்தவர்களாய் இருக்கிறீர்களா, என்ன?” </span>
<span>21:109 அவர்கள் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: “நான் வெளிப்படையாக உங்களுக்கு எச்சரிக்கை செய்துவிட்டேன். இனி உங்களிடம் வாக்களிக்கப்படுகின்ற அந்த விஷயம் அண்மையில் இருக்கிறதா அல்லது வெகு தூரத்தில் இருக்கிறதா என்பதை நான் அறியேன். </span>
<span>21:110 உரக்கக் கூறுவனவற்றையும் நீங்கள் மூடி மறைத்துச் செய்வனவற்றையும் திண்ணமாக அல்லாஹ் அறிவான். </span>
<span>21:111 நான் புரிந்துகொள்வது இதுவே: ஒருவேளை இது (கால அவகாசம்) உங்களுக்கு ஒரு சோதனையாக இருக்கலாம். மேலும், குறிப்பிட்ட காலம் வரை நீங்கள் இன்பம் அனுபவிக்க கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பாகவும் இருக்கலாம்.”</span>
<span>21:112 இறுதியில் இறைத்தூதர் கூறினார்: “என் அதிபதியே! நீ சத்தியத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பாயாக! மேலும், மக்களே! நீங்கள் இட்டுக்கட்டி கூறுவதற்கு எதிராக எங்களுக்கு உதவி யாளனாக இருப்பவன் கிருபையுள்ள எங்கள் இறைவன்தான்!”</span>
</div><div>
<span>அல் ஹஜ்</span>
<span>22:1 மனிதர்களே! உங்கள் இறைவனின் கோபத்தைவிட்டு, உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். உண்மையில் மறுமைநாளின் பூகம்பம் மாபெரும் (திகிலை ஏற்படுத்தும்) விஷயமாகும்!</span>
<span>22:2 அதனை நீங்கள் பார்க்கும் நாளில் நிலைமை எவ்வாறு இருக்குமெனில், பாலூட்டும் ஒவ்வொரு தாயும் பால் அருந்தும் தன் குழந்தைகளை மறந்துவிடுவாள். ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணின் கர்ப்பமும் வீழ்ந்துவிடும். மேலும், மக்கள் மயக்கமுற்றவர்களாய் உமக்குத் தென்படுவார்கள். உண்மையில் அவர்கள் மயக்கத்தில் இருக்கமாட்டார்கள். ஆயினும், அல்லாஹ்வின் வேதனை அந்த அளவுக்குக் கடுமையாய் இருக்கும். </span>
<span>22:3 மனிதர்களில் சிலர் இவ்வாறு இருக்கின்றார்கள்: அவர்கள் ஞானமில்லாமல் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்கின்றார்கள்; மூர்க்கத்தனம் கொண்ட ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகின்றார்கள். </span>
<span>22:4 ஆனால், அந்த ஷைத்தானுடைய விதியில் எழுதப்பட்டுள்ளது என்ன? அவனுடன் யாரேனும் நட்பு கொண்டால் அவர்களை அவன் திண்ணமாக, வழிகெடுத்து விடுவான். நரக வேதனையின் பக்கம் அவர்களுக்கு வழிகாட்டுவான். </span>
<span>22:5 மனிதர்களே! மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கை பற்றி உங்களுக்கு ஏதேனும் ஐயம் இருந்தால் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்; நாம் உங்களை மண்ணிலிருந்து பிறகு இந்திரியத்திலிருந்து பிறகு இரத்தக்கட்டியிலிருந்து பிறகு வடிவமைக்கப்பட்ட அல்லது வடிவமைக்கப்படாத சதைப் பிண்டத்திலிருந்து படைத்தோம். உண்மை நிலையை உங்களுக்கு நாம் விளக்குவதற்காகத்தான் (இவற்றை நாம் எடுத்துரைக்கின்றோம்). நாம் நாடுகின்ற (இந்திரியத்)தை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருவறைகளில் தங்க வைக்கின்றோம். பிறகு, உங்களைக் குழந்தை வடிவில் வெளிக்கொணர்கின்றோம்; (பிறகு உங்களை வளர்க்கின்றோம்;) நீங்கள் வாலிபத்தை அடைவதற்காக! மேலும், உங்களில் சிலர் முன்னரே திரும்ப அழைத்துக் கொள்ளப்படுகின்றார்கள். வேறு சிலர் மிக மோசமான வயோதிகத்தின் பக்கம் திருப்பப்படுகின்றார்கள்; யாவற்றையும் அறிந்த பிறகு எதையும் அறியாத நிலையை அடைவதற்காக! இன்னும் நீங்கள் பார்க்கின்றீர்கள்: பூமி வறண்டு கிடக்கின்றது; அதில் நாம் மழையைப் பொழியச் செய்ததும் உடனே அது சிலிர்த்து, செழித்து வளர்ந்து விதவிதமான அழகிய தாவரங்களை முளைப்பிக்கச் செய்கிறது. </span>
<span>22:6 இவையனைத்திற்கும் காரணம் இதுதான்: திண்ணமாக, அல்லாஹ்தான் உண்மையானவன். மேலும், உயிரற்றவற்றை அவனே உயிர்ப்பிக்கின்றான். மேலும், அவன் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். </span>
<span>22:7 இன்னும் மறுமை நாள் வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை (என்பதற்கும் இது ஒரு சான்றாகும்). மேலும், மண்ணறைகளில் உள்ளவர்களைத் திண்ணமாக அல்லாஹ் எழுப்புவான். </span>
<span>22:8 மக்களில் வேறு சிலர் இருக்கின்றார்கள்; அவர்கள் ஞானமோ, வழிகாட்டுதலோ, ஒளியூட்டும் வேதமோ எதுவுமின்றி பிடரியை நிமிர்த்திக் கொண்டு அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் புரிகின்றார்கள். </span>
<span>22:9 மக்களை இறைவழியிலிருந்து பிறழச் செய்ய வேண்டும் என்பதற்காக! இத்தகையவர்களுக்கு உலகில் இழிவுதான் இருக்கிறது. மேலும், மறுமையில் அவர்களை நாம் நெருப்பின் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்வோம். </span>
<span>22:10 இதுதான் உன்னுடைய கைகள் உனக்காக தயார்செய்து வைத்துள்ள எதிர்காலம். தவிர அல்லாஹ் தன்னுடைய அடிமைகள் மீது அக்கிரமம் இழைப்பவன் அல்லன். </span>
<span>22:11 மேலும், மனிதர்களில் இன்னும் சிலர் இருக்கின்றார்கள்; அவர்கள் ஓரத்தில் நின்றுகொண்டு அல்லாஹ்வுக்கு அடிபணிகின்றார்கள். தங்களுக்கு ஏதேனும் ஆதாயம் கிடைக்குமாயின் அதைக் கொண்டு மனநிறைவு கொள்கின்றார்கள். துன்பம் ஏற்படுமாயின் தலைகீழாக மாறிவிடுகின்றார்கள். அவர்கள் இம்மையையும் இழந்து விட்டார்கள்; மறுமையையும் இழந்து விட்டார்கள். இதுதான் வெளிப்படையான நஷ்டமாகும்!</span>
<span>22:12  பிறகு, அவர்கள் அல்லாஹ்வை விடுத்து தங்களுக்கு எவ்வித நஷ்டத்தையும் இலாபத்தையும் அளிக்க முடியாதவற்றை அழைக்கின்றார்கள். இதுதான் வழிகேட்டின் இறுதி எல்லை! </span>
<span>22:13 எவர்களின் தீமை, நன்மையைவிட நெருக்கமாக இருக்கின்றதோ, அவர்களையே இவர்கள் அழைக்கின்றார்கள். அவர்களுடைய பாதுகாவலர்களும் மிக மோசமானவர்கள்! அவர்களுடைய தோழர்களும் மிக மோசமானவர்கள். </span>
<span>22:14 (இதற்கு மாறாக) இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களை, கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்களில் திண்ணமாக அல்லாஹ் நுழைவிப்பான். நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியதைச் செய்கின்றான். </span>
<span>22:15 இம்மையிலும் மறுமையிலும், தனக்கு எவ்வித உதவியும் அல்லாஹ் புரிந்திட மாட்டான் என்று எவன் சந்தேகம் கொள்கின்றானோ அவன் ஒரு கயிற்றின் துணையால் வானத்திற்குச் சென்று அதைப் பிளக்கட்டும். பின்னர், தனது உபாயத்தைக் கொண்டு தனக்கு எது வெறுப்பாய் உள்ளதோ அதைத் தடுத்திட முடியுமா என்று பார்க்கட்டும்!</span>
<span>22:16 இவ்வாறே தெளிவான விஷயங்களைக் கொண்டதாக இந்தக் குர் ஆனை நாம் இறக்கியருளினோம். மேலும், அல்லாஹ், தான் நாடுகின்றவர்களுக்கு நேர்வழி அளிக்கின்றான். </span>
<span>22:17 இறைநம்பிக்கை கொண்டவர்கள், மேலும், யூதர்கள், ஸாபிகள், கிறிஸ்தவர்கள், நெருப்பை வழிபடுகின்றவர்கள் மற்றும் இறைவனுக்கு இணை வைத்தவர்கள் ஆகிய அனைவரி டையேயும் மறுமை நாளில் திண்ணமாக, அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான்! நிச்சயமாக யாவுமே அல்லாஹ்வின் பார்வையிலுள்ளது.  </span>
<span>22:18 வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும் மற்றும் மனிதர்களில் பெரும்பாலோரும் ஏன், அல்லாஹ்வின் வேதனைக்கு இலக்காகிய பலரும் அல்லாஹ்வின் திருமுன் ஸஜ்தா செய்து சிரம்பணிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நீர் காணவில்லையா? அல்லாஹ் யாரைக் கேவலப்படுத்துகின்றானோ, அவரைக் கண்ணியப்படுத்துபவர் எவருமில்லை. திண்ணமாக, அல்லாஹ், தான் நாடியதைச் செய்கின்றான். </span>
<span>22:19 இவர்கள் தங்களுடைய இறைவனைப் பற்றி தர்க்கம் புரிந்து கொண்டிருக்கும் இரு பிரிவினர் ஆவர். (இவர்களில்) எவர்கள் சத்தியத்தை நிராகரித்தார்களோ அவர்களுக்கு நெருப்பு ஆடைகள் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளன. இவர்களுடைய தலைகளின் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும். </span>
<span>22:20 அதனால் இவர்களின் தோல்கள் மட்டுமல்ல; வயிற்றினுள் இருக்கும் பகுதிகளும் வெந்து உருகிவிடும்! </span>
<span>22:21 மேலும், அவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்காக இரும்புச் சம்மட்டிகள் இருக்கின்றன. </span>
<span>22:22 மன வேதனையினால், நரகத்திலிருந்து வெளியேற அவர்கள் முயற்சி செய்யும் போதெல்லாம், “சுட்டெரிக்கும் தண்டனையைச் சுவையுங்கள்” என்று மீண்டும் அதிலேயே தள்ளப்படுவார்கள். </span>
<span>22:23 (மறுபுறத்தில்) எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களை கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்களில் அல்லாஹ் நுழைவிப்பான். அங்கு அவர்களுக்கு தங்கக் காப்புகளும் முத்துகளும் அணிவிக்கப்படும். மேலும், அவர்களின் ஆடை பட்டாக இருக்கும்! </span>
<span>22:24 பரிசுத்த வாக்கியத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அவர்களுக்கு வழிகாட்டப்பட்டது. மேலும், மாபெரும் புகழுக்குரிய தன்மைகளைக் கொண்ட இறைவனின் வழி அவர்களுக்குக் காட்டப்பட்டது. </span>
<span>22:25 திண்ணமாக, எவர்கள் நிராகரித்தார்களோ மேலும், எவர்கள் (இன்று) அல்லாஹ்வின் வழியை விட்டு தடுத்துக் கொண்டிருக்கின்றார்களோ, இன்னும் மக்கள் அனைவருக்காகவும் நாம் நிர்மாணித்த மஸ்ஜிதுல் ஹராமை உள்ளூர் மக்களுக்கும் வெளியிலிருந்து வருபவர்களுக்கும் சம உரிமை உள்ள மஸ்ஜிதுல் ஹராமை தரிசிப்பதைத் தடை செய்கிறார்களோ (அத்தகையோரின் நடத்தை கண்டிப்பாக தண்டனைக்குரியதாக இருக்கிறது) மேலும், எவர்கள் இ(ந்த மஸ்ஜி)தில் நேர்மை தவறிக் கொடுமை இழைக்கின்றார்களோ அத்தகையவர்களுக்கு நாம் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்வோம்!</span>
<span>22:26 நாம் இப்ராஹீமுக்கு (கஅபா எனும்) இந்த ஆலயத்தின் இடத்தை பின்வரும் கட்டளையுடன் நிர்ணயம் செய்து கொடுத்த சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள்: ‘எப்பொருளையும் என்னோடு இணையாக்காதீர்; மேலும் தவாஃப் சுற்றி வருவோர்க்காகவும் நின்றும் குனிந்தும் தரையில் சிரம் வைத்தும் வணங்குவோர்க்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!’</span>
<span>22:27 ஹஜ் செய்திட மக்களுக்குப் பொது அறிவிப்புச் செய்வீராக! அவர்கள் வெகு தூரமான இடங்களில் இருந்தெல்லாம் நடந்தும் ஒட்டகங்களில் பயணம் செய்தும் உம்மிடம் வரட்டும்;</span>
<span>22:28 அவர்களுக்காக அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நன்மைகளை அவர்கள் காணட்டும் மேலும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய கால்நடைகளை சில குறிப்பிட்ட நாட்களில் அவனது பெயர் கூறி(அறுத்தி)ட வேண்டும்; அவற்றிலிருந்து அவர்களும் உண்ண வேண்டும்; வறியவர்களுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் அளிக்க வேண்டும்; </span>
<span>22:29 பிறகு தங்களுடைய அழுக்குகளை நீக்க வேண்டும்; இன்னும் தங்களுடைய நேர்ச்சைகளை நிறைவேற்ற வேண்டும்! மேலும், தொன்மையான ஆலயத்தைச் சுற்றி வரவேண்டும்!</span>
<span>22:30 இதுதான் (கஅபா ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதன் நோக்கமாகும்!) மேலும், எவரேனும் அல்லாஹ்வினால் ‘புனித மானவை’ என்று நிர்ணயிக்கப்பட்டவைக்கு கண்ணியம் அளித்தால், அது அவருடைய அதிபதியிடத்தில் அவருக்கே பலனளிக்கத் தக்கதாகும். மேலும், உங்களுக்கு (கூடாதெனச்) சொல்லப்பட்டவற்றைத் தவிர, இதர கால்நடைகள் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன. எனவே, விக்கிரஹங்கள் எனும் அசுத்தத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். பொய்யான பேச்சுகளிலிருந்து விலகியிருங்கள். </span>
<span>22:31 அல்லாஹ்வுக்கு ஒருமனப்பட்ட அடிமைகளாகத் திகழுங்கள். அவனோடு எதனையும் இணை வைக்காதீர்கள்! யாரேனும் அல்லாஹ்வுக்கு இணை வைப்பாராயின் அவர் வானத்திலிருந்து விழுந்து விட்டவரைப் போன்று ஆகிவிடுகின்றார். இனி அவரைப் பறவைகள் இறாஞ்சிக் கொண்டு செல்லும் அல்லது காற்று அவரைத் தூக்கிச் சென்று ஏதேனும் அதலபாதாளத்தில் எறிந்துவிடும்; அங்கு அவர் சின்னாபின்னமாகி விடுவார். </span>
<span>22:32 உண்மை நிலவரம் இதுதான். (இதனைப் புரிந்து கொள்ளுங்கள்) மேலும், யாரேனும் அல்லாஹ் ஏற்படுத்திய புனிதச் சின்னங்களுக்கு கண்ணியம் அளிப்பாராயின் திண்ணமாக, அது இதயங்களில் உள்ள இறையச்சத்தால் விளைவதாகும். </span>
<span>22:33 (பலிப் பிராணிகளாகிய) அவற்றிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் பயன் பெற உங்களுக்கு அனுமதியுண்டு. பின்னர், அவற்றி(னைப் பலியிடுவத)ற்கான இடம் தொன்மையான ஆலயத்தின் அருகிலாகும்!</span>
<span>22:34 மேலும், ஒவ்வொரு சமூகத்தார்க்கும் பலியிடும் ஒரு நெறிமுறையை நாம் வகுத்துக் கொடுத்துள்ளோம் அந்த(ந்தச் சமூக) மக்கள் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ள கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரை உச்சரி(த்து அறு)க்க வேண்டும் என்பதற்காக! (பல்வேறுபட்ட இவ்வழிமுறைகளின் நோக்கம் ஒன்றுதான்:) எனவே, உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்! அவனுக்கே நீங்கள் அடிபணியுங்கள். மேலும் (நபியே!) பணிவான நடத்தையை மேற்கொள்வோர்க்கு நீர் நற்செய்தி அறிவிப்பீராக! </span>
<span>22:35 அவர்கள் எத்தகையவர்களெனில், அல்லாஹ்வைப் பற்றி அவர்களிடம் கூறப்பட்டால், அவர்களின் இதயங்கள் நடுநடுங்கி விடுகின்றன. அவர்களுக்கு எவ்விதத் துன்பம் நேரிடினும் அதனைப் பொறுத்துக் கொள்கின்றனர்; தொழுகையை நிலைநிறுத்துகின்றார்கள். நாம் அவர்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து செலவு செய்கின்றார்கள். </span>
<span>22:36 மேலும் (பலியிடப்படும்) ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் புனிதச் சின்னங்களுள் ஒன்றாக நாம் ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்குப் பெரும் நன்மை இருக்கின்றது. எனவே, நிற்க வைத்து அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரை உச்சரியுங்கள். (குர்பானி கொடுத்த பின்) அவற்றின் விலாப்புறங்கள் பூமியில் சாய்ந்து விட்டால் அவற்றிலிருந்து நீங்களும் புசியுங்கள்; இருப்பதைக் கொண்டு திருப்தி அடைபவர்க்கும் மற்றும் தங்களுடைய தேவையை வெளிப்படுத்துகின்றவர்களுக்கும் புசிக்கக் கொடுங்கள். இவ்வாறே இப்பிராணிகளை நாம் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளோம்; நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு! </span>
<span>22:37 அவற்றின் இறைச்சியும் இரத்தமும் அல்லாஹ்விடம் போய்ச் சேருவதில்லை. ஆயினும், உங்களின் இறையச்சமே அவனிடம் போய்ச் சேருகின்றது. இவ்வாறு அவனே அவற்றை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்; அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டியமைக்காக நீங்கள் அவனைப் பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக! (நபியே!) நற்பணி புரிவோருக்கு நற்செய்தி சொல்வீராக!</span>
<span>22:38 எவர்கள் இறைநம்பிக்கை கொண்டார்களோ அவர்களுக்கு திண்ணமாக அல்லாஹ் பாதுகாப்பு அளிக்கின்றான். நம்பிக்கைத்துரோகம் செய்யக்கூடிய, நன்றி கொல்லக் கூடிய எவரையும் நிச்சயம் அல்லாஹ் நேசிப்பதில்லை!</span>
<span>22:39 எவர்களுக்கு எதிராகப் போர்புரியப்படுகின்றதோ அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு விட்டது. ஏனெனில், அவர்கள் கொடுமைப்படுத்தப் பட்டிருக்கின்றார்கள். மேலும், திண்ணமாக அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய ஆற்றல் பெற்றவனாக இருக்கின்றான். </span>
<span>22:40 தங்களின் வீடுகளை விட்டு அவர்கள் நியாயமின்றி வெளியேற்றப்பட்டார்கள். ‘அல்லாஹ்தான் எங்கள் இறைவன்’ என்று அவர்கள் கூறியதுதான் அவர்கள் செய்த குற்றம். அல்லாஹ் மக்களில் சிலரைக்கொண்டு சிலரைத் தடுத்துக் கொண்டிராவிடில் மடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், யூத ஆலயங்கள், அல்லாஹ்வின் பெயர் அதிக அளவில் கூறப்படும் மஸ்ஜித்கள் ஆகியவை தகர்க்கப்பட்டிருக்கும்! திண்ணமாகத் தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ் உதவி செய்வான். நிச்சயம் அல்லாஹ் வலிமை வாய்ந்தவனும் யாவற்றையும் மிகைத்தவனுமாவான். </span>
<span>22:41 அவர்கள் எத்தகையவர்களெனில், நாம் அவர்களுக்கு பூமியில் ஆட்சியதிகாரத்தை வழங்கினால் அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; ஜகாத் வழங்குவார்கள். மேலும், நன்மை புரியுமாறு ஏவுவார்கள்; தீமையிலிருந்து தடுப்பார்கள். மேலும், எல்லா விவகாரங்களின் முடிவும் அல்லாஹ்வின் கையில் உள்ளது. </span>
<span>22:42 (நபியே! இறைநிராகரிப்பாளர்களான) அவர்கள் உம்மைப் பொய்யர் எனத் தூற்றுகின்றனர் எனில், அவர்களுக்கு முன்னர் நூஹின் சமுதாயத்தினரும் ஆத், ஸமூத் இனத்தார்களும்;</span>
<span>22:43 இப்ராஹீமின் சமூகத்தினர், லூத்தின் சமூகத்தினர் ; </span>
<span>22:44 மற்றும் மத்யன்வாசிகள் ஆகிய அனைவரும் பொய்யர் எனத் தூற்றியுள்ளார்கள். மூஸாவும் பொய்யர் எனத் தூற்றப்பட்டிருக்கிறார். சத்தியத்தை நிராகரித்த இவர்கள் அனைவருக்கும் நான் முதலில் சிறிது அவகாசமளித்தேன்; பின்னர், அவர்களைப் பிடித்துக் கொண்டேன். (பாருங்கள்;) எனது தண்டனை எப்படியிருந்தது என்பதை! </span>
<span>22:45 அக்கிரமக்காரர்கள் வசித்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்திருக்கின்றோம். (இன்று) அவை தலைகீழாக கிடக்கின்றன. எத்தனையோ கிணறுகள் பாழடைந்தும் எத்தனையோ மாடமாளிகைகள் சீரழிந்தும் கிடக்கின்றன. </span>
<span>22:46 பூமியில் இவர்கள் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா, என்ன? (அவ்வாறு பார்த்திருந்தால்) உணர்ந்து கொள்ளக்கூடிய இதயங்களையும் கேட்கக்கூடிய செவிகளையும் இவர்கள் பெற்றிருப்பார்களே! உண்மை யாதெனில் கண்கள் குருடாவதில்லை; ஆனால், நெஞ்சங்களிலுள்ள இதயங்கள்தான் குருடாகிவிடுகின்றன. </span>
<span>22:47 வேதனை விரைவில் வரவேண்டுமென உம்மிடம் இம்மக்கள் அவசரப்படுகின்றார்கள்! அல்லாஹ் ஒருபோதும் தன் வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டான்! ஆனால், உம் இறைவனிடத்தில் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் ஓராயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும். </span>
<span>22:48 கொடுமை புரிந்த எத்தனையோ ஊர்கள் இருக்கின்றன. நான் (முதலில்) அவற்றுக்கு அவகாசம் அளித்து, பின்னர் அவற்றைப் பிடித்துக் கொண்டேன். மேலும், (அனைவரும்) என்னிடமே திரும்பி வர வேண்டியுள்ளது. </span>
<span>22:49 (நபியே!) நீர் கூறும்: “மனிதர்களே! (மோசமான அந்நாள் வரும் முன்) நான் உங்களுக்குத் தெள்ளத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன் மட்டுமே ஆவேன்.” </span>
<span>22:50 பின்னர், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், நற்பேறும் உண்டு. </span>
<span>22:51 ஆனால், எவர்கள் நம்முடைய வசனங்களைத் தோல்வியுறச் செய்வதற்காக முயற்சி செய்வார்களோ அவர்கள் நரகவாசிகளாவர். </span>
<span>22:52 (நபியே!) உமக்கு முன்பு நாம் அனுப்பிய எந்தத் தூதரானாலும் நபியானாலும் ஒரு விஷயம் நடைபெற வேண்டு மென அவர் விரும்பும்போது ஷைத்தான் அவருடைய விருப்பத்தில் இடையூறு விளைவிக்காமல் இருந்ததில்லை. இவ்வாறு ஷைத்தான் ஏற்படுத்தும் இடையூறுகளை அல்லாஹ் நீக்கிவிடுகின்றான். பின்னர் தன்னுடைய வசனங்களை அல்லாஹ் உறுதிப்படுத்திவிடுகின்றான். அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>22:53 (அவன் இவ்வாறு நிகழச் செய்வது) எதற்காகவெனில், இதயங்களில் (வஞ்சகப்) பிணி உள்ளவர்களுக்கும், உள்ளங்கள் இறுகிப் போய்விட்டவர்களுக்கும் ஷைத்தான் விளைவிக்கின்ற தீமையை ஒரு சோதனையாய் ஆக்கிட வேண்டும் என்பதற்காக! உண்மையில், இந்தக் கொடுமையாளர்கள் பிணக்கிலும், பகைமையிலும் வெகுதூரம் சென்று விட்டிருக்கின்றார்கள். </span>
<span>22:54 மேலும், திண்ணமாக இவ்வேதம் உம்முடைய அதிபதியிடமிருந்து வந்த உண்மையாகும் என்பதை அறிவு வழங்கப்பட்டவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் இதன் மீது அவர்கள் நம்பிக்கை கொள்வதற்காகவும் மேலும், அவர்களின் இதயங்கள் அவன் முன் பணிந்து விடுவதற்காகவும்தான் (இவ்வாறெல்லாம் நிகழச் செய்தான்). உறுதியாக, அல்லாஹ் இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு என்றென்றும் நேர்வழியைக் காண்பிக்கக் கூடியவனாக இருக்கின்றான். </span>
<span>22:55 ஆனால், இறைவனை மறுக்கக்கூடியவர்கள் இதைப் பற்றி சந்தேகம் கொண்ட வண்ணமிருப்பார்கள்; எதுவரையெனில், இறுதித் தீர்ப்புநாள் அவர்களிடம் திடீரென வரும் வரை அல்லது துயரம் மிகுந்த ஒரு நாளின் வேதனை அவர்கள் மீது இறங்கும் வரை! </span>
<span>22:56 அந்நாளில் அதிகாரம் அல்லாஹ்வுக்கு உரித்தான தாயிருக்கும். அவன் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான். எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தார்களோ அவர்கள் அருட்கொடைகள் நிறைந்த சுவனபதிகளுக்குச் செல்வார்கள். </span>
<span>22:57 மேலும், எவர்கள் நிராகரித்து, நம் வசனங்களைப் பொய்யென்று உரைத்தார்களோ அவர்களுக்கு இழிவு படுத்தும் வேதனை இருக்கின்றது. </span>
<span>22:58 மேலும், எவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்து பின்னர் கொல்லப்பட்டார்களோ அல்லது மரணமடைந்தார்களோ அவர்களுக்கு அல்லாஹ் அழகிய நற்பேறுகள் வழங்குவான். திண்ணமாக, அல்லாஹ் நற்பேறுகள் வழங்குபவர்களில் மிகவும் சிறந்தவனாவான். </span>
<span>22:59 அவர்கள் திருப்திபடுகின்ற இடத்தில் அவர்களை நுழைவிப்பான். திண்ணமாக, அல்லாஹ் யாவும் அறிந்தவனாகவும் சகிப்புத் தன்மையுடையவனாகவும் இருக்கின்றான். </span>
<span>22:60 இதுதான் அவர்களின் நல்ல முடிவாகும். தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஏற்ப ஒருவன் பழிவாங்கிய பிறகு, மீண்டும் அவன் மீதே அநீதி இழைக்கப்பட்டால் அல்லாஹ் அவனுக்கு அவசியம் உதவி புரிவான். திண்ணமாக, அல்லாஹ் பெரிதும் பிழை பொறுப்பவனாகவும் மன்னித்தருள்பவனாகவும் இருக்கின்றான். </span>
<span>22:61 இது ஏனெனில், திண்ணமாக அல்லாஹ்தான் இரவில் இருந்து பகலையும், பகலிலிருந்து இரவையும் வெளிக் கொணர்கின்றான். மேலும், யாவற்றையும் செவியேற்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். </span>
<span>22:62 இது ஏனெனில், அல்லாஹ்தான் உண்மையானவன்; அல்லாஹ்வை விடுத்து இவர்கள் அழைக்கின்ற அனைத்தும் போலியானவை. மேலும், அல்லாஹ்தான் உயர்ந்தவனும் மாபெரியவனுமாவான். </span>
<span>22:63 அல்லாஹ் வானத்திலிருந்து மழையைப் பொழிய வைக்கின்றான்; அதனால் பூமி பசுமையாகின்றது என்பதை நீங்கள் பார்க்கவில்லையா, என்ன? உண்மையில் அல்லாஹ் நுண்மையானவனாகவும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான். </span>
<span>22:64 வானங்களில் உள்ளவை, பூமியில் உள்ளவை அனைத்தும் அவனுக்கே உரியனவாகும். ஐயமின்றி அல்லாஹ் தேவைகள் அற்றவனும், மாபெரும் புகழுக்குரியவனும் ஆவான். </span>
<span>22:65 நீங்கள் பார்க்கவில்லையா, என்ன? அல்லாஹ் பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காக வசப்படுத்தி வைத்துள்ளான்; மேலும், கப்பலை ஒரு நியதிக்கு உட்படுத்தி வைத்திருப்பதும் அவன்தான். அது அவனுடைய கட்டளைப்படி கடலில் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், அவனே வானத்தைத் தன் பிடியில் வைத்திருக்கின்றான், தன் உத்தரவின்றி அது பூமியின் மீது விழுந்துவிடாமல் இருப்பதற்காக! திண்ணமாக, அல்லாஹ் மனிதர்கள் மீது மிகவும் பரிவு கொண்டவனாகவும் பெரும் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான். </span>
<span>22:66 உங்களுக்கு வாழ்வு அளிப்பவன் அவனே. பின்னர், அவனே உங்களை மரணமடையச் செய்கின்றான். மேலும், அவனே உங்களுக்கு மீண்டும் உயிர் கொடுப்பான். உண்மையில், மனிதன் பெரிதும் சத்தியத்தை நிராகரிப்பவனாக இருக்கின்றான். </span>
<span>22:67 நாம் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வழிபாட்டு முறையை நிர்ணயித்திருக்கின்றோம்; அதனை அவர்கள் கடைப்பிடிக்கின்றார்கள்! எனவே, (நபியே!) இவ்விவகாரத்தில் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்ய வேண்டாம். நீர் உம் இறைவன் பக்கம் அழைப்பு விடுப்பீராக! திண்ணமாக, நீர் நேரிய வழியிலேயே இருக்கின்றீர். </span>
<span>22:68 அவர்கள் உம்மிடம் தர்க்கித்தால் நீர் கூறி விடுவீராக: “நீங்கள் செய்வதனைத்தும் அல்லாஹ்விற்கு நன்கு தெரியும். </span>
<span>22:69 நீங்கள் என்னென்ன விஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றீர்களோ அவை அனைத்தைப் பற்றியும் அல்லாஹ் மறுமைநாளில் உங்களிடையே தீர்ப்பு வழங்குவான்.” </span>
<span>22:70 நீங்கள் அறியவில்லையா? வானம் மற்றும் பூமியிலுள்ள ஒவ்வொன்றையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான். அவை அனைத்தும் ஓர் ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. திண்ணமாக, இது அல்லாஹ்வுக்குச் சற்றும் சிரமமானதன்று. </span>
<span>22:71 இவர்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு எவற்றை வணங்குகின்றார்களோ அவற்றுக்கு அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை. மேலும், அவற்றைக் குறித்து இவர்கள் எந்தவிதமான ஞானத்தையும் பெற்றிருக்கவில்லை. கொடுமை புரியும் இம்மக்களுக்கு உதவிபுரிபவர் யாரும் இல்லை. </span>
<span>22:72 மேலும், இவர்களிடம் நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படும்பொழுது சத்தியத்தை நிராகரிப்பவர்களின் முகங்களில் வெறுப்பு ஏற்படுவதைக் காண்பீர். நம்முடைய வசனங்களை இவர்களுக்கு ஓதிக்காண்பிக்கின்றவர்கள் மீது இவர்கள் பாய்ந்து விடுவார்கள் போல் தெரிகின்றது! (நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: “இதைவிடத் தீயதை உங்களுக்கு நான் அறிவித்துத் தரவா? நரகம்! சத்தியத்தை ஏற்க மறுப்பவர்களுக்கு அல்லாஹ் அதைத்தான் வாக்களித்திருக்கின்றான். மேலும், அது மிகவும் மோசமான இருப்பிடமாகும்.”</span>
<span>22:73 மனிதர்களே! ஓர் உவமை கூறப்படுகின்றது; அதனை மிகக் கவனத்துடன் கேளுங்கள்: அல்லாஹ்வை விடுத்து நீங்கள் எந்தக் கடவுள்களை அழைக்கின்றீர்களோ, அக்கடவுள்கள் அனைவரும் சேர்ந்து ஓர் ஈயைப் படைக்க விரும்பினாலும் படைக்க முடியாது! ஏன் ஈ, அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக்கொண்டு போனாலும்கூட அதனிடமிருந்து அதனை விடுவிக்கவும் அவர்களால் முடியாது. உதவி தேடுகின்றவர்களும் பலவீனர்களே! உதவி தேடப்படுபவர்களும் பலவீனர்களே! </span>
<span>22:74 இவர்கள் அல்லாஹ்வின் மதிப்பை எந்த முறைப்படி உணர வேண்டுமோ அந்த முறைப்படி உணரவே இல்லை. உண்மை யாதெனில், பெரும் வலிமையும் கண்ணியமும் உடையவன் அல்லாஹ்வே ஆவான். </span>
<span>22:75 திண்ணமாக அல்லாஹ் (தன்னுடைய கட்டளைகளை சேர்ப்பிப்பதற்காக) வானவர்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களைத் தேர்ந்தெடுக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் நன்கு கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான். </span>
<span>22:76 மக்களுக்கு முன்னால் இருப்பவற்றையும் அவன் அறிகின்றான்; அவர்களுக்கு மறைவாக இருப்பவற்றையும் அவன் அறிகின்றான். மேலும், எல்லா விவகாரங்களும் அவன் பக்கமே திருப்பப் படுகின்றன. </span>
<span>22:77 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ‘ருகூவும்’ ஸுஜூதும்* செய்யுங்கள். உங்கள் இறைவனுக்கு அடிபணியுங்கள். மேலும், நற்பணி ஆற்றுங்கள். (இதன் மூலமே) நீங்கள் வெற்றி அடையக்கூடும்! </span>
<span>22:78 மேலும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எவ்வாறு ஜிஹாத் செய்ய வேண்டுமோ அவ்வாறு ஜிஹாத் செய்யுங்கள். அவன் (தனது பணிக்காக) உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளான். மேலும், அவன் தீனில் வாழ்க்கை நெறியில் உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் வைத்திடவில்லை. உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கத்தில் நிலைத்திருங்கள். அல்லாஹ் உங்களுக்கு ‘முஸ்லிம்கள்’ என்றுதான் முன்பும் பெயர் சூட்டியிருந்தான்; இதிலும் (குர்ஆனிலும் உங்களுக்கு இதே பெயர்தான்!) தூதர் உங்கள் மீது சான்று வழங்குபவராகவும், நீங்கள் மக்கள் மீது சான்று வழங்குபவர்களாகவும் திகழ வேண்டும் என்பதற்காக! எனவே, தொழுகையை நிலைநாட்டுங்கள்; ஜகாத் கொடுங்கள்; மேலும், அல்லாஹ்வை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள். அவன்தான் உங்களுடைய பாதுகாவலன். அவன் எத்துணைச் சிறந்த பாதுகாவலன்; மேலும், அவன் எத்துணைச் சிறந்த உதவியாளன்!</span>
</div><div>
<span>அல் முஃமினூன்</span>
<span>23:1 திண்ணமாக, இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர். </span>
<span>23:2 அவர்கள் எத்தகையவர்கள் எனில், தங்களுடைய தொழுகையில் பயபக்தியை மேற்கொள்கின்றார்கள்;  </span>
<span>23:3 மேலும், வீணானவற்றைவிட்டு விலகியிருக்கின்றார்கள்; </span>
<span>23:4 இன்னும் ஜகாத்தை அதன் நெறிமுறைப்படி செயல்படுத்தக் கூடியவராய் இருக்கின்றார்கள். </span>
<span>23:5 மேலும், தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாக்கின்றார்கள்; </span>
<span>23:6 தங்களுடைய மனைவியரிடமோ, தங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களிடமோ தவிர! அத்தகைய நிலையில் அவர்கள் பழிப்பிற்குரியவர்கள் அல்லர். </span>
<span>23:7 ஆயினும், எவர்கள் இதற்கப்பாலும் ஆசைப்படுகின்றார்களோ அவர்களே வரம்பு மீறக்கூடியவர்களாவர். </span>
<span>23:8 இன்னும் அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களையும் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளையும் பேணிக் காக்கக்கூடியவராய் இருக்கின் றார்கள். </span>
<span>23:9 மேலும், தங்களுடைய தொழுகைகளையும் பேணுபவராய் இருக்கின்றார்கள்.  </span>
<span>23:10 இவர்கள்தாம் ‘ஃபிர்தவ்ஸ்’ எனும் சொர்க்கத்தைப் பெறும் வாரிசுகளாவர். </span>
<span>23:11 இன்னும், அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள். </span>
<span>23:12 மனிதனை நாம் களி மண்ணின் சத்திலிருந்து படைத்தோம். </span>
<span>23:13 பின்னர் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் (செலுத்தப்பட்ட) விந்தாக ஆக்கினோம். </span>
<span>23:14 பிறகு அந்த விந்தினை இரத்தக் கட்டியின் வடிவத்தில் அமைத்தோம். பின்னர் அந்த இரத்தக் கட்டியை சதைக்கட்டியாய் ஆக்கினோம். பிறகு, அச்சதைக்கட்டியை எலும்புகளாய் ஆக்கினோம். பின்னர் அவ்வெலும்புகளைச் சதையால் போர்த்தினோம். பிறகு, அதனை முற்றிலும் வேறொரு படைப்பாக வளரச் செய்தோம். பெரும் அருட்பேறுகள் உடையவன் ஆவான் அல்லாஹ், படைப்பாளர்களிலெல்லாம் மிக அழகான படைப்பாளன்!</span>
<span>23:15 பின்னர், நிச்சயமாக நீங்கள் இதற்குப் பிறகு மரணிக்கக் கூடியவர்கள்தாம்!  </span>
<span>23:16 பிறகு, திண்ணமாக, நீங்கள் மறுமைநாளில் எழுப்பப்படுவீர்கள். </span>
<span>23:17 திண்ணமாக, நாம் உங்களுக்கு மேலே ஏழு பாதைகளைப் படைத்திருக்கின்றோம். மேலும், படைக்கும் கலையில் நாம் எதுவும் அறியாதவராக இல்லை. </span>
<span>23:18 இன்னும், வானிலிருந்து நாம் சரியாகக் கணக்கிட்டு குறிப்பிட்ட அளவு மழையை இறக்கினோம். பின்னர், அதனைப் பூமியில் தேக்கி வைத்தோம். நாம் (விரும்புகின்றபடி) அதனை இல்லாமல் ஆக்கிவிடவும் ஆற்றலுடையோம்.  </span>
<span>23:19 மேலும், அதன் மூலம் பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டங்களை உங்களுக்காக நாம் உருவாக்கினோம். இத்தோட்டங்களில் (சுவை மிகுந்த) ஏராளமான கனிகள் உங்களுக்கு இருக்கின்றன. இன்னும் அவற்றிலிருந்து நீங்கள் உணவைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். </span>
<span>23:20 மேலும், ‘தூர் ஸைனா’ வளர்கின்ற மரத்தையும் நாம் படைத்தோம். எண்ணெய்யுடனும் உண்ணுகின்றவர்களுக்குக் குழம்புடனும் அது முளைக்கின்றது. </span>
<span>23:21 திண்ணமாக, கால்நடைகளிலும் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக்கின்றது. அவற்றின் வயிற்றுக்குள் இருப்பவற்றிலிருந்து ஒரு பொருளை (பாலை) உங்களுக்கு நாம் புகட்டுகின்றோம். மேலும், அவற்றில் ஏராளமான பயன்களும் உங்களுக்கு இருக்கின்றன. நீங்கள் அவற்றை உண்ணவும் செய்கின்றீர்கள். </span>
<span>23:22 அவற்றின் மீதும் கப்பல்கள் மீதும் நீங்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றீர்கள். </span>
<span>23:23 திண்ணமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாய மக்களே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் உங்களுக்கு வேறு யாரும் இல்லை. நீங்கள் அஞ்சமாட்டீர்களா?” </span>
<span>23:24 அவருடைய சமுதாயத்தில் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த தலைவர்கள் கூறலானார்கள்: “இவர் உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை; இவர் உங்களைவிட உயர்வடைய வேண்டும் என நினைக்கின்றார்! அல்லாஹ் யாரையேனும் தூதராக அனுப்ப நாடியிருந்தால் வானவர்களை அனுப்பி வைத்திருப்பான். (மனிதர் இறைத்தூதராய் வருவார் எனும்) இச்செய்தியை எங்கள் மூதாதையரிடமிருந்து நாங்கள் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லையே! </span>
<span>23:25 இந்த மனிதருக்குக் கொஞ்சம் பைத்தியம் பிடித்திருக்கின்றது என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. இவருடைய விஷயத்தில் இன்னும் சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள். (இவருடைய பைத்தியம் தெளியக்கூடும்!)” </span>
<span>23:26 அதற்கு நூஹ் “என் இறைவனே! அவர்கள் என்னைப் பொய்யனென்று கூறிவிட்டதனால் இனி நீயே எனக்கு உதவி செய்வாயாக!” என்று இறைஞ்சினார். </span>
<span>23:27 நாம் அவருக்கு வஹி அறிவித்தோம். நாம் அறிவிக்கின்றபடியும், நமது கண்காணிப்பிலும் ஒரு கப்பலைத் தயார் செய்யும்! பின்னர், நம் கட்டளை வந்ததும் உலையிலிருந்து தண்ணீர் பொங்கி எழ ஆரம்பித்தால், எல்லா வகைப் பிராணிகளிலிருந்தும் ஒவ்வொரு ஜோடியையும், உமது குடும்பத்தாரையும் அதில் ஏற்றிக் கொள்ளும்; அவர்களில் யாருக்கு எதிராக முன்னரே தீர்ப்பாகி விட்டதோ அவர்களைத் தவிர! மேலும், கொடுமைக்காரர்களைப் பற்றி நீர் எம்மிடம் எதுவும் பேசாதீர். இதோ! இவர்கள் மூழ்கடிக்கப்படவிருக்கின்றார்கள்; </span>
<span>23:28 நீரும் உம்முடனிருப்பவர்களும் கப்பலில் ஏறிக் கொண்டதும் கூறுவீர்களாக: “கொடுமைபுரியும் மக்களிடமிருந்து எங்களை விடுவித்த அல்லாஹ்வுக்கே அனைத்து நன்றியும்!”</span>
<span>23:29 மேலும், கூறுவீராக: “என் இறைவனே! அருள் வளம் கொண்டதோர் இடத்தில் என்னை இறக்குவாயாக! நீ மிகச் சிறந்த இடத்தை நல்கக் கூடியவன்.”</span>
<span>23:30 திண்ணமாக, இவ்வரலாற்றில் பெரும் சான்றுகள் உள்ளன. திண்ணமாக, நாம் சோதனை செய்து கொண்டுதான் இருக்கின்றோம். </span>
<span>23:31 அவர்களுக்குப் பிறகு நாம் வேறொரு கால கட்டத்து சமூகத்தினரைத் தோற்றுவித்தோம். </span>
<span>23:32 பிறகு, அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களிடம் நாம் அனுப்பினோம். (அவர் அவர்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுத்தார்:) “அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் உங்களுக்கு வேறு யாரும் இல்லை; நீங்கள் அஞ்சுவதில்லையா என்ன?” </span>
<span>23:33 மேலும் அவருடைய சமூகத்தில் எந்தத் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தார்களோ இன்னும் இறுதிநாளின் சந்திப்பை, பொய்யென்று வாதாடினார்களோ மேலும், இவ்வுலகில் ஆடம்பரமான வாழ்க்கையை எவர்களுக்கு நாம் வழங்கியிருந்தோமோ அந்தத் தலைவர்கள் கூறலானார்கள்; “இவர் உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை; நீங்கள் உண்ணுகின்றவற்றையே இவரும் உண்ணுகின்றார். மேலும், நீங்கள் பருகுகின்றவற்றையே இவரும் பருகுகின்றார். </span>
<span>23:34 எனவே, உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்களாயின் அப்போது திண்ணமாக, நீங்கள் இழப்பிற்குரியவர்களாகி விடுவீர்கள்! </span>
<span>23:35 நீங்கள் இறந்து, மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்ட பிறகு நீங்கள் (மண்ணறைகளிலிருந்து) வெளியாக்கப்படுவீர்கள் என்று இவர் உங்களிடம் எச்சரிக்கின்றாரா? </span>
<span>23:36 உங்களிடம் விடுக்கப்படும் இந்த எச்சரிக்கை சாத்தியமற்றது; முற்றிலும் சாத்தியமற்றது!</span>
<span>23:37 நம்முடைய இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு ஒரு வாழ்க்கை இல்லை; நாம் இறக்கப்போவதும் உயிர் வாழ்வதும் இங்குதான்! நாம் ஒருபோதும் எழுப்பப்படமாட்டோம். </span>
<span>23:38 அல்லாஹ்வின் பேரில் பொய்யைப் புனைந்து உரைத்துக் கொண்டிருக்கும் மனிதரே இவர். நாம் ஒருபோதும் இவரை நம்பமாட்டோம்!” </span>
<span>23:39 அதற்கு அந்தத் தூதர் இறைஞ்சினார். “என் இறைவனே! இவர்கள் என்னைப் பொய்யன் என்று தூற்றிவிட்ட காரணத்தால் நீயே எனக்கு உதவி புரிந்திடுவாய்!” </span>
<span>23:40 அதற்கு இறைவன், “நெருங்கிவிட்டது இவர்கள் (தாங்கள் செய்தவற்றைக் குறித்து) வருந்தப்போகின்ற காலம்!” என பதில் அளித்தான். </span>
<span>23:41 இறுதியில் முற்றிலும் நியாயத்திற்கேற்பவே ஓர் உரத்த ஓசை அவர்களைப் பிடித்துக்கொண்டது. அவர்களை நாம் குப்பைக் கூளங்களாக்கி எறிந்துவிட்டோம். தொலைந்து போகட்டும் கொடுமை புரிந்த சமூகத்தார்!</span>
<span>23:42 பின்னர், வேறு பல சமூகங்களை அவர்களுக்குப் பிறகு நாம் தோற்றுவித்தோம். </span>
<span>23:43 எந்தச் சமூகமும் தன்னுடைய தவணை வருமுன் அழிந்து போவதுமில்லை; அதற்குப்பிறகு வாழ்வதும் இல்லை. </span>
<span>23:44 பிறகு, நாம் தொடர்ந்து நம் தூதர்களை அனுப்பிக் கொண்டிருந்தோம். எந்த ஒரு சமூகத்திலும் அதனுடைய தூதர் அதனிடம் வந்தபோது அந்தச் சமூகத்தினர் அவரைப் பொய்யரென்றே தூற்றினர். நாமும் அந்தச் சமூகங்களை ஒன்றன் பின் ஒன்றாக அழித்துக் கொண்டே வந்தோம். இறுதியில் அவர்களை நாம் வெறும் கதைகளாய் ஆக்கிவிட்டோம். சாபம் உண்டாகட்டும், நம்பிக்கை கொள்ளாதவர்கள் மீது!</span>
<span>23:45 பிறகு, நாம் மூஸாவையும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நம் சான்றுகள் மற்றும் தெளிவான ஆதாரத்துடன் </span>
<span>23:46 ஃபிர்அவ்னிடமும் அவனுடைய அரசவைப் பிரமுகர்களிடமும் அனுப்பினோம். ஆனால், அவர்கள் பெரும் செருக்குடன் நடந்து கொண்டனர். மேலும், ஆணவம் கொண்ட மக்களாகவும் இருந்தனர். </span>
<span>23:47 “எங்களைப் போன்ற இரு மனிதர்கள் மீது நாங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமா? அவர்களின் சமூகத்தினர் எங்களுக்கு அடிமைகளாயிற்றே!” என்று கூறலானார்கள். </span>
<span>23:48 ஆக, அவர்கள் அவ்விருவரையும் பொய்யர்கள் என்றனர். எனவே, அழிக்கப்பட்டவர்களில் இவர்களும் சேர்க்கப்பட்டனர். </span>
<span>23:49 மேலும், மூஸாவுக்கு நாம் வேதம் வழங்கினோம், மக்கள் (அதன் மூலம்) நேர்வழி அடைய வேண்டும் என்பதற்காக!</span>
<span>23:50 மேலும், நாம் மர்யத்தின் குமாரரையும், அவருடைய அன்னையையும் ஒரு சான்றாக ஆக்கினோம். அமைதியான நீரூற்று ஓடிக்கொண்டிருக்கக்கூடிய ஓர் உயரமான இடத்தில் அவ்விருவருக்கும் நாம் தஞ்சம் அளித்தோம். </span>
<span>23:51 தூதர்களே! உண்ணுங்கள் தூய்மையானவற்றை! செய்யுங்கள் நன்மைகளை! நீங்கள் செய்யும் அனைத்தையும் நான் நன்கு அறியக்கூடியவனாக இருக்கின்றேன். </span>
<span>23:52 மேலும், உங்களுடைய இந்தச் சமுதாயம் திண்ணமாக ஒரே சமுதாயமாகும். மேலும், நான் உங்கள் அதிபதி ஆவேன்; எனவே, எனக்கே அஞ்சுங்கள். </span>
<span>23:53 ஆயினும், (பிற்காலத்தில்) மக்கள் தங்களுடைய தீனைநெறியை தங்களுக்கிடையே துண்டு துண்டாக்கிக் கொண்டார்கள். ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் எது இருக்கின்றதோ அதைக் கொண்டு மகிழ்ச்சியடைகின்றார்கள் </span>
<span>23:54 சரி, அவர்களை விட்டுவிடுவீராக; ஒரு குறிப்பிட்ட காலம் வரை தம் அலட்சியப்போக்கில் அவர்கள் மூழ்கிக் கிடக்கட்டும்!</span>
<span>23:55 நாம் அவர்களுக்குப் பொருளையும், மக்களையும் அளித்து உதவி புரிந்து கொண்டிருக்கின்றோமெனில், </span>
<span>23:56 நாம் அவர்களுக்கு நன்மைகளை வழங்குவதில் அதிவேகமாய் இருக்கின்றோம் என்று அவர்கள் கருதுகின்றார்களா? (இல்லை, உண்மை நிலவரத்தை) அவர்கள் அறிவதில்லை. </span>
<span>23:57 உண்மையில் எவர்கள் தம் இறைவனின் அச்சத்தால் நடுங்கக்கூடியவர்களாய் இருக்கின்றார்களோ, </span>
<span>23:58 மேலும், எவர்கள் தம் இறைவனின் வசனங்கள் மீது நம்பிக்கை கொள்கின்றார்களோ, </span>
<span>23:59 இன்னும் எவர்கள் தம் இறைவனுக்கு (எவரையும்) இணைவைக்காது இருக்கின்றார்களோ, </span>
<span>23:60 எவர்கள் தானதர்மங்கள் வழங்கிக் கொண்டு இருக்கின்றார்களோ, மேலும், தம் இறைவனிடம் திரும்பிச் செல்ல வேண்டியவர்களாயிருக்கின்றோம் எனும் எண்ணத்தில் இதயம் நடுங்கியவாறு இருக்கின்றார்களோ </span>
<span>23:61 அத்தகையவர்கள் மட்டுமே நன்மைகளின் பக்கம் விரைந்து செல்பவர்களாகவும் அவர்கள் ஒருவரையொருவர் முந்திச் சென்று அவற்றை அடையக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர். </span>
<span>23:62 நாம் எந்த மனிதனுக்கும் அவனது சக்திக்கு அதிகமாக சிரமம் அளிப்பதில்லை. (ஒவ்வொருவரின் நிலையையும்) மிகச்சரியாக எடுத்துரைக்கக்கூடிய ஓர் ஏடு நம்மிடம் இருக்கிறது. ஆகையால் மக்கள் அநீதியிழைக்கப்படமாட்டார்கள்.  </span>
<span>23:63 ஆயினும், இம்மக்கள் இதனைப் பற்றி அறியாமலிருக்கின்றார்கள். மேலும், அவர்களுடைய செயல்களும் (மேலே கூறப்பட்ட) அந்த வழி முறைக்கு மாறுபட்டிருக்கின்றன. அவர்கள் இத்தகைய செயல்களைச் செய்து கொண்டேயிருப்பார்கள். </span>
<span>23:64 இறுதியில், அவர்களில் சுகபோகங்களிலேயே மூழ்கிக்கிடப்பவர்களை வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொள்ளும்போது அவர்கள் ஓலமிட்டு அலறத் தொடங்குவார்கள்; </span>
<span>23:65 இன்று நீங்கள் எதைப்பற்றியும் முறையிடவோ, புலம்பவோ வேண்டாம். நிச்சயம் எம்மிடமிருந்து எந்த உதவியையும் பெறமாட்டீர்கள்! </span>
<span>23:66 என் வசனங்கள் உங்களிடம் ஓதிக்காட்டப்பட்டு வந்தன. அப்போது (தூதரின் குரலைக் கேட்டதும்) பின்னோக்கி ஓடினீர்கள். </span>
<span>23:67 இறுமாப்புக் கொண்டவர்களாய் அவரை அலட்சியம் செய்து கொண்டும், தங்கள் அவைகளில் அவரைப் பழித்துரைத்துக் கொண்டும், பொல்லாங்கு கூறிக்கொண்டும் இருந்தீர்கள்!</span>
<span>23:68 என்ன, இவர்கள் இந்த (இறை)வாக்கைச் சிந்திக்கவில்லையா? அல்லது இவர்களின் பண்டைக்கால மூதாதையர்களிடம் ஒருபோதும் வந்திராத ஏதேனும் கருத்தையா இவர்களிடம் இது சமர்ப்பிக்கின்றது? </span>
<span>23:69 அல்லது தங்களின் இந்தத் தூதரை இவர்கள் ஒருபோதும் அறிந்திருக்கவில்லையா? (அப்படி அறியாது இருந்த காரணத்தாலா) அவரைப் புறக்கணிக்கின்றார்கள்? </span>
<span>23:70 அல்லது ‘அவருக்குப் பைத்தியம் பிடித்துள்ளது’ என்று கூறுகின்றார்களா? இல்லை, மாறாக அவர்களிடம் அவர் சத்தியத்தைக் கொண்டு வந்திருக்கின்றார். சத்தியத்தை விரும்பாதவர்களாகவே அவர்களில் பெரும்பாலோர் இருக்கின்றனர். </span>
<span>23:71 மேலும், சத்தியம் அவர்களின் மன இச்சைகளைப் பின்பற்றிச் செல்லுமாயின் வானங்கள், பூமி மற்றும் அவற்றில் வாழும் அனைத்தின் ஒழுங்கமைப்பும் சீர்குலைந்து போயிருக்கும் இல்லை, மாறாக அவர்களுக்கே உரிய நல்லுரையை அவர்களிடம் நாம் கொண்டு வந்திருக்கின்றோம்; அவர்களோ தங்களுக்கே உரிய நல்லுரையைப் புறக்கணித்துக் கொண்டிருக்கின்றார்கள். </span>
<span>23:72 அல்லது நீர் அவர்களிடம் ஏதேனும் கூலி கேட்கின்றீரா, என்ன? உமக்கு உம் இறைவன் வழங்கியதே மிகச் சிறந்ததாகும். மேலும், வாழ்வாதாரம் வழங்குபவர்களில் எல்லாம் அவன் மிகச் சிறந்தவனாவான். </span>
<span>23:73 திண்ணமாக, நீர் அவர்களை நேரிய வழியில் அழைத்துக் கொண்டிருக்கின்றீர். </span>
<span>23:74 ஆயினும் மறுமையை நம்பாதவர்கள் நேரிய வழியை விட்டு விலகிச் செல்ல விரும்புகின்றார்கள். </span>
<span>23:75 இவர்களுக்கு நாம் கருணை புரிவோமாயின், மேலும் (இன்று) இவர்களுக்கு நேர்ந்துள்ள துன்பத்தை நாம் அகற்றி விடுவோமாயின், அவர்கள் தங்களுடைய வரம்பு மீறிய நடத்தையில், முற்றிலும் மூழ்கிவிடுவார்கள். </span>
<span>23:76 (இவர்களின் நிலைமை எப்படிப்பட்டதெனில்) நாம் இவர்களைத் துன்பத்திற் குள்ளாக்கினோம்; அவ்வாறிருந்தும் அவர்கள் தம் இறைவனின் திருமுன் சிரம் சாய்க்கவோ பணிவை மேற்கொள்ளவோ இல்லை. </span>
<span>23:77 இறுதியில், நாம் அவர்கள் மீது கடும் வேதனையின் வாயிலைத் திறந்து விட்டாலோ உடனே அவர்கள் எல்லாவித நன்மைகளை விட்டும் நிராசை அடைந்துவிடுவர் (என்பதை நீர் காண்பீர்!)</span>
<span>23:78 அந்த அல்லாஹ்தானே உங்களுக்கு கேட்பதற்கும் பார்ப்பதற்கும் வேண்டிய ஆற்றல்களையும், சிந்திப்பதற்கு இதயத்தையும் வழங்கியிருக்கின்றான். ஆயினும், மிகக் குறைவாகவே நீங்கள் நன்றி செலுத்துகின்றீர்கள். </span>
<span>23:79 மேலும், அவன்தான் உங்களைப் பூமியில் பரவச் செய்தான். மேலும், அவன் பக்கமே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். </span>
<span>23:80 அவனே வாழ்வளிக்கின்றான்; மரணமடையச் செய்கின்றான். மேலும், இரவுபகல் மாறி மாறி வருவது அவன் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இவையெல்லாம் உங்கள் அறிவுக்குப் புலப்படவில்லையா என்ன? </span>
<span>23:81 ஆயினும், இவர்களுடைய முன்னோர்கள் கூறியதைப் போன்றே இவர்களும் கூறுகின்றார்கள். </span>
<span>23:82 இவர்கள் சொல்கிறார்கள்: “நாங்கள் இறந்து மண்ணோடு மண்ணாகவும் உக்கிய எலும்புகளாகவும் ஆன பின்னர் மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பப்படுவோமா, என்ன? </span>
<span>23:83 இத்தகைய எச்சரிக்கைகளை நாங்களும் நிறையக் கேள்விப்படுகின்றோம். இதற்கு முன்னர் எங்கள் முன்னோர்களும் கேள்விப்பட்டிருக்கின்றார்கள். இவை தொன்மையான கட்டுக்கதைகளே அன்றி வேறில்லை!”</span>
<span>23:84 (இவர்களிடம்) கேளுங்கள்: “நீங்கள் அறிந்திருந்தால், பூமியும் இதிலுள்ள அனைவரும் யாருக்குரியவர்கள் என்பதைக் கூறுங்கள்.” </span>
<span>23:85 திண்ணமாக, அதற்கு அவர்கள் பதில் அளிப்பார்கள், “அல்லாஹ்வுக்கு உரியவர்கள்” என்று! பிறகு, “நீங்கள் ஏன் உணர்ந்து கொள்வதில்லை” என்று கேளுங்கள். </span>
<span>23:86 “ஏழு வானங்களின் உரிமையாளனும் மகத்துவம் மிக்க அர்ஷின் உரிமையாளனும் யார்?” என்று இவர்களிடம் வினவுங்கள். </span>
<span>23:87 இவர்கள் திண்ணமாக பதில் கூறுவார்கள், “அல்லாஹ்தான்” என்று! கேளுங்கள்: “பிறகு ஏன் நீங்கள் அஞ்சுவதில்லை?”</span>
<span>23:88 மேலும், அவர்களிடம் கேளுங்கள்: “உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். ஒவ்வொரு பொருளின்மீதுள்ள அதிகாரமும் யாருடைய கைவசம் இருக்கின்றது என்றும் மேலும், அனைவருக்கும் அபயம் அளிப்பவனும் எவராலும் அபயம் அளிக்கப்பட முடியாதவனும் யார் என்றும்!” </span>
<span>23:89 திண்ணமாக, அவர்கள் கூறுவார்கள்: “இவை அல்லாஹ்வுக்கே உரியனவாகும்.” பிறகு, கேளுங்கள்: “எங்கிருந்து நீங்கள் ஏமாற்றப்படுகின்றீர்கள்?” </span>
<span>23:90 சரியாகச் சொல்வதானால் சத்தியத்தையே நாம் இவர்கள் முன் கொண்டு வந்துள்ளோம். ஆயினும், இவர்கள் பொய்யர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. </span>
<span>23:91 அல்லாஹ் யாரையும் தன் பிள்ளைகளாய் எடுத்துக் கொள்ளவில்லை. மேலும், அவனுடன் வேறு எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் ஒவ்வொரு கடவுளரும் தன் படைப்புகளை அழைத்துக் கொண்டு தனியே சென்றிருப்பர். மேலும், ஒருவர் மற்றவரைவிட மேலோங்க முனைந்து கொண்டிருப்பர். மிகத்தூய்மையானவனாக இருக்கின்றான் அல்லாஹ், இவர்கள் புனைந்துரைக்கும் தன்மைகளைவிட்டு! </span>
<span>23:92 வெளிப்படையானவற்றையும், மறைவானவற்றையும் அறியக்கூடியவனாக இருக்கின்றான். அவர்களுடைய இணைவைப்பிலிருந்து அல்லாஹ் மிக மேலானவன். </span>
<span>23:93 (நபியே!) இறைஞ்சுவீராக: “என் இறைவனே! எந்த ஒரு வேதனையைப் பற்றி இவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படுகின்றதோ அதனை, நான் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே நீ நிகழச்செய்தால் </span>
<span>23:94 என் இறைவா! கொடுமை இழைக்கும் இந்த சமூகத்தாருடன் என்னையும் சேர்த்து விடாதே!”</span>
<span>23:95 இவர்களுக்கு நாம் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கும் அந்த வேதனையை உமது கண்ணெதிரிலேயே கொண்டு வருவதற்கும் உண்மையில் நாம் முழு வலிமை பெற்றிருக்கின்றோம். </span>
<span>23:96 (நபியே!) எது மிக உன்னத வழிமுறையாய் உள்ளதோ அதன் மூலம் தீமையைத் தடுப்பீராக! அவர்கள் (உம்மீது) புனைந்து கூறுகின்றவற்றை நாம் நன்கறிவோம். </span>
<span>23:97 மேலும், இறைஞ்சுவீராக! “என் இறைவனே! நான் ஷைத்தான்களின் தூண்டுதல்களிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன். </span>
<span>23:98 மேலும், என் இறைவனே! அவர்கள் என்னருகில் வருவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்.”</span>
<span>23:99 (இம்மக்கள் தம் செயல்களைவிட்டு விலகிக் கொள்ளவே மாட்டார்கள்;) இறுதியில் அவர்களில் எவருக்கேனும் மரணம் வந்துவிடுமானால், “என் இறைவனே! நான் விட்டு வந்துள்ள உலகுக்கு என்னைத் திரும்ப அனுப்புவாயாக! </span>
<span>23:100 அங்கு நான் நற்செயல் புரிவேனே!” என்று கூறத் தொடங்குவான் அவ்வாறு ஒருபோதும் நடக்காது. இது அவன் பிதற்றிக் கொண்டிருக்கின்ற வெறும் வார்த்தைகள்தாம்! (இறந்து போகும்) இவர்கள் அனைவருக்கும் பின்னால், ‘பர்ஸக்’* திரையாக இருக்கின்றது; இவர்கள் மீண்டும் உயிர்த்தெழுப்பப்படும் நாள் வரையில்!  </span>
<span>23:101 பிறகு, சூர்எக்காளம் ஊதப்பட்டதும் அவர்களிடையே எந்த உறவுகளும் அந்நாளில் இருக்காது. ஒருவருக்கொருவர் விசாரித்துக்கொள்ளவும் மாட்டார்கள். </span>
<span>23:102 (அவ்வேளை) எவர்களுடைய (நன்மையின்) எடைத் தட்டுகள் கனத்திருக்குமோ அவர்களே வெற்றி பெறுவார்கள். </span>
<span>23:103 எவர்களுடைய எடைத்தட்டுகள் இலேசாக இருக்குமோ அவர்கள் தங்களைத் தாங்களே இழப்புக்கு ஆளாக்கிக் கொண்டவர்களாவர். அவர்கள் நரகத்தில் நிரந்தரமாயிருப்பார்கள். </span>
<span>23:104 நெருப்பு அவர்களுடைய முகங்களின் தோலை நக்கித் தின்றுவிடும். மேலும், அங்கே அவர்களின் தாடைகள் வெளிப்பட்டுவிடும். </span>
<span>23:105 “என்னுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்ட போது, அவற்றைப் பொய்யென்று கூறிய மக்கள் நீங்கள் அல்லவா?” </span>
<span>23:106 அதற்கு அவர்கள் கூறுவர்: “எங்கள் இறைவனே! எங்களின் துர்ப்பாக்கியம் எங்களை அமுக்கிவிட்டிருந்தது. உண்மையிலேயே நாங்கள் வழிதவறிய மக்களாகவே இருந்தோம். </span>
<span>23:107 எங்கள் இறைவனே! (இப்பொழுது) எங்களை இதிலிருந்து வெளியேற்றி விடு; நாங்கள் மீண்டும் (இவ்வாறு) தவறு செய்தால் நிச்சயம் நாங்கள் கொடுமைக்காரர்களாவோம்.” </span>
<span>23:108 அல்லாஹ் பதிலளிப்பான்: “விலகிச் செல்லுங்கள் என் எதிரிலிருந்து; அதிலேயே வீழ்ந்து கிடங்கள்! என்னிடம் பேசாதீர்கள்.” </span>
<span>23:109 என் அடியார்களில் சிலர் “எங்கள் இறைவனே! நாங்கள் நம்பிக்கை கொண்டோம்; எனவே, எங்களை நீ மன்னித்து எங்களுக்கு கருணை புரிவாயாக! கருணை புரிவோரிலெல்லாம் நீயே சிறந்த கருணையாளன்” என்று இறைஞ்சிக்கொண்டிருந்தார்கள். </span>
<span>23:110 அப்போது நீங்கள் அவர்களை ஏளனம் செய்து கொண்டிருந்தீர்கள். எதுவரையெனில், அவர்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் பகைமை, நான் ஒருவன் இருக்கின்றேன் என்பதையே உங்களை மறக்கச் செய்து விட்டது. மேலும், நீங்கள் அவர்களைக் குறித்து சிரித்துக் கொண்டிருந்தீர்கள். </span>
<span>23:111 அவர்கள் சகித்துக் கொண்டதற்காக இன்று நான் இந்தக் கூலியை அளிக்கின்றேன். அதாவது, அவர்களே வெற்றி பெற்றவர்கள். </span>
<span>23:112 பிறகு, அல்லாஹ் (அவர்களிடம்) “நீங்கள் பூமியில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தீர்கள்?” என்று கேட்பான். </span>
<span>23:113 அதற்கவர்கள், “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் கொஞ்சநேரம் அங்கு நாங்கள் தங்கியிருந்தோம்; கணக்கிடுவோரிடம் கேட்பாயாக!” என்று கூறுவார்கள். </span>
<span>23:114 அல்லாஹ் கூறுவான்: “நீங்கள் சிறிது காலமே தங்கியிருந்தீர்கள்! (இதனை அப்போது) நீங்கள் அறிந்திருந்தால் எத்தனை நன்றாய் இருந்திருக்கும்! </span>
<span>23:115 நாம் உங்களை வீணாகவே படைத்துள்ளோம் என்றும் நம்மிடம் நீங்கள் திரும்பிக் கொண்டு வரப்படவே மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா, என்ன?”</span>
<span>23:116 மிக உயர்ந்தவனாவான், உண்மையான அரசனாகிய அல்லாஹ்! அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை, சங்கைமிகு அர்ஷின் உரிமையாளன்.  </span>
<span>23:117 யாரேனும் அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை அழைத்தால் அது பற்றி அவனிடம் எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் அவனுடைய கணக்கு அவனுடைய இறைவனிடமே உள்ளது! இத்தகைய நிராகரிப்பாளர்கள், ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை. </span>
<span>23:118 (நபியே!) நீர் இறைஞ்சுவீராக: “என் இறைவனே! மன்னித்து கிருபை செய்வாயாக! கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகச் சிறந்தவன்!”</span>
</div><div>
<span>அந்நூர்</span>
<span>24:1 இது ஓர் அத்தியாயம்; இதனை நாம் இறக்கியருளினோம். இதனை நாம் விதியாக்கியிருக்கின்றோம். மேலும், இதில் தெளிவான கட்டளைகளையும் நாம் இறக்கியிருக்கின்றோம். (இதனால்) நீங்கள் பாடம் பெறக்கூடும்!</span>
<span>24:2 விபச்சாரம் செய்த பெண், விபச்சாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவருக்கும் நூறு சாட்டையடி கொடுங்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால், அல்லாஹ்வுடைய தீனின் மார்க்கத்தின் விவகாரத்தில் இவர்கள்மீதுள்ள இரக்கம் உங்களை பாதித்துவிடக்கூடாது. மேலும், இவர்களுக்குத் தண்டனை அளிக்கும்போது, இறைநம்பிக்கையாளர்களின் ஒரு குழு அங்கே இருக்க வேண்டும். </span>
<span>24:3 விபச்சாரம் செய்யும் ஆண், விபச்சாரம் செய்யும் பெண் ணையோ அல்லது இறைவனுக்கு இணைவைக்கும் பெண் ணையோ தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய வேண்டாம். விபச்சாரம் செய்யும் ஒரு பெண்ணை, விபச்சாரம் செய்பவனோ அல்லது இறைவனுக்கு இணை வைப்பவனோ அன்றி வேறு யாரும் திருமணம் செய்ய வேண்டாம். மேலும், இது இறைநம்பிக்கையாளர்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது. </span>
<span>24:4 எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லி பின்னர், நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவில்லையோ அவர்களுக்கு எண்பது சாட்டையடிகள் கொடுங்கள். இனி, அவர்கள் கூறும் சாட்சியத்தை என்றைக்கும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். மேலும், அவர்களே தீயவர்கள். </span>
<span>24:5 ஆனால், எவர்கள் இந்தக் குற்றத்திற்குப் பின்னர் பாவமன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர! அல்லாஹ் அவசியம் (அவர்கள் விஷயத்தில்) அதிகம் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>24:6 ஆனால், யார் தம்முடைய மனைவியர் மீது அவதூறு சுமத்துகின்றார்களோ மேலும், அதற்குத் தங்களைத் தவிர வேறு சாட்சிகள் அவரிடம் இல்லையோ, அப்படிப்பட்ட ஒவ்வொருவரின் சாட்சியமும் (இவ்வாறு இருக்க வேண்டும். அதாவது, தன்னுடைய குற்றச்சாட்டில்) தான் உண்மையாளன் என்று அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து சாட்சியம் அளிக்க வேண்டும். </span>
<span>24:7 மேலும், ஐந்தாவது தடவை (தன்னுடைய குற்றச்சாட்டில்) தான் பொய்யனாக இருந்தால் ‘அல்லாஹ்வின் சாபம் தன்மீது உண்டாகட்டும்!’ என்று கூற வேண்டும். </span>
<span>24:8 ‘இவன் (இவனுடைய குற்றச்சாட்டில்) பொய்யன் ஆவான்’ என்று அவள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு தடவை கூறி,  </span>
<span>24:9 ஐந்தாவது தடவை இவன் (இவனுடைய குற்றச்சாட்டில்) உண்மையாளனாக இருந்தால் தன்மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாவதாக என்று அவள் அளிக்கும் சாட்சியம், அவளைவிட்டுத் தண்டனையைத் தடுக்கக்கூடியதாகும். </span>
<span>24:10  உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கருணையும் இல்லாது போயிருந்து, மேலும், அல்லாஹ் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்பவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இல்லாதிருந்தால் (மனைவியர் மீது அவதூறு கற்பிக்கும் விவகாரம் உங்களைப் பெரும் சிக்கலில் ஆழ்த்திவிட்டிருக்கும்!)</span>
<span>24:11 இந்த அவதூறைப் புனைந்துகொண்டு வந்தவர்கள் உங்களில் உள்ள ஒரு கும்பல்தான். இந்நிகழ்ச்சியினை உங்களுக்கு ஏற்பட்ட ஒரு தீங்காகக் கருதாதீர்கள். மாறாக, இதுவும் உங்களுக்கு நன்மையாகவே உள்ளது! அவர்களில் யார் எந்த அளவுக்கு அதில் பங்கேற்றார்களோ அந்த அளவுக்குப் பாவத்தை அவர்கள் சம்பாதித்துக் கொண்டனர். மேலும், அவர்களில் யார் இதில் பெரும் பங்கு வகித்தானோ அவனுக்குப் பெரும் தண்டனை இருக்கிறது. </span>
<span>24:12 நீங்கள் இதனைச் செவியுற்ற போதே நம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் தங்களைப்பற்றி ஏன் நல்லெண்ணம் கொள்ளவில்லை? இது ஓர் ‘அப்பட்டமான அவதூறு’ என்று ஏன் அவர்கள் கூறிடவில்லை? </span>
<span>24:13 அவர்கள் (தங்களுடைய குற்றச்சாட்டை நிரூபிக்க) ஏன் நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவில்லை? அவ்வாறு அவர்கள் சாட்சிகளைக் கொண்டுவராத நிலையில் அல்லாஹ்விடத்தில் அவர்களே பொய்யர்கள் ஆவர். </span>
<span>24:14 உங்கள் மீது இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கருணையும் பொழிந்திருக்கா விட்டால் எந்த விஷயங்களில் நீங்கள் மூழ்கியிருந்தீர்களோ அதன் பயனாக உங்களுக்குப் பெரும் வேதனை ஏற்பட்டிருக்கும். உங்களில், ஒருவரின் நாவிலிருந்து மற்றவரின் நாவுக்கு இந்த அவதூறுச் செய்தியைப் பரப்பிக் கொண்டிருந்த நேரத்(தில் நீங்கள் எவ்வளவு கடும் தவறைச் செய்து கொண்டிருந்தீர்கள் என்ப)தைச் சற்று சிந்தியுங்கள்! </span>
<span>24:15 நீங்கள் எந்த வகையிலும் அறிந்திராத ஒரு விஷயத்தைப் பற்றி உங்கள் வாய்களால் கூறிக்கொண்டு திரிந்தீர்கள்; அதனைச் சாதாரணமாகக் கருதிவிட்டீர்கள். ஆனால், அல்லாஹ்விடத்தில் அதுவோ, மிகப்பெரிய விஷயமாய் இருந்தது. </span>
<span>24:16 நீங்கள் இதனைக் கேள்விப்பட்டதுமே, “இவ்வாறான விஷயத்தை நாம் பேசுவது நமக்கு ஏற்றதல்ல; ஸுப்ஹானல்லாஹ் அல்லாஹ் தூய்மையானவன்! பெரும் அவதூறாயிற்றே இது!” என்று ஏன் நீங்கள் கூறிடவில்லை? </span>
<span>24:17 நீங்கள் நம்பிக்கையாளர்களாயின் இனி ஒருபோதும் இதுபோன்ற தவறை மீண்டும் செய்யக்கூடாது என்று அல்லாஹ் உங்களுக்கு அறிவுறுத்துகின்றான். </span>
<span>24:18 மேலும், அல்லாஹ் உங்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் நன்கு அறிந்தவனும் நுண்ணறிவாளனும் ஆவான். </span>
<span>24:19 இறைநம்பிக்கை கொண்டோரிடையே மானக்கேடான செயல் பரவிட வேண்டுமென எவர்கள் விரும்புகின்றார்களோ, அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் துன்புறுத்தும் தண்டனைக்கு உரியவர்களாவர். மேலும், அல்லாஹ் அறிகின்றான்; நீங்கள் அறிவதில்லை. </span>
<span>24:20 அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கருணையும் உங்கள் மீது பொழிந்திராவிட்டால், மேலும், அல்லாஹ் மிகுந்த பரிவு கொண்டவனாயும் கிருபையாளனாயும் இல்லாதிருந்தால் (இப்போது உங்களிடையே பரப்பப்பட்டிருந்த இச்செய்தி படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும்)!</span>
<span>24:21 இறைநம்பிக்கை கொண்டவர்களே! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். யாரேனும் அவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றினால், மானக்கேடானவை மற்றும் தீயவற்றைச் செய்யுமாறே ஷைத்தான் அவனை ஏவுவான். அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்தால் உங்களில் எவருமே ஒருபோதும் மாசற்றவராய் விளங்கியிருக்க முடியாது. ஆயினும், அல்லாஹ், தான் நாடுகின்றவர்களைத் தூய்மையாக்குகின்றான். மேலும், அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>24:22 உங்களிடையே பண்பு நலன்களும், வசதிகளும் உடையவர்கள், ‘தங்களுடைய உறவினர்கள், வறியவர்கள் மற்றும் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்கள் ஆகியோருக்குக் கொடுத்துதவ மாட்டோம்’ என்று சத்தியம் செய்ய வேண்டாம். அவர்களை மன்னித்து விட வேண்டும்; பொறுத்துக்கொள்ளவும் வேண்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டுமென நீங்கள் விரும்புவதில்லையா என்ன? மேலும், அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>24:23 கற்புடைய, கள்ளங்கபடமற்ற, இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் மீது எவர்கள் அவதூறு கூறுகின்றார்களோ அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குக் கடும் வேதனையும் இருக்கிறது. </span>
<span>24:24 அவர்கள் செய்த தீவினைகளைக் குறித்து அவர்களுடைய நாவுகளும் அவர்களுடைய கைகளும், கால்களும் எந்நாளில் அவர்களுக்கு எதிராக சாட்சியம் கூறுமோ அந்த நாளினை அவர்கள் மறந்துவிட வேண்டாம். </span>
<span>24:25 அந்நாளில் அவர்களுக்குரிய நியாயமான கூலியை அல்லாஹ் அவர்களுக்கு நிறைவாக அளிப்பான். மேலும், அவர்களுக்குத் தெரிந்துவிடும்; அல்லாஹ்தான் உண்மையானவன்; உண்மையை உண்மையாக்கிக் காட்டுபவன் என்று!</span>
<span>24:26 ஒழுக்கங்கெட்ட பெண்கள், ஒழுக்கங்கெட்ட ஆண்களுக்கும், ஒழுக்கங்கெட்ட ஆண்கள், ஒழுக்கங்கெட்ட பெண்களுக்கும் உரியவர்களாவர். தூய்மையான பெண்கள் தூய்மையான ஆண்களுக்கும், தூய்மையான ஆண்கள் தூய்மையான பெண்களுக்கும் உரியவர்களாவர். புனைந்து உரைப்போரின் பழிச்சொற்களிலிருந்து அவர்களின் பண்பாடு தூய்மையானது. அவர்களுக்குப் பாவமன்னிப்பும் நற்பேறும் இருக்கின்றன. </span>
<span>24:27 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுடைய வீடுகளைத் தவிர மற்றவர்களின் வீடுகளில் அந்த வீட்டாரின் இசைவைப் பெறாமலும், அவர்களுக்கு ஸலாம் கூறாத வரையிலும் நுழையாதீர்கள். இந்த வழிமுறைதான் உங்களுக்கு மிகச்சிறப்புடையதாகும். நீங்கள் இதனை நினைவில் வைப்பீர்கள் என எதிர்பார்க்கலாம். </span>
<span>24:28 ஆனால், அங்கு எவரையும் நீங்கள் காணவில்லையென்றால், உங்களுக்கு அனுமதி அளிக்கப்படாத வரையில் அங்கே நுழையாதீர்கள். மேலும், உங்களிடம் “திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறப்பட்டால், உடனே திரும்பிவிடுங்கள். இதுவே, உங்களுக்கு மிகத் தூய்மையான நடைமுறையாகும். மேலும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான். </span>
<span>24:29 ஆயினும் யாரும் குடியிருக்காத உங்களுக்குப் பலன் தரக்கூடிய ஏதாவது பொருள்கள் உள்ள வீடுகளில் நுழைவதில் உங்கள் மீது யாதொரு தவறுமில்லை. நீங்கள் வெளிப்படுத்துபவை மற்றும் மறைத்து வைப்பவை அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான்!</span>
<span>24:30 (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். இதுவே, அவர்களுக்கு மிகத் தூய்மையான வழிமுறையாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக, அல்லாஹ் நன்கு தெரிந்தவனாக இருக்கின்றான். </span>
<span>24:31 மேலும் (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாக் கட்டும்; தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்; அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர! மேலும், தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முன்றானையைப் போட்டுக் கொள்ளட்டும். தங்கள் கணவன்மார்கள், தங்களுடைய தந்தையர்கள், தங்கள் கணவன்மார்களின் தந்தையர், தங்களுடைய மகன்கள், தங்கள் கணவன்மார்களின் மகன்கள், தங்கள் சகோதரர்கள், தங்கள் சகோதரர்களின் மகன்கள், சகோதரிகளின் மகன்கள், தங்களுடன் நெருங்கிப் பழகும் பெண்கள், தங்களுடைய ஆண், பெண் அடிமைகள் மற்றும் தவறான வேட்கைகளில்லாத தம்மை அண்டி வாழுகின்ற ஆண்கள், மேலும், பெண்களின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி எதுவும் தெரிந்திராத சிறுவர்கள் ஆகிய இவர்கள் முன்னிலையிலன்றி (வேறு எவரிடத்திலும்) தங்களுடைய அழகை அவர்கள் வெளிக்காட்ட வேண்டாம். தாங்கள் மறைத்து வைத்திருக்கும் தங்களின் அழகை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக தங்களுடைய கால்களை(ப் பூமியில்) அடித்துக் கொண்டு நடக்க வேண்டாம். நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அல்லாஹ்வின் பக்கம் பாவமன்னிப்புக் கோரி மீளுங்கள். நீங்கள் வெற்றியடையக்கூடும். </span>
<span>24:32 உங்களில் வாழ்க்கைத் துணையின்றி இருப்பவர்களுக்கும், மேலும், உங்களுடைய ஆண்பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் வறியவர்களாயிருந்தால் அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களை தனவந்தர்களாக்குவான். அல்லாஹ் மிகவும் விசாலமானவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். </span>
<span>24:33 திருமணத்திற்குரிய வசதி வாய்ப்பைப் பெறாதவர்கள் அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கும்வரை ஒழுக்கத்தூய்மையை மேற்கொள்ளட்டும். உங்களுடைய அடிமைகளில் எவர்கள் ‘முகாத்தபத்’* கோருகின்றார்களோ அவர்களிடம் நன்மை இருப்பதாக நீங்கள் அறிந்தால் அவர்களோடு ‘முகாத்தபத்’ செய்து கொள்ளுங்கள். மேலும், அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கும் செல்வத்திலிருந்து அவர்களுக்கு வழங்குங்கள். மேலும், உலக வாழ்க்கையின் இலாபங்களைத் தேடிக்கொள்வதற்காக உங்கள் அடிமைப் பெண்களை விபச்சாரத்திற்காக பலவந்தப்படுத்தாதீர்கள். அவர்கள் சுயமே ஒழுக்கத்தூய்மையை விரும்பும்போது அவர்களை எவரேனும் பலவந்தப்படுத்தினால், அவர்கள் பலவந்தப்படுத்தப்பட்ட பின்பும் அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குபவனாகவும் மிகுந்த கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான். </span>
<span>24:34 மேலும், நாம் தெள்ளத்தெளிவாக வழிகாட்டும் வசனங்களை உங்களுக்கு அருளி இருக்கின்றோம்; உங்களுக்கு முன் சென்ற சமூகங்களின் (படிப்பினை மிக்க) உதாரணங்களையும் நாம் உங்கள் முன் வைத்துள்ளோம். மேலும், இறையச்சம் கொள்ளக் கூடியவர்களுக்குப் பயனளிக்கும் நல்லுரைகளையும் நாம் வழங்கியுள்ளோம். </span>
<span>24:35 அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாக இருக்கின்றான். (பேரண்டத்தில்) அவனது ஒளிக்கு உவமை இவ்வாறாகும்; ஒரு மாடத்தில் விளக்கு வைக்கப்பட்டிருக்கின்றது; அவ்விளக்கு ஒரு கண்ணாடிக் கூண்டினுள் இருக்கிறது; அக்கண்ணாடிக் கூண்டு முத்தாய் ஒளிரும் தாரகை போன்றுள்ளது. அவ்விளக்கு கிழக்கைச் சேர்ந்ததாயும், மேற்கைச் சேர்ந்ததாயும் இல்லாத, அருள் பெற்ற ஒலிவ மரத்தின் எண்ணெய் கொண்டு எரிக்கப்படுகின்றது. அதன் எண்ணெய் தானாக ஒளிரவே செய்யும்; நெருப்பு அதனைத் தீண்டாத போதிலும்! (இவ்வாறு) ஒளிக்கு மேல் ஒளி (அதிகமாவதற்கான அனைத்துக் காரணங்களும் ஒருங்கே அமையப் பெற்றிருக்கின்றன.) அல்லாஹ் தான் நாடுவோர்க்கு தன்னுடைய ஒளியின் பக்கம் வழிகாட்டுகின்றான். அவன் உவமைகளின் வாயிலாக மக்களுக்கு விஷயத்தை விளக்குகின்றான். மேலும், அவன் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான். </span>
<span>24:36 (அவனது ஒளியின்பால் வழிகாட்டுதலைப் பெற்றவர்கள்) எந்த இல்லங்கள் உயர்த்தப்படுவதற்கும், எங்கே தன் பெயர் நினைவுகூரப்படுவதற்கும் அல்லாஹ் அனுமதி வழங்கியுள்ளானோ அந்த இல்லங்களில் காணப்படுகிறார்கள். அவற்றில் காலை, மாலை நேரங்களில் அவனைத் துதித்துக் கொண்டிருப்பவர்கள். </span>
<span>24:37 எத்தகையோர் எனில், இறைவனை நினைவுகூருவதை விட்டும், தொழுகையை நிலைநாட்டுவது மற்றும் ஜகாத் கொடுப்பதை விட்டும் வியாபாரமும் கொள்வினை கொடுப்பினையும் அவர்களைப் பாராமுகமாக்கி விடுவதில்லை; இதயங்கள் நிலைகுலைந்து, பார்வைகள் நிலைகுத்தி விடக்கூடிய ஒருநாள் குறித்து அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கின்றார்கள். </span>
<span>24:38 (அவர்கள் இப்படி ஏன் செய்கின்றார்கள் என்றால்) அவர்கள் செய்த மிக அழகிய செயல்களுக்குரிய கூலியை அல்லாஹ் அவர்களுக்கு அருள்வதற்காகவும் அவனுடைய அருளால் இன்னும் அதிகமாக அவர்களுக்கு வழங்குவதற்காகவும்தான்! மேலும், அல்லாஹ் தான் நாடுவோர்க்கு கணக்கின்றி வழங்குகின்றான். </span>
<span>24:39 (இதற்கு மாறாக) எவர்கள் இறைவனை நிராகரித்தார்களோ அவர்களின் செயல்களுக்கு உவமை (நீரில்லாப்) பாலைவனத்தின் கானலாகும். தாகித்தவன் அதனை நீர் என்று கருதுகின்றான். இறுதியில் அவன் அந்த இடத்திற்கு வந்தபோது, அங்கு எதையும் காணவில்லை. ஆனால், அவன் அங்கு கண்டுகொண்டது அல்லாஹ்வை! அல்லாஹ்வோ அவனுக்குரிய கணக்கை முழுமையாகத் தீர்த்துவிடுகின்றான். அல்லாஹ் கணக்கு வாங்குவதில் விரைவானவனாக இருக்கின்றான். </span>
<span>24:40 அல்லது (நிராகரிப்பாளர்களின் செயல்கள்) ஆழ்கடலில் இருள்களைப் போன்று உள்ளன. அந்தக் கடலை ஓர் அலை மூடியுள்ளது; அதற்கு மேல் மற்றொரு அலை; அதற்கு மேல் மேகம்! (இப்படியாக) இருளுக்கு மேல் இருள் என எங்கும் இருள்மயம்! மனிதன் தனது கையை நீட்டினால் அதைக்கூட அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு ஒளியை வழங்கவில்லையோ பிறகு அவனுக்கு வேறு எந்த ஒளியுமில்லை!</span>
<span>24:41 வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும், சிறகடித்துப் பறக்கும் பறவைகளும் அல்லாஹ்வைத் துதித்துக்கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா என்ன? ஒவ்வொன்றும் தன்னுடைய தொழுகையையும் துதிமுறையையும் அறிந்திருக்கின்றது. மேலும், இவை செய்பவை அனைத்தையும் அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான். </span>
<span>24:42 வானங்கள் மற்றும் பூமியுடைய ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. மேலும், அவனிடமே அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது!</span>
<span>24:43 நீங்கள் பார்க்கவில்லையா என்ன? அல்லாஹ் மேகத்தை மெல்ல மெல்ல நகர்த்துகின்றான். பின்னர், அதன் சிதறல்களை ஒன்றிணைக்கின்றான். பிறகு அதனை அடர்த்தியான மேகமாக ஆக்குகின்றான். பிறகு, அதற்கிடையிலிருந்து மழைத்துளிகள் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை நீர் பார்க்கின்றீர். மேலும், அவன் வானத்திலிருந்து அதிலே உயர்ந்து நிற்கின்ற மலைகளின் காரணத்தால் பனிக்கட்டிகளைப் பொழிவிக்கின்றான். பிறகு, அதன் மூலம், தான் நாடுகின்றவர்களுக்கு இழப்பை ஏற்படுத்துகின்றான். மேலும், தான் நாடுகின்றவர்களை அதிலிருந்து காப்பாற்றிக்கொள்கின்றான். அதனுடைய மின்னலின் ஒளி, பார்வைகளைப் பறிக்க முனைகின்றது. </span>
<span>24:44 இரவையும் பகலையும் அவன்தான் மாற்றிக் கொண்டிருக்கின்றான். திண்ணமாக இதில் ஒரு படிப்பினை இருக்கிறது, பார்வை உள்ளவர்களுக்கு!</span>
<span>24:45 மேலும், அல்லாஹ் ஒவ்வோர் உயிர்பிராணியையும் ஒரேவிதமான நீரிலிருந்து படைத்தான். அவற்றில் சில தம் வயிற்றால் ஊர்ந்து செல்கின்றன. வேறு சில இரு கால்களால் நடந்து செல்கின்றன; இன்னும் சில நான்கு கால்களால் நடந்து திரிகின்றன. தான் நாடுகின்றவற்றை அல்லாஹ் படைக்கின்றான். திண்ணமாக, அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கின்றான். </span>
<span>24:46 உண்மையை மிகத்தெளிவாகக் காண்பிக்கும் வசனங்களை நாம் இறக்கியருளியிருக்கின்றோம். மேலும், அல்லாஹ் தான் நாடுகின்றவர்களுக்கு நேர்வழியின் பக்கம் வழிகாட்டுகின்றான். </span>
<span>24:47 “அல்லாஹ்வின் மீதும் தூதர் மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம்; மேலும், கீழ்ப்படிதலை ஏற்றுக் கொண்டோம்” என்று இவர்கள் கூறுகின்றார்கள். ஆயினும் இதன்பின்னர், இவர்களில் ஒரு பிரிவினர் (கீழ்ப்படியாமல்) புறக்கணித்து விடுகின்றார்கள். இத்தகையோர் எவ்வகையிலும் நம்பிக்கையாளர்கள் அல்லர். </span>
<span>24:48 அவர்களுக்கிடையிலான வழக்குகளில் இறைத்தூதர் தீர்ப்பளித்திட வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கமும் வருமாறு அவர்கள் அழைக்கப்படும்போது அவர்களில் ஒரு சாரார் புறக்கணித்துச் செல்கின்றார்கள். </span>
<span>24:49 ஆனால் நியாயம் அவர்களுக்கு சாதகமாக அமையும்போது தாழ்மையோடு இறைத்தூதரிடம் வருகின்றார்கள். </span>
<span>24:50 அவர்களின் உள்ளங்களில் (நயவஞ்சகப்) பிணி தொற்றிக் கொண்டுள்ளதா? அல்லது அவர்கள் சந்தேகத்துக்கு ஆளாகியிருக்கின்றனரா? அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தங்களுக்கு அநீதி இழைத்திடுவார்களோ என்று அஞ்சுகின்றார்களா? உண்மை என்னவெனில், இவர்களே கொடுமையாளர்கள் ஆவர். </span>
<span>24:51 இறைநம்பிக்கை கொண்டவர்கள் தங்களுக்கிடையிலுள்ள வழக்குகளில் இறைத்தூதர் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கமும் வருமாறு அழைக்கப்படும்போது, “நாங்கள் செவியேற்றோம்; கீழ்ப்படிந்தோம்!” என்று கூறுவதே அவர்களின் தன்மையாகும். இத்தகையோர்தாம் வெற்றி பெறக்கூடியவர்கள். </span>
<span>24:52 எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து, அல்லாஹ்வுக்கு அஞ்சி அவனுக்கு மாறு செய்வதைத் தவிர்த்துக் கொள்கின்றார்களோ, அவர்கள்தாம் வெற்றியாளர்களாவர். </span>
<span>24:53 (நயவஞ்சகர்களாகிய) இவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியாகச் சத்தியம் செய்து, “தாங்கள் எங்களுக்கு ஆணையிட்டால் வீடுகளை விட்டு வெளியேறிவிடுகின்றோம்” என்று கூறுகின்றார்கள். அவர்களிடம் நீர் கூறும்: “சத்தியம் செய்யாதீர்கள். உங்களுடைய கீழ்ப்படிதல் எத்தகையது என்பது தெரிந்த விஷயம்தான்! திண்ணமாக நீங்கள் செய்யும் செயல்களை அல்லாஹ் அறியாதவன் அல்லன்!” </span>
<span>24:54 நீர் கூறும்: “அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். மேலும், தூதரைப் பின்பற்றுபவராய்த் திகழுங்கள்; ஆயினும், நீங்கள் புறக்கணித்தால் (நன்கு புரிந்து கொள்ளுங்கள்!) தூதரின் மீது எந்தக் கடமை சுமத்தப்பட்டுள்ளதோ, அந்தக் கடமைக்கு அவரே பொறுப்பு; உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடமைக்கு பொறுப்பு நீங்களே! நீங்கள் அவருக்குக் கீழ்ப்படிவீர்களாயின், நீங்கள்தாம் நேர்வழியடைவீர்கள். (இல்லையெனில் கட்டளைகளைத்) தெள்ளத் தெளிவாக அறிவித்துவிடுவதைத் தவிர தூதர் மீது வேறெந்தப் பொறுப்புமில்லை. </span>
<span>24:55 உங்களில் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களிடம் அல்லாஹ் வாக்குறுதி அளிக்கின்றான். என்னவெனில், அவர்களைப் பூமியில் பிரதிநிதிகளாக்குவான்; அவர்களுக்கு முன் சென்று போன மக்களைப் பிரதிநிதிகளாக்கியது போன்று! மேலும், அவர்களுக்காக அல்லாஹ் எந்த மார்க்கத்தை விரும்பினானோ அந்த மார்க்கத்தை வலுவான அடிப்படைகள் மீது நிலைநாட்டுவான். மேலும், அவர்களின் (இன்று நிலவுகின்ற) அச்சநிலையை அமைதி நிலையாய் மாற்றித் தருவான். எனவே, அவர்கள் எனக்கே அடிபணியட்டும்; மேலும், என்னுடன் எதனையும் இணை வைக்காதிருக்கட்டும். மேலும், இதன் பின்னர் எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களே பாவிகள் ஆவர். </span>
<span>24:56 மேலும், தொழுகையை நிலைநாட்டுங்கள்; ஜகாத்தையும் வழங்குங்கள். மேலும், தூதருக்குக் கீழ்ப்படியுங்கள்; உங்கள் மீது கருணை புரியப்படக் கூடும். </span>
<span>24:57 நிராகரித்துக் கொண்டிருப்பவர்களைக் குறித்து, அவர்கள் பூமியில் அல்லாஹ்வை தோல்வியுறச் செய்துவிடுவார்கள் என்று தப்பெண்ணம் கொள்ளாதீர்கள். அவர்களுடைய இருப்பிடம் நரகம்தான்; அது மிகவும் கெட்ட இருப்பிடமாகும். </span>
<span>24:58 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுடைய அடிமைகளான ஆண்களும் பெண்களும் பருவ வயதை அடையாத உங்கள் சிறுவர்களும் மூன்று நேரங்களில் உங்களிடம் வருவதற்கு அனுமதி பெற்றுக் கொள்ளட்டும். வைகறை தொழுகைக்கு முன்னர்; மதியவேளையில் நீங்கள் உங்கள் ஆடைகளைக் களைந்திருக்கும்போது; இஷா தொழுகைக்குப் பின்னர். இம்மூன்று நேரங்களும் நீங்கள் மறைவாக இருக்கக்கூடிய நேரங்களாகும். இவற்றைத் தவிர மற்ற நேரங்களில் அவர்கள் அனுமதியின்றி வருவார்களாயின் உங்கள்மீதும், அவர்கள் மீதும் எவ்விதக் குற்றமுமில்லை. நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அடிக்கடி வரவேண்டியுள்ளது. இவ்வாறு அல்லாஹ் உங்களுக்குத் தன்னுடைய அறிவுரைகளைத் தெளிவுபடுத்துகின்றான். மேலும், அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>24:59 மேலும், உங்கள் சிறுவர்கள் விவரம் தெரியும் பருவத்தை அடைந்து விட்டால், அவர்களுடைய பெரியவர்கள் எவ்வாறு அனுமதி கோருகிறார்களோ அவ்வாறு அவர்களும் அனுமதி பெற்று வரட்டும். இவ்வாறு அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களிடம் விவரிக்கின்றான். மேலும், அவன் மிக அறிந்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>24:60 எந்தப் பெண்கள் இளமைப் பருவத்தைக் கடந்து திருமணத்தில் விருப்பம் இல்லாதவர்களாய் இருந்துவிடுகின்றார்களோ அந்தப் பெண்கள் தங்கள் அழகை வெளிக்காட்டாதவர்களாய், தங்கள் மேலாடைகளைக் கழற்றி வைப்பதில் அவர்கள் மீது யாதொரு குற்றமுமில்லை; ஆயினும், அவர்களும் நாணமுள்ள பெண்களாய் நடந்து கொள்வதே அவர்களுக்கு மிக ஏற்றதாகும். மேலும், அல்லாஹ் யாவற்றையும் செவியேற்பவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>24:61 குருடர், நொண்டி, நோயாளி போன்றவர்கள் (யாருடைய வீட்டில் சாப்பிடுவதிலும் அவர்கள்) மீது எவ்விதக் குற்றமும் இல்லை. ஆனால், நீங்கள் உங்களின் வீடுகளிலோ அல்லது உங்கள் தந்தையரின் வீடுகளிலோ, உங்கள் அன்னையரின் வீடுகளிலோ அல்லது உங்கள் சகோதரர்களின் வீடுகளிலோ, உங்கள் சகோதரிகளின் வீடுகளிலோ அல்லது உங்கள் சிறிய தந்தை பெரிய தந்தையரின் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகளின் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ அல்லது உங்கள் சிற்றன்னை, பெரியன்னையரின் வீடுகளிலோ அல்லது எந்த வீடுகளின் திறவுகோல்கள் உங்கள் பொறுப்பில் உள்ளனவோ அந்த வீடுகளிலோ அல்லது உங்கள் நண்பர்களின் வீடுகளிலோ சாப்பிடுவதில் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ தனித்தனியாகவோ சாப்பிடுவதிலும் உங்கள் மீது குற்றமில்லை. எவ்வாறாயினும் வீடுகளில் நீங்கள் நுழையும்போது நீங்கள் உங்களைச் சார்ந்தவர்களுக்கு ஸலாம் கூறுங்கள். இது நல்லாசி எனும் முறையில் இறைவனிடமிருந்து நிர்ணயிக்கப்பட்டதும், பாக்கியங்கள் கொண்டதும், தூய்மையானதுமாகும். இவ்வாறு அல்லாஹ் அறிவுரைகளை உங்களுக்கு விவரிக்கின்றான்; இதனால் நீங்கள் சிந்தித்துணர்ந்து செயல்படக்கூடும்!</span>
<span>24:62 அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்களும், மேலும், ஏதேனுமொரு பொதுப் பணிக்காக அவர்கள் இறைத்தூதருடன் இருக்கும்போது அவரிடம் அனுமதி பெறாமல் அவரை விட்டுப் பிரிந்து போகாத வர்களுமே உண்மையான இறைநம்பிக்கையாளர்களாவர். (நபியே!) உம்மிடம் அனுமதி கோருபவர்கள்தாம் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் ஏற்றுக் கொண்டவர்கள். எனவே, அவர்கள் தங்களுடைய ஏதேனும் தேவைக்காக உம்மிடம் அனுமதி கோரினால், அவர்களில் நீர் விரும்பியவர்களுக்கு அனுமதி வழங்குவீராக! மேலும், இத்தகையோருக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோருவீராக! திண்ணமாக, அல்லாஹ் பெரிதும் மன்னித்தருள்பவனாகவும் பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>24:63 (முஸ்லிம்களே!) உங்களுக்கிடையே விடுக்கப்படும் தூதரின் அழைப்பை உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பது போன்று கருதிவிட வேண்டாம்! உங்களில் எவர்கள் ஒருவரையொருவர் திரையாக்கிக் கொண்டு மறைவாக நழுவிச் செல்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் நன்கறிகின்றான். இறைத்தூதரின் கட்டளைக்கு மாறு செய்பவர்கள் தங்களுக்கு ஏதேனும் கடும் சோதனை நேர்ந்துவிடுமோ, தம்மீது துன்புறுத்தும் வேதனை வந்துவிடுமோ என்று அஞ்சட்டும்! </span>
<span>24:64 அறிந்து கொள்ளுங்கள்! வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ அதனையும் அல்லாஹ் அறிகின்றான். மக்கள் அவனிடம் திரும்பக் கொண்டு வரப்படும் நாளில், அவர்கள் என்னவெல்லாம் செய்(துவிட்டு வந்)திருக்கின்றார்கள் என்பதை அவன் அவர்களுக்கு அறிவித்துவிடுவான். அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். </span>
</div><div>
<span>அல் ஃபுர்கான்</span>
<span>25:1 பெரும்பாக்கியம் நிறைந்தவனாக இருக்கின்றான், தன்னுடைய அடியார் மீது (சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும்) இந்த ஃபுர்கானை (அதாவது குர்ஆனை) இறக்கி வைத்தவன். அகிலத்தார் அனைவருக்கும் (அவர்) எச்சரிக்கை செய்யக் கூடியவராக திகழ வேண்டும் என்பதற்காக! </span>
<span>25:2 அவன் எத்தகையவனெனில், வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சிக்கு அவனே அதிபதி. மேலும், அவன் யாரையும் மகனாக ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுடன் பங்கு உடையோர் எவரும் இல்லை! மேலும், அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்து, பிறகு அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதியை நிர்ணயித்தான். </span>
<span>25:3 ஆனால், மக்கள் அவனை விடுத்து எத்தகைய கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்றால், அந்தக் கடவுள்கள் எந்தப் பொருளையும் படைப்பதில்லை ஏன், அவர்களே படைக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். மேலும், தங்களுக்குக்கூட எத்தகைய இலாபத்தையும் நஷ்டத்தையும் அளிக்கும் அதிகாரத்தை அவர்கள் பெற்றிருக்கவில்லை; மேலும், மரணிக்கச் செய்யவும், உயிர் கொடுக்கவும் (இறந்தவர்களை) மீண்டும் எழுப்பவும் அவர்களால் இயலாது!</span>
<span>25:4 எவர்கள் (நபியின் கூற்றை) ஏற்றுக்கொள்ள மறுத்தார்களோ அவர்கள் கூறுகின்றார்கள்: “இந்த ஃபுர்கான் புனைந்துரைக்கப்பட்ட ஒன்றேயாகும்; இதனை இவரே இயற்றிக்கொண்டார். மேலும், (இது விஷயத்தில்) வேறு சில மனிதர்கள் இவருக்கு உதவியுள்ளார்கள்!” இத்தகைய பெரும் கொடுமை புரியும் அளவிற்கும், கடும் பொய்யைக் கூறும் அளவிற்கும் அவர்கள் இறங்கி வந்துவிட்டார்கள். </span>
<span>25:5 மேலும், இவர்கள் கூறுகின்றார்கள்: “இவை பழங்காலத்து மக்களால் எழுதப்பட்டவையாகும். இவர் அவற்றை நகல் எடுக்கச் செய்கின்றார். அவை, காலையிலும், மாலையிலும் இவருக்கு ஓதிக் காட்டப்படுகின்றன.”</span>
<span>25:6 (நபியே!) இவர்களிடம் நீர் கூறும்: “பூமி மற்றும் வானங்களில் உள்ள இரகசியங்களை அறிகின்றவன்தான் இதனை இறக்கி அருளினான். திண்ணமாக, அவன் அதிகம் மன்னிப்பவனாகவும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.”</span>
<span>25:7 மேலும், கூறுகின்றார்கள்: “இவர் எத்தகைய இறைத்தூதர்! உணவு உண்ணுகிறாரே; கடை வீதிகளில் நடமாடுகின்றாரே! இவரிடம் ஒரு வானவர் அனுப்பப்பட்டிருக்கக் கூடாதா? அவர், இவருடன் சேர்ந்து (ஏற்றுக் கொள்ளாதவர்களை) எச்சரிக்கை செய்வதற்காக! </span>
<span>25:8 அல்லது அவருக்கு ஏதேனுமொரு கருவூலமாவது இறக்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது (நிம்மதியாக) உணவு பெறுவதற்குரிய ஏதேனும் தோட்டமாயினும் இவருக்கு இருந்திருக்கக்கூடாதா?” மேலும், இவ்வக்கிரமக்காரர்கள் கூறுகின்றார்கள்: “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரின் பின்னால்தான் நீங்கள் சென்று கொண்டிருக்கின்றீர்கள்!”</span>
<span>25:9 பாருங்கள்! உம் விஷயத்தில் எத்தகைய விந்தையான வாதங்களை இவர்கள் உம் முன் எடுத்துரைக்கின்றார்கள்! எந்த அளவுக்கு இவர்கள் வழிதவறிப் போய்விட்டார்களெனில் உறுதியாக நிற்பதற்கான எந்த விஷயமும் அவர்களுக்குப் புலப்படுவதில்லை. </span>
<span>25:10 பெரும் பாக்கியம் நிறைந்தவனாவான் அவன். தான் நாடினால், இவர்கள் சொன்னவற்றையெல்லாம் விட மிகச் சிறந்ததை உமக்கு வழங்கிட முடியும் (ஒன்றல்ல) கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் பல தோப்புகளையும், பெரும் பெரும் மாளிகைகளையும் (அவனால் வழங்கிட முடியும்). </span>
<span>25:11 உண்மை யாதெனில், இவர்கள் அந்த நேரத்தைப் பொய்யென்று வாதாடினர் யார் அந்த நேரத்தைப் பொய்யென்று வாதாடினார்களோ அவர்களுக்குக் கொழுந்து விட்டெரியும் நெருப்பை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம். </span>
<span>25:12 அது தொலைவான இடத்திலிருந்து இவர்களைப் பார்க்குமாயின், அதன் ஆவேசம் மற்றும் சீற்றத்தின் இரைச்சல்களை இவர்கள் கேட்பார்கள். </span>
<span>25:13 மேலும், கை, கால்கள் விலங்கிடப்பட்டு அதன் நெருக்கடியான ஓர் இடத்தில் அவர்கள் வீசி யெறியப்படுவார்கள். அங்கே அவர்கள் மரணத்தை அழைக்கத் தொடங்குவார்கள். </span>
<span>25:14 (அப்போது அவர்களிடம் கூறப்படும்:) “இன்று ஒரு மரணத்தையல்ல, பல மரணங்களை அழையுங்கள்!”</span>
<span>25:15 இவர்களிடம் கேளுங்கள்: “இந்த முடிவு சிறந்ததா? அல்லது இறையச்சம் கொண்ட தூய்மையாளர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள நிலையான சுவனம் சிறந்ததா? அது எத்தகையது எனில், அவர்களின் (செயல்களுக்குக்) கூலியாகவும் (அவர்களுடைய பயணத்தின்) இறுதி இடமாகவும் இருக்கும். </span>
<span>25:16 அதில் அவர்களுடைய விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இதனை வழங்குவது உம் இறைவனின் பொறுப்பில் உள்ள நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு வாக்குறுதியாகும். </span>
<span>25:17 மேலும், அந்நாளிலேயே (உம் இறைவன்) இவர்களையும் ஒன்று திரட்டுவான். (இன்று) அல்லாஹ்வை விடுத்து இவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் தெய்வங்களையும் கூப்பிடுவான். பிறகு, அவன் அவர்களிடம் கேட்பான்: “என்னுடைய இந்த அடிமைகளை நீங்கள்தாம் வழிகெடுத்தீர்களா? அல்லது அவர்களே வழி கெட்டுப் போனார்களா?” </span>
<span>25:18 அதற்கு அவர்கள் பணிந்து கூறுவார்கள்: “நீ தூய்மையானவன்! உன்னைத் தவிர வேறு யாரையும் எங்களுடைய பாதுகாவலர்களாக்கிக் கொள்வதற்கு எங்களுக்குத் துணிவு ஏது? ஆயினும், நீ இவர்களுக்கும் இவர்களுடைய மூதாதையர்களுக்கும் வாழ்க்கை வசதிகளை தாராளமாக வழங்கியிருந்தாய்; இறுதியில் இவர்கள் இந்தப் படிப்பினையை மறந்து விட்டனர். கடும் நாசத்திற்குரியவராகிவிட்டனர்!” </span>
<span>25:19 இவ்வாறு அவர்கள் (உங்களுடைய தெய்வங்கள்) பொய்யெனக் கூறிவிடுவார்கள், இன்று நீங்கள் வாதித்துக் கொண்டிருக்கும் உங்களுடைய விஷயங்களை! பிறகு (உங்களுக்கு ஏற்படும் நாசத்தை) உங்களால் தடுக்கவும் இயலாது; எங்கிருந்தும் உதவியைப் பெறவும் இயலாது. மேலும், உங்களில் எவரேனும் கொடுமை புரிந்தால் அவருக்குக் கடுமையான வேதனையை நாம் சுவைக்கக் கொடுப்போம். </span>
<span>25:20 மேலும் (நபியே!) உமக்கு முன்பு நாம் அனுப்பி வைத்திருந்த தூதர்கள் அனைவரும் உணவு உண்பவர்களாயும் கடைவீதிகளில் நடமாடுபவர்களாயும்தாம் இருந்தார்கள். உண்மையில் நாம் உங்களில் ஒரு சிலரை மற்றும் சிலருக்குச் சோதனையாக ஆக்கிவைத்துள்ளோம். நீங்கள் பொறுமையை மேற்கொள்வீர்களா? உம் இறைவன் அனைத்தையும் பார்ப்பவனாய் இருக்கின்றான். </span>
<span>25:21 எவர்கள் நம் திருமுன் வருவதைக் குறித்து சற்றும் கவலை கொள்ளாமல் இருக்கின்றார்களோ அவர்கள் கூறுகின்றார்கள்: “எங்களிடம் வானவர்கள் ஏன் அனுப்பப்படவில்லை? அல்லது எங்கள் இறைவனை நாங்கள் ஏன் காணுவதில்லை?” இவர்கள் தங்களையே பெரிதாக எண்ணி ஆணவம் கொண்டு திரிகின்றார்கள். மேலும், இவர்கள் தங்கள் அக்கிரமத்தில் பெரிதும் வரம்பு மீறிச் சென்றுவிட்டார்கள். </span>
<span>25:22 எந்த நாளில் இவர்கள் வானவர்களைக் காண்பார்களோ அந்த நாள் குற்றவாளிகளுக்கு நற்செய்திக்குரிய நாளாக இராது “அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்” என்று அவர்கள் கதறுவார்கள். </span>
<span>25:23 மேலும், அவர்கள் செய்த செயல்கள் எதுவாக இருந்தாலும் அதைப் புழுதியாக்கிப் பறக்க விட்டுவிடுவோம். </span>
<span>25:24 ஆனால், எவர்கள் சுவனத்துக்குத் தகுதியானவர்களோ அவர்கள்தாம் அந்நாளில் சிறந்த இடத்தில் தங்குவார்கள். மதிய வேளையைக் கழிப்பதற்கு மிக அழகிய இடத்தைப் பெறுவார்கள். </span>
<span>25:25 அந்நாளில் வானத்தைப் பிளந்துகொண்டு ஒரு மேகம் வெளிப்படும். மேலும், வானவர்கள் கூட்டங்கூட்டமாய் இறக்கி வைக்கப்படுவார்கள். </span>
<span>25:26 அந்நாளில் உண்மையான ஆட்சியதிகாரம், ரஹ்மானுக்கே கருணைமிக்க இறைவனுக்கே உரியதாக இருக்கும். மேலும், அது இறைநிராகரிப்பாளர்களுக்கு மிகக் கடினமான நாளாக இருக்கும். </span>
<span>25:27 மேலும், அந்நாளில் கொடுமை புரிந்த மனிதன் தன்னுடைய கைகளைக் கடித்தபடிக் கூறுவான்: “அந்தோ! நான் இறைத்தூதருக்குத் துணைபுரிந்திருக்கக் கூடாதா? </span>
<span>25:28 ஐயகோ! எனது துர்பாக்கியமே! நான் இன்ன மனிதனை நண்பனாக்காமல் இருந்திருக்க வேண்டுமே! </span>
<span>25:29 நான் அவனுடைய வழிகேட்டுக்குப் பலியாகி என்னிடம் வந்த அறிவுரையை ஏற்காமல் இருந்துவிட்டேனே! ஷைத்தான் மனிதனை மிகவும் ஏமாற்றக்கூடியவன் என்று நிரூபணமாகிவிட்டது.” </span>
<span>25:30 மேலும், இறைத்தூதர் கூறுவார்: “என் இறைவா! என் சமூகத்தைச் சார்ந்த மக்கள் இந்தக் குர்ஆனை நகைப்புக்குரியதாக்கிக் கொண்டிருந்தார்கள்.”</span>
<span>25:31 (நபியே!) இவ்வாறே நாம் குற்றவாளிகளை இறைத்தூதர் ஒவ்வொருவருக்கும் பகைவர்களாக்கினோம். மேலும், வழிகாட்டுவதற்கும், உதவி புரிவதற்கும் உங்கள் இறைவனே உங்களுக்குப் போதுமானவன். </span>
<span>25:32 மேலும், இறைநிராகரிப்பாளர்கள் கேட்கின்றார்கள்: “இவர் மீது குர்ஆன் முழுவதும் ஒரே நேரத்தில் ஏன் இறக்கி வைக்கப்படவில்லை? ஆம்! இவ்வாறு ஏன் செய்யப்பட்டிருக்கின்றது என்றால், இதனை நல்ல முறையில் உமது இதயத்தில் நாம் பதிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான்! மேலும் (இதே நோக்கத்திற்காகத்தான்) இதனை நாம் ஒரு குறிப்பிட்ட வரிசைக் கிரமத்துடன் தனித்தனிப் பகுதிகளாக்கினோம். </span>
<span>25:33 மேலும் (இதில் இந்த விவேகம் இருக்கின்றது:) அவர்கள் உம்மிடம் விநோதமான விஷயத்தை (அல்லது வியப்புக்குரிய கேள்வியை)க் கேட்டு வந்த போதெல்லாம் அதற்குரிய சரியான விடையை (உரிய நேரத்தில்) உமக்கு நாம் அளித்துள்ளோம். மேலும், மிக அழகான முறையில் விஷயத்தை விளக்கியுள்ளோம். </span>
<span>25:34 நரகத்தை நோக்கி எவர்கள் முகம் குப்புற இழுத்துச் செல்லப்படவிருக்கின்றார்களோ அவர்களின் தங்குமிடம் மிகவும் மோசமானதாகும்; அவர்களின் வழியும் மிகமிகத் தவறானதாகும். </span>
<span>25:35 மேலும், நாம் மூஸாவுக்கு வேதத்தை அருளினோம். மேலும், அவருடன் அவருடைய சகோதரர் ஹாரூனை உதவி யாளராய் ஆக்கினோம். </span>
<span>25:36 அவ்விருவர்க்கும் கூறினோம்: “நமது சான்றுகளைப் பொய்யென வாதிட்டுக் கொண்டிருக்கின்ற சமூகத்தாரிடம் செல்லுங்கள்!” இறுதியில், அச்சமூகத்தை நாம் அழித்தொழித்துவிட்டோம். </span>
<span>25:37 இதே கதிதான் நூஹ் உடைய சமூகத்தார்க்கும் ஏற்பட்டது; தூதர்களைப் பொய்யர்களென்று அவர்கள் தூற்றியபோது! அவர்களை நாம் மூழ்கடித்தோம். மேலும் (அனைத்துலக) மக்களுக்கும் ஒரு படிப்பினை தரும் சான்றாக அவர்களை ஆக்கினோம். மேலும், அந்தக் கொடுமைக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம். </span>
<span>25:38 இதேபோன்று ஆத், ஸமூத் சமூகத்தினரும் ‘ரஸ்’ சமூகத்தினரும், மேலும், அவர்களுக்கு இடைப்பட்ட நூற்றாண்டுகளில் வாழ்ந்த அநேக மக்களும் அழித்தொழிக்கப்பட்டனர். </span>
<span>25:39 மேலும், அவர்களில் ஒவ்வொருவருக்கும் (முன்னர் அழிந்து போனவர்களின்) உதாரணங்களைக் கூறி விளக்கினோம். இறுதியில், ஒவ்வொருவரையும் அடியோடு அழித்துவிட்டோம். </span>
<span>25:40 மேலும், எந்த ஊர் மீது கொடுமையான மழை பொழிவிக்கப்பட்டதோ அந்த ஊரினூடே இவர்கள் சென்றிருக்கின்றார்கள். என்ன, அதனுடைய கதியை இவர்கள் பார்க்கவில்லையா? இருப்பினும், இவர்கள் மரணத்திற்குப் பின் மற்றொரு வாழ்க்கையை நம்பாதவர்களாகவே இருக்கின்றனர். </span>
<span>25:41 மேலும், இவர்கள் உம்மைக் காண்பார்களானால், உம்மைக்கேலிக்கு உரியவராக எடுத்துக் கொள்கின்றார்கள். (அவர்கள் கூறுகின்றார்கள்:) “இவரைத்தான் இறைவன் தூதராய் அனுப்பியிருக்கின்றானா? </span>
<span>25:42 நம் தெய்வங்கள் மீது உள்ள நம்பிக்கையில் நாம் நிலைத்திருக்கவில்லையானால் இவரோ நம்மை வழிகெடுத்து அந்தத் தெய்வங்களை விட்டு நம்மை விலக்கியே வைத்திருப்பார்.” சரி! அந்த நேரம் வெகு தூரத்தில் இல்லை இவர்கள் வேதனையைக் காணும்போது யார் வழிகேட்டில் வெகுதூரம் சென்றுவிட்டார்கள் என்பது இவர்களுக்குத் தாமாகவே தெரிந்துவிடும். </span>
<span>25:43 தனது மனஇச்சையைத் தன் கடவுளாக்கிக் கொண்டவனின் நிலை குறித்து என்றேனும் நீர் சிந்தித்ததுண்டா? இத்த கையவனை நேர்வழியில் கொண்டுவரும் பொறுப்பை நீர் ஏற்க முடியுமா?</span>
<span>25:44 என்ன, இவர்களில் பெரும்பாலோர் செவியேற்கின்றார்கள் என்றோ, புரிந்து கொள்கின்றார்கள் என்றோ நீர் கருதுகின்றீரா? இவர்களோ கால்நடைகளைப் போன்றவர்களாவர். ஏன், அவற்றை விடவும் இவர்கள் மிகவும் தரங்கெட்டவர்களாவர். </span>
<span>25:45 உம் இறைவன் எவ்வாறு நிழலை விரிக்கின்றான் என்பதை நீர் பார்க்கவில்லையா? அவன் நாடினால், அந்நிழலை நிலையானதாய் ஆக்கியிருப்பான். பிறகு, நாம் சூரியனை அதற்கு வழிகாட்டி ஆக்கினோம். </span>
<span>25:46 பிறகு (சூரியன் மேலே செல்லச் செல்ல) அந்நிழலை நாம் மெல்ல மெல்ல நம் பக்கமாக சுருட்டிக் கொண்டே போகின்றோம். </span>
<span>25:47 மேலும், அவனே உங்களுக்கு இரவை ஆடையாகவும், உறக்கத்தை அமைதியாகவும் பகலை உயிர்த்தெழும் வேளையாகவும் ஆக்கினான். </span>
<span>25:48 மேலும், அவனே தன்னுடைய கருணைக்கு முன்னால் காற்றை நற்செய்தியாக அனுப்புகின்றான். பிறகு, வானத்தில் இருந்து தூய்மையான நீரை இறக்குகின்றான். </span>
<span>25:49 பூமியின் உயிரற்ற பகுதிகளுக்கு அதன் மூலம் நாம் உயிர் கொடுப்பதற்காகவும், மேலும், நம்முடைய படைப்பினங்களில் அநேக கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் தண்ணீர் புகட்டுவதற்காகவும்தான்! </span>
<span>25:50 இந்த விந்தைகளை அவர்களிடையே அடிக்கடி நாம் நிகழ்த்துகின்றோம், அவர்கள் படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக! ஆயினும், மக்களில் பெரும்பாலோர் நிராகரிப்பு மற்றும் நன்றி கொல்லும் நடத்தையைத் தவிர வேறெதனையும் மேற்கொள்ள மறுக்கின்றார்கள். </span>
<span>25:51 மேலும், நாம் நாடியிருந்தால் ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வோர் எச்சரிக்கையாளரை அனுப்பி வைத்திருப்போம். </span>
<span>25:52 எனவே, (நபியே!) நிராகரிப்பாளர்களின் பேச்சை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்! மேலும், இந்தக் குர்ஆனைக் கொண்டு அவர்களுடன் பெரும் ஜிஹாதில் கடுமையான போராட்டத்தில் ஈடுபடுங்கள். </span>
<span>25:53 மேலும், இரு கடல்களை ஒன்றிணைத்து வைத்திருப்பவன் அவனே! ஒன்று சுவையும் இனிமையும் வாய்ந்தது; மற்றொன்று, உப்பும் கசப்பும் கலந்தது. மேலும், இரண்டுக்குமிடையே ஒரு திரை ஒரு தடுப்பு இருக்கிறது. (அவை ஒன்றோடொன்று கலந்து விடாதவாறு) அது தடுத்துக் கொண்டிருக்கிறது. </span>
<span>25:54 மேலும், நீரிலிருந்து மனிதனைப் படைத்தவன் அவனே! பிறகு, வம்ச உறவின் மூலமாகவும், திருமணத் தொடர்பின் மூலமாகவும் இரு தனித்தனியான உறவு முறைகளை அவன் ஏற்படுத்தினான். உம் இறைவன் பெரும் ஆற்றல் மிக்கவனாய் இருக்கின்றான். </span>
<span>25:55 மேலும், அல்லாஹ்வை விடுத்து தமக்கு எவ்வித நன்மையும் தீமையும் அளித்திட இயலாத தெய்வங்களை மக்கள் வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், இது தவிர நிராகரிப்பாளன் தன் இறைவனுக்கு எதிரான ஒவ்வொரு துரோகிக்கும் உதவியாளனாக இருக்கின்றான். </span>
<span>25:56 (நபியே!) நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மட்டுமே உம்மை நாம் அனுப்பியிருக்கின்றோம். </span>
<span>25:57 இவர்களிடம் கூறிவிடும்: “இப்பணிக்காக உங்களிடம் நான் கூலி எதுவும் கேட்கவில்லை. எனது கூலியோ, எவர் தன் இறைவன் பக்கம் சென்றடைவதற்கான வழியினை மேற்கொள்ள விரும்புகின்றாரோ அவர் இதனை மேற்கொள்வதுதான்!”</span>
<span>25:58 மேலும் (நபியே!) என்றென்றும் உயிருடன் இருப்பவனும் ஒருபோதும் மரணிக்காதவனுமான இறைவனை முழுவதுஞ் சார்ந்திருப்பீராக! அவனைப் புகழ்வதுடன் அவன் தூய்மையையும் எடுத்துரைப்பீராக! தன்னுடைய அடிமைகளின் பாவங்களை நன்கு அறிந்துகொள்ள அவனே போதுமானவன். </span>
<span>25:59 அவன் எத்தகையவனெனில் வானங்களையும் பூமியையும் அவற்றுக்கிடையேயுள்ள அனைத்துப் பொருட்களையும் ஆறு நாட்களில் படைத்தான். பிறகு அர்ஷின்* மீது அமர்ந்தான்; அவன் ரஹ்மான்கருணை மிக்கவன். அவனுடைய மாட்சிமை பற்றி யாரேனும் அறிந்தவரிடம் கேளுங்கள். </span>
<span>25:60 “ரஹ்மானுக்கு கருணைமிக்க இறைவனுக்கு ஸுஜூது• செய்யுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், “ரஹ்மான் என்றால் யார்? நீர் சொல்வோருக்கெல்லாம் நாங்கள் ஸஜ்தா செய்துகொண்டிருக்க வேண்டுமா?” என்று அவர்கள் கேட்கின்றார்கள். இந்த அழைப்பு அவர்களுடைய வெறுப்பை இன்னும் அதிகமாக்கி விடுகின்றது. </span>
<span>25:61 பெரும் பாக்கியம் உடையவனாவான்; விண்ணில் உறுதியான மண்டலங்கள் அமைத்து அதில் ஒளிவிளக்கையும் ஒளிர்கின்ற சந்திரனையும் பிரகாசிக்கச் செய்தவன்! </span>
<span>25:62 அவனே, இரவையும் பகலையும் ஒன்று மற்றொன்றைத் தொடர்ந்து வரக்கூடியதாக அமைத்தான்படிப்பினை பெற நாடும் அல்லது நன்றியுடையவராக இருக்க விரும்பும் ஒவ்வொரு மனிதனுக்காகவும்!</span>
<span>25:63 மேலும், ரஹ்மானின் (உண்மையான) அடியார்கள் எத்தகையவர்களெனில், அவர்கள் பூமியில் பணிவோடு நடப்பார்கள்; அறிவீனர்கள் அவர்களுடன் முறைகேடாக உரையாடினால், “உங்களுக்கு ஸலாம்சாந்தி உண்டாகட்டும்” என்று கூறிவிடுவார்கள். </span>
<span>25:64 மேலும், அவர்கள் தங்கள் இறைவனின் திருமுன் ஸுஜூது செய்தும் நின்றும் வணங்கியவாறு இரவைக் கழிப்பார்கள். </span>
<span>25:65 மேலும், அவர்கள் இறைஞ்சுவார்கள்: “எங்கள் இறைவனே! நரக வேதனையை எங்களைவிட்டு அகற்றுவாயாக! அதன் வேதனையோ ஓயாது தொல்லை தரக்கூடியதாக இருக்கின்றது. </span>
<span>25:66 திண்ணமாக, நரகம் தீய தங்குமிடமாகவும் மிகவும் மோசமான இடமாகவும் இருக்கின்றது!” </span>
<span>25:67 மேலும், அவர்கள் செலவு செய்யும்போது வீண்விரயமும் கஞ்சத்தனமும் செய்வதில்லை. மாறாக, அவர்களுடைய செலவுகள் இந்த மிதமிஞ்சிய இரு நிலைகளுக்கிடையில் மிதமானதாக இருக்கும். </span>
<span>25:68 மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக்கூடாது) என்று அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்ட எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும், விபச்சாரமும் செய்வதில்லை. யாரேனும் இச்செயல்களைச் செய்தால் அவன் தன் பாவத்திற்கான கூலியைப் பெற்றே தீருவான்;</span>
<span>25:69 மறுமைநாளில் அவனுக்கு இரட்டிப்பு தண்டனை அளிக்கப்படும். மேலும், அதிலேயே இழிவுக்குரியவனாய் என்றென்றும் அவன் வீழ்ந்து கிடப்பான். </span>
<span>25:70 ஆனால் (இந்தப் பாவங்களுக்குப் பின்னர்) எவர் மன்னிப்புக்கோரி, மேலும், நம்பிக்கை கொண்டு நற்செயலும் புரியத்தொடங்கி விட்டிருக்கின்றாரோ அவரைத் தவிர! இத்தகையோரின் தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றி விடுவான். மேலும், அவன் பெரும் மன்னிப்பாளனும் கிருபையாளனுமாவான்! </span>
<span>25:71 எவர் பாவமன்னிப்புக் கோரி, நற்செயலை மேற்கொள்கின்றாரோ அவர் அல்லாஹ்வின் பக்கம் எவ்வாறு திரும்பி வர வேண்டுமோ அவ்வாறு திரும்பி வருகின்றார். </span>
<span>25:72 மேலும் (ரஹ்மானின் உண்மையான அடியார்கள் யாரெனில்) அவர்கள் பொய்மைக்கு சாட்சியாக இருப்பதில்லை. அவர்கள் ஏதேனும் வீணானவற்றின் அருகில் செல்ல நேர்ந்தால் கண்ணியமானவர்களாய்க் கடந்து சென்றுவிடுவார்கள். </span>
<span>25:73 மேலும், தம் இறைவனின் வசனங்களை ஓதிக்காட்டி அவர்களுக்கு நல்லுரை வழங்கப்படும்போது அவற்றைக் குறித்து குருடர்களாயும், செவிடர்களாயும் இருப்பதில்லை. </span>
<span>25:74 மேலும், அவர்கள் இறைஞ்சிய வண்ணம் இருப்பார்கள்: “எங்கள் இறைவனே! எங்கள் மனைவிமார்களையும், எங்கள் குழந்தைகளையும், எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக! மேலும், எங்களை இறையச்சமுடையோருக்குத் தலைவர்களாய் திகழச் செய்வாயாக!” </span>
<span>25:75 இத்தகையோரே தங்களுடைய பொறுமையின் பலனாக உயர்ந்த மாளிகைகளைப் பெறுவார்கள். மரியாதையுடனும் வாழ்த்துக்களுடனும் அவர்கள் அங்கு வரவேற்கப்படுவார்கள். </span>
<span>25:76 அவர்கள் என்றென்றும் அங்குத் தங்கி வாழ்வார்கள். எவ்வளவு அழகானதாக இருக்கின்றது அந்தத் தங்குமிடம்! எவ்வளவு உன்னதமாக இருக்கிறது அந்த ஓய்விடம்!</span>
<span>25:77 (நபியே!) மக்களிடம் கூறுங்கள்: “என்னுடைய இறைவனை நீங்கள் அழைக்கவில்லையென்றால், அவனுக்கு உங்களுடைய தேவைதான் என்ன? இப்போது நீங்கள் (இறைத்தூதைப்) பொய்யெனக் கூறிவிட்டீர்கள். தடுக்க முடியாத கடும் தண்டனையை, விரைவில் நீங்கள் பெறத்தான் போகிறீர்கள்!”</span>
</div><div>
<span>அஷ்ஷûஅரா</span>
<span>26:1 தாஸீம்மீம். </span>
<span>26:2 இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும். </span>
<span>26:3 (நபியே!) இவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை என்பதற்காக(க் கவலைப்பட்டு) உம்மையே நீர் மாய்த்துக் கொள்வீர் போன்றிருக்கின்றதே! </span>
<span>26:4 நாம் நாடினால் விண்ணிலிருந்து ஒரு சான்றினை இவர்கள் மீது இறக்கி வைத்திருக்க முடியும். அதன் முன்னே இவர்களின் பிடரி பணிந்து விடும்! </span>
<span>26:5 கருணைமிக்க இறைவனிடமிருந்து புதிதாக எந்த ஓர் அறிவுரை இவர்களிடம் வந்தாலும் இவர்கள் அதனைப் புறக்கணித்துவிடுகின்றார்கள்;</span>
<span>26:6 இதோ இப்போதும் இவர்கள் பொய்யெனத் தூற்றிவிட்டிருக்கின்றார்கள். ஆனால், எதனை இவர்கள் கேலி செய்துகொண்டிருக்கிறார்களோ அதனைப் பற்றிய உண்மைச் செய்திகள் விரைவில் இவர்களுக்கு(ப் பல்வேறு வழிகளின் மூலம்) தெரிந்துவிடும். </span>
<span>26:7 இவர்கள் பூமியின் மீது பார்வை செலுத்தவில்லையா என்ன? எத்துணை அதிக அளவில் எல்லாவிதமான உயர்தர தாவரங்களை நாம் அதில் முளைக்கச் செய்திருக்கின்றோம்! </span>
<span>26:8 திண்ணமாக, இதில் ஒரு சான்று இருக்கிறது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களல்லர். </span>
<span>26:9 மேலும், திண்ணமாக உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும், பெருங்கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். </span>
<span>26:10 அந்த நிகழ்ச்சியை இவர்களுக்கு நீர் கூறும்: “உம்முடைய இறைவன் மூஸாவை அழைத்துக் கூறினான். அக்கிரமம் புரிந்த சமூகத்தாரிடம் </span>
<span>26:11 ஃபிர்அவ்னுடைய சமூகத்தாரிடம் நீர் செல்லும். அவர்கள் அஞ்சுவதில்லையா?” </span>
<span>26:12 அதற்கு அவர் பணிந்து கூறினார்: “என் இறைவனே! என்னை அவர்கள் பொய்யன் என்று தூற்றிவிடுவார்களோ என்று நான் அஞ்சுகின்றேன். </span>
<span>26:13 என் நெஞ்சம் இடுங்கிவிடுகின்றது; என் நாவுக்கு சரளமாகப் பேச வருவதில்லை. எனவே, நீ ஹாரூனுக்கு தூதுத்துவத்தை வழங்குவாயாக! </span>
<span>26:14 மேலும், என்னைப் பற்றி அவர்களிடம் ஒரு குற்றச்சாட்டும் இருக்கின்றது. எனவே, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று நான் அஞ்சுகின்றேன்.” </span>
<span>26:15 இறைவன் கூறினான்: “அப்படியல்ல! நீங்கள் இருவரும் என்னுடைய சான்றுகளை எடுத்துக்கொண்டு செல்லுங்கள். நாம் உங்களுடன் அனைத்தையும் செவியுற்றுக் கொண்டிருப்போம். </span>
<span>26:16 இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். மேலும், அவனிடம் கூறுங்கள்: அகிலங்களின் இறைவன் எங்களை அனுப்பியிருக்கின்றான்; </span>
<span>26:17 இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை நீ எங்களுடன் அனுப்பிவிட வேண்டுமென்பதற்காக!”</span>
<span>26:18 அதற்கு ஃபிர்அவ்ன் கூறினான்: “நீ குழந்தையாய் இருந்தபோது உன்னை நாம் எம்மிடத்திலே வைத்து வளர்க்கவில்லையா? மேலும், உன் வாழ்நாளில் பல ஆண்டுகள் நீ எம்மிடம் கழித்திருக்கின்றாய். </span>
<span>26:19 அதன் பின்னர் நீ செய்துவிட்ட அந்தச் செயலையும் செய்துள்ளாய். நீ பெரிதும் நன்றிகெட்ட மனிதன்தான்!” </span>
<span>26:20 மூஸா பதில் கூறினார்: “அப்போது நான் அறியாமையினால் அக்காரியத்தைச் செய்துவிட்டேன். </span>
<span>26:21 பின்னர், நான் உங்களுக்கு அஞ்சி உங்களிடமிருந்து ஓடிவிட்டேன். பின் என் இறைவன் எனக்கு நுண்ணறிவுத் திறனை வழங்கினான்; என்னைத் தூதர்களில் ஒருவனாகவுமாக்கினான். </span>
<span>26:22 எனக்குச் செய்ததாக நீ சொல்லிக் காட்டும் அந்த உபகாரத்தின் உண்மைநிலை யாதெனில், நீ இஸ்ராயீல் வழித்தோன்றல்களை அடிமைப்படுத்தி வைத்திருந்ததேயாகும்.” </span>
<span>26:23 ஃபிர்அவ்ன் கேட்டான்: “மேலும், இந்த அகிலங்களின் இறைவன் என்பது என்ன?” </span>
<span>26:24 அதற்கு மூஸா பதிலளித்தார்: “அவன் வானங்கள், பூமி மற்றும் அவற்றிற்கு இடையிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் அதிபதி ஆவான் நீங்கள் உறுதியான நம்பிக்கை கொள்பவர்களாயிருந்தால்!” </span>
<span>26:25 ஃபிர்அவ்ன் தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் கூறினான்: “கேட்கிறீர்களல்லவா?”</span>
<span>26:26 அதற்கு மூஸா கூறினார்: “அவன் உங்களுடைய இறைவனும், முன்னோர்களான உங்கள் மூதாதையருடைய இறைவனுமாவான்.” </span>
<span>26:27 அதற்கு ஃபிர்அவ்ன் (அவையோரை நோக்கி) கூறினான்: “உங்களிடம் அனுப்பப்பட்ட இந்தத் தூதர் சரியான பைத்தியக்காரராய்த் தெரிகின்றார்!” </span>
<span>26:28 அதற்கு மூஸா கூறினார்: “கிழக்கு, மேற்கு மற்றும் அவற்றிற்கிடையேயுள்ள அனைத்திற்கும் அவன் அதிபதியாவான் நீங்கள் சற்றேனும் அறிவுடையோராக இருந்தால்!” </span>
<span>26:29 அதற்கு ஃபிர்அவ்ன் கூறினான்: “நீர் என்னைத் தவிர வேறு எவரையேனும் வணக்கத்திற்குரியவராய் ஏற்றுக் கொண்டால், சிறையில் வாடி வதங்கிக் கிடப்பவர்களுடன் உம்மையும் நான் சேர்த்து விடுவேன்!” </span>
<span>26:30 மூஸா கேட்டார்: “தெளிவான ஒரு சான்றை நான் உன்னிடம் கொண்டு வந்தாலுமா?” </span>
<span>26:31 அதற்கு ஃபிர்அவ்ன் கூறினான்: “அதனைக் கொண்டுவாரும்; நீர் உண்மையாளராயின்!”</span>
<span>26:32 (அவன் இவ்வாறு கூறியதும்) மூஸா தன் கைத்தடியைப் போட்டார். உடனே அது சந்தேகமின்றி ஒரு பாம்பாயிற்று. </span>
<span>26:33 பிறகு, அவர் தம் கையை (அக்குளிலிருந்து) வெளியே எடுத்தார். உடனே அது பார்ப்போர் அனைவரின் முன்னிலையிலும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. </span>
<span>26:34 ஃபிர்அவ்ன் தன்னைச் சுற்றிலுமிருந்த தலைவர்களிடம் கூறினான்: “இவர் உண்மையில் ஒரு கைதேர்ந்த சூனியக்காரர்! </span>
<span>26:35 தன்னுடைய சூனியத்தின் வலிமையால் உங்களை உங்கள் நாட்டிலிருந்து வெளியேற்ற விரும்புகின்றார். இப்போது கூறுங்கள், நீங்கள் என்ன கட்டளை இடப்போகின்றீர்கள்?”</span>
<span>26:36 அதற்கு அவர்கள் கூறினார்கள்: “இவரையும், இவருடைய சகோதரரையும் தடுத்து வையுங்கள். முரசறைவோரை நகரங்களுக்கு அனுப்புங்கள். </span>
<span>26:37 திறமை வாய்ந்த சூனியக்காரர்கள் அனைவரையும் தங்களிடம் அவர்கள் அழைத்துக் கொண்டு வரட்டும்!” </span>
<span>26:38 அவ்வாறு ஒருநாள் குறிப்பிட்ட நேரத்தில் சூனியக்காரர்கள் ஒன்று திரட்டப்பட்டனர். </span>
<span>26:39 மக்களிடம் கோரப்பட்டது: “நீங்கள் கூட்டத்திற்கு வருவீர்களா? </span>
<span>26:40 நாம் சூனியக்காரர்களின் மார்க்கத்திலேயே இருந்து விடலாம்; அவர்கள் வெற்றியாளர்களாய்த் திகழ்ந்தால்!”</span>
<span>26:41 சூனியக்காரர்கள் (களத்திற்கு) வந்தபோது, ஃபிர்அவ்னிடம் கேட்டார்கள்: “நாங்கள் வெற்றியடைந்துவிட்டால், திண்ணமாக எங்களுக்கு வெகுமதி கிடைக்குமல்லவா?”</span>
<span>26:42 அதற்கு அவன், “ஆம்! மேலும், நீங்கள் அப்போது எனக்கு நெருக்கமானவர்களாயும் இருப்பீர்கள்” என்றான். </span>
<span>26:43 மூஸா அவர்களிடம் கூறினார்: “நீங்கள் எறிய இருப்பதை எறியுங்கள்!” </span>
<span>26:44 உடனே, அவர்கள் தங்கள் கயிறுகளையும், கைத்தடிகளையும் எறிந்தனர்; மேலும், கூறினர்: “ஃபிர்அவ்னின் மகிமை கொண்டு நாங்களே வெற்றியாளர்களாய்த் திகழ்வோம்!”</span>
<span>26:45 பிறகு, மூஸா தமது கைத்தடியை எறிந்தார். உடனே அது அவர்களின் பொய் வித்தைகளை விழுங்கிக் கொண்டே சென்றது. </span>
<span>26:46 இதனைக் கண்ட சூனியக்காரர்கள் அனைவரும் தம்மையுமறியாமல் ஸஜ்தாவில் வீழ்ந்துவிட்டார்கள். </span>
<span>26:47 பிறகு, அவர்கள் உரக்கக் கூறினார்கள்: “ஏற்றுக்கொண்டு விட்டோம் அகிலங்களின் அதிபதியை, </span>
<span>26:48 மூஸா மற்றும் ஹாரூனுடைய அதிபதியை!” </span>
<span>26:49 ஃபிர்அவ்ன் கூறினான்: “மூஸா கூறியதை ஏற்றுக்கொண்டு விட்டீர்களே நான் அனுமதி அளிப்பதற்கு முன்பே! திண்ணமாக, உங்களுக்கு சூனியத்தைக் கற்றுத்தந்த உங்களின் பெரிய குருவாக இருக்கின்றார் இவர்! சரி, இப்பொழுது உங்களுக்குத் தெரிந்துவிடும். நிச்சயமாக, நான் உங்கள் மாறு கை, மாறு கால்களைத் துண்டித்துவிடுவேன்; உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்துவிடுவேன்!”</span>
<span>26:50 அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “பரவாயில்லை! நாங்கள் எங்கள் இறைவனின் திருமுன் சென்று விடுவோம். </span>
<span>26:51 எங்கள் இறைவன் எங்களுடைய பாவங்களை மன்னித்து விடுவான் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஏனெனில், அனைவர்க்கும் முன்னதாக நாங்கள் நம்பிக்கை கொண்டவர்களாகி விட்டோமே!”</span>
<span>26:52 மேலும், நாம் மூஸாவுக்கு வஹி அறிவித்தோம்: “என் அடியார்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாகப் புறப்படுவீராக! நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்!” </span>
<span>26:53 இதன்படி ஃபிர்அவ்ன் (படைகளைத் திரட்டுவதற்காக) நகரங்களுக்கு ஊழியர்களை அனுப்பினான். (மேலும், சொல்லியனுப்பினான்:) </span>
<span>26:54 “இவர்கள் மிகச் சிறிய ஒரு கூட்டத்தினர்தாம்! </span>
<span>26:55 மேலும், இவர்கள் நம்மை மிகுந்த கோபமடையச் செய்துவிட்டார்கள். </span>
<span>26:56 நாம் எப்பொழுதும் விழிப்பாக இருக்கக்கூடிய கூட்டத்தினர் அல்லவா!” </span>
<span>26:57 இவ்வாறு நாம் அவர்களை அவர்களுடைய தோப்புகள், நீருற்றுகள், </span>
<span>26:58 செல்வக் களஞ்சியங்கள் மற்றும் சிறந்த இருப்பிடங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேறச் செய்தோம். </span>
<span>26:59 அவர்களுக்கு நேர்ந்தது இதுதான். (மற்றொருபுறம்) நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை இவை அனைத்திற்கும் வாரிசுகளாக்கிவிட்டோம். </span>
<span>26:60 பொழுது விடிந்ததும் இவர்கள் அம்மக்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள். </span>
<span>26:61 இரு கூட்டத்தாரும் ஒருவரை ஒருவர் கண்டுகொண்டபோது மூஸாவின் தோழர்கள், “திண்ணமாக, நாம் பிடிபட்டுவிடுவோம்!” என்று கூக்குரலிட்டனர். </span>
<span>26:62 அதற்கு மூஸா கூறினார்: “ஒருபோதும் இல்லை. என்னோடு என் இறைவன் இருக்கின்றான். அவன் திண்ணமாக, எனக்கு வழிகாட்டுவான்!” </span>
<span>26:63 மூஸாவுக்கு நாம் வஹியின் மூலம் கட்டளையிட்டோம்: “உமது கைத்தடியினால் கடலை அடியும்!” உடனே கடல் பிளந்துவிட்டது. மேலும், அதன் ஒவ்வொரு பகுதியும் மாபெரும் மலை போன்றாகிவிட்டது. </span>
<span>26:64 அதே இடத்திற்கு இரண்டாவது கூட்டத்தாரையும் நாம் நெருங்கிவரச்செய்தோம். </span>
<span>26:65 மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் நாம் காப்பாற்றிக் கொண்டோம். </span>
<span>26:66 பிறகு, மற்றவர்களை மூழ்கடித்து விட்டோம். </span>
<span>26:67 திண்ணமாக, இந்நிகழ்ச்சியில் ஒரு சான்று இருக்கிறது. எனினும் இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் அல்லர். </span>
<span>26:68 மேலும், திண்ணமாக உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். </span>
<span>26:69 மேலும், இப்ராஹீமின் சரிதையை இவர்களுக்கு எடுத்துரையுங்கள்: </span>
<span>26:70 ஒருபோது அவர்தம் தந்தையிடமும், சமூகத்தாரிடமும், “எவற்றை நீங்கள் வணங்கிக்கொண்டிருக்கின்றீர்கள்?” என்று கேட்டார். </span>
<span>26:71 அதற்கு அவர்கள் “சிலைகளை நாங்கள் பூஜிக்கின்றோம்; மேலும், அவற்றிற்கு சேவை செய்வதில் முழுமையாக ஈடுபட்டிருக்கின்றோம்” என்று பதில் கூறினார்கள்.  </span>
<span>26:72 அதற்கு அவர் கேட்டார்: “நீங்கள் அழைக்கும்போது உங்கள் அழைப்பை இவை கேட்கின்றனவா?</span>
<span>26:73 அல்லது இவை உங்களுக்கு ஏதேனும் இலாபமோ, நஷ்டமோ அளிக்கின்றனவா?” </span>
<span>26:74 அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “இல்லை. ஆயினும், எங்கள் முன்னோர் இவ்வாறே செய்து கொண்டிருப்பதை நாங்கள் கண்டோம்.”</span>
<span>26:75 அதற்கு இப்ராஹீம் கூறினார்: “எவற்றை நீங்களும், உங்களுடைய முற்காலத்து மூதாதையர்களும் வணங்கிவந்தீர்களோ ,</span>
<span>26:76 அவற்றை நீங்கள் என்றாவது (கண்திறந்து) பார்த்திருக்கின்றீர்களா? </span>
<span>26:77 என்னைப் பொறுத்தவரை திண்ணமாக, இவை அனைத்தும் விரோதிகளாகும்; ஆனால், அகிலங்களின் அதிபதியைத் தவிர! </span>
<span>26:78 அவன் எத்தகையவனெனில், அவன்தான் என்னைப் படைத்தான்; மேலும், அவனே எனக்கு பின்னர் வழிகாட்டுகின்றான். </span>
<span>26:79 எனக்கு உண்ணவும் அருந்தவும் தருகின்றான். </span>
<span>26:80 மேலும், நான் நோயுற்றால் அவனே எனக்கு குணமளிக்கின்றான். </span>
<span>26:81 அவனே என்னை மரணிக்கச் செய்வான்; பின்னர் மீண்டும் எனக்கு வாழ்வளிப்பான். </span>
<span>26:82 மேலும், கூலி கொடுக்கப்படும் நாளில் அவன் என் பாவங்களை மன்னித்தருள்வான் என்று நான் அவனிடமே நம்பிக்கை கொண்டுள்ளேன்.” </span>
<span>26:83 (இதன் பின்னர்) இப்ராஹீம் இறைஞ்சினார்: “என் இறைவனே! எனக்கு நீ நுண்ணறிவுத்திறனை வழங்குவாயாக! மேலும், என்னை உத்தமர்களோடு சேர்த்து வைப்பாயாக! </span>
<span>26:84 மேலும், பிற்கால மக்களிடையே எனக்கு உண்மையான புகழை வழங்குவாயாக! </span>
<span>26:85 மேலும், அருட்கொடைகள் நிரம்பிய சுவனத்தின் வாரிசுகளுள் என்னையும் ஒருவனாக ஆக்குவாயாக! </span>
<span>26:86 மேலும், என் தந்தையை மன்னிப்பாயாக! திண்ணமாக, அவர் வழிகெட்டுப் போனவர்களில் ஒருவராய் இருக்கின்றார். </span>
<span>26:87 மேலும், மனிதர்கள் அனைவரும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படும் நாளில் என்னை இழிவுபடுத்திவிடாதே! </span>
<span>26:88 அந்நாளில், செல்வமும், பிள்ளைகளும் எவ்விதப் பயனும் அளித்திடமாட்டா. </span>
<span>26:89 ஆனால், எந்த மனிதர் தூய்மையான உள்ளத்தோடு அல்லாஹ்வின் சமூகத்திற்கு வருகை தருகின்றாரோ அவரைத் தவிர!”</span>
<span>26:90 (அந்நாளில்) சுவனம் இறையச்சமுடையவர்களின் அருகில் கொண்டுவரப்படும்; </span>
<span>26:91 வழிகெட்டுப் போனவர்களின் முன்னிலையில் நரகம் திறந்து வைக்கப்படும். </span>
<span>26:92 மேலும், அவர்களிடம் வினவப்படும்: நீங்கள் வணங்கி வந்த தெய்வங்கள் எங்கே? </span>
<span>26:93 “நீங்கள் அல்லாஹ்வை விடுத்து வணங்கி வந்தீர்களே அந்தத் தெய்வங்கள் எங்கே? அவை உங்களுக்கு ஏதேனும் உதவி செய்து கொண்டிருக்கின்றனவா? அல்லது அவற்றால் தம்மையேனும் காப்பாற்றிக் கொள்ள முடிகிறதா?” </span>
<span>26:94 பின்னர் அந்த தெய்வங்களும், வழிகெட்டுப் போனவர்களும், </span>
<span>26:95 இப்லீசின் சேனைகளும் அனைவரும் நரகில் தலைகீழாக எறியப்படுவார்கள்! </span>
<span>26:96 அங்கு இவர்கள் அனைவரும் தமக்கிடையே சண்டையிட்டுக் கொள்வார்கள். </span>
<span>26:97 வழி தவறியவர்கள் (தங்கள் தெய்வங்களிடம்) கூறுவார்கள்: “இறைவன் மீது ஆணையாக! நாங்கள் வெளிப்படையான வழிகேட்டிலிருந்தோம். </span>
<span>26:98 அகிலங்களின் அதிபதியுடன் உங்களுக்கு சரி சமமான தகுதியை நாங்கள் வழங்கிக் கொண்டிருந்தபோது! </span>
<span>26:99 குற்றவாளிகள் தாம் எங்களை இந்த வழிகேட்டில் தள்ளி விட்டார்கள். </span>
<span>26:100 இப்போது, எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள் யாரும் இல்லை!” </span>
<span>26:101 உற்ற நண்பர் எவருமிலர். </span>
<span>26:102 அந்தோ! மீண்டும் ஒருமுறை எங்களுக்குத் திரும்பிச் செல்ல வாய்ப்புக் கிடைத்தால், நாங்கள் நம்பிக்கையாளர்களாய்த் திகழ்வோமே!”</span>
<span>26:103 திண்ணமாக, இதில் பெரியதொரு சான்று இருக்கின்றது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள் அல்லர். </span>
<span>26:104 மேலும், திண்ணமாக உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். </span>
<span>26:105 நூஹுடைய சமூகத்தார் இறைத்தூதர்களைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். </span>
<span>26:106 அவர்களிடம் அவர்களின் சகோதரர் நூஹ் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் அஞ்சுவதில்லையா? </span>
<span>26:107 நான் உங்களின் நம்பிக்கைக்குரிய தூதராவேன். </span>
<span>26:108 எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள். </span>
<span>26:109 நான் இப்பணிக்காக உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலியோ அகிலங்களின் அதிபதியிடமே உள்ளது. </span>
<span>26:110 எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (தயக்கமின்றி) எனக்குக் கீழ்ப்படியுங்கள்!” </span>
<span>26:111 அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “நாங்கள் உம்மை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? மிகவும் கீழ்த்தரமான மக்கள் உம்மைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்களே!”</span>
<span>26:112 அதற்கு நூஹ் கூறினார்: “அவர்களின் செயல் எப்படிப்பட்டதென்று எனக்கென்ன தெரியும்?</span>
<span>26:113 அவர்களுடைய கணக்கெல்லாம் என் அதிபதியின் பொறுப்பிலுள்ளது. நீங்கள் சற்று உணர்ந்து செயல்படக்கூடாதா? </span>
<span>26:114 நம்பிக்கை கொள்வோரை விரட்டிவிடுவது என் பணியன்று. </span>
<span>26:115 நானோ, தெளிவாக எச்சரிக்கை செய்பவனாயிருக்கின்றேன்.” </span>
<span>26:116 அதற்கு அவர்கள், “நூஹே! நீர் இதனைத் தவிர்த்துக்கொள்ளாவிடில், கல்லடிபட்டு விரட்டப்படுவோரில் நீரும் ஒருவராகிவிடுவீர்” என்று கூறினார்கள். </span>
<span>26:117 நூஹ் இறைஞ்சினார்: “என் இறைவனே! என் சமூகத்தார் என்னைப் பொய்யனென்று தூற்றிவிட்டனர். </span>
<span>26:118 இனி எனக்கும் அவர்களுக்குமிடையில் திட்டவட்டமான ஒரு தீர்ப்பை வழங்குவாயாக! மேலும், என்னையும் என்னுடன் இருக்கும் இறைநம்பிக்கையாளர்களையும் நீ காப்பாற்றுவாயாக!” </span>
<span>26:119 இறுதியில், நிரம்பிய ஒரு கப்பலில் அவரையும், அவருடனிருந்தவர்களையும் நாம் காப்பாற்றிக்கொண்டோம். </span>
<span>26:120 பின்னர், எஞ்சியிருந்த மனிதர்களை மூழ்கடித்துவிட்டோம். </span>
<span>26:121 திண்ணமாக, இதில் ஒரு சான்று உள்ளது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களல்லர். </span>
<span>26:122 மேலும், திண்ணமாக உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். </span>
<span>26:123 ஆத் சமூகத்தினர் இறைத்தூதர்களைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். </span>
<span>26:124 அவர்களுடைய சகோதரர் ஹூத் அவர்களிடம் கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் அஞ்சுவதில்லையா? </span>
<span>26:125 நான் உங்களுடைய நம்பிக்கைக்குரிய தூதரா வேன். </span>
<span>26:126 எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள். </span>
<span>26:127 நான் இப்பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனக்குரிய கூலியோ அகிலங்களின் அதிபதியிடமே உள்ளது. </span>
<span>26:128 என்ன இது! உயரமான இடங்களிலெல்லாம் வீணாக நினைவுக் கட்டடங்களை நீங்கள் எழுப்புகின்றீர்கள் </span>
<span>26:129 பெரும் பெரும் மாளிகைகளை நிர்மாணிக்கின்றீர்கள் நீங்கள் என்றென்றும் வாழப் போவதைப்போல! </span>
<span>26:130 மேலும், நீங்கள் எவரையேனும் பிடித்தால் கொடூரமாகப் பிடிக்கிறீர்கள். </span>
<span>26:131 எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள். </span>
<span>26:132 நீங்கள் அறிந்திருப்பவற்றையெல்லாம் எவன் உங்களுக்கு வழங்கினானோ, அவனுக்கு அஞ்சுங்கள்!</span>
<span>26:133 அவன் உங்களுக்குக் கால்நடைகளையும், பிள்ளைகளையும், </span>
<span>26:134 தோட்டங்களையும், நீரூற்றுகளையும் அருளினான். </span>
<span>26:135 நான் உங்கள் விஷயத்தில் ஒரு மாபெரும் நாளின் வேதனையை அஞ்சுகின்றேன்!” </span>
<span>26:136 இதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “நீர் நல்லுரை கூறினாலும் கூறாவிட்டாலும் எல்லாம் எங்களுக்கு ஒன்றுதான். </span>
<span>26:137 இந்த விஷயங்கள் எல்லாம் தொன்றுதொட்டே கூறப்பட்டு வருபவைதாம். </span>
<span>26:138 மேலும், நாங்கள் தண்டிக்கப்படக்கூடியவர்களல்லர்!” </span>
<span>26:139 இறுதியில் அவர்கள் அவரைப் பொய்யர் எனக் கூறிவிட்டார்கள். நாம் அவர்களை அழித்துவிட்டோம்.திண்ணமாக, இதில் ஒரு சான்று இருக்கின்றது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் அல்லர். </span>
<span>26:140 மேலும், திண்ணமாக, உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். </span>
<span>26:141 ஸமூத் சமுதாயத்தார் இறைத்தூதர்களைப் பொய்யர் எனத் தூற்றினர். </span>
<span>26:142 அவர்களிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹ் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் அஞ்சுவதில்லையா?  </span>
<span>26:143 நான் உங்களின் நம்பிக்கைக்குரிய ஒரு தூதராவேன். </span>
<span>26:144 எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள். </span>
<span>26:145 இப்பணிக்காக நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலியோ அகிலங்களின் அதிபதியிடமே உள்ளது. </span>
<span>26:146 நீங்கள் இங்குள்ள அனைத்துப் பொருள்களுக்கு மத்தியில் நிம்மதியாக வாழ்வதற்கு விட்டு வைக்கப்படுவீர்களா என்ன? </span>
<span>26:147 (அதாவது) இந்தத் தோட்டங்களிலும் நீரூற்றுகளிலும், </span>
<span>26:148 பயிர்நிலங்களிலும் கனிந்த குலைகளையுடைய பேரீச்சந் தோப்புகளிலும்!</span>
<span>26:149 மேலும், மலைகளைக் குடைந்து குடைந்து பெருமை கொண்டவர்களாய் நீங்கள் குடியிருப்புகள் அமைத்துக் கொள்கின்றீர்கள். </span>
<span>26:150 அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்! </span>
<span>26:151 மேலும், வரம்பு மீறி வாழ்பவர்களுக்குக் கீழ்ப்படியாதீர்கள். </span>
<span>26:152 அவர்களோ பூமியில் அராஜகம் விளைவிக்கின்றார்கள். இன்னும், எவ்விதச் சீர்திருத்தமும் செய்வதில்லை.” </span>
<span>26:153 அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “நீர் சூனியம் செய்யப்பட்ட மனிதராகவே இருக்கின்றீர். </span>
<span>26:154 நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறென்ன? நீர் உண்மையாளராயின் ஏதேனுமொரு சான்றினைக் கொண்டு வாரும்!” </span>
<span>26:155 அதற்கு ஸாலிஹ் கூறினார்: “இதோ! ஒரு பெண் ஒட்டகம்; (ஒரு நாள்) இது தண்ணீர் அருந்தட்டும். மற்றொரு நாள் நீங்களெல்லோரும் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம். </span>
<span>26:156 இதற்கு எவ்விதத் தீங்கும் இழைக்காதீர்கள்; அப்படி தீங்கு இழைத்தீர்களானால் ஒரு மாபெரும் நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்!” </span>
<span>26:157 ஆயினும், அவர்கள் அதன் கால் நரம்புகளை வெட்டி விட்டார்கள். பிறகு வருந்தக்கூடியவர்களாகி விட்டார்கள். </span>
<span>26:158 அவர்களை வேதனை பிடித்துக்கொண்டது! நிச்சயமாக, இதில் ஒரு சான்று இருக்கின்றது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் அல்லர். </span>
<span>26:159 மேலும், திண்ணமாக உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். </span>
<span>26:160 லூத்தின் சமூகத்தார் இறைத்தூதர்களைப் பொய்யரெனத் தூற்றினார்கள். </span>
<span>26:161 அவர்களிடம் அவர்களின் சகோதரர் லூத் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் அஞ்சுவதில்லையா? </span>
<span>26:162 நான் உங்களின் நம்பிக்கைக்குரிய ஒரு தூதரா வேன். </span>
<span>26:163 எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்! </span>
<span>26:164 நான் இப்பணிக்காக உங்களிடம் எவ்விதக் கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலியோ அகிலங்களின் அதிபதியிடமே உள்ளது. </span>
<span>26:165 உலகப் படைப்பினங்களில் ஆண்களிடம் நீங்கள் செல்கின்றீர்களா?</span>
<span>26:166 மேலும், உங்கள் மனைவியரிடம் உங்களுக்காக உங்கள் இறைவன் படைத்திருப்பனவற்றை விட்டுவிடுகின்றீர்களா? உண்மை யாதெனில், நீங்கள் வரம்பு மீறிச் செல்லும் மக்களாவீர்கள்!”</span>
<span>26:167 அதற்கு அவர்கள் கூறினார்கள்: “லூத்தே! நீர் இவ்வாறு கூறுவதைத் தவிர்த்துக் கொள்ளாவிடில், (எங்கள் ஊரிலிருந்து) வெளியேற்றப்படுகிறவர்களில் நீரும் சேர்க்கப்படுவீர்!” </span>
<span>26:168 அவர் கூறினார்: “உங்கள் தீய செயல்களைக் கண்டு வெறுப்பவர்களில் நானும் ஒருவன். </span>
<span>26:169 என் இறைவனே! என்னையும் என்னுடைய குடும்பத்தாரையும் இவர்களின் தீவினைகளிலிருந்து காப்பாற்றுவாயாக!” </span>
<span>26:170 இறுதியில், நாம் அவரையும் அவருடைய குடும்பத்தினர் அனைவரையும் காப்பாற்றிக் கொண்டோம்; </span>
<span>26:171 பின்னால் தங்கிவிட்டவர்களோடு இருந்த ஒரு கிழவியைத் தவிர! </span>
<span>26:172 பிறகு, மற்றவர்களை அழித்து விட்டோம். </span>
<span>26:173 இன்னும் அவர்கள் மீது பொழிய வைத்தோம், ஒரு மழையை! அது மிக மோசமான மழையாக இருந்தது. அதுவோ எச்சரிக்கப்பட்டவர்கள் மீது இறங்கியது. </span>
<span>26:174 திண்ணமாக, இதில் ஒரு சான்று இருக்கின்றது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் அல்லர். </span>
<span>26:175 மேலும், திண்ணமாக, உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். </span>
<span>26:176 அய்க்காவாசிகள் இறைத்தூதர்களைப் பொய்யர் எனத் தூற்றினர். </span>
<span>26:177 அவர்களிடம் ஷûஐப் கூறியதை நினைவு கூருங்கள்: “நீங்கள் அஞ்சுவதில்லையா? </span>
<span>26:178 நான் உங்களின் நம்பிக்கைக்குரிய ஒரு தூதராவேன். </span>
<span>26:179 எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள். </span>
<span>26:180 நான் இப்பணிக்காக உங்களிடம் யாதொரு கூலியையும் கோரவில்லை. எனது கூலியோ அனைத்துலகங்களின் அதிபதியிடமே உள்ளது. </span>
<span>26:181 நிறைவாக அளந்து கொடுங்கள்; யாருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தாதீர்கள்! </span>
<span>26:182 மேலும், சரியான தராசு கொண்டு எடை போடுங்கள். </span>
<span>26:183 மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைக் குறைத்துக் கொடுக்காதீர்கள். பூமியில் அராஜகம் விளைவித்துக் கொண்டு திரியாதீர்கள். </span>
<span>26:184 மேலும், எவன் உங்களையும் உங்களுக்கு முந்தைய சமுதாயத்தாரையும் படைத்தானோ அவனுக்கு அஞ்சுங்கள்.” </span>
<span>26:185 அதற்கு அவர்கள் கூறினார்கள்: “நீர் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரே ஆவீர்! </span>
<span>26:186 மேலும், நீர் எங்களைப் போன்று ஒரு மனிதரேயன்றி வேறல்லர் மேலும், நாங்கள் உம்மை முற்றிலும் பொய்யரென்றே கருதுகின்றோம். </span>
<span>26:187 நீர் உண்மையாளராயின் வானத்தின் சில பகுதிகளை எங்கள்மீது விழச்செய்வீராக!”</span>
<span>26:188 அதற்கு ஷûஐப் கூறினார்: “நீங்கள் செய்துகொண்டிருப்பவை பற்றி என் இறைவன் நன்கறிகின்றான்.” </span>
<span>26:189 அவர்கள் அவரைப் பொய்யர் எனத் தூற்றினர். இறுதியில் குடை நாளின் வேதனை அவர்களைப் பீடித்துக்கொண்டது. திண்ணமாக, அது பயங்கரமான ஒரு நாளின் வேதனையாய் இருந்தது!</span>
<span>26:190 திண்ணமாக, இதில் ஒரு சான்று இருக்கின்றது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் அல்லர். </span>
<span>26:191 மேலும், திண்ணமாக, உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். </span>
<span>26:192 மேலும், திண்ணமாக, இது அகிலங்களின் அதிபதியினால் இறக்கியருளப்பட்டதாகும். </span>
<span>26:193 நம்பிக்கைக்குரிய ரூஹ்* இதனை எடுத்துக் கொண்டு இறங்கியிருக்கின்றது </span>
<span>26:194 உமது உள்ளத்தின் மீது! எதற்காகவெனில் (அல்லாஹ்வின் சார்பில் மனிதர்களை) எச்சரிக்கை செய்பவர்களுள் நீரும் ஒருவராய் ஆக வேண்டும் என்பதற்காக! </span>
<span>26:195 தெள்ளத் தெளிந்த அரபி மொழியில். </span>
<span>26:196 மேலும், முன்னோர்களின் வேதங்களிலும், திண்ணமாக இது உள்ளது. </span>
<span>26:197 இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிலுள்ள அறிஞர்கள் இதனை அறிந்து வைத்திருக்கின்றார்கள் என்பது இந்த மக்(காவாசி)களுக்கு ஒரு சான்றாக இல்லையா? </span>
<span>26:198 (ஆயினும், இவர்களின் பிடிவாதமான நடத்தை எவ்வாறுள்ளது என்றால்) நாம் இதனை அரபியரல்லாத எவர் மீதாவது இறக்கி வைத்திருந்தால்,</span>
<span>26:199 மேலும், அவர் (தெள்ளிய அரபி வேதமாகிய) இதை அவர்களுக்கு ஓதிக்காட்டினால் அப்போதும் இவர்கள் அதனை நம்பக்கூடியவர்களாய் இருக்கமாட்டார்கள். </span>
<span>26:200 இதேபோன்று நாம் இ(ந்நல்லுரை)தனை குற்றம் புரிந்தோரின் இதயங்களில் செலுத்தி விடுகின்றோம். </span>
<span>26:201 துன்புறுத்தும் வேதனையை அவர்கள் கண்ணால் காணாத வரை அவர்கள், இதன் மீது நம்பிக்கை கொள்வதில்லை! </span>
<span>26:202 பிறகு, அவர்கள் உணராதிருக்கும் நிலையில் அது அவர்கள் மீது திடீரென வந்துவிழும்! </span>
<span>26:203 அப்போது அவர்கள் புலம்புவார்கள்: “எங்களுக்குச் சற்று அவகாசம் கிடைக்காதா?”</span>
<span>26:204 இவர்கள் நம்முடைய வேதனை சீக்கிரம் வரவேண்டும் என்றா அவசரப்படுகின்றார்கள்? </span>
<span>26:205 நீர் கொஞ்சம் சிந்தித்தீரா? பல்லாண்டுகள்வரை சுகமாய் வாழ்ந்திட இவர்களுக்கு நாம் அவகாசம் அளித்துவிட்டிருந்தாலும், </span>
<span>26:206 பின்னர் எதனைக்கொண்டு இவர்கள் அச்சுறுத்தப்படுகின்றார்களோ அது இவர்களிடம் வந்துவிடுமானால் </span>
<span>26:207 அப்போதுஇவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அந்த வாழ்க்கைச் சாதனங்கள் இவர்களுக்கு என்ன பயனைத் தரப்போகின்றன?</span>
<span>26:208 (பாருங்கள்:) நாம் எந்த ஊரையும் அழித்ததில்லை எச்சரிக்கை செய்பவர்கள் அவர்களிடம் வந்து, </span>
<span>26:209 நல்லுரை வழங்கும் பொறுப்பை நிறைவேற்றாத வரையில்! மேலும், நாம் கொடுமை புரிபவராயும் இருந்ததில்லை. </span>
<span>26:210 இதனை (தெளிவான இந்த வேதத்தை) ஷைத்தான்கள் எடுத்துக் கொண்டு இறங்கவில்லை. </span>
<span>26:211 அது அவர்களுக்குரிய பணியுமல்ல; அவ்வாறு செய்வதற்கும் அவர்களால் இயலாது! </span>
<span>26:212 திண்ணமாக, அவர்கள் இதனைச் செவியுறுவதிலிருந்தும்கூட விலக்கித் தூரமாக வைக்கப்பட்டுள்ளார்கள். </span>
<span>26:213 ஆகவே, (நபியே!) அல்லாஹ்வுடன் வேறு எந்தக் கடவுளையும் அழைக்காதீர்கள். அவ்வாறாயின் தண்டனை பெறுவோரில் நீரும் ஒருவராகிவிடுவீர். </span>
<span>26:214 உம்முடைய மிக நெருங்கிய உறவினர்களை எச்சரிக்கை செய்யுங்கள்;</span>
<span>26:215 மேலும், நம்பிக்கையாளர்களில் யார் உம்மைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களிடம் பணிவாய் நடந்து கொள்ளும்! </span>
<span>26:216 அவர்கள் உமக்குக் கீழ்ப்படியாது மாறு செய்தால், “நீங்கள் செய்யும் செயல்களுக்கு நான் பொறுப்பாளியல்லன்!” என்று அவர்களிடம் கூறிவிடும்!</span>
<span>26:217 மேலும், வல்லமை மிக்கவனும், பெரும் கிருபையாளனுமாகிய இறைவனையே முழுமையாகச் சார்ந்திரும்!</span>
<span>26:218 அவன் எத்தகையவன் எனில், நீர் எழும்போது உம்மைப் பார்க்கிறான். </span>
<span>26:219 மேலும், சிரம்பணிந்து வணங்குவோர்களிடையே உம் அசைவையும் பார்க்கின்றான். </span>
<span>26:220 திண்ணமாக, அவன் யாவற்றையும் செவியுறுபவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>26:221 (மக்களே!) ஷைத்தான்கள் யார்மீது இறங்குகிறார்கள் என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்கவா? </span>
<span>26:222 பெரும் பொய்யனாகிய, பாவம் புரியக்கூடிய ஒவ்வொருவன் மீதும் அவர்கள் இறங்குகின்றார்கள். </span>
<span>26:223 அவர்கள் கேள்விப்பட்டதை யெல்லாம் காதுகளில் ஊதி விடுகின்றார்கள். மேலும், அவர்களில் பெரும்பாலோர் பொய்யர்களே!</span>
<span>26:224 மேலும், கவிஞர்களையோ வழிகெட்டுப் போனவர்கள்தான் அவர்களைப் பின்பற்றுகின்றார்கள். </span>
<span>26:225 அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் அலைந்து திரிவதையும்,</span>
<span>26:226 தாங்கள் செய்யாதவற்றைக் கூறுவதையும் நீர் பார்க்கவில்லையா? </span>
<span>26:227 ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல் புரிந்தார்களோ, மேலும், அல்லாஹ்வை அதிகம் நினைத்தார்களோ, மேலும், தங்களுக்குக் கொடுமை இழைக்கப்பட்டபோது அதற்காக மட்டும் பழிவாங்கினார்களோ அவர்களைத் தவிர! மேலும், கொடுமை புரிகின்றவர்கள், அவர்கள் எந்த கதியை அடையப் போகின்றார்கள் என்பதை அதிவிரைவில் அறிந்துகொள்வார்கள். </span>
</div><div>
<span>அந்நம்ல்</span>
<span>27:1 தாஸீன். இவை குர்ஆன் மற்றும் தெளிவான வேதத்தின் வசனங்களாகும். </span>
<span>27:2 இந்த வேதம் நம்பிக்கையாளர்களுக்கு வழிகாட்டியும் நற்செய்தியுமாகும். </span>
<span>27:3 அவர்கள் எத்தகையவர்களெனில், தொழுகையை நிலை நாட்டுகின்றார்கள்; ஜகாத் கொடுக்கின்றார்கள். மேலும், மறுமையின் மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். </span>
<span>27:4 உண்மை யாதெனில், யார் மறுமையை நம்புவதில்லையோ அவர்களுக்கு அவர்களின் தீயசெயல்களை நாம் அழகுபடுத்திக் காட்டினோம். எனவே, அவர்கள் தடுமாறித் திரிகின்றார்கள். </span>
<span>27:5 அவர்கள் எத்தகையவர்கள் எனில், அவர்களுக்கு மோசமான தண்டனை இருக்கின்றது; மேலும், மறுமையில் அவர்கள்தாம் அனைவரையும்விட அதிக இழப்புக்குரியவர்களாய் இருப்பார்கள். </span>
<span>27:6 மேலும், (நபியே!) நுண்ணறிவாளனும் நன்கு அறிந்தவனுமான இறைவனிடமிருந்து திண்ணமாக இந்தக் குர்ஆனை நீர் பெற்றுக் கொண்டிருக்கின்றீர். </span>
<span>27:7 (அந்தச் சந்தர்ப்பத்தில் நடந்ததை இவர்களுக்கு நினைவூட்டுங்கள்) மூஸா தம் குடும்பத்தாரிடம் அப்பொழுது கூறினார்: “நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் இப்பொழுதே அங்கிருந்து ஏதேனும் செய்தியை உங்களிடம் கொண்டு வருகின்றேன். அல்லது தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு வருகின்றேன். நீங்கள் குளிர் காய்ந்து கொள்ளலாம்.” </span>
<span>27:8 அங்கு அவர் சென்றதும் ஓர் உருவிலி (அசரீரி) கேட்டது: “பாக்கியம் உள்ளவர்கள் ஆவர் இந்த நெருப்பில் உள்ளவரும் அதன் சுற்றுப்புறத்தில் இருப்பவர்களும்!” தூய்மையானவன் ஆவான்; அகிலத்தார் அனைவரையும் வளர்த்துப் பரிபாலிப்பவனாகிய அல்லாஹ்! </span>
<span>27:9 “மூஸாவே! நான்தான் வலிமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்! </span>
<span>27:10 மேலும், உமது கைத்தடியைச் சற்று எறியும்!” உடனே அது (அந்தத் தடி) பாம்பு போல் அசைவதை மூஸா கண்டபோது பின்னோக்கி ஓடினார்; திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. “மூஸாவே அஞ்சாதீர்! திண்ணமாக, என் முன்னிலையில் தூதர்கள் அஞ்சுவதில்லை;</span>
<span>27:11 ஏதேனும் தவறு செய்திருந்தாலே தவிர! பின்னர் தீமை செய்த பிறகு (தன் செயலை) அவர் நன்மையாக மாற்றிக் கொண்டால் திண்ணமாக நான் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையுள்ளவனாகவும் இருக்கின்றேன். </span>
<span>27:12 மேலும், நீர் உமது கையை உமது (சட்டையின்) மார்புப் பகுதியில் நுழைப்பீராக! அது பிரகாசிக்கக் கூடியதாய் வெளிப்படும் எவ்விதக் கேடுமின்றி!” இவை (இந்த இரு சான்றுகளும்) ஃபிர்அவ்னிடமும் அவனுடைய சமூகத்தாரிடமும் (கொண்டு செல்வதற்குரிய) ஒன்பது சான்றுகளில் உள்ளவையாகும். அவர்கள் மிகவும் தீய நடத்தை உடைய மக்களாய் இருக்கின்றார்கள். </span>
<span>27:13 ஆயினும், நம்முடைய மிகத் தெளிவான சான்றுகள் அம்மக்களின் முன் வந்தபோது இது அப்பட்டமான சூனியமாகும் என்று அவர்கள் கூறிவிட்டார்கள். </span>
<span>27:14 அவர்கள் முற்றிலும் அநியாயமான முறையிலும் ஆணவத்தினாலும்தான் அந்தச் சான்றுகளை மறுத்தார்கள். ஆனால், அவர்களுடைய உள்ளங்களோ அவற்றை ஏற்றுக்கொண்டிருந்தன. அந்தக் குழப்பவாதிகளின் முடிவு என்னவாயிற்று என்பதை இப்போது நீர் பார்த்துக் கொள்ளும். </span>
<span>27:15 (மற்றொரு புறம்) நாம் தாவூதுக்கும் ஸுலைமானுக்கும் ஞானத்தை வழங்கினோம். மேலும், அவ்விருவரும் கூறினார்கள்: “அல்லாஹ்வுக்கு நன்றி உரித்தாகட்டும்; அவனே, நம்பிக்கை கொண்ட தன் அடியார்கள் பலரைவிட எங்களுக்கு சிறப்பை வழங்கினான்.” </span>
<span>27:16 பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார். அவர் கூறினார்: “மக்களே! எங்களுக்குப் பறவைகளின் பேச்சுகள் கற்றுத் தரப்பட்டுள்ளன. எல்லாவிதமான பொருள்களும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. திண்ணமாக, இது (அல்லாஹ்வின்) வெளிப்படையான அருளாகும்.”</span>
<span>27:17 மேலும், ஸுலைமானுக்காக ஜின்கள், மனிதர்கள் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் படைகள் திரட்டப்பட்டிருந்தன. மேலும், அவை முறையான முழுமையான கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தன. </span>
<span>27:18 (ஒருமுறை ஸுலைமான் அப்படைகளுடன் சென்று கொண்டிருந்தார்.) அவர்கள் அனைவரும் எறும்புகளின் பள்ளத்தாக்கிற்கு வந்தபோது ஓர் எறும்பு கூறியது: “எறும்புகளே! உங்களுடைய புற்றுகளில் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும் அவருடைய படையினரும் தெரியாமல் உங்களை மிதித்துவிடக்கூடாது.” </span>
<span>27:19  ஸுலைமான் அது சொல்வதைக் கேட்டு புன்னகை பூத்து சிரிக்கலானார். மேலும், கூறினார்: “என் இறைவா! என் மீதும் என் பெற்றோர் மீதும் நீ புரிந்த பேருதவிக்கு நான் நன்றி செலுத்திக் கொண்டிருப்பதற்காகவும் நீ திருப்திப்படுகின்ற நற்செயலை செய்து வருவதற்காகவும் என்னை நீ கட்டுப்படுத்தி வைப்பாயாக! மேலும், உன் அருளால் என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்து வைப்பாயாக!”</span>
<span>27:20 (மற்றொரு சமயம்) ஸுலைமான் பறவைகளின் நிலைமைகளை ஆராய்ந்தார். பின்னர் கூறினார்: “என்ன விஷயம்? நான் ஹுத்ஹுத் மரங்கொத்தி பறவையைக் காணவில்லையே! அது எங்காவது காணாமல் போய்விட்டதா? </span>
<span>27:21 நிச்சயம் அதனை நான் கடுமையாகத் தண்டிப்பேன் அல்லது அதனை அறுத்துவிடுவேன். இல்லாவிட்டால் பொருத்தமான காரணத்தை என்னிடம் அது சமர்ப்பிக்க வேண்டும்.” </span>
<span>27:22 அதிக தாமதமின்றி அது வந்து கூறியது: “தங்கள் அறிவுக்கு வராத சில செய்திகளை நான் பெற்றிருக்கின்றேன். நான் ஸபஃ பற்றி உறுதியான செய்தியைத் தங்களிடம் கொண்டு வந்திருக்கின்றேன். </span>
<span>27:23 அங்கு அம்மக்கள் மீது ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணைக் கண்டேன். அவளுக்கு எல்லாவிதமான பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கம்பீரமான ஓர் அரியணையும் அவளுக்கு உள்ளது. </span>
<span>27:24 அவளும் அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வை விடுத்து சூரியனுக்கு சிரம் பணிவதையும் நான் கண்டேன்.” ஷைத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுக்கு அழகாக்கிக் காண்பித்து, நேரிய பாதையில் செல்லவிடாமல் அவர்களைத் தடுத்துவிட்டான். </span>
<span>27:25 இதனால் வானங்கள் மற்றும் பூமியில் மறைந்திருப்பவற்றை வெளிக்கொணர்பவனும், நீங்கள் மறைத்து வைப்பவற்றையும் வெளிப்படுத்துகின்றவற்றையும் நன்கறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு சிரம் பணிய வேண்டும் எனும் நேர்வழியை அவர்கள் அடையாதவர்களாய் இருக்கின்றார்கள். </span> 
<span>27:26 அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை. அவனே மாபெரும் அர்ஷûக்கு* உரிமையாளன் ஆவான். </span>
<span>27:27 ஸுலைமான் கூறினார்: “நீ உண்மை சொல்கிறாயா அல்லது பொய்யர்களோடு நீ சேர்ந்து விட்டாயா என்பதை இப் போதே நாம் பார்த்துவிடுகின்றோம். </span>
<span>27:28 என்னுடைய இந்தக் கடிதத்தை எடுத்துச் சென்று அவர்களிடம் போட்டுவிடு. பிறகு, அவர்களை விட்டு விலகி நின்று அவர்கள் என்ன பதில் நட வடிக்கையை எடுக்கப் போகின்றார்கள் என்பதை நீ கவனி!”</span>
<span>27:29 அரசி கூறினாள்: “அரசவைப் பிரமுகர்களே! மிக முக்கியமான கடிதம் ஒன்று என்னிடம் போடப்பட்டிருக்கின்றது. அது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது. </span>
<span>27:30 மேலும், அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால் அது தொடங்கப்பட்டுள்ளது. “எனக்கு எதிராக நீங்கள் ஆணவத்துடன் நடந்து கொள்ளாதீர்கள். </span>
<span>27:31 மேலும், முஸ்லிம்களாய் பணிந்தவர்களாய் என்னிடம் வரவேண்டும் எனும் வாசகம் அதில் உள்ளது.”</span>
<span>27:32 (கடிதத்தைப் படித்துக் காட்டிவிட்டு) அரசி கூறினாள்: “சமுதாயத் தலைவர்களே! என்னுடைய இந்த விவகாரத்தில் எனக்கு ஆலோசனை வழங்குங்கள். நீங்கள் இல்லாமல் எந்த விவகாரத்தையும் நான் முடிவு செய்வதில்லை.” </span>
<span>27:33 அவர்கள் பதிலளித்தார்கள்: “நாம் வல்லமை மிக்கவர்களாகவும் கடுமையாகப் போரிடக் கூடியவர்களாகவும் இருக்கின்றோம். இதற்கு மேல் இறுதி முடிவெடுப்பது உங்கள் பொறுப்பு. என்ன ஆணையிடுவது என்பதைத் தாங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்.”</span>
<span>27:34 அரசி கூறினாள்: “அரசர்கள் ஏதேனும் ஒரு நாட்டில் புகுந்தால் அதனை அழித்துவிடுவார்கள். மேலும், அங்கு கண்ணியத்துடன் வாழ்பவர்களைக் கேவலப்படுத்தி விடுவார்கள். இதைத்தான் அவர்கள் செய்கின்றார்கள். </span>
<span>27:35 எனவே, அவர்களுக்கு நான் ஓர் அன்பளிப்பை அனுப்பப் போகின்றேன். பின்னர், என்னுடைய தூதுவர்கள் என்ன செய்தியைப் பெற்றுத் திரும்பி வருகின்றார்கள் என்பதைப் பார்க்கலாம்.”</span>
<span>27:36 அ(ரசியின் தூது)வர் ஸுலைமானிடம் வந்ததும் ஸுலைமான் கேட்டார்: “நீங்கள் பொருளால் எனக்கு உதவி புரிந் திட விரும்புகின்றீர்களா? அல்லாஹ் எனக்கு வழங்கியிருப்பது உங்களுக்கு வழங்கியிருப்பதைவிட எவ்வளவோ அதிகமாகும். எனவே, உங்கள் அன்பளிப்பைக் கொண்டு நீங்களே மகிழ்ந்திருங்கள். </span>
<span>27:37 (தூதரே!) உம்மை அனுப்பியவர்களிடம் நீர் திரும்பிச் செல்லும். அவர்களால் எதிர்த்து நிற்க முடியாத அளவுக்குப் பெரும் படைகளைத் திரட்டிக்கொண்டு அவர்களிடம் நாம் திண்ணமாக வரப்போகின்றோம். அவர்கள் கேவலப்பட்டுப் போகும் வகையில் அங்கிருந்து அவர்களை இழிவானவர்களாக வெளியேற்றி விடுவோம்!”</span>
<span>27:38 ஸுலைமான் கேட்டார்: “அவையோரே! அவர்கள் கீழ்ப் படிந்தவர்களாய் என்னிடம் வருமுன் அவளுடைய அரியணையை உங்களில் யார் என்னிடம் கொண்டு வரமுடியும்?” </span>
<span>27:39 பலம் பொருந்திய ஒரு ஜின் கூறியது: “நீங்கள் உங்களுடைய இடத்தைவிட்டு எழுவதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்துவிடுகின்றேன். நான் அதற்கு வலிமை பெற்றவனாகவும், நம்பிக்கைக்குரியவனாகவும் இருக்கின்றேன்.” </span>
<span>27:40 அவர்களுள் ஓரளவு வேத அறிவைப் பெற்றிருந்த ஒருவர் “நீங்கள் கண்மூடித் திறப்பதற்குள் அதை உங்களிடம் நான் கொண்டு வந்து விடுகின்றேன்” என்று கூறினார். அவ்வாறே அவ்வரியணை தம்மிடத்தில் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதுமே ஸுலைமான் (உரக்கக்) கூறினார்: “இது என் இறைவனின் அருட்கொடையாகும்; நான் நன்றி செலுத்துகின்றேனா, நன்றி கொல்கின்றேனா என என்னை அவன் சோதிப்பதற்காக! மேலும், யாரேனும் நன்றி செலுத்தினால் அவருடைய நன்றி அவருக்கே நன்மை தரும். தவிர, யாரேனும் நன்றி கொன்றால் திண்ணமாக, என்னுடைய இறைவன் தேவைகள் அற்றவனாகவும், பெரும் கண்ணியமிக்கவனாகவும் இருக்கின்றான்!”</span>
<span>27:41 ஸுலைமான் கூறினார்: “அரசியின் அரியணையை அடையாளம் காண முடியாத வகையில் அவள்முன் வைத்து விடுங்கள். உண்மை நிலையைத் தெரிந்து கொள்கின்றாளா, அல்லது சரியான வழியை அறிந்து கொள்ளாதவர்களுள் ஒருத்தியாய் இருக்கின்றாளா என்று நாம் பார்த்துவிடுவோம்.” </span>
<span>27:42 அரசி வருகை தந்ததும் ‘உம்முடைய அரியணை இப்படித்தான் உள்ளதா?’ என்று அவளிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவள் கூறினாள்: “இதுவோ, அதைப் போலவே இருக்கின்றது. நாங்கள் முன்பே அறிந்திருந்தோம். சிரம் தாழ்த்தி கீழ்ப்படிந்தவர்களாய் இருந்தோம் (அல்லது முஸ்லிம்களாகி விட்டிருந்தோம்.)” </span>
<span>27:43 அல்லாஹ்வை விட்டுவிட்டு அவள் எந்த தெய்வங்களை வணங்கிக் கொண்டிருந்தாளோ அந்த வணக்கம்தான் (நம்பிக்கை கொள்ளவிடாமல்) அவளைத் தடுத்துவிட்டிருந்தது. ஏனெனில், அவள் நிராகரிக்கக்கூடிய ஒரு சமூகத்தைச் சேர்ந்தவளாய் இருந்தாள். </span>
<span>27:44 “மாளிகையினுள் நுழைவீராக!” என்று அவளிடம் கூறப்பட்டது. அதனைப் பார்த்தபோது தண்ணீர்த் தடாகம் என்று கருதிக் கொண்டாள். (இறங்குவதற்காகத்) தன் உடையை கெண்டைக்கால்களுக்கு மேல் உயர்த்தினாள். ஸுலைமான் கூறினார்: “இது பளபளக்கும் கண்ணாடி மாளிகையின் தரையாகும்!” அதற்கு அவள் கூறினாள்: “என் இறைவனே! (இன்று வரை) எனக்கு நானே கொடுமை புரிந்து கொண்டிருந்தேன். இனி நான் ஸுலைமானுடன் சேர்ந்து அகிலமனைத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வாழ ஏற்றுக் கொள்கின்றேன்!”</span>
<span>27:45 மேலும், நாம் ஸமூத் சமூகத்தாரிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை “அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்” (என்னும் செய்தியுடன் தூதராக) அனுப்பினோம். அப்போது அவர்கள் இரு குழுவினராய்ப் பிரிந்து தர்க்கம் புரியத் தொடங்கிவிட்டார்கள். </span>
<span>27:46 ஸாலிஹ் கூறினார்: “என் சமூகத்தினரே! நன்மை வருமுன் தீமைக்காக ஏன் அவசரப்படுகின்றீர்கள்? நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரக்கூடாதா? உங்கள் மீது கருணை பொழியப்படக்கூடுமே!” </span>
<span>27:47 அதற்கவர்கள், “நாங்கள் உம்மையும் உம்முடன் இருப்பவர்களையும் துர்ச் சகுனமாகக் கருதுகின்றோம்” என்றார்கள். ஸாலிஹ் பதிலளித்தார்: “உங்களின் (நல்ல, கெட்ட) சகுனம் பற்றிய விஷயம் அல்லாஹ்விடம் உள்ளது. உண்மை யாதெனில், நீங்கள் சோதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்!”</span>
<span>27:48 அந்நகரில் ஒன்பது கலகத் தலைவர்கள் இருந்தனர். அவர்கள் நாட்டில் குழப்பத்தைப் பரப்பிக்கொண்டும், மேலும், எவ்விதச் சீர்திருத்தத்தை செய்யாமலும் இருந்தனர். </span>
<span>27:49 அவர்கள் தமக்கிடையே கூறினார்கள்: “நீங்கள் இறைவன் மீது சத்தியம் செய்து சபதம் எடுத்துக் கொள்ளுங்கள் நாம் ஸாலிஹ் மீதும் அவருடைய குடும்பத்தார் மீதும் இரவில் தாக்குதல் நடத்துவோம் என்று! பிறகு அவருடைய பாதுகாவலரிடம் கூறிவிடுவோம் ஸாலிஹுடைய குடும்பம் கொல்லப்பட்ட சமயத்தில் நாங்கள் அங்கு இருக்கவில்லை. நாங்கள் உண்மைதான் கூறுகின்றோம்.” </span>
<span>27:50 அவர்கள் செய்தது இந்த சூழ்ச்சிதான்! பிறகு, அவர்கள் அறியாத வகையில் நாம் வேறொரு சூழ்ச்சியைச் செய்தோம். </span>
<span>27:51 அவர்களுடைய சூழ்ச்சியின் கதி என்னவாயிற்று என்பதைப் பார்த்துக் கொள்ளும். அவர்களையும் அவர்களுடைய சமுதாய மக்கள் அனைவரையும் நாம் அழித்துவிட்டோம்; </span>
<span>27:52 அவர்கள் செய்த கொடுமையின் காரணமாக! அதோ! அவர்களுடைய இல்லங்கள் வெறுமையாய்க் கிடக்கின்றன. திண்ணமாக, அறியக்கூடிய மக்களுக்கு இதில் (படிப்பினை மிக்க) சான்று இருக்கின்றது. </span>
<span>27:53 மேலும், எவர்கள் நம்பிக்கை கொண்டு மாறு செய்வதை விட்டு விலகியும் இருந்தார்களோ அவர்களை நாம் காப்பாற்றிக் கொண்டோம். </span>
<span>27:54 மேலும், லூத்தை நாம் அனுப்பினோம். அவர்தம் சமூகத்தாரிடம் கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் கண்களால் பார்த்துக் கொண்டே ஒழுக்கக் கேடான செயல்களைச் செய்கின்றீர்களா? </span>
<span>27:55 என்ன, பெண்களை விட்டுவிட்டு காம உணர்வைத் தீர்ப்பதற்காக ஆண்களையா தேடி அலைகின்றீர்கள்? உண்மையில் நீங்கள் மிகவும் அறிவீனமான செயல்புரியும் மக்கள் ஆவீர்.” </span>
<span>27:56 ஆயினும், அவருடைய சமூகத்தார் இதைத் தவிர வேறு எந்த பதிலையும் கூறவில்லை; அது இதுதான்: “வெளியேற்றுங்கள் லூத்துடைய குடும்பத்தாரை, உங்களுடைய ஊரைவிட்டு! இவர்கள் பெரிய பரிசுத்தவான்கள்!” (என்று எள்ளினர்). </span>
<span>27:57 இறுதியில், லூத்தையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் காப்பாற்றிக் கொண்டோம்; அவருடைய மனைவியைத் தவிர! அவள் பின்தங்கியவளாகிவிட வேண்டுமென நாம் முடிவு செய்துவிட்டிருந்தோம். </span>
<span>27:58 மேலும், பொழியச் செய்தோம் அம்மக்களின மீது ஒரு மழையை! எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த மக்களுக்கு அது மிகவும் கெட்ட மழையாய் இருந்தது!</span>
<span>27:59 (நபியே!) நீர் கூறும்: “புகழ் அல்லாஹ்வுக்கே உரியது! மேலும், சாந்தி உண்டாகுக, அவன் தேர்ந்தெடுத்த அவனுடைய அடியார்கள் மீது!” (இவர்களிடம் கேளும்:) “அல்லாஹ் மேலானவனா அல்லது அவனுடன் இந்த மக்கள் இணைவைத்துக் கொண்டிருக்கும் தெய்வங்கள் மேலானவையா?”</span> 
<span>27:60 வானங்களையும், பூமியையும் படைத்தவனும் மேலும், உங்களுக்காக வானத்திலிருந்து மழையைப் பொழிய வைத்தவனும் பிறகு, அதன் மூலம் அழகான தோட்டங்களை வளரச் செய்தவனும் யார்? அவற்றின் மரங்களை முளைக்கச் செய்வதற்கு உங்களால் இயலாதிருந்ததே! அல்லாஹ்வுடன் வேறேதாவது கடவுளும் (இப்பணிகளில் பங்கு கொண்டு) இருக்கின்றாரா? (இல்லை!) மாறாக, இதே மக்கள்தாம் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்து சென்று கொண்டிருக்கின்றார்கள். </span>
<span>27:61 மேலும், பூமியைத் தங்குமிடமாக்கியவனும் அதனிடையே ஆறுகளை ஓடச் செய்தவனும் அதற்கு (மலைகளெனும்) முளைகளை அமைத்தவனும், மேலும், இரு கடல்களின் ஜலசந்திகளுக்கிடையில் தடுப்பை ஏற்படுத்தியவனும் யார்? அல்லாஹ்வுடன் வேறேதாவது கடவுளும் (இப்பணிகளில் பங்கு கொண்டு) இருக்கின்றாரா? இல்லவே இல்லை! மாறாக, இவர்களில் பெரும்பாலோர் அறிவற்றவர்களாய் இருக்கின்றார்கள். </span>
<span>27:62 துயரங்களுக்கு ஆளானவர் இறைஞ்சும்போது அவருடைய இறைஞ்சுதலைக் கேட்டு பதிலளிப்பவன் யார்? மேலும், அவருடைய துயரத்தைக் களைபவன் யார்? மேலும், உங்களைப் பூமியில் பிரதிநிதிகளாய் ஆக்குகிறவன் யார்? அல்லாஹ்வுடன் வேறு எந்த ஒரு கடவுளேனும் (இப்பணிகளைச் செய்யக்கூடியதாய்) உள்ளதா? நீங்கள் மிகக் குறைவாகவே சிந்திக்கின்றீர்கள்!</span>
<span>27:63 தரை மற்றும் கடலின் இருள்களில் உங்களுக்கு வழிகாட்டுபவன் யார்? மேலும், தன்னுடைய அருளுக்கு முன்னர் காற்றை நற்செய்தியாக அனுப்புகின்றவன் யார்? அல்லாஹ்வுடன் வேறு எந்தக் கடவுளேனும் (இப்பணியைச் செய்துகொண்டு) இருக்கின்றதா? அல்லாஹ் மிக உயர்ந்தவனும் மேலானவனும் ஆவான்; இவர்கள் செய்கின்ற இணைவைப்புச் செயல்களை விட்டு!</span>
<span>27:64 முதன் முறையாய்ப் படைக்கின்றவனும் பிறகு, மீண்டும் படைக்கப் போகின்றவனும் யார்? மேலும், வானம் மற்றும் பூமியிலிருந்து உங்களுக்கு உணவளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் வேறு எந்த ஒரு கடவுளேனும் (இப்பணியில் பங்கு கொண்டு) உள்ளதா? கூறுவீராக: “கொண்டு வாருங்கள் உங்கள் அத்தாட்சியை, நீங்கள் உண்மையாளர்களாய் இருப்பின்!”</span>
<span>27:65 இவர்களிடம் கூறும்: “அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ள எவரும் மறைவான உண்மைகளை அறியமாட்டார். மேலும், (உங்களுடைய கடவுளர்களான) அவர்கள் எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதைக்கூட அறிவதில்லையே!”</span>
<span>27:66 உண்மை யாதெனில், மறுமையைப் பற்றிய அறிவு இம் மக்களை விட்டு மறைந்தே போய்விட்டது. இல்லை, இவர்கள் அதைப் பற்றிய சந்தேகத்தில் உழல்கின்றார்கள்! இன்னும் சொல்வதானால், மறுமையைப் பற்றி இவர்கள் குருடர்களாயிருக்கின்றார்கள். </span>
<span>27:67 மேலும், இந்நிராகரிப்போர் கூறுகின்றார்கள்: “நாங்களும் எங்களுடைய மூதாதையர்களும் மண்ணாகிப் போய்விட்டால் நாங்கள் உண்மையிலேயே மண்ணறைகளிலிருந்து எழுப்பப்படுவோமா? </span>
<span>27:68 இந்த விஷயங்கள் பற்றி எங்களுக்கு (அதிகம்) எச்சரிக்கப்பட்டுள்ளது; முன்னர் எங்கள் மூதாதையர்களும் எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர். உண்மையில் இவை முன்னோர்களின் காலத்திலிருந்து கேள்விப்பட்டு வருகின்ற வெறும் கட்டுக்கதைகளே தவிர வேறில்லை!” </span>
<span>27:69 கூறுவீராக: “சற்று பூமியில் சுற்றித் திரிந்து குற்றவாளிகளின் கதி என்னவாயிற்று என்பதைப் பாருங்கள்.”</span>
<span>27:70 (நபியே!) இவர்களின் நிலை குறித்து வருந்தாதீர். இவர்கள் செய்யும் சூழ்ச்சிகளால் நீர் மனக்கஷ்டமும் அடையாதீர்!</span>
<span>27:71 இவர்கள் கேட்கின்றனர்: “நீங்கள் உண்மையாளர்களாயின் இந்த எச்சரிக்கை எப்போது நிறைவேறும்?” </span>
<span>27:72 நீர் கூறும்: “எந்த ஒரு தண்டனைக்காக நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்களோ அதன் ஒரு பகுதி உங்களுக்கு நெருக்கமாக வந்து விட்டிருந்தாலும் அதில் வியப்பொன்றுமில்லை!” </span>
<span>27:73 உண்மையில் உம் அதிபதி மக்களின் மீது பெரிதும் அருள் புரிபவனாக இருக்கின்றான். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. </span>
<span>27:74 அவர்களுடைய நெஞ்சங்கள் மறைத்திருக்கின்றவற்றையும் அவை வெளிப்படுத்துகின்றவற்றையும் திண்ணமாக, உம் இறைவன் நன்கறிகின்றான். </span>
<span>27:75 வானத்திலும் பூமியிலும் மறைந்துள்ள எந்த ஒரு பொருளும் ஒரு தெளிவான பதிவேட்டில் எழுதப்படாமல் இல்லை. </span>
<span>27:76 உண்மை இதுவே: இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ள பெரும்பாலான விஷயங்களின் உண்மை நிலையை அவர்களுக்கு இந்தக் குர்ஆன் எடுத்துரைக்கின்றது! </span>
<span>27:77 மேலும், அது இறைநம்பிக்கையாளர்களுக்கு நேர்வழி காட்டியாகவும், கருணையாகவும் இருக்கின்றது. </span>
<span>27:78 (இதேபோன்று) திண்ணமாக, உம் இறைவன் இந்த மக்களிடையேயும் தன்னுடைய கட்டளையால் தீர்ப்பு வழங்குவான். அவன் யாவற்றையும் மிகைத்தவனாகவும், நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். </span>
<span>27:79 எனவே (நபியே!) அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப் பீராக! திண்ணமாக, நீர் தெளிவான உண்மையில் இருக்கின்றீர்! </span>
<span>27:80 இறந்தவர்களை உம்மால் கேட்கச் செய்ய முடியாது. புறங்காட்டியோடும் செவிடர்களுக்கும் (உம்முடைய) அழைப்பை எடுத்துரைக்க முடியாது. </span>
<span>27:81 குருடர்களை வழிகேட்டிலிருந்து மீட்டு நேர்வழியில் சேர்த்திடவும் உம்மால் முடியாது! எவர்கள் நம்முடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொள்கின்றார்களோ, மேலும், கீழ்ப்படிபவர்களாயும் விளங்குகின்றார்களோ அவர்களையே உம்மால் செவியேற்கச் செய்ய முடியும். </span>
<span>27:82 மேலும், அவர்கள் மீது நம்முடைய ஆணை நிறைவேறும் நேரம் வந்துவிட்டால் நாம் அவர்களுக்கு பூமியிலிருந்து ஒரு மிருகத்தை வெளிப்படுத்துவோம். மக்கள் நம்முடைய வசனங்கள் மீது உறுதியான நம்பிக்கை கொள்ளாமலிருந்தார்கள் என்று அது அவர்களிடம் எடுத்துக்கூறும். </span>
<span>27:83 மேலும், சற்று சிந்தித்துப் பாருங்கள்; அந்நாளில் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தார்களோ அவர்களை படைபடையாகத் திரட்டிக் கொண்டு வருவோம். பிறகு, அவர்கள் (வகை மற்றும் தகுதியைப் பொறுத்துப் பல படித்தரங்களில்) முறைப்படுத்தப்படுவார்கள். </span>
<span>27:84 இவ்வாறாக, அவர்கள் அனைவரும் வந்துவிடும்போது (இறைவன் அவர்களிடம்) வினவுவான்: “என்னுடைய சான்றுகளை நீங்கள் முழுமையாக அறிந்து கொள்ளாத நிலையில் அவற்றைப் பொய்யென்று கூறினீர்களா? இல்லை எனில், நீங்கள் வேறு என்னதான் செய்து கொண்டிருந்தீர்கள்?” </span>
<span>27:85 மேலும், அவர்கள் கொடுமை செய்த காரணத்தினால் வேதனை பற்றிய கட்டளை அவர்கள் மீது நிறைவேற்றப்படும். அப்போது, அவர்களால் எதுவும் பேச முடியாது. </span>
<span>27:86 இரவை அவர்களுக்கு நிம்மதி அளிக்கக் கூடியதாகவும், பகலைப் பிரகாசிக்கக் கூடியதாகவும் ஆக்கியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? இறைநம்பிக்கை கொண்ட சமூகத்தினர்க்கு இவற்றில் அநேக சான்றுகள் இருந்தன!</span>
<span>27:87 மேலும், அந்நாளில் எக்காளம் ஊதப்படும். அப்போது, வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைவரும் பெரும் திகில் அடைவார்கள். அந்த திகிலில் இருந்து எவர்களை அல்லாஹ் காப்பாற்ற நாடுவானோ அவர்களைத் தவிர! மேலும், அனைவரும் அடங்கி ஒடுங்கியவர்களாக அவன் திருமுன் வருவார்கள். </span>
<span>27:88 (இன்று) நீர் மலைகளைப் பார்க்கும்போது அவை நன்கு நிலைகொண்டிருப்பதாகக் கருதுகின்றீர். ஆனால் (அன்றைய நாளில்) அவை மேகங்களைப் போன்று பறந்தோடிக் கொண்டிருக்கும்! ஒவ்வொரு பொருளையும் நுண்ணறிவினால் செம்மைப்படுத்திய அல்லாஹ்வுடைய பேராற்றலின் விந்தை இது! நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்பதை திண்ணமாக அவன் நன்கறிந்தவன். </span>
<span>27:89 எவர் நன்மையைக் கொண்டு வருகின்றாரோ அவருக்கு அதைவிடச் சிறந்த பிரதிபலன் கிடைக்கும். அத்தகையவர்கள் அந்நாளின் திகிலில் இருந்து பாதுகாக்கப்பட்டிருப்பார்கள். </span>
<span>27:90 ஆனால், எவர்கள் தீமையைக் கொண்டு வருகின்றார்களோ அவர்கள் அனைவரும் முகங்குப்புற நெருப்பில் வீசி எறியப்படுவார்கள். நீங்கள் இதைத் தவிர ஏதேனும் கூலி பெறுவீர்களா என்ன செய்த வினைக்கு ஏற்பவே அனுபவிப்பதைத் தவிர?</span>
<span>27:91 (நபியே! இவர்களிடம் கூறும்:) “எனக்கு இவ்வாறுதான் கட்டளை இடப்பட்டுள்ளது: இந்த (மக்கமா) நகரின் அதிபதிக்கு கீழ்ப்படியுங்கள்; அவனே அதை சங்கை மிக்கதாக ஆக்கினான். மேலும், ஒவ்வொரு பொருளுக்கும் அவனே உரிமையாளனாய் இருக்கின்றான். மேலும், நான் அடிபணிந்தவனாக (முஸ்லிமாக) விளங்க வேண்டும் என்றும், </span>
<span>27:92 இந்தக் குர்ஆனை ஓதிக் காண்பிக்க வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளேன்.” எவர் நேர்வழியை மேற்கொள்கின்றாரோ அவர் தம்முடைய நன்மைக்காகவே நேர்வழியை மேற்கொள்கின்றார். மேலும், எவன் வழிபிறழ்ந்து போகின்றானோ அவனிடம் கூறிவிடுவீராக: “நான் எச்சரிக்கை செய்யக்கூடியவனாய் மட்டுமே இருக்கின்றேன்.” </span>
<span>27:93 மேலும், (இம்மக்களிடம்) கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அதிவிரைவில் தன்னுடைய சான்றுகளை அவன் உங்களுக்குக் காண்பிப்பான். அப்போது அவற்றை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.” மேலும், உம்முடைய இறைவன் நீங்கள் செய்பவற்றைக் கவனிக்காமல் இல்லை!</span>
</div><div>
<span>அல்கஸஸ்</span>
<span>28:1 தாஸீம்மீம். </span>
<span>28:2 இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும். </span>
<span>28:3 நம்பிக்கை கொள்ளும் மக்களின் நலனுக்காக மூஸா மற்றும் ஃபிர்அவ்னைப் பற்றிய சில செய்திகளை மிகத் துல்லியமாக உங்களுக்கு நாம் எடுத்துரைக்கின்றோம். </span>
<span>28:4 திண்ணமாக, ஃபிர்அவ்ன் பூமியில் வரம்பு மீறி நடந்துகொண்டான். அதில் வசிப்பவர்களைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்தான். அவர்களில் ஒரு பிரிவினரை இழிவுபடுத்தினான். அவர்களுடைய ஆண் மக்களைக் கொன்றான்; அவர்களின் பெண் மக்களை உயிரோடு விட்டுவிட்டான். உண்மையில் அவன் அராஜகம் புரிவோரைச் சேர்ந்தவனாக இருந்தான். </span>
<span>28:5 மேலும், எவர்கள் பூமியில் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அவர்கள் மீது நாம் அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அவர்களை வாரிசுகளாக்கி பூமியில் ஆட்சியதிகாரத்தை அவர்களுக்கு வழங்கவும் நாம் நாடியிருந்தோம். </span>
<span>28:6 மேலும், அவர்களின் மூலமாக ஃபிர்அவ்னுக்கும், ஹாமானுக்கும், அவ்விருவரின் படையினருக்கும் அவர்கள் எதைப் பற்றி அஞ்சிக் கொண்டிருந்தார்களோ அதை நாம் காண்பித்துக் கொடுக்கவும் நாடியிருந்தோம். </span>
<span>28:7 மேலும், நாம் மூஸாவின் தாயாருக்கு அறிவித்தோம், “இக் குழந்தைக்குப் பாலூட்டுவீராக! இனி, அதன் உயிருக்கு ஆபத்து வரும் என்று நீர் அஞ்சினால் அதனை ஆற்றில் விட்டுவிடும். நீர் யாதொரு அச்சமும், கவலையும் கொள்ளவேண்டாம். திண்ணமாக நாம், அவரை உம்மிடமே திரும்பக் கொண்டுவந்துவிடுவோம். மேலும், அவரைத் தூதர்களில் ஒருவராயும் ஆக்குவோம்!” </span>
<span>28:8 இறுதியில், ஃபிர்அவ்னுடைய குடும்பத்தார் அக்குழந்தையை (ஆற்றிலிருந்து) கண்டெடுத்தார்கள். அக்குழந்தை அவர்களுக்கு எதிரியாகவும், அவர்களின் கவலைக்குக் காரணமாகவும் அமையவேண்டும் என்பதற்காக! உண்மையில் ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவருடைய படையினரும் (தங்கள் திட்டத்தில்) பெரிதும் தவறிவிட்டிருந்தார்கள். </span>
<span>28:9 ஃபிர்அவ்னுடைய மனைவி (அவனிடம்) கூறினாள்: “இக்குழந்தை எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாய் உள்ளது. நீங்கள் இதனைக் கொன்றுவிடாதீர்கள். இக்குழந்தை நமக்குப் பயனளிக்கலாம். அல்லது இதனை நாம் மகனாகத் தத்தெடுத்துக் கொள்ளலாம்.” அவர்கள் (விளைவை) உணராதிருந்தார்கள். </span>
<span>28:10 அங்கே.. மூஸாவுடைய தாயாரின் உள்ளம் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தது. (நமது வாக்குறுதியின்மீது) நம்பிக்கை கொள்வோரில் அவரும் ஒருவராக வேண்டும் என்பதற்காக, நாம் அவருடைய உள்ளத்தை உறுதிப்படுத்தவில்லையானால் நிச்சயம் அக்குழந்தையின் இரகசியத்தை அவர் வெளிப்படுத்த முனைந்திருப்பார். </span>
<span>28:11 அவர் அக்குழந்தையின் சகோதரியிடம் கூறினார்: “அதைப் பின்தொடர்ந்தே செல்!” அவ்வாறே (எதிரிகள்) அறிந்து கொள்ளாத வகையில் தூரத்திலிருந்து அக்குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  </span>
<span>28:12 மேலும், இதர பெண்களின் மார்பகங்களிலிருந்து பால் அருந்துவதை விட்டு முன்னரே, அக்குழந்தையைத் தடுத்திருந்தோம். (இந்நிலையைக் கவனித்து) அச்சிறுமி கூறினாள்: “இக்குழந்தையைப் பரிபாலித்து வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வீட்டாரைப்பற்றி நான் உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா?” </span>
<span>28:13 இவ்வாறு நாம் மூஸாவை அவருடைய தாயாரிடம் திரும்பக் கொண்டு வந்தோம்; அவர் கண்குளிர்ந்து, கவலை மறந்திருப்பதற்காகவும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதென்று அறிந்து கொள்வதற்காகவும்தான்! ஆயினும், மக்களில் பெரும்பாலோர் இதனை அறிவதில்லை. </span>
<span>28:14 மேலும், மூஸா வாலிபத்தை அடைந்து முழு வளர்ச்சியும் பெற்றபோது, நாம் அவருக்கு நுண்ணறிவையும் ஞானத்தையும் வழங்கினோம். நன்மக்களுக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குகின்றோம். </span>
<span>28:15 (ஒருநாள்) நகர மக்கள் கவனக்குறைவாய் இருந்தபோது அவர் நகரினுள் நுழைந்தார். அங்கு இருவர் சண்டையிட்டுக்கொண்டிருப்பதைக் கண்டார். ஒருவன் அவருடைய சமூகத்தைச் சேர்ந்தவன். மற்றவன் அவருடைய எதிரிகளின் சமுதாயத்தைச் சேர்ந்தவன். அவருடைய சொந்த சமுதாயத்தைச் சேர்ந்தவன், எதிர் சமுதாயத்தைச் சேர்ந்தவனுக்கு எதிராகத் தனக்கு உதவும்படி இவரை அழைத்தான். மூஸா அவனை ஓங்கிக் குத்தினார்; அவன் கதையை முடித்தார். (இவ்வாறு நிகழ்ந்ததும்) மூஸா கூறினார்: “இது ஷைத்தானின் செயல்; அவன் கடும் பகைவனும், வெளிப்படையாக வழி கெடுப்பவனுமாவான்.” </span>
<span>28:16 மூஸா இறைஞ்சினார்: “என் இறைவா! என்மீது நானே கொடுமை இழைத்துக் கொண்டேன். என்னை மன்னித்தருள்வாயாக!” அல்லாஹ் அவருக்கு மன்னிப்பு வழங்கினான். அவன் பெரிதும் மன்னிப்பவனாகவும் கிருபை புரிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>28:17 மூஸா உறுதியாகக் கூறினார்: “என் இறைவா! நீ என்மீது அருளிய இந்த உபகாரத்திற்காக இனி ஒருபோதும் நான், குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்கமாட்டேன்.”</span>
<span>28:18 மறுநாள் அதிகாலையில் அஞ்சியபடியும் (நாற்புறங்களிலிருந்து) அபாயத்தை உணர்ந்தவாறும் நகரில் அவர் போய்க் கொண்டிருந்தார். அப்போது நேற்றைய தினம் அவரை உதவிக்கு அழைத்த அதே மனிதன் இன்றும் உதவிக்காக அழைத்துக் கொண்டிருப்பதைக் காண்கின்றார். “நிச்சயம் நீ வெளிப்படையான வழிகேடன்தான்” என்று மூஸா அவனை நோக்கிக் கூறிவிட்டு, </span>
<span>28:19 தங்கள் எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்த மனிதனைத் தாக்க விரும்பியபோது அவன் உரக்கக் கூறினான்: “மூஸாவே! நேற்று ஒருவனை நீர் கொலை செய்தது போல இன்று என்னையும் கொலை செய்யலாமென்று கருதுகின்றீரா? நீர் இந்த நாட்டில் அடக்குமுறையாளராய் இருக்க நினைக்கின்றீரே தவிர, சீர்திருத்தவாதியாய்த் திகழ விரும்பவில்லை.” </span>
<span>28:20 (இதன் பின்னர்) நகரின் கோடியிலிருந்து ஒருவர் ஓடிவந்து கூறினார்: “மூஸாவே! தலைவர்கள் உம்மைக் கொல்வதற்குச் சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே, நீர் இங்கிருந்து வெளியேறிவிடும். நான் உமக்கு நலம் நாடுபவனாய் இருக்கின்றேன். </span>
<span>28:21 (இச்செய்தியைக் கேட்டதும்) மூஸா அஞ்சியவராய் முழு எச்சரிக்கையோடு வெளியேறிவிட்டார். மேலும் இறைஞ்சினார்: “என் இறைவா! என்னை கொடுமையாளர்களிடமிருந்து காப்பாற்றுவாயாக!”</span>
<span>28:22 மூஸா (எகிப்திலிருந்து வெளியேறி) மத்யனை நோக்கித் திரும்பியபோது “என்னுடைய இறைவன் எனக்கு நேரான வழியைக் காட்டக்கூடும்!” என்று கூறினார். </span>
<span>28:23 மேலும், அவர் மத்யனுடைய கிணற்றுக்கு அருகில் வந்தபோது, அங்கு மக்கள் பலர் தங்களுடைய கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களைவிட்டு சற்று விலகி ஒருபுறம் இரண்டு பெண்கள் தம்முடைய கால்நடைகளைத் தடுத்து வைத்துக்கொண்டிருப்பதையும் கண்டார். மூஸா (அப்பெண்களிடம்) “உங்களுடைய பிரச்னை என்ன?” என்று கேட்டார். அவர்கள் கூறினார்கள்: “இந்த இடையர்கள் (தங்கள் கால்நடைகளை) திரும்ப ஓட்டிச் செல்லும் வரை (எங்களுடைய கால்நடைகளுக்கு) எங்களால் தண்ணீர் புகட்ட முடிவதில்லை. மேலும், எங்கள் தந்தையோ மிகவும் வயதானவராய் இருக்கின்றார்” </span>
<span>28:24 (இதைக் கேட்ட) மூஸா, அவர்களுடைய கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டினார். பிறகு, ஒரு நிழலில் போய் அமர்ந்து கூறினார்: “என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளுகின்ற நன்மை எதுவானாலும் சரி, நான் அதன் பக்கம் தேவையுடையவனாக இருக்கின்றேன்” </span>
<span>28:25 (சிறிது நேரம்கூட செல்லவில்லை, அதற்குள்) அவ்விரு பெண்களில் ஒருத்தி நாணத்தோடு அவரிடம் நடந்து வந்து கூறினாள்: “என்னுடைய தந்தை உங்களை அழைக்கின்றார். நீங்கள் எங்களுடைய கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டியதற்கான கூலியைத் தங்களுக்குத் தருவதற்காக!” மூஸா அவரிடம் வந்தார். மேலும், தனக்கு நேர்ந்த அனைத்து நிலைமைகளையும் அவரிடம் எடுத்துரைத்தபோது அவர் கூறினார்: “அஞ்சாதீர்! கொடுமையாளர்களிடமிருந்து நீர் தப்பித்துவிட்டீர்!”</span>
<span>28:26 அவ்விரு பெண்களில் ஒருத்தி தன் தந்தையிடம் கூறினாள்: “என் தந்தையே! இவரைப் பணியாளாய் வைத்துக் கொள்ளுங்கள். எவர் வலிமை மிக்கவராயும் நம்பிக்கைக்குரியவராயும் இருக்கின்றாரோ அப்படிப்பட்டவர்தான் நீங்கள் பணியில் அமர்த்திக்கொள்வதற்கு மிகவும் சிறந்தவராவார்.” </span>
<span>28:27 அப்பெண்ணின் தந்தை மூஸாவிடம் கூறினார்: “என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருத்தியை உமக்குத் திருமணம் செய்து தர நான் விரும்புகின்றேன். நீர் எட்டாண்டு காலம் எனக்கு ஊழியம் செய்யவேண்டும் என்கின்ற நிபந்தனையின் பேரில்! ஆனால், நீர் பத்து ஆண்டாக நிறைவு செய்தால் அது உம்முடைய விருப்பம்! </span>
<span>28:28 நான் உமக்கு சிரமம் கொடுக்க விரும்பவில்லை. இறைவன் நாடினால், என்னை நல்லவராக நீர் காண்பீர்.” அதற்கு மூஸா பதிலளித்தார்: “எனக்கும் உங்களுக்கும் இடையில் இந்த விஷயம் முடிவாகிவிட்டது. இவ்விரு தவணைகளில் எதனை நான் நிறைவேற்றினாலும் (அதன் பிறகு) எவ்விதத்திலும் எனக்கு சிரமம் தரக்கூடாது. மேலும், நாம் பேசித் தீர்மானித்திருக்கின்ற இந்த ஒப்பந்தத்துக்கு அல்லாஹ் சாட்சியாக இருக்கின்றான்.”</span>
<span>28:29 மூஸா தவணையை பூர்த்தியாக்கி விட்டுத் தம் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு சென்றபோது ‘தூர்’ அருகில் நெருப்பைக் கண்டார். அவர் தம்முடைய குடும்பத்தாரிடம் கூறினார்: “நில்லுங்கள்! நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் அங்கிருந்து ஏதேனும் செய்தியை அறிந்து வரலாம்; அல்லது அந்த நெருப்பிலிருந்து ஒரு கொள்ளியைக் கொண்டு வரலாம். அதன் மூலம் நீங்கள் குளிர்காயலாம்.” </span>
<span>28:30 அவர் அங்கு சென்றதும் பள்ளத்தாக்கின் வலக்கரையில் அருள்பாலிக்கப்பட்ட ஒரு மரத்திலிருந்து உருவிலி (அசரீரி) எழுந்தது: “மூஸாவே! நான்தான் அல்லாஹ்! அகிலத்தாரின் அதிபதி”. </span>
<span>28:31 மேலும், (கட்டளையிடப்பட்டது) “உம்முடைய கைத்தடியைக் கீழே போடும்!” அத்தடி பாம்பைப்போல் அசைந்து நெளிவதை மூஸா பார்த்தபோது, பின் நோக்கி ஓடினார்; திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. (அப்போது சொல்லப்பட்டது:) “மூஸாவே! திரும்பி வாரும்! அஞ்ச வேண்டாம். நீர் முற்றிலும் பாதுகாக்கப்பட்டவராவீர். </span>
<span>28:32 உம்முடைய கையை உம் சட்டையின் நெஞ்சுப் பகுதியில் புகுத்தும்! அது பிரகாசிக்கக்கூடியதாய் வெளிப்படும், எவ்வித மாசுமருவுமின்றி! மேலும், அச்சத்தைப் போக்குவதற்காக உம்முடைய தோள்களை நெருக்கமாக வையும். இவை இரண்டும் இறைவனிடமிருந்துள்ள தெளிவான சான்றுகளாகும், ஃபிர்அவ்னிடமும் அவனுடைய அவைப் பிரமுகர்களிடமும் சமர்ப்பிப்பதற்காக! அவர்கள் அறவே கீழ்ப்படியாத மக்களாக இருக்கின்றார்கள்.” </span>
<span>28:33 மூஸா கூறினார்: “என் அதிபதியே! நான் அவர்களில் ஒருவனைக் கொன்று விட்டேன். எனவே, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்களோ என்னு நான் அஞ்சுகின்றேன். </span>
<span>28:34 மேலும், என்னுடைய சகோதரர் ஹாரூன் என்னைவிட அதிகமாக நாவன்மை உடையவர். அவரை உதவியாளர் எனும் முறையில் என்னுடன் அனுப்பிவைப்பாயாக! அவர் எனக்குத் துணையிருப்பார். என்னைப் பொய்யன் என்று அம்மக்கள் மறுத்துவிடுவார்களோ என்று நான் அஞ்சுகின்றேன்.” </span>
<span>28:35 இறைவன் கூறினான்: “நாம் உம்முடைய சகோதரர் மூலம் உம்முடைய கையைப் பலப்படுத்துவோம். மேலும், நாம் உங்களிருவருக்கும் எத்தகைய அதிகாரத்தை வழங்குவோம் என்றால், உங்களுக்கு அவர்கள் எந்தத் தீங்கையும் செய்ய முடியாது. நம்முடைய சான்றுகளின் பலத்தினால் நீங்களிருவரும், உங்களைப் பின்பற்றுகின்றவர்களுமே வெற்றியார்களாய்த் திகழ்வீர்கள்!”</span>
<span>28:36 பிறகு, மூஸா தெளிவான சான்றுகளோடு அம்மக்களிடம் வந்தபோது, அவர்கள் கூறினார்கள்: “இது புனையப்பட்ட சூனியமேயன்றி வேறில்லை. எங்களுடைய முன்னோர்களின் காலத்தில்கூட இதனை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை.” </span>
<span>28:37 அதற்கு மூஸா பதிலளித்தார்: “என்னுடைய இறைவன் தன்னிடமிருந்து நேர்வழியைப் பெற்று வந்தவரின் நிலை என்னவென்பதையும், இறுதி முடிவு எவருக்கு நல்லவிதமாக அமையும் என்பதையும் நன்கு அறிவான். உண்மையாக, கொடுமைக்காரர்கள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை.”</span>
<span>28:38 மேலும், ஃபிர்அவ்ன் கூறினான்: “அவையோரே! உங்களுக்கு என்னைத் தவிர வேறு இறைவன் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஹாமானே! களிமண்ணைச் சுட்டு கற்கள் தயாரித்து எனக்காக ஓர் உயர்ந்த கோபுரம் எழுப்பும். ஒருவேளை, அதன் மீதேறி நான் மூஸாவுடைய இறைவனைப் பார்க்கக்கூடும். திண்ணமாக, நான் அவரைப் பொய்யர் என்றே கருதுகின்றேன்.”</span>
<span>28:39 அவனும் அவனுடைய படைகளும் பூமியில் நியாயமின்றித் தற்பெருமை கொண்டனர். மேலும், அவர்கள் எப்போதும் நம் பக்கம் திரும்பி வரவேண்டியதில்லை என்றும் கருதிக் கொண்டனர். </span>
<span>28:40 இறுதியில் நாம் அவனையும் அவனுடைய படைகளையும் பிடித்தோம்; அவர்களைக் கடலில் சிதறடித்தோம். இப்போது பார்த்துக் கொள்ளுங்கள், அந்தக் கொடுமைக்காரர்களின் கதி என்னவாயிற்று என்பதை! </span>
<span>28:41 நாம் அவர்களை நரகத்தின் பக்கம் அழைக்கும் தலைவர்களாக ஆக்கினோம். மேலும், மறுமைநாளில் எங்கிருந்தும் எவ்வித உதவியும் அவர்களால் பெறமுடியாது. </span>
<span>28:42 இவ்வுலகில் சாபம் அவர்களைத் தொடரும்படிச் செய்தோம். மேலும், மறுமைநாளில் அவர்கள் மிகவும் அருவருப்பான நிலைக்கு ஆளாவார்கள். </span>
<span>28:43 மேலும், முந்தைய தலைமுறையினரை அழித்த பிறகு, நாம் மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம் மக்களுக்கு அறிவொளி ஊட்டக்கூடியதாகவும் வழிகாட்டக் கூடியதாகவும் கருணையாகவும் அது திகழ்ந்தது மக்கள் படிப்பினை பெறக்கூடும் என்பதற்காக! </span>
<span>28:44 மேலும் (நபியே!) நாம் மூஸாவுக்கு இந்த ஷரீஅத் சட்டத்தை வழங்கியபோது நீர் அந்த மேற்குப் பகுதியில் இருக்கவில்லை. சாட்சியாளர்களில் ஒருவராயும் இருக்கவில்லை. </span>
<span>28:45 ஆயினும், அதன் பின்னர் (உமது காலம் வரை) நாம் பற்பல தலைமுறையினரைத் தோற்றுவித்திருக்கின்றோம். மேலும், அவர்கள் மீது காலங்கள் பல உருண்டு சென்றன. மேலும், நீர் மத்யன்வாசிகளிடையே, அவர்களுக்கு நம்முடைய வசனங்களை ஓதிக்காண்பிப்பவராயும் இருக்கவில்லை. ஆயினும் (அக்காலத்தில் நிகழ்ந்த இந்தச் செய்திகளையெல்லாம்) அனுப்பித் தருவது நாம்தான்! </span>
<span>28:46 மேலும், நாம் (முதன்முறையாக மூஸாவை) அழைத்தபோதும் ‘தூர்’ அருகில் நீர் இருக்கவில்லை. ஆயினும், (இந்த விவரங்களை இவ்வாறு உமக்குத் தெரியப்படுத்துவது) உம் இறைவனின் கருணையாகும்; எதற்காகவெனில், உமக்கு முன்பு எந்த எச்சரிக்கையாளரும் வந்திராத இந்தச் சமூகத்தினரை அவர்கள் நல்லுணர்வு பெறும் பொருட்டு நீர் எச்சரிக்கை செய்வதற்காக! </span>
<span>28:47 மேலும், (இவ்வாறு நாம் செய்தது) அவர்கள் செய்த தீவினைகளின் காரணமாக ஏதேனும் துன்பம் அவர்களுக்கு வந்தால் அவர்கள், “எங்கள் இறைவனே! நீ யாரேனும் ஒரு தூதரை எங்களிடம் ஏன் அனுப்பவில்லை? நாங்கள் உன்னுடைய வசனங்களைப் பின்பற்றி நம்பிக்கையாளர்களோடு சேர்ந்திருப்போமே!” என்று கூறாமல் இருப்பதற்காகத்தான். </span>
<span>28:48 ஆனால், நம்மிடமிருந்து சத்தியம் அவர்களிடம் வந்தபோது அவர்கள் கேட்கலானார்கள்: “மூஸாவுக்கு வழங்கப்பட்டிருந்ததைப் போன்று இவருக்கு ஏன் வழங்கப்பட வில்லை?” முன்னர் மூஸாவுக்கு வழங்கப்பட்டிருந்ததை இவர்கள் நிராகரித்திடவில்லையா? இவர்கள் கூறினார்கள்: “இரண்டும் ஒன்றுக்கொன்று உதவுகின்ற இரு சூனியங்கள்.” மேலும், கூறினார்கள்: “நாங்கள் எதையும் நம்பக்கூடியவர்களல்லர்.” </span>
<span>28:49 (நபியே! இவர்களிடம்) கூறுங்கள்: “நீங்கள் உண்மையாளர்களாயின், இவ்விரண்டையும் விட அதிக அளவு நேர்வழிகாட்டும் வேதம் ஒன்றை அல்லாஹ்விடமிருந்து கொண்டுவாருங்கள். நான் அதனைப் பின்பற்றுகின்றேன்.” </span>
<span>28:50 உம்முடைய இந்தக் கோரிக்கையை அவர்கள் நிறைவேற்றவில்லையாயின், அவர்கள் தங்களின் மன இச்சைகளைத்தான் பின்பற்றுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ளும். மேலும், அல்லாஹ்வின் வழிகாட்டலின்றி தன்னுடைய மன இச்சைகளை மட்டுமே பின்பற்றி வாழ்கின்றவனைவிட வழிகெட்டவன் யார்? இத்தகைய கொடுமைக்காரர்களுக்கு அல்லாஹ் ஒருபோதும் நேர்வழி காட்டுவதில்லை. </span>
<span>28:51 மேலும், தொடர்ந்து (அறிவுரை மிக்க) வார்த்தைகளை அவர்களுக்குக் கிடைக்கச் செய்திருக்கின்றோம்; அவர்கள் அலட்சியத்திலிருந்து விழித்தெழ வேண்டும் என்பதற்காக!</span>
<span>28:52 இதற்கு முன்பு எவர்களுக்கு நாம் வேதம் வழங்கியிருந்தோமோ அவர்கள் குர்ஆன் ஆகிய இதன் மீது நம்பிக்கை கொள்கின்றார்கள். </span>
<span>28:53 மேலும், இந்த வேதம் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படும் போது, “நாங்கள் இதன்மீது நம்பிக்கை கொண்டோம். உண்மையாக, இது எங்கள் இறைவனிடமிருந்து வந்த சத்தியமாகும். நாங்களோ முன்பிருந்தே முஸ்லிம்களாக கீழ்ப்படிந்தவர்களாக இருந்து வருகின்றோம்” என்று கூறுகின்றார்கள். </span>
<span>28:54 அவர்கள் நிலைகுலையாமல் இருந்ததற்குப் பகரமாக அவர்களுடைய கூலி அவர்களுக்கு இரு தடவை வழங்கப்படும். மேலும், அவர்கள் தீமையை நன்மையின் மூலம் தடுக்கின்றார்கள், மேலும், நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவு செய்கின்றார்கள். </span>
<span>28:55 இன்னும் அவர்கள் வீணானவற்றைச் செவியுற்றால் அவற்றை விட்டு விலகிவிடுகின்றார்கள். மேலும், கூறுகின்றார்கள்: “எங்களுடைய செயல் எங்களுக்கு; உங்களுடைய செயல் உங்களுக்கு! உங்களுக்கு சாந்தி உண்டாகுக! நாங்கள் அறிவீனர்களின் நடத்தையை மேற்கொள்ள விரும்புவதில்லை.” </span>
<span>28:56 (நபியே!) நீர் விரும்புகின்றவருக்கு நேர்வழி காட்டிட உம்மால் முடியாது. ஆயினும், அல்லாஹ் தான் நாடுவோருக்கு வழிகாட்டுதலை அளிக்கின்றான். மேலும், வழிகாட்டுதலைப் பெறக்கூடியவர்களை அவன் நன்கறிகின்றான். </span>
<span>28:57 மேலும்; அவர்கள் கூறுகின்றார்கள்: “நாங்கள் உம்முடன் சேர்ந்து இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றினால், எங்கள் பூமியிலிருந்து நாங்கள் இறாஞ்சிக்கொண்டு செல்லப்பட்டு விடுவோம்.” அமைதி நிறைந்த ஹரம்* பகுதியை அவர்களுக்கு நாம் தங்குமிடமாக்கிக் கொடுக்கவில்லையா? நம்மிடமிருந்து உணவு எனும் முறையில் அனைத்துவிதமான கனிகளும் அதன் பக்கம் கொண்டுவரப்படவில்லையா? ஆயினும், அவர்களில் பெரும்பாலோர் அறிந்துகொள்வதில்லை!</span>
<span>28:58 மேலும், எத்தனையோ ஊர்களை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். அந்த ஊர் மக்கள் தங்களுடைய அதிகப்படியான வாழ்க்கை வசதிகள் குறித்து கர்வம் கொண்டிருந்தார்கள். (இதோ! பார்த்துக்கொள்ளுங்கள்) இவை அவர்கள் குடியிருந்த இல்லங்கள். இவற்றில் அவர்களுக்குப் பின்னர் யாருமே வசிக்கவில்லை ஒரு சிலரைத் தவிர! இறுதியில் நாமே வாரிசுகளாகிவிட்டோம். </span>
<span>28:59 மேலும், உம் இறைவன் எந்த ஊர்களையும் அழிப்பவனாக இருந்ததில்லை, அவற்றின் மத்தியில் மக்களுக்கு நம்முடைய வசனங்களை ஓதிக்காட்டும் தூதர் ஒருவரை அனுப்பாதவரையில்! ஊரில் வாழ்பவர்கள் கொடுமை புரிபவர்களாய் இருந்தாலே தவிர, அந்த ஊர்களை நாம் அழிப்பவர்களல்லர்!</span>
<span>28:60 உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பவை யாவும் உலக வாழ்வின் சாதனங்களும் அதன் அலங்காரமும்தான்! ஆனால், அல்லாஹ்விடம் இருப்பதுதான் இவற்றை விடச் சிறந்ததும் நிலையானதுமாகும். நீங்கள் சிந்தித்துணரமாட்டீர்களா?</span>
<span>28:61 எவனுக்கு நாம் நல்ல வாக்குறுதி அளித்து, அவன் அதனை அடையவும் இருக்கின்றானோ அவன், நாம் உலக வாழ்க்கையின் வசதிகளை மட்டும் வழங்கி, பிறகு மறுமைநாளில் தண்டனைக்காகக் கொண்டு வரப்பட இருக்கின்றவனுக்கு சமம் ஆவானா?</span>
<span>28:62 மேலும், அந்த மறுமைநாளினை (இவர்கள் மறந்துவிடக் கூடாது). அன்று இறைவன் இவர்களை அழைத்துக் கேட்பான்: “எனக்கு யாரை இணையானவர்களென்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?” </span>
<span>28:63 இந்தக் கேள்வி எவர்களுக்குப் பொருந்துமோ அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! திண்ணமாக, நாங்கள் வழிகெடுத்தது இவர்களைத்தாம்! நாங்கள் எவ்வாறு வழிகெட்டுப் போனோமோ அவ்வாறே இவர்களையும் வழிகெடுத்தோம். இதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று உன் முன்னிலையில் முறையிடுகின்றோம். இவர்கள் எங்களை ஒன்றும் வணங்கிக் கொண்டிருக்கவில்லை. </span>
<span>28:64 பின்னர், இவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் எனக்கு இணையாக ஏற்படுத்திய தெய்வங்களை அழையுங்கள்”. அப்போது இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆயினும், அவர்கள் இவர்களுக்கு யாதொரு பதிலும் அளிக்கமாட்டார்கள். மேலும், இந்த மக்கள் வேதனையைக் கண்டுகொள்வார்கள். அந்தோ! இவர்கள் வழிகாட்டுதலைப் பின்பற்றுவோராய் இருந்திருக்க வேண்டுமே!</span>
<span>28:65 மேலும், அந்நாளை (இவர்கள் மறந்துவிடக் கூடாது). அன்று இறைவன் இவர்களை அழைத்து, “இறைதூதர்களுக்கு நீங்கள் என்ன பதில் அளித்தீர்கள்?” என்று கேட்பான். </span>
<span>28:66 அந்நேரம் அதற்கு என்ன பதில் அளிப்பது என்றே அவர்களுக்குப் புலப்படாது. தங்களிடையே பரஸ்பரம் ஒருவர் மற்றவரிடம் கேட்கவும் முடியாது. </span>
<span>28:67 ஆயினும், எவர் (இன்று) பாவமன்னிப்புக் கோரி, நம்பிக்கை கொண்டு நற்செயலும் புரிந்தாரோ அவர்தாம் (அங்கு) வெற்றி அடைந்தவராவார். </span>
<span>28:68 மேலும், உம்முடைய இறைவன் தான் நாடுவதைப் படைக்கின்றான். மேலும், (தன்னுடைய பணிக்காகத் தான் நாடுவோரைத்) தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். இப்படித் தேர்ந்தெடுப்பது, இவர்கள் செய்கின்ற பணியன்று; அல்லாஹ் தூய்மையானவன்; மிகவும் உயர்ந்தவன், இவர்கள் செய்யும் இணைவைப்புச் செயல்களிலிருந்து! </span>
<span>28:69 இவர்கள் தங்கள் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பவற்றையும், வெளிப்படுத்துகின்றவற்றையும் உம்முடைய இறைவன் அறிவான். </span>
<span>28:70 அவனே, அல்லாஹ்! வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அனைத்துப் புகழும் அவனுக்கே. இம்மையிலும் மறுமையிலும் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியதாகும். மேலும், அவனிடமே நீங்கள் அனைவரும் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். </span>
<span>28:71 (நபியே! இவர்களிடம்) கேளும்: “நீங்கள் என்றேனும் சிந்தித்ததுண்டா? அல்லாஹ் இரவை உங்கள் மீது மறுமைநாள் வரை நிரந்தரமானதாக்கி இருந்தால், அல்லாஹ்வைத் தவிர வேறு எந்தக் கடவுளால்தான் உங்களுக்கு ஒளியைக் கொண்டுவர முடியும்? நீங்கள் செவியேற்பதில்லையா?”</span>
<span>28:72 மேலும், இவர்களிடம் கேளும்: “நீங்கள் என்றேனும் சிந்தித்ததுண்டா? அல்லாஹ் பகலை மறுமை நாள் வரை உங்களுக்கு நிரந்தரமானதாக ஆக்கியிருந்தால், நீங்கள் அமைதி பெறுகின்ற இரவை உங்களுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு எந்தக் கடவுளால் கொண்டு வரமுடியும்? என்ன, உங்களுக்குப் புலப்படவில்லையா?</span>
<span>28:73 அவன் தன்னுடைய கருணையினால்தான் உங்களுக்காக இரவையும் பகலையும் படைத்திருக்கின்றான். இரவில் நீங்கள் அமைதி பெற வேண்டும். மேலும், பகலில் அவனுடைய அருட் கொடையை நீங்கள் தேட வேண்டும்: அதனால் நீங்கள் நன்றி செலுத்துவோராய்த் திகழக்கூடும் என்பதற்காக!</span> 
<span>28:74 மேலும், அந்நாளை (இவர்கள் நினைவில் வைக்க வேண்டும்). அன்று இறைவன் இவர்களை அழைத்துக் கேட்பான்: “எனக்கு இணை ஆனவர்கள் என்று நீங்கள் யாரைக் குறித்து எண்ணிக்கொண்டு இருந்தீர்களோ அவர்கள் எங்கே?” </span>
<span>28:75 மேலும், நாம் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியாளரை வெளிக் கொணர்வோம்; பிறகு கூறுவோம்: “இப்போது கொண்டு வாருங்கள் உங்களுடைய ஆதாரத்தை!” அப்போது, உண்மை அல்லாஹ்வின் பக்கம் உள்ளது என்பது அவர்களுக்குத் தெரிந்துவிடும். அவர்கள் புனைந்து கூறிக்கொண்டிருந்த அனைத்தும் அவர்களைவிட்டு மறைந்து போகும்!</span>
<span>28:76 உண்மை யாதெனில், காரூன், மூஸாவின் சமுதாயத்தைச் சேர்ந்தவன். அவன் தன் சமூகத்திற்கு எதிராக வரம்புமீறி நடந்தான். மேலும், நாம் அவனுக்கு எந்த அளவுக்கு செல்வக் கருவூலங்களை வழங்கியிருந்தோமெனில், அவற்றின் சாவிகளை பலசாலிகளின் ஒரு குழுவால்கூட சிரமப்பட்டுத்தான் தூக்க முடியும். ஒரு தடவை அவனுடைய சமூகத்தார் அவனிடம் கூறினார்கள். “நீ பூரித்து விடாதே! ஏனெனில், பூரித்திருப்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. </span>
<span>28:77 அல்லாஹ் உனக்கு வழங்கியுள்ள செல்வத்தின் மூலம் மறுமையின் வீட்டைப்பெற அக்கறை கொள்; மேலும் இம்மையிலும் உனது பங்கை மறந்துவிடாதே! மேலும், அல்லாஹ் உனக்கு உதவி செய்திருப்பது போல் நீயும் உதவி செய். மேலும், பூமியில் அராஜகம் விளைவிக்க முயற்சி செய்யாதே! அராஜகம் விளைவிப்பவர்களைத் திண்ணமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.” </span>
<span>28:78 அதற்கவன், “இவையனைத்தும் என்னிடமுள்ள அறிவினால்தான் எனக்குக் கிடைத்திருக்கின்றன!” என்றான்அவனுக்கு முன்னால் அவனைவிட அதிக வலிமையையும் ஆள் பலத்தையும் பெற்றிருந்த சமூகங்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பது இவனுக்குத் தெரியாதா? மேலும், குற்றவாளிகளிடம் அவர்களின் பாவங்கள் பற்றிக் கேட்கப்படுவதில்லை. </span>
<span>28:79 (ஒருநாள்) அவன் தன்னுடைய முழு அலங்கார மிடுக்குடன் தன் சமூகத்தார் முன்னிலையில் வந்தான். எவர்கள் உலக வாழ்க்கையை விரும்புவோராய் இருந்தனரோ அவர்கள் (அவனைப் பார்த்து) கூறலானார்கள்: “ஆஹா! காரூனுக்கு வழங்கப்பட்டிருப்பதைப் போன்று நமக்கும் கிடைத்திட வேண்டுமே! அவன் மகத்தான பாக்கியசாலிதான்!” </span>
<span>28:80 ஆயினும் ஞானம் வழங்கப்பட்டவர்கள் கூறலானார்கள்: “உங்கள் நிலை குறித்து வருந்துகின்றோம். நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தோருக்கு அல்லாஹ்வின் நற்கூலி சிறந்ததாகும். மேலும், பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்குத்தான் இந்த நற்பாக்கியம் கிடைக்கும்.”</span>
<span>28:81 இறுதியில், நாம் அவனையும் அவனுடைய வீட்டையும் பூமியில் புதைத்துவிட்டோம். அல்லாஹ்வுக்கு எதிராக அவனுக்கு உதவி செய்யும் கூட்டத்தார் எவரும் அவனுக்கு இருக்கவில்லை. தனக்குத்தானே உதவி செய்து கொள்ளக்கூடியவனாகவும் அவன் இல்லை. </span>
<span>28:82 நேற்று அவன் பெற்ற அந்தஸ்தை அடைய ஏக்கம் கொண்டிருந்த அதே ஆட்கள் இப்போது கூற ஆரம்பித்தார்கள்: “ஐயகோ! நாம் மறந்துவிட்டிருந்தோம், அல்லாஹ் தன்னுடைய அடியார்களில் தான் நாடுவோர்க்கு வாழ்வாதாரத்தைத் தாராளமாக வழங்குகின்றான்; மேலும், தான் நாடுவோர்க்கு அளவோடு கொடுக்கின்றான் என்பதை! அல்லாஹ் எங்களுக்கு உதவி செய்திராவிட்டால், எங்களையும் பூமியில் புதைத்திருப்பான். ஐயகோ! நிராகரிப்பாளர்கள் வெற்றியடைவதில்லை என்பது எங்களுக்கு நினைவில்லாமல் போய்விட்டதே!”</span>
<span>28:83 அந்த மறுமை வீட்டையோ எவர்கள் உலகில் பெருமையடிக்கவும் அராஜகம் விளைவிக்கவும் விரும்பமாட்டார்களோ அவர்களுக்கே உரித்தானதாக்கி வைத்துள்ளோம். மேலும், இறுதியில் நல்ல முடிவு இறையச்சமுள்ளவர்களுக்கே இருக்கிறது. </span>
<span>28:84 ஒருவர் நன்மையைக் கொண்டு வருவாராயின், அவருக்கு அதைவிடச் சிறந்த நன்மை இருக்கின்றது. எவரேனும் தீமையைக் கொண்டுவருவாராயின், தீமைகள் செய்வோருக்கு அவர்கள் செய்துகொண்டிருந்த தீமைகளின் கூலியே கொடுக்கப்படும். </span>
<span>28:85 (நபியே! உறுதியாய் அறிந்து கொள்வீராக!) இந்தக் குர்ஆனை உம்மீது கடமையாக்கியவன் உம்மை ஒரு நல்ல முடிவின் பக்கம் கொண்டு செல்வான். (இம்மக்களிடம்) கூறுவீராக: “வழிகாட்டுதலைக் கொண்டு வந்திருப்பவன் யார்; வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடப்பவன் யார் என்று என் அதிபதி நன்கு அறிவான்.” </span>
<span>28:86 உம்மீது வேதம் இறக்கியருளப்பட இருக்கின்றது என்பதை நீர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால், இது உம்முடைய இறைவனின் கிருபை(யினால் உம்மீது இறக்கியருளப்பட்டிருக்கின்றது). எனவே, நீர் நிராகரிப்பாளர்களுக்கு உதவி செய்பவராய் இருக்காதீர். மேலும், அல்லாஹ்வின் வசனங்கள் உம்மீது இறக்கியருளப்பட்ட பிறகு, பின்னர் இறைநிராகரிப்பாளர்கள் அவற்றை விட்டு உம்மை ஒருபோதும் தடுத்துவிட வேண்டாம். உம் இறைவனின் பக்கம் அழைப்பு விடுப்பீராக! </span>
<span>28:87 மேலும், இணைவைப்போருடன் நீர் ஒருபோதும் சேர்ந்துவிட வேண்டாம். </span>
<span>28:88 மேலும், அல்லாஹ்வுடன் வேறு எந்தக் கடவுளையும் அழைக்க வேண்டாம். வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அல்லாஹ்வைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழிந்து போகக்கூடியதாகும். ஆட்சியதிகாரம் அவனுக்கே உரித்தானது. மேலும், அவனிடமே நீங்கள் அனைவரும் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். </span>
</div><div>
<span>அல் அன்கபூத்</span>
<span>29:1 அலிஃப், லாம், மீம். </span>
<span>29:2 “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று மட்டும் கூறுவதனால் விட்டு விடப்படுவார்கள்; மேலும், அவர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட மாட்டார்கள் என்று மக்கள் எண்ணிக் கொண்டார்களா, என்ன? </span>
<span>29:3 உண்மையில், இவர்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அனைவரையும் நாம் சோதித்திருக்கின்றோம். அல்லாஹ் அவசியம் கண்டறிய வேண்டியுள்ளது; உண்மையாளர்கள் யார்? பொய்யர்கள் யார் என்பதை!</span>
<span>29:4 தீமைகளைச் செய்வோர், நம்மை மிகைத்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்களா, என்ன? அவர்கள் எடுக்கும் தீர்மானம் மிகவும் மோசமானதாகும். </span>
<span>29:5 அல்லாஹ்வின் சந்திப்பை எதிர்பார்த்திருப்பவர்கள் (தெரிந்துகொள்ள வேண்டும்:) அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட நேரம் வந்தே தீரும். மேலும், அவன் யாவற்றையும் செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>29:6 எவன் ஜிஹாத் செய்கின்றானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே அதனை செய்கின்றான். திண்ணமாக, உலக மக்களை விட்டு அல்லாஹ் தேவைகள் அற்றவன். </span>
<span>29:7 மேலும், எவர்கள் நம் பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களைவிட்டு அவர்களின் தீமைகளை நாம் களைந்துவிடுவோம். மேலும், நாம் அவர்களுக்கு அவர்களின் அழகிய செயல்களுக்குரிய கூலியையும் வழங்குவோம். </span>
<span>29:8 தன்னுடைய தாய் தந்தையரிடம் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தினோம். ஆனால், எதை (அதாவது, எந்தக் கடவுள் எனக்கு இணையானது என்பதை) நீ அறிய மாட்டாயோ அதனை எனக்கு இணையாக்கும்படி அவர்கள் (பெற்றோர்) உன்னை வற்புறுத்தினாலோ அவர்களுக்கு நீ கீழ்ப்படியாதே. என்னிடம்தான் நீங்கள் அனைவரும் திரும்பி வரவேண்டியுள்ளது. அப்போது நீங்கள் என்னென்ன செய்துகொண்டிருந்தீர்களோ அவற்றை நான் உங்களுக்கு அறிவிப்பேன். </span>
<span>29:9 மேலும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்திருப்பார்களோ அவர்களை நாம் திண்ணமாக, சான்றோர்களுடன் சேர்த்துவிடுவோம். </span>
<span>29:10 மனிதர்களில் சிலர் உள்ளனர். “நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டோம்” என்று அவர்கள் கூறுகின்றார்கள். ஆயினும், அல்லாஹ்வுடைய விஷயத்தில் அவர்கள் துன்புறுத்தப்பட்டால் மக்கள் தரும் இந்தச் சோதனையை அல்லாஹ்வுடைய தண்டனை போன்று கருதிவிடுகின்றார்கள். ஆனால், உம்முடைய இறைவனிடமிருந்து வெற்றியும் உதவியும் வந்துவிடுமாயின், இவர்களே கூறுவார்கள், “திண்ணமாக நாங்கள் உங்களுடன்தானே இருந்தோம்” என்று! உலக மக்களின் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனன்றோ?</span>
<span>29:11 மேலும், அல்லாஹ் அவசியம் கண்டறிய வேண்டியுள்ளது; நம்பிக்கை கொண்டவர்கள் யார், நயவஞ்சகர்கள் யார் என்பதை!</span>
<span>29:12 இந்நிராகரிப்பாளர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களிடம் “நீங்கள் எங்களுடைய வழியைப் பின்பற்றுங்கள்; உங்களுடைய பாவங்களை நாங்கள் சுமந்து கொள்கின்றோம்” என்று கூறுகின்றார்கள். உண்மை யாதெனில், அவர்களின் பாவங்களிலிருந்து சிறிதளவுகூட இவர்கள் சுமந்து கொள்ளக் கூடியவர்களல்லர். நிச்சயமாக இவர்கள் பொய் சொல்கின்றார்கள். </span>
<span>29:13 ஆம்! இவர்கள் தங்களுடைய சுமைகளையும் சுமப்பார்கள்; தங்கள் சுமைகளுடன் வேறு பல சுமைகளையும் சுமப்பார்கள். மேலும், இவர்கள் புனைந்துரைக்கின்றவற்றைப் பற்றி மறுமை நாளில் திண்ணமாக விசாரிக்கப்படுவார்கள். </span>
<span>29:14 நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். அவர் ஐம்பது குறைய ஓராயிரம் ஆண்டுகள் அவர்களிடையே வாழ்ந்தார். இறுதியில் அவர்கள் கொடுமை புரிந்து கொண்டிருக்கவே வெள்ளப் பிரளயம் அவர்களைச் சூழ்ந்துகொண்டது. </span>
<span>29:15 பின்னர் நூஹையும், கப்பலில் ஏறியவர்களையும் நாம் காப்பாற்றிக் கொண்டோம். மேலும், அதனை உலகத்தார் அனைவர்க்கும் ஒரு படிப்பினைக்குரிய சான்றாக்கிவிட்டோம். </span>
<span>29:16 மேலும், இப்ராஹீமை நாம் அனுப்பினோம். அப்போது அவர் தம்முடைய சமூகத்தாரிடம் கூறினார்: “அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். மேலும், அவனுக்கு அஞ்சுங்கள். நீங்கள் அறிந்துகொள்வீர்களாயின், இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும். </span>
<span>29:17 அல்லாஹ்வை விடுத்து நீங்கள் பூஜிப்பவை அனைத்தும் வெறும் சிலைகள்தாம்! மேலும், நீங்கள் பொய்யை இட்டுக் கட்டிக் கொண்டிருக்கின்றீர்கள். அல்லாஹ்வை விடுத்து யாரையெல்லாம் நீங்கள் வழிபடுகின்றீர்களோ அவர்கள் உண்மையில் உங்களுக்கு எந்த ஓர் உணவையும் அளிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கவில்லை. உணவை அல்லாஹ்விடமே கேளுங்கள். மேலும், அவனுக்கே அடிபணியுங்கள்; மேலும், அவனுக்கு நன்றியும் செலுத்துங்கள். அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள். </span>
<span>29:18 மேலும், நீங்கள் பொய்யென வாதிட்டால், உங்களுக்கு முன்னர் பல சமூகங்கள் பொய்யென வாதிட்டிருக்கின்றன. மேலும், தூதைத் தெளிவுற எடுத்துரைப்பதைத் தவிர தூதர் மீது வேறெந்தப் பொறுப்புமில்லை.”</span>
<span>29:19 அல்லாஹ் எவ்வாறு முதன் முறையாகப் படைக்கின்றான் என்பதையும், பிறகு எவ்வாறு அதை மீண்டும் படைக்கின்றான் என்பதையும் அவர்கள் என்றுமே கவனித்ததில்லையா? (மீண்டும் படைப்பது எனும்) இந்தப் பணி திண்ணமாக, அல்லாஹ்வுக்கு எளிதானதாகும். </span>
<span>29:20 இவர்களிடம் கூறும்: பூமியில் சுற்றித் திரிந்து பாருங்கள்; எவ்வாறு அவன் முதன் முறையாகப் படைத்துள்ளான் என்று! பின்னர், அல்லாஹ் இன்னொரு தடவையும் வாழ்வை நல்குவான். திண்ணமாக, அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன். </span>
<span>29:21 தான் நாடுபவர்களைத் தண்டிப்பான்; தான் நாடுவோர்க்குக் கருணை புரிவான். அவன் பக்கம்தான் நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். </span>
<span>29:22 பூமியிலும் வானத்திலும் நீங்கள் அவனை இயலாமையில் ஆக்கக்கூடியவர்கள் அல்லர். அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றக்கூடிய எந்த ஒரு பொறுப்பாளரும் உதவியாளரும் உங்களுக்கு இல்லை! </span>
<span>29:23 எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களையும் அவனை சந்திப்பதையும் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் என்னுடைய அருளிலிருந்து நிராசை அடைந்துவிட்டிருக்கின்றார்கள். மேலும், துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு இருக்கின்றது. </span>
<span>29:24 பிறகு, இப்ராஹீமுடைய சமூகத்தார் அளித்த பதில் இதைத் தவிர வேறு எதுவுமில்லை: “கொன்று விடுங்கள் அவரை; அல்லது எரித்து விடுங்கள் அவரை!” இறுதியில், அல்லாஹ் அவரை நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொண்டான். திண்ணமாக, இறைநம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு இதில் சான்றுகள் உள்ளன. </span>
<span>29:25 மேலும், அவர் கூறினார்: “உலக வாழ்க்கையில் அல்லாஹ்வை விடுத்து உருவச்சிலைகளை நீங்கள் உங்களிடையே அன்பு செலுத்துவதற்குச் சாதனமாக்கிக் கொண்டுள்ளீர்கள். ஆயினும், மறுமை நாளில் நீங்கள் ஒருவரையொருவர் மறுத்துரைத்து, ஒருவரையொருவர் சபித்துக் கொள்வீர்கள்! மேலும், நெருப்பு உங்களின் இருப்பிடமாக அமையும். உங்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்கமாட்டார்.”</span>
<span>29:26 (அவ்வேளை) லூத் அவரை ஏற்றுக்கொண்டார். மேலும், இப்ராஹீம் கூறினார்: “நான் என்னுடைய இறைவனின் பக்கம் ஹிஜ்ரத்* செய்கின்றேன். அவன் வலிமை மிக்கவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.” </span>
<span>29:27 மேலும், நாம் அவருக்கு இஸ்ஹாக் மற்றும் யஃகூப் போன்ற பிள்ளைகளை வழங்கினோம். மேலும், அவருடைய வழித்தோன்றல்களுக்கு தூதுத்துவத்தையும் வேதத்தையும் வழங்கினோம். உலகில் அவருக்குரிய கூலியை அவருக்கு அளித்தோம். மேலும், மறுமையில் திண்ணமாக அவர் உத்தமர்களோடு இருப்பார். </span>
<span>29:28 மேலும், நாம் லூத்தை அனுப்பினோம். அப்போது அவர் தம்முடைய சமூகத்தாரிடம் கூறினார்: “உங்களுக்கு முன்னர் உலக மக்களில் யாரும் செய்திராத மானக்கேடான செயலை நீங்கள் செய்கின்றீர்கள்; </span>
<span>29:29 என்னே உங்களின் இந்த நடத்தை! ஆண்களிடம் செல்கின்றீர்கள்; வழிப்பறி செய்கின்றீர்கள்; உங்கள் சபைகளில் வைத்தே தீயசெயல்களில் ஈடுபடுகின்றீர்கள்!” அவருடைய சமூகத்தாரிடம் இதைத் தவிர வேறெந்த பதிலும் இருக்கவில்லை: “கொண்டுவாரும் அல்லாஹ்வின் தண்டனையை, நீர் உண்மை யாளராயின்!” </span>
<span>29:30 லூத் வேண்டினார்: “என் இறைவா! விஷமம் செய்யும் இந்த மக்களுக்கு எதிராக நீ எனக்கு உதவி புரிவாயாக!”</span>
<span>29:31 மேலும், நம்முடைய தூதர்கள் (வானவர்கள்) இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தபோது, அவர்கள் அவரிடம் கூறினார்கள்: “நாங்கள் இவ்வூர் மக்களை அழிக்கப்போகின்றோம். ஏனெனில், இங்குள்ளவர்கள் பெரும் கொடுமை புரிபவர்களாகி விட்டார்கள்.” </span>
<span>29:32 அதற்கு இப்ராஹீம், “அங்கு லூத் இருக்கின்றாரே!” என்றார். அதற்கு அவர்கள் கூறினார்கள்: “அங்கு யார் இருக்கின்றார்கள் என்பதனை நாங்கள் நன்கு அறிவோம். திண்ணமாக, அவரையும் அவருடைய குடும்பத்தையும் நாங்கள் காப்பாற்றிக் கொள்வோம்; அவருடைய மனைவியைத் தவிர! அவள் பின்தங்கி அழியக்கூடியவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாள்.”</span>
<span>29:33 பின்னர், நம்முடைய தூதர்கள் லூத்திடம் வந்தபோது அவர்களுடைய வருகையால் அவர் மிகவும் பதற்றமடையவும், மனம் நொந்துவிடவும் செய்தார். அவர்கள் கூறினார்கள்: “அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நாம் உம்மையும் உம்முடைய குடும்பத்தாரையும் காப்பாற்றிக் கொள்வோம்; உம்முடைய மனைவியைத் தவிர! அவள் பின்தங்கி அழியக்கூடியவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாள். </span>
<span>29:34 நாம் இவ்வூர் மக்கள் மீது வானத்திலிருந்து வேதனையை இறக்குபவர்களாவோம்; இவர்கள் செய்துகொண்டிருக்கும் தீய செயல்களின் விளைவாக!” </span>
<span>29:35 நாம் அவ்வூரின் தெளிவான தொரு சான்றை விட்டு வைத்திருக்கின்றோம், அறிந்துகொள்ளக் கூடிய மக்களுக்காக!</span>
<span>29:36 மேலும், மத்யன்வாசிகளிடம் அவர்களுடைய சகோதரர் ஷûஐபை அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமூகத்தினரே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். இறுதிநாளை எதிர்பார்த்துக் கொண்டிருங்கள். மேலும், பூமியில் அநீதி இழைத்துக்கொண்டு, குழப்பம் விளைவிப்பவர்களாய்த் திரியாதீர்கள்.” </span>
<span>29:37 ஆனால், அவர்கள் அவரைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். இறுதியில், ஒரு கடும் நிலநடுக்கம் அவர்களைப் பீடித்தது. அவர்கள் தம் வீடுகளிலேயே குப்புற வீழ்ந்து மடிந்தார்கள். </span>
<span>29:38 மேலும், ஆத், ஸமூத் இனத்தார்களையும் நாம் அழித்தோம். அவர்கள் வாழ்ந்திருந்த இடங்களை நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள். மேலும், அவர்களுடைய செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகுபடுத்திக் காண்பித்தான். மேலும், அவர்கள் அறிவுத்திறன் மிக்கவர்களாய் இருந்தும்கூட, அவன் நேர்வழியினின்று அவர்களைப் பிறழச் செய்துவிட்டான். </span>
<span>29:39 மேலும், காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான் ஆகியோரையும் நாம் அழித்தோம். அவர்களிடம் மூஸா தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். ஆயினும், அவர்கள் பூமியில் தாங்களே மேலானவர்கள் என இறுமாப்புக் கொண்டார்கள். உண்மையில், அவர்கள் வென்றுவிடுபவர்களாய் இருக்கவில்லை. </span>
<span>29:40 இறுதியில், ஒவ்வொருவரையும் அவரவருடைய பாவத்தின் காரணமாக நாம் பிடித்தோம். பிறகு, அவர்களில் சிலர் மீது நாம் கல்மாரி பொழியும் காற்றை அனுப்பினோம். வேறு சிலரை ஒரே ஓர் உரத்த முழக்கம் பிடித்துக் கொண்டது; மற்றும் சிலரை நாம் பூமியில் புதைத்துவிட்டோம். அவர்களில் மேலும் சிலரை மூழ்கடித்துவிட்டோம். அல்லாஹ் அவர்கள் மீது கொடுமை புரிபவனாக இருக்கவில்லை. ஆனால், அவர்களே தங்கள் மீது கொடுமை இழைத்துக் கொண்டிருந்தார்கள். </span>
<span>29:41 எவர்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு மற்ற பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டார்களோ அவர்களின் உவமை தனக்கென ஒரு வீட்டை அமைத்துக் கொள்ளும் சிலந்திப்பூச்சியாகும். திண்ணமாக, வீடுகளிலேயே மிகவும் பலவீனமானது சிலந்திப்பூச்சியின் வீடாகும். அந்தோ! இவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே! </span>
<span>29:42 அல்லாஹ்வை விட்டுவிட்டு இவர்கள் எவரை அழைக்கின்றார்களோ திண்ணமாக, அல்லாஹ் அதனை நன்கறிகின்றான். அவன் யாவரையும் மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமாவான். </span>
<span>29:43 மக்கள் புரிந்துகொள்வதற்காக உவமைகளை நாம் கூறுகின்றோம். ஆயினும், ஞானமுடையவர்கள் மட்டுமே இவற்றை அறிந்துகொள்கின்றார்கள். </span>
<span>29:44 அல்லாஹ் வானங்களையும் பூமியையும் சத்தியத்தைக் கொண்டே படைத்திருக்கின்றான். திண்ணமாக, நம்பிக்கையாளர்களுக்கு இதில் ஒரு சான்று இருக்கின்றது. </span>
<span>29:45 (நபியே!) வஹியின் மூலம் உமக்கு அனுப்பப்பட்டிருக்கும் இந்த வேதத்தை நீர் ஓதுவீராக! மேலும், தொழுகையை நிலை நிறுத்துவீராக! திண்ணமாக, தொழுகை மானக்கேடான மற்றும் தீயசெயல்களைத் தடுக்கின்றது. மேலும், அல்லாஹ்வை நினைவுகூர்வது இதைவிடப் பெரிய விஷயமாகும். நீங்கள் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் அறிகின்றான். </span>
<span>29:46 மேலும், வேதம் வழங்கப்பட்டவர்களிடம் மிக அழகிய முறையிலன்றி நீங்கள் தர்க்கம் செய்ய வேண்டாம். ஆனால், அவர்களுள் கொடுமையாளர்களிடம் தவிர! மேலும், அவர்களிடம் கூறுங்கள்: “எங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பவற்றின் மீதும் உங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பவற்றின் மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். எங்களுடைய இறைவனும் உங்களுடைய இறைவனும் ஒருவனே! மேலும், நாம் அவனுக்கே கீழ்ப்படிந்தவர்களாய் (முஸ்லிம்களாய்) இருக்கின்றோம்.”</span>
<span>29:47 (நபியே!) இதே போன்று உமக்கும் வேதத்தை இறக்கியருளியிருக்கின்றோம். ஆகையால், முன்னர் எவர்களுக்கு வேதம் வழங்கியிருந்தோமோ அவர்கள் இதனை நம்புகின்றார்கள். இவர்களிலும்கூட பெரும்பாலோர் இதன்மீது நம்பிக்கை கொண்டு இருக்கின்றார்கள். மேலும், இறைநிராகரிப்பாளர்கள் மட்டுமே நம்முடைய வசனங்களை மறுக்கின்றனர். </span>
<span>29:48 (நபியே!) இதற்கு முன்னர் எந்த வேதத்தையும் நீர் படித்ததில்லை. உம்முடைய கையால் எழுதியதுமில்லை. அவ்வாறிருந்திருந்தால் அசத்தியவாதிகள் சந்தேகம் கொண்டிருப்பார்கள். </span>
<span>29:49 உண்மையில் இவை ஞானம் வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் தெளிவான சான்றுகளாய்த் திகழ்கின்றன. நம்முடைய வசனங்களை எவரும் மறுப்பதில்லை கொடுமைக்காரர்களைத் தவிர! </span>
<span>29:50 இவர்கள் கேட்கின்றார்கள், “இவருடைய இறைவனிடமிருந்து இவருக்கு ஏன் சான்றுகள் இறக்கியருளப்படவில்லை” என்று! அதற்கு நீர் கூறும்: “சான்றுகள் அல்லாஹ்விடம் உள்ளன. நானோ தெள்ளத்தெளிவாக எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன்.”</span>
<span>29:51 அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுகின்ற வேதத்தை உம் மீது நாம் இறக்கியருளி இருப்பது அவர்களுக்குப் போதுமான சான்றாக இல்லையா? திண்ணமாக, நம்பிக்கை கொள்ளும் சமூகத்தினர்க்கு இதில் கருணையும் நல்லுரையும் இருக்கின்றன. </span>
<span>29:52 (நபியே!) நீர் கூறும்: “எனக்கும் உங்களுக்குமிடையில் சாட்சி அளிக்க அல்லாஹ்வே போதுமானவன். அவன் வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்தையும் அறிகின்றான். எவர்கள் அசத்தியத்தை ஏற்றுக் கொள்கின்றார்களோ மேலும், அல்லாஹ்வை நிராகரிக்கின்றார்களோ, அவர்கள்தாம் இழப்புக்கு உரியவர்கள்.”</span>
<span>29:53 விரைவில் வேதனையைக் கொண்டு வருமாறு உம்மிடம் இவர்கள் கோருகின்றார்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட காலம் நிர்ணயிக்கப்படாதிருந்தால் அவர்கள்மீது வேதனை வந்துவிட்டிருக்கும். மேலும், திண்ணமாக, அது (உரிய நேரத்தில்) அவர்களிடம் திடீரென வந்தே தீரும். அதைப்பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாத நிலையில்! </span>
<span>29:54 வேதனையை விரைவில் கொண்டு வருமாறு இவர்கள் உம்மிடம் கோருகின்றார்கள். அதே நேரத்தில் நரகம் இந்நிராகரிப்பாளர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றது! </span>
<span>29:55 மேலும், அந்நாளை (இவர்கள் அறிந்து கொள்வார்கள்) அன்று வேதனை இவர்களின் மேலிருந்தும், இவர்களின் கால்களுக்குக் கீழிருந்தும் இவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். மேலும், கூறுவான்: “இப்பொழுது சுவையுங்கள், நீங்கள் செய்து கொண்டிருந்த இழிசெயல்களின் விளைவை!”</span>
<span>29:56 நம்பிக்கை கொண்ட என்னுடைய அடியார்களே! திண்ணமாக, என்னுடைய பூமி விசாலமானது. எனவே, எனக்கே நீங்கள் அடிபணியுங்கள். </span>
<span>29:57 ஒவ்வொரு உயிரும் மரணத்தைச் சுவைக்க வேண்டியதாய் இருக்கின்றது. பின்னர் நீங்கள் அனைவரும் நம்மிடமே திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்!</span>
<span>29:58 எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்திருக்கின்றார்களோ, அவர்களை சுவனத்தின் உயர்ந்த மாளிகைகளில் வசிக்கச் செய்வோம். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அங்கே அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள். நற்செயல் புரிபவர்களுக்குரிய இக்கூலி எத்துணைச் சிறப்பானது! </span>
<span>29:59 அவர்கள் எப்படிப்பட்டவர்களெனில் பொறுமையை மேற்கொண்டார்கள்; தம் இறைவனேயே முழுவதுஞ் சார்ந்திருக்கின்றார்கள் </span>
<span>29:60 எத்தனையோ பிராணிகள் உள்ளன; அவை தாமே தமது உணவைச் சுமந்து கொண்டு திரிவதில்லை. அல்லாஹ் அவற்றுக்கு உணவளிக்கின்றான். உங்களுக்கும் அவன்தான் உணவளிக்கின்றான். அவன் யாவற்றையும் செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>29:61 வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தி வைத்திருப்பவனும் யார் என்று நீர் இவர்களிடம் கேட்டால் திண்ணமாக, இவர்கள் ‘அல்லாஹ்’ என்று பதில் தருவார்கள். பிறகு, இவர்கள் எங்கிருந்து ஏமாற்றப்படுகின்றார்கள்! </span>
<span>29:62 அல்லாஹ் தன்னுடைய அடிமைகளில் தான் நாடுவோருக்கு உணவைத் தாராளமாய் வழங்குகின்றான். தான் நாடுவோருக்கு அளவோடு வழங்குகின்றான். திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். </span>
<span>29:63 மேலும், வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்து அதன் மூலம் இறந்துகிடக்கின்ற பூமியை உயிர்ப்புறச் செய்தவன் யார்? என்று இவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று திண்ணமாக அவர்கள் பதில் சொல்வார்கள். ‘அல்ஹம்துலில்லாஹ்’ புகழ் அனைத்தும் இறைவனுக்கு உரியது என்று கூறும். ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்வதில்லை. </span>
<span>29:64 மேலும், இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், கேளிக்கையும் அன்றி வேறொன்றுமில்லை. நிலையாக வாழ்வதற்கான இல்லம் மறுமை இல்லம்தான்! அந்தோ, இவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே! </span>
<span>29:65 இந்த மக்கள் கப்பலில் பயணமாகும்போது தங்களுடைய தீனைமார்க்கத்தை அல்லாஹ்வுக்கு உரித்தாக்கிய வண்ணம் அவனிடம் இறைஞ்சுகின்றார்கள். பிறகு, அவன் அவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்துவிட்டால் அவனுக்கு இணை வைக்கத் தொடங்கிவிடுகின்றார்கள். </span>
<span>29:66 அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய ஈடேற்றத்திற்கு நன்றி கொல்வதற்காகவும் உலக வாழ்க்கையின் இன்பத்தை அவர்கள் அனுபவிப்பதற்காகவும்தான்! சரி, விரைவில் இவர்களுக்குத் தெரிந்துவிடும்! </span>
<span>29:67 இவர்களின் அக்கம்பக்கங்களில் இருக்கும் மக்கள் இறாஞ்சிச் செல்லப்படும் நிலையில் இருக்க ஹரமை நாம் அபயமளிக்கும் புனிதத்தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பிறகு என்ன, இவர்கள் அசத்தியத்தை ஏற்றுக்கொள்கின்றார்களா? அல்லாஹ்வுடைய அருட்கொடைக்கு நன்றி கொல்கின்றார்களா? </span>
<span>29:68 அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனைவிட அல்லது தன் முன் சத்தியம் வந்திருக்கும்போது அதைப் பொய்யென வாதிட்டவனைவிடப் பெரும் கொடுமைக்காரன் யார்? இத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு நரகம் இருப்பிடமல்லவா? </span>
<span>29:69 மேலும், எவர்கள் நமக்காக ஜிஹாத் செய்கின்றார்களோ அவர்களுக்கு நாம் நம்முடைய வழிகளைக் காண்பிப்போம். மேலும், திண்ணமாக, அல்லாஹ் நற்பணியாற்றுபவர்களுடன் இருக்கின்றான். </span>
</div><div>
<span>அர்ரூம்</span>
<span>30:1 அலிஃப்லாம்மீம். </span>
<span>30:2 ரோமானியர் அண்டை நாட்டிலே தோல்வி அடைந்துள்ளனர். </span>
<span>30:3 மேலும், அவர்கள் தங்களுடைய இந்தத் தோல்விக்குப் பின் சில ஆண்டுகளுக்குள்ளாகவே வெற்றியடைந்துவிடுவார்கள். </span>
<span>30:4 முன்பும் பின்பும் அல்லாஹ்வுக்கே அதிகாரம் உரியதாகும். மேலும், அந்நாளில் அல்லாஹ்வினால் அளிக்கப்பட்ட வெற்றியைக் கண்டு முஸ்லிம்கள் மகிழ்ச்சி கொண்டாடுவார்கள். </span>
<span>30:5 தான் நாடுவோருக்கு அல்லாஹ் உதவி செய்கின்றான். மேலும், அவன் வலிமை மிக்கவனாகவும் பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>30:6 இது அல்லாஹ் அளித்த வாக்குறுதி ஆகும். அல்லாஹ் ஒருபோதும் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதில்லை. ஆயினும், மக்களில் பெரும்பாலோர் அறிவதில்லை. </span>
<span>30:7 மக்கள் உலக வாழ்வின் புறத்தோற்றத்தை மட்டுமே அறிகின்றனர். மறுமையைப் பற்றி அவர்கள் அலட்சியமாக இருக்கின்றனர். </span>
<span>30:8 என்ன, அவர்கள் தங்களைப்பற்றி என்றைக் கேனும் சிந்தித்ததில்லையா? அல்லாஹ் வானங்களையும் பூமியையும் அவற்றிற்கிடையே உள்ள அனைத்துப் பொருட்களையும் சத்தியத்துடனும் ஒரு குறிப்பிட்ட தவணைக்காகவுமே படைத்துள்ளான். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் தங்கள் அதிபதியின் சந்திப்பை நிராகரிப்பவர்களாய் இருக்கின்றனர். </span>
<span>30:9 மேலும், இவர்கள் எப்பொழுதேனும் பூமியில் சுற்றித்திரிந்து தங்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்த்ததில்லையா? அவர்கள் இவர்களைவிட அதிக வலிமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள்; பூமியை நன்கு பண்படுத்தினார்கள்; மேலும், இவர்களைக் காட்டிலும் அதிகமாக அவர்கள் அதில் வளமான வாழ்க்கையை நிர்மாணித்தார்கள். அவர்களிடம் அவர்களுடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். பிறகு, அல்லாஹ் அவர்களுக்கு அக்கிரமம் புரிபவனாக இருந்ததில்லை. ஆனால், தமக்குத் தாமே அவர்கள் அக்கிரமம் புரிந்துகொண்டிருந்தார்கள். </span>
<span>30:10 இறுதியில் எவர்கள் தீவினைகள் செய்து வந்தார்களோ அவர்களுடைய இறுதி முடிவு மிகவும் தீயதாகிவிட்டது. ஏனெனில், அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யென்று கூறி அவற்றைப் பரிகாசம் செய்து கொண்டுமிருந்தார்கள். </span>
<span>30:11 அல்லாஹ்தான் படைப்புகளை முதன்முறையாகப் படைக்கின்றான். பின்னர், அவனே அதை மீண்டும் படைப்பான். அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். </span>
<span>30:12 மேலும், அந்த நேரம் வரும்நாளில் குற்றவாளிகள் நிலைகுலைந்து போவார்கள். </span>
<span>30:13 அவர்கள் ஏற்படுத்தியிருந்த இணைக்கடவுளர்களில் யாரும் அவர்களுக்குப் பரிந்துரைக்கக் கூடியவராக இருக்கமாட்டார்கள். மேலும், அவர்கள் தங்களுடைய இணைக் கடவுள்களை நிராகரிப்பவர்களாகி விடுவார்கள். </span>
<span>30:14 அந்நேரம் வரும்நாளில் (எல்லா மனிதர்களும்) தனித் தனிக் குழுக்களாகப் பிரிந்து போவார்கள். </span>
<span>30:15 எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்துள்ளார்களோ அவர்கள் சுவனத் தோட்டத்தில் மகிழ்ச்சியுடனும் இன்பத்துடனும் தங்க வைக்கப்படுவார்கள். </span>
<span>30:16 மேலும், எவர்கள் நிராகரித்தார்களோ, மேலும், நம்முடைய வசனங்களையும் மறுமைச் சந்திப்பையும் பொய்யென்று கூறியிருந்தார்களோ அவர்கள் வேதனையில் கொண்டு வந்து நிறுத்தப்படுவார்கள். </span>
<span>30:17 எனவே துதியுங்கள் அல்லாஹ்வை நீங்கள் மாலை நேரத்தை அடையும் போதும், காலை நேரத்தை அடையும்போதும்! </span>
<span>30:18 வானங்களிலும் பூமியிலும் புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது. மேலும் (துதியுங்கள் அவனை) நீங்கள் பிற்பகலிலும் மதிய வேளையை அடையும்போதும்! </span>
<span>30:19 அவன் உயிருள்ளவற்றை உயிரில்லாதவற்றிலிருந்து வெளிப்படுத்துகின்றான். உயிரில்லாதவற்றை உயிருள்ளவற்றிலிருந்து வெளிப்படுத்துகின்றான். மேலும், பூமி இறந்து போனதன் பின்னர் அதற்கு உயிரூட்டுகின்றான். இதைப்போன்றுதான் நீங்களும் (மரணமான நிலையிலிருந்து) வெளிக்கொணரப்படுவீர்கள். </span>
<span>30:20 அவனுடைய சான்றுகளில் ஒன்று அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதாகும். பின்னர், திடீரென நீங்கள் மனிதர்களாக இருக்கிறீர்கள்; (பூமியில்) பரவிச் சென்று கொண்டிருக்கிறீர்கள். </span>
<span>30:21 மேலும், அவனுடைய சான்றுகளில் இதுவும் ஒன்றாகும். அவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான்; நீங்கள் அவர்களிடம் அமைதி பெறவேண்டும் என்பதற்காக! மேலும், உங்களிடையே அன்பையும், கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக, சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறையச் சான்றுகள் உள்ளன. </span>
<span>30:22 வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே! திண்ணமாக, இவற்றிலெல்லாம் அறிவுடையோருக்கு நிறையச் சான்றுகள் உள்ளன. </span>
<span>30:23 இரவிலோ பகலிலோ நீங்கள் உறங்குவதும், அவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடுவதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே! திண்ணமாக, (உன்னிப்பாக) செவிமடுக்கும் மக்களுக்கு இவற்றில் நிறையச் சான்றுகள் உள்ளன. </span>
<span>30:24 மேலும், அச்சமும் ஆர்வமும் அளிக்கும் வகையில் அவன் உங்களுக்கு மின்னலைக் காண்பிப்பதும், மேலும், வானிலிருந்து அவன் மழையைப் பொழியச் செய்வதும், அதன் மூலம் பூமிக்கு அது இறந்துபோன பின் உயிர் கொடுப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையாகும். திண்ணமாக, சிந்திக்கக்கூடிய மக்களுக்கு இவற்றில் பல சான்றுகள் உள்ளன. </span>
<span>30:25 மேலும், வானமும் பூமியும் அவனுடைய கட்டளைப்படி நிலை பெற்றிருப்பதும் அவனுடைய சான்றுகளுள் ஒன்றாகும். பிறகு, அவன் உங்களைப் பூமியிலிருந்து (வெளியேறி வரும்படி) அழைத்தான். ஒரே ஓர் அழைப்பில் திடீரென நீங்கள் வெளியேறி வருவீர்கள். </span>
<span>30:26 வானங்களிலும் பூமியிலும் இருப்பவர் அனைவரும் அவனுடைய அடிமைகளே! அனைவரும் முழுக்க முழுக்க அவனுக்கே கீழ்ப்படிகின்றனர். </span>
<span>30:27 அவனே முதன் முறையாகப் படைக்கின்றான். பிறகு, அவனே அதை மறுமுறையும் படைப்பான். இது அவனுக்கு மிகவும் எளிதானது. வானங்களிலும் பூமியிலும் அவனுடைய தன்மை மிக உயர்ந்ததாகும். மேலும், அவன் வலிமை மிக்கவன்; நுண்ணறிவாளன். </span>
<span>30:28 அவன் உங்களுக்கு உங்களிலிருந்தே ஓர் உவமையை கூறுகின்றான்: உங்களுக்குச் சொந்தமான அடிமைகளில் யாராகிலும் நாம் உங்களுக்கு வழங்கிய செல்வத்தில் உங்களுக்குச் சரியான பங்காளிகளாய் இருக்கின்றார்களா? மேலும், நீங்கள் உங்களுக்குச் சமமானவர்களுக்கு பரஸ்பரம் அஞ்சுவதுபோல் அவர்களுக்கு அஞ்சுகின்றீர்களா? சிந்தித்துச் செயல்படும் மக்களுக்கு இவ்வாறே நாம் நம்முடைய வசனங்களைத் தெளிவாக விளக்குகின்றோம். </span>
<span>30:29 ஆயினும், இந்த அக்கிரமக்காரர்கள் எவ்வித அறிவுமின்றி தங்கள் மன இச்சைகளைப் பின்பற்றிச் செல்கின்றார்கள். அல்லாஹ் யாரை வழிகெடுத்துவிட்டானோ, இனி அவருக்கு வேறு எவரால் வழிகாட்ட முடியும்? இத்தகையோருக்கு உதவியாளர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். </span>
<span>30:30 எனவே (நபியே, இன்னும் நபியைப் பின்பற்றுபவர்களே) ஒருமனப்பட்ட நிலையில் உங்களுடைய முகத்தை இந்த தீனின் பக்கம் நிலைப்படுத்துங்கள். அல்லாஹ் மனிதர்களை எந்த இயற்கை அமைப்பில் படைத்திருக்கின்றானோ அந்த இயற்கை அமைப்பில் நிலைத்திருங்கள். அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட அமைப்பில் மாறுதல் செய்ய முடியாது. இதுதான் முற்றிலும் நேரானசெம்மையான மார்க்கமாகும். ஆயினும் பெரும்பாலான மக்கள் அறிவதில்லை. </span>
<span>30:31 அல்லாஹ்வின் பக்கம் திரும்பியவர்களாய் (அதில் நிலைத்திருங்கள்). மேலும், அவனுக்கு அஞ்சுங்கள். தொழுகையை நிலைநாட்டுங்கள். மேலும், இணைவைப்பாளர்களுடன் நீங்கள் சேர்ந்து விடாதீர்கள்; </span>
<span>30:32 அவர்களோ தங்களுடைய மார்க்கத்தைத் தனித்தனியாகப் பிரித்து, பல குழுக்களாகப் பிரிந்து விட்டார்கள். மேலும், அவர்களில் ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்கள் தங்களிடம் இருப்பவற்றைக் கொண்டு மகிழ்ச்சி அடைகின்றார்கள். </span>
<span>30:33 மக்க(ளின் நிலைமை என்னவெனில், அவர்க)ளுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டுவிட்டால், தங்களுடைய இறைவனின் பக்கம் திரும்பியவாறு அவனிடம் இறைஞ்சுகின்றார்கள். பிறகு, அவன் தன்னுடைய அருட்கொடையில் சிறிதளவை அவர்களுக்குச் சுவைக்கக் கொடுத்தால், உடனே அவர்களில் ஒரு பிரிவினர் இறைவனுக்கு இணை வைக்கத் தொடங்கி விடுகின்றனர்; </span>
<span>30:34 நாம் அவர்களுக்குச் செய்த உதவிக்கு நன்றி கொல்லும் பொருட்டு! சரி, அனுபவித்துக் கொள்ளுங்கள். விரைவில் உங்களுக்குத் தெரிந்துவிடும்!</span>
<span>30:35 இவர்கள் செய்துவரும் இணைவைப்புச் செயல் சரியானதுதான் எனச் சான்று பகர்கின்ற ஏதேனும் ஆதாரத்தை நாம் இவர்கள் மீது இறக்கி வைத்திருக்கின்றோமோ, என்ன?</span>
<span>30:36 நாம் மக்களுக்கு ஏதேனும் அருட்கொடையை சுவைக்கக் கொடுத்தால், அதில் அவர்கள் பூரித்துப் போய்விடுகின்றார்கள். மேலும், தாங்கள் செய்த தீவினைகளினால் அவர்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்துவிட்டால் உடனே அவர்கள் நிராசை அடைந்துவிடுகின்றார்கள். </span>
<span>30:37 அல்லாஹ், தான் நாடுகின்றவர்களுக்கு வாழ்வாதாரத்தை தாராளமாகக் கொடுக்கின்றான்; (தான் நாடுவோர்க்கு) அளவோடு கொடுக்கின்றான் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? திண்ணமாக, நம்பிக்கை கொள்ளும் சமூகத்தினர்க்கு இதில் நிறையச் சான்றுகள் உள்ளன. </span>
<span>30:38 எனவே (நம்பிக்கையாளனே!) உறவினர்க்கு அவருடைய உரிமையை வழங்கிவிடு; மேலும், வறியவருக்கும் பயணிகளுக்கும் (அவர்களின் உரிமையையும் தந்துவிடு). அல்லாஹ்வின் திருப்தியைப் பெற விரும்புவோர்க்கு இதுவே மிகச் சிறந்த வழிமுறையாகும். மேலும், அவர்களே வெற்றியடைபவர்களாவர். </span>
<span>30:39 மக்களுடைய பொருள்களுடன் கலந்து பெருக வேண்டும் என்பதற்காக நீங்கள் வட்டிக்கு விடும் பணம் அல்லாஹ்விடத்தில் பெருகுவதில்லை. ஆனால், அல்லாஹ்வின் உவப்பைப் பெறவேண்டுமென நாடியவர்களாய் நீங்கள் வழங்கும் ஜகாத்அதனை வழங்குவோர்தாம் உண்மையில் தம்முடைய செல்வத்தைப் பெருக்கிக் கொள்பவர்களாவர். </span>
<span>30:40 அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின்னர் உங்களுக்கு உணவளித்தான். பின்னர் அவன் உங்களை மரணமடையச் செய்கின்றான்; பிறகு மீண்டும் உங்களை உயிர்ப்பிப்பான். என்ன, நீங்கள் இணை வைக்கும் தெய்வங்களில் யாராவது இவற்றுள் எதையாவது செய்பவர் இருக்கின்றாரா? அவன் தூய்மையானவன்; இம் மக்கள் செய்யும் இணைவைப்புச் செயல்களைவிட்டு அவன் மிக உயர்ந்தவன். </span>
<span>30:41 மக்கள் தங்கள் கைகளால் எதைச் சம்பாதித்தார்களோ அதன் காரணமாக தரையிலும் கடலிலும் அராஜகமும் குழப்பமும் தோன்றிவிட்டிருக்கின்றன; அவர்கள் செய்த சில செயல்களின் விளைவை அவர்கள் சுவைப்பதற்காக! (அதனால்) அவர்கள் விலகிவிடக்கூடும். </span>
<span>30:42 (நபியே! இவர்களிடம்) கூறும்: “பூமியில் சுற்றித் திரிந்து பாருங்கள். முன்பு வாழ்ந்து சென்ற மக்களின் கதி என்னவாயிற்று என்பதை! அவர்களில் பெரும்பாலோர் இணைவைப்பாளர்களாகவே இருந்தனர்.” </span>
<span>30:43 எனவே (நபியே!) உமது முகத்தை இந்த நேரிய மார்க்கத்தின் பக்கம் உறுதியுடன் நிலைப்படுத்தி வைப்பீராக; அல்லாஹ்விடமிருந்து எவராலும் எந்த விதத்திலும் தடுத்து நிறுத்த முடியாத ஒருநாள் வருமுன்! அந்நாளில் மக்கள் பிளவுண்டு, தனித்தனியே பிரிந்து சென்று விடுவர். </span>
<span>30:44 எவன் நிராகரித்தானோ அவனுடைய நிராகரிப்பு அவனுக்குக் கேடாக முடியும். மேலும், எவர்கள் நற்செயல் புரிந்தார்களோ அவர்கள் தங்களுக்காகவே (வெற்றியின் வழியைத்) தயார்படுத்துகின்றார்கள்; </span>
<span>30:45 இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தோருக்கு அல்லாஹ் தன் அருளிலிருந்து கூலி வழங்குவதற்காக! திண்ணமாக அவன் நிராகரிப்பாளர்களை நேசிப்பதில்லை. </span>
<span>30:46 மேலும், நற்செய்தி கூறுவதற்காக காற்றை அனுப்புவது அவனுடைய சான்றுகளில் உள்ளதாகும்; எதற்காகவெனில், அவனுடைய அருளிலிருந்து உங்களை சுவைக்கச் செய்வதற்காகவும், மேலும், அவனுடைய கட்டளைப்படி கப்பல்கள் செல்வதற்காகவும், நீங்கள் அவனுடைய அருளைத் தேடுவதற்காகவும், அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்துவோராய்த் திகழ்வதற்காகவும்தான்! </span>
<span>30:47 மேலும், நாம் உமக்கு முன்னர் தூதர்களை அவரவருடைய சமூகத்தாரிடையே அனுப்பினோம். அவர்கள் அம்மக்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். பின்னர், எவர்கள் குற்றம் புரிந்தார்களோ அவர்களிடம் நாம் பழிவாங்கினோம். நம்பிக்கையாளர்களுக்கு உதவி புரிவது நம்மீது கடமையாக இருந்தது. </span>
<span>30:48 அல்லாஹ்தான் காற்றை அனுப்புகின்றான்; அது மேகத்தைக் கிளப்பிவிடுகின்றது. பிறகு அவன் நாடும் விதத்தில் மேகங்களை வானத்தில் பரப்புகின்றான். அவற்றைப் பல துண்டுகளாய்ப் பிரிக்கின்றான். பின்னர் அவற்றுக்கிடையில் இருந்து மழைத்துளிகள் உதிர்ந்து விழுவதை நீர் காண்கின்றீர். தன் அடிமைகளில் தான் நாடுபவர்கள் மீது அவன் இந்த மழையைப் பொழிவிக்கும்போது அவர்கள் உடனே மகிழ்ந்து போய்விடுகின்றார்கள். </span>
<span>30:49 ஆனால், அவர்கள் அது பொழியப்படுவதற்கு முன் நிராசையடைந்துவிட்டிருந்தார்கள். </span>
<span>30:50 அல்லாஹ்வுடைய அருளின் பலன்களைப் பாருங்கள். இறந்து கிடக்கும் பூமியை அவன் எவ்வாறு உயிர்ப்பிக்கின்றான்? திண்ணமாக, அவன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கக்கூடியவனாவான். மேலும், அவன் யாவற்றின்மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கின்றான். </span>
<span>30:51 மேலும், நாம் காற்றை அனுப்பி, அதனால் அவர்களின் பயிர்கள் மஞ்சள் நிறமாகிப் போவதை அவர்கள் காண்பார்களானால், அப்பொழுது அவர்கள் நன்றி கொன்றவர்களாகி விடுகின்றார்கள். </span>
<span>30:52 (நபியே!) இறந்தவர்களைச் செவியேற்கச் செய்ய நிச்சயமாக உம்மால் முடியாது. புறங்காட்டிச் செல்லும் செவிடர்களை உம்முடைய அழைப்பைச் செவியேற்கும்படிச் செய்யவும் உம்மால் முடியாது. </span>
<span>30:53 மேலும், குருடர்களை வழிகேட்டிலிருந்து வெளியேற்றி, அவர்களை நேர்வழியில் கொண்டு வரவும் உம்மால் முடியாது. ஆனால், எவர்கள் நம்முடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொண்டு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாய் இருக்கின்றார்களோ அவர்களை மட்டுமே உம்மால் செவியேற்கச் செய்ய முடியும். </span>
<span>30:54 நீங்கள் பலவீனமான நிலையிலிருந்தபோது உங்களைப் படைக்கத் தொடங்கியவன் அல்லாஹ்தான்! பிறகு அந்தப் பலவீனத்தை அடுத்து உங்களுக்கு வலிமையைத் தந்தான். பின்னர் அந்த வலிமையை அடுத்து உங்களைப் பலவீனர்களாகவும் முதியவர்களாகவும் ஆக்கினான். அவன் எதை நாடுகின்றானோ அதைப் படைக்கின்றான். மேலும், அவன் யாவற்றையும் அறிந்தவனாகவும், யாவற்றின்மீதும் ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான். </span>
<span>30:55 மேலும், அந்த நேரம் வரும்போது குற்றவாளிகள், “நாங்கள் ஒரு நாழிகை நேரத்திற்குமேல் தங்கவில்லை” என்று சத்தியம் செய்து கூறுவார்கள். இதே போன்றுதான் இவர்கள் (உலக வாழ்க்கையில்) ஏமாற்றப்பட்டிருந்தார்கள். </span>
<span>30:56 ஆனால் ஞானமும், இறைநம்பிக்கையும் வழங்கப்பட்டிருந்தவர்கள் கூறுவர்: “அல்லாஹ்வின் பதிவேட்டிலுள்ளபடி, மரணித்தவர்களை மீண்டும் எழுப்பும் நாள்வரை நீங்கள் தங்கியிருந்திருக்கின்றீர்கள். இதோ, எழுப்பப்படும் அந்த நாள்தான் இது. ஆயினும், நீங்கள் அறியாதவர்களாய் இருந்தீர்கள்.” </span>
<span>30:57 ஆக, அக்கிரமக்காரர்களுக்கு அந்நாளில் அவர்களுடைய சாக்குபோக்கு எந்த பலனையும் அளித்திடாது. மன்னிப்புக் கோரும்படி அவர்களிடம் கூறப்படவுமாட்டாது. </span>
<span>30:58 நாம் இந்தக் குர்ஆனில் மக்களுக்கு விதவிதமாகப் புரியவைத்திருக்கின்றோம். நீர் எந்தச் சான்றைக் கொண்டு வந்தாலும் சரி, ஏற்க மறுத்து விட்டவர்கள் ‘நீர் அசத்தியத்தில் இருக்கின்றீர்’ என்று கூறுவார்கள். </span>
<span>30:59 இவ்வாறு, அறிவில்லாதவர்களின் இதயங்களில் அல்லாஹ் முத்திரையிட்டுவிடுகின்றான். </span>
<span>30:60 எனவே (நபியே!) பொறுமையாக இருப்பீராக! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. உறுதியான நம்பிக்கை கொள்ளாதோர் உம்மை மதிப்பற்றவராக (அலட்சியத்துக்குரியவராக) காணக்கூடாது. </span>
</div><div>
<span>லுக்மான்</span>
<span>31:1 அலிஃப், லாம், மீம், </span>
<span>31:2 இவை ஞானம் செறிந்த வேதத்தின் வசனங்களாகும். </span>
<span>31:3 இது நற்செயல் புரிபவர்களுக்கு வழிகாட்டியாகவும் அருட்கொடையாகவும் திகழ்கின்றது. </span>
<span>31:4 அவர்களோ தொழுகையை நிலைநிறுத்துகிறார்கள். ஜகாத்தைக் கொடுக்கிறார்கள். மேலும், மறுமையை உறுதியாக நம்புகின்றார்கள். </span>
<span>31:5 இத்தகையவர்கள்தாம் தங்கள் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருக்கிறார்கள். மேலும், இவர்கள்தாம் வெற்றி பெறுபவர்கள். </span>
<span>31:6 மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கின்றார்கள். மன மயக்கத்தை ஏற்படுத்தும் செய்திகளை அவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். அவர்கள், எவ்வித அறிவுமின்றி மக்களை அல்லாஹ்வின் வழியை விட்டு பிறழச் செய்வதற்காகவும் அந்த வழியி(ல் வருமாறு விடுக்கப்படும் அழைப்பி)னை ஏளனம் செய்வதற்காகவும்தான்! இத்தகையோருக்கு இழிவுபடுத்தும் வேதனை உள்ளது. </span>
<span>31:7 அவனிடம் நம் வசனங்கள் ஓதிக்காண்பிக் கப்பட்டால், அவனுடைய காதுகளில் மந்தம் ஏற்பட்டிருப்பது போன்றும், அவற்றை அவன் கேளாதது போன்றும் தற்பெருமையுடன் முகத்தைத் திருப்பிக் கொள்கின்றான். எனவே, துன்புறுத்தும் வேதனை குறித்து அவனுக்கு நற்செய்தி கூறிவிடும்! </span>
<span>31:8 ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ, அவர்களுக்கு அருள் நிறைந்த சுவனத்தோப்புகள் உள்ளன. </span>
<span>31:9 அங்கு அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். மேலும், இது அல்லாஹ்வின் வலுவான வாக்குறுதியாகும். அவன் வலிமை மிக்கவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>31:10 அவன் உங்கள் பார்வையில் படக்கூடிய தூண்கள் எதுவுமின்றி வானங்களைப் படைத்துள்ளான். மேலும், அவன் மலைகளை பூமியில் ஊன்றியுள்ளான்; அது உங்களோடு சேர்ந்து சரிந்துவிடக்கூடாது என்பதற்காக! மேலும் எல்லாவிதமான பிராணிகளையும் பூமியில் பரவச் செய்திருக்கின்றான். மேலும், வானிலிருந்து மழை பொழிய வைத்து பூமியில் விதவிதமான பயன்மிகு தாவரங்களை முளைக்கச் செய்தான். </span>
<span>31:11 இவை யாவும் அல்லாஹ்வின் படைப்புகள்! இனி அவனை விடுத்து மற்றவர்கள் என்ன படைத்துள்ளனர் என்பதை எனக்குக் காட்டுங்கள்! உண்மை யாதெனில், அக்கிரமக்காரர்கள் வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடக்கின்றார்கள். </span>
<span>31:12 நாம் லுக்மானுக்கு ஞானத்தை வழங்கியிருந்தோம். நீர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவீராக! யாரேனும் நன்றி செலுத்தினால் அவர் செலுத்தும் நன்றி அவருக்கே பயனளிக்கும். யாரேனும் நன்றி கொன்றால் உண்மையில் அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் தனக்குத் தானே புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான். </span>
<span>31:13 மேலும், லுக்மான் தம் மகனுக்கு அறிவுரை நல்கியபோது கூறியதை நினைவுகூருங்கள்: “என் அன்பு மகனே! நீ இறைவனுக்கு எதையும் இணையாக்கிவிடாதே! உண்மையில் இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அக்கிரமமாகும்” </span>
<span>31:14 மேலும், பெற்றோர் நலனைப் பேணவேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவனுடைய தாய் நலிவுக்கு மேல் நலிவை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள். மேலும், அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன. (இதனால்தான் நாம் அவனுக்கு அறிவுரை கூறினோம்.) எனக்கு நன்றி செலுத்து. மேலும், உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து. என் பக்கமே நீ திரும்பிவர வேண்டியுள்ளது. </span>
<span>31:15 ஆனால், எதனை நீ அறியமாட்டாயோ, அதனை என்னோடு நீ இணை கற்பிக்க வேண்டுமென்று அவர்கள் இருவரும் உன்னை நிர்ப்பந்தித்தால் அவர்களுடைய பேச்சை நீ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதே! இவ்வுலகில் அவர்களுடன் நல்லமுறையில் நீ நடந்துகொள்! மேலும், யார் என் பக்கம் மீண்டுள்ளாரோ அவருடைய வழியை நீ பின்பற்று! பிறகு நீங்கள் அனைவரும் என் பக்கமே திரும்ப வேண்டியுள்ளது. அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவித்துவிடுவேன். </span>
<span>31:16 (மேலும், லுக்மான் கூறினார்:) “என் அருமை மகனே! ஏதேனும் ஒரு பொருள் கடுகளவு இருந்தாலும் சரி, மேலும் அது ஏதேனும் ஒரு பாறையில் அல்லது வானங்களில் அல்லது பூமியில் எங்கு மறைந்திருப்பினும் சரி, அல்லாஹ் அதனை வெளிப்படுத்துவான். அவன் நுண்மையானவனும் எல்லாம் தெரிந்தவனுமாவான். </span>
<span>31:17 என் அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு. மேலும், நன்மை புரியும்படி ஏவு; தீமையைத் தடு! மேலும், எந்தத் துன்பம் உனக்கு நேர்ந்தாலும் அதனைப் பொறுத்துக்கொள்! நிச்சயம் இவையெல்லாம் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ள விஷயங்களாகும். </span>
<span>31:18 மேலும், மக்களைவிட்டு முகத்தைத் திருப்பியவாறு பேசாதே! பூமியில் செருக்காய் நடக்காதே! அகந்தையும் ஆணவமும் கொண்ட எவனையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. </span>
<span>31:19 உனது நடையில் மிதமான நிலையை மேற்கொள். உன்னுடைய குரலைச் சற்று தாழ்த்திக்கொள். திண்ணமாக, அனைத்துக் குரல்களிலும் மிகவும் அருவருப்பானது, கழுதைகளின் குரலாகும்.”</span>
<span>31:20 நீங்கள் பார்க்கவில்லையா? வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான். மேலும், வெளிப்படையான மற்றும் மறைவான தன்னுடைய அருட்கொடைகளை உங்களுக்கு அவன் நிறைவாக்கித் தந்துள்ளான். (இவ்வாறிருந்தும்) மனிதர்களில் சிலர் அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்கின்றார்கள்; எவ்வித ஞானமும், வழிகாட்டலும் அல்லது ஒளிதரும் வேதமும் அவர்களிடம் இல்லாமலேயே! </span>
<span>31:21 “அல்லாஹ் இறக்கி வைத்ததைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், “இல்லை, எங்கள் மூதாதையர்களை எவ்வழியில் கண்டோமோ, அவ்வழியையே நாங்கள் பின்பற்றுவோம்” என்று அவர்கள் கூறுகின்றார்கள். கொழுந்து விட்டெரியும் நெருப்பின் பக்கம் ஷைத்தான் அவர்களை அழைத்துக் கொண்டிருந்தாலுமா, இவர்கள் அவர்களைப் பின்பற்றுவார்கள்?</span>
<span>31:22 மேலும், எவர் தன்னுடைய நடத்தையையும் நல்லதாக்கிக் கொண்டு தன்னை முற்றிலுமாக அல்லாஹ்விடம் ஒப்படைத்தாரோ அவர் உண்மையில் நம்பகமான உறுதியானதொரு பிடிமானத்தை இறுகப்பிடித்துக் கொண்டவராவார். மேலும், அனைத்து விவகாரங்களுடையவும் இறுதி முடிவு அல்லாஹ்விடமே உள்ளது. </span>
<span>31:23 இனி யாரேனும் நிராகரித்தால், அவனுடைய நிராகரிப்பு உம்மைக் கவலையில் ஆழ்த்திட வேண்டாம். எம்மிடமே அவர்கள் திரும்பி வரவேண்டியுள்ளது. அப்போது அவர்கள் என்ன செய்து விட்டு வந்துள்ளார்கள் என்பதை அவர்களுக்கு நாம் அறிவித்து விடுவோம். நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களில் மறைந்திருக்கும் இரகசியங்களை அறிந்தவனாக இருக்கின்றான். </span>
<span>31:24 சொற்ப காலம் உலகில் இன்பம் அனுபவித்துக் கொண்டிருக்க அவர்களுக்கு நாம் வாய்ப்பளித்துக் கொண்டிருக்கின்றோம். பிறகு கடினமான ஒரு வேதனையின் பக்கம் அவர்களை நிர்ப்பந்தமாக இழுத்துக் கொண்டுவருவோம். </span>
<span>31:25 வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார் என்று நீர் இவர்களிடம் கேட்டால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்தான் என்று கூறுவார்கள். “அல்ஹம்துலில்லாஹ்” (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று நீர் கூறும். ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் அறிவதில்லை. </span>
<span>31:26 வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை. திண்ணமாக, அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் தனக்குத்தானே புகழுக் குரியவனுமாவான். </span>
<span>31:27 பூமியிலுள்ள மரங்கள் அனைத்தும் எழுதுகோல்களானாலும், கடல் முழுவதும் (மையாகிவிட்டாலும்) அதற்கு மேல் இன்னும் ஏழு கடல்களின் மை அளித்து உதவினாலும்கூட அல்லாஹ்வின் வாக்குகள் (எழுதித்) தீர்ந்து போகமாட்டா. திண்ணமாக அல்லாஹ் வலிமைமிக்கவனும் நுண்ணறிவாளனுமாவான். </span>
<span>31:28 மனிதர்களாகிய உங்களைப் படைப்பதும், பின்னர், மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவதும் (அவனைப் பொறுத்து) ஒரே ஓர் உயிரைப் (படைத்துப் பின்னர் உயிர் கொடுத்து எழுப்புவது) போன்றதேயாகும். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான். </span>
<span>31:29 நீங்கள் காணவில்லையா? அல்லாஹ்தான் இரவைப் பகலில் கோத்துக்கொண்டு வருகின்றான். பகலை இரவில் கோத்துக் கொண்டு வருகின்றான். மேலும், அவன் சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தி வைத்துள்ளான். ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை இயங்கிக் கொண்டிருக்கின்றது. மேலும், நீங்கள் செய்கின்றவற்றை, அல்லாஹ் நன்கு புரிந்தவன் (என்பதையும் நீங்கள் அறியவில்லையா?) </span>
<span>31:30 இவற்றிற்குக் காரணம் அல்லாஹ்தான் சத்தியமானவன் என்பதும், அவனைத் தவிர இவர்கள் வணங்குபவை அனைத்தும் அசத்தியமானவை என்பதும், மேலும், அல்லாஹ்வே உயர்ந்தவனாகவும் மேலானவனாகவும் இருக்கின்றான் என்பதுமேயாகும்!</span>
<span>31:31 நீங்கள் காணவில்லையா? அல்லாஹ்வின் அருளினால் கப்பல் கடலில் செல்கின்றது; அவன் தன்னுடைய சான்றுகளில் சிலவற்றை உங்களுக்குக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக! மேலும், பொறுமையாளராகவும், நன்றி செலுத்துபவராகவும் உள்ள ஒவ்வொருவருக்கும் உண்மையில் இதில் அநேக சான்றுகள் உள்ளன. </span>
<span>31:32 மேலும் (கடலில்) மலைகளைப் போன்ற அலை இவர்களைச் சூழ்ந்துகொண்டால், இவர்கள் தங்கள் தீனை மார்க்கத்தை அல்லாஹ்வுக்கே முற்றிலும் உரித்தாக்கியவர்களாய் அவனிடம் பிரார்த்திக்கின்றார்கள். பின்னர் அவன் அவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்க்கும்போது அவர்களில் சிலர் மிதமான போக்கைக் கைக்கொள்கின்றனர். வேறு யாரும் நம்முடைய சான்றுகளை மறுப்பதில்லை; பெரும் துரோகிகளையும், முற்றிலும் நன்றி கெட்டவர்களையும் தவிர!</span>
<span>31:33 மனிதர்களே! உங்கள் அதிபதியின் கோபத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். மேலும், ஒரு நாளைக் குறித்து அஞ்சுங்கள். அன்று எந்தத் தந்தையும் தன் மகனுக்காக எவ்வித உதவியும் செய்ய முடியாது. மேலும், எந்த மகனும் தன் தந்தைக்காக எவ்வித உதவியும் செய்ய முடியாது. நிச்சயமாக, அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. எனவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திட வேண்டாம். மேலும், ஏமாற்றுக்காரனும் அல்லாஹ்வின் விஷயத்தில் உங்களை ஏமாற்றிவிட வேண்டாம். </span>
<span>31:34 (இறுதித் தீர்ப்புக்குரிய) அந்த வேளையைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையைப் பொழிவிக்கின்றான். அன்னையரின் கருவறைகளில் வளர்ந்து கொண்டிருப்பவை என்ன என்பதையும் அவனே அறிவான். எந்த மனிதனும், அவன் நாளை என்ன சம்பாதிக்கப் போகின்றான் என்பதை அறிவதில்லை. தான் எந்தப் பூமியில் மரணமடைவோம் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது. திண்ணமாக, அல்லாஹ்தான் யாவற்றையும் நன்கு அறிபவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான். </span>
</div><div>
<span>அஸ்ஸஜ்தா</span>
<span>32:1 அலிஃப், லாம், மீம். </span>
<span>32:2 எவ்வித ஐயமுமின்றி அகில உலகின் அதிபதியிடமிருந்தே இவ்வேதம் இறக்கியருளப்பட்டிருக்கின்றது. </span>
<span>32:3 “இவர் சுயமாக இதனை இயற்றியுள்ளார்” என்று இம்மக்கள் கூறுகின்றார்களா, என்ன? அவ்வாறில்லை. மாறாக, இது உம் இறைவனிடமிருந்து வந்த சத்தியமேயாகும்; அவர்களிடம் உமக்கு முன்பு எச்சரிக்கை செய்பவர் எவரும் வந்திருக்காத இந்தச் சமுதாயத்தினரை நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக! அவர்கள் அதன் மூலம் நேர்வழி பெறக்கூடும்!</span>
<span>32:4 அல்லாஹ் எத்தகையவன் எனில், வானங்களையும் பூமியையும் அவற்றிற்கிடையிலுள்ள அனைத்துப் பொருள்களையும் ஆறுநாட்களில் படைத்தான். பின்னர், அர்ஷின்* மீது அமர்ந்தான். அவனைத் தவிர உங்களுக்கு பாதுகாப்பளிப்பவரும் யாரும் இல்லை. மேலும், அவனிடம் பரிந்துரை செய்பவரும் எவருமில்லை. இனியும் நீங்கள் உணர்ந்துகொள்ள மாட்டீர்களா, என்ன? </span>
<span>32:5 அவன் வானங்கள் முதல் பூமி வரை உலகின் எல்லாக் காரியங்களையும் நிர்வகிக்கின்றான். அந்நிர்வாகத்தைப் பற்றிய அறிக்கை ஒருநாள் அவனிடம் உயர்ந்து செல்கின்றது. அந்நாள் உங்கள் கணக்குப்படி ஓராயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும். </span>
<span>32:6 அவன்தான் மறைவான மற்றும் வெளிப்படையான அனைத்தையும் நன்கறிந்தவனாகவும், வலிமை மிக்கவனாகவும், பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>32:7 அவன் படைத்த எந்த ஒரு பொருளையும் அழகாகவே படைத்துள்ளான். அவன் களிமண்ணிலிருந்து, மனிதனைப் படைக்கத் தொடங்கினான். </span>
<span>32:8 பின்னர் அவனுடைய சந்ததிகளை அற்பமான நீரைப் போன்ற ஒருவித சத்திலிருந்து படைத்தான். </span>
<span>32:9 பிறகு, குறைபாடு இல்லாதவாறு அவனைச் சீரமைத்து அவனுள் தன்னுடைய உயிரை ஊதினான். மேலும், உங்களுக்குக் காதுகளையும், இதயங்களையும் கொடுத்தான். நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள். </span>
<span>32:10 மேலும், “நாம் மண்ணோடு மண்ணாய்க் கலந்துவிட்ட பிறகு மீண்டும் புதிதாய்ப் படைக்கப்படுவோமா?” என்று இவர்கள் கேட்கின்றார்கள். உண்மை என்னவெனில், இவர்கள் தங்களுடைய இறைவனின் சந்திப்பையே நிராகரிப்பவர்களாய் இருக்கின்றார்கள். </span>
<span>32:11 இவர்களிடம் கூறும்: “உங்கள்மீது நியமிக்கப்பட்ட மரணத்தின் வானவர் உங்களை முழுமையாகக் கைப்பற்றிக் கொள்வார். பின்னர், உங்களுடைய இறைவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!”</span>
<span>32:12 அந்தோ! இந்தக் குற்றவாளிகள் தலை குனிந்தவர்களாய்த் தம் இறைவன் திருமுன் நிற்கும் வேளையில் நீங்கள் பார்க்க வேண்டுமே! (அவ்வேளை அவர்கள் இப்படிக் கூறிக்கொண்டிருப்பார்கள்:) “எங்கள் இறைவனே! நாங்கள் நன்கு பார்த்துவிட்டோம்; கேட்டுவிட்டோம். எனவே, எங்களைத் திரும்ப அனுப்பி வைப்பாயாக நாங்கள் நற்செயல் புரிவதற்காக! இப்போது எங்களுக்கு உறுதி வந்துவிட்டது!” </span>
<span>32:13 (விடை பகரப்படும்:) “நாம் நாடியிருந்தால் ஆரம்பத்திலேயே ஒவ்வொரு ஆன்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியைக் காட்டி இருப்போம். ஆயினும், ‘ஜின்கள் மற்றும் மனிதர்கள் அனைவரைக் கொண்டும் நான் நரகத்தை நிரப்புவேன்’ என்று கூறியிருந்த என்னுடைய வாக்கு நிறைவேறிவிட்டது! </span>
<span>32:14 எனவே, இப்போது சுவையுங்கள், நீங்கள் இந்நாளின் சந்திப்பை மறந்துவிட்டிருந்ததற்கான விளைவை! நாமும் இப்போது உங்களை மறந்துவிட்டோம். மேலும், சுவையுங்கள் நிரந்தரமான வேதனையை, நீங்கள் செய்த தீயசெயல்களுக்குப் பகரமாய்!”</span>
<span>32:15 நம்முடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொள்பவர்கள் யாரெனில், அவ்வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காட்டி, அறிவுரை கூறப்படும்போது அவர்கள் ஸஜ்தாவில் விழுந்து விடுகின்றார்கள். மேலும், இறைவனைப் புகழ்ந்து துதிக்கின்றார்கள். மேலும், அவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள். </span>
<span>32:16 மேலும், அவர்களுடைய விலாப்புறங்கள் படுக்கைகளைவிட்டும் உயர்ந்து விடுகின்றன. அச்சத்துடனும், ஆவலுடனும் தங்கள் இறைவனை பிரார்த்திக்கின்றார்கள்! மேலும், நாம் அவர்களுக்கு வழங்கியிருப்பதிலிருந்து செலவும் செய்கின்றார்கள். </span>
<span>32:17 அவர்களுடைய செயல்களின் கூலியாக கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள். </span>
<span>32:18 நம்பிக்கையாளராய் இருப்பவர் பாவம் செய்தவர் போல ஆகிவிடுவாரா? இவ்விருவரும் சமமாக முடியாது! </span>
<span>32:19 எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ, அவர்களுக்கு சுவனபதிகளில் தங்குமிடங்கள் உள்ளன; அவர்களை உபசரிப்பதற்கு! அவர்கள் செய்து கொண்டிருந்த நற்செயல்களுக்குப் பகரமாக!  </span>
<span>32:20 மேலும், எவர்கள் பாவத்தைச் செய்கின்றார்களோ, அவர்களின் தங்குமிடம் நரகமாகும். அவர்கள் அதிலிருந்து வெளியேற விரும்பும்போதெல்லாம் அதிலேயே தள்ளப்படுவார்கள். மேலும், அவர்களிடம் கூறப்படும்: “சுவையுங்கள், எந்த நரக வேதனையைப் பொய்யென்று கூறிக்கொண்டிருந்தீர்களோ அதே நரக வேதனையை!”</span>
<span>32:21 மேலும், அந்தப் பெரும் வேதனை வருமுன் இவர்களுக்கு இவ்வுலகில் (ஏதேனும் ஒரு சிறு) வேதனையை சுவைக்கக் கொடுப்போம்; இவர்கள் (தங்களது எதிர்ப்புப் போக்கைவிட்டு) விலகி விடக்கூடும் என்பதற்காக! </span>
<span>32:22 மேலும், தன்னுடைய இறைவனின் வசனங்கள் வாயிலாக அறிவுரை வழங்கப்பட்ட பிறகும் அதனைப் புறக்கணித்துவிட்டவனை விடக் கொடிய அக்கிரமக்காரன் யார்? இத்தகைய குற்றவாளிகளை நாம் பழிவாங்கியே தீருவோம்!</span>
<span>32:23 இதற்கு முன்பு நாம் மூஸாவுக்கு வேதம் வழங்கியிருந்தோம். ஆகையால், அதுபோன்ற வேதத்தை நீர் பெறுவதில் எவ்வித சந்தேகமும் உமக்கு வர வேண்டாம். அவ்வேதத்தை இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு ஒரு வழிகாட்டியாக ஆக்கினோம். </span>
<span>32:24 மேலும், அவர்கள் பொறுமையைக் கடைப்பிடித்து, நம் வசனங்கள் மீது உறுதிப்பாடும் கொண்டிருந்தபோது அவர்களிலிருந்து தலைவர்களை நாம் தோற்றுவித்தோம். அவர்களோ நம் கட்டளையைக் கொண்டு வழிகாட்டிக் கொண்டிருந்தார்கள். </span>
<span>32:25 (இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள்) தமக்கிடையில் கருத்து வேறுபாடு கொண்டிருந்த விஷயங்களில் திண்ணமாக உம் இறைவனே மறுமைநாளில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான். </span>
<span>32:26 இவர்களுக்கு முன்பு வாழ்ந்து சென்ற எத்தனையோ பல சமூகங்களை நாம் அழித்துவிட்டிருக்கின்றோம் (எனும் வரலாற்று நிகழ்ச்சியில்) இவர்களுக்கு எந்த வழிகாட்டுதலும் கிடைக்கவில்லையா, என்ன? அவர்கள் வசித்த அதே இடங்களில் இன்று இவர்கள் நடந்து திரிந்து கொண்டிருக்கின்றார்கள்! திண்ணமாக, இவற்றில் பெரும் சான்றுகள் உள்ளன. என்ன, இவர்கள் செவியுறுவதில்லையா? </span>
<span>32:27 மேலும், இவர்கள் (இக்காட்சியை ஒருபோதும்) பார்க்கவில்லையா, என்ன? வறண்டு போன தரிசு பூமியின் பக்கமாக நாம் நீரை ஒலித்தோடச் செய்கின்றோம். அதே பூமியிலிருந்து பயிர்களை முளைக்கச் செய்கின்றோம். அதிலிருந்து இவர்களுடைய கால்நடைகளுக்கும் தீனி கிடைக்கின்றது; இவர்களும் உண்ணுகின்றார்கள்! இவர்களுக்கு எதுவும் புலப்படுவதில்லையா, என்ன? </span>
<span>32:28 மேலும், இந்த மக்கள் கேட்கின்றனர்: “இந்தத் தீர்ப்பு எப்போது ஏற்படும்? நீங்கள் உண்மை கூறுபவர்களாயிருந்தால்!”</span>
<span>32:29 இவர்களிடம் நீர் கூறும்: “தீர்ப்பு நாளன்று நம்பிக்கை கொள்வது, நிராகரித்துக் கொண்டிருந்தவர்களுக்கு எவ்விதப் பயனையும் அளிக்காது. மேலும், அவர்களுக்கு எவ்வித அவகாசமும் கொடுக்கப்படாது!” </span>
<span>32:30 எனவே, இவர்கள் போக்கிலேயே இவர்களை விட்டுவிடும்; மேலும், எதிர்பார்த்திரும்; இவர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கட்டும்!</span>
</div><div>
<span>அல் அஹ்ஸாப்</span>
<span>33:1 நபியே! அல்லாஹ்வுக்கு அஞ்சும்! மேலும், நிராகரிப்பாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் கீழ்ப்படியாதீர். உண்மையில், அல்லாஹ்தான் நன்கு அறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>33:2 உம் இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுகின்ற விஷயத்தை நீர் பின்பற்றும்! நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். </span>
<span>33:3 அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக! பொறுப்பேற்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன். </span>
<span>33:4 அல்லாஹ் எந்த மனிதனுள்ளும் இரு இதயங்களை அமைத்திடவில்லை, நீங்கள் “ளிஹார்”* செய்கின்ற உங்கள் மனைவிகளை உங்களுடைய அன்னையராய் அவன் ஆக்கவு மில்லை. மேலும், அவன் உங்களுடைய வளர்ப்பு மகன்களை உங்களின் சொந்த மகன்களாய் ஆக்கவுமில்லை. இவை நீங்களே உங்கள் வாய்களிலிருந்து வெளிப்படுத்தும் வெறும் வார்த்தைகளாகும். ஆனால், அல்லாஹ் சத்தியத்(தின் அடிப்படையிலான)தைக் கூறுகின்றான். மேலும்; அவனே நேரிய வழியின் பக்கம் வழி காட்டுகின்றான். </span>
<span>33:5 வளர்ப்பு மகன்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்து அழையுங்கள். இது அல்லாஹ்விடம் மிக்க நீதமானதாகும். ஆனால் அவர்களுடைய தந்தையர் யார் என்று நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுடைய மார்க்கம் சார்ந்த சகோதரர்களாகவும் நண்பர்களாகவும் இருக்கின்றார்கள். தெரியாமல் நீங்கள் ஏதேனும் பேசிவிட்டால், அதற்காக உங்கள் மீது எவ்விதக் குற்றமும் இல்லை. ஆயினும், மனப்பூர்வமாக நாடி நீங்கள் கூறினால் அது நிச்சயம் குற்றமாகும். அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>33:6 திண்ணமாக, நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களைவிட நபிதான் முன்னுரிமை பெற்றவராவார். மேலும், நபியின் மனைவியர் அவர்களுக்கு அன்னையராவர். ஆயினும், அல்லாஹ்வின் வேதத்தின்படி ஏனைய பொது முஸ்லிம்களை விடவும், ஹிஜ்ரத்* செய்து வந்தவர்களை விடவும் இரத்தபந்த உறவினர்கள்தாம் ஒருவர் மற்றவருக்கு உதவி புரிவதில் அதிக உரிமையுடையவர்கள் ஆவர். ஆயினும், உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் ஏதேனும் நன்மை (செய்ய விரும்பினால்) செய்துகொள்ளலாம். இந்த விதி இறைவேதத்தில் எழுதப்பட்டுள்ளது. </span>
<span>33:7 மேலும் (நபியே!) எல்லா நபிமார்களிடமிருந்தும் என்ன வாக்குறுதியை நாம் வாங்கினோமோ அதனை நீர் நினைவு கூரும்: உம்மிடமிருந்தும், மேலும் நூஹ், இப்ராஹீம், மூஸா மற்றும் மர்யத்தின் குமாரர் ஈஸா ஆகியோரிடமிருந்தும் (நாம் வாக்குறுதி வாங்கினோம்). அனைவரிடமிருந்தும் நாம் வலு வான வாக்குறுதி வாங்கியிருக்கின்றோம். </span>
<span>33:8 உண்மையாளர்களிடம் அவர்களின் உண்மை குறித்து (அவர்களின் இறைவன்) விசாரணை செய்ய வேண்டும் என்பதற்காக! மேலும், நிராகரிப்பாளர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை அவன் தயார் செய்தே வைத்திருக்கின்றான். </span>
<span>33:9 நம்பிக்கையாளர்களே! (அண்மையில்) அல்லாஹ் உங்களுக்குச் செய்திருக்கின்ற பேருதவியை நினைவுகூருங்கள்: எதிரிப்படையினர் உங்களைத் தாக்க வந்தபோது, நாம் அவர்கள் மீது ஒரு கடும் புயல்காற்றை ஏவினோம். உங்கள் கண்களுக்குத் தென்படாத படைகளையும் அனுப்பினோம். அப்போது நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றையெல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். </span>
<span>33:10 பகைவர்கள் மேலிருந்தும், கீழிருந்தும் உங்கள் மீது படையெடுத்து வந்த நேரத்தில் உங்கள் கண்கள் பீதியினால் மருண்டுவிட்டன; இதயங்கள் தொண்டைகளை அடைத்துக் கொண்டன! மேலும், நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி விதவிதமான சந்தேகங்கள் கொள்ளத் தலைப்பட்டீர்கள். </span>
<span>33:11 அந்த(க் கடினமான) நேரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் நன்கு சோதிக்கப்பட்டார்கள். மேலும், கடுமையாக அலைக்கழிக்கப்பட்டார்கள். </span>
<span>33:12 மேலும், அந்த நேரத்தை நினைவுகூருங்கள்: ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்மிடம் செய்திருந்த வாக்குறுதிகள் யாவும் ஏமாற்று வேலையே தவிர வேறொன்றும் இல்லை’ என்று நயவஞ்சகர்களும் மற்றும் எவர்களின் உள்ளங்களில் பிணி இருந்ததோ அவர்களும் வெளிப்படையாகக் கூறிக் கொண்டிருந்தார்கள்; </span>
<span>33:13 அப்போது அவர்களில் ஒரு பிரிவினர் “யத்ரிப் வாசிகளே! இனி, நீங்கள் இங்கு தங்கியிருக்க உங்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. திரும்பிச் சென்றுவிடுங்கள்!” என்று கூறினார்கள்; மேலும், அவர்களில் மற்றொரு பிரிவினர் “எங்களுடைய வீடுகள் ஆபத்திற்குள்ளாகி இருக்கின்றன” என்று கூறி, நபியிடம் அனுமதி கோரிக் கொண்டிருந்தனர். ஆனால், அவை ஆபத்திற்குள்ளாகியிருக்கவில்லை. உண்மை யாதெனில், அவர்கள் (போர்க் களத்திலிருந்து) ஓடிவிடவே விரும்பினார்கள். </span>
<span>33:14 நகரின் நாற்புறங்களிலிருந்தும் எதிரிகள் ஊடுருவி, பிறகு குழப்பம் விளைவிக்குமாறு இவர்கள் அழைக்கப்பட்டிருந்தால், அதற்கு இவர்கள் தயாராயிருந்திருப்பார்கள். குழப்பத்தில் பங்கு பெறுவதில் அவர்களுக்குத் தயக்கம் ஏற்பட்டிருக்காது, சிறிதளவே தவிர! </span>
<span>33:15 இதற்கு முன்னரோ ‘புறங்காட்டி ஓடமாட்டோம்’ என்று அல்லாஹ்விடம் இவர்கள் வாக்குறுதி தந்திருந்தார்கள். மேலும், அல்லாஹ்விடம் அளித்திருந்த வாக்குறுதி விசாரிக்கப்பட வேண்டியதாகவே இருக்கின்றது. </span>
<span>33:16 (நபியே!) நீர் இவர்களிடம் கூறும்: “நீங்கள் மரணத்திலிருந்து அல்லது கொல்லப்படுவதிலிருந்து ஓடினால் அவ்வாறு ஓடுவது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. அதன் பின்னர் வாழ்க்கையின் இன்பத்தை அனுபவிக்க சிறிதளவு சந்தர்ப்பமே உங்களுக்குக் கிடைக்கும். </span>
<span>33:17 மேலும், இவர்களிடம் கேளும்: “அல்லாஹ் உங்களுக்குத் தீங்களிக்க நாடினால் அவனிடமிருந்து உங்களைக் காப்பாற்றுபவர் யார்? அவன் உங்கள் மீது கருணை பொழிய நாடினால் அவனுடைய கருணையைத் தடுக்க யாரால் முடியும்?” அல்லாஹ்வுக்கு எதிராக எந்த ஆதரவாளரையும் உதவியாளரையும் இவர்கள் காணமாட்டார்கள். </span>
<span>33:18 உங்களில் எவர்கள் (போர்ப் பணிகளில்) இடையூறு விளைவிக்கின்றார்களோ அவர்களையும், மேலும், “எங்களிடம் வந்துவிடுங்கள்” என்று தங்களின் சகோதரர்களிடம் கூறுகின்ற வர்களையும் அல்லாஹ் நன்கறிவான். மேலும், அவர்கள் போரில் பங்கு கொண்டாலும், பெயரளவுக்குத்தான் பங்கு பெறுவார்கள். </span>
<span>33:19 உங்களுக்கு உதவுவதில் அவர்கள் கடும் கஞ்சத்தனம் உள்ளவர்களாய் இருப்பார்கள். ஆபத்தான நேரம் வந்து விட்டாலோ, மரணத்தருவாயில் இருப்பவனுக்கு மயக்கம் வருவது போன்று கண்களைச் சுழற்றியவாறு உம் பக்கம் பார்ப்பார்கள். ஆனால், ஆபத்து நீங்கிவிட்டாலோ, இதே மக்கள் ஆதாயங்களின் மீது பேராசை கொண்டவர்களாய் (கத்தரிக்கோலைப் போன்று) கூர்மையான நாவுகளோடு உங்களை வரவேற்க வந்துவிடுகின்றார்கள். இத்தகையவர்கள் அறவே நம்பிக்கை கொள்ளவில்லை. எனவே, அல்லாஹ் இவர்களுடைய செயல்கள் அனைத்தையும் வீணாக்கிவிட்டான். மேலும், இவ்வாறு செய்வது அல்லாஹ்வைப் பொறுத்து மிகவும் எளிதானதாகும். </span>
<span>33:20 இவர்கள் கருதிக் கொண்டிருக்கின்றார்கள்; தாக்க வந்த கூட்டத்தார் இன்னும் திரும்பிச் செல்லவில்லை என்று! அவர்கள் மீண்டும் தாக்க வந்துவிட்டாலோ, அப்போது எங்கேனும் (பாலைவனத்தில்) நாட்டுப்புற அரபிகளுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட வேண்டும். மேலும், அங்கிருந்தவாறு உம்முடைய நிலைமையைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என அவர்கள் ஆசைப்படுகின்றார்கள். ஒரு வேளை இவர்கள் உங்கள் மத்தியில் இருந்தாலும் போரில் குறைவாகவே பங்கு பெறுவார்கள். </span>
<span>33:21 உண்மை யாதெனில், உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருந்தது உங்களில் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்புகின்றவராகவும், அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருபவராகவும் இருக்கின்ற ஒவ்வொருவர்க்கும்! </span>
<span>33:22 மேலும், உண்மையான நம்பிக்கையாளர்கள் (நிலை இவ்வாறு இருந்தது: அதாவது) தாக்க வந்த கூட்டத்தாரை அவர்கள் பார்த்ததுமே உரக்கக் கூறினார்கள்: “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்மிடம் வாக்களித்தது இதுதான்.” அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் வாக்கு முற்றிலும் உண்மையாக இருந்தது. இந்நிகழ்ச்சி நம்பிக்கையையும் அடிபணிதலையும் அவர்களுக்கு இன்னும் அதிகப்படுத்திவிட்டது. </span>
<span>33:23 நம்பிக்கையாளரில் இத்தகையவர்களும் இருக்கின்றனர்: அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் மெய்ப்படுத்திக் காட்டிவிட்டிருக்கிறார்கள்; அவர்களில் சிலர் தமது நேர்ச்சையை நிறைவேற்றி விட்டார்கள்; இன்னும் சிலர் அதற்கான நேரத்தை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள் அவர்கள் (தம்முடைய நடத்தையில்) எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை. </span>
<span>33:24 (இதுவெல்லலாம் நிகழ்ந்தது) எதற்காகவெனில், அல்லாஹ் வாய்மையாளர்களுக்கு அவர்களுடைய வாய்மைக்கான கூலியை வழங்குவதற்காகவும் மேலும், நயவஞ்சகர்களுக்கு நாடினால் அவன் தண்டனை அளிப்பதற்காகவும், நாடினால் அவர்களுடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை அவன் ஏற்றுக்கொள்வதற்காகவும்தான்! நிச்சயமாக அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான். </span>
<span>33:25 அல்லாஹ் நிராகரிப்பாளர்களைத் திருப்பிவிட்டான். அவர்கள் எந்தப் பயனும் அடையாமல் தம் மன எரிச்சலுடனே அப்படியே திரும்பிவிட்டனர். நம்பிக்கையாளர்களின் சார்பில் போரிடுவதற்கு அல்லாஹ்வே போதுமாகிவிட்டான். அல்லாஹ் பேராற்றலுடையவனாகவும் யாவற்றையும் மிகைத்தவனாகவும் இருக்கின்றான். </span>
<span>33:26 மேலும், வேதம் வழங்கப்பட்டவர்களில் எவர்கள் இவ்வாறு தாக்க வந்த படையினர்க்கு உதவினார்களோ அவர்களை அல்லாஹ், அவர்களுடைய கோட்டைகளிலிருந்து இறக்கிக் கொண்டு வந்தான். மேலும், அவர்களுடைய உள்ளங்களில் திகிலை ஏற்படுத்தினான். நீங்கள் (இன்று அவர்களில்) ஒரு பிரிவினரை கொன்றுகொண்டும் மற்றொரு பிரிவினரைக் கைது செய்துகொண்டும் இருக்கிறீர்கள். </span>
<span>33:27 மேலும், அவன் அவர்களுடைய நிலத்திற்கும், அவர்களுடைய இல்லங்களுக்கும், அவர்களுடைய பொருள்களுக்கும் உங்களை வாரிசுகளாக்கினான்; நீங்கள் கால் வைத்திருக்காத பூமியையும் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான். </span>
<span>33:28 நபியே! நீர் உம்முடைய மனைவிமார்களிடம் கூறிவிடும்: “நீங்கள் உலகவாழ்வையும், அதன் அழகையும் விரும்புகிறீர்கள் என்றால், வாருங்கள்! நான் ஏதேனும் சிலவற்றைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை அனுப்பிவிடுகின்றேன். 
<span>33:29 ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும், மறுஉலகையும் நாடுகிறீர்களென்றால் (அறிந்து கொள்ளுங்கள்) உங்களில் நற்செயல் புரிபவர்களுக்கு அல்லாஹ் மகத்தான கூலியை தயார் செய்து வைத்துள்ளான்.”</span></span>
<span>33:30 நபியின் மனைவியரே! உங்களில் எவரேனும் வெளிப்படையான, மானக்கேடான செயலைச் செய்தால் அவருக்கு இருமடங்கு வேதனை அளிக்கப்படும். இது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதான காரியமாகும். </span>
<span>33:31 மேலும், உங்களில் எவரேனும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்தால், மேலும், நற்செயல் புரிந்தால், அவர்களுக்கு நாம் இருமடங்கு கூலி வழங்குவோம். மேலும், நாம் அவர்களுக்காக கண்ணியமான நற்பாக்கியங்களை ஏற்பாடு செய்து வைத்துள்ளோம். </span>
<span>33:32 நபியின் மனைவியரே! நீங்கள் ஏனைய சாதாரணப் பெண்களைப் போன்றவர்களல்லர். நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாயிருந்தால், மென்மையாகப் பேசாதீர்கள். ஏனெனில், உள்ளத்தில் கெட்ட எண்ணத்தைக் கொண்டிருக்கும் யாரேனும் ஒருவன் சபலம் கொள்ளக்கூடும்! ஆகவே, தெளிவாய் நேர்த்தியாய்ப் பேசுங்கள். </span>
<span>33:33 மேலும், உங்களுடைய வீடுகளில் தங்கியிருங்கள். முந்தைய அஞ்ஞானக் காலத்தைப் போன்று ஒப்பனையையும் ஒய்யாரத்தையும் காட்டிக்கொண்டு திரியாதீர்கள். தொழுகையை நிலைநாட்டுங்கள்; ஜகாத்தைக் கொடுங்கள். மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நபியினுடைய குடும்பத்தினராகிய உங்களிலிருந்து தூய்மையின்மையை அகற்றி உங்களை முழுமையாகத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றுதான் அல்லாஹ் நாடுகின்றான். </span>
<span>33:34 உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்ற இறைவசனங்களையும், விவேகமான விஷயங்களையும் நினைவில் வையுங்கள்; திண்ணமாக, அல்லாஹ் நுண்மையானவனாகவும் யாவும் அறிந்தவனாகவும் இருக்கின்றான். </span>
<span>33:35 ஆண்கள் மற்றும் பெண்களில் எவர்கள் முஸ்லிம்களாகவும், நம்பிக்கையாளர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும், வாய்மையாளர்களாகவும், பொறுமையுடையோராகவும், அல்லாஹ்வின் முன்னிலையில் பணிபவர்களாகவும், தானதர்மம் செய்பவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாப்பவர்களாகவும் இன்னும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருபவர்களாகவும் இருக்கின்றார்களோ, திண்ணமாக, அவர்களுக்காக அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான். </span>
<span>33:36 அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஏதேனும் ஒரு விவகாரத்தில் தீர்ப்பளித்துவிட்டால், பிறகு அந்த விவகாரத்தில் சுயமாகத் தீர்ப்பளிக்கும் அதிகாரம் இறைநம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கும், இறை நம்பிக்கை கொண்டுள்ள எந்தப் பெண்ணுக்கும் கிடையாது. மேலும், எவன் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றானோ, அவன் வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்துவிட்டான். </span>
<span>33:37 மேலும் (நபியே!) அந்த சந்தர்ப்பத்தை நினைத்துப் பாரும்; எவர் மீது அல்லாஹ்வும் நீரும் உபகாரம் செய்திருந்தீர்களோ, அவரிடம் நீர் கூறிக்கொண்டிருந்தீர்: “உம்முடைய மனைவியைக் கைவிட்டு விடாதே! மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சு” நீர் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை உம்முடைய உள்ளத்தில் மறைத்து வைத்துக்கொண்டிருந்தீர். மேலும், நீர் மனிதர்களுக்கு அஞ்சிக் கொண்டிருந்தீர். ஆனால், அல்லாஹ்தான் நீர் அஞ்சுவதற்கு அதிகத் தகுதியுடையவன்! ஸைத் அவளுடைய விஷயத்தில் தம் நோக்கத்தை நிறைவேற்றிய பிறகு (விவாகரத்து செய்யப்பட்ட) அவளை உமக்கு நாம் மணமுடித்து வைத்தோம் நம்பிக்கையாளர்களின் வளர்ப்பு மகன்கள் தம்முடைய மனைவிமார் விஷயத்தில் தம் தேவையை நிறைவேற்றி விடும்போது (விவாகரத்தான) அப்பெண்களின் விவகாரத்தில் நம்பிக்கையாளர்க்கு எவ்வித இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காக! மேலும், அல்லாஹ்வின் கட்டளையோ செயல்படுத்தப்பட வேண்டிய தாகவே இருந்தது. </span>
<span>33:38 அல்லாஹ் எந்த ஒரு பணியை நபிக்காக நிர்ணயித்துள்ளானோ அந்தப் பணியை ஆற்றுவதில் நபியின் மீது எந்தத் தடையும் இல்லை. முன்பு சென்ற நபிமார்களின் விவகாரத்திலும் இதுதான் அல்லாஹ்வுடைய நியதியாய் இருந்திருக்கின்றது. மேலும், அல்லாஹ்வுடைய கட்டளை திட்டவட்டமாக முடிவு செய்யப்பட்ட தீர்ப்பாய் இருக்கின்றது. </span>
<span>33:39 (இது அல்லாஹ்வின் நியதியாகும்; இந்த மக்களுக்காக) அவர்களோ அல்லாஹ்வின் தூதுச்செய்திகளை சேர்ப்பிக்கின்றார்கள். அவனுக்கே அஞ்சுகின்றார்கள். மேலும், ஓரிறைவனைத் தவிர வேறு எவருக்கும் அவர்கள் அஞ்சுவதில்லை. மேலும், கணக்கு வாங்கிட அல்லாஹ் போதுமானவன். </span>
<span>33:40 (மக்களே!) முஹம்மத் உங்களுடைய ஆண்களில் எவருக்கும் தந்தையல்லர். ஆனால், அவர் அல்லாஹ்வின் தூதராகவும், இறுதிநபியாகவும் இருக்கின்றார். அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவனாக இருக்கின்றான். </span>
<span>33:41 நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருங்கள். </span>
<span>33:42 மேலும், காலையிலும், மாலையிலும் அவனைத் துதித்துக் கொண்டிருங்கள். அவனே உங்கள் மீது கருணை பொழிகின்றான். </span>
<span>33:43 அவனுடைய வானவர்களும் உங்கள் மீது கருணை புரியும்படி இறைஞ்சுகின்றார்கள்; அவன் உங்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, ஒளியின் பக்கம் கொண்டுவருவதற்காக! அவன் நம்பிக்கையாளர்கள் மீது பெருங்கருணை பொழிபவனாக இருக்கின்றான். </span>
<span>33:44 அவர்கள், அவனைச் சந்திக்கும் நாளில் ஸலாம் சாந்தி உண்டாகட்டும் என்று வாழ்த்துக் கூறி வரவேற்கப்படுவார்கள். மேலும், அல்லாஹ் அவர்களுக்காக கண்ணியமான கூலியை தயார் செய்து வைத்துள்ளான். </span>
<span>33:45 நபியே! (சத்தியத்திற்காகச்) சாட்சியம் பகருபவராகவும், நற்செய்தி அறிவிப்பவராகவும், அச்சமூட்டி, எச்சரிக்கை செய்பவராகவும், </span>
<span>33:46 அல்லாஹ்வின் பக்கம் அவனுடைய அனுமதியுடன் அழைப்பு விடுப்பவராகவும், சுடர்வீசும் விளக்காகவும் நாம் உம்மை அனுப்பியிருக்கின்றோம். </span>
<span>33:47 எனவே, எவர்கள் (உம்மீது) நம்பிக்கை கொண்டார்களோ அவர்களுக்கு, அல்லாஹ்விடமிருந்து திண்ணமாக, பெரும் வெகுமதி இருக்கின்றது எனும் நற்செய்தியினை அறிவிப்பீராக! </span>
<span>33:48 நிராகரிப்பாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் ஒருபோதும் நீர் பணிந்துவிடாதீர். அவர்களுடைய துன்புறுத்தலைக் கொஞ்சமும் பொருட்படுத்தாதீர். மேலும், அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக! (மனிதன் தன்னுடைய) விவகாரங்களை ஒப்படைப்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன். </span>
<span>33:49 நம்பிக்கை கொண்டவர்களே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்து பின்னர் அவர்களைத் தொடுவதற்கு முன்பாக விவாகரத்துச் செய்து விட்டால், நிறைவேற்றுமாறு நீங்கள் கோரக்கூடிய வகையில் உங்களுக்காக அவர்கள் மீது ‘இத்தா’ எதுவும் இல்லை. எனவே, அவர்களுக்குக் கொஞ்சம் பொருள்களைக் கொடுத்து நல்ல முறையில் அவர்களை அனுப்பி வைத்துவிடுங்கள். </span>
<span>33:50 நபியே! நீர் மஹர் கொடுத்துவிட்ட உம்முடைய மனைவியரையும் அல்லாஹ்வினால் வழங்கப்பட்டு உமது கைவசத்தில் வந்துள்ள அடிமைப் பெண்களையும், மற்றும் உம்மோடு ஹிஜ்ரத்* செய்த பெண்களாகிய உம் தந்தையின் சகோதரர்களின் மகள்கள், உம் தந்தையின் சகோதரிகளின் மகள்கள், உம் தாயின் சகோதரர்களின் மகள்கள், உம் தாயின் சகோதரிகளின் மகள்கள் ஆகியோரையும் திண்ணமாக, நாம் உமக்கு ஆகுமாக்கியிருக்கின்றோம். மேலும், இறைநம்பிக்கை கொண்ட பெண்ணையும் அவள் தன்னைத் தானே நபிக்காக அன்பளிப்பாய் வழங்கி, நபியும் அவளைத் திருமணம் செய்திட விரும்பும் பட்சத்தில் (உமக்கு ஆகுமாக்கியிருக்கின்றோம்). இந்தச் சலுகை உமக்கு மட்டுமே உரியதாகும்; பிற நம்பிக்கையாளர்களுக்கு இல்லை! ஏனைய நம்பிக்கையாளர்கள் மீது அவர்களுடைய மனைவிகள் மற்றும் அடிமைப் பெண்களின் விஷயத்தில் என்னென்ன வரையறைகளை நாம் விதித்திருக்கின்றோம் என்பதை நாம் அறிவோம். (இவ்வரையறைகளிலிருந்து உமக்கு நாம் விலக்களித்திருப்பது) உமக்கு எந்தச் சிரமமும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான்! மேலும், அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>33:51 உம்முடைய மனைவியரில் உம்முடைய விருப்பப்படி சிலரை உம்மைவிட்டுத் தனிமைப்படுத்தி வைப்பதற்கும், நீர் விரும்புகின்றபடி வேறு சிலரை உம்முடன் வைத்துக் கொள்வதற்கும், நீர் தனிமைப்படுத்தி வைத்தவர்களில் எவரையாவது நீர் அழைத்துக் கொள்வதற்கும் அனுமதி இருக்கிறது, (இந்த விவகாரத்தில்) உம் மீது எத்தகைய தவறுமில்லை. இதனால் இவர்கள் கண் குளிர்ந்தும் வருத்தமற்றும் இருப்பார்கள் என்பதையும், மேலும், எதனை நீர் அவர்களுக்கு அளித்தாலும் அதனைக் குறித்து அவர்கள் அனைவரும் திருப்தி கொள்வார்கள் என்பதையும் அதிகம் எதிர்பார்க்கலாம். உங்களுடைய உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கறிவான். மேலும், அல்லாஹ் யாவும் அறிந்தவனாகவும், சகிப்புத்தன்மையுடையவனாகவும் இருக்கின்றான். </span>
<span>33:52 இதற்குப் பின்னர், வேறு பெண்கள் உமக்கு ஆகுமானவர்களல்லர். மேலும், இம்மனைவியருக்குப் பகரமாக நீர் வேறு மனைவியரை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அனுமதியில்லை. அவர்களின் அழகு உமக்கு மிகவும் பிடித்தமானதாயினும் சரியே! ஆயினும் உமக்கு அடிமைப் பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அல்லாஹ் யாவற்றையும் கண்காணிப்பவனாயிருக்கின்றான். </span>
<span>33:53 நம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் அனுமதியின்றி நுழையாதீர்கள்; உணவு தயாராகும் நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டும் இருக்காதீர்கள். ஆனால், நீங்கள் உணவு உண்பதற்கு அழைக்கப்பட்டால் அவசியம் செல்லுங்கள்; சாப்பிட்டு முடிந்ததும் பிரிந்து சென்றுவிடுங்கள். பேசிக் கொண்டிருப்பதில் ஈடுபட்டு விடாதீர்கள்; உங்களுடைய இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. ஆயினும், வெட்கத்தின் காரணத்தால் உங்களிடம் அவர் எதுவும் சொல்வதில்லை. ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை. நபியின் மனைவியரிடம் நீங்கள் ஏதேனும் கேட்க வேண்டுமென்றால், திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள். உங்களுடையவும், அவர்களுடையவும் உள்ளங்களின் தூய்மைக்கு இதுவே ஏற்ற முறையாகும். அல்லாஹ்வுடைய தூதருக்குத் தொல்லை கொடுப்பது உங்களுக்கு ஆகுமானதல்ல. அவருக்குப் பின்னர் அவருடைய மனைவியரை நீங்கள் திருமணம் முடிப்பதும் ஒருபோதும் ஆகுமானதன்று. அவ்வாறு செய்வது அல்லாஹ்விடம் திண்ணமாக, பெரும் பாவமாகும். </span>
<span>33:54 நீங்கள் எதையேனும் வெளிப்படுத்தினாலும் அல்லது அதனை மறைத்தாலும், திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். </span>
<span>33:55 நபியின் மனைவியர் மீது இவ்விஷயத்தில் எந்தக் குற்றமும் இல்லை; அவர்களின் தந்தைகள், அவர்களின் மகன்கள், அவர்களின் சகோதரர்கள், அவர்களின் சகோதரர்களின் மகன்கள், அவர்களுடைய சகோதரிகளின் மகன்கள், அவர்களுடன் நட்பு கொண்டுள்ள பெண்கள் மற்றும் அவர்களுடைய வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் ஆகியோர் அவர்களுடைய இல்லங்களுக்கு வரலாம். (பெண்களே!) அல்லாஹ்வின் கட்டளைகளை மீறுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். அல்லாஹ் ஒவ்வொன்றின் மீதும் நேரடிப் பார்வை வைத்திருக்கின்றான். </span>
<span>33:56 அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நபியின் மீது ஸலவாத் எனும் நல்வாழ்த்துக்களை அனுப்புகின்றார்கள். நம்பிக்கை கொண்டவர்களே! நீங்களும் அவர் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுங்கள். </span>
<span>33:57 எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் தொல்லை கொடுக்கின்றார்களோ அவர்களை இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் சபிக்கின்றான். மேலும், இழிவுபடுத்தும் வேதனையையும் அவர்களுக்காகத் தயார் செய்து வைத்திருக்கின்றான். </span>
<span>33:58 மேலும், நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அவர்கள் குற்றம் புரியாதிருக்கவே எவர்கள் துன்பம் அளிக்கின்றார்களோ, அவர்கள் ஒரு மாபெரும் அவதூறையும் வெளிப்படையான பாவத்தின் விளைவையும் தம்மீது சுமந்துகொள்கிறார்கள். </span>
<span>33:59 நபியே! உம்முடைய மனைவிகள், உம்முடைய புதல்விகள் மற்றும் நம்பிக்கையாளர்களின் மனைவியர் ஆகியோரிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய துப்பட்டிகளின் முந்தானையைத் தங்களின் மீது தொங்கவிட்டுக் கொள்ளட்டும். அவர்களை அறிந்து கொள்வதற்கும், அவர்கள் தொல்லைக்கு ஆளாகாமலிருப்பதற்கும் இதுவே மிகவும் ஏற்ற முறையாகும். அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான். </span>
<span>33:60 நயவஞ்சகர்களும், எவர்களின் உள்ளங்களில் பிணி படிந்துள்ளதோ அவர்களும் மற்றும் மதீனாவில் கொந்தளிப்பை உருவாக்கும் வதந்திகளைப் பரப்பக்கூடியவர்களும் (தங்களின் செயல்களிலிருந்து) விலகிக் கொள்ளாவிடில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு உம்மை வீறுகொண்டு எழச்செய்வோம். பிறகு, அவர்களால் இந்நகரத்தில் சொற்பகாலமே உம்முடன் வசிக்க முடியும். </span>
<span>33:61 (எல்லாத் திசைகளிலிருந்தும்) அவர்கள் சரமாரியாய் சபிக்கப்படுவார்கள்; காணுமிடமெல்லாம் அவர்கள் பிடிக்கப்படுவார்கள். மேலும், மோசமான முறையில் கொல்லப்படுவார்கள். </span>
<span>33:62 இது அல்லாஹ்வின் நியதியாகும். இத்தகையவர்களின் விவகாரத்தில் இந்நியதி முன்பிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது! மேலும், அல்லாஹ்வுடைய நியதியில் நீர் எவ்வித மாற்றத்தையும் காணமாட்டீர். </span>
<span>33:63 மறுமைநாள் எப்போது வரும் என்று மக்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும்: “அதைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது.” உமக்குத் தெரியுமா என்ன? அந்நாள் நெருங்கி வந்திருக்கலாம். </span>
<span>33:64 எவ்வாறாயினும் நிராகரிப்பாளர்களை அல்லாஹ் திண்ணமாகச் சபித்துவிட்டான். மேலும், அவர்களுக்காக, கொழுந்து விட்டெரியும் நெருப்பைத் தயார் செய்துவிட்டிருக்கின்றான்; </span>
<span>33:65 அதில் அவர்கள் என்றென்றும் வீழ்ந்துகிடப்பார்கள். எந்த ஓர் ஆதரவாளரையும் உதவியாளரையும் அவர்கள் பெறமாட்டார்கள். </span>
<span>33:66 எந்நாளில் அவர்களுடைய முகங்கள் நெருப்பில் புரட்டி எடுக்கப்படுமோ அந்நாளில் அவர்கள் கூறுவார்கள்: “அந்தோ! நாங்கள் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்தோமில்லையே!” </span>
<span>33:67 மேலும், கூறுவார்கள்: “எங்கள் இறைவனே! நாங்கள் எங்களுடைய தலைவர்களுக்கும், பெரியோர்களுக்கும் கீழ்ப்படிந்தோம். அவர்கள் எங்களை நேரிய வழியிலிருந்து பிறழச் செய்துவிட்டார்கள். </span>
<span>33:68 எங்கள் இறைவனே! இவர்களுக்கு இருமடங்கு வேதனை கொடுப்பாயாக! மேலும், அவர்களைக் கடுமையாக சபிப்பாயாக!”</span>
<span>33:69 நம்பிக்கை கொண்டவர்களே! மூஸாவுக்கு தொல்லை அளித்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் இட்டுக் கட்டிக் கூறிய விஷயங்களிலிருந்து அல்லாஹ் அவரை விடுவித்து விட்டான். மேலும், அல்லாஹ்விடத்தில் அவர் கண்ணியத்துக்குரியவராய் இருந்தார். </span>
<span>33:70 நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், நேர்மையான சொல்லை மொழியுங்கள். </span>
<span>33:71 அல்லாஹ் உங்களுடைய செயல்களைச் சீர்திருத்திவிடுவான்; மேலும், உங்களுடைய குற்றங்களை மன்னிக்கவும் செய்வான். எவன் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகின்றானோ, அவன் மகத்தான வெற்றி அடைந்துவிட்டான். </span>
<span>33:72 நாம் இந்த அமானிதத்தை வானங்கள், பூமி மற்றும் மலைகள் ஆகியவற்றின் முன்பாக வைத்தபோது அவை அதனை ஏற்கத் தயாராகவில்லை. மேலும், அதனைக் கண்டு அஞ்சின. ஆனால், மனிதன் அதனை ஏற்றுக்கொண்டான். திண்ணமாக, அவன் பெரிதும் அநீதி இழைப்பவனாகவும் அறியாதவனாகவும் இருக்கின்றான். </span>
<span>33:73 ஏனெனில், (இந்த அமானிதம் எனும் பொறுப்பை அவன் ஏற்றுக்கொண்டான். அதன் தவிர்க்க முடியாத விளைவு இதுதான்:) நயவஞ்சகம் கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும், இணைவைக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அல்லாஹ் தண்டனை அளிக்க வேண்டும். மேலும், இறைநம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை அவன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கிருபையாளனாகவும் இருக்கின்றான். </span>
</div><div>
<span>ஸபஃ</span>
<span>34:1 வானங்கள் மற்றும் பூமியிலுள்ள ஒவ்வொன்றுக்கும் உரிமையாளனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! மேலும், மறுமையிலும்கூட புகழ் அவனுக்கே உரித்தானது. அவன் நுண்ணறிவாளனாகவும், யாவும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான். </span>
<span>34:2 பூமியினுள் செல்பவற்றையும் அதிலிருந்து வெளிப்படுபவற்றையும் வானத்திலிருந்து இறங்குகின்றவற்றையும் அதில் ஏறுகின்றவற்றையும் ஆக எல்லாவற்றையும் அவன் நன்கறிகின்றான். அவன் தனிப்பெருங் கிருபையாளனாகவும் பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>34:3 “மறுமை நாள் நம்மீது வராமலிருக்கின்றதே! என்ன விஷயம்?” என்று நிராகரிப்பாளர்கள் கேட்கின்றார்கள். கூறுங்கள்: “மறைவானவற்றை அறியக்கூடிய இறைவன் மீது ஆணையாக! அது உங்கள் மீது வந்தே தீரும். வானங்களிலும் பூமியிலும் அணு அளவு பொருள்கூட அவனைவிட்டு மறைந்திருக்கவில்லை. அணுவைவிடச் சிறியதோ, அதைவிடப் பெரியதோ அனைத்துமே ஒரு தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.” </span>
<span>34:4 மேலும், இந்த மறுமை வருவதுநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்து கொண்டிருப்பவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவதற்காகத்தான்! அவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான நற்பேறும் இருக்கின்றன. </span>
<span>34:5 எவர்கள் நம்முடைய வசனங்களைத் தோல்வியுறச்செய்திடக் கடுமையாக முயற்சி செய்தார்களோ அவர்களுக்கு துன்புறுத்தக்கூடிய மிக மோசமான வேதனை இருக்கிறது. </span>
<span>34:6 (நபியே!) உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கியருளப்பட்டிருப்பது எதுவோ அது முற்றிலும் உண்மையானதென்றும், அதுவே, ஆற்றல் மிக்கவனும் மாபெரும் புகழுக்குரியவனுமான இறைவனின் பாதையைக் காண்பிக்கின்றது என்றும் ஞானமுடையவர்கள் நன்கறிகின்றார்கள். </span>
<span>34:7 நிராகரிப்பாளர்கள் (மக்களிடம்) கூறுகின்றார்கள்: “(நீங்கள் மரணமாகி) உங்கள் உடல் அணு அணுவாய் சிதைந்து போய்விட்ட பிறகு நீங்கள் மீண்டும் புதிதாகப் படைக்கப்படுவீர்கள் என்று உங்களுக்குச் செய்தி அறிவிக்கும் ஒருவரை நாங்கள் உங்களுக்குக் காண்பித்துத் தரவா?”</span>
<span>34:8 “இந்த மனிதர் அல்லாஹ்வின் பெயரால் பொய்யைப் புனைந்து கூறுகின்றாரா? அல்லது இவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கின்றதா என்பது புரியவில்லையே!” இல்லை, உண்மையில், மறுமையை நம்பாதவர்கள்தாம் வேதனைக்கு ஆளாகப் போகிறார்கள். மேலும், மிக மோசமாக வழிகெட்டுப் போனவர்களும் அவர்கள்தாம்! </span>
<span>34:9 இவர்கள் தங்களுக்கு முன்னாலும் பின்னாலும் சூழ்ந்துள்ள வானத்தையும் பூமியையும் என்றுமே பார்த்ததில்லையா, என்ன? நாம் நாடினால் இவர்களைப் பூமிக்கடியில் ஆழ்த்தியிருப்போம். அல்லது வானத்தின் சில துண்டுகளை இவர்கள் மீது விழச் செய்திருப்போம். இறைவன் பக்கம் திரும்புகின்ற ஒவ்வோர் அடியானுக்கும் உண்மையில் இதில் ஒரு சான்று இருக்கிறது. </span>
<span>34:10 நாம் தாவூதுக்கு நம்மிடமிருந்து பெரும் அருட்பேற்றினை வழங்கியிருந்தோம். (நாம் ஆணையிட்டோம்:) “மலைகளே! அவருடன் சேர்ந்து நீங்களும் துதி பாடுங்கள். இவ்வாறே பறவைகளுக்கும் (நாம் கட்டளையிட்டிருந்தோம்.) நாம் அவருக்காக இரும்பை மென்மையாக்கிக் கொடுத்தோம். </span>
<span>34:11 “போர்க்கவசங்கள் செய்வீராக! அவற்றின் வளையங்களைச் சரியான அளவில் அமைப்பீராக” என்ற கட்டளையுடன்! (தாவூதுடைய வழித்தோன்றல்களே!) நற்செயல்கள் புரியுங்கள்; நீங்கள் செய்வதனைத்தையும் நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். </span>
<span>34:12 மேலும், நாம் ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அதனுடைய காலைப் புறப்பாடு ஒரு மாத தூரம் வரையிலாகும்; மாலைப் புறப்பாடும் ஒரு மாத தூரம் வரையிலாகும். நாம் அவருக்காக உருகிய செம்பின் ஊற்றை ஓடச் செய்தோம். மேலும், ஜின்களையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவைகளோ தம் இறைவனின் கட்டளைப்படி பணிபுரிந்து கொண்டிருந்தன. அவற்றில் எது நம்முடைய கட்டளையை விட்டும் பிறழ்கின்றதோ அதனைக் கொழுந்துவிட்டெரியும் நெருப்பின் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்வோம். </span>
<span>34:13 அந்த ஜின்கள் ஸுலைமானுக்காக அவர் விரும்பியவை அனைத்தையும் உயர்ந்த மாளிகைகளையும், சிற்பங்களையும், தடாகத்தையொத்த பெரிய தட்டுகளையும், இருப்பிடத்தை விட்டகலாத பெரும் அண்டாக்களையும் உருவாக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தன தாவூதுடைய வழித்தோன்றல்களே! நன்றி செலுத்தும் வகையில் செயலாற்றுங்கள். என்னுடைய அடிமைகளில் மிகச் சிலர்தான் நன்றி செலுத்துவோராயிருக்கின்றனர். </span>
<span>34:14 பிறகு நாம் ஸுலைமான் மீது மரணத்தை விதித்தபோது, அவருடைய கைத்தடியைத் தின்றுகொண்டிருந்த கரையான்களைத் தவிர வேறெதுவும் அவருடைய மரணத்தைப் பற்றி அந்த ஜின்களுக்கு அறிவித்துக்கொடுக்கவில்லை. இவ்வாறு ஸுலைமான் கீழே சாய்ந்ததும் ஜின்களுக்குப் புலப்பட்டது. மறைவானவற்றை அவர்கள் அறிபவர்களாய் இருந்திருந்தால் இழிவுதரும் இவ்வேதனையில் அவர்கள் சிக்கியிருந்திருக்க மாட்டார்களே!</span>
<span>34:15 ஸபஃ சமுதாயத்தினர்க்கு அவர்கள் வசித்த இடத்திலேயே ஒரு சான்று இருந்தது. வலப்புறமும் இடப்புறமும் இரு தோட்டங்கள் இருந்தன. உண்ணுங்கள், உங்கள் இறைவன் வழங்கிய உணவை! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துங்கள். நாடோ நன்கு தூய்மையாக இருக்கிறது. படைத்த இறைவனோ பெரும் மன்னிப்பாளனாக இருக்கின்றான். </span>
<span>34:16 ஆயினும், அவர்கள் புறக்கணித்துவிட்டார்கள். ஆகவே, அவர்கள் மீது அணை உடைத்து ஓடும் வெள்ளத்தை நாம் அனுப்பினோம். மேலும், அவர்களுடைய (முந்தைய) இரு தோட்டங்களுக்குப் பகரமாக வேறு இரு தோட்டங்களைக் கொடுத்தோம். அவற்றில் கசப்பான காய்களும், காற்றாடி மரங்களும் இன்னும் மிகச் சில இலந்தை மரங்களுமே இருந்தன. </span>
<span>34:17 இதுவே அவர்கள் நிராகரித்ததற்குப் பகரமாக நாம் வழங்கிய கூலியாகும். மேலும், நன்றி கொல்லும் மனிதர்களுக்கே அன்றி வேறெவருக்கும் நாம் இத்தகைய கூலி கொடுப்பதில்லை. </span>
<span>34:18 மேலும், அவர்களுக்கும் நாம் அருட்பேறுகள் வழங்கியிருந்த ஊர்களுக்குமிடையில் எல்லோருக்கும் தெரியும்படியான ஊர்களை அமைத்திருந்தோம். அவற்றில் பயணத்தூரத்தை அளவிட்டு நிர்ணயித்திருந்தோம். “பயணம் செய்யுங்கள் இவ்வழிகளினூடே; இரவு பகல் முழுவதும் அச்சமற்றவர்களாய்!” </span>
<span>34:19 ஆயினும், அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவனே! எங்களின் பயணத் தூரத்தை நீளமாக்கித் தருவாயாக!” அவர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்தார்கள். இறுதியில் அவர்களை நாம் வெறும் பழங்கதைகளாக்கி விட்டோம். அவர்களை முற்றிலும் சின்னாபின்னமாக்கிச் சிதறடித்து விட்டோம். ஒவ்வொரு பொறுமைசாலிக்கும் நன்றி உடையவர்க்கும் இதில் திண்ணமாக சான்றுகள் இருக்கின்றன. </span>
<span>34:20 அவர்களின் விவகாரத்தில் இப்லீஸ் தன் எண்ணம் சரியாக நிறைவேறக் கண்டான். மேலும், அவர்கள் அவனையே பின்பற்றினார்கள், இறைநம்பிக்கையாளர்களின் ஒரு சிறு பிரிவினரைத் தவிர!</span>
<span>34:21 இப்லீசுக்கு அவர்கள் மீது எந்த அதிகாரமும் இருக்கவில்லை. ஆனால் (இதெல்லாம் நடந்தது) மறுமையை நம்புகின்றவர் யார், அதைப்பற்றி சந்தேகப்படுகின்றவர் யார் என்பதை நாம் கண்டறிந்து கொள்வதற்காகத்தான்! உம் இறைவன் ஒவ்வொன்றையும் கண்காணிக்கக்கூடியவனாக இருக்கின்றான். </span>
<span>34:22 (நபியே, இந்த இணைவைப்பாளர்களிடம்) கூறும்: “அல்லாஹ்வை விடுத்து உங்களின் கடவுளர்களாக நீங்கள் யாரைக் கருதுகின்றீர்களோ அவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் வானங்களிலோ பூமியிலோ உள்ள அணுவளவு பொருளுக்கும் உரிமையுடையவர்களல்லர். வானம் மற்றும் பூமியின் உடைமையில் அவர்கள் பங்காளியாகவும் இல்லை. அவர்களில் யாரும் அல்லாஹ்வுக்கு உதவி புரிபவர்களாயும் இல்லை. </span>
<span>34:23 மேலும், அல்லாஹ்விடத்தில் எந்த ஒரு பரிந்துரையும் யாருக்காகவும் பயனளிக்க முடியாது யாருக்கு அல்லாஹ் பரிந்துரை வழங்க அனுமதி தந்திருக்கின்றானோ அவரைத்தவிர! இவ்வாறு மக்களுடைய உள்ளங்களிலிருந்து அச்சம் அகலும்போது (பரிந்துரைப்பவர்களிடம்) “உங்களுடைய இறைவன் என்ன பதிலுரைத்தான்?” என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு, “சரியான பதில் தந்துள்ளான். அவன் மிக உயர்ந்தவனாகவும் மாபெரியவனாகவும் இருக்கின்றான்” என்று கூறுவார்கள். </span>
<span>34:24 (நபியே,) இவர்களிடம் கேளும்: “வானங்கள் மற்றும் பூமியிலிருந்து உங்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பவன் யார்?” கூறும்: “அல்லாஹ்தானே!” இப்போது திட்டவட்டமாக நம் இருவரில் நாமோ அல்லது நீங்களோ யாராவது ஒருவர்தான் நேர்வழியில் இருக்கிறோம். அல்லது வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்திருக்கின்றோம்.” </span>
<span>34:25 (இவர்களிடம்) கூறும்: “நாங்கள் செய்த குற்றங்களைப் பற்றி உங்களிடம் கேட்கப்பட மாட்டாது. நீங்கள் செய்து கொண்டிருப்பவை பற்றி எங்களிடம் கேட்கப்பட மாட்டாது.” </span>
<span>34:26 கூறும்: “நம்முடைய அதிபதி நம்மை ஒன்று கூட்டுவான். பிறகு நம்மிடையே சரியாகத் தீர்ப்பு வழங்குவான். அவனோ யாவற்றையும் அறிந்திருக்கின்ற ஆற்றல் மிக்க தீர்ப்பாளனாவான்.” </span>
<span>34:27 (இவர்களிடம்) கூறும்: “நீங்கள் எவர்களை அவனோடு இணையானவர்களாய்ச் சேர்த்து வைத்திருக்கின்றீர்களோ அவர்களை எனக்குக் கொஞ்சம் காண்பியுங்களேன்!” ஒருபோதும் முடியாது! உண்மையில் யாவற்றையும் மிகைத்தோனும், நுண்ணறிவாளனும் அந்த அல்லாஹ் ஒருவன்தான்!</span>
<span>34:28 மேலும், (நபியே!) நாம் உங்களை மனிதகுலம் முழுவதற்கும் நற்செய்தி அறிவிப்பவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும்தான் அனுப்பிவைத்திருக்கின்றோம். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் அறிவதில்லை. </span>
<span>34:29 மேலும், இவர்கள் உம்மிடம் “நீங்கள் உண்மையாளராயின் அந்த (மறுமையைப் பற்றிய) வாக்குறுதி எப்பொழுது நிறைவேறும்” என்று கேட்கின்றார்கள். </span>
<span>34:30 நீர் கூறும்: “உங்களுக்காக எத்தகைய ஒரு நாள் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது எனில், அதன் வருகையை ஒரு நிமிடம் பிற்படுத்தவும் உங்களால் முடியாது; ஒரு நிமிடம் முற்படுத்தவும் முடியாது.”</span>
<span>34:31 இந்நிராகரிப்பாளர்கள் (உம்மிடம்) கூறுகின்றார்கள்: “நாங்கள் ஒருபோதும் இந்தக் குர்ஆனையும் நம்ப மாட்டோம்; இதற்கு முன்பு வந்திருந்த எந்த வேதத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.” அந்தோ! கொடுமை புரியும் இவர்கள் தம்முடைய இறைவனின் திருமுன் நிறுத்தப்படும்போது இவர்களின் நிலையை நீர் பார்க்க வேண்டுமே! (அவ்வேளை) இவர்கள் ஒருவர் மற்றவர் மீது குற்றம் சுமத்திக்கொண்டிருப்பார்கள். (உலகில்) தங்களைப் பெரியவர்களாய்க் கருதிக்கொண்டிருந்தவர்களை நோக்கி ஒடுக்கப்பட்டிருந்தவர்கள் கூறுவார்கள்: “நீங்கள் இல்லாதிருந்தால் நாங்கள் இறைநம்பிக்கையாளர்களாய் இருந்திருப்போம்.” </span>
<span>34:32 தங்களைப் பெரியவர்களாய்க் காட்டிக்கொண்டிருந்தவர்கள் இந்த ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கி பதில் சொல்வார்கள்: “உங்களிடம் நேர் வழி வந்ததன் பின்னர் நாங்களா அதனை விட்டு உங்களைத் தடுத்தோம்? இல்லை! மாறாக, நீங்களே குற்றவாளிகளாயிருந்தீர்கள்.”</span>
<span>34:33 ஒடுக்கப்பட்ட மக்கள் பெரியவர்களாய்க் காட்டிக் கொண்டிருந்தவர்களிடம் கூறுவார்கள்: “இல்லை; இரவு பகலாக நீங்கள் செய்துகொண்டிருந்த வஞ்சனையாகும் இது! நாங்கள் அல்லாஹ்வை நிராகரிக்கும்படியும் மற்றவர்களை அவனுக்கு இணையாக்கும்படியும் நீங்கள் எங்களிடம் கூறியவண்ணம் இருந்தீர்கள்.” இறுதியில் இவர்கள் வேதனையைக் காணும்போது உள்ளூர வருந்துவார்கள். மேலும், நாம் இந்நிராகரிப்பாளர்களின் பிடரிகளில் விலங்குகளைப் பூட்டுவோம். தாம் எவ்விதம் செயல்பட்டார்களோ அதற்கேற்பவே கூலி கிடைக்கும் என்பதைத் தவிர வேறு பிரதிபலன் ஏதேனும் மக்களுக்குக் கிடைக்குமா என்ன?</span>
<span>34:34 எச்சரிக்கை செய்யக்கூடிய ஒருவரை எந்த ஊருக்கு நாம் அனுப்பி வைத்தாலும் அவ்வூரில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர்கள், “நீங்கள் கொண்டு வந்திருக்கின்ற தூதுச் செய்தியை நாங்கள் ஏற்க மாட்டோம்” என்றே கூறினார்கள். </span>
<span>34:35 மேலும், அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் (உங்களைவிட) அதிகமான செல்வமும் சந்ததிகளும் உடையவர்கள். நாங்கள் ஒருபோதும் தண்டனை பெறக்கூடியவர்கள் அல்லர்.”</span>
<span>34:36 (நபியே, இவர்களிடம் நீர்) கூறும்: “என் இறைவன் தான் நாடுகின்றவர்களுக்கு வாழ்வாதாரத்தைத் தாராளமாக வழங்குகின்றான். மேலும், தான் நாடுகின்றவர்களுக்கு அளவோடு கொடுக்கின்றான். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் (இந்த உண்மையை) அறிவதில்லை.” </span>
<span>34:37 உங்கள் செல்வங்களும் உங்கள் பிள்ளைகளும் உங்களை நம்மிடத்தில் மிகவும் நெருக்கமாக்கி வைக்கக்கூடியவை அல்ல; ஆயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தவர்களைத் தவிர! அத்தகையவர்களுக்கே, அவர்கள் செய்த செயல்களின் கூலி இரு மடங்கு இருக்கிறது. மேலும், அவர்கள் உயர்ந்த மாளிகைகளில் நிம்மதியோடிருப்பார்கள். </span>
<span>34:38 ஆனால், எவர்கள் நம்முடைய வசனங்களைத் தோல்வியுறச் செய்வதற்காகக் கடும் முயற்சி செய்கின்றார்களோ அவர்கள் வேதனையில் ஆழ்த்தப்படுவார்கள். </span>
<span>34:39 (நபியே, இவர்களிடம்) கூறும்: என்னுடைய இறைவன் தன் அடிமைகளில் தான் நாடுவோருக்கு தாராளமாய் வாழ்வாதாரம் வழங்குகின்றான். இன்னும் தான் நாடுவோருக்கு அளவோடு கொடுக்கின்றான். நீங்கள் செலவு செய்கின்றவற்றுக்குப் பகரமாக இன்னும் பலவற்றை அவனே உங்களுக்குத் தருகின்றான். வாழ்வாதாரம் வழங்குவோரில் அவன் மிகச் சிறந்தவனாவான். </span>
<span>34:40 மேலும், அந்நாளில் அவன் மனிதர்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவான். பிறகு வானவர்களிடம் கேட்பான்: “என்ன, இவர்கள் உங்களைத்தானா வணங்கிக் கொண்டிருந்தார்கள்?”</span>
<span>34:41 அப்போது அவர்கள் பதில் கூறுவார்கள்: “தூய்மையானவன் நீ! எங்களுடைய தொடர்பு உன்னுடன்தானே தவிர இவர்களுடன் அல்ல! இவர்கள் வணங்கிக் கொண்டிருந்தது எங்களை அல்ல; ஜின்களைத்தான்! இவர்களில் பெரும்பாலோர் அந்த ஜின்களின் மீதே நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.” </span>
<span>34:42 (அவ்வேளை நாம் கூறுவோம்:) “இன்று உங்களில் எவரும் வேறெவர்க்கும் இலாபம் அளிக்கவும் முடியாது; நஷ்டம் ஏற்படுத்தவும் முடியாது.” மேலும், கொடுமை புரிந்து கொண்டு இருந்தவர்களிடம் நாம் கூறுவோம்: “இப்பொழுது சுவையுங்கள் இந்த நரகவேதனையை! இதைத்தான் நீங்கள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்தீர்கள்!”</span>
<span>34:43 இவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக்காட்டப்படும்போது இவர்கள் கூறுகின்றார்கள். “இந்த மனிதர் விரும்புவதெல்லாம் உங்களுடைய முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வங்களை விட்டு உங்களைத் தடுத்துவிடுவதுதான்.” மேலும், கூறுகின்றார்கள்: “(குர்ஆன்) புனைந்துரைக்கப்பட்ட வெறும் பொய்யே தவிர வேறில்லை.” இந்நிராகரிப்பாளர்களின் முன்னால் சத்தியம் வந்தபோது அவர்கள் கூறினார்கள்: “இதுவோ வெளிப்படையான சூனியம்!” </span>
<span>34:44 நாம் இந்த மக்களுக்கு இவர்கள் படிக்கக்கூடிய வகையில் எந்த வேதத்தையும் முன்னர் வழங்கவில்லை. மேலும், உமக்கு முன்பு எச்சரிக்கை செய்பவர் எவரையும் இவர்களிடம் நாம் அனுப்பவுமில்லை </span>
<span>34:45 இவர்களுக்கு முன் வாழ்ந்து சென்ற மக்களும் பொய்யென்று தூற்றிவிட்டிருக்கிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியிருந்தவற்றில் பத்திலொரு பங்குகூட இவர்கள் பெறவில்லை. ஆனால், அவர்கள் என்னுடைய தூதர்களைப் பொய்யர்கள் எனத் தூற்றியபோது பாருங்கள்! என்னுடைய வேதனை எத்துணைக் கடுமையாக இருந்தது!</span>
<span>34:46 (நபியே! இவர்களிடம்) கூறும்: “நான் உங்களுக்கு ஒரே ஒரு விஷயத்தை அறிவுறுத்துகின்றேன்: நீங்கள் அல்லாஹ்வுக்காக தனித் தனியாகவோ இருவரிருவராகவோ சேர்ந்து ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்; உங்களுடைய தோழரிடம் பைத்தியக்காரத்தனம் என்ன இருக்கிறது என்று! அவரோ ஒரு கடினமான வேதனை வருமுன் உங்களை எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவார்.” </span>
<span>34:47 இவர்களிடம் கூறும்: “நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. அவ்வாறு கேட்டிருந்தாலும் அதனை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். என்னுடைய கூலி அல்லாஹ்வின் பொறுப்பிலேயே உள்ளது. அவன் அனைத்து விஷயங்களுக்கும் சாட்சியாக இருக்கின்றான்.”</span>
<span>34:48 இவர்களிடம் கூறும்: “என்னுடைய இறைவன் (என்னுள்) சத்தியத்தை உதிக்கச் செய்கின்றான். அவன் மறைவான உண்மைகளை நன்கறிபவனாக இருக்கின்றான்.” </span>
<span>34:49 கூறுவீராக: “சத்தியம் வந்துவிட்டது. இனி, அசத்தியத்தினால் எதுவும் செய்ய முடியாது!” </span>
<span>34:50 கூறுவீராக: “நான் வழிதவறிப் போய்விட்டால், எனது வழிகேட்டின் தீயவிளைவு என்னையே சாரும். நான் நேர்வழியில் இருக்கிறேனென்றால், அது என்னுடைய இறைவன் எனக்கு அனுப்புகின்ற வஹியின்* காரணத்தினாலாகும். அவன் எல்லாவற்றையும் செவியுறுபவனும் அருகிலேயே உள்ளவனுமாவான்.”</span>
<span>34:51 (மேலும்) அந்தோ! இவர்கள் திகைப்புற்றுத் தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில் இவர்களை நீர் காண வேண்டுமே! இவர்களால் எங்கும் தப்பித்துச் செல்ல முடியாது. மாறாக, அருகிலிருந்தே பிடிக்கப்படுவார்கள். </span>
<span>34:52 அப்போது, இவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் அதன் மீது நம்பிக்கை கொண்டோம்.” ஆயினும், அவர்களை விட்டு தூரமாகச் சென்றுவிட்ட ஒன்றை எங்ஙனம் அவர்களால் கைக்கொள்ள முடியும்?</span>
<span>34:53 இதற்கு முன்போ அவர்கள் அதனை நிராகரித்துவிட்டிருந்தார்கள். மேலும், உண்மையான அறிவில்லாமல், புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட தூரமான விஷயங்கள் குறித்து கற்பனைகளைக் கூறிக் கொண்டிருந்தார்கள். </span>
<span>34:54 அந்நேரத்தில் எவற்றிற்காக இவர்கள் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பார்களோ அவற்றைவிட்டு இவர்கள் தடுக்கப்பட்டு விடுவார்கள் இவர்களுக்கு முன்னர் இவர்களைப் போல் வாழ்ந்தவர்கள் தடுக்கப்பட்டதைப் போல! திண்ணமாக, இவர்கள் வழிகெடுக்கும் பெரும் ஐயப்பாட்டில் வீழ்ந்து கிடந்தார்கள். </span>
</div><div>
<span>ஃபாத்திர்</span>
<span>35:1 வானங்களையும் பூமியையும் படைத்தவனும், வானவர்களைத் தூது கொண்டு செல்பவர்களாக நியமித்தவனும் ஆகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! (அவ்வானவர்கள் எத்தகையோர் எனில்) அவர்களுக்கு இரண்டிரண்டு, மூன்று மூன்று, நான்கு நான்கு இறக்கைகள் உள்ளன. அவன் தன்னுடைய படைப்புகளின் வடிவமைப்பில் தான் நாடுவதை அதிகப்படுத்துகின்றான். திண்ணமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவனாக இருக்கின்றான். </span>
<span>35:2 அல்லாஹ் எந்த ஓர் அருள்வாயிலை மக்களுக்காகத் திறந்துவிட்டாலும், அதனைத் தடுக்கக்கூடியவர் யாருமிலர். மேலும், அவன் அதனை அடைத்துவிட்டால், அதற்குப் பிறகு அதனைத் திறக்கக்கூடியவர் வேறு யாருமிலர். அவன் யாவற்றையும் மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>35:3 மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது பொழிந்துள்ள அருட்பேறுகளை நினைவில் வையுங்கள். வானம் மற்றும் பூமியிலிருந்து உங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கின்ற படைப்பாளன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இருக்கின்றாரா? வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. பிறகு எங்கிருந்து நீங்கள் ஏமாற்றப்படுகின்றீர்கள்? </span>
<span>35:4 (நபியே!) இப்பொழுது இவர்கள் உம்மைப் பொய்யர் என்று தூற்றுகின்றார்கள் (என்றால் இது புதிய விஷயமல்ல). உமக்கு முன்பும் தூதர்கள் பலர் பொய்யர்கள் என்று தூற்றப்பட்டிருக்கின்றார்கள். மேலும், அனைத்து விவகாரங்களும் இறுதியில் அல்லாஹ்விடம் தான் திரும்பக் கொண்டு வரப்பட இருக்கின்றன. </span>
<span>35:5 மனிதர்களே! திண்ணமாக, அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. எனவே, உலக வாழ்க்கை உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திட வேண்டாம். மேலும், அந்தப் பெரும் ஏமாற்றுக்காரனும் உங்களை அல்லாஹ்வின் விஷயத்தில் ஏமாற்றிவிட வேண்டாம். </span>
<span>35:6 உண்மையாக ஷைத்தான் உங்களின் பகைவனாவான். ஆகையால், நீங்களும் அவனை உங்களின் பகைவனாகவே கருதுங்கள். அவன் தன்னைப் பின் பற்றுபவர்களைத் தனது வழியில் அழைத்துக் கொண்டிருப்பது, அவர்கள் நரகவாசிகளுடன் இணைந்துவிட வேண்டுமென்பதற்காகத்தான்!</span>
<span>35:7 எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்குக் கடுமையான வேதனை இருக்கின்றது. மேலும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் பெரும் கூலியும் இருக்கின்றன. </span>
<span>35:8 எந்த மனிதனுக்கு அவனுடைய தீயசெயல் அலங்காரமாக் கப்பட்டிருக்கிறதோ, மேலும் அதனை அவன் நல்லதென்று கருதிக் கொண்டிருக்கின்றானோ (அந்த மனிதனின் வழிகேட்டிற்கு எல்லையேதும் உண்டா என்ன?) திண்ணமாக, அல்லாஹ் தான் நாடுவோரை நெறிபிறழச் செய்கின்றான். மேலும், தான் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகின்றான். எனவே (நபியே!) இவர்களுக்காகத் துக்கமும் வேதனையும் அடைந்தே உமது உயிர் உருகிப்போய்விட வேண்டாம். இவர்கள் செய்து கொண்டிருக்கின்ற அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் நன்கு அறிகின்றான். </span>
<span>35:9 மேலும், காற்றுகளை அனுப்புகின்றவன் அல்லாஹ்தான்! பின்னர் அவை மேகங்களை உயரே கிளப்புகின்றன. பிறகு அதனை வறண்ட பகுதிக்கு நாம் கொண்டு செல்கின்றோம். மேலும், இறந்து கிடக்கும் பூமியை அதன் மூலம் உயிர்ப்பிக்கின்றோம். (இறந்துபோன மனிதர்களை) மீண்டும் உயிரோடெழுப்புவதும் இவ்வாறுதான்!</span>
<span>35:10 எவரேனும் கண்ணியத்தை விரும்பினால் கண்ணியம் முழுவதும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும்). அவனை நோக்கி உயர்ந்து செல்வது தூய்மையான சொல் மட்டுமே! இன்னும் நற்செயல் அதனை மேலே உயர்த்துகின்றது. மேலும், எவர்கள் தீயசூழ்ச்சிகள் செய்கின்றார்களோ அவர்களுக்குக் கடுமையான வேதனை இருக்கிறது. மேலும், அவர்களுடைய சூழ்ச்சிகள் தானாகவே அழியக்கூடியவையாக இருக்கின்றன. </span>
<span>35:11 அல்லாஹ் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பிறகு, இந்திரியத்திலிருந்து (படைத்தான்). பின்னர், உங்களை (ஆண், பெண்) ஜோடிகளாய் ஆக்கினான். அல்லாஹ் அறியாமல் எந்த ஒரு பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை; குழந்தையைப் பெறுவதுமில்லை! இவ்வாறே நீண்ட ஆயுள் உடையவர் அதிக வயதைப் பெறுவதுமில்லை, எவருடைய வயதும் குறைக்கப்படுவதுமில்லை; இவையெல்லாம் அந்த ஏட்டில் பதியப்படாமல்! திண்ணமாக, அல்லாஹ்வுக்கு இது மிக எளிய செயலாகும். </span>
<span>35:12 இரண்டு நீர்ப் பரப்புகள் சமமாகமாட்டா! ஒன்று சுவையானதாகவும், தாகம் தணிக்கக்கூடியதாகவும் குடிப்பதற்கு இன்பமாயும் இருக்கின்றது. மற்றொன்று, தொண்டையை கரகரக்கச் செய்யும் அளவு கடும் உவர்ப்பானதாய் இருக்கின்றது. ஆயினும், இரண்டிலிருந்தும் நீங்கள் புத்தம் புதிய இறைச்சியைப் பெற்றுக் கொள்ளுகின்றீர்கள். அணிவதற்கான அழகு சாதனங்களை வெளிக்கொணர்கிறீர்கள். மேலும் இந்த நீரில் (நீங்கள் பார்க்கின்றீர்கள்) அதன் மார்பைப் பிளந்துகொண்டு கப்பல்கள் செல்வதை நீங்கள் அல்லாஹ்வின் அருளைத் தேட வேண்டும்; அவனுக்கு நன்றி செலுத்துவோராய்த் திகழ வேண்டும் என்பதற்காக! </span>
<span>35:13 அவன் பகலினுள் இரவையும், இரவினுள் பகலையும் கோத்துக் கொண்டு வருகின்றான். மேலும், சூரியனையும் சந்திரனையும் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றான். இவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை சென்று கொண்டிருக்கும். (இந்தப் பணிகள் அனைத்தையும் செய்து கொண்டிருக்கும்) அந்த அல்லாஹ்தான் உங்கள் அதிபதி. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியதாகும். மேலும், அவனை விடுத்து நீங்கள் யார் யாரை அழைக்கின்றீர்களோ, அவர்கள் ஓர் இம்மியளவுப் பொருளுக்கும் உரிமையாளர்கள் அல்லர். </span>
<span>35:14 நீங்கள் அவர்களை அழைத்தால் அவ்வழைப்பினை அவர்களால் செவியேற்க முடிவதில்லை. மேலும், செவியேற்றாலும் அவர்களால் உங்களுக்கு எந்தப் பதிலையும் அளிக்க முடிவதில்லை. மேலும், மறுமை நாளில் உங்களுடைய இணைவைப்புச் செயலை அவர்கள் ஏற்க மறுத்துவிடுவார்கள். (எதார்த்த நிலை பற்றி இத்தகைய துல்லியமான தகவலை) யாவும் தெரிந்த ஒருவனைத் தவிர யாராலும் உங்களுக்கு அறிவித்துத் தர முடியாது. </span>
<span>35:15 மனிதர்களே! நீங்கள்தாம் அல்லாஹ்விடம் தேவையுடை யவர்களாய் இருக்கின்றீர்கள்; ஆனால், அல்லாஹ்வோ தேவைகள் அற்றவனும், மாபெரும் புகழுக்குரியவனும் ஆவான்!</span>
<span>35:16 அவன் நாடினால் உங்களை அகற்றிவிட்டு உங்களுக்குப் பதிலாக ஏதேனும் புதிய படைப்பைக் கொண்டு வந்துவிடுவான். </span>
<span>35:17 இவ்வாறு செய்வது அல்லாஹ்வைப் பொறுத்துச் சிறிதும் சிரமமானதன்று! </span>
<span>35:18 சுமை சுமக்கும் எவரும் மற்றொருவருடைய சுமையைச் சுமக்க மாட்டார். மேலும், சுமை ஏற்றப்பட்ட ஒருவர் தன்னுடைய சுமையைச் சுமக்கும்படி கெஞ்சினாலும், அவருடைய சுமையின் ஒரு சிறு பாகத்தைக்கூட ஏற்றுக்கொள்ள எவரும் முன்வரமாட்டார். அவர்மிக நெருங்கிய உறவினரானாலும் சரியே! (நபியே!) நேரில் காணாமலேயே தங்களுடைய இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகின்றார்களோ, மேலும், தொழுகையை நிலைநாட்டுகின்றார்களோ அவர்களை மட்டுமே உம்மால் எச்சரிக்கை செய்ய முடியும். எவர் தூய்மையை மேற்கொண்டாலும் அவர் தனது நலனுக்காகவே அதனை மேற்கொள்கின்றார். மேலும், அனைவரும் அல்லாஹ்விடமே திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. </span>
<span>35:19 பார்வையற்றவனும், பார்வையுள்ளவனும் சமமாக மாட்டார்கள். </span>
<span>35:20 இருள்களும் ஒளியும் சமமானவை அல்ல; </span>
<span>35:21 குளிர்தரும் நிழலும், வெயிலின் வெப்பமும் ஒன்றுபோல் இல்லை. </span>
<span>35:22 மேலும், உயிருள்ளவர்களும், உயிரற்றவர்களும் சமமானவர்களல்லர். அல்லாஹ், தான் நாடுவோரைச் செவியேற்கச் செய்கின்றான். ஆயினும், (நபியே!) மண்ணறைகளில் அடக்கப்பட்டிருப்பவர்களைச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது. </span>
<span>35:23 நீர் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவீர். </span>
<span>35:24 நாமே உம்மை நற்செய்தி சொல்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் நியமித்து, சத்தியத்துடன் அனுப்பியுள்ளோம். மேலும், எச்சரிக்கை செய்பவர் எவரும் வருகை தராமல் எந்தச் சமுதாயமும் இருந்ததில்லை. </span>
<span>35:25 (இப்போது) இவர்கள் உம்மைப் பொய்யர் என்று தூற்றுகின்றார்கள் எனில், இவர்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களும் பொய்யர் என்று தூற்றியிருக்கின்றார்கள். அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் வெளிப்படையான சான்றுகளையும், ஆகமங்களையும், தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் வேதத்தையும் கொண்டு வந்திருந்தார்கள். </span>
<span>35:26 பின்னர், எவர்கள் ஏற்கவில்லையோ, அவர்களை நான் பிடித்துக்கொண்டேன். மேலும், பார்த்துக் கொள்ளுங்கள் என்னுடைய தண்டனை எத்துணைக் கடுமையாக இருந்தது என்பதை!</span>
<span>35:27 நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து மழை பொழியச் செய்கின்றான்; பிறகு, அதன் மூலம் பல நிறங்கள் கொண்ட விதவிதமான கனிகளை நாம் வெளிக் கொணர்கின்றோம். மலைகளிலும்கூட வெண்மை, சிவப்பு, அடர்ந்த கறுப்பு ஆகிய நிறக்கோடுகள் காணப்படுகின்றன. </span>
<span>35:28 மேலும், இவ்வாறே மனிதர்கள், விலங்குகள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றின் நிறங்களும் பலவிதமாய் உள்ளன. உண்மையில் அல்லாஹ்வின் அடிமைகளில் ஞானமுடையோர் மட்டுமே அவனுக்கு அஞ்சுகின்றார்கள். திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும், பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>35:29 எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகின்றார்களோ, மேலும், தொழுகையை நிலை நாட்டுகின்றார்களோ, மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து மறைவாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்கள் திண்ணமாக, என்றைக்கும் நஷ்டமடையாத ஒரு வணிகத்தை எதிர்பார்த்திருக்கின்றார்கள். </span>
<span>35:30 (இந்த வணிகத்தில் அவர்கள் தங்களிடமுள்ள அனைத்தையும் முதலீடு செய்வது) அவர்களுக்குரிய கூலியை அல்லாஹ் அவர்களுக்கு முழுமையாகக் கொடுக்க வேண்டும்; மேலும், தன்னுடைய அருளிலிருந்து அதிகமாக அவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக! திண்ணமாக, அல்லாஹ் அதிகம் மன்னிப்பவனாகவும், உரிய மதிப் பளிப்பவனாகவும் இருக்கின்றான். </span>
<span>35:31 (நபியே!) வஹி*யின் மூலம் நாம் உமக்கு அருளிய வேதம்தான் உண்மையானதாகும். இது தனக்கு முன் வந்திருந்த வேதங்களை மெய்ப்படுத்தக்கூடியதாய் இருக்கிறது. திண்ணமாக, அல்லாஹ் தன்னுடைய அடிமைகளின் நிலைமைகளை நன்கு புரிந்தவனாகவும், அனைத்தையும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>35:32 பிறகு, நாம் நம்முடைய அடிமைகளிலிருந்து (வேதத்தின் வாரிசுகளாக) எவர்களைத் தேர்ந்தெடுத்தோமோ, அவர்களை இவ்வேதத்துக்கு வாரிசுகளாக்கினோம். இப்போது அவர்களில் சிலர் தங்களுக்கே அநீதியிழைப்பவர்களாய் இருக்கின்றனர். மேலும் சிலர் இடைப்பட்ட நிலையில் இருக்கின்றனர். இன்னும் சிலர், அல்லாஹ்வின் கட்டளைப்படி நற்செயல்களில் முந்திச் செல்பவர்களாய் இருக்கின்றனர். இதுதான் மாபெரும் அருளாகும். </span>
<span>35:33 நீடித்த நிலையான சுவனங்களில் இவர்கள் நுழைவார்கள். அங்கே தங்கக் காப்புகளும், முத்துக்களும் அவர்களுக்கு அணிவிக்கப்படும். அங்கு அவர்களின் உடைகள் பட்டாக இருக்கும். </span>
<span>35:34 மேலும், அவர்கள் கூறுவார்கள்: “நம்மைவிட்டுக் கவலையை அகற்றிய அல்லாஹ்வுக்கு நன்றி! திண்ணமாக, நம்முடைய இறைவன் பெரும் மன்னிப்பாளனாகவும், உரிய மதிப்பை அளிப்பவனாகவும் இருக்கின்றான். </span>
<span>35:35 அவனே தன்னுடைய அருளால் நம்மை நிலையான இருப்பிடத்தில் தங்க வைத்துள்ளான். இங்கு எவ்விதச் சிரமமும் நமக்கு நேருவதில்லை. மேலும், எவ்விதச் சோர்வும் ஏற்படுவதில்லை.”</span>
<span>35:36 மேலும், எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக நெருப்புதான் இருக்கிறது. அவர்கள் மரணம் அடையும் வகையில் அவர்களுடைய கதை முடிக்கபடவுமாட்டாது; நரகத்தின் வேதனையில் ஒரு சிறிதும் அவர்களுக்குக் குறைக்கப்படவுமாட்டாது. இவ்வாறே நிராகரிக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் நாம் கூலி கொடுக்கின்றோம். </span>
<span>35:37 அவர்கள் அங்கு கூக்குரலிட்டுக் கூறுவார்கள்: “எங்கள் இறைவனே! எங்களை இங்கிருந்து வெளியேற்று; நாங்கள் முன்பு செய்துகொண்டிருந்த செயல்களுக்கு மாறுபட்டநல்ல செயல்களைப் புரிவதற்காக!” (அவர்களுக்குப் பதிலளிக்கப்படும்:) “ஒருவன் படிப்பினை பெற வேண்டுமென்று நினைத்தால் படிப்பினை பெறுவதற்குப் போதுமான ஆயுளை நாம் உங்களுக்கு வழங்கிடவில்லையா? மேலும், எச்சரிப்பவரும் உங்களிடம் வந்திருந்தாரே! இப்போது நன்கு சுவையுங்கள். கொடுமையாளர்களுக்கு (இங்கு) உதவி செய்வார் யாருமில்லை.”</span>
<span>35:38 திண்ணமாக, அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் மறைவாக உள்ள ஒவ்வொன்றையும் அறிந்தவனாக இருக்கின்றான். திண்ணமாக, அவன் நெஞ்சங்களில் மறைந்திருக்கும் இரகசியங்களைக்கூட நன்கறிகின்றான். </span>
<span>35:39 அவனே பூமியில் உங்களைப் பிரதிநிதிகளாய் ஆக்கியிருக்கின்றான். இனி, எவன் நிராகரித்தாலும் அவனுடைய நிராகரிப்பின் தீயவிளைவு அவனையே சாரும். மேலும், நிராகரிப்பாளர்களின் நிராகரிப்பு அவர்களுடைய இறைவனின் கோபத்தை அவர்கள் மீது அதிகப்படுத்துமே தவிர வேறெந்த முன்னேற்றத்தையும் அவர்களுக்கு அளிக்காது. நிராகரிப்பாளர்களுக்கு இழப்பு அதிகமாவதைத் தவிர வேறு எந்த முன்னேற்றமும் இல்லை. </span>
<span>35:40 (நபியே!) இவர்களிடம் கேளும்: “இறைவனை விடுத்து நீங்கள் பிரார்த்திக்கின்ற உங்களுடைய இணைத் தெய்வங்களைப் பற்றி எப்போதேனும் நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா? பூமியில் எதைத்தான் அவர்கள் படைத்திருக்கின்றார்கள்? அல்லது வானங்களில் அவர்களுக்கு உரிய பங்கு என்ன என்பதை எனக்குக் காண்பியுங்கள். (அவர்களால் இதைக் காண்பிக்க முடியாவிட்டால், அவர்களிடம் கேளுங்கள்:) “நாம் ஏதேனும் எழுத்து மூலம் இவர்களுக்கு எழுதிக் கொடுத்திருக்கின்றோமா? அதன் அடிப்படையில் (தம் இணைவைப்புச் செயல்களுக்கு) ஏதேனும் தெளிவான சான்றுகளை இவர்கள் வைத்திருக்கின்றார்களா?” இல்லை! மாறாக, இந்த அக்கிரமக்காரர்கள் ஒருவருக்கொருவர் அளிக்கும் வாக்குறுதி ஏமாற்றுதலேயாகும். </span>
<span>35:41 உண்மையில் அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் விலகிவிடாமல் தடுத்து வைத்திருக்கின்றான். அப்படி அவை விலகிவிட்டால் அல்லாஹ்வுக்குப் பிறகு அவற்றைத் தடுத்து நிறுத்துவோர் வேறு யாருமில்லை. திண்ணமாக, அல்லாஹ் மிகவும் சகிப்புத்தன்மையுடையவனும் பெரிதும் மன்னிப்பவனும் ஆவான். </span>
<span>35:42 எச்சரிக்கை செய்பவர் எவரேனும் அவர்களிடம் வந்திருந்தால் (உலகிலுள்ள) ஏனைய சமூகத்தாரைக் காட்டிலும் அதிகமாக அவர்கள் நேர்வழி நடப்பவர்களாகி விடுவார்கள் என்று இந்த மக்கள் அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கூறிக்கொண்டிருந்தார்கள். ஆயினும், எச்சரிக்கை செய்பவர் இவர்களிடம் வந்துவிட்டபோது, அவருடைய வருகை இவர்களில் சத்தியத்தைவிட்டு விரண்டோடுவதைத் தவிர வேறெதையும் அதிகமாக்கவில்லை. </span>
<span>35:43 இவர்கள் பூமியில் இன்னும் அதிகம் இறுமாப்புக் கொள்ளவும், தீய சூழ்ச்சிகளைச் செய்யவும்தான் தலைப்பட்டார்கள். உண்மையில், தீயசூழ்ச்சிகள் அவற்றைச் செய்பவர்களையே தாக்கும். முந்தைய சமூகத்தார்களுடன் அல்லாஹ்வின் நியதி எதுவாக இருந்ததோ அதுவே இவர்கள் விஷயத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இவர்கள் இப்பொழுது எதிர்பார்க்கின்றார்களா? (அப்படியென்றால்) அல்லாஹ்வின் நியதியில் யாதொரு மாற்றத்தையும் எப்போதும் நீர் காணமாட்டீர். மேலும், அல்லாஹ்வின் நியதியை (அதற்கென நிர்ணயிக்கப்பட்ட வழியிலிருந்து ஏதேனும் ஒரு சக்தியால்) திருப்பிவிட முடியும் என்பதையும் நீர் காணமாட்டீர். </span>
<span>35:44 இவர்கள், பூமியில் சுற்றித் திரிந்து தங்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களின் கதி என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? அவர்கள் இவர்களை விடவும் அதிக வலிமையுடையவர்களாய் இருந்தார்கள்! அல்லாஹ்வை தோல்வியுறச் செய்யக்கூடிய எந்தப் பொருளும் இல்லை. வானத்திலும் இல்லை, பூமியிலும் இல்லை. அவன் யாவற்றையும் அறிந்தவனாகவும் அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவனாகவும் இருக்கின்றான். </span>
<span>35:45 அல்லாஹ் மக்களை அவர்கள் செய்யும் தீய செயல்களுக்காகத் தண்டிப்பானாகில், பூமியின் மீது எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைத்திருக்க மாட்டான். ஆயினும், அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவன் அவகாசம் அளித்துக் கொண்டிருக்கின்றான். பிறகு, அவர்களுக்குரிய காலம் பூர்த்தியானால் திண்ணமாக, அல்லாஹ் தன் அடிமைகளைப் பார்த்துக் கொள்வான்!</span>
</div><div>
<span>யாஸீன்</span>
<span>36:1 யாஸீன். </span>
<span>36:2 ஞானம் நிறைந்த குர்ஆனின் மீது ஆணையாக,</span>
<span>36:3 திண்ணமாக நீர் இறைத்தூதர்களில் ஒருவராவீர்; </span>
<span>36:4 நேரிய வழியில் இருக்கின்றீர். </span>
<span>36:5 (மேலும் இந்தக் குர்ஆன்) யாவரையும் மிகைத்தவனும் அருள்மிக்கவனுமாகிய இறைவனால் இறக்கியருளப்பட்டதாகும். </span>
<span>36:6 தம் மூதாதையர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்படாததால் எந்தச் சமுதாயம் அலட்சியமாக இருக்கிறதோ அந்தச் சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக!</span>
<span>36:7 அவர்களில் பெரும்பாலோர் தண்டனைக்குரிய தீர்ப்புக்கு ஆளாகிவிட்டனர். எனவே அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை. </span>
<span>36:8 நாம் அவர்களின் கழுத்துகளில் விலங்குகளைப் பூட்டியுள்ளோம். அவை அவர்களின் முகவாய்க் கட்டைகள் வரை நெருக்கப்பட்டிருக்கின்றன. அதனால் அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கின்றார்கள். </span>
<span>36:9 மேலும் நாம் அவர்களுக்கு முன்னால் ஒரு தடுப்பையும், அவர்களுக்குப் பின்னால் ஒரு தடுப்பையும் எழுப்பி, அவர்களை மூடி விட்டிருக்கின்றோம். இனி அவர்களுக்கு எதுவும் புலப்படுவதில்லை. </span>
<span>36:10 அவர்களுக்கு எல்லாமே ஒன்றுதான். நீர் அவர்களை அச்சமூட்டி எச்சரித்தாலும் சரி; எச்சரிக்காவிட்டாலும் சரி; அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். </span>
<span>36:11 யார் அறிவுரையைப் பின்பற்றி நேரில் காணாமலே ரஹ்மானுக்கு கருணை மிக்க இறைவனுக்கு அஞ்சுகிறாரோ அவருக்குத்தான் நீர் எச்சரிக்கை செய்ய முடியும். அத்தகையோருக்கு மன்னிப்பும், சிறப்பான கூலியும் இருக்கின்றதென்று நற்செய்தி கூறுவீராக!</span>
<span>36:12 திண்ணமாக, நாமே மரணமடைந்தவர்களை ஒரு நாள் உயிர்ப்பிப்போம். அவர்கள் செய்தவற்றையும் நாம் குறித்துக் கொண்டேயிருக்கின்றோம். அவர்கள் விட்டுச் சென்ற சுவடுகளையும் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம். மேலும், நாம் ஒவ்வொன்றையும் ஒரு தெளிவான பதிவேட்டில் கணக்கிட்டுக் குறித்து வைத்துள்ளோம். </span>
<span>36:13 மேலும், ஓர் ஊர் மக்களிடம் தூதர்கள் வந்தபோது நிகழ்ந்த சம்பவத்தை உதாரணமாக இவர்களுக்கு எடுத்துக் கூறுவீராக. </span>
<span>36:14 நாம் அவர்களிடம் இரு தூதர்களை அனுப்பியபோது, அவர்கள் அவ்விருவரையும் பொய்யர்கள் எனத் தூற்றினார்கள். பிறகு நாம் மூன்றாமவரை அனுப்பி (அவ்விரு தூதர்களுக்கு) உதவினோம். அத்தூதர்கள் அனைவரும் (அம்மக்களை நோக்கி) “உண்மையில் நாங்கள் உங்களிடம் இறைத்தூதர்களாய் அனுப்பப்பட்டுள்ளோம்” எனக் கூறினார்கள். </span>
<span>36:15 “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறிலர். மேலும் கருணைமிக்க இறைவன் எதையும் இறக்கி வைக்கவில்லை. நீங்கள் வெறும் பொய்யே கூறுகின்றீர்கள்” என்று அந்த ஊர் மக்கள் கூறினார்கள். </span>
<span>36:16 தூதர்கள் கூறினார்கள்: “திண்ணமாக, நாங்கள் உங்களிடம் தூதர்களாக அனுப்பப்பட்டுள்ளோம் என்பதை எங்கள் அதிபதி நன்கறிகின்றான். </span>
<span>36:17 மேலும் எங்கள் மீதுள்ள கடமை, தூதைத் தெளிவாய் (உங்களிடம்) சேர்ப்பித்து விடுவதைத்தவிர வேறில்லை!”</span>
<span>36:18 அதற்கு அவ்வூர் மக்கள், “நாங்களோ, உங்களை எங்களுக்கு ஏற்பட்ட அபசகுனமாகக் கருதுகின்றோம். நீங்கள் (இந்த அழைப்பிலிருந்து) விலகிக்கொள்ளாவிட்டால், நிச்சயமாக நாங்கள் உங்களைக் கல்லால் அடிப்போம். மேலும், நீங்கள் எங்களிடமிருந்து அவசியம் துன்பமிகு தண்டனை பெறுவீர்கள்!” எனக் கூறலானார்கள். </span>
<span>36:19 (அதற்கு) அத்தூதர்கள், “உங்களுடைய அபசகுனம் உங்களோடுதான் இருக்கிறது. உங்களுக்கு நல்லுரை கூறப்பட்டதற்காகவா (நீங்கள் இவ்வாறெல்லாம் பேசுகிறீர்கள்!) உண்மை யாதெனில், நீங்கள் வரம்பு மீறிய மக்களாவீர்!” எனப் பதிலளித்தார்கள். </span>
<span>36:20 (இதற்கிடையில்) நகரத்தின் ஒரு கோடியிலிருந்து ஒருவர் விரைந்து வந்து கூறினார்: “என் சமூகத்தவரே! இறைத்தூதர்களைப் பின்பற்றுங்கள். </span>
<span>36:21 எவர்கள் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லையோ, மேலும், எவர்கள் நேர்வழியில் இருக்கிறார்களோ, அவர்களையே நீங்கள் பின்பற்றுங்கள். </span>
<span>36:22 எவன் என்னைப் படைத்தானோ மேலும், எவன் பக்கம் நீங்கள் அனைவரும் திரும்பக் கொண்டு செல்லப்பட இருக்கின்றீர்களோ அத்தகைய ஒருவனுக்கு நான் ஏன் அடிபணியக் கூடாது?</span>
<span>36:23 அவனை விடுத்து மற்றவர்களை அடி பணிவதற்குரியவர்களாய் நான் எடுத்துக் கொள்வேனா? உண்மையில், கருணைமிக்க இறைவன் எனக்கு ஏதேனும் தீங்கினை ஏற்படுத்த நாடினால், அவர்களின் பரிந்துரை எனக்கு எவ்விதப் பலனையும் அளிக்காது. அவர்களால் என்னை விடுவிக்கவும் முடியாது. </span>
<span>36:24 நான் அவ்வாறு செய்தால், வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்துவிடுவேன் என்பதில் ஐயமில்லை. </span>
<span>36:25 நானோ உங்கள் அதிபதியின் மீதே உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே நீங்களும் நான் கூறுவதை ஏற்றுக்கொள்ளுங்கள்.”</span>
<span>36:26 (இறுதியில் அம்மக்கள் அவரைக் கொன்று விட்டார்கள். பிறகு) அவரிடம் “சுவனம் புகுவீராக!” என்று கூறப்பட்டது. அவர் கூறினார்: “ஆஹா! என் சமூகத்தவர் அறிந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்!” </span>
<span>36:27 என் இறைவன் எக்காரணத்தால் என்னை மன்னித்து, கண்ணியமிக்கவர்களில் ஒருவனாய் என்னை ஆக்கினான் என்பதனை. </span>
<span>36:28 அவருக்குப் பின்னர் அவருடைய சமூகத்தினர் மீது வானத்திலிருந்து யாதொரு படையையும் நாம் இறக்கி வைக்கவில்லை. அவ்வாறு இறக்குவதற்கான அவசியமும் நமக்கு இருக்கவில்லை. </span>
<span>36:29 ஒரே ஓர் உரத்த ஓசைதான் (முழங்கியது). அவர்களெல்லோரும் உடனே கருகிச் சாம்பலாகிவிட்டனர். </span>
<span>36:30 அந்தோ! இம்மக்களின் நிலை பரிதாபத்திற்கு உரியது. அவர்களிடம் எந்த இறைத்தூதர் வந்தபோதும், அத்தூதரை அவர்கள் ஏளனம் செய்துகொண்டுதான் இருந்தார்கள். </span>
<span>36:31 இவர்களுக்கு முன்பு (வாழ்ந்த) எத்தனையோ சமூகத்தினரை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். (பிறகு) அவர்கள் ஒருபோதும் இவர்களிடம் திரும்பிவர மாட்டார்கள் என்பதை இவர்கள் கவனிக்கவில்லையா, என்ன? </span>
<span>36:32 மேலும், திண்ணமாக இவர்கள் அனைவருமே (ஒருநாள்) நம்முன் கொண்டுவரப்பட இருக்கின்றார்கள். </span>
<span>36:33 உயிரற்ற பூமி அவர்களுக்கு ஒரு சான்றாகும். நாம் அதற்கு உயிர்கொடுத்து அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்தினோம்; அதிலிருந்து அவர்கள் புசிக்கிறார்கள். </span>
<span>36:34 மேலும், நாம் இதில் பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினோம்; மேலும், இதில் நீரூற்றுகளைப் பீரிட்டெழச் செய்தோம்; </span>
<span>36:35 இதன் கனிகளை அவர்கள் உண்பதற்காக! இவையனைத்தும் அவர்களுடைய கைகள் உருவாக்கியவை அல்லவே! பிறகு ஏன், அவர்கள் நன்றி செலுத்துவதில்லை? </span>
<span>36:36 மிகவும் தூய்மையானவன்; எல்லா வகையான ஜோடிகளையும் படைத்திருப்பவன்! அவை பூமி முளைக்கச் செய்யக்கூடியவையானாலும் சரி; அவர்களுடைய இனத்திலிருந்தானாலும் சரி; அவர்கள் அறிந்திராத மற்ற பொருள்களிலிருந்தானாலும் சரியே!</span>
<span>36:37 மேலும், இரவு அவர்களுக்கு மற்றொரு சான்று ஆகும். அதிலிருந்து நாம் பகலை அகற்றிவிடும்போது அவர்கள் மீது இருள் சூழ்ந்து கொள்கிறது. </span>
<span>36:38 மேலும், சூரியனும் (பிறிதொரு சான்றாகும்). அது தனக்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது பேரறிவு படைத்தவனும் வல்லமை மிக்கவனுமான இறைவனின் நிர்ணயமாகும். </span>
<span>36:39 மேலும், சந்திரன் (இன்னொரு சான்றாகும்). அதற்கு நாம் பல்வேறு நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். எதுவரையெனில், அது (அவற்றையெல்லாம் கடந்து) உலர்ந்து வளைந்துபோன பேரீச்சங்காம்பு போல் மீண்டும் ஆகி விடுகிறது. </span>
<span>36:40 சூரியன் சந்திரனை சென்றடைய முடியாது. மேலும், இரவு பகலை முந்திவிட முடியாது. ஒவ்வொன்றும் தத்தமது மண்டலங்களில் நீந்திக் கொண்டிருக்கின்றன. </span>
<span>36:41 மேலும், நிரம்பிய பெரிய தோணியில் நாம் அவர்களின் வழித்தோன்றல்களை ஏற்றியதும் அவர்களுக்கு ஒரு சான்றாகும். </span>
<span>36:42 பிறகு, அவர்கள் ஏறிச் செல்லக்கூடிய அதைப் போன்றவற்றையும் அவர்களுக்காக நாம் படைத்திருக்கின்றோம். </span>
<span>36:43 மேலும், நாம் நாடினால் அவர்களை மூழ்கடித்துவிடுவோம். அப்போது அவர்களுடைய முறையீடுகளைக் கேட்பவர் எவரும் இருக்கமாட்டார். அவர்கள் (எந்த வகையிலும்) மீட்கப்படவும் மாட்டார்கள்; </span>
<span>36:44 ஆயினும் நம்முடைய கருணையே அவர்களைக் காப்பாற்றுகிறது; மேலும், ஒரு குறிப்பிட்ட காலம் வரை வாழ்க்கையை அனுபவிக்க அவர்களுக்கு அவகாசம் அளிக்கின்றது. </span>
<span>36:45 மேலும், “உங்களை நோக்கி வந்து கொண்டிருப்பவற்றின் விளைவுகளிலிருந்தும், உங்களைக் கடந்து சென்று விட்டவற்றின் விளைவுகளிலிருந்தும் தப்பித்துக் கொள்ளுங்கள்; உங்கள் மீது கருணை பொழியப்படக்கூடும்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், (அவர்கள் கேட்டும் கேளாதவர்கள் போல் இருந்து விடுகின்றார்கள்). </span>
<span>36:46 மேலும், அவர்களிடம் தம் இறைவனின் சான்றுகளிலிருந்து எந்த ஒரு சான்று வந்தாலும் அவர்கள் அதனை ஏறிட்டும் பார்ப்பதில்லை. </span>
<span>36:47 மேலும், “அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட்பேறுகளிலிருந்து (இறைவழியிலும் பிறருக்கு) செலவழியுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால் இறைநிராகரிப்பாளர்கள், நம்பிக்கை கொண்டவர்களை நோக்கிக் கூறுகின்றார்கள்: “நாங்கள் அவர்களுக்கு உணவளிப்பதா? அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்கு அவனே உணவளித்திருப்பானே! திண்ணமாக, நீங்கள் முற்றிலும் வழிபிறழ்ந்து விட்டிருக்கிறீர்கள்!”</span>
<span>36:48 மேலும் அவர்கள் கேட்கின்றார்கள்: “நீங்கள் உண்மை கூறுவோராயின், (மறுமைநாளைப் பற்றிய உங்களின்) இந்த அச்சுறுத்தல் எப்போது நிறைவேறப் போகிறது? (என்பதை அறிவியுங்களேன்)” </span>
<span>36:49 அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ஒரேயொரு பயங்கர ஓசையேயன்றி வேறில்லை. அவர்கள் (உலக விவகாரங்கள் குறித்து) தர்க்கித்துக் கொண்டிருக்கும்போதே (திடீரென்று) அது அவர்களைப் பிடித்துக்கொள்ளும். </span>
<span>36:50 அப்போது அவர்களால் மரண சாஸனம் அளிக்கவோ, தம் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்லவோ முடியாது. </span>
<span>36:51 பிறகு ஒரு சங்கு ஊதப்படும். அப்பொழுது உடனே அவர்கள், (தத்தம்) அடக்கத்தலங்களிலிருந்து தம் இறைவனை நோக்கி விரைந்து வருவார்கள். </span>
<span>36:52 அவர்கள் (திகிலடைந்தவாறு) கேட்பார்கள்: “அந்தோ, எங்கள் பரிதாபமே! நாங்கள் உறங்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?” (அப்போது), “கருணைமிக்க இறைவன் வாக்களித்திருந்தது இதுவேயாகும்! இறைத்தூதர்களின் வாக்கும் உண்மையாகிவிட்டது!” (என்று பதில் சொல்லப்படும்) </span>
<span>36:53 அது ஒரே ஓர் உரத்த ஓசையாகத்தான் இருக்கும். அக்கணம் அவர்கள் அனைவருமே நம்முன் கொண்டு வரப்படுவார்கள். </span>
<span>36:54 இன்று எவர் மீதும் இம்மியளவும் அநீதி இழைக்கப்பட மாட்டாது. நீங்கள் எத்தகைய செயல்கள் புரிந்து கொண்டு இருந்தீர்களோ அவற்றிற்குத் தகுந்தாற்போல்தான் உங்களுக்குக் கூலி கொடுக்கப்படும் </span>
<span>36:55 திண்ணமாக, இன்று சுவனவாசிகள் இன்பநுகர்ச்சியில் திளைத்திருப்பார்கள். </span>
<span>36:56 அவர்களும், அவர்களின் மனைவியரும் அடர்ந்த நிழலில் சாய்வாசனங்கள் மீது சாய்ந்திருப்பார்கள். </span>
<span>36:57 அவர்களுக்காக அங்கே உண்ணவும் பருகவும் வித விதமான சுவைமிக்க பொருள்கள் இருக்கும். மேலும், அவர்கள் விரும்பிக்கேட்கும் அனைத்தும் அவர்களுக்குக் கிடைக்கும். </span>
<span>36:58 கருணைமிக்க இறைவனிடமிருந்து அவர்களுக்கு வாழ்த்துரை (ஸலாம்) கூறப்படும். </span>
<span>36:59 மேலும், “குற்றம் புரிந்தவர்களே! இன்று நீங்கள் தனியே பிரிந்து நில்லுங்கள். </span>
<span>36:60 ஆதத்தின் மக்களே, நீங்கள் ஷைத்தானுக்கு அடிபணியாதீர்கள்; அவன் உங்களுடைய வெளிப்படையான பகைவன் என்றும், </span>
<span>36:61 எனக்கே அடிபணியுங்கள்; இதுவே நேரான வழி என்றும் நான் உங்களுக்கு அறிவுறுத்தியிருக்கவில்லையா? </span>
<span>36:62 (அவ்வாறிருந்தும்) அவன், உங்களில் பெரும்பாலான மக்களைத் திண்ணமாக வழிபிறழச் செய்துவிட்டான். நீங்கள் அறிவு பெற்றவர்களாய் இருக்கவில்லையா? </span>
<span>36:63 எதனைக் குறித்து நீங்கள் அச்சுறுத்தப்பட்டு வந்தீர்களோ அந்த நரகம் இதுவேயாகும். </span>
<span>36:64 நீங்கள் (உலகில் சத்தியத்தை) நிராகரித்து வந்ததன் விளைவாக இன்று அதன் எரிபொருளாகுங்கள்!”</span>
<span>36:65 இன்று, அவர்களுடைய வாய்களுக்கு நாம் முத்திரை வைத்து விடுவோம். (உலகில்) அவர்கள் எவற்றைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள் என்று அவர்களின் கைகள் நம்மிடம் சொல்லும்; அவர்களின் கால்களும் சாட்சி பகரும். </span>
<span>36:66 மேலும், நாம் நாடினால் அவர்களுடைய கண்களை அவித்து விடுவோம். பிறகு, அவர்கள் பாதையை நோக்கி விரைந்து வருவார்கள். ஆனால், எவ்வாறு அவர்களுக்குப் (பாதை) புலப்படும்?</span>
<span>36:67 மேலும், நாம் நாடியிருந்தால் முன்னோக்கிச் செல்லவும், பின்னோக்கித் திரும்பவும் அவர்களால் முடியாதவாறு தம் இருப்பிடத்திலேயே அவர்களை உருமாற்றி விட்டிருப்போம்! </span>
<span>36:68 மேலும், நாம் எவருக்கேனும் நீண்ட ஆயுளைக் கொடுத்தால், அவருடைய அமைப்பை அடியோடு மாற்றிவிடுவோம். (இவை அனைத்தையும் பார்த்து) அவர்களுக்கு அறிவு வர வேண்டாமா, என்ன?</span>
<span>36:69 மேலும், (நபியாகிய) இவருக்கு நாம் கவிதை கற்றுக்கொடுக்கவில்லை; அது (கவிதை புனைதல்) அவருக்கு ஏற்றதுமன்று. திண்ணமாக இது ஒரு நல்லுரையாகவும், தெளிவாக ஓதப்படுகின்ற வேதமாகவும் இருக்கின்றது. </span>
<span>36:70 இதன் வாயிலாக உயிரோடிருக்கின்ற (ஒவ்வொரு) மனிதனையும் எச்சரிப்பதற்காகவும், நிராகரிப்பவர்களுக்கு எதிரான ஆதாரம் நிறைவு பெறுவதற்காகவும்தான்!</span>
<span>36:71 அவர்கள் கவனிக்கவில்லையா, என்ன? திண்ணமாக, நம் கைகள் உருவாக்கியவற்றிலிருந்து அவர்களுக்காகக் கால்நடைகளை நாம் படைத்துள்ளோம். இப்போது அவர்கள் அவற்றிற்கு உரிமையாளர்களாய் இருக்கின்றார்கள். </span>
<span>36:72 மேலும் அவற்றை அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளோம். அவற்றில், சிலவற்றின்மீது அவர்கள் சவாரி செய்கின்றார்கள். மேலும், சிலவற்றின் இறைச்சியைப் புசிக்கின்றார்கள். </span>
<span>36:73 மேலும், அவற்றில் அவர்களுக்குப் பலவிதமான பயன்களும் பானங்களும் இருக்கின்றன. (பிறகும்) அவர்கள் நன்றி செலுத்துவோராய் இருக்க வேண்டாமா, என்ன? </span>
<span>36:74 (இவ்வாறெல்லாம் இருந்தும்) அல்லாஹ்வை விடுத்து பிற கடவுள்களை இவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்; மேலும், தாம் உதவி செய்யப்படலாமென்று ஆசை கொள்கிறார்கள். </span>
<span>36:75 அவற்றால் அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய இயலாது! (இதற்கு நேர்மாறாக) அம்மக்கள், அவற்றிற்காக தயார் நிலையிலிருக்கும் சேனையாக விளங்குகிறார்கள். </span>
<span>36:76 (இட்டுக்கட்டிப் பேசும்) அவர்களின் பேச்சுகள் உம்மைக் கவலையில் ஆழ்த்திட வேண்டாம். அவர்கள் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் பேசுபவை அனைத்தையும் திண்ணமாக நாம் அறிகின்றோம். </span>
<span>36:77 திண்ணமாக நாம் மனிதனை விந்திலிருந்து படைத்திருக்கின்றோம் என்பதை அவன் பார்க்கவில்லையா என்ன? ஆனால் அவ்வாறிருந்தும் (நம்மை எதிர்த்து) வெளிப்படையாக தர்க்கம் புரிபவனாகிவிட்டான். </span>
<span>36:78 மேலும், அவன் நமக்கு உவமையைப் பொருத்துகின்றான். ஆனால் தான் படைக்கப்பட்ட விதத்தை மறந்துவிடுகின்றான். மக்கிப் போய்விட்ட நிலையிலுள்ள இந்த எலும்புகளை உயிர்ப்பிப்பவர் யார்? என்று அவன் கேட்கின்றான். </span>
<span>36:79 அவனிடம் கூறுங்கள்: “எவன் முதலில் அவற்றைப் படைத்தானோ அவனே அவற்றை உயிர்ப்பிப்பான். மேலும், அவன் படைப்பு நுட்பம் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன்.”</span>
<span>36:80 அவனே பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பைப் படைத்தான். இப்போது நீங்கள் அதன் மூலம் (தீ) பற்றவைத்துக் கொள்கின்றீர்கள்! </span>
<span>36:81 வானங்களையும் பூமியையும் எவன் படைத்தானோ அவன் அவர்களைப் போன்றவர்களைப் படைப்பதற்கு ஆற்றல் பெற்றவனல்லவா? ஏன் இல்லை! நன்கு அறிந்த மாபெரும் படைப்பாளன் அவனே. </span>
<span>36:82 அவன் ஏதாவது ஒருபொருளைப் படைக்க நாடினால், அவன் செய்வது ‘ஆகுக!’ என்று அதற்கு ஆணை இடுவதுதான்; உடனே அது ஆகிவிடுகின்றது! </span>
<span>36:83 தூய்மையானவன், ஒவ்வொரு பொருளின் முழு அதிகாரமும் எவனுடைய கையில் உள்ளதோ அவன்! மேலும், அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்பட இருக்கின்றீர்கள். </span>
</div><div>
<span>அஸ்ஸாஃப்பாத்</span>
<span>37:1 அணியணியாய் நிற்போர் மீது சத்தியமாக! </span>
<span>37:2 பின்னர், கண்டித்து விரட்டுவோர் மீது சத்தியமாக! </span>
<span>37:3 பின்னர், நல்லுரையை எடுத்தியம்புவோர் மீது சத்தியமாக!  </span>
<span>37:4 உங்களுடைய உண்மையான இறைவன் ஒருவன்தான்; </span>
<span>37:5 அவன் வானங்கள், பூமி மற்றும் அவற்றிலுள்ள அனைத்துப் பொருள்களின் அதிபதியும் கிழக்குகளின் உரிமையாளனுமாவான். </span>
<span>37:6 அருகிலுள்ள வானத்தை நட்சத்திரங்களின் அழகைக்கொண்டு நாம் அலங்கரித்துள்ளோம். </span>
<span>37:7 மேலும், மூர்க்கத்தனம் கொண்ட ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் அதனை நாம் பாதுகாத்திருக்கின்றோம். </span>
<span>37:8 ஷைத்தான்களால் ‘மலா அஃலா’வின்* செய்திகளைச் செவியுற முடியாது. எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவர்கள் எறியப்பட்டு விரட்டப்படுகிறார்கள். </span>
<span>37:9 அவர்களுக்குத் தொடர்ச்சியான வேதனை இருக்கிறது. </span>
<span>37:10 ஆயினும், அந்த ஷைத்தான்களில் யாரேனும் ஒருவன் எதையேனும் இறாஞ்சிக்கொண்டு செல்ல முயன்றால் பிரகாசமான தீச்சுவாலை ஒன்று அவனைப் பின்தொடர்கின்றது. </span>
<span>37:11 இப்போது அவர்களிடம் கேளும்: எது அதிகக் கடினமானது? இவர்களைப் படைத்திருப்பதா? அல்லது இப்பொருள்களை நாம் படைத்திருப்பதா? திண்ணமாக, நாம் அவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால் படைத்துள்ளோம். </span>
<span>37:12 உண்மையில் (அல்லாஹ்வுடைய வியத்தகு ஆற்றல்களைப் பற்றி) நீர் வியப்புறுகின்றீர். ஆனால் இவர்களோ அவனைப் பரிகாசம் செய்துகொண்டு இருக்கிறார்கள்! </span>
<span>37:13 விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டாலும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. </span>
<span>37:14 ஏதேனும் சான்றினை அவர்கள் பார்த்தால் அதனை ஏளனம் செய்கிறார்கள். </span>
<span>37:15 மேலும், கூறுகின்றார்கள்: “இது அப்பட்டமான சூனியமே;  </span>
<span>37:16 நாம் இறந்து மண்ணாகி, எலும்புக்கூடாகி விட்டாலும் மீண்டும் நாம் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோமா? </span>
<span>37:17 முன்பு வாழ்ந்து சென்ற நம்முடைய மூதாதையர்களும்கூட எழுப்பப்படுவார்களா?” </span>
<span>37:18 இவர்களிடம் நீர் கூறும்: “ஆம்! (அல்லாஹ்வுக்கு எதிராக) நீங்கள் ஒன்றும் செய்ய இயலாதவர்களாவீர்கள்.”</span>
<span>37:19 ஒரே ஒரு பேரிரைச்சல்தான்! உடனே அவர்கள் (தங்களுக்குக் கூறப்பட்டு வரும் விஷயங்கள் அனைத்தையும் திடீரென்று தம் கண்களால்) பார்த்துக் கொண்டிருப்பார்கள்!</span>
<span>37:20 அவ்வேளை அவர்கள் கூறுவார்கள்: “அந்தோ! எங்கள் துர்ப்பாக்கியமே! இது கூலி கொடுக்கப்படும் நாளாயிற்றே!” </span>
<span>37:21 எதனை நீங்கள் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தீர்களோ அதே தீர்ப்புநாள்தான் இது! </span>
<span>37:22 (இவ்வாறு கட்டளையிடப்படும்:) “அக்கிரமம் இழைத்துக் கொண்டிருந்தவர்களையும் அவர்களுடைய கூட்டாளிகளையும் மற்றும் அல்லாஹ்வை விடுத்து அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் ஒன்று திரட்டிக் கொண்டு வாருங்கள். </span>
<span>37:23 பிறகு அவர்கள் அனைவருக்கும் நரகத்துக்கான வழியினைக் காட்டுங்கள் </span>
<span>37:24 சற்றே அவர்களை நிறுத்தி வையுங்கள்! அவர்களிடம் கொஞ்சம் விசாரிக்க வேண்டியிருக்கிறது!</span>
<span>37:25 உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? இப்போது ஏன் ஒருவருக்கொருவர் நீங்கள் உதவி புரிந்து கொள்வதில்லை? </span>
<span>37:26 அடே! இன்று அவர்கள் தங்களையும் (ஒருவருக்கொருவர் மற்றவர்களையும் இறைவனிடம்) சரணடையச் செய்து கொண்டிருக்கின்றார்களே!” </span>
<span>37:27 பின்னர் அவர்கள் ஒருவரையொருவர் முன்னோக்குவார்கள்; ஒருவருக்கொருவர் தர்க்கம் செய்யத் தொடங்குவார்கள். </span>
<span>37:28 (பின்பற்றி வாழ்ந்த மக்கள் தம்முடைய தலைவர்களை நோக்கி) கூறுவார்கள்: “சரியான திசையில் வருவது போல் எங்களிடம் நீங்கள் வந்தீர்கள்.” </span>
<span>37:29 அதற்கவர்கள் பதிலளிப்பார்கள்: “இல்லை, நீங்கள்தான் நம்பிக்கை கொள்வோராய் இருக்கவில்லை! </span>
<span>37:30 எங்களுக்கு உங்கள்மீது எந்த அதிகாரமும் இருந்ததில்லை. நீங்களே வரம்புமீறிய மக்களாய் வாழ்ந்தீர்கள். </span>
<span>37:31 இறுதியில், ‘நாங்கள் வேதனையைச் சுவைத்தே ஆக வேண்டும்’ எனும் எங்கள் இறைவனின் தீர்ப்புக்கு உரித்தானவர்களாகிவிட்டோம்! </span>
<span>37:32 ஆகவே, நாங்கள் உங்களை வழிதவறச்செய்தோம். ஏனெனில், நாங்களே வழிதவறிப்போயிருந்தோம்!”</span>
<span>37:33 இவ்வாறு அந்நாளில் அவர்கள் அனைவரும் வேதனையில் பங்கு பெறுபவர்களாய் இருப்பார்கள். </span>
<span>37:34 திண்ணமாக, நாம் குற்றவாளிகளை இவ்வாறுதான் நடத்துகின்றோம். </span>
<span>37:35 இவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருந்தார்களெனில், “உண்மையான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை” என்று அவர்களிடம் கூறப்பட்டபோது, அவர்கள் தற்பெருமை கொண்டார்கள்; </span>
<span>37:36 மேலும், கூறினார்கள்: ‘பைத்தியம் பிடித்த ஒரு கவிஞருக்காக எங்களுடைய தெய்வங்களை நாங்கள் கைவிட்டு விடுவோமா என்ன?’ </span>
<span>37:37 அவரோ உண்மையில் சத்தியத்தைக் கொண்டு வந்திருந்தார்; மேலும், ஏனைய இறைத்தூதர்களை மெய்ப்படுத்திக் கொண்டுமிருந்தார். </span>
<span>37:38 (இப்போது அவர்களிடம் கூறப்படும்:) ‘துன்புறுத்தும் வேதனையின் இன்பத்தை நீங்கள் சுவைக்கப் போவது திண்ணம். </span>
<span>37:39 உங்களுக்கு எவ்விதக் கூலி கொடுக்கப்பட்டாலும் நீங்கள் செய்துகொண்டிருந்த அதே செயல்களுக்குப் பதிலாகத்தான் அது கொடுக்கப்படும்.’</span>
<span>37:40 ஆயினும், அல்லாஹ்வின் வாய்மையான அடியார்கள் இந்தத் தீயகதியிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். </span>
<span>37:41 நன்கு அறியப்பட்ட அருட்பேறுகள் அவர்களுக்கு இருக்கின்றன;</span>
<span>37:42 எல்லாவகையான சுவையான பொருள்களும்! அவர்கள் கண்ணியத்தோடு அமர்த்தப்படுவார்கள். </span>
<span>37:43 அருள் நிறைந்த சுவனப்பூங்காக்களில் </span>
<span>37:44 மஞ்சங்களில் எதிரெதிரே உட்கார்ந்திருப்பார்கள். </span>
<span>37:45 மது ஊற்றுகளிலிருந்து நிரப்பப் பெற்ற கிண்ணங்கள் அவர்களிடையே சுற்றிவரச் செய்யப்படும். </span>
<span>37:46 ஒளிரக்கூடிய மது அது பருகுவோருக்குச் சுவையாக இருக்கும். </span>
<span>37:47 (அவர்களின் உடல்களுக்கு) அதனால் எந்தத் தீங்கும் ஏற்படாது; அவர்களின் மதியும் கெட்டுப்போகாது. </span>
<span>37:48 மேலும், தாழ்த்திய பார்வை உடைய அழகிய கண்களைக்கொண்ட நங்கையரும் அவர்களிடம் இருப்பர். </span>
<span>37:49 அப்பெண்கள் முட்டை ஓட்டின் கீழே மறைந்திருக்கும் மெல்லிய தோலைப் போன்று மென்மையாய் இருப்பார்கள். </span>
<span>37:50 பிறகு, அவர்கள் ஒருவர் மற்றவரின் பக்கம் முன்னோக்கி நிலைமைகளை விசாரிப்பார்கள். </span>
<span>37:51 அவர்களில் ஒருவர் கூறுவார் “(உலகில்) எனக்கு ஒரு நண்பன் இருந்தான். </span>
<span>37:52 ‘என்ன, உண்மை என ஏற்றுக்கொள்பவரில் நீயும் ஒருவனா? </span>
<span>37:53 நாம் இறந்து மண்ணோடு மண்ணாகி எலும்புக் கூடுகளாய் ஆன பின்னரும் திண்ணமாக நமக்குக் கூலியும், தண்டனையும் வழங்கப்படுமா?’ என்றெல்லாம் அவன் என்னிடம் வினவிக்கொண்டிருந்தான். </span>
<span>37:54 (இப்போது அவன் எங்கிருக்கின்றான் என்பதை) நீங்கள் காண விரும்புகின்றீர்களா?” </span>
<span>37:55 இவ்வாறு கூறிக்கொண்டே அவர் குனிவார். அப்போது நரகின் ஆழத்தில் அவனைக் கண்டு கொள்வார். </span>
<span>37:56 மேலும், அவனை நோக்கிக் கூறுவார்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயம் நீ என்னை அழித்துவிடவே முனைந்திருந்தாய். </span>
<span>37:57 என் இறைவனின் அருள் என்னை அரவணைக்காதிருந்தால், பிடித்துக் கொண்டு வரப்பட்டிருப்பவர்களில் நானும் ஒருவனாகி இருந்திருப்பேன். </span>
<span>37:58 சரி, இனி நாம் மரணிக்கக்கூடியவர் அல்லவே! </span>
<span>37:59 நமக்கு வரவேண்டிய மரணமோ முன்பே வந்துவிட்டதே! இனி நமக்கு எவ்வித வேதனையும் ஏற்படப்போவதில்லை!”</span>
<span>37:60 திண்ணமாக, இதுவே மகத்தான வெற்றியாகும். </span>
<span>37:61 செயல்படுவோர் இத்தகைய வெற்றிக்காகவே செயல்பட வேண்டும்! </span>
<span>37:62 இந்த விருந்து சிறந்ததா? அல்லது ‘ஜக்கூம்’ மரமா? (என்பதை நீங்கள் கூறுங்கள்). </span>
<span>37:63 நாம் அந்த மரத்தை அக்கிரமக்காரர்களுக்கு ஒரு சோதனையாக ஆக்கியிருக்கிறோம். </span>
<span>37:64 அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து முளைத்து வருகின்ற ஒரு மரம். </span>
<span>37:65 அதன் பாளை ஷைத்தான்களின் தலைகளைப் போன்றிருக்கும். </span>
<span>37:66 நரகவாசிகள்தாம் அதனைத் தின்பார்கள். மேலும் அதனைக் கொண்டே வயிறுகளை நிரப்புவார்கள். </span>
<span>37:67 பிறகு, அத்துடன் அவர்களுக்கு கொதிக்கும் நீர் குடிக்கக் கிடைக்கும். </span>
<span>37:68 பின்னர் அதே நரகத்திற்குத்தான் அவர்கள் திரும்பிச் செல்ல வேண்டும். </span>
<span>37:69 இவர்கள் எப்படிப்பட்ட மக்களென்றால், தம் முன்னோர்கள் நெறிதவறிச் செல்பவர்களாய் இருக்கக் கண்டார்கள். </span>
<span>37:70 மேலும், அவர்களுடைய அடிச்சுவட்டிலேயே விரைந்து சென்றார்கள். </span>
<span>37:71 உண்மையில் அவர்களுக்கு முன்னர் பெரும்பாலோர் வழிகெட்டுப் போயிருந்தார்கள். </span>
<span>37:72 மேலும், அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர்களையும் நாம் அனுப்பியிருந்தோம். </span>
<span>37:73 இப்போது பாருங்கள்: அவ்வாறு எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் கதி என்னவாயிற்று? </span>
<span>37:74 ஆனால், இத்தீய கதியிலிருந்து தப்பித்தவர்கள், அல்லாஹ்வின் வாய்மையான அடியார்கள் மட்டுமே!</span>
<span>37:75 (இதற்கு முன்னர்) நூஹ் நம்மை அழைத்திருக்கின்றார்; அப்போது எத்துணைச் சிறந்த முறையில் அவருக்கு நாம் பதிலளித்தோம் (என்பதைப் பாருங்கள்). </span>
<span>37:76 அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் கடும் துன்பத்திலிருந்து நாம் காப்பாற்றிக்கொண்டோம். </span>
<span>37:77 இன்னும் அவருடைய சந்ததிகளையே நிலைத்திருக்கும்படிச் செய்தோம். </span>
<span>37:78 மேலும், பின்னர் தோன்றிய சந்ததிகளில் அவருடைய புகழையும் நற்பெயரையும் விட்டு வைத்தோம். </span>
<span>37:79 சாந்தியும் சமாதானமும் பொழியட்டும் நூஹ் மீது உலக மக்கள் மத்தியில்! </span>
<span>37:80 நன்மை புரிவோர்க்கு இவ்வாறே நாம் கூலி வழங்கி வருகின்றோம். </span>
<span>37:81 உண்மையில், நம் மீது நம்பிக்கை கொண்ட அடியார்களுள் ஒருவராக அவர் விளங்கினார். </span>
<span>37:82 பிறகு, மற்ற கூட்டத்தார்களை நாம் மூழ்கடித்துவிட்டோம். </span>
<span>37:83 மேலும், நூஹின் வழியில் செல்பவராகவே இப்ராஹீம் இருந்தார்; </span>
<span>37:84 தம் இறைவனிடம் பண்பட்ட தூய உள்ளத்துடன் அவர் வந்தபோது, </span>
<span>37:85 தம் தந்தையிடமும் தம் சமூகத்திடமும் இவ்வாறு கூறியபோது: “எவற்றை நீங்கள் வணங்கிக்கொண்டிருக்கின்றீர்கள்? </span>
<span>37:86 அல்லாஹ்வை விடுத்துப் பொய்யாக உருவாக்கப்பட்ட கடவுளையா நீங்கள் விரும்புகின்றீர்கள்?</span>
<span>37:87 பிறகு அகில உலகங்களின் அதிபதி பற்றி நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள்?”</span>
<span>37:8898 பிறகு, அவர் நட்சத்திரங்களின் பக்கம் ஒரு பார்வை செலுத்தினார். </span>
<span>37:89 மேலும் கூறினார்: “நான் நோயுற்றிருக்கின்றேன்.” </span>
<span>37:90 எனவே, அம்மக்கள் அவரை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். </span>
<span>37:91 பின்னர் அவர் அவர்களுடைய கடவுளரின் கோயிலுக்குள் இரகசியமாக நுழைந்து (அவற்றை நோக்கிக்) கூறினார்: “நீங்கள் ஏன் சாப்பிடுவதில்லை? </span>
<span>37:92 நீங்கள் பேசாமலிருக்கிறீர்களே? உங்களுக்கு நேர்ந்ததென்ன?” </span>
<span>37:93 அதன் பிறகு அவர் அவற்றின் மீது பாய்ந்து வலக்கரத்தால் தாக்கினார். </span>
<span>37:94 பின்னர், அம்மக்கள் (திரும்பி வந்ததும்) அவரிடம் ஓடிவர,  </span>
<span>37:95 அவர் கேட்டார்: “என்ன, நீங்களாகவே செதுக்கிய பொருள்களையா நீங்கள் பூஜை செய்கிறீர்கள்? </span>
<span>37:96 உண்மையில் அல்லாஹ்தானே உங்களையும் படைத்தான்; நீங்கள் உருவாக்கிய அப்பொருள்களையும் படைத்தான்?” </span>
<span>37:97 அவர்கள் தமக்கிடையே கூறிக்கொண்டார்கள். “இவருக்காக ஒரு நெருப்புக் குண்டத்தை உருவாக்குங்கள்; கொழுந்து விட்டெரியும் நெருப்பில் இவரை வீசிவிடுங்கள்!” </span>
<span>37:98 அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவர்கள் திட்டமிட்டனர். எனினும், நாம் அவர்களையே தோல்வியுறச்செய்தோம். </span>
<span>37:99 இப்ராஹீம் கூறினார்: “நான் என்னுடைய இறைவனின் பக்கம் செல்கின்றேன்; அவனே எனக்கு வழிகாட்டுவான். </span>
<span>37:100 என் இறைவா! ஒரு மகனை எனக்கு நீ வழங்குவாயாக; அவர் உத்தமரில் ஒருவராக இருக்கவேண்டும்.” </span>
<span>37:101 (இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு) சாந்த குணம் கொண்ட ஒரு மகனைப் பற்றி நாம் அவருக்கு நற்செய்தி அறிவித்தோம். </span>
<span>37:102 அம்மகன் அவருடன் சேர்ந்து உழைக்கும் வயதினை அடைந்தபோது இப்ராஹீம் (ஒருநாள்) அவரிடம் கூறினார்: “என் அருமை மகனே! நான் உன்னை பலியிடுவதாய்க் கனவு கண்டேன். உனது கருத்து என்ன என்பதைச் சொல்!” அதற்கு அவர் கூறினார்: “என் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப்படுகிறதோ அதைச் செய்துவிடுங்கள். அல்லாஹ் நாடினால், என்னைப் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்.” </span>
<span>37:103 இறுதியில் அவ்விருவரும் இறைவனுக்கு முன்னால் முழுமையாகச் சரணடைந்துவிட்டார்கள். மேலும், இப்ராஹீம் மகனை முகங்குப்புறக் கிடத்தினார். </span>
<span>37:104 அப்போது நாம் அவரை அழைத்துக் கூறினோம்: “இப்ராஹீமே! </span>
<span>37:105 நீர் கனவை நனவாக்கி விட்டீர். நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி வழங்குகின்றோம். </span>
<span>37:106 திண்ணமாக, இது ஒரு தெளிவான சோதனையாய் இருந்தது.” </span>
<span>37:107 மேலும், ஒரு பெரும் பலியை ஈடாகக் கொடுத்து அக்குழந்தையை நாம் விடுவித்துக் கொண்டோம். </span>
<span>37:108 பின்னர் தோன்றிய தலைமுறைகளில் அவருடைய புகழையும், நற்பெயரையும் விட்டு வைத்தோம். </span>
<span>37:109 சாந்தி உண்டாகட்டும், இப்ராஹீம் மீது!</span>
<span>37:110 நன்மை புரிவோருக்கு நாம் இத்தகைய கூலியையே வழங்குகின்றோம். </span>
<span>37:111 திண்ணமாக, நம்மீது நம்பிக்கைகொண்ட அடியார்களுள் ஒருவராக அவர் திகழ்ந்தார். </span>
<span>37:112 மேலும், இஸ்ஹாக் பற்றியும் அவருக்கு நாம் நற்செய்தி அறிவித்தோம். அவர் ஒரு நபியாகவும் சான்றோர்களுள் ஒருவராகவும் இருந்தார். </span>
<span>37:113 மேலும், அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் அருட்பாக்கியங்களைப் பொழிந்தோம். அவ்விருவரின் வழித்தோன்றல்களில் சிலர் நன்னடத்தை கொண்டவர்களாகவும் இன்னும் சிலர் தமக்குத் தாமே வெளிப்படையாக கொடுமை புரிபவர்களாகவும் இருக்கின்றார்கள். </span>
<span>37:114 மேலும், நாம் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் பேருபகாரம் செய்தோம். </span>
<span>37:115 அவர்களையும் அவர்களின் சமூகத்தார்களையும் மாபெரும் துன்பத்திலிருந்து விடுவித்தோம். </span>
<span>37:116 அவர்களுக்கு உதவி வழங்கினோம். அதன் காரணமாக அவர்களே வெற்றி கொள்வோராகத் திகழ்ந்தார்கள். </span>
<span>37:117 மிகத் தெளிவான வேதத்தை அவர்களுக்கு வழங்கினோம்.  </span>
<span>37:118 மேலும், அவர்களுக்கு நேரிய வழியையும் காண்பித்தோம். </span>
<span>37:119 பின்னர் தோன்றிய தலைமுறைகளில் அவருடைய புகழையும், நற்பெயரையும் நிலைத்திருக்கச் செய்தோம். </span>
<span>37:120 சாந்தி உண்டாகட்டும், மூஸா மற்றும் ஹாரூன் மீது! </span>
<span>37:121 நன்மை செய்வோருக்கு நாம் இத்தகைய நற்கூலியையே வழங்குகின்றோம். </span>
<span>37:122 உண்மையில் அவ்விருவரும் நம் மீது நம்பிக்கை கொண்ட அடியார்களுள் உள்ளவர்களாவர். </span>
<span>37:123 மேலும், இல்யாஸும் திண்ணமாக இறைத்தூதர்களில் ஒருவராய் இருந்தார். </span>
<span>37:124 அவர் தம் சமூகத்தாரிடம் இவ்வாறு கூறிய சந்தர்ப்பத்தை நினைத்துப்பாருங்கள்: நீங்கள் அஞ்சுவதில்லையா? </span>
<span>37:125 ‘பஅலை’* அழைக்கின்றீர்கள். படைப்பாளர்களிலெல்லாம் மிகச் சிறந்தவனை விட்டுவிடுகின்றீர்களே!</span>
<span>37:126 அதாவது, உங்களின் அதிபதியும், உங்களுக்கு முன் சென்ற உங்கள் மூதாதையர்களின் அதிபதியுமான அல்லாஹ்வை!</span>
<span>37:127 ஆயினும், அவர்கள் அவரைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். ஆகையால், திண்ணமாக அவர்கள் இப்போது தண்டனைக்காகக் கொண்டுவரப்படுபவர்களாய் உள்ளனர். </span>
<span>37:128 ஆனால், வாய்மையாளர்களாய் ஆக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர! </span>
<span>37:129 மேலும், பின் தோன்றிய தலைமுறைகளில் இல்யாஸுடைய நற்புகழை நிலைப்படுத்தினோம். </span>
<span>37:130 சாந்தி உண்டாகட்டும், இல்யாஸ் மீது! </span>
<span>37:131 நன்மை செய்வோருக்குத் திண்ணமாக நாம் இத்தகைய கூலியையே வழங்குகின்றோம். </span>
<span>37:132 உண்மையில் நம்மீது நம்பிக்கை கொண்ட அடியார்களுள் ஒருவராய் அவர் திகழ்ந்தார். </span>
<span>37:133 மேலும், இறைத்தூதர்களாய் அனுப்பப்பட்டவர்களுள் லூத்தும் ஒருவராய்த் திகழ்ந்தார். </span>
<span>37:134 அந்தச் சந்தர்ப்பத்தை நினைவு கூருங்கள்: லூத்தையும், அவருடைய குடும்பத்தார் அனைவரையும் நாம் காப்பாற்றினோம். </span>
<span>37:135 பின்தங்கியவர்களோடு சேர்ந்துவிட்ட ஒரு கிழவியைத் தவிர! </span>
<span>37:136 பின்னர், எஞ்சியிருந்த மற்றவர்கள் அனைவரையும் அடியோடு அழித்துவிட்டோம். </span>
<span>37:137 நீங்கள் (இப்போது இரவிலும், பகலிலும்) அழிந்து போன அவர்களின் நகரங்களின் அருகே கடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள்! </span>
<span>37:138 நீங்கள் அறிவு பெறமாட்டீர்களா, என்ன?</span>
<span>37:139 திண்ணமாக, யூனுஸும் இறைத்தூதர்களுள் ஒருவராய் இருந்தார். </span>
<span>37:140 அவர் ஒரு நிரம்பிய கப்பலை நோக்கி ஓடிய நேரத்தை நினைத்துப் பாருங்கள்! </span>
<span>37:141 பிறகு, சீட்டுக் குலுக்கலில் கலந்து கொண்டார். அதில் தோற்றுப் போனார். </span>
<span>37:142 இறுதியில் மீன் ஒன்று அவரை விழுங்கியது; அவரோ பழிப்புக்குரியவராய் இருந்தார். </span>
<span>37:143 அவர் இறைவனைத் துதிப்பவர்களுள் ஒருவராய் இல்லாதிருந்தால் </span>
<span>37:144 மறுமை நாள் வரை அந்த மீனின் வயிற்றிலேயே இருந்திருப்பார். </span>
<span>37:145 இறுதியில் அவர் பெரிதும் நோயுற்றிருந்த நிலையில் ஒரு பாலைவெளியில் அவரை நாம் எறிந்தோம். </span>
<span>37:146 பிறகு படர்கின்ற கொடியை அவர் மீது (நிழலிட) முளைக்கச் செய்தோம். </span>
<span>37:147 பின்னர், அவரை நாம் ஓர் இலட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்களிடம் அனுப்பினோம். </span>
<span>37:148 அவர்கள் நம்பிக்கை கொண்டார்கள். பிறகு ஒரு குறிப்பிட்ட காலம்வரை அவர்களை வாழவிட்டோம். </span>
<span>37:149 பின்னர், இவர்களிடம் சற்று வினவுவீராக: உம் இறைவனுக்குப் பெண்மக்கள்; இவர்களுக்கு ஆண் மக்களா? (இந்தப் பேச்சு இவர்களின் மனதுக்கு சரியெனப் படுகிறதா என்ன?)</span>
<span>37:150 அல்லது உண்மையில், நாம் வானவர்களைப் பெண் மக்களாகவே படைத்திருக்கின்றோமா? கண்ணால் பார்த்தவற்றைத்தான் இவர்கள் கூறுகின்றார்களா? </span>
<span>37:151 நன்கு கேட்டுக்கொள்ளுங்கள். தாமாகப் புனைந்துதான் அவர்கள் கூறுகின்றார்கள்;</span>
<span>37:152 அல்லாஹ் குழந்தைகளைப் பெற்றெடுத்தான் என்று. மேலும், உண்மையில் இவர்கள் பொய்யர்களாவர். </span>
<span>37:153 ஆண்மக்களை விட்டு விட்டு பெண்மக்களை அல்லாஹ் தனக்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா? </span>
<span>37:154 உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எப்படிப்பட்ட முடிவை நீங்கள் எடுக்கிறீர்கள்! </span>
<span>37:155 நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா? </span>
<span>37:156 அல்லது (உங்களின் வாதங்களுக்கு) தெளிவான ஆதாரம் உங்களிடம் இருக்கின்றதா? </span>
<span>37:157 நீங்கள் உண்மையாளர்களாயிருந்தால் அத்தகைய உங்கள் வேதத்தைக் கொண்டு வாருங்கள்!</span>
<span>37:158 அல்லாஹ்வுக்கும் வானவர்களுக்கும் இடையே இவர்கள் உறவுமுறையை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். உண்மையில் இவர்கள் குற்றவாளிகளாய் கொண்டு வரப்படுவார்கள் என்பதை வானவர்கள் நன்கறிந்துள்ளார்கள். </span>
<span>37:159 (மேலும், அவர்கள் கூறுகின்றார்கள்:) அல்லாஹ் தூய்மை வாய்ந்தவன், அந்தத் தன்மைகளை விட்டு! </span>
<span>37:160 அதாவது, அவனுடைய வாய்மையான அடியார்களைத் தவிர மற்றவர்கள் (அவனைக் குறித்து) கற்பிக்கின்ற தன்மைகளை விட்டு! </span>
<span>37:161 ஆக, நீங்களும் நீங்கள் வணங்கி வருகின்ற இந்தத் தெய்வங்களும் , </span>
<span>37:162 அல்லாஹ்வை விட்டு எவரையும் திசைதிருப்பிவிட முடியாது; </span>
<span>37:163 ஆனால், கொழுந்துவிட்டு எரியும் நரக நெருப்பில் எரிந்து கரிந்து போகக் கூடியவனைத்தவிர! </span>
<span>37:164 மேலும், எங்களுடைய நிலைமை என்னவெனில், எங்களில் ஒவ்வொருவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட ஓர் இடம் இருக்கின்றது. </span>
<span>37:165 மேலும், திண்ணமாக, நாங்களே அணிவகுத்து நின்று பணிபுரிபவர்களாய் இருக்கின்றோம். </span>
<span>37:166 இன்னும் திண்ணமாக, நாங்களே துதி செய்பவர்களாய் இருக்கின்றோம். </span>
<span>37:167 திண்ணமாக, இவர்கள் முன்பு கூறிக்கொண்டிருந்தார்கள், </span>
<span>37:168 “முந்தைய சமுதாயங்களுக்குக் கிடைத்திருந்த அறிவுரை எங்களுக்கும் கிடைத்திருந்தால், </span>
<span>37:169  நாங்களும் அல்லாஹ்வின் வாய்மை மிக்க அடியார்களாக விளங்கி இருப்போம்” என்று!</span>
<span>37:170 ஆயினும் (அது வந்துவிட்டபோது) இவர்கள் அதனை நிராகரித்துவிட்டார்கள்! இனி (தமது நடத்தைக்கான விளைவை) அதிவிரைவில் இவர்கள் புரிந்து கொள்வார்கள். </span>
<span>37:171 நம்மால் தூதர்களாக அனுப்பப்பட்ட நம்முடைய அடியார்களுக்கு நாம் முன்னரே இவ்வாறு வாக்குறுதி அளித்துள்ளோம். </span>
<span>37:172 நிச்சயமாய், அவர்கள் உதவி செய்யப்படுவார்கள். </span>
<span>37:173 மேலும், திண்ணமாக நமது படையினர்தாம் வெற்றியாளர்களாய்த் திகழ்வார்கள். </span>
<span>37:174 ஆகவே, (நபியே!) இவர்களை இவர்களுடைய நிலையிலேயே சிறிது காலம் விட்டுவிடும்!</span>
<span>37:175 மேலும், பார்த்துக் கொண்டிரும்! மிக விரைவில் இவர்களும் தாங்களாகவே கண்டு கொள்வார்கள். </span>
<span>37:176 என்ன, இவர்கள் நம்முடைய தண்டனைக்காக அவசரப்படுகின்றார்களா? </span>
<span>37:177 அது அவர்களின் முற்றத்தில் இறங்கிவிடுமாயின், எவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு விட்டதோ அவர்களுக்கு அந்நாள் மிகவும் கெட்டதொரு நாளாகிவிடும். </span>
<span>37:178 எனவே, சிறிது காலத்திற்கு இவர்களை விட்டுவிடும்! </span>
<span>37:179 மேலும், பார்த்துக் கொண்டிரும்; மிக விரைவில் இவர்களும் தாமாகவே கண்டு கொள்வார்கள்!</span>
<span>37:180 தூய்மையானவன் உம் இறைவன்; கண்ணியத்திற்கு உரித்தானவன்; இவர்கள் புனைந்து கூறிக்கொண்டிருக்கும் அனைத்தையும் விட்டு (அவன் தூய்மையானவன்!) </span>
<span>37:181 மேலும், சாந்தி உண்டாகட்டும்; இறைத்தூதர்கள் அனைவர் மீதும்!</span>
<span>37:182 இன்னும் புகழனைத்தும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரித்தானது!</span>
</div><div>
<span>ஸாத்</span>
<span>38:1 ஸாத், அறிவுரை நிறைந்த குர்ஆனின் மீது சத்தியமாக!</span>
<span>38:2 ஆயினும், எவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தார்களோ அவர்கள்தாம் பெரும் ஆணவத்திலும், பிடிவாதத்திலும் உழன்று கொண்டு இருக்கின்றார்கள். </span>
<span>38:3 இவர்களுக்கு முன் எத்தனையோ சமூகங்களை நாம் அழித்திருக்கின்றோம். (அவர்களுடைய தீயகதி வந்தபோது) அவர்கள் கூக்குரலிட்டார்கள். ஆயினும், அது தப்பிப்பதற்கான நேரமாய் இருக்கவில்லை. </span>
<span>38:4 அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் இவர்களிலிருந்தே வந்துவிட்டார் என்பது குறித்து இவர்களுக்குப் பெரும்வியப்பு ஏற்பட்டது. நிராகரிப்பாளர்கள் கூறலாயினர்: “இவர் ஒரு சூனியக்காரர்; சுத்தப் பொய்யர்; </span>
<span>38:5 என்ன, இவர் அத்தனை கடவுளருக்கும் பகரமாக ஒரே கடவுள்தான் என்று ஆக்கிவிட்டாரா? இது மிகவும் வியப்புக்குரிய விஷயம்தான்!” </span>
<span>38:6 மேலும், சமுதாயத் தலைவர்கள் பின்வருமாறு கூறிக்கொண்டு வெளியேறிச் சென்றார்கள்: “செல்லுங்கள்; உங்களுடைய தெய்வங்களை வணங்குவதில் உறுதியாய் இருங்கள். திண்ணமாக, இவ்விஷயம் ஏதோ ஓர் உள்நோக்கத்துடன் கூறப்படுகின்றது; </span>
<span>38:7 அண்மைக்காலத்து எந்தச் சமுதாயத்திடமும் இதனை நாம் கேள்விப்பட்டதில்லை. இது கற்பனைசெய்து கூறப்பட்டதே தவிர வேறொன்றுமில்லை. </span>
<span>38:8 நம்மிடையே, அல்லாஹ்வுடைய அறிவுரை இறக்கி வைக்கப்படுவதற்கு இவர் ஒருவர் மட்டும்தான் இருந்தாரா, என்ன?” உண்மை என்னவெனில், இவர்கள் என்னுடைய அறிவுரையின் மீது சந்தேகம் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறெல்லாம் இவர்கள் பேசுவதற்குக் காரணம், இவர்கள் நான் தரும் வேதனையைச் சுவைக்கவில்லை என்பதுதான்! </span>
<span>38:9 என்ன, யாவற்றையும் மிகைத்தவனும் பெருங்கொடையாளனுமான உம் இறைவனின் அருட்களஞ்சியங்கள் இவர்களின் கைவசத்தில்தான் உள்ளனவா? </span>
<span>38:10 அல்லது இவர்கள் வானம், பூமி மற்றும் இவ்விரண்டிற்கும் இடையிலுள்ள பொருள்கள் அனைத்திற்கும் உரிமையாளர்களா? அவ்வாறாயின், இவர்கள் உலகாயத ரீதியான உச்சகட்ட சாதனங்கள் அனைத்தையும் பயன்படுத்திப் பார்க்கட்டும். </span>
<span>38:11 பல கூட்டத்தினரிடையே இவர்கள் ஒரு சிறு கூட்டத்தினர்தாம்; இவர்கள் இதே இடத்தில் தோல்வி அடைய இருக்கின்றார்கள். </span>
<span>38:12 இவர்களுக்கு முன் நூஹுடைய சமூகத்தினரும், ஆத் சமூகத்தினரும், முளைகளுடைய ஃபிர்அவ்னும்,</span>
<span>38:13 மற்றும் ஸமூத் சமூகம், லூத்தின் சமூகம், ஐக்காவாசிகள் ஆகியோரும் கூட பொய்யெனத் தூற்றியிருக்கின்றார்கள். </span>
<span>38:14 கூட்டத்தினர் என்பது அவர்கள்தாம்! அவர்களில் ஒவ்வொரு கூட்டத்தாரும் தூதர்களைப் பொய்யர்கள் என வாதிட்டார்கள். எனவே, என்னுடைய தண்டனையின் தீர்ப்பு (அவர்கள் மீது) விதிக்கப்பட்டுவிட்டது. </span>
<span>38:15 இந்த மக்களும் ஒரே ஓர் உரத்த ஓசையையே எதிர்பார்த்திருக்கின்றார்கள். அதற்குப் பிறகு மற்றோர் உரத்த ஓசை இராது. </span>
<span>38:16 இவர்கள் கூறுகிறார்கள்: “எங்கள் இறைவனே! கேள்வி கணக்கிற்குரிய நாளுக்கு முன்பே எங்களின் பங்கினை எங்களுக்கு விரைவாகத் தந்துவிடு!”</span>
<span>38:17 (நபியே!) இவர்கள் பேசும் பேச்சுகளை பொறுத்துக் கொள்ளும். மேலும், பெரும் ஆற்றல்களைக் கொண்டிருந்த நம்முடைய அடியார் தாவூதின் வரலாற்றை இவர்களுக்கு நீர் எடுத்துக்கூறும். அவர் (ஒவ்வொரு விவகாரத்திலும் அல்லாஹ்விடமே) திரும்பக் கூடியவராக இருந்தார். </span>
<span>38:18 நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். அவை காலையிலும், மாலையிலும் அவருடன் சேர்ந்து (இறைவனைத்) துதி செய்த வண்ணம் இருந்தன. </span>
<span>38:19 பறவைகளும் ஒன்று திரண்டு வந்தன. அவை அனைத்தும் அல்லாஹ்வைத் துதிப்பதில் கவனம் செலுத்தக் கூடியனவாய் இருந்தன. </span>
<span>38:20 நாம் அவருடைய அரசாட்சியை வலுப்படுத்தியிருந்தோம்; நுண்ணறிவையும் அவருக்கு வழங்கியிருந்தோம். மிக நுட்பமான தீர்ப்பளிக்கும் ஆற்றலையும் நல்கி இருந்தோம். </span>
<span>38:21 மேலும், சுவர் ஏறி மாடத்தில் நுழைந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா? </span>
<span>38:22 அவர்கள் தாவூதிடம் வந்தபோது அவர், அவர்களைப் பார்த்துத் திடுக்கிட்டார். அவர்கள் கூறினார்கள்: “பயப்படாதீர்! நாங்கள் ஒரு வழக்கு சம்பந்தமான இரு பிரிவினராவோம். எங்களில் ஒருவர் இன்னொருவருக்கு அநீதி இழைத்துள்ளார். நீர் எங்களிடையே மிகச்சரியாகத் தீர்ப்பு வழங்குவீராக! நேர்மை தவறிவிடாதீர்; எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவீராக! </span>
<span>38:23 இதோ! இவர் என்னுடைய சகோதரர்; இவரிடம் தொண்ணூற்றொன்பது செம்மறி ஆடுகள் இருக்கின்றன. என்னிடமோ ஒரே ஒரு செம்மறி ஆடுதான் இருக்கின்றது. ‘இந்த ஒரு செம்மறி ஆட்டையும் என்னிடம் ஒப்படைத்துவிடு!’ என்று என்னிடம் இவர் கூறுகின்றார். பேச்சுசாதுர்யத்தால் இவர் என்னை மடக்கிவிட்டார்.” </span>
<span>38:24 தாவூத் பதிலளித்தார்: “இவர் தன்னுடைய செம்மறி ஆடுகளுடன் உம்முடைய செம்மறி ஆட்டையும் இணைத்துக் கொள்வதாகக் கோரியதன் மூலம் திண்ணமாக உமக்கு அநீதி இழைத்து விட்டார். உண்மையில் ஒன்றுகூடி வாழும் மக்களில் பெரும்பாலோர், ஒருவர் மற்றவர் மீது வரம்புமீறி நடந்து கொள்கின்றார்கள். ஆயினும் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ, அவர்கள்தாம் இதிலிருந்து தப்பித்திருக்கின்றார்கள். இத்தகையோர் மிகச்சிலரே ஆவர்.” (இவ்வாறு கூறிக்கொண்டிருந்தபோதே) உண்மையில் நாம் அவரை சோதித்திருக்கின்றோம் என்பதை தாவூத் உணர்ந்து விட்டார். உடனே தம்முடைய இறைவனிடம் மன்னிப்புக் கோரினார். மேலும் ஸஜ்தாவில்* விழுந்து விட்டார்; இறைவன் பக்கம் மீண்டார். </span>
<span>38:25 அப்போது நாம் அவருடைய அந்தத் தவறை மன்னித்து விட்டோம். திண்ணமாக நம்மிடத்தில் அவருக்கு நெருக்கமும் நல்ல முடிவும் இருக்கின்றன. </span>
<span>38:26 (நாம் அவரிடம் கூறினோம்:) “தாவூதே! நாம் உம்மை பூமியில் பிரதிநிதியாக ஆக்கியிருக்கின்றோம். எனவே, நீர் மக்களிடையே நீதியுடன் ஆட்சி செலுத்தும். மேலும், மன இச்சைகளைப் பின்பற்றாதீர். அது, அல்லாஹ்வின் வழியிலிருந்து உம்மைப் பிறழச் செய்துவிடும். எவர்கள் அல்லாஹ்வுடைய வழியிலிருந்து பிறழ்ந்துவிடுகின்றார்களோ, அவர்களுக்குத் திண்ணமாக கடும் தண்டனை இருக்கிறது; கேள்வி கணக்கிற்குரிய நாளை அவர்கள் மறந்துவிட்ட காரணத்தால்!</span>
<span>38:27 நாம் இந்த வானத்தையும், பூமியையும் அவற்றிற்கிடையே உள்ள இந்த உலகத்தையும் வீணாகப் படைத்திடவில்லை. நிராகரிப்பாளர்களின் கருத்தாகும் இது. இத்தகைய நிராகரிப் பாளர்களுக்கு நரக நெருப்பின் மூலம் அழிவுதான் இருக்கின்றது. </span>
<span>38:28 நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்களையும் பூமியில் அராஜகம் செய்து திரிபவர்களையும் நாம் சமமாக்கிவிடுவோமா, என்ன? இறையச்சமுள்ளோரை ஒழுக்கக்கேடர்களைப் போன்று ஆக்குவோமா, என்ன? </span>
<span>38:29 இது பெரும் பாக்கியங்கள் நிறைந்த ஒரு வேதமாகும். (நபியே!) இதனை நாம் உம்மீது இறக்கி அருளியுள்ளோம். இந்த மக்கள் இதனுடைய வசனங்களைச் சிந்திக்க வேண்டும்; அறிவுடையோர் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக!</span>
<span>38:30 நாம் தாவூதுக்கு ஸுலைமா(ன் போன்ற மைந்த)னை வழங்கினோம். அவர் மிகச்சிறந்த அடியாராகவும், தம்முடைய இறைவனின் பக்கம் அதிகம் திரும்பக்கூடியவராகவும் திகழ்ந்தார். </span>
<span>38:31 அந்தச் சந்தர்ப்பம் நினைவு கூரத்தக்கதாகும். நன்கு பயிற்சி பெற்ற குதிரைகள் மாலை நேரத்தில் அவர் முன்னால் கொண்டு வரப்பட்டபோது, </span>
<span>38:32 அவர் கூறினார்: “என்னுடைய இறைவனை நினைவுகூர்வதற்காகவே நான் இச்செல்வத்தை நேசிக்கின்றேன்.” இறுதியாக அக்குதிரைகள் கண்ணைவிட்டு மறைந்தபோது (அவர்கட்டளையிட்டார்:) </span>
<span>38:33 “அவற்றை என்னிடம் திரும்பக் கொண்டு வாருங்கள்!” பிறகு அவற்றின் கெண்டைக் கால்களையும், பிடரிகளையும் கையினால் தடவினார். </span>
<span>38:34 பிறகு (பாருங்கள்) நாம் ஸுலைமானையும் சோதனைக்குள்ளாக்கினோம்; அவருடைய அரியணையில் ஒரு சடலத்தைக் கொண்டு வந்து போட்டோம். பிறகு அவர் (தம்முடைய இறைவன் பக்கம்) திரும்பினார். </span>
<span>38:35 “என்னுடைய இறைவா! என்னை நீ மன்னிப்பாயாக! எனக்குப் பின் எவருக்கும் கிடைக்க முடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையான கொடையாளன்!”</span>
<span>38:36 அப்போது நாம் அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அது அவருடைய ஆணையால் அவர் விரும்பிய திசையில் மென்மையாய் வீசிக்கொண்டிருந்தது. </span>
<span>38:37 கட்டடம் கட்டக்கூடிய, நீரில் மூழ்கக்கூடிய வகைவகையான ஷைத்தான்களையும், </span>
<span>38:38 சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். </span>
<span>38:39  (நாம் அவரிடம் கூறினோம்:) “இது நம்முடைய அன்பளிப்பு: இதை உம் விருப்பப்படி வழங்குவதற்கும், வழங்காமல் இருப்பதற்கும் உமக்கு முழு அதிகாரம் இருக்கின்றது. எந்தக் கேள்வி கணக்கும் இல்லை.” </span>
<span>38:40 திண்ணமாக அவருக்கு நம்மிடத்தில் நெருக்கமும் நல்ல முடிவும் இருக்கின்றன. </span>
<span>38:41 நம்முடைய அடியார் அய்யூபையும் நினைவுகூர்வீராக! ஒருபோது அவர், “ஷைத்தான் என்னைச் சிரமத்திலும், துன்பத்திலும் ஆழ்த்திவிட்டானே!” என்று தன்னுடைய இறைவனை அழைத்து முறையிட்டார். </span>
<span>38:42 (அப்பொழுது நாம் அவருக்குக் கட்டளையிட்டோம்:) பூமியில் உம்முடைய கால்களைக் கொண்டு உதையும். இதோ குளிப்பதற்கும், குடிப்பதற்கும் குளிர்ந்த நீர்! </span>
<span>38:43 நாம் அவருக்கு அவருடைய குடும்பத்தாரைத் திருப்பிக் கொடுத்தோம். மேலும், அவர்களோடு அதே அளவுக்கு மற்றவர்களையும் அவருக்கு வழங்கினோம். நமது சார்பிலிருந்து அருளாகவும், அறிவுடையோருக்குப் படிப்பினையாகவும்! </span>
<span>38:44 மேலும், (நாம் அவரிடம் கூறினோம்:) ‘ஒருபிடி புல்லை எடுத்து அதைக்கொண்டு அடியும்; உம்முடைய சத்தியத்தை முறித்து விடாதிரும்.’ அவரை நாம் பொறுமையாளராய்க் கண்டோம். அவர் மிகச்சிறந்த அடியாராகவும் தம் இறைவனின் பக்கம் அதிகம் திரும்பக் கூடியவராகவும் திகழ்ந்தார். </span>
<span>38:45 மேலும், நம்முடைய அடியார்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரை நினைவுபடுத்துவீராக! அவர்கள் மிகுந்த செயலாற்றல் கொண்டவர்களாகவும், நுண்ணோக்கு உடையவர்களாகவும் இருந்தார்கள். </span>
<span>38:46 மறுமையை நினைவுகூர்வது எனும் ஒரு தூய பண்பு அவர்களிடம் இருந்தமையால் நாம் அவர்களைத் தேர்ந்தெடுத்திருந்தோம். </span>
<span>38:47 திண்ணமாக அவர்கள் நம்மிடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சான்றோர்கள் ஆவார்கள். </span>
<span>38:48 இஸ்மாயீல், அல் யஸஃ, துல்கிஃப்ல் ஆகியோரையும் நினைவுகூர்வீராக! இவர்கள் எல்லோரும் நன்மக்களாய் விளங்கினர். </span>
<span>38:49 இது ஒரு நல்லுரையாகும். (இப்போது கேளுங்கள்!) இறையச்சம் உள்ளவர்களுக்கு திண்ணமாக அழகிய தங்குமிடம் இருக்கிறது. </span>
<span>38:50 நிலையாகத் தங்குகின்ற சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் வாயில்கள் அவர்களுக்காகத் திறந்திருக்கும். </span>
<span>38:51 அங்கே அவர்கள் மஞ்சங்களில் சாய்ந்திருப்பார்கள். நிறையக் கனிகளையும், பானங்களையும் கேட்டுக்கொண்டிருப்பார்கள். </span>
<span>38:52 மேலும், அவர்களின் அருகில் நாணமுடைய சமவயதுடைய மனைவியர் இருப்பர். </span>
<span>38:53 கேள்விகணக்கு கேட்கும் நாளில் உங்களுக்குத் தருவதாக வாக்களித்துக் கொண்டிருப்பவை இவைதாம்! </span>
<span>38:54 இது நாம் வழங்கும் நற்பேறாகும். இதற்கு என்றுமே முடிவில்லை. </span>
<span>38:55 இதுதான் இறையச்சம் உடையவர்களின் நல்ல முடிவாகும். வரம்புமீறிச் செல்வோருக்கு மிகத் தீய இருப்பிடம் இருக்கிறது,</span>
<span>38:56 நரகம்! அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள். அது மிகத் தீய தங்குமிடம்! </span>
<span>38:57 இதுதான் அவர்களுக்கு உரியது. எனவே, அவர்கள் சுவைக்கட்டும்; கொதித்த நீரையும் சீழ்சலத்தையும்,</span>
<span>38:58 இதுபோன்ற வேறு பல கழிவுகளையும்! </span>
<span>38:59 (அவர்கள், தம்மைப் பின்பற்றியவர்கள் நரகத்தை நோக்கி வருவதைப் பார்த்துவிட்டு தமக்கிடையே கூறிக்கொள்வார்கள்:) “இதோ! ஒரு படை முண்டியடித்துக் கொண்டு உங்களிடம் வருகின்றது. எந்த வரவேற்பும் இவர்களுக்கு இல்லை; இவர்கள் நெருப்பில் எரிந்து பொசுங்கக்கூடியவர்கள்தாம்!” </span>
<span>38:60 அதற்கு அவர்கள் பதிலளிப்பார்கள். “இல்லை! நீங்கள்தாம் எரிந்து பொசுங்கிக் கொண்டிருக்கின்றீர்கள்; எந்த வரவேற்பும் உங்களுக்குத்தான் இல்லை; நீங்கள்தாம் இந்தத் தீயகதிக்கு எங்களை ஆளாக்கினீர்கள். எவ்வளவு மோசமான தங்குமிடம் இது!” </span>
<span>38:61 பிறகு அவர்கள் கூறுவார்கள்: “இறைவா! எவர்கள் எங்களை இந்தத் தீயகதிக்கு ஆளாக்கிடத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்களோ அவர்களுக்கு நரகத்தின் இருமடங்கு வேதனையை நீ கொடுப்பாயாக!” </span>
<span>38:62 அவர்கள் தமக்கிடையில் பேசிக்கொள்வார்கள்: “என்ன நாம் உலகில் யாரைத் தீயவர்களென்று கருதியிருந்தோமோ அவர்களை எங்குமே காணவில்லையே?</span>
<span>38:63 அவர்களை நாம் தாம் வெறுமனே பரிகாசம் செய்துகொண்டு இருந்தோமா? அல்லது அவர்கள் கண்ணில்படாமல் இருக்கின்றார்களா?” </span>
<span>38:64 சந்தேகமின்றி இது உண்மையான விஷயமாகும்; இதேபோன்ற தர்க்கங்கள் தாம் நரகவாசிகளிடையே நடைபெற இருக்கின்றன. </span>
<span>38:65 (நபியே! இவர்களிடம்) கூறும்: “நான் எச்சரிக்கை செய்பவன் ஆவேன். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் வேறு யாரும் இல்லை. அவன் ஏகன்; அடக்கியாள்பவன்; </span>
<span>38:66 மேலும் வானங்கள் மற்றும் பூமி இவ்விரண்டுக்குமிடையிலுள்ள பொருள்கள் அனைத்தின் அதிபதி; வலிமை மிக்கவன்; பெரிதும் பிழைபொறுப்பவன்.”</span>
<span>38:67 இவர்களிடம் கூறும்: “இது ஒரு மாபெரும் செய்தி!</span>
<span>38:68 நீங்களோ இதனை(ச் செவியேற்றும்) புறக்கணிக்கின்றீர்களே!”</span>
<span>38:69 (இவர்களிடம் கூறுங்கள்:) “மேலுலகத்தில் தர்க்கம் நடைபெற்றபோது, அவர்களைப்பற்றிய எந்த விவரமும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. </span>
<span>38:70 நான் வெளிப்படையாய் எச்சரிக்கை செய்யக்கூடியவனாய் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் வஹியின் மூலம் இவ்விஷயங்கள் எனக்கு அறிவிக்கப்படுகின்றன.” </span>
<span>38:71 உம்முடைய இறைவன் வானவர்களிடம் “நான் களிமண்ணால் ஒரு மனிதனைப் படைக்கப்போகின்றேன்;</span>
<span>38:72 நான் அவரை முழுமையாகப் படைத்து, அவருக்குள் என்னுடைய உயிரை ஊதினால், அவருக்கு முன்னால் சிரம் பணியுங்கள் எனக் கூறியபோது </span>
<span>38:73 (இக்கட்டளைக்கு இணங்கி) வானவர்கள் அனைவருமே சிரம் பணிந்தார்கள். </span>
<span>38:74 ஆனால், இப்லீஸைத் தவிர! அவன் தன்னைப் பெரியவனென்று கருதி கர்வம் கொண்டான். மேலும், நிராகரிப்பவர்களுடன் சேர்ந்துவிட்டான். </span>
<span>38:75 இறைவன் கூறினான்: “இப்லீஸே! நான் என்னுடைய இரு கைகளால் படைத்திருக்கும் இவருக்கு சிரம் பணிவதை விட்டு உன்னைத் தடுத்தது எது? நீ கர்வம் கொண்டு விட்டாயா? அல்லது நீ உயர் அந்தஸ்து உடையவர்களுள் ஒருவனாகி விட்டாயா?” </span>
<span>38:76 அவன் (இப்லீஸ்) பதிலளித்தான்: “நான் அவரை விடச் சிறந்தவன்; என்னை நீ நெருப்பினால் படைத்தாய்; அவரையோ களிமண்ணால்!” </span>
<span>38:77 அல்லாஹ் கூறினான்: “சரி! நீ இங்கிருந்து வெளியேறி விடு; நீ விரட்டப்பட வேண்டியவனாய் இருக்கின்றாய். </span>
<span>38:78 மேலும், கூலி வழங்கும் நாள் வரை உன்மீது என்னுடைய சாபம் உண்டாகும்.” </span>
<span>38:79 அதற்கு அவன் கூறினான்: “என் இறைவா! அவ்வாறாயின் இவர்களை மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பும் நாள் வரையில் எனக்கு அவகாசம் அளித்திடுவாயாக!” </span>
<span>38:80 அல்லாஹ் கூறினான்: “சரி! உனக்கு அந்நாள்வரை அவகாசம் இருக்கிறது. </span>
<span>38:81 அந்நாள் வரும் நேரம் எனக்குத் தெரியும்.” </span>
<span>38:82 அவன் கூறினான்: “உன்னுடைய கண்ணியத்தின் மீது ஆணையாக! இம்மக்கள் அனைவரையும் நான் வழிகெடுத்துக் கொண்டிருப்பேன்; </span>
<span>38:83 ஆனால், இவர்களில் நீ தூய்மைப்படுத்தியுள்ள உன்னுடைய அடியார்களைத் தவிர!” </span>
<span>38:84 இறைவன் கூறினான்: “அவ்வாறாயின், உண்மை இதுதான்: உண்மையைத்தான் நான் கூறுகின்றேன் </span>
<span>38:85 உன்னைக் கொண்டும் மனிதர்களில் யார் யார் உன்னைப் பின்பற்றுகின்றார்களோ அவர்கள் அனைவரைக் கொண்டும் நான் நிச்சயம் நரகத்தை நிரப்புவேன்.”</span>
<span>38:86 (நபியே!) இவர்களிடம் நீர் கூறும்: “இந்த அழைப்புப் பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் நான் கேட்கவில்லை. மேலும், நான் போலிக்குணம் உடையவர்களில் உள்ளவனல்லன்.  </span>
<span>38:87 இது உலகமக்கள் அனைவருக்கும் நல்லுரையேயாகும். </span>
<span>38:88 மேலும், சிறிது காலம் கழிவதற்குள்ளாக இதன் நிலைமை நிச்சயமாக உங்களுக்குத் தெரிந்துவிடும்.”</span>
</div><div>
<span>அஸ்ஸுமர்</span>
<span>39:1 வல்லமை மிக்கவனும், நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இவ்வேதம் இறக்கியருளப்பட்டிருக்கிறது. </span>
<span>39:2 (நபியே!) நாம் இந்த வேதத்தை உம்மீது சத்தியத்துடன் இறக்கியிருக்கின்றோம். எனவே, நீர் அல்லாஹ்வையே வழிபடும். தீனை கீழ்ப்படிதலை அவனுக்கே உரித்தாக்கிய நிலையில்! </span>
<span>39:3 அறிந்துகொள்ளுங்கள். தூய்மையான கீழ்ப்படிதல் முற்றிலும் அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும். எவர்கள் அவனை விட்டுவிட்டு வேறு பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டார்களோ, அவர்கள் (தம்முடைய இச்செயலுக்கு இப்படிக் காரணம் கூறுகிறார்கள்:) “எங்களுக்கு அல்லாஹ்விடத்தில் அவர்கள் நெருக்கத்தை ஏற்படுத்தித் தருவார்கள் என்பதற்காகத்தான் நாங்கள் அவர்களை வணங்குகின்றோம்.” எவற்றில் அவர்கள் கருத்து வேறுபாடு கொள்கின்றார்களோ, அவை அனைத்திலும் திண்ணமாக அல்லாஹ் அவர்களிடையே தீர்ப்பளிப்பான். பொய்யனாகவும், சத்தியத்தை நிராகரிப்பவனாகவும் இருக்கும் எவனுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை. </span>
<span>39:4 அல்லாஹ் எவரையேனும் மகனாக எடுத்துக் கொள்ள நாடியிருந்தால், தன்னுடைய படைப்புகளிலிருந்து தான் நாடுபவரைத் தேர்ந்தெடுத்திருப்பான். அவன் இதனை (எவரையேனும் தனக்கு மகனாக ஆக்கிக்கொள்வதை) விட்டுத் தூய்மையானவன்! அவன்தான் அல்லாஹ்! தனித்தவனும், யாவற்றையும் அடக்கி ஆளுபவனும் ஆவான். </span>
<span>39:5 அவன் வானங்களையும், பூமியையும் சத்தியத்தோடு படைத்திருக்கின்றான். அவனே இரவைச் சுருட்டி பகலை விரிக்கின்றான்; பகலைச் சுருட்டி இரவை விரிக்கின்றான்; சூரியனையும் சந்திரனையும் அவன் வசப்படுத்தி வைத்துள்ளான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு காலம் வரை இயங்கிக் கொண்டிருக்கின்றது. அறிந்து கொள்ளுங்கள். அவன் வலிமை மிக்கவனும், மன்னித்து அருள்பவனுமாவான்! </span>
<span>39:6 அவனே உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். பின்னர் அவனே அந்த உயிரிலிருந்து அதன் துணையை உண்டாக்கினான். அவனே உங்களுக்காக எட்டு கால்நடைகளை இணைகளாகப் படைத்தான். அவன் உங்கள் அன்னையரின் வயிற்றில், மூன்று இருட்திரைகளினுள் ஒன்றன் பின் ஒன்றாக உங்களுக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றான். (இந்தக் காரியங்கள் செய்கின்ற) அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவனாவான். ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. பிறகு, நீங்கள் எங்கிருந்து திசை திருப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்? </span>
<span>39:7 நீங்கள் நிராகரிப்பீர்களாயின் திண்ணமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன். ஆனால், அவன் தன் அடியார்களிடம் நிராகரிப்பை விரும்புவதில்லை. மேலும், நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், அதனை அவன் உங்களுக்காக விரும்புகின்றான். சுமை சுமப்பவர் எவரும் பிறரின் சுமையைச் சுமக்கமாட்டார். இறுதியில், உங்கள் இறைவனின் பக்கமே நீங்கள் எல்லோரும் திரும்ப வேண்டியுள்ளது. அப்பொழுது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை அவன் உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பான். திண்ணமாக, அவன் உள்ளங்களின் நிலைமைகளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். </span>
<span>39:8 மனிதனுக்கு ஏதேனும் ஒரு தீங்கு வந்துவிட்டால், அவன் தன் இறைவனின் பக்கம் திரும்பி அவனை அழைக்கின்றான். பிறகு அவனுடைய இறைவன் அவன் மீது தன் அருட்கொடையை வழங்கினால், முன்பு எந்தத் துன்பத்தை நீக்கும்படி இறைஞ்சிக் கொண்டிருந்தானோ அந்தத் துன்பத்தை அவன் மறந்து விடுகின்றான்; மேலும், அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்குகின்றான்; அவனுடைய வழியைவிட்டுத் தவறச் செய்வதற்காக! (நபியே!) அந்த மனிதனிடம் கூறும்: “நீ உனது நிராகரிப்பின் மூலம் சிறிது நாட்கள் இன்பம் அனுபவித்துக்கொள். திண்ணமாக நீ நரகத்திற்குச் செல்பவன் ஆவாய்.” </span>
<span>39:9 (இத்தகைய மனிதனின் நடத்தை சிறந்ததா அல்லது அந்த மனிதனின் நடத்தையா?) அவனோ கீழ்ப்படிந்தவனாயிருக்கின்றான்; இரவு நேரங்களில் நின்று வணங்குகின்றான், மேலும், சிரம் பணிகின்றான்; மறுமையையும் அஞ்சுகின்றான்; மேலும், தன் இறைவனின் அருளுக்கு ஆசைப்படுகின்றான். இவர்களிடம் கேளும்: “அறிந்தோரும் அறியாதோரும் சமமாக முடியுமா? அறிவுடையவர்கள்தாம் நல்லுரைகளை ஏற்கின்றார்கள்.”</span>
<span>39:10 (நபியே!) கூறுவீராக: “நம்பிக்கைக்கொண்டிருக்கின்ற என் அடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு அஞ்சுங்கள். எவர்கள் இவ்வுலகில் நன்னடத்தையைக் கொண்டிருக்கின்றார்களோ, அவர்களுக்கு நன்மை இருக்கிறது. மேலும், அல்லாஹ்வின் பூமி விசாலமானது. பொறுமையாளர்களுக்கு அவர்களின் கூலி அளவின்றி வழங்கப்படும்.”</span>
<span>39:11 (நபியே! இவர்களிடம்) கூறும்: “தீனைகீழ்ப்படிதலை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கி அவனை வணங்கும்படி திண்ணமாக எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. </span>
<span>39:12 மேலும், நானே எல்லோருக்கும் முதலில் முஸ்லிமாக (இறைவனுக்கு அடிபணிந்தவனாக) இருக்க வேண்டும் என எனக்குப் பணிக்கப்பட்டுள்ளது.” </span>
<span>39:13 கூறுவீராக: “நான் என் இறைவனுக்கு மாறு செய்தால் ஒரு மகத்தான நாளின் வேதனைக்கு நான் அஞ்சுகின்றேன்.” </span>
<span>39:14 கூறிவிடுவீராக: “நான் என்னுடைய தீனைகீழ்ப்படிதலை, அல்லாஹ்வுக்கு முற்றிலும் உரித்தாக்கிய வண்ணம் அவனையே வணங்குவேன். </span>
<span>39:15 நீங்கள் அவனை விடுத்து யார் யாரையெல்லாம் விரும்புகின்றீர்களோ அவர்களை வணங்கிக் கொண்டிருங்கள்.” கூறுவீராக: “மறுமை நாளில் யார் தங்களையும், தங்கள் குடும்பத்தாரையும் இழப்பிற்குள்ளாக்கினார்களோ, அவர்கள்தாம் உண்மையில் திவால் ஆனவர்கள்.” நன்கு கேட்டுக் கொள்ளுங்கள்! இதுதான் அப்பட்டமான திவால் ஆகும். </span>
<span>39:16 அவர்கள் மீது நெருப்புக்குடைகள் மேலிருந்தும், கீழிருந்தும் மூடியிருக்கும். இத்தகைய முடிவைக் குறித்துதான் அல்லாஹ் தன் அடியார்களை அச்சுறுத்துகின்றான். எனவே, என் அடியார்களே! என் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். </span>
<span>39:17 ஆனால் (இதற்கு மாறாக) எவர்கள் தாஃகூத்துக்கு* அடிபணிவதைத் தவிர்த்துக் கொண்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்பிவிட்டார்களோ அவர்களுக்கு நற்செய்தி இருக்கிறது. எனவே அந்த அடியார்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி அறிவித்து விடுவீராக! </span>
<span>39:18 அவர்கள் எத்தகையவர்கள் எனில், சொல்வதை ஆழ்ந்து கவனமாகக் கேட்டு அவற்றின் சிறந்த அம்சத்தைப் பின்பற்றுகின்றவர்கள். இத்தகையவர்களுக்குத்தான் அல்லாஹ் நேர்வழி காட்டியிருக்கிறான். அவர்களே விவேகம் உடையவர்களாவர். </span>
<span>39:19 (நபியே!) எவன் மீது தண்டனைக்கான தீர்ப்பு உறுதியாகிவிட்டதோ அவனை யாரால் காப்பாற்ற முடியும்? நெருப்பில் வீழ்ந்துவிட்டிருப்பவனை உம்மால் காப்பாற்ற முடியுமா என்ன? </span>
<span>39:20 ஆயினும், எவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சி வாழ்ந்தார்களோ அவர்களுக்கு அடுக்கடுக்காக கட்டப்பட்ட உயர்ந்த மாளிகைகள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும். அல்லாஹ் ஒருபோதும் தன் வாக்குறுதிக்கு மாறுசெய்வதில்லை. </span>
<span>39:21 நீங்கள் காணவில்லையா என்ன? அல்லாஹ் வானத்திலிருந்து நீரைப் பொழிந்து அதனை அருவிகளாகவும், ஊற்றுகளாகவும், நதிகளாகவும் பூமியில் ஓடச் செய்தான். பின்னர் அந்த நீரின் வாயிலாக பல்வேறுபட்ட பயிர் வகைகளை விதவிதமான நிறங்களில் அவன் வெளிப்படுத்துகின்றான். பிறகு, அந்தப் பயிர்கள் முதிர்ந்து காய்ந்து விடுகின்றன. அப்போது அவை மஞ்சளித்துப் போவதை நீர் காண்கிறீர். இறுதியில் அல்லாஹ் அவற்றைப் பதராக்கிவிடுகின்றான். உண்மையில் விவேகம் உடையவருக்கு இதில் ஒரு படிப்பினை இருக்கிறது. </span>
<span>39:22 எவருடைய நெஞ்சத்தை அல்லாஹ் இஸ்லாத்திற்காகத் திறந்துவிட்டிருக்கின்றானோ, மேலும் எவர் தன்னுடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ஒளியில் நடந்து கொண்டிருக்கின்றாரோ (அவர் இவற்றிலிருந்து எந்தப் படிப்பினையும் பெறாத மனிதனைப் போன்று ஆக முடியுமா?) அல்லாஹ்வின் நல்லுரைகளுக்கு எதிராக எவர்களுடைய உள்ளம் இன்னும் அதிகமாக இறுகிவிட்டதோ, அவர்களுக்குக் கேடுதான்! அத்தகையவர்கள் வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடக்கின்றார்கள். </span>
<span>39:23 அல்லாஹ் மிக அழகிய உரைகளை இறக்கியிருக்கின்றான்; ஒரு வேதத்தை! அதன் எல்லாப் பகுதிகளும் ஒரே சீராக உள்ளன. மேலும், அதில் கருத்துகள் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளன. அதனைச் செவியுற்றவுடன் தம் இறைவனை அஞ்சுபவர்களின் மேனி சிலிர்க்கிறது. பின்னர், அவர்களின் உடலும், உள்ளமும் மிருதுவாகி அல்லாஹ்வை நினைவுகூர்வதற்கு ஆர்வம் கொள்கின்றன. இது அல்லாஹ்வின் வழிகாட்டுதலாகும். அவன், தான் நாடுவோரை இதனைக் கொண்டு நேரிய வழியில் செலுத்துகின்றான். இனி எவருக்கு அல்லாஹ்வே நேர்வழி காட்டவில்லையோ, அவருக்கு நேர்வழி காட்டுவோர் வேறு எவரும் இலர். </span>
<span>39:24 இனி மறுமைநாளில் வேதனையின் கடும் தாக்குதலைத் தன் முகத்தில் தாங்கிக்கொள்ள வேண்டிய மனிதனுடைய மோசமான நிலையைக் குறித்து நீங்கள் என்ன கணிக்கிறீர்கள்? அப்படிப்பட்ட கொடுமைக்காரர்களிடம் அப்பொழுது கூறப்படும்: “இப்போது சுவையுங்கள், நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவற்றை!” </span>
<span>39:25 இவர்களுக்கு முன்பும் பலர் இதே போன்று பொய்யென வாதிட்டிருக்கிறார்கள். இறுதியில், அவர்கள் நினைத்தும் பார்த்திராத திசையிலிருந்து அவர்கள் மீது வேதனை வந்தது. </span>
<span>39:26 பின்னர், அல்லாஹ் உலக வாழ்விலேயே இழிவினை அவர்கள் சுவைக்கச் செய்தான். மறுமையின் வேதனையோ, இதனைவிடக் கடுமையானதாகும்; அந்தோ! இந்த மக்கள் அறிந்திருந்தால்!</span>
<span>39:27 நாம் இந்தக் குர்ஆனில் மக்களுக்கு விதவிதமான எடுத்துக்காட்டுகளை கொடுத்திருக்கின்றோம், அவர்கள் விழிப்படையவேண்டும் என்பதற்காக! </span>
<span>39:28 இது அரபி மொழியிலுள்ள குர்ஆன்; இதில் எவ்விதக் கோணலுமில்லை; தீயகதியிலிருந்து இவர்கள் தப்பித்துக் கொள்வதற்காக! </span>
<span>39:29 அல்லாஹ் ஓர் உதாரணம் சொல்கின்றான்; ஒரு மனிதன் இருக்கின்றான். அவன் மீது உரிமை கொண்டாடுவதில் துர்குணமுடைய மனிதர்கள் பங்காளிகளாய் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் அவனைத் தத்தம் பக்கமாக இழுக்கின்றனர். மற்றொரு மனிதன் முழுக்க முழுக்க ஒரே உரிமையாளனுக்கே அடிமையாக இருக்கின்றான். என்ன, இவ்விருவரின் நிலையும் சமமாக முடியுமா? அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஆயினும், மக்களில் பெரும்பாலோர் அறியாமையில் கிடக்கின்றார்கள். </span>
<span>39:30 (நபியே!) நீரும் மரணமாகத்தான் போகிறீர். இவர்களும் மரணமாகக் கூடியவர்கள்தாம்! </span>
<span>39:31 பிறகு, மறுமை நாளில் திண்ணமாக நீங்கள் எல்லோரும் உங்கள் இறைவன் முன்னிலையில் தத்தம் வாதங்களை எடுத்துவைக்கப் போகிறீர்கள். </span>
<span>39:32 எவன் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தானோ மேலும், உண்மை தன் எதிரில் வந்தபோது அதனையும் பொய்ப்படுத்தினானோ, அவனைவிடப் பெரிய கொடுமைக்காரன் யார்? என்ன, இத்தகைய நன்றி கொன்றவர்களுக்கு நரகில் தங்குமிடம் எதுவும் இல்லையா? </span>
<span>39:33 ஆனால், எந்த மனிதர் உண்மையைக் கொண்டு வந்தாரோ, மேலும், எவர்கள் அவரை உண்மையாளர் என்று ஏற்றுக்கொண்டார்களோ அப்படிப்பட்டவர்கள்தாம், வேதனையிலிருந்து தப்பிக்கக் கூடியவர்கள். </span>
<span>39:34 அவர்களுக்கு, அவர்கள் விரும்புகின்றவை அனைத்தும் அவர்களின் இறைவனிடம் கிடைக்கும். நன்மை செய்வோரின் கூலி இதுதான்;</span>
<span>39:35 அவர்கள் செய்து கொண்டிருந்த மிகத் தீமையான செயல்களை அல்லாஹ் அவர்களின் கணக்கிலிருந்து நீக்கிவிட வேண்டும்; மேலும், அவர்கள் ஆற்றிவந்த மிகச் சிறந்த செயல்களைக் கவனித்து அவர்களுக்குக் கூலி வழங்க வேண்டும் என்பதற்காக!</span>
<span>39:36 (நபியே!) அல்லாஹ் தன் அடியானுக்குப் போதுமானவனில்லையா, என்ன? இவர்கள் அவனல்லாதவர்களைக் கொண்டு உங்களை அச்சுறுத்துகிறார்கள். உண்மை யாதெனில், அல்லாஹ் எவனை வழிகேட்டில் தள்ளிவிடுகின்றானோ, அவனுக்கு வழிகாட்டக்கூடியவர் எவருமிலர். </span>
<span>39:37 மேலும், எவருக்கு அவன் நேர்வழி காட்டுகின்றானோ அவரை வழிகெடுப்பவனும் எவருமில்லை. அல்லாஹ் வல்லமைமிக்கவனாகவும், பழிவாங்குபவனாகவும் இல்லையா, என்ன? </span>
<span>39:38 வானங்களையும், பூமியையும் படைத்தது யார் என்று இவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்று இவர்கள் பதிலுரைப்பார்கள். (இவர்களிடம்) கேளும். (உண்மை இதுவாயின்) அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைக்கும் தெய்வங்களைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்? அல்லாஹ் எனக்கு ஏதேனும் தீங்கு இழைக்க நாடினால் அந்தத் தீங்கிலிருந்து என்னை அவை காப்பாற்றி விடுமா? அல்லது அல்லாஹ் என்மீது கருணைபொழிய நாடினால் அந்தத் தெய்வங்களால் அவனுடைய கருணையைத் தடுத்து நிறுத்த முடியுமா? (சரி, இவர்களிடம்) கூறிவிடும்: “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்; சார்ந்திருப்பவர்கள் அனைவரும் அவனையே முழுமையாகச் சார்ந்திருக்கின்றார்கள்.” </span>
<span>39:39 (இவர்களிடம் தெளிவாகக்) கூறும்: “என் சமூகத்தாரே! நீங்கள் உங்கள் போக்கில் செயல்பட்டுக் கொண்டிருங்கள். நான் (என்னுடைய) பணியைச் செய்து கொண்டிருப்பேன். </span>
<span>39:40 இழிவு தரும் வேதனை யாருக்கு வரும், நீங்காத தண்டனை யார்மீது இறங்கும் என்பது உங்களுக்கு விரைவில் தெரிந்துவிடும்.” </span>
<span>39:41 (நபியே!) நாம் மனிதர்கள் அனைவருக்காகவும் சத்தியத்துடனான இந்த வேதத்தை உம்மீது இறக்கியிருக்கின்றோம். இனி, யாரேனும் நேரிய வழியில் நடந்தால் அது அவருக்கே நன்மை தரும். யாரேனும் வழி தவறினாலும், வழி தவறியதன் தீயவிளைவு அவரையே சாரும். நீர் அவர்களுக்குப் பொறுப்பாளர் அல்லர். </span>
<span>39:42 அல்லாஹ்தான் மரணத்தின்போது உயிர்களைக் கைப்பற்றுகின்றான். (அவ்வாறே) இதுவரை மரணிக்காதவர்களின் உயிர்களைத் தூக்கத்தின்போது கைப்பற்றுகின்றான். பிறகு, எவர்கள் மீது மரணத்தை விதிக்கின்றானோ, அவர்களின் உயிரைத் தடுத்து வைத்துக்கொள்கின்றான். மற்றவர்களின் உயிர்களை, ஒரு குறிப்பிட்ட தவணைவரை திருப்பி அனுப்புகின்றான்; சிந்திக்கக் கூடிய மக்களுக்கு இதில் மாபெரும் சான்றுகள் உள்ளன. </span>
<span>39:43 என்ன, இவர்கள் இத்தகைய இறைவனை விட்டுவிட்டு மற்றவர்களைப் பரிந்துரையாளர்களாக எடுத்துக் கொண்டார்களா? அவர்களிடம் கேளும்: “அவர்களிடம் எந்த அதிகாரமும் இல்லை என்றாலும், அவர்கள் எதையும் புரியாமலிருந்தாலுமா பரிந்துரை செய்யப்போகிறார்கள்?” </span>
<span>39:44 கூறுவீராக: ஷஃபாஅத் பரிந்துரை முற்றிலும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் இருக்கிறது. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சிக்கு அவனே உரிமையாளன். பிறகு, நீங்கள் அவனிடமே திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள். </span>
<span>39:45 ஏக அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்படுமாயின் மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களின் உள்ளங்கள் குமைய ஆரம்பிக்கின்றன. ஆனால், அவனை விடுத்து மற்றவர்களைப் பற்றிக் கூறப்படுமாயின் உடனே அவர்கள் மகிழ்ச்சியினால் பூரிப்படைகின்றார்கள். </span>
<span>39:46 நீர் கூறும்: “இறைவனே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிபவனே! நீயே உன்னுடைய அடிமைகளுக்கிடையே அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்ற விஷயங்களில் தீர்ப்பு வழங்குவாய்.” </span>
<span>39:47 இந்தக் கொடுமைக்காரர்களிடம் பூமியிலுள்ள அனைத்துச் செல்வங்களும் இருந்த போதிலும், அவற்றுடன் இன்னும் அதே அளவு செல்வம் இருந்தாலும், மறுமைநாளில் கொடிய தண்டனையிலிருந்து தப்புவதற்காக அவை அனைத்தையும் ஈடாகக் கொடுத்திட அவர்கள் தயாராகிவிடுவார்கள். அவர்கள் என்றுமே நினைத்து கூடப் பார்க்காதவை அங்கு அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு முன்னால் வெளிப்படும். </span>
<span>39:48 அவர்களுடைய சம்பாதனையின் தீயவிளைவுகள் அனைத்தும் (அங்கு) அவர்களுக்கு வெளிப்பட்டுவிடும். மேலும், அவர்கள் எதனைப் பரிகாசம் செய்து கொண்டிருக்கின்றார்களோ அது அவர்களை முழுமையாகச் சூழ்ந்துகொள்ளும். </span>
<span>39:49 இதே மனிதனைக் கொஞ்சம் துன்பம் தொட்டுவிட்டால் அவன் நம்மை அழைக்கின்றான். பிறகு, நாம் அவனுக்கு நம் சார்பிலிருந்து அருட்கொடையை அளி(த்து மகிழ்வி)க்கும்போது, இது எனக்கு என்னுடைய அறிவின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றான். உண்மையில் இது ஒரு சோதனையாகும். ஆனால், இவர்களில் பெரும்பாலோர் அறிவதில்லை. </span>
<span>39:50 இவர்களுக்கு முன்பு வாழ்ந்து சென்றவர்களும் இதையே கூறினார்கள். ஆயினும், அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுக்கு எவ்விதப் பலனையும் அளிக்கவில்லை. </span>
<span>39:51 பின்னர், தங்களுடைய சம்பாத்தியத்தின் தீயவிளைவுகள் அவர்களைப் பீடித்துக்கொள்ளும். மேலும், அவர்களில் யார் கொடுமை புரிந்தார்களோ அவர்களையும் அவர்களுடைய சம்பாத்தியத்தின் தீயவிளைவுகள் பிடித்துக் கொள்ளும்! அவர்கள் நம்மைத் தோல்வியுறச் செய்யக்கூடியவர்களல்லர்.  </span>
<span>39:52 அல்லாஹ் தான் நாடுகின்றவர்க்குத் தாராளமாக வாழ்வாதாரம் வழங்குகின்றான். மேலும், தான் நாடுகின்றவர்க்குக் குறைவாகக் கொடுக்கின்றான் என்பதை இவர்கள் அறியவில்லையா? இதில் சான்றுகள் உள்ளன; நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு!</span>
<span>39:53 (நபியே!) கூறுவீராக: “தங்கள் ஆன்மாக்களுக்குக் கொடுமை இழைத்துக் கொண்ட என் அடிமைகளே! அல்லாஹ்வின் கருணை பற்றி நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். திண்ணமாக, அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பவனும், கருணையாளனும் ஆவான். </span>
<span>39:54 திரும்பி விடுங்கள், உங்கள் இறைவனின் பக்கம்! மேலும், அடிபணிந்து விடுங்கள் அவனுக்கு உங்கள்மீது வேதனை வருவதற்கு முன்பாகவே! பிறகு, எங்கிருந்தும் உங்களுக்கு உதவி கிடைக்காது. </span>
<span>39:55 உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அனுப்பப்பட்ட வேதத்தின் சிறந்த அம்சத்தைப் பின்பற்றுங்கள்; நீங்கள் உணராதிருக்கும் நிலையில் திடீரென உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னதாக! </span>
<span>39:56 இனி, “ஐயகோ! அல்லாஹ்வின் விஷயத்தில் நான் குறைபாடு செய்துவிட்டேனே! அது மட்டுமின்றி நான் பரிகாசம் செய்தவர்களுடனும் சேர்ந்துவிட்டேனே!” என்று புலம்பக்கூடிய அல்லது,</span>
<span>39:57 “அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டியிருந்தால் நானும் இறையச்சமுள்ளவர்களில் ஒருவனாக இருந்திருப்பேனே!” என்று புலம்பக்கூடிய, </span>
<span>39:58 அல்லது, வேதனையைப் பார்க்கும் நேரத்தில் “அந்தோ! மற்றொரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தால் நானும் நற்செயல் புரிவோர்களில் ஒருவனாய் ஆகிவிடுவேனே!” என்று புலம்பக்கூடிய நிலை எந்த ஒரு மனிதனுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது. </span>
<span>39:59 (அப்பொழுது அவனுக்கு இந்தப் பதில் கிடைக்கும்:) “அவ்வாறல்ல...! என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்திருந்தன அல்லவா? அவற்றை நீ பொய் என்று கூறினாய். மேலும், தற்பெருமை கொண்டாய்; நிராகரிப்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்!” </span>
<span>39:60 (இன்று) எவர்கள் இறைவன் மீது பொய் புனைந்துரைக்கின்றார்களோ, அவர்களின் முகங்கள் மறுமைநாளில் கறுத்துப்போயிருப்பதை நீர் காண்பீர். பெருமையடித்தவர்களுக்கு நரகம் போதிய தங்குமிடமாக இல்லையா, என்ன? </span>
<span>39:61 (இதற்கு மாறாக) எவர்கள் இங்கு இறையச்சம் கொண்டு வாழ்கின்றார்களோ, அதன் விளைவாய் அவர்களுக்குக் கிடைத்த வெற்றி வாய்ப்புகள் நிமித்தம் அவர்களுக்கு அல்லாஹ் ஈடேற்றம் அளிப்பான். அவர்களை எந்தத் தீங்கும் அணுகாது. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். </span>
<span>39:62 அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் படைத்தவனாவான். அவனே ஒவ்வொரு பொருளுக்கும் பொறுப்பாளனாக இருக்கின்றான். </span>
<span>39:63 வானங்கள் மற்றும் பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல்கள் அவனிடமே இருக்கின்றன. எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ, அவர்கள்தாம் இழப்புக்குரியவர்கள். </span>
<span>39:64 (நபியே!) இவர்களிடம் கூறுவீராக: “அறிவிலிகளே! அல்லாஹ்வை விட்டுவிட்டு மற்றவர்களை நான் வணங்க வேண்டுமென்று என்னிடம் நீங்கள் கூறுகின்றீர்களா? </span>
<span>39:65 (நீர் இவ்விஷயத்தை இவர்களுக்குத் தெளிவுபடக்கூறிவிட வேண்டும்:) உமக்கும், உமக்கு முன் வாழ்ந்து சென்ற அனைத்து நபிமார்களுக்கும் இவ்வாறு வஹி* அனுப்பப்பட்டுள்ளது; நீர் இறைவனுக்கு இணைவைத்தால், உம்முடைய செயல் வீணாகிப் போய்விடும்; நீர் நிச்சயமாக நஷ்டமடைந்தவராகி விடுவீர்; </span>
<span>39:66 எனவே (நபியே!) நீர் அல்லாஹ்வுக்கு மட்டும் அடிபணிவீராக! மேலும், நன்றி செலுத்தும் அடியார்களுடன் ஆகிவிடுவீராக!”</span>
<span>39:67 இந்த மக்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவேயில்லை. (அவனுடைய நிறைவான வல்லமையின் நிலை என்னவெனில்) மறுமைநாளில் பூமி முழுவதும் அவனின் கைப்பிடியில் இருக்கும். மேலும், வானங்கள் அவனுடைய வலக்கையில் சுருட்டப்பட்டு இருக்கும். அவன் தூய்மையானவன்; உயர்ந்தவன்; இம்மனிதர்கள் செய்யும் இணைவைப்புச் செயல்களை விட்டு! </span>
<span>39:68 மேலும், அந்நாளில் எக்காளம் ஊதப்படும். அப்போது வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவரும் மடிந்து வீழ்வார்கள். ஆனால், அல்லாஹ் யாரை உயிருடன் விட்டு வைக்க நாடியிருந்தானோ அவர்களைத் தவிர! பின்னர் மற்றொரு எக்காளம் ஊதப்படும். உடனே அனைவரும் எழுந்து பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். </span>
<span>39:69 பூமி தன் இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும்; வினைச் சுவடிகள் கொண்டு வந்து வைக்கப்படும்; இறைத்தூதரும் அனைத்துச் சாட்சியாளர்களும் கொண்டு வரப்படுவார்கள். மக்கள் மத்தியில் முற்றிலும் நியாயமான வகையில் தீர்ப்பு வழங்கப்படும். அவர்களுக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படமாட்டாது. </span>
<span>39:70 மேலும், ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் புரிந்திருந்த செயல்களுக்கேற்ப முழுமையான கூலி வழங்கப்படும். மக்கள் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான். </span>
<span>39:71 (இந்தத் தீர்ப்புக்குப் பிறகு) நிராகரித்தவர்களாய் இருந்தவர்கள் நரகத்தை நோக்கிக் கூட்டம் கூட்டமாய் ஓட்டிச் செல்லப்படுவார்கள். அவ்வாறாக, அவர்கள் அந்நரகத்தை நெருங்கியதும், அதன் வாயில்கள் திறக்கப்படும். மேலும் அதன் காவலர்கள் அவர்களிடம் கேட்பார்கள்: “உங்களுடைய இறைவனின் வசனங்களை உங்களுக்கு ஓதிக்காட்டக்கூடியவர்களும், நீங்கள் இந்த நாளைச் சந்திக்க வேண்டிய ஒரு நேரம் வரும் என்று உங்களை எச்சரிக்கை செய்யக்கூடியவர்களுமான இறைத்தூதர்கள் உங்களிலிருந்தே உங்களிடம் வரவில்லையா?” அதற்கவர்கள், “ஆம்! வந்திருந்தார்கள். ஆயினும், வேதனையின் தீர்ப்பு நிராகரிப்பாளர்கள் மீது உறுதியாகிவிட்டது” என்று பதிலளிப்பார்கள். </span>
<span>39:72 அப்போது கூறப்படும்: “நுழையுங்கள் நரகத்தின் வாயில்களில்! நீங்கள் என்றென்றும் இங்குதான் கிடக்க வேண்டியுள்ளது! பெருமையடிப்பவர்களுக்கு இது எத்துணைக் கெட்ட தங்குமிடமாகும்!”</span>
<span>39:73 மேலும், எவர்கள் தம் இறைவனுக்கு மாறு செய்வதைத் தவிர்த்து வாழ்ந்தார்களோ அவர்கள் சுவனத்தை நோக்கிக் கூட்டம் கூட்டமாய்க் கொண்டு செல்லப்படுவார்கள். அவ்வாறு அவர்கள் அதனை நெருங்கியதும் அதன் வாயில்கள் முன்னரே திறந்து வைக்கப்பட்டிருக்க அதன் காவலர்கள் அவர்களிடம் கூறுவார்கள்: உங்கள் மீது ஸலாம் சாந்தி உண்டாகட்டும்! நீங்கள் நல்ல விதமாக இருங்கள். என்றென்றும் தங்கியிருப்பதற்காக இதில் நுழைந்து விடுங்கள்! </span>
<span>39:74 அப்போது அவர்கள் கூறுவார்கள்: “இறைவனுக்கே புகழ் அனைத்தும்! அவன் எங்களிடம் தன் வாக்குறுதியை உண்மைப்படுத்திக் காட்டினான். மேலும் எங்களை பூமிக்கு வாரிசுகளாக்கினான். இனி நாங்கள் சுவனத்தில் விரும்புகின்ற இடத்தில் தங்கிக் கொள்ளலாம். ஆகா! எத்தனை சிறந்த கூலி இருக்கிறது, செயல்படக்கூடியவர்களுக்கு!”</span>
<span>39:75 மேலும், நீர் காண்பீர்; அர்ஷைச்* சூழ்ந்த வண்ணம் வானவர்கள் தம் இறைவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டிருப்பார்கள். மேலும், மக்களிடையே முற்றிலும் நியாயமான வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும். புகழ் அனைத்தும் அகிலத்தார் அனைவரையும் பரிபாலிக்கின்ற அல்லாஹ்வுக்கே!</span>
</div><div>
<span>அல் முஃமின்</span>
<span>40:1 ஹா மீம்; </span>
<span>40:2 இவ்வேதம் அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்டிருக்கின்றது. அவனே வல்லமை மிக்கவன்; அனைத்தையும் அறிந்தவன்! </span>
<span>40:3 பாவத்தை மன்னிப்பவன்; பாவமன்னிப்புக் கோரி மீளுவதை ஏற்றுக் கொள்பவன். கடும் தண்டனையளிப்பவன்; அருட்பேறு உடையவன்! அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவனிடமே அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டி யிருக்கிறது. </span>
<span>40:4 அல்லாஹ்வுடைய வசனங்களில் யாரும் தர்க்கம் புரிவதில்லை; நிராகரித்தவர்களைத் தவிர! இதன்பிறகு உலகநாடுகளில் அவர்களுடைய நடமாட்டம் உம்மை எந்த வகையிலும் ஏமாற்றிவிட வேண்டாம். </span>
<span>40:5 இவர்களுக்கு முன்பு நூஹுடைய சமூகத்தாரும் பொய்யென வாதிட்டிருக்கின்றனர். அவர்களுக்குப் பிறகு, வேறு பல கூட்டத்தினரும் இவ்வாறு செய்துள்ளனர். ஒவ்வொரு சமுதாயத்தினரும் தங்களுடைய தூதரைப் பிடிக்கப் பாய்ந்தனர். அவர்கள் அனைவரும் அசத்தியத்தின் ஆயுதங்களால் சத்தியத்தை வீழ்த்திட முயன்றனர். ஆனால், இறுதியில் நான் அவர்களைப் பிடித்துக் கொண்டேன். </span>
<span>40:6 பிறகு பாருங்கள், என்னுடைய தண்டனை எத்துணைக் கடுமையானது! ‘அவர்கள் நரகத்தில் நுழைபவர்களே!’ எனும் உம் அதிபதியின் தீர்ப்பு, இவ்வாறு அந்த நிராகரிப்பாளர்கள் அனைவர் மீதும் சார்ந்து விட்டது. </span>
<span>40:7 அர்ஷை* சுமந்து கொண்டிருக்கும் வானவர்களும் அதனைச் சுற்றியிருப்பவர்களும் தம் இறைவனைப் புகழ்ந்து துதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மேலும், இறைநம்பிக்கை கொண்டவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருகிறார்கள். (அவர்கள் கூறுகிறார்கள்:) “எங்கள் அதிபதியே! உனது கருணையாலும், உனது ஞானத்தினாலும் எல்லாவற்றையும் சூழ்ந்திருக்கிறாய். எவர்கள் பாவ மன்னிப்புக்கோரி உன்னுடைய வழியைப் பின்பற்றினார்களோ அவர்களை மன்னிப்பாயாக! மேலும், அவர்களை நரக வேதனையிலிருந்து காப்பாற்றுவாயாக! </span>
<span>40:8 மேலும், நீ அவர்களுக்கு வாக்களித்த நிலையான சுவனங்களில் அவர்களை நுழையச் செய்வாயாக! அவர்களுடைய தாய் தந்தையர்களிலும், மனைவியரிலும் மற்றும் அவர்களுடைய வழித்தோன்றல்களிலும் நல்லவர்களாய் இருப்பவர்களையும் (அவர்களுடன் சுவனத்தில் சேர்த்து வைப்பாயாக!) திண்ணமாக, நீ வலிமை மிக்கவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கிறாய். </span>
<span>40:9 மேலும், நீ அவர்களைத் தீமைகளிலிருந்து காப்பாற்றுவாயாக! மறுமை நாளில் எவரை நீ தீமைகளிலிருந்து காப்பாற்றுகிறாயோ, அவர்மீது பெருங்கருணையைப் பொழிந்துவிட்டாய். இதுவே, மகத்தான வெற்றியாகும்.”</span>
<span>40:10 எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களை (மறுமை நாளில்) அழைத்துக் கூறப்படும்: “இறைநம்பிக்கை கொள்ளுமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்தீர்கள். அப்போது அல்லாஹ் உங்கள் மீது கொண்ட கோபம் (இன்று) நீங்கள் உங்கள் மீது கொள்கின்ற கோபத்தை விடவும் கடுமையானது.” </span>
<span>40:11 அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நீ உண்மையில் எங்களுக்கு இரு தடவை இறப்பும், இரு தடவை வாழ்வும் அளித்துவிட்டாய்! இப்போது நாங்கள் எங்கள் தவறுகளை ஒப்புக்கொள்கிறோம். இனி, இங்கிருந்து வெளியேறுவதற்கு ஏதேனும் வழி உண்டா?” </span>
<span>40:12 (பதில் கூறப்படும்:) இந்நிலை உங்களுக்கு ஏற்பட்டதற்குக் காரணம், ஏக அல்லாஹ்வின் பக்கம் மட்டும் அழைக்கப்பட்டபோது நீங்கள் ஏற்க மறுத்ததும், அவனோடு மற்றவர்களையும் சேர்த்துக் கொள்ளப்பட்டபோது அதை ஏற்றுக் கொண்டதும்தான்! இனி தீர்ப்பு வழங்குவது, மேலானவனும் உயர்ந்தவனுமாகிய அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது. </span>
<span>40:13 அவன்தான் உங்களுக்குத் தன்னுடைய சான்றுகளைக் காண்பிக்கிறான். மேலும், வானத்திலிருந்து உங்களுக்காக உணவை இறக்குகிறான். ஆனால், அல்லாஹ்வின் பக்கம் திரும்புகிறவன் மட்டுமே (இந்தச் சான்றுகளைக் கொண்டு) படிப்பினை பெறுகிறான். </span>
<span>40:14 எனவே (அல்லாஹ்வின் பக்கம் திரும்புகின்றவர்களே!) உங்கள் தீனை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கிய வண்ணம் அவனையே அழையுங்கள்; உங்களுடைய இந்தச் செயல் இறைநிராகரிப்பாளர்களுக்கு எவ்வளவு வெறுப்பூட்டக்கூடியதாய் இருந்தாலும் சரியே!</span>
<span>40:15 அவன் உயர்ந்த அந்தஸ்துகளை உடையவன்; அர்ஷின் உரிமையாளன்; அவன் தன்னுடைய அடியார்களில் தான் நாடுகின்றவர் மீது தனது கட்டளையால் ரூஹை இறக்கி வைக்கிறான்; சந்திக்கவிருக்கும் நாளைக் குறித்து அவர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக! </span>
<span>40:16 அந்நாளிலோ மக்கள் எந்தத் திரையுமின்றி வெளிப்பட்டுவிடுவார்கள். அவர்களுடைய எந்த விஷயமும் அல்லாஹ்வை விட்டு மறைந்திருக்காது. (அன்று அழைத்துக் கேட்கப்படும்:) “இன்று ஆட்சியதிகாரம் யாருக்குரியது?” (அனைத்துலகமும் கூறும்:) “எல்லாவற்றையும் அடக்கியாளும் ஏகன் ஆகிய அல்லாஹ்விற்குரியது.” </span>
<span>40:17 (அப்போது கூறப்படும்:) “இன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எதைச் சம்பாதித்தானோ, அதற்குரிய கூலி வழங்கப்படும். இன்று எவர் மீதும் எந்தவித அநீதியும் ஏற்படாது. திண்ணமாக, அல்லாஹ் கணக்கு வாங்குவதில் மிக விரைவானவன்!” </span>
<span>40:18 (நபியே!) அண்மித்துவிட்டிருக்கும் அந்த நாளினைக் குறித்து இவர்களுக்கு நீர் எச்சரிக்கை செய்வீராக! அன்றோ இதயங்கள் தொண்டையை அடைத்துக் கொள்ளும். மேலும், மக்கள் துக்கத்தை மென்று விழுங்கிக் கொண்டிருப்பார்கள். அப்போது கொடுமைக்காரர்களுக்கு இரக்கம் காட்டுகிற எந்த நண்பனும் கிடைக்கமாட்டான். ஏற்றுக்கொள்ளத் தக்க எந்தப் பரிந்துரையாளனும் கிடைக்க மாட்டான். </span>
<span>40:19 கண்களின் கள்ளத்தனங்களையும், நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பவற்றையும் அல்லாஹ் அறிகின்றான். </span>
<span>40:20 மேலும், அல்லாஹ் பாரபட்சமின்றி துல்லியமான தீர்ப்பு வழங்குவான். ஆனால், அல்லாஹ்வை விடுத்து யாரை இவர்கள் (இணைவைப்பாளர்கள்) அழைக்கிறார்களோ அவர்கள் எந்த விஷயத்திலும் தீர்ப்பு வழங்கக்கூடியவர்களல்லர். ஐயமின்றி, அல்லாஹ்தான் அனைத்தையும் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான். </span>
<span>40:21 இவர்கள் என்றாவது பூமியில் சுற்றித் திரிந்து, தங்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களின் கதி என்னவாயிற்று என்பதைப் பார்த்ததில்லையா? அவர்கள் இவர்களைவிட அதிக வலிமையுடையவர்களாய் இருந்தார்கள். மேலும், இவர்களைவிட அதிகமாகப் பூமியில் பெரும் பெரும் தடயங்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால், அல்லாஹ் அவர்களுடைய பாவங்களுக்காக அவர்களைப் பிடித்துக் கொண்டான். மேலும், அவர்களை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுவோர் எவரும் இருக்கவில்லை. </span>
<span>40:22 அவர்களுக்கு நேர்ந்த இந்த கதிக்குக் காரணம், அவர்களிடம் அவர்களுடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருந்தும், அவர்கள் ஏற்க மறுத்துவிட்டதுதான். இறுதியில், அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான். திண்ணமாக, அவன் வலிமை மிக்கவனாகவும் கடுமையாகத் தண்டிப்பவனாகவும் இருக்கிறான். </span>
<span>40:23 திண்ணமாக, நாம் மூஸாவை நம் அத்தாட்சிகளுடனும், தெளிவான நியமனச் சான்றுகளுடனும் ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். </span>
<span>40:24 ஆனால் அவர்கள் கூறிவிட்டார்கள், “சூனியக்காரர், பெரும் பொய்யர்” என்று!</span>
<span>40:25 பின்னர், அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களிடம் கொண்டு வந்தபோது அவர்கள் கூறினார்கள்: “எவர்கள் நம்பிக்கை கொண்டு இவர்களுடன் சேர்ந்துவிட்டார்களோ, அவர்கள் அனைவரின் ஆண் மக்களையும் கொன்றுவிடுங்கள்; பெண்மக்களை உயிரோடு விட்டுவிடுங்கள்.” ஆனால், நிராகரிப்பாளர்களின் சூழ்ச்சி வீணாகவே போயிற்று. </span>
<span>40:26 ஃபிர்அவ்ன் (ஒரு நாள் தன் அவையோரிடம்) கூறினான்: “விடுங்கள் என்னை! நான் இந்த மூஸாவைக் கொன்று விடுகின்றேன். அவர் அழைத்துப் பார்க்கட்டும், தன் அதி பதியை! இவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார் அல்லது நாட்டில் அராஜகம் விளைவிப்பார் என்று நான் அஞ்சுகிறேன்!”</span>
<span>40:27 மூஸா கூறினார்: “கணக்கு வாங்கப்படும் நாளின் மீது நம்பிக்கை கொள்ளாத அனைத்து ஆணவக்காரர்களை விட்டும் நான் என்னுடையவும், உங்களுடையவும் அதிபதியிடம் பாதுகாப்பு தேடியிருக்கிறேன்.”</span>
<span>40:28 (இந்தச் சந்தர்ப்பத்தில்) ஃபிர்அவ்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த தம் நம்பிக்கையை மறைத்து வைத்திருந்த இறைநம்பிக்கையாளர் ஒருவர் கூறலானார்: “ஒரு மனிதர், அல்லாஹ்தான் என் இறைவன் என்று கூறுகிறார் என்பதற்காகவா அவரை நீங்கள் கொன்றுவிடுவீர்கள்? அவரோ உங்களுடைய இறைவனின் சார்பிலிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கிறார். அவர் பொய்யராயிருந்தால், அவருடைய பொய் அவருக்கே கேடாக அமையும். ஆனால், அவர் உண்மையாளராய் இருந்தால், எந்த பயங்கரமான விளைவுகளைக் குறித்து அவர் உங்களை எச்சரிக்கை செய்கிறாரோ, அவற்றில் சில அவசியம் உங்களைப் பீடிக்கவே செய்யும். எவன் வரம்பு மீறுபவனாகவும் பெரும் பொய்யனாகவும் இருக்கின்றானோ அவனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை. </span>
<span>40:29 என் சமுதாய மக்களே! இன்று உங்களுக்கு ஆட்சியதிகாரம் இருக்கிறது; பூமியில் நீங்கள் மேலோங்கியவர்களாய் இருக்கிறீர்கள். ஆனால், இறைவனுடைய தண்டனை நம்மீது வந்து விட்டால் நமக்கு உதவக்கூடியவர் யார் இருக்கிறார்?” ஃபிர்அவ்ன் கூறினான்: “எனக்குப் பொருத்தமாகத் தென்படுகின்ற கருத்தைத்தான் நான் உங்களுக்குத் தெரிவிக்கின்றேன். மேலும், நேரான வழியைத்தான் நான் உங்களுக்குக் காண்பிக்கின்றேன்.”</span>
<span>40:30 இறைநம்பிக்கை கொண்டிருந்த அந்த மனிதர் கூறினார்: “என்னுடைய சமுதாய மக்களே! இதற்கு முன் பல கூட்டத்தார்களின் மீது வந்த அந்த நாள் உங்களின் மீதும் வந்துவிடுமோ என்று நான் அஞ்சுகின்றேன். </span>
<span>40:31 நூஹின் சமூகத்தினர், ஆத், ஸமூத் சமூகத்தினர் மற்றும் அவர்களுக்குப் பின்வந்த சமுதாயத்தினர் ஆகியோர் மீது வந்த நாளைப் போன்று! மேலும், உண்மையில் அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு எந்த அநீதியும் இழைக்க வேண்டுமென்று கருதுவதில்லை. </span>
<span>40:32 மேலும் என் சமூகத்தாரே! அழுது புலம்பி ஒருவர் மற்றவரை அழைக்கும் நாள் உங்களுக்கு வந்துவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன். </span>
<span>40:33 அன்று நீங்கள் திரும்பிப் பாராமல் ஓடிக்கொண்டிருப்பீர்கள். ஆனால், அவ்வேளை அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பாற்றுவோர் எவரும் இருக்க மாட்டார். உண்மையாதெனில், எவனை அல்லாஹ் வழிகெடுக்கின்றானோ அவனுக்கு வழிகாட்டுபவர் எவரும் இருப்பதில்லை. </span>
<span>40:34 இதற்கு முன் யூஸுஃப், உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருந்தார். ஆனால், நீங்கள் அவர் கொண்டு வந்த அறிவுரைகள் குறித்து சந்தேகத்தில் விழுந்து கிடந்தீர்கள். பிறகு அவர் மரணமடைந்தபோது நீங்கள் கூறினீர்கள், “அவருக்குப் பின் அல்லாஹ் எந்தத் தூதரையும் ஒருபோதும் அனுப்பமாட்டான்” என்று இவ்வாறு வரம்பு மீறுவோர், ஐயம் கொள்வோர் அனைவரையும் அல்லாஹ் வழிகேட்டில் தள்ளுகிறான். </span>
<span>40:35 அவர்கள் எத்தகையவர்கள் எனில், அல்லாஹ்வின் வசனங்களைக் குறித்து தர்க்கம் புரிகிறார்கள், எவ்விதச் சான்றும் ஆதாரமும் தங்களிடம் வராமலேயே! இந்த நடத்தை அல்லாஹ்விடமும் நம்பிக்கை கொண்டோரிடமும் மிகவும் வெறுப்புக்குரியதாகும். இவ்வாறே ஒவ்வொரு ஆணவக்காரனுடையவும் கொடுங்கோலனுடையவும் உள்ளத்தின் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான். </span>
<span>40:36 ஃபிர்அவ்ன் கூறினான்: “ஹாமானே! நீ எனக்கு ஓர் உயர்ந்த கோபுரம் எழுப்பு. ஏனெனில், நான் வழிகளைச் சென்றடைவதற்காக </span>
<span>40:37 வானத்தின் வழிகளை! மேலும், மூஸாவின் இறைவனை நான் எட்டிப்பார்க்க வேண்டும். நான் இந்த மூஸாவைப் பொய்யராகத்தான் கருதுகின்றேன்!” இவ்வாறு ஃபிர்அவ்னுக்கு அவனுடைய தீய செயல் அழகாக்கிக் காட்டப்பட்டது. மேலும், அவன் நேரிய வழியை விட்டுத் தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சிகள் அனைத்தும் அவனது அழிவுப்பாதையில்தான் செலவாயின. </span>
<span>40:38 இறைநம்பிக்கை கொண்டிருந்த அந்த மனிதர் கூறினார்: “என் சமுதாய மக்களே! நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குச் சரியான வழியைத்தான் காட்டுகின்றேன். </span>
<span>40:39 என் சமூகத்தினரே! இந்த உலக வாழ்க்கை சில நாட்கள்தாம்! திண்ணமாக, மறுமைதான் நிலையான தங்குமிடமாகும்; </span>
<span>40:40 தீய செயல் புரிந்தவனுக்கு அவன் செய்த தீமைக்கேற்பவே கூலி கிடைக்கும். எவர்கள் நற்செயல் புரிகின்றார்களோ அவர்கள் ஆணாயினும், பெண்ணாயினும் சரி இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் பட்சத்தில் அனைவரும் சுவனம் செல்வார்கள். அங்கு அவர்களுக்குக் கணக்கின்றி உணவு வழங்கப்படும். </span>
<span>40:41 மேலும், என் சமூகத்தினரே, இது என்ன நியாயம்? நானோ உங்களை ஈடேற்றத்தின் பக்கம் அழைக்கின்றேன். ஆனால், நீங்களோ என்னை நெருப்பின் பக்கம் அழைக்கின்றீர்கள். </span>
<span>40:42 அல்லாஹ்வை நிராகரிப்பதற்கும், நான் அறிந்திடாதவற்றை அவனுக்கு இணையாக்குவதற்கும் நீங்கள் என்னை அழைக்கின்றீர்கள். அதே நேரத்தில் நானோ வல்லமை மிக்கவனும் பெரும் மன்னிப்பாளனுமான இறைவனின் பக்கம் உங்களை அழைத்துக்கொண்டிருக்கின்றேன். </span>
<span>40:43 இல்லை; சத்தியம் இதுதான்; இதற்கு மாறாக நடக்காது; அதாவது, நீங்கள் என்னை எவற்றின் பக்கம் அழைத்துக் கொண்டிருக்கின்றீர்களோ அவற்றிற்கு எவ்வித அழைப்பும் இந்த உலகில் இல்லை. மறுமையிலும் இல்லை. மேலும், நாம் அனைவரும் அல்லாஹ்விடமே திரும்ப வேண்டியுள்ளது. வரம்பு மீறுவோர் நரகம் செல்லக்கூடியவர்களாவர். </span>
<span>40:44 இன்று உங்களுக்கு நான் சொல்லிக் கொண்டிருப்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கும் ஒரு நேரம் அதிவிரைவில் வந்துவிடும். மேலும், நான் என் விவகாரத்தை அல்லாஹ்விடம் ஒப்படைக்கின்றேன். திண்ணமாக, அல்லாஹ் தன் அடிமைகளை கண்காணிப்பவனாக இருக்கின்றான். </span>
<span>40:45 இறுதியில், (அந்நம்பிக்கையாளருக்கு எதிராக) அந்த மக்கள் கையாண்ட எல்லாவிதமான மோசமான சூழ்ச்சிகளிலிருந்தும் அல்லாஹ் அவரைக் காப்பாற்றிக் கொண்டான். மேலும், ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களை கொடிய வேதனை சூழ்ந்து கொண்டது. </span>
<span>40:46 நரக நெருப்பு! அதன் முன்பு காலையிலும் மாலையிலும் அவர்கள் கொண்டுவரப்படுகிறார்கள். மேலும், மறுமைநாள் வந்துவிடும்போது ஆணையிடப்படும்: ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மிகக் கடுமையான வேதனையில் புகுத்துங்கள்! </span>
<span>40:47 பிறகு, நரகத்தில் இவர்கள் ஒருவர் மற்றவருடன் தர்க்கம் செய்துகொண்டிருக்கும் நேரத்தைச் சற்று நினைத்துப் பாருங்கள். (உலகில்) பலவீனர்களாய் இருந்த மக்கள், பெரியவர்கள் போல் காட்டிக் கொண்டவர்களை நோக்கிச் சொல்வார்கள்: “நாங்கள் உங்களைப் பின்பற்றுவோராய் இருந்தோம். (இப்போது இங்கு) நரக வேதனையிலிருந்து சிறிதளவாவது எங்களைக் காப்பாற்றுவீர்களா?” </span>
<span>40:48 பெரியவர்கள் போல் காட்டிக் கொண்டிருந்தவர்கள் பதில் அளிப்பார்கள்: “நாம் அனைவரும் இங்கு ஒரே நிலையில் இருக்கின்றோம்; அல்லாஹ் அடியார்களிடையே தீர்ப்பளித்து விட்டான்.” </span>
<span>40:49 மேலும், நரகத்தில் வீழ்ந்துகிடக்கும் அம்மக்கள் நரகத்தின் காவலர்களிடம் கூறுவார்கள்: “எங்களின் வேதனையை ஒரு நாளைக்கேனும் குறைப்பதற்கு நீங்கள் உங்கள் இறைவனிடம் இறைஞ்சுங்கள்.” </span>
<span>40:50 அதற்கு அவர்கள் கேட்பார்கள்: “உங்களிடம் இறைத்தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் வந்து கொண்டிருக்கவில்லையா? அதற்கு அவர்கள் “ஆம்” என்று பதிலளிப்பார்கள். அப்பொழுது நரகத்தின் காவலர்கள் கூறுவர்: “அப்படியாயின் நீங்களே இறைஞ்சிக் கொள்ளுங்கள்!” நிராகரிப்பாளர்களின் இறைஞ்சுதல் பயனற்றுப் போய்விடும். </span>
<span>40:51 உறுதியாகத் தெரிந்து கொள்ளுங்கள்: நாம் நம்முடைய தூதர்களுக்கும் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்விலும் அவசியம் உதவி செய்கின்றோம்; சாட்சிகள் நிற்கும் (மறுமை) நாளிலும் உதவி செய்வோம். </span>
<span>40:52 அந்நாளில் கொடுமைக்காரர்களுக்கு அவர்களுடைய சாக்குப்போக்குகள் எந்தப் பயனையும் அளித்திடமாட்டா; அவர்கள் மீது சாபம் உண்டாகும். மேலும், மிக மோசமான தங்குமிடம் அவர்களுக்குக் கிடைக்கும். </span>
<span>40:53 தெரிந்துகொள்ளுங்கள்: மூஸாவுக்கு நாம் நேர்வழி காட்டினோம். மேலும், இஸ்ராயீலின் வழித் தோன்றல்களை வேதத்தின் வாரிசுகளாய் ஆக்கினோம்;</span>
<span>40:54 அவ்வேதம் அறிவுடையோருக்கு வழிகாட்டியாகவும் அறிவுரையாகவும் திகழ்ந்தது. </span>
<span>40:55 எனவே, (நபியே!) நீர் பொறுமையாய் இரும்! அல்லாஹ்வின் வாக்குறுதி முற்றிலும் உண்மையானது. மேலும், உம் தவறுக்காக மன்னிப்புக் கோரும்! காலையிலும் மாலையிலும் உம் இறைவனைப் புகழ்வதுடன் அவனைத் துதித்துக் கொண்டுமிரும். </span>
<span>40:56 சான்றோ, ஆதாரமோ எதுவுமே தங்களிடம் வந்திருக்காத நிலையில், எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் புரிகின்றார்களோ அவர்களின் நெஞ்சங்களில் (தாமே பெரியவர்கள் எனும்) அகங்காரம் நிறைந்துள்ளது. ஆனாலும், அவர்கள் அந்தப் பெருமையை அடையப் போவதில்லை. எனவே (நபியே!) அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்வீராக! திண்ணமாக, அவன் அனைத்தையும் பார்ப்பவனாகவும் கேட்பவனாகவும் இருக்கின்றான். </span>
<span>40:57 வானங்களையும் பூமியையும் படைப்பது, மனிதர்களைப் படைப்பதை விட நிச்சயம் மாபெரும் சாதனையாகும். எனினும், மக்களில் பெரும்பாலோர் அறிவதில்லை. </span>
<span>40:58 மேலும், குருடனும் பார்வையுள்ளவனும் சமமாக முடியாது; இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தவரும் தீயவரும் சமமாக முடியாது; ஆனால், நீங்கள் மிகக் குறைவாகவே உணர்கின்றீர்கள். </span>
<span>40:59 திண்ணமாக, மறுமை நாள் வரத்தான் போகின்றது; அதில் எவ்வித ஐயமுமில்லை. எனினும், மக்களில் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்வதில்லை. </span>
<span>40:60 உங்கள் இறைவன் கூறுகின்றான்: “என்னிடம் இறைஞ்சுங்கள்! நான் உங்கள் இறைஞ்சுதலை ஏற்றுக் கொள்வேன். திண்ணமாக, எவர்கள் தற்பெருமை கொண்டு எனக்கு வழிபட மறுக்கின்றார்களோ அவர்கள் இழிவுக்கும் கேவலத்துக்கும் ஆளாகி அவசியம் நரகில் நுழைவார்கள். </span>
<span>40:61 அல்லாஹ்தான் உங்களுக்காக இரவைப் படைத்தான்; அதில் நீங்கள் அமைதி பெறுவதற்காக! மேலும், பகலை ஒளியுடையதாக்கினான். உண்மையில், அல்லாஹ் மக்கள் மீது அருள்புரிபவனாக இருக்கின்றான். ஆனால், மக்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. </span>
<span>40:62 (உங்களுக்காக இவை அனைத்தையும் செய்திருக்கும்) அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன்; ஒவ்வொரு பொருளின் படைப்பாளன்; அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. பின்னர் நீங்கள் எங்கிருந்து வழிபிறழச் செய்யப்படுகின்றீர்கள்? </span>
<span>40:63 இவ்வாறே, அல்லாஹ்வின் வசனங்களை மறுத்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் வழிபிறழச் செய்யப்படுகிறார்கள். </span>
<span>40:64 அல்லாஹ்தான் உங்களுக்காகப் பூமியைத் தங்குமிடமாகவும் மேலே வானத்தை முகடாகவும் அமைத்தான். அவனே உங்களுக்கு வடிவங்கள் அமைத்தான்; உங்கள் வடிவங்களை மிகவும் அழகுபட அமைத்தான். மேலும், அவன் உங்களுக்குத் தூய்மையான பொருள்களிலிருந்து உணவளித்தான். (இவற்றைச் செய்த) அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன்; அகில உலகங்களுக்கும் அதிபதியாகிய, </span>
<span>40:65 அவனே நித்திய ஜீவனாக இருக்கின்றான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறெவரும் இல்லை. ஆகவே, அவனிடமே இறைஞ்சுங்கள்; உங்களுடைய தீனை கீழ்ப்படிதலை அவனுக்கே உரித்தாக்கியவர்களாய்! புகழ் அனைத்தும் அகில உலகங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும். </span>
<span>40:66 (நபியே! இம்மக்களிடம்) கூறிவிடும்: “நீங்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு எவற்றையெல்லாம் அழைக்கின்றீர்களோ அவற்றை வணங்குவதைவிட்டு நான் தடுக்கப்பட்டிருக்கின்றேன்; என் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகள் என்னிடம் வந்திருக்கும்போது (நான் இதனை எப்படிச் செய்ய முடியும்?) அகில உலகங்களின் அதிபதியின் முன்னால் கீழ்ப்படிந்துவிட வேண்டும் என நான் பணிக்கப்பட்டிருக்கின்றேன். </span>
<span>40:67 அவனே உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின்னர் விந்திலிருந்து பின்னர் இரத்தக்கட்டியிலிருந்து! பின்னர், அவன் உங்களைக் குழந்தையின் வடிவில் வெளிக்கொணர்கின்றான். பின்னர், நீங்கள் உங்கள் முழு வலிமையை அடையும் வரை உங்களை வளர்த்து வருகின்றான்; பிறகு நீங்கள் முதுமையை அடையும் வரையிலும் வளர்க்கின்றான்! மேலும், உங்களில் சிலர் முன்னதாகவே திரும்ப அழைத்துக் கொள்ளப்படுகின்றனர். எதற்காக இவையனைத்தும் செய்யப்படுகின்றனவெனில் உங்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை நீங்கள் அடைவதற்காகவும் நீங்கள் உண்மையை அறிவதற்காகவும்தான்! </span>
<span>40:68 அவனே வாழ்வளிப்பவனும் மரணிக்கச் செய்பவனும் ஆவான். அவன் எந்த விஷயத்தைத் தீர்மானித்தாலும் ‘ஆகு!’ என்றுதான் ஆணையிடுகின்றான். உடனே அது ஆகிவிடுகின்றது. </span>
<span>40:69 அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்கின்றவர்களை நீர் பார்க்கவில்லையா? எங்கிருந்து அவர்கள் திசைதிருப்பப்படுகின்றார்கள்? </span>
<span>40:70 இவர்கள் இந்த வேதத்தையும் நாம், நம் தூதர்களுடன் அனுப்பிவைத்திருந்த அனைத்து வேதங்களையும் பொய்யெனக் கூறுகின்றார்கள். விரைவில் இவர்களுக்குத் தெரிந்துவிடும்; </span>
<span>40:71 அப்பொழுது அவர்களுடைய கழுத்துகள் விலங்குகளாலும் சங்கிலிகளாலும் பிணைக்கப்பட்டிருக்கும். </span>
<span>40:72 அவர்கள் கொதிநீரின் பக்கம் இழுத்துவரப்படுவார்கள்; பின்னர் நரகத்தில் வீசியெறியப்படுவார்கள். </span>
<span>40:73 “அல்லாஹ்வை விடுத்து நீங்கள் இணைவைத்துக் கொண்டிருந்த மற்ற கடவுள்கள் இப்போது எங்கே?” என்று அவர்களிடம் கேட்கப்படும். </span>
<span>40:74 அப்போது அவர்கள் பதில் அளிப்பார்கள்: “அவர்கள் எங்களை விட்டும் காணாமல் போய் விட்டார்கள். உண்மையில், நாங்கள் இதற்கு முன்பு எதனையும் அழைத்துக் கொண்டிருக்கவில்லை.” இவ்வாறாக, நிராகரிப்பாளர்கள் வழிகெட்டிருப்பதை அல்லாஹ் உறுதிப்படுத்தி விடுவான். </span>
<span>40:75 அவர்களிடம் கூறப்படும்: “உங்களுக்கு இந்தக் கதி ஏற்பட்டதற்குக் காரணம், நீங்கள் உண்மைக்கு மாற்றமானதைக் கொண்டு மகிழ்ந்து கொண்டிருந்தீர்கள்; பூரிப்பில் இறுமாந்து கொண்டும் இருந்தீர்கள். </span>
<span>40:76 இப்போது நரகத்தின் வாயில்களில் நுழையுங்கள்; நீங்கள் அதிலேயே நிரந்தரமாக வீழ்ந்துகிடக்க வேண்டியுள்ளது, அகங்காரம் கொண்டவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டதாகும். </span>
<span>40:77 (நபியே!) பொறுமையைக் கைக்கொள்ளும்! திண்ணமாக, அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. எந்தத் தீய விளைவுகளைப் பற்றி நாம் இவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றோமோ அவற்றில் சிலவற்றை நாம் உம் கண்ணெதிரில் காட்டித் தந்தாலும் சரி; அல்லது (அதற்கு முன்பே) உலகைவிட்டு உம்மை எடுத்துக் கொண்டாலும் சரி. இவர்கள் நம் பக்கமே திரும்பி வர வேண்டியுள்ளது. </span>
<span>40:78 மேலும், (நபியே!) நாம் உமக்கு முன்பு இறைத்தூதர்கள் பலரை அனுப்பியிருக்கின்றோம். அவர்களில் சிலரைக் குறித்து உமக்கு எடுத்துரைத்திருக்கின்றோம். வேறு சிலரைப் பற்றி உமக்கு நாம் எடுத்துரைக்கவில்லை. அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த ஒரு சான்றையும் சுயமாகக் கொண்டு வரும் ஆற்றல் எந்தத் தூதருக்கும் இருக்கவில்லை. பிறகு, அல்லாஹ்வின் கட்டளை வந்தபோது சத்தியத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது; மேலும், அப்போது தவறு செய்தவர்கள் நஷ்டமடைந்து விட்டார்கள். </span>
<span>40:79 அல்லாஹ்தான் உங்களுக்காக இந்தக் கால்நடைகளைப் படைத்திருக்கின்றான் அவற்றில் சிலவற்றின் மீது நீங்கள் சவாரி செய்வதற்காகவும், வேறு சிலவற்றின் இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும்! </span>
<span>40:80 அவற்றில் உங்களுக்கு இன்னும் பல பயன்கள் உள்ளன. உங்கள் இதயம் விரும்புகின்ற இடத்தை நீங்கள் அடைவதற்கு அவற்றின் மீது சவாரி செய்கிறீர்கள். அந்தக் கால்நடைகளின் மீதும், கப்பல்களின் மீதும் நீங்கள் ஏற்றிச்செல்லப் படுகின்றீர்கள். </span>
<span>40:81 அல்லாஹ் இத்தகைய தன்னுடைய சான்றுகளை உங்களுக்குக் காண்பித்துக் கொண்டிருக்கின்றான். அவ்வாறிருக்க, அவனுடைய எந்தெந்தச் சான்றுகளை நீங்கள் மறுப்பீர்கள்?</span>
<span>40:82 பூமியில் சுற்றித் திரிந்து, தமக்கு முன் வாழ்ந்து சென்றவர்களுக்கு நேர்ந்த கதியை இவர்கள் காணவில்லையா? அவர்கள் இவர்களைவிட அதிக எண்ணிக்கையுடையவர்களாகவும், மிக்க பலமுடையவர்களாகவும் இருந்தனர். மேலும், பூமியில் இவர்களைவிட மாபெரும் தடயங்களை விட்டுச் சென்றிருக்கின்றார்கள். அவர்கள் எவற்றையெல்லாம் சம்பாதித்தார்களோ அவை இறுதியில் அவர்களுக்கு என்ன பயனைத் தந்தது?</span>
<span>40:83 அவர்களின் இறைத்தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டுவந்தபோது, தங்களிடம் என்ன ஞானம் இருந்ததோ அதிலேயே அவர்கள் மகிழ்ந்துபோயிருந்தார்கள். பின்னர், அவர்கள் எதைப் பரிகாசம் செய்துகொண்டிருந்தார்களோ அதன் சுழற்சியிலேயே அவர்கள் அகப்பட்டுக் கொண்டார்கள். </span>
<span>40:84 அவர்கள் நம்முடைய தண்டனையைக் கண்டபோது, “இணை துணையற்ற ஏகனாகிய அல்லாஹ்வை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்; அவனுக்கு இணையானவையாக நாங்கள் ஏற்படுத்தியிருந்த தெய்வங்கள் அனைத்தையும் நிராகரிக்கின்றோம்” என்று உரக்கக் கூறினர். </span>
<span>40:85 ஆனால், நம்முடைய தண்டனையைக் கண்ட பின்னால் அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குச் சிறிதும் பயனளிக்காது போயிற்று. ஏனெனில், இதுவே அல்லாஹ்வின் நியதி; இது அவனுடைய அடிமைகளுக்கிடையே என்றென்றும் நடைபெற்று வருகின்றது. மேலும், அந்நேரம் நிராகரிப்பாளர்கள் நஷ்டத்துக்கு ஆளாகி விட்டார்கள். </span>
</div><div>
<span>ஹாமீம் அஸ்ஸஜ்தா</span>
<span>41:1 ஹாமீம் </span>
<span>41:2 இது அளவிலாக் கருணையும், இணையிலாக் கிருபையும் உடைய இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்டதாகும். </span>
<span>41:3 இது எத்தகைய வேதமெனில், அதனுடைய வசனங்கள் நன்கு விவரிக்கப்பட்டிருக்கின்றன; அரபி மொழியிலுள்ள குர்ஆன் ஆகவும் இருக்கின்றது; அறிவுள்ள மக்களுக்கு </span>
<span>41:4 நற்செய்தி சொல்லக்கூடியதும், எச்சரிக்கை செய்யக்கூடியதுமாகும். ஆனால், இந்த மக்களில் பெரும்பாலோர் (இதனைப்) புறக்கணித்து விட்டனர். மேலும், அவர்கள் செவிமடுப்பதுமில்லை. </span>
<span>41:5. அவர்கள் கூறுகின்றார்கள்; “எதன் பக்கம் நீர் எங்களை அழைத்துக் கொண்டிருக்கின்றீரோ, (அதன் பக்கம் நோக்காதபடி) எங்கள் உள்ளங்கள் உறையிடப்பட்டிருக்கின்றன. எங்கள் காதுகள் செவிடாகிவிட்டிருக்கின்றன. மேலும், எங்களுக்கும் உமக்கும் இடையே ஒரு திரை விழுந்து விட்டிருக்கின்றது. நீர் உமது பணியைச் செய்யும்; நாங்கள் எங்கள் பணியைச் செய்கின்றோம்.”</span>
<span>41:6 (நபியே! இவர்களிடம்) கூறும்: நான் ஒரு மனிதன்தான், உங்களைப் போன்று! வஹியின்* மூலம் எனக்கு அறிவிக்கப்படுகின்றது, உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்; எனவே, நீங்கள் அவனுடைய திசையிலேயே நேராக நிலைகொள்ளுங்கள் அவனிடம் மன்னிப்புக் கோருங்கள். இணைவைப்பாளர்களுக்கு அழிவுதான்!  </span>
<span>41:7 அவர்களோ, ஜகாத் வழங்குவதில்லை; இன்னும் மறுமையை நிராகரிக்கின்றார்கள். </span>
<span>41:8 ஆனால், எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களுக்குத் திண்ணமாக என்றென்றும் முடிவுறாத கூலி இருக்கின்றது. </span>
<span>41:9 (நபியே! இவர்களிடம்) கேளும்: “நீங்கள் பூமியை இரண்டு நாட்களில் படைத்த இறைவனை நிராகரிக்கின்றீர்களா? மேலும், மற்றவர்களை அவனுக்கு இணையாக்குகின்றீர்களா?” அவன்தானே அகில உலகங்களுக்கும் இறைவன்! </span>
<span>41:10 அவன் (பூமியைப் படைத்த பிறகு) அதன் மேல் மலைகளை அமைத்தான். மேலும், அதில் பாக்கியங்களை அருளினான். கேட்பவர்கள் அனைவருக்காகவும் அவரவரின் விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்ப சரியான அளவில் அதனுள் உணவுப் பொருட்களை செய்து வைத்தான். இந்த அனைத்துப் பணிகளும் நான்கு நாட்களில் நிறைவேறின. </span>
<span>41:11 பிறகு, அவன் வானத்தின் பக்கம் கவனம் செலுத்தினான். அப்போது அது வெறும் புகையாய் இருந்தது. அவன் வானத்திடமும், பூமியிடமும் கூறினான்: “உருவாகி வாருங்கள்; நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்!” அவை இரண்டும், “நாங்கள் கீழ்ப்படிந்த வண்ணமே வந்துவிட்டோம்” எனக் கூறின. </span>
<span>41:12 எனவே, அவன் இரண்டு நாட்களுக்குள் ஏழு வானங்களையும் அமைத்தான். மேலும், ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய நியதியை அறிவித்தான். உலகத்தின் அருகில் உள்ள வானத்தை விளக்குகளால் நாம் அலங்கரித்தோம். அதனை நன்கு பாதுகாத்து வைத்தோம். இவையனைத்தும் பேரறிவாளனும், வல்லமை மிக்கவனுமான இறைவன் நிர்ணயித்த அமைப்பாகும். </span>
<span>41:13 இனி, இவர்கள் புறக்கணித்தால் (இவர்களிடம்) கூறிவிடும்: ‘திடீரெனத் தாக்கும் வேதனை குறித்து உங்களை நான் எச்சரிக்கின்றேன்; ஆத் சமுதாயத்தினர் மீதும், ஸமூத் சமுதாயத்தினர் மீதும் இறங்கிய வேதனை போன்று! </span>
<span>41:14 இறைவனின் தூதர்கள் அவர்களுக்கு முன்னும் பின்னுமாய் ஒவ்வொரு திசையிலிருந்தும் அவர்களிடம் வந்தார்கள். ‘அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அடிபணியாதீர்கள்’ என அவர்களுக்கு விளக்கினார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவன் நாடியிருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பானே! எனவே நீங்கள் கொண்டு வந்திருக்கும் தூதுச் செய்தியை நாங்கள் ஏற்பது இல்லை.”</span>
<span>41:15 ஆத் சமூகத்தாரின் நிலைமை இதுவே: அவர்கள் பூமியில் எவ்வித நியாயமுமின்றி பெருமையடித்துக் கொண்டு திரிந்தார்கள். “எங்களைவிட வலிமை மிக்கவர் யார்?” அவர்களைப் படைத்த இறைவன் அவர்களைவிட வலிமை மிக்கவன் என்பது அவர்களுக்குப் புலப்படவில்லையா? அவர்கள் நம் சான்றுகளை மறுத்துக் கொண்டிருந்தார்கள். </span>
<span>41:16 இறுதியில், அபசகுனமுடைய சில நாட்களில் கடும் புயற்காற்றை அவர்கள் மீது நாம் அனுப்பினோம். உலக வாழ்விலேயே இழிவான வேதனையை அவர்கள் சுவைக்கச் செய்திட வேண்டும் என்பதற்காக! மேலும், மறுமையின் வேதனை இதைவிடவும் இழிவு தரக்கூடியதாகும். அங்கு அவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர் எவரும் இருக்கமாட்டார். </span>
<span>41:17 ஸமூத் சமூகத்தாரின் நிலைமை இதுவே: நாம் அவர்களுக்கு எது நேர்வழி என்பதை எடுத்துக் காட்டினோம். ஆனால், அவர்கள் நேர்வழியைப் பார்ப்பதற்குப் பதிலாக குருடர்களாய் இருக்க விரும்பினார்கள்! இறுதியில், அவர்கள் செய்த தீவினைகளின் காரணமாக இழிவான வேதனை அவர்களைத் திடீரெனத் தாக்கியது. </span>
<span>41:18 இறைநம்பிக்கை கொண்டு வழிகேட்டிலிருந்தும், தீய செயலில் இருந்தும் விலகியிருந்தவர்களை நாம் காப்பாற்றிக் கொண்டோம். </span>
<span>41:19 அந்த நேரத்தை சற்று நினைவுகூருங்கள்: அப்போது அல்லாஹ்வின் இந்தப் பகைவர்கள் நரகின் பக்கம் கொண்டு செல்வதற்காக ஒன்று திரட்டப்படுவார்கள். அவர்களில் முன்னோர்கள், பின்னோர்கள் வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவார்கள். </span>
<span>41:20 இறுதியில், அனைவரும் அங்கு சென்றடையும்போது அவர்களின் காதுகளும், அவர்களின் கண்களும், அவர்களுடைய உடம்பின் தோல்களும் உலகில் அவை என்னென்ன செயல்களைச் செய்து கொண்டிருந்தன என்று அவர்களுக்கு எதிராக சாட்சி கூறும். </span>
<span>41:21 அவர்கள் தங்கள் தோல்களைப் பார்த்துக் கேட்பார்கள்: “எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி சொன்னீர்கள்?” அதற்கு அவை பதிலளிக்கும்: “ஒவ்வொன்றையும் பேச வைத்த இறைவனாகிய அல்லாஹ்தான் எங்களையும் பேச வைத்தான். அவனே உங்களை முதன் முறையாகப் படைத்தான். மேலும், இப்போது அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுகின்றீர்கள். </span>
<span>41:22 உலகில் நீங்கள் குற்றங்களை இரகசியமாக செய்து கொண்டிருந்தபோது உங்களுடைய காதுகளும், உங்களுடைய கண்களும், உங்களுடைய தோல்களும் உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லும் எனும் எண்ணமே உங்களுக்கு இருந்ததில்லை. மாறாக, நீங்கள் செய்கின்ற செயல்களில் பெரும்பாலானவற்றை அல்லாஹ்கூட அறிய மாட்டான் என்று நீங்கள் எண்ணியிருந்தீர்கள். </span>
<span>41:23 உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் கொண்டிருந்த உங்களுடைய இந்த எண்ணமே உங்களை அழிவில் ஆழ்த்தி விட்டது. அதே காரணத்தால் நீங்கள் இழப்புக்குரியவர்களாய் ஆகிவிட்டீர்கள்.” </span>
<span>41:24 இந்நிலையில் அவர்கள் பொறுமையுடனிருந்தாலும் (இல்லாவிட்டாலும்) நரகமே அவர்களின் இருப்பிடமாகும். மேலும், அவர்கள் திரும்பிச் செல்வதற்கு ஒரு வாய்ப்பை விரும்பினாலும் எந்த வாய்ப்பும் அவர்களுக்குக் கொடுக்கப்படமாட்டாது. </span>
<span>41:25 அவர்கள் மீது சில நண்பர்களை நாம் சாட்டியிருந்தோம். அவர்களோ அவர்களுக்கு முன்னாலும் பின்னாலுமுள்ள ஒவ்வொன்றையும் அழகுபடுத்திக் காட்டிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் அவர்களுக்கு முன்பு வாழ்ந்த ஜின் இனத்தின் மீதும் மனித இனத்தின் மீதும் விதிக்கப்பட்ட வேதனையின் தீர்ப்பு அவர்கள் மீதும் விதிக்கப்பட்டு விட்டது. திண்ணமாக, அவர்கள் இழப்புக்குரியவர்களாகி விட்டனர். </span>
<span>41:26 சத்தியத்தை நிராகரிக்கும் இவர்கள் கூறுகிறார்கள்: “இந்தக் குர்ஆனை அறவே செவியேற்காதீர்கள். இது ஓதப்பட்டால், அதற்கு இடையூறு செய்யுங்கள்; இதன் மூலம் நீங்கள் வென்றுவிடலாம்.” </span>
<span>41:27 நாம் இந்த நிராகரிப்பாளர்களுக்குக் கடும் வேதனையைச் சுவைக்கச் செய்தே தீருவோம். அவர்கள் செய்து கொண்டிருந்த மிக மோசமான செயல்களுக்குரிய முழுக்கூலியையும் அவர்களுக்கு நாம் கொடுப்போம். </span>
<span>41:28 அது நரகமாகும். அல்லாஹ்வின் பகைவர்களுக்கு அது கூலியாகக் கிடைக்கும். அதிலேயே அவர்களுக்கு நிரந்தரமான இருப்பிடம் இருக்கும். நம் சான்றுகளை நிராகரித்து வந்த குற்றத்திற்கான தண்டனை இதுதான். </span>
<span>41:29 அங்கு இந்நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! எங்களை வழிகெடுத்த ஜின்களையும், மனிதர்களையும் சற்று எங்களுக்குக் காண்பிப்பாயாக! அவர்களை எங்கள் கால்களுக்குக் கீழே போட்டு மிதித்து விடுகின்றோம், பெரும் கேவலத்தில் அவர்களை ஆழ்த்துவதற்காக!”</span>
<span>41:30 எவர்கள் “அல்லாஹ் எங்கள் இறைவன்” என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலைத்து நின்றார்களோ திண்ணமாக, அவர்கள் மீது வானவர்கள் இறங்குகின்றார்கள். மேலும், அவர்களிடம் கூறுகின்றார்கள்: “அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள்! </span>
<span>41:31 நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்போம்; இந்த உலக வாழ்விலும் மறுமையிலும்! அங்கு நீங்கள் விரும்புகின்றவை அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கேட்கக்கூடிய ஒவ்வொன்றும் உங்களுடையதாகிவிடும். </span>
<span>41:32 பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் உள்ள இறைவனிடமிருந்து கிடைக்கும் விருந்தாகும் இது!”</span>
<span>41:33 எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைத்தாரோ, நற்செயல் புரிந்தாரோ, மேலும், நான் முஸ்லிம் (இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவன்) என்று கூறினாரோ, அவரைவிட அழகிய வார்த்தை கூறுபவர் யார் இருக்கிறார்?</span>
<span>41:34 (நபியே!) நன்மையும் தீமையும் சமமாகமாட்டா. மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு நீர் தீமையைத் தடுப்பீராக! அப்போது உம்முடன் கடும் பகைமை கொண்டிருந்தவர்கூட உற்ற நண்பராய் ஆகிவிடுவதைக் காண்பீர். </span>
<span>41:35 பொறுமை கொள்வோரைத் தவிர வேறெவர்க்கும் இந்தக் குணம் வாய்க்கப் பெறுவதில்லை. பெரும் பேறு பெற்றவர்களைத் தவிர வேறெவர்க்கும் இந்த உயர் தகுதி கிட்டுவதில்லை. </span>
<span>41:36 மேலும், ஷைத்தானின் தரப்பிலிருந்து ஏதேனும் தூண்டுதலை நீர் உணர்ந்தால் அல்லாஹ்விடம் பாதுகாவல் கோரும். திண்ணமாக, அவன் அனைத்தையும் கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>41:37 இந்த இரவும் பகலும், சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளுள் உள்ளவையாகும். நீங்கள் சூரியனுக்கும், சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள். மாறாக, அவற்றைப் படைத்த இறைவனுக்கே சிரம் பணியுங்கள், நீங்கள் உண்மையில் அவனையே வணங்குபவர்களாய் இருந்தால்! </span>
<span>41:38 ஆனால், இவர்கள் கர்வம் கொண்டு தம் போக்கிலேயே பிடிவாதமாய் இருந்தால் பரவாயில்லை; உம் இறைவனிடம் நெருக்கமாய் உள்ள வானவர்கள் அல்லும் பகலும் அவனைத் துதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் களைப்படைவதில்லை. </span>
<span>41:39 பூமி வறண்டு கிடப்பதையும் நீர் காண்கிறீர். அதில் நாம் மழையைப் பொழிந்தவுடன் அது சட்டென்று உயிர்பெறு வதையும் தழைத்தோங்குவதையும் நீர் காண்கின்றீர். இது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒன்றாகும். திண்ணமாக, இறந்துவிட்ட இப்பூமிக்கு எந்த இறைவன் உயிரூட்டினானோ அந்த இறைவன், இறந்தவர்களுக்கும் உயிரூட்டக் கூடியவன் ஆவான். திண்ணமாக, அவன் ஒவ்வொன்றின் மீதும் ஆற்றல் கொண்டவன் ஆவான். </span>
<span>41:40 எவர்கள் நம் வசனங்களுக்கு மாறுபட்ட பொருள் கற்பிக்கின்றார்களோ அவர்கள் நம்மைவிட்டு மறைந்திருப்பவர் அல்லர். நீங்களே சிந்தியுங்கள். நரகத்தில் எறியப்படுபவன் சிறந்தவனா? அல்லது மறுமைநாளில் நிம்மதியாக வருகைதருபவன் சிறந்தவனா? செய்து கொண்டிருங்கள் நீங்கள் விரும்பியவற்றை! உங்கள் செயல்கள் அனைத்தையும் திண்ணமாக, அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான். </span>
<span>41:41 இவர்கள் தங்களிடம் அறவுரை வந்தபோது அதனை நிராகரித்துவிட்டவர்கள்! ஆனால், உண்மையில் இது ஓர் ஆற்றல் மிக்க வேதமாகும். </span>
<span>41:42 அசத்தியம் இதன் முன்னாலிருந்தும் வர முடியாது; பின்னாலிருந்தும் வர முடியாது. நுண்ணறிவாளனும், மிகுந்த புகழுக்குரியவனுமான இறைவனால் இறக்கியருளப்பட்டதாகும் இது!</span>
<span>41:43 (நபியே!) உமக்கு முன் சென்ற தூதர்களுக்குக் கூறப்படாத எந்த ஒன்றும் இதில் இல்லை. ஐயமின்றி உம்முடைய இறைவன் பெரிதும் பிழை பொறுப்பவன் ஆவான். (அத்துடன்) துன்புறுத்தும் தண்டனை அளிக்கக்கூடியவனுமாவான். </span>
<span>41:44 நாம் இதனை அரபி மொழியல்லாத குர்ஆனாக ஆக்கி அனுப்பியிருந்தால் இவர்கள் கூறியிருப்பார்கள்: “இதன் வசனங்கள் ஏன் தெளிவாக விவரிக்கப்படவில்லை? வசனங்களோ அரபியல்லாத மொழியில்! அவை எடுத்துரைக்கப்படுவதோ அரபிகளிடம்! என்ன விந்தை இது!” இவர்களிடம் கூறும்: “இந்த குர்ஆன் இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு வழிகாட்டியும் அருமருந்தும் ஆகும். ஆனால், எவர்கள் இறைநம்பிக்கை கொள்ளவில்லையோ, இது அவர்களின் காதுகளுக்கு அடைப்பும் கண்களுக்குத் திரையுமாகும். ஆகையால் அவர்களின் நிலைமை தொலைவிலிருந்து அழைக்கப்படுபவர்கள் போன்று இருக்கின்றது. </span>
<span>41:45 இதற்கு முன்னால் நாம் மூஸாவுக்கு வேதத்தை வழங்கியிருந்தோம். அதுபற்றியும் இதே கருத்துவேறுபாடு தான் ஏற்பட்டிருந்தது. உம் இறைவன் முன்பே ஒரு விஷயத்தை முடிவு செய்திராவிட்டால், கருத்து வேறுபாடு கொண்ட அம்மக்களிடையே தீர்ப்பு எப்பொழுதோ வழங்கப்பட்டிருக்கும். நிச்சயமாக இம்மக்கள் அதுபற்றி கடும் மனக் குழப்பத்தைத்தரும் சந்தேகத்தில் உழன்று கொண்டிருக்கின்றார்கள். </span>
<span>41:46 யாரேனும் நற்செயல் புரிந்தால் அவர் தனக்கே நன்மை செய்து கொள்கின்றார். மேலும், யாரேனும் தீமை செய்தால் அதன் தீய விளைவு அவரையே சாரும். உம் இறைவன் தன் அடிமைகளுக்கு கொடுமை இழைப்பவன் அல்லன். </span>
<span>41:47 அந்த நேரத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்வுக்கே சொந்த மானது. மொட்டுக்களிலிருந்து வெளிவருகின்ற கனிகள் பற்றியெல்லாம் அவன்தான் அறிகின்றான். எந்தப் பெண் கருவுற்றிருக்கிறாள், எவள் குழந்தை பெறுகின்றாள் என்பதையும் அவன் அறிகின்றான். இறைவன் இம்மக்களை அழைத்து, “எனக்கு இணையாக ஏற்படுத்தப்பட்டவை (கடவுளர்) எங்கே?” என்று கேட்கும் நாளில் இவர்கள் கூறுவார்கள்: “எங்களில் (இதற்கு) சாட்சியம் அளிப்பவர் எவரும் இலர் என்று நாங்கள் உனக்கு அறிவித்து விட்டோம்.” </span>
<span>41:48 அப்பொழுது இதற்கு முன்பு இவர்கள் அழைத்துக் கொண்டிருந்த கடவுளர் அனைவரும் இவர்களை விட்டுக் காணாமல் போய்விடுவார்கள். மேலும் அப்பொழுது தங்களுக்கு இப்போது எந்தப் புகலிடமும் இல்லை என்பதை இந்த மக்கள் உணர்ந்து கொள்வார்கள். </span>
<span>41:49 நன்மையை வேண்டுவதில் மனிதன் எப்போதும் சோர்வுறுவதில்லை. ஏதேனும் துன்பம் அவனைத் தொட்டு விட்டால், நம்பிக்கை இழந்தவனாகவும் மனம் நொந்தவனாகவும் ஆகிவிடுகின்றான். </span>
<span>41:50 ஆனால், அவனைப் பீடித்திருந்த துன்பம் அவனைவிட்டு நீங்கிய பிறகு நாம் நம்முடைய அருளை அவனுக்குச் சுவைக்கக் கொடுத்தால் அப்போது அவன் கூறுகின்றான்: “நான் இதற்கு அருகதையுள்ளவன் ஆவேன். மேலும், மறுமைநாள் எப்பொழுதேனும் வரும் என்று நான் நினைக்கவில்லை. இனி, உண்மையில் என் அதிபதியிடம் நான் திரும்பக் கொண்டு செல்லப்பட்டாலோ அங்கேயும் எனக்கு இன்பம்தான் கிடைக்கும்!” எனினும் நிராகரிப்போருக்கு அவர்கள் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறார்கள் என்பதை அவசியம் நாம் காண்பித்துத் தருவோம். மேலும், அவர்களை மிகவும் அருவருக்கத்தக்க வேதனையைச் சுவைக்கச் செய்வோம். </span>
<span>41:51 மனிதனுக்கு நாம் அருட்பேறுகளை வழங்கும்போது அவன் புறக்கணிக்கின்றான். கர்வத்துடன் நடந்து கொள்கின்றான். ஆனால், அவனை ஏதேனும் ஆபத்து தீண்டிவிடும்போது நீண்ட நெடிய இறைஞ்சுதல்களைப் புரியத் தொடங்குகின்றான். </span>
<span>41:52 (நபியே! இவர்களிடம்) கூறும்: “நீங்கள் ஒருபோதும் சிந்திப்பதில்லையா? இந்தக் குர்ஆன் உண்மையில் இறைவனிடமிருந்து வந்திருந்தும், இன்னும் இதனை நீங்கள் ஏற்க மறுக்கின்றீர்களெனில், இதனை எதிர்ப்பதில் வெகுதூரம் சென்றுவிட்டவனைவிட அதிகம் வழிதவறிய மனிதன் வேறு யார் இருக்க முடியும்?”</span>
<span>41:53 அதிவிரைவில் நாம் இவர்களுக்கு நம்முடைய சான்றுகளை அனைத்துத் திசைகளிலும் அவர்களுக்குள்ளேயும் காண்பித்துக் கொடுப்போம் இந்தக் குர்ஆன் சத்தியமானது எனும் உண்மை இவர்களுக்குத் தெளிவாகிவிடும் வரையில்! உம் இறைவன் ஒவ்வொன்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான் என்பது போதுமானதா, இல்லையா? </span>
<span>41:54 பாருங்கள்! இந்த மக்கள் தங்கள் இறைவனை சந்திக்கும் விஷயத்தில் ஐயம் கொண்டிருக்கின்றார்கள். கேட்டுக் கொள்ளுங்கள். திண்ணமாக, அவன் ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்தவனாக இருக்கின்றான். </span>
</div><div>
<span>அஷ்ஷýரா</span>
<span>42:1 ஹா, மீம், </span>
<span>42:2 ஐன், ஸீன், காஃப், </span>
<span>42:3 வல்லமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமான அல்லாஹ், உமக்கும் உமக்கு முன் வாழ்ந்து சென்ற (இறைத் தூது)வர்களுக்கும் இவ்வாறே வஹி* அறிவித்துக் கொண்டிருக்கின்றான். </span>
<span>42:4 வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்கே உரியவை. அவன் உயர்வுடையோனும் மகத்துவமிக்கவனுமாவான். </span>
<span>42:5 மேலே இருந்து வானங்கள் வெடித்து விடலாம். ஆனால் வானவர்கள் தம் இறைவனைப் புகழ்ந்து துதித்துக் கொண்டிருப்பதுடன் பூமியில் வாழ்வோரின் பாவமன்னிப்புக்காக வேண்டிக் கொண்டுமிருக்கிறார்கள். அறிந்து கொள்ளுங்கள்! உண்மையில், அல்லாஹ்வே பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான். </span>
<span>42:6 எவர்கள் அவனை விடுத்து தமக்கு வேறு சில பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளனரோ அவர்களை அல்லாஹ்வே கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். நீர் அவர்களுக்குப் பொறுப்பாளர் அல்லர். </span>
<span>42:7 (ஆம், நபியே! இவ்வாறே நாம்) அரபிமொழியிலுள்ள இந்த குர்ஆனை உமக்கு வஹி அறிவித்துள்ளோம். (மக்காவாகிய) நகரங்களின் தாயையும் அதனைச் சூழ இருப்பவர்களையும் நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும்; மேலும், ஒன்று திரட்டப்படும் நாளினைப் பற்றி நீர் அச்சுறுத்தவும் வேண்டும் என்பதற்காக! அந்நாள் வருவதில் எவ்வித ஐயமுமில்லை. ஒரு சாரார் சுவர்க்கத்திற்குச் செல்ல இருக்கின்றார்கள்; இன்னொரு சாரார் நரகத்திற்கு!</span>
<span>42:8 அல்லாஹ் நாடியிருந்தால், அவர்கள் அனைவரையும் ஒரே சமுதாயமாக அமைத்திருப்பான். எனினும், அவன் நாடுகின்றவர்களைத் தன் கருணையில் நுழையச் செய்கிறான். மேலும், கொடுமைக்காரர்களுக்கு எந்தப் பாதுகாவலரும் உதவியாளரும் இலர். </span>
<span>42:9 என்ன, இவர்கள் அவனை விடுத்து பிறரைத் தம் பாது காவலர்களாய் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு அறிவீனர்களாய் இருக்கின்றார்களே! அல்லாஹ்வே பாதுகாவலனாவான். அவனே இறந்தவர்களை உயிர்ப்பிக்கின்றான். மேலும், அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் கொண்டவன் ஆவான். </span>
<span>42:10 உங்களுக்கிடையே எந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அதில் தீர்ப்பு வழங்குவது அல்லாஹ்வின் பணியாகும். அந்த அல்லாஹ்தான் என் அதிபதி. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கின்றேன்; மேலும், அவன் பக்கமே நான் திரும்புகின்றேன். </span>
<span>42:11 அவன் வானங்களையும் பூமியையும் படைத்தவன்; அவன்தான் உங்கள் இனத்திலிருந்தே உங்களுக்குத் துணைகளைப் படைத்தான். மேலும், இதேபோல் கால்நடைகளிலும் (அவற்றின் இனங்களிலிருந்தே) இணைகளைப் படைத்தான். மேலும், இவ்விதமாக அவன் உங்கள் சந்ததிகளைப் பெருகச் செய்கிறான். (உலகத்தின்) எந்தப் பொருளும் அவனுக்கு ஒப்பானதாய் இல்லை; அவன் அனைத்தையும் செவியுறுபவனும் பார்ப்பவனும் ஆவான். </span>
<span>42:12 வானங்களிலும் பூமியிலும் உள்ள கருவூலங்களின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. தான் நாடுகின்றவர்களுக்குத் தாராளமாக வாழ்வாதாரம் வழங்குகின்றான். நாடுகின்றவர்களுக்குக் குறைத்துக் கொடுக்கின்றான். திண்ணமாக, அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவன் ஆவான். </span> 
<span>42:13 எந்த தீனை வாழ்க்கைநெறியை நூஹுக்கு அவன் வகுத்தளித்திருந்தானோ, மேலும், (முஹம்மதே!) எந்த வாழ்க்கை முறையை உமக்கு நாம் வஹியின் மூலம் அறிவித்திருக்கின்றோமோ, மேலும் எந்த வழிகாட்டலை இப்ராஹீம், மூஸா, ஈஸா ஆகியோருக்கு நாம் வழங்கியிருக்கின்றோமோ அதே தீனை வாழ்க்கை முறையைத்தான் உங்களுக்காக அவன் நிர்ணயித்துள்ளான்; இந்த தீனை நிலைநாட்டுங்கள்; இதில் பிரிந்து போய்விடாதீர்கள்(எனும் அறிவுறுத்தலுடன்)! இந்த இணைவைப்பாளர்களை நீர் எந்த விஷயத்தின் பக்கம் அழைக்கின்றீரோ அது அவர்களுக்கு மிகவும் வெறுப்புக்குரியதாய் இருக்கின்றது. தான் நாடுகின்றவர்களை அல்லாஹ் தனக்குரியவர்களாய்த் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். மேலும், எவர்கள் அவன் பக்கம் திரும்புகின்றார்களோ அவர்களுக்குத் தன்னிடம் வருவதற்கான வழியை அவன் காண்பிக்கின்றான். </span>
<span>42:14 மக்கள் தங்களுக்கு ஞானம் வந்த பின்னர்தான் பிளவுபட்டுப் போனார்கள்; அதுவும் ஒருவருக்கொருவர் அநீதி இழைக்க நாடிய காரணத்தால்தான்! ஒரு குறிப்பிட்ட காலம் வரை தீர்ப்பு தள்ளிப் போடப்படும் என்று உம் இறைவன் முன்னரே கூறியிருக்காவிட்டால், அவர்களுடைய விவகாரம் தீர்க்கப்பட்டிருக்கும்! மேலும், உண்மை என்னவெனில், அந்த முன்னோர்களுக்குப் பிறகு யார் வேதத்துக்கு வாரிசாக்கப்பட்டார்களோ அவர்களும் அதனைக் குறித்து கடும் மனக்குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய சந்தேகத்தில் உழன்று கொண்டிருக்கின்றார்கள். </span>
<span>42:15 (இத்தகைய நிலை உருவாகிவிட்டிருக்கிறது.) எனவே (முஹம்மதே!) இப்போது நீர் அதே தீனின் பக்கம் அழையும்; உமக்கு ஏவப்பட்டபடி அதில் உறுதியுடன் இரும்! மேலும், இம் மக்களின் ஆசாபாசங்களுக்கு இணங்கிவிடாதீர். மேலும் (இவர்களிடம்) கூறிவிடும்: “அல்லாஹ் எந்த வேதத்தை இறக்கியிருக்கின்றானோ அதன்மீது நான் நம்பிக்கை கொண்டேன்; நான் உங்களிடையே நீதி செலுத்த வேண்டும் என கட்டளையிடப்பட்டிருக்கின்றேன். அல்லாஹ்தான் எங்களுக்கும் அதிபதி; உங்களுக்கும் அதிபதி; எங்கள் செயல்கள் எங்களுக்கு உங்கள் செயல்கள் உங்களுக்கு! எங்களுக்கும் உங்களுக்கும் இடையே எந்த தர்க்கமும் இல்லை. அல்லாஹ் ஒருநாள் நம் அனைவரையும் ஒன்று திரட்டுவான். மேலும், அவனிடமே (நாம் அனைவரும்) செல்ல வேண்டியுள்ளது.”</span>
<span>42:16 அல்லாஹ்வின் அழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு (அப்படி ஏற்றுக்கொண்ட மக்களிடம்) எவர்கள், அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்கின்றார்களோ அவர்களின் தர்க்கம் அவர்களின் இறைவனிடத்தில் முற்றிலும் ஆதாரமற்றதாகும். மேலும், அவர்களின் மீது அவனுடைய கோபம் உண்டாகிறது. அவர்களுக்குக் கடும் வேதனையும் இருக்கிறது. </span>
<span>42:17 அல்லாஹ்தான் இந்த வேதத்தையும் மீஸானையும் (தராசையும்) சத்தியத்துடன் இறக்கியருளினான். உமக்குத் தெரியுமா என்ன? ஒருக்கால் தீர்ப்புக்குரிய நேரம் அருகிலேயே வந்துவிட்டிருக்கலாம். </span>
<span>42:18 எவர்கள் அ(து வருவ)தை நம்பவில்லையோ அவர்கள் அதற்காக அவசரப்படுகின்றார்கள். ஆனால், அதன் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அதனைக் குறித்து அஞ்சுகின்றார்கள். மேலும், திண்ணமாக அது வரக்கூடியதே என்று அறிகின்றார்கள். நன்றாக செவிதாழ்த்திக் கேளுங்கள்! எவர்கள் அந்த நேரத்தின் வருகை குறித்து (ஐயத்தை ஏற்படுத்தக்கூடிய) விவாதங்கள் புரிகின்றார்களோ அவர்கள் வழிகேட்டில் வெகுதூரம் சென்றுவிட்டிருக்கின்றார்கள். </span>
<span>42:19 அல்லாஹ் தன் அடிமைகள் மீது மிகவும் கிருபையுள்ளவன் ஆவான். யாருக்கு எதைக் கொடுக்க வேண்டுமென்று நாடுகின்றானோ அதைக் கொடுக்கின்றான். அவன் பெரும் வல்லமை மிக்கவனும் யாவற்றையும் மிகைத்தவனும் ஆவான். </span>
<span>42:20 எவன் மறுமையின் விளைச்சலை விரும்புகின்றானோ அவனுக்கு அந்த விளைச்சலை நாம் அதிகரிக்கச் செய்கின்றோம். எவன் இம்மையின் விளைச்சலை விரும்புகின்றானோ அவனுக்கு அதனை இம்மையிலேயே அளிக்கின்றோம். ஆனால், மறுமையில் அவனுக்கு எந்தப் பங்கும் இல்லை. </span>
<span>42:21 அல்லாஹ் அனுமதி அளிக்காத தீனின் தன்மை கொண்ட ஒரு வழிமுறையை வகுத்துக் கொடுக்கின்ற இணைக்கடவுள்கள் இவர்களுக்கு இருக்கின்றனவா! தீர்ப்பு பற்றிய வாக்கு முடிவு செய்யப்படாமல் இருந்திருந்தால் இவர்களின் விவகாரம் எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும். திண்ணமாக, இந்தக் கொடுமைக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கின்றது. </span>
<span>42:22 அந்நேரத்தில் கொடுமைக்காரர்கள் தாங்கள் சம்பாதித்தவற்றின் தீய விளைவு குறித்து அஞ்சிக் கொண்டிருப் பதை நீர் காண்பீர். ஆயினும், அது அவர்கள் மீது வந்தே தீரும். ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்கள் சுவனத்தோட்டங்களில் இருப்பார்கள். அவர்கள் விரும்புகின்றவை அனைத்தையும் தம் இறைவனிடம் பெற்றுக் கொள்வார்கள். இதுவே மிகப்பெரும் அருளாகும். </span>
<span>42:23 இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்த தன் அடியார்களுக்கு இதைப் பற்றிதான் அல்லாஹ் நற்செய்தி சொல்கிறான். (நபியே! இவர்களிடம்) கூறிவிடும்: ‘நான் இந்தப் பணிக்காக உங்களிடமிருந்து எந்தக் கூலியையும் கேட்கவில்லை. ஆயினும், உறவினர்கள் மீது அன்பு காட்டுவதைக் கண்டிப்பாக நான் விரும்புகின்றேன். ஒருவர் ஏதேனும் நன்மை செய்வாராகில் நாம் அவருக்காக அந்நன்மையுடன் இன்னும் பல நன்மைகளை அதிகமாக்கிக் கொடுப்போம். திண்ணமாக, அல்லாஹ் மிகவும் பிழை பொறுப்பவனாகவும் மதிப்பவனாகவும் இருக்கின்றான்.’</span>
<span>42:24 அல்லது “இந்த மனிதர் அல்லாஹ்வின் மீது பொய் புனைந்துரைக்கிறார்” என்று இவர்கள் கூறுகின்றார்களா? அல்லாஹ் நாடினால், உம்முடைய இதயத்தின் மீது முத்திரையிட்டிருப்பான். அவன் பொய்மையை அழித்துத் தன் வார்த்தைகளால் மெய்மையை நிலைநாட்டுபவனாயிருக்கிறான். திண்ணமாக, உள்ளங்களில் மறைந்திருக்கும் இரகசியத்தை அவன் நன்கு அறிகின்றான். </span>
<span>42:25 மேலும், அவனே தன் அடிமைகளின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்கின்றான். மேலும், அவர்களின் குற்றங்களைப் பொறுத்தருளுகின்றான். இன்னும் உங்கள் செயல்கள் அனைத்தையும் அவன் நன்கு அறிகின்றான். </span>
<span>42:26 இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிவோரின் இறைஞ்சுதலை அவன் ஏற்றுக் கொள்கின்றான். தனது அருளிலிருந்து அவர்களுக்கு இன்னும் அதிகம் வழங்குகின்றான். நிராகரிப்பவர்களுக்கோ கடும் தண்டனை அவர்களுக்கு இருக்கின்றது. </span>
<span>42:27 அல்லாஹ் தன் அடிமைகள் அனைவருக்கும் தாராளமாக வாழ்வாதாரத்தை வழங்கியிருந்தால், அவர்கள் பூமியில் அராஜகப் புயலை பரவச் செய்திருப்பார்கள். ஆகவே அவன் ஒரு கணக்குப்படி, தான் விரும்புகிற அளவில் இறக்கி வைக்கின்றான். திண்ணமாக, அவன் தன் அடிமைகள் பற்றி நன்கு புரிந்தவனாகவும், அவர்களைக் கவனிப்பவனாகவும் இருக்கின்றான். </span>
<span>42:28 மக்கள் நிராசை அடைந்த பின்னர் மழையைப் பொழிவிப்பவனும் அவனே; மேலும், தன் கருணையைப் பரப்புகின்றான். அவனே மிகப் பெரும் புகழுக்குரிய பாதுகாவலன் ஆவான். </span>
<span>42:29 இந்த வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், இவற்றில் பரந்து காணப்படுகின்ற உயிரினங்களும் அவனுடைய அத்தாட்சிகளுள் உள்ளவையாகும். அவன் விரும்பும்போது அவற்றை ஒன்றுதிரட்டும் பேராற்றல் கொண்டவனாக இருக்கின்றான். </span>
<span>42:30 உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எந்த ஒரு துன்பமானாலும் அது உங்கள் கைகள் சம்பாதித்தவைதான். மேலும், அவன் பெரும்பாலான பிழைகளைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுகின்றான். </span>
<span>42:31 நீங்கள் பூமியில் (உங்கள் இறைவனைத்) தோல்வியுறச் செய்யக்கூடியவர்கள் அல்லர். மேலும், அல்லாஹ்விற்கு எதிரில் எந்த ஆதரவாளனும் உதவியாளனும் உங்களுக்கு இல்லை. </span>
<span>42:32 கடலில், மலைகளைப் போல் காட்சி தரும் இந்தக் கப்பல்களும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே! </span>
<span>42:33 அல்லாஹ் நாடினால் காற்றை அசைவற்றதாக்கி விடுவான்; பிறகு அவை கடலின் மேற்பரப்பில் அப்படியே நின்று போய்விடும். அதிக அளவு பொறுமையைக் கடைப்பிடிக்கக்கூடிய மேலும், நன்றி செலுத்தக் கூடிய ஒவ்வொருவருக்கும் இதில் நிறைய சான்றுகள் இருக்கின்றன. </span>
<span>42:34 அல்லது (அதில் பயணம் செய்வோரின்) எண்ணற்ற பாவங்களை மன்னித்து விடும் நிலையிலேயே அவர்களின் ஒரு சில தீவினைகள் காரணமாக அவர்களை மூழ்கச் செய்தும் விடுகின்றான். </span>
<span>42:35 அந்நேரத்தில் நம்முடைய அத்தாட்சிகள் குறித்து தர்க்கம் புரிவோருக்குத் தெரிந்துவிடும், தங்களுக்கு எந்தப் புகலிடமும் இல்லை என்று!</span>
<span>42:36 உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதெல்லாம் இந்த உலகின் சிலநாள் வாழ்க்கைக்குரிய சாதனங்கள்தாம். ஆனால், அல்லாஹ்விடம் இருப்பதோ சிறந்ததும் நிலையானதுமாகும். அது, நம்பிக்கை கொண்டவர்களாயும் தங்கள் இறைவனை முழுவதுஞ் சார்ந்தவர்களாயும் யார் இருக்கின்றார்களோ அவர்களுக்குரியதாகும். </span>
<span>42:37 மேலும், அவர்கள் பெரும் பாவங்களையும் மானக்கேடான செயல்களையும் தவிர்த்துக் கொள்கின்றார்கள். கோபம் வந்துவிட்டால் பொறுத்துக் கொள்கிறார்கள். </span>
<span>42:38 மேலும், அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளையை ஏற்றுக் கொள்கின்றார்கள். தொழுகையை நிலைநாட்டுகின்றார்கள். மேலும், அவர்கள் தங்களின் செயல்களை ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்து நடத்துகின்றார்கள். மேலும், நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவு செய்கிறார்கள். </span>
<span>42:39 மேலும், அவர்கள் தங்கள் மீது அநீதி இழைக்கப்படும்போது அதை எதிர்த்துப் போராடுகின்றார்கள் </span>
<span>42:40 தீமையின் கூலி அதே போன்ற ஒரு தீமையே ஆகும். இனி எவர் மன்னித்துவிடுகின்றாரோ மேலும், சீர்திருத்தம் செய்கின்றாரோ அவருடைய கூலி அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது. திண்ணமாக, அல்லாஹ் கொடுமைக்காரர்களை நேசிப்பதில்லை. </span>
<span>42:41 எவர்கள் தம் மீது கொடுமை இழைக்கப்பட்ட பின் பழி வாங்குகின்றார்களோ அவர்கள் மீது ஆட்சேபணை கூற முடியாது. </span>
<span>42:42 ஆட்சேபணைக்குரியவர்கள் யாரெனில், இதர மக்கள் மீது கொடுமை இழைப்பவர்களும் இன்னும் நியாயமின்றி பூமியில் அதீத செயல்கள் புரிபவர்களும்தாம். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது. </span>
<span>42:43 ஆயினும், யார் பொறுமையை மேற்கொள்ளவும் மன்னித்துவிடவும் செய்கின்றார்களோ அவர்களின் இந்தச் செயல் திண்ணமாக உறுதி மிக்க (வீரச்) செயலைச் சேர்ந்ததாகும். </span>
<span>42:44 எவரையாவது அல்லாஹ்வே வழிகேட்டில் ஆழ்த்திவிட்டால் அவரைப் பாதுகாப்பவன் அல்லாஹ்வுக்குப் பிறகு வேறுயாரும் இல்லை. நீர் காண்பீர்: இந்தக் கொடுமைக்காரர்கள் வேதனையைப் பார்க்கும் போது, “இனி திரும்பிச் செல்வதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா?” என்று கேட்பார்கள்.  </span>
<span>42:45 மேலும் நீர் காண்பீர்: நரகத்தின் முன் இவர்கள் கொண்டு வரப்படும்போது, அவமானத்தால் தலைகுனிந்து விடுவார்கள். (மேலும் அந்நரகத்தை) கடைக்கண்ணால் பார்ப்பார்கள். (அந்நேரத்தில்) எவர்கள் இறைநம்பிக்கை கொண்டிருந்தார்களோ அவர்கள் கூறுவார்கள்: “மறுமைநாளாகிய இன்று தம்மையும் தம்மைச் சார்ந்தவர்களையும் நஷ்டத்தில் ஆழ்த்திக் கொண்டவர்கள் யாரோ, அவர்கள்தாம் உண்மையில் இழப்புக்குரியவர்கள்!” எச்சரிக்கையாயிருங்கள்! கொடுமைக்காரர்கள் நிரந்தரமான தண்டனையில் வீழ்வார்கள். </span>
<span>42:46 மேலும், அல்லாஹ்விற்கு எதிராக அவர்களுக்கு உதவுகிற எந்த ஓர் ஆதரவாளரும் அவர்களுக்கு இருக்கமாட்டார்கள். எவரையாவது அல்லாஹ் வழிகேட்டில் ஆழ்த்திவிட்டால் பிறகு அவனைக் காப்பாற்றுவதற்கு எந்த வழியும் இல்லை. </span>
<span>42:47 அந்த ஒருநாள் வருவதற்கு முன்பு உங்கள் இறைவனின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். அந்நாளைத் தடுத்து நிறுத்துவதற்கான எந்த முகாந்திரமும் அல்லாஹ்வின் சார்பிலிருந்து இல்லை. அந்நாளில் உங்களுக்கு எந்தப் புகலிடமும் இருக்காது; உங்கள் நிலைமையை மாற்ற முயல்வோர் எவரும் உங்களுக்கு இருக்கமாட்டார். </span>
<span>42:48 இனியும் இந்த மக்கள் புறக்கணிக்கின்றார்களெனில், (நபியே!) இவர்களைப் பாதுகாப்பவராய் உம்மை நாம் அனுப்பி வைக்கவில்லை. தூதுச் செய்தியைச் சேர்ப்பிப்பது மட்டுமே உமது பொறுப்பு. மனிதனின் நிலை எவ்வாறு உள்ளதெனில் அவனுக்கு நாம் நம்முடைய அருட்பேற்றைச் சுவைக்கச் செய்தால் அதன் பேரில் அவன் பூரிப்படைகின்றான். மேலும், அவனுடைய கைகள் செய்த தீவினையின் காரணத்தினால், ஏதேனும் துன்பம் அவனைத் தொட்டுவிட்டால், அவன் மிகவும் நன்றி கெட்டவனாகி விடுகின்றான். </span>
<span>42:49 அல்லாஹ், பூமி மற்றும் வானங்களுடைய ஆட்சியின் உரிமையாளனாவான்; தான் நாடுகின்றவற்றைப் படைக்கின்றான்: தான் நாடுவோருக்குப் பெண்மக்களை வழங்குகின்றான்; தான் நாடுவோருக்கு ஆண்மக்களை வழங்குகின்றான். </span>
<span>42:50 தான் நாடுவோருக்கு ஆண்மக்களையும், பெண்மக்களையும் சேர்த்து வழங்குகின்றான். மேலும், தான் நாடுவோரை மலடுகளாகவும் ஆக்குகின்றான். திண்ணமாக, அவன் அனைத்தையும் அறிந்தவனும் யாவற்றின் மீதும் பேராற்றல் கொண்டவனும் ஆவான். </span>
<span>42:51 எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவது இல்லை. ஆயினும் வஹியின் (சைக்கினையின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை (வானவரை) அனுப்பிவைத்தோ அல்லாமல் (நேரடியாகப்) பேசுவதில்லை. அவர் அவனுடைய அனுமதி கொண்டு அவன் நாடுவதை அறிவித்துவிடுகிறார். திண்ணமாக, அவன் உயர்வுமிக்கவனும் நுண்ணறிவாளனுமாவான். </span>
<span>42:52 மேலும், இவ்வாறே (நபியே!) நம் கட்டளையின் வாயிலாக ஒரு ரூஹை* உமக்கு வஹி அறிவித்தோம். வேதம் என்பதென்ன, ஈமான் (இறைநம்பிக்கை) என்றால் என்ன என்பதெல்லாம் உமக்குத் தெரியாதிருந்தது. ஆனால் அந்த ரூஹை நாம் ஒளியாக ஆக்கினோம். நம் அடியார்களில் நாம் நாடுவோருக்கு அதன்மூலம் வழிகாட்டுகிறோம். திண்ணமாக, நீர் நேரியவழியைக் காட்டிக் கொண்டிருக்கின்றீர். </span>
<span>42:53 வானங்கள், பூமி ஆகியவற்றிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் உரிமையாளனாகிய அல்லாஹ்வின் வழியை தெரிந்து கொள்ளுங்கள்! எல்லா விவகாரங்களும் அல்லாஹ்விடமே திரும்புகின்றன. </span>
</div><div>
<span>அஸ்ஸுக்ருஃப்</span>
<span>43:1 ஹாமீம். </span>
<span>43:2 இந்தத் தெளிவான வேதத்தின் மீது சத்தியமாக! </span>
<span>43:3 நாம் இதனை அரபி மொழியிலுள்ள குர்ஆனாக அமைத்துள்ளோம். நீங்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக! </span>
<span>43:4 மேலும், உண்மையில் இது ‘உம்முல் கிதாபில்’* பதிவு செய்யப்பட்டுள்ளது. நம்மிடம் உயர் அந்தஸ்துடையதும் ஞானம் நிறைந்ததுமான வேதமாகும் அது!</span>
<span>43:5 நீங்கள் வரம்புமீறிச் சென்றுவிட்டிருக்கின்றீர்கள் என்பதற்காக நாம் உங்கள் மீது வெறுப்படைந்து இந்த அறிவுரையை உங்களிடம் அனுப்பாமல் நிறுத்திவிடுவோமா, என்ன?  </span>
<span>43:6 முன்பு வாழ்ந்து சென்ற சமூகங்களில் எத்தனையோ தூதர்களை நாம் அனுப்பியிருந்தோம்; </span>
<span>43:7 அவர்களிடம் வந்த எந்தத் தூதரையும் அவர்கள் பரிகாசம் செய்யாமல் இருந்ததில்லை! </span>
<span>43:8 ஆக, எந்த மக்கள் இவர்களைவிட பன்மடங்கு வலிமை மிக்கவர்களாய் இருந்தார்களோ அவர்களை நாம் அழித்துவிட்டோம். முன்பு வாழ்ந்த சமூகங்களின் முன்னுதாரணங்கள் சென்றுவிட்டிருக்கின்றன. </span>
<span>43:9 நீர் அவர்களிடம் “வானங்கள், பூமி ஆகியவற்றைப் படைத்தவன் யார்?” என்று கேட்பீராயின், “வல்லமையும் பேரறிவும் கொண்டவன்தான் அவற்றைப் படைத்தான்” என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள். </span>
<span>43:10 அவன்தான் உங்களுக்காக இந்த பூமியைத் தொட்டில் ஆக்கினான் அதிலே உங்களுக்காக பாதைகளை அமைத்தான்; நீங்கள் (நாடிய இடங்களுக்கான) வழியை அடைவதற்காக! </span>
<span>43:11 மேலும், வானத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நீரை இறக்கினான். அதன் மூலம் இறந்த பூமிக்கு உயிர் கொடுத்தெழுப்பினான். இவ்வாறே (ஒருநாள் பூமிக்குள்ளிருந்து) நீங்கள் வெளிக்கொணரப்படுவீர்கள். </span>
<span>43:12 அவனே அனைத்து ஜோடிகளையும் படைத்தான். மேலும், உங்களுக்காகக் கப்பல்களையும், கால்நடைகளையும் வாகனங்களாய் அமைத்தவனும் அவனே! </span>
<span>43:13 நீங்கள் அவற்றின் முதுகுகளின் மீது ஏறி அமர்வதற்காகவும், அவற்றின் மீது அமர்ந்த பிறகு உங்கள் இறைவனின் பேருதவியை நீங்கள் நினைவுகூர்ந்து இவ்வாறு பிரார்த்திப்பதற்காகவும்தான்: “தூய்மையானவன்; மேலும், இவற்றையெல்லாம் எங்களுக்கு வசப்படுத்தித் தந்தவன்! இவற்றை அவன் வசப்படுத்தித் தராவிட்டால் அவற்றை வசப்படுத்தும் ஆற்றல் எங்களிடம் இருக்கவில்லை. </span>
<span>43:14 மேலும், நாங்கள் எங்கள் இறைவனிடம் ஒருநாள் திரும்பிச் செல்லக்கூடியவர்களாவோம்.”</span>
<span>43:15 இவர்கள் (இவை அனைத்தையும் அறிந்து ஏற்றுக் கொண்ட பிறகும்) அவனுடைய அடியார்களில் சிலரை அவனுடைய ஓர் அம்சமாக ஆக்கிவிட்டார்கள். உண்மையாதெனில், மனிதன் வெளிப்படையாக நன்றி கொன்றவனாயிருக்கின்றான். </span>
<span>43:16 என்ன, இறைவன் தன்னுடைய படைப்புகளிலிருந்து தனக்காகப் பெண்மக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு உங்களுக்கு ஆண்மக்களை வழங்கியிருக்கின்றானா? </span>
<span>43:17 மேலும் (இவர்களுடைய நிலைமை என்னவெனில்) எந்தப் பிள்ளைகளைக் கருணைமிக்க அந்த இறைவனோடு இவர்கள் பாவித்துச் சொல்கின்றார்களோ அந்தப் பிள்ளைகள் இவர்களில் எவரேனும் ஒருவருக்குப் பிறந்திருப்பதாக நற்செய்தி சொல்லப்பட்டால், அவருடைய முகத்தில் இருள் சூழ்ந்து விடுகின்றது. </span>
<span>43:18 மேலும், அவர் பெரும் துக்கத்தில் ஆழ்ந்துவிடுகிறார். என்ன, ஆபரணங்களில் வளர்க்கப்படுகின்ற, விவாதத்தில் தன் கருத்தை முழுமையாகத் தெளிவுபடுத்த முடியாத பிள்ளைதான் அல்லாஹ்வின் பங்கில் வரவேண்டுமா?</span>
<span>43:19 இவர்கள் கருணைமிக்க இறைவனின் சிறப்புக்குரிய அடியார்களான வானவர்களைப் பெண்களெனத் தீர்மானித்துக் கொண்டனர். அவர்களுடைய உடலமைப்பை இவர்கள் பார்த்ததுண்டா? இவர்களின் சாட்சியம் எழுதி வைக்கப்படும். அதற்கு இவர்கள் பதிலளிக்க வேண்டியிருக்கும். </span>
<span>43:20 மேலும், இவர்கள் கூறுகின்றார்கள்: “(நாங்கள் அவர்களை வணங்கக்கூடாது என) கருணைமிக்க இறைவன் நாடியிருந்தால், ஒருபோதும் நாங்கள் அவர்களை வணங்கியிருக்கமாட்டோம்.” இந்த விவகாரத்தின் யதார்த்த நிலையை இவர்கள் உறுதியாக அறிந்திருக்கவில்லை. இவர்கள் வெறும் ஊகங்களிலேயே உழன்று கொண்டிருக்கிறார்கள்! </span>
<span>43:21 அல்லது இதற்கு முன்பு இவர்களுக்கு நாம் ஏதாவது வேதத்தை வழங்கியிருக்கின்றோமா? அந்த ஆதாரத்தை (தம்முடைய ‘வானவர் வழிபாட்டுக்கான’ அடிப்படையாக) இவர்கள் பெற்றிருக்கிறார்களா?</span>
<span>43:22 இல்லவே இல்லை! மாறாக, இவர்கள் கூறுகின்றார்கள்: “எங்கள் முன்னோர் ஒரு வழிமுறையில் செல்வதைக் கண்டோம்; அவர்களின் அடிச்சுவட்டில் நாங்கள் சென்று கொண்டிருக்கின்றோம்” </span>
<span>43:23 இவ்வாறு உமக்கு முன்பு எந்த ஊரில் எந்த எச்சரிப்பாளரை நாம் அனுப்பினாலும் அவ்வூரின் சுகபோகிகள் எங்கள் முன்னோர் ஒரு வழிமுறையில் செல்வதைக் கண்டோம்; அவர்களின் அடிச்சுவட்டில் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம் என்றுதான் கூறினார்கள். </span>
<span>43:24 ஒவ்வொரு தூதரும் அந்த மக்களிடம் இதைத்தான் கேட்டார்: “உங்கள் முன்னோர் எந்த வழியில் செல்வதைக் கண்டீர்களோ அதைவிடச் சரியான வழியை நான் காண்பித்தாலுமா நீங்கள் அந்த வழியில் சென்று கொண்டிருப்பீர்கள்?” அவர்கள் எல்லா இறைத்தூதர்களுக்கும் அளித்து வந்த பதில் இதுவே: “நீங்கள் எந்த தீனின் (மார்க்கத்தின்) பக்கம் அழைப்பதற்காக அனுப்பப்பட்டீர்களோ அந்த மார்க்கத்தை நாங்கள் நிராகரிக்கின்றோம்.” </span>
<span>43:25 இறுதியில், அவர்களிடம் நாம் பழிவாங்கினோம். பொய்யென வாதிட்டவர்களின் கதி என்னவாயிற்று என்பதைப் பார்த்துக்கொள்ளும்!</span>
<span>43:26 இப்ராஹீம் தம்முடைய தந்தையிடமும், தம்முடைய சமூகத்தாரிடமும் கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் எவற்றை வணங்குகின்றீர்களோ அவற்றுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. </span>
<span>43:27 என் தொடர்போ என்னைப் படைத்த வனுடன் மட்டும்தான் இருக்கின்றது. அவனே எனக்கு வழி காட்டுவான்.” </span>
<span>43:28 மேலும், இப்ராஹீம் தமக்குப் பின், தம் வழித்தோன்றல்களிடம் இதே வார்த்தைகளை விட்டுச் சென்றார்; அவர்கள் அவன் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக! (அத்துடன் இவர்கள் மற்றவர்களை வழிபடத் தொடங்கிய போதும் நான் இவர்களை அழித்துவிடவில்லை.) </span>
<span>43:29 ஆயினும், இவர்களுக்கும் இவர்களின் முன்னோருக்கும் நான் வாழ்க்கை வசதிகளை வழங்கிக் கொண்டிருந்தேன் எதுவரையெனில் இவர்களிடம் சத்தியமும், தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் ஒரு தூதரும் வரும் வரை! </span>
<span>43:30 ஆனால், அந்த சத்தியம் இவர்களிடம் வந்தபோது “இதுவோ சூனியம்; இதனை நாங்கள் ஏற்க மறுக்கின்றோம்” என்று இவர்கள் கூறிவிட்டனர். </span>
<span>43:31 மேலும், இவர்கள் கூறுகின்றனர்: “இந்தக் குர்ஆன் இவ்விரு ஊர்களிலுமுள்ள பெரிய மனிதர்களில் எவரேனும் ஒருவர் மீது ஏன் இறக்கியருளப்படவில்லை?” </span>
<span>43:32 என்ன, இவர்கள் உம் இறைவனிடம் அருட்கொடையைப் பங்கிடுகின்றார்களா? உலக வாழ்வில் இவர்களுக்குத் தேவையான வாழ்க்கை வசதிகளை நாம்தானே இவர்களிடையே பகிர்ந்தளிக்கின்றோம். மேலும், நாம் இவர்களில் சிலருக்கு வேறு சிலரைவிட உயர்பதவியை அளித்தோம்; இவர்களில் சிலர் வேறு சிலருடைய ஊழியத்தைப் பெற்றுக் கொள்வதற்காக! மேலும், உன் இறைவனின் அருட்கொடை (அதாவது தூதுத்துவம்) இவர்(களுடைய தலைவர்)கள் குவித்துக் கொண்டிருக்கும் செல்வத்தைவிட மதிப்பு வாய்ந்ததா கும். </span>
<span>43:33 மனிதர்கள் அனைவரும் (தீய) வழிமுறைகளை கடைப்பிடிக்கும் ஒரே சமுதாயத்தினராகி விடுவார்கள் எனும் நிலை இல்லாதிருந்தால் கருணைமிக்க இறைவனை நிராகரிப்பவர்களின் வீட்டு முகடுகளையும், அவர்கள் ஏறிச்செல்கின்ற படிக்கட்டுகளையும், </span>
<span>43:34 அவர்களுடைய வீட்டுக் கதவுகளையும், அவர்கள் சாய்ந்திருக்கின்ற மஞ்சங்களையும் அனைத்தையும் வெள்ளியாகவும் தங்கமாகவும் நாம் ஆக்கியிருப்போம். </span>
<span>43:35 இவை அனைத்தும் உலக வாழ்வுக்குரிய அற்ப சாதனங்களே அன்றி வேறில்லை. மறுமையோ உம் அதிபதியிடத்தில் இறையச்சமுடையவர்களுக்கே உரியதாகும்!</span>
<span>43:36 எந்த மனிதன், கருணைமிக்க இறைவனின் அறிவுரையை விட்டு விட்டு அலட்சியமாக இருக்கின்றானோ அவன் மீது ஒரு ஷைத்தானை நாம் ஏவிவிடுகின்றோம். அவன் இவனுக்கு நண்பனாகி விடுகின்றான். </span>
<span>43:37 அந்த ஷைத்தான்கள் இப்படிப்பட்டவர்களை நேர்வழியில் வரவிடாமல் தடுக்கின்றன. ஆனால் அவர்களோ தாம் சரியான வழியில் சென்றுகொண்டிருப்பதாக எண்ணிக் கொள்கின்றனர். </span>
<span>43:38 இறுதியில் இந்த மனிதன் நம்மிடம் வந்து சேரும்போது (தனது ஷைத்தானை நோக்கிச்) சொல்வான்: “அந்தோ! எனக்கும் உனக்குமிடையே கிழக்கிற்கும் மேற்கிற்குமிடையிலான இடைவெளி இருந்திருக்க வேண்டுமே! நீயோ மிக மோசமான நண்பனாய் இருந்திருக்கின்றாய்.” </span>
<span>43:39 அந்நேரம் அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் கொடுமைகளை புரிந்துவிட்ட பின் இன்று இந்தப் பேச்சு உங்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்காது. நீங்களும் உங்களுடைய ஷைத்தான்களும் வேதனையில் பங்காளிகளாவீர்கள்!”</span>
<span>43:40 (நபியே!) நீர் செவிடர்களைக் கேட்கச் செய்வீரா? அல்லது குருடர்களுக்கும், வெளிப்படையான வழிகேட்டில் கிடப்பவர்களுக்கும் வழிகாட்டி விடுவீரா? </span>
<span>43:41 இப்போது நாம் இவர்களுக்குத் தண்டனை அளிக்க வேண்டியுள்ளது; நாம் உம்மை உலகிலிருந்து எடுத்துக் கொண்டாலும் சரி </span>
<span>43:42 அல்லது நாம் இவர்களுக்கு வாக்களித்திருக்கும் தீயகதியை உம் கண்களுக்குக் காண்பித்துக் கொடுத்தாலும் சரி; திண்ணமாக, நாம் இவர்களின் மீது முழுஆற்றல் உடையவர்களாக இருக்கிறோம். </span>
<span>43:43 ஆகவே, வஹியின் மூலம் உமக்கு அறிவிக்கப் பட்டிருக்கும் வேதத்தை நீர் உறுதியாய்ப் பற்றிப் பிடிப்பீராக! திண்ணமாக, நீர் நேரிய வழியில் இருக்கின்றீர். </span>
<span>43:44 உண்மையில், இந்த வேதம் உமக்கும் உம் சமுதாயத்தினருக்கும் ஒரு மாபெரும் சிறப்பாகும். மேலும், விரைவில் நீங்கள் இதற்குப் பதில் அளிக்க வேண்டியிருக்கும். </span>
<span>43:45 உமக்கு முன்னர் நாம், நம்முடைய எத்தனை தூதர்களை அனுப்பியிருந்தோமோ அவர்கள் அனைவரிடத்திலும் நீர் கேட்டுப் பாரும்; கருணைமிக்க ஏக இறைவனைத் தவிர வழிபடுவதற்கு வேறு கடவுளரை நாம் நியமித்திருந்தோமா, என்ன?</span>
<span>43:46 நாம் மூஸாவை நம்முடைய சான்றுகளுடன் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய அரசவைப் பிரதானிகளிடமும் அனுப்பினோம். அவர் சென்று கூறினார்: “நான் உலக மக்கள் அனைவருடைய இறைவனின் தூதராய் இருக்கின்றேன்.” </span>
<span>43:47 பின்னர் அவர் நம்முடைய சான்றுகளை அவர்கள் முன் சமர்ப்பித்தபோது, அவற்றை அவர்கள் ஏளனம் செய்து சிரித்தார்கள். </span>
<span>43:48 ஒன்றன் பின் ஒன்றாக நாம் அவர்களுக்கு எப்படிப்பட்ட சான்றுகளைக் காண்பித்து வந்தோமெனில், அதில் ஒவ்வொன்றும் அதற்கு முந்திய சான்றைவிடக் கடினமானதாக இருந்தது! மேலும், அவர்களை நாம் சோதனையில் ஆழ்த்தினோம்; அவர்கள் தங்களுடைய நடத்தையிலிருந்து விலகிவிட வேண்டும் என்பதற்காக! </span>
<span>43:49 (வேதனையில் ஆழ்த்திய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்) அவர்கள் கூறினார்கள்: “சூனியக்காரரே! உம் அதிபதியிடமிருந்து உமக்குக் கிடைத்திருக்கும் அந்தஸ்தின் அடிப்படையில் எங்களுக்காக அவனிடம் இறைஞ்சும். நாங்கள் திண்ணமாக நேரியவழிக்கு வந்துவிடுவோம்!” </span>
<span>43:50 ஆனால், அவ்வாறே அவர்களைவிட்டுத் தண்டனையை நாம் விலக்கியபோது அவர்கள் வாக்கு மீறினார்கள். </span>
<span>43:51 (ஒருநாள்) ஃபிர்அவ்ன் தன் சமூகத்தினரை நோக்கிக் கூறினான்: “என் மக்களே! எகிப்தின் அரசாட்சி என்னுடையதல்லவா? இந்த ஆறுகள் எனக்குக் கீழேயல்லவா ஓடிக் கொண்டிருக்கின்றன? என்ன, உங்களுக்குத் தெரியவில்லையா? </span>
<span>43:52 நான் சிறந்தவனா? அல்லது கேவலமானவனும் (தன்னுடைய கருத்தைத்) தெளிவாக எடுத்துக் கூறவும் இயலாதவனுமான இந்த மனிதன் சிறந்தவனா?</span>
<span>43:53 ஏன், இவனுக்குத் தங்கக் காப்புகள் இறக்கித் தரப்படவில்லை? அல்லது வானவர்களின் ஒரு குழு இவனுடன் ஏன் வரவில்லை?”</span>
<span>43:54 அவன் (ஃபிர்அவ்ன்) தன்னுடைய சமூகத்தாரைச் சாதாரணமாகக் கருதினான். அவர்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தார்கள். உண்மையில் அவர்கள் பாவம் புரியும் மக்களாகவே இருந்தனர். </span>
<span>43:55 இறுதியில், அவர்கள் நம்மைக் கோபமடையச் செய்தபோது நாம் அவர்களிடம் பழி வாங்கினோம். அவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம். </span>
<span>43:56 பிற்கால மக்களுக்கு முன்னோடிகளாகவும், படிப்பினையூட்டும் முன்னுதாரணங்களாகவும் அவர்களை ஆக்கி வைத்தோம். </span>
<span>43:57 மேலும், மர்யத்தின் குமாரர் உதாரணமாக எடுத்துச் சொல்லப்பட்ட உடனேயே உம் சமூக மக்கள் ஆர்ப்பரித்தெழுந்தனர். </span>
<span>43:58 “எங்கள் கடவுள்கள் சிறந்தவையா அல்லது அவரா?” என்று கேட்டனர். அவர்கள் இந்த உதாரணத்தை முன்வைத்தது வெறும் வீண் வாதத்திற்குத்தான். உண்மையில் இவர்கள் குதர்க்கம் செய்யும் மக்களேயாவர். </span>
<span>43:59 மர்யத்தின் குமாரரைப் பொறுத்த வரையில், அவர் ஓர் அடியாரேதான். அவர் மீது நாம் அருள்புரிந்திருந்தோம். இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு நமது ஆற்றலின் முன்னுதாரணமாக அவரை நாம் ஆக்கி இருந்தோம். </span>
<span>43:60 நாம் நாடியிருந்தால் உங்களிலிருந்து வானவர்களைப் படைத்திருப்போம்; அவர்கள் உங்களின் பிரதிநிதிகளாய்ப் பூமியில் திகழ்ந்திருப்பார்கள். </span>
<span>43:61 மேலும், அவர் (மர்யத்தின் குமாரர்) உண்மையில் மறுமையின் ஓர் அறிகுறியாகத் திகழ்கின்றார். எனவே, நீங்கள் அதில் சந்தேகம் கொள்ள வேண்டாம். நான் கூறுவதை ஏற்றுக்கொள்ளுங்கள். இதுவே நேரிய வழியாகும். </span>
<span>43:62 ஷைத்தான் உங்களை இதிலிருந்து தடுத்துவிட வேண்டாம். அவன் உங்களுடைய வெளிப்படையான பகைவனாய் இருக்கின்றான். </span>
<span>43:63 மேலும், ஈஸா தெளிவான சான்றுகளைக் கொண்டுவந்தபோது கூறினார்: “நான் உங்களிடம் ஞானத்தைக் கொண்டு வந்திருக்கின்றேன்; மேலும், நீங்கள் என்னென்ன விஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றீர்களோ அவற்றில் சிலவற்றின் உண்மை நிலையை உங்களிடம் விளக்கிக் காட்டுவதற்காகவும் வந்திருக்கின்றேன். எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்குக் கீழ்ப்படியுங்கள். </span>
<span>43:64 உண்மையில், அல்லாஹ்தான் என்னுடைய அதிபதி; உங்களுடையவும் அதிபதி. ஆகவே, அவனையே நீங்கள் வணங்குங்கள். இதுவே நேரிய வழியாகும்.” </span>
<span>43:65 ஆனால், (அவர் இந்தத் தெளிவான அறிவுரையை வழங்கியும்) அந்தக் கூட்டத்தினர் தமக்குள் வேறுபட்டனர். எனவே, கொடுமை புரிந்தவர்களுக்கு அழிவுதான்; துன்புறுத்தக்கூடிய ஒருநாளின் தண்டனையின் வாயிலாக!</span>
<span>43:66 என்ன, இவர்கள் அறியாதிருக்கும் நிலையில் திடீரென மறுமைநாள் தங்களிடம் வந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்களா? </span>
<span>43:67 அந்த நாள் வந்துவிடும்பொழுது, இறையச்சத்துடன் வாழ்ந்தவர் தவிர ஏனைய நண்பர்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் பகைவர்களாகி விடுவார்கள். </span>
<span>43:68 அந்நாளில், கூறப்படும்: “என் அடியார்களே! இன்று உங்களுக்கு எந்த அச்சமும் இல்லை; உங்களுக்கு எவ்விதத் துயரமும் ஏற்படாது. </span>
<span>43:69 இவர்கள்தாம் நம் வசனங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் கீழ்ப்படிந்தவர்களாகவும் விளங்கினர் </span>
<span>43:70 நுழைந்துவிடுங்கள் சுவனத்தில்; நீங்களும் உங்கள் மனைவியரும்! அங்கு நீங்கள் மகிழ்விக்கப்படுவீர்கள்.” </span>
<span>43:71 தங்கத்தட்டுகளும், கோப்பைகளும் அவர்களுக்கிடையே சுற்றி வந்து கொண்டிருக்கும். மனங்கள் விரும்பக்கூடிய கண்களுக்கு இன்பம் அளிக்கக்கூடிய அனைத்துப் பொருட்களும் அங்கு இருக்கும். (அவர்களிடம் கூறப்படும்:) “இங்கு நீங்கள் நிரந்தரமாகத் தங்கியிருப்பீர்கள். </span>
<span>43:72 நீங்கள் உலகில் செய்து கொண்டிருந்த செயல்களின் காரணத்தால், இந்தச் சுவனத்திற்கு வாரிசுகளாய் ஆக்கப்பட்டிருக்கின்றீர்கள். </span>
<span>43:73 உங்களுக்காக இங்கு ஏராளமான கனிகள் உள்ளன. அவற்றை நீங்கள் உண்பீர்கள்.” </span>
<span>43:74 குற்றவாளிகளோ நரக வேதனையில் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். </span>
<span>43:75 அவர்களின் வேதனை கொஞ்சமும் குறைக்கப்பட மாட்டாது. அவர்கள் அதில் நிராசையுற்றிருப்பார்கள். </span>
<span>43:76 நாம் அவர்களுக்குக் கொடுமை இழைக்கவில்லை. மாறாக, அவர்கள் தமக்குத் தாமே கொடுமை இழைத்துக் கொண்டார்கள். </span>
<span>43:77 அவர்கள் மன்றாடுவார்கள்: “மாலிகே!* உம் அதிபதி எங்கள் பிரச்னையை முடித்துவிட்டால் நன்றாய் இருந்திருக்குமே!” அவர் பதிலளிப்பார்: “நீங்கள் இப்படியே கிடப்பீர்கள்! </span>
<span>43:78 நாம் உங்களிடம் சத்தியத்தைக் கொண்டு வந்திருந்தோம். ஆனால், உங்களில் பெரும்பாலோருக்குச் சத்தியமே வெறுப்பாக இருந்தது.”</span>
<span>43:79 என்ன, இவர்கள் ஏதேனும் திட்டவட்டமான நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கின்றார்களா? அப்படியானால் நாமும் உரிய நடவடிக்கை எடுத்தே தீருவோம். </span>
<span>43:80 என்ன, இவர்களின் இரகசியங்களையும், கிசு கிசுப்புகளையும் நாம் கேட்பதில்லை என்று இவர்கள் எண்ணிக் கொண்டார்களா? நாம் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். நம் வானவர்கள் அவர்களின் அருகில் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். </span>
<span>43:81 அவர்களிடம் கூறும்: “உண்மையில் கருணைமிக்க இறைவனுக்கு ஏதேனும் பிள்ளைகள் இருந்திருக்குமானால் அனைவரையும்விட முதலில் வணங்குபவனாக நான் இருந்திருப்பேன்!” </span>
<span>43:82 தூய்மையானவன், வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் அர்ஷின் • உரிமையாளனுமான இறைவன், இவர்கள் அவனோடு சேர்த்துச் சொல்கின்ற அனைத்தையும்விட்டு! </span>
<span>43:83 சரி, இவர்களை நீர் விட்டுவிடும், அவர்கள் தங்களின் வீண் கற்பனைகளில் மூழ்கியிருக்கட்டும், தங்களின் விளையாட்டில் இலயித்திருக்கட்டும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்ற நாளை அவர்கள் சந்திக்கும் வரை!</span>
<span>43:84 அவன் ஒருவனே வானத்திலும் இறைவன்; பூமியிலும் இறைவன்! மேலும் அவனே நுண்ணறிவாளன்; யாவும் அறிந்தவன்! </span>
<span>43:85 மேலும், வானங்கள், பூமி மற்றும் அவ்விரண்டிற்கும் இடையிலுள்ள அனைத்தினுடையவும் ஆட்சி எவனுடைய பிடியில் உள்ளதோ அவன் மிக உயர்ந்தவன். மேலும், மறுமை எப்போது வரும் எனும் ஞானம் அவனிடமே உள்ளது. அவனிடமே நீங்கள் அனைவரும் திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள். </span>
<span>43:86 அவனை விட்டுவிட்டு இவர்கள் எவர்களை அழைக்கின்றார்களோ, அவர்கள் பரிந்துரைக்கும் எந்த அதிகாரத்தையும் பெற்றிருக்கவில்லை. ஆனால், எவர்கள் ஞானத்தின் அடிப்படையில் சத்தியத்திற்குச் சான்று பகர்ந்தார்களோ அவர்களைத் தவிர!</span>
<span>43:87 “இவர்களைப் படைத்தவன் யார்?” என்று நீர் இவர்களிடம் கேட்டால், “அல்லாஹ்” என்று இவர்களே கூறுவார்கள். பிறகு, எங்கிருந்து இவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்? </span>
<span>43:88 “என் அதிபதியே! இவர்கள் ஏற்றுக்கொள்ளாத மக்களாய் இருக்கின்றனர்” எனும் இறைத்தூதரின் இந்த வார்த்தையின் மீது சத்தியமாக!</span>
<span>43:89 சரி, (நபியே!) இவர்களுடைய செயல்களைப் பொறுத்துக்கொள்ளும். ‘உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்’ என்று கூறும்! விரைவில் இவர்கள் அறிந்து கொள்வார்கள். </span>
</div><div>
<span>அத்துகான்</span>
<span>44:1 ஹாமீம்; </span>
<span>44:2 தெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக!</span>
<span>44:3 நாம் இதனை, அருள்பாலிக்கப்பட்ட ஓர் இரவில் இறக்கிவைத்தோம். ஏனெனில், நாம் மக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்ய நாடியிருந்தோம்! </span>
<span>44:4 அது எத்தகைய இரவு எனில், அதில்தான் ஒவ்வொரு விவகாரத்துக்கும் விவேக மிக்க தீர்ப்பு நம்முடைய கட்டளையினால் பிறப்பிக்கப்படுகின்றது. </span>
<span>44:5 நாம் ஒரு தூதரை அனுப்புகிறவர்களாய் இருந்தோம். </span>
<span>44:6 உம் இறைவனுடைய கருணையின் அடிப்படையில்! திண்ணமாக, அவன் அனைத்தையும் கேட்கக்கூடியவனாகவும், அறியக்கூடியவனாகவும் இருக்கின்றான் </span>
<span>44:7 நீங்கள் உண்மையில் உறுதியான நம்பிக்கையுடையவர்களாய் இருந்தால்! அவன் வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியாகவும் அவ்விரண்டிற்கிடையே உள்ள அனைத்திற்கும் அதிபதியாகவும் இருக்கின்றான் (என்பதைக் காண்பீர்கள்). </span>
<span>44:8 அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. வாழ்வளிப்பவன் அவனே; மரணத்தை அளிப்பவனும் அவனே! அவனே உங்களுக்கும் அதிபதி; முன்னர் வாழ்ந்து சென்ற உங்கள் முன்னோர்களுக்கும் அதிபதி. </span>
<span>44:9 (ஆனால், உண்மையில் இவர்களுக்கு உறுதியான நம்பிக்கை இல்லை.) ஏனெனில், இவர்கள் சந்தேகத்தில் வீழ்ந்து விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள். </span>
<span>44:10 சரி, இனி ஒரு நாளை எதிர்பார்த்திருப்பீராக! அந்நாளில் வானம் வெளிப்படையான புகையைக் கொண்டுவரும். </span>
<span>44:11 அது மக்கள் மீது மூடிக்கொள்ளும். இது துன்புறுத்தக்கூடிய தண்டனையாகும். </span>
<span>44:12 (அப்போது கூறுவார்கள்:) “எங்கள் அதிபதியே! எங்களை விட்டு இந்த வேதனையை நீக்கி அருள். நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொண்டு விடுகிறோம்.” </span>
<span>44:13 இவர்களின் உணர்வில்லாத நிலை எங்கே மாறப்போகிறது? வெளிப்படையான இறைத்தூதர் இவர்களிடம் வந்தும், </span>
<span>44:14 இவர்கள் அவர் பக்கம் கவனம் செலுத்தவில்லை என்பதுதானே இவர்களின் நிலை! “இவர் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பைத்தியக்காரர்!” என்று சொன்னார்கள். </span>
<span>44:15 நாம் சற்று வேதனையை அகற்றிவிடுகின்றோம். அப்போது நீங்கள் முன்னர் செய்து கொண்டிருந்ததைத்தான் மீண்டும் செய்வீர்கள். </span>
<span>44:16 நாம் பலத்த அடி கொடுக்கும் நாளில் நாம் உங்களிடம் பழி வாங்கியே தீருவோம். </span>
<span>44:17 திண்ணமாக, நாம் இவர்களுக்கு முன்னர் ஃபிர்அவ்னின் சமூகத்தை சோதித்திருக்கிறோம். அவர்களிடம் கண்ணியமான ஓர் இறைத்தூதர் வந்தார். </span>
<span>44:18 மேலும், அவர் கூறினார்: “அல்லாஹ்வின் அடியார்களை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். நான் உங்களுக்காக அனுப்பப்பட்ட நம்பிக்கைக்குரிய இறைத்தூதராவேன். </span>
<span>44:19 மேலும், அல்லாஹ்வின் விஷயத்தில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள். நான் உங்களிடம் (என்னுடைய நியமனம் பற்றிய) தெளிவான ஒரு சான்றினைக் கொண்டு வந்திருக்கின்றேன். </span>
<span>44:20 நீங்கள் என்மீது தாக்குதல் தொடுப்பதைவிட்டு என்னுடையவும் உங்களுடையவும் அதிபதியிடம் பாதுகாப்பு கோரியிருக்கின்றேன். </span>
<span>44:21 நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் என் மீது கைவைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.” </span>
<span>44:22 இறுதியில், “இவர்கள் குற்றம் புரியக்கூடிய மக்களாய் இருக்கின்றனர்” என்று அவர் தம் இறைவனிடம் முறையிட்டார். </span>
<span>44:23 (பதிலளிக்கப்பட்டது:) “என் அடியார்களை இரவோடிரவாக அழைத்துச் சென்றுவிடும்! திண்ணமாக, நீங்கள் பின் தொடரப்படுவீர்கள். </span>
<span>44:24 கடலினை அதன் பிளந்த நிலையிலேயே விட்டுவிடும். திண்ணமாக, இந்தப் படையினர் அனைவரும் மூழ்கடிக்கப்பட வேண்டியவர்களாவர்!” </span>
<span>44:25 எத்தனையோ தோட்டங்களையும், நீரூற்றுகளையும், </span>
<span>44:26 வயல்களையும், மிகச்சிறப்பான இல்லங்களையும், </span>
<span>44:27 அவர்கள் பயன்படுத்தி மகிழ்ந்த எத்தனையோ வாழ்க்கைச் சாதனங்களையும் அவர்கள் விட்டுச் சென்றார்கள். </span>
<span>44:28 இதுவே அவர்கள் அடைந்த கதி. மேலும், இந்தப் பொருள்களுக்கு வேறு மக்களை நாம் வாரிசுகளாக்கினோம் </span>
<span>44:29 பிறகு அவர்களுக்காக வானமும் அழவில்லை, பூமியும் அழவில்லை. இன்னும் சிறிதளவு அவகாசம் கூட அவர்களுக்குத் தரப்படவில்லை. </span>
<span>44:30 இவ்வாறு இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை நாம் கடும் இழிவுபடுத்தும் வேதனையிலிருந்து அதாவது ஃபிர்அவ்னிடமிருந்துகாப்பாற்றினோம். </span>
<span>44:31 உண்மையில், அவன் வரம்பு மீறுவோரில் அனைவரையும்விட மிகக் கொடியவனாக இருந்தான். </span>
<span>44:32 மேலும், அவர்களின் நிலைமையை அறிந்தே உலகின் பிற சமுதாயங்களைவிட அவர்களுக்கு முன்னுரிமை அளித்தோம். </span>
<span>44:33 மேலும், அவர்களுக்கு எத்தகைய அத்தாட்சிகளை காண்பித்தோம் எனில் அவற்றில் வெளிப்படையான சோதனை இருந்தது. </span>
<span>44:34 இந்த மக்கள் கூறுகின்றார்கள்: </span>
<span>44:35 “எங்களுக்கு முதலில் ஏற்படும் மரணத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. அதன் பிறகு நாங்கள் மீண்டும் எழுப்பப்பட மாட்டோம். </span>
<span>44:36 நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால், எங்களுடைய முன்னோரை எழுப்பிக் கொண்டு வாருங்கள்.” </span>
<span>44:37 இவர்கள் சிறந்தவர்களா? ‘துப்பஃஉ’ சமூகத்தாரும் அவர்களுக்கு முந்தியவர்களும் சிறந்தவர்களா? நாம் அவர்களை அழித்தோம். அவர்கள் குற்றம் புரிவோராய் இருந்த காரணத்தால்! </span>
<span>44:38 இந்த வானங்களையும், பூமியையும் அவற்றிற்கிடையே உள்ளவற்றையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை. </span>
<span>44:39 அவற்றைச் சத்தியத்துடன் படைத்திருக்கின்றோம். ஆனால், இவர்களில் பெரும்பாலோர் அறிவதில்லை. </span>
<span>44:40 இவர்கள் அனைவரையும் எழுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் காலம் தீர்ப்பளிக்கும் நாளாகும். </span>
<span>44:41 அந்நாளில் எந்த நண்பரும் தன்னுடைய நெருங்கிய எந்த நண்பருக்கும் எந்தப் பயனையும் அளிக்கமாட்டார். மேலும், அவர்களுக்கு எங்கிருந்தும் எந்த உதவியும் கிடைக்காது; </span>
<span>44:42 ஆனால், அல்லாஹ்வே யாருக்காவது கருணை புரிந்தாலே தவிர! திண்ணமாக, அவனோ மிக வலிமை வாய்ந்தவனாகவும், கிருபையாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>44:43 ‘ஸக்கூம்’ மரம்; </span>
<span>44:44 பாவியின் உணவாக இருக்கும். </span>
<span>44:45 அது எண்ணெய்க் கசடு போலிருக்கும். </span>
<span>44:46 சூடேறிய நீர் கொதிப்பது போன்று வயிற்றில் அது கொதிக்கும். </span>
<span>44:47 “பிடியுங்கள் அவனை! நரகத்தின் நடுப்பகுதியில் இழுத்துச் செல்லுங்கள். </span>
<span>44:48 அவனது தலைமீது கொதிக்கும் நீரை ஊற்றி வேதனைப்படுத்துங்கள். </span>
<span>44:49 நீ சுவைத்துப் பார், இதன் சுவையை! பெரும் வல்லமை படைத்த கண்ணியமிக்கவனல்லவா நீ </span>
<span>44:50 நீங்கள் எதன் வருகையை சந்தேகித்துக் கொண்டிருந்தீர்களோ அதுதான் இது!”</span>
<span>44:51 இறையச்சமுடையவர்கள் அமைதியான இடத்தில் இருப்பார்கள்; </span>
<span>44:52 தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். </span>
<span>44:53 தடித்த மற்றும் மெல்லிய பட்டாடைகளை அணிந்து கொண்டு எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள். </span>
<span>44:54 இதுதான் அவர்களின் நிலைமையாகும். மேலும், நாம் அழகிய தோற்றமுள்ள எழில்விழி மங்கையரை அவர்களுக்கு ஜோடிகளாக்கிக் கொடுப்போம். </span>
<span>44:55 அங்கு அவர்கள் மன நிம்மதியுடன் எல்லாவிதமான சுவைமிகு பொருட்களையும் கேட்பார்கள். </span>
<span>44:56 ஏற்கனவே உலகில் அடைந்த மரணம் தவிர, மறு மரணத்தை அவர்கள் அனுபவிக்க மாட்டார்கள். மேலும், உம் இறைவன் தன்னுடைய கருணையினால் அவர்களை நரக வேதனையிலிருந்து காப்பாற்றிவிடுவான். </span>
<span>44:57 இதுவே மாபெரும் வெற்றியாகும். </span>
<span>44:58 (நபியே!) இவர்கள் அறவுரை பெற வேண்டும் என்பதற்காக நாம் இந்த வேதத்தை உம்முடைய மொழியில் எளிமையாக்கித் தந்துள்ளோம். </span>
<span>44:59 இனி நீரும் எதிர்பாரும்! இவர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்!</span>
</div><div>
<span>அல் ஜாஸியா</span>
<span>45:1 ஹாமீம். </span>
<span>45:2 இந்த வேதம், வல்லமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்டதாகும். </span>
<span>45:3 உண்மை யாதெனில், இறைநம்பிக்கையுள்ளவர்களுக்கு வானங்களிலும் பூமியிலும் எண்ணற்ற சான்றுகள் உள்ளன. </span>
<span>45:4 மேலும், உங்களைப் படைப்பதிலும், (பூமியில்) அல்லாஹ் பரப்பியிருக்கின்ற உயிரினங்களிலும், உறுதிகொள்ளும் மக்களுக்கு பெரும் சான்றுகள் உள்ளன. </span>
<span>45:5 இரவும் பகலும் வேறுபட்டு இருப்பதிலும், அல்லாஹ், வானத்திலிருந்து மழையை இறக்கி பிறகு அதனைக் கொண்டு இறந்துபோன பூமியை உயிர்ப்பிப்பதிலும் மேலும், காற்றுகளின் சுழற்சியிலும் அறிவைப் பயன்படுத்தும் மக்களுக்குப் பல்வேறு அத்தாட்சிகள் உள்ளன. </span>
<span>45:6 இவை அல்லாஹ்வின் அத்தாட்சிகள். இவற்றை உம்மிடம் நாம் மிகச் சரியாக எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றோம். இனி, அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பிறகு, இவர்கள் எந்த விஷயத்தின் மீது நம்பிக்கை கொள்ளப் போகிறார்கள்?</span>
<span>45:7 பொய்யனாகவும் கெட்டவனாகவும் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் அழிவுதான். </span>
<span>45:8 அவன் முன்னிலையில் ஓதிக் காட்டப்படும் இறைவசனங்களை அவன் செவியேற்கிறான்; பிறகு முழு ஆணவத்துடன் (தன் நிராகரிப்பில்) அவன் பிடிவாதமாய் இருக்கின்றான், அவ்வசனங்களை அவன் செவியேற்காதது போன்று! இத்தகைய மனிதனுக்குத் துன்புறுத்தும் வேதனையைப் பற்றிய ‘நற்செய்தியை’ அறிவித்து விடும். </span>
<span>45:9 நம்முடைய வசனங்களிலிருந்து ஏதேனும் ஒரு விஷயத்தை அவன் தெரிந்து கொள்ளும்போது அதனை பரிகாசமாய் ஆக்கிக் கொள்கிறான். இத்தகையோர் அனைவர்க்கும் இழிவு தரும் வேதனை இருக்கிறது. </span>
<span>45:10 அவர்களுக்கு எதிரில் நரகம் உள்ளது. (உலகில்) அவர்கள் சம்பாதித்தது எதுவும் எந்தப் பயனும் அவர்களுக்கு அளிக்காது. அல்லாஹ்வை விட்டுவிட்டு இவர்கள் யாரை பாதுகாவலர்களாய் எடுத்துக் கொண்டு இருக்கிறார்களோ அவர்களாலும் எதுவும் செய்ய முடியாது. மேலும், அவர்களுக்கு மாபெரும் வேதனை இருக்கிறது. </span>
<span>45:11 இந்தக் குர்ஆன் முற்றிலும் நேர்வழியாய்த் திகழ்கின்றது. தங்கள் இறைவனின் வசனங்களை ஏற்க மறுத்தவர்களுக்கோ பெரும் வேதனை தரும் தண்டனை இருக்கிறது. </span>
<span>45:12 அல்லாஹ்தான் உங்களுக்குக் கடலினை வசப்படுத்தித் தந்தான் அவனது கட்டளைப்படிக் கப்பல்கள் அதில் செல்வதற்காகவும், நீங்கள் அவனது அருளைத் தேடுவதற்காகவும்! மேலும், நீங்கள் நன்றி செலுத்துவோராகத் திகழ்வதற்காகவும், </span>
<span>45:13 வானங்கள் மற்றும் பூமியின் அனைத்தையுமே உங்களுக்கு அவன் வசப்படுத்திக் கொடுத்தான். அனைத்தையும் தன் சார்பாகவே செய்தான். சிந்திக்கக்கூடிய மக்களுக்குத் திண்ணமாக இதில் பெரும் சான்றுகள் இருக்கின்றன. </span>
<span>45:14 (நபியே!) இறைநம்பிக்கையாளர்களிடம் நீர் கூறிவிடும்: “யார் அல்லாஹ்விடமிருந்து கெட்ட நாள் வருவது பற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லாதிருக்கின்றார்களோ அவர்களின் நடவடிக் கைகளைக் கண்டுகொள்ளாது விட்டுவிடுங்கள் ஒரு சமுதாயத்திற்கு அவர்கள் சம்பாதித்ததற்கான கூலியை அல்லாஹ் கொடுப்பதற்காக! </span>
<span>45:15 ஒருவர் ஏதேனும் நற்செயல்கள் செய்தால், அவற்றை அவர் தமக்காகவே செய்து கொள்கிறார். ஒருவர் ஏதேனும் தீய செயல் செய்தால் அவற்றின் விளைவை அவரே அனுபவிப்பார். பின்னர், நீங்கள் அனைவரும் உங்கள் அதிபதியிடமே திரும்பக் கொண்டு சொல்லப்பட இருக்கின்றீர்கள்.”</span>
<span>45:16 இதற்கு முன்பு இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு நாம் வேதம், ஞானம், தூதுத்துவம் ஆகியவற்றை வழங்கியிருந்தோம். நாம், அவர்களுக்குச் சிறந்த வாழ்வாதாரங்களையும் வழங்கியிருந்தோம். மேலும், உலக மக்கள் அனைவரைக் காட்டிலும், அவர்களுக்குச் சிறப்பை வழங்கியிருந்தோம்.  </span>
<span>45:17 தீன் இறைமார்க்கம் சம்பந்தமாக அவர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கினோம். பின்னர், அவர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது (அறியாமையின் காரணத்தினால் அல்ல; மாறாக) அறிவு ஞானம் வந்த பின்னர்தான் அதுவும் அவர்கள் ஒருவர் மற்றவர் மீது அநீதி இழைக்க விரும்பிய காரணத்தால்தான் ஏற்பட்டது! திண்ணமாக, உம் இறைவன் மறுமைநாளில், அவர்கள் கருத்து முரண்பாடு கொண்டிருக்கின்ற விஷயங்களில் தீர்ப்பு வழங்குவான். </span>
<span>45:18 பிறகு (நபியே!) இப்போது தீன் சம்பந்தமான விஷயங்களில் தெளிவான, பிரதான மார்க்கத்தில் (ஷரீஅத்தில்) உம்மை நாம் நிலை நிறுத்தியிருக்கிறோம். எனவே, நீர் அதையே பின்பற்றும். அறியாத மக்களின் மன இச்சைகளைப் பின்பற்றாதீர். </span>
<span>45:19 அல்லாஹ்வுக்கு எதிராக உமக்கு அவர்களால் எந்தப் பயனும் தர முடியாது. மேலும், கொடுமை புரிபவர்களே தங்களுக்குள் ஒருவருக்கொருவர் தோழர்களாக இருக்கின்றார்கள். மேலும், இறையச்சமுடையோர்க்கு அல்லாஹ் தோழனாக இருக்கின்றான். </span>
<span>45:20 இவை, மனிதர்கள் அனைவருக்கும் பகுத்துணரும் சான்றுகளாய் இருக்கின்றன. மேலும், உறுதி கொள்ளக்கூடிய மக்களுக்கு வழிகாட்டியாகவும் கருணையாகவும் இருக்கின்றது. </span>
<span>45:21 தீமைகளைச் செய்தவர்களையும், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களையும் இரு சாராரின் வாழ்வும் மரணமும் சமமாகும் விதத்தில் ஒன்றுபோல் ஆக்கி விடுவோம் என்று எண்ணிக்கொண்டார்களா என்ன? இவர்கள் செய்யும் முடிவு எவ்வளவு கெட்டது! </span>
<span>45:22 அல்லாஹ் வானங்களையும் பூமியையும் சத்தியத்துடன் படைத்திருக்கிறான் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் சம்பாதித்த கூலி வழங்கப்பட வேண்டும்; மக்கள் மீது சிறிதும் அநீதி இழைக்கப்படக் கூடாது என்பதற்காக!</span>
<span>45:23 தனது மன இச்சையைத் தன்னுடைய கடவுளாக்கிக் கொண்ட மனிதனின் நிலையை எப்போதேனும் நீர் சிந்தித்ததுண்டா? அறிவுடனேயே அல்லாஹ் அவனை வழிகேட்டில் தள்ளிவிட்டான். மேலும், அவனுடைய காதுகளிலும், இதயத்திலும் முத்திரையிட்டுவிட்டான். மேலும் அவனுடைய கண்கள்மீது திரையிட்டு விட்டான். இனி அல்லாஹ்வைத் தவிர அவனுக்கு நேர்வழிகாட்டக்கூடியவர் யார்? என்ன, நீங்கள் எந்தப் படிப்பினையும் பெறுவதில்லையா?</span>
<span>45:24 மேலும், இந்த மக்கள் கூறுகிறார்கள்: “வாழ்க்கை என்பது நம்முடைய இந்த உலக வாழ்க்கைதான். இங்குதான் நாம் மரணிக்கவும் உயிர்வாழவும் செய்கின்றோம். கால ஓட்டமல்லாமல் வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” உண்மையில் இது சம்பந்தமாக இவர்களிடம் எந்த ஞானமும் இல்லை. இவர்கள் வெறும் ஊகத்தின் அடிப்படையில்தான் இப்படிக் கூறுகிறார்கள். </span>
<span>45:25 மேலும், நம்முடைய தெளிவான வசனங்கள் இவர்களிடம் ஓதிக் காட்டப்படும்போது “நீங்கள் உண்மையாளர்கள் என்றால் எங்கள் முன்னோரை எழுப்பிக் கொண்டுவாருங்கள்” என்று கூறுவதைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இவர்களிடம் இருப்பதில்லை. </span>
<span>45:26 (நபியே, இவர்களிடம்) கூறும்: அல்லாஹ்தான் உங்களை உயிர் வாழச் செய்கின்றான். பின்னர் அவனே உங்களை மரணமடையச் செய்கின்றான். பின்னர், அந்த மறுமைநாளின்போது அவனே உங்களை ஒன்றுதிரட்டுவான். அந்நாளின் வருகையில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனினும் பெரும்பாலோர் அறிவதில்லை. </span>
<span>45:27 வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. மேலும், மறுமைநாள் வந்துவிடும்போது அசத்தியவாதிகள் நஷ்டத்திலேயே கிடப்பார்கள். </span>
<span>45:28 அந்நேரம் ஒவ்வொரு சமூகமும் முழந்தாளிட்டு விழுந்திருப்பதை நீர் காண்பீர். “வாருங்கள், உங்கள் வினைச்சுவடியைப் பாருங்கள்” என்று ஒவ்வொரு சமுதாயத்தினரும் அழைக்கப்படுவர் (அவர்களிடம் கூறப்படும்:) “நீங்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்குப் பிரதிபலன் இன்று உங்களுக்குக் கொடுக்கப்படும். </span>
<span>45:29 இது, நாம் தயாரித்த வினைச்சுவடி. உங்கள் மீது மிகச் சரியாக சாட்சியம் அளித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் செய்துவந்த செயல்களை நாம் எழுதச் செய்துகொண்டிருந்தோம். </span>
<span>45:30 இனி எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களை, அவர்களின் அதிபதி தன் கருணையில் நுழைவிப்பான். இதுவே தெளிவான வெற்றியாகும்.”</span>
<span>45:31 மேலும், எவர்கள் நிராகரித்தார்களோ (அவர்களிடம் சொல்லப்படும்:) “என்னுடைய வசனங்கள் உங்களிடம் ஓதிக்காட்டப்படவில்லையா? ஆனால், நீங்கள் பெருமையடித்தீர்கள். மேலும், குற்றம்செய்யும் மக்களாய் இருந்தீர்கள். </span>
<span>45:32 மேலும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும் மறுமைநாள் வருவதில் எவ்வித ஐயமும் இல்லை என்றும் சொல்லப்பட்டால் “மறுமை என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது. நாங்கள் வெறும் ஊகம்தான் கொண்டிருக்கின்றோம்; உறுதிகொள்ளக் கூடியவர்களாய் இல்லை” என்று நீங்கள் கூறிக்கொண்டிருந்தீர்கள். </span>
<span>45:33 அந்த நேரம் அவர்களுடைய செயல்களின் தீய விளைவு அவர்களுக்குத் தென்பட்டுவிடும். மேலும், அவர்கள் எதைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். </span>
<span>45:34 மேலும், அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் இந்நாளின் சந்திப்பை எப்படி மறந்திருந்தீர்களோ அப்படியே இன்று நாம் உங்களை மறந்துவிடுகின்றோம். உங்கள் இருப்பிடம் இனி நரகம்தான். மேலும், உங்களுக்கு உதவி செய்வோர் எவரும் இல்லை. </span>
<span>45:35 உங்களுக்கு இந்தக் கதி ஏற்பட்டதற்குக் காரணம், நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தீர்கள். மேலும், உலக வாழ்வு உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருந்தது. எனவே இன்று இவர்கள் நரகத்திலிருந்து விடுவிக்கப்படவும் மாட்டார்கள். மன்னிப்புக்கோரி (உங்கள் அதிபதியின்) உவப்பைப் பெறுங்கள் என்று இவர்களிடம் கூறப்படவும் மாட்டாது. </span>
<span>45:36 வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும், அகிலத்தார் அனைவரையும் பரிபாலிப்பவனுமாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! </span>
<span>45:37 வானங்களிலும் பூமியிலும் பெருமை அவனுக்கே உரியதாகும். மேலும் அவன் மிகவும் வல்லமை மிக்கவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். </span>
</div><div>
<span>அல் அஹ்காஃப்</span>
<span>46:1 ஹாமீம். </span>
<span>46:2 இந்த வேதம், வல்லமை மிக்கோனும் நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்வினால் இறக்கியருளப்பட்டதாகும். </span>
<span>46:3 நாம் வானங்களையும் பூமியையும் அவற்றிற்கிடையே உள்ள அனைத்தையும் சத்தியத்திற்கேற்பவும் ஒரு குறிப்பிட்ட கால நிர்ணயத்துடனும் படைத்திருக்கின்றோம். ஆனால், இந்த நிராகரிப்பாளர்கள், அவர்களுக்கு எந்த உண்மை குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளதோ, அதனைப் புறக்கணிக்கின்றார்கள். </span>
<span>46:4 (நபியே! இவர்களிடம்) கூறும்: இறைவனை விட்டுவிட்டு எவற்றை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவை எப்படிப்பட்டவை என்று நீங்கள் எப்போதாவது கண்களைத் திறந்து பார்த்ததுண்டா? சற்று எனக்குக் காண்பித்துத் தாருங்கள். அவர்கள் பூமியில் எதையாவது படைத்திருக்கின்றார்களா? அல்லது வானங்களைப் படைத்து நிர்வகிப்பதில் அவர்களுக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா? நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால், இதற்கு முன் வந்த ஏதேனும் வேதமோ அல்லது எஞ்சியுள்ள ஏதேனும் ஞானமோ (இந்தக் கொள்கைகளுக்கு ஆதாரமாக) உங்களிடம் இருப்பின் அவற்றை என்னிடம் கொண்டு வாருங்கள். </span>
<span>46:5 பிறகு இப்படிப்பட்ட மனிதனைவிட அதிகம் வழிதவறியவன் யார் இருக்க முடியும்? அவன் அல்லாஹ்வை விடுத்து, மறுமைநாள் வரை தனக்கு பதிலளிக்க இயலாதவர்களை அழைக்கின்றான். அதுமட்டுமல்ல, அழைப்பவர்கள் தங்களை அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் அவர்கள் அறியாதவர்களாய் இருக்கின்றார்கள். </span>
<span>46:6 மேலும், மனிதர்கள் அனைவரும் ஒன்று திரட்டப்படும்போது தங்களை அழைத்தவர்களுக்கு அவர்கள் பகைவர்களாயும் ஆகிவிடுவார்கள்; மேலும், அவர்களின் வழிபாட்டை நிராகரிப்பவர்களாயும் இருப்பார்கள். </span>
<span>46:7 நம்முடைய தெளிவான வசனங்கள் இம்மக்களிடம் ஓதிக்காட்டப்பட்டு, சத்தியம் இவர்கள் முன் வந்துவிட்டபோது இந்நிராகரிப்பாளர்கள் சத்தியத்தைக் குறித்து “இது வெளிப்படையான சூனியம்” என்று கூறுகின்றார்கள். </span>
<span>46:8 என்ன, இவர்கள் “இறைத்தூதர் இதனைச் சுயமாகப் புனைந்துள்ளார்!” என்று கூறுகின்றார்களா? இவர்களிடம் கூறும்: “இதனை நான் சுயமாகப் புனைந்து கூறுகிறேன் எனில், இறைவனின் பிடியிலிருந்து சிறிதும் என்னை உங்களால் காப்பாற்ற முடியாது! நீங்கள் இட்டுக்கட்டும் பேச்சுக்களை அவன் நன்கு அறிகின்றவனாக இருக்கின்றான். எனக்கும் உங்களுக்கும் இடையே சாட்சியம் அளிப்பதற்கு அவனே போதுமானவன். மேலும், அவன் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். </span>
<span>46:9 இவர்களிடம் கூறும்: “இறைத்தூதர்களில் நான் ஒன்றும் புதுமையானவன் அல்லன். மேலும் (நாளை) எனக்கு என்ன நேரும் என்பதையும், உங்களுக்கு என்ன நேரும் என்பதையும் நான் அறியேன். என்னிடம் அனுப்பப்படும் வஹியைத்தான்* நான் பின்பற்றுகின்றேன். நான் வெளிப்படையாய் எச்சரிக்கை செய்பவனே அன்றி வேறல்லன்.” </span>
<span>46:10 (நபியே இவர்களிடம்) கூறும்: “நீங்கள் எப்போதேனும் சிந்தித்துப் பார்த்ததுண்டா? இந்த வேதம் அல்லாஹ்விடமிருந்தே வந்ததாய் இருந்து, அதனை நீங்கள் நிராகரிக்கின்றீர்களெனில், (உங்கள் கதி என்னவாகும் என்று!) மேலும், இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிலிருந்து சான்றுபகர்பவர் ஒருவர் இதுபோன்ற வேதத்தின் மீது சான்று பகர்ந்துள்ளார். அவர் நம்பிக்கையும் கொண்டிருந்தார்; ஆனால், நீங்கள் உங்களின் ஆணவத்திலேயே உழன்று கொண்டு இருந்தீர்கள். இத்தகைய கொடுமைக்காரர்களுக்குத் திண்ணமாக அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை!”</span>
<span>46:11 இறைநிராகரிப்பாளர்கள் இறைநம்பிக்கையாளர்களைப் பற்றி கூறுகிறார்கள்: “இந்த வேதத்தை ஏற்றுக் கொள்வது ஒரு நற்செயலாக இருந்திருந்தால் இதனை ஏற்றுக் கொள்வதில் இவர்கள் நம்மை முந்தியிருக்க முடியாது.” இப்படியாக இதன் மூலம் இவர்கள் நேர்வழி பெறாதபோது “இதுவோ பழைய பொய்!” என்று திண்ணமாகக் கூறுவார்கள். </span>
<span>46:12 இதற்கு முன்பு மூஸாவின் வேதம் வழிகாட்டியாகவும் கருணையாகவும் வந்துவிட்டிருந்தது. இந்த வேதம் (அதனை) உண்மைப்படுத்தக்கூடியதாகவும், அரபிமொழியிலும் வந்துள்ளது; அக்கொடுமைக்காரர்களை எச்சரிக்கை செய்வதற்காகவும் நல்ல நடத்தையை மேற்கொள்கிறவர்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்காகவும்தான்! </span>
<span>46:13 திண்ணமாக எவர்கள் “அல்லாஹ்தான் எங்கள் அதிபதி” என்று கூறினார்களோ பின்னர் அதில் அவர்கள் உறுதியாக நிலைத்து நிற்கின்றார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். </span>
<span>46:14 இத்தகையவர்களே சுவனம் செல்பவர்கள் ஆவர். அதில் அவர்கள் நிரந்தரமாக வாழ்வார்கள்; (உலகில்) அவர்கள் செய்துகொண்டிருக்கின்ற செயல்களின் பலனாக!</span>
<span>46:15 தன்னுடைய தாய் தந்தையிடம் நல்லவிதமாக நடந்துகொள்ள வேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தினோம். அவனுடைய அன்னை, அவனைச் சிரமத்துடனேயே கருவுற்று சுமந்திருந்தாள். சிரமப்பட்டுத்தான் அவனைப் பெற்றெடுத்தாள். மேலும், அவனைச் சுமந்திருப்பதற்கும் அவனுக்கு பால் குடிப்பை மறக்கடிப்பதற்கும் முப்பது மாதங்கள் ஆகின்றன. இறுதியில் அவன் தனது முழுபலத்தை அடைந்து அவனுக்கு நாற்பது வயது ஆகும்போது கூறுவான்: “என் அதிபதியே! நீ என் மீதும் என் தாய்தந்தையர் மீதும் பொழிந்த அருட்கொடைகளுக்காக (உனக்கு) நன்றி செலுத்துவதற்காகவும் உன் உவப்பைப் பெறும் வகையில் நற்செயலைச் செய்வதற்காகவும் எனக்கு நற்பேற்றினை அளிப்பாயாக! என் பிள்ளைகளையும் நல்லவர்களாக்கி எனக்கு ஆறுதல் அளிப்பாயாக! மேலும், நான் உன்னிடம் பாவமன்னிப்புக்கோரி மீளுகின்றேன். மேலும், கீழ்ப்படிந்து வாழும் அடியார்களில் (முஸ்லிம்களில்) சேர்ந்தவனாகவும் இருக்கின்றேன்.” </span>
<span>46:16 இத்தகைய மனிதர்களிடமிருந்து அவர்களின் நல்ல செயல்களை நாம் ஏற்றுக் கொள்கிறோம். மேலும், அவர்களின் தீமைகளை நாம் பொறுத்துக் கொள்கின்றோம். அவர்களிடம் அளிக்கப்பட்ட உண்மையான வாக்குறுதியின்படி அவர்கள் சுவனவாசிகளுடன் சேர்ந்திருப்பார்கள். </span>
<span>46:17 ஒருவன் தன் தாய்தந்தையரிடம் இவ்வாறு கூறுகின்றான்: “சீ! என்னை நீங்கள் கஷ்டப்படுத்திவிட்டீர்கள். நான் இறந்த பின்னர் (மண்ணறையிலிருந்து) வெளிக் கொணரப்படுவேன் என்று என்னை அச்சுறுத்துகின்றீர்களா? எனக்கு முன்னர் ஏராளமான தலைமுறையினர் வாழ்ந்து சென்றுள்ளார்களே! (அவர்களில் எவரும் எழுந்து வரவில்லையே!)” தாய்தந்தையர் இருவரும் அல்லாஹ்வின் உதவியை வேண்டியவர்களாகக் கூறுகின்றார்கள்: “அட, துர்ப்பாக்கியமுடையவனே! ஏற்றுக்கொள்; அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது!” ஆனால், அவனோ “இவையெல்லாம் முற்காலத்துக் கட்டுக் கதைகள்” என்று கூறுகின்றான். </span>
<span>46:18 இத்தகைய மக்கள் மீது வேதனையின் தீர்ப்பு உறுதியாகிவிட்டது. இவர்களுக்கு முன் வாழ்ந்து சென்ற இத்தகைய தவறான நடத்தை கொண்ட ஜின் மற்றும் மனித இனத்தாருடன் இவர்களும் சேர்க்கப்படுவார்கள். ஐயமின்றி, இவர்கள் மாபெரும் நஷ்டத்திற்கு ஆளாகிவிட்டவர்களாய் இருக்கின்றார்கள். </span>
<span>46:19 (இந்த இரு பிரிவினர்களில்) அவரவருடைய செயல்களுக்கேற்பவே அவரவருடைய நிலைகள் இருக்கும். மேலும், அல்லாஹ் அவர்களின் செயல்களுக்குரிய கூலியை அவர்களுக்கு முழுக்க முழுக்க அளித்திட வேண்டும் என்பதற்காகத்தான் (இவ்வாறு செய்கின்றான்). அவர்கள் மீது ஒருபோதும் கொடுமை இழைக்கப்படமாட்டாது. </span>
<span>46:20 பின்னர் இந்த இறைநிராகரிப்பாளர்கள் நரகத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தப்படும்போது அவர்களிடம் கூறப்படும்; நீங்கள் உங்கள் (பங்கில் உள்ள) அருட்கொடைகளை உங்கள் உலக வாழ்க்கையிலேயே முடித்துக் கொண்டீர்கள். அவற்றால் பயன் அடைந்துவிட்டீர்கள். நீங்கள் பூமியில் எவ்வித நியாயமுமின்றி பெருமையடித்துக் கொண்டிருந்ததற்கும், பாவம் செய்து கொண்டிருந்ததற்கும் பகரமாக இன்று உங்களுக்கு இழிவுமிக்க வேதனை கூலியாகத் தரப்படும். </span>
<span>46:21 ஆத் சமூகத்தாரின் சகோதரர் (ஹூது நபியுடைய) செய்தியை இவர்களுக்கு எடுத்துக் கூறும். அப்போது அவர் அஹ்காஃப் எனும் பகுதியில் தன் சமூகத்தாருக்கு இவ்வாறு எச்சரிக்கை செய்திருந்தார் எச்சரிக்கை செய்பவர்கள் அவருக்கு முன்பும் வாழ்ந்திருக்கிறார்கள். அவருக்குப் பிறகும் வந்து கொண்டிருந்தார்கள் அதாவது, “நீங்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அடிபணியாதீர்கள். உங்கள் விஷயத்தில் மிகப் பயங்கரமான ஒரு நாளின் வேதனைக்கு நான் அஞ்சுகின்றேன்!” </span>
<span>46:22 அப்போது அவர்கள் கூறினார்கள்: “எங்களை எங்கள் கடவுள்களை விட்டு திசை திருப்பவா நீர் வந்திருக்கின்றீர்? சரி! நீர் உண்மையாளர் எனில், எங்களை எந்த வேதனையைக் கூறி அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றீரோ அந்த வேதனையைக் கொண்டு வாரும்.” </span>
<span>46:23 அவர் கூறினார்: “இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. நான் எந்தத் தூதோடு அனுப்பப்பட்டிருக்கின்றேனோ அதனை மட்டுமே உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். ஆனால், அறியாமையில் மூழ்கியிருக்கும் சமுதாயமாக நான் உங்களைக் காண்கிறேன்.” </span>
<span>46:24 பின்னர், அந்த வேதனை தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்து கொண்டிருப்பதை அவர்கள் கண்டபோது கூறலாயினர். “இது நமக்கு மழையைப் பொழிவிக்கக்கூடிய மேகமாகும்” “இல்லை! மாறாக, நீங்கள் எதற்காக அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அதுதான் இது! இது புயல்காற்று; இதில் துன்புறுத்தும் வேதனை வந்து கொண்டிருக்கின்றது. </span>
<span>46:25 தன் இறைவனின் கட்டளையால் ஒவ்வொன்றையும் இது அழித்துவிடும்.” இறுதியில் அவர்களின் நிலைமை என்னவாயிற்று எனில், அவர்கள் வசித்த இல்லங்களைத் தவிர வேறு எதுவும் அங்கு தென்படவில்லை. இவ்வாறே, குற்றம்புரியும் மக்களுக்கு நாம் கூலி கொடுக்கின்றோம். </span>
<span>46:26 உங்களுக்கு நாம் தந்திடாத சிலவற்றை அவர்களுக்கு வழங்கி இருந்தோம். அவர்களுக்கு நாம், காதுகளையும், கண்களையும், இதயத்தையும் கொடுத்திருந்தோம். ஆனால், அவர்களின் காதுகளும், கண்களும் இதயமும் எந்தப் பயனையும் அவர்களுக்கு அளிக்கவில்லை. ஏனெனில், அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்தார்கள்! எதனை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அதுவே அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டது. </span>
<span>46:27 உங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல ஊர்களை நாம் அழித்திருக்கின்றோம். நாம் நம்முடைய வசனங்களை பல தடவை அருளி அவர்களுக்கு விதவிதமாக விளக்கினோம்; அவர்கள் திரும்பிவிடக்கூடும் என்பதற்காக! </span>
<span>46:28 அல்லாஹ்வை விடுத்து, இவர்கள் யாரை அல்லாஹ்வின் பக்கம் நெருங்குவதற்கான காரணமாகக் கருதிக்கொண்டு தமது கடவுளராக ஏற்படுத்திக் கொண்டார்களோ அவர்கள் இவர்களுக்கு ஏன் உதவி செய்யவில்லை? உண்மையாதெனில், அவர்கள் இவர்களைவிட்டுக் காணாமல் போய்விட்டார்கள்! இதுவே, இவர்களின் பொய்யும் இவர்கள் இட்டுக்கட்டிய கொள்கையின் விளைவுமாகும். </span> 
<span>46:29 (பின்வரும் நிகழ்ச்சியும் நினைவுகூரத்தக்கதாகும்:) ஒருபோது நாம் ஜின்களின் ஒரு குழுவினரை உம் பக்கம் கொண்டு வந்தோம்; அவை குர்ஆனைச் செவியுற வேண்டும் என்பதற்காக. (நீர் குர்ஆனை ஓதிக் கொண்டிருந்த) அந்த இடத்திற்கு அவை வந்து சேர்ந்தபோது தங்களுக்குள் பேசிக் கொண்டன: “மௌனமாய் இருங்கள்!” பின்னர் அது ஓதி முடிக்கப்பட்டபோது அந்த ஜின்கள் தம் கூட்டத்தாரிடம் எச்சரிக்கை செய்யக்கூடியவர்களாய்த் திரும்பிச் சென்றனர்;</span>
<span>46:30 சென்று கூறினர்: “எங்களின் சமூகத்தாரே! நாங்கள் மூஸாவுக்குப் பின் இறக்கியருளப்பட்டிருக்கும் ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது தனக்கு முன்பு வந்திருந்த வேதங்களை மெய்ப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. சத்தியத்தின் பக்கமும் நேரிய மார்க்கத்தின் பக்கமும் அது வழிகாட்டுகின்றது. </span>
<span>46:31 எங்கள் சமூகத்தாரே! அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். மேலும், அவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான். மேலும், துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றுவான்.” </span>
<span>46:32 இன்னும், யார் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருடைய சொல்லை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவர் பூமியில் (அல்லாஹ்வை) தோல்வியுறச் செய்திட எந்த வலிமையும் பெற்றிருக்கவில்லை. அல்லாஹ்விடமிருந்து அவரைப் பாதுகாக்கக் கூடிய எந்த ஆதரவாளர்களும் அவருக்கு இல்லை. இப்படிப்பட்டவர்கள் வெளிப்படையான வழிகேட்டில் கிடப்பவர்களாவர். </span>
<span>46:33 இந்த வானங்களையும் பூமியையும் படைத்தவனும் அவற்றைப் படைப்பதனால் களைப்புறாதவனுமாகிய அல்லாஹ், இறந்தவர்களை உயிர்ப்பித்து எழுப்புவதற்கு திண்ணமாக ஆற்றலுள்ளவன் என்பது இவர்களுக்குப் புலப்படவில்லையா? ஆம்! புலப்படுகிறது. திண்ணமாக, அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் கொண்டவனாயிருக்கின்றான். </span>
<span>46:34 மேலும், இந்நிராகரிப்பாளர்கள் நரகத்தின் முன்னால் கொண்டு வரப்படும் நாளில், அவர்களிடம் வினவப்படும்: “இது சத்தியம் இல்லையா?” அவர்கள் கூறுவார்கள்: “ஆம்! எங்கள் இறைவன்மீது ஆணையாக! இது உண்மையில், சத்தியம்தான்.” அல்லாஹ் கூறுவான்: “சரி! நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததற்குப் பதிலாக இப்போது வேதனையைச் சுவையுங்கள்.”</span>
<span>46:35 எனவே (நபியே!) நீரும் பொறுமையைக் கடைப்பிடிப்பீராக; மனஉறுதிமிக்க இறைத்தூதர்கள் கடைப்பிடித்த பொறுமையைப் போன்று! இவர்களின் விவகாரத்தில் அவசரப்படாதீர். இவர்களுக்கு எது பற்றி அச்சுறுத்தப்படுகின்றதோ அதை இவர்கள் கண்கூடாகப் பார்க்கும் நாளில் இவர்களுக்குப் புரிந்துவிடும்; ஒரு நாழிகையே அன்றி அதிகமாக உலகில் அவர்கள் தங்கியிருக்கவில்லை என்பது! செய்தி எடுத்துச்சொல்லப்பட்டு விட்டது; கீழ்ப்படியாத மக்களைத் தவிர வேறெவரேனும் இனி அழிவுக்குள்ளாக்கப்படுவார்களா, என்ன!</span>
</div><div>
<span>முஹம்மத்</span>
<span>47:1 எவர்கள் சத்தியத்தை நிராகரித்தார்களோ மேலும், அல்லாஹ்வின் வழியை விட்டுத் தடுத்தார்களோ அவர்களின் செயல்களை அல்லாஹ் வீணாக்கி விட்டான். </span>
<span>47:2 எவர்கள், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தார்களோ மேலும், முஹம்மதின் மீது இறக்கியருளப்பட்டதை அது முழுக்க முழுக்க அவர்களின் அதிபதியிடமிருந்து வந்த சத்தியமாகும் ஏற்றுக்கொண்டார்களோ அவர்களின் தீமைகளை அல்லாஹ் அவர்களை விட்டுக் களைந்து, அவர்களின் நிலைமையைச் சீர்திருத்திவிட்டான். </span>
<span>47:3 இதற்குக் காரணம், நிராகரிப்பாளர்கள் அசத்தியத்தைப் பின்பற்றினார்கள்; ஆனால், இறைநம்பிக்கையாளர்களோ தங்களின் இறைவனிடமிருந்து வந்த சத்தியத்தைப் பின்பற்றினார்கள். இவ்வாறு அல்லாஹ் மக்களுக்கு அவர்களின் சரியான அந்தஸ்தைக் காண்பித்துக் கொடுக்கின்றான். </span>
<span>47:4 எனவே, இறைநிராகரிப்பாளர்களை நீங்கள் போரில் சந்திக்க நேர்ந்தால் முதல் வேலை கழுத்துகளை வெட்டுவதுதான்! அவ்வாறு அவர்களை நீங்கள் முற்றிலும் அடக்கி ஒடுக்கி விட்டால் கைதிகளை இறுக்கமாகக் கட்டிவிடுங்கள்; அதன் பிறகு (அவர்களின் மீது நீங்கள்) கருணை காட்டலாம்; அல்லது ஈட்டுத் தொகை பெறலாம்; (உங்களுக்கு இதற்கான உரிமை இருக்கிறது) போர் ஓயும் வரையில் இதுதான் நீங்கள் செய்யவேண்டிய பணி. அல்லாஹ் நாடியிருந்தால் அவனே அவர்களுக்குப் பதிலடி கொடுத்திருப்பான். ஆயினும் (இந்த வழியை அவன் மேற்கொண்டது) உங்களில் சிலரை வேறு சிலரைக் கொண்டு சோதிப்பதற்காகத்தான்! மேலும், எவர்கள் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுவார்களோ, அவர்களின் செயல்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கி விட மாட்டான். </span>
<span>47:5 அவன் அவர்களுக்கு வழிகாட்டுவான்; அவர்களின் நிலைமையைச் சீர்படுத்துவான். </span>
<span>47:6 மேலும், எந்தச் சுவனத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கின்றானோ, அந்தச் சுவனத்தில் அவர்களை நுழைவிப்பான். </span>
<span>47:7 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவிபுரிந்தால் அவன் உங்களுக்கு உதவி வழங்குவான். மேலும், உங்களின் பாதங்களை உறுதிப்படுத்துவான். </span>
<span>47:8 ஆனால், யார் நிராகரித்தார்களோ, அவர்களுக்கு அழிவுதான்! மேலும், அல்லாஹ் அவர்களுடைய செயல்களைப் பயனற்றதாக்கிவிட்டிருக்கிறான். </span>
<span>47:9 அதற்குக் காரணம், அல்லாஹ் இறக்கிவைத்ததை அவர்கள் வெறுத்தார்கள். எனவே, அல்லாஹ் அவர்களின் செயல்களை வீணாக்கிவிட்டான். </span>
<span>47:10 அவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து அவர்களுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் கதி என்னவாயிற்று என்று பார்க்கவில்லையா? அவர்களுக்குரிய அனைத்தையும் அவர்களுக்கு எதிராகவே அல்லாஹ் திருப்பிவிட்டான். மேலும், இதைப் போன்ற விளைவுகள்தாம் இந்த நிராகரிப்பாளர்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. </span>
<span>47:11 இதற்குக் காரணம், நம்பிக்கையாளர்களுக்குப் பாதுகாவலனாகவும், உதவி புரிபவனாகவும் அல்லாஹ் இருக்கின்றான் என்பதே! மேலும், நிராகரிப்பாளர்களுக்குப் பாதுகாவலனும் உதவியாளனும் எவரும் இல்லை. </span>
<span>47:12 இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிவோரைத் திண்ணமாக அல்லாஹ் சுவனங்களில் புகுத்துவான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். மேலும், நிராகரிப்பாளர்கள் உலகின் சிலநாள் வாழ்வின் சுவையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். கால்நடைகளைப் போன்று உண்டு, பருகிக்கொண்டிருக்கின்றார்கள். மேலும், அவர்கள் இறுதியில் சென்றடையும் இடம் நரகமாகும். </span>
<span>47:13 (நபியே!) உம்மை வெளியேற்றிய உம்முடைய ஊரை விடவும் அதிக வலிமை கொண்ட எத்தனையோ ஊர்கள் இருந்திருக்கின்றன. அவற்றை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். பிறகு அவர்களைக் காப்பாற்றுபவர் யாரும் இருக்கவில்லை. </span>
<span>47:14 தம் அதிபதியிடமிருந்து வந்த தெளிவான வழிகாட்டுதலில் இருப்பவர், எவர்களுக்குத் தங்களின் தீயசெயல்கள் அழகாக்கப்பட்டு தங்களின் மன இச்சைகளைப் பின்பற்றி வாழ்கின்றார்களோ அவர்களுக்கு சமம் ஆக முடியுமா, என்ன? </span>
<span>47:15 இறையச்சமுள்ளவர்களுக்கு சுவனம் வாக்களிக்கப்பட்டிருக்கின்றது. அதன் மகத்துவம் இதுவே: அதில் தூய்மையான நீராறுகளும், சிறிதும் சுவை குன்றாத பாலாறுகளும், குடிப்பவர்களுக்கு சுவையூட்டும் மது ஆறுகளும், சுத்தமான தேன் ஆறுகளும் ஓடிக்கொண்டிருக்கும். மேலும், அங்கே அவர்களுக்கு எல்லாவிதமான கனிகளும் இருக்கும். அவர்களின் இறைவனிடமிருந்து மன்னிப்பும் கிடைக்கும். (இத்தகைய சுவனப்பேறுகளைப் பெறும் மனிதர்களுக்கு) நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்து கிடந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு, குடல்களெல்லாம் துண்டு துண்டாக்கப்படுகின்றவர்கள் ஒப்பாவார்களா?</span>
<span>47:16 அவர்களில் சிலர் உமது பேச்சைக் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். பிறகு, உம்மைவிட்டு வெளியே சென்றால், ஞானம் வழங்கப்பட்டவர்களிடம் கேட்கின்றார்கள்: ‘இவர் இப்போது என்ன சொன்னார்?’ இத்தகையோரின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். மேலும், இவர்கள் தங்களின் மன இச்சைகளைப் பின்பற்றுவோராய் இருக்கின்றனர். </span>
<span>47:17 ஆனால், எவர்கள் நேர்வழி பெற்றிருக்கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் நேர்வழியில் இன்னும் அதிக முன்னேற்றத்தை அளிக்கின்றான். அவர்களுக்குரிய இறையச்சம் எனும் தன்மையையும் அவர்களுக்கு வழங்குகின்றான். </span>
<span>47:18 என்ன, இந்த மக்கள் மறுமைநாள் தங்களிடம் திடீரென வந்துவிட வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கின்றார்களா? அதன் அடையாளங்கள் வந்துவிட்டனவே! அந்நாளே அவர்களிடம் வந்துவிட்டால், அறிவுரையை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு எந்த வாய்ப்புதான் எஞ்சி இருக்கப்போகிறது?</span>
<span>47:19 (நபியே!) நன்கு அறிந்துகொள்ளும்: அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவரும் இல்லை. மேலும், உம் பிழைகளுக்காகவும் இறைநம்பிக்கைகொண்ட ஆண்கள், பெண்களுக்காகவும் மன்னிப்புக் கேளும்! அல்லாஹ் உங்கள் செயல்பாடுகளையும் அறிகிறான்; உங்கள் தங்குமிடத்தையும் அறிகிறான். </span>
<span>47:20 “(போர் புரியும் படி ஆணையிடும்) ஓர் அத்தியாயம் எதுவும் ஏன் இறக்கியருளப்படுவதில்லை?” என்று இறைநம்பிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால், போர் பற்றிக் கூறப்பட்ட உறுதியான ஓர் அத்தியாயம் இறக்கியருளப்பட்டபோது, உள்ளங்களில் பிணி இருந்தவர்கள் மரணத்தால் சூழப்பட்டவன் பார்ப்பதைப் போன்று உம்மைப் பார்த்ததை நீர் கண்டீர்! அந்தோ, அவர்களுடைய நிலை பரிதாபத்துக்குரியதுதான். </span>
<span>47:21 ‘கீழ்ப்படிந்தோம்’ என்று ஒப்புக்கொள்வதும், நல்ல நல்ல சொற்கள் பேசுவதும் (அவர்களின் உதட்டளவில்தான் உள்ளன!) திட்டவட்டமான கட்டளை கொடுக்கப்பட்டபோது, அல்லாஹ்விடம் அவர்கள் அளித்த வாக்குறுதியில் உண்மையானவர்களாய் அவர்கள் நடந்திருந்தால், அது அவர்களுக்கு நல்லதாய் இருந்திருக்கும். </span>
<span>47:22 இனி இது தவிர வேறெதையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியுமா? நீங்கள் பின்வாங்கிச் செல்வீர்களாயின் பூமியில் நீங்கள் மீண்டும் அராஜகம் விளைவிப்பீர்கள் என்பதையும் மேலும், நீங்கள் பரஸ்பரம் உங்கள் உறவுகளைத் துண்டித்துவிடுவீர்கள் என்பதையும் தவிர!</span>
<span>47:23 இத்தகையோரை அல்லாஹ் சபித்துவிட்டான். மேலும், அவர்களைச் செவிடர்களாயும், குருடர்களாயும் ஆக்கி விட்டான். </span>
<span>4724 இவர்கள் குர்ஆனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களின் இதயங்கள் மீது பூட்டுகள் போடப்பட்டிருக்கின்றனவா? </span>
<span>47:25 உண்மையாதெனில், எவர்கள் தங்களுக்கு நேர்வழி தெளிவாகிவிட்ட பின்னர் அதனைப் புறக்கணித்துச் சென்று விட்டார்களோ, அவர்களுக்கு ஷைத்தான் இந்த நடத்தையை இலகுவாக்கி விட்டான். மேலும், அவர்களுக்காக பொய்யான எதிர்பார்ப்புகளின் ஒரு படலத்தை நீட்டிக் கொண்டே போகின்றான்.  </span>
<span>47:26 ஆகவேதான், அல்லாஹ் இறக்கியருளிய மார்க்கத்தை வெறுப்பவர்களிடம் அவர்கள் கூறிவிட்டார்கள், “சில விவகாரங்களில் நாங்கள் உங்களுக்குக் கீழ்ப்படிவோம்” என்று! அல்லாஹ் அவர்களின் இந்த இரகசியப் பேச்சுகளை நன்கு அறிகின்றான். </span>
<span>47:27 பின்னர் அவர்களின் முகங்களிலும் முதுகுகளிலும் அடித்தவாறு அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றிக் கொண்டு செல்லும்போது நிலைமை எப்படியிருக்கும்? </span>
<span>47:28 அதற்குக் காரணம், அல்லாஹ்வுக்குக் கோபமூட்டும் வழிமுறைகளை இவர்கள் பின்பற்றியதும், அவனது உவப்பைப் பெறும் பாதையை அவர்கள் விரும்பாததும்தான். இதனால், அவர்களின் செயல்கள் அனைத்தையும் அவன் வீணாக்கிவிட்டான். </span>
<span>47:29 எவர்களுடைய உள்ளங்களில் பிணி இருக்கிறதோ அவர்கள், தங்கள் உள்ளங்களில் உள்ள குரோதங்களை அல்லாஹ் வெளிப்படுத்தமாட்டான் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்களா, என்ன? </span>
<span>47:30 நாம் விரும்பினால் அவர்களை உமக்குக் கண் கூடாய்க் காட்டித் தந்திருப்போம். அப்போது, அவர்களின் முக அடையாளங்கள் மூலம் நீர் அவர்களை அறிந்துகொள்வீர். ஏன், அவர்கள் பேசும் தொனியிலிருந்தும் அவர்களை நீர் அறிந்துகொள்வீர். அல்லாஹ் உங்கள் அனைவரின் செயல்களையும் நன்கு அறிந்திருக்கின்றான். </span>
<span>47:31 நாம் உங்களை நிச்சயமாகச் சோதனைக்குள்ளாக்குவோம் உங்கள் நிலைமைகளைப் பரிசீலித்து உங்களில் யார் முஜாஹிதுகள் போராளிகள், நிலைகுலையாது துணிச்சலுடன் இருப்பவர்கள் என்பதை நாம் கண்டறிவதற்காக!</span>
<span>47:32 எவர்கள் நேரியவழி தங்களுக்குத் தெளிவாகி விட்ட பிறகு நிராகரிக்கவும், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுக்கவும், தூதரைக் கடுமையாக எதிர்க்கவும் செய்தார்களோ, அவர்களால் உண்மையில் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் இழைத்திட முடியாது. மாறாக, அல்லாஹ் அவர்களுடைய செயல்கள் அனைத்தையும் பாழாக்கி விடுவான். </span>
<span>47:33 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; மேலும், உங்களுடைய செயல்களை வீணாக்கி விடாதீர்கள். </span>
<span>47:34 எவர்கள் நிராகரிப்பவர்களாகவும், இறைவழியிலிருந்து தடுக்கக்கூடியவர்களாகவும் இருக்கிறார்களோ, மேலும் நிராகரிப்பிலேயே பிடிவாதமாக இருந்து, அதே நிலையில் மரணமும் அடைகிறார்களோ அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான். </span>
<span>47:35 எனவே, நீங்கள் தைரியமிழந்து விடாதீர்கள். மேலும், சமாதானத்தைக் கோராதீர்கள். நீங்கள்தாம் வெற்றி பெறக்கூடியவர்கள்! அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான். மேலும், உங்கள் செயல்களை அவன் ஒருபோதும் வீணாக்கமாட்டான். </span>
<span>47:36 இந்த உலக வாழ்க்கை விளையாட்டும் வேடிக்கையும் ஆகும். நீங்கள் இறைநம்பிக்கை கொண்டு இறையச்சத்தின்படி வாழ்வீர்களாயின், உங்களுக்குரிய கூலியை அல்லாஹ் உங்களுக்கு வழங்குவான். மேலும், உங்களுடைய செல்வங்களை உங்களிடம் அவன் கேட்கமாட்டான். </span>
<span>47:37 ஒருவேளை உங்கள் செல்வங்களை உங்களிடமிருந்து அவன் கேட்டால், மேலும் உங்களிடமிருந்து எல்லாவற்றையும் கேட்டால் நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள்; அது நீங்கள் கொண்டிருக்கும் குரோதங்களை வெளிக்கொணரும். </span>
<span>47:38 இதோ! (பாருங்கள்:) அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யுங்கள் என்று, உங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது. இவ்விஷயத்தில் கஞ்சத்தனம் காட்டுகின்ற சிலர் உங்களில் இருக்கின்றனர். ஆனால், யார் கஞ்சத்தனம் செய்கிறாரோ, அவர் உண்மையில் தன் விஷயத்திலேயே கஞ்சத்தனம் செய்து கொண்டிருக்கிறார். அல்லாஹ்வோ தேவைகள் அற்றவன். நீங்கள்தாம் (அவன் பக்கம்) தேவையுடையோர்களாய் இருக்கின்றீர்கள். நீங்கள் புறக்கணித்துவிட்டால், அல்லாஹ் உங்களுடைய இடத்தில் வேறு ஒரு சமுதாயத்தைக் கொண்டு வருவான்; மேலும், அவர்கள் உங்களைப் போல் இருக்கமாட்டார்கள். </span>
</div><div>
<span>அல் ஃபத்ஹ்</span>
<span>48:1 (நபியே!) நாம் உமக்கு வெளிப்படையான வெற்றியை அளித்துவிட்டிருக்கிறோம். </span>
<span>48:2 உம்முடைய முந்திய, பிந்திய குறைகளை அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், அவன் தனது அருட்கொடையை உம்மீது நிறைவு செய்து, உமக்கு நேர்வழியைக் காட்டுவதற்காகவும், </span>
<span>48:3 இன்னும் மகத்தான உதவியை அவன் உமக்கு வழங்குவதற்காகவும்தான்! </span>
<span>48:4 அவன்தான் இறை நம்பிக்கையாளர்களின் இதயங்களில் ‘ஸகீனத்’ நிம்மதியை இறக்கியருளினான்; அவர்கள் தங்களின் நம்பிக்கையுடன் இன்னும் அதிகமான நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வதற்காக! வானங்கள் மற்றும் பூமியிலுள்ள படைகள் யாவும் அல்லாஹ்வின் வல்லமையின் கீழ் உள்ளன. மேலும், அவன் மிகவும் அறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான். </span>
<span>48:5 (அவன் எதற்காக இவ்வாறெல்லாம் செய்துள்ளானெனில்) இறைநம்பிக்கையாளர்களான ஆண்களையும், பெண்களையும் நிரந்தரமாக வாழச் செய்வதற்காக! கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்களில் நுழையச் செய்வதற்காகவும் மேலும், அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டு களைவதற்காகவும்தான். அல்லாஹ்விடத்தில் இது மகத்தான வெற்றியாக இருக்கிறது </span>
<span>48:6 மேலும், நயவஞ்சகர்களான ஆண்களுக்கும், பெண்களுக்கும், இணை வைப்பாளர்களான ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவன் தண்டனை அளிப்பதற்காகவும்தான்! அவர்களோ அல்லாஹ்வைப் பற்றி தீய எண்ணம் கொண்டிருக்கிறார்கள். தீமையின் சுழற்சியில் தாமே வீழ்ந்து விட்டார்கள். அல்லாஹ்வின் கோபம் அவர்கள் மீது இறங்கியது. மேலும், அவன் அவர்களைச் சபித்தான். நரகத்தை அவர்களுக்காகத் தயார் செய்து வைத்திருக்கின்றான். அது மிகவும் மோசமான இருப்பிடமாகும். </span>
<span>48:7 வானங்கள் மற்றும் பூமியின் படைகள் அல்லாஹ்வுடைய வல்லமையின் கீழ் உள்ளன. மேலும், அவன் மிக வல்லமைமிக்கவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>48:8 (நபியே!) நாம் உம்மைச் சான்று வழங்குபவராகவும் நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம்; </span>
<span>48:9 (எதற்காகவெனில் மக்களே!) நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்வதற்காகவும், அவருக்கு (தூதருக்கு) உறுதுணையாய் இருப்பதற்காகவும், அவரைக் கண்ணியப்படுத்துவதற்காகவும் மேலும், காலையிலும் மாலையிலும் நீங்கள் அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டிருப்பதற்காகவும்தான்!</span>
<span>48:10 (நபியே!) எவர்கள் உம்மிடம் உறுதிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தார்களோ அவர்கள் உண்மையில் அல்லாஹ்விடம் உறுதிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தவர்களாவர். அவர்களுடைய கைகள் மீது அல்லாஹ்வின் கை இருந்தது. ஆகவே யாரேனும் இந்த உறுதிப் பிரமாணத்தை முறித்தால், அதை முறித்ததன் கேடு அவரையே சூழும். மேலும், எவர் அல்லாஹ்விடம் தான் செய்திருந்த உறுதிப் பிரமாணத்தை நிறைவேற்றுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் அதிவிரைவில் மகத்தான கூலியை வழங்குவான். </span>
<span>48:11 (நபியே!) பின்தங்கியிருந்துவிட்ட நாட்டுப்புற அரபிகள் திண்ணமாக இப்போது உம்மிடம் வந்து சொல்வார்கள்: “எங்களுடைய செல்வங்கள், மனைவி மக்கள் பற்றிய கவலைகள்தாம் எங்களை முற்றிலும் ஈர்த்து விட்டிருந்தன. எனவே, தாங்கள் எங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்.” இவர்கள் தங்கள் உள்ளங்களில் இல்லாதவற்றைத் தம் நாவுகளால் கூறுகிறார்கள். அவர்களிடம் நீர் கேளும்: “சரி, அவ்வாறெனில் உங்கள் விவகாரத்தில் அல்லாஹ்வின் தீர்ப்பை அல்லாஹ் உங்களுக்கு ஏதேனும் நஷ்டத்தை அளிக்க அல்லது நன்மையை வழங்க நாடினால் அதைத் தடுத்திடும் அளவுக்கு சிறிதேனும் அதிகாரம் பெற்றவர் யாரேனும் உண்டா?” ஆனால், உங்களின் செயல்களை அல்லாஹ்தான் நன்கு அறிந்தவனாக இருக்கிறான். </span>
<span>48:12 (உண்மை நிலவரம் நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பதன்று.) மாறாக, இறைத்தூதரும் இறைநம்பிக்கையாளர்களும் தங்களின் இல்லத்தாரிடம் ஒருபோதும் திரும்பி வரமாட்டார்கள் என்று நீங்கள் கருதிக் கொண்டிருந்தீர்கள். இந்தக் கருத்து உங்கள் உள்ளங்களுக்கு அழகாகத் தென்பட்டது. மேலும், நீங்கள் மிகப்பெரிய தீய எண்ணம் கொண்டுவிட்டீர்கள். நீங்கள் மிகவும் கொடிய உள்ளம் படைத்த மக்களாவீர். </span>
<span>48:13 அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் எவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையோ அத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு கொழுந்து விட்டெரியும் நெருப்பை நாம் தயார் செய்து வைத்துள்ளோம். </span>
<span>48:14 வானங்கள் மற்றும் பூமியினுடைய ஆட்சிக்கு உரிமையாளன் அல்லாஹ்வே ஆவான். அவன் நாடுகின்றவர்களை மன்னிக்கின்றான்; நாடுகின்றவர்களுக்குத் தண்டனை அளிக்கின்றான். மேலும், அவன் பெரும் மன்னிப்பாளனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான். </span>
<span>48:157 போர்ச் செல்வங்களை (கனீமத்) கைப்பற்றுவதற்காக நீங்கள் செல்லும்போது, போருக்குச் செல்லாமல் பின்தங்கியிருந்த இவர்கள் உங்களிடம் திண்ணமாகக் கூறுவார்கள்: “எங்களையும் உங்களுடன் வருவதற்கு அனுமதியுங்கள்.” இவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை மாற்றிவிட நினைக்கின்றார்கள். இவர்களிடம் நீர் தெளிவாகக் கூறிவிடும்: “எங்களுடன் வருவதற்கு உங்களால் ஒருபோதும் இயலாது. இதனை அல்லாஹ் முன்னரே கூறிவிட்டான்.” இதற்கு அவர்கள் கூறுவார்கள்: “இல்லை, நீங்கள்தாம் எங்கள் மீது பொறாமைப்படுகின்றீர்கள்.” (ஆனால், விஷயம் பொறாமையைப் பற்றியதல்ல.) மாறாக, இவர்கள் உண்மை நிலையைக் குறைவாகவே புரிந்து கொள்கிறார்கள். </span>
<span>48:16 பின்தங்கியிருந்து விட்ட இந்த நாட்டுப்புற அரபிகளிடம் நீர் கூறும்: “நீங்கள் மிக அதிக வலிமை கொண்ட மக்களுடன் போரிடுமாறு விரைவில் அழைக்கப்படுவீர்கள் நீங்கள் அவர்களுடன் போரிட வேண்டியிருக்கும். அல்லது அவர்கள் அடிபணிந்து விடுவார்கள். அப்போது ஜிஹாதுக்கான கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால், அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவான். அவ்வாறின்றி நீங்கள் முன்னர் செய்தது போன்று மீண்டும் புறக்கணித்தால், அல்லாஹ் உங்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை அளிப்பான்.” </span>
<span>48:17 ஆம்! குருடர், முடவர் மற்றும் நோயாளி ஆகியோர் (போருக்கு வரவில்லையென்றால் அவர்கள்) மீது குற்றமேதும் இல்லை. அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் கீழ்ப்படிந்தால் அவரை அல்லாஹ் சுவனங்களில் புகுத்துவான்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். மேலும், எவரேனும் புறக்கணித்தால் அவருக்குத் துன்புறுத்தும் தண்டனை அளிப்பான். </span>
<span>48:18 இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டிருந்தபோது அல்லாஹ் அவர்களைக் குறித்து திருப்தி கொண்டான். அவர்களுடைய உள்ளங்களின் நிலைமைகளை அவன் அறிந்திருந்தான். இதனால், அவன் அவர்கள் மீது நிம்மதியை இறக்கியருளினான். விரைவில் கிடைக்கும் வெற்றியையும் அவர்களுக்கு வெகுமதியாக வழங்கினான். </span>
<span>48:19 ஏராளமான போர்ச்செல்வங்களையும் அவர்களுக்கு வழங்கினான். அவற்றை அவர்கள் (விரைவில்) பெற்றிடுவார்கள். அல்லாஹ் மிக வல்லமை மிக்கவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>48:20 ஏராளமான போர்ச்செல்வங்கள் குறித்து அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்திருக்கின்றான்; அவற்றை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்! மிக விரைவாக இந்த வெற்றியை அவன் உங்களுக்கு வழங்கியுள்ளான். மேலும், மக்களின் கைகள் உங்களுக்கெதிராக உயர்வதைத் தடுத்துவிட்டான்; இது இறைநம்பிக்கையாளர்களுக்கு ஒரு சான்றாகத் திகழ்வதற்காகவும், அல்லாஹ், நேர்வழியின் பக்கம் செல்லும் பேற்றினை உங்களுக்கு வழங்குவதற்காகவும்தான்!</span>
<span>48:21 (இவை தவிர) இப்போது உங்களால் சாதிக்க முடியாத வேறு பல கனீமத் போர்ச் செல்வங்களையும் அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்துள்ளான். அல்லாஹ் அவற்றை முழுமையாகச் சூழ்ந்திருக்கின்றான் மேலும், அல்லாஹ் ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கின்றான். </span> 
<span>48:22 இந்த இறைநிராகரிப்பாளர்கள் (இந்த நேரத்தில்) உங்களுடன் போரிட்டிருந்தால் நிச்சயம் புறங்காட்டி ஓடியிருப்பார்கள். மேலும், எந்தப் பாதுகாவலரையும் உதவியாளரையும் பெற்றிருக்க மாட்டார்கள். </span>
<span>48:23 முன்பிருந்தே நடைபெற்று வருகின்ற அல்லாஹ்வின் நியதியாகும் இது. மேலும், அல்லாஹ்வின் நியதியில் எந்த மாறுதலையும் நீர் காண மாட்டீர். </span>
<span>48:24 அவனே, மக்காவின் பள்ளத்தாக்கில், அவர்களின் கைகளை உங்களை விட்டும், உங்களின் கைகளை அவர்களை விட்டும் தடுத்தான். அந்நிலையில் அவர்களின் மீது உங்களுக்கு வெற்றியையும் கொடுத்திருந்தான். மேலும், நீங்கள் செய்துகொண்டிருந்தவை அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருந்தான். </span>
<span>48:25 அவர்கள்தாம் இறைவனை நிராகரித்தவர்களும் புனிதமிகு இறையில்லத்திற்குச் செல்லவிடாமல் உங்களைத் தடுத்தவர்களும், பலியிடப்படும் ஒட்டகங்களை அவற்றின் பலி இடத்தைச் சென்றடையாமல் தடுத்தவர்களும் ஆவர். உங்களுக்குத் தெரிந்திராத இறைநம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் (மக்காவில்) இல்லையென்றால் அறியாத நிலையில் அவர்களை நீங்கள் நசுக்கி விடுவீர்கள்; அதனால் உங்கள் மீது குற்றம் சுமத்தப்படும் எனும் அபாயம் இல்லாதிருந்தால் (போர் நிறுத்தப்பட்டிருக்காது. அதே நேரத்தில்) அல்லாஹ் தான் நாடுபவர்களைத் தன்னுடைய கருணையினுள் நுழையச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் (போர் நிறுத்தப்பட்டது)! அந்த நம்பிக்கையாளர்கள் விலகியிருப்பார்களேயானால் (மக்காவாசிகளில்) எவர்கள் இறைநிராகரிப்பாளர்களாய் இருந்தார்களோ அவர்களுக்கு நாம் நிச்சயம் கடும் தண்டனை அளித்திருப்போம். </span>
<span>48:26 (இதே நோக்கத்திற்காக) இந்த இறைநிராகரிப்பாளர்கள் தங்களின் உள்ளங்களில் வைராக்கியத்தை மூட வைராக்கியத்தை ஏற்படுத்திக் கொண்டபோது அல்லாஹ் தன்னுடைய தூதர் மீதும், நம்பிக்கையாளர்கள் மீதும் நிம்மதியை இறக்கியருளினான். மேலும், நம்பிக்கையாளர்களை இறையச்சமுள்ள வாக்கைப் பேணி நடப்போராய் விளங்கச் செய்தான். அவர்கள்தாம் அதற்கு மிகவும் அருகதையுடையோராயும், உரிமையுடையோராயும் இருந்தார்கள். அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். </span>
<span>48:27 உண்மை யாதெனில், அல்லாஹ் தன் தூதருக்கு உண்மையான கனவையே காட்டியிருந்தான். அதுவோ முற்றிலும் சத்தியத்திற்கு ஏற்பவே இருந்தது. அல்லாஹ் நாடினால் நிச்சயம் நீங்கள் சங்கைமிகு பள்ளிவாசலில் முழு அமைதியுடன் நுழைவீர்கள்; உங்கள் தலைமுடியை மழிப்பீர்கள் அல்லது குறைப்பீர்கள்; மேலும், உங்களுக்கு எந்த அச்சமும் இருக்காது. நீங்கள் எதை அறியாதிருந்தீர்களோ அதை அவன் அறிந்திருந்தான். எனவே அந்தக் கனவு நிறைவேறுவதற்கு முன்பாக அண்மையிலுள்ள இந்த வெற்றியை அவன் உங்களுக்கு வழங்கியுள்ளான். </span>
<span>48:28 அல்லாஹ்தான் தன்னுடைய தூதரை வழிகாட்டுதலுடனும், சத்தியமார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான். அவர், அந்த மார்க்கத்தை ஏனைய அனைத்து மார்க்கங்களை விடவும் மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக! இந்த உண்மைக்கு அல்லாஹ்வின் சாட்சி போதுமானதாகும். </span>
<span>48:29 முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் ஆவார். அவருடன் இருப்பவர்கள் நிராகரிப்பாளர்களைப் பொறுத்துக் கடினமானவர்களும் தங்களுக்கிடையே கருணைமிக்கவர்களுமாவர். அவர்கள் ருகூவு, ஸுஜூது* செய்பவர்களாயும், அல்லாஹ்வின் அருளையும், திருப்தியையும் தேடுபவர்களாயும் இருப்பதை நீர் காண்பீர். அவர்களின் முகங்களில் ஸுஜூதின் அடையாளங்கள் இருக்கின்றன. அவற்றின் மூலம் அவர்கள் அறிந்து கொள்ளப்படுகிறார்கள். இது தவ்ராத்தில் • காணப்படுகின்ற அவர்களின் தன்மையாகும். மேலும், இன்ஜீலில் # அவர்களுக்குச் சொல்லப்பட்டுள்ள உவமை வருமாறு: ஒரு பயிர்; அது முதலில் குருத்தை வெளிப்படுத்தியது. பின்னர் அதை வலுப்படுத்தியது; பின்னர் அது பருத்தது. பிறகு, அது தன்னுடைய தண்டின் மீது செவ்வனே நின்றது. விவசாயிகளை அது மகிழ்விப்பதற்காகவும், அவர்கள் பூத்துக் குலுங்குவதைக் கண்டு நிராகரிப்பாளர்கள் பொறாமை அடைவதற்காகவும்தான்! இக்குழுவினரில் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்பவர்களுக்கு மன்னிப்பையும் மகத்தான கூலியையும் அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். </span>
</div><div>
<span>அல் ஹுஜுராத்</span>
<span>49:1 இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் முன்னிலையில் முந்தாதீர்கள்! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் செவியேற்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>49:2 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள். மேலும், ஒருவர் மற்றவரிடம் உரத்த குரலில் பேசிக் கொள்வதைப் போல், நபியிடம் உரத்த குரலில் பேசாதீர்கள். நீங்கள் செய்த செயல்கள் அனைத்தும் வீணாகிவிட வேண்டாம், நீங்கள் அதனை அறியாத நிலையில்! </span>
<span>49:3 திண்ணமாக, எவர்கள் இறைத்தூதரின் திருமுன் (உரையாடும்போது) தங்கள் குரலைத் தாழ்த்துகின்றார்களோ உண்மையில் அத்தகையவர்களின் உள்ளங்களை இறையச்சத்திற்காக அல்லாஹ் பரிசோதித்துத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் இருக்கின்றன. </span>
<span>49:4 (நபியே, உமது) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மைக் கூப்பிடுவோரில் பெரும்பாலோர் அறியாதவர்களே! </span>
<span>49:5 நீர் வெளியே வரும் வரையில் அவர்கள் பொறுமையுடன் இருந்திருந்தால், அது அவர்களுக்கே நலம் தரத்தக்கதாய் இருந்திருக்கும். அல்லாஹ் பெரிதும் பிழை பொறுப்பவனாகவும் கிருபையுள்ளவனாகவும் இருக்கின்றான். </span>
<span>49:6 இறைநம்பிக்கை கொண்டவர்களே! தீயவன் ஒருவன் ஏதேனும் ஒரு செய்தி உங்களிடம் கொண்டு வந்தால், அதன் உண்மைநிலையை நன்கு விசாரித்துத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் தெரியாத்தனமாக ஏதேனும் ஒரு கூட்டத்தினர்க்கு தீங்கிழைத்துவிட்டுப் பின்னர் உங்கள் செயலுக்காக வருந்தும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது. </span>
<span>49:7 நன்றாக அறிந்து கொள்ளுங்கள்; உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கின்றார்; பல விவகாரங்களில் உங்கள் சொல்லை அவர் ஏற்றுக் கொள்வாராயின், நீங்கள்தாம் கஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்கள். ஆனால், அல்லாஹ் உங்களுக்கு (ஈமானில்) நம்பிக்கையில் பற்றுதலை ஏற்படுத்தினான். அதனை உங்கள் உள்ளத்திற்கு உகந்ததாய் ஆக்கினான். மேலும், நிராகரிப்பையும் பாவம்புரிவதையும் மாறுசெய்வதையும் உங்களுக்கு வெறுப்புக்குரியனவாய் ஆக்கினான். இத்தகையவர்களே நேரியவழியில் இருப்பவர்கள்; </span>
<span>49:8 அல்லாஹ்வின் அருளாலும் தயவாலும். இன்னும் அல்லாஹ் மிகவும் அறிந்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>49:9 மேலும், இறைநம்பிக்கையாளர்களில் இரு குழுவினர் தங்களுக்குள் போரிட நேர்ந்தால் அவர்களிடையே சமரசம் செய்து வையுங்கள். பிறகு, அவர்களில் ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரிடம் வரம்புமீறி நடந்து கொண்டால், வரம்புமீறிய குழுவினருடன் அவர்கள், அல்லாஹ்வின் கட்டளையின்பால் திரும்பும் வரை அவர்களுடன் போர் புரியுங்கள். அப்படி அவர்கள் திரும்பிவிட்டால், அவர்களிடையே நீதியுடன் சமரசம் செய்து வையுங்கள்; இன்னும் நீதி செலுத்துங்கள். திண்ணமாக, அல்லாஹ் நீதிசெலுத்துபவர்களை நேசிக்கின்றான். </span>
<span>49:10 இறைநம்பிக்கையாளர்கள், ஒருவர் மற்றவருக்குச் சகோதரர் ஆவார்கள். எனவே, உங்கள் சகோதரர்களுக்கிடையே தொடர்புகளைச் சீர்படுத்துங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் மீது கருணை பொழியப்படக் கூடும். </span>
<span>49:11 இறைநம்பிக்கையாளர்களே, எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களைவிடச் சிறந்தவர்களாயிருக்கலாம். எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களைவிடச் சிறந்தவர்களாயிருக்கலாம். நீங்கள் ஒருவரையொருவர் குத்திப் பேசாதீர்கள். ஒருவருக்கொருவர் மோசமான பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள். இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமான பெயர்களைச் சூட்டுவது மிகவும் கெட்ட விஷயமாகும். எவர்கள் இந்த நடத்தையைக் கைவிடவில்லையோ அவர்கள்தாம் கொடுமைக்காரர்கள். </span>
<span>49:12 இறைநம்பிக்கை கொண்டவர்களே! அதிகமாக சந்தேகம் கொள்வதைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன. மேலும் துப்பறிவதில் ஈடுபடாதீர்கள். இன்னும் உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்துவிட்ட தன் சகோதரரின் இறைச்சியை உண்ண விரும்புவாரா, என்ன? பாருங்கள்! நீங்களே அதனை அருவருப்பாய்க் கருதுகின்றீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; திண்ணமாக, அல்லாஹ் பாவமன்னிப்புக் கோரிக்கையைப் பெரிதும் ஏற்றுக் கொள்பவனாகவும், பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றான். </span> 
<span>49:13 மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும், தெரிந்தவனாகவும் இருக்கின்றான். </span>
<span>49:14 இந்த நாட்டுப்புற அரபிகள் கூறுகின்றார்கள்: “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்.” இவர்களிடம் நீர் கூறும்: “நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை; வேண்டுமானால், ‘நாங்கள் கீழ்ப்படிந்தோம்’ என்று கூறுங்கள். நம்பிக்கை இன்னும் உங்கள் இதயங்களில் நுழையவில்லை. நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் அடிபணிந்தீர்களாயின், அவன் உங்கள் செயல்களுக்கான கூலியில் எந்தக் குறையும் வைக்கமாட்டான். திண்ணமாக, அல்லாஹ் பெரிதும் பிழைபொறுப்பவனாகவும் கிருபைமிக்கவனாகவும் இருக்கின்றான். </span>
<span>49:15 உண்மையில், இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள். பிறகு அவர்கள் எவ்வித ஐயமும் கொள்வதில்லை. மேலும், தங்களுடைய செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் வழியில் போராடுகிறார்கள். அத்தகையவர்கள்தாம் உண்மையாளர்கள்!</span>
<span>49:16 (நபியே! நம்பிக்கைகொண்டதாக வாதிடுகின்ற) இவர்களிடம் கூறும்: “என்ன, உங்களது மார்க்கம் குறித்து அல்லாஹ்வுக்கு நீங்கள் அறிவித்துக்கொடுக்கின்றீர்களா? உண்மை யாதெனில், அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியிலுள்ள ஒவ்வொன்றையும் அறிகின்றான். மேலும், ஒவ்வொன்றைப் பற்றியும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். </span>
<span>49:17 இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை உமக்குச் செய்த பேருதவியாகச் சொல்லிக்காட்டுகிறார்கள். இவர்களிடம் நீர் கூறும்: “நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை எனக்குச் செய்த பேருதவியாகச் சொல்லிக்காட்டாதீர்கள்! மாறாக, நம்பிக்கை கொள்வதற்கான வழிகாட்டுதலை அருளியதன் மூலம் அல்லாஹ்தான் உங்களுக்குப் பேருதவி செய்திருக்கின்றான். (நம்பிக்கை கொண்டதாக வாதிடுவதில்) நீங்கள் வாய்மையாளர்களாய் இருந்தால்! </span>
<span>49:18 நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைவான ஒவ்வொன்றையும் அறிகின்றான். நீங்கள் செய்பவை அனைத்தும் அவனது பார்வையில் இருக்கின்றன. </span>
</div><div>
<span>காஃப்</span>
<span>50:1 காஃப் மாட்சிமை மிக்க குர்ஆனின் மீது ஆணையாக!</span>
<span>50:2 உண்மை யாதெனில், இவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் இவர்களிலிருந்தே வந்திருப்பது பற்றி இவர்கள் வியப்படைந்துள்ளார்கள். மேலும், நிராகரிப்பாளர்கள் கூறத் தொடங்கினார்கள்: “இது வியப்புக்குரிய விஷயம்தான்!</span>
<span>50:3 நாங்கள் மரணமடைந்து மண்ணோடு மண்ணாகி விட்டாலுமா (மீண்டும் எழுப்பப்படுவோம்?) மீண்டும் எழுப்பப்படுவது எனும் இவ்விஷயம் அறிவுக்குப் புறம்பானதாகும்.” </span>
<span>50:4 (உண்மை யாதெனில்) பூமி, இவர்களின் உடம்பிலிருந்து எவற்றைத் தின்கிறது என்பதையெல்லாம் நாம் அறிந்து வைத்துள்ளோம். மேலும், அனைத்தும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஓர் ஏடு நம்மிடம் இருக்கிறது. </span>
<span>50:5 ஆயினும், சத்தியம் இவர்களிடம் வந்தபோது அதனை இவர்கள் வெளிப்படையாகப் பொய்யெனக் கூறிவிட்டார்கள். இதனால்தான் இப்போது இவர்கள் குழப்பத்தில் வீழ்ந்து கிடக்கிறார்கள். </span>
<span>50:6 சரி, இவர்கள் தங்களுக்கு மேலுள்ள வானத்தை எப்பொழுதுமே பார்த்ததில்லையா, என்ன? அதனை நாம் எவ்வாறு அமைத்துள்ளோம்; எவ்வாறு அலங்கரித்துள்ளோம் என்று! அதில் எங்கும் எந்த ஒரு பிளவும் இல்லை. </span>
<span>50:7 மேலும், பூமியை நாம் விரித்தோம். இன்னும் அதில் மலைகளை நாட்டினோம். மேலும், எல்லாவிதமான அழகிய தோற்றமுடைய தாவரங்களையும் முளைக்கச் செய்தோம். </span>
<span>50:8 மேலும், இவை அனைத்தும் (சத்தியத்தின் பக்கம்) திரும்பக்கூடிய ஒவ்வொரு அடியானுக்கும் அகப்பார்வையையும் படிப்பினையையும் வழங்கக்கூடியதாய் இருக்கின்றன. </span>
<span>50:9 மேலும், நாம் வானத்திலிருந்து அருள்மிக்க நீரினை இறக்கினோம். பின்னர், அதன் மூலம் தோட்டங்களையும், அறுவடைத் தானியங்களையும், </span>
<span>50:10 கனிகள் நிறைந்து, குலைகள் அடுக்கடுக்காய் தொங்குகின்ற நீண்ட நெடிய பேரீச்சை மரங்களையும் முளைக்கச் செய்தோம். </span>
<span>50:11 இது மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதற்கான ஏற்பாடாகும். இறந்து கிடக்கும் ஒரு பூமிக்கு நாம் இந்த நீரினால் உயிரூட்டுகின்றோம். (இறந்துவிட்ட மனிதர்கள் பூமியிலிருந்து) வெளிப்படுவதும் இவ்விதமேயாகும். </span>
<span>50:12 இவர்களுக்கு முன்னர் நூஹுடைய சமூகத்தினரும், ‘ரஸ்ஸு’ வாசிகளும், ஸமூத் கூட்டத்தார்களும், </span>
<span>50:13 மற்றும் ஆத் கூட்டத்தார்களும், ஃபிர்அவ்னும், லூத்தின் சகோதரர்களும் </span>
<span>50:14 மற்றும் ‘அய்கா’ வாசிகள், ‘துப்பஃவு’ சமுதாயத்தார் ஆகிய யாவரும் பொய்யெனத் தூற்றிவிட்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் இறைத்தூதர்களைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். இறுதியில், எனது எச்சரிக்கை அவர்களின் மீது உண்மையாகிவிட்டது. </span>
<span>50:15 முதல் முறையாய்ப் படைப்பதற்கு நாம் இயலாதவர்களாயிருந்தோமா, என்ன? ஆனால், மீண்டும் புதிதாய்ப் படைப்பது பற்றி இவர்கள் சந்தேகத்தில் ஆழ்ந்து கிடக்கின்றார்கள். </span>
<span>50:16 நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்களைக்கூட நாம் அறிகின்றோம். அவனது பிடரி நரம்பைவிடவும் அதிகமாக நாம் அவனிடம் நெருக்கமாயிருக்கின்றோம். </span>
<span>50:17 (இவ்வாறு நாம் நேரடியாய் அறிவதுடன்) இரு எழுத்தர்கள் அவனுடைய வலப்புறமும், இடப்புறமும் அமர்ந்து ஒவ்வொன்றையும் பதிவு செய்து கொண்டிருக்கின்றார்கள். </span>
<span>50:18 எந்தச் சொல்லையும் அவன் சொல் வதில்லை; அதனைப் பாதுகாப்பதற்குத் தயாராக உள்ள ஒரு கண்காணிப்பாளர் அவனிடத்தில் இல்லாத நிலையில்!</span>
<span>50:19 (இன்னும் பாருங்கள்) மரணவேதனை உண்மையைக் கொண்டு வந்துவிட்டது. “எதிலிருந்து நீ விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அதுதான் இது!” </span>
<span>50:20 மேலும், எக்காளம் ஊதப்பட்டது. “உனக்கு எச்சரிக்கப்பட்டு வந்தநாள் இதுதான்!” </span>
<span>50:21 ஒவ்வொரு மனிதனும் வந்து சேர்ந்து விட்டான்; அவனுடன் விரட்டிக்கொண்டு வருபவர் ஒருவரும் சாட்சியளிப்பவர் ஒருவரும் இருப்பார். </span>
<span>50:22 இந்த விஷயத்தைப் பற்றி நீ அலட்சியத்தில் இருந்தாய்! உனக்கு முன்பாக இருந்த திரையை நாம் அகற்றிவிட்டோம். மேலும், இன்று உனது பார்வை நன்கு கூர்மையாய் உள்ளது. </span>
<span>50:23 அவனுடன் இருந்தவர் பணிந்து கூறினார்: “என் பொறுப்பில் இருந்தவன், இதோ ஆஜராகி இருக்கின்றான்!” </span>
<span>50:24 (கட்டளையிடப்பட்டது:) “வீசி எறியுங்கள் நரகத்தில், ஒவ்வொரு நிராகரிப்பாளனையும்! அவனோ, சத்தியத்துடன் பகைமை பாராட்டுபவனாகவும், </span>
<span>50:25 நன்மையைத் தடுப்பவனாகவும், வரம்புமீறி நடப்பவனாகவும், சந்தேகத்தில் உழல்பவனாகவும், </span>
<span>50:26 அல்லாஹ்வுடன் இதர கடவுளை ஏற்படுத்துபவனாகவும் இருந்தான். எனவே, வீசுங்கள் அவனை, கடுமையான வேதனையில்!” </span>
<span>50:27 அவனுடைய தோழன் கூறினான்: “எங்கள் இறைவா! இவனை வரம்புமீறக் கூடியவனாக நான் ஆக்கவில்லை. ஆயினும், அவனேதான் வழிகேட்டில் எல்லையைக் கடந்து விட்டிருந்தான்.” </span>
<span>50:28 (பதில் கூறப்பட்டது:) “என் முன்னிலையில் தர்க்கம் செய்யாதீர்கள். தீயகதியைப் பற்றி முன்பே நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்திருந்தேன். </span>
<span>50:29 என்னிடத்தில் தீர்ப்பு மாற்றப்படுவதில்லை. மேலும், நான் என் அடிமைகள் மீது கொடுமை இழைப்பவன் அல்லன்.”</span>
<span>50:30 அந்த நாளில் நாம் நரகத்திடம், “உனக்கு நிரம்பிவிட்டதா?” என்று கேட்போம். அது கூறும், “இன்னும் அதிகம் இருக்கிறதா?” என்று! </span>
<span>50:31 மேலும், சுவனம் இறையச்சம் கொண்டவர்களின் அருகில் கொண்டுவரப்படும். சிறிதளவு தூரம்கூட இருக்காது!</span>
<span>50:32 (கூறப்படும்:) “இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டு வந்தது. அதிகம் மீளக்கூடியவராகவும் மிகவும் பேணுதலுடன் வாழக்கூடியவராகவும் இருந்த ஒவ்வொருவருக்கும் உரியது. </span>
<span>50:33 அவரோ பார்க்காமலேயே கருணைமிக்க இறைவனுக்கு அஞ்சிக் கொண்டிருந்தார். மேலும், அவன் பக்கம் திரும்பக்கூடிய உள்ளத்துடனும் வந்திருக்கின்றார். </span>
<span>50:34 நுழைந்துவிடுங்கள் சுவனத்தில், முழு அமைதியுடன்! அந்த நாள் நிரந்தர வாழ்வுக்குரிய நாளாகும். </span>
<span>50:35 அங்கு அவர்களுக்கு அவர்கள் விரும்பும் அனைத்தும் கிடைக்கும். மேலும், நம்மிடம் இதனைவிட அதிகமாக இன்னும் பலவும் (அவர்களுக்காக) இருக்கின்றன. </span>
<span>50:36 நாம் இவர்களுக்கு முன் இவர்களை விட அதிக வலிமை உடைய எத்தனையோ சமுதாயங்களை அழித்து விட்டிருக்கின்றோம். மேலும் அவர்கள் உலக நாடுகளில் (அக்கிரமம் செய்து கொண்டு) சுற்றித் திரிந்தார்கள். இருந்தும் அவர்களால் ஏதேனும் புகலிடத்தைப் பெறமுடிந்ததா, என்ன? </span>
<span>50:37 இதயமுள்ள அல்லது கவனத்தோடு செவிமடுக்கின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் திண்ணமாக, இந்த வரலாற்றில் படிப்பினையூட்டும் பாடம் இருக்கின்றது. </span>
<span>50:38 நாம் வானங்களையும் பூமியையும் அவற்றிற்கிடையேயுள்ள அனைத்தையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்குக் களைப்பேதும் ஏற்படவில்லை. </span>
<span>50:39 (நபியே!) இவர்கள் புனைந்துரைக்கும் பேச்சுகள் குறித்து பொறுமையை மேற்கொள்ளும். உம் இறைவனைப் புகழ்வதுடன் அவனைத் துதிப்பீராக; சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும்! மேலும், இரவு நேரத்திலும்! </span>
<span>50:40 அவனைத் துதிப்பீராக; சிரம்பணிந்து வணங்கி முடிந்த பின்பும் கூட!</span>
<span>50:41 மேலும், கேளுங்கள். எந்த நாளில், அழைப்பவர் (ஒவ் வொரு மனிதருக்கும்) அருகிலிருந்து அழைப்பாரோ </span>
<span>50:42 எந்நாளில் மக்கள் அனைவரும் ஒன்று திரட்டி எழுப்புவதன் ஓசையை மிகச் சரியாகச் செவியுற்றுக் கொண்டிருப்பார்களோ அந்நாள்தான் பூமியிலிருந்து இறந்தவர்கள் வெளிப்படும் நாளாகும். </span>
<span>50:43 திண்ணமாக, நாமே வாழ்வை அருளுகின்றோம். நாமே மரணத்தை அளிக்கின்றோம். மேலும், அந்த நாளில் அனைவரும் நம் பக்கமே திரும்பி வர வேண்டியிருக்கிறது. </span>
<span>50:44 அன்று பூமி வெடிக்கும்; மக்கள் (அதனுள்ளிருந்து வெளிப்பட்டு) விரைவாக ஓடிக்கொண்டிருப்பார்கள். இவ்வாறு எழச்செய்வது நமக்கு மிக எளிதானதாகும். </span>
<span>50:45 (நபியே!) இந்த மக்கள் பேசும் பேச்சுகளை நாம் நன்கு அறிகின்றோம். இவர்களை நிர்ப்பந்தப்படுத்தி ஏற்கச் செய்வது உமது பணியல்ல. என் எச்சரிக்கைக்கு அஞ்சுகின்ற ஒவ்வொருவருக்கும் நீர் இந்தக் குர்ஆனைக் கொண்டு அறிவுரை கூறுவீராக!</span>
</div><div>
<span>அஸ்ஸாரியாத்</span>
<span>51:1 புழுதியைக் கிளப்பக் கூடிய (காற்றுகளின் மீது) பிறகு, </span>
<span>51:2 நீர் நிரம்பிய மேகங்களைச் சுமக்கக்கூடிய, </span>
<span>51:3 மெதுவான வேகத்தில் செல்லக்கூடிய, </span>
<span>51:4 பெரும் பணியை (மழையை)ப் பகிர்ந்தளிக்கக்கூடிய காற்றுகளின் மீது சத்தியமாக! </span>
<span>51:5 எது பற்றி உங்களுக்கு அச்சுறுத்தப்படுகின்றதோ அது உண்மையானதே! </span>
<span>51:6 மேலும், செயல்களுக்குக் கூலி வழங்குவதென்பது அவசியம் நிகழக்கூடியதே!</span>
<span>51:7 பலவகையான தோற்றங்களையுடைய வானத்தின் மீது சத்தியமாக! </span>
<span>51:8 (மறுமையைப் பற்றிய) உங்களுடைய கூற்று ஒன்றுக்கொன்று முரண்பட்டிருக்கின்றது. </span>
<span>51:9 எவன் சத்தியத்திலிருந்து பிறழ்ந்திருக்கின்றானோ அவன் மட்டுமே அதனால் தடுமாற்றம் அடைவான். </span>
<span>51:10 அழிந்துவிட்டார்கள்; கணிப்பு மற்றும் ஊகத்தின் அடிப்படையில் முடிவு எடுப்பவர்கள்! </span>
<span>51:11 அவர்கள் எத்தகையவர்களெனில், அறியாமையில் மூழ்கி, அலட்சியத்தினால் மதியிழந்து இருப்பவர்கள். </span>
<span>51:12 “கூலி கொடுக்கப்படும் அந்நாள் எப்போது வரும்?” என வினவுகின்றனர். </span>
<span>51:13 இவர்கள் நெருப்பில் வதைக்கப்படும் நாளில் அது வரும். </span>
<span>51:14 (அவர்களிடம் கூறப்படும்:) “இப்போது சுவையுங்கள்; உங்களுடைய வேதனையை! எதற்காக நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அதுதான் இது.” </span>
<span>51:15 இறையச்சம் கொண்டவர்கள் (அந்த நாளில்) திண்ணமாகத் தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். </span>
<span>51:16 அவர்களின் அதிபதி அவர்களுக்கு அளிப்பவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அந்நாள் வருவதற்கு முன்னரே நல்லவர்களாக இருந்தார்கள். </span>
<span>51:17 இரவு நேரங்களில் குறைவாகவே தூங்குபவர்களாகவும் </span>
<span>51:18 பின்னிரவு நேரங்களில் பாவமன்னிப்புக் கோருபவர்களாகவும் இருந்தார்கள். </span>
<span>51:19 மேலும், அவர்களின் செல்வங்களில் உரிமை இருந்தது, யாசிப்பவருக்கும் இல்லாதவருக்கும்!</span>
<span>51:20 உறுதியாக நம்புபவர்களுக்கு பூமியில் பல சான்றுகள் உள்ளன. </span>
<span>51:21 ஏன், உங்களிடத்திலும்கூட! உங்களுக்குப் புலப்படுவதில்லையா, என்ன? </span>
<span>51:22 வானத்தில்தான் இருக்கின்றன, உங்கள் வாழ்வாதாரமும், உங்களுக்கு வாக்களிக்கப்படுகின்றவையும்! </span>
<span>51:23 வானம் மற்றும் பூமியினுடைய அதிபதியின் மீது ஆணையாக! திண்ணமாக, இந்த விஷயம் சத்தியமானது; நீங்கள் பேசிக் கொண்டிருப்பது எவ்வாறு உறுதியானதோ அவ்வாறே இதுவும் உறுதியானது. </span>
<span>51:24 (நபியே!) இப்ராஹீமிடம் வந்த கண்ணியத்துக்குரிய விருந்தாளிகளின் செய்தி உமக்குக் கிடைத்ததா? </span>
<span>51:25 அவர்கள் அவரிடம் வந்தபோது, “உம்மீது சாந்தி நிலவட்டும்!” என்று அவர்கள் கூறினார்கள். அவர் கூறினார்: “உங்கள் மீதும் சாந்தி நிலவுக! அறிமுகமில்லாத ஆட்களாக இருக்கிறார்களே!”</span>
<span>51:26 பின்னர், அவர் சந்தடியில்லாமல் தம் வீட்டாரிடம் சென்றார்; (பொரிக்கப்பட்ட) கொழுத்த காளைக்கன்றைக் கொண்டு வந்து </span>
<span>51:27 அதனை விருந்தினர் முன்வைத்தார். பிறகு கூறினார்: “சாப்பிடாமல் இருக்கின்றீர்களே!” </span>
<span>51:28 பின்னர், அவர்களைக் குறித்து அவர் மனத்திற்குள் அஞ்சினார். அவர்களோ, “அஞ்சாதீர்!” என்று கூறினார்கள். மேலும், அறிவுள்ள ஒரு மகன் பிறக்கப் போவதாக அவருக்கு நற்செய்தி அறிவித்தார்கள். </span>
<span>51:29 (அதனைக் கேட்டு) அவருடைய மனைவி கூச்சலிட்டவாறு முன்னே வந்தாள்; தன் முகத்தில் அறைந்து கொண்டு கிழவி, மலடி என்று கூறினாள். </span>
<span>51:30 அவர்கள் கூறினர்: “ ஆம், அவ்வாறுதான் (நடைபெறும்) என்று உன் இறைவன் கூறியுள்ளான். அவன் நுண்ணறிவாளனாகவும், அனைத்தும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.” </span>
<span>51:31 இப்ராஹீம் கேட்டார்: “இறைத்தூதர்களே! நீங்கள் எந்தப் பணியை ஆற்ற அனுப்பப்பட்டுள்ளீர்கள்?”</span>
<span>51:32 அவர்கள் கூறினர்: “குற்றம் புரிந்த ஒரு சமுதாயத்தாரிடம் நாங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றோம்.” </span>
<span>51:33 சுட்ட கற்களை அவர்கள்மீது பொழிவதற்காக! </span>
<span>51:34 அவை வரம்பு மீறிச் செல்வோருக்காக உம் இறைவனிடத்தில் அடையாளமிடப்பட்ட கற்களாகும். </span>
<span>51:35 பின்னர், அந்த ஊரில் இருந்த இறைநம்பிக்கையாளர்கள் அனைவரையும் நாம் வெளியேற்றினோம். </span>
<span>51:36 மேலும், அங்கு ஒரேயொரு வீட்டைத் தவிர முஸ்லிம் வீடுகள் வேறு எதையும் நாம் காணவில்லை. </span>
<span>51:37 இதன் பின்னர், நாம் அங்கு ஒரு சான்றினை விட்டு வைத்தோம், துன்புறுத்தும் வேதனைக்கு அஞ்சுகின்ற மக்களுக்காக!</span>
<span>51:38 மேலும், மூஸாவின் வரலாற்றில் (உங்களுக்குச் சான்று உள்ளது.) நாம் தெளிவான சான்றுடன் அவரை ஃபிர்அவ்னிடம் அனுப்பியபோது </span>
<span>51:39 அவன் தன் வலிமையின் காரணமாக செருக் குற்றுப் புறக்கணித்தான். மேலும், “இவர் ஒரு சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர்” என்று கூறினான். </span>
<span>51:40 இறுதியில் நாம் அவனையும் அவனுடைய படைகளையும் பிடித்தோம். அவர்கள் அனைவரையும் கடலில் எறிந்துவிட்டோம். மேலும், அவன் பழிப்புக்குரியவனாகிவிட்டான். </span>
<span>51:41 மேலும், ஆத் சமூகத்தினரில் (உங்களுக்குச் சான்று உள்ளது.) அவர்கள் மீது நாம் நாசத்தை ஏற்படுத்தும் காற்றை அனுப்பினோம். </span>
<span>51:42 அது எந்த ஒரு பொருளின்மீது பட்டபோதிலும் அதனைச் சிதைத்து அழித்துவிட்டது. </span>
<span>51:43 மேலும், ஸமூத் கூட்டத்தாரில் (உங்களுக்குச் சான்று உள்ளது.) “ஒரு குறிப்பிட்ட காலம் வரை சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டபோது;</span>
<span>51:44 (இந்த எச்சரிக்கைக்குப் பிறகும்) அவர்கள் தங்கள் அதிபதியின் கட்டளையை ஆணவத்துடன் மீறினார்கள். இறுதியில், அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே திடீரென்று உடைந்துவிழும் வேதனை ஒன்று அவர்களைப் பிடித்துக் கொண்டது. </span>
<span>51:45 பின்னர், அவர்களால் எழுந்து நிற்கவும் முடியவில்லை; தம்மைக் காப்பாற்றிக்கொள்ளவும் முடியவில்லை. </span>
<span>51:46 மேலும், இவர்கள் அனைவருக்கும் முன்பு நூஹின் சமூகத்தினரை நாம் அழித்தோம்; ஏனெனில், அவர்கள் தீய மக்களாய் இருந்தனர். </span>
<span>51:47 வானத்தை நாம் நம் வலிமையினால் படைத்துள்ளோம்.மேலும், நாம் அதற்கான ஆற்றல் உடையவராக இருக்கின்றோம். </span>
<span>51:48 பூமியை நாம் விரித்திருக்கின்றோம். நாம் மிகச் சிறந்த முறையில் செம்மைப்படுத்துபவர்களாய் இருக்கின்றோம். </span>
<span>51:49 மேலும், நாம் ஒவ்வொன்றையும் இணைகளாய்ப் படைத்திருக்கின்றோம். நீங்கள் இதிலிருந்து படிப்பினை பெறக்கூடும்! </span>
<span>51:50 எனவே, ஓடி வாருங்கள், அல்லாஹ்வின் பக்கம்! நான் அவனுடைய சார்பாக உங்களுக்குத் தெள்ளத்தெளிவாக எச்சரிக்கை செய்பவன் ஆவேன். </span>
<span>51:51 அல்லாஹ்வுடன் வேறு எந்தக் கடவுளையும் ஏற்படுத்தாதீர்கள். நிச்சயமாக நான் அவனுடைய சார்பில் உங்களுக்குத் தெள்ளத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன் ஆவேன்!</span>
<span>51:52 இப்படித்தான் நடந்துகொண்டு வருகின்றது. இவர்களுக்கு முன்னிருந்த சமூகத்தாரிடம் எந்த ஓர் இறைத்தூதர் வந்தாலும் அவரை அம்மக்கள் “இவர் ஒரு சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர்” என்றுதான் கூறினார்கள். </span>
<span>51:53 இவர்கள் அனைவரும் இது தொடர்பாக தமக்குள் ஏதேனும் ஒப்பந்தம் செய்துகொண்டார்களா, என்ன? அவ்வாறில்லை. மாறாக, இவர்கள் வரம்புமீறிச் செல்கின்ற மக்களாவர். </span>
<span>51:54 ஆகவே (நபியே!) இவர்களை விட்டு முகம் திருப்பிக் கொள்ளும். நீர் பழிப்புக்குரியவரல்லர். </span>
<span>51:55 ஆயினும், அறிவுரை கூறிக்கொண்டிருப்பீராக! ஏனெனில், அறிவுரை இறைநம்பிக்கை கொள்வோருக்குப் பயனளிக்கக் கூடியதாகும். </span>
<span>51:56 நான் ஜின்களையும், மனிதர்களையும் எனக்கு அடிபணிய வேண்டும் என்பதற்காகவேயன்றி வேறு எதற்காகவும் படைக்கவில்லை. </span>
<span>51:57 நான் அவர்களிடமிருந்து எந்த வாழ்வாதாரத்தையும் நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளித்திட வேண்டுமென்றும் நான் நாடவில்லை. </span>
<span>51:58 நிச்சயமாக அல்லாஹ்வே உணவளிப்பவனாகவும், பெரும் ஆற்றலுடையவனாகவும், வலிமைமிக்கவனாகவும் இருக்கின்றான். </span>
<span>51:59 இவர்களுக்கு முன்னிருந்த கொடுமைக்காரர்களுக்கு அளிக்கப்பட்ட வேதனையின் பங்கு போலவே, இந்தக் கொடுமைக்காரர்களுக்கும், அவர்களுடைய வேதனை தயாராக இருக்கின்றது. அதற்காக இவர்கள் என்னிடம் அவசரப்பட வேண்டாம். </span>
<span>51:60 நிராகரிப்பாளர்களுக்கு இறுதியில் எந்த நாளைக் குறித்து அவர்களுக்கு அச்சுறுத்தப்பட்டு வருகின்றதோ, அந்த நாளில் மாபெரும் அழிவு இருக்கின்றது. </span>
</div><div>
<span>அத்தூர்</span>
<span>52:1 தூர் மலையின் மீது சத்தியமாக! </span>
<span>52:2 மெல்லிய தோலில் எழுதப்பட்ட </span>
<span>52:3 திறந்த புத்தகத்தின் மீது சத்தியமாக! </span>
<span>52:4 மக்கள் நடமாட்டமுள்ள இல்லத்தின்மீது சத்தியமாக! </span>
<span>52:5 உயர்ந்த முகட்டின் மீது சத்தியமாக! </span>
<span>52:6 அலைபுரளும் கடலின் மீது சத்தியமாக! </span>
<span>52:7 உம்முடைய இறைவன் தரும் வேதனை நிச்சயம் வந்தே தீரும். </span>
<span>52:8 அதனைத் தடுப்பவர் எவருமிலர். </span>
<span>52:9 அது நிகழும் நாளில் வானம் கடுமையாக நடுங்கும்; </span>
<span>52:10 மலைகள் பறந்து கொண்டிருக்கும். </span>
<span>52:11 கேடுதான் இருக்கிறது அந்நாளில், பொய் என்று தூற்றியவர்களுக்கு! </span>
<span>52:12 அவர்களோ இன்று வீண் வாதங்களில் விளையாட்டாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். </span>
<span>52:13 எந்நாளில் அவர்கள் நெட்டித் தள்ளப்பட்டு நரக நெருப்பின் பக்கம் விரட்டப்படுவார்களோ அந்நாளில்; </span>
<span>52:14 அவர்களிடம் கூறப்படும்: “இதுதான் அந்த நரக நெருப்பு; இதனைத்தான் நீங்கள் பொய்யென வாதித்தீர்கள். </span>
<span>52:15 இப்போது கூறுங்கள், இது சூனியமா அல்லது உங்களுக்குப் புலப்படவில்லையா?</span>
<span>52:16 இப்போது அதனுள் நுழைந்து எரிந்து விடுங்கள். நீங்கள் சகித்துக்கொண்டாலும் சரி, சகிக்காவிட்டாலும் சரி. இரண்டும் உங்களுக்குச் சமம்தான். நீங்கள் எவ்வாறு செயல்பட்டீர்களோ அவ்வாறே உங்களுக்குக் கூலி கொடுக்கப்படுகின்றது.”</span>
<span>52:17 இறையச்சமுள்ளவர்கள் அங்கு சுவனங்களிலும் அருட்பேறுகளிலும் இருப்பார்கள். </span>
<span>52:18 அவர்களுடைய அதிபதி அவர்களுக்கு அளிப்பவற்றிலிருந்து இன்பம் துய்த்துக் கொண்டிருப்பார்கள். மேலும், அவர்களுடைய இறைவன் அவர்களை நரக வேதனையிலிருந்து காப்பாற்றுவான். </span>
<span>52:19 (அவர்களிடம் கூறப்படும்:) “உண்ணுங்கள், பருகுங்கள் மகிழ்வோடு; நீங்கள் செய்து கொண்டிருந்த நற்செயல்களுக்குரிய வெகுமதியாக!” </span>
<span>52:20 எதிரெதிரே விரித்து வைக்கப்பட்டிருக்கும் கட்டில்களில் மெத்தைகள் வைத்து அவர்கள் அமர்ந்திருப்பார்கள். அழகிய கண்களைக் கொண்ட மங்கையரை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுப்போம். </span>
<span>52:21 எவர்கள் இறைநம்பிக்கை கொண்டார்களோ, அவர்களையும், இறைநம்பிக்கையில் ஓரளவாவது அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றிய அவர்களின் வழித்தோன்றல்களையும் நாம் (சுவனத்தில்) ஒன்று சேர்த்து வைப்போம். மேலும், அவர்களின் செயல்களில் எந்த இழப்பையும் அவர்களுக்கு நாம் ஏற்படுத்தமாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்தவற்றுக்குப் பணயமாக இருக்கின்றான். </span>
<span>52:22 மேலும், நாம் எல்லாவிதமான பழங்களையும், இறைச்சியையும், அவர்களின் உள்ளம் விரும்புகின்றவற்றையும் அவர்களுக்குத் தாராளமாகக் கொடுத்துக்கொண்டே இருப்போம். </span>
<span>52:23 அங்கே அவர்கள் ஒருவர் மற்றவரிடமிருந்து மதுக்கிண்ணத்தைப் பாய்ந்து பாய்ந்து வாங்கிக் கொண்டிருப்பார்கள். அங்கு வீணான பேச்சும் இருக்காது; தீய நடத்தையும் இருக்காது. </span>
<span>52:24 அவர்களுக்குப் பணிவிடை செய்வதற்கென்று நியமிக்கப்பட்ட சிறுவர்கள் அவர்களுக்குச் சேவைபுரிய ஓடியாடிக் கொண்டிருப்பார்கள். அந்தச் சிறுவர்கள் மறைத்து வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அழகாய் இருப்பார்கள். </span>
<span>52:25 மேலும், அவர்கள் (உலகில் நடந்த) நிலைமைகளைக் குறித்து பரஸ்பரம் விசாரிப்பார்கள். </span>
<span>52:26 அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் முன்பு எங்கள் குடும்பத்தாரிடையே அஞ்சிய வண்ணம் வாழ்ந்து வந்தோம். </span>
<span>52:27 இறுதியில், அல்லாஹ் எங்கள்மீது அருள்புரிந்தான்; மேலும், பொசுக்கிவிடும் காற்றின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றிவிட்டான். </span>
<span>52:28 திண்ணமாக, நாங்கள் முந்தைய வாழ்க்கையில் அவனிடமே இறைஞ்சிக்கொண்டிருந்தோம். அவன் உண்மையில் பேருபகாரியும் கருணையாளனும் ஆவான்.”</span>
<span>52:29 (நபியே!) நீர் அறிவுரை வழங்கிய வண்ணம் இருப்பீராக! உம் இறைவனின் அருளால் நீர் சூனியக்காரருமல்லர்; பைத்தியக்காரரும் அல்லர். </span>
<span>52:30 “இவர் ஒரு கவிஞர்; இவர் விஷயத்தில் சுழற்சியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்” என்று இவர்கள் கூறுகின்றார்களா, என்ன? </span>
<span>52:31 இவர்களிடம் நீர் கூறும்: “சரி, எதிர்பாருங்கள். நானும் உங்களுடன் எதிர்பார்க்கிறேன்.” </span>
<span>52:32 இவர்களின் அறிவுதான் இவ்வாறெல்லாம் இவர்களைப் பேசத் தூண்டுகிறதா? அல்லது உண்மையில் இவர்கள் பகைமையில் வரம்புமீறிச் செல்கின்ற மக்களாய் இருக்கின்றார்களா?</span>
<span>52:33 அல்லது, “இந்த மனிதர் இந்தக் குர்ஆனை சுயமாகப் புனைந்திருக்கின்றார்” என்று இவர்கள் கூறுகின்றார்களா? உண்மை யாதெனில், இவர்கள் நம்பிக்கை கொள்ள விரும்பவில்லை. </span>
<span>52:34 இவர்கள் உண்மையானவர்களாய் இருந்தால், இதே போன்ற மகத்துவமிக்க ஒரு வாக்கை இவர்கள் இயற்றிக்கொண்டு வரட்டும்!</span>
<span>52:35 படைப்பாளன் யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்துவிட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கின்றார்களா? </span>
<span>52:36 அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? உண்மை யாதெனில், இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை!</span>
<span>52:37 உம் அதிபதியின் கருவூலங்கள் இவர்களின் பிடியில் உள்ளனவா? அல்லது அவற்றின் மீது இவர்களின் ஆதிக்கம்தான் நடைபெறுகின்றதா?</span>
<span>52:38 அல்லது இவர்களிடம் ஏணி ஏதும் இருந்து அதில் ஏறிச்சென்று (மேலுலகின் செய்திகளை) இவர்கள் ஒட்டுக்கேட்டு வருகின்றார்களா, என்ன? இவர்களில் எவரேனும் அப்படிக் கேட்டிருந்தால் அவர் ஏதேனும் தெளிவான அத்தாட்சியைக் கொண்டு வரட்டும்! </span>
<span>52:39 என்ன, அல்லாஹ்விற்கு மட்டும் பெண்மக்கள்; உங்களுக்கு ஆண் மக்களா?</span>
<span>52:40 நீர் அவர்களிடம் ஏதாவது கூலியைக் கேட்கின்றீரா? அதன் சுமையால் அவர்கள் அழுத்தப்படுகின்றார்களா, என்ன?</span>
<span>52:41 அல்லது, இவர்களிடம் மறைவான உண்மைகளின் ஞானம் இருக்கின்றதா? (அதன் அடிப்படையில்) இவர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றார்களா?</span>
<span>52:42 அல்லது, இவர்கள் சூழ்ச்சி ஏதும் செய்ய விரும்புகின்றார்களா, என்ன? அப்படியென்றால், நிராகரிப்பாளர்களின் சூழ்ச்சி அவர்களையே திருப்பித் தாக்கும். </span>
<span>52:43 அல்லாஹ்வைத் தவிர, வேறு ஒரு கடவுள் இவர்களுக்கு உண்டா? அல்லாஹ் தூய்மையானவன், இவர்களின் இணை வைப்பை விட்டு!</span>
<span>52:44 வானத்தின் துண்டுகள் கீழே வீழ்வதை இவர்கள் பார்த்தாலும், “இவை அடர்த்தியாய் வந்து கொண்டிருக்கும் மேகங்கள்” என்றுதான் கூறுவார்கள். </span>
<span>52:45 எனவே (நபியே!) இவர்களை இவர்களுடைய நிலையிலேயே விட்டுவிடும்; இவர்கள் எந்நாளில் அடித்து வீழ்த்தப்படுவார்களோ அந்நாளை அடையும் வரையில்! </span>
<span>52:46 அந்நாளில் இவர்களின் எந்த சூழ்ச்சியும் இவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்காது. மேலும், இவர்களுக்கு உதவி செய்திட யாரும் வரமாட்டார்கள். </span>
<span>52:47 மேலும், அந்த நாள் வருவதற்கு முன்பும் கூட கொடுமைக்காரர்களுக்கு ஒரு வேதனை இருக்கின்றது. ஆனால், அவர்களில் பெரும்பாலோர் அறிவதில்லை. </span>
<span>52:48 (நபியே!) உம் அதிபதியின் தீர்ப்பு வரும்வரை பொறுமையாய் இருப்பீராக! நீர் எம் கண்காணிப்பில் இருக்கின்றீர். நீர் எழும்போது உம் இறைவனைப் புகழ்வதுடன் அவனைத் துதிப்பீராக! </span>
<span>52:49 இரவிலும் அவனைத் துதி செய்வீராக. தாரகைகள் மறையும் வேளையிலும் (துதிப்பீராக!)</span>
</div><div>
<span>அந்நஜ்ம்</span>
<span>53:1 தாரகைகளின்மீது ஆணையாக, அவை மறையும் போது!</span>
<span>53:2 உங்களின் தோழர் வழிதவறிப் போகவுமில்லை; நெறி பிறழ்ந்து செல்லவுமில்லை! </span>
<span>53:3 மேலும், அவர்தம் மன இச்சையின்படி பேசுவதில்லை. </span>
<span>53:4 இது (அவர்மீது) இறக்கியருளப்பட்ட வஹியே* ஆகும். </span>
<span>53:5 மாபெரும் நுண்ணறிவாளரும் அதிக வலிமை வாய்ந்தவருமான ஒருவர் இதனை அவருக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். </span>
<span>53:6 அவர் எதிரே வந்து நின்றார் ; </span>
<span>53:7 உயர்ந்த வானத்தின் கீழ் விளிம்பிலிருந்தபோது! </span>
<span>53:8 பிறகு, இன்னும் நெருங்கி வந்து அந்தரத்தில் நின்றார். </span>
<span>53:9 எந்த அளவுக்கெனில், இரண்டு வில்லுக்குச் சமமான அல்லது அதைவிடக் குறைவான இடைவெளியே இருந்தது. </span>
<span>53:10 அப்போது அவர் அல்லாஹ்வின் அடியாருக்கு அறிவிக்கவேண்டிய வஹியை அறிவித்தார். </span>
<span>53:11 (தம்முடைய) கண்கள் கண்டதைப்பற்றி (நபியுடைய) உள்ளம் பொய்யுரைக்கவில்லை. </span>
<span>53:12 எதனை அவர் கண்களால் பார்க்கின்றாரோ அதனைப்பற்றி நீங்கள் அவருடன் தர்க்கம் செய்கிறீர்களா?</span>
<span>53:13 மற்றொரு முறை அவர் அவரை இறங்கிடக் கண்டார்,</span>
<span>53:14 ‘ஸித்றதுல் முன்தஹா’* அருகில்; </span>
<span>53:15 அதன் அருகிலேயே ‘ஜன்னத்துல் மஃவா’ இருக்கிறது. </span>
<span>53:16 அந்த நேரத்தில் ‘ஸித்றதுல் முன்தஹா’ எது மூடிக்கொண்டிருந்ததோ அது மூடிக் கொண்டிருந்தது. </span>
<span>53:17 பார்வை விலகிவிடவுமில்லை; எல்லை கடந்துவிடவுமில்லை. </span>
<span>53:18 மேலும், அவர்தம் இறைவனின் பெரும் பெரும் சான்றுகளைக் கண்டார். </span>
<span>53:19 இனி நீங்கள் சற்றுச் சொல்லுங்கள்: இந்த ‘லாத்’, ‘உஸ்ஸா’ ; </span>
<span>53:20 மற்றும் மூன்றாவது தேவதையான ‘மனாத்’ ஆகியவற்றின் உண்மை நிலை பற்றி நீங்கள் எப்போதேனும் சிந்தித்ததுண்டா? </span>
<span>53:21 ஆண்மக்கள் உங்களுக்கும், பெண்மக்கள் இறைவனுக்குமா? </span>
<span>53:22 அப்படியென்றால், இது ஒரு மோசடியான பங்கீடேயாகும்! </span>
<span>53:23 உண்மையில், இவையெல்லாம் நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட சில பெயர்களேயன்றி வேறெதுவுமில்லை. இவற்றிற்கு இறைவன் எந்த ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை. உண்மை யாதெனில், மக்கள் வெறும் ஊகத்தையே பின்பற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். மனம்போன போக்கில் செல்கிறார்கள். இத்தனைக்கும் அவர்களின் அதிபதியிடமிருந்து அவர்களுக்கு வழிகாட்டல் வந்துவிட்டிருக்கின்றது. </span>
<span>53:24 மனிதன் எதை விரும்புகின்றானோ அதுவே அவனுக்கு சத்தியம் (ஹக்) ஆகிவிடுமா என்ன?</span>
<span>53:25 இம்மைக்கும் மறுமைக்கும் அல்லாஹ்தான் உரிமையாளனாக இருக்கின்றான். </span>
<span>53:26 வானங்களில் எத்தனையோ வானவர்கள் இருக்கின்றனர். அவர்களுடைய பரிந்துரை எந்தப் பயனும் அளிக்காது எவரை அல்லாஹ் விரும்புகின்றானோ, எவரைப் பற்றிய வேண்டுகோளை செவிமடுக்க நாடுகின்றானோ, (அத்தகையவருக்காக) பரிந்துரைக்குமாறு அல்லாஹ் அனுமதித்தாலே தவிர! </span>
<span>53:27 ஆனால் எவர்கள் மறுமையை ஏற்பதில்லையோ அவர்கள் வானவர்களுக்குப் பெண் தெய்வங்களின் பெயர்களைச் சூட்டுகின்றார்கள். </span>
<span>53:28 உண்மை யாதெனில் இவ்விஷயத்தைக் குறித்து ஞானம் எதுவும் இவர்கள் பெற்றிருக்கவில்லை. மேலும், இவர்கள் ஊகத்தைத்தான் பின்பற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். இன்னும் சத்தியத்திற்கு எதிரில் ஊகம் எந்தப் பயனும் தருவது இல்லை. </span>
<span>53:29 (நபியே!) எவன் நம்முடைய அறிவுரையைப் புறக்கணிக்கின்றானோ, மேலும், உலக வாழ்க்கையைத் தவிர வேறெந்த குறிக்கோளும் அவனுக்கு இல்லையோ அவனை அவனது நிலையிலேயே விட்டுவிடும். </span>
<span>53:30 இவர்களின் அறிவின் எல்லை அவ்வளவுதான்! இறைவனே நன்கறிகின்றான் அவனுடைய பாதையை விட்டுப் பிறழ்ந்தவர் யார்; நேரான வழியில் இருப்பவர் யார் என்பதனை! </span>
<span>53:31 மேலும், பூமி மற்றும் வானங்களிலுள்ள ஒவ்வொன்றுக்கும் உரிமையாளன் அல்லாஹ்தான்! தீமை செய்தவர்களுக்கு அவர்களின் செயல்களுக்குரிய பிரதிபலனை அல்லாஹ் கொடுப்பதற்காகவும், நற்பணி ஆற்றியவர்களுக்கு நற்கூலியை அவன் வழங்குவதற்காகவும்தான்!</span>
<span>53:32 அவர்களோ பெரும் பெரும் பாவங்களையும் மானக்கேடான செயல்களையும் தவிர்த்துக் கொள்வார்கள்; ஏதோ ஒரு சில பிழைகளைத் தவிர! சந்தேகமின்றி உம் இறைவனின் மன்னிப்பு மிகவும் விசாலமானதாகும். அவன் உங்களை எப்போது மண்ணிலிருந்து படைத்தானோ மேலும், எப்போது நீங்கள் உங்கள் அன்னையரின் வயிற்றில் கருவாக இருந்தீர்களோ அப்போதிருந்தே உங்களை அவன் நன்கு அறிந்திருக்கின்றான். எனவே, நீங்கள் உங்களைத் தூயவர்களென வாதிடாதீர்கள்! உண்மையில் யார் இறையச்சமுடையவர் என்பதை அவனே நன்கறிகின்றான். </span>
<span>53:33 பிறகு (நபியே!) எவன் இறைவழியை விட்டு விலகிச் சென்றானோ, </span>
<span>53:34 மேலும், சிறிது வழங்கிவிட்டு பின்னர் நிறுத்திக் கொண்டானோ அவனை நீர் பார்த்ததுண்டா? </span>
<span>53:35 மறைவானவற்றைப் பற்றிய ஞானம் அவனிடம் இருந்து, அதன் மூலம் யதார்த்த நிலையைப் பார்த்துக் கொண்டிருக்கின்றானா?</span>
<span>53:36 மூஸாவின் ஆகமங்களிலும்; </span>
<span>53:37 வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீமின் ஆகமங்களிலும் விவரிக்கப்பட்டுள்ள விஷயங்களைப் பற்றிய எந்தச் செய்தியும் அவனுக்குக் கிடைக்கவில்லையா, என்ன? </span>
<span>53:38 (அவையாவன): சுமை சுமக்கும் எந்த மனிதனும் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான். </span>
<span>53:39 மேலும், மனிதனுக்குதான் முயற்சி செய்ததைத் தவிர வேறு எதுவும் இல்லை! </span>
<span>53:40 இன்னும், அவனுடைய முயற்சி விரைவில் கவனிக்கப்படும். </span>
<span>53:41 பின்னர், அதற்கான முழுக்கூலியும் அவனுக்கு வழங்கப்படும். </span>
<span>53:42 மேலும், இறுதியில் சேரவேண்டியது உம் இறைவனிடமேயாகும். </span>
<span>53:43 இன்னும், சிரிக்க வைத்தவனும் அழ வைத்தவனும் அவனே!</span>
<span>53:44 மேலும் அவனே மரணமளிக்கின்றான்; அவனே வாழ்வளிக்கின்றான். </span>
<span>53:45 மேலும், ஆண்பெண் ஜோடிகளை அவனே படைத்தான்; </span>
<span>53:46 தெறித்து விழும் ஒரு விந்துத் துளியிலிருந்து!</span>
<span>53:47 இன்னும், மற்றொரு வாழ்க்கையை அளிப்பதும் அவனுடைய பொறுப்பேயாகும். </span>
<span>53:48 மேலும், அவனே செல்வந்தனாக்கினான்; சொத்துக்களை வழங்கினான். </span>
<span>53:49 இன்னும், அவனே ‘ஷிஃரா’*வின் அதிபதியாக இருக்கிறான். </span>
<span>53:50 மேலும், அவனே முந்தைய ‘ஆது’ சமூகத்தினரை அழித்தான். </span>
<span>53:51 ‘ஸமூது’ சமூகத்தினரையும் அவர்களில் எவரையும் பிறகு விட்டு வைக்காமல் அழித்தான். </span>
<span>53:52 மேலும் அவர்களுக்கு முன்பு நூஹின் சமூகத்தினரை அழித்தான். ஏனெனில், அவர்கள் பெரும் கொடுமைக்காரர்களாகவும் வரம்பு மீறியவர்களாகவும் இருந்தனர். </span>
<span>53:53 தலைகீழாக விழுந்த ஊர்களையும் அவன்தான் தூக்கி எறிந்தான். </span>
<span>53:54 பின்னர் அவற்றை எது மூடியதோ, அது மூடியது. </span>
<span>53:55 (அதனை நீங்கள் அறிந்தே இருக்கிறீர்கள்) ஆகவே மனிதனே, நீ உன் அதிபதியின் எந்தெந்த அருட்கொடைகளில் ஐயம் கொள்வாய்?</span>
<span>53:56 முன்னரே வந்துவிட்ட எச்சரிக்கைகளில் இதுவும் ஓர் எச்சரிக்கையாகும். </span>
<span>53:57 வரவேண்டிய நேரம் நெருங்கி வந்து விட்டது. </span>
<span>53:58 அதனைத் தடுத்து நிறுத்துவோர் அல்லாஹ்வை அன்றி வேறெவரும் இலர். </span>
<span>53:59 இனி என்ன, நீங்கள் இந்தச் செய்திகளைப் பற்றியா வியப்படைகிறீர்கள்? </span>
<span>53:60 சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள்; அழாமல் இருக்கிறீர்களே? </span>
<span>53:61 ஆடிப்பாடி இதனைத் தடுக்க முயலுகிறீர்களா? </span>
<span>53:62 பணிந்து விடுங்கள், அல்லாஹ்வின் முன்பு! மேலும் (அவனுக்கே) அடிபணிந்துவிடுங்கள். </span>
</div><div>
<span>அல் கமர்</span>
<span>54:1 மறுமைக்கான நேரம் நெருங்கிவிட்டது. மேலும், சந்திரன் பிளந்து விட்டது. </span>
<span>54:2 ஆனால் (இந்த மக்களின் நிலைமை என்னவெனில்), எந்தச் சான்றினைப் பார்த்தாலும் புறக் கணிக்கின்றார்கள். மேலும், “இது எப்போதும் நடைபெறுகின்ற சூனியம்தான்” என்றும் சொல்கின்றார்கள். </span>
<span>54:3 இவர்கள் (இதனையும்) பொய்யெனக் கூறிவிட்டார்கள். மேலும், தங்கள் மன இச்சைகளையே பின்பற்றினார்கள். ஒவ்வொரு விவகாரமும் ஒரு முடிவை அடைந்தே தீரும். </span>
<span>54:4 மேலும், இவர்களிடம் (முந்தைய சமுதாயங்களின்) செய்திகள் வந்துவிட்டிருக்கின்றன. அவற்றில் வரம்பு மீறிய நடத்தையை விட்டு விலகி இருப்பவர்களுக்கு போதுமான படிப்பினைகள் உள்ளன;</span>
<span>54:5 மேலும், அறிவுரையின் நோக்கத்தை முழுவதுமாக நிறைவேற்றும் விவேகமும் உள்ளது. ஆனால் எச்சரிக்கைகள் இவர்களுக்குப் பலன் அளிக்கவில்லை. </span>
<span>54:6 எனவே (நபியே!) இவர்களைப் பொருட்படுத்தாதீர். மிகவும் வெறுப்புக்குரிய ஒரு விஷயத்தின் பக்கம் அழைக்கக்கூடியவர் அழைக்கும் நாளில்; </span>
<span>54:7 மக்கள் பயந்த பார்வைகளுடன் தங்களுடைய மண்ணறைகளிலிருந்து வெளிவருவார்கள்; சிதறிய வெட்டுக்கிளிகளைப்போல் </span>
<span>54:8 அழைக்கக் கூடியவர்களை நோக்கி ஓடிக்கொண்டிருப்பார்கள். (உலகில் இதனை மறுத்துக்கொண்டிருந்த) அதே நிராகரிப்பாளர்கள் அப்போது கூறுவார்கள்: “இந்த நாளோ பெரும் கடினமானதாக இருக்கின்றதே!”</span>
<span>54:9 இவர்களுக்கு முன்பு நூஹின் சமுதாயத்தினர் பொய்யெனத் தூற்றினர். அவர்கள் நம் அடியாரைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். “இவர் ஒரு பைத்தியக்காரர்” என்று சொன்னார்கள். மேலும், அவர் மிக மோசமாக மிரட்டப்பட்டார். </span>
<span>54:10 இறுதியில் அவர் தம் அதிபதியை அழைத்தார்: “நான் தோற்றுப்போய் இருக்கின்றேன். நீ இப்போது இவர்களைப் பழி வாங்குவாயாக!”</span>
<span>54:11 அப்போது வானின் வாயில்களைத் திறந்துவிட்டு, மழையைக் கொட்டச் செய்தோம். </span>
<span>54:12 மேலும், பூமியைப் பிளந்து (அதனை) நீரூற்றுகளாக மாற்றிவிட்டோம். மேலும் நிர்ணயிக்கப்பட்டுவிட்ட பணியை நிறைவேற்றுவதற்காக இந்தத் தண்ணீர் அனைத்தும் ஒன்று சேர்ந்து கொண்டது. </span>
<span>54:13 மேலும், மரப்பலகைகளால் செய்யப்பட்டு ஆணிகள் அறையப்பட்டதில் (கப்பலில்) நாம் நூஹை ஏற்றினோம். </span>
<span>54:14 அது நமது கண்காணிப்பில் சென்று கொண்டிருந்தது. (அவர்களுக்கு) நாம் அளித்த பிரதிபலனாகும் இது, அவமரியாதை செய்யப்பட்ட அந்த மனிதரின் நிமித்தம்!</span>
<span>54:15 அந்தக் கப்பலை நாம் ஒரு சான்றாக விட்டு வைத்தோம். பின்னர் அறிவுரை பெறுபவர் எவரேனும் இருக்கின்றாரா?</span>
<span>54:16 பார்த்துக் கொள்ளுங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தது நான் அளித்த வேதனை; எப்படி இருந்தன என்னுடைய எச்சரிக்கைகள்! </span>
<span>54:17 நாம் இந்தக் குர்ஆனை, அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்திருக்கின்றோம். பின்னர், அறிவுரையை ஏற்றுக்கொள்ள எவரேனும் இருக்கின்றாரா?</span>
<span>54:18 ‘ஆத்’ சமுதாயத்தினர் பொய்யென வாதிட்டார்கள். பார்த்துக் கொள்ளுங்கள்: அப்போது எப்படி இருந்தது நான் அளித்த வேதனை! மேலும், எப்படி இருந்தன என்னுடைய எச்சரிக்கைகள்! </span>
<span>54:19 நீடித்த துர்ப்பாக்கியத்திற்குரிய ஒரு நாளில் நாம் கடுமையான புயல்காற்றை அவர்களின் மீது அனுப்பினோம். </span>
<span>54:20 அது மக்களை வேகமாகத் தூக்கி எறிந்துகொண்டிருந்தது. அப்போது அவர்கள் வேருடன் பிடுங்கி எறியப்பட்ட பேரீச்ச மரத்தின் தடிகளைப் போன்று ஆனார்கள். </span>
<span>54:21 பார்த்துக் கொள்ளுங்கள்: எப்படி இருந்தது நான் அளித்த வேதனை; எப்படி இருந்தன என்னுடைய எச்சரிக்கைகள்! </span>
<span>54:22 நாம் இந்தக் குர்ஆனை அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்திருக்கின்றோம். பின்னர் அறிவுரை பெறுபவர் எவரேனும் இருக்கின்றாரா?</span>
<span>54:23 ‘ஸமூத்’ சமுதாயத்தினரும் எச்சரிக்கைகளைப் பொய்யென வாதிட்டார்கள். </span>
<span>54:24 மேலும், கூறலானார்கள்: “நம்மிலுள்ள ஒரு தனிப்பட்ட மனிதரையா நாம் பின்பற்றிச் செல்வது? அவரைப் பின்பற்றிச் செல்வதற்கு ஏற்றுக்கொண்டோமானால், நாம் வழிகெட்டுப் போய் விட்டோம்; நமது புத்தி பேதலித்துவிட்டது என்பது அதன் பொருளாகும். </span>
<span>54:25 இறைவனின் அறிவுரை அருளப்படுவதற்கு நமக்கு மத்தியில் இவர் ஒருவர்தான் இருக்கின்றாரா, என்ன?” </span>
<span>54:26 (நாம் நம்முடைய தூதரிடம் கூறினோம்:) “நாளையதினம் இவர்களுக்குத் தெரிந்துவிடும்; யார் வடிகட்டிய பொய்யர், தற்பெருமைக்காரர் என்று! </span>
<span>54:27 நாம் பெண் ஒட்டகத்தை இவர்களுக்குச் சோதனையாக ஆக்கி அனுப்புகின்றோம். எனவே, இப்போது சற்றுப் பொறுத்திருந்து பாரும்; இவர்களின் கதி என்னவாகிறது என்று! </span>
<span>54:28 தண்ணீர் இவர்களுக்கும் ஒட்டகத்துக்கும் இடையே பங்கிடப்படும் என்றும், ஒவ்வொருவரும் (தம் முறை நாளில் தண்ணீருக்கு) வர வேண்டும் என்றும் இவர்களுக்கு அறிவித்துவிடும்.”</span>
<span>54:29 இறுதியில், அவர்கள் தங்களுடைய ஆளை அழைத்தார்கள். அவர் இந்தப் பணியை முடிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மேலும் ஒட்டகத்தைக் கொன்றுவிட்டார். </span>
<span>54:30 பிறகு பார்த்துக்கொள்ளுங்கள்: எவ்வளவு கொடூரமாக இருந்தது நான் அளித்த வேதனை; எவ்வளவு உண்மையானவையாக இருந்தன என்னுடைய எச்சரிக்கைகள்! </span>
<span>54:31 நாம் ஒரேயொரு ஓசையைத்தான் அவர்களின் மீது அனுப்பினோம். உடனே அவர்கள், தொழுவத்தில் மிதித்து நசுக்கப்பட்ட வைக்கோல் போல் ஆகிவிட்டார்கள். </span>
<span>54:32 நாம் இந்தக் குர்ஆனை, அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்துள்ளோம். அறிவுரை பெறுபவர் எவரேனும் இருக்கின்றாரா?</span>
<span>54:33 லூத்தின் சமுதாயத்தினர் எச்சரிக்கைகளைப் பொய்யென வாதித்தார்கள். </span>
<span>54:34 நாம் கல்மாரி பொழியும் காற்றை அவர்கள் மீது ஏவினோம். லூத்தின் குடும்பத்தினர் மட்டுமே அதிலிருந்து பாதுகாப்பாக இருந்தனர். நாம் நம்முடைய அருளினால் இரவின் பின்நேரத்தில் அவர்களைக் காப்பாற்றி வெளியே கொண்டுவந்தோம். </span>
<span>54:35 இவ்வாறே நாம் கூலி வழங்குகின்றோம்; நன்றி செலுத்தும் ஒவ்வொரு மனிதனுக்கும்! </span>
<span>54:36 லூத் தம்முடைய சமூக மக்களுக்கு நம்முடைய தண்டனையைக் குறித்து எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அவர்கள் எல்லா எச்சரிக்கைகளையும் சந்தேகமானவை எனக் கருதி எள்ளி நகையாடிக் கொண்டிருந்தார்கள். </span>
<span>54:37 பின்னர் அவருடைய விருந்தாளிகளைப் பாதுகாப்பதிலிருந்து அவரை விலகியிருக்கச் செய்ய அவர்கள் முயற்சி செய்தார்கள். இறுதியில், நாம் அவர்களுடைய கண்களை அவித்துவிட்டோம். சுவையுங்கள், இப்போது நான் அளிக்கும் வேதனையையும் என்னுடைய எச்சரிக்கைகளையும்! </span>
<span>54:38 அதிகாலையில் ஒரு மாபெரிய வேதனை அவர்களை வந்தடைந்தது. </span>
<span>54:39 சுவையுங்கள், இப்போது நான் அளிக்கும் வேதனையையும் என்னுடைய எச்சரிக்கைகளையும் </span>
<span>54:40 நாம் இந்தக் குர்ஆனை அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்துள்ளோம். எனவே அறிவுரை பெறுவதற்கு எவரேனும் இருக்கின்றாரா?</span>
<span>54:41 மேலும், ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடம் எச்சரிக்கைகள் வந்திருந்தன. </span>
<span>54:42 ஆனால் அவர்கள் நம்முடைய சான்றுகள் அனைத்தையும் பொய்யென்று வாதித்தார்கள். இறுதியில், நாம் அவர்கள் அனைவரையும் பிடித்துக் கொண்டோம். யாவரையும் மிகைத்த, வலிமை மிக்க ஒருவன் பிடிப்பதைப் போன்று!</span>
<span>54:43 என்ன, உங்களுடைய நிராகரிப்பாளர்கள் அவர்களை விடச் சிறந்தவர்களா? அல்லது வான்மறைகளில் உங்களுக்காகப் பாவமன்னிப்பு ஏதும் எழுதப்பட்டு இருக்கிறதா? </span>
<span>54:44 அல்லது ‘நாங்கள் ஒரு பலமிக்க குழுவினர் ஆவோம். எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்வோம்’ என்று இந்த மக்கள் கூறுகின்றார்களா? </span>
<span>54:45 இந்தக் குழு அதி விரைவில் தோல்வி அடைவதையும், அனைவரும் புறமுதுகிட்டு ஓடுவதையும் காணலாம். </span>
<span>54:46 இவர்களின் கணக்கைத் தீர்ப்பதற்காக உண்மையில் வாக்களிக்கப்பட்ட நேரம் மறுமைநாளாகும். மேலும், அது பெரும் ஆபத்தான, மிகவும் கசப்பான நேரமாகும். </span>
<span>54:47 இந்தக் குற்றவாளிகள் உண்மையில் தவறான கருத்துக்களில் உழல்கின்றார்கள். மேலும், இவர்களின் புத்தி பேதலித்திருக்கிறது. </span>
<span>54:48 இவர்கள் நரக நெருப்பில் முகங்குப்புற இழுத்துச் செல்லப்படும் நாளில் அவர்களிடம் கூறப்படும்: “இப்போது சுவையுங்கள், நரக நெருப்பின் தீண்டுதலை!”</span>
<span>54:49 நிச்சயமாக நாம் ஒவ்வொன்றையும் ஒரு குறிப்பிட்ட விதிமுறையின்படி படைத்திருக்கின்றோம். </span>
<span>54:50 மேலும், நமது கட்டளை ஒரே ஒரு கட்டளையாகவே இருக்கின்றது. கண் இமைக்கும் நேரத்திற்குள் அது அமலுக்கு வந்துவிடுகின்றது. </span>
<span>54:51 உங்களைப் போன்ற பலரை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். பின்னர் அறிவுரை பெறுபவர் எவரேனும் இருக்கின்றாரா? </span>
<span>54:52 இவர்கள் செய்தவை அனைத்தும் பதிவேடுகளில் பதிக்கப்பட்டுள்ளன. </span>
<span>54:53 ஒவ்வொரு சிறிய பெரிய விஷயமும் எழுதப்பட்டுள்ளது. </span>
<span>54:54 மாறு செய்வதை விட்டு விலகி இருப்பவர்கள் திண்ணமாக சுவனங்களிலும் ஆறுகளிலும் தங்கி இருப்பார்கள். </span>
<span>54:55 உண்மையான கண்ணியத்திற்குரிய இடத்தில், பெரும் அதிகாரம் உடைய அரசனுக்கருகில்!</span>
</div><div>
<span>அர் ரஹ்மான்</span>
<span>55:1 அளவிலாக் கருணையுள்ள (இறை)வன் </span>
<span>55:2 இந்தக் குர்ஆனைக் கற்றுத் தந்தான். </span>
<span>55:3 அவனே மனிதனைப் படைத்தான்; </span>
<span>55:4 அவனுக்குப் பேசக் கற்றுக்கொடுத்தான். </span>
<span>55:5 சூரியனும், சந்திரனும் ஓர் ஒழுங்கிற்குக் கட்டுப்பட்டிருக்கின்றன. </span>
<span>55:6 மேலும், நட்சத்திரங்கள், மரங்கள் ஆகிய அனைத்தும் சிரம்பணிந்து கொண்டிருக்கின்றன. </span>
<span>55:7 அவன் வானத்தை உயர்த்தினான். தராசை நிலைநாட்டினான், </span>
<span>55:8 நீங்கள் தராசில் நீதி தவறிவிடக்கூடாது என்பதற்காக! </span>
<span>55:9 மேலும், நீதியுடன் மிகச் சரியாக நிறுங்கள்; தராசில் எடைக்குறைவு ஏற்படுத்தாதீர்கள்!</span>
<span>55:10 பூமியை அவன் எல்லாப் படைப்புகளுக்காகவும் அமைத்தான். </span>
<span>55:11 அதில் விதவிதமான சுவைமிகு கனிகள் ஏராளமாய் இருக்கின்றன. பேரீத்த மரங்களும் இருக்கின்றன. அவற்றின் பழங்கள் பாளைகளால் மூடப்பட்டு இருக்கின்றன. </span>
<span>55:12 விதவிதமான தானியங்கள் உள்ளன. அவற்றில் உமியும் உண்டு; மணியும் உண்டு. </span>
<span>55:13 ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த அருட்கொடைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?</span>
<span>55:14 ஓடு போன்று, தட்டினால் ஓசை வரக்கூடிய பேதகமடைந்த களிமண்ணிலிருந்து மனிதனைப் படைத்தான். </span>
<span>55:15 மேலும், ஜின்களைத் தீப்பிழம்பிலிருந்து படைத்தான். </span>
<span>55:16 ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த ஆற்றல்மிக்க விநோதங்களை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?</span>
<span>55:17 இரு கிழக்குகள், இரு மேற்குகள் அனைத்தின் அதிபதியும் பரிபாலகனும் அவனே! </span>
<span>55:18 ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த ஆற்றல்களை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?</span>
<span>55:19 அவன் இரு கடல்களையும் ஒன்றோடொன்று சங்கமிக்கச் செய்தான்; </span>
<span>55:20 ஆயினும், அவ்விரண்டுக்குமிடையே ஒரு தடுப்பு இருக்கின்றது. அதனை அவை மீறுவதில்லை. </span>
<span>55:21 ஓ, ஜின்களே! மனிதர்களே! நீங்கள் உங்கள் அதிபதியுடைய வல்லமையின் எந்த எந்த விநோதங்களைப் பொய்யெனக் கூறுவீர்கள்? </span>
<span>55:22 இந்தக் கடல்களிலிருந்து முத்துக்களும், பவளங்களும் வெளிப்படுகின்றன. </span>
<span>55:23 ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியுடைய வல்லமையின் எந்த எந்த சிறப்புகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?</span>
<span>55:24 மேலும், கடலில் மலைகளைப் போன்று உயர்ந்து நிற்கும் இந்தக் கப்பல்களும் அவனுக்கே உரியன. </span>
<span>55:25 ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த பேருபகாரங்களை நீங்கள் பொய்யென மறுப்பீர்கள்?</span>
<span>55:26 இந்தப் பூமியின் மேல் உள்ள ஒவ்வொரு பொருளும் அழியக்கூடியதே! </span>
<span>55:27 கம்பீரமும், கண்ணியமும் உடைய உம் அதிபதி மட்டுமே நிலைத்திருப்பவன் ஆவான். </span>
<span>55:28 ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த சிறப்பம்சங்களை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? </span>
<span>55:29 பூமியிலும் வானங்களிலும் உள்ளவை அனைத்தும் தம் தேவைகளை அவனிடமே வேண்டிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கணமும், அவன் ஒரு புதிய மாட்சிமையின் நிலையில் இருக்கின்றான். </span>
<span>55:30 ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் பெரும் புகழ்மிக்க எந்த எந்தத் தன்மைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?</span>
<span>55:31 பூமிக்குச் சுமையாய் இருப்பவர்களே! அதிவிரைவில் நாம் உங்களை விசாரணை செய்வதற்காக ஓய்வாகிவிடுவோம். </span>
<span>55:32 பின்னர் உங்கள் அதிபதியின் எந்த எந்த பேருபகாரங்களை நீங்கள் பொய்யென மறுப்பீர்கள் (என்பதை நாம் பார்த்துக் கொள்வோம்.) </span>
<span>55:33 ஓ, ஜின் மற்றும் மனிதக்கூட்டங்களே! வானங்கள் மற்றும் பூமியின் எல்லைகளை விட்டு ஓடிச் செல்ல உங்களால் முடியுமானால் ஓடிப் பாருங்கள். உங்களால் ஓடிச் செல்லவே முடியாது; அதற்கெனப் பெரும் வலிமை வேண்டும். </span>
<span>55:34 உங்கள் இறைவனின் எந்த எந்த வல்லமைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? </span>
<span>55:35 (அவ்விதம் நீங்கள் தப்பியோட முயன்றால்) உங்கள் மீது தீ ஜுவாலையும் புகையும் ஏவிவிடப்படும். அவற்றை எதிர்த்து நிற்க உங்களால் இயலாது. </span>
<span>55:36 (ஓ, ஜின்களே! மனிதர்களே!) உங்கள் இறைவனின் எந்த எந்த வல்லமைகளை நீங்கள் மறுப்பீர்கள்?</span>
<span>55:37 பின்னர், வானம் பிளந்து செந்தோலைப் போன்று சிவப்பாகிவிடும்போது (என்ன நிகழும்?) </span>
<span>55:38 ஓ, ஜின்களே! மனிதர்களே! அப்போது நீங்கள் உங்கள் இறைவனின் எந்த எந்த ஆற்றல்களைப் பொய்யெனக் கூறுவீர்கள்?</span>
<span>55:39 அந்நாளில், எந்த மனிதனிடமும் எந்த ஜின்னிடமும் அவரவருடைய பாவத்தைப் பற்றி வினவ வேண்டிய அவசிய மிராது! </span>
<span>55:40 நீங்கள் இரு கூட்டத்தாரும் உங்களுடைய இறைவனின் எந்த எந்த பேருபகாரங்களை மறுக்கிறீர்கள்? (எனத் தெரிந்துவிடும்). </span>
<span>55:41 அங்கு குற்றவாளிகள் தங்களின் முகக்கூறுகளால் அடையாளம் கண்டு கொள்ளப்படுவார்கள். மேலும், அவர்களின் உச்சி முடிகளையும் கால்களையும் பிடித்து இழுக்கப்படும். </span>
<span>55:42 (அவ்வேளை) உங்கள் இறைவனின் எந்த எந்த வல்லமைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?</span>
<span>55:43 அப்பொழுது கூறப்படும்: ஆம்! இதுவேதான் அந்த நரகம்! இதனைத்தான் குற்றவாளிகள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்தார்கள். </span>
<span>55:44 அதே நரகத்துக்கும், மிகக் கடுமையாக கொதிக்கும் நீருக்கும் இடையே அவர்கள் சுற்றிக் கொண்டிருப் பார்கள். </span>
<span>55:45 பின்னர், உங்கள் இறைவனின் எந்த எந்த வலிமைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?</span>
<span>55:46 மேலும், தன் அதிபதியின் திருமுன் நிற்க வேண்டியது குறித்து அச்சம் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் இரண்டு சுவனங்கள் உள்ளன. </span>
<span>55:47 உங்கள் இறைவனின் எந்த எந்த வெகு மதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? </span>
<span>55:48 அவையிரண்டும் பசுமையான கிளைகள் நிறைந்தவை! </span>
<span>55:49 உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? </span>
<span>55:50 அந்த இரண்டு சுவனங்களிலும் இரண்டு ஊற்றுகள் ஓடிக்கொண்டிருக்கும். </span>
<span>55:51 உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? </span>
<span>55:52 அந்த இரண்டு சுவனங்களில் இருக்கும் ஒவ்வொரு பழமும் இரு வகையானவை. </span>
<span>55:53 உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? </span>
<span>55:54 சுவனவாசிகள் விரிப்புகளில் தலையணைகளை வைத்து சாய்ந்திருப்பார்கள். அவற்றின் உட்பாகங்கள் அடர்த்தியான பட்டுத்துணியால் ஆனவையாகும். மேலும், இரு தோட்டங்களின் கிளைகள் பழங்களால் நிரம்பித் தாழ்ந்துவிட்டிருக்கும். </span>
<span>55:55 உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? </span>
<span>55:56 இந்த அருட்கொடைகளுக்கு மத்தியில் நாணும் விழிகளைக் கொண்ட பெண்களும் இருப்பார்கள்; இந்தச் சுவனவாசிகளுக்கு முன்னர் எந்த மனிதனும், ஜின்னும் அவர்களைத் தொட்டுக்கூடப் பார்த் திருக்க மாட்டார்கள். </span>
<span>55:57 உங்கள் இறைவனின் எந்த எந்த வெகு மதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? </span>
<span>55:58 அந்தப் பெண்கள் மிக்க அழகானவர்கள், மாணிக்கத்தையும் முத்தையும் போன்று! </span>
<span>55:59 உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?</span>
<span>55:60 நன்மையின் கூலி நன்மையைத் தவிர வேறெதுவாய் இருக்க முடியும்? </span>
<span>55:61 பின்னர் ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் பெரும் புகழுக்குரிய எந்த எந்தத் தன்மைகளை நீங்கள் பொய்யென மறுப்பீர்கள்? </span>
<span>55:62 அந்த இரு தோட்டங்களைத் தவிர வேறு இரண்டு தோட்டங்களும் இருக்கும். </span>
<span>55:63 உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? </span>
<span>55:64 அடர்த்தியான, பசுமையான சுவனங்கள்! </span>
<span>55:65 உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? </span>
<span>55:66 அவ்விரு தோட்டங்களிலும் இரு ஊற்றுகள் நீர்த்தாரைகளைப் போன்று பீறிட்டுப் பொங்கிக் கொண்டிருக்கும். </span>
<span>55:67 உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? </span>
<span>55:68 அவ் விரண்டிலும் ஏராளமான கனிகளும், பேரீச்சம் பழங்களும், மாதுளங்கனிகளும் இருக்கும். </span>
<span>55:69 உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? </span>
<span>55:70 இந்த அருட்கொடைகளுடன் நன்னடத்தையும், பேரழகும் கொண்ட மனைவிகளும் இருப்பர். </span>
<span>55:71 உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? </span>
<span>55:72 கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட அழகிய பெண்களும் (ஹூரிகள்) இருப்பர். </span>
<span>55:73 உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? </span>
<span>55:74 இந்தச் சுவனவாசிகளுக்கு முன்னர் எந்த மனிதனும் ஜின்னும் அந்தப் பெண்களைத் தொட்டுக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். </span>
<span>55:75 உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? </span>
<span>55:76 அந்தச் சுவனவாசிகள், பச்சைக் கம்பளங்களிலும், விலைமதிப்பற்ற அழகிய விரிப்புகளிலும் தலையணைகளை வைத்து சாய்ந்திருப்பார்கள். </span>
<span>55:77 உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?</span>
<span>55:78 பெரும் அருட்பாக்கியங்கள் கொண்டதாக இருக்கின்றது, மாட்சிமையும் கண்ணியமும் மிக்க உம் இறைவனின் திருப்பெயர்!</span>
</div><div>
<span>அல் வாகிஆ</span>
<span>56:1 நிகழவேண்டிய அந்நிகழ்ச்சி நிகழ்ந்து விடும் போது, </span>
<span>56:2 அது நிகழ்வதைப் பொய்யெனக் கூறுபவர் எவரும் இருக்கமாட்டார். </span>
<span>56:3 அது தலைகீழாகப் புரட்டக்கூடிய ஆபத்தாயிருக்கும். </span>
<span>56:4 அந்நேரம் பூமி ஒரே உலுக்காக உலுக்கப்படும். </span>
<span>56:5 மேலும், மலைகள் பொடிப் பொடியாக்கப்பட்டு ; </span>
<span>56:6 பரத்தப்பட்ட புழுதியாகிவிடும்! </span>
<span>56:7 அப்போது நீங்கள் மூன்று குழுவினராய்ப் பிரிந்துவிடுவீர்கள். </span>
<span>56:8 வலப்பக்கத்தார்! வலப்பக்கத்தாருடைய (நற்பாக்கிய) நிலைமையை என்னவென்றுரைப்பது! </span>
<span>56:9 மேலும், இடப்பக்கத்தார்! இடப்பக்கத்தாருடைய (துர்ப்பாக்கிய) நிலைமையை என்னவென்றுரைப்பது! </span>
<span>56:10 மேலும், முந்தியவர்கள் முந்தியவர்களே! </span>
<span>56:11 அவர்கள்தாம் நெருக்கமானவர்கள். </span>
<span>56:12 அருட்கொடைகள் நிறைந்த சுவனங்களில் இருப்பார்கள். </span>
<span>56:13 முன்னோரில் நிறையப் பேரும் </span>
<span>56:14 பின்னோரில் ஒரு சிலரும் இருப்பார்கள். </span>
<span>56:15 தங்க இழைகளால் நெய்யப்பட்ட இருக்கைகளில் </span>
<span>56:16 எதிரெதிரே சாய்ந்திருப்பார்கள். </span>
<span>56:17 அவர்களின் அவைகளில் நிரந்தரச் சிறுவர்கள் </span>
<span>56:18 மது ஓடுகின்ற ஊற்றிலிருந்து நிரப்பப்பட்ட கோப்பைகளையும், கெண்டிகளையும், பளிங்குக் கிண்ணங்களையும் ஏந்தியவாறு சுற்றிக்கொண்டு இருப்பார்கள். </span>
<span>56:19 அவற்றை அருந்துவதால் அவர்களுக்குத் தலைச்சுற்றல் ஏற்படாது; அவர்களின் அறிவு பேதலிக்கவும் செய்யாது. </span>
<span>56:20 அவர்கள் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்காக அச்சிறுவர்கள் அவர்களுக்கு விதவிதமான, சுவையான கனிகளைப் பரிமாறுவார்கள்; </span>
<span>56:21 மேலும், அவர்கள் விரும்புகின்ற பறவை இறைச்சியையும் உண்பதற்காக அளிப்பார்கள். </span>
<span>56:22 மேலும், அழகிய கண்களை உடைய ‘ஹூர்’ எனும் மங்கையரும் அவர்களுக்காக இருப்பர்; </span>
<span>56:23 அவர்கள் மறைத்துவைக்கப்பட்ட முத்துக்களைப் போன்று அழகாய் இருப்பார்கள். </span>
<span>56:24 இவை அனைத்தும் உலகில் அவர்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்குக் கூலியாக அவர்களுக்குக் கிடைக்கும். </span>
<span>56:25 அங்கு அவர்கள் வீண் பேச்சுகளையோ, பாவமான விஷயங்களையோ செவியேற்க மாட்டார்கள். </span>
<span>56:26 எது பேசப்பட்டாலும் சரியாகவே பேசப்படும். </span>
<span>56:27 மேலும், வலப்பக்கத்தார்; வலப்பக்கத்தார் (உடைய நற்பாக்கியம்) பற்றி என்னவென்றுரைப்பது? </span>
<span>56:28 அவர்கள் முள்ளில்லாத இலந்தை மரங்கள், </span>
<span>56:29 மேலும் அடுக்கடுக்காய் குலைகள் கொண்ட வாழைகள்; </span>
<span>56:30 பரந்து விரிந்திருக்கும் நிழல், </span>
<span>56:31 எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் நீர், </span>
<span>56:32 என்றைக்கும் தீர்ந்துவிடாத </span>
<span>56:33 தங்குதடையின்றிக் கிடைக்கக்கூடிய ஏராளமான கனிகள் ;</span>
<span>56:34 மற்றும் உயர்ந்த விரிப்புகளில் இருப்பார்கள். </span>
<span>56:35 அவர்களின் மனைவியரை நாம் தனிச்சிறப்புடன் புது அமைப்பில் படைப்போம். </span>
<span>56:36 மேலும், அவர்களைக் கன்னிகளாகவும், </span>
<span>56:37 தங்கள் கணவர்கள் மீது காதல் கொண்டவர்களாகவும் சமவயதுடையவர்களாகவும் ஆக்குவோம். </span>
<span>56:38 இவை அனைத்தும் வலப்பக்கத்தாருக்கு உரியவை. </span>
<span>56:39 அத்தகையவர்கள், முன்னோர்களில் நிறையப் பேரும், </span>
<span>56:40 பின்னோர்களில் நிறையப் பேருமாய் இருப்பார்கள். </span>
<span>56:41 மேலும், இடப்பக்கத்தார்; இடப்பக்கத்தார் (உடைய துர்பாக்கியம்) பற்றி என்ன சொல்வது? </span>
<span>56:42 அனற்காற்றிலும், கொதிக்கும் நீரிலும், </span>
<span>56:43 கரும்புகைகளின் நிழலிலும் கிடப்பார்கள். </span>
<span>56:44 அது குளிர்ச்சியாகவும் இராது; சுகமாகவும் இராது. </span>
<span>56:45 இவர்கள் எப்படிப்பட்ட மக்களெனில் இந்த கதியை அடைவதற்கு முன்பு சுகபோகத்தில் மூழ்கியிருந்தார்கள்; </span>
<span>56:46 மேலும், பெரும் பாவங்கள் புரிவதில் பிடிவாதமாக இருந்தார்கள். </span>
<span>56:47 “நாங்கள் இறந்து மண்ணோடு மண்ணாகி விட்டாலும், எலும்புக்கூடாகிப்போனாலும் மீண்டும் எழுப்பப்படுவோமா, என்ன? </span>
<span>56:48 முன்பு வாழ்ந்துசென்ற எங்களுடைய மூதாதையர்களும் எழுப்பப்படுவார்களா, என்ன?” என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். </span>
<span>56:49 (நபியே!) இவர்களிடம் கூறும்: “முன்னோர்கள், பின்னோர்கள் அனைவரும் </span>
<span>56:50 திண்ணமாக ஒன்றுகூட்டப்பட வேண்டியவர்களாய் இருக்கின்றார்கள், நேரம் குறிக்கப்பட்ட ஒரு நாளில்! </span>
<span>56:51 பின்னர், வழி கெட்டவர்களே! பொய் என்று தூற்றியவர்களே! </span>
<span>56:52 நீங்கள் ஸக்கூம் மரத்தினுடையதையே உண்ணப் போகின்றீர்கள்! </span>
<span>56:53 நீங்கள் அதைக்கொண்டே வயிற்றை நிரப்புவீர்கள். </span>
<span>56:54 அதற்கு மேல் கொதிக்கும் நீரைக் குடிப்பீர்கள், </span>
<span>56:55 அடங்கா தாகம் கொண்ட ஒட்டகத்தைப் போன்று! </span>
<span>56:56 இதுதான் (இந்த இடப்பக்கத்தார்க்குரிய) விருந்து உபசாரப் பொருட்களாகும், கூலி கொடுக்கும் நாளில்!</span>
<span>56:57 நாமே உங்களைப் படைத்தோம். பிறகு ஏன் நீங்கள் உண்மை என ஏற்றுக்கொள்வதில்லை? </span>
<span>56:58 நீங்கள் செலுத்துகின்ற இந்த இந்திரியத்துளியைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா?</span>
<span>56:59 இதனைக் கொண்டு குழந்தையை நீங்கள் உருவாக்குகின்றீர்களா; அல்லது அதனை உருவாக்குவது நாமா? </span>
<span>56:60 நாமே மரணத்தை உங்களிடையே விதித்திருக்கின்றோம். </span>
<span>56:61 மேலும், உங்களின் வடிவங்களை மாற்றுவதற்கும் நீங்கள் அறியாத வடிவங்களில் உங்களைப் படைப்பதற்கும் நாம் இயலாதவரல்லர். </span>
<span>56:62 உங்களின் முதல் பிறப்பைப் பற்றி நீங்கள் அறிந்தே இருக்கின்றீர்கள். பிறகு, ஏன் நீங்கள் படிப்பினை பெறுவதில்லை?</span>
<span>56:63 நீங்கள் விதைக்கின்ற இந்த விதையைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? </span>
<span>56:64 இதன் மூலம் பயிர்களை நீங்கள் விளைவிக்கின்றீர்களா? அல்லது நாம் விளைவிக்கின்றோமா?</span>
<span>56:65 நாம் நாடினால் இவற்றைப் பதர்களாய் ஆக்கிவிட்டிருப்போம். அப்போது நீங்கள் பலவாறு புலம்பிக்கொண்டிருப்பீர்கள்; </span>
<span>56:66 அனைத்தும் தண்டமாகிவிட்டதே; </span>
<span>56:67 நாம் பெரும் துர்ப்பாக்கியவான்களாய் ஆகிவிட்டோமே என்று!</span>
<span>56:68 நீங்கள் பருகும் இந்த நீரை நீங்கள் எப்போதாவது கண்திறந்து பார்த்திருக்கின்றீர்களா? </span>
<span>56:69 மேகத்திலிருந்து இதனை நீங்கள் பொழியச் செய்தீர்களா? அல்லது அதனைப் பொழியச் செய்தது நாமா? </span>
<span>56:70 நாம் நாடினால் இதனை உவர்ப்பு நீராக்கிவிட்டிருப்போம். அப்படியிருக்க நீங்கள் ஏன் நன்றி செலுத்துவதில்லை?</span>
<span>56:71 நீங்கள் எரிக்கின்ற இந்தத் தீயைப் பற்றி எப்போதாவது நீங்கள் எண்ணிப்பார்த்தீர்களா? </span>
<span>56:72 அதன் மரத்தை நீங்கள் படைத்திருக்கின்றீர்களா? அல்லது அதனைப் படைத்தவர் நாமா? </span>
<span>56:73 நாம் இதனை நினைவூட்டும் சாதனமாகவும் தேவையுடையோருக்கு வாழ்க்கைச் சாதனமாகவும் அமைத்துள்ளோம். </span>
<span>56:74 எனவே (நபியே!) மகத்துவமிக்க உம் இறைவனின் பெயரைத் துதிப்பீராக!</span>
<span>56:75 இல்லை, நட்சத்திரங்களின் அமைநிலைகள் மீது நான் சத்தியம் செய்கின்றேன். </span>
<span>56:76 நீங்கள் உணர்வீர்களேயானால், திண்ணமாக இது ஒரு மகத்தான சத்தியம்தான்! </span>
<span>56:77 இது ஓர் உன்னதமான குர்ஆன். </span>
<span>56:78 இது பாதுகாப்பானதொரு நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. </span>
<span>56:79 தூய்மையானவர்களைத் தவிர வேறு எவரும் இதனைத் தொடமுடியாது. </span>
<span>56:80 இது அகிலத்தின் அதிபதியினால் இறக்கியருளப்பட்டதாகும். </span>
<span>56:81 பிறகு என்ன, இந்த வசனத்தையா நீங்கள் அலட்சியப்படுத்துகின்றீர்கள்? </span>
<span>56:82 மேலும், இதனைப் பொய்யென்று தூற்றுவதுதான் இந்த அருட்கொடையில் உங்களுக்குரிய பங்கா?</span>
<span>56:83 இறந்துபோகின்ற ஒருவரின் உயிர் தொண்டைவரை வந்து அவர் இறந்து கொண்டிருக்கும்போது;</span>
<span>56:84 உங்கள் கண்களாலேயே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள். </span>
<span>56:85 அப்போது உங்களைக் காட்டிலும் நாம் அவருக்கு மிக அண்மையில் இருக்கின்றோம். ஆனால், அது உங்களுக்குத் தென்படுவதில்லை. </span>
<span>56:86 நீங்கள் யாராலும் கட்டுப்படுத்தப்படாதவர்களாய் இருந்தால் </span>
<span>56:87 உங்களுடைய இந்தக் கருத்தில் நீங்கள் வாய்மையானவர்களாய் இருந்தால் அந்நேரத்தில் வெளியேறிக் கொண்டிருக்கும் அவருடைய உயிரை நீங்கள் ஏன் திரும்பக் கொண்டு வருவதில்லை? </span>
<span>56:88 பின்னர், இறக்கின்ற அந்த மனிதர் நெருக்கமானவர்களுள் ஒருவராய் இருந்தால் </span>
<span>56:89 அவருக்கு சுகமும், உயர்தரமான உணவும், அருட்கொடைகள் நிறைந்த சுவனமும் இருக்கின்றன. </span>
<span>56:90 மேலும், அவர் வலப்பக்கத்தாருள் ஒருவராய் இருந்தால், </span>
<span>56:91 “சாந்தி உண்டாகட்டும், உம்மீது! நீர் வலப்பக்கத்தாருள் ஒருவராய் இருக்கின்றீர்!” என்று கூறி வரவேற்கப்படுவார். </span>
<span>56:92 மேலும், அவர் பொய் எனத் தூற்றியவர்களில் ஒருவராகவும், வழிகேடர்களில் ஒருவராகவும் இருந்தால்,</span>
<span>56:93 கொதிக்கும் நீரும், </span>
<span>56:94 நரகத்தில் வீசப்படுவதும்தாம் அவருக்குரிய ‘உபசாரம்’ ஆகும்!</span>
<span>56:95 திண்ணமாக, இவை அனைத்தும் திட்டவட்டமான உண்மைகளாகும். </span>
<span>56:96 எனவே (நபியே!) மகத்துவமிக்க உம் இறைவனின் பெயரைத் துதிப்பீராக!</span>
</div><div>
<span>அல் ஹதீத்</span>
<span>57:1 வானங்கள் மற்றும் பூமியிலுள்ள ஒவ்வொன்றும் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. அவனே மிக வல்லமை மிக்கவன்; நுண்ணறிவாளன். </span>
<span>57:2 வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சிக்கு அவனே உரிமையாளன்; அவன் உயிரை வழங்குகின்றான்; மரணத்தை அளிக்கின்றான். மேலும், அவன் ஒவ்வொன்றின்மீதும் பேராற்றல் கொண்டவனாக இருக்கின்றான். </span>
<span>57:3 அவனே ஆதியும் அந்தமும் ஆவான். அவனே வெளிப்படையானவனும், மறைவானவனும் ஆவான். மேலும், அவன் ஒவ்வொன்றையும் நன்கறிபவனாயிருக்கின்றான். </span>
<span>57:4 வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் அவன்தான் படைத்தான். பின்னர், அர்ஷின்* மீது அமர்ந்தான். பூமிக்குள் செல்பவற்றையும், அதிலிருந்து வெளியேறுகின்றவற்றையும் வானத்திலிருந்து இறங்குகின்றவற்றையும், அதில் ஏறுகின்றவற்றையும் அவன் அறிகின்றான். நீங்கள் எங்கிருப்பினும் அவன் உங்களுடன் இருக்கின்றான். மேலும், நீங்கள் செய்யும் செயல்களையெல்லாம் அவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான். </span>
<span>57:5 அவனே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சிக்கு உரிமையாளன்; மேலும் அனைத்து விவகாரங்களும் தீர்ப்புக்காக அவனிடமே திருப்பிவிடப்படுகின்றன. </span>
<span>57:6 அவனே இரவைப் பகலிலும், பகலை இரவிலும் நுழைக்கின்றான். மேலும், நெஞ்சங்களில் இருக்கும் இரகசியத்தையும் அவன் நன்கறிகின்றான். </span>
<span>57:7 அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். எவற்றின் விஷயத்தில் அவன் உங்களைப் பிரதிநிதியாக்கியிருக்கின்றானோ அவற்றிலிருந்து செலவழியுங்கள். உங்களில் எவர்கள் நம்பிக்கை கொள்வார்களோ, மேலும், பொருளைச் செலவிடுவார்களோ அவர்களுக்குப் பெரும் கூலி உண்டு. </span>
<span>57:8 உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நீங்கள் அல்லாஹ்வின் மீது ஏன் நம்பிக்கை கொள்வதில்லை? இறைத்தூதரோ உங்களை உங்கள் அதிபதியின்மீது நம்பிக்கை கொள்ளும்படி அழைத்துக் கொண்டிருக்கின்றார். மேலும், அவர் உங்களிடம் உறுதிப்பிரமாணம் வாங்கியிருக்கின்றார். நீங்கள் உண்மையில் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் (அல்லாஹ்வையே நம்புங்கள்). </span>
<span>57:9 அல்லாஹ்தான் தன் அடியார்மீது தெளிவான வசனங்களை இறக்கிக்கொண்டிருக்கின்றான், உங்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக! உண்மை யாதெனில், அல்லாஹ் உங்கள் மீது மிகுந்த பரிவும் கருணையும் கொண்டவனாயிருக்கின்றான். </span>
<span>57:10 நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமலிருப்பதற்கு என்னதான் காரணம்? உண்மையில், வானங்கள் மற்றும் பூமியின் வாரிசுரிமையோ அல்லாஹ்விற்கே உரியதாகும். உங்களில் (யார் வெற்றிக்குப் பின் செலவு செய்வார்களோ, மேலும், அறப்போரும் புரிவார்களோ அவர்கள்) வெற்றிக்கு முன் செலவு செய்து, அறப்போரும் புரிந்தவர்களுக்குச் சமமாக மாட்டார்கள். அத்தகையவர்களின் அந்தஸ்து, பின்னர் செலவு செய்தவர்களைவிடவும், அறப்போர் புரிந்தவர்களைவிடவும் உயர்ந்ததாகும். ஆயினும், அல்லாஹ் இரு சாராருக்கும் நல் வாக்குறுதியினை அளித்திருக்கின்றான். நீங்கள் செய்பவை அனைத்தையும் அல்லாஹ் அறிந்தவனாயிருக்கின்றான். </span>
<span>57:11 அல்லாஹ்விற்குக் கடன் கொடுப்பவர் யார்? அழகிய கடன்! அல்லாஹ் அதனைப் பன்மடங்கு பெருக்கி அவருக்குத் திரும்பக் கொடுப்பதற்காக! மேலும், அவருக்கு மிகச் சிறந்த கூலியும் இருக்கின்றது. </span>
<span>57:12 அன்று நீர் காண்பீர், நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும்! அவர்களுடைய ஒளி அவர்களின் முன்பும், அவர்களின் வலப்புறத்திலும் விரைந் தோடிக் கொண்டிருக்கும். கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்கள் இன்று உங்களுக்கு இருக்கின்றன என்று நற்செய்தி (அவர்களுக்குக் கூறப்படும்); அவற்றில் அவர்கள் நிரந்தரமாய்த் தங்கி வாழ்வார்கள். இதுவே மாபெரும் வெற்றியாகும். </span>
<span>57:13 அந்நாளில் நயவஞ்சகர்களான ஆண்கள் பெண்களின் நிலை எவ்வாறிருக்குமெனில், நம்பிக்கையாளர்களிடம் அவர்கள் கூறுவார்கள்: “சற்று எங்கள் பக்கம் பாருங்களேன். நாங்கள் உங்களுடைய ஒளியிலிருந்து சற்றுப் பயனடைந்து கொள்கின்றோம்.” ஆயினும் அவர்களிடம் சொல்லப்படும்: “பின்னால் தள்ளிப் போய் விடுங்கள்! (உங்களுக்குரிய) ஒளியை வேறெங்காவது தேடிக் கொள்ளுங்கள்!” பிறகு அவர்களுக்கிடையே ஒரு தடுப்புச்சுவர் எழுப்பப்படும். அதில் ஒரு கதவு இருக்கும். அந்தக் கதவுக்கு உட்புறத்தில் கருணை இருக்கும். அதன் வெளிப்புறத்தில் வேதனை இருக்கும். </span>
<span>57:14 அவர்கள் நம்பிக்கையாளர்களைக் கூப்பிட்டுக் கேட்பார்கள்: “நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” அதற்கு நம்பிக்கையாளர்கள் பதிலளிப்பார்கள்: “ஆம்! ஆனால், நீங்களே உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டீர்கள். சந்தர்ப்பவாதிகளாய் இருந்தீர்கள்; ஐயத்தில் உழன்றுகொண்டிருந்தீர்கள். மேலும், வீணான எதிர்பார்ப்புகள் உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தன. இறுதியில் அல்லாஹ்வின் தீர்ப்பு வந்துவிட்டது. மேலும் (இறுதி வரை) அந்தப் பெரும் ஏமாற்றுக்காரன் (ஷைத்தான்) உங்களை அல்லாஹ்வின் விஷயத்தில் ஏமாற்றிக்கொண்டிருந்தான். </span>
<span>57:15 எனவே, இன்று உங்களிடமிருந்து ஈடு எதுவும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும், எவர்கள் வெளிப்படையாக நிராகரித்திருந்தார்களோ, அவர்களிடமிருந்தும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நரகமே உங்களுடைய இருப்பிடம் ஆகும். அதுவே உங்களைக் கவனித்துக் கொள்ளும். மேலும், இது மிக மோசமான கதியாகும். </span>
<span>57:16 நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவினால் உருகுவதற்கும், அவன் இறக்கி வைத்த சத்தியத்தின் முன் பணிவதற்கும் நேரம் இன்னும் வரவில்லையா? மேலும், முன்னர் வேதம் வழங்கப்பட்டவர்களைப் போன்று அவர்கள் ஆகிவிட வேண்டாம். (பிறகு) நீண்டகாலம் அவர்கள் மீது உருண்டு ஓடிவிட்டபொழுது அவர்களின் இதயங்கள் இறுகிப்போய் விட்டன. (இன்று) அவர்களில் பெரும்பாலோர் தீயவர்களாகி விட்டிருக்கின்றனர். </span>
<span>57:17 நன்கறிந்து கொள்ளுங்கள்: பூமிக்கு அது இறந்துவிட்ட பிறகு அல்லாஹ் உயிரூட்டுகின்றான். நாம் சான்றுகளை உங்களுக்குத் தெளிவாக விளக்கிக் காட்டியுள்ளோம், நீங்கள் சிந்தித்து உணர்வதற்காக!</span>
<span>57:18 ஆண்கள் மற்றும் பெண்களிலிருந்து எவர்கள் ஸதகா தான தருமங்கள் வழங்குபவர்களாய் இருக்கின்றார்களோ, மேலும், எவர்கள் அல்லாஹ்விற்கு அழகிய கடன் அளித்தார்களோ, அவர்களுக்குத் திண்ணமாக பன்மடங்கு அதிகம் வழங்கப்படும். அவர்களுக்குக் கண்ணியமான கூலியும் இருக்கிறது. </span>
<span>57:19 மேலும், எவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கை கொள்கின்றார்களோ, அவர்களே தம் இறைவனிடத்தில் ‘ஸித்தீக்கு’ (வாய்மை மிக்கவர்களாகவும்) ‘ஷஹீத்’ (சான்றுபகர்பவர்களாகவும்) இருக்கின்றார்கள். அவர்களுக்காக அவர்களின் கூலியும் ஒளியும் இருக்கின்றன. எவர்கள் நிராகரித்தார்களோ, மேலும், நம்முடைய வசனங்களைப் பொய்யெனத் தூற்றினார்களோ அவர்கள் நரகவாசிகளாவர். </span>
<span>57:20 நன்கு அறிந்து கொள்ளுங்கள்: இந்த உலக வாழ்க்கை விளையாட்டும், கேளிக்கையும், வெளிப்பகட்டும் மற்றும் உங்களிடையே ஒருவருக்கொருவர் பெருமையடித்துக் கொள்ளுதல், செல்வங்கள், குழந்தைகள் ஆகியவற்றில் ஒருவரையொருவர் மிஞ்சிவிட முற்படுதலுமேயன்றி வேறில்லை. அதற்கான உவமை: மழை பொழிந்திடும்போது அதன்மூலம் விளைகின்ற தாவரங்களைப் பார்த்து விவசாயிகள் மகிழ்ச்சியடைவது போன்றதாகும். பின்னர், அதே பயிர் காய்ந்துவிடுகின்றது. அது மஞ்சளித்துப் போவதையும், பின்னர், பதராகிவிடுவதையும் நீர் பார்க்கலாம். (இதற்கு மாறாக) மறுமை எத்தகைய இடமெனில், அங்கு கடும் தண்டனை இருக்கிறது. அல்லாஹ்வின் மன்னிப்பும் திருப்தியும் இருக்கின்றன. ஆனால், உலக வாழ்க்கை ஓர் ஏமாற்றுச் சாதனமே தவிர வேறெதுவுமில்லை. </span>
<span>57:21 ஓடுங்கள்; ஒருவரையொருவர் முந்திச் செல்வதற்கு முயலுங்கள்; உங்கள் இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் வானம், பூமியின் அளவிற்கு விசாலமான சுவனத்தை நோக்கியும்! அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களுக்காக அது தயார் செய்யப்பட்டிருக்கின்றது. இது அல்லாஹ்வின் அருளாகும். தான் நாடுகின்றவர்களுக்கு அதனை அவன் வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் பேரருள் உடையவனாக இருக்கின்றான். </span>
<span>57:22 பூமியில் ஏற்படுகின்ற அல்லது உங்களின் மீது இறங்குகின்ற எந்தத் துன்பமானாலும் அதனை நாம் உருவாக்குவதற்கு முன்பு அதைக்குறித்து ஒரு சுவடியில் (அதாவது விதி ஏட்டில்) எழுதி வைக்காமல் இல்லை. அப்படிச் செய்வது அல்லாஹ்விற்கு மிக எளிதானதாகும். </span>
<span>57:23 (இவையனைத்தும்) எதற்காகவெனில், உங்களுக்கு எந்த நஷ்டம் ஏற்பட்டாலும் நீங்கள் மனம் துவண்டுவிடக்கூடாது. மேலும், அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருப்பவற்றைக் கொண்டு நீங்கள் பூரித்துப்போய்விடக் கூடாது என்பதற்காகத்தான்! தம்மையே பெரிதாக நினைத்துக் கொள்கின்ற, பெருமை பேசித்திரிகின்ற யாரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை; </span>
<span>57:24 இவர்களோ தாமும் கஞ்சத்தனம் செய்கின்றார்கள்; பிறரையும் கஞ்சத்தனம் செய்திடத் தூண்டுகின்றார்கள். இனி எவரேனும் புறக்கணித்தால் திண்ணமாக, அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் மாபெரும் புகழுக்குரிய தன்மைகள் கொண்டவனாகவும் இருக்கின்றான். </span>
<span>57:25 நாம் நம் தூதர்களைத் தெளிவான சான்றுகளுடனும், வழிகாட்டுதல்களுடனும் அனுப்பினோம்; மேலும், அத்துடன் அவர்களுக்கு வேதத்தையும், துலாக்கோலையும் இறக்கினோம். மக்கள் நீதியில் நிலைத்திருக்கும் பொருட்டு! மேலும், இரும்பையும் இறக்கினோம்; அதில் பெரும் வலிமை உள்ளது. மக்களுக்குப் பயன்களும் இருக்கின்றன. (இவ்வாறெல்லாம் செய்யப்பட்டது எதற்காகவெனில்) அல்லாஹ்வைப் பார்க்காமலே அவனுக்கும் அவனுடைய தூதர்களுக்கும் உதவி செய்பவர்கள் யார் என்பதை அல்லாஹ் கண்டறிவதற்காகத்தான்! திண்ணமாக அல்லாஹ் பேராற்றல் கொண்டவனாகவும், வல்லமை மிக்கவனாகவும் இருக்கின்றான். </span>
<span>57:26 நாம் நூஹையும் இப்ராஹீமையும் அனுப்பினோம்; அவர்களின் வழித்தோன்றல்களில் தூதுத்துவத்தையும், வேதத்தையும் வைத்துவிட்டோம். பின்னர் அவர்களுடைய வழித்தோன்றல்களில் சிலர் நேர்வழியை மேற்கொண்டனர். அவர்களில் பலர் தீயவர்களாகிவிட்டனர். </span>
<span>57:27 அவர்களுக்குப் பின் ஒருவர் பின் ஒருவராக நம் தூதர்களை நாம் அனுப்பினோம். அவர்களுக்குப் பிறகு மர்யமின் குமாரர் ஈஸாவை அனுப்பினோம். அவருக்கு இன்ஜீலை வழங்கினோம். மேலும், எவர்கள் அவரைப் பின்பற்றினார்களோ அவர்களின் உள்ளங்களில் நாம் பரிவையும் கருணையையும் ஏற்படுத்தினோம். மேலும், துறவுக்கோட்பாட்டை அவர்களாகவே தோற்றுவித்துக் கொண்டார்கள். நாம் அதனை அவர்கள்மீது கடமையாக்கவில்லை. ஆயினும், அல்லாஹ்வின் திருப்தியைப் பெறும் பொருட்டு அவர்கள் தாமாகவே இந்த நூதன முறையைத் தோற்றுவித்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் எப்படி அதனைப் பேணவேண்டுமோ அப்படி அதனைப் பேணவில்லை. அவர்களில் யார் இறைநம்பிக்கை கொண்டிருந்தார்களோ அவர்களுக்கு அவர்களின் கூலியை நாம் வழங்கினோம். எனினும், அவர்களில் அநேகர் தீயவர்களாவர். </span>
<span>57:28 இறைநம்பிக்கைகொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! அவனுடைய தூதர் (முஹம்மத் (ஸல்)) மீது நம்பிக்கையும் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்குத் தன் கருணையிலிருந்து இரு மடங்கை வழங்குவான். மேலும், உங்களுக்கு ஒளியையும் அருளுவான்; அந்த ஒளியில் நீங்கள் நடந்து செல்வீர்கள். உங்கள் பாவங்களையும் மன்னிப்பான் அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>57:29 (இப்படிப்பட்ட நடத்தையை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.) வேதம் அருளப்பட்டவர்கள் இவற்றை அறிந்து கொள்வதற்காக: ‘அல்லாஹ்வின் அருளில் அவர்களுக்கு எந்தக் குத்தகையும் இல்லை; மேலும், அல்லாஹ்வின் அருள் அவனுடைய கையில்தான் இருக்கிறது. தான் நாடுபவர்களுக்கு அதனை அவன் வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் பேரருள் உடையவனாகவும் இருக்கின்றான்.’</span>
</div><div>
<span>அல் முஜாதலா</span>
<span>58:1 தன்னுடைய கணவர் விஷயத்தில் உம்மிடம் விவாதித்துக் கொண்டும், அல்லாஹ்விடத்தில் முறையிட்டுக் கொண்டும் இருக்கின்ற பெண்ணின் சொல்லைத் திண்ணமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான். உங்கள் இருவரின் உரையாடலை அல்லாஹ் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கேட்பவனும் பார்ப்பவனும் ஆவான். </span>
<span>58:2 உங்களில் எவர்கள் தம்முடைய மனைவியரை ‘ளிஹார்’* செய்கின்றார்களோ, அவர்களின் மனைவியர் அவர்களுக்கு அன்னையராகிவிடமாட்டார்கள். அவர்களைப் பெற்றெடுத்தவர்களே அவர்களின் அன்னையர் ஆவர். அவர்கள் கடும் வெறுப்புக்குரிய, பொய்யான சொல்லைக் கூறுகின்றார்கள். மேலும், உண்மை யாதெனில், அல்லாஹ் பெரிதும் பிழை பொறுப்பவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். </span>
<span>58:3 எவர்கள் தங்களுடைய மனைவியரை ‘ளிஹார்’ செய்து பின்னர், தாங்கள் கூறிய சொல்லைவிட்டுத் திரும்பி விடுகின்றார்களோ அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் தீண்டும் முன்பாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு உங்களுக்கு அறிவுரை கூறப்படுகின்றது. மேலும், நீங்கள் எவற்றைச் செய்கின்றீர்களோ அவற்றை அல்லாஹ் மிகவும் அறிந்தவனாக இருக்கின்றான். </span>
<span>58:4 இனி, எவருக்கேனும் அடிமை கிடைக்கவில்லையானால், அவ்விருவரும் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும். ஒருவர் இதற்கும் சக்தி பெறாவிட்டால், அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இந்தக் கட்டளை ஏன் அளிக்கப்படுகின்றது என்றால், அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்! இவை அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளாகும். மேலும், நிராகரிப்பவர்களுக்கு துன்புறுத்தும் தண்டனை இருக்கின்றது. </span>
<span>58:5 அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றவர்கள் இழிவுக்கு ஆளாக்கப்படுவார்கள்; அவர்களுக்கு முன்பிருந்தவர்கள் இழிவுக்கு ஆளாக்கப்பட்டதைப் போன்று! நாம் தெள்ளத் தெளிவான சான்றுகளை இறக்கிவிட்டோம். இனி, நிராகரிப்பவர்களுக்கு இழிவுமிக்க வேதனை இருக்கின்றது. </span>
<span>58:6 அல்லாஹ் அவர்கள் அனைவரையும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பி, அவர்கள் என்னவெல்லாம் செய்துவிட்டு வந்திருக்கின்றார்கள் என்பதை அவர்களுக்கு அறிவித்துக் கொடுக்கும் நாளில் (இந்த இழிவுமிக்க வேதனை கிட்டும்.) அவர்கள் மறந்து போய்விட்டனர். ஆனால், அல்லாஹ் அவர்களுடைய செயல்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் எண்ணி எண்ணி பாதுகாத்து வைத்திருக்கின்றான். மேலும், அல்லாஹ் ஒவ்வொன்றுக்கும் சாட்சியாகவும் இருக்கின்றான். </span>
<span>58:7 வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றையும் அல்லாஹ் அறிகின்றான் என்பது உமக்குத் தெரியாதா, என்ன? மூன்று மனிதர்களிடையே இரகசியப் பேச்சுவார்த்தை எதுவும் நடப்பதில்லை; அவர்களிடையே நான்காவதாக அல்லாஹ் இருந்தே தவிர! அல்லது ஐந்து மனிதர்களிடையே இரகசியப் பேச்சு எதுவும் நடப்பதில்லை; அவர்களிடையே ஆறாவதாக அல்லாஹ் இருந்தே தவிர! இரகசிய பேச்சுக்களைப் பேசுவோர் இதனைவிடக் குறைவாக இருந்தாலும், கூடுதலாக இருந்தாலும், அவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான். பின்னர், அவர்கள் என்னவெல்லாம் செய்திருக்கின்றார்கள் என்பதை அவன் மறுமைநாளில் அவர்களுக்கு அறிவித்துக் கொடுப்பான். திண்ணமாக, அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவனாக இருக்கின்றான். </span>
<span>58:8 எவர்கள் இரகசியப் பேச்சுகள் பேசுவதைவிட்டுத் தடுக்கப்பட்டிருந்தார்களோ அவர்களை நீர் பார்க்கவில்லையா, என்ன? அவர்கள் தடுக்கப்பட்டிருந்த செயல்களையே மீண்டும் செய்கின்றார்கள். மேலும், இவர்கள் தங்களிடையே ஒளிந்து ஒளிந்து பாவமான வரம்பு மீறுகின்ற, தூதருக்கு மாறு செய்கின்ற பேச்சுகளையே பேசுகின்றார்கள். மேலும், இவர்கள் உம்மிடம் வரும்போது எந்த முறையில் அல்லாஹ் உமக்கு வாழ்த்து (ஸலாம்) கூறவில்லையோ அந்த முறையில் இவர்கள் உமக்கு ஸலாம் சொல்கின்றார்கள். மேலும், தங்களுடைய உள்ளங்களில் கூறிக்கொள்கின்றார்கள்: “நம்முடைய இந்தப் பேச்சுகளுக்காக அல்லாஹ் நமக்கு ஏன் தண்டனை தருவதில்லை?” அவர்களுக்கு நரகமே போதுமானது! அதற்கே அவர்கள் எரிபொருளாகுவார்கள். அவர்களின் கதி எத்துணைத் தீயது!</span>
<span>58:9 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் உங்களுக்குள் இரகசியம் பேசுவீர்களாயின் பாவம் செய்வதற்காகவும், வரம்பு மீறுவதற்காகவும், தூதருக்கு மாறு செய்வதற்காகவும் இரகசியம் பேசாதீர்கள்; மாறாக, நன்மையானதும் இறையச்சமுடையதுமான பேச்சுகளையே பேசுங்கள்! மேலும், எந்த இறைவன் முன்னிலையில் நீங்கள் ஒன்று சேர்க்கப்பட இருக்கின்றீர்களோ அந்த இறைவனுக்கு அஞ்சியவாறு இருங்கள். </span>
<span>58:10 கிசுகிசுப்பது ஷைத்தானியச் செயலாகும். இறைநம்பிக்கை கொண்டோரை மனம் நோகச் செய்வதற்காகத்தான் அது செய்யப்படுகின்றது. ஆயினும், இறைவனின் அனுமதியின்றி அதனால் அவர்களுக்குச் சிறிதும் நஷ்டம் ஏற்படுத்த முடியாது. மேலும், இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே முற்றிலும் சார்ந்திருக்க வேண்டும். </span>
<span>58:11 இறைநம்பிக்கைகொண்டவர்களே! அவைகளில் நகர்ந்து இடம் ஏற்படுத்திக் கொடுங்கள் என்று உங்களிடம் கூறப்பட்டால், இடம் ஏற்படுத்திக் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடம் ஏற்படுத்தித் தருவான். மேலும், “எழுந்து செல்லுங்கள்!” என உங்களிடம் சொல்லப்பட்டால், எழுந்து செல்லுங்கள். உங்களில் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களோ, மேலும், எவர்கள் ஞானம் வழங்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் உயர்ந்த பதவிகளை வழங்குவான். மேலும், நீங்கள் செய்பவை அனைத்தையும் அல்லாஹ் அறியக்கூடியவனாக இருக்கின்றான். </span>
<span>58:12 இறைநம்பிக்கைகொண்டவர்களே! நீங்கள் தூதருடன் தனிமையில் பேசுவதாயின் அவ்வாறு பேசுவதற்கு முன் சிறிது தானதர்மம் செய்யுங்கள். இது உங்களுக்கு நன்மையானதும் மிகத் தூய்மையானதுமாகும். ஆனால், தர்மம் செய்வதற்கு எதுவும் உங்களிடம் இல்லையென்றால் திண்ணமாக, அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான். </span>
<span>58:13 தனிமையில் உரையாடுவதற்கு முன் தான தர்மங்கள் வழங்க வேண்டியிருக்குமே என்று நீங்கள் பயந்துவிட்டீர்களா? பரவாயில்லை. நீங்கள் அப்படிச் செய்யவில்லையானால் அதற்காக அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான் நீங்கள் தொழுகையை நிலைநாட்டிக் கொண்டும் ஜகாத்தைக் கொடுத்துக் கொண்டும் இருங்கள். மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து வாழுங்கள். நீங்கள் செய்பவை அனைத்தையும் அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். </span>
<span>58:14 அல்லாஹ்வின் சினத்திற்குள்ளான ஒரு கூட்டத்தாருடன் தோழமை பாராட்டியவர்களை நீர் பார்க்கவில்லையா, என்ன? அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்களும் அல்லர்; அவர்களைச் சார்ந்தவர்களும் அல்லர். மேலும் அவர்கள் அறிந்துகொண்டே பொய்யான விஷயத்தின் மீது சத்தியம் செய்கின்றார்கள். </span>
<span>58:15 அல்லாஹ் அவர்களுக்குக் கடும்வேதனையைத் தயார் செய்து வைத்திருக்கின்றான். அவர்கள் செய்து கொண்டிருப்பவை மிகவும் தீயசெயல்களே! </span>
<span>58:16 அவர்கள் தங்களுடைய சத்தியங்களைக் கேடயமாக வைத்துக்கொண்டு அல்லாஹ்வின் பாதையிலிருந்து மக்களைத் தடுக்கின்றார்கள். இதற்காக அவர்களுக்கு இழிவுதரும் வேதனை இருக்கின்றது. </span>
<span>58:17 அவர்களின் செல்வங்களும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்ற உதவாது; அவர்களின் பிள்ளைகளும் உதவ மாட்டார்கள். அவர்கள் நரகத்தின் தோழர்கள்! அதிலேயே என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள். </span>
<span>58:18 எந்நாளில் அல்லாஹ், அவர்கள் அனைவரையும் உயிர்கொடுத்து எழுப்புவானோ அந்நாளில் அவனது திருமுன் சத்தியம் செய்வார்கள் உங்கள் முன் சத்தியம் செய்வது போல்! அதனால் தங்களுக்குச் சிறிது பயன் கிடைக்குமென்றும் எண்ணிக் கொள்வார்கள். நன்கு அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் பெரும் பொய்யர்கள். </span>
<span>58:19 ஷைத்தான் அவர்களின் மீது ஆதிக்கம் செலுத்திவிட்டான்; இறைவனைப் பற்றிய நினைப்பை அவர்களின் உள்ளங்களிலிருந்து மறக்கடித்து விட்டான். அவர்கள் ஷைத்தானுடைய கட்சியினராவர். தெரிந்து கொள்ளுங்கள்: ஷைத்தானுடைய கட்சியினர்தாம் நஷ்டம் அடையக் கூடியவர்கள். </span>
<span>58:20 எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றார்களோ, அவர்கள் திண்ணமாக, மிகவும் கேவலமான படைப்பினங்களைச் சேர்ந்தவர்களாவர். </span>
<span>58:21 நானும் என்னுடைய தூதர்களுமே நிச்சயமாக வெல்லுவோம் என்று அல்லாஹ் எழுதிவிட்டான். உண்மையில், அல்லாஹ் பேராற்றல் உடையோனும் வலிமைமிக்கோனுமாய் இருக்கின்றான். </span>
<span>58:22 அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்ப்பவர்கள் மீது அன்பு செலுத்துவதை (நபியே!) நீர் காணமாட்டீர்! அத்தகையோர் அவர்களுடைய தந்தையராயினும் அல்லது அவர்களுடைய தனயர்களாயினும் அல்லது அவர்களுடைய சகோதரர்களாயினும் அல்லது அவர்களுடைய குடும்பத்தினராயினும் சரியே! அவர்களின் இதயங்களில் அல்லாஹ் ஈமானை நம்பிக்கையைப் பதித்து வைத்துவிட்டான். மேலும், தன் சார்பிலிருந்து ரூஹை* வழங்கி அவர்களுக்கு வலிமை சேர்த்தான். மேலும், கீழே ஆறுகள் ஓடும் சுவனங்களில் அவன் அவர்களைப் புகச் செய்வான். அங்கே அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் அவர்களைக் கொண்டு திருப்தி அடைந்தான். அவர்களும் அல்லாஹ்வைக் கொண்டு திருப்தி அடைந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் கட்சியினராவர். அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் கட்சியினர்தாம் வெற்றி அடையக்கூடியவர்கள். </span>
</div><div>
<span>அல் ஹஷ்ர்</span>
<span>59:1 வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் அல்லாஹ்வையே துதி செய்து கொண்டிருக்கிறது. மேலும், அவனே யாவற்றையும் மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>59:2 அவனே வேதம் வழங்கப்பட்டவர்களில் நிராகரிப்பாளர்களாய் இருந்தவர்களை அவர்களின் இல்லங்களிலிருந்து முதல் படையெடுப்பிலேயே வெளியேற்றினான். அவர்கள் வெளியேறிவிடுவார்கள் என்று நீங்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. தங்களின் கோட்டைகள், அல்லாஹ்விடமிருந்து தங்களைக் காப்பாற்றிவிடும் என்று அவர்களும் கருதிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்துக்கூடப் பார்த்திராத புறத்திலிருந்து அல்லாஹ் அவர்கள் மீது வந்தான். அவன் அவர்களின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தி விட்டான். (பிறகு ஏற்பட்ட விளைவு இதுவே:) அவர்கள் தங்களுடைய கைகளைக் கொண்டே தங்களின் இல்லங்களை அழித்துக் கொண்டிருந்தார்கள். இறைநம்பிக்கையாளர்களின் கைகளைக் கொண்டும் அழிவினை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். எனவே, பார்க்கும் கண்கள் உடையீர் படிப்பினை பெறுவீர். </span>
<span>59:3 அல்லாஹ் அவர்கள் மீது நாடுகடத்தலை விதித்திராவிடில் உலகிலேயே அவர்களுக்கு வேதனை அளித்திருப்பான். மறுமையிலோ அவர்களுக்கு நரக வேதனை இருக்கவே செய்கிறது. </span>
<span>59:4 இவற்றிற்கெல்லாம் காரணம், அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்ததுதான். மேலும், அல்லாஹ்வை யார் எதிர்ப்பினும் திண்ணமாக, அல்லாஹ் (அவர்களுக்குத்) தண்டனை அளிப்பதில் மிகக் கடுமையானவனாக இருக்கின்றான். </span>
<span>59:5 நீங்கள் சில பேரீச்ச மரங்களை வெட்டியதும், அல்லது அவற்றின் வேர்களில் அவற்றை நிற்கும்படி விட்டுவிட்டதும் எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன்தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்திவிடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்.)</span>
<span>59:6 மேலும், அல்லாஹ் எந்தச் செல்வத்தை அவர்களின் பிடியில் இருந்து விடுவித்து, தன் தூதரின் பக்கம் திருப்பிக் கொடுத்தானோ அந்தச் செல்வம் உங்கள் குதிரைகளையும், ஒட்டகங்களையும் நீங்கள் ஓட்டிச் சென்றதால் கிட்டியதல்ல. மாறாக, அல்லாஹ் தான் நாடுபவர்களின் மீது தன்னுடைய தூதர்களுக்கு அதிகாரம் வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கின்றான். </span>
<span>59:7 ஊர்வாசிகளிடமிருந்து தன் தூதரின் பக்கம் அல்லாஹ் திருப்பியவை அனைத்தும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், பயணிகளுக்கும் சேரக்கூடியவை ஆகும். ஏனெனில் அது உங்களிலுள்ள செல்வந்தர்களிடையே மட்டும் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது என்பதற்காக! இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுக்கிறாரோ அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர் எதனைவிட்டும் உங்களைத் தடுக்கிறாரோ அதனை விட்டு விலகி இருங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். திண்ணமாக, அல்லாஹ் கடுந்தண்டனை அளிப்பவனாக இருக்கின்றான். </span>
<span>59:8 (மேலும், அந்தச் செல்வம்) தங்களின் இல்லங்களை விட்டும் சொத்துக்களை விட்டும் வெளியேற்றப்பட்ட ஏழை முஹாஜிர்*களுக்கு உரியதுமாகும். அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் அவனது உவப்பையும் விரும்புகின்றார்கள். மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவி புரிந்திடத் தயாராயிருக்கின்றார்கள். இவர்களே, வாய்மையுள்ள மக்களாவர். மேலும் (அந்தச் செல்வம்) இந்த முஹாஜிர்களின் வருகைக்கு முன்பே நம்பிக்கை கொண்டு தாருல் ஹிஜ்ரத்தில் (மதீனாவில்) வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கும் (உரியதாகும்). ஹிஜ்ரத்* செய்து தங்களிடம் வந்திருப்பவர்களை இவர்கள் நேசிக்கின்றார்கள் என்பது மட்டுமல்ல; அவர்களுக்கு அளிக்கப்பட்டவை தங்களுக்கும் தேவையானதே என்று மனத்தளவில்கூட அவர்கள் நினைப்பதில்லை. </span>
<span>59:9 மேலும், தாங்களே தேவையுள்ளவர்களாய் இருந்தாலும்கூட, தங்களைவிடப் பிறருக்கே முன்னுரிமை வழங்குகின்றார்கள். உண்மை யாதெனில், யார் தங்கள் மனத்தின் உலோபித்தனத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்களோ அவர்களே வெற்றி பெறக்கூடியவர்களாவர். </span>
<span>59:10 மேலும், இந்த முன்னோடிகளுக்குப் பிறகு வருகின்ற மக்களுக்கு (உரியதாகும் அந்தச் செல்வம்!) அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் அதிபதியே! எங்களையும் எங்களைவிட முந்தி நம்பிக்கை கொண்டு விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! மேலும், எங்கள் உள்ளங்களில் நம்பிக்கையாளர்களின் பேரில் எந்தக் குரோதத்தையும் உண்டாக்காதே! எங்கள் அதிபதியே! நிச்சயமாக, நீ மிகவும் பரிவுடையவனாகவும், பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றாய்!”</span>
<span>59:11 நயவஞ்சகத்தனமான நடத்தையை மேற்கொண்டிருப்பவர்களை நீர் பார்க்கவில்லையா, என்ன? இவர்கள் வேதம் வழங்கப்பட்டவர்களில் இறைநிராகரிப்பாளர்களாய் உள்ள தங்களின் சகோதரர்களிடம் கூறுகின்றார்கள்: “நீங்கள் வெளியேற்றப்பட்டால் நாங்களும் உங்களுடன் வெளியேறிவிடுவோம். உங்கள் விவகாரத்தில் நாங்கள் எவருடைய பேச்சையும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். உங்களின்மீது போர் தொடுக்கப்பட்டால் நாங்கள் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்வோம்!” ஆனால், இவர்கள் சுத்தப்பொய்யர்கள் என்பதற்கு இறைவன் சாட்சியாக இருக்கின்றான். </span>
<span>59:12 அவர்கள் வெளியேற்றப்பட்டால், இவர்கள் அவர்களுடன் ஒருபோதும் வெளியேற மாட்டார்கள். மேலும், அவர்கள் மீது போர் தொடுக்கப்பட்டால், இவர்கள் அவர்களுக்கு ஒருபோதும் உதவ மாட்டார்கள். இவர்கள் அவர்களுக்கு உதவி செய்யச் சென்றாலும்கூட புறமுதுகு காட்டிக் கொண்டு ஓடிவிடுவார்கள். பிறகு, எங்கிருந்தும் எந்த உதவியும் அவர்கள் பெறமாட்டார்கள். </span>
<span>59:13 இவர்களின் உள்ளங்களில் அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தைவிட, உங்களுடைய அச்சமே அதிகமாக உள்ளது. ஏனெனில், இவர்கள் ஒன்றும் புரியாத மக்களாய் இருக்கின்றார்கள். </span>
<span>59:14 இவர்கள் எல்லோரும் ஒன்று திரண்டு (திறந்த மைதானத்தில்) ஒருபோதும் உங்களுடன் போரிட மாட்டார்கள். போரிட்டாலும் அரண்களுடைய ஊர்களினுள் அமர்ந்து கொண்டோ, சுவர்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டோதான் போரிடுவார்கள். அவர்கள் தங்களுக்கிடையே மோதிக் கொள்வதில் கடுமையாக உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றுபட்டிருப்பதாக நீர் கருதுகின்றீர். ஆனால், இவர்களுடைய இதயங்கள் சிதறிக் கிடக்கின்றன. இவர்கள் இந்நிலைக்கு ஆளானதன் காரணம், இவர்கள் சிந்திக்காத மக்களாய் இருப்பதுதான்! </span>
<span>59:15 இவர்களுக்குச் சிறிது காலத்திற்கு முன்பு தம் செயல்களின் தீயவிளைவை சுவைத்து விட்டிருந்த மக்களைப் போன்றுதான் இவர்களும் இருக்கின்றனர். மேலும், இவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கின்றது. </span>
<span>59:16 இவர்கள் ஷைத்தானுக்கு ஒப்பாக இருக்கின்றார்கள். அவன் ‘நிராகரித்து விடு!’ என்று முதலில் மனிதனிடம் கூறுகின்றான். அதன்படி மனிதன் நிராகரித்துவிடுகிறபோது ஷைத்தான் கூறுகின்றான்: “நான் உன்னைவிட்டு விலகிவிட்டேன். அகிலமனைத்திற்கும் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கு நான் அஞ்சுகின்றேன்” என்று! </span>
<span>59:17 பிறகு, நிரந்தரமாக நரகத்தில் வீழ்ந்து கிடப்பதே இருவரின் கதியாகும். மேலும், கொடுமைக்காரர்களின் கூலி இதுவேயாகும். </span>
<span>59:18 இறைநம்பிக்கைகொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், ஒவ்வொரு மனிதனும், நாளைய தினத்திற்காக எதனைத் தயார் செய்து வைத்திருக்கின்றான் என்று பார்க்கட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சிய வண்ணம் இருங்கள். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் அறிபவனாக இருக்கின்றான். </span>
<span>59:19 எவர்கள் அல்லாஹ்வை மறந்துவிட்டு இருக்கின்றார்களோ அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அதனால், அவர்கள் தங்களையே மறந்துவிடும்படி அல்லாஹ் செய்துவிட்டான். இவர்கள்தாம் பாவிகளாவர். </span>
<span>59:20 நரகத்திற்குச் செல்பவர்களும், சுவர்க்கத்திற்குச் செல்பவர்களும் ஒருபோதும் சமமாக மாட்டார்கள்! சுவர்க்கத்திற்குச் செல்பவர்கள்தாம் உண்மையில் வெற்றியாளர்கள்!</span>
<span>59:21 நாம் இந்தக் குர்ஆனை ஏதேனும் ஒரு மலையின் மீது இறக்கியிருந்தால் அது பணிவுள்ளதாகவும், அல்லாஹ்வின் அச்சத்தால் அது பிளந்துபோவதாகவும் நீர் கண்டிருப்பீர்! நாம், இந்த உதாரணங்களை மக்கள் முன் விளக்கிக் கூறுவது, அவர்கள் (தங்களின் நிலைமையைப் பற்றிச்) சிந்திக்கட்டும் என்பதற்காகத்தான்!</span>
<span>59:22 அவன்தான் அல்லாஹ், அவனைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறெவரும் இல்லை. அவன் மறைவான மற்றும் வெளிப்படையான அனைத்தையும் அறிபவன். அவன் அளவிலாக் கருணையும் இணையிலாக்கிருபையும் உடையவன். </span>
<span>59:23 அவன்தான் அல்லாஹ்! அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவரும் இல்லை. அவன்தான் அரசன்; மிகவும் தூய்மையானவன். முழுக்க முழுக்க சாந்தியுடையவன்; அமைதி அளிப்பவன்; பாதுகாவலன்; அனைவரையும் மிகைத்தவன்; தனது கட்டளையை வலிமையுடன் செயல்படுத்தக் கூடியவன்; பெருமைக்குரியவன். தூய்மையானவன் அல்லாஹ், மக்கள் புரியும் இணைவைப்புச் செயல்களை விட்டு! </span>
<span>59:24 அந்த அல்லாஹ்தான் படைப்புக்கான திட்டம் வகுப்பவனும் அதனைச் செயல்படுத்துபவனும் அதற்கேற்ப வடிவம் அமைப்பவனுமாவான். அவனுக்கு மிக அழகிய பெயர்கள் இருக்கின்றன. வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் அவனைத் துதித்துக் கொண்டிருக்கிறது. மேலும், அவன் யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றான். </span>
</div><div>
<span>அல் மும்தஹினா</span>
<span>60:1 இறைநம்பிக்கைகொண்டவர்களே! நீங்கள் என் வழியில் அறப்போர் செய்வதற்காகவும், எனது உவப்பைப் பெறுவதற்காகவும் (தாயகத்தைத் துறந்து இல்லங்களை விட்டு) வெளியேறி இருந்தால், எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாய் இருப்பவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் அவர்களுடன் நட்புறவு வைக்கின்றீர்கள். ஆனால், அவர்களோ உங்களிடம் வந்துள்ள சத்தியத்தை ஏற்க மறுத்துவிட்டிருக்கிறார்கள். மேலும், அவர்களின் நடத்தை இதுவே: இறைத்தூதரையும் உங்களையும், நீங்கள் உங்கள் அதிபதியாகிய அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள் எனும் தவறுக்காக நாடுகடத்துகின்றார்கள். ஆனால் நீங்களோ அவர்களுக்கு இரகசியமாக நட்புத்தூதை அனுப்புகிறீர்கள். ஆயினும், நீங்கள் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் செய்யும் அனைத்தையும் நான் நன்கு அறிகின்றேன். உங்களில் யாரேனும் இவ்வாறு செய்தால், திண்ணமாக அவர் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்தவராவார். </span>
<span>60:2 (மேலும் அவர்கள் நடத்தை இதுவே:) உங்களை தங்களின் பிடியில் அவர்கள் கொண்டு வந்து விடுவார்களானால் உங்களுடன் பகைமை கொள்கின்றார்கள். மேலும், அவர்கள் தம்முடைய கையாலும், நாவாலும் உங்களுக்குத் தொல்லை தருகின்றார்கள். நீங்கள் எப்படியேனும் நிராகரிப்பாளர்களாகிவிட வேண்டுமென்று அவர்கள் பெரிதும் விரும்புகின்றார்கள். </span>
<span>60:3 மறுமைநாளில் உங்களுடைய இரத்த பந்த உறவினர்களோ, உங்களுடைய பிள்ளைகளோ உங்களுக்குப் பயனளிக்க மாட்டார்கள். (அந்நாளில்) அல்லாஹ் உங்களிடையே பிரிவை ஏற்படுத்தி விடுவான். மேலும், அல்லாஹ்தான் உங்கள் செயல்களைப் பார்ப்பவனாக இருக்கின்றான். </span>
<span>60:4 உங்களுக்கு இப்ராஹீமிடத்திலும் அவருடைய தோழர்களிடத்திலும் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. அதாவது, அவர்கள் தங்கள் சமூகத்தாரிடம் தெளிவாகக் கூறிவிட்டார்கள்: “உங்களை விட்டும், இறைவனை விடுத்து நீங்கள் வணங்குகின்ற கடவுளரை விட்டும் நாங்கள் திண்ணமாக விலகிவிட்டோம். நாங்கள் உங்களை நிராகரித்து விட்டோம். மேலும், உங்களுக்கும் எங்களுக்குமிடையே நிரந்தரப் பகைமையும், வெறுப்பும் ஏற்பட்டுவிட்டன; ஏக அல்லாஹ்வின் மீது மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரையில்!” ஆனால் இப்ராஹீம் தன் தந்தையிடம் இவ்வாறு கூறியது (விதிவிலக்கானது): “நான் உங்களுக்காக நிச்சயம் பாவமன்னிப்புக் கோருவேன். மேலும், அல்லாஹ்விடமிருந்து உங்களுக்காக எதையும் பெற்றுத்தருவது என் அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல.” (இப்ராஹீமும் அவருடைய தோழர்களும் இவ்வாறு இறைஞ்சினார்கள்:) “எங்கள் அதிபதியே! உன்னையே நாங்கள் முழுமையாகச் சார்ந்திருக்கின்றோம். உன் பக்கமே நாங்கள் மீண்டுவிட்டோம். உனது திருச்சமூகத்திற்கே நாங்கள் திரும்பிவரவேண்டி இருக்கின்றது. எங்கள் அதிபதியே! நிராகரிப்பாளர்களுக்கு எங்களை ஒரு சோதனையாய் ஆக்கிவிடாதே! எங்கள் அதிபதியே! </span>
<span>60:5 எங்கள் பாவங்களைப் பொறுத்தருள்! ஐயமின்றி நீயே வல்லமை மிக்கவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றாய்.”</span>
<span>60:6 அதே மக்களுடைய நடத்தையில் உங்களுக்கும், அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்புகின்ற ஒவ்வொருவருக்கும் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. எவரேனும் இதனைப் புறக்கணித்தால், அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் தனக்குத்தானே புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான். </span> 
<span>60:7 உங்களுக்கும், நீங்கள் (இன்று) யாருடன் பகைமை கொண்டிருக்கின்றீர்களோ அவர்களுக்குமிடையே அல்லாஹ் என்றைக்கேனும் அன்பை ஏற்படுத்தக்கூடும். அல்லாஹ் பேராற்றலுடையவன்; மேலும், அவன் பெரும் மன்னிப்பாளனாகவும் கருணை மிக்கவனாகவும் இருக்கின்றான். </span>
<span>60:8 தீன் (இறைமார்க்கம்) தொடர்பான விஷயத்தில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றவில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும், நீதியுடனும் நடப்பதிலிருந்து அல்லாஹ் உங்களைத் தடுப்பதில்லை. திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான். </span>
<span>60:9 அவன் தடுப்பதெல்லாம் எவர்கள் தீன் தொடர்பாக உங்களுடன் போர் புரிந்தார்களோ, உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றினார்களோ மேலும், உங்களை வெளியேற்றுவதில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டார்களோ அவர்களுடன் நீங்கள் நட்பு கொள்வதைத்தான்! அவர்களுடன் எவரேனும் நட்பு கொண்டால் அவர்களே கொடுமையாளர்கள் ஆவர். </span>
<span>60:10 இறைநம்பிக்கை கொண்டவர்களே! இறைநம்பிக்கையுடைய பெண்கள் நாடு துறந்து உங்களிடம் வந்தார்களாயின் (அவர்கள் நம்பிக்கையாளர்களா என்பதனைச்) சோதித்துப் பாருங்கள். அவர்களுடைய நம்பிக்கையின் உண்மைநிலையை அல்லாஹ்தான் நன்கறிவான். மேலும், அவர்கள் நம்பிக்கையாளர்கள்தாம் என்பது உங்களுக்குத் தெரிந்துவிட்டால் நிராகரிப்பாளர்களிடம் அவர்களைத் திரும்ப அனுப்பாதீர்கள். அவர்கள் நிராகரிப்பாளர்களுக்கு (மனைவியாக இருக்க) ஆகுமானவர்களல்லர். நிராகரிப்பாளர்களும் அவர்களுக்கு ஆகுமானவர்கள் அல்லர். அவர்களுடைய (நிராகரிப்பாளர்களான) கணவன்மார்கள் அவர்களுக்கு அளித்திருந்த மஹ்ரை* அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். மேலும், அவர்களைத் திருமணம் செய்து கொள்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை, நீங்கள் அவர்களுக்குரிய மஹ்ரை அவர்களுக்குக் கொடுத்துவிட்டால்! மேலும், இறைவனை நிராகரித்துவிட்ட பெண்களை நீங்களும் திருமண உறவில் வைத்துக் கொள்ளாதீர்கள். நிராகரிப்பாளர்களான உங்கள் மனைவிமார்களுக்கு நீங்கள் கொடுத்திருந்த மஹ்ரை அவர்களிடம் திரும்பக்கேளுங்கள். மேலும், நிராகரிப்பாளர்கள் தங்களின் முஸ்லிமான மனைவிமார்களுக்குக் கொடுத்திருந்த மஹ்ரை அவர்களும் திரும்பக் கேட்கட்டும். இது அல்லாஹ்வின் கட்டளையாகும். அவன் உங்களிடையே தீர்ப்பு வழங்குகின்றான். மேலும், அவன் மிக அறிந்தவனாகவும் நுண்ணறிவுடையவனாகவும் இருக்கின்றான். </span>
<span>60:11 மேலும், இறைநிராகரிப்பாளர்களான உங்களுடைய மனைவிமார்களின் மஹ்ரில் சிறிதளவு நிராகரிப்பாளர்களிடமிருந்து உங்களுக்குத் திரும்பக் கிடைக்கவில்லையாயின், பின்னர் உங்கள் முறை வரும்போது உங்களில் யாருடைய மனைவிமார்கள் அங்கே சென்று விட்டார்களோ, அந்தக் கணவன்மார்களுக்கு கொடுத்துவிடுங்கள் அவர்கள் வழங்கிய மஹ்ருக்குச் சமமான தொகையை! மேலும், எந்த இறைவன் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களோ அவனுக்கு அஞ்சி வாழுங்கள். </span>
<span>60:12 நபியே! இறைநம்பிக்கைகொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்து, அவர்கள் அல்லாஹ்வுடன் எதனையும் இணைவைக்கமாட்டார்கள் என்றும், திருடமாட்டார்கள் என்றும், விபச்சாரம் செய்ய மாட்டார்கள் என்றும், தம்முடைய குழந்தைகளைக் கொல்லமாட்டார்கள் என்றும் தங்களுடைய கைகால்களுக்கிடையே எந்த அவதூறையும் இட்டுக்கட்ட மாட்டார்கள் என்றும், எந்த ஒரு நல்ல காரியத்திலும் உமக்கு மாறு செய்யமாட்டார்கள் என்றும் வாக்குறுதி அளித்தால், அப்போது அவர்களிடமிருந்து விசுவாசப்பிரமாணத்தை ஏற்றுக்கொள்ளும். மேலும், அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரும். திண்ணமாக, அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கருணைபுரிபவனுமாய் இருக்கின்றான். </span>
<span>60:13. இறைநம்பிக்கைகொண்டவர்களே! எந்த மக்களின் மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கின்றானோ அந்த மக்களுடன் நீங்கள் நட்புக்கொள்ளாதீர்கள். மறுமை குறித்து அவர்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள்; மண்ணறைகளில் அடங்கி விட்டிருக்கும் நிராகரிப்பாளர்கள் நம்பிக்கை இழந்திருப்பது போலவே!</span>
</div><div>
<span>அஸ்ஸஃப்</span>
<span>61:1 வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் அல்லாஹ்வைத் துதிக்கின்றது. மேலும், அவன் யாவற்றையும் மிகைத்தோன்; நுண்ணறிவாளன்!</span>
<span>61:2 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் செய்யாதவற்றை ஏன் சொல்கின்றீர்கள்? </span>
<span>61:3 நீங்கள் செய்யாதவற்றைச் சொல்வது அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரிய செயலாகும். </span>
<span>61:4 எவர்கள் அல்லாஹ்வுடைய வழியில் ஈயத்தால் வார்க்கப்பட்ட சுவரைப் போன்று உறுதியாக அணிவகுத்து நின்று போர்புரிகின்றார்களோ அவர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான். </span>
<span>61:5 மேலும், மூஸா தன் சமூகத்தாரிடம் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “என் சமூக மக்களே! எனக்கு ஏன் துன்பம் அளிக்கின்றீர்கள்? நான் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்காக அனுப்பப்பட்ட தூதராவேன் என்பதை நீங்கள் நன்கு அறிந்திருக்கின்றீர்கள்.” பின்னர் அவர்கள் கோணல் வழியை மேற்கொண்டபோது அல்லாஹ்வும் அவர்களின் உள்ளங்களைக் கோணலாக்கிவிட்டான். மேலும், பாவிகளுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை. </span>
<span>61:6 மர்யத்தின் குமாரர் ஈஸா இவ்வாறு கூறியதையும் நினைவு கூருங்கள்: “இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! நான் அல்லாஹ்வினால் உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கும் தூதராவேன். நான், எனக்கு முன்பே வந்துள்ள ‘தவ்ராத்’ வேதத்தை மெய்ப்படுத்தக்கூடியவனாய் இருக்கின்றேன். மேலும், எனக்குப் பிறகு அஹமத் எனும் பெயருடைய ஒரு தூதர் வருவார் என்று நற்செய்தி சொல்பவனாகவும் இருக்கின்றேன்.” எனினும் அவர் அம்மக்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது, இது வெளிப்படையான மோசடி என்று அவர்கள் கூறினார்கள். </span>
<span>61:7 அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைப்பவனைவிட கொடுமைக்காரன் வேறு யார்? அதுவும் இஸ்லாத்தின் பக்கம் (முற்றிலும் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதின் பக்கம்) வருமாறு அவனுக்கு அழைப்பு விடுக்கப்படும் நிலையில்! இத்தகைய கொடுமைக்காரர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை. </span>
<span>61:8 இவர்கள், அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களால் ஊதி அணைத்துவிட விரும்புகின்றார்கள். ஆனால், அல்லாஹ்வின் முடிவு என்னவெனில் தன் ஒளியை முழுமையாகப் பரப்பியே தீர்வது என்பதாகும்; இறைநிராகரிப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே! </span>
<span>61:9 அவன்தான் தன்னுடைய தூதரை நேர்வழியுடனும், சத்தியமார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான். ஏனைய மார்க்கங்களைவிட அதனை மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக; இணைவைப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!</span>
<span>61:10 இறைநம்பிக்கைகொண்டவர்களே! துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றக்கூடிய வியாபாரத்தை உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? </span>
<span>61:11 அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்! மேலும், அல்லாஹ்வின் வழியில் உங்கள் பொருள்களாலும் உயிர்களாலும் ஜிஹாத்* செய்யுங்கள். நீங்கள் அறியக்கூடியவர்களாயின், இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும். </span>
<span>61:12 அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான். மேலும், தோட்டங்களில் உங்களை நுழையச் செய்வான்; அதன் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். நிலைத்திருக்கும் சுவனங்களில் மிகச்சிறந்த இல்லங்களையும் உங்களுக்கு வழங்குவான். இதுவே மகத்தான வெற்றியாகும். </span>
<span>61:13 மேலும், நீங்கள் விரும்பும் இன்னொன்றையும் உங்களுக்கு நல்குவான். அல்லாஹ்விடமிருந்து கிட்டும் உதவியும் அண்மையிலேயே கிடைக்கவிருக்கும் வெற்றியுமாகும் அது! (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு இந்த நற்செய்தியை அறிவித்துவிடும். </span>
<span>61:14 இறைநம்பிக்கையாளர்களே மர்யத்தின் குமாரர் ஈஸா தம் சீடர்களை நோக்கி, “இறைவனின்பால் அழைப்பதில் எனக்கு உதவிபுரிபவர் யார்?” எனக் கேட்டபோது, “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளராக இருக்கின்றோம்” என சீடர்கள் மறுமொழி அளித்ததைப்போல் நீங்களும் அல்லாஹ்வின் உதவியாளராகத் திகழுங்கள். அப்போது இஸ்ராயீலின் வழித்தோன்றல்களில் ஒரு பிரிவினர் நம்பிக்கைகொண்டார்கள். மற்றொரு பிரிவினர் நிராகரித்துவிட்டார்கள். பின்னர், நாம் நம்பிக்கை கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவருக்கெதிராக உதவி நல்கினோம். மேலும் அவர்களே வெற்றியாளர்களாய்த் திகழ்ந்தார்கள்!</span>
</div><div>
<span>அல் ஜுமுஆ</span>
<span>62:1 அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டிருக்கின்றன வானங்களில் உள்ள ஒவ்வொன்றும்; பூமியில் உள்ள ஒவ்வொன்றும்! அவன் அரசனாக இருக்கிறான். மிகவும் தூய்மையானவன்; யாவரையும் மிகைத்தவன்; நுண்ணறிவாளன். </span>
<span>62:2 அவன்தான் உம்மிகளிடையே* ஒரு தூதரை அவர்களிலிருந்தே தோற்றுவித்தான். அவர் எத்தகையவர் எனில், அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுகின்றார்; அவர்களின் வாழ்க்கையைத் தூய்மைப்படுத்துகின்றார். மேலும், அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். ஆனால், அவர்களோ இதற்கு முன்பு வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடந்தார்கள். </span>
<span>62:3 இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதர் தோற்றுவிக்கப்பட்டுள்ளார்). அல்லாஹ் வல்லமைமிக்கவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>62:4 இது அவனுடைய அருள். தான் நாடுகின்றவர்களுக்கு இதனை அவன் வழங்குகின்றான். மேலும், அவன் மகத்தான அருளைப் பொழிபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>62:5 எந்த மக்கள் மீது ‘தவ்ராத்’ சுமத்தப்பட்டதோ பின்னர் அவர்கள் அதன் பொறுப்பை ஏற்றுச் செயல்படவில்லையோ அந்த மக்களின் உதாரணம், வேதங்களைச் சுமக்கின்ற கழுதையைப் போன்றதாகும். அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யென்று தூற்றிய மக்களின் உதாரணம் இதனைவிட மோசமானதாகும். இத்தகைய கொடுமைக்காரர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை. </span>
<span>62:6 (இவர்களிடம்) கூறும்: “யூதர்களாக ஆகிவிட்டவர்களே! மக்கள் அனைவரையும்விட நீங்கள்தாம் அல்லாஹ்வின் அன்பிற்குரியவர்கள் என்று கர்வத்துடன் எண்ணுவீர்களானால் உங்கள் கருத்தில் நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால், மரணத்தை விரும்புங்கள்!”  </span>
<span>62:7 ஆனால், அவர்கள் செய்துவிட்ட தீய செயல்களின் காரணத்தால் அதனை அவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். மேலும், அல்லாஹ் இந்தக் கொடுமைக்காரர்களை நன்கு அறிந்தே இருக்கின்றான். </span>
<span>62:8 (இவர்களிடம்) கூறும்: “எந்த மரணத்தைவிட்டு நீங்கள் விரண்டோடுகின்றீர்களோ அது திண்ணமாக உங்களை அடைந்தே தீரும். பின்னர், மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவனாகிய இறைவனின் முன் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். மேலும், நீங்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருந்தீர்களோ அவற்றை அவன் உங்களுக்கு அறிவித்துத் தருவான்.”</span>
<span>62:9 இறைநம்பிக்கை கொண்டவர்களே! வெள்ளிக்கிழமை யன்று தொழுகைக்காக அழைக்கப்படும்போது அல்லாஹ்வை நினைவுகூர்வதன் பக்கம் விரைந்து செல்லுங்கள். கொடுக்கல் வாங்கலை விட்டுவிடுங்கள். இது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும் நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால்! </span>
<span>62:10 பின்னர் தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டால் பூமியில் பரவிச்செல்லுங்கள்; அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! மேலும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்ந்த வண்ணம் இருங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடும். </span>
<span>62:11 அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கை நடைபெறுவதையோ பார்த்தபோது அவற்றின் பக்கம் பாய்ந்து சென்றுவிட்டார்கள். மேலும் உம்மை நின்ற நிலையில் விட்டுவிட்டார்கள். (அவர்களிடம்) கூறும்: அல்லாஹ்விடம் இருப்பவை விளையாட்டு, வேடிக்கை மற்றும் வியாபாரத்தைவிடச் சிறந்தவையாகும். மேலும் அல்லாஹ் அனைவரைவிடவும் சிறந்த வாழ்வாதாரம் வழங்குபவனாக இருக்கின்றான். </span>
</div><div>
<span>அல் முனாஃபிகூன்</span>
<span>63:1 (நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வருகின்றபோது கூறுகின்றனர்: “திண்ணமாக நீர் அல்லாஹ்வின் தூதராவீர் என நாங்கள் சாட்சியம் அளிக்கின்றோம்.” திண்ணமாக நீர் அவனுடைய தூதர்தாம் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் நிச்சயம் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சியம் அளிக்கின்றான். </span>
<span>63:2 இவர்கள் தங்களுடைய ‘சத்தியங்களை’க் கேடயமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்விதமாக அல்லாஹ்வின் வழியிலிருந்து தாங்களும் விலகி, பிறமக்களையும் அதில் (செல்லவிடாமல்) தடுக்கின்றார்கள். இவர்கள் செய்து கொண்டிருப்பவை எத்துணை மோசமான செயல்! </span>
<span>63:3 இவை அனைத்திற்கும் காரணம், இவர்கள் நம்பிக்கை கொண்டு பின்னர் நிராகரித்துவிட்டதுதான். இதனால் அவர்களின் உள்ளங்களின் மீது முத்திரையிடப்பட்டுவிட்டது. இனி இவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. </span>
<span>63:4 நீர் இவர்களைப் பார்த்தால் இவர்களின் உடலமைப்பு உமக்குக் கம்பீரமாகத் தெரியும். இவர்கள் பேச ஆரம்பித்தால் நீர் இவர்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டே இருந்துவிடுவீர். ஆனால், உண்மையில் இவர்கள், சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மரக்கட்டைகளைப் போன்றவர்கள். இவர்கள் ஒவ்வோர் உரத்த ஓசையையும் தங்களுக்கு எதிரானதாய்க் கருதுகின்றனர். இவர்கள்தாம் கடும் பகைவர்களாவர். இவர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இரும். அல்லாஹ் இவர்களை நாசமாக்கட்டும்! இவர்கள் எங்கே திசைமாறிச் சென்று கொண்டிருக்கின்றார்கள்?</span>
<span>63:5 “வாருங்கள்; அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரி இறைஞ்சுவார்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், தங்களுடைய தலைகளைத் திருப்பிக் கொள்கின்றார்கள். மேலும், இவர்கள் பெரும் ஆணவத்தால் வராமல் நின்றுவிடுவதை நீர் காண்பீர். </span>
<span>63:6 (நபியே!) நீர் இவர்களுக்குப் பாவமன்னிப்புக்காக இறைஞ்சினாலும், இறைஞ்சாவிட்டாலும் இவர்களைப் பொறுத்து சமம்தான். அல்லாஹ் இவர்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டான். பாவிகளான மக்களுக்கு அல்லாஹ் ஒருபோதும் நேர்வழி காட்டுவதில்லை!</span>
<span>63:7 இவர்கள்தான் இவ்வாறு சொல்கிறார்கள்; “இறைத்தூதரின் தோழர்களுக்குச் செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள்; அதனால் அவர்கள் சிதறிப் போகட்டும்!” உண்மையில், வானங்கள் மற்றும் பூமியின் கருவூலங்கள் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் புரிந்து கொள்வதில்லை. </span>
<span>63:8 மேலும், அவர்கள் கூறுகின்றார்கள்: “நாங்கள் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால் எவர் கண்ணியமிக்கவரோ அவர் கேவலமானவரை அங்கிருந்து வெளியேற்றி விடுவார்.” ஆயினும், கண்ணியமானது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் உரியதாகும். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் அறிவதில்லை. </span>
<span>63:9 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் செல்வங்களும், உங்கள் பிள்ளைகளும் அல்லாஹ்வை நினைவு கூர்வதைவிட்டு உங்களை அலட்சியத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். எவர்கள் அவ்வாறு செய்கிறார்களோ, அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். </span>
<span>63:10 நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நீங்கள் செலவு செய்யுங்கள், உங்களில் எவருக்கேனும் மரண நேரம் வருவதற்கு முன்பாக! மேலும், அந்த நேரத்தில் அவர் கூறுவார்: “என் அதிபதியே! நீ எனக்கு இன்னும் சிறிதுகாலம் அவகாசம் அளிக்கக்கூடாதா! நான் தானதர்மம் செய்வேனே! நல்லோர்களில் ஒருவனாகி விடுவேனே!” </span>
<span>63:11 ஆனால், ஒருவருக்கு அவர் செயல்படுவதற்கான அவகாசம் முடிவடையும் நேரம் வந்துவிட்டாலோ எந்த மனிதனுக்கும் மேலும் கால அவகாசத்தை அல்லாஹ் கண்டிப்பாக அளிப்பதில்லை. மேலும், நீங்கள் என்னென்ன செய்துகொண்டிருக்கின்றீர்களோ அவற்றை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான். </span>
</div><div>
<span>அத்தகாபுன்</span>
<span>64:1 அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டிருக்கின்றது வானங்களில் உள்ள, பூமியில் உள்ள ஒவ்வொன்றும்! ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது; புகழும் அவனுக்கே உரியதாகும். மேலும், அவன் ஒவ்வொன்றின் மீதும் ஆற்றலுடையவன். </span>
<span>64:2 அவனே உங்களைப் படைத்தான். பிறகு, உங்களில் சிலர் நிராகரிப் பாளர்களாய் இருக்கிறார்கள். சிலர் இறைநம்பிக்கையாளர்களாக விளங்குகின்றார்கள். மேலும், நீங்கள் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான். </span>
<span>64:3 அவன் வானங்களையும் பூமியையும் சத்தியத்தைக்கொண்டு படைத்தான். மேலும், உங்களுக்கு வடிவம் அமைத்தான். உங்கள் வடிவங்களை மிகவும் அழகிய முறையில் அமைத்தான். இறுதியில் அவனிடமே நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டி இருக்கிறது. </span>
<span>64:4 வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்தையும் அவன் அறிகின்றான். நீங்கள் மறைப்பதையும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் அவன் அறிகின்றான். மேலும், அவன் உள்ளங்களில் இருப்பவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான். </span>
<span>64:5 எவர்கள் இதற்கு முன்பு நிராகரிக்கவும், பின்னர் தங்களுடைய செயல்களின் கெடுதல்களைச் சுவைக்கவும் செய்தார்களோ அவர்களைப் பற்றி உங்களுக்குச் செய்தி எதுவும் எட்டவில்லையா, என்ன? மேலும், துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்கு இருக்கின்றது. </span>
<span>64:6 அவர்கள் இந்தக் கதிக்கு ஆளாகக் காரணம் அவர்களிடம் அவர்களுடைய தூதர்கள் வெளிப்படையான ஆதாரங்களைக் கொண்டு வந்த வண்ணம் இருந்தார்கள். இருப்பினும் அவர்கள் கூறினார்கள்: “மனிதரா எங்களுக்கு நேர்வழி காட்டுவார்?” இவ்விதம் அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். அப்போது அல்லாஹ்வும் அவர்களைப் பொருட்படுத்தவில்லை. மேலும், அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும், தனக்குத்தானே புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான். </span>
<span>64:7 இறந்த பின் மீண்டும் ஒருபோதும் அவர்கள் எழுப்பப்பட மாட்டார்கள் என்று நிராகரிப்பாளர்கள் மிக அழுத்தம் திருத்தமாக வாதாடுகின்றார்கள். (அவர்களிடம்) நீர் கூறும்: “இல்லை, என் அதிபதி மீது சத்தியமாக! நீங்கள் திண்ணமாக எழுப்பப்படுவீர்கள். பின்னர் (உலகில்) நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்கள் என்று உங்களுக்கு அறிவித்துத் தரப்படும். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானதாகும்.”</span>
<span>64:8 எனவே, அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும், நாம் இறக்கி வைத்திருக்கும் ஒளியின் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். </span>
<span>64:9 நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு தெரிந்தவனாக இருக்கின்றான். ஒன்றுகூடும் நாளில் அவன் உங்கள் அனைவரையும் திரட்டும்போது (இதுபற்றிய விவரம் உங்களுக்குத் தெரிந்துவிடும்). அந்த நாள் மக்கள், ஒருவர் மற்றவரைப் பொறுத்து வெற்றி தோல்வி பெறும் நாளாக இருக்கும். மேலும், யாரேனும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகின்றாரெனில், அவருடைய பாவங்களை அல்லாஹ் அகற்றிவிடுவான்; கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களில் அவர்களை நுழைவிப்பான். அவர்கள் அங்கே என்றென்றும் தங்கி வாழ்வார்கள். இதுவே, மகத்தான வெற்றியாகும். </span>
<span>64:10 மேலும், யார் நிராகரித்து நம்முடைய வசனங்களைப் பொய்யெனத் தூற்றினார்களோ அவர்கள் நரகவாசிகளாவர். அதிலேயே அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். மேலும், அது மிகவும் மோசமான இருப்பிடமாகும். </span>
<span>64:11 ஒருபோதும் எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல்! எவரேனும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தால் அவரது உள்ளத்திற்கு அல்லாஹ் வழிகாட்டுதலை வழங்குகின்றான். அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிபவனாக இருக்கின்றான். </span>
<span>64:12 அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். மேலும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். எனினும் நீங்கள் கீழ்ப்படிவதைவிட்டு முகம் திருப்பினால் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர நம்முடைய தூதரின் மீது வேறெந்தப் பொறுப்பும் இல்லை. </span>
<span>64:13 அல்லாஹ் எப்படிப்பட்டவன் எனில், அவனைத் தவிர வேறெந்த இறைவனும் இல்லை. எனவே, நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டும். </span>
<span>64:14 இறைநம்பிக்கைகொண்டவர்களே! உங்களுடைய மனைவியரிலும், பிள்ளைகளிலும் சிலர் உங்கள் பகைவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். மேலும், நீங்கள் அவர்களுடைய செயல்களைச் சகித்துப் புறக்கணித்து விடுவீர்களானால் மேலும், அவர்களை மன்னிப்பீர்களானால் திண்ணமாக அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கருணை மிக்கவனாகவும் இருக்கின்றான். </span>
<span>64:15 உங்களுடைய செல்வங்களும் உங்களுடைய பிள்ளைகளும் ஒரு சோதனையே! மேலும், அல்லாஹ்விடம்தான் மகத்தான கூலி உள்ளது. </span>
<span>64:16 எனவே, உங்களால் முடிந்தவரை அல்லாஹ்வுக்கு அஞ்சிய வண்ணம் வாழுங்கள். மேலும், செவிதாழ்த்திக் கேளுங்கள்; கீழ்ப்படியுங்கள். மேலும், உங்கள் செல்வத்தைச் செலவு செய்யுங்கள். இது உங்களுக்கே சிறந்ததாகும். தம்முடைய உள்ளத்தின் உலோபித்தனத்தை விட்டு எவர்கள் விலகி இருக்கின்றார்களோ அத்தகையவர்கள்தாம் வெற்றி பெறக்கூடியவர்கள். </span>
<span>64:17 நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுத்தால் அதனை அவன் உங்களுக்குப் பன்மடங்கு அதிகமாக்கித் தருவான். மேலும் உங்கள் பாவங்களைப் புறக்கணித்து விடுவான். அல்லாஹ் உரிய மதிப்பளிப்பவனாகவும், சகிப்புத்தன்மை கொண்டவனாகவும் இருக்கின்றான்; </span>
<span>64:18 மறைந்திருப்பவை மற்றும் வெளிப்படையானவை அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்; வல்லமை மிக்கவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். </span>
</div><div>
<span>அத்தலாக்</span>
<span>65:1 (நபியே!) நீங்கள் பெண்களை விவாகரத்து செய்வீர்களாயின் அவர்களின் இத்தா* (காலத்தை நிர்ணயிக்க) வசதியாக விவாகரத்து செய்யுங்கள். மேலும், இத்தாவின் காலத்தைச் சரியாகக் கணக்கிடுங்கள். மேலும், உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். (இத்தாகாலத்தில்) அப்பெண்களை அவர்களின் இல்லங்களிலிருந்து நீங்களும் வெளியேற்ற வேண்டாம்; அவர்களாகவும் வெளியேற வேண்டாம். அவர்கள் ஏதேனும் வெளிப்படையான மானக்கேடான செயல்கள் செய்தாலே தவிர இவை அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளாகும். யாரேனும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவாராயின் திண்ணமாக, அவர் தனக்குத்தானே கொடுமை புரிந்து கொண்டவராவார். இதற்குப் பிறகு (ஒத்துப் போவதற்கான) ஏதேனும் சூழ்நிலையை அல்லாஹ் உருவாக்கக்கூடும் என்பதை நீங்கள் அறிவது இல்லை. </span>
<span>65:2 அவர்கள் தங்களுடைய (இத்தாவின்) இறுதிக் காலகட்டத்தை எட்டிவிட்டால், அவர்களை நல்ல முறையில் (திருமண பந்தத்தில்) நீடித்து இருக்கச் செய்யுங்கள்; அல்லது நல்ல முறையில் அவர்களை விட்டுப் பிரிந்து விடுங்கள். மேலும், உங்களில் நேர்மைமிக்க இருவரைச் சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். மேலும், (சாட்சி சொல்பவர்களே!) அல்லாஹ்வுக்காகச் சரியான முறையில் சாட்சியம் வழங்குங்கள். 
இவற்றின் மூலம் உங்களுக்கும் அறிவுறுத்தப்படுகின்றது; அல்லாஹ்வின் மீதும் இறுதிநாளின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கின்ற ஒவ்வொருவருக்கும் அறிவுரை வழங்கப் படுகின்றது. மேலும், யாரேனும் அல்லாஹ்வுக்கு அஞ்சி(யவண்ணம் செயல்படுவாரா)னால் அல்லாஹ் அவருக்(குச் சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்)கு ஏதேனும் வழிவகையை ஏற்படுத்துவான். </span>
<span>65:3 மேலும், அவர் நினைத்துப் பார்த்திராத வகையிலிருந்து அவருக்கு வாழ்வாதாரமும் வழங்குவான். யார் அல்லாஹ்வையே முழுவதுஞ் சார்ந்திருக்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் போதுமானவன். திண்ணமாக, அல்லாஹ் தன் பணியை நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கின்றான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விதியை நிர்ணயித்து வைத்திருக்கிறான். </span>
<span>65:4 உங்கள் பெண்களில், எவர்கள் ‘இனி மாதவிலக்கு வராது’ என்று நம்பிக்கையிழந்து விட்டிருக்கின்றார்களோ அவர்களுடைய விஷயத்தில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால், (நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்:) அவர்களுடைய இத்தாகாலம் மூன்று மாதங்களாகும். மேலும், எந்தப் பெண்களுக்கு இதுவரையிலும் மாதவிலக்கு வரவில்லையோ அவர்களுக்கான விதிமுறையும் இதுவே! மேலும், கர்ப்பிணிகளுக்கான இத்தா வரம்பு அவர்கள் குழந்தை பெற்றெடுப்பதுடன் முடிகின்றது. யார் அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றாரோ அவருடைய விவகாரத்தில் அல்லாஹ் இலகுவை ஏற்படுத்தியிருக்கின்றான். </span>
<span>65:5. இது அல்லாஹ் உங்களுக்கு இறக்கி வைத்திருக்கும் கட்டளையாகும். யார் அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றாரோ அவருடைய தீமைகளை அவரை விட்டு அல்லாஹ் போக்கிவிடுவான். மேலும், அவருக்குப் பெரும் கூலியையும் வழங்குவான். </span>
<span>65:6 உங்கள் வசதி வாய்ப்புக்கேற்ப நீங்கள் எந்த இடத்தில் வசிக்கின்றீர்களோ அந்த இடத்திலேயே அவர்களை (இத்தா) காலத்தில் வசிக்கச் செய்யுங்கள். அவர்களை நெருக்கடியில் ஆழ்த்துவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள். அவர்கள் கர்ப்பிணிகளாய் இருந்தால், குழந்தை பெற்றெடுக்கும் வரையில் அவர்களுக்கு செலவுக்குக் கொடுங்கள். மேலும் அவர்கள் உங்களுக்காக வேண்டி (குழந்தைக்குப்) பாலூட்டினால் அவர்களுக்குரிய ஊதியத்தை அவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள். மேலும், (ஊதியம் பெறும் விஷயத்தை) உங்களுக்கிடையே பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் (நல்ல முறையில்) முடிவுசெய்து கொள்ளுங்கள். ஆயினும் (ஊதியத்தை நிர்ணயிப்பதில்) நீங்கள் ஒருவருக்கொருவர் நெருக்கடிக்கு ஆளானால், குழந்தைக்கு வேறொரு பெண் பாலூட்டிக் கொள்ளட்டும். </span>
<span>65:7 வசதியுள்ளவர் தம் வசதிக்கேற்ப ஜீவனாம்சம் அளிக்கட்டும். எவருக்கு வாழ்வாதாரம் குறைவாக அளிக்கப்பட்டிருக்கின்றதோ அவர் அல்லாஹ் அவருக்கு வழங்கியதிலிருந்து செலவு செய்யட்டும். அல்லாஹ் எவருக்கு எவ்வளவு கொடுத்திருக்கின்றானோ அதற்கு மேலாக அவர் மீது அவன் பொறுப்பு சுமத்துவதில்லை. வசதிக் குறைவுக்குப் பிறகு, அதிக வசதிவாய்ப்புகளையும் அல்லாஹ் வழங்கக்கூடும். </span>
<span>65:8 எத்தனையோ ஊர்கள் தங்கள் இறைவனுடையவும் அவனுடைய தூதர்களுடையவும் கட்டளையை மீறிவிட்டன. எனவே நாம் அவர்களைக் கடுமையாக கேள்விக்கணக்கு கேட்டோம். மேலும், அவர்களுக்கு மோசமான தண்டனையும் அளித்தோம். </span>
<span>65:9 அவர்கள் தங்கள் செயல்களுக்கான விளைவைச் சுவைத்துவிட்டார்கள். மேலும், அவர்களின் இறுதி முடிவு நஷ்டத்திலும் நஷ்டமாக இருந்தது. </span>
<span>65:10 அல்லாஹ் (மறுமையில்) அவர்களுக்குக் கடும் வேதனையைத் தயார்படுத்தி வைத்திருக்கின்றான். எனவே, நம்பிக்கை கொண்டிருக்கும் அறிவுடைய மக்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். அல்லாஹ் உங்கள் பக்கம் ஓர் அறிவுரையை இறக்கியுள்ளான். </span>
<span>65:11 அதாவது, ஒரு தூதரை! அவரோ தெளிவாக வழிகாட்டக் கூடிய இறைவசனங்களை உங்களுக்கு ஓதிக்காட்டுகின்றார். இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிவோரை இருளிலிருந்து வெளியேற்றி வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்காக! யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகின்றாரோ அவரை அல்லாஹ் சுவனங்களில் நுழைவிப்பான். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். இப்படிப்பட்ட மக்கள் அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் இத்தகையவருக்கு மிக அழகிய வாழ்வாதாரத்தை வைத்திருக்கின்றான். </span>
<span>65:12 அல்லாஹ்தான் ஏழு வானங்களைப் படைத்தான். பூமியின் இனத்திலிருந்து அவற்றைப் போன்றதையும் படைத்தான். அவற்றிற்கிடையே கட்டளை இறங்கிக் கொண்டிருக்கின்றது. அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றல் பெற்றிருக்கின்றான் என்பதையும் அல்லாஹ்வின் அறிவு ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்திருக்கின்றது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விஷயங்கள் உங்களுக்கு எடுத்துரைக்கப்படுகின்றன. </span>
</div><div>
<span>அத்தஹ்ரீம்</span>
<span>66:1 நபியே! அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கிய பொருளை நீர் ஏன் விலக்கிக் கொள்கின்றீர்? நீர் உம் மனைவியரின் திருப்தியை விரும்புகின்றீர் (என்பதற்காகவா?) அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபைமிக்கவனாகவும் இருக்கின்றான். </span>
<span>66:2 அல்லாஹ், நீங்கள் செய்யும் சத்தியங்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடுவதற்கான வழியை உங்களுக்கு நிர்ணயித் துள்ளான். அல்லாஹ் உங்கள் பாதுகாவலன். மேலும், அவன் யாவும் அறிந்தவன்; நுண்ணறிவாளன்!</span>
<span>66:3 (மேலும், இந்த விவகாரமும் கவனிக்கத்தக்கதாகும்:) நபி தம்முடைய ஒரு மனைவியிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகச் சொல்லியிருந்தார். பிறகு, அந்த மனைவி அதனை (வேறொருவரிடம்) தெரிவிக்கவும் (அப்படி இரகசியம் வெளிப்பட்டதை) அல்லாஹ் நபியிடம் அறிவிக்கவும் செய்தபோது, அதில் சிலவற்றை அந்த மனைவியிடம் அவர் தெரியப்படுத்தினார். வேறு சிலவற்றைப் புறக்கணித்தார். பின்னர், (இரகசியம் வெளிப்பட்டது பற்றி) நபி தம் மனைவியிடம் தெரிவித்தபோது மனைவி கேட்டார், “தங்களுக்கு இதனைத் தெரிவித்தது யார்?” என்று! அதற்கு நபி பதிலளித்தார்: “அனைத்தையும் அறிந்தவனும் நன்கு தெரிந்தவனும்தான் எனக்கு அறிவித்தான்.”</span>
<span>66:4 நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி மீண்டால், (அது உங்களுக்கு சிறந்ததாகும்.) ஏனெனில், உங்களுடைய உள்ளங்கள் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்துவிட்டிருக்கின்றன. மேலும், இறைத்தூதருக்கு எதிராக நீங்கள் அணி சேர்ப்பீர்களானால் அறிந்து கொள்ளுங்கள்: திண்ணமாக, அல்லாஹ் அவருடைய பாதுகாவலனாக இருக்கின்றான். மேலும், அவனுக்கு அடுத்து ஜிப்ரீலும் சான்றோர்களான இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும், அனைத்து வானவர்களும் அவருக்கு உதவியாளர்களாக இருக்கின்றார்கள். </span>
<span>66:5 நபி தம் மனைவியராகிய உங்கள் அனைவரையும் மணவிலக்கு செய்துவிடுவாராயின், உங்களுக்குப் பதிலாக உங்களை விடவும் சிறந்த மனைவியரை அல்லாஹ் அவருக்கு வழங்கிவிடலாம். அவர்கள் வாய்மையான முஸ்லிம்களாய், இறைநம்பிக்கையுடையோராய், கீழ்ப்படிபவர்களாய், பாவமன்னிப்புக் கோருபவர்களாய், அடிபணிந்து வணங்குபவர்களாய், நோன்பு நோற்பவர்களாய்த் திகழ்வார்கள்; அவர்கள் விதவைகளாயினும் கன்னிகளாயினும் சரியே!</span>
<span>66:6 இறைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும் கற்களும் எரிபொருள்களாகக்கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும் உங்கள் மனைவி மக்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் மீது, கடும் சீற்றமுடைய வானவர்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். </span>
<span>66:7 அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு ஒருபோதும் மாறு செய்வதில்லை. அவர்களுக்கு எந்தக் கட்டளை இடப்பட்டாலும் அதனை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். (அப்போது கூறப்படும்:) “நிராகரிப்பாளர்களே! நீங்கள் இன்று எந்தச் சாக்குப் போக்கும் சொல்லாதீர்கள். நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்ததற்கு ஏற்பவே உங்களுக்கு கூலி கொடுக்கப்படுகின்றது.”</span>
<span>66:8 இறைநம்பிக்கைகொண்டவர்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; தூய்மையான பாவமன்னிப்பு! விரைவில் அல்லாஹ் உங்கள் தீமைகளை உங்களைவிட்டு அகற்றவும் செய்யலாம்; மேலும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்படியான சுவனங்களில் உங்களைப் புகுத்தவும் செய்யலாம். அது எப்படிப்பட்ட நாளெனில், அன்று அல்லாஹ் தன்னுடைய தூதரையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் இழிவுபடுத்த மாட்டான். அவர்களின் ஒளி அவர்களுக்கு முன்னாலும், அவர்களின் வலப்பக்கத்திலும் பாய்ந்து கொண்டிருக்கும். மேலும், அவர்கள் கூறிக் கொண்டிருப்பார்கள்: “எங்கள் அதிபதியே! எங்கள் ஒளியை எங்களுக்கு முழுமையாக்கித் தருவாயாக! மேலும், எங்களை மன்னிப்பாயாக! திண்ணமாக, அனைத்தின் மீதும் நீ பேராற்றல் உள்ளவனாக இருக்கின்றாய்!”</span>
<span>66:9 நபியே! நிராகரிப்பாளர்களுடனும், நயவஞ்சகர்களுடனும் போர்புரிவீராக! மேலும், அவர்களிடம் கடுமையாக நடப்பீராக! அவர்கள் போய்ச் சேருமிடம் நரகமாகும். அது மிகவும் மோசமான இருப்பிடமாகும். </span>
<span>66:10 நூஹ் உடைய மனைவியையும் லூத் உடைய மனைவியையும் அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கான உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றான். இவ்விருவரும் நம்முடைய இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். எனினும், அவ்விரு வரும் தத்தம் கணவருக்கு துரோகம் செய்தனர். பிறகு, அவ்விரு நல்லடியார்களும் அல்லாஹ்வுக்கு எதிராக இவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்க இயலவில்லை (அவ்விருவரையும் நோக்கிக்) கூறப்பட்டது: “நரக நெருப்புக்குள் செல்வோருடன் சேர்ந்து நீங்களும் செல்லுங்கள்.” </span>
<span>66:11 ஃபிர்அவ்னுடைய மனைவியை அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்கான உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றான். ஒருபோது அவர் இறைஞ்சினார்: “என் அதிபதியே! எனக்காக உன்னிடத்தில் சுவனத்தில் ஓர் இல்லத்தை அமைத்துத் தருவாயாக! மேலும், ஃபிர்அவ்னை விட்டும் அவனுடைய செயலைவிட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக! மேலும், கொடுமை புரியும் சமூகத்திலிருந்து எனக்கு விடுதலை அளிப்பாயாக!” </span>
<span>66:12 மேலும், இம்ரானின் மகள் மர்யத்தை (மற்றொரு) உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றான்: அவர் தம்முடைய வெட்கத்தலத்தைப் பாதுகாத்தார். பிறகு, நாம் நம்மிடமிருந்து ரூஹை அவருள் ஊதினோம்.* மேலும் அவர் தம்முடைய அதிபதியின் அறிவுரைகளையும் அவனுடைய வேதங்களையும் மெய்ப்படுத்தினார். மேலும், அவர் கீழ்ப்படிந்து வாழ்வோரில் ஒருவராயும் இருந்தார். </span>
</div><div>
<span>அல் முல்க்</span>
<span>67:1 யாருடைய கைவசத்தில் (பேரண்டத்தின்) ஆட்சியதிகாரம் உள்ளதோ அவன் உயர்வும் கண்ணியமும் மிக்கவனாவான். மேலும், அவன் அனைத்துப் பொருளின் மீதும் ஆற்றல் பெற்றவனாக உள்ளான். </span>
<span>67:2 அவன் மரணத்தையும் வாழ்வையும் ஏற்படுத்தினான்; உங்களில் யார் மிகச் சிறந்த செயல் புரியக்கூடியவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டு! மேலும், அவன் வல்லமை மிக்கவனாகவும் பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>67:3 அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். கருணைமிக்க இறைவனின் படைப்பில் எந்த முரண்பாட்டையும் நீர் காணமாட்டீர்! பிறகு, திரும்பவும் பாரீர்! எங்காவது பழுதுகளேதும் உமக்குத் தென்படுகின்றதா? </span>
<span>67:4 மீண்டும் மீண்டும் பார்வையைச் செலுத்துவீர்! உமது பார்வை தளர்வுற்று, தோல்வியடைந்த நிலையில் திரும்பும்!</span>
<span>67:5 நாம் உங்களுக்கு அருகிலிருக்கும் வானத்தை மாபெரும் விளக்குகளால் அலங்கரித்திருக்கின்றோம். மேலும், அவற்றை நாம் ஷைத்தான்களை எறிந்து விரட்டுவதற்கான கருவிகளாக ஆக்கியுள்ளோம். இந்த ஷைத்தான்களுக்காகக் கொழுந்துவிட் டெரியும் நெருப்பை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம். </span>
<span>67:6 எவர்கள் தங்களுடைய அதிபதியை நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக வேதனை இருக்கின்றது. அது மிகவும் கேடுகெட்ட இருப்பிடமாகும். </span>
<span>67:7 அதில் அவர்கள் வீசியெறியப்படும்போது அதனுடைய கடுமையான கர்ஜனையைக் கேட்பார்கள். அது கொதித்துக் கொண்டிருக்கும்  </span>
<span>67:8 கடுமையான கோபத்தால் வெடித்துவிடுவது போல் இருக்கும். ஒவ்வொரு குழுக்களும் அதில் தள்ளப்படும்போது அதன் பாதுகாவலர்கள் அவர்களிடம் கேட்பார்கள், “எச்சரிக்கை செய்பவர் எவரும் உங்களிடம் வரவில்லையா?” என்று!  </span>
<span>67:9 அதற்கு அவர்கள் பதில் கூறுவார்கள்: “ஆம்! எச்சரிக்கை செய்பவர் எங்களிடம் வந்திருந்தார். ஆனால் நாங்கள் அவரைப் பொய்யரெனத் தூற்றினோம். அல்லாஹ் எதனையும் இறக்கி வைக்கவில்லை; நீங்கள் பெரும் வழிகேட்டில் வீழ்ந்து கிடக்கின்றீர்கள் என்றும் கூறினோம்.” </span>
<span>67:10 மேலும் அவர்கள் கூறுவார்கள்: “அந்தோ! நாங்கள் செவிதாழ்த்திக் கேட்பவர்களாய் அல்லது புரிந்துகொள்பவர்களாய் இருந்திருந்தால், (இன்று) நாங்கள் கொழுந்து விட்டெரியும் இந்த நெருப்பின் தண்டனைக்குரியவர்களோடு சேர்ந்திருக்க மாட்டோம்.” </span>
<span>67:11 இவ்வாறு அவர்களே தங்களின் குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள். சாபம் உண்டாகட்டும், இந்த நரகவாசிகள் மீது!</span>
<span>67:12 பார்க்காமலேயே தங்களின் அதிபதிக்கு எவர்கள் அஞ்சுகின்றார்களோ அவர்களுக்குத் திண்ணமாக மன்னிப்பும் பெரும் கூலியும் உண்டு. </span>
<span>67:13 மேலும், நீங்கள் இரகசியமாகப் பேசினாலும் சரி; வெளிப்படையாகப் பேசினாலும் சரி! (அல்லாஹ்வைப் பொறுத்தமட்டில் இரண்டும் சமம்தான்!) திண்ணமாக அவன் இதயங்களில் இருப்பவற்றையும் நன்கறிகிறான். </span>
<span>67:14 எவன் படைத்து இருக்கின்றானோ அவன் அறியமாட்டானா என்ன? அவன் நுணுக்கமானவனாகவும் நன்கு அறிந்தவனாகவும் இருக்கின்றான். </span>
<span>67:15 அவனே பூமியை உங்களுக்கு வசப்பட்டதாக அமைத்து வைத்திருக்கின்றான். அதன் மார்பின் மீது நடந்து செல்லுங்கள். மேலும் அல்லாஹ்வின் உணவை உண்ணுங்கள். நீங்கள் (மரணித்த பின்) மீண்டும் உயிர் பெற்று அவனிடமே செல்ல வேண்டி இருக்கிறது. </span>
<span>67:16 வானத்திலிருப்பவன் உங்களைப் பூமியினுள் ஆழ்த்தி விடுவதையும் அப்போது உடனே பூமி அதிரத் தொடங்குவதையும் குறித்து நீங்கள் அச்சமின்றி இருக்கின்றீர்களா? </span>
<span>67:17 அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கற்களைப் பொழியும் காற்றை அனுப்புவது குறித்து நீங்கள் அச்சமின்றி இருக்கின்றீர்களா? பிறகு உங்களுக்குத் தெரிந்துவிடும், எனது எச்சரிக்கை எப்படி இருக்கின்றது என்று! </span>
<span>67:18 இவர்களுக்கு முன்னர் சென்றுபோன மக்கள் பொய்யென வாதிட்டிருக்கின்றார்கள். பிறகு பார்த்துக் கொள்ளுங்கள்; என்னுடைய பிடி எவ்வளவு கடுமையாக இருந்தது என்பதை!</span>
<span>67:19 சிறகுகளை விரித்தும் மடக்கியும் தங்களுக்கு மேல் பறந்து கொண்டிருக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா என்ன? அவற்றைத் தடுத்து வைத்திருப்பவன் கருணைமிக்க இறைவனைத் தவிர வேறு எவருமில்லை! திண்ணமாக, அவனே ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான். </span>
<span>67:20 சொல்லுங்கள் பார்ப்போம்; கருணைமிக்க இறைவனுக்கு எதிராக உங்களுக்கு உதவி புரிவதற்கு உங்களிடம் எந்தப் படை இருக்கிறது? உண்மை யாதெனில், இந்த நிராகரிப்பாளர்கள் ஏமாற்றத்திற்குள்ளாகி இருக்கின்றார்கள் </span>
<span>67:21 அல்லது கருணைமிக்க இறைவன் தான் வழங்கும் உணவை நிறுத்திக்கொண்டால் பிறகு, உங்களுக்கு உணவு வழங்குவது யார் என்பதைச் சொல்லுங்கள் பார்ப்போம்! உண்மை யாதெனில், இவர்கள் வரம்பை மீறுவதிலும், சத்தியத்தைப் புறக்கணிப்பதிலும் மூழ்கிக் கிடக்கின்றார்கள். </span> 
<span>67:22 சற்று சிந்தித்துப் பாருங்கள்! முகங்குப்புற நடந்து செல்பவன் மிகச் சரியான வழியை அடைபவனா? அல்லது தலைநிமிர்ந்து ஒரு நேரான வழியில் நடந்து சென்று கொண்டிருப்பவனா?</span>
<span>67:23 (இவர்களிடம்) கூறும்: “அல்லாஹ்தான் உங்களைப் படைத்து, கேட்கின்ற மற்றும் பார்க்கின்ற ஆற்றல்களையும் சிந்தித்துணரும் உள்ளங்களையும் உங்களுக்கு வழங்கியுள்ளான்.” ஆனால், நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள். </span>
<span>67:24 (இவர்களிடம் கூறும்:) “அல்லாஹ்தான் உங்களைப் பூமியில் பரவச் செய்தான். அவனிடமே நீங்கள் ஒன்றுதிரட்டப்பட இருக்கின்றீர்கள்.” </span>
<span>67:25 மேலும் இவர்கள் கேட்கின்றார்கள்: “இந்த வாக்குறுதி எப்போது நிறைவேறும்? நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால், காண்பித்துத் தாருங்கள்!” </span>
<span>67:26 நீர் கூறும்: “இதனைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது. நானோ தெள்ளத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன் மட்டும்தான்!” </span>
<span>67:27 பின்னர், அவர்கள் அதை அருகில் பார்க்கும் போது, எவர்கள் அதை நிராகரித்தார்களோ அவர்களின் முகங்கள் அலங்கோலமாகிவிடும். (அவர்களிடம்) கூறப்படும்: “நீங்கள் எதனைக் குறித்து வற்புறுத்திக் கொண்டிருந்தீர்களோ அதுதான் இது!”</span>
<span>67:28 (இவர்களிடம்) கேளும்: “அல்லாஹ் என்னையும் என் தோழர்களையும் அழித்துவிட்டால் அல்லது எங்கள் மீது கருணை புரிந்தால் துன்புறுத்தும் வேதனையிலிருந்து நிராகரிப்பாளர்களைக் காப்பாற்றுபவன் யார் என்பதை எப்போதேனும் நீங்கள் சிந்தித்ததுண்டா?” </span>
<span>67:29 மேலும் (இவர்களிடம்) கூறும்: “அவன் பெரும் கருணையாளனாவான். அவன் மீதே நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். அவனையே நாங்கள் முழுமையாகச் சார்ந்திருக்கின்றோம். வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடப்பவன் யார் என்பது விரைவில் உங்களுக்குத் தெரிந்துவிடும். </span>
<span>67:30 (இவர்களிடம்) கேளும்: “உங்கள் (கிணறுகளின்) நீர் பூமிக்குள் போய்விட்டால் பிறகு தண்ணீர் ஊற்றுகளை உங்களுக்கு வெளிக்கொணர்பவன் யார் என்பதையும் நீங்கள் எப்போதேனும் சிந்தித்ததுண்டா?”</span>
</div><div>
<span>அல்கலம்</span>
<span>68:1 நூன், எழுதுகோலின் மீது சத்தியமாக! எழுதுவோர் எதனை எழுதிக் கொண்டிருக்கின்றார்களோ அதன் மீதும் சத்தியமாக! </span>
<span>68:2 நீர் உம் இறைவனின் அருளால் பைத்தியக்காரர் அல்லர். </span>
<span>68:3 என்றைக்கும் முடிவடையாத கூலி திண்ணமாக உமக்கு இருக்கிறது. </span>
<span>68:4 மேலும், திண்ணமாக நற்குணத்தின் மிக உன்னதமான நிலையில் நீர் இருக்கின்றீர். </span>
<span>68:5 விரைவில் நீரும் கண்டுகொள்வீர்; அவர்களும் கண்டுகொள்வார்கள். </span>
<span>68:6 உங்களில் யார் பைத்தியத்திற்குள்ளானவர் என்பதையும் </span>
<span>68:7 அவன் வழியிலிருந்து பிறழ்ந்தவர்கள் யாரென்பதையும் உமதிறைவன் நன்கு அறிகின்றான்; நேர்வழியில் இருப்பவர்களையும் நன்கு அறிகின்றான். </span>
<span>68:8 எனவே சத்தியத்தைப் பொய்ப்படுத்துகின்ற இவர்களின் நிர்ப்பந்தத்திற்கு நீர் பணிந்து விடாதீர். </span>
<span>68:9 நீர் சிறிது விட்டுக் கொடுத்து இணங்கி வந்தால், அவர்களும் சற்று விட்டுக்கொடுத்து இணங்கி வரலாம் என விரும்புகின்றார்கள். </span>
<span>68:10 அதிகமாக சத்தியம் செய்கின்ற, அற்பமான எந்த மனிதனுக்கும் நீர் அடங்கி விடாதீர். </span>
<span>68:11 அவன் திட்டுகின்றவனாகவும், புறம்பேசித் திரிபவனாகவும், </span>
<span>68:12 நன்மை செய்யவிடாமல் தடுப்பவனாகவும், </span>
<span>68:13 கொடுமைகள் புரிவதில் வரம்பு மீறிச் செல்பவனாகவும், பாவச் செயல்கள் அதிகம் செய்பவனாகவும், இரக்கமற்ற கொடுமைக்காரனாகவும், இத்தனைக்கும் பிறகு இழி பிறவியாகவும் இருக்கின்றான்; </span>
<span>68:14 அவனுக்கு நிறைய செல்வமும் பிள்ளைகளும் இருக்கின்றன என்பதால்!</span>
<span>68:15 நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காட்டப்படும்போது, இவை முற்காலத்துக் கட்டுக்கதைகள் என்று கூறுகின்றான். </span>
<span>68:16 விரைவில் நாம் இவனுடைய மூக்கின் மீது சூடு இடுவோம்!</span>
<span>68:17 நாம் (மக்காவாசிகளாகிய) இவர்களைச் சோதனைக் குள்ளாக்கியுள்ளோம், ஒரு தோட்டத்தின் உரிமையாளர்களைச் சோதனைக்குள்ளாக்கியது போன்று! ஒருபோது அவர்கள் தங்களுடைய தோட்டத்தின் கனிகளை நிச்சயம் அதிகாலையில் பறிப்பதாகச் சத்தியம் செய்தார்கள். </span>
<span>68:18 அதில் எவ்வித விதிவிலக்கையும் அவர்கள் குறிப்பிடவில்லை. </span>
<span>68:19 இரவில் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது உம் இறைவனின் தரப்பிலிருந்து ஒரு பேரிடர் அந்தத் தோட்டத்தைப் பிடித்துக் கொண்டது. </span>
<span>68:20 அப்போது அது அறுவடை செய்யப்பட்ட வயலைப் போன்று ஆகிவிட்டது! </span>
<span>68:21 காலையில் அவர்கள் ஒருவரையொருவர் அழைத்துக் கூறினார்கள், </span>
<span>68:22 “நீங்கள் கனிகளைப் பறிப்பதாக இருந்தால், அதிகாலையிலேயே உங்கள் வயலுக்குப் புறப்பட்டுச் சென்றுவிடுங்கள்” என்று! </span>
<span>68:23 அவ்வாறே அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள்: தங்களிடையே இரகசியம் பேசிக்கொண்டு. </span>
<span>68:24 “இன்று எந்த ஏழை எளியவனும் உங்களிடம் தோட்டத்திற்குள் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்!” </span>
<span>68:25 அப்படி எதையும் கொடுக்கக்கூடாது என்று முடிவு செய்து அதிகாலையில் (கனிகளைப் பறிக்க) ஆற்றலுள்ளவர்கள் போன்று அவசர அவசரமாக அவர்கள் அங்கு சென்றார்கள்:</span>
<span>68:26 ஆனால் தோட்டத்தை அவர்கள் பார்த்தபோது கூறினார்கள். “நாம் வழிதவறி விட்டிருக்கிறோம்;</span>
<span>68:27 இல்லை, உண்மையில் நாம் இழப்புக்குள்ளாகிவிட்டோம்!” </span>
<span>68:28 அவர்களிடையே மிகவும் சிறந்த மனிதர் கூறினார்: “நீங்கள் இறைவனைத் துதிக்க வேண்டாமா? இதை நான் உங்களிடம் கூறவில்லையா?”</span>
<span>68:29 அப்போது அவர்கள் கூறினார்கள்: “மிகத் தூய்மையானவன், எங்கள் அதிபதி! உண்மையில் நாம் தாம் பாவிகளாயிருந்தோம்!” </span>
<span>68:30 பின்னர் அவர்கள் பரஸ்பரம் பழித்துரைக்கலாயினர். </span>
<span>68:31 இறுதியில் அவர்கள் கூறினார்கள்: “எங்களுடைய கேடே! ஐயமின்றி நாங்கள் வரம்பு மீறியவர்களாகி விட்டோம். </span>
<span>68:32 எங்கள் அதிபதி இதற்குப் பகரமாக இதனைவிடச் சிறந்த தோட்டத்தை எங்களுக்கு வழங்கக்கூடும். நாங்கள் எங்கள் அதிபதியின் பக்கம் திரும்புகின்றோம்!” </span>
<span>68:33 இப்படித்தான் இருக்கும் வேதனை! மறுமையின் வேதனை இதனைவிடக் கொடியதாகும். அந்தோ! இவர்கள் இதனை அறிந்திருக்க வேண்டுமே!</span>
<span>68:34 திண்ணமாக இறையச்சமுடைய மனிதர்களுக்கு அவர்களின் இறைவனிடத்தில் அருள்நிறைந்த சுவனங்கள் இருக்கின்றன. </span>
<span>68:35 கீழ்ப்படிபவர்களின் நிலையை குற்றவாளிகளின் நிலைபோன்று நாம் செய்துவிடுவோமா, என்ன? </span>
<span>68:36 உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நீங்கள் எப்படிப்பட்ட முடிவை எடுக்கின்றீர்கள்? </span>
<span>68:37 உங்களிடம் ஏதாவது வேதம் இருக்கின்றதா? </span>
<span>68:38 நீங்கள் உங்களுக்கு எதை விரும்புகின்றீர்களோ அது உங்களுக்கு அங்கே அவசியம் கிடைக்கும் என்று அந்த வேதத்தில் நீங்கள் படிக்கின்றீர்களா? </span>
<span>68:39 அல்லது நீங்கள் எதைத் தீர்மானித்திருக்கின்றீர்களோ அதுவே உங்களுக்குக் கிடைக்க வேண்டுமென்று இறுதித் தீர்ப்புநாள் வரை நம்மைக் கட்டுப்படுத்தும் உடன்படிக்கை ஏதேனும் நீங்கள் நம்முடன் ஏற்படுத்திவைத்திருக்கிறீர்களா, என்ன? </span>
<span>68:40 உங்களில் எவர் இதற்குப் பொறுப்பாளி என்று இவர்களிடம் நீர் கேளும்! </span>
<span>68:41 அல்லது இவர்களாக ஏற்படுத்திக் கொண்ட இணைக் கடவுள்கள் (இதற்குப் பொறுப்பேற்கும் வகையில்) உள்ளனரா? அப்படியென்றால், தங்களுடைய அந்த இணைக் கடவுள்களை இவர்கள் கொண்டுவரட்டும், இவர்கள் உண்மையாளர்களாய் இருந்தால்!</span>
<span>68:42 எந்த நாளில் கடினமான நேரம் வருமோ மேலும், மக்கள் ஸஜ்தா* செய்வதற்காக அழைக்கப்படுவார்களோ அந்த நாளில் இந்த மக்களால் ஸஜ்தா செய்திட முடியாது. </span>
<span>68:43 இவர்களின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். இழிவு இவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும். இவர்கள் ஆரோக்கியமானவர்களாய் இருந்தபோது, ஸஜ்தா செய்யுமாறு இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வந்தது. (அப்போது இவர்கள் மறுத்துக் கொண்டிருந்தார்கள்). </span>
<span>68:44 ஆகவே (நபியே!) நீர் இந்த வேதவாக்கைப் பொய்யெனத் தூற்றுபவர்களின் விவகாரத்தை என்னிடம் விட்டுவிடும். படிப்படியாக இவர்கள் அறியாத விதத்தில் அழிவின் பக்கம் இவர்களை நாம் கொண்டு செல்வோம். </span>
<span>68:45 நான் இவர்களுடைய கடிவாளத்தைத் தளர்த்தி விட்டிருக்கின்றேன். எனது சூழ்ச்சி மிக உறுதியானதாகும். </span>
<span>68:46 என்ன, நீர் இவர்களிடம் கூலி எதுவும் கேட்கிறீரா? அவ்வாறு இவர்கள் கடன் சுமையால் அழுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றார்களா? </span>
<span>68:47 அல்லது மறைவானவற்றைப் பற்றிய ஞானம் இவர்களுக்கு இருந்து அதனை இவர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றார்களா? </span>
<span>68:48 சரி! உம் அதிபதியின் தீர்ப்பு வரும்வரை பொறுமையாய் இரும். மேலும் மீன் மனிதர் (யூனுஸ்) போன்று ஆகி விடாதீர். அவர் துயரத்திற்குள்ளாகி இருந்த நிலையில் அழைத்த போது, </span>
<span>68:49 அவருடைய அதிபதியின் கருணை அவருக்குக் கிடைத் திராவிட்டால், அவர் இழிவுக்கு ஆளாகி பொட்டல்வெளியில் எறியப்பட்டிருப்பார்! </span>
<span>68:50 இறுதியில் அவருடைய அதிபதி அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். மேலும், அவரை நல்லடியார்களில் ஒருவராயும் சேர்த்துக் கொண்டான். </span>
<span>68:51 இந்த நிராகரிப்பாளர்கள் நல்லுரையை (குர்ஆனை)ச் செவியுறும்போது உம்முடைய பாதங்களைப் பிறழச் செய்துவிடு வதைப் போன்று உம்மை முறைத்துப் பார்க்கின்றார்கள். மேலும், “நிச்சயமாக இவர் ஒரு பைத்தியக்காரர்!” என்றும் கூறுகின்றார்கள். </span>
<span>68:52 ஆனால் உண்மை நிலை யாதெனில், இது உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நல்லுரையாகவே இருக்கிறது. </span>
</div><div>
<span>அல்ஹாக்கா</span>
<span>69:1 நிச்சயமாக நிகழ்ந்தே தீரவேண்டிய விஷயம்! </span>
<span>69:2 நிச்சயமாக நிகழ்ந்தே தீரவேண்டிய அந்த விஷயம் என்ன?</span>
<span>69:3 நிச்சயமாக நிகழ்ந்தே தீர வேண்டிய அந்த விஷயம் என்னவென்று உமக்குத் தெரியுமா? </span>
<span>69:4 ஸமூது மற்றும் ஆது சமூகத்தினர் திடீரென நிகழவிருக்கும் அந்த ஆபத்தைப் பொய்யென வாதிட்டனர். </span>
<span>69:5 எனவே ஸமூது சமூகத்தினர் ஒரு கடுமையான விபத்தினால் அழிக்கப்பட்டார்கள். </span>
<span>69:6 ஆது சமூகத்தினர் மிகப்பெரிய கடும் சூறாவளிக் காற்றினால் அழிக்கப்பட்டார்கள். </span>
<span>69:7 அல்லாஹ் அந்தக் காற்றினை அவர்கள் மீது ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ந்து ஏவினான். (நீர் அங்கு இருந்திருந்தால்) இற்றுப்போன ஈச்சமரத் தண்டுகளைப் போன்று அவர்கள் அங்கு முகங்குப்புற வீழ்ந்து கிடந்ததைப் பார்த்திருப்பீர்! </span>
<span>69:8 இப்போது அவர்களில் எவரேனும் எஞ்சியிருப்பது உமக்குத் தெரிய வருகிறதா என்ன?</span>
<span>69:9 ஃபிர்அவ்னும் அவனுக்கு முன்பிருந்த மக்களும், தலை கீழாகப் புரட்டப்பட்ட ஊர் (வாசி)களும் இதே பெருந்தவறைச் செய்தனர். </span>
<span>69:10 அவர்கள் அனைவரும் தங்களுடைய இறைத்தூதர்களின் பேச்சைக் கேட்கவில்லை. எனவே அவன் அவர்களை மிகக் கடுமையாகப் பிடித்தான். </span>
<span>69:11 வெள்ளப் பிரளயம் எல்லை கடந்து போனபோது நாம் உங்களைக் கப்பலில் ஏற்றினோம்; </span>
<span>69:12 இச்சம்பவங்களை நாம் படிப்பினையூட்டும் ஒரு பாடமாக ஆக்க வேண்டும் என்பதற்காகவும், நினைவுகூரும் செவிகள் இதனை நினைவிலிருத்திப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும்தான்!</span>
<span>69:13 பிறகு ஒரே ஒரு தடவை எக்காளம் ஊதப்படும்போது</span>
<span>69:14 மேலும், பூமியையும் மலைகளையும் தூக்கி ஒரே அடியில் அவை நொறுங்கி, துகள்துகளாக ஆக்கப்படும்போது ; </span>
<span>69:15 அந்த நாளில் நிகழவேண்டியது நிகழ்ந்தே தீரும்! </span>
<span>69:16 மேலும் (அந்நாளில்) வானம் பிளக்கும், அதன் கட்டுக்கோப்பு குலைந்து போய்விடும். </span>
<span>69:17 வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். மேலும், உம் இறைவனின் அர்ஷை* அன்று எட்டு வானவர்கள் தங்களின் மீது சுமந்துகொண்டிருப்பார்கள். </span>
<span>69:18 அந்நாளில் நீங்கள் ஆஜர்படுத்தப்படுவீர்கள். உங்களுடைய எந்த இரகசியமும் அன்று மறைந்து இருக்காது. </span>
<span>69:19 அன்று தன் வலக்கையில் யாருக்குச் செயலேடு தரப்படு கிறதோ அவர் கூறுவார்: “இதோ, பாருங்கள்! படியுங்கள், என் வினைச் சுவடியை! </span>
<span>69:20 நிச்சயம் என்னுடைய கணக்கை நான் சந்திப்பேன் என்று நான் எண்ணியேயிருந்தேன்!” </span>
<span>69:21 அவர் மனத்திற்குகந்த வாழ்க்கையில் இருப்பார், </span>
<span>69:22 உன்னதமான சுவனத்தில்; </span>
<span>69:23 அங்கு பழக்குலைகள் தாழ்ந்து தொங்கிக் கொண்டிருக்கும். </span>
<span>69:24 (இத்தகையவர்களிடம்) கூறப்படும்: “சுவையாக உண்ணுங்கள்; பருகுங்கள்! கடந்து சென்ற நாட்களில் நீங்கள் ஆற்றிய நற்காரியங்களுக்குப் பகரமாக!”</span>
<span>69:25 மேலும், தன்னுடைய இடக்கையில் செயலேடு கொடுக்கப்படுபவர் கூறுவார்: “அந்தோ! என்னுடைய செயலேடு எனக்குத் தரப்படாமல் இருந்திருக்கக் கூடாதா? </span>
<span>69:26 என் கணக்கு என்னவென்று நான் அறியாமல் இருந்திருக்கக் கூடாதா?</span>
<span>69:27 அந்தோ! (உலகத்தில் வந்த) அந்த மரணமே இறுதியானதாய் இருந்திருக்கக் கூடாதா? </span>
<span>69:28 இன்று என்னுடைய செல்வம் எனக்கு எவ்விதப் பயனும் அளிக்கவில்லையே! </span>
<span>69:29 என்னுடைய அதிகாரம் அனைத்தும் முடிந்துபோய் விட்டதே!” </span>
<span>69:30 (ஆணை பிறக்கும்:) “பிடியுங்கள் இவனை! இவனுடைய கழுத்தில் விலங்கை மாட்டுங்கள்! </span>
<span>69:31 பின்னர் இவனை நரகத்தில் வீசி எறியுங்கள்! </span>
<span>69:32 பிறகு இவனை எழுபது முழம் நீளமுள்ள சங்கிலியால் பிணையுங்கள்.” </span>
<span>69:33 மேன்மையும் உயர்வும் மிக்கவனாகிய அல்லாஹ்வின் மீது இவன் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தான். </span>
<span>69:34 ஏழை எளியோர்க்கு உணவு அளிக்கும்படி தூண்டாமலும் இருந்தான். </span>
<span>69:35 எனவே, இன்று இங்கு அவன் மீது அனுதாபப்படும் எந்த நண்பனும் இல்லை. </span>
<span>69:36 சீழ்நீரைத் தவிர அவனுக்கு எந்த உணவும் இங்கு இல்லை; </span>
<span>69:37 தவறிழைத்தவர்களைத் தவிர வேறெவரும் அதனை அருந்துவதில்லை. </span>
<span>69:38 இல்லை! நீங்கள் பார்க்கின்றவற்றின் மீதும், </span>
<span>69:39 நீங்கள் பார்க்காதவற்றின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்! </span>
<span>69:40 இது கண்ணியமான ஒரு தூதரின் சொல்லாகும். </span>
<span>69:41 யாரோ ஒரு கவிஞனின் சொல்லல்ல. நீங்கள் குறைவாகத்தான் நம்பிக்கை கொள்கின்றீர்கள். </span>
<span>69:42 இது யாரோ ஒரு ஜோதிடனின் சொல்லும் அல்ல. நீங்கள் குறைவாகத்தான் சிந்திக்கிறீர்கள். </span>
<span>69:43 இது அகில உலகங்களின் அதிபதியிடமிருந்து இறங்கியதாகும். </span>
<span>69:44 மேலும், இவர் (இந்த நபி) சுயமாக இட்டுக்கட்டி ஏதேனுமொரு விஷயத்தை நம் பெயரில் சேர்த்துச் சொல்லியிருந்தால் </span>
<span>69:45 நாம் அவரது வலக்கையைப் பிடித்திருப்போம். </span>
<span>69:46 பிறகு அவருடைய பிடரி நரம்பைத் துண்டித்தும் இருப்போம். </span>
<span>69:47 பிறகு உங்களில் எவரும் இப்படிச் செய்வதிலிருந்து (நம்மைத்) தடுப்பவராய் இருக்க முடியாது!</span>
<span>69:48 உண்மையில் இறையச்சமுள்ளோருக்கு இது ஒரு நல்லுரையாகும். </span>
<span>69:49 உங்களில் பொய்யென வாதிடுபவர்கள் சிலரும் உள்ளனர் என்பதை நாம் அறிவோம். </span>
<span>69:50 இப்படிப்பட்ட நிராகரிப்பாளர்களுக்கு நிச்சயம் இது மனவருத்தத்தை அளிக்கக்கூடியதே ஆகும். </span>
<span>69:51 மேலும், இது முற்றிலும் உறுதியான சத்தியமாகும். </span>
<span>69:52 எனவே, (நபியே) உம்முடைய மகத்தான அதிபதியின் பெயரைத் துதிப்பீராக!</span>
</div><div>
<span>அல்மஆரிஜ்</span>
<span>70:1 கேட்கக்கூடியவர் வேதனையைக் கேட்டிருக்கிறார். (அந்த வேதனை) நிச்சயம் நிகழக்கூடியதாகும், </span>
<span>70:2 நிராகரிப்பாளர்களுக்கு! அதனைத் தடுத்து நிறுத்துபவர் எவரும் இல்லை. </span>
<span>70:3 ஏறிச்செல்லும் படிகளின் உரிமையாளனாகிய அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உள்ளதாகும். </span>
<span>70:4 வானவர்களும் ரூஹும்* அவனிடம் அந்நாளில் ஏறிச் செல்கின்றனர். அந்நாளின் அளவு ஐம்பதாயிரம் ஆண்டுகளாகும். </span>
<span>70:5 (நபியே!) பொறுமையை மேற்கொள்ளும்; அழகிய பொறுமையை! </span>
<span>70:6 இவர்கள் அதனை வெகு தொலைவில் இருப்பதாகக் கருதுகின்றார்கள். </span>
<span>70:7 நாம் அது அருகில் இருப்பதைப் பார்க்கின்றோம். </span>
<span>70:8 (அந்த வேதனை ஏற்படும்) அந்நாளில் வானம், உருகிய வெள்ளியைப் போன்றும் </span>
<span>70:9 மலைகள், கடையப்பட்ட வண்ணக் கம்பளியைப் போன்றும் ஆகிவிடும். </span>
<span>70:10 மேலும், அன்று எந்த உற்ற நண்பனும் தன்னுடைய நண்பனைப் பற்றி விசாரிக்க மாட்டான். </span>
<span>70:11 ஆனால், அவர்கள் ஒருவர் மற்றவருக்குக் காண்பிக்கப்படுவார்கள். குற்றவாளி அந்நாளின் வேதனையிலிருந்து தப்புவதற்காகத் தன் பிள்ளைகளையும், </span>
<span>70:12 தன் மனைவியையும், சகோதரனையும், </span>
<span>70:13 தனக்கு ஆதரவு அளித்துக் கொண்டிருந்த மிக நெருங்கிய குடும்பத்தையும், </span>
<span>70:14 ஏன் பூமியிலுள்ள அனைவரையுமே ஈடாகக் கொடுத்துவிட வேண்டும் என்றும், இது அவனுக்கு ஈடேற்றம் அளித்திட வேண்டும் என்றும் விரும்புவான். </span>
<span>70:15 ஒருபோதுமில்லை; அது சீறியெழுந்து எரியும் தீப்பிழம்பாகும். </span>
<span>70:16 அது தோலையும் சதையையும் பொசுக்கிவிடும். </span>
<span>70:17 எந்த மனிதன் சத்தியத்தைப் புறக்கணித்து, புறங்காட்டிச் சென்றானோ ; </span>
<span>70:18 மேலும் செல்வத்தைச் சேர்த்தானோ இன்னும் கஞ்சத்தனமாக தன்னிடம் தடுத்து வைத்தானோ அத்தகைய ஒவ்வொருவனையும் அது ‘வா வா’ என்று அழைக்கும். </span>
<span>70:19 மனிதன் பதற்றக்காரனாகப் படைக்கப்பட்டிருக்கின்றான். </span>
<span>70:20 ஒரு துன்பம் அவனுக்கு வந்தால், பொறுமையிழந்து போகின்றான். </span>
<span>70:21 ஆனால் அவனுக்கு வசதி வாய்ப்புகள் ஏற்படும்போது கஞ்சத்தனம் செய்யத் தலைப்படுகின்றான். </span>
<span>70:22 ஆயினும் தொழுகையாளிகள் (இத்தகைய தவறுகளில் இருந்து விடுபட்டிருக்கிறார்கள்). </span>
<span>70:23 அவர்களோ தொழுகையை நிரந்தரமாக நிறைவேற்றுகிறார்கள். </span>
<span>70:24 அவர்களுடைய செல்வங்களில் நிர்ணயிக்கப்பட்ட உரிமை இருக்கிறது. </span>
<span>70:25 யாசிப்பவருக்கும், இல்லாதாருக்கும்; </span>
<span>70:26 அவர்கள் கூலி வழங்கும் நாளினை உண்மையென ஏற்றுக்கொள்கிறார்கள். </span>
<span>70:27 மேலும், தங்களுடைய இறைவனின் வேதனைக்கு அஞ்சுகிறார்கள். </span>
<span>70:28 ஏனெனில், அவர்களுடைய இறைவனின் வேதனை எவரும் அஞ்சாமல் இருக்கக்கூடியதல்ல. </span>
<span>70:29 அவர்கள் தங்கள் வெட்கத்தலங்களைப் பாதுகாக்கிறார்கள்;</span>
<span>70:30 அவர்களுடைய மனைவியரிடமோ அடிமைப் பெண்களிடமோ தவிர! அவ்வாறு அவர்களிடம் அவற்றைப் பாதுகாக்காமல் இருப்பதால் அவர்கள் பழிப்புக்குரியவர்கள் அல்லர். </span>
<span>70:31 ஆயினும் அதற்கு மேலும் எவர்கள் விரும்புகின்றார்களோ அவர்கள்தாம் வரம்புமீறுகிறவர்கள் ஆவர். </span>
<span>70:32 அவர்கள் தங்களிடம் உள்ள அமானிதப் பொருள்களைப் பாதுகாக்கிறார்கள். தாங்கள் செய்த ஒப்பந்தங்களைப் பேணி நடக்கவும் செய்கிறார்கள். </span>
<span>70:33 மேலும் தங்களுடைய சாட்சியங்களில் நேர்மையாக நிலைத்திருக்கிறார்கள். </span>
<span>70:34 மேலும் தங்களுடைய தொழுகைகளைப் பேணிக் காக்கிறார்கள். </span>
<span>70:35 இத்தகையவர்கள்தாம் சுவனத் தோட்டங்களில் கண்ணியத்துடன் தங்கி வாழ்பவர்கள். </span>
<span>70:36 (நபியே) என்ன விஷயம்? இந்நிராகரிப்பாளர்கள் உம்மை நோக்கி ஓடிவருகின்றார்களே, </span>
<span>70:37 வலப்பக்கத்திலிருந்தும் இடப்பக்கத்திலிருந்தும் கூட்டம் கூட்டமாக. </span>
<span>70:38 இவர்கள் ஒவ்வொருவரும் அருள்நிறைந்த சுவனத்தில் தாம் நுழைவிக்கப்பட வேண்டும் என்று ஆசைப்படுகின்றனரா? </span>
<span>70:39 ஒருபோதும் நடக்காது! நாம் எப்பொருளிலிருந்து அவர்களைப் படைத்தோமோ அதை அவர்களே அறிந்திருக்கிறார்கள். </span>
<span>70:40 அவ்வாறில்லை. நான் சத்தியம் செய்கின்றேன். கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளின் அதிபதியின் மீது! </span>
<span>70:41 இவர்களுக்குப் பகரமாக இவர்களைவிட சிறந்தவர்களைக் கொண்டு வருவதற்கு நாம் ஆற்றல் பெற்றுள்ளோம். மேலும் நம்மை வெற்றி கொள்ளக்கூடியவர் எவரும் இல்லை! </span>
<span>70:42 எனவே இவர்களை இவர்களுடைய அபத்தமான பேச்சுக்களிலும் விளையாட்டிலும் வீழ்ந்து கிடக்குமாறு நீர் விட்டுவிடும்! இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளினை இவர்கள் அடையும் வரை! </span>
<span>70:43 இவர்கள் தங்களுடைய மண்ணறைகளிலிருந்து வெளி யேறி ஓடிக்கொண்டிருக்கும் நாளில் தங்கள் தெய்வச் சிலைகளின் ஆலயங்களை நோக்கி விரைவாக ஓடுவதைப்போல;</span>
<span>70:44 இவர்களின் பார்வைகள் தாழ்ந்துவிட்டிருக்கும்; இழிவு இவர்களைக் கவ்வியிருக்கும்! இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டு வந்தது அந்நாளே ஆகும். </span>
</div><div>
<span>நூஹ்</span>
<span>71:1 நாம் நூஹை இந்த ஏவுரையுடன் அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். உம்முடைய சமுதாயத்தை எச்சரிப்பீராக; துன்புறுத்தும் வேதனை அவர்களிடம் வருவதற்கு முன்பாக!</span>
<span>71:2 அவர் கூறினார்: “என் சமூகத்தினரே! நான் உங்களுக்குத் தெள்ளத் தெளிவாக எச்சரிக்கை செய்யக்கூடிய தூதர் ஆவேன். </span>
<span>71:3 (நான் உங்களுக்கு இதனை உணர்த்துகின்றேன்:) அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். அவனுக்கு அஞ்சுங்கள். மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள். </span>
<span>71:4 அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான். மேலும், ஒரு நிர்ணயிக்கப்பட்ட காலம் வரையில் உங்களை விட்டு வைப்பான். திண்ணமாக அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட நேரம் வந்துவிட்டால் அது ஒத்தி வைக்கப்பட மாட்டாது. அந்தோ, இதை நீங்கள் அறிந்திருக்க வேண்டுமே!</span>
<span>71:5 அவர் பணிந்து கூறினார்: “என் அதிபதியே! நான் என் சமூகத்தினருக்கு இரவு பகலாக அழைப்பு விடுத்தேன். </span>
<span>71:6 ஆனால், என்னுடைய அழைப்போ விரண்டோடுவதையே அவர்களிடம் அதிகப்படுத்தியது. </span>
<span>71:7 மேலும், நீ அவர்களை மன்னிக்க வேண்டும் என்பதற்காக நான் அவர்களை அழைத்த போதெல்லாம் அவர்கள் காதுகளில் விரல்களைத் திணித்துக் கொண்டார்கள். மேலும், தம் துணிகளால் முகத்தை மூடிக்கொண்டார்கள். மேலும், தம்முடைய தவறான நடத்தையில் பிடிவாதமாய் இருந்தார்கள். மிகவும் அகம்பாவம் கொண்டிருந்தார்கள். </span>
<span>71:8 மீண்டும் நான் அவர்களை உரக்கக் கூவி அழைத்தேன். </span>
<span>71:9 பின் நான் வெளிப்படையாகவும் அவர்களுக்கு எடுத்துரைத்தேன். அந்தரங்கமாகவும் விளக்கினேன். </span>
<span>71:10 நான் கூறினேன்: “உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். ஐயமின்றி அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான். </span>
<span>71:11 அவன் உங்கள் மீது வானத்திலிருந்து நிறைய மழையைப் பொழியச் செய்வான். </span>
<span>71:12 செல்வத்தையும் சந்ததிகளையும் உங்களுக்கு வழங்குவான். உங்களுக்காகத் தோட்டங்களை உருவாக்குவான். உங்களுக்காக ஆறுகளையும் ஓடச் செய்வான். </span>
<span>71:13 உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? அல்லாஹ்வுக்கு மகத்துவமும் மாண்பும் ஏதேனும் இருக்கிறது என்ற உணர்வே உங்களிடம் இல்லையே!</span>
<span>71:14 உண்மையில் அவன் உங்களைப் பல நிலைகளாகப் படைத்திருக்கின்றான். </span>
<span>71:15 அல்லாஹ் எவ்வாறு ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்துள்ளான் என்பதையும், </span>
<span>71:16 அவற்றில் சந்திரனை ஒளியாகவும், சூரியனை விளக்காகவும் அமைத்துள்ளான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? </span>
<span>71:17 மேலும், அல்லாஹ் உங்களைப் பூமியிலிருந்து வியக்கத்தக்க விதத்தில் முளைக்கச் செய்தான். </span>
<span>71:18 பின்னர், உங்களை இதே பூமிக்குத் திரும்பக் கொண்டு செல்வான். மேலும், அதிலிருந்து திடீரென உங்களை எழுப்பி நிறுத்துவான். </span>
<span>71:19 மேலும், அல்லாஹ் பூமியை உங்களுக்காக விரிப்பாக அமைத்தான்; </span>
<span>71:20 நீங்கள் அதன் திறந்த பாதைகளில் நடந்து செல்ல வேண்டும் என்பதற்காக!</span>
<span>71:21 நூஹ் கூறினார்: “என் அதிபதியே! இவர்கள் என் பேச்சை நிராகரித்து விட்டார்கள். மேலும், இவர்கள் சில (தலைவ)ர்களைப் பின்பற்றியுள்ளார்கள். அந்தத் தலைவர்களுக்குத் தங்கள் செல்வமும்பிள்ளைகளும் அதிக நஷ்டத்தைத் தவிர வேறு எந்தப் பயனையும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. </span>
<span>71:22 இவர்கள் பெரியதொரு சூழ்ச்சி வலையை விரித்து வைத்திருக்கின்றார்கள். </span>
<span>71:23 “உங்களுடைய கடவுள்களை விட்டுவிடாதீர்கள். வத், ஸுவாஉ, யஃகூஸ், யஊஃக் மற்றும் நஸ்ர் ஆகியவற்றை விட்டுவிடாதீர்கள்” என்று இவர்கள் கூறினார்கள். </span>
<span>71:24 இவர்கள் பலரை வழிகெடுத்திருக்கின்றார்கள். நீயும் இந்தக் கொடுமையாளர்களுக்கு வழிகேட்டைத் தவிர வேறு எதிலும் முன்னேற்றத்தை அளிக்காதே!”</span>
<span>71:25 தங்கள் தவறுகளின் காரணத்தால்தான் அவர்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டார்கள்; மேலும், நெருப்பில் வீசி எறியப்பட்டார்கள். பின்பு அல்லாஹ்விடமிருந்து தங்களைக் காப்பாற்றி உதவுவோர் எவரையும் அவர்கள் பெற்றிடவில்லை. </span>
<span>71:26 மேலும், நூஹ் கூறினார்: “என் அதிபதியே! இந்த நிராகரிப்பாளர்களில் எவரையும் பூமியில் வசிக்க விட்டு வைக்காதே!</span>
<span>71:27 நீ இவர்களைவிட்டு வைத்தால் இவர்கள் உன் அடிமைகளை வழிகெடுத்து விடுவார்கள். மேலும் இவர்களின் சந்ததியில் யார் பிறந்தாலும் தீயவனாகவும் நிராகரிப் பாளனாகவும்தான் இருப்பான். </span>
<span>71:28 என் அதிபதியே! எனக்கும் என் தாய் தந்தையருக்கும், என் வீட்டில் இறைநம்பிக்கை கொண்டவனாக நுழைந்திருக்கும் ஒவ்வொருவனுக்கும், மேலும், நம்பிக்கை கொண்ட ஆண் பெண்கள் அனைவருக்கும் நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், கொடுமைக்காரர்களுக்கு அதிக அழிவைத் தவிர வேறு எதையும் கொடுக்காதே!”</span>
</div><div>
<span>அல் ஜின்னு</span>
<span>72:1 (நபியே!) நீர் கூறும்: எனக்கு இவ்வாறு வஹி* அனுப்பப்பட்டிருக்கின்றது: ஜின்களில் ஒரு குழுவினர் கவனமாகக் கேட்டனர். பின்னர் (தம் சமூக மக்களிடம் சென்று) கூறினர்: “நாங்கள் மிகவும் அற்புதமானதொரு குர்ஆனைச் செவியுற்றோம். </span>
<span>72:2 அது நேரிய பாதையின் பக்கம் வழிகாட்டுகின்றது. ஆகையால், நாங்கள் அதன் மீது நம்பிக்கை கொண்டோம். மேலும், நாங்கள் எங்களுடைய இறைவனுடன் எவரையும் இணையாக்கமாட்டோம். </span>
<span>72:3 மேலும், எங்களுடைய இறைவனின் மாட்சிமை மிகவும் உயர்ந்தது; உன்னதமானது. அவன் எவரையும் மனைவியாகவோ, மகனாகவோ எடுத்துக்கொள்ளவில்லை. </span>
<span>72:4 மேலும், நம்மிலுள்ள அறிவிலிகள் அல்லாஹ்வைப் பற்றி உண்மைக்குப் புறம்பான பல விஷயங்களைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். </span>
<span>72:5 மேலும், அல்லாஹ்வின் விஷயத்தில் பொய் சொல்ல முடியாது என்று நாங்கள் கருதியிருந்தோம். </span>
<span>72:6 மேலும், மனிதர்களில் சிலர் சில ஜின்களிடம் பாதுகாவல் கோரக் கூடியவர்களாய் இருந்தனர். இவ்வாறு செய்து அவர்கள் ஜின்களின் ஆணவத்தை இன்னும் அதிகமாக்கிவிட்டார்கள். </span>
<span>72:7 மேலும், மனிதர்களும் நீங்கள் நினைத்திருந்தது போன்றுதான் நினைத்திருந்தார்கள்; </span>
<span>72:8 அல்லாஹ் எவரையும் தூதராக அனுப்பமாட்டான் என்று! மேலும், நாங்கள் வானத்தைத் துளாவிப் பார்த்தோம். </span>
<span>72:9 அது பலமான காவலர்களால் நிரப்பப்பட்டிருப்பதையும் எரி நட்சத்திரங்கள் பொழிந்து கொண்டிருப்பதையும் கண்டோம். மேலும், இதற்கு முன் ஒட்டுக் கேட்பதற்கு வானத்தில் அமர்விடங்கள் நமக்குக் கிடைத்துக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது யாரேனும் ஒட்டுக் கேட்க முயன்றால் ஓர் எரிநட்சத்திரம் அவருக்காகக் குறி வைத்துக் காத்திருப்பதைக் காண்கின்றார்.” </span>
<span>72:10 மேலும், (கூறினார்:) “பூமியிலுள்ளவர்களுக்கு ஏதேனும் தீமை நாடப்பட்டுள்ளதா அல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நேர்வழி காட்ட விரும்புகின்றானா என்பதை நாம் அறியோம். </span>
<span>72:11 மேலும், நம்மில் சில நல்லவர்களும் இருக்கின்றனர். அவ்வாறு அல்லாதோரும் இன்னும் சிலர் நம்மில் இருக்கின்றனர். </span>
<span>72:12 நாம் பல வழிகளில் பிளவுண்டு கிடக்கின்றோம். மேலும், நம்மால் பூமியில் அல்லாஹ்வை வென்றிட முடியாது என்பதையும், எங்கேனும் ஓடிச் சென்று அவனைத் தோல்வியுறச் செய்திட முடியாது என்பதையும் நாங்கள் அறிந்திருந்தோம். </span>
<span>72:13 மேலும், நேர்வழி காட்டும் அறிவுரையை நாங்கள் கேள்விப்பட்டபோது அதன் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டோம். இனி, எவரேனும் தன்னுடைய இறைவன் மீது நம்பிக்கை கொள்வாராயின் அவருக்கு இழப்பு அல்லது அநீதி பற்றி எந்த அச்சமும் இருக்காது. </span>
<span>72:14 மேலும், நம்மில் சிலர் முஸ்லிம்களாயும் (அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவர்களாயும்) வேறு சிலர் சத்தியத்திலிருந்து பிறழ்ந்தவர்களாயும் உள்ளனர். எவர்கள் இஸ்லாத்தை (இறைவனுக்குக் கீழ்ப்படியும் மார்க்கத்தை) தேர்ந்தெடுத்துக் கொண்டார்களோ அவர்கள் ஈடேற்றத்தின் பாதையை தேடிப் பெற்றுக் கொண்டனர். </span>
<span>72:15 ஆனால், எவர்கள் சத்தியத்திலிருந்து விலகிக் கொண்டார்களோ, அவர்கள் நரகத்தின் எரிபொருள்களாய் ஆகிவிட்டார்கள்.”</span>
<span>72:16 மேலும், (நபியே! நீர் கூறும்: “இன்னும் எனக்கு வஹி அனுப்பப்பட்டிருப்பது என்னவெனில்) மக்கள் நேர்வழியில் நிலைகுலையாமல் இருந்திருந்தால் நாம் அவர்களுக்கு மழையை தாராளமாகப் பொழியச் செய்திருப்போம். </span>
<span>72:17 இந்த அருட்கொடையின் மூலம் அவர்களைச் சோதிப்பதற்காக! மேலும், எவரேனும் தன்னுடைய இறைவனின் அறிவுரையைப் புறக்கணித்தால் அவரை அவருடைய இறைவன் கடுமையான வேதனையில் ஆழ்த்தி விடுவான். </span>
<span>72:18 மேலும், மஸ்ஜித்கள் பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். எனவே, அங்கு அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அழைக்காதீர்கள்” </span>
<span>72:19 அல்லாஹ்வின் அடியார் அவனை அழைப்பதற்காக எழுந்து நின்றபோது மக்கள் அவர் மீது பாய முனைந்துவிட்டார்கள். </span>
<span>72:20 (நபியே!) நீர் கூறும்: “நான் என் இறைவனையே அழைக்கின்றேன். மேலும், அவனுடன் யாரையும் நான் இணையாக்குவதில்லை.” </span>
<span>72:21 கூறும்: “உங்களுக்கு ஏதேனும் தீமையோ, நன்மையோ செய்திடும் ஆற்றல் எனக்கில்லை.” </span>
<span>72:22 கூறும்: “அல்லாஹ்வின் பிடியிலிருந்து எவராலும் என்னைக் காப்பாற்ற முடியாது. மேலும், அவனைத் தவிர வேறு எந்தப் புகலிடத்தையும் என்னால் பெற முடியாது. </span>
<span>72:23 அல்லாஹ்வின் வார்த்தைகளையும் அவனுடைய தூதுச் செய்திகளையும் சேர்ப்பித்து விடுவதைத் தவிர வேறு எந்தப் பணியும் எனக்கில்லை.” இனி, எவரேனும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தால் திண்ணமாக அவருக்கு நரக நெருப்பு இருக்கின்றது. மேலும் இப்படிப்பட்டவர்கள் அதில் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள். </span>
<span>72:24 இந்த மக்கள் தங்களுடைய நடத்தையைக் கைவிட மாட்டார்கள்; எதுவரையெனில், அவர்களுக்கு வாக்களிக்கப்படும் விஷயத்தை அவர்கள் நேரில் காணும் வரை! அப்போது, எவருடைய உதவியாளர்கள் பலவீனர்கள், எவருடைய கூட்டம் எண்ணிக்கையில் குறைவானது என்பதை அவசியம் அறிந்துகொள்வார்கள். </span>
<span>72:25 மேலும், கூறும்: “உங்களுக்கு வாக்களிக்கப்படும் விஷயம் அண்மையில் உள்ளதா அல்லது என் இறைவன் அதற்கென நீண்டதொரு காலத்தை நிர்ணயித்துள்ளானா என்பதை நான் அறியேன். </span>
<span>72:26 அவன் மறைவானவற்றை அறிந்தவன். தான் மறைவாக வைத்திருப்பவற்றை எவருக்கும் அறிவித்துக் கொடுப்பதில்லை. (அவற்றை அறிவித்துக் கொடுப்பதற்கென) </span>
<span>72:27 அவன் விரும்பிய தூதருக்கே தவிர! பிறகு, அவருக்கு முன்பும் பின்பும் பாதுகாவலரை நியமிக்கின்றான்;</span>
<span>72:28 அந்தத் தூதர்கள் தங்களுடைய இறைவனின் தூதுச் செய்திகளைச் சேர்ப்பித்துவிட்டார்கள் என்பதை அவன் அறிந்துகொள்வதற்காக! மேலும், அவன் அவர்களிடம் உள்ளவை அனைத்தையும் சூழ்ந்து அறிந்திருக்கின்றான். மேலும், ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக் கணக்கிட்டு வைத்துள்ளான். </span>
</div><div>
<span>அல் முஸ்ஸம்மில்</span>
<span>73:1 போர்த்திக் கொண்டு படுத்திருப்பவரே! </span>
<span>73:2 இரவில் எழுந்து தொழுவீராக; ஆனால் கொஞ்ச நேரம்! </span>
<span>73:3 அதாவது, பாதி இரவு அல்லது அதைவிடச் சற்று குறைவாகவோ </span>
<span>73:4 அல்லது கூடுதலாகவோ (தொழுவீராக!) மேலும், குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக! </span>
<span>73:5 திண்ணமாக, நாம் உம் மீது கன மானதொரு வாக்கை இறக்கப் போகின்றோம். </span>
<span>73:6 உண்மையில், இரவில் எழுந்திருப்பது மனத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாகவும் (குர்ஆனை) நேர்த்தியாக ஓதுவதற்கு மிகவும் ஏற்றதாகவும் இருக்கின்றது. </span>
<span>73:7 பகல் நேரங்களிலோ உமக்கு நிறையப் பணிகள் உள்ளன.  </span>
<span>73:8 உம் இறைவனின் பெயரை நினைவுகூர்ந்து கொண்டிருப்பீராக! மேலும், அனைத்தையும் விட்டு அவனுக்காகவே ஆகிவிடுவீராக! </span>
<span>73:9 அவன் கிழக்கு மேற்குத் திசைகளின் அதிபதி ஆவான். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே, அவனையே உமக்குப் பொறுப்பேற்பவனாக (வகீல்) ஆக்கிக் கொள்வீராக! </span>
<span>73:10 மேலும், இம்மக்கள் எவற்றையெல்லாம் புனைந்துரைக்கின்றார்களோ அவற்றின் மீது பொறுமை கொள்வீராக! மேலும், கண்ணியமான முறையில் அவர்களை விட்டும் விலகிவிடுவீராக! </span>
<span>73:11 பொய்யென வாதிடுபவர்களான இந்த சுகவாசிகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுவீராக! மேலும், சிறிது காலத்திற்கு இவர்களை இப்படியே விட்டு வைப்பீராக. </span>
<span>73:12 நம்மிடம் (இவர்களுக்காகக்) கனத்த விலங்குகளும் கொழுந்துவிட்டெரியும் நெருப்பும், </span>
<span>73:13 தொண்டையில் சிக்கிக் கொள்ளும் உணவும், துன்புறுத்தும் வேதனையும் உள்ளன. </span>
<span>73:14 இது நடைபெறும் அந்நாளில் பூமியும் மலைகளும் நடுங்கும். மேலும், மலைகள் சரிந்து போகும்; மணற்குவியலைப் போன்றாகிவிடும். </span>
<span>73:15 திண்ணமாக, நாம் ஒரு தூதரை, உங்களின் மீது சான்று பகரக்கூடியவராக ஆக்கி உங்களிடம் அனுப்பினோம்; ஃபிர்அவ்னிடம் நாம் ஒரு தூதரை அனுப்பியது போன்று! </span>
<span>73:16 (பிறகு, பார்த்துக் கொள்ளுங்கள்:) ஃபிர்அவ்ன் அந்தத் தூதரின் பேச்சை ஏற்காதபோது, நாம் அவனை மிகவும் கடுமையாகப் பிடித்தோம். </span>
<span>73:17 நீங்கள் நிராகரித்து விட்டால் அந்த நாளில் எப்படித் தப்பித்துக் கொள்வீர்கள்? அதுவோ, குழந்தைகளை நரைக்கச் செய்துவிடும்; </span>
<span>73:18 அதன் கடினத்தால் வானம் வெடித் துத் தகர்ந்து போய்விடும். அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீர வேண்டியுள்ளது. </span>
<span>73:19 திண்ணமாக, இது ஓர் அறிவுரையாகும். எனவே, இனி விரும்புகிறவர் தன்னுடைய இறைவனின் பக்கம் செல்லும் வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். </span>
<span>73:20 (நபியே!) உம் இறைவன் அறிந்திருக்கின்றான் ஏறத்தாழ இரவின் மூன்றில் இரண்டு பகுதி வரை, சில சமயம் பாதி இரவு வரை, சிலசமயம் அதன் மூன்றில் ஒரு பகுதி வரை, நீர் இறைவழிபாட்டில் கழிக்கின்றீர் என்பதையும், உம்முடைய தோழர்களிலும் ஒரு குழுவினர் இவ்வாறு செய்து வருகின்றார்கள் என்பதையும்! அல்லாஹ்தான் இரவையும் பகலையும் கணக்கிட்டு வைத்துள்ளான். அவற்றைத் துல்லியமாகக் கணக்கிட உங்களால் முடியாது என்பது அவனுக்குத் தெரியும். ஆதலால், அவன் உங்கள் மீது கருணை புரிந்தான். உங்களுக்கு குர்ஆனிலிருந்து சுலபமாக எந்த அளவுக்கு ஓத முடியுமோ அந்த அளவுக்கு ஓதிக் கொள்ளுங்கள். உங்களில் சிலர் நோயாளிகளாய் இருப்பார்கள் என்பதும், வேறு சிலர் அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்கின்றார்கள் என்பதும், இன்னும் சிலர் அல்லாஹ்வின் வழியில் போர் புரிகின்றார்கள் என்பதும் அவனுக்கு நன்கு தெரியும். எனவே, குர்ஆனிலிருந்து சுலபமாக எந்த அளவுக்கு ஓத முடியுமோ அந்த அளவுக்கு ஓதிக் கொள்ளுங்கள்; தொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஜகாத்தும் கொடுங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு அழகிய கடனை அளித்து வாருங்கள். நீங்கள் உங்களுக்காக முன்கூட்டியே செய்து அனுப்பும் நன்மைகள் எவையோ அவற்றை அல்லாஹ்விடத்தில் காண்பீர்கள். அதுவே மிகச் சிறந்ததாகும். அதன் கூலியும் மகத்தானதாகும். அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கோருங்கள். ஐயமின்றி அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான். </span>
</div><div>
<span>அல் முத்தஸ்ஸிர்</span>
<span>74:1 போர்த்திக் கொண்டு படுத்திருப்பவரே! </span>
<span>74:2 எழுந்து எச்சரிக்கை செய்வீராக! </span>
<span>74:3 மேலும், உம் இறைவனின் மேன்மையைப் பிரகடனப்படுத்துவீராக! </span>
<span>74:4 மேலும், உம் ஆடைகளைத் தூய்மையாக்குவீராக! </span>
<span>74:5 அசுத்தத்திலிருந்து விலகியிருப்பீராக! </span>
<span>74:6 ஆதாயம் கருதி பிறருக்கு உதவி செய்யாதீர்; </span>
<span>74:7 உம் இறைவனுக்காகப் பொறுமையைக் கைக்கொள்வீராக!</span>
<span>74:8 எக்காளம் ஊதப்பட்டுவிட்டாலோ; </span>
<span>74:9 அந்த நாள் மிகக் கடுமையான நாளாய் இருக்கும். </span>
<span>74:10 நிராகரிப்பாளர்களுக்கு இலேசானதாய் இராது. </span>
<span>74:11 நான் தன்னந்தனியாகப் படைத்திருக்கின்ற அந்த மனிதனை என்னிடம் விட்டுவிடுவீராக! </span>
<span>74:12 அவனுக்கு நான் அதிகமான செல்வத்தை வழங்கினேன். </span>
<span>74:13 அவனுடனேயே இருக்கக்கூடிய புதல்வர்களையும் அளித்தேன். </span>
<span>74:14 மேலும், அவனுக்குத் தலைமை தாங்கும் வழிவகையையும் வகுத்துக் கொடுத்தேன். </span>
<span>74:15 இதன் பிறகு நான் அவனுக்கு இன்னும் அதிகமாக வழங்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகின்றான். </span>
<span>74:16 ஒருபோதுமில்லை! அவன் நம்முடைய வசனங்களுடன் பகைமை கொண்டவனாக இருக்கின்றான். </span>
<span>74:17 நான் அவனை அதிவிரைவில் வேதனையின் </span>
<span>74:18 சிகரத்திற்கு ஏறச் செய்வேன். அவன் சிந்தித்தான்; சில விஷயங்களைப் புனைந்துகூற முயன்றான்! </span>
<span>74:19 இறைவன் அவனை அழிக்கட்டும். அவன் எப்படிப்பட்ட விஷயங்களைப் புனைந்து கூற முற்பட்டுவிட்டான். </span>
<span>74:20 ஆம்! இறைவன் அவனை அழிக்கட்டும். எப்படிப்பட்ட விஷயங்களைப் புனைந்துரைக்க அவன் முற்பட்டு விட்டான்!  </span>
<span>74:21 பிறகு (மக்களைப்) பார்த்தான்;</span>
<span>74:22 பிறகு புருவத்தை நெரித்தான். பின்னர், முகத்தைச் சுளித்தான்; </span>
<span>74:23 பிறகு, திரும்பிச் சென்றான்; மேலும், தற்பெருமை கொண்டான்; </span>
<span>74:24 இறுதியில் கூறினான்: “இது ஒன்றுமில்லை; ஒரு சூனியம்தான்: முன்பிருந்தே சொல்லப்பட்டு வருவதுதான்! </span>
<span>74:25 இது ஒரு மனித வாக்கேதான்!” </span>
<span>74:26 அதிவிரைவில் நான் அவனை நரகத்தில் வீசி எறிவேன். </span>
<span>74:27 மேலும், அந்த நரகம் என்னவென்று நீர் அறிவீரா, என்ன? </span>
<span>74:28 அது இருக்கவும் விடாது; விட்டும் வைக்காது! </span>
<span>74:29 அது சருமத்தைக் கரித்துவிடக்கூடியது. </span>
<span>74:30 பத்தொன்பது பேர் காவலர்களாய் அதற்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். </span>
<span>74:31 நாம் வானவர்களையே இந்த நரகத்தின் காவலர்களாய் ஆக்கியுள்ளோம். அவர்களின் இந்த எண்ணிக்கையை நிராகரிப்பாளர்களுக்கு சோதனையாக ஆக்கியுள்ளோம். எதற்காகவெனில், வேதம் வழங்கப்பட்ட மக்களுக்கு உறுதி ஏற்படுவதற்காகவும் இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகமாவதற்காகவும், மேலும், வேதம் வழங்கப்பட்டவர்களும் நம்பிக்கையாளர்களும் எவ்வித ஐயத்திற்கும் ஆளாகக்கூடாது என்பதற்காகவும், மேலும், நெஞ்சில் நோய் உள்ளவர்களும், நிராகரிப்பாளர்களும் “அல்லாஹ் இந்த விநோதமான சொல்லால் என்ன நாடுகின்றான்?” என்று கேட்பதற்காகவும்தான்! இவ்வாறு அல்லாஹ் தான் நாடுபவர்களை வழிகேட்டில் தள்ளிவிடுகின்றான். மேலும், தான் நாடுபவர்களுக்கு நேர்வழியை அளிக்கின்றான். மேலும், உம் இறைவனின் படைகளை அவனைத் தவிர வேறெவரும் அறிந்திட மாட்டார் நரகத்தைப் பற்றிய இந்த விவரம் எடுத்துரைக்கப்பட்டதன் நோக்கம், மக்களுக்கு இதன் மூலம் ஓர் அறிவுரை கிடைக்கட்டும் என்பதே அன்றி வேறில்லை. </span>
<span>74:32 ஒருபோதுமில்லை! சந்திரன் மீது சத்தியமாக! </span>
<span>74:33 இரவின் மீதும் சத்தியமாக, அது திரும்பிச் செல்லும்போது! </span>
<span>74:34 விடியற்காலையின் மீது சத்தியமாக, அது பிரகாசமடையும்போது! </span>
<span>74:35 இந்த நரகம் மிகப்பெரியவற்றுள் ஒன்றாகும். </span>
<span>74:36 அது மனிதர்களை அச்சுறுத்தக்கூடியதாகும்; </span>
<span>74:37 உங்களில் முன்னேறிச் செல்வதற்கோ பின்தங்கி விடுவதற்கோ விரும்பும் ஒவ்வொரு மனிதரையும் அச்சுறுத்தக் கூடியதாகும். </span>
<span>74:38 ஒவ்வொரு மனிதனும் தன் சம்பாத்தியத்திற்குப் பகரமாக பிணையாக இருக்கின்றான்; </span>
<span>74:39 வலப்பக்கத்தாரைத் தவிர!</span>
<span>74:40 அவர்கள் சொர்க்கத்தில் இருப்பார்கள். </span>
<span>74:41 அவர்கள் குற்றவாளிகளிடம் கேட்பார்கள்: </span>
<span>74:42 “உங்களை நரகத்திற்குக் கொண்டு வந்தது எது?” </span>
<span>74:43 அதற்கு அவர்கள் கூறுவார்கள்: “தொழக்கூடியவர்களில் நாங்கள் இருக்கவில்லை. </span>
<span>74:44 நாங்கள் ஏழைகளுக்கு உணவு அளிக்கவில்லை. </span>
<span>74:45 மேலும், சத்தியத்திற்கெதிராகப் பேசுகிறவர்களுடன் நாங்களும் சேர்ந்து அதில் ஈடுபட்டோம். </span>
<span>74:46 மேலும், கூலி கொடுக்கும் நாளினைப் பொய்யென்று கூறி வந்தோம்; </span>
<span>74:47 அந்த உறுதியான விஷயம் எங்களை வந்தடையும் வரை!” </span>
<span>74:48 அந்நேரத்தில் பரிந்துரை செய்வோரின் பரிந்துரை எதுவும் அவர்களுக்குச் சிறிதும் பயனளிக்காது. </span>
<span>74:49 இவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? இவர்கள் இந்த அறிவுரையைப் புறக்கணித்துக் கொண்டிருக்கின்றார்களே!</span>
<span>74:50 மிரண்டு விரண்டோடும் காட்டுக் கழுதைகளைப் போல </span>
<span>74:51 அதுவும் சிங்கத்தைக் கண்டு மிரண்டு (விரண்டோடும் காட்டுக் கழுதைகளைப் போல இருக்கின்றனர்);</span>
<span>74:52 அவர்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய பெயருக்குத் திறந்த மடல் அனுப்பப்பட வேண்டும் என்று விரும்புகின்றார்கள். </span>
<span>74:53 ஒருபோதுமில்லை! உண்மை யாதெனில், இவர்கள் மறுமையைக் குறித்துப் பயப்படுவதில்லை. </span>
<span>74:54 ஒருபோதுமில்லை! இது ஓர் அறிவுரையே ஆகும். </span>
<span>74:55 இனி எவர் விரும்புகின்றாரோ அவர் இதிலிருந்து படிப்பினை பெற்றுக்கொள்ளட்டும். </span>
<span>74:56 இவர்கள் எந்தப் படிப்பினையும் பெறமாட்டார்கள்; அல்லாஹ் அதை நாடினாலே தவிர! அஞ்சப்படுவதற்குத் தகுதியுடையவன் அவன் ஒருவனே! தனக்கு அஞ்சுபவர்களை மன்னிப்பதற்கு அவனே தகுதியுடையவனாக இருக்கின்றான். </span>
</div><div>
<span>அல் கியாமா</span>
<span>75:1 இல்லை! நான் மறுமைநாளின் மீது சத்தியம் செய்கின்றேன். </span>
<span>75:2 இல்லவே இல்லை; இடித்துரைக்கும் மனத்தின் மீது நான் சத்தியம் செய்கிறேன். </span>
<span>75:3 அவனுடைய எலும்புகளை நம்மால் ஒன்றுதிரட்ட முடியாது என்று மனிதன் கருதிக் கொண்டிருக்கின்றானா?  </span>
<span>75:4 ஏன் முடியாது? நாமோ அவனுடைய விரல்களின் நுனியைக்கூட மிகத் துல்லியமாக அமைப்பதற்கு ஆற்றல் பெற்றுள்ளோம். </span>
<span>75:5 ஆனால், மனிதன் எதிர்காலத்திலும் தீமைகளைச் செய்துகொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகின்றான். </span>
<span>75:6 “அந்த மறுமைநாள் எப்போது வரும்?” என்று அவன் கேட்கின்றான். </span>
<span>75:7 பிறகு, பார்வை நிலைகுத்தி விடும்போது, </span>
<span>75:8 மேலும், சந்திரன் ஒளி குன்றிப் போகும்போது,</span>
<span>75:9 மேலும் சந்திரனும், சூரியனும் ஒன்றாக இணைக்கப்படும்போது; </span>
<span>75:10 அந்நாளில் இதே மனிதன் “நான் எங்கே சென்று ஓடி ஒளிவது?” என்று கேட்பான். </span>
<span>75:11 ஒருபோதுமில்லை! அங்கு எந்தப் புகலிடமும் இருக்காது. </span>
<span>75:12 அந்த நாளில் உன் அதிபதியின் முன்பே சென்றடைய வேண்டியிருக்கும். </span>
<span>75:13 அந்த நாளில் மனிதனுக்கு, அவனுடைய முந்தைய, பிந்தைய செயல்கள் அனைத்தும் எடுத்துக் காண்பிக்கப்படும். </span>
<span>75:14 ஏன், மனிதன் தன்னைப் பற்றி நன்கு அறிந்தவனாக இருப்பான்; </span>
<span>75:15 அவன் எவ்வளவுதான் சாக்கு போக்குகளைக் கூறினாலும் சரியே! </span>
<span>75:16 (நபியே!) இந்த வஹியை* அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர்! </span>
<span>75:17 அதை நினைவில் நிறுத்தச் செய்வதும், ஓதும்படிச் செய்வதும் நமது பொறுப்பாகும்;</span>
<span>75:18 ஆகையால் நாம் இதனை ஓதிக் காட்டும்போது அவ்வாறு ஓதிக்காட்டுவதை நீர் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருக்கவும். </span>
<span>75:19 பின்னர், இதன் கருத்தை விளக்குவதும் நமது பொறுப்பே ஆகும். </span>
<span>75:20 ஒருபோதுமில்லை. உண்மை யாதெனில், நீங்கள் உடனடியாகக் கிடைக்கக் கூடியதை (அதாவது இம்மையை) நேசிக்கின்றீர்கள்; </span>
<span>75:21 மறுமையை விட்டுவிடுகின்றீர்கள். </span>
<span>75:22 அந் நாளில் சில முகங்கள் பொலிவுடன் விளங்கும்; </span>
<span>75:23 தம்முடைய அதிபதியைப் பார்த்த வண்ணமிருக்கும். </span>
<span>75:24 வேறுசில முகங்கள் துயரமடைந்திருக்கும். </span>
<span>75:25 மேலும், இடுப்பை முறிக்கும் அனுபவங்கள் அவற்றிற்கு ஏற்படப்போகின்றன என்று புரிந்து கொண்டிருக்கும். </span>
<span>75:26 ஒருபோதுமில்லை! உயிர் தொண்டை வரை எட்டும்போது, </span>
<span>75:27 மேலும், “மந்திரித்து ஊதுபவர் எவரேனும் உண்டா?” என்று கேட்கப்படும்போது, </span>
<span>75:28 மேலும் இது உலகைவிட்டுப் பிரியும் நேரம் என்று மனிதன் புரிந்துகொள்ளும் போது, </span>
<span>75:29 கெண்டைக்கால், கெண்டைக்காலுடன் பின்னிப் பிணையும் போது, </span>
<span>75:30 அந்நாளில்தான் உன் அதிபதியின் பக்கம் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும். </span>
<span>75:31 ஆனால், அவன் உண்மையென ஏற்கவுமில்லை; தொழவுமில்லை. </span>
<span>75:32 மாறாகப் பொய்யென வாதிட்டான்; திரும்பிச் சென்றான். </span>
<span>75:33 பின்னர், ஆணவம் கொண்டு தன் குடும்பத்தாரிடம் சென்றுவிட்டான். </span>
<span>75:34 இந்த நடத்தை உனக்குத்தான் பொருத்தமானது; உனக்குத்தான் அழகானது! </span>
<span>75:35 ஆம்! இந்த நடத்தை உனக்குத்தான் பொருத்தமானது; உனக்குத்தான் அழகானது!</span>
<span>75:36 மனிதன் வெறுமனே விட்டுவிடப்படுவான் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றானா என்ன? </span>
<span>75:37 (கருவறையில்) செலுத்தப்படும் அற்பமான இந்திரியத் துளியாய் அவன் இருக்கவில்லையா? </span>
<span>75:38 பின்னர் அவன் ஓர் இரத்தக்கட்டியாக ஆனான். பின்னர், அல்லாஹ் அவனுடைய உடலைப் படைத்தான். அவனுடைய உறுப்புகளைப் பொருத்தமாக அமைத்தான். </span>
<span>75:39 பிறகு, அவனிலிருந்து ஆண்பெண் என இரு இனங்களை உருவாக்கினான். </span>
<span>75:40 இத்தகைய இறைவன் இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பித்திட ஆற்றலுடையவன் இல்லையா, என்ன?</span>
</div><div>
<span>அத்தஹ்ர்</span>
<span>76:1 மனிதன் மீது, அவன் குறிப்பிடத்தக்கதொரு பொருளாகவே இல்லாதிருந்த ஒரு நீண்ட காலகட்டம் செல்லவில்லையா?</span>
<span>76:2 நாம் மனிதனை கலக்கப்பட்ட ஓர் இந்திரியத் துளியிலிருந்து படைத்தோம்; நாம் அவனைச் சோதிக்க வேண்டும் என்பதற்காக! மேலும், இந் நோக்கத்திற்காக நாம் அவனைச் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம். </span>
<span>76:3 நாம் அவனுக்கு வழிகாட்டினோம். இனி, அவன் நன்றியுள்ளவனாகவும் இருக்கலாம் அல்லது நன்றி கொன்றவனாகவும் இருக்கலாம். </span>
<span>76:4 நன்றி கொல்பவர்களுக்குத் திண்ணமாக, நாம் சங்கிலிகளையும், விலங்குகளையும், கொழுந்துவிட்டெரியும் நெருப்பையும் தயார் செய்து வைத்திருக்கின்றோம். </span>
<span>76:5 நன்மக்கள் (சுவனத்தில்) கிண்ணங்களிலிருந்து கற்பூரம் கலந்திருக்கும் மது அருந்துவார்கள். </span>
<span>76:6 அது ஓடிக் கொண்டிருக்கும் ஊற்றின் நீராகும். இதன் நீரைக் கலந்தே அல்லாஹ்வின் அடியார்கள் மது அருந்துவார்கள். மேலும், தாம் விரும்பும் இடங்களுக்கு அதன் கிளைகளை எளிதாக ஏற்படுத்திக் கொள்வார்கள். </span>
<span>76:7 இவர்கள் எத்தகையவர்கள் என்றால், (இந்த உலகத்தில்) நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொண்டும் அனைத்துத் திசைகளிலும் துன்பங்கள் பரவக்கூடிய அந்த (மறுமை) நாளினைக் குறித்து அஞ்சிக் கொண்டுமிருப்பார்கள். </span>
<span>76:8 மேலும், அல்லாஹ்வின் மீதுள்ள அன்பினால் வறியவருக்கும், அநாதைக்கும், கைதிக்கும் உணவளிக்கின்றார்கள். </span>
<span>76:9 (மேலும், அவர்களிடம் கூறுகின்றார்கள்:) “நாங்கள் அல்லாஹ்வுக்காகவே உங்களுக்கு உணவளிக்கின்றோம். நாங்கள் உங்களிடமிருந்து எந்தப் பிரதிபலனையும், நன்றியையும் எதிர்பார்க்கவில்லை. </span>
<span>76:10 நீண்ட, கடும் துன்பத்திற்குரிய ஒருநாளின் வேதனையைக் குறித்துதான் எங்கள் இறைவனிடம் நாங்கள் அஞ்சுகின்றோம்.” </span>
<span>76:11 எனவே, அல்லாஹ் அவர்களை அந்நாளின் தீங்கிலிருந்து காப்பாற்றிக் கொள்வான்; அவர்களுக்குப் பொலிவையும் மகிழ்வையும் அளிப்பான். </span>
<span>76:12 மேலும், அவர்களின் பொறுமைக்குப் பகரமாக சுவனத்தையும் பட்டாடையையும் அவர்களுக்கு வழங்குவான். </span>
<span>76:13 அங்கு அவர்கள் உயர்ந்த கட்டில்களில் தலையணைகள் வைத்து சாய்ந்திருப்பார்கள். வெயிலின் வெப்பமோ, கடும் குளிரோ அங்கு அவர்களைத் துன்புறுத்தாது. </span>
<span>76:14 சுவனத்தின் நிழல்கள் அவர்களின் மீது தாழ்ந்திருக்கும். மேலும், அதன் கனிகள் எப்போதும் (அவர்கள் விரும்பியபடி பறித்துக் கொள்ளும் அளவில்) அவர்களின் அருகில் இருக்கும். </span>
<span>76:15 வெள்ளிப் பாத்திரங்களும் கண்ணாடிக் குவளைகளும் அவர்களுக்கு முன்னிலையில் சுற்றிச் சுற்றி வருமாறு செய்யப்பட்டிருக்கும். </span>
<span>76:16 அந்தக் கண்ணாடிகளும் வெள்ளி வகையைச் சேர்ந்ததாக இருக்கும். அவற்றைச் (சுவனத்தின் ஊழியர்கள்) சரியான அளவில் நிரப்பியிருப்பார்கள். </span>
<span>76:17 அந்தக் கிண்ணங்களில் இருந்து இஞ்சிச்சுவை கலந்திருக்கும் பானங்கள் அவர்களுக்கு அங்கு குடிப்பதற்கு வழங்கப்படும். </span>
<span>76:18 அது சுவனத்தில் உள்ள ஒரு நீரூற்றாகும். அதன் பெயர் ‘ஸல்ஸபீல்.’ </span>
<span>76:19 மாறாத இளமையுடைய சிறுவர்கள் அவர்களுக்(கு ஊழியம் புரிவதற்)காக சுற்றித் திரிந்து கொண்டேயிருப்பார்கள். நீர் அவர்களைப் பார்த்தால் தெளித்துக் கிடக்கும் முத்துக்கள் என்று எண்ணுவீர். </span>
<span>76:20 அங்கு நீர் எந்தப் பக்கம் நோக்கினாலும் அருட்கொடைகள் நிறைந்திருப்பதையும், மாபெரும் பேரரசுக்கான அத்தனை சாதனங்களையும் காண்பீர். </span>
<span>76:21 மென்மையான மற்றும் கனமான பச்சைநிறப் பட்டாடைகள் அவர்களின் மீதிருக்கும். மேலும், அவர்களுக்கு வெள்ளிக்காப்புகள் அணிவிக்கப்படும். அவர்களின் அதிபதி அவர்களுக்குத் தூய்மை மிக்க பானத்தைப் புகட்டுவான். </span>
<span>76:22 திண்ணமாக, இதுதான் உங்களுக்குரிய கூலி. உங்களுடைய உழைப்பு மதிப்புக்குரியதாக ஆகிவிட்டிருக்கிறது. </span>
<span>76:23 (நபியே!) நாம்தாம் உம்மீது இந்தக் குர்ஆனை சிறிது சிறிதாக இறக்கியிருக்கின்றோம். </span>
<span>76:24 எனவே, நீர் உம் அதிபதியின் கட்டளைப்படி பொறுமையை மேற்கொள்ளும்! இவர்களில் தீயசெயல் செய்பவனுக்கோ சத்தியத்தை நிராகரிப்பவனுக்கோ இணங்கிப் போகாதீர்! </span>
<span>76:25 உம் அதிபதியின் பெயரைக் காலையிலும் மாலையிலும் நினைவுகூரும். </span>
<span>76:26 மேலும், இரவிலும் அவனது திருமுன் ஸஜ்தா செய்யும்! மேலும், இரவின் நீண்ட நேரங்களில் அவனைத் துதித்துக்கொண்டிரும். </span>
<span>76:27 இவர்கள் உடனடியாகக் கிடைக்கக்கூடியதை (இம்மையை) நேசிக்கிறார்கள். ஆனால், பிறகு வரவிருக்கும் கடினமான நாளினை அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். </span>
<span>76:28 நாமே இவர்களைப் படைத்தோம். இவர்களுடைய எலும்பு மூட்டுக்களை உறுதிப்படுத்தினோம். நாம் நாடினால், இவர்களின் வடிவங்களை மாற்றி அமைத்துவிடுவோம். </span>
<span>76:29 இது ஒரு நல்லுரையாகும். இனி, விருப்பமுள்ளவர் தன்னுடைய அதிபதியின் பக்கம் செல்லும் வழியை மேற்கொள்ளட்டும். </span>
<span>76:30 மேலும், நீங்கள் விரும்புவதால் எதுவும் நடக்கப்போவதில்லை, அல்லாஹ் நாடினால் அன்றி! திண்ணமாக, அல்லாஹ் பேரறிவாளனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். </span>
<span>76:31 தான் நாடுவோரை தனது கருணையில் நுழையச் செய்கின்றான். மேலும், கொடுமைக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயார் செய்து வைத்திருக்கின்றான். </span>
</div><div>
<span>அல் முர்ஸலாத்</span>
<span>77:1 தொடர்ந்து அனுப்பப்படுகின்ற காற்றுகள் மீது சத்தியமாக; </span>
<span>77:2 பிறகு, புயல் வேகத்தில் வீசுகின்றவற்றின் மீது சத்தியமாக; </span>
<span>77:3 (மேகங்களை) பரப்புகின்றவற்றின் மீது சத்தியமாக; </span>
<span>77:4 பிறகு, அவற்றைத் துண்டு துண்டாகப் பிளக்கின்றவற்றின் மீது சத்தியமாக;  </span>
<span>77:5 பிறகு, (இதயங்களில் இறைவனின்) நினைவை உண்டாக்குபவைமீது சத்தியமாக; </span>
<span>77:6 மன்னிப்புப் பெறுவதற்காக அல்லது அச்சமூட்டி எச்சரிப்பதற்காக! </span>
<span>77:7 எதைப் பற்றி உங்களிடம் வாக்களிக்கப்படுகின்றதோ, அது திண்ணமாக நிகழக்கூடியதே!</span>
<span>77:8 பிறகு, நட்சத்திரங்கள் ஒளியிழந்து போகும்பொழுது,</span>
<span>77:9 வானம் பிளக்கப்படும்பொழுது, </span>
<span>77:10 மலைகள் தூள்தூளாக் கப்படும்பொழுது, </span>
<span>77:11 இறைத்தூதர்கள் ஆஜராகும் நேரம் வரும் பொழுது (அது நிகழ்ந்துவிடும்). </span>
<span>77:12 எந்த நாளுக்காக இந்தக் காரியம் பிற்படுத்தப்பட்டுள்ளது? </span>
<span>77:13 தீர்ப்பு நாளுக்காகத் தான்! </span>
<span>77:14 அந்தத் தீர்ப்புநாள் என்னவென்று உமக்குத் தெரியுமா? </span>
<span>77:15 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!</span>
<span>77:16 நாம் முன் சென்றோரை அழிக்கவில்லையா, என்ன?</span>
<span>77:17 பின்னர் அவர்களின் அடிச்சுவட்டில்தானே பின்வருவோரையும் நடக்கச் செய்வோம்! </span>
<span>77:18 குற்றவாளிகளிடம் நாம் இப்படித்தான் நடந்துகொள்கின்றோம். </span>
<span>77:19 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!</span>
<span>77:20 என்ன, நாம் உங்களை அற்பமானதொரு நீரிலிருந்து படைக்கவில்லையா? </span>
<span>77:21 மேலும், அதனை பாதுகாப்பான ஓர் இடத்தில் வைக்கவில்லையா </span>
<span>77:22 ஒரு குறிப்பிட்ட காலம்வரை. </span>
<span>77:23 (இதோ பாருங்கள்!) நாம் இதற்கான ஆற்றலுடையவர்கள்தாம். ஆம்! நாம் மிகச் சிறந்த ஆற்றல் கொண்டவர்கள்தாம்! </span>
<span>77:24 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!</span>
<span>77:25 நாம் பூமியை ஒன்று திரட்டி வைக்கக்கூடியதாக ஆக்கவில்லையா? </span>
<span>77:26 உயிருள்ளவர்களையும் மரித்தவர்களையும். </span>
<span>77:27 மேலும், மிக உயர்ந்த மலைகளை அதில் நாம் நாட்டவில்லையா? உங்களுக்கு சுவையான நீரைப் புகட்டவும் இல்லையா, என்ன? </span>
<span>77:28 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!</span>
<span>77:29 இப்போது செல்லுங்கள், நீங்கள் எதனைப் பொய்யென்று கூறிக் கொண்டிருந்தீர்களோ அதன் பக்கம்! </span>
<span>77:30 செல்லுங்கள், மூன்று கிளைகளையுடைய நிழலின் பக்கம்! </span>
<span>77:31 அது குளிரச் செய்யக்கூடியதுமன்று, தீச்சுவாலையிலிருந்து காப்பாற்றக்கூடியதுமன்று. </span>
<span>77:32 அந்த நெருப்பு, மாளிகைகளைப் போன்ற பெரும் பெரும் தீக்கங்குகளைக் கக்கும். </span>
<span>77:33 அது (குமுறி எழும்போது) மஞ்சள் நிற ஒட்டகங்களைப் போலிருக்கும். </span>
<span>77:34 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!</span>
<span>77:35 இது எத்தகைய நாள் எனில், இதில் அவர்கள் எதுவும் பேசமாட்டார்கள்; </span>
<span>77:36 எந்தச் சாக்குப்போக்கும் கூறிட அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படமாட்டாது. </span>
<span>77:37 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!</span>
<span>77:38 இது தீர்ப்பளிக்கும் நாளாகும். நாம் உங்களையும் உங்களுக்கு முன் சென்றவர்களையும் ஒன்று திரட்டியுள்ளோம். </span>
<span>77:39 இப்போது உங்களால் ஏதேனும் சூழ்ச்சி செய்ய முடியுமெனில், எனக்கெதிராக சூழ்ச்சி செய்து பாருங்கள்!</span>
<span>77:40 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!</span>
<span>77:41 இறையச்சம் கொண்டோர் (இன்று) நிழல்களிலும், ஊற்றுகளிலும் தங்கி வாழ்கிறார்கள். </span>
<span>77:42 மேலும், அவர்கள் விரும்பும் பழங்கள் (அவர்களுக்காக உள்ளன). </span>
<span>77:43 நன்கு உண்ணுங்கள்; பருகுங்கள்; நீங்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்குப் பரிசாக! </span>
<span>77:44 நாம் நல்லவர்களுக்கு இத்தகைய கூலியைத்தான் வழங்குகின்றோம். </span>
<span>77:45 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!</span>
<span>77:46 உண்ணுங்கள்; சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள், சில நாட்களுக்கு! உண்மையில் நீங்கள் குற்றவாளிகள்தாம். </span>
<span>77:47 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவு தான்! </span>
<span>77:48 “(அல்லாஹ்வின் திருமுன்) அடிபணிந்து விடுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் அடிபணிவதில்லை. </span>
<span>77:49 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்! </span>
<span>77:50 இனி, இதற்குப் பின் (இந்தக் குர்ஆனுக்குப்பின்) இவர்கள் எந்த வாக்கின் மீதுதான் நம்பிக்கை கொள்ளப் போகின்றார்கள்?</span>
</div><div>
<span>அந்நபா</span>
<span>78:1 இவர்கள் எதனைக் குறித்து வினவிக் கொள்கின்றார்கள்?</span>
<span>78:2 அந்த மாபெரும் செய்தியைக் குறித்தா? </span>
<span>78:3 அதைப்பற்றி இவர்கள் பல்வேறு முரண்பட்ட கருத்துகளைக் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். </span>
<span>78:4 ஒருபோதுமில்லை! வெகு விரைவில் அவர்களுக்குத் தெரிந்து விடும். </span>
<span>78:5 ஆம்; ஒருபோதுமில்லை! வெகு விரைவில் அவர்களுக்குத் தெரிந்துவிடும். </span>
<span>78:6 நாம் பூமியை விரிப்பாக்கவில்லையா? </span>
<span>78:7 மேலும், மலைகளை முளைகளாக ஊன்றி வைக்கவில்லையா? </span>
<span>78:8 மேலும், உங்களை (ஆண்பெண் எனும்) இணைகளாக நாம் படைக்கவில்லையா?</span>
<span>78:9 மேலும், உங்கள் உறக்கத்தை அமைதியளிக்கக் கூடியதாய் நாம் ஆக்கவில்லையா? </span>
<span>78:10 மேலும், நாம் இரவை மூடிக்கொள்ளக்கூடியதாய் ஆக்கவில்லையா? </span>
<span>78:11 மேலும், நாம் பகலை வாழ்க்கைத் தேவைகளைத் தேடிடும் நேரமாக்கவில்லையா?</span>
<span>78:12 மேலும், உங்களுக்கு மேலே உறுதியான ஏழு வானங்களை நாம் அமைக்கவில்லையா? </span>
<span>78:13 மேலும், அதிக வெப்பமும் ஒளியும் கொண்ட விளக்கையும் நாம் படைக்கவில்லையா? </span>
<span>78:14 மேலும், கார்முகில்களிலிருந்து மழையை நாம் பொழியச் செய்யவில்லையா? </span>
<span>78:15 தானியங்களையும் தாவரங்களையும் மற்றும்</span>
<span>78:16 அடர்ந்த தோட்டங்களையும் உருவாக்குவதற்காக!</span>
<span>78:17 திண்ணமாக, தீர்ப்புநாள் நிர்ணயிக்கப்பட்ட ஒரு நேரமாய் இருக்கின்றது; </span>
<span>78:18 (சூர்) எக்காளம் ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக(க் கிளம்பி) வருவீர்கள். </span>
<span>78:19 மேலும், வானம் திறந்துவிடப்படும்; இறுதியில் அது வாயில்கள் மயமாகி விடும்! </span>
<span>78:20 மேலும், மலைகள் நடத்திச் செல்லப்படும். அப்பொழுது அவை கானலாய்ப் போய்விடும். </span>
<span>78:21 திண்ணமாக, நரகம் பதுங்கித் தாக்கக்கூடியதாய் இருக்கிறது. </span>
<span>78:22 வரம்பு மீறியவர்களுக்கான இருப்பிடமாக உள்ளது. </span>
<span>78:23 அதில் அவர்கள் பல யுகங்கள் வீழ்ந்து கிடப்பார்கள். </span>
<span>78:24 அங்கு குளுமையையோ, குடிப்பதற்கேற்ற எந்த ஒரு பொருளின் சுவையையோ அவர்கள் சுவைக்க மாட்டார்கள். </span>
<span>78:25 கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர! </span>
<span>78:26 (இவை அவர்களின் இழிசெயல்களுக்கு) ஏற்ற கூலிதான்! </span>
<span>78:27 அவர்கள் கேள்விக் கணக்கு கேட்கப்படும் என்பதை நம்பக் கூடியவர்களாய் இருக்கவில்லை. </span>
<span>78:28 மேலும், அவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யென முற்றிலும் மறுத்து விட்டிருந்தார்கள். </span>
<span>78:29 அதே நேரத்தில் நாமோ அவர்களின் ஒவ்வொரு விஷயத்தையும் எண்ணி எண்ணி எழுதி வைத்திருந்தோம். </span>
<span>78:30 “இதோ, சுவையுங்கள்! உங்களுக்கு வேதனையைத் தவிர வேறெதனையும் நாம் அதிகமாக்கவே மாட்டோம்.”</span>
<span>78:31 திண்ணமாக, இறையச்சமுள்ளவர்களுக்கு வெற்றியளிக்கும் ஓர் இடம் இருக்கின்றது. </span>
<span>78:32 “தோட்டங்களும் திராட்சைகளும் </span>
<span>78:33 சமவயதுடைய கன்னிப்பெண்களும், </span>
<span>78:34 நிறைந்த கிண்ணமும் உள்ளன. </span>
<span>78:35 அங்கு வீணான பேச்சையோ, பொய்யுரையையோ அவர்கள் கேட்க மாட்டார்கள். </span>
<span>78:36 இது உம்முடைய அதிபதியிடமிருந்து கிடைத்த கூலியும் போதிய வெகுமதியுமாகும். </span>
<span>78:37 வானங்கள் மற்றும் பூமிக்கும் அவற்றிற்கிடைப்பட்ட ஒவ்வொன்றுக்கும் உரிமையாளனாகிய அந்தக் கருணைமிக்க இறைவனிடமிருந்து (கிடைத்த கூலியும் போதிய வெகுமதியுமாகும்). அவனுக்கு முன்னால் பேசுவதற்கு யாருக்கும் திராணி இல்லை.”</span>
<span>78:38 ரூஹும்* வானவர்களும் அணிவகுத்து நிற்கும் அந்நாளில் எவரும் பேசமாட்டார்; ஆனால், கருணைமிக்க இறைவன் எவருக்கு அனுமதி கொடுப்பானோ அவரையும், நேர்மையைச் சொல்பவரையும் தவிர! </span>
<span>78:39 அந்நாள் (வருவது) உண்மையாகும். எனவே, நாடியவர் தம்முடைய இறைவனின் பக்கம் மீளும் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். </span>
<span>78:40 நெருங்கிவிட்டிருக்கும் வேதனை குறித்துத் திண்ணமாக நாம் உங்களுக்கு எச்சரிக்கை செய்து விட்டோம். அந்நாளில் மனிதன் தன்னுடைய கைகளால் முன்னர் செய்தனுப்பிய அனைத்தையும் காண்பான். நிராகரித்தவனோ புலம்புவான்: “அந்தோ! நான் மண்ணாய் இருந்திருக்கக்கூடாதா?”</span>
</div><div>
<span>அந்நாஸிஆத்</span>
<span>79:1 ஆழ்ந்து பற்றியிழுக்கின்ற, </span>
<span>79:2 மேலும், மெதுவாக வெளிக்கொணர்கின்ற (வான)வர்கள்மீது சத்தியமாக! </span>
<span>79:3 மேலும், (பேரண்டத்தில்) அதிவேகமாக நீந்தித் திரிகின்ற </span>
<span>79:4 மேலும், (கட்டளைகளை நிறைவேற்றுவதில்) ஒருவருக்கொருவர் முந்துகின்றவர்கள் மீதும் சத்தியமாக! </span>
<span>79:5 பிறகு (இறைக்கட்டளைகளுக்கிணங்க) விவகாரங்களை முறைப்படி நிர்வகித்து வருகின்றவர்கள் மீதும் சத்தியமாக! </span>
<span>79:6 எந்த நாளில் பூகம்பத்தின் உலுக்கல் ஏற்படுமோ </span>
<span>79:7 அதன் பின்னர் இன்னொரு பூகம்பத்தின் உலுக்கல் ஏற்படுமோ </span>
<span>79:8 அந்த நாளில் சில இதயங்கள் பயந்து நடுநடுங்கிக் கொண்டிருக்கும். </span>
<span>79:9 அவர்களின் பார்வைகள் அச்சத்தால் கீழே தாழ்ந்துவிட்டிருக்கும். </span>
<span>79:10 இந்த மக்கள் கூறுகின்றார்கள்: “நாம் (இறந்த பிறகு) உண்மையில் பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு வரப்படு வோமா, </span>
<span>79:11 இற்றுப்போன எலும்புகளாய் நாம் ஆனாலுமா?” </span>
<span>79:12 இவர்கள் மேலும் கூறலானார்கள்: “அப்பொழுது இது பேரிழப்புக்குரிய திரும்பலாகத்தான் இருக்கும்.” </span>
<span>79:13  உண்மையில், இது ஓர் உரத்த அதட்டலாகத்தான் இருக்கும்.  </span>
<span>79:14 உடனே, இவர்கள் வெட்ட வெளியில் ஆஜராகி இருப்பார்கள்!</span>
<span>79:15 மூஸாவின் வரலாறு உமக்குக் கிடைத்ததா? </span>
<span>79:16 ‘துவா’ எனும் புனிதப் பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்துக் கூறினான்: </span>
<span>79:17 “ஃபிர்அவ்னிடம் செல்வீராக! திண்ணமாக, அவன் வரம்பு மீறிவிட்டான். </span>
<span>79:18 எனவே, நீர் (அவனிடம்) கூறும்: நீ தூய்மை பெற விரும்புகின்றாயா?</span>
<span>79:19 மேலும், உன் இறைவனின் பக்கம் செல்லும் வழியினை நான் உனக்குக் காண்பிக்கட்டுமா? அதன் மூலம் (அவனைக் குறித்து) உனக்குள் அச்சம் ஏற்படும்!”  </span>
<span>79:20 பிறகு, (மூஸா ஃபிர்அவ்னிடம் சென்று) அவனுக்குப் பெரும் சான்றினைக் காண்பித்தார். </span>
<span>79:21 ஆனால், அவன் அதனைப் பொய் எனக் கூறினான். மேலும், அவன் ஏற்க மறுத்தான். </span>
<span>79:22 பின்னர் சூழ்ச்சிகள் செய்திடத் திரும்பினான். </span>
<span>79:23 மேலும், மக்களை ஒன்று திரட்டினான். அவர்களை அழைத்து, </span>
<span>79:24 “நான்தான் உங்களின் மாபெரும் இறைவன்” எனக் கூறினான். </span>
<span>79:25 இறுதியில் அவனை மறுமை மற்றும் இம்மையின் வேதனையைக் கொண்டு அல்லாஹ் பிடித்தான். </span>
<span>79:26 அஞ்சி வாழும் ஒவ்வொருவருக்கும் உண்மையில் இதில் பெரும் படிப்பினை இருக்கின்றது. </span>
<span>79:27 உங்களைப் படைப்பது அதிகச் சிரமமான வேலையா? அல்லது வானத்தைப் படைப்பதா? </span>
<span>79:28 அல்லாஹ் அதனை நிர்மாணித்தான். அதன் முகட்டை நன்கு உயர்த்தினான். பிறகு அதைச் சமப்படுத்தினான். </span>
<span>79:29 மேலும், அதன் இரவை மூடி, அதன் பகலை வெளிப்படுத்தினான். </span>
<span>79:30 இதன் பின்னர், பூமியை அவன் விரித்தான்! </span>
<span>79:31 அதனுள்ளிலிருந்து அதன் தண்ணீரையும் மேய்ச்சலுக்கானவற்றையும் வெளிக்கொணர்ந்தான். </span>
<span>79:32 மேலும் (அதில்) மலைகளை ஊன்றி வைத்தான்; </span>
<span>79:33 உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் வாழ்வாதாரப் பொருள்களாய் ஆகும் பொருட்டு!</span>
<span>79:34 எனவே, மாபெரும் அமளி தோன்றும்போது, </span>
<span>79:35 அன்று மனிதன் தான் செய்த செயல்கள் அனைத்தையும் நினைத்துப் பார்ப்பான். </span>
<span>79:36 மேலும், பார்ப்பவர் ஒவ்வொருவர் கண்ணெதிரிலும் நரகம் திறந்து வைக்கப்படும். </span>
<span>79:37 எவன் வரம்பு மீறியிருந்தானோ </span>
<span>79:38 மேலும், உலக வாழ்வுக்கு முன்னுரிமை தந்தானோ </span>
<span>79:39 அவனுடைய இருப்பிடம் நரகமாகவே இருக்கும். </span>
<span>79:40 மேலும், எவன் தன்னுடைய அதிபதியின் முன்னிலையில் நிற்பது குறித்து அஞ்சினானோ இன்னும், தீய இச்சைகளைவிட்டுத் தனது மனத்தைத் தடுத்திருந்தானோ </span>
<span>79:41 அவனுடைய இருப்பிடம் சுவனமாக இருக்கும். </span>
<span>79:42 “அந்த இறுதிநேரம் எப்பொழுது வரும்?” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். </span>
<span>79:43 அந் நேரத்தைப் பற்றிக் கூறுவது உம்முடைய பணியல்ல! </span>
<span>79:44 அதைப் பற்றிய ஞானமோ அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கின்றது. </span>
<span>79:45 அந்நேரத்தை அஞ்சும் ஒவ்வொருவருக்கும் நீர் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவீர். </span>
<span>79:46 இவர்கள் அதனைக் கண்டு கொள்ளும் நாளில், ஒரு பிற்பகல் அல்லது முற்பகல் வரையில் மட்டுமே (இவ்வுலகில் அல்லது மரணநிலையில்) தாங்கள் தங்கியிருந்தது போன்று அவர்களுக்குத் தோன்றும். </span>
</div><div>
<span>அபஸ</span>
<span>80:1 முகம் சுளித்தார்; மேலும், புறக்கணித்தார், </span>
<span>80:2 அந்தப் பார்வையிழந்தவர் அவரிடம் வந்ததற்காக! </span>
<span>80:3 அவர் சீர்திருந்தக்கூடும் </span>
<span>80:4 அல்லது அறிவுரைக்குச் செவி சாய்க்கக்கூடும்; அந்த அறிவுரை அவருக்குப் பயனளித்திருக்கும் என்பது பற்றி உமக்குத் தெரியுமா, என்ன? </span>
<span>80:5 எவன் அலட்சியம் செய்கின்றானோ </span>
<span>80:6 அவன் பக்கம் நீர் கவனம் செலுத்துகின்றீர். </span>
<span>80:7 அவன் திருந்தாவிட்டால் அதற்கு நீர் பொறுப்பாளியா, என்ன? </span>
<span>80:8 மேலும், எவர் உம்மிடம் விரைந்து வருகின்றாரோ </span>
<span>80:9 (இறைவனை) அஞ்சியவராக </span>
<span>80:10 அவரைக் குறித்து நீர் பாராமுகமாக இருந்துவிடுகின்றீர்! </span>
<span>80:11 அவ்வாறன்று! நிச்சயமாக, இது ஓர் அறிவுரையாகும். </span>
<span>80:12 எவர் விரும்புகின்றாரோஅவர் இதனை ஏற்றுக் கொள்ளட்டும். </span>
<span>80:13 இது கண்ணியமிக்க,</span>
<span>80:14 உயர்வான, தூய்மையான ஏடுகளில் பொறிக்கப்பட்டு உள்ளது. </span>
<span>80:15 (அந்த ஏடுகள்) எழுத்தர்களின் கைகளில் உள்ளன. </span>
<span>80:16 (அந்த எழுத்தர்கள்) கண்ணியம் மிகுந்தவர்கள், நல்லவர்கள். </span>
<span>80:17 மனிதன் மீது சாபம் உண்டாகட்டும்! அவன் சத்தியத்தை எத்துணைக் கடுமையாக மறுப்பவனாய் இருக்கின்றான்! </span>
<span>80:18 அல்லாஹ், அவனை எதிலிருந்து படைத்திருக்கின்றான்? </span>
<span>80:19 ஒரு துளி இந்திரியத்திலிருந்துதானே அல்லாஹ் அவனைப் படைத்தான்! பின்னர், அவனுடைய விதியை நிர்ணயித்தான். </span>
<span>80:20 பிறகு, வாழ்வின் பாதையை அவனுக்கு எளிதாக்கினான். </span>
<span>80:21 பிறகு, அவனை மரணமடையச் செய்தான்; மேலும், மண்ணறையில் கொண்டு சேர்த்தான். </span>
<span>80:22 பிறகு, அவன் நாடும்போது அவனை மீண்டும் உயிர் பெற்றெழச் செய்வான். </span>
<span>80:23 ஒருபோதுமில்லை! அல்லாஹ் அவன் மீது விதித்திருந்த கடமைகளை அவன் நிறைவேற்றவில்லை! </span>
<span>80:24 பிறகு, மனிதன் தனது உணவின் பக்கம் சற்று நோட்டமிடட்டும். </span>
<span>80:25 நிச்சயமாக, நாம் நீரை நிறையப் பொழிந்தோம். </span>
<span>80:26  பின்னர், வியக்கத்தக்க முறையில் பூமியைப் பிளந்தோம். </span>
<span>80:27 பிறகு, அதில் தானியங்களையும், </span>
<span>80:28 திராட்சைகளையும், காய்கறிகளையும்,</span>
<span>80:29 ஆலிவ் மற்றும் பேரீச்சை மரங்களையும், </span>
<span>80:30 அடர்ந்த தோட்டங்களையும், </span>
<span>80:31 விதவிதமான கனிகளையும் மற்றும் புற்பூண்டுகளையும் முளைக்கச் செய்தோம், </span>
<span>80:32 உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் வாழ்வதாராப் பொருட்களாகும் பொருட்டு!</span>
<span>80:33 இறுதியில், காதைச் செவிடாக்கும் அந்தப் பேரோசை முழங்கும்போது </span>
<span>80:34 அந்நாளில் மனிதன் விரண்டோடுவான் தன் சகோதரனை விட்டும் </span>
<span>80:35 தாயையும் தந்தையையும் விட்டும்</span>
<span>80:36 தன்னுடைய மனைவியையும் குழந்தைகளையும் விட்டும். </span>
<span>80:37 அவர்களில் ஒவ்வொருவருக்கும் அந்நாளில் தன்னைத் தவிர வேறெவரைப் பற்றியும் கவனம் செலுத்தமுடியாத நிலை வந்தே தீரும்! </span>
<span>80:38 சில முகங்கள் அந்நாளில் பளிச்சிட்டுக் கொண்டிருக்கும்; </span>
<span>80:39 சிரித்துக் கொண்டும் மலர்ச்சியுடனும் இருக்கும். </span>
<span>80:40 மேலும், அந்நாளில் வேறு சில முகங்களில் புழுதி படிந்திருக்கும். </span>
<span>80:41 அவற்றில் இருளும் கருமையும் கப்பியிருக்கும். </span>
<span>80:42 அவர்கள்தாம் நிராகரிப்பாளர்கள்; தீயவர்கள். </span>
</div><div>
<span>அத்தக்வீர்</span>
<span>81:1 சூரியன் சுருட்டப்பட்டுவிடும்போது, </span>
<span>81:2 மேலும், தாரகைகள் உதிர்ந்து விடும்போது, </span>
<span>81:3 மேலும், மலைகள் நடத்திச் செல்லப்படும்போது, </span>
<span>81:4 மேலும், பத்து மாத நிறைகர்ப்ப ஒட்டகங்கள் அப்படியே விட்டு விடப்படும்போது, </span>
<span>81:5 மேலும், வன விலங்குகள் ஒன்று திரட்டப்படும்போது,</span>
<span>81:6 மேலும், கடல்கள் கொளுத்தப்படும்போது, </span>
<span>81:7 மேலும், உயிர்கள் (உடல்களுடன்) ஒன்றிணைக்கப்படும்போது, </span>
<span>81:8 மேலும், உயிருடன் புதைக்கப்பட்ட சிறுமியிடம் கேட்கப்படும்போது, </span>
<span>81:9 எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் என்று </span>
<span>81:10 மேலும், வினைச் சுவடிகள் விரிக்கப்படும்போது, </span>
<span>81:11 மேலும், வானத் திரை அகற்றப்படும்போது, </span>
<span>81:12 மேலும், நரகம் எரிக்கப்படும்போது </span>
<span>81:13 மேலும், சுவனம் அருகே கொண்டு வரப்படும்போது, </span>
<span>81:14 அந்நேரத்தில் ஒவ்வொரு மனிதனும் எதனைக் கொண்டு வந்துள்ளான் என்பதை அறிந்து கொள்வான். </span>
<span>81:15 அவ்வாறில்லை! மீண்டும் மீண்டும் திரும்பி வரக்கூடிய தாரகைகள்மீதும்,</span>
<span>81:16 மறையக்கூடிய தாரகைகள் மீதும், </span>
<span>81:17 விடை பெற்றுச் செல்லும் இரவின் மீதும், </span>
<span>81:18 புலரும் வைகறையின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன். </span>
<span>81:19 உண்மையில், இது கண்ணியமிக்க தூதர் ஒருவரின் வாக்காகும். </span>
<span>81:20 அவர் வலிமையுடையவர்; அர்ஷûக்குரியவனிடம் உயர் மதிப்பு பெற்றவர். </span>
<span>81:21 அங்கு அவருடைய கட்டளை ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அவர் நம்பிக்கைக்குரியவராயும் இருக்கின்றார். </span>
<span>81:22 மேலும், (மக்காவாசிகளே!) உங்கள் நண்பர் பைத்தியக்காரர் அல்லர். </span>
<span>81:23 திண்ணமாக, அவர் அந்தத் தூதரை தெளிவான அடிவானத்தில் கண்டார். </span>
<span>81:24 மேலும், அவர் மறைவான உண்மைகள் (எனும் இந்த அறிவை மக்களிடம் எடுத்துக்கூறும்) விஷயத்தில் கஞ்சர் அல்லர். </span>
<span>81:25 மேலும், இது விரட்டியடிக்கப்பட்ட ஷைத்தானின் சொல்லும் அன்று. </span>
<span>81:26 பின்னர், நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கின்றீர்கள்? </span>
<span>81:27 இதுவோ அனைத்துலக மக்களுக்கும் உரிய ஓர் அறிவுரையாகும்; </span>
<span>81:28 உங்களில், நேர்வழியில் நடந்திட விரும்பும் ஒவ்வொருவருக்கும் உரியது. </span>
<span>81:29 மேலும், நீங்கள் நாடுவதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை, பிரபஞ்சம் அனைத்திற்கும் அதிபதியான அல்லாஹ் நாடாத வரையில்!</span>
</div><div>
<span>அல் இன்ஃபிதார்</span>
<span>82:1 வானம் வெடித்து விடும்போது </span>
<span>82:2 மேலும், தாரகைகள் உதிர்ந்துவிடும்போது </span>
<span>82:3 மேலும், கடல்கள் பிளக்கப்படும்போது </span>
<span>82:4 மேலும், அடக்கத்தலங்கள் திறந்துவிடப்படும்போது</span>
<span>82:5 ஒவ்வொரு மனிதனும் தான் முன்பும் பின்பும் செய்த செயல்கள் அனைத்தையும் அப்போது நன்கு அறிந்துகொள்வான். </span>
<span>82:6 மனிதனே! அருட்கொடையாளனாகிய உன் இறைவனைக் குறித்து உன்னை ஏமாற்றத்தில் வீழ்த்தியது எது? </span>
<span>82:7 அவனே உன்னைப் படைத்தான்; உன்னைக் குறைகள் எதுவுமின்றிச் செம்மைப்படுத்தினான்; உனக்குப் பொருத்தமான உறுப்புகளை அளித்தான். </span>
<span>82:8 மேலும், தான் நாடிய உருவத்தில் உன்னை ஒருங்கிணைத்து உண்டாக்கினான். </span>
<span>82:9 ஒருபோதும் அவ்வாறில்லை! மாறாக, (உண்மை யாதெனில்) கூலி கொடுக்கப்படுவதை நீங்கள் பொய்யெனத் தூற்றுகின்றீர்கள். </span>
<span>82:10 நிச்சயமாக உங்கள் மீது கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். </span>
<span>82:11 அவர்களோ கண்ணியமிக்க எழுத்தர்களாவர்; </span>
<span>82:12 உங்களுடைய ஒவ்வொரு செயலையும் அறிகின்றார்கள். </span>
<span>82:13 திண்ணமாக, நல்லவர்கள் இன்பத்தில் திளைத்திருப் பார்கள். </span>
<span>82:14 மேலும், சந்தேகமின்றி, தீயவர்கள் நரகத்துக்குச் செல்வார்கள். </span>
<span>82:15 கூலி கொடுக்கப்படும் நாளில், அதில் அவர்கள் நுழைவார்கள். </span>
<span>82:16 மேலும், அதிலிருந்து அவர்கள் காணாமல் போய்விட முடியாது. </span>
<span>82:17 மேலும், கூலி கொடுக்கப்படும் நாள் என்னவென்று நீர் அறிவீரா? </span>
<span>82:18 ஆம்! கூலி கொடுக்கப்படும் அந்நாள் எத்தகையது என்று உமக்குத் தெரியுமா, என்ன?</span>
<span>82:19 அந்நாளில் எந்த மனிதனுக்காகவும் எதையும் செய்திட எவருக்கும் சக்தியிராது. தீர்ப்பு வழங்குவது, அந்நாளில் முற்றிலும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் இருக்கும். </span>
</div><div>
<span>அல் முதஃப்ஃபிஃபீன்</span>
<span>83:1 அளவில் மோசடி செய்பவருக்குக் கேடுதான்! </span>
<span>83:2 அவர்கள் எத்தகையோர் என்றால், மக்களிடமிருந்து அளந்து வாங்கும்போது நிறைவாக வாங்குகின்றார்கள். </span>
<span>83:3 அவர்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறைத்துக் கொடுக்கின்றார்கள். </span>
<span>83:4 திண்ணமாக, அவர்கள் ஒரு மாபெரும் நாளில் எழுப்பிக் கொண்டுவரப்படவிருக்கின்றார்கள் என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லையா? </span>
<span>83:5 ஒரு மாபெரும் நாளில்,</span>
<span>83:6 அந்நாளில், அனைத்துலகின் அதிபதியின் முன்னால் மாந்தர்கள் அனைவரும் நின்றுகொண்டிருப்பார்கள். </span>
<span>83:7 ஒருபோதும் அவ்வாறில்லை! திண்ணமாக, தீயவர்களின் வினைப்பட்டியல் சிறைப்பதிவேட்டில் உள்ளது. </span>
<span>83:8 சிறைப்பதிவேடு என்னவென்று உமக்குத் தெரியுமா, என்ன? </span>
<span>83:9 அது எழுதப்பட்ட ஒரு புத்தகமாகும். </span>
<span>83:10 அந்நாளில், பொய்யெனத் தூற்றுபவர்களுக்குக் கேடுதான்! </span>
<span>83:11 அவர்கள் எத்தகையவர்கள் எனில், கூலி கொடுக்கப்படும் நாளினை பொய் யென வாதிடுகின்றார்கள். </span>
<span>83:12 அதை யாரும் பொய் யெனக் கூறுவதில்லை, வரம்பு மீறக்கூடிய தீய செயல்கள் செய்யக்கூடிய ஒவ்வொருவனையும் தவிர! </span>
<span>83:13 நம்முடைய வசனங்கள் அவனிடம் ஓதிக் காண்பிக்கப்பட்டால், “இவை பண்டைக் காலத்துக் கட்டுக்கதைகள்” என்று சொல்கின்றான். </span>
<span>83:14 ஒருபோதும் அவ்வாறில்லை. மாறாக, உண்மை யாதெனில், அவர்களுடைய தீயசெயல்களின் கறை அவர்களின் உள்ளங்களில் படிந்து விட்டிருக்கின்றது. </span>
<span>83:15 ஒருபோதும் அவ்வாறில்லை! திண்ணமாக, அவர்கள் அந்நாளில் தம் இறைவனைக் காணும் பேற்றினை விட்டு தடுத்து வைக்கப்படுவார்கள். </span>
<span>83:16 பின்னர், அவர்கள் உறுதியாக நரகில் வீழ்வார்கள். </span>
<span>83:17 பின்னர், அவர்களிடம் “நீங்கள் பொய்யெனத் தூற்றிக் கொண்டிருந்தது இதுதான்” என்று கூறப்படும். </span>
<span>83:18 ஒருபோதும் அவ்வாறில்லை! திண்ணமாக, நல்லோரின் வினைப்பட்டியல் மேன்மக்களின் பதிவேட்டில் உள்ளது. </span>
<span>83:19 அந்த மேன்மக்களின் பதிவேடு என்னவென்று உமக்குத் தெரியுமா, என்ன? </span>
<span>83:20 அது எழுதப்பட்ட ஒரு புத்தகம்;</span>
<span>83:21 (இறைவனிடம்) நெருக்கமான வானவர்கள் அதனைப் பாதுகாக்கின்றார்கள். </span>
<span>83:22 திண்ணமாக, நல்லவர்கள் பேரின்பத்தில் இருப்பார்கள். </span>
<span>83:23 உயர்தரமான சாய்வு இருக்கைகளில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். </span>
<span>83:24 அவர்களின் முகங்களில் சுகவாழ்வின் பொலிவை நீர் கண்டறிவீர். </span>
<span>83:25 முத்திரையிடப்பட்ட மிகச்சிறந்த மதுபானம் அவர்களுக்குப் புகட்டப்படும். </span>
<span>83:26 அதன் மீது கஸ்தூரி முத்திரை பதிந்திருக்கும். போட்டியிட்டு முந்திக்கொள்ள முயல்பவர்கள், இதனை அடைந்து கொள்வதில் முந்திக்கொள்ள முயலட்டும்! </span>
<span>83:27 மேலும், அந்த பானத்தில் ‘தஸ்னீம்’ கலந்திருக்கும். </span>
<span>83:28 அது ஒரு நீரூற்று. (இறைவனுக்கு) நெருக்கமானவர்கள் அதன் நீருடன் மது அருந்துவார்கள். </span>
<span>83:29 திண்ணமாக, குற்றம் புரிந்தவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களை (உலகில்) ஏளனம் செய்து கொண்டிருந்தார்கள். </span>
<span>83:30 மேலும், அவர்களை இவர்கள் கடந்து செல்லும்போது கண்களால் சாடை காட்டிக் கொண்டிருந்தார்கள். </span>
<span>83:31 மேலும், தம் குடும்பத்தாரிடம் திரும்பும்போது மகிழ்ச்சி ஆரவாரத்துடன் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். </span>
<span>83:32 மேலும், அவர்களைப் பார்க்கும்போது, நிச்சயமாக இவர்கள் வழிகெட்டவர்கள் என்று கூறிக் கொண்டிருந்தார்கள். </span>
<span>83:33 ஆனால், அவர்களோ இறைநம்பிக்கையாளர்களை கண்காணிக்கக் கூடியவர்களாய் அனுப்பப்படவில்லை. </span>
<span>83:34 இன்று இறைநம்பிக்கையாளர்கள், நிராகரிப்பாளர்களைப் பார்த்து சிரிக்கின்றார்கள். </span>
<span>83:35 சாய்வு நாற்காலிகளில் சாய்ந்தவாறு (அவர்களின் நிலைகளைப்) பார்க்கின்றார்கள். </span>
<span>83:36 கிடைத்துவிட்டதல்லவா, நிராகரிப்பாளர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களுக்கான நற்கூலி!</span>
</div><div>
<span>அல் இன்ஷிகாக்</span>
<span>84:1 வானம் பிளக்கின்றபோது </span>
<span>84:2 மேலும், அது தன்னுடைய அதிபதியின் கட்டளையை செயல்படுத்தும்போது, இது(தன் அதிபதியின் கட்டளைக்கு முழுமையாகப் பணிவது)தான் அதற்கு ஏற்றதாகும். </span>
<span>84:3 மேலும், பூமி பரப்பப்பட்டு விடும்போது </span>
<span>84:4 இன்னும், அது தன்னுள் இருப்பவை அனைத்தையும் வெளியில் எறிந்துவிட்டு, ஏதுமற்றதாய் ஆகிவிடும்போது </span>
<span>84:5 மேலும், அது தன் அதிபதியின் கட்டளையைச் செயல்படுத்தும்போது, இது (தன் அதிபதியின் கட்டளைக்கு முழுமையாகப் பணிவது)தான் அதற்கு ஏற்றதாகும். </span>
<span>84:6 “மனிதனே! நீ இடைவிடாமல் பாடுபட்டு உன் இறைவனின் பக்கம் சென்று கொண்டிருப்பவனாகவும் அவனை நீ சந்திக்கக்கூடியவனாகவும் இருக்கின்றாய். </span>
<span>84:7 எவருடைய வினைப்பட்டியல் அவர் வலக்கையில் கொடுக்கப்படுமோ </span>
<span>84:8 அவரிடம் எளிதான கணக்கு வாங்கப்படும். </span>
<span>84:9 மேலும், அவர் தம் குடும்பத்தாரை நோக்கி மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்வார். </span>
<span>84:10 ஆனால், எவனுடைய வினைப்பட்டியல் அவன் முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுமோ </span>
<span>84:11 அவன் மரணத்தை அழைப்பான். </span>
<span>84:12 பிறகு, கொழுந்து விட்டெரியும் நரகத்தில் போய் வீழ்வான். </span>
<span>84:13 அவன் தன்னுடைய குடும்பத்தாரிடம் இன்பத்தில் மூழ்கியிருந்தான். </span>
<span>84:14 (தன்னுடைய இறைவனின் பக்கம்) ஒருபோதும் திரும்பி வர வேண்டியதில்லை என்று அவன் கருதியிருந்தான். </span>
<span>84:15 ஏன் திரும்பி வர வேண்டியதில்லை? அவனுடைய இறைவன் அவனுடைய இழிசெயல்களைப் பார்த்துக் கொண்டுதானே இருந்தான்!</span>
<span>84:16 அவ்வாறில்லை! அந்தி நேரத்துச் செவ்வானத்தின் மீதும், </span>
<span>84:17 இரவின் மீதும், மேலும், அது ஒன்றுதிரட்டி வைத்துக் கொண்டிருப்பவற்றின் மீதும் </span>
<span>84:18 மேலும், முழுமையாய் மலர்ந்து விடும் சந்திரன் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன். </span>
<span>84:19 திண்ணமாக, நீங்கள் படிப்படியாய் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. </span>
<span>84:20 பிறகு, இம்மக்களுக்கு என்ன நேர்ந்தது? நம்பிக்கை கொள்ளாமல் இருக்கிறார்களே! </span>
<span>84:21 மேலும், இவர்களின் முன்னிலையில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், இவர்கள் ஸஜ்தா* செய்வதுமில்லையே! </span>
<span>84:22 மாறாக, இந்த நிராகரிப்பாளர்களோ பொய்யெனத் தூற்றுகின்றார்கள். </span>
<span>84:23 உண்மையில், இவர்கள் (தம் வினைச்சுவடிகளில்) சேர்த்துக் கொண்டிருப்பவற்றை அல்லாஹ் நன்கறிகின்றான். </span>
<span>84:24 எனவே, இவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனைக்கான “நற்செய்தியை” அறிவித்துவிடுவீராக!</span>
<span>84:25 ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாகவும் நற்செயல்கள் செய்தவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு என்றென்றும் முடிவுறாத கூலி இருக்கிறது. </span>
</div><div>
<span>அல் புரூஜ்</span>
<span>85:1 உறுதியான கோட்டைகளைக் கொண்ட வானத்தின் மீது சத்தியமாக! </span>
<span>85:2 வாக்களிக்கப்பட்ட அந்த நாளின் மீது சத்தியமாக! </span>
<span>85:3 மேலும், பார்க்கின்றவர் மீதும், பார்க்கப்படும் பொருளின் மீதும் சத்தியமாக! </span>
<span>85:4 தீக்குண்டத்தார் அழிக்கப்பட்டார்கள்!</span>
<span>85:5 (அது எத்தகைய தீக்குண்டமெனில்) அதில் நன்கு கொழுந்து விட்டெரியும் எரிபொருள் இருந்தது. </span>
<span>85:6 அவர்கள் அதன் ஓரத்தில் அமர்ந்திருந்து </span>
<span>85:7 இறைநம்பிக்கையாளர்களுக்குத் தாம் செய்து கொண்டிருந்த செயல்களைப் பார்த்த வண்ணம் இருந்தார்கள். </span>
<span>85:8 அந்த இறைநம்பிக்கையாளர்களிடம் இவர்கள் பகைமை பாராட்டியதற்குக் காரணம் இதைத் தவிர வேறு எதுவும் இல்லை: யாவற்றையும் மிகைத்தவனும் தனக்குத்தானே புகழுக்குரியவனுமான அல்லாஹ்வின் மீது அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்என்பதுதான்! </span>
<span>85:9 வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரத்திற்கு உரிமையாளனும் அந்த இறைவனே. மேலும், அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான். </span>
<span>85:10 இறைநம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மீது எவர்கள் கொடுமைகள் புரிந்தார்களோ, பிறகு, அதற்காக மன்னிப்புக் கோரி மீளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயம் நரகவேதனை இருக்கிறது. மேலும், சுட்டெரிக்கும் தண்டனையும் உண்டு, </span>
<span>85:11 எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களுக்குத் திண்ணமாக சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். இதுவே பெரும் வெற்றியாகும். </span>
<span>85:12 உண்மையில், உம் இறைவனின் பிடி மிகக் கடுமையானது. </span>
<span>85:13 திண்ணமாக, அவனே முதன் முதலாகப் படைக்கின்றான். அவனே மீண்டும் படைப்பான். </span>
<span>85:14 மேலும், அவன் அதிகம் மன்னித்தருள்பவனாகவும், அன்பு செலுத்துபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>85:15 அர்ஷின் உரிமையாளனாகவும், மேன்மை மிக்கவனாகவும், </span>
<span>85:16 தான் நாடுகின்றவற்றை செயல்படுத்துபவனாகவும் இருக்கின்றான். </span>
<span>85:17 படைகளைப் பற்றிய செய்தி உமக்கு எட்டியதா? </span>
<span>85:18 ஃபிர்அவ்ன் மற்றும் ஸமூத் சமுதாயத்தினரின் (படைகளைப் பற்றிய) செய்தி </span>
<span>85:19 ஆனால், நிராகரிப்பாளர்கள் பொய்யெனத் தூற்றுவதில் முனைந்துள்ளார்கள். </span>
<span>85:20 ஆயினும், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்து கொண்டிருக்கின்றான். </span>
<span>85:21 (அவர்கள் பொய்யெனத் தூற்றுவதால் இந்தக் குர்ஆனுக்கு எவ்விதத் தீங்கும் ஏற்பட்டுவிடாது) மாறாக, இந்தக் குர்ஆன் அதிக மகத்துவம் மிக்கது;</span>
<span>85:22 பாதுகாக்கப்பட்ட பலகையில் (பதிக்கப்பட்டு) உள்ளது. </span>
</div><div>
<span>அத்தாரிக்</span>
<span>86:1 வானத்தின் மீது சத்தியமாக! மேலும், இரவில் தோன்றக்கூடியதன் மீதும் சத்தியமாக! </span>
<span>86:2 இரவில் தோன்றக்கூடியது எது என்று உமக்குத் தெரியுமா, என்ன? </span>
<span>86:3 அது ஓர் ஒளிரும் தாரகை. </span>
<span>86:4 பாதுகாப்பாளன் இல்லாத எந்த ஓர் உயிருமில்லை. </span>
<span>86:5 பிறகு, மனிதன் தான் எப்பொருளிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றான் என்பதையாவது சற்று கவனித்துப் பார்க்கட்டுமே! </span>
<span>86:6 பீறிட்டுப் பாயும் நீரிலிருந்து படைக்கப்பட்டுள்ளான்! </span>
<span>86:7 அது, முதுகெலும்புக்கும், நெஞ்செலும்புக்கும் இடையிலிருந்து வெளியாகின்றது. </span>
<span>86:8 திண்ணமாக, அவன் (அந்தப் படைப்பாளன்) மீண்டும் அவனைப் படைப்பதற்கு ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான். </span>
<span>86:9 எந்நாளில் மறைவான இரகசியங்கள் சோதனை இடப்படுமோ அந்நாளில் </span>
<span>86:10 மனிதனிடம் எந்த சுய வலிமையும் இராது; அவனுக்குத் துணை புரிபவர் எவரும் இருக்கமாட்டார். </span>
<span>86:11 மழையைப் பொழிகின்ற வானத்தின் மீது சத்தியமாக!</span>
<span>86:12 மேலும் (தாவரங்கள் முளைக்கின்ற போது) பிளந்துவிடுகின்ற பூமியின் மீது சத்தியமாக! </span>
<span>86:13 திண்ணமாக, இது தீர்க்கமான சொல்லே </span>
<span>86:14 தவிர கேலியோ விளையாட்டோ அல்ல!</span>
<span>86:15 (மக்காவின் இறைநிராகரிப்பாளர்களான) இவர்கள் சில சூழ்ச்சிகள் செய்து கொண்டிருக்கின்றார்கள். </span>
<span>86:16 நானும் ஒரு சூழ்ச்சி செய்து கொண்டிருக்கின்றேன். </span>
<span>86:17 எனவே (நபியே!) விட்டுவிடுவீராக, இந்நிராகரிப்பாளர்களை! சொற்ப காலம் (அவர்களுடைய நிலையிலே) அவர்களை விட்டுவிடுவீராக!</span>
</div><div>
<span>அல் அஃலா</span>
<span>87:1 (நபியே!) உயர்வான உம் இறைவனுடைய திருப் பெயரைத் துதிப்பீராக! </span>
<span>87:2 அவன் எத்தகையவன் எனில், அவன்தான் படைத்தான்; பொருத்தமாகவும் அமைத்தான்; </span>
<span>87:3 மேலும் விதியை நிர்ணயித்தான்; பிறகு வழிகாட்டினான். </span>
<span>87:4 மேலும், தாவரங்களை முளைக்கச் செய்தான். </span>
<span>87:5 பின்னர், அவற்றைக் காய்ந்து கருகிய குப்பைக் கூளங்களாய் ஆக்கினான். </span>
<span>87:6 (நபியே!) நாம் உம்மை ஓதிடச் செய்வோம். பிறகு நீர் மறக்க மாட்டீர்; </span>
<span>87:7 ஆனால், அல்லாஹ் நாடியதைத் தவிர! திண்ணமாக, அவன் வெளிப்படையாகவும், மறைவாகவும் இருக்கும் யாவற்றையும் அறிகின்றான். </span>
<span>87:8 மேலும், இலகுவான பாதையை நாம் உமக்கு ஏற்படுத்தித் தருவோம். </span>
<span>87:9 எனவே, அறிவுரை வழங்குவீராக, அறிவுரை பலனளிக்குமாயின்! </span>
<span>87:10 எவர் அஞ்சுகிறாரோ, அவர் அறிவுரையை ஏற்றுக்கொள்வார். </span>
<span>87:11 ஆனால் துர்ப்பாக்கியவானோ அதனைத் தவிர்த்துக்கொள்வான். </span>
<span>87:12 அவன் பெரும் நெருப்பில் நுழைவான்; </span>
<span>87:13 பிறகு அதில் மரணமடையவும் மாட்டான்; வாழவும் மாட்டான்!</span>
<span>87:14 நிச்சயமாக வெற்றி அடைந்து விட்டார், தூய்மையை மேற்கொண்டு </span>
<span>87:15 மேலும், தன் இறைவனின் பெயரை நினைவு கூர்ந்து தொழுகையை நிறைவேற்றியவர். </span>
<span>87:16 ஆனால், நீங்கள் இம்மை வாழ்விற்கே முன்னுரிமை அளிக்கின்றீர்கள். </span>
<span>87:17 உண்மையில், மறுமையே மிகவும் மேலானதாகவும், நிலைத்து நிற்கக்கூடியதாகவும் இருக்கின்றது. </span>
<span>87:18 நிச்சயமாக இதே விஷயம் முன்னர் அருளப்பட்ட வேதங்களிலும் சொல்லப்பட்டிருந்தது; </span>
<span>87:19 இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களில்!</span>
</div><div>
<span>அல் ஃகாஷியா</span>
<span>88:1 சூழ்ந்து கொள்ளக் கூடிய துன்பம் (அதாவது மறுமை) பற்றிய செய்தி உமக்கு வந்ததா? </span>
<span>88:2 அந்நாளில் சில முகங்கள் பீதியுற்றிருக்கும்; </span>
<span>88:3 கடுமையான சிரமத்தை மேற் கொண்டிருக்கும்; களைத்துப் போயிருக்கும்; </span>
<span>88:4 கனன்றெழும் நெருப்பில் கருகிக் கொண்டிருக்கும்; </span>
<span>88:5 கொதிக்கும் ஊற்றுநீர் அவர்களுக்கு அருந்தக் கொடுக்கப்படும்; </span>
<span>88:6 முட்கள் நிறைந்த காய்ந்துபோன புற்பூண்டைத் தவிர வேறெந்த உணவும் அவர்களுக்குக் கிடைக்காது. </span>
<span>88:7 அது ஊட்டமும் தராது; பசியையும் போக்காது! </span>
<span>88:8 வேறு சில முகங்கள் அந்நாளில் பொலிவுற்றிருக்கும்; </span>
<span>88:9 தன் செயல்கள் குறித்து திருப்தியடைந்திருக்கும்; </span>
<span>88:10 உன்னதமான சுவனத்தில் இருக்கும்; </span>
<span>88:11 அவை அங்கு வீணானவற்றைச் செவியுற மாட்டா. </span>
<span>88:12 ஓடிக்கொண்டிருக்கும் நீரூற்று அங்கு உண்டு; </span>
<span>88:13 உயர்ந்த கட்டில்கள் அங்கு இருக்கும்; </span>
<span>88:14 மேலும், கிண்ணங்களும் வைக்கப்பட்டிருக்கும். </span>
<span>88:15 தலையணைகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும்; </span>
<span>88:16 எழிலான விரிப்புகளும் விரிக்கப்பட்டிருக்கும். </span>
<span>88:17 (இம்மக்கள் நம்பிக்கை கொள்வதில்லை எனில்,) ஒட்டகங்களை இவர்கள் பார்க்கவில்லையா, அவை எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்று! </span>
<span>88:18 மேலும், வானத்தைப் பார்க்க வில்லையா, அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது என்று!</span>
<span>88:19 மேலும், மலைகளைப் பார்க்கவில்லையா, அவை எவ்வாறு ஊன்றப்பட்டுள்ளன என்று! </span>
<span>88:20 மேலும், பூமியைப் பார்க்கவில்லையா, அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்று!</span>
<span>88:21 சரி (நபியே!) நீர் அறிவுரை புரிந்தவண்ணம் இருப்பீராக! திண்ணமாக, நீர் அறிவுரை புரிபவர் மட்டுமே ஆவீர்!</span>
<span>88:22 அவர்களை நீர் நிர்ப்பந்திப்பவர் அல்லர். </span>
<span>88:23 ஆனால், எவன் புறக்கணித்தானோ மேலும், நிராகரித்தானோ </span>
<span>88:24 அவனுக்கு அல்லாஹ் கடினமான தண்டனை அளிப்பான். </span>
<span>88:25 திண்ணமாக, இவர்கள் நம் பக்கமே திரும்பி வர வேண்டியுள்ளது. </span>
<span>88:26 பிறகு, இவர்களிடம் கணக்கு வாங்கும் பொறுப்பு நம்மீதே உள்ளது. </span>
</div><div>
<span>அல் ஃபஜ்ர்</span>
<span>89:1 வைகறைப் பொழுதின் மீது சத்தியமாக! </span>
<span>89:2 மேலும், பத்து இரவுகளின் மீதும், </span>
<span>89:3 இரட்டை மற்றும் ஒற்றையின் மீதும்,</span>
<span>89:4 சென்று கொண்டிருக்கும் இரவின் மீதும் சத்தியமாக!</span>
<span>89:5 அறிவுள்ள ஒருவருக்கு இனியும் சத்தியம் தேவையா, என்ன?</span>
<span>89:6 ஆது கூட்டத்தாருடன் உம் இறைவன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? </span>
<span>89:7 (அவர்கள்) உயரமான தூண்களையுடைய இரம் எனும் நகரவாசிகள்;</span>
<span>89:8 அவர்களைப் போன்று எந்தச் சமுதாயமும் உலகநாடுகளில் படைக்கப்படவில்லை; </span>
<span>89:9 மேலும், பள்ளத்தாக்கில் பாறைகளைக் குடைந்த ஸமூத் சமுதாயத்தாருடனும் </span>
<span>89:10 மேலும், முளைகளையுடைய ஃபிர்அவ்னுடனும் (உம்முடைய இறைவன் எவ்வாறு நடந்துகொண்டான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?) </span>
<span>89:11 அந்த மக்களோ உலக நாடுகளில் வரம்புமீறிய செயல்களில் ஈடுபட்டிருந்தார்கள்; </span>
<span>89:12 அங்கு பெரும் குழப்பத்தை விளைவித்திருந்தார்கள். </span>
<span>89:13 இறுதியில், அவர்கள் மீது உம் இறைவன் தண்டனையின் சாட்டைகளைப் பொழிந்தான். </span>
<span>89:14 உண்மையில், உம் இறைவன் குறிவைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றான். </span>
<span>89:15 ஆனால், மனிதனின் நிலை எப்படி இருக்கின்றதெனில், அவனுடைய இறைவன் அவனைச் சோதிக்க நாடினால் மேலும், அவனை கண்ணியப்படுத்தி, அருட்கொடைகளையும் வழங்கினால், “என்னுடைய இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான்” என்று கூறுகின்றான். </span>
<span>89:16 மேலும், அவனைச் சோதிக்க நாடினால் மேலும், அவனுடைய வாழ்க்கை வசதிகளைக் குறைத்து விட்டால் “என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான்” என்று கூறுகின்றான். </span>
<span>89:17 ஒருபோதும் இல்லை! ஆனால், அநாதையுடன் கண்ணியமாய் நீங்கள் நடந்து கொள்வதில்லை; </span>
<span>89:18 மேலும், வறியவர்க்கு உணவளிக்க ஒருவரையொருவர் தூண்டுவதுமில்லை! </span>
<span>89:19 மேலும், வாரிசுச் சொத்துக்களை முழுமையாக நீங்களே விழுங்கிவிடுகின்றீர்கள். </span>
<span>89:20 மேலும், செல்வத்தின் மீது அளவு கடந்த மோகம் கொண்டுள்ளீர்கள். </span>
<span>89:21 ஒருபோதுமில்லை! பூமி தூள் தூளாக அடித்து நொறுக்கப்படும்போது, </span>
<span>89:22 மேலும் வானவர்கள் அணி அணியாக நிற்கும் நிலையில் உம் இறைவன் வருகை தரும்போது,</span>
<span>89:23 மேலும், அந்நாளில் நரகம் கண்ணெதிரில் கொண்டு வரப்படும்போது அந்நாளில்தான் மனிதன் புரிந்து கொள்வான். அப்போது அவன் புரிந்துகொள்வது என்ன பயனை அளிக்கும்? </span>
<span>89:24 அவன் புலம்புவான்: ‘அய்யகோ! எனது இந்த வாழ்க்கைக்காக சில ஏற்பாடுகளை, நான் முன்னரே செய்திருக்கக்கூடாதா? </span>
<span>89:25 அந்நாளில் அல்லாஹ் தண்டிப்பதுபோல், தண்டிப்பவர் எவருமிலர். </span>
<span>89:26 அவன் கட்டுவதுபோல் கட்டுபவரும் எவரும் இலர். </span>
<span>89:27 (மற்றொரு புறத்தில் அறிவிக்கப்படும்:) ஓ! அமைதியடைந்த ஆன்மாவே! </span>
<span>89:28 செல் உன் இறைவனின் பக்கம்! (உன் நல்ல முடிவைக்கொண்டு) மகிழ்ந்த நிலையில்; (மேலும் உன் இறைவனின்) திருப்தியைப் பெற்ற நிலையில்! </span>
<span>89:29 இணைந்துவிடு, என்னுடைய (நல்) அடியார்களுடன்! </span>
<span>89:30 மேலும், புகுந்துவிடு, என்னுடைய சுவனத்தில்!”</span>
</div><div>
<span>அல் பலத்</span>
<span>90:1 இல்லை! இந்த (மக்கா) நகரின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்! </span>
<span>90:2 மேலும், நிலைமை என்னவெனில், (நபியே!) இந்நகரத்தில் நீர் ஆகுமாக்கப்பட்டுள்ளீர்! </span>
<span>90:3 மேலும் தந்தை (ஆதம்) மீதும் அவரிலிருந்து பிறந்த மக்கள் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன். </span>
<span>90:4 திண்ணமாக, நாம் மனிதனைப் பெரும் கஷ்டத்தில் படைத்திருக்கின்றோம். </span>
<span>90:5 ‘அவன் மீது யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது’ என்று அவன் நினைத்திருக்கின்றானா? </span>
<span>90:6 “ஏராளமான செல்வங்களை வாரி இறைத்துவிட்டேன்” என்று அவன் கூறுகின்றான். </span>
<span>90:7 யாருமே அவனைப் பார்க்கவில்லை என்று அவன் கருதுகின்றானா? </span>
<span>90:8 அவனுக்கு நாம் இரு கண்களையும் </span>
<span>90:9 ஒரு நாவையும் இரு உதடுகளையும் அளிக்கவில்லையா? </span>
<span>90:10 மேலும், (நன்மை, தீமையின்) தெளிவான இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டிவிட்டோம். (இல்லையா?) </span>
<span>90:11 ஆயினும், அவன் கடினமான மலைப் பாதையைக் கடந்து செல்லத் துணியவில்லை. </span>
<span>90:12 கடினமான அந்த மலைப்பாதை எதுவென்று உமக்குத் தெரியுமா, என்ன?</span>
<span>90:13 (அதுதான்) ஒருவனை அடிமைத்தளையிலிருந்து விடுவிப்பது ஆகும்; </span>
<span>90:14 அல்லது பட்டினி நாளில் உணவளிப்பதும் ஆகும். </span>
<span>90:15 உறவினரான அநாதைக்கோ </span>
<span>90:16 அல்லது வறுமையில் வாடும் ஏழைக்கோ (உணவளிப்பதும் ஆகும்!) </span>
<span>90:17 பின்னர் (அத்துடன்) எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, பொறுமையை மேற்கொள்ளவும் (மக்கள் மீது) இரக்கம் காட்டவும், ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுகின்றார்களோ, அவர்களில் ஒருவனாக அவன் இருக்கவேண்டும். </span>
<span>90:18 இத்தகையோர்தாம் வலப்பக்கத்தார். </span>
<span>90:19 மேலும், எவர்கள் நம்முடைய வசனங்களை ஏற்க மறுத்தார்களோ அவர்கள் இடப் பக்கத்தார். </span>
<span>90:20 அவர்கள் மீது நெருப்பு படர்ந்திருக்கும். </span>
</div><div>
<span>அஷ்ஷம்ஸ்</span>
<span>91:1 சூரியன் மீதும் அதன் வெயிலின் மீதும் சத்தியமாக!</span>
<span>91:2 மேலும், சந்திரன் மீது சத்தியமாக, அது சூரியனைத் தொடர்ந்து வரும்போது! </span>
<span>91:3 மேலும், பகலின் மீது சத்தியமாக, அது சூரியனை வெளிப்படுத்திக் காட்டும்போது! </span>
<span>91:4 மேலும், இரவின் மீது சத்தியமாக, அது சூரியனை மூடி மறைத்துக் கொள்ளும்போது! </span>
<span>91:5 மேலும், வானத்தின் மீதும் அதை அமைத்தவன் மீதும் சத்தியமாக! </span>
<span>91:6 மேலும், பூமியின் மீதும் அதை விரித்தவன் மீதும் சத்தியமாக! </span>
<span>91:7 மேலும், மனித ஆன்மாவின் மீதும் அதனைச் செம்மைப்படுத்தி பின்னர், </span>
<span>91:8 அதன் தீமையையும் தூய்மையையும் அதனுடைய உள்ளுணர்வில் வைத்தவன் மீதும் சத்தியமாக! </span>
<span>91:9 திண்ணமாக, வெற்றி பெற்றுவிட்டான் மனத்தைத் தூய்மைப்படுத்தியவன்; </span>
<span>91:10 மேலும், தோற்றுவிட்டான் அதனை நசுக்கியவன்!</span>
<span>91:11 ஸமூத் சமுதாயத்தார் தங்கள் வரம்பு மீறிய போக்கினால் பொய்யெனத் தூற்றினார்கள். </span>
<span>91:12 அவர்களில் மிகவும் கேடுகெட்ட ஒருவன் எழுந்து வந்தபோது </span>
<span>91:13 அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் கூறினார்: “எச்சரிக்கை! அல்லாஹ்வின் ஒட்டகம் (அதன் மீது கை வைக்காதீர்கள்;) அது நீர் அருந்துவதைத் (தடுக்காதீர்கள்).” </span>
<span>91:14 ஆனால், அம்மக்கள் அவருடைய பேச்சைப் பொய்யெனத் தூற்றினார்கள். மேலும், ஒட்டகத்தைக் கொன்று விட்டார்கள். இறுதியில், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய பாவத்தின் விளைவாக கடுமையானதொரு ஆபத்தை இறக்கி, அனைவரையும் அழித்து, மண்ணோடு மண்ணாக்கி விட்டான். </span>
<span>91:15 மேலும், (தனது இந்தச் செயலின்) எந்தவொரு தீயவிளைவு பற்றியும் அவனுக்கு அச்சம் இல்லை. </span>
</div><div>
<span>அல்லைல்</span>
<span>92:1 இரவின் மீது சத்தியமாக, அது மூடி மறைத்துக் கொள்ளும்போது! </span>
<span>92:2 பகலின் மீது சத்தியமாக, அது ஒளிரும் போது!</span>
<span>92:3 மேலும், ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக! </span>
<span>92:4 உண்மையில் உங்களுடைய முயற்சிகள் பலதரப்பட்டவையாக இருக்கின்றன. </span>
<span>92:5 எனவே, எவர் (இறைவழியில்) பொருளை வழங்கினாரோ மேலும் (இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்து) விலகியிருந்தாரோ </span>
<span>92:6 மேலும், நன்மையை உண்மையென ஏற்றுக்கொண்டாரோ, </span>
<span>92:7 அவருக்கு இலகுவான வழியில் செல்வதற்கு நாம் வகை செய்வோம். </span>
<span>92:8 எவர் கஞ்சத்தனம் செய்கின்றாரோ மேலும் (தன் இறைவனைப்) பொருட்படுத்தாமல் நடந்தாரோ;</span>
<span>92:9 இன்னும் நன்மையைப் பொய்யென நிராகரித்தாரோ </span>
<span>92:10 அவருக்கு கடினமான வழியில் செல்வதற்கு நாம் வகை செய்வோம். </span>
<span>92:11 அவனுடைய செல்வம் அவன் அழிந்து விடும்போது அவனுக்கு என்ன பயன் அளிக்கப்போகின்றது?</span>
<span>92:12 திண்ணமாக, வழிகாட்டுவது எமது பொறுப்பேயாகும். </span>
<span>92:13 மேலும், உண்மையில் மறுமை மற்றும் இம்மை இரண்டும் நமக்கே உரியனவாகும். </span>
<span>92:14 எனவே, கொழுந்துவிட்டெரியும் நெருப்பைக் குறித்து உங்களை நான் எச்சரிக்கை செய்துவிட்டேன். </span>
<span>92:15 ஆனால், அதில் யாரும் எரிந்துபோக மாட்டார்கள், பெரும் துர்ப்பாக்கியவானைத் தவிர! </span>
<span>92:16 அவர்கள் பொய்யென மறுத்தார்கள், புறக்கணித்தார்கள். </span>
<span>92:17 மேலும், அதனைவிட்டுத் தொலைவில் வைக்கப்படுவார், மிகுந்த இறையச்சம் உடையவர். </span>
<span>92:18 அவரோ தூய நிலை அடையும் பொருட்டு தம் செல்வத்தை வழங்குகின்றார் </span>
<span>92:19 கைமாறு செய்யும் அளவுக்கு எவருக்கும் அவர் நன்றிக்கடன் படவில்லை. </span>
<span>92:20 ஆனாலும், அவர் உயர்வுமிக்க தம் இறைவனின் திருப்தியைப் பெறுவதற்காகவே இதைச் செய்கின்றார். </span>
<span>92:21 மேலும், (அவரைக் குறித்து) அவசியம் அவன் திருப்தியடைவான். </span>
</div><div>
<span>அள்ளுஹா</span>
<span>93:1 ஒளிமிக்க பகலின் மீது சத்தியமாக! </span>
<span>93:2 மேலும், இரவின் மீதும் சத்தியமாக, அது அமைதியாக வந்தடையும் போது!</span>
<span>93:3 (நபியே!) உம் இறைவன் உம்மை ஒருபோதும் கைவிடவில்லை; கோபம் கொள்ளவும் இல்லை. </span>
<span>93:4 மேலும், திண்ணமாக, பிந்திய காலகட்டம் முந்திய காலகட்டத்தைவிட உமக்கு மிகவும் சிறந்ததாயிருக்கும். </span>
<span>93:5 மேலும், விரைவில் உம் இறைவன் நீர் திருப்தியடைந்து விடுமளவு உமக்கு வழங்குவான். </span>
<span>93:6 அவன் உம்மை அநாதையாய்க் காணவில்லையா? பிறகு, புகலிடம் தந்தான் அல்லவா? </span>
<span>93:7 மேலும், அவன் உம்மை வழியறியாதவராய்க் கண்டான்; பிறகு, நேர்வழி காண்பித்தான். </span>
<span>93:8 மேலும், அவன் உம்மை ஏழையாய்க் கண்டான்; பிறகு செல்வராய் ஆக்கினான். </span>
<span>93:9 ஆகவே, நீர் அநாதைகளுடன் கடுமையாய் நடந்து கொள்ளாதீர். </span>
<span>93:10 மேலும், யாசகம் கேட்பவரை விரட்டாதீர். </span>
<span>93:11 மேலும், உம் இறைவனின் அருட்கொடைபற்றி எடுத்துரைப்பீர். </span>
</div><div>
<span>அலம் நஷ்ரஹ்</span>
<span>94:1 (நபியே!) நாம் உம்முடைய இதயத்தை உமக்காக விரிவாக்கித் தரவில்லையா? </span>
<span>94:2 மேலும், உம்முடைய சுமையை உம்மைவிட்டு நாம் இறக்கிவைத்தோம். </span>
<span>94:3 (அது) உம்முடைய முதுகை முறித்துக் கொண்டிருந்தது. </span>
<span>94:4 மேலும், உமக்காக உம் புகழினை உயர்த்தினோம். </span>
<span>94:5 உண்மையில் சிரமத்துடன் இலகுவும் இருக்கின்றது. </span>
<span>94:6 திண்ணமாக, சிரமத்துடன் இலகுவும் இருக்கிறது. </span>
<span>94:7 எனவே, நீர் ஓய்வு பெறும்போது வணக்க வழிபாட்டின் கடும் உழைப்பில் முனைப்புடன் ஈடுபடுவீராக!</span>
<span>94:8 மேலும், உம் இறைவனின் பக்கமே ஆர்வம் கொள்வீராக!</span>
</div><div>
<span>அத்தீன்</span>
<span>95:1 அத்தியின் மீதும் ஒலிவத்தின் மீதும் சத்தியமாக! </span>
<span>95:2 சினாய் மலையின் மீதும் </span>
<span>95:3 மேலும், அமைதியான இந்த (மக்கா) நகரத்தின் மீதும் சத்தியமாக! </span>
<span>95:4 திண்ணமாக, நாம் மனிதனை மிகச் சிறந்த அமைப்பில் படைத்தோம். </span>
<span>95:5 பிறகு, நேர்மாறாக, தாழ்ந்தவர்களில் மிகவும் தாழ்ந்தவனாக அவனை ஆக்கினோம். </span>
<span>95:6 ஆனால், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்து கொண்டிருந்தவர்களைத் தவிர! அவர்களுக்கு முடிவில்லாத நற்கூலி இருக்கின்றது. </span>
<span>95:7 எனவே (நபியே!) இதன் பிறகும் நற்கூலிதண்டனை வழங்கப்படும் விஷயத்தில் உம்மை யாரால் பொய்யர் எனத் தூற்ற முடியும்? </span>
<span>95:8 அல்லாஹ் ஆட்சியாளர்கள் அனைவரிலும் மாபெரும் ஆட்சியாளன் இல்லையா?</span>
</div><div>
<span>அல் அலக்</span>
<span>96:1 ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு! </span>
<span>96:2 (உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான்! ஓதுவீராக! </span>
<span>96:3 மேலும், உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், </span>
<span>96:4 அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்; </span>
<span>96:5 மனிதனுக்கு அவன் அறியாதிருந்தவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். </span>
<span>96:6 அவ்வாறன்று! மனிதன் வரம்பு மீறி நடக்கின்றான்;</span>
<span>96:7 அவன் தன்னைத் தன்னிறைவுடையவன் என்று கருதிக் கொண்டதால்!  </span>
<span>96:8 ஆனால், திரும்பிச் செல்வது திண்ணமாக, உம் இறைவனின் பக்கமே ஆகும். </span>
<span>96:9 தடுப்பவனை நீர் பார்த்தீரா? </span>
<span>96:10 அடியார் ஒருவர் தொழுது கொண்டிருக்கையில் அவரைத் தடுப்பவனை நீர் பார்த்தீரா? </span>
<span>96:11 நீர் என்ன நினைக்கிறீர்? அவர் நேர்வழியில் நடந்தாலுமா? </span>
<span>96:12 அல்லது தூய்மையை மேற்கொள்ளும்படி ஏவினாலுமா? </span>
<span>96:13 (தடுக்கக்கூடிய இந்த மனிதன் சத்தியத்தைப்) பொய்யென்று தூற்றினால் மேலும், புறக்கணிக்கவும் செய்தால் (அவனைப் பற்றி) நீர் என்ன கருதுகின்றீர்? </span>
<span>96:14 அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பது அவனுக்குத் தெரியாதா? </span>
<span>96:15 அவ்வாறன்று! அவன் (இந்த நடத்தையிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையெனில், திண்ணமாக, அவனது நெற்றி முடியைப் பிடித்து இழுப்போம், </span>
<span>96:16 கடும் தவறிழைத்த பொய்யுரைத்த அந்த நெற்றியை!</span>
<span>96:17 அவன் தன் (ஆதரவாளர்களின்) கூட்டத்தை அழைத்துக் கொள்ளட்டும்; </span>
<span>96:18 தண்டனை தரும் வானவர்களை நாமும் அழைத்துக் கொள்வோம். </span>
<span>96:19 ஒருபோதும் அவ்வாறில்லை! அவனுக்குக் கீழ்ப்படியாதீர். மேலும், சிரம் பணிவீராக! மேலும் (உம் இறைவனின்) நெருக்கத்தைப் பெறுவீராக!</span>
</div><div>
<span>அல்கத்ர்</span>
<span>97:1 திண்ணமாக, நாம் இதனை (குர்ஆனை) மாட் சிமை மிக்க இரவில் இறக்கி வைத்தோம். </span>
<span>97:2 மாட்சிமை மிக்க இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா என்ன? </span>
<span>97:3 மாட்சிமை மிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும்! </span>
<span>97:4 அதில் வானவர்களும் ரூஹும் தம் இறைவனின் அனுமதியுடன் அனைத்துக் கட்டளைகளையும் ஏந்திய வண்ணம் இறங்குகின்றார்கள். </span>
<span>97:5 அந்த இரவு முழுவதும் நலம் பொருந்தியதாகத் திகழ்கின்றது, வைகறை உதயமாகும் வரை!</span>
</div><div>
<span>அல் பய்யினா</span>
<span>98:1 வேதம் அருளப்பட்டவர்களிலும் இணைவைப்பாளர்களிலும் உள்ள இறைநிராகரிப்பாளர்கள் தங்களுடைய நிராகரிப்பிலிருந்து விலகிவிடக்கூடியவராய் இருக்கவில்லை, தெளிவான சான்று தங்களிடம் வரும் வரை! </span>
<span>98:2 தூய்மையான வேத நூல்களை ஓதிக் காண்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து வரும்வரை! </span>
<span>98:3 அவற்றில் முற்றிலும் நேர்மையான நிலையான சட்டதிட்டங்கள் வரையப்பட்டிருக்கும். </span>
<span>98:4 முன்பு வேதம் அருளப்பட்டவர்கள் பிளவுபட்டுப் போனது (நேர்வழி குறித்து) தெளிவான சான்று அவர்களிடம் வந்த பிறகுதான்! </span>
<span>98:5 மேலும், தங்கள் தீனை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கியவர்களாகவும், முற்றிலும் ஒருமனப்பட்டவர்களாய் அல்லாஹ்வுக்கு அடிபணிய வேண்டும் என்பதையும், தொழுகையை நிலைநாட்ட வேண்டும்; ஜகாத்தும் கொடுக்க வேண்டும் என்பதையும் தவிர வேறு எந்தக் கட்டளையும் அவர்களுக்கு இடப்படவில்லை. இதுதான் மிகவும் சரியான, நேரிய தீன் ஆகும். </span>
<span>98:6 வேதம் அருளப்பட்டவர்களிலும் இணைவைப்பாளர்களிலும் உள்ள நிராகரிப்பாளர்கள் திண்ணமாக, நரக நெருப்பில்தான் வீழ்வார்கள்; அதில் நிரந்தரமாய் வீழ்ந்து கிடப்பார்கள். அவர்கள்தாம் படைப்பினங்களில் மிகக் கீழ்த்தரமானவர்கள். </span>
<span>98:7 எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் புரிந்தார்களோ அவர்கள்தாம் திண்ணமாக, படைப்பினங்களில் மிகவும் மேன்மை வாய்ந்தவர்கள். </span>
<span>98:8 அவர்களின் கூலி அவர்களுடைய அதிபதியிடம் நிலையாகத் தங்கும் சுவனங்களாகும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் அவர்களைக் குறித்து திருப்தியுற்றான். அவர்களும் அவனைக் குறித்து திருப்தியுற்றார்கள். இவை அனைத்தும் தம் இறைவனை அஞ்சக்கூடிய மனிதருக்குரியவையாகும். </span>
</div><div>
<span>அஸ்ஸில்ஸால்</span>
<span>99:1 பூமி, முழுபலத்துடன் உலுக்கப்படும்போது </span>
<span>99:2 மேலும் பூமி தன்னுள்ளிருக்கும் சுமைகள் அனைத்தையும் வெளிக்கொணர்ந்து விடும்போது, </span>
<span>99:3 மேலும், “அதற்கு என்ன நேர்ந்துவிட்டது?” என்று மனிதன் கேட்கும்போது </span>
<span>99:4 அந்நாளில் அது தன் மீது நடந்துவிட்ட நிகழ்ச்சிகளை எடுத்துரைக்கும். </span>
<span>99:5 ஏனெனில், உம் இறைவன் அதற்கு (அவ்வாறு எடுத்துரைக்கும்படி) ஆணையிட்டிருப்பான். </span>
<span>99:6 அன்று மக்கள் பல்வேறு நிலைமைகளில் திரும்புவார்கள், தங்களுடைய செயல்கள் தங்களுக்குக் காண்பிக்கப்படுவதற்காக! </span>
<span>99:7 பிறகு, எவன் அணுவளவு நன்மை செய்திருந்தானோ அவன் அதனைக் கண்டு கொள்வான். </span>
<span>99:8 மேலும், எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அதனைக் கண்டுகொள்வான். </span>
</div><div>
<span>அல் ஆதியாத்</span>
<span>100:1 மூச்சிறைக்கப் பாய்ந்து ஓடுகின்றவை (குதிரைகள்) மீது சத்தியமாக! </span>
<span>100:2 பின்னர், குளம்புகளிலிருந்து தீப்பொறியை எழுப்புகின்ற </span>
<span>100:3 மேலும், அதிகாலையில் பாய்ந்து தாக்குதல் நடத்தி, </span>
<span>100:4 அதனால் புழுதியினைக் கிளப்பி </span>
<span>100:5 மேலும், ஏதேனும் கூட்டத்தின் நடுவில் நுழைந்துவிடுகின்ற குதிரைகள் மீது சத்தியமாக! </span>
<span>100:6 உண்மையில் மனிதன் தன் இறைவனுக்கு மிகவும் நன்றி கெட்டவனாக இருக்கின்றான். </span>
<span>100:7 அவனே அதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான் </span>
<span>100:8 மேலும், அவன் செல்வத்தின் மீது அளவு கடந்து மோகம் கொண்டிருக்கின்றான். </span>
<span>100:9 மண்ணறைகளில் (அடக்கப்பட்டு) உள்ளவை அனைத்தும் வெளிக்கொணரப்படும் நேரத்தையும்; </span>
<span>100:10 மேலும், நெஞ்சங்களில் (மறைக்கப்பட்டு) உள்ளவை அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படும் நேரத்தையும் அவன் அறியமாட்டானா? </span>
<span>100:11 திண்ணமாக, அந்நாளில் அவர்களின் இறைவன் அவர்களைப் பற்றி நன்கறிந்தவனாக இருப்பான். </span>
</div><div>
<span>அல் காரிஆ</span>
<span>101:1 பயங்கரமான நிகழ்ச்சி! </span>
<span>101:2 அந்த பயங்கரமான நிகழ்ச்சி என்ன? </span>
<span>101:3 அந்தப் பயங்கரமான நிகழ்ச்சி எதுவென்று உமக்குத் தெரியுமா, என்ன? </span>
<span>101:4 அந்நாளில் மக்கள், சிதறிக் கிடக்கும் ஈசல்கள் போலவும் </span>
<span>101:5 மேலும், மலைகள் கடையப்பட்ட வண்ண வண்ணக் கம்பளியைப் போலவும் ஆகிவிடும்! </span>
<span>101:6 பிறகு, எவருடைய எடைத்தட்டுகள் கனத்திருக்குமோ </span>
<span>101:7 அவர் மனத்திற்குகந்த வாழ்வைப் பெறுவார். </span>
<span>101:8 மேலும், எவருடைய எடைத்தட்டுகள் இலேசாக இருக்குமோ </span>
<span>101:9 அவருடைய தங்குமிடம் ஆழமான படுகுழிதான்! </span>
<span>101:10 அது என்னவென்று உமக்குத் தெரியுமா, என்ன? </span>
<span>101:11 கொழுந்து விட்டெரியும் நெருப்பு!</span>
</div><div>
<span>அத்தகாஸுர்</span>
<span>102:1 பிறரைவிடக் கூடுதலாக உலக வசதிகளைப் பெற வேண்டும் என்னும் எண்ணம் உங்களை மெய்மறதியில் ஆழ்த்தி வைத்திருக்கின்றது. </span>
<span>102:2 நீங்கள் மண்ணறைகளைச் சென்றடையும் வரையில் (இதே சிந்தனையிலேயே மூழ்கி இருக்கின்றீர்கள்). </span>
<span>102:3 அவ்வாறன்று! விரைவில் உங்களுக்குப் புரிந்துவிடும். </span>
<span>102:4 இன்னும் (கேட்டுக் கொள்ளுங்கள்:) அவ்வாறன்று! விரைவில் உங்களுக்குப் புரிந்துவிடும் </span>
<span>102:5 (இந்த நடத்தையின் இறுதி முடிவினை) உறுதியாக நீங்கள் அறிந்திருந்தால் (உங்கள் நடத்தை இப்படி இருந்திருக்காது). </span>
<span>102:6 திண்ணமாக, நீங்கள் நரகத்தைப் பார்க்கத்தான் போகின்றீர்கள். </span>
<span>102:7 இன்னும் (கேட்டுக் கொள்ளுங்கள்) திண்ணமாக நீங்கள் அதனைக் கண்கூடாகப் பார்க்கத்தான் போகின்றீர்கள் </span>
<span>102:8 பிறகு அந்நாளில் இந்த அருட்கொடைகளைப் பற்றி கட்டாயம் நீங்கள் வினவப் படத்தான் போகின்றீர்கள். </span>
</div><div>
<span>அல் அஸ்ர்</span>
<span>103:1 காலத்தின் மீது சத்தியமாக! </span>
<span>103:2 மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். </span>
<span>103:3 ஆனால், எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும், நற்செயல்கள் புரிந்துகொண்டும் மேலும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக் கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர!</span>
</div><div>
<span>அல்ஹுமஸா</span>
<span>104:1 (மக்களை நேருக்கு நேர்) இழித்துரைத்துக் கொண்டும், (முதுகுக்குப் பின்) குறை கூறிக் கொண்டும் திரிகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் கேடுதான். </span>
<span>104:2 அவன் பொருளைச் சேகரிக்கின்றான். </span>
<span>104:3 மேலும் அதனை எண்ணி எண்ணி வைக்கின்றான். அவன் கருதுகின்றான், தன்னுடைய பொருள் தன்னிடம் என்றென்றும் நிலைத்து இருக்கும் என்று! </span>
<span>104:4 அவ்வாறன்று! சிதைத்துச் சின்னாபின்னமாக்குகின்ற ஓரிடத்தில் அவன் வீசியெறியப்படுவான். </span>
<span>104:5 மேலும், சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் அந்த இடம் எதுவென்று உமக்குத் தெரியுமா என்ன?</span>
<span>104:6 அது அல்லாஹ்வின் நெருப்பு; அதி உக்கிரமாக மூட்டப்பட்டிருக்கின்றது; </span>
<span>104:7 இதயங்கள் வரைச் சென்று பரவுகின்றது; </span>
<span>104:8 நிச்சயமாக அதனால் அவர்கள் சூழப்பட்டு மூடப்படுவார்கள். </span>
<span>104:9 உயர உயரமான தூண்களில் (அவர்கள் கட்டப்பட்ட நிலையில்). </span>
</div><div>
<span>அல்ஃபீல்</span>
<span>105:1 யானைப் படையினருடன் உம் இறைவன் எப்படி நடந்து கொண்டான் என்பதை நீர் பார்க்கவில்லையா? </span>
<span>105:2 அவர்களின் சதித்திட்டத்தை அவன் வீணடித்து விடவில்லையா? </span>
<span>105:3 மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டம் கூட்டமாக அவன் அனுப்பினான். </span>
<span>105:4 அவை அவர்களின் மீது சுடப்பட்ட களிமண் கற்களை எறிந்து கொண்டிருந்தன. </span>
<span>105:5 பிறகு (கால்நடைகளால்) மென்று தின்னப்பட்ட வைக்கோல் போன்று அவர்களை ஆக்கிவிட்டான். </span>
</div><div>
<span>குறைஷ்</span>
<span>106:1 குறைஷிகள் நன்கு பழக்கப்பட்டுவிட்டார்கள். </span>
<span>106:2 (அதாவது) குளிர்கால மற்றும் கோடைகாலப் பயணங்களில் நன்கு பழக்கப்பட்டு விட்டார்கள். </span>
<span>106:3 எனவே அவர்கள் இந்த இல்லத்தின் அதிபதியை அடிபணிந்து வணங்கட்டும். </span>
<span>106:4 அவனோ அவர்களைப் பசியிலிருந்து காப்பாற்றி உண்ணக் கொடுத்தான். மேலும், அச்சத்திலிருந்து அவர்களை மீட்டு அமைதியை வழங்கினான். </span>
</div><div>
<span>அல்மாவூன்</span>
<span>107:1 மறுமையில் நற்கூலி தண்டனை கொடுக் கப்படுவதைப் பொய்யென்று கூறுபவனை நீர் பார்த்திருக்கிறீரா? </span>
<span>107:2 அவன்தான் அநாதையை மிரட்டி விரட்டுகின்றான். </span>
<span>107:3 மேலும், வறியவரின் உணவை அளிக்கும்படித் தூண்டுவதில்லை. </span>
<span>107:4 மேலும் கேடுதான், தொழுகையாளிகளுக்கு! </span>
<span>107:5 அவர்கள் தம் தொழுகையில் அலட்சியமாய் இருக்கிறார்கள் </span>
<span>107:6 அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகவே செயல்படுகின்றார்கள். </span>
<span>107:7 மேலும், சாதாரணத் தேவைகளுக்கான பொருள்களைக் கூட (மக்களுக்குக்) கொடுத்துதவுவதைத் தடுக்கின்றார்கள். </span>
</div><div>
<span>அல் கவ்ஸர்</span>
<span>108:1 (நபியே!) நாம் உமக்கு ‘கவ்ஸரை’* அருளினோம். </span>
<span>108:2 எனவே, நீர் உம் இறைவனுக்காகவே தொழுவீராக! பலி (குர்பானி)யும் கொடுப்பீராக! </span>
<span>108:3 திண்ணமாக உம் பகைவன்தான் வேரறுந்தவன் ஆவான். </span>
</div><div>
<span>அல் காஃபிரூன்</span>
<span>109:1 கூறிவிடுவீராக! “ஓ! நிராகரிப்பாளர்களே! </span>
<span>109:2 நீங்கள் எவற்றை வணங்குகிறீர்களோ அவற்றை நான் வணங்குவதில்லை. </span>
<span>109:3 நான் யாரை வணங்குகின்றேனோ அவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர். </span>
<span>109:4 மேலும், நீங்கள் வணங்கியவற்றை நான் வணங்குபவன் அல்லன். </span>
<span>109:5 நான் யாரை வணங்குகின்றேனோ அவனை நீங்கள் வணங்குகின்றவர்கள் அல்லர். </span>
<span>109:6 உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம். </span>
</div><div>
<span>அந் நஸ்ர்</span>
<span>110:1 அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் வந்து விடும்போது</span>
<span>110:2 மேலும் (நபியே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் திரள்திரளாக நுழைவதை நீர் காணும்போது </span>
<span>110:3 நீர் உம் இறைவனைப் புகழ்ந்து கொண்டு அவனைத் துதிப்பீராக! மேலும், அவனிடம் பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன், பாவமன்னிப்புக் கோரிக்கையை பெரிதும் ஏற்பவனாக இருக்கின்றான். </span>
</div><div>
<span>அல் லஹப்</span>
<span>111:1 அபூலஹபின் கைகள் முறிந்துவிட்டன. மேலும், அவன் நாசமாகி விட்டான். </span>
<span>111:2 அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்தவையும் அவனுக்கு எந்தப் பலனையும் அளிக்கவில்லை. </span>
<span>111:3 விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் போடப்படுவான். </span>
<span>111:4 அவனுடன் அவனுடைய மனைவியும் அவளோ (இங்கும் அங்கும்) புறம்பேசித் திரிபவள். </span>
<span>111:5 அவளது கழுத்தில் முறுக்கேற்றப்பட்ட கயிறு இருக்கும்!</span>
</div><div>
<span>அல் இக்லாஸ்</span>
<span>112:1 கூறுவீராக! அவன் அல்லாஹ், ஏகன், </span>
<span>112:2 அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே! </span>
<span>112:3 அவன் யாருடைய சந்ததியும் இல்லை. அவனுக்கு யாரும் சந்ததி இல்லை. </span>
<span>112:4 மேலும் அவனுக்கு நிகரானவர் எவருமே இலர். </span>
</div><div>
<span>அல் ஃபலக்</span>
<span>113:1 கூறுவீராக! வைகறையின் அதிபதியிடம் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்; </span>
<span>113:2 அவன் படைத்துள்ள ஒவ்வொன்றின் தீங்கிலிருந்தும்! </span>
<span>113:3 இரவுடைய இருளின் தீங்கிலிருந்தும்! அந்த இருள் படரும்போது! </span>
<span>113:4 முடிச்சுகளில் ஊதுகின்ற (ஆண்) பெண்களின் தீங்கிலிருந்தும் </span>
<span>113:5 மேலும், பொறாமைக்காரர்களின் தீங்கிலிருந்தும், அவர்கள் பொறாமை கொள்ளும்போது (பாதுகாப்புத் தேடுகின்றேன்). </span>
</div><div>
<span>அந் நாஸ்</span>
<span>114:1 கூறுவீராக! மக்களின் அதிபதியிடம் நான் பாதுகாப்பு தேடுகின்றேன்; </span>
<span>114:2 மக்களின் மன்னனிடம் </span>
<span>114:3 மக்களின் உண்மையான இறைவனிடம் (நான் பாதுகாப்பு தேடுகின்றேன்;)</span>
<span>114:4 திரும்பத் திரும்ப வந்து ஊசலாட்டங்களை ஏற்படுத்துபவனின் தீங்கிலிருந்து. </span>
<span>114:5 அவன் எத்தகையவன் எனில், மனிதர்களின் உள்ளங்களில் ஊசலாட்டங்களை ஏற்படுத்துகின்றான். </span>
<span>114:6 அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாயினும் மனித இனத்தைச் சேர்ந்தவனாயினும் சரியே. </span>
</div>
</surah>
